Monday 25 May 2009

கதை சொல்ல வாழ்கிறேன்: அத்தியாயம் 3



தடக்காற்று கடுமையாய் வீசியதால், ஆற்றுத்துறைமுகத்தில் அம்மாவை படகில் ஏற சம்மதிக்க செய்ய நான் சிரமப்பட வேண்டியிருந்தது. அம்மாவிடம் நியாயமில்லாமலும் அல்ல. நியு ஓர்லியன்சிலிருந்து வரும் நீராவிப் படகுகளின் குறுகிய மாதிரி வடிவமான இந்த படகுகளின் கேசொலின் எந்திரம் ஜுர நடுக்கத்தை படகின் மேலுள்ள எல்லாவற்றின் மேலும் கடத்தி விடக் கூடியவை.
 அங்கிருந்த வரவேற்பறையில் ஊஞ்சற் படுக்கைகள் மாட்டுவதற்கான கொக்கிகள் வெவ்வேறு உயரங்களில் இருந்தன; மேலும், நீள்-மர இருக்கைகளில் இடம் பிடிக்க மக்கள் தங்கள் எல்லா பயண மூட்டைகள், சரக்குப் பொட்டலங்கள், கோழிக்கூடைகள் மட்டுமில்லாமல் உயிருள்ள பன்றிகளையும் வேறு எடுத்தவாறு முட்டி மோதிப் போயினர்.

அங்கு மூச்சுத் திணறடிக்கும் சில சிற்றறைகள் உண்டு; ஒவ்வொன்றும் பயணத்தின் போதும், அவசர கால சேவைகள் வழங்கும், நைந்து நூலாய்ப் போன, இளம் வேசிகளால் அவை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். அவை இரு ராணுவப் படுக்கைகள் கொண்டவை. எந்த சிற்றறையிலும் இடமில்லாததால், நானும் அம்மாவும் இரு இரும்பு இருக்கைகளை அதிரடியாய் ஆக்கிரமித்தோம்; மேலும் அங்கேயே இரவைக் கழிப்பதற்கு தயாரானோம். முகத்துவாரத்திற்கு மிக அருகே சமுத்திர குணம் கொள்ளும் மெக்டலீனா ஆற்றை கடந்ததும், நாங்கள் பயந்தது போலவே கடுங்காற்று முன்னேற்பாடுகள் அற்ற அந்த கப்பலை திடீரென்று தாக்கியது. துறைமுகத்திலிருந்து நான் கறுப்புப் புகைலிலையாலும், சிப்பம் கட்ட பயன்படுத்தப்படும் மலிவான காகிதத்தாலும் செய்யப்பட்ட மிகவும் விலைகுறைவான சிகரெட்டுகளை நிறைய வாங்கி வைத்திருந்தேன்; ஆகஸ்டில் ஒளி நூலை மறுவாசிப்பு செய்தவாறு, அந்நாட்களில் நான் புகைக்கும் பாணியில், ஒரு சிகரெட்டின் நுனியில் மற்றொன்றை பற்ற வைத்து, புகைக்க ஆரம்பித்தேன். அக்காலத்தில், வில்லியம் பாக்னர் தான் என் காவல் பூதங்களில் மிகவும் விசுவாசமானவர்.

என் அம்மா தன் ஜெபமாலையை அது ஏதோ ஒரு எந்திரக் கலப்பையை இழுப்பதற்கோ அல்லது ஒரு விமானத்தை வானில் பிடித்து வைக்க முடிகிற கம்பி வடத்தை சுற்றியிழுக்கும் எந்திரம் என்பது போல் இறுக்கப் பற்றியிருந்தாள். அவள் தனக்காக எதையும் வேண்டிக் கொண்டதில்லை; அனாதையாகப் போகும் தன் பதினொரு குழந்தைகளுக்கு நீண்ட வாழ்வையும், செல்வ செழிப்பையுமே கேட்டாள். அவளது பிரார்த்தனை போய் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்க வேண்டும்; ஏனெனில் நாங்கள் கால்வாயை அடைந்த போது, மழை மெனமையாகவே பெய்தது. மேலும், கொசுக்களை விரட்டும் அளவிற்கு காற்றும் பலமாய் வீசவில்லை. பிறகு அம்மா தன் ஜெப மாலையை கீழே வைத்து விட்டு, சுற்றிலுள்ள குழப்பமான வாழ்க்கையை மௌனமாக வெகு நேரம் அவதானித்தாள்.

அவள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தாலும், வாழைப்பழ தோட்டத்தின் தற்காலிக பிரம்மாண்டத்தில் வளர்ந்தாள்; அதிலிருந்து அவள் சாண்டா மார்டாவிலுள்ள கொல்ஜியோ டி லா பிரசண்டசியோன் டி லா சாண்டிஸ்மா விர்ஜினில் செல்வந்த பெண்ணொருத்திக்கான சிறந்த கல்வியைப் பெற்றாள். கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது, தோழிகளுடன் சேர்ந்து சித்திரத் தையல் இட்டாள், கொடை அங்காடியில் கிளாவிகார்டு இசைத்தாள், அத்தை ஒருவள் துணை போக உள்ளூர் கோழை மேட்டுக்குடியினர் நடத்திய பரிசுத்தமிக்க நடனங்களில் கலந்து கொண்டாள். ஆனால் அந்நகர தந்தி இயக்குனரை அவள் பெற்றோர் விருப்பத்திற்கெதிராய் திருமணம் செய்யும் வரை அவளுக்கு காதலன் இருந்த விஷயம் யாருக்கும் தெரியாது. அப்போதிலிருந்து அவளது அப்பட்டமான நற்குணங்கள் நகைச்சுவை உணர்வும், நீள் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் எதிர்பாரா தாக்குதல்களால் முறியடிக்கப்படாத ஆரோக்கியவுமே. ஆனால் அவளது ஆச்சரியமான குணம் பிரமாதமான அம்மனவலிமையை மறைக்கும் அற்புதத் திறமையே. அவள் ஒரு குறைபாடற்ற லியோ. இதன் காரணமாகவே எதிர்பாராத ஊர்களிலிருந்து வந்த தூரத்து உறவினர்கள் வரை அதிகார எல்லை நீண்ட பொன்னாட்சி ஒன்றை நிறுவி, சமையலறையில் இருந்தவாறே, சட்டியில் பீன்ஸ் கொதிக்கையில், குரல் தாழ்த்தி, கண்கூட சிமிட்டாமல் கோள்களின் குடும்பத்தை போல் அவ்வாட்சியை கட்டுப்படுத்த முடிந்தது.

Read More

Sunday 17 May 2009

கதை சொல்ல வாழ்கிறேன்: அத்தியாயம் 2



நான் வேலை பார்த்த செய்தித்தாள் அலுவலகத்தில் பணம் கிடைக்க வாய்ப்பே இல்லை. அலுவலக எழுத்தாளர்கள் விடுப்பில் செல்லும்போது மூன்று பிசோக்களுக்கு தினசரி உரையும், நான்கு பிசோக்களுக்கு தலையங்கமும் எழுதும் வாய்ப்பு எனக்குக்கிடைக்கும்; ஆனால் அது ஏதோ உயிர் வாழ்வதற்கு மட்டுமே போதுமானதாய் இருந்தது. காசு கடன் வாங்க முயன்ற போது, திருப்பி செலுத்த வேண்டிய கடன் ஏற்கனவே ஐம்பது பிசோக்களுக்கு மேல் என்று மேலாளர் நினைவூட்டினார். அன்று பிற்பகல் என் நண்பர்கள் எவரும் துணிந்திராத கொடுமை ஒன்றை நான் செய்தேன். புத்தகக் கடைக்கு அடுத்துள்ள கபே கொலோம்பியாவின் வாசலில் நின்று, முதிய கேடலன் ஆசிரியரும், புத்தக விற்பனையாளருமான டோன் ரெமோன் வின்யாஸிடம் பத்து பிசோக்கள் கடனாகக் கேட்டேன். அவரிடம் ஆறு பிசோக்கள் மட்டுமே இருந்தன.

எத்தனை கவனமாய் நெடுங்காலம் வாழ்ந்தாலும், திரும்ப சொல்ல போதாமல் போகும் அளவிற்கான ஒரு திருப்புமுனையாய் அந்த எளிய இருநாள் பயணம் அமையும் என்று அம்மாவோ நானும் கற்பனையில் கூட எண்ணவில்லை. இப்போது எழுபத்தைந்து வருடங்கள் தாண்டி நின்று யோசிக்கையில், என் எழுத்துப் பணியில், அதாவது என் முழுவாழ்வில், நான் செய்த முடிவுகளிலேயே அதிமுக்கியமானது இது என்று புரிகிறது.

விடலைப் பருவம் அடைவதற்கு முன், நினைவுகள் இறந்த காலத்தை விட எதிர்காலத்தை நோக்கியே இச்சையுடன் பாய்கின்றன. இதனால் அந்த நகரத்தைப் பற்றிய என் ஞாபகங்கள் வீட்டு ஏக்கம் காரணமாய் லட்சியத்தன்மை அடையவில்லை. நான் அது எப்படி இருந்ததோ அவ்வாறே நினைவு கூர்ந்தேன்: வரலாற்றுக்கு முந்திய முட்டைகளாய் பெரிதாகவும், வெள்ளையாகவும் உள்ள வழவழப்பான கற்கள் கொண்ட படுகை மேல் விரைந்து ஒடும் தெளிந்த நீருடைய ஆற்றின் கரையில் அமைந்த, எல்லாரையும் எல்லாரும் அறிந்த வாழ்வதற்கு ஏற்ற ஊர். அந்தியில், குறிப்பாய் டிசம்பரின் போது, மழைக்காலம் முடிந்து காற்று வைரமாய் தெரிகையில், சீயரா நெவேடா டீ சேன்டா மார்டா மற்றும் அதன் வெள்ளை கூரிய உச்சிகள் சரியாய் நதியின் மறுகரையிலுள்ள வாழைத்தோப்பு வரை இறங்கிச் செல்வதாய் தோன்றும். வாழ்வின் கசப்பை மறக்க கொக்கோ உருண்டைகளை மென்று, முதுகில் இஞ்சி மூட்டைகளை சுமந்தவாறு அரவாக் இந்தியர்கள் எறும்புகள் போல் வரிசைகளில் சியராவின் செங்குத்தான முகடுகளிலிருந்து இறங்குவதை அங்கிருந்து நாம் பார்க்கலாம். குழந்தைகளாய் இருக்கையில் நிரந்தர பனியிலிருந்து பந்துகள் செய்யவும், உலர்ந்து எரியும் தெருக்களில் அவற்றால் போர் புரியவும் நாங்கள் கனவு கண்டோம். கற்பனைக்கெட்டா விதம் வெப்பம் அதிகமாய் இருந்ததால், குறிப்பாய் மதியம் குட்டித்தூக்கம் போடும் வேளையில், பெரியவர்கள் அது ஏதோ தினசரி அதிசயம் என்பது போல் அங்கலாய்ப்பார்கள். பகலில் காயும் வெயிலில் கருகிகளை தூக்கக் கூட முடியாத அளவிற்கு அவை சுடும் என்பதால் ஒருங்கிணைந்த பழ நிறுமத்தின் ரயில் தண்டவாளங்களும், முகாம்களும் இரவிலேயே அமைக்கப்பட்டன என்று நான் பிறந்த நாளிலிருந்து திரும்ப திரும்ப கூறக் கேட்டிருக்கிறேன்.

அரகடகாவிலிருந்து பாரன்குல்லாவிற்கு போவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு; காலனி ஆட்சி காலத்தில் அடிமைத் தொழிலாளர்களால் தோண்டப்பட்ட ஒரு குறிகிய கால்வாய் வழியே சிதிலமடைந்த ஒரு பெரும் எந்திரப் படகு மூலம் சென்று, சியனெகா எனும் ஆளரவமற்று விரிந்து பரந்த சதுப்பு நிலத்தைக் கடந்து சியனேகா எனும் அதே பெயர் கொண்ட நகரத்தை சென்றடைய வேண்டும். பயணத்தின் கடைசி படலத்தை மிகப்பெரும் வாழைத் தோட்டங்களின் ஊஉடே கடந்து, வெக்கையடிக்கும் தூசு மண்டிய சிற்றூர்களிலும், ஏகாந்தமான ரயில் நிலையங்களிலும் அர்த்தமில்லாமல் நிறுத்திப் போகும் தினசரி புகை வண்டியில் அங்கிருந்து ஏற வேண்டும்.

இதுவே 1950-ஆம் ஆண்டு பெப்ரவரி 10 அன்று---கோலாகல கொண்டாட்டத்திற்கு முந்தைய நாளில்---சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு, பருவம் தவறி வந்த புயல் மழையில், கையில் ஒருவேளை அவள் எதிர்பார்த்த விலைக்கு வீடு போகாவிட்டால் வீடு திரும்புவதற்கு மட்டுமே போதுமான முப்பத்திரெண்டு பெசோக்களுடன் நானும் அம்மாவும் மேற்கொண்ட சிறு பயணம்.

Read More

கதை சொல்ல வாழ்கிறேன்:அத்தியாயம் 1


வாழ்க்கை ஒருவர் வாழ்ந்ததல்ல,
சொல்வதன் பொருட்டு
எதை மற்றும் எப்படி நினைவுபடுத்துகிறோமோ அதுவே

வீட்டை விற்க தன்னுடன் வருமாறு அம்மா என்னை அழைத்தாள். என் குடும்பம் வாழ்ந்த தூரத்து நகரமொன்றிலிருந்து அன்று காலை அவள் வ்ந்திருந்தாள். மேலும் என்னை எப்படி கண்டுபிடிப்பது என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்தவர்களிடம் கேட்டதில், லைப்பறியோ முண்டோவிலோ, நான் தினமும் எழுத்தாள நண்பர்களை சந்திப்பதற்காக செல்லும் அருகிலுள்ள கபேக்களிலோ தேடுமாறு கூறினர். அவளிடம் இதைக் கூறிய ஒருவர் இவ்வாறு எச்சரித்தார்: "கவனமா இருங்க, அவனுங்களுக்கு எல்லாம் மரை கழன்று போச்சு". சரியாக பன்னிரெண்டு மணிக்கு அவள் வந்தாள். பார்வைக்கு புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள மேஜைகளிடையே சத்தமின்றி நடந்து என் முன் வந்து நின்று, தன் நல்ல காலத்தில் அவள் கொண்டிருந்த குறும்புத்தனமான புன்னகையுடன் என் கண்களை நோக்கி, நான் எதிர்வினையாற்றும் முன்பே சொன்னாள்: "நான் உன் அம்மா"
அவளிடம் எதுவோ மாறியிருந்தது; அதனால் முதல் பார்வையிலேயே அவளை அடையாளம் காண இயலவில்லை. அவளுக்கு நாற்பத்தைந்து வயது. பதினோரு பிரசவங்களையும் சேர்த்து, அவள் பத்து வருடங்கள் கர்ப்பமாகவும், குறைந்த பட்சம் பத்து வருடங்கள் குழந்தைகளை வளர்க்கவும் செலவிட்டுள்ளாள். வயதாகும் முன்னே தலை நரைத்து விட்டது. முதன்முதலாய் அணிந்துள்ள கண்ணாடிக்கு பின்னே கண்கள் பெரிதாகவும், அதிர்ச்சியுற்றும் காணப்பட்டன. அவள் அம்மாவின் மரணத்தை அனுசரிப்பதற்கு கண்டிப்பாக அவள் கறுப்பு ஆடையே அணிந்த போதும், இறுதிக் கால கம்பீீரத்துடன், தன் திருமண புகைப்படத்தில் கொண்டிருந்த ரோமாபுரி அழகை அப்போதும் தக்க வைத்திருந்தாள். எல்லாவற்றிற்கும் முன்னே, என்னை கட்டி அணைப்பதற்கும் கூட முன்பே, தனது வழக்கமான சம்பிரதாய முறையில் சொன்னாள்:

"தயவு செஞ்சு வீட்டை விக்கிறதுக்கு எங்கூட வான்னு உன்ன கூப்பிட வந்தேன்"

அவள் என்னிடம் எந்த வீடென்றோ, எங்குள்ளதென்றோ சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் எங்களுக்கு இப்பூமியில் ஒரே ஒரு வீடுதான் உள்ளது: நான் பிறக்கும் அதிர்ஷ்டம் பெற்ற, எட்டு வயதிற்கு மேல் நான் வாழ்ந்திராத அரகடகாவிலுள்ள என் தாத்தா பாட்டியின் பழைய வீடு. ஆறு கல்வி அரையாண்டுகளை கையில் கிடத்ததையெல்லாம் படிப்பதற்கு அர்ப்பணித்தும், ஸ்பானிய பொற்காலத்தின் மறுஆக்கம் செய்ய முடியா கவிதைகளை நினைவிலிருந்து ஒப்புவித்தும் விட்டு, அப்போது தான் நான் சட்டப்படிப்பை விட்டு வெளியேறி இருந்தேன். நான் ஏற்கனவே நாவல் எழுதும் கலையை பயில்வதற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் மொழிபெயர்ப்பிலும், கடன் வாங்கியும் படித்திருந்தேன்; தினசரி இணைப்புகளில் ஆறு கதைகள் பிரசுரித்து, நண்பர்களின் பேராதரவையும், சில விமர்சகர்களின் கவனத்தையும் பெற்றிருந்தேன். வரும் மாதத்தில் எனக்கு வயது இருபத்து மூன்றாகும் போது, ராணுவ சேவைக்கான வயதைத் தாண்டியிருப்பேன்; மேலும், கொனூறியா நோயின் இரு தாக்குதல்களை தாக்குப் பிடித்து விட்டேன். தினமும், எதிர்காலம் பற்றிய கவலை இன்றி, மிக மட்டமான புகையிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட அறுபது சிகரெட்டுகளை புகைத்து வந்தேன். பாரன்குவில்லாவிலும், கொலொம்பியாவின் கரீபிய கடற்கரை பகுதியிலுள்ள கார்டகீனாடெ இண்டியாஸிலுமாய் என் ஓய்வு நேரத்தை பிரித்து, எல் ஹெரால்டோ எனும் செய்தித்தாளுக்கு தினசரி உரை எழுதுவதில் கிடைக்கும் ஒன்றுக்கும் உதவாத வருமானத்தில் முடிசூடா மன்னன் போல் வாழ்ந்தும், எங்கு இரவில் தங்க நேர்கிறதோ அங்கு க்ிடைக்கும் ஏற்ற துணையுடன் படுத்தும் கழித்து வந்தேன். என்னவோ, என் பேராவல்களின் நிச்சயமின்மையும், வாழ்வின் குழப்பமும் போதாது என்பது போல், என் நண்பர்கள் குழுவும் நானும் இணைந்து, மூன்று வருடங்களாய் பூயன் மேயர் பிரசுரிக்க முயன்று வரும் தீரமிக்க பத்திரிக்கை ஒன்றை நிதியேதும் இன்றி துவங்க முயன்று வந்தோம். வேறென்ன வேண்டும்?

ரசனையால் அன்றி வறுமை காரணமாகவே, இருபது வருடங்களுக்கு பிறகான மோஸ்தரை அப்போதே கொண்டிருந்தேன்: கட்டற்று வளர்ந்த தாடி, கலைந்த தலைமயிர், ஜீன்ஸ், பூப்போட்ட சட்டை மற்றும் யாத்திரிகனின் செருப்புகள். இருண்ட திரையரங்கு ஒன்றில் எனக்கு பரிச்சயமான பெண் ஒருத்தி, நான் அருகிலிருப்பது தெரியாமல், சொன்னாள், "பாவம் கெபிட்டோ, வெளங்காம போயிட்டான்". இதனால் இப்போது பொருள்படுவது என்னவென்றால் என் அம்மா வீட்டை விற்க அவளோடு செல்ல என்னை அழைத்த போது, அதை மறுப்பதற்கு என்னிடம் எந்த காரணமும் இல்லை என்பதே. அவளிடம் போதிய பணம் இல்லை என்றாள்; சுயகௌரவம் காரணமாய் என் செலவுகளை நானே ஏற்றுக் கொள்வதாய் சொல்லி விட்டேன்.

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates