Monday 20 July 2009

ஜெயமோகனின் கருடபுராணத் தண்டனை: : ஃபூக்கோவும் அமர்நாத்தின் ஒழுக்கவியலும்






அமர்நாத் என்பவர் ஜெயமோகனின் அரசியலை தாக்கி எழுதின கடிதம் (அல்லது வாசகரை எதிர் நோக்கி எழுதப்பட்ட கட்டுரை) சாருஆன்லைனில் பிரசுரமாகியுள்ளது. சுருக்கமாக, இக்கடிதம் ஜெவின் திரைமறை சதிராட்டங்களை அம்பலப்படுத்த விழைகிறது. இதன் ஒரே சுவாரசியம் இரவு விடுதி துகிலுரிப்பு போல் சிறிது சிறிதாக திரைமறைவு சேதிகளை வெளிப்படுத்துவது தான். படித்து முடித்ததும் அட தெரிந்ததுதானே என்று உங்களுக்குத் தோன்றும். இதற்கான பதிலில் சாரு "நான் கடவுள்" ஆர்யா பாணியில் வெற்றிலை மென்றவாறே முத்தாய்ப்பாக இதையெல்லாம் புட்டு வைக்கத்தான் நான் இருக்கிறேனே, 15 வருடங்களாக மல்லுக்கட்டுகிறேனே, நீயெல்லாம் ஏன் காலத்தை வீணடிக்கிறாய், வா உலக இலக்கியம் பேசுவோம்; கஸான்சாகிஸ், அப்துல் ரகுமான் முனீப்பின் படைப்புகள் பற்றி தரமான உரையாடல் நடத்தலாமே என்று அமர்நாத்தை அறிவுறுத்தி முடிக்கிறார். எனது இந்த பதிவின் நோக்கம் வாசகரை அக்கடிதம் நோக்கித் திருப்புவதோ மேலும் செருப்படி வார்த்தை விளையாட்டை நீட்டிப்பதோ அல்ல. வலுவான விமர்சன அளவுகோல்களோ, தர்க்கப் பின்னணியோ இன்றி இலக்கிய ஆளுமைகள் பரபரப்புக்காக தாக்கப்படுவதை, இந்த தாக்குதல் பின்னுள்ள ஒழுக்கமனப்பான்மை, மற்றும் ஆதர்ச ரீதியிலான எதிர்பார்ப்புகளையும் ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

எனது முதல் கேள்வி: தினசரி வாழ்வில் எத்தனையோ வசைகள், பொய் பித்தலாட்டங்களை தாங்கும் நாம் இலக்கியப் பரப்பில் ஒரு உன்னதமான நிலையை ஏன் எதிர்பார்க்கிறோம்? எழுத்தாளனை ஏன் லட்சியப்படுத்துகிறோம்? ஜெயமோகன் இயக்குனர்கள் முன் ஆதாயத்துக்காக புழுவாய் குழைவதை கண்டிக்கும் அமர்நாத் தன் தனிப்பட்ட வாழ்வில் யாரையும் ஜால்ரா போட்டதில்லையா? கூஜா தூக்காத மனிதனே பூமிப்பரப்பில் இல்லை எனலாம். இலக்கியவாதியும் தினசரி வாழ்வுத் தளத்தை சேர்ந்தவன் தானே? இலக்கியவாதி ஆதர்ச நாயகனாக இருந்த காலம் கற்பனாவாத சகாப்தத்துடன் முடிந்து விட்டது. எழுத்தாளனை அவனது அரசியலுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியது இன்றைய சூழலின் கட்டாயம். எந்த அணுகுமுறைச்சாய்வும் இல்லாதவன் மன நிலை பிறழ்ந்தவன் மட்டுமே. அவன் எழுத்தாளனாக முடியாது. உலகவாழ்வின் பாசாங்கு, குழிபறித்தல், கபடம் எழுத்தில் நுழைந்தால் அதை தர்க்கரீதியாக எதிர்கொண்டு, மறுக்கலாம், மௌனிக்கலாம்; உணர்ச்சிவசப்பட்டு எதிர்ப்பது மடத்தனம். 



மேற்குறிப்பிட்ட வலைமனையில் ஜெவை வைய தேவடியா, பிம்ப் (மாமா), கருட புராணத் தண்டனை ஆகிய பதங்களை அமர்நாத் மற்றும் சாரு பயன்படுத்தப்படுத்துகிறார்கள். இதை நாம் ஆராய வேண்டும். சமூகத்தை கட்டுப்படுத்த விழையும் உயர்குடி, பிராமணீய, ஒழுக்கவியல் பயன்பாடுகள் இவை. பழங்கால அரச சமூகத்தில் பொதுப்பார்வைக்கு முன் குற்றவாளிகளை தாக்கி அழிக்கும் தண்டனை முறைகள் இருந்தன. ஃபூக்கோ தனது "ஒழுக்கமும், தண்டனையும்: சிறையின் பிறப்பு" எனும் நூலில் இந்த வகை தண்டனைக்கு இரு கூறான நோக்கங்கள் உண்டு என்கிறார்: எதிர்பார்த்த, எதிர்பாராத நோக்கங்கள். பொதுமக்கள் முன்னிலையிலான தண்டனையின் போது குற்றவாளியின் உடல் அவனது குற்றத்தை மறுஒளிபரப்பு செய்யும் டி.வி. சானல் போல் ஆகிறது. அதாவது இப்படியாகப் பட்ட குற்றத்தை செய்திருக்கிறான் என்பதை மக்களுக்கு உணர்த்துவது. அடுத்து சட்டம் என்கிற தனது உடல் நீட்சியை காய்ப்படுத்தியதற்காக குற்றவாளியின் உடல் மீது அரசாங்கம் பழி தீர்த்துக் கொள்கிறது. எதிர்பாராத நோக்கம் என்னவென்றால், குற்றவாளியின் உடல் மீது பெரும்பாலான கட்டங்களில் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டு அதனால் அரசாங்கத்துக்கு பாதகமான கலகங்கள் விளைகின்றன. இந்த கடைசிக் கூற்றுக்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பாசாங்கு, பித்தலாட்டத்தின் அடிப்படையில் ஜெவை கூண்டில் ஏற்றி தீர்ப்பு சொல்லி தண்டனை விதிப்பது ("மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டாம்; கருட புராணத்தில் தண்டனை உண்டு") தன்னை நியாயப் பீடமாக கற்பிக்கும் கடித ஆசிரியரின் ஒழுக்கவியல், மேட்டுக்குடி மனப்பான்மையை குறிக்கிறது. ஃபூக்கோவை பொறுத்த மட்டில் இது பூர்ஷுவா நிலைப்பாடு. இதன் எதிர்பாரா விளைவு (பச்சாதாபம்) ஜேவுக்கு ஆதரவாக அமையலாம்.

பிரபல ஆளுமைகளை போற்றுதலும், தூற்றுதலும் வலுவற்ற வாசகப் பரப்பின் நோய்க் கூறுகள். நுட்பமான அறிதல் அற்ற வாசகர்கள் எதை சார்வது என்று புரியாமல் ஆரம்பத்தில் தடுமாறுவார்கள்; பாதுகாப்பின்மை போக்க குழுக்களில் இணைவார்கள்; அவதூறுகள் கிசுகிசுப்பார்கள். இறுதியாய் வழிபாட்டு, எதிர்நிலை பிம்பங்களை ஏற்படுத்துக் கொள்வார்கள். ஒரு தேர்ந்த வாசகனுக்கு எழுத்தாளனின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு மீது கசப்பு ஏற்படாது. அப்படி நேர்ந்தால் அவன் போன தலைமுறை ஆதர்சவாதத்தின் எச்சமாக மட்டுமே இருப்பான். எழுத்தாளன் பிரதிநிதி அல்ல; அவன் தனிக்குரல் மட்டுமே. கடல் ஆரவாரத்தினிடையே ஆயிரம் முறைகளில் ஒன்றாய் கரையில் உடையும் ஒரு அலை அவன். 


நமது வாசகர்கள் பரந்து பட்ட, ஆழ்வாசிப்பின் முதிர்ச்சியையும், விழிப்புணர்வையும் பெறும்போது மட்டுமே இத்தகைய பாதுகாப்பின்மை பதற்றம் குறைந்து, சச்சரவுகள் நிற்கும். நமக்கு அவசியம் ஜெ போன்ற பிரபல ஆளுமைகளை ஒழுக்க சிலுவையில் அறைவதல்ல. திட்டவட்டமான கருவிகளுடன அவரது படைப்புகளை விமர்சித்து அறுதியிடுவதே. சாரு எச்சிற் பருக்கை கையுடன் அவசரமாக "ஜெவின் படைப்புகளை புறக்கணியுங்கள்" என்று வேண்டாமல், அதற்கான காரணங்களை தர்க்க ரீதியாக பட்டியலிட வேண்டும். (உதாரணமாக, அவரது விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் ஆகிய நாவல்களில் லட்சியவாதிகள், அவர்களின் வீழ்ச்சிக்கு இன்றைய பின் நவீனத்துவ யுகத்தில் ஏற்படும் சமகாலமற்றத்தன்மை, பொருத்தமின்மை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் ). இதுவரை ஜெவின் படைப்புகளை பற்றின நுட்பமான விமர்சன மறுப்புகள் எழுந்ததில்லை. நாம் திரும்பத்திரும்ப சொல்வதெல்லாம் அவர் இந்துத்துவாவாதி, ஆதிக்கவியலாளர், அரசியல் சூழ்ச்சிக்காரர் என்பதே. இந்துத்துவா கட்சி இன்று இந்தியாவின் பெரும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அதன் குரலாக ஒரு நபர் இருப்பதில் என்ன தவறு. அல்கொய்தாவின் நிலைப்பாட்டை ஆதரிக்க இணையதளம் இல்லையா? இடதோ வலதோ தீமைக்கும் நன்மைக்கும் ஒரு வலுவான கருத்துத் தளம் தருவது இன்றைய காலத்தின் அவசியம். இடது கையோ, வலது கையோ வலுவுற்றால் நிச்சயம் அடிக்கத்தான் ஓங்கும். ஒருவர் ஆதிக்க சக்தி ஆதரவாளர் என்றால் கண்டிக்க தேவை இல்லை. அவரது அடிப்படையில் உள்ள ஓட்டையை மட்டுமே கவனித்து விவாதிக்க வேண்டும். 

ஒரு ஆளுமையின் அரசியல் காய் நகர்த்தல்களை நிர்வாணப்படுத்தல் அறிவுத்தளத்தின் பணி அல்ல. ஆதிக்க அரசியல் இன்றைய மனித இயல்பு. நமது களம் மனித மனத்தின் நுட்பங்கள் பற்றின தேடலாகவே இருக்க வேண்டும். 

உயிர்மையின் தரம் பற்றின ஜெவின் கேள்விக்கு பதில் "வார்த்தை" வலதுசாரி இதழ் என்று சொல்லுவதல்ல. ஒரு மாதாந்திர இதழான உயிர்மைக்கு பரந்துபட்ட வாசகர்களை சென்றடையும் நோக்கம் உள்ளது. பக்கங்களை நிரப்பும் நிர்பந்தம் உள்ளது. தீவிர, வணிக இதழ் வாசகர்களுக்கு இடையிலான ஒரு பாலமாகத்தான் உயிர்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆழமான கட்டுரைகளை சுவாரஸ்யமாக, தொடர்ச்சியாக எழுதும் எழுத்தாளர்கள் எத்தனை பேர் நம் இலக்கியப் பரப்பில் உள்ளனர்? ஆங்கிலத்திலிருந்து கோட்பாட்டு எழுத்தை தமிழில் பிரதியெடுப்பதை நான் குறிப்பிடவில்லை. புதிய கலை, அறிவியல், சமூக, வரலாற்று அணுகுமுறைகளை நம் சூழலுக்கு அல்லது தலைமைப் பொருளுக்கு பொருத்தி அவதானிக்கும் மிகச்சில எழுத்தாளர்களே உள்ளனர்; ஒரு மாதாந்திர பத்திரிகைக்கு அவர்களால் மட்டுமே தீனி போட முடியாது. உயிர்மை அனைத்து எழுத்தாளர்களுக்குமான பொதுத் தளம். தீவிர ஆய்வுப் பின்னணி மற்றும் தயாரிப்புடன் உருவாக்கப்படும் கட்டுரைகளை "உயிர்மை" எதிர்பார்க்கிறது என்பதே உண்மை. மிக முக்கியமான படைப்புகளுடன் பலவீனமானவையும் வெளிவந்தால் அது நம் தமிழ்ச்சூழலின் பிரதிபலிப்பு தான். எழுத்தாளர்களின் மறுபிம்பம் தான் பத்திரிகை. உயிர்மையில் தொழில் நுட்ப ரீதியிலான ஆழமான சினிமா விமரசனங்களை வெளியிடாதது பற்றி நான் அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரனிடம் கேட்டிருக்கிறேன். தமிழில் அத்தகைய திரைவிமர்சகர்கள் இல்லை என்பதே அவரது பதில் (இதையே "கற்றது தமிழ்" ராமும் "புதிய பார்வை" பேட்டி ஒன்றில் குறிப்பிடுள்ளார்). மற்ற துறை சார்ந்த படைப்புகளின் பஞ்சத்திற்கும் இப்பதிலே பொருந்தும் என நினைக்கிறேன். ஜெவின் திருப்திக்காக வேண்டுமானால் எச்.பீர்முகமது உயிரொசையில் எழுதின சில தத்துவக் கட்டுரைகளை உயிர்மையில் மறுபிரசுரித்து மிரட்டலாம். 

 மேலும் ஜெயன் உயிர்மைக்கு செய்வது போல் ஒருவர் தனக்குப் பிடித்த மூன்று பத்திகளை மட்டுமே படித்து பத்திரிகையை வீசினாலும் அது பிரச்சனை அல்ல. நமது இன்றைய முடிவற்ற ஊடக வெளியில் தரம் என்பதற்கு பொது அளவுகோல் அமைப்பது சிக்கலானது. தரம் தனிமனித தீர்வு சார்ந்தே அமைகிறது. இந்நிலைக்கு இன்றைய இணைய, பதிப்பு, டி.வி.ஊடகங்களில் மையமற்று அலைவுறும் விவாத சச்சரவுகள் (இவ்விவாதத்தையும் உள்ளிட்டு) உதாரணம்.

கடைசியாக "நொண்டி நாய்" விவகாரம் பற்றி. ம.பு இவ்விவகாரத்தில் சமயோசிதமாகவே நடந்து கொண்டிருக்கிறார். இதில் எதிர்கால பதிப்பாளர்களுக்கு பாடம் உள்ளது. சண்டை சச்சரவுகள் மத்தியிலும் தமிழின் மும்மூர்த்திகள் ஜெ, எஸ்.ரா, சா.நி ஆகியோர் உயிர்மை பதிப்பகத்துக்காக தொடந்து எழுதி வந்துள்ளதை கவனியுங்கள். அரசியலில் போலவே தொழிலிலும் எதிரிகளை பயன்படுத்துவது அல்லது நண்பர்களாக்குவது அவசியம். இலக்கிய மும்மூர்த்திகள் ஒரே படகில் வாளேந்தியபடி வெவ்வேறு சுருதிகளில் முழங்கியபடி பயணித்ததனாலே பல முக்கிய நூல்கள் நமக்குக் கிடைத்தன. 

அடுத்து, ஊனர்கள் தங்கள் சமூக உறவாடல்களின் போது தங்கள் உடல் வித்தியாசம் பற்றின பல வசைகளை கேட்டு பல்லிளிக்க வேண்டியுள்ளது. தலித்துகளை அவரகள் சாதிப் பெயர் குறிப்பிட்டு வைதால் நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஊனர்களை பாதுகாக்கவும் இத்தகைய சட்டம் வேண்டும். அத்துடன், "தேவடியாளுக்கு" நேர்ந்தது போல் "நொண்டி" எனும் தட்டையான வார்த்தைக்குப் பதிலீடாக வேறு பொருத்தமான, வாயில் நுழையாத சொல்லை அல்லது சொற்றொடரை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் அனைத்து கால் ஊனர்களும் நொண்டுவதில்லை. சக்கர நாற்காலிக்காரர்களை உதாரணமாக சொல்லலாம். அப்படிச்செய்தால் "நொண்டி" ஒரு பொது வசையாக மாறும் (நிலையற்ற தன்மை கொண்ட பிரபல எழுத்தாளரை "அட நொண்டி" என அழைக்கலாம்)---ஊனர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.

 
Read More

எழுத்து வெறியும் ஒழுக்கு நிலையும்: ஏராளமாய் எழுதுவதன் பின்னணி என்ன?

எழுத்தாளன் குறைவாக, மெலிதான அளவில் தான் எழுத வேண்டும் என்றொரு தரப்பு தமிழில் உள்ளது. ஆயிரங்களில் எழுதப்படுவது நீர்த்துப் போன எழுத்து என்பது இவர்கள் வாதம். ஒரு எழுத்தாளனின் முதல் நூலைப் படித்தால் போதும். பிறகு அவன் எழுதுவதெல்லாம் அதன் மிகையான பிரதிகள் தான் என்றார் சுஜாதா. அதாவது எழுத்தாளனின் சாராம்சமான தரிசனம் அவனால் பிறகு எழுதும் நூல்களில் பல்லாயிரம் பக்கங்களுக்கு மோர்ப் பந்தலாக்கப்படுகிறது. தமிழில் சில வாசக\விமர்சகர்கள் இது வணிக நிர்பந்தம் என்கிறார்கள். தமிழில் ஊடகங்களுக்கு தீப்பசி. இதற்கு எழுத்தாளன் பலியாகக் கூடாது என்கிறார் யுவன் சந்திரசேகர். 

நான் ( "நான் கடவுள்" புகழ்) விக்கிரமாதித்யனை முதலில் நான் சந்தித்தபோது அவர் தமிழில் நிறைய தலையணைகள் வந்திறங்கி உள்ளதாய் லேசாய் கிறங்கின கண்களுடன் விசனித்தார். அது சு.ராவின் "குழந்தைகள் ... " காலம். விக்கிரமாதித்யனின் வயதையும், அவர் ஒரு பிரயாணி என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மற்றபடி குண்டு நூல்களும் தரும் சிரமங்கள் என்ன? தொடர்ச்சியை தக்கவைத்து படிப்பதில் அன்றாட வாழ்வில் உள்ள சிரமம். தலையணைகளை கோடை விடுமுறைகளில் படிக்க வேண்டும். அல்லாவிட்டால் 10 மணிநேரம் அலுவலகம், போக்குவரத்து, குடும்பம் என்னும் குக்கர் வெயிட்டை எடுத்து விட்டு தினம் ஒரு மணி நேரம் விகிதம் "போரும் அமைதியும்" படிக்கலாம். ஆனால் அதன் நாலு லட்சத்து அறுபதினாயிரம் வார்த்தைகளில் வரும் நாற்பது சொச்சம் பாத்திரங்களில் 'யாரிந்த இல்லியா ஆண்டியாவிச் ரொஸ்டாவா ?' என்று திடீரென கனவில் முழித்து தோன்றும். குறைந்த பட்சம் தலையணைகளைப் படிக்க ஒரு வார விடுப்பு நல்லது. 

சில தடிமன் நூல்களைப் படிக்க முன்தயாரிப்பு வேண்டும். உதாரணமாய் "விஷ்ணுபுரம்". இந்நூலின் பாதியில் வந்தவுடன் நல்ல பிள்ளையாய் மூடி வைத்து 'இந்து மரபின் ஆறு தரிசனங்கள்' நூலை படித்து விட வேண்டும். அப்போது தான் தொடர்ந்து வாசிக்க ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இன்னொரு முறையும் உண்டு. அதற்கு விடுப்பு தேவையில்லை. உங்களிடம் கார் இருந்தால் ஒவ்வொரு சிக்னல் நிறுத்தத்தின் போதும் ஒரு சில பக்கங்களை படித்து விடலாம். கனடாவில் ஒரு பெண்மணி இப்படியாக "விஷ்ணுரத்தை" தலைகீழ் பாடமாக்கி விட்டார். சாலை போக்குவரத்திடையே நடந்து கொண்டும் படிக்கலாம். அப்படி ஒருவரை தக்கலையில் பார்த்திருக்கிறேன். 

தகுந்த தயாரிப்புகள் உள்ள பட்சத்தில் பரந்துபட்ட பெரும் நாவல்களின் நாட்கணக்கான வாசிப்பு நீட்சி ஒரு அலாதியான அனுபவம். 

வினாடி கணக்காய் அட்டவணைப் போட்டு கழிக்கும் இந்த அதிவிரைவு காலத்தில் தான் தமிழில் குண்டு நூல்கள் பெருமளவில் பிரசுரமாகின்றன. நம்மைவிட ஜுரவேகத்தில் வாழும் மேற்கில் கோடிக்கணக்கில் படிக்கப்பட்ட "டாவின்சி கோட்", "ஹாரி போட்டர்" வரிசைகள் ஒன்றும் குறுநாவல்கள் அல்ல. சமீபமாய் தீவிர இலக்கிய நூல்களின் விற்பனையும் எகிறியுள்ளது. தீவிர இலக்கியவாதிகள் நட்சத்திரங்கள் ஆகி விட்டனர். இது வணிக எழுத்து காலி செய்த இடத்தை தீவிரர்கள் பிடித்ததன் விளைவுதான்; இதை வணிகமயமாக்கம் என்று விமர்சிப்பவர்கள் எழுத திராணியற்றவர்கள் என்கிறார் ஜெயன் "நவீனத் தமிழிலக்கிய வரலாறு" நூலில். இதில் பாதியே உண்மை; திராணி என்பதை விருப்பம் என்று மாற்றிக் கொள்ள வேண்டும். 

ஏராளமாய், குண்டு குண்டாய் எழுதத் தூண்டுவது என்ன? 
பணம் (?), புகழ், அவகாசம் போன்றவை காரணம் என்றால், ஒரே நூலில் உலகளவில் பிரபலமடைந்த சாலிங்கர் (காட்சர் இன் த ரை), அருந்ததி ராய் (காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்), ஹார்ப்பர் லீ (டு கில் எ மாக்கிங் பெர்டு), ரால்ப் எலிசன் (இன்விசிபிள் மேன்) போன்றோர் அடுத்து நாவல் ஏதும் பிரசுரிக்காதது ஏன்? இந்த தூண்டுதல் உள்ளிலிருந்து வருவது.

உலகின் பல முக்கியமான எழுத்தாளர்கள் தாராளமாய் எழுதக்ககூடியவர்கள். பல்சாக் ( நாடகங்கள், நாவல்கள் சேர்த்து 100), விக்டர் ஹுயூகோ (75 நூல்கள்), மார்க்வெஸ் (23 நூல்கள்), பாக்னர் (20 நாவல்கள்), விர்கீனியா வூல்ப் (39 நூல்கள்), கான்ரட் (19 நாவல்கள்), வி.எஸ் நைப்பால் (33 நூல்கள்), ரஷ்டி (18 நூல்கள்) .... இப்படி நீள்கிறது பட்டியல். 

எல்லா எழுத்தாளர்களுக்கும் தாராளமாய் எழுத விருப்பம் தான். எழுத்தை பாதியில் நிறுத்துபவர்கள் அல்லது ஆரம்பத் தகராறு கொண்டவர்கள் எழுதாதது பற்றி சப்பைக் கட்டு கட்டுவது வாடிக்கை. பலர் 'உங்களுக்கு மட்டும் எப்படி எழுத நேரம் வாய்க்கிறது?' என்று தாராளர்களிடம் கேட்பதை காண்கிறோம். நம்மூரில் தம்பதிகள் மாதம் 12 முறை புணர்ந்தாலே அதிகம் என்கிறது ஒரு ஆய்வு. இதற்கு காரணமாக சொல்லப்படுவதும் வேலை அலுப்பு, மனஅழுத்தம், பதற்றம் ... இப்படி. யாரும் ஒத்துக்கொள்ளாத நிஜமான காரணம் ஒரே துணையை புணர்வதன் சலிப்பே. ஒருதுணை வாழ்வு பரிணாம விழைவுக்கு முரணானது. மாதம் ஒரு துணையென்றால் 12 மணி நேர வேலைக்கு பின்னும் பலருக்கு தூக்கம் வராது. இந்த விருப்ப விவகாரம் தாராள எழுத்துக்கும் பொருந்துவது. இந்த வகை எழுத்தாளர்களுக்கு எழுதாமல் தூக்கம் வராது.

சரி இந்த விருப்பம் சில பேருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது?

நான் இப்போது எழுதும் கை அசைவுகளை கட்டுப்படுத்துவது மூளை மேல்பரப்பிலுள்ள செரிபிரல் கார்டெக்ஸ் எனும் பகுதி. லிம்பிக் சிஸ்டம் எனப்படுவது ஒரு வட்ட வடிவ செல்கூட்டம். அது இந்த கார்டெக்சினுள் ஆழப் புதைந்துள்ளது. உங்கள் எழுத்தார்வத்தை தூண்டுவது; அகத்தூண்டுதல், உணர்வெழுச்சிகள், கண்ணுக்குள் பட்டாம்பூச்சி பறத்தல், சேக்கிழாருக்கு இறைவன் தந்த முதல் வரி அனைத்துக்கும் காரணமாவது பங்காரு அடிகளாரோ, பாபாவோ, சந்துமுனை கம்பி கூண்டு பிள்ளையாரோ, திராவிட அபிமான, சிவப்பு சித்தாந்தங்களோ அல்ல. இந்த லிம்பிக் சிஸ்டம் தான். லிம்பிக் பகுதியுடன் தொடர்புடையது நம் காதுக்குள்ள பின்னுள்ள டெம்பொரல் லோபுகள். இந்த லோபுகள் தாம் எண்ணங்களை ஒருங்கிணைப்பது வெட்டி சீர்படுத்துவது. இவற்றில் நிகழும் மூளை அலைகளின் நடவடிக்கைகளால், குறிப்பாய் பிரண்டல் லோபு பரபரப்படையும் போது, ஹைப்பர் கிராபியா எனும் ஆட்கொள்ளும் படைப்பு தூண்டுதல் நேர்கிறது. எட்கர் ஆலன் போ, தஸ்தாவஸ்கி, சில்வியா பிளாத், ஐசக் அசிமோவ், லீவில் கரோல் போன்றவர்கள் ஹைப்பர்கிராபியாவால் தூண்டப்பெற்றவர்கள். எழுதியே ஆக வேண்டும் என்று பசி, இயற்கை உபாதைகள் மறந்து பக்கம் பக்கமாய் கிறுக்கித் தள்ளும் உங்களில் சிலரும் ைஹைப்பர் கிராபியா மனநிலை கொண்டவர்தான். 

வலிப்பு எனும் நரம்பியல் கோளாறு மற்றும் மனச்சிதைவு, பைபோலார் டிஸ் ஆர்டர் எனும் மனநோய்கள் இந்நிலையை அரிதாக ஏற்படுத்தும். வலிப்பு ஹைப்பர்கிராபியாவுக்கு பிரதான உதாரணம் தஸ்தாவஸ்கி. தமிழில் பல எழுத்தாளர்களர்களுக்கு தங்களை மன நோயாளிகளாய் முன்னிறுத்துவதில் விருப்பமுள்ளது. அந்த அபாயத்தை முன்னிறுத்தி இதை சொல்லியாக வேண்டும். இந்த டெம்பரல் லோப் படைப்பாக்கம் குறிப்பாய் ஒரு மனநோய் அல்ல.

மற்றொன்று. இந்த தீவிர படைப்பு உந்துதலால் எழுதப்படுபவை அனைத்தும் தரமானவை அல்ல. குப்பைகள் எழுதப்பட்டு கூடைகளுக்கோ, பிரசுரத்துக்கோ செல்லலாம். மேலும் ஹைப்பர்கிராபியா ஒரு தூண்டுதல் மட்டுமே. பைக்கை உதைப்பது, விளக்கு பொத்தானை அழுத்துவது போன்று. பரிபூரண எழுத்து மனநிலை, அதனால் தாராள எழுத்துக்கு இது மட்டுமே விளக்கம் அல்ல. பிரக்ஞை மனதுக்கும் ஆழ்மனதுக்கும் ஒரு ஒருங்கிணைவு படைப்பு நிலை கைகூடுவது இதற்கு அவசியம். அப்போது மொழியை வெளிப்படுத்துவதில் இன்பம் ஏற்படுகிறது. காலம், வெளியிலிருந்து பிரக்ஞை கழன்று கொள்கிறது. தடையற்ற தொடர்எழுத்து சாத்தியமாகிறது. இந்நிலையை மிகாய் ஷிக்செண்ட் மிகாய் எனும் ஹன்கேரிய மனோவியலாளர் flow (ஒழுக்கு) எனும் கருத்துப் படிவம் மூலம் விளக்குகிறார். ஒருவர் ஒழுக்கு மனநிலையை அடைகிற போது சில காரணிகள் செயல்படுகின்றன:


ஈடுபட்டுள்ள நடவடிக்கையில் மனதை குவித்து ஆழமாய் இறங்கும் வாய்ப்பு; மனம் சிதறாத தன்மை.
பிரக்ஞை உணர்வு இழப்பு: செயலுக்கும் விழிப்புணர்வுக்குமான சங்கமம்
நேரம் போவது தெரியாமல் செயல்படுவது; கடிகாரத்தை வியப்பது அல்லது கோபிப்பது
நிலைமை மற்றும் நடவடிக்கை தனது கட்டுக்குள் இருப்பதான உணர்வு
ஒழுக்கு நிலையில் ஒரு உள்ளார்ந்த இன்பம் உள்ளதால் செயலின் கடினம் தெரிவதில்லை
திறமை அளவுக்கும் இலக்குக்கும் (அல்லது சவாலுக்கும்) நடுவிலான சமநிலை. இலக்கு எட்ட முடியாத அதிக கடினமாகவோ, எளிதில் எட்டி விடும்படி படுசுலபமாகவோ இருத்தல் கூடாது.

ஒழுக்கு மனநிலைக்கு இந்த கடைசி வரையறை மிக முக்கியம் என்று கருதுகிறேன். தொடர்ச்சியாய் எழுதிக் குவிப்பவர்கள் தங்களுடைய லட்சுமணக் கோட்டை விட்டு வெளிவராமல் எழுதுபவர்கள் என்பதை நாம் கவனிக்கலாம். தங்களுக்கு புழங்க தன்னம்பிக்கை உள்ள அதே நேரம் முழுதும் அறிந்துபடாத துறைக்குள் இயங்குவதிலேயே அனைத்து சிறந்த படைப்பாளிகளுக்கும் ஈடுபாடு. ஒரே மரத்தில் கிளை விட்டு கிளை தாவும் ஒருவித குரங்குத்தனம் இந்த மனப்பாங்கு. இந்த எழுத்தாளர்கள் பலதரப்பட்ட துறைசார் தகவல்களை தந்து பின்புலத்தை மாற்றி அமைத்தாலும் இவர்களின் பாத்திரங்களின் பிரச்சனைகள் ஒரே போன்றே இருப்பதை நாம் கவனிக்கிறோம். உதாரணமாய் தஸ்தாவஸ்கி. தேர்வுத் துணிவாற்றல் (freewill) இவரது மனம் பற்றிய மரக்கொம்பு (மேற்கின் பெரும்பாலான கிறித்துவ எழுத்தாளர்களுக்கும்). இதனாலேயே "குற்றமும் தண்டனையும்" நூலில் வரும் ரஸ்கால்னிக்கோவும், கரமசோவ் சகோதர்களில் ஒருவனான அலெக்சேய் கரமசோவும் எதிர்மறுப்புவாதம், ஆன்மீகம் எனும் இரு வேறுபட்ட நிலைப்பாடுகளில் நின்றாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொலை செய்வது. எழுத்தாளர்கள் அடிக்கடி கதைத்தளத்தை புத்திசாலித்தனமாய் மாற்றிக் கொள்வது மேற்குறிப்பிட்ட சமநிலையை தக்கவைக்கத்தான். 

கி.ரா. எழுதுவது கடினமானது, ஒருவித வாதை என்கிறார். 'ஒழுக்கு' மனநிலையில் எழுத்து நிச்சயம் வாதை அல்ல, போதை. ஆயிரத்து முன்னூறு பக்க நாவலை தால்ஸ்டாய் பிரசுரத்துக்கு சற்று முன்வரை பல முறைகள் திருத்தி எழுதியபடி இருந்தார். இது பொறுமையோ கடும் உழைப்போ அல்ல. இப்படி பத்தாயிரம் பக்கங்களை எழுதுவது ஒழுக்கு நிலையில் வலியல்ல, ஒருவித நீடித்த சுயபுணர்வு அனுபவம். 

தாராள எழுத்தைப் போன்றே அக்குள் சைசுக்கு ஆயுளுக்கு ஒரு புத்தகம் எழுதுவதும் ஒரு இயல்புதான். குறைவாய் எழுதுவதற்கு சுயசமாதானம் தேவையில்லை. (மனோஜ் தனது "புனைவின் நிழலில்" தனக்கு அச்சு மோகம் இல்லை என்கிறார்.)

தாராள எழுத்தாளனை 'போலியாய் எழுதாதே' என்று கட்டுப்படுத்துவது கழிப்பறைக்கு விரைபவனை தடுப்பதற்கு ஒப்பாகும். ஒல்லிப்பீச்சான் எழுத்தாளனை 'சோம்பேறி' என்று விமர்சித்து தாராளமாய் வெளியிடும்படி எக்க வைப்பது அதை விட பெரும் வதை. எழுத்தை வாதையாக்குவது இந்த லெனினியவாதிகள் தான்.
Read More

விசுவாச மருத்துவன்: படைப்பியல் சூட்சுமமும் மேட்டுக்குடி பகட்டும்

18-09-08 அன்று மாலை 7 மணிக்கு ஐயர்லாந்து நாடகாசிரியர் பிரையன் பிரையலின் ஆங்கில நாடகம் 
விசுவாச மருத்துவன் சென்னை சிவகாமி பேத்தாச்சி ஆடிட்டோரியத்தில் காலி இருக்கைகளிடையே விரவியிருந்த ஒரே மூச்சில் எண்ணி விடக்கூடிய, என்ன ஏதுவென புரியாத பார்வையாளர்களுக்கு முன் நிகழ்த்தப்பட்டது. விசுவாச மருத்துவன் தீவிர நாடக பாணியைச் சேர்ந்தது. ராஷோமோன் பாணியில் சில பொது நிகழ்வுகளை மூன்று நபர்களின் கோணங்களிலிருந்து விவரிக்கிறது---தனிமொழிகளில். மற்றபடியாய் உங்களை ஆகா என்று சொல்லவைக்க திணிக்கப்படும் தொழில்நுட்ப தந்திரங்கள் ஏதுமில்லை. 

இந்த மூன்று நபர்கள் (கதாபாத்திரங்கள்): 
(1) பிராங்க்

தொடுகை மூலம் எந்நோயையும் குணப்படுத்தும், ஆனால் அடிக்கடி கைநழுவிப்போகும், ஆற்றல் கொண்டவன். கர்ணனுக்கு தேவையான நேரத்தில் தேர் புதைவது போல், இவனுக்கு அவசியமான நேரத்தில் தன் குறைமாத குழந்தையை காப்பாற்ற முடியாமல் போகிறது. மாந்திரிகத்தை சாத்தியப்படுத்தும் தன் மனநிலையின் சூட்மத்தை இவன் உணர்வதே நாடகத்தின் உச்சகட்டம். 

(2) கிரேஸ்

பிராங்கின் வைப்பாட்டி. பிராங்கால் 'மூளையற்ற விசுவாசி' எனப்படும் இவளுக்கு, சுயசம்பாத்தியமோ, தனித்த சமூக அந்தஸ்தோ அற்ற நம்மூர் மனைவிவருக்கு நிகழ்வது போல், வாழ்வின் தவிர்க்க முடியாத பற்றுக்கோடாக கணவனே இருக்கிறான். 

(3) டெடி

பிராங்கின் மேலாளன். மிகைப்பேச்சாளன். கலைஞருக்கும் கலை நுகர்வோருக்கும் மத்தியிலுள்ள கலைவியாபாரி. நோய் குணப்படுத்தும் சக்தி டெடியைப் பொறுத்தவரையில் பயன்படுத்தப்பட வேண்டிய (கூவிக்கூவி விற்பதற்கான) திறமை மட்டுமே. 

இம்மூவரின் தனிமொழிகள் 4 பாகங்களில் நாடகத்தை முன்னகர்த்துகின்றன; சில பொதுச்சம்பவங்களின் முரண்கள், வேறுபாடுகள் சொல்லப்படுகின்றன.

ஒரு சம்பவத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விவரிக்கும்போது முரண்கள் தோன்றுவது (ஷேக்ஸ்பியர் காலத்திலொருந்தே) ஒன்றும் புதிதல்ல. ஆனாலும், வாழ்வில் அதுவரை ஒன்றாக செயல்பட்ட மூவரும் தம்முள் மறைத்திருந்த வெறுப்பும், அலட்சியமும், அன்பும் இந்த தனிமொழிகளில் வெளிப்படும் இடங்கள் சுவாரஸ்யமானவை. குறிப்பாய் கணவன் மனைவியரிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையும், தனிமையும்! வாழ்வின் இறுதித்தறுவாய்களில் அன்பும் ஆசையும் வறண்ட பின்னும், வெறுப்பு மட்டும் தொடந்து கூட வரும் என்று பி.டி. ஜேம்ஸ் தம் நாவலொன்றில் சொன்னது நினைவு வருகிறது. 

பிரையன் பிரையல் பற்றி: 
வாத்தியார் குடும்பத்தில் தோன்றிய பிரையன் பிரையல் பள்ளி ஆசிரியராய் 10 வருடங்கள் ஒழுங்காய் வேலை பார்த்து, திருமணம் செய்து 5 குழந்தைகள் பெற்றார். ஆசிரியப் பணியை எழுதுவதன் பொருட்டு 1960-இல் துறந்தார். 1958 முதல் 1964 வரையில் தோல்வியை மட்டுமே அறிந்த பிரையனை சீன் வார்டு எனும் பத்திரிகையாளர் ஆபெய் தியெட்டரின் நிராகரிப்புகளில் ஒருவராக குறிப்பிட்டார். உல்பெர் நாடகக் குழுவை தனது நாடகம் சந்தேகத்துக்குரிய சுவர்க்கம் ஏறத்தாழ வீழ்ச்சி நிலைக்குத் தள்ளியதை ஒரு பேட்டியில் பின்னர் அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் பிலெடெல்பியா இதோ வந்துவிட்டேன் நாடகம் வெற்றி அடைய, நியூயார்க், லண்டனில் கூட இந்த முன்னாள் கணித ஆசிரியர் கொண்டாடப்பட்டார். கணிக்க முடியாத வெற்றி தோல்விகளின் ஏதோ ஒரு புள்ளியிலிரூந்து தனது படைப்பு நிலையின், அகமனத்தின் சூட்சுமத்தை பிரையன் உணர்ந்திருக்க வேண்டும், அவரால் அதை கரும்பலகையில் சூத்திரம் வகுத்து வரையறுத்துக் கூற முடியாவிட்டாலும் கூட. பிரையனுக்கு பிறகு திரும்பிப் பார்க்க நேரவில்லை. நாடக முடிவில் ஒரு நோயாளியை குணப்படுத்த அன்று தன் அற்புதம் செயல்படாது என பிராங்க் நிச்சயித்து விட்ட, அதனால் முரட்டு கிராமத்தாரால் தான் கொல்லப்படலாம் எனும் சந்தர்பத்தில், எதிர்பாராது அவன் காணும் வெற்றி, விசுவாசம், அற்புதம் பற்றிய எத்தகைய தரிசனங்களை அவனுக்கு அளித்திருக்கும் என்பதை, நாடகாசிரியர் பிரையனின் வாழ்வுக் குறிப்புகளை புரட்டும்போது கணிக்க முடிகிறது. 

தனிமொழிகளாலான நாடகம் என்றாலும், கூர்மையான நகைச்சுவை, கதாபாத்திர ஆளுமையை சித்திரப்படுத்தும் மாறுபட்ட வசனமுறைகள், உடல் மொழி, துல்லியமான சம்பவ வர்ணனை என சுவராஸ்யமாக பாவையாளன் ஒன்றிப்போகும் படியாய் உள்ளது. 

பிராங்காக பி.சி. ராமகிருஷ்ணா. மேமாதம் படத்தில் பணத்தாசை பிடித்த அப்பாவாக பூச்சாண்டி காட்ட முயலும் இவரை நினைவிருக்கலாம். இருவரிலும் இவர் நடித்துள்ள விஷயம் யாராவது இருவர் பட தீவிர விசிறிகள் தீமிதித்து சத்தியம் செய்தால் நம்பலாம். இந்த நாடகத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் கொட்டாவி விடும் இடம் இவர் வரும் இடமாகத்தான் இருக்கும். 

கிரேஸ் பாத்திரத்தில் தோன்றுவது தெகசிப் கத்தாரி. பி.சி.க்குப் பிறகு தோன்றுவதாலோ ஏனோ நன்றாய் நடித்ததாய் பட்டது. (தனக்கு விசுவாத குணப்படுத்தல் சாத்தியமாவதில்லை எனும் இவர், ஏன் ஒரு புறா போல் லேசாய் தலைசாய்த்து, சில தொலைக்காட்சி புகழ் ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தாக்கள் போல் சம்மந்தமின்றி அடிக்கடி வசனத்துக்கு நடுவே மந்திரம் உச்சாடனம் செய்கிறார் என்பது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.)

டெடி உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் தடுமாற்றங்களும், சின்ன கிறுக்குத்தனங்களும் உடைய வண்ணமயமான பாத்திரம். கார்த்திக் ஸ்ரீனிவாசன் டெடியாக அதிகப்படியான கைத்தட்டல்கள் பெற்றார். எழுத்தாளர் சுஜாதா போல் ஒல்லியாய் உசரமாய், கேவல் குரலும் சேர்த்தால் கார்த்திக். பிரக்ஞையற்ற சரள நடிப்பு இவர் பலம். இது போன்ற சாப்ளின் பாணியிலான, நினைவில் நீங்கா துன்பியல் கலந்த நகைச்சுவை பாத்திரங்களை அத்தியாயம் 2, ஆண்டுரோமிடா போன்ற நாடகங்களில் ஏற்கனவே சிறப்பாய் செய்திருக்கிறார். 

நாடகத்தின் அன்றைய பார்வையாளர்கள் பற்றி: 
சென்னையில் இது போன்ற ஆங்கில நாடகங்களை போஷிக்கும், தமிழில் சொதப்பி, ஆங்கிலத்தில் குதப்பும் சிவப்புத் தோல் கனவான், சீமாட்டிகள் ஆழ்வார்பேட்டை போன்ற இடங்களில் வாசலில் கூர்க்கா தூங்க உள்ளே பங்களாக்களில் தூங்குபவர்கள். நாகேஸ்வரராவ் பூங்காவில் திபுதிபுவென ஒடும் இவர்கள் எச்சரிக்கை உணர்வு மிக்கவர்கள். பூங்காவுக்கு பின் தெருவில் நடைப்பாதையில் ஒருமுறை அமர்ந்திருந்ததற்கு, எதிர் மொட்டைமாடி வீட்டு மாமி ஒருத்தி என்னை "போலீசில் பிடித்துக் கொடுப்பேன்" என்று மிரட்டினாள். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் அன்றைய கூட்டத்தில் இவர்களே 96% ஆக இருந்ததால் (நிஜமாகவே தலையெண்ணிப் பார்த்து சொல்கிறேன்), நான் நிகழ்ச்சி முழுக்க காரணம் புரியாத பதற்றத்துடனே அமர்ந்திருந்தேன். சுய அனுபவத்தோடு, இதற்கு அங்கு நிலவிய முன்காலனியச் சூழலும் ஒரு காரணம் (நாடகத்துக்கு நடுநடுவே சத்தமாய் விமர்சனம் முணுமுணுக்கும் கல்லூரி ஆங்கில வாத்திகள் உபயம்!). 

மேட்டுக்குடியினருக்கு திருமணம், புத்தக வாசிப்பு, கைவினை கண்காட்சி, நாடகம் என ஒவ்வொன்றுமே ஆடை நுண்ணுணர்வை, கலையுணர்வை, ஆங்கில அறிவைக் காட்டிச் சிலுப்ப ஒரு பிரச்சார வாய்ப்பு. ஆடை ஒரு விளம்பர தட்டி போல. உதாரணத்துக்கு நாடகத்துக்கு குர்த்தா (இரு குர்த்தா ஆசாமிகளை பின்தொடர்ந்துதான் நானே சி.பே. ஆடிட்டோரியத்துக்கு வழி கண்டு பிடித்து வந்தேன்). சென்னையில் ஆங்கில நாடகங்கள் உயிரோடிருப்பதற்கு இவர்களும் முக்கியக் காரணம்.

மிச்சம் 4 சதவீதத்தில், வானொலிப் போட்டி ஒன்றில் வென்று இலவச அனுமதிச்சீட்டுப் பெற்றுத்தந்த என் மனைவியும், நானும்; மிச்ச இரண்டு பேர் பெயர் தெரியாத, 200க்குக் குறைவான விலையில், பச்சை நீல உடையணிந்த, திருதிருவென முழித்த, வத்தலான, நம்மூர் அழகிகள். இப்படி எங்களுக்கு டீக்கடையில் நின்று காபூசீனா குடிக்கும் கலவர உணர்வு ஏற்பட்டாலும், இந்த நாடகம் ஒரு நல்ல அனுபவமே.
Read More

ஆண்டுரோமிடா: விடுதலை நோக்கிய முடிவற்ற எத்தனிப்பு

"என்னை மூணாம் பேருக்குத் தெரியாமல் 
தன்னந்தனியாய் அழைத்துப் போய்
வெறி தீர சித்திரவதை செய்து கொன்று விடேன்.
அந்த அளவிலாவது நான் பயன்படட்டும்
மரணமும் உன் கைகளாலே உணரப்படட்டும்."
(தனியே, பூமா ஈஸ்வரமூர்த்தி; பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்)

மரணம் வழியான படைப்பின் திறப்பு பற்றிய "ஆண்டுரோமிடாவிற்கு வரவேற்கிறேன்" ஆங்கில நாடகம் 2008 ஆகஸ்டு 6-அன்று நிகழ்த்தப்பட்டது. தெ ஹிந்து மெட்றோபிளஸ் நாடக விழாவின் போது ஆகஸ்டு 2 முதல் 12 வரை அரங்கேற்றப்பட்ட 12 நாடகங்களில் ஒன்று இது. கடந்த 50 வருடங்களாய் 200 நாடகங்களுக்கு மேல் அரங்கேற்றியுள்ள தெ மெட்ராஸ் பிளேயர்ஸ் எனும் ஆங்கில நாடகக் குழு தான் தயாரிப்பு. அமெரிக்க நாடகாசிரியரான ரான் வைட்டின் இந்நாடகம் மிகச்சிறப்பான முறையில் ஜெ. ராஜீவ் சவுத்திரியால் இயக்கப்பட்டது. மூன்றாவது வருடமான இம்முறை தெ ஹிந்து மெட்றோபிளஸ் நாடக விழாவில் பார்வையாளர்களின் வருகையும், ஈடுபாடும் குறைவாகவே இருந்தது. இது போன்ற ஆங்கில நாடகங்களுக்கு பிராண்டட் சட்டை, ஜெல் போட்டு வாரிய தலை சகிதமாய் பிரசன்னமாகி நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் கும்பல், எஸ். வி. சேகர், கிரேசி மோகன் நாடகங்களில் மூக்குப் பொடி போட்டது போல் எந்திரத்தனமாய் சிரிக்கும் பார்வையாளர்களின் அதே மட்டரக ரசனை கொண்டவர்கள் தான். இந்நாடகத்தின் தீவிரமான உள்ளடக்கத்தை ஏற்கும் மனநிலையில் அவர்கள் இருக்கவில்லை.

நாடகத்தில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். இருபத்தைந்து வயதான, கழுத்துக்கு கீழ் செயலிழந்து படுத்த படுக்கையான ஒரு இளைஞனும், நாற்பதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒரு செவிலியும். இருவரின் பெயர்களும் தரப்படுவதில்லை. அவனது பாத்திரத்தில் கார்த்திக் சீனிவாசன் (குரு படத்தில் சில நொடிகளே மருத்துவராக தோன்றும் இவர், இந்திய ஆங்கில நாடக உலகில் ஒரு பிரம்மராக்ஷஸ்);செவிலியாக காயத்திரி ஸ்ரீராம். நாடகம் முழுக்க படுக்கையில் கிடந்தவாறே நடித்த கார்த்திக்கிற்கு தன் முகமும், குரலுமே வெளிப்பாட்டுக் கருவிகள். பலவித உணர்வு நிலை மாற்றங்களை அவரால் சகஜமாய் தன் குரலின் ஏற்ற இறக்கங்கள், சிறு அதிர்வுகள், பீறிடல்கள் மூலம் வெளிப்படுத்த முடிந்தது. தன் உடலை பயன்படுத்த முடியா நிலையை சமனம் செய்ய உச்ச தொனியில் மிகையாய் சதா பேசும் பாணியை பின்பற்றாமல், நுட்பமாய் நடிப்பதற்கான கார்த்திக்கின் முயற்சி நாடகத்தின் யதார்த்தப் போக்கிற்கு வலு சேர்த்தது. காயத்திரி ஸ்ரீராம் ஆரம்பக் காட்சிகளில் மிகையாக நடித்து சொதப்பினாலும், பிறகு தாக்குப்பிடித்து கதாபாத்திரத்தின் ஆழங்களுக்குள் இயல்பாகவே சென்றார். செவிலி தன் அகமன சிக்கல்களை நேர்மறை உரையாடல், உற்சாகம் பீறிடும் நடவடிக்கைகள் மூலம் மறைக்க முயல்பவள். யதார்த்த வாழ்வின் எல்லைகளை தன்னிடத்தில் இருந்தவாறே கற்பனை மூலம் தகர்க்க விழையும் இளைஞனின் போக்கு அசைவின்மை மூலமும், வாழ்வின் அபத்தத்திலிருத்து தப்பித்து ஒட்டும் செவிலியின் போக்கை ஓடுதல், நடனம், "தேனே" எனும் உணர்ச்சி பீறிடும் செயற்கையான அழைப்பு போன்ற மிகையான அசைவுசார் நடவடிக்கைகள் மூலமும் ரான் வைட் குறிப்புணர்த்துவதை இரு நடிகர்களும் புரிந்து நடித்துள்ளது பாராட்டத்தக்கது. .

ஊனமுற்ரோரின் எழுத்தாளராய் அறியப்படும் (ஆண்டுரோமிடாவில் வரும் இளைஞனைப் போலவே கழுத்திற்கு கீழே அசைவின்றி, தளர்வாதத்தால் வாழ்நாளில் பெரும்பகுதி அவதியுற்றவர் ரான் வைட்) ரான் வைட்டின் இந்நாடகத்தின் மையக்கரு, அதன் முக்கிய பாத்திரம் ஊனன் ஆயினும், ஊனம் பற்றியதல்ல எனும் தெளிவு இதை ஆழமாய் புரிந்து கொள்ள மிகவும் அவசியம்.

நாடகத்தின் இரு பாத்திரங்களில் ஒருவனான இளைஞனுக்கு துணை அவன் அம்மா மட்டுமே. ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அவனுக்கு பரிசு வாங்க அவள் நகரத்திற்கு செல்வது வழக்கம். அன்று அவனது 25-ஆவது பிறந்த நாள். நகரத்திற்கு தான் சென்று வரும் சில மணிநேரங்கள் அவனை கவனித்துக் கொள்ள ஒரு செவிலியை நியமிக்கிறாள். இளைஞன் கோபம், மகிழ்ச்சி, வன்மம், வெறுப்பு, ஆசை, உற்சாகம் என்று நிமிடத்திற்கு ஒரு மனநிலைக்கு தாவுகிறான். செவிலி எப்போதும் உற்சாகம் கொப்புளிக்க, தன் தொழில் மீது அதீத பற்றுதல் கொண்டவளாக தோன்றுகிறாள். அவள் திருமணமாகாதவள். மதுவுக்கு அடிமை. இவர்கள் இருவருக்கும் இடையேயான குறுகிய கால உறவும் அதன் விளைவுமே நாடகத்தின் கதையமைப்பு. நாடகம் பாதியிலிருந்து ஆரம்பிக்கும் பாணியைக் கொண்டுள்ளது. இளைஞன் குடிக்க தண்ணீர் கேட்க, வெளியேறும் செவிலி மது அருந்திவிட்டு, நீரை எடுத்து வர மறந்து விடுகிறாள். இதனால் எரிச்சலுற்ற இளைஞன் 
"தண்ணீர் வேண்டும்" என்று கத்தும் காட்சியிலிருந்தே நாடகம் ஆரம்பமாகிறது. அவனது நாகரிகமற்ற நடவடிக்கையால் எரிச்சலடையும் செவிலி, மயக்க ஊசியிட்டு அவனை உறக்கத்தில் ஆழ்த்த முனைகிறாள். இங்கு இளைஞனின் முக்கியமான குணாதசியங்கள் சில வெளியாகன்றன---அவன் தன் நடிப்புத் திறன், பிறரை பேச்சால் வசியப்படுத்தும் திறமை மற்றும் பிறரது பலவீனங்களை கணித்து அதை பயன்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தும் வழக்கம் உடையவன். அவன் இந்த குறிப்பிட்ட காட்சியில் சட்டென தன் முரட்டுத்தனத்தைக் கைவிட்டு, அவள் மனம் இளகும் விதம் பேசுகிறான். பிறகு அவன் அன்றிரவு அவள் தன்னைக் கொல்லப் போவதாய் அறிவிக்க அவள் அதிர்ச்சியும் கோபமும் கொள்கிறாள். அவனிடம் பேச மறுக்கிறாள். அவன் தன்னை அவள் கற்பழிக்க முயன்றதாய் தன் தாயிடம் புகார் செய்யப் போவதாய் மிரட்டுகிறான். வேலை பறிபோகும் பயத்தில் அவனிடம் பேச ஒத்துக் கொள்கிறாள். அவளை மதுவருந்த ஊக்குவிக்கிறான். போதையேற அவள் இறுக்கம் இன்றி செயல்படுகிறாள். இவ்வாறு பல விதங்களில் செவிலியை நோயாளி கட்டுப்படுத்தும் இடங்கள் குறியீட்டு ரீதியில் பார்வையாளனுக்கும், நாடகத்திற்குமான ஆரம்பநிலை உறவைப் பற்றி பேசுவதாய் உள்ளன; படைப்பை எதிர்கொள்ளும் பார்வையாளன் மனம் இனிமை, பதற்றம், அதிர்ச்சி, வெறுப்பு என பலவித உணர்வு நிலைகளை கடந்து செல்வதைக் குறிக்கின்றன.

நாடக--பார்வையாள உறவின் பல்வேறு பரிமாணங்களை பிறகு வரும் காட்சிகள் மிக நுட்பமாய் சித்தரிக்கின்றன. இளைஞன் பலவித மனநிலைகளை முகமூடிகளாய் அணிந்து நடிக்கிறான். நாடகத்தில் எங்குமே அவனது நிஜமான எண்ணமோ, உத்தேசமோ எதுவென்ற குறிப்பு வெளிப்படவில்லை. கதாபாத்திரத்தின் இந்த முகமற்ற நிலை உருமாறும் மையம் கொண்ட ஒரு பிரதியின் போக்கை ஒத்தது. எடுத்துக்காட்டாய் செவிலி அவனது ஊனத்திற்கான காரணம் கேட்கையில் அவன் புளுகு மூட்டைகள் ஒவ்வொன்றாய் அவிழ்த்து விட்டு அவளுக்கு தெரியும் படியே அவளை தொடர்ச்சியாய் ஏமாற்றும் காட்சியை சொல்லலாம். நிஜம் என்று ஒன்றை சுட்டுவதை விட அதன் எண்ணற்ற பரிமாணங்களை மொழியில் பிரதிபலிக்கச் செயவதிலே படைப்பு நோக்கமாய் கொண்டிருக்கும். மனம் வலி நிரம்பிய கணங்களை கடந்து செல்ல மேற்கொள்ளும் தப்பித்து செல்லும் தந்திரமாக அவனது இந்த செயலை பார்க்கவும் சாத்தியம் உள்ளது.

இளைஞனுக்கும், செவிலிக்கும் இடையே ஒருவித எதார்த்தம் மீறிய நம்பிக்கை பிணைப்பும், நெருக்கமும் ஏற்படுகிறது. இதை நாடகத்தின் இரண்டாம் கட்டம் எனலாம். அவனது விருப்பத்திற்கு ஏற்றபடியெல்லாம் வளைந்து கொடுக்கிறாள். இதை நாடகத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்றான நடனக் காட்சி காட்சி பூர்வமாய் சொல்கிறது. அவன் ஒலிப்பேழையிலிருந்து வழியும் இசைக்கு ஏற்றவாறு தன்னை நடனத்துணையாக கற்பித்துக் கொண்டு ஆடுமாறு அவளை கேட்டுக் கொள்கிறான். அவள் ஆரம்பத்தில் திகைத்தாலும் பிற்பாடு மனம் ஒன்றி ஆடுகிறாள். அவன் படுக்கையில் சாய்ந்து கொண்டே கற்பனையிலேயே அவளது அசைவுகளுக்கு ஏற்ப அசைகிறான்; மற்றொரு உடலின் அசைவுகளில் தன்னிலை இழந்து பரவசம் கொள்கிறான். கட்டிலில் வந்தமரும் அவள் அவனை அணைத்துக் கொள்கிறாள். புனைவின் தாளலயங்களுக்கு ஏற்ப மனம் இசைவதற்கு கற்பனையின் அவசியம், நாடகம் தன் போக்கிற்கேற்ப பார்வையாளனை வசியப்படுத்தி இயக்குவது, இரு கதாபாத்திரங்களுக்குள் நிகழும் ஆத்மீக இணைவு என பல விஷயங்கள் காட்சிபூர்வமாய் இங்கு சொல்லப்படுகிறது.

செவிலி இளைஞனின் வேண்டுகோளுக்கு இணங்க அவன் முன் மேலாடை களையும் காட்சி அதிர்ச்சி அடைய வைப்பதை விடவும், ஒழுக்க விழுமியங்களுக்கும் படைப்புக்குமான உறவைப் பேசுவதாய் இருந்தது. படைப்புலகில் ஒழுக்க விழுமியங்கள் நிஜம்--நேர்மை எனும் உரைகல்லில் உராயப்பட்டே மதிப்படப்படுவதை இக்காட்சி உணர்த்துகிறது. ஆரம்பத்தில் கூசி பின்வாங்கும் செவிலி பிற்பாடு தன்னுடலை வெளிப்படுத்துவதும், அவன் அவள் மார்புகளை கேலி செய்ய அவள் எதிர்க்காமல் விளையாட்டாய் கொண்டு தன்னைத் தான் கேலிக்குட்படுத்துவதுமான விசித்திரங்கள் இவர்கள் உறவின் போக்கில் புலப்படும் யதார்த்தத்திற்கு புறம்பான உள்ளோட்டத்தை சுட்டுகிறது. இந்த இயல்திரிபான தன்மை இந்நாடகத்தின் குறியீட்டு வாசிப்பின் அவசியத்தை உணர்த்துகிறது.

பொருளியல் தேவைகள், சடங்குகள், வெற்று நம்பிக்கைகள் கொண்டு இயங்கும் தினசரி வாழ்வெனும் பிரம்மாண்ட எந்திரம் நம்மை மென்று அபத்தத்தையும், அர்த்தமின்மையுமே துப்புகிறது. எந்திர வாழ்வின் அவசரத்தில் நம் செயல்பாடுகளின் கண்மூடித்தனமான பொம்மாலாட்டப் போக்கை கவனிக்கத் தவறுகிறோம். ஆனால் கதாநாயகனின் கூர்ந்த அவதானிப்பு மனிதர்கள் "உயிரை தக்க வைப்பதற்காகவே உயிரோடிருக்கும்" விசித்திரத்தை சொல்கிறது. கண்ணுக்குப் புலப்படாத, திட்டமிடப்பட்ட சூட்சும திரைக்கதை ஒன்றின் படி சமூகம் நம்மை அங்குலம் அங்குலமாய் கட்டுப்படுத்த இடையறாது முயலும் நிகழ்வின் நுணுக்க மாதிரி வடிவம் என்பது போல், இளைஞனின் வாழ்வவை அவன் அம்மா கச்சிதமாய் தன் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகளுக்கு ஏற்ப துல்லியமாய் இயக்க விழைகிறாள். ஒரு லட்சிய இளைஞன் பற்றிய அவளது கற்பனைகள் இவை: அவன் உலகத்து அனைத்து அறிவுத் துறைகளிலும் பரிச்சயமுடையவனாய் இருத்தல் வேண்டும். அது போன்றே புகைப் பழக்கம், மது அருந்தும் பழக்கம், முழுமையான பாலியல் வாழ்க்கை ஆகியவை கொண்டு சமூக அந்தஸ்து பெற்று குடும்ப பாரம்பரியத்தை நிலை நிறுத்த வேண்டும். அவனது தந்தை ராணுவ சேவையில் நாட்டுக்காக உயிர் துறந்த வீர பராக்கிரமசாலி என்பது குறிப்பிடத்தக்கது. அவரை யுத்த மரியாதைகளுடன் வீட்டுப் புழக்கடையில் அடக்கம் செய்துள்ளனர். இத்தகவலை படுத்த படுக்கையாய் இளைஞன் சொல்லும் போது உருவாகும் நகைமுரண் கவனிக்கத்தக்கது. இத்தகைய உடல் ரீதியான சாகசக்காரனான தியாகி அப்பாவின் பாரம்பரியத்தை தன் மகன் தொடர்வதற்கான அபத்த முயற்சிகளாய் அவனை சிகரெட் புகைக்க, சுயமைதுனம் செய்ய ஊக்குவிக்கிறாள். அவளது ஏக்கத்தின் சுமக்கவியலா பாரம் அவனையும் அழுத்துகிறது. தன்னை சம்பிரதாய வாழ்வின் நாடித் துடிப்புகளுக்கு ஏற்ப நடிக்க வைக்க முயலும் அபத்தப் போக்கின் உச்சபட்ச குறியீடான அம்மாவைத் தோற்கடிக்கும் அவனது மனஉந்துதலை காட்சி பூர்வமாய் வைட் வெளிப்படுத்துகிறார். சரியாய் ஒன்பது மணிக்கு அவனை தூங்க வைப்பதற்காக அவள் ஒரு டைமரை தயாராய் வைத்துள்ளாள். அதன் படி ஒன்பது மணிக்கு அனைத்து விளக்குகளும் அணைந்து விடும். இந்த திட்டதை முறியடிப்பதற்காய், விளக்குகள் அவ்வாறு அணைந்ததும் செவிலியிடம் ஸ்விட்சுகள் உள்ள இடத்தைக் குறிப்பாய் சொல்லி ஓடிச்சென்று அவற்றை இயக்கப் பணிக்கிறான். அவள் இயக்க, வெளிச்சம் வெண்புறாக் கூட்டம் போல் அவர்கள் மேல் குவிய, குதூகலமாய் தங்கள் வெற்றியை கொண்டாடுகிறார்கள். அதிகார கட்டுப்பாடுகளுக்கும் படைப்பாளிக்குமான உறவு இங்கு விமர்சனத்திற்கு உள்ளாகிறது. 

வார்த்தைகளின் மாயஜாலத்தால் மட்டுமே அடிக்கடி தப்பித்து போக இயல்கிற ஒரு சிறையாகவே வாழ்க்கையை அவன் நோக்குகிறான். இந்த பார்வையின் விளைவாய் மரணமே உள்ளீடற்ற வாழ்விலிருந்து விடுதலை எனக் கொண்டு, தன்னை கொன்று விடுமாறு செவிலியை வேண்டுகிறான், மிரட்டுகிறான், பின்பு மனவியல் ரீதியில் அவளை தூண்டில் முள் மீன் போல் மாட்ட வைத்து, தன் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்துகிறான். இவ்வாறு, சமூக--மனித உறவின் நுண்மாதிரி வடிவம் என்பது போல், தனிமனித உறவுகளின் வலைப்பின்னலில் ஒருவரை மற்றொருவர் தத்தமது சூட்சும திரைக்கதைக்கு ஏற்ப இயக்க முயலும் நிஜம் நாடகம் முழுக்க ஒரு சரடாகவே அதற்கான மெல்லிய நகைச்சுவை, அதிர்ச்சிகளுடன் தொடர்கிறது. நாடகவியல் பற்றி பேசும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களான தெ டெம்பஸ்ட், ஹாம்லெட் போன்றவற்றில் இந்த கருப்பொருளை அவர் மிகுந்த லாவகத்துடன், நேர்த்தியாய் கையாண்டிருப்பார். 

செவிலி நாடகத்தின் போக்கிலேயே, இளைஞனை புரிந்து கொண்டு, அவனை அளவற்ற கருணையுடன் நெருங்கும் உறவின் பரிணாமம் நாடகப் புரிதலுக்கு முக்கியமானது. பார்வையாளன் ஒரு நாடகத்தின் உள்ளாழங்களுக்கு பயணிக்க மானுடம் மீதான கருணை அவசியம் எனபதை இக்கட்டம் சொல்கிறது. தன் வாழ்வின் குரூரமும், அவமதிப்பும், துயரமும் மிக்க அந்தரங்களை செவிலி சற்று முன்னரே அறிமுகமான இளைஞனிடம், கண்ணாடி முன் நின்று தனக்குத் தானே பேசிக் கொள்வது போன்ற சுதந்திரத்துடன், வெளியிடுவதை ஒரு படைப்பின் முன் அதை உள்வாங்கும் மனம் அந்தரங்களுடன் தயக்கமின்றி உரையாடும் தன்மையைப் பற்றியது. 

இளைஞனின் வலிகளையும், இழப்பையும் அவன் பேசக் கேட்கும் செவிலி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் உகுக்கிறாள். அவன் அவளை கடுமையாய் கண்டித்து, சமனிலையுடன் தன் அனுபவங்களை அணுக வேண்டுகிறான். பார்வையாளனுக்கு நாடகாசிரியன் தரும் இந்த மறைமுக அறிவுரை மீண்டும் ஷேக்ஸ்பியரின் முன்பு கூறிய நாடகங்களை நினைவுபடுத்துகிறது. இதில் நகைமுரண் என்னவெனில் நிஜத்தில் நாடகம் நடைபெறுகையில் உணர்ச்சிவசப்படுவது போக, நம் பார்வையாளர்கள் குறைந்தபட்ச எதிர்வினை கூட ஆற்றவில்லை என்பதே. அங்காங்கே மாட்டிய நகைச்சுவை தெறிப்புகளுக்கு நர்சரி குழந்தைகள் ரைம் ஒப்பிப்பது போல் சிரிப்பதிலே அவர்கள் குறியாய் இருந்தனர். ஆனால் இளைஞன் தன் ஊனம் பற்றிய காரணத்தை மறைப்பது போன்ற பல் நுட்பமான தருணங்களில் அவர்கள் உலர்ந்த சோற்றுப் பருக்கைகள் போல் அசைவின்றி ஒட்டிப் போய் இருந்ததே மிச்சம். 

பெரும்பான்மையினராயுள்ள ஆரோக்கியசிகாமணிகள், ஹீமான்கள், அதிமனிதர்களின் உலகம் ஊனமுற்றோர் போன்ற சிறுபான்மையினருக்கு எத்தனை ஒருதலைச் சாய்வானதாய் உள்ளது என்பதை வைட் ஒரு கட்டத்தில் நாசுக்காய் சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு கிறித்துமஸ் காலையின் போதும் கிறித்துமஸ் தாத்தாவின் பரிசு இளைஞன் படுக்கையருகில் காத்திருக்கும். போது அரங்கில் கனவான்கள் அணிவதற்கான கோட்டும், முழுக்கால் சட்டையுமே அது. படுத்த படுக்கையான அவனுக்கு கிஞ்சித்தும் பயன்படாத அபத்தமான பரிசு. உலக அரங்கில் ஒருவன் தன் அடையாளத்தை நிறுவ, வாழ்க்கைத் தேடலை முன்னெடுத்துச் செல்ல பெரும்பான்மையினருக்கான தடத்திலே பயணிக்க வேண்டும் எனும் கண்மூடித்தனமான, ஒற்றைப் படையான எண்ணப்போக்கு இங்கு கடுமையான கேலிக்கு உள்ளாகிறது.

நாடக ஆரம்பத்திலிருந்தே தன் மரணத்தை விழையும் இளைஞன் தன் பிறந்த நாளான அன்று அதை நிகழ்த்த முடிவெடுக்கிறான். சுய பிரக்ஞையுடன் மரணமுற, அபரிதமாய் மது உட்கொள்வதைத் தவிர்க்கிறான். உயிரைக் காப்பதையே தன் கடமையெனக் கோண்டிருக்கும் செவிலி, அவனது மரண வேண்டுகோளை ஆவேசமாய் மறுத்தாலும் நாடக முடிவில், போதை காரணமாய், மருந்தை மாற்றி அளித்து அவனது மரணத்திற்கு காரணமாய் அமைகிறாள். பின் அதை உணர்ந்து பதறுகிறாள். இளைஞன் அவள் தந்தது சரியான மருந்தாகிய ஆஸ்பரின் தான், தான் இறக்கப் போவதில்லை என்கிறான். இது அவனது கடைசிப் பொய். அவள் அதை நம்பி, பேருவகையுடன் அவனைத் தழுவி கொண்டாடுகையில், அவன் சட்டென இறந்து போகிறான். அவன் மரணம் உறும் காட்சி நாடகத்தின் இறுதித் திருப்பமும், முடிவுமாய் அமைகிறது. இந்த கச்சிதமான முடிவு படைப்பியல் பற்றி ஆழமான ஒரு விஷயத்தை சொல்கிறது. ஒரு படைப்பு புனையப்படுவதான பிரக்ஞை மரணமடையும் நொடியில் தான் அது உயிர் பெறுகிறது. இம்மரணமே முடிவின்மைக்குள் நுழையும் முழுமையான விடுதலையை அளிக்கும். மரணம் இங்கு படைப்பனுபவத்தின் மூலம் ஆசிரியனுக்கும், பார்வையாளனுக்கும் கிடைக்கும் மனத்திறப்பின் குறியீடு. 
இம்மனத்திறப்பு மரணம் போன்றே அறிவின் விளிம்பில் நிற்கும் அனுபவம்; மலைமுகட்டு பனி மூட்டம் போன்றது. அடுத்த அடி பாதாளத்திலா, தரையிலா என்னும் நிச்சயமின்னமை படைப்பின் நகர்விலும், வாழ்க்கை எனும் மாபெரும் பிரபஞ்சப் புனைவிலும் நாடித்துடிப்பாய் உள்ளதை ஆண்டுரோமிடாவின் இறுதிக்காட்சி மிக நுட்பமாய் பேசுகிறது. பெயர் தெரியாத ஒரு குழந்தையின் முதற்பார்வை போல் இத்திருப்பம் அரங்கிலிருந்து வெளியேறிய பின்னும் நம்மை தொடர்ந்தவாறு உள்ளது.
Read More

Sunday 19 July 2009

ஐ.சி.சி பட்டியலில் உடைந்த மூக்குகள்

ஐ.சி.சியின் சமீபத்திய எக்காலத்துக்குமான 100 வீரர்கள் தரவரிசை ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாய் சொல்ல நான் ஒன்றும் சன் செய்தி வாசிப்பாளன் அல்ல. ஒரு சில பேர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோனோர் மைக் விழுங்கின முன்னாள் வீரர்கள். சற்று முன்னால் "முன்னாள்" பதவியை அடைந்த கும்பிளே கொஞ்சம் விலகி நின்று பார்த்து சொல்கிறார்: "தரவரிசைப் பட்டியல்களை பொருட்படுத்த வேண்டாம். யாரும் என்னிடம் இருந்து 600 விக்கெட்டுகளையோ, சச்சினிடமிருந்து 12000 ஓட்டங்களையோ பறித்து விட முடியாது. தற்போது அலச எந்த இந்தியா ஆட்டங்களும் நடக்க இல்லை, அதனாலே மீடியா இதை அவசர அவசரமாக பயன்படுத்தப் பார்க்கிறது". கும்பிளே மற்றுமொரு நல்ல விசயம் செய்கிறார். டீ.வி மைக்கை தவற விட்டு தனது ஈடுபாடான புகைப்படக் கலையை தொடரப் போகிறார். சலித்துப் போய் வரவர டீ.வி வர்ணனையாளர்கள் தங்களைப் பற்றியே பேசிக் கொள்கிறார்கள். இந்த அரட்டை குறட்டை நடுவே சில சமயம் விக்கெட் சரிந்தால் கூட சில நொடிகள் கழித்தே ஆ...ஊ.. என்கிறார்கள்.

சரி, பட்டியலில் காரசாரமாய் ஏதேனும் உள்ளதா? சச்சின் 16-வது இடத்தில். அவருக்கு சற்று முன்னால் 15-வது இடத்தில் சமீபத்திய சென்னை டெஸ்டில் இரண்டு வித ஷாட்களை மட்டுமே பயன்படுத்தி இரட்டை சதம் அடைந்த இங்கிலாந்து வீரர் ஆண்டிரூ ஸ்டுராஸ். முதல் பத்து பட்டியலில் லாராவும் இல்லை. இந்த பட்டியலை பார்க்கும் குட்டிப் பாப்பா கூட கைகொட்டி சிரிக்கும்தான். பொதுவாய் நமக்கு எழுந்த கேள்விகள்: ஐ.சி.சி பட்டியலாளர்கள் அத்தனை மடையர்களா இல்லை வரிசைப்படுத்திய மென்பொருளின் குளறுபடியா? ஆனால் இந்த பட்டியலிடலின் பயன்பட்ட அளவுகோலில் சற்று யதார்த்தம் உள்ளது. வரிசைப்பட்டியலை கிளறும் முன், ஒரு வீரர் தன் ஆட்டவரலாற்றில் எட்டியுள்ள உச்சங்களின் உயரத்தை கூறுவதே அதன் நோக்கம் என்பதை கவனிக்க வேண்டும். 

இந்த உச்சம் என்றால் என்ன? "பர்ப்பிள் பாட்ச்" எனப்படும் இந்த உச்சம் ஒரு வீரரின் மிக ராசியான காலகட்டத்தை குறிக்கிறது. இந்த கட்டத்தில் வீரரின் மனமும் உடலும் அபூர்வமான ஒருங்கிணைப்பை அடையும். மனம் நினைக்கும் போதே மட்டை வீசப்படும். உதாரணமாய், இலங்கைக்கு எதிரான ஒரு ஒருநாள் ஆட்டத்தில் சேவாக் வாஸின் பந்தை தூக்கி அடிக்க இறங்கி வந்தவர் பந்து தோளுயரம் எகிற, கால் நொடியில் சுதாரித்து பின் சென்று தேர்டு மேன் பகுதியில் (கீப்பருக்கு பின்னால் இடப்புறமாய்) ஆறு அடித்தார். சேவாக்கின் மேதைமை என்னே என டீ.வி சேவல்கள் கொக்கரித்தன. சேவாக் சொன்னார்:"என்ன நடந்ததென்று எனக்கே தெரியவில்லை, நான் திட்டமிட இல்லை. உள்ளுணர்வில் தான் அடித்தேன்". மனமும் உடலும் ஒருங்கிணையாமல் இருந்திருந்தால் சேவாக்கின் மண்டை எகிறியிருக்கும். இந்த தேனிலவு பருவத்தில் அதிர்ஷ்டம் முழுதும் இந்த வீரர் பக்கமே. பந்து குச்சியில் பட்டாலும் பெயில் கீழே விழாது. அவுட் ஆனாலும் அம்பயர் இல்லை என்பார். இப்படியான சிகரங்கள் பெரும்பாலான வீரர்களுக்கு ஒன்றிரண்டு ஆட்டங்கள் மட்டுமே. ஒரு சிலருக்கு மட்டுமே சிகரங்கள் வரிசையாய் இரண்டு மூன்று தொடர்களென நீளும். அப்படி நேரும் பட்சத்தில் இந்த வீரரால் தனிப்பட்ட முறையில் தன் அணியை தொடர்ந்து காப்பாற்ற, வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியும்.

இந்த பர்ப்பிள் பாட்ச் நிலவரத்தை புரிந்து கொள்ள நாம் 2001 ஆஸி--இந்திய டெஸ்டு தொடரை நினைவு கொள்வோம். லஷ்மண் இரண்டாவது ஆட்டத்தையும் (281 ஓட்டங்கள்), ஹர்பஜன் (32 விக்கெட்டுகள்) இரண்டாவது மூன்றாவது ஆட்டங்களையும் தனியாளாய் அணிக்கு வென்று கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த ஏழு வருடங்களில் என்றுமே இருவராலும் இந்த மாயத்தை தொடர முடியவில்லை. சீராய் ஆடி பின்னர் பெயரை தக்க வைத்தாலும் இவர்கள் சிகரம் ஏறுவதை மறந்து தொடர்ந்து சமதளத்திலெயே குதிரை ஓட்டினர். ஈடன் கார்டனில் வி.வி.எஸ் லஷ்மண் ஆஸ்திரேலியாவுக்கு 280 விளாசி ஆட்டத்தை வென்ற பின் ஒரு விமர்சகர் சொன்னார்: "பாவம் வி.வி.எஸ் தன் ஆட்ட வாழ்வில் உச்சத்தை வெகு சீக்கிரமே எட்டி விட்டார், இனிமேல் இறக்கம்தான், வேறுவழியில்லை". இன்று வரை இந்த பல்முளைத்த ஞாபகத்தில் தான் வி.வி.எஸ் தூங்கி வழிந்து ஆடி வருகிறார். பஜ்ஜி இறங்குமுகத்தின் கடைசி சறுக்கலாய் உள்ளே வரும் ஆப்ஸ்பின் எனும் ஆதாரப் பந்தை சரியாய் வீச முடியாமல் தூஸ்ரா, டாப்ஸ்பின் கொண்டு சமாளித்து வருகிறார். இப்போது பஜ்ஜி தன் மட்டை ஆட்டங்கொண்டு தான் அணிக்கு முக்கிய பங்களிக்கிறார். 2001-இல் ஆரம்பித்த வேகம் ஒரு வருடமேனும் தொடர்ந்திருந்தால் இப்போது 400 விக்கெட்டுகள் அனாயசமாய் எடுத்திருப்பார். இத்தகைய ஏணி--பாம்பு ஆட்ட வாழ்வுக்கு மற்றொரு உதாரணம் பாக்கிஸ்தானின் அக்தர். 

இதே தொடரில் ஹர்பஜனை தவிர பிறரை எளிதில் சமாளித்து ரன் குவித்த ஆஸி அணியின் ஹெய்டன் (3 ஆட்டங்களில் 549 ஓட்டங்கள், சராசரி 109.80) தொடர்ச்சியாய் 5 வருடங்கள் தன் ஆட்ட உச்சத்தை தக்க வைத்தார். 2001 முதல் 2005 வரை ஒவ்வொரு வருடமும் ஹெய்டன் ஆயிரம் ஓட்டங்களை குவித்தார், அதுவும் சரவெடி ஆட்டத்தால். ஜஸ்தின் லாங்கர் எனும் அதிரடி ஆட்டக்காரரோடு சேர்ந்து இவர் ஒரே நாளில் முந்நூறைத் தாண்டும் புதிய டெஸ்டு போட்டி வழக்கத்தை தொடக்கி வைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் பந்தாளர்ளுக்கு வருடம் தோறும் கிலி ஏற்படுத்திய டெஸ்டு ஜோடி இவர்கள் மட்டுமே. இப்படியான தொடர் உச்சங்கள் தான் ஐ.சி.சியின் தற்போதைய பட்டியலின் பின்னுள்ள அளவுகோல். 

பட்டியலில் முதலிடத்தில் உள்ள மேற்கிந்திய அணி மட்டையாளர் சிவ் நரைன் சந்தர்பவுல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சந்தர்பவுல் தொடர்ச்சியாய் கடந்த இரு வருடங்களில் 100க்கு அதிகமான சராசரியை தக்கவைத்து உள்ளார். பிராட்மானுக்கு அடுத்த படியான சாதனை இது. 1000 பந்துகள் தொடர்ச்சியாய் வெளியேறாமல் ஆடியுள்ளார். முக்கியமாய் மூன்று தொடர்களில் (இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா)தனியாளாய் அணிக்கு தேவையான பெரும்பகுதி ரன்களை சேர்த்துள்ளார். இங்கிலாந்து தொடரில் இவரது சராசரி 148.66; ஆஸி தொடரில் 147.33. ஆஸி வீரர்களால் மூன்று ஆட்டங்களில் இவரை வெளியேற்றவே முடியவில்லை. 

சந்தர்பவுலுக்கு பல பலவீனங்கள். பந்து வீசப்படும் கால் நொடி வரை குச்சிகளுக்கு குறுக்கே நிற்கும் ஆபத்தான பாணி; முன் கால் ஆட்டம் அரைகுறை; கால் பக்கம் வரும் பந்தை அடிப்பதில் தான் முதல் விருப்பம், பெரும்பாலான பந்துகள் பொதுவாய் ஆஃப் பக்கமே விழுவதால் படகோட்டுவது போல் தொட்டுத் துழாவி ஆடுவார். இவரை செலுத்துவது மனதிடம், விடாப்பிடி குணம் மற்றும் கவனம்.

இப்போது சொல்லுங்கள்: உங்கள் சச்சினோ, திராவிடோ இது போன்ற சராசரியோடு தொடர்ச்சியாய் மூன்று தொடர்கள் ஆடியதுண்டா? மேற்கூறியவர்களை விட பன்மடங்கு திறமைசாலியான சச்சினால் தன் ஆட்டத் தீவிரத்தை வாழ் நாளில் தொடர்ச்சியாய் இரு ஒரு நாள் தொடர்களில் மட்டுமே ஏறத்தாழ தக்கவைக்க முடிந்தது: 1999 கட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஷார்ஜாவில் நடந்த ஆட்டங்களில். சச்சினினுடயது நிதானமான ஆட்ட வளர்ச்சி மட்டுமே. பெரும்பாலும் ஒரு தொடரில் ஒன்றிரண்டு ஆட்டங்களில் அவர் தொடர்ச்சியாய் சதங்கள், பிறகு தூங்கப் போய் விடுவார். மெல்லத் தின்றால் பனையையும் தின்னலாம் என்பார்களே அது போல். இதற்கு ஒரு காரணம் அவரால் வெகு நேரம் கவனத்தை தீவிரத்தை தக்க வைக்க முடியாது என்பதே. அப்படி தக்கவைத்தாலும் அது ஒரு ஆட்டத்துக்கு மட்டுமே இருக்கும். 

எம்.சி.சி கல்லூரி அணியில் அவ்வப்போது பந்து வீசி வந்த நண்பர் வாசிமலையிடம் ஒரு நாள் கேட்டேன்: சாதாரண ஒரு நபர் சதம் அடிப்பதற்கும் சச்சின் அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்? எல்லாம் ஒரே ஓட்டங்கள் தானே? "

வாசி எரிச்சலாக சொன்னார்: " இந்த முனையிலிருந்து அந்த முனைக்கு ஒரு பயின்ற ஓட்ட வீரர் ஓடுவதற்கும் நீ ஓடுவதற்கும் வேறுபாடு உண்டல்லவா? ஓடும் பாணி, தொழில் நுட்பத்தில்"

"ஒரு வேளை நான் அவரை முறியடித்து முதலிடத்திற்கு வந்து விட்டால் பாணி, தொழில்நுட்பம் இருந்து என்ன பயன்?"

என்னை துரத்தி அடிக்காத குறைதான். 

சச்சினின் கலை, புத்திசாதுர்யம், லாவகம் புரிகிறது. ஆனால் ஓட்டங்களுக்கு கலையுணர்வின் கனம் இல்லை. அவை வெறும் எண்கள் தான். கடந்த வருடம் பங்களூரூவில் ஆஸி டெஸ்டில் சகீர்கான் அடித்த எண்பது கூட ஒரு சச்சின் சதத்தை விட இதனாலே சில நேரம் அதிக முக்கியமானதாகிறது.

12,000 ஓட்டங்களல்ல, சச்சின் தன் மேலதிகாரத்தை நிறுவ வரப்போகும் நியூசிலாந்து தொடரில் 100 சராசரியில் ஓட்டங்கள் எடுக்க வேண்டும். ஐ.சி.சி பட்டியல் இந்திய கிரிக்கெட் மேதைகளுக்கு ஒரு முக்கிய நினைவூட்டல்.
Read More

அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்

சென்னை கிறித்துவக் கல்லூரியில் நான் படித்த காலகட்டத்தில் (2002-04) சில மொழி வாரியான கலவரங்கள் நடந்துள்ளன. என் விடுதியில் மூன்று வருடங்களும் இந்து தமிழ்--கிறித்துவ மலையாளிகளிடையே பூசல் இருந்தது. இரண்டு குழுவினரும் ஒருவரை மற்றவர் தீண்டத்தகாதவர்களாய்க் கருதி வந்தனர். இந்தச் சூழலில் கல்லூரி விழா ஒன்றுக்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர் மலையாளி என்று தெரிந்த தமிழினப் போராளிகள் மேடையிலேயே கல் வீசித் தாக்கினர். அவர் ஓடியே போனார். மற்றொரு முறை மேகாலயா, மணிப்பூர் பசங்களும் ('சிங்கி' என்றழைப்போம்) தமிழினப் போராளிகளும் ஹாக்கி மட்டை, கிரிக்கெட் மட்டை சகிதம் மோதினர். கல்லூரி மேலாண்மை அதிகாரப் பகிர்வில் நாடார் கிறித்துவர்கள், வேளாளர்கள், சிறியன், மார்த்தோமா கிறித்துவர்கள் என்று இழுபறி இருந்தது. ஆனால் சாதிக் கலவரங்கள் நடந்ததில்லை. கிறித்துவம் என்ற ஒரே குடையின் கீழ் பெரும்பாலானோர் வருவதால் இந்தச் சச்சரவுகள் புகை வடிவில் மட்டுமே தொடர்ந்தன. சிறுபான்மையினர் ஆகையால் கிறித்துவர்களுக்கு உட்பூசல்களைத் தவிர்க்கும் அவசியமுள்ளது. ஆனால் பெரும்பான்மை இந்துக்களுக்கு உட்பூசல்கள் தவிர்க்க முடியாதவை. காரணம், சிறு குழுக்கள் மனிதனுக்கு வலுவான அடையாளம் தருகின்றன. 

தமிழகத்தில் சாதி பூதம் எந்தக் குடுவையிலிருந்து வெளிவரும் என்று சொல்ல முடியாது. சாதாரண சோடா பாட்டிலை இந்த பூதம் கையில் எடுத்தாலே மிஸைல் ஆகி வெடிக்கும். உதாரணமாய் ஸ்ரீனிவாசுக்குப் பதில் பாரதிராஜா, கல் வீசியவர்கள் தலித்துகள் என்றால், என்ன ஆகியிருக்கும். எங்கள் கல்லூரிக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே பொருள், உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் தேர்வெழுத வந்த முதலாம் ஆண்டு தலித் மாணவர்களை ஆதிக்க சாதி (தேவர்?) மாணவர்கள் சூரசம்ஹாரம் செய்ய வர இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். "புகார் அளிக்கப்படாத காரணத்தால்" காக்கிகள் வெறுமனே வேடிக்கை பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை காக்கிகள் வேறு புகுந்து தாக்கியிருந்தால் கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு என்று நீண்டிருக்கலாம். ஏனெனில் மாணவர்களிடம் குண்டாந்தடிகள், கத்தி, டியூப் லைட் போன்ற ஆயுதங்கள் தயாராய் இருந்தன. 'பாதுகாப்பற்ற' நமது லத்தி போலீசாரை இந்த பயங்கர ஆயுத கும்பலிடம் அனுப்புவது பூனையைப் பிடிக்க எலிக்கூட்டத்தை ஏவுவது போன்றது. மேற்குறிப்பிட்ட பாணியில் காக்கிகளும் சற்று உயர்ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி கும்பலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் இருதரப்பினருக்கும் பலத்த காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டிருக்கும். வெறுமனே மாணவர்கள் விளையாடியதன் எதிரொலியாக கோவையில் சட்டக்கல்லூரி கல்வீச்சில் சேதம், திருச்சி, மதுரை சட்டக்கல்லூரிகளில் மாணவர் போராட்டம், மதுரையில் 10 பேருந்துகள் தாக்குதல். மூன்றாவது அணியும் இறங்கியிருந்தால், இதுவொரு பெரும் சாதிக்கலவரமாக நீடித்திருக்கலாம். போலீசார் 'வேடிக்கை' பார்த்ததற்கு இதுவும் காரணமோ?

அடுத்து ஒரு பாமர சந்தேகம். இதுபோன்ற கலவரச் சூழலில் கமிசினர் நிச்சயம் முதல்வரிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நம் அரசியல் தலைமையின் உத்தரவு என்னவாக இருந்திருக்கும்? நாம் வேறு புகுந்து எதற்கு இரு தரப்பு சாதிகளை காயப்படுத்த வேண்டும், அவர்களாகவே அடித்து ஓயட்டும் என்பதாக இருக்கலாம். தலித்துகள் தேர்தலில் நிற்கும், கோயில் விழாக்களில் ஈடுபடும் பிரச்சினைகளாகட்டும் நம் அரசுகள் பூனை பிடிபட்ட எலியோடு விளையாடுவது போலவே கையாண்டு வருகிறது. இன்றளவும் தலித்துகள் பாதுகாப்பற்றவர்களாகவே உணர்ந்து வருகிறார்கள். நெல்லையைச் சேர்ந்த என் நண்பர் ஆறுமுகம் பள்ளியிலிருந்து முனைவர் பட்டப் படிப்பு வரை ஆதிக்க சாதியினரால் மனவதை பட்டுள்ளார். இப்போது திருவல்லிக்கேணி செம்மொழி ஆராய்ச்சி மையத்தில்கூட இவர் பாதுகாப்பற்றவராகவே உணர்கிறார். ஊரில் இவரது நிலம் தேவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. படித்த தலித்தின் நிலையே இதுவென்றால், மற்றவர்கள்? பந்தபுலி கிராமத்தில் அக்டோபர் மாதம் ஆதிக்கசாதி மக்களால் 200 தலித்துகள் மலைப்பகுதிக்கு விரட்டப்பட்டனர். இவர்களுக்கு இதுவரை பாதுகாப்பு அளிக்காத காவல்துறை மற்றும் நெல்லை கலெக்டரை தேசிய மனித உரிமை ஆணையம் சமீபமாய்க் கண்டித்துள்ளது. இது நம் அரசுகள் வேட்டையாளிகளுக்கு காவல் நிற்கும் கையாலாகாத போக்கினாலே. 

சட்டக் கல்லூரிக் கலவரத்தில் இருவேறு சாதித் தலைவர்களின் ஆவிகள் சம்மந்தப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வதைபடும் தலித்துகள் தங்கள் அடையாளத்தை நிறுவ அம்பேத்கரைப் பயன்படுத்துவது புரிந்து கொள்ளத்தக்கது. அடிபட்ட கால் குணமாகும்வரை ஊன்றுகோல் பயன்படுத்துவது போன்றது இது. ஆனால் வலுவான சாதியினரான தேவர்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் எதற்கு? தலித் சிந்தனையாளனான மதுரையைச் சேர்ந்த நண்பன் சார்லஸ் வழிபாட்டு வேற்றுமைகள் கொண்ட தேவர் உபசாதியினரை ஒன்றிணைப்பதற்காக முத்துராமலிங்கத் தேவர் ஒரு பொது அடையாளமாக முன்வைக்கப்படுவதாகக் கூறுகிறான். இது ஒரு ஆபத்தான போக்கு. எதிர்காலத்தில் இது போன்ற உபசாதிகள் ஆளாளுக்கு அகழ்வாராய்ச்சியில் இறங்கினால் தமிழகத்தில் தீவிரமான இட நெருக்கடி ஏற்படும். அதுமட்டுமல்ல, யார் யாருடன் மோதுவது போன்ற கடுமையான குழப்பமும் ஏற்படும். 

ஒருவேளை கலவரம் பற்றி கமிசினர் சேகர் அரசிடம் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாய் நடந்திருந்தால் அதன் பொருள் காவல்துறையைக் கட்டுப்படுத்த நம் அரசு தவறிவிட்டது என்பதே. "இப்போது எரிதழல் கொண்டு வா அண்ணன் கையை எரித்திடுவோம் " என்று ஏழு போலிசாரை இடமாற்றம், தற்காலிகப் பணி நீக்கம் என்று தண்டித்திருப்பது நடந்த அராஜகத்துக்குத் தீர்வல்ல. முன்பு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் மோதியபோது போலீசார் கைகட்டி நின்றது இது போன்றதொரு 'அரசியல் காரணத்தினால்' தான். ஏற்கனவே டவுசர் கிழிந்த தமிழக காங்கிரசார், போலீஸ் அனுமதியுடன் நடந்த, இந்த குஸ்திப்போட்டி தொலைக்காட்சியில் பலமுறை ஒளிபரப்பப்பட நிர்வாணமாயினர். இந்த பொறுப்பற்ற காக்கிகள் என்னவாயினர்? பகடையாட்டத்தில் வெற்றிகரமாய் நகர்த்தப்பட்ட மற்றொரு காய் அது. அதற்கடுத்து, அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் தினகரன் அலுவலகத்தை எரித்து அப்பாவிகளைக் கொன்ற போது 'வேடிக்கை' பார்த்த போலீசார் நிலை என்ன? நாடகம் முடிந்ததும் அரிதாரம் கலைத்துவிட்டு மீண்டும் திரும்பினர்.

"ஒவ்வொரு முறை தி.மு.க ஆட்சிக்கு வரும்போதும் போலீஸ் வலுவிழந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது" என்றார் சோ. அப்பாவி கல்லூரி மாணவிகளை நீதிமன்ற தீர்ப்புக்காக எரித்தவர்களை மீண்டும் அரியணையில் அமர்த்தினால் மட்டும் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது? "மக்கள் காவல்துறை மீது மொத்த நம்பிக்கையையும் இழந்துவிட்டார்கள்" என்று சீறினார் வைக்கோ. இருந்தால் தானே இழப்பதற்கு. ஜெயலலிதா வழக்கம் போல் ராஜினாமா கோரியுள்ளார். இவரது தொடர்கோரிக்கைகளில் லாலிப்பாப் கேட்கும் குழந்தையின் அப்பாவித்தனம் உள்ளது. 

காக்கிகள் அரசு எந்திரத்தின் கூலிப்படையினர் என்பது ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் இத்துறையில் நிகழும் பதவி, இட மாற்றங்கள் தெளிவாக்குகின்றன. நடந்த கலவரத்தின் போது அடிபட்ட மாணவர்களை காவலர்கள் மருத்துவமனை உதவியாளர்கள் போல் தூக்கிச் செல்லும் பத்திரிகைப் படங்கள் ஒரு பரிதாபமான சித்திரத்தை அளிக்கிறது. போகிற போக்கில் இருக்கிற அமெரிக்க பாணி ரோந்து கார்களை புடுங்கி விட்டு ஆம்புலன்ஸ் வண்டிகளை இவர்களுக்கு அரசு அளிக்கலாம். குற்றங்களைத் தடுக்கும் அதிகாரம் இழந்த இந்தப் பொம்மைக் காவல்துறையைச் சீர்படுத்த நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றொரு வாதம் உள்ளது. ஆனால் வக்கீல்கள், சட்ட மாணவர்கள் சமீபமாய் தமிழகத்தை உலுக்கி வரும் அதிகாரம் பெற்ற அராஜக கும்பல்கள். கடந்த சில வருடங்களில் இந்தக் கறுப்புத் தீவிரவாதிகள் நிகழ்த்தி வரும் தர்ணாக்கள், அடிதடிகள் காரணமாய் இவர்கள் விசயத்தில் நம் அரசு எப்போதும் நான்கு அடிகள் பின்வைத்த பின்னரே இரண்டு அடிகள் முன்வைக்கிறது. இந்த வாரத்தில் தமிழகத்தில் உரையாற்ற வந்த கிரண் பேடியை, அவர் முன்னர் வெளியிட்ட ஒரு கருத்துக்காக, வக்கீல்கள் தாக்கச் செல்ல, அவர் வந்த வேகத்தில் திரும்பியுள்ளார். சமீபமாய் ஹிந்து பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கின இந்த வக்கீல்களின் தேர்தல் சட்டமன்றத் தேர்தலை விட பதற்றமிக்கதாக உள்ளது. இப்படிப்பட்ட ரௌடிகளிடம் சிக்கி நீதித்துறை அவதிப்படுவது போதாதா!

செய்தித் தாள் புகைப்படங்களில் குருதி வெள்ளத்தில் கிடக்கும் ஒரு மாணவரைச் சூழ்ந்து நின்று குண்டாந்தடியால் ஆக்ரோசமாய்த் தாக்கும் ஒரு மாணவரின் கலையாத சட்டை, சீராய் வாரின தலை, பளபள பூட்ஸ்கள் போன்ற சீரான கார்ப்பரேட் குமாஸ்தா வகை தோற்றம் காணும்போது ரௌடிகள் பற்றி சமூகம் அளித்துள்ள சித்திரம் கலைகிறது. அன்றைய தினம் திட்டமிடப்பட்ட கசாப்புக்காக இவர் கண்ணாடி முன் மிடுக்காய் தன்னைத் தயாரித்துக் கொண்டு கையில் ஆயுதம் கொண்டு கிளம்புவதைக் கற்பனை செய்தால் இரக்கமின்மையின் நிதர்சனம் கலங்க வைக்கிறது. இனிமேல் காவல் துறைக்கு ஆளெடுப்பதானால் சட்டக்கல்லூரிகளிலிருந்தே இறக்குமதி செய்யலாம்.

 




 
   
  

  
 
 


Read More

அப்பாக்களின் ஆட்டம்

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவரான நசீர் ஹுசேனின் அப்பா தன் குழந்தைகளின் வளர்ச்சியை முன்னிட்டு அறுபதுகளில் இந்தியாவை விட்டவர். இவர் வைர, ரத்தின வியாபார பரம்பரையை சேர்ந்தவரல்ல, வெளிநாட்டு தலைமை கிளைக்கு உள்ளூரிலிருந்து போன கணினி பொறியியலாளருமல்ல. கைவசமிருந்த சில்லறைத் திறமைகளை பயன்படுத்தி அன்னிய நாட்டில் வேரூன்ற இந்த குடும்பத்துக்கு ரொம்ப காலம் பிடித்தது. அதனாலே பொருளாதார ஸ்திரமின்மை காரணமாய் வழக்கமாய் இந்திய மத்திய தர குடும்பங்களில் காணப்படும் இறுக்கங்கள், கட்டுப்பாடுகள், பதற்றம் போன்றவற்றை புலம்பெயர்ந்த நசீர் பால்யத்திலே அனுபவித்தார். இது அவரது ஆளுமையை பெருமளவில் பாதித்தது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தை இருவிதங்களில் எதிர்வினை செய்யும்: (அ) எதிர்மறையாக ஒரு கலகக்காரனாக மாறலாம்; (ஆ) தனித்துவமான ஆளுமை பெற்றோரின் நிழலில் குறுக்கிட, ஒரு பிரதிபிம்பம் போன்ற வாழ்வை வாழலாம். நசீர் ஹுசேன் தன் தந்தையின் நிழலிலிருந்து மிகத் தாமதமாக வெளிப்பட்டதை 'தீயுடன் விளையாடுதல்' என்ற நூலில் பேசுகிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஏழு, எட்டு வயது குழந்தைகளுக்கான கோடைப்பருவ கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தை எம்.சி.சி மைதானத்தில் பார்த்தேன். குழந்தைகளின் அபாரமான பொறுப்புணர்வு, சலிப்பு, பலதரப்பட்ட திறமைகள் என பார்க்க முதிர்ந்தவர்களின் ஆட்டத்தை விட சுவாரஸ்யமாக, கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. குழந்தைகளுக்கு பீல்டிங் எனப்படும் பந்துக்காக காத்திருக்கும் பொறுமை இல்லை. பலரும் ஆட்டத்தின் போது அடிக்கடி மைதானத்தில் உட்கார்ந்து விடுவார்கள். பயிற்சியாளர்கள் "டேய் ஏந்திரு கெட் அப்" என்று வாய் கிழிய கத்துவார்கள். பெற்றோர்கள் சப்பாட்டுக் கூடை, தண்ணீர் பாட்டில், டவ்வல் சகிதமாய் காத்திருப்பார்கள். அணித்தலைவன் பேருக்குத் தான். ஆட்டத்தை எல்லையில் நின்று நடத்துவது பயிற்சியாளர்கள். நான் பார்த்த அணியின் தலைவன் சோட்டூ எல்லைக் கோட்டில் நின்று நகம் கடித்தான். பயிற்சியாளர்கள் இந்த சிறுவர்களை அலசுவது கேட்க பயமாக இருக்கும். ஸ்ரீராம் என்றொரு சிறுவன் லூப்போடு கச்சிதமாய் சுழல்பந்து வீசினான். "இன்னும் பத்து வருஷத்ல இவன் தமிழ் நாடு ரஞ்சி ஆடுவான் சார்" என்றார் ஒருவர். அபினவுக்கு சில மைக்ரோநொடிகளுக்கு முன்னரே பந்து வரும் திசை, விழப்போகும் இடம் தெரிந்தது. சம்பிரதாய அமைதி ஆட்டம் ஆடி 47 ரன்கள் சேர்த்தவன், குளறுபடியான ரன் அவுட்டால் வெளியேற நேர, ஒருவர் பாய்ந்து வந்து அவன் முதுகில் அப்பினார்: " நாயே நாயே அவன் ஓடினால் நீயும் ஏன்டா ஓடுறே, ஹாப் சென்சுவரியை தவற விட்டியே போருமா நாயே ". அவர்தான் அப்பாவாம். வழிமுழுக்க உரக்க பையனை திட்டிக் கொண்டே வந்தார். குற்றவுணர்வில் தாரை தாரையாய் சிறுவன் கன்னத்தில் வடிவதை கவனிக்க பொறுமையில்லை. அந்த குழந்தை எதிர்காலத்தில் நிச்சயம் கிரிக்கெட் ஆடமாட்டான் என்று தோன்றியது. ஆனால் இங்கிலாந்தில் ஒரு குழந்தை தொடர்ந்து ஆடியது.

நசீர் ஹுசேனின் அப்பாவுக்கு ஏனோ பையனின் கிரிக்கெட் எதிர்காலம் மேல் அபார நம்பிக்கை. ஹுசேனுக்கு கால்சுழல் பந்து வீச்சில் திறமை இருந்தது. மட்டையாட்டம் சுமார்தான். பள்ளி ஆட்டங்களில் அவன் வீழ்த்தும் விக்கெட்டுகளின் எண்ணிக்கை பொறுத்துதான் வீட்டில் கால நிலை அமையும். பையன் சொதப்பினால் அப்பா அதை தன் சுயதோல்வியாகக் கொண்டு புகைவார். அது குடும்பத்தில் அனைவர் முகத்திலும் எதிரொலிக்கும். ஆட்டத்தில் வெற்றி என்றால் வீட்டிலும் கொண்டாட்டம். 'கறி' எனப்படும் இந்திய உணவு சமைக்கப்படும். எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. 12 வயதில் ஹுசேன் திடுதிப்பென வளர்ந்து உயரமாகிடும் வரை. அந்த உயரம் அவன் பந்து வீச்சை பாதித்தது (பொதுவாய் குள்ளம் சுழல்பந்து வீச்சுக்கு உகந்ததாய் கருதப்படுகிறது). விக்கெட்டுகள் விழவில்லை. அவனது திறமையை இழந்து விட்டான் என்று பயிற்சியாளர்கள் தெரிவிக்க அப்பா இடிந்து போனார். பையனோடு முகம் கொடுப்பதை தவிர்த்தார். வீட்டில் சாவுக்களை. ஹுசேன் எதாவது செய்ய வேண்டியிருந்தது. மட்டையாட்டத்தில் இருந்த ஓரளவுத் திறமையை மெருகேற்றி முன்னேறினான். உற்சாகமான அப்பா இப்போது மட்டையாட்டத்தை பற்றிக் கொண்டார். நசீர் தேசிய அணியில் இடம்பிடிக்க வியூகம் வகுத்தார். அப்பாவுடனான உறவை நீட்டிக்க நசீர் தான் களமிறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிக்கும் நெருக்கடி இருந்தது. இந்த அழுத்தம் அவர் ஆட்டத்தை பெருமளவில் பாதித்தது. கவனம், பொறுமை, கடும் உழைப்பு சக்கரங்கள் ஆகி, இவரது ஆட்டத்தை நகர்த்தின. திறமையாளிகள், உழைப்பாளிகள் என்று எல்லாத் துறைகளிலும் பிரிவுகள் உண்டு. ஆனால் உழைப்பையும், திறமை வெளிப்பாட்டையும் பிரிப்பது மிக மெலிதான கோடே. கடும் உழைப்பாளிகளாய் இருப்பதில் தவறில்லை. சுதந்திரமாக தங்களை வெளிப்படுத்த அனுமதிப்பதுதான் முக்கியம். ஹுசேனுக்கு ஒவ்வொரு பந்தை சந்திக்கும் போது அவுட்டாகி விடுவோமோ என்ற பயம் இருந்தது. அவரால் தன்னை இயல்பாய் வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் எப்போதும் தட்டுத்தடுமாறி ஆடுவராக உருவானார். ஆனால் இவரது அதிகவன ஆட்டம் நெருக்கடி நேரங்களில் அணிக்கு கைகொடுத்தது. நசீர் விரைவில் அப்பாவின் கனவை நிறைவேற்றினார். இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். பிறகு நடந்ததெல்லாம் வரலாறு என்றாலும் திரைமறைவில் கிரிக்கெட் ஆட்டம் தந்த நெருக்கடிகள், மனஅழுத்தம் பற்றி இந்த நூலில் வரும் தகவல்கள் புதியவை.

சர்வதேச ஆட்டத்துக்கு முந்தின இரவுகளில் பெரும்பாலும் ஹுசேன் தூங்குவதில்லை. சதா கண்ணாடி முன் மட்டையுடன் நின்றும் எதிரணி பந்து வீச்சாளரை கற்பனை செய்து பயிற்சி செய்வார். அதிகாலை தூங்க முயன்றாலும் அடுத்த நாள் தான் சந்திக்கப் போகும் பந்துகள், சூழல் என்று மனம் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும். துயரம் என்னவெனில் 96 ஆட்டங்களிலும் இந்த நிலைதான். ஆட்டத்தின் போது பெவிலியனில் தன் முறைக்காக காத்திருப்பது நசீருக்கு கடுமையான மன உளைச்சலைத் தருவது. எதிர்மறைக் கற்பனைகளின் அழுத்தம் தாங்காமல் எப்போது ஆடுகளத்துக்கு ஓடுவது என்று தவிப்பார். இந்த காத்திருப்பின் நெருக்கடி காரணமாகவே துவக்க ஆட்டக்காரர்கள் நெடுநேரம் நிலையாக ஆடி ஓட்டம் சேகரித்த நிலையில் ஆட வரும் ஹுசேன் எளிதில் அவுட்டாகி விடுவார். விக்கெட்டுகள் வேகமாய் சரிந்து சீக்கிரமாய் ஆட வரும்போது சிறப்பாய் ஆடுவார். நகைமுரணாக, இந்த தனித்துவமான மனநிலை ஹுசேனுக்கு நெருக்கடி ஆட்டக்காரர் அடையாளத்தை பெற்றுத்தந்தது. இவரது சிறந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 207. இந்த ஆட்டத்தின் போது தனக்கு உடலும் மனமும் இயைந்து போகும் ஒரு அபூர்வமான மனநிலை கிட்டியதாக சொல்கிறார். சுதந்திரமாக இவர் அடுத்து ஆடியது தன் கடைசி ஆட்டத்தில் தான். பதினாலு வருட கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாய் ஏற்கனவே அறிவித்த நிலையில் நசீருக்கு அடையவோ, இழக்கவோ ஏதும் இருக்கவில்லை. இவரது மிகச்சிறந்த ஆட்டமாக இது அமைந்தது. சிறப்பாய் ஆடுவதன் சூத்திரம் இந்த இறுதி சில மணி நேரங்களில் அவருக்கு புரிந்தது. 

"தீயோடு விளையாடுவது" எனும் ஆங்கில சொலவடைக்கு அவசியமின்றி ஆபத்தில் ஈடுபவது என்று பொருள். ஒரு ஆவேசமான கலகக்காரனாக நசீர் பற்றிய பொதுச்சித்திரம் இந்நூல் படிக்கையில் கலைகிறது. ஆபத்து பற்றி எப்போதும் உள்ளூர பதறிய, தன் ஆட்ட வாழ்வை இறுதி கணங்களில் மட்டுமே கொண்டாடத் தெரிந்தவரின் கதை இது. மேலும் இந்நூலில் அணித்தலைமையின் மனவியல் பற்றி சில கூர்மையான அவதானிப்புகள் வருகின்றன. 1999இல் சிம்பாப்வே இனக்கலவரத்தைக் கண்டித்து இங்கிலாந்து அணி அங்கு செல்ல மறுத்தது. அப்போது சர்வசதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மால்கம் ஸ்பீட் அற உணர்வற்று நடந்து கொண்டதை, வீரர்களை கால்நடைகள் போல் நடத்தியதை ஹுசேன் கண்டிக்கிறார். நாம் அறியாத ஐ.சி.சியின் எந்திர முகம் இது. தற்போது ஐ.பி.எல் தாதா லலித் மோடி இந்தியாவில் மனித உயிர்கள் சர்வசாதாரணமாய் தீவிரவாதத்துக்கு பலியாகும் பயங்கர சூழலில் டெஸ்டி ஆட்டங்களை தொடர்ந்து ஆடும்படி இங்கிலாந்து அணியினரை மிரட்டி பணியவைக்கப் பார்க்கிறார். ஐ.பி.எல் எனும் டினோசர், கால்நடை சந்தையான கிரிக்கெட்டை கசாப்புச் சந்தையாக்கி விட்டது. 

பெற்றோர்களின் வற்புறுத்தலால் கிரிக்கெட்டில் நுழைந்த இருவேறு உதாரணங்களை இந்தியாவில் பார்க்கலாம். 

நவ் ஜோத் சிங் சித்து ஒரு பேட்டியில் " நான் எதற்கு கிரிக்கெட் ஆடுகிறேன் என்று பலமுறை வியந்ததுண்டு. என் கிரிக்கெட் ஆட்ட வாழ்வில் நான் விரும்பி ரசித்து ஆடியது மிகக்குறைவு " என்றார். அவர் மேலும் நெகிழ்ந்து சொன்னார்: " இப்போது ஒரு வர்ணனையாளனாக, பேச்சாளனாக நான் மிகவும் இயல்பாக உணர்கிறேன், ஈடுபாட்டோடு செயல்படுகிறேன் " சித்துவின் இந்த நாற்பது வயதிலான தாமத மலர்ச்சி பிறரையும் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவரது செறிவான சுவாரஸ்யமான ஆங்கிலத்துக்கு, அதிரடியான கருத்துக்களுக்கு ஒரு தனி ரசிகப்படை உருவானது. அடுத்தடுத்து சொலவடைகள், ஒப்பீடுகள், மணிமொழிகள் தெறிக்கும் இவரது பிரவாக மொழியை ஊடகங்கள் 'சித்துவிசம்' என்று கொண்டாடின. கிரிக்கெட் பற்றி இவர் பேசினது பாதி உளறல்தான். ஆனால் கவாஸ்கர், ரவி சாஸ்திரியை விழுங்கி விடும்படியான பிரபலத்தை குறுகிய காலத்தில் அடைந்தார். கிரிக்கெட் விவாதங்களின் போது உணர்ச்சிவசப்பட்டு இவர் பிதற்றும் அபத்தங்களை, தன்னம்பிக்கையோடு செய்யும் கோமாளித்தனங்களை ஆங்கில செய்தி சானல்கள் ஒரு காமெடி டைம் போல் பயன்படுத்தின. திமிறும் மொழியின் வேகத்தோடு ஈடுகொடுக்கும் ஆர்ப்பாட்டமான உடல் மொழி சித்துவுக்கு இருந்தது. ஆட பாட கூட தயக்கமில்லை. தமிழில் சித்துவோடு வைகோவை ஓரளவு ஒப்பிடலாம். ஊடகங்களின் செல்லப்பிள்ளையை விரைவில் பா.ஜ.கா சுவீகரித்துக் கொண்டது. மீண்டும் டீ.வியில் பார்த்த போது சித்து காவி முண்டாசுடன் பொதுமக்கள் மத்தியில் அதே கொந்தளிப்புடன் பேசிக் கொண்டிருந்தார். கோமாளிகளுக்கும், பொழுதுபோக்காளர்களுக்கும் அரசியலில் முக்கியமான இடம் உண்டு என்பதை தத்துவ ஞானி பிளேட்டோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே கணித்திருந்தார். 

சித்துவின் அப்பா உயிரோடு இருந்திருந்தால் மகனின் எதிர்காலம் பற்றிய தனது கணிப்பின் தவறை அந்த சர்தார்ஜி உணர்ந்திருப்பார். சித்து கிரிக்கெட்டில் ஒளிவிட வேண்டும் என்பதே அவர் கனவு. ஆனால் குறைந்தபட்ச திறமை உடைய மகன் ரஞ்சி ஆட்டங்களில் ஓட்டங்கள் எடுக்கத் திணறி ஆடுகளத்தில் விறைத்துப் போய் நின்றான். பந்தின் திசை, விழப்போகும் இடத்தை அரை நொடிக்கு முன் கணிக்கும் திறன் இவருக்கு இல்லை. செய்தித்தாள் ஒன்று இவரை 'அடிக்கத் தெரியாத வினோதம்' என்று பரிகசித்தது. மனமுடைந்த தந்தை சிலநாட்களில் உயிரிழந்தார். கிரிக்கெட்டில் முன்னேறுவது சித்துவுக்கு தந்தைக்கு ஆற்றும் கடனாக மாறியது. இந்த குறிப்பிட்ட விமர்சனப் பத்தியை அறைச் சுவரில் ஒட்டி வைத்து, நாள் தோறும் பார்த்து உசுப்பேற்றிக் கொள்வார். கடுமையாய் உழைத்து சித்து தேசிய அணியில் நுழைந்தார். எதிர்பாராதபோதெல்லாம் சுழல்பந்தாளர்களை தூக்கி அடித்து "சிக்சர் சித்து" என பிரபலமடைந்தார். ஆனாலும் அணியில் நிரந்தரமடைய முடியவில்லை. பாதுகாப்பின்மை சித்துவை கடுமையாய் பாதித்தது. அசர் தலைமயிலான இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சித்துவோடு சில இளைய வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தன் இடத்தை பறிக்க வருகிறார்கள் என்ற பதற்றத்தில் சித்து அணி மேலாண்மையோடு தகராறு செய்தார். அடுத்த விமானம் பிடித்து இந்தியாவுக்குத் திரும்பினார். பெற்றோர் ஆசிரியர்களின் நெருக்கடி தாளாமல் ஊரை விட்டு ஓடும் ஒரு பள்ளி மாணவனுடையதை ஒத்திருந்தது இவர் செய்கை. 1999இல் பாகிஸ்தானுடனான போட்டிகளில் கழற்றி விட்டதை சர்தாரால் தாங்க முடியவில்லை. ஓய்வு பெற்றார். அதுவொரு திருப்பு முனை; பட்டுப்புழு பட்டாம்பூச்சி ஆனது. பேச்சாளனாக, மீடியா விதூசகனாக, அரசியல்வாதியாக .

யுவ்ராஜ் சிங் இளமையில் ஜிம்னாஸ்டிக் சாம்பியன். இந்தத் துறையில் சாதிக்க வேண்டுமென்பதே பள்ளிப் பருவ கனவு. ஆனால் ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே ஆட முடிந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அப்பா யோக்ராஜுக்கு பையன் மூலமாய் தன் நிறைவேறாத கிரிக்கெட் கனவை அடையும் அராஜக ஆசை இருந்தது. மகனை கட்டாயப்படுத்தி கிரிக்கெட்டுக்குத் திருப்பினார். மொட்டைமாடியில் ஆடுகளம் அமைத்து, ஈரப்பந்துகள் வீசி தானே நேரடியாய் பையனுக்கு பயிற்சி அளித்தார். விருப்பமற்ற கிரிக்கெட் ஆட்டத்தில் யுவ்ராஜுக்கு ஒரு கட்டத்தில் பிடிப்பு வந்தது. ஆனால் அர்ப்பணிப்புணர்வும், தீவிர ஈடுபாடும் வரவில்லை. பதினேழு வயதில் தேசிய அணியில் நுழைந்து நட்சத்திரமான யுவ்ராஜ் தவற விட்ட வாய்ப்புகள் தான் ஏராளம். 8 வருடங்களுக்குப் பின்னும் டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்துக்கு போராட வேண்டியுள்ளது. ஏகத்துக்கு திறமை இருந்தும், அதை ஒரே திசையில் செலுத்தும் மனப்பக்குவம் அற்றவர்.ஒரு சிறந்த சுழல்பந்து வீச்சாளரால் இவரை மூன்றே பந்துகளில் வீழ்த்த முடியும். ஆஃப் ஸ்டம்பில் இடுப்புயர வேகப்பந்துக்கு இவரது பின்கால் ஆடுமுறை படுமட்டம். தாக்குதல் ஆட்டத்துக்கு மட்டுமே ஏற்ற ஒரு முரட்டு பஞ்சாபியாகவே இன்றளவும் இருக்கிறார் இவர். 20-20 உலகக் கோப்பையின் போது யுவ்ராஜ் பெரிதும் எதிர்பார்த்த அணித்தலைமை தோனிக்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து அப்பாவிடம் குறும்பேசியில் பொறுமி அழுதார். பிறகு இவர் அன்றைய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு ஆறுகள் விளாசி உலக சாதனை செய்ய, யோக்ராஜ் டி.வி நிருபர்களை அழைத்து மகன் அழுத சேதியையும், அவனது வீறுகொண்ட எழுச்சியையும் பற்றி பீற்றிக் கொண்டார். இந்திய பெற்றோர்களின் விகார முகம் அன்று ஒளிபரப்பானது.

யுவ்ராஜின் அம்மா இவர் குழந்தையாய் இருக்கும்போதே குடும்பத்திலிருந்து வெளியேறி விட்டார். ஒரு நொறுங்கின குடும்பத்தின் வலி தொலைக்காட்சி பேட்டிகளின் போது இவரது பால்யம் மாறாத முகத்தில் படர்கிறது. அப்பாவைப் பற்றின எதிர்மறை நினைவுகள் தான் உடனடி நினைவுக்கு வருகின்றன. ஒருமுறை வீட்டுக்கு நவ்ஜோத் சித்து வந்திருந்தாராம். யுவிக்கு அப்போது 13 வயதிருக்கும். அப்போது பள்ளி ஜிம்னாஸ்டிக் போட்டி ஒன்றில் தான் முதலிடம் வென்ற கோப்பையை அப்பாவிடம் காட்ட ஓடி வந்தார். யோக்ராஜ் அதை ஆத்திரத்தில் பிடுங்கி வீசினார். சித்துவிடம் பையனின் தவறான ஈடுபாடு பற்றி புகார் செய்தார். சிக்சர் சித்து யுவ்ராஜை அறிவுறித்தினார்: " தம்பி, ஜிம்னாஸ்டிக் பொம்பளைங்க விளையாட்டு. கிரிக்கெட்டுக்கு வா. அதான் வீரமான ஆட்டம்! "

யுவ்ராஜ் அப்பாவிடம் அழுததில் தவறில்லை. 
Read More

போலிசெய்தல்-சாதித்தலைவர்-கவிதை

'வாரணம் ஆயிரம்'. அமெரிக்கா. காதலி மேக்னா இறந்த பின் அவளது அறைக்குத் திரும்புகிறான் சூரியா. விபத்துக்கு முன்னான அதே சாயலோடு மாற்றமின்றி அறை. படுக்கையில் துவண்டு கிடக்கும் அவளது சிவப்புச் சட்டையை எடுத்து முகர்ந்து, முகம் புதைத்துத் தேம்பி அழுகிறான். மேக்னாவைத் தேடி ஊர் ஊராக அலைய வேண்டுமெனத் தோன்றுகிறது. ’ஒருவேளை அவள் திடீரென எதிர்ப்பட்டால்?’ ஒரு பள்ளத்தாக்கின் விளிம்பில் நிற்கும்போது அவனுக்குத் தோன்றுகிறது. இல்லாவிட்டாலும் தேடிக் கொண்டே செல்லலாம்.
திரையை வெறித்து என் மனைவி. கன்னத்தசைகள் துடிக்கின்றன. புருவங்கள் நெரிகின்றன. கண்ணீர் வழிகிறது. வரிசைகளில் அடுக்கடுக்காய் முகங்கள் மத்தியில் நானும் தலை நீட்டி திரையைத் தொடர்கிறேன். மயிர்க்கூச்செறிகிறது. எழுதும்போது மறுபடியும் கரங்களில் புல்லரிப்பு. கற்பனையில் சூரியாவைத் தள்ளி விட்டு நான். நினைவின் அடுக்குகளிலிருந்து நழுவும் இறந்து போன அப்பாவுக்கு ஓய்வு பெற்ற அன்று வழங்கப்பட்ட, அவர் என்று தோளில் இட்டு குத்திட்டமரும் சிவப்பு சால்வை.
ஏன் இப்படி ஒரு கூடுதாவல் என ஒரு நொடி தோன்றுகிறது. சுதாரித்து, அழும் மனைவியை முறைக்கிறேன். 
முன்பு கேரளாவில் ’ஆகாச தூது’ என ஒரு கண்ணீர்ப் படம் மாதக்கணக்கில் ஓடியது. ஒரு குடும்பத்தில் கணவன் இறந்து போகிறான். இரண்டு குழந்தைகளை வைத்து சமாளிக்க மனைவி போராடும்போது அவளுக்கும் புற்று நோய் என்று தெரிய வருகிறது. இந்தப் படத்துக்கு அலைமோதிய பார்வையாளர் கூட்டத்துக்குப் படக்குழுவினர் கைத்துண்டுகளை இலவசமாய் வழங்கினர்.
இதை (அழுகை/மயிர்கூச்செறிதல்) திரையில் காட்சிகளுக்கு பாத்திரங்கள் செய்யும் எதிர்வினையை பார்வையாளர் போலிசெய்வதாய் விளக்கலாம். மற்றொரு மனிதனைப் பின்பற்றும் இந்த குணம் தினசரி வாழ்வில் பலதளங்களில் வெளிப்படுவதைக் காணலாம். உதாரணமாய், இருட்டறையில் நுழையும் என் மனைவி எங்கள் கறுப்புப் பூனை ஷிக்கியின் காலை மிதித்துவிடுகிறாள். அது அலறியபடி தாவுகிறது. என் மனைவி வீறிட்டு அலறுகிறாள். பின்னால் வந்த நானும் பதறிக் கத்துகிறேன். கவனிக்கவும். நான் பூனை மிதிபட்டதையோ, தாவினதையோ கவனிக்கவில்லை. மனைவியைப் பின்தொடர்ந்து அடுத்த நொடியில் அதே எதிர்வினையை போலிசெய்கிறேன், சைக்கிள் நிறுத்தத்தில் ஒன்றைத் தள்ளிவிட மற்றவையும் தொடர்ந்து சரிவன போல்! ஏன்?
இதற்கான பதில் மற்றொரு உதாரணத்தில் வருகிறது. முன்வரலாற்றுத் தருணமொன்றில் முன்னே செல்லும் என் மனைவி பூனைக் காலுக்குப் பதில் புலி வாலை மிதித்திருந்தால் பின்னால் செல்லும் நான் அவள் எதிர்வினையைப் போலி செய்துதான் ஓடிப் பிழைத்திருக்க முடியும். மிதிபட்டு கர்ஜிக்கும் புலியை ஆய்ந்து முடிவெடுக்க, போதுமான அவகாசம் இல்லை. காட்டில் கூட்டமாக வாழ்ந்திருந்த முன்நாகரிக மனிதர்களுக்கு வேட்டைப் பிராணிகளிடமிருந்து தப்பிக்க, உய்ய இந்த எதிர்வினை--போலிசெய்தல் சங்கிலித்தொடர் குணம் ஒரு முக்கிய செயல்முறைமை.
நூற்றாண்டுகள் தாண்டி விட்டன. அலுவலகத்தில் குறுந்தட்டிகளால் அடுக்கடுக்காய் பிரிக்கப்பட்டு நாங்கள். எங்களைக் கண்காணிக்கப் பதுங்கி வரும் மேலாளர் கவிதா திடீரென முதுகுக்குப் பின் நின்று காட்சி அளிப்பார். அதுவரை எனது இடம் மெசஞ்சரில் கணினி அரட்டை, காதில் ஹெட்போன், கையில் குறும்பேசி, வாயில் நொறுக்குத் தீனி, திரும்பியும் திரும்பாமலும் நேரடி அரட்டை எனக் களைகட்டும். மேலாளரின் கொலுசுச் சத்தம் வைத்து சுதாரித்து சில நொடிகளில் கணினிக்குள் தலைவிட்டு பாவ்லா காட்டத் தொடங்குவேன். பிறகு ஒரு நாள் கொலுசு அணிவதை நிறுத்தினார். நானும் கச்சேரியைத் தொடர்ந்தேன், ஆனால் அருகில் அமர்ந்திருக்கும் கூரிய செவிப்புலன் உடைய தோழி கயல்விழியின் வதனத்தில் ஒரு கண்வைத்து. மேலாளர் வருவதை அவளது முகமாற்றத்தை வைத்தே கணித்து வேலை செய்ய ஆரம்பித்துவிடுவேன். கொலுசுச் சத்தத்தை வைத்து அருகாமையை கணிப்பதை விட இது லகுவாய், நொடியில் சுதாரிக்கும்படி உள்ளது. இதுபோல் தினசரி வாழ்வில் ஏகத்துக்கு உதாரணங்கள்: பொதுவாய், பெரியவங்க பேச்சைக் கேட்பதிலிருந்து குறிப்பாய் காலையில் உங்களைக் கடந்து போனவர் எதேச்சையாய் பாடின பாடல் வரிகளை பிரக்ஞை இன்றி நீங்கள் நாள் முழுக்க முணுமுணுப்பது வரை. நமது நூற்றாண்டுகளின் நாகரிகம், வளர்ச்சி, கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் பிரக்ஞைபூர்வ\அற்ற போலிசெய்தல் தான் அடிப்படை எனச் சொல்லலாம். 
முன்னால் சென்றவர் தந்ததைக் கைமாற்றி பின்வரிசைக்கு அனுப்பப் பயன்படும் கருவியான மொழிகூட இதே பாணியில் இயங்குவதை மொழியியலாளர்கள் பேசியுள்ளார்கள். அதாவது முன்னால் சென்ற வார்த்தையில் முட்டுக் கொடுத்து பின்னால் செல்லும் வார்த்தை செயல்படுகிறது. ஜெயமோகன் 'செண்பகக்குழல்வாய் மொழி' என்ற பெயரை உருப்போட்டு ’ஆயிரங்கால் மண்டபம்’ சிறுகதை எழுதியது இப்படித்தான். அகராதி மற்றொரு எளிய உதாரணம். ஆரம்ப நிலையில் நின்று மொழியைக் கற்பவர்கள் ஒரு வார்த்தைக்கு பொருள் அறிய மூன்று நான்கு வார்த்தைகளைப் புரட்ட வேண்டி வரும். அகராதியில் தனியாய் நிற்கும் ஒரு சொல்கூட இல்லை.
இதற்குக் காரணம் நம் நினைவுத் திறன் செயல்படும் விதம். ஒன்றையொன்று தொடர்புபடுத்தித்தான் நினைவுச்சங்கிலியில் கோடாணு கோடி தகவல்களை இணைக்கிறோம்; சேமிக்கிறோம். இத்தகவல்கள் ஒன்றோடொன்று நேரடித் தொடர்பற்றவை. அடிபட்ட மிருகத்தின் குருதித் தடங்கள் ஓடும் பெரும்பரப்பு போலுள்ளது நம் நினைவுத் திடல். இந்த சங்கிலித் தொடர் இயங்குமுறையால்தான் என் சாதித் தலைவரை அவதூறாய்ப் பேசினால் எனக்குள் ரத்தம் சூடேறுகிறது. அவர் சிலைக்கு செருப்பு மாலையிட்டால், என்னையே செருப்பால் அடித்தது போல் வெறியேறி அருவா தூக்குகிறேன். இன்று ஒரு சோதனை செய்தேன். என் பூனையிடம் அதைப் போலிசெய்து ’மீயாவ்’ எனப் பல தொனிகளில் கத்தினேன். அதிகார எல்லைக்குள் வேற்றுப் பூனை நுழையாவிட்டாலும்கூட, கோபம் கொண்ட அது உடனே சீறியது. என்னைத் தாக்கியது. கூரிய நகங்கள் என் கைகளில் பாய்ந்தன. இதற்குக் காரணமும் முன்சொன்னது தான். 
மானிட நடத்தைகளைப் பற்றிய ஆய்வொன்றை ’பயோ சயிண்டிபிக்கா’ பத்திரிகையில் பிரசுரித்திருந்தார்கள். இரண்டு பிரிவுகளில் ஆய்வுக்குட்படும் நபர்கள். ஒருசாராருக்கு திரையில் காட்சி ஒன்று காண்பிக்கப்பட்டது. இரண்டாவது சாரார் முதற் பிரிவினரைக் கவனித்தனர். முதற்சாராருக்கு இரண்டாவது சாரார் தங்களைக் கவனிப்பது தெரியாது. இரண்டாவது சாராருக்குக் காட்சி ஓடும் திரை மறைக்கப்பட்டிருந்தது. ஆய்வின் முடிவு இதுதான். முதற்சாராரின் எதிர்வினைகளை (முகபாவ மாற்றங்கள், உடல்மொழி, தோரணை) இரண்டாம் பிரிவினர் பிரக்ஞையின்றி போலிசெய்தனர்; திரையில் நிகழ்பவற்றைப் பார்க்காமலேயே அதற்கேற்ற எதிர்வினைகளை அவர்களால் செய்ய முடிந்தது.
இந்த எதிர்வினை-போலிசெய்தல் இயங்குமுறை மனிதனின் மென்பொருளில் எழுதப்படாமல் இருந்திருந்தால் சாதித்தலைவர்கள் மட்டுமல்ல படைப்புச் செயல்பாடுகள் கூட சாத்தியமில்லை. பிரபஞ்சத்துக்கு மனித மனம் செய்யும் எதிர்வினையே படைப்பாக்கம். படைப்பு மனத்தின் இந்த எதிர்வினைக்கு போலிசெய்யும் போது மட்டுமே மற்றொரு மனத்துக்குக் கலையனுபவம் கிடைக்கிறது, அதைத் தொடர்ந்து கண்டடைதல் நிகழ்கிறது. உதாரணமாய், மனுஷ்புத்திரனின் கடல் பற்றிய எதிர்வினையை நீங்கள் விரிவு, விடுதலை எனும் கோட்டில் பொருள் கொள்ளும்போது மட்டுமே குறிப்பிட்ட கவிதையோடு இணைவு கொள்ள முடியும்; கடலை கட்டுப்பாடு எனப்புரிந்தால் இது நிகழாது. அமெரிக்க எழுத்தாளர் ஜாக் கெரவக்கின் கவிதையொன்றில் ’இனி நான் மூச்சு விடுவேன்’ என்கிறார். இங்கு பௌத்த மூச்சுப்பயிற்சி தியானம் ஒட்டின ஜென் சிந்தனையை போலி செய்யும்போது மட்டுமே கெரவக்கின் அதே தளத்தை நாம் அடைகிறோம். 
’பொயடிக்ஸ்’ எனும் நாடக இயங்குமுறை பற்றின நூலில் அரிஸ்டாட்டில், மனிதனுக்குக் காண்பதை எல்லாம் போலிசெய்வதில் உவப்பு உள்ளது; படைப்பாக்கத்தின் ஆதாரம் அதுதான் எனச் சொல்கிறார்.
சாதித்தலைவர்களின் சிலைகள், அலுவலக சட்டதிட்டங்கள், கண்காணிப்பு, தண்டனைகள் என உலகம் நீண்ட வரிசைகளில் நம்மை பிசகாமல் அணிவகுக்கக் கட்டாயப்படுத்துகிறது. கலை இதே போலி செய்தலை தகவமைக்கும் சுதந்திரம் தருகிறது. நம்மால் ’மூச்சு’ விட முடிகிறது. எந்திரப்புலிகள் உலவும் இருள் வனாந்தரத்தில் நவீன மனிதனை அது கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.
Read More

Saturday 18 July 2009

சுஜாதா பட் கவிதைகள்


குஜராத்தில் பிறந்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நவீன இந்திய கவிதையின் முகமாகத் திகழ்பவர் சுஜாதா பட். பிரியமும், வன்முறையும், இனத்துவேசமும் இவரது நுட்பமான கவிதைகளில் கூர்மையாகவும் அங்கதத்துடனும் எதிர்கொள்ளப் படும் கருக்கள். இவரது மூன்று சிறந்த கவிதைகளை இங்கு தமிழாக்கியுள்ளேன்.

ஷிரோத்கர் தையல் 



ஷிரோத்கர் தையலை கண்டுபிடித்தவரின் 

மகன் நான் பிறப்பதற்கு ஒரு வருடம் முன் 

என் அப்பாவுடன் பணி புரிந்தார் 

திசு வளர்ப்பு முறை கற்றவாறே 


எதோ பயன்படப் போகிறது என்பது போல் 

இந்த சிறு விஷயத்தை நினைத்துக் கொண்டேன் 

-- தகுந்த காலம் வரும்வரை 

உன்னை என்னுள் பத்திரமாய் வைத்திருக்க -- 

ஷிரோத்கர் தையலை 

என் கருவறை வாய்க்குள் தைக்கப் போகும் 

மருத்துவர்களை எதிர்பார்த்து 

ஆஸ்பத்திரி கட்டிலில் கிடக்கையில் 




என் அம்மாவின் அம்மாவுக்கு 


கற்பனை செய்து பாருங்கள் 

காந்தியடிகளுக்கு அது இருந்திருந்தால் -- ஒருவேளை அந்த தவறான் குரோமோசோம் -- 

சர்க்கரையை ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு செய்ய இயலாமை -- 

இத்தனை உண்ணாவிரதங்களையும் 

ஒருக்காலும் தாங்கியிருக்க மாட்டார் -- 

உன்னைப் போல் 

மௌனமாய் கோமாவுக்குள் சென்றிருப்பார் 



மராத்தியிலிருந்து ஒரு ஞாபகம் 


இந்த ஞாபகம் 

தண்ணீரின் ஓசையிலிருந்து ஆரம்பிக்கிறது 

விட்டுப் போகாத ஞாபகம் இது 

இஞ்ஞாபகம் மராத்தியிலிருந்து வருகிறது 

நள்ளிரவில் 

மூன்று வயது சிறுமியின் தாகத்திலிருந்து 

ஆரம்பிக்கிறது இஞ்ஞாபகம் 


அங்கு ஓடும் நீரின் ஓசை 

- மென்மையாய் - 'ஸ்...' எனும் சீற்றொலி போல் 


அம்மாவருகில் தம்பிப் பாப்பாவின் ஆர்ப்பாட்ட உறக்கம் -- 

தண்ணீர் வேண்டுகிறாள் சிறுமி 


அப்பா அறைக்கு வெளியே செல்கிறார் 

ஆனால் திரும்பவில்லை -- 

கொட்ட விழித்துக் கிடக்கும் 

மூன்று வயது சிறுமியின் பொறுமையின்மை -- 


அப்பாவைத் தேடி 

வாசல் வரை நடந்தவள் 

பின் அங்கேயே நின்று விட்டேன் 

கையில் கிண்ணம் எந்தியவாறு அவர் 

சமையலறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் 

ஆனால் என்னை பொறுமை கொள்ளவும் 

ஸ்தம்பித்துப் போகவும் செய்தது 

எங்கள் நடுவே 

தரையில் கிடந்த பாம்புதான் -- அது ரொம்பவே இடத்தை ஆக்கிரமித்தது -- 

அது முடிவற்றுத் தோன்றியது -- 

எறத்தாழ மரங்களிடையே தெரியும் நிலவொளி போன்ற 

வெள்ளிய பச்சை -- 

அப்பா அதன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிய போது 

அது ரத்தம் சொரிந்து கொண்டே இருந்தது -- அதன் பிளந்த தோலிலிருந்து 

பெருகி ஓடிய செம்மையை ஒருபோதும் மறக்க முடிந்தததில்லை 


பல வருடங்களுக்குப் பிறகு 

அதைப் பற்றி பேசுகிறோம் 

ஒரே சாட்சிகளான நானும் அப்பாவும் 

சமையலறைக்குள் அது எவ்வாறு பாய்ந்தது என்று விவரிக்கிறார் -- 

அதை விரட்ட வேண்டியிருந்தது வருத்தமளிக்கிறது 

ஆனால் சமையலறைக்குள் அது ஒளிந்து விடவும் கூடாதே -- 

'அதைக் கொல்ல முடிந்தது அதிர்ஷ்டம்தான்', அவர் சொல்கிறார் 

இந்த வருடங்களுக்கு எல்லாம் பிறகு 

முதன்முறையாய் 

அதைப் பற்றி பேசுகிறோம் 

விருப்பமின்றியே 

சாகும்வரை அதை ஒரு குச்சியால் 

நெடுநேரம் ஓங்கி அடிக்க நேர்ந்ததை 

பிறகு முடிவாய் அதன் மேல் 

மண்ணெண்ணெய் ஊற்றினார் -- 

பிறகு தரையை சுத்தம் செய்யும் முன் 

அவர் அதை சேகரித்து ஜாடியில் இடுவதைப் பார்த்தேன் 


காலையில் அப்போதும் அம்மா உறங்குகையில் 

அவர் முகமும் செய்கைகளும் நினைவுள்ளது -- 

மேலும், நிதானத்துடன் ஆனால் அவசரமாய் விரைந்து 

பாம்பைக் கொண்ட ஜாடியைத் தூக்கியவாறு 

அவர் வேலைக்காய் ஆராய்ச்சிக் கூடம் சென்றதும் 








Read More

இயான் ஹாமில்டன் கவிதைகள்


2001-ஆம் ஆண்டு புற்று நோயால் காலமான ஆங்கிலக்கவிஞர் இயன் ஹாமில்டனுக்கு பத்திரிகை ஆசிரியர், விமர்சகர், கவிஞர், பதிப்பாளர், வாழ்க்கை வரலாற்றாளர் என்று பல்வேறு பரிமாணங்கள் உண்டு. Times Literary Supplement-இன் கவிதை மற்றும் புனைவிலக்கிய ஆசிரியராக குறிப்பிடத்தக்க பணி ஆற்றினார். இவர் நடத்திய New Review எனும் இதழ் ஆங்கிலக் கவிதை உலகில் பெரும் அலைகளை தோற்றுவித்தது. ஹாமில்டனின் 4 முக்கிய கவிதைகளை இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன். 

வீடு 


பருவ நிலை மாறுவதாயில்லை. 

எங்கள் தலைகளுக்கு மேல் 

ஒன்றின் மேல் மற்றொன்றாய் வீடுகள் சாய்ந்து, 

கீழே சரிவாய் கொட்டும் கரும் ஆலங்கட்டி மழையைத் தாங்கும். 

பிரகாசமாய் ஒரு ஜன்னல். 

"அங்கேதான் நான் வாழ்கிறேன்" 

அப்பாவின் உறக்கமற்ற கண் 

எங்களை நோக்கி எரிந்து கொண்டிருக்கிறது. 

உன் முடியில் சிக்கிய பனி என் நாவில் உருகுகிறது. 



பிரிவு 

உன் அப்பா இப்போது 

வடக்கே எங்கோ 

வாகனமோட்டி செல்கிறார். 

அவர் கிளம்புவதற்கு முன் 

உன் முன்னூறு புத்தகங்களை சேர்ந்து பங்கிட்டீர். 

நீ படித்து கழித்தவற்றை 

அவர் எடுத்துக் கொண்டார் 

- படிக்க இயலாதவை 

என்று நீ ரகசியமாய் முடிவு செய்தவற்றை. 




புதிதாய் சேர்க்கப்பட்டவர்கள் 


புல்வெளியைத் தாண்டி வெறித்தவாறு சொல்கிறாய் 

'எதுவும் அசையவில்லை. எங்கு பார்த்தாலும் காயும் வெயில், காற்றேயில்லை' 

ஓடையில் வரிசையாய் பறவைகள், எங்கள் ஜன்னலிலிருந்து தெரியும் 

ஐந்து தோட்டங்கள் கடந்து 

நிழலுக்காய் சாய்ப்பு நோக்கி 

ஒன்றின் பின் ஒன்றாய் வானம் பார்த்தவாறு 

போகும் பூனைகள். 

'அவைகளுக்குத் தெரியும்', என்று கத்துகிறாய். 

ஜன்னல் படிக்கட்டையில் குவியும் இறந்த ஈக்கள். 

மவுனம் இருள நடுங்குகிறாய், 

உன்னுள் அது துல்லிய இரவாகும் வரை, 

பிறகு நீ கதறுகிறாய். 


பின்வாங்குதல் 

உன் காயமான கண்ணின் ஓரத்தை ஆக்கிரமிக்கும் 

ரத்த சிவப்பின் ஒரு நுண்ணிய துடிப்பு. 

நம் அவலத்துடன் துல்லிய ஒத்திசைவு கொண்டு 

அது அடித்திட கேட்கிறாய். 

எந்த ஆறுதலும் இல்லை 

இனிமேல் உனக்கு என்னால்

Read More

Wednesday 15 July 2009

ஒளியைக் கேட்பவர்கள்


ஒருமுறை திருவல்லிக்கேணியின் எண்ண்ற்ற நெரிசல் குறுக்கு சந்துகளில் ஒன்றில் மாடு கிளறிக் கொண்டிருந்த ரொம்பி வழிந்த குப்பைத் தொட்டி ஒன்றை எனது எளிய புகைப்படக் கருவியில் கிளிக்கிய போது ஒரு வழிபோக்கர் ரொம்ப ஆர்வமாய் சொன்னார்: "நல்லா எடுங்க சார், பேப்பர்ல போடுங்க". அது ஓனிக்ஸ் விலகி சென்னையே சில தினங்கள் நாறிக்கிடந்த காலம். உயர்தர எஸ்.எல்.ஆர் புகைப்பட கருவி கொண்டு ரொம்ப தீவிரமாக ஒளித்தருணங்கள் தேடித் திரிபவர்களிடமும் "நீங்க பத்திரிகையா?" என்பது வழக்கமாக கேட்கப்படும் தாடை-சொறிக் கேள்வி. நம்மவர்களின் புகைப்பட கலை பற்றின விழிப்புணர்வு இப்படியாக பத்திரிகை, கல்யாண படங்களோடு நிற்கிறது. டி.ஜி.ட்டல் புரட்சியில் புகைப்படம் எடுத்தல் பரவலான ஒரு பொழுதுபோக்காக, எளிய கலை ஈடுபாடாக, தீவிரத் தேடலாக இன்று மாறியுள்ளது.

எளிய செல்போன் புகைப்படம் போலன்றி, ஒளி அலகுகளை நுட்பமாக கட்டுப்படுத்துவதன் மூலம் பல கலை சாத்தியங்களை அடைய தேவைப்படும் தொழில் முறை எஸ்.எல்.ஆர் புகைப்படக்கருவியின் விலை கையை கடிக்கும். பலதர லென்ஸ், மோனோபோட் அல்லது டிரைபோட் போன்ற கருவிகள் சேர்த்து புகைப்பட தேடலுக்கான மொத்த செலவு லட்சங்களில் நிற்பதால் ஆர்வலர்கள் உயர்மத்திய வசதியாவது கொண்டிருத்தல் நல்லது. இந்த தலைமுறை மென்பொருள் இளைஞர்கள் பத்து இருபதாயிரம் என்று செலவழித்து ஆம்பிஷன்ஸ் ஃபார் ஃபொட்டோகிரஃபி போன்ற அருமையான புகைப்பட பயிற்சி நிலையங்களில் ஒழுங்குமுறையாக பயிலவும் தயங்குவதில்லை. டிஜிட்டல் புரட்சி மற்றும் இணைய வாய்ப்பு புகைப்பட அணுகுமுறையை திருப்பிப் போட்டு விட்டது. தற்போது பிலிம் வீணாகுமோ என்கிற கவலை இல்லை. ஆயிரக்கணக்கில் கிளிக்கி, உடனே முடிவை திரையில் பார்த்து, தேர்ந்து, அதை பிரசுரித்து ஆர்வலர்கள், நிபுணர்கள், நண்பர்களுடன் ஃப்ளிக்கர் போன்ற தளங்களில் உடனுக்குடன் அவற்றை பகிர, அலச, சுமாரான ஷாட்களை மென்பொருள் பயபடுத்தி மெருகேற்றவும் இன்று முடியும்.

ஆம்பிஷன்ஸ் போன்ற பயிற்சி நிலையங்களில் வாரயிறுதி அறிமுக வகுப்புகளில் படிக்கும் சில கலைஞர்களின் படைப்புகளுடன் ஃப்ளிக்கர் இணையதளம் மூலம் பரிச்சயம் ஏற்பட்டது. அரை நொடியில் முடிந்து போனாலும் அந்த கிளிக்கிற்கு பின்னால் ஆபாரமான தயாரிப்பும், கவனிப்புத் திறனும், கருவியின் இயக்கம் பற்றின தொழிற் நுட்ப ஆளுமையும் தேவைப்படுகிறது. அதாவது நம் முன் ஒரு அருமையான பட வாய்ப்பு தோன்றினாலும், பதறாமல் படம் பிடிக்க தொழில் நுட்ப பரிச்சயம் அவசியம். உதாரணமாக, படமெடுக்கும் போது எந்த ஷட்டர் ஸ்பீடை, அப்பெர்சரை தேர்வு செய்ய என்று குழம்பினால், தருணம் தவறி விடும். எழுத்திற்கு தேவைப்படும் மொழி ஆளுமை போல. அப்புறம் புகைப்பட உணர்வு, அதாவது புகைப்படத்திற்கான வாய்ப்புகளை கவனித்து உணரும் திறன், அவசியம். ஆம்பிஷன்சின் நிறுவனரான பிரபல புகைப்படலாளர் (நடிகர் அஜித்தின் புகைப்பட ஆசான்) கெ. எல். ராஜா பொன்சிங் இதை "ஒளியின் ஓசையை உற்றுக் கேட்கும் திறன்" என்கிறார். அதாவது புகைப்பட சாத்தியத்தை ஆழ்மன ரீதியாக உணர்தல். மேற்சொன்னவர்களின் பட்ங்களில் என்னை மிகவும் கவர்ந்தது ஒரு கதை அல்லது கவிதையை போன்று தொடர்ந்து பார்வையாளனுடன் உரையாடல் நிகழ்த்தும் இப்படங்களின் தன்மை. எதார்த்தத்தை பதிவு செய்வதோடு நில்லாமல், நகைமுரண், வாழ்க்கை பார்வை பற்றின நுட்பமாக பதிவு, தனிமையின் மவுனம் என பல தளங்களை இந்த் ஆரம்ப நிலை புகைப்படலாளர்களின் படைப்புகள் பயணிக்க முடிந்துள்ளன. உதாரணமாய் கீழவரும் படங்களைப் பாருங்கள்; இவற்றை எடுத்துள்ளது காயத்ரி எனும் ஆம்பிஷ்ன்ஸ் மாணவி :


Add caption

இங்கு இரு நபர்கள் தெரிகிறார்கள். ஒரு இளம் புகைப்படக்கலைஞர். வாயைப் பொத்தின நிலையில் அவரை கவனிக்கும் குட்டிச்சுவர்வாசி. கோயிலில் வழிமறித்துக் கிடக்கும் நந்தியை நடுவில் கொண்டு, இரு முரண் நிலைகளை (சும்மா கவனித்தலும், செயல்படலும்) பதிவு செய்ததே இப்படத்திற்கு மெல்லிய கேலியையும், ஆழத்தையும் கொடுக்கிறது. கருப்பு வெள்ளையில் உள்ளதும் உணர்வுகளின், பாத்திரங்களின் மனநிலையின் பால் நம் கவனத்தை செலுத்துகிறது. இது போன்ற சித்திரங்களில் வண்ணங்கள் கவனத்தை கலைக்கும்

இதனை அடுத்து வரும் படத்துடன் ஒப்பிடுங்கள்:


கோவில்களில் திண்டுகளில் ஆதரவின்றி அம்ர்ந்திருந்து பக்தர்கள் பொங்கல் வாங்க்கித் தந்தால் உண்டு விட்டு வெறிப்பதைத் தொடரும் ஒரு முதியவர்.முந்தின படத்தில் நந்தி புத்திசாலித்தனமாக ப்ஃபோர்கிரவுண்டு (அதாவது முன்வைப்பது) செய்யப்பட்டது போல் இப்படத்தில் ஒரு பாதி தூண் மறைக்க முதியவர் மறுபாதியில் தெரிகிறார். இதுவே அவரது தனிமையின் ஆழத்தை, கடந்த காலத்தின் இருண்மையை உணர்த்துகிறது. இப்படத்தின் குறை இடதுபுறம் அரைகுறையாய் தெரியும் மற்றொரு நபர்தான். இந்த இடையூறு நம் கவனத்தை கலைக்கிறது. இதனை மென்பொருளால் குறாப்பிங் எனும் முறையில் அகற்றலாம். அல்லது புகைப்படத்திற்கான தயாரிப்பின் போது இடையூறுகளை தவிர்க்க முயலலாம். இது காம்பஸிஷன் எனப்படுகிறது.

அடுத்த படம் முதல் படத்தின் நகைமுரணை, இரு வேறு வாழ்வியல் அணுகுமுறை (வீரம் எனும் லட்சியமும், விட்டேந்தி சிந்தனையும்) முரண்களின் வேடிக்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

குழந்தைகளின் உலகம் விளையாட்டு கற்பனைகளின் நூதனமும், பெரியவர்களால் அணுக முடியாத மிகைஎதார்த்த பிம்பங்களும் நிரம்பியது. குழந்தைகள் யானை மீதிருந்து பார்க்கையில் பெரியவர்கள் தங்கள் உலகில் சின்னவர்களாக தெருவதை கவனியுங்கள். இது ஆர்.கே. நாராயணின் "சுவாமி மற்றும் நண்பர்கள்" நாவலின் ஒரு காட்சியை நினைவுபடுத்துகிறது. இரு ஐந்தாம் வகுப்பு சிறுவர்கள் கட்டிப் புரண்டு மோதுவார்கள். இவர்களில் ஒருவன் உயரமானவன்; பிற சிறுவர்களுக்கு அவனைப்பற்றி பயங்கர சாகசக்காரன், பலசாலி என்று பிம்பம். நெருங்க அச்சம். சண்டை வெகு நேரம் நீடிக்கிறது. இனிமேல் யார் நினைத்தாலும் இந்த குஸ்தியை தடுக்க முடியாது, ஏனென்றால் நமக்குத் தெரிந்த பெரிய பலசாலியே இந்த மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், அவனையே யாரால் தடுத்து, விலக்க முடியும் என்று மிகைகற்பனையில் வியக்கிறான் அதே வகுப்பில் படிக்கும் கடை சொல்லியான சிறுவன். அப்போது ஒரு ஆச்சரியம் நேர்கிறது. பள்ளி பீயுண் வந்து "இந்த பசங்களுக்கு இதே வேலையாப் போச்சு" என்று இருவரை எளிதாக தூக்கி விலக்கி விடுகிறார். "நம் நண்பனை தூக்கும் விலக்கும்படி மற்றொரு பெரிய பலசாலியா" என கதைசொல்லி குழந்தையின் பத்தாம்பசலித்தனத்துடன் வாயடைத்துப் போகிறான். மனித அணுகுமுறையின் சாய்வை குறிப்பிடுவதாக மற்றொரு தளத்திலும் இந்த படத்தை புரிந்து கொள்ளலாம். சிறுவர்களின் முகபாவ்த்தை காட்டாமல் பின்னிருந்து படம் எடுத்துள்ளதும் முக்கியம்: இதனால் பார்வையாளனின் கற்பனை தூண்டப்படுகிறது. வலது புறமிருந்து பீறிடும் அதீத வெளிச்சத்தை கட்டுப்படுத்தாததும், வழக்கமான உயரத்தில் வலது கோடியில் தெரியும் நபரை குரோப் (crop) செய்யாததும் குறைகள்.

அடுத்து இரு சிறுவர்களின் மனத்தடை அற்ற தருணம். இச்சிறுவர்களை வாயில் விரலிடாதபடி அவர்களின் தந்தை தொடந்து மிரட்டி வந்ததாகவும், அவர் அசந்த நேரம் விரலகள் மீண்டும் வாய்க்கு செல்ல தான் கிளிக்கியதாக தெரிவிக்கிறார் இந்த புகைப்படக்கலைஞர். படமாகும் நபர் கருவியை பொருட்படுத்தாத நேரத்தில் தான் சிறந்த படங்கள் உருவாகின்றன. பிரக்ஞை புகைப்படத்தின் எதிரி.


அடுத்த வண்ணப்படத்தில் என்னைக் கவர்ந்தது அதில் வரும் சிறுவனின் உடல் மொழி. அருவியின் குளிர் தாங்காமல் தோள் விடைக்கிறான். முகத்தில் குளித்த பூரிப்பு, உடலில் நடுக்கம், கண்களில் வெளிச்சம். மங்கலான அருவியும், காத்திருப்பவர்களின் முதுகுகளும் இச்சூழலை நிறுவும் பின்புலம். இந்தப் படம் ஏற்படுத்தும் பாதிப்பிற்கு சிறுவனை திரை முழுக்க ஆக்கிரமிக்கச் செய்யாமல் புகைப்படக் கலை பொன்விதிப்படி (ரூல் அஃப் தெ தெர்டு) கால்வாசி மட்டுமே வைத்து பிற பகுதியில் பின்னணி தெரியச்செய்தது மற்றும் அவனை செலக்டிவ் போகஸ் எனும் தேர்வு குவிமையம் செய்ததும் முக்கியம். அருவியிலிருந்து வெளியேறியதும் பெரும்பாலானோர் இறுகி விடுவோம்; குழந்தைகளும், குழந்தைமை தொலைக்காதவர்களும் விதிவிலக்கு.

அடுத்து வருவது புல்கித் எனும் சென்னையைச் சேர்ந்த ஆரம்ப நிலை கலைஞரின் படம். போர்கிரவுண்டு என்றால் ஒரு பார்வையாளனுக்கு மிக அருகாமையில் முன்பாகத் தெரியும் படத்தின் பகுதி. இப்படத்தில் போர்கிரவுண்டிங் முறைப்படி கீழே கிடக்கும் மிதிவண்டி காட்டப்படுகிறது. ஆனால் குவிமையம் மிதிவண்டியில் இல்லை. அதனால் அது மங்கலாக மட்டுமே தெரிகிறது. இதன் பொருள் படத்தின் பேசுபொருள் மிதிவண்டி அல்ல என்பதே. அம்மூன்று விடலைச்சிறுவர்களின் பொழுதுபோக்கும் ஓய்வு அல்லது வெட்டித்தனம்தான் தலைமைப்பொருள். குவிமையம் அவர்கள்பால் உள்ளது. சைக்கிள் ஒரு உருவகம் மட்டுமே. இலக்கியத்தில் போன்றே புகைப்படத்திலும் உருவகத்தை நெருடாமல் சொல்லத்தெரிய வேண்டும். இப்படத்தின் வெற்றி அதுவே.

படத்தின் தலைமைப்பொருட்களை (ஜோடி) பின்னணியில் குவிமையத்துக்கு வெளியே வைத்து மங்கலாக்கி, ஃபோர்கிரவுண்டில் உள்ள உருவகத்தை (பூக்கள்) குவிமையப்படுத்துவதும் கற்பனையை அருமையாக தூண்டும்படி அமையலாம். கெ.எல். ராஜா பொன்சிங்கின் கீழ்வரும் படம் இதற்கு சிறப்பான உதாரணம். குவிமையம் ஜோடியில் இல்லாததனாலே அவர்களின் முகபாவங்கள் முழுக்க காட்டப்படாமல் பார்வையாளன் தன் மனக்கண் வழி இவ்வுறவாடலின் வெம்மையை உணர, ஆழமாய் பயணிக்க முடிகிறது.


அடுத்த படம் கார்த்திக் என்பவரது. இது கற்பனாவாத பாணியை சேர்ந்தது. தேவதையின் பாதங்கள் என்று தலைப்பு தந்துள்ளார். சட்டகத்தின் விளிம்பில் தலைமைப்பாத்திரத்தை நிறுவினால் நடக்கும் அல்லது அசையும் தோற்றம் கிடைக்கும் என்பது ஒரு புகைப்படக்கலை விதி. அவ்விதி இங்கு அருமையாக பயன்பட்டுள்ளது. ஒரு பாதம் தூக்கியுள்ளதும் நடத்தலை தூலமாக்குகிறது. பிடித்த சாணியில் வைத்த பூ, பட்டுப்பாவாடை, மற்றும் கொலுசின் நிறங்களின் ஒருமையை கவனியுங்கள். இந்த படத்தையும் ஆழமாக்குவது உருவகம் தான்: சாணியில் பூ. இப்பூ உறுத்தாமல் ஓரமாக தரப்பட்டுள்ளதும் முக்கியம். சட்டகத்துள் பெண்ணின் கால்கள் மட்டும் வருவது போல் பூ அம்ர்ந்துள்ள கோலத்தின் ஒரு பகுதி மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்த ஒப்பீட்டு ஒருமையின் வடிவாக்க நுட்பமும் இப்படத்தின் அழகியலுக்கு அவசியம்.

விஷ்ணுவர்த்தனின் கீழ்வரும் படத்தில் காட்சியின் ஆழம் நமக்கு நேரில் காணும் உணர்வைத் தருகிறது. சட்டகத்துள் காட்சியின் பல்வேறு கூறுகளை உள்ளடக்குவதை வலுயுறுத்துவது களத்தின் ஆழம் (depth of field) எனும் விதி. இப்படம் இதற்கு சிறந்த உதாரணம்.


அடுத்த இரு படங்கள் ஸ்ரீராம் மற்றும் நிதயசீலன் எனும் புகைப்பட மாணவர்களின் படைப்புகள். இரு படங்களிலும் அசையும் தலைமைப்பொருட்கள் அசையா பொருட்களால் புத்திசாலித்தனமாய் சமன்செய்யப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் நகர்வின் விசையை காத்திரமாய் உணர்த்தவும் பயன்படுகிறது.




இப்படங்கள் பற்றின வேறு நுட்பமான அவதானிப்புகள் உண்டெனில் வாசகர்கள் என் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்; மற்றொரு கட்டுரையில் அவற்றை விவாதிப்போம். இக்கலைஞர்களின் புகைப்படங்களை இம்முகவரிகளில் காணலாம்:

கார்த்திக்: http://www.flickr.com/photos/mimicrykarthik/
புல்கித்: http://www.flickr.com/photos/13768295@N00/
காயத்ரி: http://www.flickr.com/photos/mindspeephole/

விஷ்ணுவர்த்தன்: http://www.flickr.com/photos/vsquare/

ஸ்ரீராம்: http://www.flickr.com/photos/chennaihari/

நித்யசீலன்: http://www.flickr.com/photos/11569816@N05/
Read More

Monday 13 July 2009

ஆலன் ஸ்பென்ஸ்: படைப்பு வாழ்வும், பிறவும்

ஆலன் ஸ்பென்ஸ் ஸ்காட்லாந்துக்காரர். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் மூலம் உலகளவில் கவனம் பெற்று வருகிறார். முதல் கவிதைத் தொகுப்பு ப்பொளப் ( நீருள் விழும் ஓசை) 1970-இல் வெளியானது. அதற்குப் பின் இரு முக்கிய ஹைக்கூ தொகுப்புகள்: இதயத்தின் பருவங்கள் மற்றும் தெளிந்த வெளிச்சம். இவரது சமீபத்திய நாவலான பரிசுத்த நிலத்தில் ஹைக்கூ மற்றும் தாங்கா கவிதைகள் இடம்பெறுகின்றன.

இவர் ஸ்காட்லாந்திய கலைக்குழு நூல் விருதை மும்முறை பெற்றுள்ளார். 1995-இல் எஸ்.ஏ.சி அவ்வருட ஸ்காட்லாந்திய எழுத்தாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிளன்பிடிக் ஸ்காட்லாந்தின் உயிர்நாடி (படைப்பிலக்கியம்) விருதை 2006-ஆம் ஆண்டு பெற்றார். 

ஆலன் ஸ்பென்சின் எழுத்து தினசரி ஈடுபாடுகளிடையே இருத்தலின் புதிருக்குள் தோன்றும் சிறு வெளிச்சத் தெறிப்புகளை பின் தொடர்வது. உலகம் மனத்தின் பிரதிபலிப்பு என்றார் இம்மானுவல் காண்ட். இதயத்தின் பருவங்கள் தொகுப்பு வசந்தம், இலையுதிர்காலம், பனிக்காலம், கோடை எனும் இயற்கை பருவ படிமங்களில் மனத்தின் சுவடுகளை பின்தொடர்கிறது. வாழ்வின் முரண்கள், மாற்றச் சுழற்சியில் சாஸ்வதம் கண்டறிதல், நுட்பத்தின் எளிமை என இவர் எழுத்து தொடர்ந்து பயணிக்கிறது. 

சிந்தனாபூர்வ தியான முறை தரும் பார்வை தன் படைப்பை விரிவடையச் செய்வதாய் சொல்லும் இவர் ஸ்ரீ சின்மய் தியான மையத்தை ஈடின்பர்கில் நடத்தி வருகிறார். அபெர்தீன் பல்கலையின் படைப்பிலக்கிய பேராசிரியராய் பணி. அங்கு நிகழ்த்தப்படும் வருடாந்தர வார்த்தை விழாவின் கலை இயக்குனர்.
Read More

ஆலன் ஸ்பென்சின் இதயத்தின் பருவங்கள்

1.
first warmth of spring
i feel as if
i have been asleep
வசந்தத்தின் முதல் கதகதப்பு
நான் இதுவரை ஏதோ
தூக்கத்தில் இருந்ததைப் போல் உணர்கிறேன்
2.
first warmth of spring
under cracking ice
the jawbone of a dog
வசந்தத்தின் முதல் வெதுவெதுப்பு
விரிசலிடும் பனிக்கட்டிக்கு கீழ்
நாயொன்றின் தாடை எலும்பு
3.
crocuses
where last week
the snow lay thick
முந்தைய வாரம்
கனத்த பனி கிடந்த இடத்தில்
குரோக்கஸ் செடிகள்
4.
the spring breeze --
the paper flowers also
tremble
வசந்த காலத் தென்றல் --
காகிதப் பூக்களும்
நடுங்கும்
5.
into the sea I launch
a peice of driftwood
with great ceremony
கடலுக்குள் அனுப்பி வைக்கிறேன்
மிகுந்த சம்பிரதாயங்களுடன்
ஒரு துண்டு மிதக்கும் பலகையை
6.
spring rain
a yellow oil-drum
bobbing down the river
வசந்தகால மழை
ஒரு மஞ்சள் எண்ணெய் பீப்பாய்
மூழ்கி எழுந்தவாறு செல்லும் ஆற்றோடு
7.
dog rolling daft on the grass
beside the first daffodils
of the year
புல்லில் அசட்டுத்தனமாய் உருளும் நாய்
வருடத்தின் முதல் டாபெடில் பூக்களின்
மறுபுறமாய்
8.
this spring evening
blue estuary light
vast empty sky
இந்த வசந்தகால மாலை
நீல நதிமுகத்துவார வெளிச்சம்
அகண்ட வெற்று வானம்
9.
trying to talk
we can only laugh and point --
sun glinting on the loch
பேச முயன்று
நம்மால் சிரிக்கவும், சுட்டிக்காட்டவும் மட்டுமே முடியும் --
எரிமேல் மின்னி ஒளிவிடும் சூரியன்
10.
fourteen donkeys
in a field
fourteen donkeys!
பதினான்கு கழுதைகள்
ஒரு வயலில்
பதினான்கு கழுதைகள்!
11.
the puppy
ferociously challenging
a daffodil
ஒரு டேபிடில் பூவோடு
மல்லுக்கு நின்று சண்டையிடும்
நாய்க்குட்டி
12.
that old\new
smell of fresh
cut grass
அப்போதே அறுத்த புல்லின்
புதிய\பழைய
வாசம்
13.
morning meditation
clouds lift clear
from the mountain top
காலை தியானம்
மலையுச்சி தெளிய
மேகங்கள் மேலெழும்
14.
sunlight through stained glass
fragrance of oranges
the sound of a bell
கறை படிந்த கண்ணாடி வழியே சூரிய வெளிச்சம்
ஆரஞ்சின் வாசம்
மணிச் சத்தம்
15.
the flowering plant nods
acknowledging
my gaze
பூஞ்செடி தலையாட்டுகிறது
என் பார்வையை
ஏற்று
16.
two swallows
dip and sour
making a summer
தாழ்வாய் பறந்தும் மேலெழுந்தும்
இரு தூக்கணாங்குருவிகள்
அறிவிக்கும் கோடை வருகையை
17.
the yellow gorse
making the sky
more blue
மஞ்சள் நிற கோர்ஸ் புதர்
மேலும் நீலமாக்கும்
வானத்தை
18.
the whole sky and more
reflected in each rain drop
hanging from that branch
அந்த கிளையில் தொங்கும்
ஒவ்வொரு துளியும் பிரதிபலிக்கும்
முழுவானமும் அதற்கு மேலும்
19.
rainmist over loch and hills
i peer but cannot see
the other shore
ஏரி, குன்றின் மேல் மழையின் மூடுபனி
கூர்ந்து நோக்குகிறேன், தெரியவில்லை
மறுகரை
20.
blindman on a park bench
the flowers,
their faces to the sun
பூங்கா இருக்கையில் ஒரு குருடன்
பூக்கள்,
தங்கள் முகங்கள் சூரியனை நோக்கிபடி
21.
country road
too dark to see the flowers
but their scent is yellow
கிராமத்து சாலை
பூக்கள் தெரியாக் கும்மிருட்டு
ஆனால் அவற்றின் மணமென்னவோ மஞ்சள்
22.
yellow lantern tendrils,
I've just foundout your name --
hello, laburnum!
மஞ்சள் லாந்தர் கொடிச்சுருள்களே
சற்று முன்னரே கண்டறிந்தேன் உங்கள் பெயரை
வணக்கம், லாபர்ணம்!
23.
using a peach
for a paper weight
summer breeze
பேப்பர் வெயிட்டாக
பீச் பழம்
கோடைக்காற்று
24.
a few wild flowers
placed in an old pot
grace our temporary home
எங்கள் தற்காலிக வீட்டை அலங்கரிக்கும்
சில காட்டுப் பூக்கள்
பழைய ஜாடியில்
25.
three tethered rowing-boats
bobbing on a pond --
summer rain
கரையோடு பிணைக்கப்பட்ட மூன்று துடுப்புப் படகுகள்
அமிழ்ந்து எழும்பும் --
வேனில் மழை
26.
statue of Christ, the sun
behind his head --
butterfly opens its wings
கர்த்தரின் சிலை
தலைக்குப் பின் சூரியன் --
பட்டாம்பூச்சி தன் சிறகுகளை விரிக்கிறது
27.
puffed-up cloud
the swan's feathers ruffled
white sails on the lake
ஊதிப் பெருத்த மேகம்
அன்னத்தின் சிறகுகள் கலைந்துள்ளன
வெள்ளைக் கட்டுமரங்கள் ஏரியில்
28.
camomile flowers --
a whole garden
in the bottom of my cup
கோமமைல் பூக்கள் --
என் கோப்பையின் அடியில்
ஒரு முழுத்தோட்டம்
29.
sun on her bare head
she carries
a hat-full of plums
வெற்றுத்தலையில் வெயில் காய
அவள் ஒரு தொப்பி நிறைய பிளம் பழங்களை
சுமந்து போகிறாள்
30.
the grass is so very green
the poppies are
so very very red
புற்கள் ரொம்ப பச்சை
போப்பிப் பூக்கள்
ரொம்ப ரொம்ப சிவப்பு
31.
a single cloud
and its shadow
on the flat blue sea
ஒரு ஒற்றை மேகம்
அதன் நிழல்
தட்டையான நீலக் கடலில்
32.
a child's rope swing hangs
limp from a tree --
mid-day heat
ஒரு குழந்தையின் கயிற்று ஊஞ்சல்
வளைந்து நெளிந்து தொங்கும் மரத்திலிருந்து --
மத்தியான வெக்கை
33.
midsummer midnight
fullmoon in the pale sky
over the north sea
நடுக்கோடை நள்ளிரவு
வெளிறிய வானில் பவுர்ணமி
வடக்குக் கடலின் மேல்
34.
patter of rain on the tent roof
an ant
crawling over my hand
கூடாரக் கூரை மீது வேகமாய் மழையின் தடதடப்பு
என் கையின் மேல் ஊர்ந்து செல்லும்
ஒரு எறும்பு
35.
sagging pot belly
of the old pit pony --
summer heat
சுரங்க கிழ மட்டக்குதிரையின்
தொங்கும் தொந்தி --
கோடை வெக்கை
36.
a feast for this fly,
the crumbs from my bread --
look at him rubbing his hands
இந்த ஈக்கு விருந்தாகும்
என் ரொட்டித்துண்டின் ஓரங்கள் --
அது கைகளைத் தேய்ப்பதைப் பாருங்கள்
37.
swiping at these flies
i could kill them all --
the hot sticky afternoon
வீசி அடித்து இந்த ஈக்களை எல்லாம்
என்னால் கொல்ல முடியும் --
ஒட்டிப் பிசுபிசுக்கும் வெக்கை மத்தியானம்
38.
don't dart away so quick
little lizard
i didn't mean to scare you
இத்தனை விரைவாய் ஓடி மறையாதே
பல்லிக் குஞ்சே
உன்னை அச்சுறுத்த எண்ணவில்லை
39.
summer downpour
the pregnant cat
enduring it
கோடை மழை --
அதை பொறுமையாய் தாங்கும்
கர்பிணிப் பூனை
40.
african rain drumming
marimba rhythm
on the iron roof
இரும்புக் கூரையில்
மரிம்பா தாளமிடுகிறது
ஆப்பிரிக்க மழை
41.
a tree on fire
against the blazing
sunset sky
கிளர்ந்தொளிரும் அஸ்தமன வானத்திற்கு
எதிரே
மரம் பற்றி எரிகிறது

42.
the mark on my boat
in the clay
has gathered rainwater
overnight
சேற்றில் பதிந்த
என் பூட்ஸ் செருப்புத் தடம்
ஒரே இரவில்
நிரம்பி விட்டது மழைநீரால்
43.
confetti
scattered on the pavement
wet by the rain
நடைபாதையில் சிதறிக் கிடக்கும்
வண்ணத்தாள் துண்டுகள்
மழையில் நனைந்து
44.
valleys, mountains and rivers --
the chance patterns weathered
on this stone wall
பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் ஆறுகள் --
பருவங்களால் அடிபட்டுத் திரிந்த இந்த கற்சுவரில்
சந்தர்ப்பவச வடிவங்கள்
45.
children
dipping sticks in a puddle
drawing pictures
that dry and fade
குட்டையில் குச்சியை முக்கி
குழந்தைகள் வரைகிறார்கள்
உலர்ந்து மறையும்
ஓவியங்கள்
46.
rainbows
in the spray kicked up
by the lorry
லாரிச்சக்கரம் ஏறி
எழுந்த நீர்ச் சிதறலில்
வானவில்கள்
47.
chanting aum
first light
the hills take shape
ஓங்காரம் ஓத
முதல் வெளிச்சம்
குன்றுகள் உருவெடுக்கும்
48.
the zen garden --
a crack in the wall
in exactly the right place
ஜென் தோட்டம்
சுவற்றில் ஒரு வெடிப்பு
துல்லியமாய் சரியான இடத்தில்
49.
the zen garden --
i too
am included
ஜென் தோட்டம்
என்னையும்
சேர்த்து
50.
the master's foot prints
along the old
dirt road
குருவின் பாதச் சுவடுகள்
பழைய சிதிலமடைந்த
சாலை வழி
51.
the moon moves with us
as we walk
drifts from tree to tree
நிலவு எங்களோடு நகர்கிறது
நாங்கள் நடக்க
மரத்திலிருந்து மரத்திற்கு மெல்ல மிதக்கிறது
52.
the cat swipes at the breeze,
shadow-boxing with
nothing-i-can-see
பூனை தென்றலை அறைகிறது
எனக்கு புலப்படாத ஒன்றுடன்
நிழற் குத்துச் சண்டை
53.
summer evening --
through the open window,
an old song
வேனிற்கால மாலை --
திறந்த ஜன்னல் வழியே,
ஒரு பழைய பாடல்
54.
vague shapes in the halflight
the cry of a bat
the rising moon is red
அரை வெளிச்சத்தில் தெளிவில்லா உருவங்கள்
வவ்வாலின் கத்தல்
எழுநிலா சிவப்பானது
55.
the familiarity
of everything
under tonight's moon
எல்லாவற்றின்
பழகிய தோற்றம்
இன்றிரவு நிலவின் கீழ்
56.
what am I thinking?
'the sound of the water' --
the sound of the water
என்ன யோசிக்கிறேன்?
'தண்ணீரின் ஓசை' --
தண்ணீரின் ஓசை
57.
look 'slowly' he says
and you'll see it --
eclipse of the moon
'மெதுவாகப்' பார் அவன் சொல்கிறேன்
எனில் நீங்கள் பார்க்கலாம் --
சந்திர கிரகணத்தை
58.
warming my feet
in the patch of sunlight
on the floor
கால்களை வெதுவெதுப்பாக்குகிறேன்
தரையில் கிடக்கும்
ஒளிப்பாளத்தில்
59.
a sweet peach
but the last bite
is bitter
இனிப்பான பீச்
ஆனால் கடைசி கடியோ
கசப்பு
60.
the sun in the water
jiggles on the end of
the fisherman's line
தண்ணீரில்
சூரியன் நெளிந்தாடுகிறது
மீனவனின் தூண்டில் நுனியில்
61.
the rain has stopped
the sky is clear
come out and look
at the stars
மழை நின்று விட்டது
வானம் தெளிவாகி விட்டது
வெளியே வந்து பாருங்கள்
நட்சத்திரங்களை
62.
field on the cliff-top
the horse's mane lifts
in the wind off the sea
செங்குத்தான மலைமுகட்டில் வயல்
குதிரையின் பிடரி மயிர் எழுகிறது
கடற்காற்றில்
63.
sudden gust --
the sea gull scudding
backwards
திடீர் புயல் --
சீகள் விரைந்து பறக்கும்
பின்னோக்கி
64.
small boat on the loch,
far off hills faintly
blue through mist
ஏரியில் சிறு படகு
தூரத்துக் குன்றுகள்
மங்கலாய் நீலம் மூடுபனியினூடே
65.
a single petal falls
touches the tambura string
a tiny pang
ஒரு ஒற்றை இதழ் விழுகிறது
தம்புராத் தந்தியைத் தொடுகிறது
சிறு வலி
66.
suddenly shivering
my clothes are too thin
the first yellowing leaf
திடீரென நடுங்குகிறேன்
மிக மெல்லியவை என் ஆடைகள்
மஞ்சளாகும் முதல் இலை
67.
the scare crow
holds his arms out
shows off his new coat
கொல்லை பொம்மை
கைகளை விரித்து
பகட்டாய் காட்டும் தன் புதுக்கோட்டை
68.
someone has given
a warm scarf
to the scarecrow
யாரோ கொடுத்திருக்கிறார்கள்
கதகதப்பாய் கழுத்துப் பட்டை
கொல்லை பொம்மைக்கு

69.
the dark field
puddles reflect back
the last light
இருண்ட வயல்
குட்டைகள் பிரதிபலிக்கும்
கடைசி வெளிச்சத்தை
70.
crossing the bridge --
the otherside
is lost in mist
பாலத்தை கடக்கிறேன் --
மறுபுறம்
மூடுபனியில்
71.
behind a skull
in the junkshop window
smiling buddha
பழைய பொருள் விற்கும் கடை ஜன்னலில்
ஒரு மண்டை ஓட்டிற்கு பின்னால்
புன்னகைக்கும் புத்தர்
72.
Japanese landscapes
in the damp patch
on the ceiling
ஜப்பானிய நிலக்காட்சிகள்
ஈரமான பகுதியில்
கூரையில்
73.
soaking in the hot tub --
cold rain battering
on the roof
குளிக்கும் தொட்டியில் வெதுவெதுப்பாய் நான் ஊறியிருக்க
குளிர்மழை பலமாய் தொடர்ந்து அடிக்கும்
கூரையை
74.
the darkening sky --
a bird hovers over
the flooded field
இருளும் வானம் --
ஒரு பறவை தாழ்வாய் பறக்கும்
நீருள் மூழ்கிய வயலின் மேலே
75.
chained to its post
the guard-dog barks
at the pouring rain
தூணில் கட்டப்பட்ட
காவல் நாய் குரைக்கும்
கொட்டும் மழையைப் பார்த்து
76.
carefully
cleaning between the toes
of the buddha
கவனமாய்
சுத்தம் செய்கிறேன்
புத்தரின் கால் விரல்களிடையே
77.
along the highway
through Connecticut
stink of a dead skunk
கொனக்டிகட்டின் ஊடே
நெடுஞ்சாலை வழியே
இறந்த ஸ்கங்கின் நெடி
78.
one for sorrow --
she waves at the magpie
to break its spell
சோகமே வடிவானது --
அவள் மேக்பை பறவையை நோக்கி கையசைக்கிறாள்
அதைப் பீடித்த வசியத்தைக் கலைக்க
79.
high winds tonight
the clouds stand still
the stars go scudding past
பெருங்காற்று இன்றிரவு
மேகங்கள் அசைவற்று
விரைந்து கடக்கின்றன நட்சத்திரங்கள்
80.
three seals on a rock
tails up, drying off --
September sun
ஒரு பாறை மேல் மூன்று கடல் நாய்கள்
ஈரம் காய்கின்றன, வால்களை உயர்த்தி --
செப்டம்பர் சூரியன்
81.
an apple rotting
just where it fell
the smell of autumn
விழுந்த இடத்திலேயே
அழுகும் ஆப்பிள்
இலையுதிர் கால மணம்
82.
pawprint of a dog
in the concrete
of the sidewalk
நாய் ஒன்றின் பாதத்தடம்
நடைபாதை
காங்கிரீட்டில்
83.
just an autumn evening
why these tears?
just an autumn evening
வெறும் ஒரு இலையுதிர்கால மாலைதான்
ஏனிந்த கண்ணீர்
வெறும் ஒரு இலையுதிர்கால மாலைதான்
84.
all this ache in my heart --
sound of wind
in the pines
நெஞ்சின் இந்த வலி எல்லாம் --
ஊசியிலை மரங்களுக்குள்
காற்றின் ஓசை
85.
edge of the ocean
heron balanced
on one leg
சமுத்திர விளிம்பு
நாரை நிலைகொண்டுள்ளது
ஒற்றைக் காலில்
86.
autumn cold
the cat's rough tongue
on the back of my hand
இலையுதிர்கால குளிர்
என் பின்னங்கையில்
பூனையின் சொரசொர நாக்கு
87.
the willow tree
I had never noticed
before this grey rainy day
வில்லோ மரம்
ஒரு போதும் கவனித்திருந்ததில்லை
இந்த மந்தாரமான மழைநாளுக்கு முன்

88.
damp leaves drift to earth
the sun hangs tangled
in the branches of a tree
பூமியில் மிதந்திறங்குகின்றன ஈர இலைகள்
சிக்கிக் கொண்டு மிதக்கிறான் சூரியன்
ஒரு மரத்தின் கிளைகளில்
89.
sipping tea
burning incense
listening to the rain
தேநீர் குடிக்கிறேன்
ஊதுபத்தி எரிகிறது
மழையை உற்றுக் கேட்கிறேன்
90.
red on red --
fall of dead leaves
on rusting scrap
சிவப்பின் மேல் சிவப்பு --
பழுத்த இலைகள் விழுதல்
துரு பிடிக்கும் குப்பை மேல்

91.
all my life
and again now ---
this full moon
வாழ்வெல்லாம்
இப்போது மீண்டும் --
இந்த முழுநிலா
92.
between the silhoutted
chimney pots
a single star
புகை போக்கிகளின்
உருவரை நிழல் வடிவங்களிடையே
ஒரு ஒற்றை நட்சத்திரம்
93.
the door bangs back
on its hinges
and in come the leaves
கதவு பின்னால் திறந்து மோதுகிறது
உள்ளே வருகின்றன
இலைகள்
94.
another city square
and dead leaves falling --
I am far from home
மற்றொரு நகரச் சதுக்கமும்
பழுத்து உதிரும் இலைகளும் --
ஊரிலிருந்து வெகு தொலைவில் நான்
95.
I know i will die
but still...
the full round moon
தெரியும் இறந்து விடுவேன் என்று
ஆனாலும் கூட...
இந்த பூரண வட்ட நிலவு
96.
the sound of a woman's
mop and bucket
on the chapel's cold stone floor
ஒரு பெண்ணின்
தரைதுடைக்கும் துடைப்பத்தின், வாளியின் சத்தம்
தேவாலய குளிர்கற்தரையின் மேல்
97.
see the wind?
she says
as it shakes the trees
என்னவொரு காற்று, பார்த்தாயா?
என்கிறாள்
அது மரத்தை உலுக்கிட
98.
catch its reflection
in my cup -- take a sip
I am drinking the moon
அதன் பிரதிபலிப்பை
என் கோப்பையில் பிடித்து ஒரு வாய் குடியுங்கள்
நான் நிலவைப் பருகுகிறேன்
99.
wading
ankle-deep
through fallen leaves
கணுக்கால் ஆழத்தில்
அளைந்து நடக்கிறேன்
உதிர்ந்த இலைகள் ஊடே
100.
the borrowed umbrella
we are sharing --
a few small holes in it
கடன் வாங்கிய குடையை
பகிர்கிறோம் --
அதில் சின்னஞ்சிறு ஓட்டைகள் சில
101.
as if there was nothing else
the tick of the clock
rain on the window
வேறெதுவும் இல்லாதது போல்
கடிகாரத்தின் டிக்டிக்
ஜன்னலில் அடிக்கும் மழை
102.
upthrough the floorboards
smell of my neighbour's house
cigarretes and onions
தரைப்பலகைகளினூடே மேலெழும்
அயல் வீட்டின் வாசனை --
சிகரெட்டுகளும் வெங்காயங்களும்
103.
rain falling
especially
on me
மழை பெய்கிறது
குறிப்பாய்
என் மீது
104.
the sound of the rain
the sound of the rain
the sound of the rain
மழையின் சத்தம்
மழையின் சத்தம்
மழையின் சத்தம்
105.
grey earth sea sky
taking flight the heron
stabs the void
சாம்பல் வண்ண பூமி, கடல், வானம்
பறந்து எழும் நாரை
பாழைத் துளைக்கிறது
106.
first one solitary star
then one by one they pierce
the darkening sky
முதலில் ஒரு ஒற்றை நட்சத்திரம்
பின் அவை ஒவ்வொன்றாய் துளைக்கும்
இருளும் வானை
107.
after the fireworks
cold and still
the moon
வாணவேடிக்கைக்குப் பின்
குளிர்ந்து நிச்சலனமாய்
நிலவு
108.
wind tugs at the tree
till the last leaf
lets go
கடைசி இலை
கைவிடும் வரை
மரத்தைப் பற்றியிழுக்கும் காற்று
109.
400 miles from my friends
the apples they gave me
for the journey
நண்பர்களிடமிருந்து 400 மைல்கள் தள்ளி
பயணத்திற்கென
அவர்கள் தந்த ஆப்பிள்கள்
110.
the sound of the cold --
a knife-blade being sharpened
on stone
கடுங்குளிரின் ஓசை --
கத்தி ஒன்று தீட்டப்படுகிறது
கல்லில்
111.
the tiny cloud of
the cat's breath
on the windowpane
பூனை மூச்சின்
சிறு மேகப்புகை
ஜன்னல் கண்ணாடி மேல்
112.
the last leaves,
the first snow,
falling
கடைசி இலைகள்,
முதல் பனி,
வீழ்கின்றன
113.
beginning of winter
in the chill
of the milk bottles
பனிக்காலத் துவக்கம்
பால்புட்டிகளின்
கடுங்குளிரில்
114.
winter again --
on the thinnest of branches
a tiny bird is perched
மீண்டும் பனிக்காலம் --
மிக மெல்லிய கிளையின் மேல்
சின்னஞ்சிறு பறவை
115.
the cold wind
rattles the bones
of the scare crow
கொல்லை பொம்மையின்
எலும்புகளை சடசடக்கச் செய்யும்
குளிர்காற்று
116.
all there is?
stink of sick
on the latenight bus
இங்கு உள்ளதெல்லாம்?
நேரங்கெட்ட இரவில் பேருந்துள்
வாந்தி நாற்றம்
117.
shielding my eyes
from the streetlamp's glare
to look at the stars
தெருவிளக்கின் கடும்வெளிச்சத்திலிருந்து
கண்களை மறைக்கிறேன்
நட்சத்திரங்களைப் பார்க்க
118.
after the nightshift
sparkle of frost
on the pavement
இரவுப் பணிக்குப் பின்
உறைபனியின் ஜுவலிப்பு
நடைபாதையில்
119.
the turnip lantern --
his head is empty
his light shines out
through his face
முள்ளங்கி லாந்தர் விளக்கு--
காலி அவன் மண்டை
அவன் வெளிச்சம் பளிச்சிடும்
அவன் முகம் வழி
120.
black thoughts in my head --
three crows come out
of the haar
தலைக்குள் கரிய எண்ணங்கள்
கடற்பனியிலிருந்து வெளிப்படும்
மூன்று காகங்கள்
121.
thick endless fog
the world is shrunk to a grey place
twenty yards across
முடிவற்ற அடர் மூடுபனி
சாம்பல் நிற இடமாய் சுருங்கிப் போகிறது உலகம்
இருபது அடிகளுக்கு அப்பால்
122.
the call and call of
invisible seagulls
in the fog
கண்ணுக்குத் தெரியாத சீகள்களின்
முடிவற்ற கூப்பாடுகள்
மூடுபனி
123.
cats quarelling
outside my window --
the long cold night
என் ஜன்னலுக்கு வெளியே
சண்டையிடும் பூனைகள் --
நீண்ட குளிர் இரவு
124.
something has gone wrong --
the workmen stand and stare
in the cold rain
ஏதோ பிசகி விட்டது --
தொழிலாளர்கள் வெறிக்கிறார்கள்
கடுங்குளிர்மழையில் நின்று
125.
the tiny light flashes --
a message on the machine
he died last night
சிறுவிளக்கு பளிச்சிடுகிறது --
எந்திரத்தில் ஒரு செய்தி
அவன் இறந்து விட்டான் நேற்றிரவு
126.
the wind blows
a single note
on an empty bottle
காற்று ஊதும்
ஒற்றை ஸ்வரம்
காலி புட்டியில்
127.
remembering
my father's death --
cold November rain
அப்பாவின் மரணத்தை
நினைவு கூர்கிறேன் --
குளிர்ந்த நவம்பர் மாத மழை
128.
winter sunshine
the washing on the line
is frozen stiff
பனிக்கால வெயில்
கொடியில் தொங்கும் துவைத்த துணிகள்
விறைப்பாய் உறைந்து போய்
128.
morning meditation
so cold we can see our breath
chanting aum
காலை தியானம்
கடுங்குளிர்
எங்கள் மூச்சுக் காற்று ஓங்காரம் ஓதுவது புலப்படும்படி
130.
mouse tracks
across the frozen lard
in the frying pan
வாணலியில் உறைந்த
பன்றிக் கொழுப்பின் குறுக்கே
எலியின் வழித் தடங்கள்
131.
cold rain at the window
the only child
scolds her doll
ஜன்னலில் அடிக்கும் குளிர்மழை
ஒரே குழந்தை
தன் பொம்மையைத் திட்டுகிறது
132.
the smile on the lips of
a dead cat by the road side
this winter day
இந்த பனிக்காலப் பகலில்
சாலையோரமாய் இறந்து கிடக்கும்
பூனையின் இதழ் கொண்ட புன்னகை
133.
December afternoon
the light in the room
is cold and tired
டிசம்பர் பிற்பகல்
அறை வெளிச்சம்
குளிர்ந்து, சோர்ந்து
134.
rain on my birthday
another year more
another year less
என் பிறந்த நாளின் போது மழை
இன்னொரு வருடம் அதிகமாய்
இன்னொரு வருடம் குறைவாய்
135.
the grey sky
snow falling into
the grey sea
சாம்பல் வானம்
பனி விழுகிறது
சாம்பல் கடலுள்
136.
gladness
on this wet winter morning
to be washing my bowl
இந்த ஈரமான பனிக்காலக் காலையில்
என் கிண்ணத்தைக் கழுவும்
உவகை
137.
skimming a stone
across the frozen pond
to hear it sing
நழுவிப் போகும்படியாய்
ஒரு கல்லை குறுக்கே வீசுகிறேன்
உறைந்த குளம் பாடிக் கேட்க
138.
in the snow-covered field
blue
a plastic milk-crate
பனியால் மூடப்பட்ட வயலில்
நீலமாய்
ஒரு பிளாஸ்டிட் பால் பெட்டி
139.
last day of another year
bells
first day of another year
இன்னொரு வருடத்தின் இறுதி நாள்
மணியோசை
இன்னொரு வருடத்தின் முதல் நாள்
140.
opening the window
to look out at
the new year
ஜன்னல் திறக்கிறேன்
புத்தாண்டைக்
காண
141.
snowfalling
everything
in its place
பனிப்பொழிவு
அனைத்தும் அதனதன்
இடத்தில்
142.
walking on snow --
biting
into an apple
பனியில் நடத்தல் --
ஆப்பிளை
ஆழ்ந்து கடித்தல்
143.
epiphany
taking down the Christmas cards
the bare mantel piece
எப்பிபானி திருவிழா
கிறித்துமஸ் வாழ்த்துக் கடிதங்களை கீழே எடுக்கிறேன்
கணப்பின் மேலுள்ள வெற்றுத் தட்டு மாடம்
144.
fresh fallen snow
not yet trodden by anyone's feet
I'll charge across
யாரும் கால் வைக்காத
இப்போது விழுந்த புதுப்பனி --
நான் குறுக்கே பாயப் போகிறேன்
145.
the winter beach --
children building
snow castles
பனிக்கால கடற்கரை --
குழந்தைகள் கட்டுகிறார்கள்
பனிக்கோட்டைகள்
146.
driving sleet
a street-light flickers
on and off
ஆலங்கட்டி மழையில் வண்டியோட்டுகிறேன்
அணைந்து அணைந்து எரிகிறது
தெருவிளக்கு
147.
another night --
moonlight and roses
on my neighbour's accordion
மற்றொரு இரவு --
அயல் வீட்டுக்காரரின் அக்கார்டியனிலிருந்து
'நிலவொளியும் ரோஜாப்பூக்களும்'
148.
astonished
to find myself
'here'
'இங்கே'
கண்டு ஆச்சரியமடைகிறேன்
என்னை
149.
the snowman
calmly awaiting
the thaw
பனி பொம்மை
மௌனமாய் காத்திருக்கிறது
உருகிட
150.
the incense stick burns down --
a heap of ash
the fragrance
ஊதுபத்தி எரிந்து விழுகிறது --
சாம்பல் குவியல்
நறுமணம்
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates