Tuesday 29 December 2009

பா: குழந்தைமையின் வெடிப்புகளும் வளர்ந்தவர்களின் பாசாங்கும்

(கூடு இணைய இதழில் வெளியாகி உள்ள கட்டுரை)

ஒரு நுட்பமான காட்சிபூர்வ கலைஞனால் எளிய திரைக்கதையை கூட கிளர்ச்சியூட்டும்/ஆழமான அனுபவமாக உருவாக்க முடியும். குவிண்டின் டொரண்டினோவின் Kill Bill ஒரு நல்ல உதாரணம். தமிழில் பாலா கதையை விட மைய பாத்திரத்தின் ஆன்மீக பயணத்தை சாகசமாக காட்டியே வெற்றி பெற்று வந்துள்ளார். ஆனால் சீனி கம் மற்றும் பா ஆகிய இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ள பால்கி எனும் நம்மூர் பால்கிருஷ்ணன் நாடகீயமான கருத்து-உணர்வு மோதல்களை நம்பி படமெடுப்பவர். இவரது படங்களில் பி.சியின் படக்கருவி நுட்பமும் எதார்த்தமும் கூடிய காட்சிகளை உருவாக்கினாலும் அவை படத்தை முன்னெடுத்து செல்வதில்லை. பறவையின் கால்களைப் போன்று இளைப்பாற மட்டுமே பயன்படுகின்றன.



பால்கியின் முதற்படம் ”சீனி கம்” பலத்த வரவேற்பை பெற்றது. ஒரு 34 வயதுப் பெண் எப்படி 64 வயது முதியவரை மணக்கிறாள் என்பதே கதை. இந்த எளிய கதையின் வெற்றிக்கு அது தன் வகைமையை தெளிவாக அடையாளம் கண்டிருந்தது (காமிடி) காரணம். ஏறத்தாழ தன் வகைமையின் விதிகளுக்கு உட்பட்டே இயங்கியது காமிடி நாடக அமைப்புக்கு ஒரு பிரச்சனை சிக்கலாக வேண்டும். அவிழ்க்க முடியாது என தோன்றும் வண்ணம் முடிச்சுகள் இறுகுவது climax எனும் சிடுக்குகளின் உச்சம். நிறைய குளறுபடிகளுக்கு பின் இறுதியில் சிக்கல் தீர resolution எனும் முடிச்சவிழ்தல் அல்லது தீர்வு கட்டம் வருகிறது. வயது பொருத்தம் பிரச்சனை என்றால், சிக்கல் மாமனார் மருமகனை விட ஆறு வயது சின்னவர். மேலும் முடிச்சுகள் விழ வைக்க கலாச்சார முரண்பாடுகள் பயன்படுகின்றன. மேற்கத்திய கலாச்சாரத்தில் அறுபதுக்கு மேலும் இளமை கொண்டாட்டம். இந்தியாவில் நாற்பதிலே காவி துண்டை முதுகுக்கு குறுக்கே இழுத்து சொறிந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். முதுமையை ஓய்வு, புலனடக்கம், இறை வழிபாடு என கழிப்பதே உசிதம் என்கிறது இந்தியா. படத்தில் அனைத்து பாத்திரங்களும் மாறி மாறி முரண்படுகிறார்கள். விளையும் பொறிகளே படத்தின் வெளிச்சம். உதாரணமாக கதாநாயகன் அசைவம், நாயகி சைவம். மேலும் இருவரும் உள்ளொடுங்கியவர்கள். எளிதில் எதையும் விட்டுக் கொடுக்க அனுமதிக்க முடியாது. துடுக்குதனமும் கிண்டலுமே பேச்சு. பரஸ்பரம் தாக்கி அவர்கள் தங்கள் ஈகோவை அழிக்கிறார்கள். இக்காட்சிகள் சுவாரஸ்யமானவை. நாயகனான புத்ததேவின் அம்மா குஸ்தி விரும்பி. பயில்வான்களுடன் ஒப்பிட்டு மகனை சதா கடுப்பேற்றுகிறார். செக்ஸி என்றொரு ரத்த புற்று நோய் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி புத்ததேவின் உற்ற தோழி. அவள் வாழ்வை அதிவேகமாய் ஜீரணிக்கும் அவசரத்தில் இருக்கிறாள். இந்த சிறுமி, காதல் ஜோடி, மாமனார் பாத்திரங்கள் வாழ்வின் ஆரம்ப முடிவு கோடுகளை அழித்து ஆடுகிறார்கள். முதுமை எப்போது ஆரம்பமாகிறது என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். கூடவே காந்திய உண்ணாவிரத சுய-நிந்தனையின் வன்மம் மற்றும் அக்கிரமம் (?) மீதான பகடி மற்றும் பரிகாசம் இப்படத்தின் சிறப்பம்சம். நாடகீய மோதல்கள், கருத்தியல்\கலாச்சார பகடி மற்றும் மரணம் பற்றின அலசல் படத்திற்கு ஆழமும் வெற்றியும், அதனால் பாலிவுட்டில் தனித்த இடத்தையும், அளித்தது.



”சீனி கம்மில்” கல்யாண மோதல் நடக்கையில் சிறுமி செக்ஸி இறந்து போகிறாள். இரு மையபாத்திரங்களுக்கும் தாம் காலத்தில் எங்கு நிற்கிறோம் என்பதை மரணம் மூலம் புரிய வைக்கிறாள். தனது அடுத்த படமான ”பாவில்” பால்கி செக்ஸியில் இருந்து ஒரு இழையை உருவி புரோஜேரியா எனும் குழந்தைப் பருவத்திலே முதிர்ந்த கிழமாகும் மரபணு கோளாறு கொண்ட குழந்தையாக்குகிறார் (அமிதாப் பச்சன்). அரோ என்ற பெயருடைய இக்குழந்தை பழைய தமிழ்ப்பட பாணியில் அப்பா-அம்மாவை சேர்த்து வைப்பதே கதை. படம் எந்த வகைமை என்ற குழப்பம் உள்ளது. அடுத்து, எங்குமே ஆரம்பமாகாமல் சூப்பர்மேன் ஆடை போல் resolution-இல் முடிகிறது. பா என்றால் அப்பா. படம் முழுக்க பா என்றே அழைக்காமல் இறுதியில் சாகும் முன் அரோ தன் அப்பாவை நோக்கி “பா” என்றழைக்கும் இறுதி வசனத்தை திகில் மற்றும் பரபரப்பான கட்டமாக பால்கி திட்டமிட்டு, அத்தரிசனத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இருக்கை விளிம்பு வரை தள்ளி கொண்டு செல்கிறார். அதிர்ஷ்டவசமாக இந்த அதிமுக்கியமான தருணத்தில் என் மனைவி மூச்சுத் திணறி அழுது என்னை எழுப்பி விட்டாள். சிலிர்த்தபடி எழுந்து படத்தின் தரிசனத்தை பார்த்தேன். ஆனாலும் நல்ல கலைஞர்கள் முழுக்க ஏமாற்ற மாற்றார்கள். சில சாதகமான அம்சங்கள் உள்ளன.



இப்படம் முழுக்க குழந்தைகள் பற்றியதாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து பெரியவர்களின் உலகை போட்டு உடைக்கிறார்கள். ஆரம்ப காட்சியில் அரோ படிக்கும் ஒரு செல்வந்த பள்ளியில் மாணவர் கண்காட்சி. சிறந்த படைப்பை தேர்ந்து விருதளிப்பது எம்.பியான அமோல் ஆர்த்தே (அபிஷேக் பச்சன்). அமோலின் ரகசிய குழந்தை அரோ. இருவருக்கும் இது தெரியாது. சிறந்த படைப்புக்கான பரிசு நாம் எதிர்பார்ப்பது போல் அரோவுக்கு கிடைக்கிறது. அரோவின் படைப்பு ஒரு முழுக்க வெள்ளையான உலக உருண்டை. அறம், ஆன்மீக தரிசனம் என்று பேதியாகும் சில தமிழ் விமர்சகர்கள் போல் அமோல் இந்த மொட்டை உலக உருண்டை பிரிவினைகளற்ற பூமிக்கான வேண்டுகோள், அமைதிக்கான பிரார்த்தனை என்று உருகி அரோவை பாராட்டுகிறார். பரிசு வாங்கிய பின் அரோ இது குறித்து தன் அம்மாவிடம் விளக்குகிறான்: “கண்காட்சிக்கு என்ன செய்ய என்று தேடிய போது எனக்கு பரிசோதனை சாலையில் இருந்து உலக உருண்டையும் கொஞ்சம் வெள்ளை பெயிண்டுமே கிடைத்தது. அதை அடித்துக் கொண்டிருந்த போது நேரமாகி விட்டதால் அப்படியே போட்டுக் கொண்டு ஓடி வந்து விட்டேன். அசடுகள் இதற்கு போய் பரிசு தந்து விட்டார்கள்”. மற்றொரு காட்சியில் குழந்தைகள் “பாஸ்டர்டு” என்று அழைக்கும் இடம் வருகிறது. அட எதாவது ஒழுக்க போதனை வந்து சேருமே என்று பார்த்தால், அரோவின் நண்பன் விஷ்ணு சொல்கிறான். “என்னை என் அப்பா பாஸ்டர்டு என்று வைகிறார். எனக்கு மகிழ்ச்சியே. நான் பாஸ்டர்டு என்றால் அவர் எனக்கு அப்பா இல்லையே. பிறகு என்னை திட்டும் அடிக்கும் உரிமை அவருக்கு கிடையாதல்லவா”. மற்றொரு இடத்தில் அரோவுக்கு எம்.பி அப்பாவுடன் ராஷ்டரபதி பவன் சென்று பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கிறது. அரோவுக்கு நண்பர்களை அழைத்து செல்ல விருப்பமில்லை. அவன் விஷ்ணுவிடம் சாக்கு சொல்கிறான்: “இப்போதெல்லாம் பாராளுமன்றம், ராஷ்டரபதிபவன் போன்ற இடங்களில் தான் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடக்கின்றன. அங்கெல்லாம் போவது ரொம்பா ஆபத்து. உன்னை நான் அழைத்து போய் உனக்கு ஏதாவது ஆகி விட்டால் எனக்கு வேறு நண்பன் யார் இருக்கிறார்கள் சொல்!”. எம்.பி தன் பாதுகாப்பு விசயத்தில் காட்டும் பதற்றம் பார்த்து அரோ கேட்கிறான்: “ நீங்கள் எங்கு போனாலும் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் உண்டுதாம். ஆனால் நீங்கள் நாளிதழ் படித்தபடி ரெண்டுக்கு போகும் போது பூமிக்கடியில் கழிவறை குழாய்வழி ஒரு தண்ணீர்குண்டு வந்து வெடித்தால் உங்கள் பின்புறம் என்னாவது”. அரோ தன் பாட்டியை பம் (bum) என்றே படம் முழுக்க அழைப்பது எதார்த்தமானதே. அரோவின் மரணத் தறுவாய் காட்சிகள் இருப்பதிலே தமாஷானவை.



அரோவின் தாத்தா (பரேஷ் ராவல்) அவனிடம் கேட்கிறார்: “உன் பெயர் என்ன?” (அவருக்கு மகனின் முன்-திருமண உறவு பற்றி அதுவரை தெரியாது).
“அரோ”
“ஆஹா அரோ. என்ன அழகான அருமையான பெயர். ஸ்ரீ அரபிந்தோ அவர்களின் பெயர் தானே”
“இல்லை நான் அரொ மட்டும் தான்”
இது போல் மேலும் ஒரு பல்ப். அரோ விரைவில் இறந்து விடுவான் என்று மருத்துவர் உறுதி செய்கிறார். ஆஸ்பத்திரி படுக்கையில் தாத்தாவிடம் அவன் சீரியஸாக சொல்கிறான்: “ நேரம் வந்து விட்டது ..”
அவர் உணர்ச்சிவசப்பட்டு “இல்லை தம்பி அப்படி சொல்லாதே. உனக்கு வாழ்க்கையில் எவ்வளவோ நேரம் உள்ளது. சிக்கிரம் சரியாகி வந்து விடு. நாம் உலகம் எல்லாம் சுற்றலாம். யு.எஸ் சென்று டிஸ்னி லேண்ட் பார்க்கலாம். அற்புதமான இடம் அது ..”. அரோ அதே தீவிர பாவத்துடன் குறுக்கிட்டு சொல்கிறான், “நான் உங்கள் விருந்தினர் நேரம் முடியும் நேரம் வந்து விட்டது என்றேன்”.

படத்தில் அமிதாப்பின் நடிப்பு, பி.சியின் ஒளி-இருள் காட்சிகள், வண்ணமய சித்தரிப்புகள் கொள்ளை கொள்பவை. மரணம் குறித்து உணர்ச்சி மேலிடல்கள், உச்சுகொட்டுதல்களுக்கு எதிரான படம் இது என்பது பாராட்டத்தக்கது, முந்திப் போகும் தன் மூக்கு வழி வித்யாபாலன் நிறைய கண்ணீர் பிழிந்தாலும் கூட. மரணம் எங்கே ஆரம்பமாகிறது என்ற நுட்பமான கேள்வியையும் அது எழுப்புகிறது. என்ன நீங்கள் மிக கவனமாக பின்தொடர வேண்டும். இதோ முடிகிறது என்று எண்ணி எக்குத்தப்பாய் தூங்கி விழக் கூடாது.
Read More

ஊடகங்களால் விற்பனை செய்யப்படும் நம் பண்பாடு

வியாபார வெற்றியும் தரமும்

இன்று ஒரு குழப்பமான பண்பாட்டு சூழலில் வாழ்கிறோம். தொழில்நுட்ப சிறப்பு கொண்ட எளிய மசாலா படங்களை உலகத்தரம் என்று கொண்டாடும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. ”சிவாஜியில்” இருந்து ”அவதார்” வரை நம் முதலாளித்துவ ஊடகங்களால் திட்டமிட்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது.

ஊடக வளர்ச்சிக்கு முன் தீவிர மற்றும் வணிக சினிமாக்களுக்கு இருந்த இடைவெளி இன்று மங்கி விட்டது. குறிப்பாக மத்திய மற்றும் உயர்மத்திய வர்க்கத்துக்கு. தமிழில் துல்லியமான பண்பாட்டு சித்தரிப்புகளுடன் வரும் மசாலா படங்கள் வெற்றி பெற்றால் டி.வி மீடியா உடனே அதை விழுங்கி விடுகிறது. பிறகு “தரமான சினிமா” அல்லது “வித்தியாசமான படம்” என்று ஏப்பம் விடுகிறது. இது கொட்டாவி போல் பரவி ஆளாளுக்கு “தரம்” “தரம்“ என்று பஜனை கோஷ்டி கிளம்புகிறது. அடுத்து இத்தகைய சினிமாக்களின் நாயகர்கள் அமீர், சசிகுமார் போன்றவர்கள் தீவிர இலக்கிய கூட்டங்களில் தரிசனம் தந்து நூல் வெளியிட்டு தாடி வருடி “எனக்கு புத்தகம்னாலே அலர்ஜிப்பா” என்று வேறு பேசுகிறார்கள். வெகுஜனவாதிகளுக்கு தீவிர படைப்புலகம் தீட்டு என்பதல்ல என் வாதம். இருவருக்குமான எல்லைக் கோட்டை எச்சில் தொட்டு அழித்து விட்டார்கள் என்பதே. ‘Mending Wall” கவிதையில் ரோபர்ட் புரோஸ்டு குதர்க்கமாய் குறிப்பிடும் ஒரு வழக்காறு நினைவு வருகிறது: அண்டை வீட்டாரின் அமைதி வாழ்வுக்கு அவர்கள் இடையே ஒரு மதில் வேண்டும்.

வடக்கத்திய டீ.வி மீடியா நட்சத்திர அந்தஸ்து படங்களை தொழில்முறையாக அவேசமாக விளம்பரப்படுத்தி கொண்டாடும் நோய்மை நம்மூருக்கு இன்னும் தொற்றவில்லை (”த்ரீ இடியட்ஸ்”). “சிவாஜி” போன்று சில விதிவிலக்குகள் மட்டும். வெகுஜன அறிவுஜீவி மதன் இப்படத்தை உச்சபட்ச தரம் என்று உச்சுக்கொட்டியது நினைவிருக்கலாம். சமீபமாக “உன்னைப் போல் ஒருவனை” விஜய் டீவி ஒரு மாத ஆர்ப்பாட்டங்களுடன் சந்தைப்படுத்தியது. ஓரளவுக்கு ’வித்தியாசமான’, ’யோசிக்க வைக்கக்கூடிய’ படங்களை அங்கீகரித்தால் என்ன தவறு என்கிறீர்களா?




‘வி..யோ’ படங்கள் தோல்வி அடையும் போது ஊடகங்கள் ஏன் இது போல் அவற்றை கொண்டாடுவது இல்லை. நல்ல உதாரணம்: ”கற்றது தமிழ்“. வெளியான போது இணையத்தில் ஒரு cult அந்தஸ்து பெற்ற படம் இது. எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. “பருத்தி வீரன்”, “மொழியை” விட அதிகமாக அலசப்பட்டது. ஆனால் படம் தோல்வி அடைந்ததால் ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்களும் அதை கைவிட்டனர். சொல்லப்போனால், சமகால இருப்பு சார்ந்த, உலகமயமாக்கல் பிரச்சனைகளை இத்தனை தீவிரமாக பேசின படமே வேறு வரவில்லை. திராவிட கட்சிகளின் நீண்ட ஆட்சிக் காலத்திற்கு பின்னரும் தமிழ் படித்தோர் உதாசீனிக்கப்பட்டு ஒதுக்கப்படும் அவலம் குறித்து பேசின ஒரே படம். ’பருத்தி வீரனில்” கலாச்சார நுண்விவரிப்புகளை எடுத்து பார்த்தால் மிகையான காதல் தியாகம் பேசும் படம். ஆனால் ‘க.த’ வெளியான பின் எந்த ஒரு விழாச்சிறப்பு இதழ்களிலோ, டீ.வி நிகழ்ச்சிகளிலோ அதைக் குறித்து பேசப்பட இல்லை. பேட்டிகளில் பிடித்த படங்கள் பற்றி குறிப்பிட்ட முன்னணி இளம் இயக்குனர்களின் பட்டியலில் வெற்றி பெற்ற பரிசோதனை படங்கள் மற்றுமே இருந்தன. விருது நிகழ்ச்சிகளிலும் “க.த“ தவிர்க்கப்பட்டது. சொல்லுங்கள், வெற்றி பெற்ற படங்கள் மட்டுமே தரமானவையா? அல்ல. வெற்றி பெற்றவை மட்டுமே நன்றாக விற்கப்பட்ட சரக்குகள். நம் மீடியா முதலாளிகள் சரக்குகளை புழக்கத்தில் விட பயன்படுத்தும் ஒரு விளம்பரச்சொல் மட்டுமே “தரம்” என்பது.



தற்போது பரபரப்பாக விற்பனையாகி வரும் “தரமான ” சரக்கு ஜேம்ஸ் கேமரோனின் “அவதார்”. இது ஒரு காட்சிபூர்வ சாதனை மட்டுமே ஆகும். பாத்திர அமைப்பு மற்றும் திரைக்கதையில் வேறு எந்த நுட்பமோ ஆழமோ கிடையாது. இன்று இந்தியாவில் மிக வெற்றிகரமாக இது ஓடிக் கொண்டிருப்பதற்கு காட்சிபூர்வ பிரம்மாண்டத்துடன் இதன் மசாலாவும் ஆதார காரணம். முக்கிய சினிமா விமர்சகர் ரோஜர் எபெர்ட் தனது கட்டுரை ஒன்றில் இப்படம் இன்று தவிர்க்க முடியாதபடி நம் கலாச்சார நீரோட்டத்தில் கலந்து விட்டதை குறிப்பிடுகிறார். உயர், மத்திய தட்டு மக்களின் குமாஸ்தா நீரோட்டத்தில். உங்களை பண்பட்டவராக காட்டிக் கொள்ள ”அவதார்” பார்த்தே ஆகவேண்டும்.

ஜெயமோகனின் ”அவதார்”

இந்த நிர்பந்தம் ஜெயமோகனுக்கே வந்து விட்டதென்றால் பாருங்கள். அவரது சமீபத்திய ”அவதார்” கட்டுரையில் தீவிரர்கள் வெகுஜன சினிமா பக்கம் மூக்கு நீட்டிட நேரும் முத்தாய்ப்பான சறுக்கல்களும் தெரிகின்றன. கதாநாயகனுக்கு போலியோ என்கிறார். உண்மையில் ஜேக் சல்லி எனும் அந்த பாத்திரம் பாராபிளிஜியா எனும் ஒருவகை பக்கவாதம் பாதிக்கப்பட்டவர். ஜேக் சல்லி சக்கர நாற்காலியில் இருந்தபடி போரிடக்கூடிய வீரன் என்று உதார் வேறு விடுகிறார் ஜெ.மோ. படத்தின் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. உச்சபட்ச வேடிக்கையாக இப்படி சொல்கிறார்: அந்த வரைவியப் (animation) பிம்பங்களின் ‘நடிப்பு’ மிகுந்த நுட்பத்துடனும் உணர்ச்சிகரமாகவும் இருப்பது ஒரு கட்டத்தில் என்னை இனிமேல் நடிப்பு என்றால் என்ன பொருள் என்றே எண்ணச்செய்துவிட்டது. இனி நடிப்பதற்கு மனிதர்களோ காட்டுவதற்கு நிலமோ தேவையில்லையா என்ன?.

”அவதார்” படத்தில் நடிகர்கள் உண்டு. அவர்கள் நடித்த காட்சிகளை motion-capture வரைவியல் தொழில்நுட்பம் பயன்படுத்தி பிம்பங்களாக மாற்றி உள்ளனர். ஜெயன் இந்த அடிப்படை தகவல் கூட தெரியாமல் மயிர்கூச்செறிகிறார். தெரியாத பிரதேசத்துள் தயாரிப்பின்றி நுழைவது இப்படி பல்பில் தான் முடியும். முன்னர் ஒருமுறை என் அப்பா பிடிவாதமாக ஒருவகை பரிட்சார்த்த உப்புமா செய்தார். தாளித்து வெங்காயம் வதக்கி ... எவ்வளவு சொல்லியும் கேட்காமல், கோதுமை மாவை அதில் கொட்டினார். விளைவு எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.

வேட்டைக்காரனும் அவதாரும்




நேற்று பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் சென்ற போது அங்கு கேமரோனை ஒரு கும்பல் குரோசேவொ, டொரெண்டினோ, மஜீத் மஜீதி அளவுக்கு சிலாகித்து கொண்டிருந்தனர். இதோடு ”வேட்டைக்காரன்” போன்ற விஜய் படங்கள் சந்திக்கும் நக்கல் மற்றும் ”நுண்ணுணர்வு” நிராகரிப்பையும் ஒப்பிடுங்கள். ”வேட்டைக்காரன்” வாழைக்காய் பஜ்ஜி என்றால் ”அவதார்” ஐயங்கார் பேக்கரி சைவ சமோசா. யார் முதுகை யார் சொறிந்து விடுகிறார்கள்.
Read More

Monday 28 December 2009

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 9


நான் அவள் சுட்டு விரலின் திசையை தொடர்ந்து போய் அந்த நிலையத்தைக் கண்டேன்: உரிந்து விழும் மரம், சாய்-தகரக் கூரை, நீண்ட மொட்டை மாடி மற்றும் முன்னால் இருநூறு மக்களுக்கு மேல் நிற்கமுடியாத சிறு வறண்ட சதுக்கமும் கொண்ட ஒரு கட்டிடம். இங்குதான், அம்மா அன்று சொன்னாள், 1928-இல் ராணுவம் கணக்கில் அடங்கா எண்ணிக்கையில் வாழைத்தோட்ட தொழிலாளர்களை கொன்று குவித்தது. எனக்கு நினைவு தோன்றிய நாளில் இருந்து தாத்தாவால் ஓராயிரம் முறை சொல்லப்பட்டும், திரும்ப சொல்லப்பட்டும் அந்நிகழ்வை நானே வாழ்ந்து அனுபவித்தது போல் அறிந்து வைத்திருந்தேன்.

படைவீரன் பணிநிறுத்தம் செய்யும் தொழிலாளிகளை சட்டவிரோதிகள் என்று அறிவிக்கும் சட்டம் ஒன்றை வாசிக்கிறான்; அதிகாரி சதுக்கத்தை காலி செய்ய ஐந்து நிமிடங்கள் அவகாசம் அளித்த பிறகு மூவாயிரம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் காட்டுத்தனமாய் எரியும் சூரியன் கீழ் அசைவற்று நிற்கின்றனர்; சுடும் உத்தரவு; சடசடவென வெண்ணிற வெங்கனல் வெடிப்புகளில் தோட்டாக்கள் துப்பும் எந்திரத்துப்பாக்கிகள்; பீதியின் பொறியில் மாட்டிக் கொண்டு தெறிக்கும் குண்டுகளின் பசியடங்காத கத்திரிக்கோல்களால் கச்சிதமாக, சிறிதுசிறிதாக நறுக்கி இடப்படும் கூட்டம்.

காலை ஒன்பது மணிக்கு சியனாகோ வந்தடையும் ரயில்வண்டி கப்பல்களில் இருந்து பயணிகளையும், சியராவில் இருந்து வந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு கால்மணி நேரத்தில் வாழைப்பழ பிராந்தியத்தின் உட்பகுதிகளுக்குள் பயணம் தொடரும். நானும் அம்மாவும் நிலையத்தை எட்டு மணி தாண்டியபின் வந்தடைந்தோம்; ஆனால் ரயில் வர தாமதமாகியது. அப்போது பயணிகள் நாங்கள் மட்டுமே. காலியான தொடர்வண்டிக்குள் நுழைந்ததுமே அவள் இதை உணர்ந்தாள்; விழா உணர்வு கூடிய நகைச்சுவையுடன் கூவினாள், "என்ன வசதி ! மொத்த ரயிலும் நமக்கு மட்டும் தான்"

அது அவளது ஏமாற்றத்தை மறைப்பதற்கான போலி பெருவகை தான் என நினைக்கிறேன்; ஏனெனில் தொடர்வண்டிகளின் நிலைமையில் இருந்து காலத்தின் கோலங்களை கண்கூடாக கண்டேன். அவை இரண்டாம் வகுப்பு தொடர்வண்டிகள்; ஆனால் அங்கு மூங்கில் இருக்கைகள் அல்லது உயர்த்தவும் தாழ்த்தவும் முடியக்கூடிய கண்ணாடி ஜன்னல் கதவுகளுக்கு பதில் ஏழைகளின் அலங்கரிக்கப்படாத வெதுவெதுப்பான பின்புறங்களால் வழவழப்பாக்கப்பட்ட மரபெஞ்சுகளே இருந்தன. அந்த தொடர்வண்டி மட்டுமல்ல மொத்த ரயிலுமே அவற்றின் பழைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் ஒரு பேய் வடிவாகவே இருந்தது. அந்த ரயில் ஒரு காலத்தில் மூன்று வகுப்புகள் கொண்டிருந்தது. படுஏழைகள் பயணித்த மூன்றாம் வகுப்பு வாழைப்பழங்களை அல்லது கசாப்புக்கான கால்நடைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பலகை பெட்டித் தொடர்வண்டிகள் பயணிகளுக்காக வண்ணம் பூசப்படாத பலகை பெஞ்சுகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டன. இரண்டாம் வகுப்பில் வெண்கல அலங்காரம் கொண்ட மூங்கில் இருக்கைகள் இருந்தன. அரசு அதிகாரிகளும், வாழைப்பழ நிறுவனத்தின் மேலாளர்களும் பயணிப்பதற்கான முதல் வகுப்பில் நடைபாதையில் தரைவிரிப்புகள் மற்றும் வெல்வெட்டால் பொதியப்பட்ட அமர்வு நிலையை விருப்பத்துக்கு ஏற்ப மாற்றும் வசதி கொண்ட இருக்கைகள் இருந்தன. நிறுவனத் தலைவர், அவரது குடும்பம் அல்லது முக்கிய விருந்தாளிகள் பயணிக்கும் பட்சத்தில், வண்ணக்கண்ணாடிகள் கொண்ட ஜன்னல்கள், சுவர் மீது ஜிகினா பதித்த அச்சுருவ வேலைப்பாடுகள்,மற்றும் பயணத்தின் போது தேநீர் அருந்த சிறுமேஜைகள் அமைந்த வெளி மொட்டைமாடி உடைய ஆடம்பர தொடர்வண்டி ரயிலின் இறுதிப்பகுதியில் இணைக்கப்படும். இந்த கற்பனைக்கு எட்டாத தனிவண்டியின் உட்பகுதியை கண்டுள்ள ஒரு ஜீவனைக் கூட நான் இதுவரை சந்தித்தது இல்லை. என் தாத்தா இருமுறை மாநகரத் தலைவராக இருந்தவர்;அவர் பணம் பற்றி விளையாட்டுத்தன மனப்பான்மை கொண்டவர். ஆனாலும் பெண் உறவினருடன் பயணித்தால் மட்டுமே அவர் இரண்டாம் வகுப்பில் சென்றார். ஏன் அவர் மூன்றாம் வகுப்பில் பயணிக்கிறார் என்று கேட்டால் "நான்காம் வகுப்பு என்று ஒன்று இல்லாததால்" என்று பதிலளிப்பார். ஆனால் ஒரு காலத்தில் இந்த ரயிலின் சற்றும் மறக்கமுடியாத அம்சம் நேரந்தவறாமையே. நகரங்களின் அனைத்து கடிகாரங்களின் நேரமும் இதன் விசில் சத்தத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டது.
அன்று ஏதேதோ காரணங்களால் அது ஒன்றரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. இரங்கல் தொனியில் கிறீச்சிட்டவாறு, மிக மெதுவாக அது நகர ஆரம்பித்த போது அம்மா சிலுவை வரைந்து கொண்டாள்; ஆனால் எதார்த்தத்துக்கு உடனடியாக திரும்பினாள்.
"இந்த ரயிலின் ஸ்பிரிங்களுக்கு எண்னையிட வேண்டியுள்ளது", அவள் சொன்னாள்.

Read More

Friday 25 December 2009

இந்திய அணித்தேர்வின் பின்னுள்ள காரணிகள்



வங்கதேசத்தில் நடைபெறப் போகும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வில் இம்முறையும் தமாஷ் உள்ளது. இந்த பதிவு அக்குளறுபடிகள் பற்றியது.

முதலில் ரோஹித் சர்மாவின் சேர்க்கை. அவர் பொறுப்பில்லாமல் ஆடியதனாலே கழற்றி விடப்பட்டார். பிறகு ஆடிய உள்ளூர் ஆட்டங்களிலும் ரோஹித் பொறுப்பு காட்டவில்லை. மும்பை அணிக்காக குறைந்த ஸ்கோர்களுக்கு பிறகு ஒரு முன்னூறு அடித்து விட்டு டக் அவுட் ஆனார். ஆனாலும் இந்திய அணியில் இடம் கிடைத்து விட்டது. இங்கு நாம் ”பொறுப்பு” என்கிற வார்த்தையை கவனிக்க வேண்டும். ஒவ்வொரு இளைய வீரரும் அணியிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவர் மீது ஒரு பழிச்சொல் முத்திரை குத்தப்படும். அது பெரும்பாலும் கூடவே தங்கி விடும். உதாரணமாக சடகோபன் ரமேஷுக்கு கால்கள் நகராது என்றார்கள். சிறப்பான சராசரி இருந்தும் அவர் இந்த ஒரு குற்றச்சாட்டு காரணமாகவே எளிதில் நீக்கப்பட்டார். பொதுவாழ்வில் கூட நாம் அடிக்கடி எதிரிகளை வீழ்த்த பயன்படுத்தும் ஒரு அசட்டுத் தந்திரமே இது. ரோஹித்தின் பிரச்சனை பொறுப்பின்மை அல்ல. அவருக்கு தனக்கே உரித்தான ஆட்டமுறைமை இன்னும் உருவாகவில்லை. ஒரு நாள், டெஸ்டு ஆட்டம் என்று எளிய தகவமைப்பு மட்டுமல்ல இது. ஆட்டமுறைமையை உருவாக்குவது குழந்தை சோறு உண்ண, நடக்க பழகுவது போல்; இங்கிலாந்து மட்டையாளர் கெவின் பீட்டர்சனுக்கு இந்த குழப்பம் ரொம்ப நாள் இருந்தது. இதற்காக அவர் ஜெப்ரி பாய்காட் போன்ற விமர்சகர்களால் கண்டிக்கப்பட்டதும் உண்டு. எனக்கு ரோஹித் மீது தனிப்பட்ட புகார்கள் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட குளறுபடி அவரது தேர்வின் நியாயமின்மை குறித்து. உள்ளூர் ஆட்டங்களில் தொடர்ச்சியாக, சிறப்பாக மற்றும் திறமையாக ஆடுவதே தேர்வின் அளவுகோல் என்றால் ரோஹித்தை விட பலரும் தராசில் இடம் பிடிப்பார்கள்: மும்பையின் ரஹானே, கர்நாடகாவின் மனீஷ் பாண்டே மற்றும் தில்லியின் ஷிகார் தவான். தராசு முள்ளை ரோஹித் பக்கம் சாய்த்த காரணி என்னவாக இருக்கலாம்?



அவரது ஆட்ட நளினம். இந்திய மற்றும் இங்கிலாந்து தேர்வாளர்களுக்கு ஆட்ட நளினம் மீது தவிர்க்க முடியாத மயக்கம் உண்டு. அடுத்து அணித்தலைவர் ஆதரவு. இந்த கோணத்தை விளக்க முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் நசீர் ஹுசேனின் Playing with Fire எனும் சுயசரிதையிலிருந்து உதாரணம் தருகிறேன். டேரன் காப் எனும் தொண்ணூறுகளின் குண்டு வேகப்பந்து வீச்சாளரை உங்களுக்கு தெரியும். நசீர் அணித் தலைமையின்ன் போது கோப்புக்கு வயதும் உடற்பளுவும் ஏறி வந்தது. ஆனால் அவருக்கு அணியின் இளைய வீரர்களிடத்து செல்வாக்கு அதிகம். நசீருக்கு அது தெரியும். அவர் சொன்னார்: “காப் 90 கிலோ எடை ஆனாலும் நான் அவரை அணியில் வைத்திருப்பேன். அணியில் அவரது தாக்கத்தை நான் அறிவேன்.” ஒவ்வொரு அணியிலும் இத்தகைய சமரசங்கள் மற்றும் சுதாரிப்புகள். அணிக்கு வெளியே அணி மேலாண்மை மற்றும் வாரிய அதிகாரிகள், தேர்வாளர்கள் இடையிலும் இது நிகழலாம். வெளிச்சத்துக்கு வராத உண்மைகள் இவை. ஒரு அணித்தலைவர் தன் நம்பிக்கைக்கு பாத்திரமான வீரர்களின் ஒரு கூட்டணியை அணியில் வைத்திருக்கும் போது மன ஆறுதல் மற்றும் அதிகாரத்தை அடையலாம். குறிப்பிட்ட ஆட்டக்காரர்கள் தகுதியற்றவர்களாக இருக்கும் பட்சத்திலும் இது முக்கியமானது.



அமித் மிஷ்ரா ஓஜ்ஹாவுக்கு பதிலாக தேர்வு செய்யப்படுள்ளார். முன்னவர் இடத்தில் இலங்கைத் தொடரின் போது பின்னவர் கொண்டு வரப்பட்டதற்கு மிஷ்ரா ஆட்டத்தகுதி மற்றும் பார்ம் இல்லாமல் இருந்தது காரணம். இப்போது ஒரு 20-20 ஆட்டத்தில் அடி வாங்கினதும் ஓஜ்ஹா மீண்டும் காணாமல் போகிறார். 20-20 உலகக் கோப்பையின் போதும் இதுவே நடந்தது.



இத்தனைக்கும் ஓஜ்ஹாவின் ஒரு நாள் ஆட்ட விவரத்தொகுதி சிறப்பானது. 9 ஒரு நாள் ஆட்டங்களில் 12 விக்கெட்டுகள். மிஷ்ரா? 5 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகள். நடந்து வரும் ரஞ்சி தொடரில் திரிபுராவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளது இவரது தேர்வுக்கு உதவியிருக்கலாம். 90-களின் இறுதியிலிருந்து இடதுகை மட்டையாளர்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவதனால் பெரும்பாலான அணிமேலாண்மைகள் இடதுகை சுழலாளர்களை விட ஆப் சுழலர்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். குறிப்பாக கங்குலி இடது கை சுழலர்களுகளை பொருட்படுத்தியது இல்லை. ஜோஷி, முரளி கார்த்திக் போன்ற அருமையான சுழலர்களின் தொழில்முறை வாழ்வுக்கு செக் வைத்ததே கங்குலியின் இந்த அணுகுமுறைதான். இலங்கை அணியில் நான்கு அதிரடி இடதுகை மட்டையாளர்கள் உள்ளனர். தோனிக்கு ஓஜ்ஹா மீது நம்பிக்கை போதவில்லை என்பதும் ஒரு காரணம். ஒருவரது ஆட்டத்திறனுக்கு புறம்பாக எத்தனையோ காரணிகள் ஒருவரது தொழில்முறை உய்வை தீர்மானிக்கின்றன.

கிரிக்கெட்டை கிரிக்கெட் மட்டும் தீர்மானிப்பதில்லை.
Read More

Wednesday 23 December 2009

பாதி வானம்




மனைவியுடன் மனஸ்தாபம்
இடையே
ஜன்னலில் பூனை
அதற்கு வெளியே
நிறைந்த வானம்
அதற்கு வெளியே தாவ உத்தேசித்து
வாலைப் பற்றி தடுக்கிறேன்
பேசிக் கொண்டே போகிறேன்
பாதி வானில் முகம் புதைத்த
மேகங்கள்
லேசான இருள்
பேசிக் கொண்டே ...
Read More

இன்றிரவு நிலவின் கீழ் (ஹைக்கூ தொகுப்பு): வா.மணிகண்டனின் தேர்ந்த விமர்சனம்



இது கவிஞரும், கட்டுரையாளருமான வா.மணிகண்டன் என் தொகுப்புக்கு எழுதியுள்ள ஒரு தேர்ந்த விமர்சனம். அவரது வலைப்பூவில் பிரசுரமாகி உள்ளது. அவரது மொழி நடையின் பாய்ச்சல், சுவாரசியம் மற்றும் விமர்சனத்தின் சவரக்கத்தி கூர்மைக்காகவே இங்கு மறுபிரசுரம் செய்கிறேன். நல்ல வாசிப்பு

இந்த நள்ளிரவில், மார்கழிக் குளிரின் சில்லிடுதலில், குரைத்துத் திரியும் நாய்களின் இரைச்சலால் ஆர்.அபிலாஷ் தொகுத்திருக்கும் "இன்றிரவு நிலவின் கீழ்" என்ற ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பை மேலோட்டமாகவே புரட்ட முடிகிறது.


கவிதைகள்(ஹைக்கூ) பேய்களைப் போலிருக்கின்றன. மனம் உற்சாமடையும் போதெல்லாம் ஒரு ஹைக்கூவை படிக்கிறேன். பின்னர் கொஞ்ச நேரம் ஆயாசமாக அமர வேண்டியிருக்கிறது. மீண்டும் ஒரு ஹைக்கூ. மீண்டும் அமைதி. ஒவ்வொரு கவிதையை வாசிக்கும் போதும் ஹைக்கூ என்பதன் வரையறையை இணையத்தில் தேட வேண்டும் என்று நினைத்தாலும் அப்படிச் செய்ய முடிவதில்லை. இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் "இதுதான் ஹைக்கூ" என்பதற்கான வரையறையை செய்வது கொள்வதற்கான அனைத்து சாத்தியங்களையும் வாசகனுக்கு கொடுக்கின்றன. ஆனால் மனம் இந்த வரையறை உருவாக்குதலில் லயிப்பதில்லை. கவிதை தரும் அனுபவத்தை விடவா வரையறை/வடிவம் அறிதலில் இன்பம் கிடைத்துவிடப் போகிறது என்ற உதாசீனம் மனதின் ஏதோ ஒரு இடத்தில் உருவாகிவிடுகிறது.


இந்தக் ஹைக்கூக்களுக்கென ஒரு பருவம் இருக்கிறது. அந்த பருவத்திற்கான குறிப்போ குறியீடோ கவிதையில் இருக்கிறது. இந்த மொழி பெயர்ப்பு ஹைக்கூக்களை வாசிக்கும் போது ஒரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. மேற்கத்திய பருவநிலை பற்றி ஒரு மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். பனிக்காலம் என்றால் காற்றும் நீரும் உறைந்து சாலையில் மென்பனி விரவிக்கிடக்கும் கடுங்குளிர்காலம். வெக்கை என்றால் இந்திய தேசத்து வெம்மையில்லை. சற்றே மிதமான கோடை. ஆடைகளை கழற்றிவிட்டு சூரிய ஒளி வாங்குவதற்காக ஒரு மணியின் மதிய வெயிலில் கடற்கரையில் கிடந்தாலும் உடல் வெந்துவிடாத வெப்பம். பின்னர் வாசிக்கும் போது ஒவ்வொரு கவிதையும் வாசகனை ஒரு பருவத்திற்குள் தள்ளி விடுகிறது. அது கவிதைக்கும் வாசகனுக்குமான விளையாட்டு.

ஹைக்கூக்கள் ஒரு காட்சியையும், ஒரு பருவத்தையும் தன்னுள் கொண்டிருக்கின்றன. கவிஞன் எந்த பிரயத்தனமுமில்லாமல் இவற்றைச் சொல்லிச் செல்வதாக தோன்றுகிறது. இதிலிருந்து வாசகன் தனக்கான உலகத்தை உருவாக்கிக் கொள்கிறான். கவிதைக்கான சாத்தியங்களும், அவனின் புரிதலையும் பொறுத்து வாசகன் ஹைக்கூவை நெருங்குகிறான் என்று சொல்லும் போது 'புரிதல்' என்ற சொல்லில் நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.


ஹைக்கூவில் புரிதல் என்று எந்த சிக்கலும் இல்லை. பனி மூட்டத்தில் மூதாட்டி நட்சத்திரங்களை நோக்குகிறாள் என்பது ஒரு காட்சி மட்டுமே. அதோடு கூட வாசிப்பவன் நிறுத்திக் கொள்ள முடியும். இந்தக் காட்சியின் நீட்சியாக தான் ஒரு கதையை உருவாக்குவதும், தன் அனுபவத்தை கோர்ப்பதும் கவிதையோடான வாசகனின் ஒன்றுதலை பொறுத்து அமைகிறது.

ஆலன் ஸ்பென்ஸ் கவிதை ஒன்று பின்வருமாறு இருக்கிறது.

குழந்தைகள் வரைகிறார்கள்

உலர்ந்து மறையும்

ஓவியங்கள்


மழைக்காலத்தில் நீரில் வரையும் ஓவியங்கள் என்பது என் புரிதல், இந்தக் காட்சியை குழந்தைகள் மழைக்காலத்தில் செய்யும் ஒரு செய்லோடு மட்டுமாகவோ அல்லது அவர்களது வாழ்வோகவோ அல்லது தத்துவார்த்தமாக குழந்தமையின் நிலையின்மை வரைக்குமோ யோசிக்க முடிகிறது.

இந்தக் கவிதைகளை தொகுப்பாக்கியதில் அபிலாஷ் மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார் என்று படுகிறது. வேனிற்கால கவிதைகள், மழைக்கால கவிதைகள், குளிர்கால கவிதைகள் என்று கவிதைகள் பருவத்தினடிப்படையில் ஒரு சேர இருக்கின்றன. இந்தத் தொகுப்பில் இருக்கக்கூடிய ஒரு சில கவிதைகள் தனியாக வாசிக்கும் போது ஆழ்ந்த வாசிப்பனுபவம் தராமல் இருக்கக் கூடும் ஆனால் அவற்றை தொகுப்பில் ஒத்த பருவமுடைய வேறு சில கவிதைகளுடன் சேர்த்து வாசிக்கும் போது மிகுந்த சந்தோஷம் அளிப்பதாக இருக்கின்றன.

கர்த்தரின் சிலை
தலைக்குப் பின் சூரியன்-
பட்டாம்பூச்சி தன் சிறகுகளை விரிக்கிறது.


இந்தக் கவிதை ஒற்றைக்காட்சியை மட்டுமே தருவதாக தெரிகிறது. பருவமும் மறைந்திருக்கிறது. இது வேனிற்கால கவிதைளோடு தொகுப்பில் இருக்கிறது என்னும் போது சூரியன் இந்தக் கவிதையில் தனித்து தெரிகிறது. கர்த்தருக்குப் பின் சூரியன் இருப்பது காலையா மாலையா என்ற கேள்வியும், பட்டாம்பூச்சி சிறகுகளை விரிப்பதன் காட்சியும் வேறு பல புரிதல்களை உருவாக்குகின்றன.
ஒவ்வொரு ஹைக்கூவும் ஒரு உலகத்தை தனக்குள் அடக்கியிருக்கிறது. அந்த உலகம் வாசகனை தனக்குள் இழுத்துக் கொள்வதற்காக பெரும் கதவுகளை திறந்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.

இதே தொகுப்பில் சில ஹைக்கூக்கள் நேரடியான காட்சியை சுட்டுவதில்லை. நேரடியான பருவ கால குறிப்பும் இல்லை.

நாய்ப்பீ
அல்லது நான்
ஈக்கு பொருட்டில்லை

இந்தக் கவிதையில் பருவம் நேரடியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை ஈக்கள் அதிகம் அலைவது என்பது வேனிற்காலத்தின் குறியீடாக இருக்கலாம் என்று படுகிறது. ஒற்றைவரி உரையாடலாக இருக்கும் இந்த சுய எள்ளல் மெல்லிய சிரிப்பை ஊட்டியது.
ஹைக்கூக்கள் என்பவை தத்துவம் சார்ந்தவை மட்டுமே என்பதும் சரியான கணிப்பில்லை. அங்கதமும் எள்ளலும் இந்தக் கவிதைகளில் தெறித்துக் கிடக்கின்றன. இன்னொரு முக்கியமான அம்சம், கவிதையின் இளமை. இதே கவிதைகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒரு வாசகனுக்கு பழைய கவிதை என்ற எண்ணத்தைத் தரப்போவதில்லை.

அபிலாஷின் பெரும்பான்மையான மொழிபெயர்ப்பு கவிதைகள் ஆங்கில மூலத்தை வாசிக்க வேண்டும் என்ற நினைப்பைத் தரவில்லை. வெகு சில கவிதைகள் அப்படி வாசிக்கச் செய்கின்றன. warmth என்ற சொல் ஒரு கவிதையில் கதகதப்பு என்றும் இன்னொரு கவிதையில் வெதுவெதுப்பு என்று வருகிறது. பொருளில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் மூலத்தை எழுதிய கவிஞனின் மனநிலைக்குச் செல்ல வாசகனுக்கு ஆங்கிலச் சொல் தேவைப்படுகிறது.

இந்தத் தொகுப்பின் சில ஹைக்கூக்களில் வரும் கவிதைக்குரிய தேசத்திற்கான பழங்கள், காய்கள், பூக்கள், பறவைகளின் பெயர்கள் வரும் போது சற்று அந்நியத்தன்மையுடையவையாக இருந்தன. இது மொழிபெயர்ப்பின் தவிர்க்க முடியாத அம்சம் என்றே நினைக்கிறேன். ஆனால் இத்தகைய மொழிபெயர்ப்பின் பலவீனங்கள் என்பது இந்தத் தொகுப்பில் மிகச் சொற்பம். எனக்கு அவை negligible.

ஹைக்கூ கவிதைகளுக்கென இருக்கும் வரைமுறைகள், வடிவம் போன்ற எந்தக் கூறின் மீது எனக்கு புரிதல் இருந்ததில்லை. ஆனால் டீக்கடை செய்தித்தாள்களின் ஓரங்களில் மூன்று வரிகளை மடக்கிப் போட்டு ஹைக்கூ என்ற தலைப்பின் கீழாக பிரசுரிக்கப்பட்டிருப்பது சத்தியமாக ஹைக்கூ இல்லை என்று நம்பி வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கை பொய் போகவில்லை என்பதை "இன்றிரவு நிலவின் கீழ்" தொகுப்பை வாசிக்கும் போது உணர்கிறேன்.

எனக்கு மிக நெருக்கமான ஹைக்கூ:

ஈ என் மூக்கில்
நான் புத்தன் அல்லன்
இங்கே ஒரு ஞானமும் இல்லை

100 நவீன கவிஞர்களின் ஹைக்கூக்களை மொழிபெயர்த்து கவிஞர்களைப் பற்றிய சிறு குறிப்புடன்(இருபது கவிஞர்களின் குறிப்புகள்) கையடக்கமாக வந்திருக்கும் இந்த நூல் கைக்கு கிடைத்ததிலிருந்து இரு மாதங்களாக வாசிக்காமல் வைத்திருந்தது ஏன் என்று தெரியவில்லை.


வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.
Read More

Tuesday 22 December 2009

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 8



நாங்கள் ரயில்நிலையத்துக்கு ஒற்றைக்குதிரை விக்டோரியா வண்டியில் -- உலகின் ஏனைய பகுதிகளில் அருகி விட்ட புகழ்வாழ்ந்த மரபு ஒன்றின் இறுதிக் கண்ணியாக இருக்கலாம் -- சென்றோம். துறைமுகத்தின் சேற்றுக்குழியிலிருந்து தொடங்கி தொடுவானில் சென்று இணையும், நைட்ரேட்டால் நீறாகும் வறண்ட நிலத்தை பார்த்தவாறே அம்மா சிந்தனை வயப்பட்டிருந்தாள்.
எனக்கு அது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம்: எனக்கு மூன்றோ நான்கோ வயதிருக்கும் போது பாரங்குல்லாவிற்கு என் முதல் பயணத்தை மேற்கொண்டிருக்கையில் தாத்தா என்னை கைப்பிடித்து இந்த எரியும் பாழ்வெளிக்கு குறுக்காக நடந்தபடி, எங்கு செல்கிறோம் என்பதை சொல்லாமல், அப்போதைக்கு ஆபத்து சமிக்ஞை ஏதுமின்றி, ஒரு நுரை கொப்புளிக்கும் பரந்த பச்சை நீர் விரிவின் முன் நின்றோம்; அங்கு பொருங்கூட்டமாய் மூழ்கிய கோழிகள் மிதந்தன.
"இதுதான் சமுத்திரம்", அவர் சொன்னார். ஏமாற்றமடைந்த நான் மறுகரையில் என்ன உள்ளது என்று கேட்டேன்; ஒரு நொடி கூட தயங்காமல் அவர் பதிலளித்தார், "மறுபுறம் கரையே இல்லை"


இன்று பல சமுத்திரங்களை முன்னும் பின்னும் கண்ட பிறகு நான் இப்போதும் அதையே அவரது மிகச்சிறந்த பதில்களில் ஒன்றாக கருதுகிறேன். எப்பிடி இருப்பினும் சமுத்திரம் பற்றின என் முந்தைய படிமங்களில், அழுகித் தொங்கும் மாங்குரூ மரக்கிளைகள் மற்றும் கூரான சங்கு சிதறல்கள் காரணமாக நடப்பதே அசாத்தியமான,. நைட்ரேட் ஓடு போல் படர்ந்த கடற்கரை கொண்ட அந்த படுமோசமான மாபெரும் நீர்நிலையோடு ஒப்பிடும் வண்ணம் எதுவும் இருக்கவில்லை.
சியனாகாவில் உள்ள சமுத்திரம் பற்றி அம்மாவுக்கு அதே எண்ணமே இருந்திருக்க வேண்டும்; ஏனெனில் இடப்பக்கமாக அது தெரிய ஆரம்பித்த உடனே பெருமூச்சு விட்டபடி சொன்னாள், "ரியோஹாச்சாவில் உள்ளது போன்ற சமுத்திரம் வேறெங்கேயும் இல்லை"
அந்த சந்தர்பத்தில் மூழ்கின கோழிகள் பற்றிய என் ஞாபகத்தை அவளிடம் சொன்னேன்; எல்லா வயது முதிர்ந்தோரையும் போல, அதுவொரு குழந்தைப்பருவ பிரமையென அவள் கருதினாள். பிறகு அவள் போகும் வழியே ஒவ்வொரு இடம் பற்றின தன் சிந்தனையோட்டத்தை தொடர்ந்தாள்; அவளது மௌனத்திலுள்ள மாற்றங்கள் மூலம் அவள் என்ன யோசிக்கிறாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.



ரயில் தண்டவாளங்களின் மறுபுறமுள்ள சிவப்பு விளக்கு மாவட்டத்தை கடந்தோம்; அங்கு வன்ணம் பூசப்பட்ட சிறுவீடுகளும், துருவேறிய அவற்றின் கூரைகளும், தாழ்வாரத்தில் இருந்து தொங்கிய வளையங்களில் அமர்ந்து கிராக்கிகளை போர்ச்சுகீஸ் மொழியில் அழைத்துக் கொண்டிருந்த பாரமரிவாரத்திலிருந்து வந்த மூப்பேறிய கிளிகளும் தெரிந்தன. ஊர்திகளை நீரடித்து கழுவும் இடத்தை கடந்தோம்; அதன் பிரம்மாண்ட குவிமாடத்தில் வலசைப்பறவைகளும் , வழிதொலைத்த பறவைகளும் உறக்கம் கொள்ள அடைக்கலம் அடைந்தன. மாநகரத்தினுள் நுழையாமல் அதன் எல்லையை சுற்றி வந்தோம்; ஆனால் அதன் அகன்ற ஏகாந்தமான தெருக்கள், மற்றும் மாலை வேளைகளில் முடிவற்ற பியானான் பயிற்சிகள் நடக்கும், தரைமுதல் கூரைவரை நீண்ட சாளரங்கள் கொண்ட ஒற்றை மாடி வீடுகளின் பழங்கால அலங்கார சிறப்பைக் கண்டோம். எந்த முன்னறிவிப்பும் என்று அம்மா சுட்டிக் காட்டினாள்.
"பார்", அவள் சொன்னாள், "அங்கேதான் உலகம் முடிந்து போனது"
Read More

Monday 21 December 2009

அவர்களின் விசித்திர கற்பனைகள்


கடந்த ஆறு மாதங்களில் மூன்று தடவைகள் விழுந்தேன். ஒரே இடத்தில் (கால் பாதம்)அடி. வெவ்வேறு விளைவுகள். வெறும் சுளுக்கு, சுண்டு விரலில் எலும்பு முறிவு மற்றும் மேல்பாத எலும்பு முறிவு. கூடுதலாக இம்முறை நான் அணியும் காலிப்பர் (வாதத்தால் கால் பலவீனமானவர்கள் அணியும் குழல் போன்ற கருவி) நெளிந்து கோணியது. இப்பதிவின் தலைப்பில் உள்ள விசயங்கள் எனக்கு உருவாக இல்லை. ஜோசியரை பார்க்கவோ, வழிபாடு செய்யவொ விதியை நோகவோ இல்லை. மிகச்சிறு வயதில் இருந்தே விழுகை எனக்கு பழகி விட்ட ஒன்று. அதாவது அப்போது எல்லாம் காலிப்பர் அணியாததனால் விழுவேன். ஒரு தடவை இதனால் முட்டி எலும்பு முறிந்திட காலிப்பர் கட்டாயமாய் அணிவது என்று தீர்மானித்தேன். மேலே குறிப்பிட்ட மூன்று முறைகள் காலிப்பர் அணிந்ததனால் ஏற்பட்டன. என் காரண-காரிய போக்கு சற்று இடறி விட்டது.

கடந்த 8 வருடங்களாக Rainbow Orthopedics எனும் நிறுவனத்திடன் இருந்து தான் காலிப்பர் வாங்கி வருகிறேன். தேனாம்பேட்டையில் ராஜ் டி.வி அலுவலகம் தாண்டி வந்தால் ஒருகடை முன்பாக கயிற்றில் பத்திரிகைகள் தொங்க போட்டு, மாலையானால் ஒரு வெள்ளை வேட்டி கும்பல் பெஞ்சுகளில் அமர்ந்து தெனாவட்டாக தண்ணி அடிக்கும். அவர்களுக்கு பக்கத்தில் உள்ளது RO அலுவலகம். முந்தின கருவி வரை ஸ்டெடியாக தான் இருந்தது. இக்கருவியில் லாக் எனும் முட்டி இணைப்பை மடிக்கவும் நேராக்கவுமான பகுதியை வெளியில் வாங்கி பொருத்தி இருந்தார்கள். பழைய மாதிரி சுதேசி லாக் சரியாக விழாமல் சிலரை விழ வைத்து விட்டதாம். ஆனால் புது லாக்கில் எனக்கு கண்டம் இருந்ததை அப்போது அறியவில்லை. புது காலிப்பர் கனமாக இருந்தது. நான் காரணம் கேட்டதற்கு லாக் கனமாக இருந்ததால் கருவியும் கனமாக்க வேண்டி வந்தது என்றார்கள். வித்யா பாலனுக்கும் தான் மூக்கு பெரிசாக உள்ளது; அசினுக்கு கண்கள் கோணி உள்ளன. அதற்காக? வெளியிலிருந்து தருவித்த லாக் நான் எழுந்து நின்றால் தானாக விழுந்து பொருந்திக் கொள்ளும். சில சமயம் நான் நடந்தால் உற்சாகத்தில் அதுவும் எழுந்து கொள்ள முட்டி மடிய நான் விழுவேன். உற்றோர் நண்பர் கேட்டனர்: முதல் தடவையே ஏன் சரி செய்ய வில்லை?

நான் பார்த்தை கேட்டதை நடந்ததை நம்புபவனல்ல. ஆதாரபூர்வமாய் தீர்க்கமாய் விளங்கும் மட்டும் எதுவும் உண்மை அல்ல. முதல் இருமுறை வீழ்ச்சிகளின் போது நான் ஒரு நீண்ட அரைகால் சட்டை அணிந்திருந்தேன்; அதன் துழாவும் விளிம்பு மேற்சொன்ன லாக்கில் மாட்டி இழுத்து விட்டதென்பது என் கண்டுபிடிப்பு. தீர்வாக குறிப்பிட்ட அரைக்கால்சட்டையை தூக்கி கடாசினேன். மூன்றாவது முறை விழுந்த போது புறக்காரணிகள் காரணமல்ல, RO தான் குற்றவாளிகள் என்று தீர்மானித்தேன். ஏன் இம்முறை ஒரு நீண்ட சட்டை நுனியோ, வேறுகால் சட்டையோ ஏமாற்றி இருக்கலாம் இல்லையா? இல்லை. ஏன் எனில் இம்முறை விழுந்த போது நான் நிர்வாணியாக இருந்தேன்.

மூன்று வீழ்ச்சிகளுக்கும் ஒரு பொதுப்பின்னணி உள்ளதாய் மனைவி சொன்னாள்: உறங்காத இரவுகளைத் தொடர்ந்த மூன்று கலக்கமான காலைகள். ” நீ தூக்க கலக்கத்தில் லாக்கை சரியாக போடாமல் நடந்துள்ளாய்”. நான் இதை கட்டாயமாக மறுத்தேன்: “பார் இம்முறை சிறிது தூரம் சரியாக நடந்த பின்னரே வீழ்ந்தேன். ஆதாரம் என் பக்கம்”.

முதல் இருமுறைகளும் விழுவதற்கு கால் நொடி முன்னரே எனக்கு அது தெரிந்திருந்தது; ஒரு ஆபத்தை தடுக்க முடியாதே என்ற ஆற்றாமையே ஏற்பட்டது. பெரும்பாலும் ஒரு யோசனை நிலையில் தான் தலைவெட்டப்பட்ட துரோணர் போல் விழுந்தேன். இம்முறை அலசி புரிய அவகாசம் இல்லை. பீசா கோபுரம் போல் காற்றில் இழுக்கப்படும் மைக்ரோ நொடிகளில் தான் விழுவதாகவே உணர்ந்தேன். கடுமையான பீதியில், என்னிடம் கோபித்துக் கொண்டு சில நாட்களாக தொலைபேசியில் பேசாத அம்மாவை கத்தி அழைத்தேன். ஆணவம் மூத்தவனுக்கு இருப்பதில் கொடுமையான அனுபவம் சிந்திக்க முடியாது கடும் பீதியில் கைவிடப்படுவது தான். ச்சே!

விழுந்த பின்னான நொடிகளில் முதலில் தோன்றியது என்ன?

ஜூலை மாதம் விழுந்த சுளுக்கி கொண்ட போது ஓய்வுக்காக நான் முந்தைய அலுவலகத்தில் ஒரு மாதம் விடுப்பெடுத்தேன். அடிக்கடி விடுப்பெடுப்பவன் என்பதால் யாரும் என் விபத்தை நம்பவில்லை. பிறகு இது குறித்து என்னை விசாரித்த தலைமை மேலாளருக்கு நான் நுட்பமாக நடந்ததை விவரித்தேன். முதலில் அவர் முகம் கூம்பு வடிவாகி பப்பாளியாகி முட்டை வடிவம் வந்து பிறகு அசல் வடிவம் பெற்றது. ’என்னை அடிக்காதே’ என்ற பாவனையில் அவர் உடனே கூறினார்: “இனிமேல் விழுந்து வைக்காதீர்கள்”. பிறர் கருணையற்றவர்கள்; கூருணர்வு மழுங்கினவர்கள் என்று நானிதனால் சொல்ல உத்தேசிக்க இல்லை. மனிதர்களுக்கு சகிப்புணர்வு குறைந்து விட்டது.



அக்டோபர் மாதம் விழுந்து முடித்து என் சமீப அலுவலகம் சென்ற போது ஒரு நபர் கேட்டார்: “என்ன விழுந்து அடிபட்ட மாதிரியே தெரியவில்லையே”. மேலும் சிலருக்கு என்ன அடி, எப்படிப்பட்ட விபத்து என்றெல்லாம் விளக்கிய போது எளிதில் குழம்பினார்கள். தவறில்லை, அவர்களுக்கு அப்படி ஒன்றும் என்றுமே நடந்திருக்க வாய்ப்பில்லை. கம்பீரமாய் தீவிர இலக்கிய சிந்தனையில் நடந்து போகும் போது, அதுவும் வீட்டுக்குள்ளே, பட்டென்று விழுந்தேன் என்று சொன்னால் நம்ப சிரமம் தான். அலுவலகத்துக்கு திரும்பிய பின் யாரும் விசாரிக்கவில்லை என்பது எனக்கே ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தியது. இப்படியான கலவரச்சூழலில் விழுந்த பின் எனக்கு முதலில் தோன்றிய பிரச்சனை: “அட யாரும் நம்ப மாட்டார்களே!”

மருத்துவமனையில் எக்ஸ்.ரே பார்த்து விட்டு மருத்துவர் பேசிய வார்த்தைகள் தாம் விநோதங்களிலே உச்சம். நான் அறிய விரும்பியது கால் எப்போ குணமாகும்; எத்தனை நாட்கள் ஓய்வு தேவை. என் கேள்விகள் அவர் காதில் விழவில்லை. குழந்தைக் குழறலுடன் சொன்னார், “உங்கள் எலும்புகள் மிகவும் மெலிந்து உள்ளன. ஏன் இப்படியே ஓய்வெடுக்காமல் நடந்து வந்துள்ளீர்கள்?”
“உங்களை பார்க்கத்தான் டாக்டர்”
“உங்கள் கால் எலும்புகள் wafers போல் உள்ளன. எளிதில் நொறுங்கி விடும்”. தொடர்ந்து அவர் ஒரு நீண்ட விளக்கம் அளித்தார். எனது தீர்க்க முடியாத குறைகளைப் பற்றின அவ்வுரையை முடிந்த மட்டில் ஒரு அறிவியல் ஈடுபாட்டுடன் சிரமப்பட்டு கேட்டேன். ஆனால் என்னை முழுக்க ஆட்கொண்டிருந்தது ஒரு வியப்புணர்வு: அவரது உவமை அல்லது அலாதியான கற்பனை குறித்து. குழந்தையாய் இருக்கையில் wafers பிஸ்கட்டை நிறையவே சுவைத்திருக்கிறேன். வாயில் இட்டால் கரையும் படி அத்தனை மெல்லிசாக, உட்துளைகள் கொண்டிருக்கும். நானும் அக்காவும் அதற்காக கட்டிப் புரண்டிருக்கிறோம். உடல் உறுப்பை பிஸ்கட்டோடு ஒப்பிடும் அம்மனநிலை எப்படியானதாக இருக்கும்? அடுத்த முறை கால் எப்படி முறிந்தது என்ற கேள்விக்கு பதிலளிக்க ஒரு வார்த்தை கிடைத்து விட்டது. அவர்களுக்கு நிச்சயம் புரியும்!

Read More

Friday 18 December 2009

ஏமி லவல் கவிதை மற்றும் வாழ்க்கை குறிப்பு

ஒரு புயலுக்குப் பின்



நீ பனிக்கட்டி மரங்களுக்கு கீழ் நடக்கிறாய்.
நீ செல்வதை அலங்கரிக்க
அவை தள்ளாடி, விரிசலிட்டு
தங்களை அபாரமாய் வளைக்கின்றன.
உனக்கு முன்
அவற்றை வண்ணத்துக்குள் சுண்டுகிறான் வெண்சூரியன்.
அவை நீலம்,
மேலும் மங்கலான ஊதா
மேலும் மரகதப் பச்சை.
அவை மஞ்சள்-பழுப்பு,
ஒளிர்பச்சை,
மேலும் கோமேதகம்.
அவை வெள்ளியால் பின்னப்பட்டு சுடரும்.
திடுக்கிட்டதால் நிச்சலனமாகி,
கொத்தாகி, சிம்புகளாகி, பன்னிறம் பெறும்.
நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
பளீர்பனி நீ நடக்க கிறீச்சிடும்.
என் நாய்கள் உன் மேல் தாவி குதிக்கும்,
அவற்றின் குரைப்பு காற்றைத் தாக்கும்
உலோகம் மேல் கூரிய சுத்தியல் அறைதல்களாய்.
நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
ஆனால் நீ பனிக்கட்டி பூக்களை விட அதிகம் ஜொலிக்கிறாய்
எனக்கு நாய்களின் குரைப்பு உன் அமைதியை விட
ஒன்றும் சத்தமாயில்லை.

நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
காலை பத்து மணிக்கு.


ஏமி லவல் (1874-1925) சிறுகுறிப்பு



ஏமி லவல் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அமெரிக்க படிமக் கவிஞர். எஸ்ரா பவுண்டுடன் இணைந்து ஒரு புரவலராகவும் எழுத்தாளராகவும் படிம இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். லவல் ஓரினச்சேர்க்கையாளர். ஆடா டிவைர் ரசல் எனும் நடிகையுடனான உறவு இவரது “Pictures of the Floating World” தொகுப்பில் உள்ள பிரபலமான காமக் கவிதைகளுக்கு தூண்டுதலாக அமைந்தது. லவல் குள்ளமானவர். சுரப்பிக் கோளாறால் வாழ் நாளெல்லாம் மிகப்பருமனாக தோற்றமளித்தார். கவிஞர் விட்டர் பைனர் மற்றும் எஸ்ரா பவுண்ட் இவரை காண்டாமிருகக் கவிஞர் என்று அழைத்தது இலக்கிய வரலாற்றின் மிக குரூரமான கேலி என்று கருதப்படுகிறது. லவல் தனிப்பட்ட உரையாடல்களில் பெண்ணியவாதத்தை மறுத்தவர். இறந்த ஒரு வருடத்தில் இவருக்கு புலிட்சர் விருது “What’s O’Clock” என்ற தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டது.
Read More

Thursday 17 December 2009

ஜார்ஜ் சிர்ட்டெஷ் கவிதைகள்: 3

இறந்த குழந்தைகள் (கேனெட்டிக்கு பிறகு)



அவர்களுக்கிடையே ஏறத்தாழ சுத்தமாக ஒன்றுமே இல்லை. மனிதக்குரங்கு
தன் மரித்த குட்டியை பேணுகிறது ஏதோ உயிருடன் உள்ளது போல்,
அதன் அசைவற்ற மென்மயிர் உருவை மிருதுவாக கவனமாய் ஏந்துகிறது;
கீழே விட மறுக்கிறது. உடனடிக் கடமை அதுவே; கட்டாயம் ஆற்ற வேண்டும். அது கண்கள், வாய், மூக்கு
மற்றும் காதுகளை பரிசோதிக்கிறது, குட்டிக்கு
முலை கொடுக்க முயல்கிறது. அதை பராமரிக்கிறது. கிள்ளி அகற்றி சுத்திகரிக்க பார்க்கிறது. ஒரு வாரம் போல் கழிய
முலையூட்டுவதை நிறுத்தும் ஆனால் அதன் உடலில் வந்தமரும் பூச்சிகளை வீசி அடிக்கும் மேலும் அதன் சுகாதாரம் மீது ஆழமான ஆர்வம் காட்டும். முடிவில்
அதை கீழே வைக்க ஆரம்பிக்கும், அதை விட்டு விட கற்கும்.

அது சுருங்கி காய ஆரம்பிக்கும் மேலும் பயங்கரமாக நாறத் துவங்கும்.
உறுப்புகள் ஒவ்வொன்றாய் உதிர்வது வரை
அவ்வப்போது அது தோலில் கடிக்கும். சிறிதுசிறிதாக

அது அழுகும். தோல் கூட சுருங்க ஆரம்பிக்கும்.
கடைசியில் தன் மனதின் பின்னணியில் அது புரிந்து கொள்ளும்.
அது மென்மயிர் பொருட்களுடன் விளையாடும். ஒரு நுட்பமான

சுதாரிப்பு உள்ளது. மரித்தவரின் பாத்திரங்களை திருப்பு.
கடந்த காலத்துக்கு திரும்பு. மறத்தல் நல்லது.
உன் சின்னங்சிறு கட்டிலில் திரும்பத் திரும்ப புரளு
உன் மனதின் பின்பகுதி புரிந்து கொள்ளும் வரையில்.

வெளியே



நீ நிறையவே மறக்கிறாய். நினைவு உதிர்ந்து போகும்,
அதன் பிசாசு உறுப்பு தொடர்ந்து ஆட. பலகையை சுத்தமாய் அழி ஒவ்வொரு முறையும், நேற்று என்பதே இல்லாதது போல் அழுத்தித் தேய்.

தனது உள்ளார்ந்த தொந்தரவு செய்யும் வாசனைகளுடன்
உன் அம்மா நகர்ந்து செல்கிறாள். நீ தரைக்கு குறுக்கே ஓடி,
உன் பளு பற்றி தெரிந்திருக்க, அவளது அவளது மடியில் ஒளிகிறாய்.

வெளியே கொலைத் தண்டனைகள், பொது-அரங்கு விசாரணைகள். அரசுக் குழுமத்தின் நடவடிக்கைகளுக்கு கதவு திறந்து கொள்ளும்.
உன்னால் கொடுக்க முடிந்ததை விட

அதிகம் வேண்டும் கூட்டங்கள் தெருக்களில் உள்ளன.
அங்கு ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. அங்கு ஒரு குச்சி
மற்றும் கெரட் உள்ளன. டிராக் சூட் அணிந்த ஒரு சிறுவன் தன் கழுத்துப் பட்டை வெட்டுக்குள் அழுது சளி வடிக்கிறான் மேலும் சற்று சீக்காய் உணர்கிறான்,

அதே நேரத்தில், இதனிடையே, காலம் மறந்து விட்ட நிலம்
பிரம்மாண்ட பூக்களாய் மலர்கிறது,
ஒரு வெக்கையான கோடை பிற்பகலில் பேருந்தில்

நீ கடந்து செல்லும் பெரும் வயல்கள், கனிந்த பொழுதுகள்
போப்பிப் பூக்கள், சோளம் மற்றும் கருநீல செர்ரிகளாக சிவப்பேறும் வாசம், லண்டன் புற நகர் ஒன்றில் ஒரு டஜன்

எந்திரப்புல்வெட்டிகளின் ஓசை, கடந்து போன மேய்ச்சல்வெளிகள்,
சுத்தமாக துடைத்து, திருப்பி எழுதப்பட்டு, எண்களோ பெயரோ அற்ற வயல்கள், உனக்கு ஒருக்காலும் தெரிந்திராத ஒரு அந்நிய இடம் போல,

உன்னால் சரிவர நினைவுற முடியாத அந்த சதை வாசனை.

Read More

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 7


இது போன்று மற்றொரு இரவின் போது, நாங்கள் சியனாகா கிராண்டேவைக் கடக்கையில் பாப்பலேலோ என்னை சிற்றறையில் தூங்க வைத்து விட்டு, மதுபான விடுதிக்கு சென்றார். அது என்ன நேரமென்று நினைவில்லை; சிற்றறையில் துரு பிடித்த மின்விசிறியின் பொம்மென்ற இரைச்சல் ஒலி மற்றும் உலோகப் பட்டிகைகள் மோதி கலகலக்கும் ஒலிக்கும் மத்தியில் நான் கும்பல் ஒன்றின் கூச்சல் கூப்பாடுகள் கேட்டு எழுந்தேன். எனக்கு அப்போது வயது ஐந்துக்கு மேல் இருக்காது; ரொம்பவே பயந்து போய் விட்டேன். ஆனால் அக்கூச்சல் விரைவிலே அடங்கிவிட, நான் அதுவொரு கனவு என்று நினைத்தேன். காலையில் மதகுடை கலத்துறையில் நாங்கள் இருந்த போது, தாத்தா தன் நேர் சவரக்கத்தியுடன் நின்று சவரம் செய்து கொண்டிருந்தார், கதவு திறந்திருந்தது; சட்டத்திலிருந்து கண்ணாடி தொங்கிக் கொண்டிருந்தது துல்லியமாக நினைவுள்ளது. அவர் அப்போதும் சட்டை போட்டிருக்கவில்லை. ஆனால் உட்சட்டைக்கு மேல் அகலமான பச்சை நேர்கோடுகள் கொண்ட நிரந்தர தொய்வு வார்களை அணிந்திருந்தார். இப்போதும் கூட என்னால் பார்த்த உடனே அடையாளம் காண இயலும் நபர் ஒருவருடன் அவர் சவரம் செய்தபடி விடாமல் பேசினார். அப்படியே காகத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தை கொண்டிருந்த அவர் வலக்கையில் மாலுமியின் பச்சை குத்தியிருந்தார்; மேலும் அவர் கழுத்தை சுற்றி பல கெட்டியான தங்க மாலைகளும், இரு மணிக்கட்டுகளிலும் தங்க கையணி மற்றும் வளையல்களும் அணிந்திருந்தார். நான் ஆடைகள் அணிந்து பூட்ஸ் போட்டு படுக்கையில் அமர்ந்திருக்கும் போது, அந்த மனிதர் என் தாத்தாவிடம் சொன்னார், "கொஞ்சமும் சந்தேகமில்லை கர்னல், அவர்கள் விரும்பியதெல்லாம் உங்களை தண்ணீருக்குள் வீசவே"
தாத்தா புன்னகைத்தார்; சவரத்தை நிறுத்தாமலேயே தனக்கே உரித்தான இறுமாப்புடன் பதிலிறுத்தார், "அதுக்கு முயலாதது அவர்களுக்கு நல்லதாகப் போச்சு"


இரவின் ஆரவாரத்தின் பொருள் எனக்கு அப்போது விளங்கியது; தாத்தாவை யாரேனும் சதுப்பில் தூக்கி வீசியிருப்பார்கள் என்று எண்ணிட எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அம்மாவுடன் வீட்டை விற்க சென்று, சூரியனின் முதல் கதிர்களில் சியாராவின் பனி நீலமாய் ஒளிர்வதை சிந்தித்துக் கொண்டிருந்த அந்த விடிகறையில் இந்த விளக்கப்படாத நினைவெழுப்பல் படலம் என்னை திடுக்கிட வைத்தது; கால்வாய்களில் நேர்ந்த தாமதம் காரணமாய் சதுப்பு நிலத்திலிருந்து கடலை பிரிக்கும் பிரகாசமான மணற்துண்டை காண நேர்ந்தது; அங்கு வெயில் காய்வதற்கு வலைகள் விரிக்கப்பட்டு, மெலிந்து, அழுக்கான சிறார்கள் கந்தல் துணிப்பந்தால் சாக்கர் ஆடும் மீனவ கிராமங்கள் தெரிந்தன. வெடிமருந்து குச்சிகளை சற்று தாமதித்து வீசியதால் கைகள் தூண்டிக்கப்பட்டு தெருக்களில் திரிந்த மீனவர்களின் எண்ணிக்கை திகைக்க வைத்தது. கப்பல் கடந்திடும் போது பயணிகள் சுண்டி விடும் நாணயங்களுக்காக சிறுவர்கள் பாயத் துவங்கினர்.
சியனாகோ நகரத்தில் இருந்து சற்று தொலைவில் கொள்ளை நோய் விளைவிக்கும் சதுப்பு நிலமொன்றில் நங்கூரம் இறக்கிய போது மணி ஏறத்தாழ ஏழு இருக்கும். சுமைதூக்கிகளின் குழுக்கள் முட்டியளவு சேற்றில் மூழ்கி எங்களை தோள்களில் தூக்கியபடி, விவரிப்புக்கு அப்பாற்பட்ட, சேற்றில் போட்டியிடும் வான்கோழி பருந்துகளிடையே நீரை வாரியடித்தபடி, எங்களை செயற்கை துறைமுகத்துக்கு கொண்டு சேர்த்தனர். நாங்கள் துறைமுகத்தில் மேஜைக்கு பின்னே அமர்ந்தபடி சுவைமிக்க சதுப்பு நில மேஜோரா மீன் மற்றும் பொரித்த பச்சை வாழைக்காய் துண்டுகளால் ஆன சிற்றுண்டியை சாவகாசமாக சாப்பிட்டோம்; அப்போது அம்மா தன் தனிப்பட்ட போர்த்தாக்குதலை தொடர்ந்தாள்.


"சரி, கடைசியாக சொல்", அவள் தலை நிமிராமலேயே சொன்னாள், "நான் உன் அப்பாவிடம் என்ன சொல்லட்டும்?"
யோசிக்க சற்று நேரம் எடுத்துக் கொள்ள முயன்றேன்.
"எதை பற்றி?"
"அவருக்கு வேண்டிய ஒரே விஷயத்தை பற்றி", அவள் சற்று எரிச்சலுடன் சொன்னாள், "உன் படிப்பு"
என் அதிர்ஷ்டத்துக்கு பக்கத்தில் உணவருந்தும் அடக்கமற்ற ஒருவர் எங்கள் உரையாடலின் தீவிரத்தன்மையால் தூண்டப்பட்டு என் காரணங்களை அறிய விழைந்தார். அம்மாவின் உடனடி பதில் என்னை அச்சுறுத்துவதோடு அல்லாமல் ஆச்சரியப்படுத்தவும் செய்தது;அவள் தன் தனிப்பட்ட வாழ்க்கையை பொறாமையுடன் பாதுகாத்து வருபவள் என்பதே காரணம்.
"அவனுக்கு எழுத்தாளன் ஆக வேண்டுமாம்", அவள் சொன்னாள்.
"ஒரு நல்ல எழுத்தாளனால் நன்றாக சம்பாதிக்க முடியும்", அந்த நபர் முழுத்தீவிரத்துடன் படிலளித்தார், "எல்லாவற்றையும் விட முக்கியமாக, இவன் அரசில் அந்த பணி செய்யும் பட்சத்தில்"
அவளது புத்தி சாதுர்யத்தாலோ அல்லது இந்த எதிர்பாராது இடை-புகுந்தவர் வழங்கின தர்க்கங்களை கண்டு அஞ்சியோ அம்மா விவாதப் பொருளை மாற்றினாள்;ஆனால் அதன் விளைவாக இருவரும் என் தலைமுறையின் எதிர்பாராத தன்மை குறித்து தங்களுக்குள் இரக்கப்பட்டு, தங்களது கடந்தகால ஏக்கநினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் இருவரும் பரிச்சயமானவர்களின் பெயர்களைத் தொடர்ந்து சென்று, தாம் இருவரும் கோட்ஸ் மற்றும் இகுவாரன் உறவுவழிகளில் இரட்டிப்பு சொந்தம் கொண்டவர்கள் என்பதை கண்டுபிடித்தனர். அந்நாட்களில் நாங்கள் கரீபியன் கடற்கரை ஓரமாய் சந்தித்த இரண்டு மூன்று நபர்களிடம் இவ்வாறு நிகழ்ந்தது, அம்மா இதை ஒரு அற்புத நிகழ்வாய் எப்போதும் கொண்டாடினாள்.

Read More

Wednesday 16 December 2009

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது.

ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை.

பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம்.

அன்றாட மொழியில் ஒன்று மற்றொன்றாகும் ஜாலம் பிரயத்தனமின்றி நிகழ்கிறது. உதாரணமாக, “அந்த பொண் ஓடிப் போயிட்டா”. இங்கு ஒரு பயணம் உள்ளதை அது வேறு பொருள் கொள்வதை கவனியுங்கள். இது போன்ற எண்ணற்ற பயண பிரயோகங்கள் நம் மொழியில் உள்ளன. இவற்றை செய்ய தேவையான பொருட்கள்? பொதுவாக, வினைச்சொற்தொடர், முன்னிடைச் சொற்தொடர், வினையடைகள் ஆகியன. இங்கு நாம் வினைத்தொடரை பிரத்யேகமாய் கவனிக்க போகிறோம். வினைத்தொடருக்கு வினைச்சொல் தான் அஸ்திவாரம். இதை முழுமை அடையாத ஒரு சொற்றொடர் எனலாம். முழுமையான ஒரு சொற்றொடரில் ஒட்டிக் கொண்டு வினையை சித்திரப்படுத்த பயன்படும் துண்டுதுக்கடா. துப்பட்டா போல் ஒரு வாக்கியத்தின் தலை, கழுத்து, தோள், இடுப்பு என பல இடங்களில் இது அலங்கரிக்கும். உதாரணமாக, “வாரி சுருட்டிக் கொண்டு வீரப்பன் ஓடினான்” என்பதில் முக்காடாக வருகிறது.

படைப்பு மொழியில் இந்த பிரயோகங்கள் பரிச்சயமறச் செய்யப்பட்டு (defamiliarise) பொருளாழம் பெறுகின்றன. இதனால் நேரடி மொழியில் போலன்றி ஒரு காட்சிபூர்வ தன்மையை இவை அடைகின்றன. படிமம் ஆகின்றன். இத்தகைய படிமத்தை பயணப் படிமம் என்கிறோம்.

ஒரு பிரபலமான, சற்று பழைய, திரைப்பட பாடல் வரியில் இருந்து நாம் இந்த பயணப் படிமத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். ”நண்டு” படத்தில் இருந்து “அள்ளித் தந்த வானம் அன்னை அல்லவா ...”

“தாயன்பைப் போல் தாராளமாய் மழை பொழியும் வானம்” என்பதற்கும் “அள்ளித் தந்த ... “ வினைத்தொடருக்குமான வித்தியாசம் என்ன? முதல் சொற்றொடரில் ஒரு மனச்சித்திரம் இல்லை. தட்டையாக ஒற்றைப் பொருளுடன் முடிகிறது: வான் கொடை. ஆனால் இரண்டாவது தொடர் வானம் தன் கைகளால் பூமிக்கு அள்ளித் தரும் அருமையான சித்திரத்தை அளிக்கிறது. இதிலுள்ள ஒப்பீட்டை களைந்து ஒரு தனித்த படிமமாக நாம் விரித்தெடுக்க முடியும். ஒரு அலாதியான அனுபவமாக இது அமைகிறது. சரி இங்குள்ள பயணம் என்ன? மழை வானிலிருந்து புறப்பட்டு பூமிக்கு வருவது. வருகை எனும் அருவ செயலை உருவப் படுத்துவது மழை. வினையின் உருவமாக அமைவதால் இதனை வினைகடத்தி (trajector) எனலாம். இயற்கை எய்யும் ஒரு அம்பாக மழையை (வினைகடத்தி) கற்பியுங்கள். இலக்கு பூமி. இந்த இலக்கை நிலக்குறி எனலாம் (land mark). இந்த மொழியியல் சமாச்சாரத்தை தெளிவாக விளக்க இந்த பதங்கள் அவசியம். மற்றொரு நடைமுறை உதாரணம்.

“தாத்தா போய் சேர்ந்துட்டாரு!”

வினை - மரணம்
வினைகடத்தி – தாத்தா
நிலக்குறி – சொர்க்கம்

”செத்துட்டாரு” என்பதை விட ”பூட்டாரு” என்பதே அதிக வழக்கில் உள்ளது. இதற்கு காரணம் அந்த பயன்பாட்டில் உள்ள கவித்துவம் மற்றும் ஆன்மீக, புராணிக பொருளடுக்குகள். ஒவ்வொரு முறை பூட்டாரு எனும் போதும் நம்மை அறியாமல் ஆழ்மனதில் ஒரு மனிதன் பிரபஞ்ச சுழற்சியில் ஓரு சுற்று போய் கலந்து விடுவதை நினைத்துக் கொள்கிறோம். நீர்க்குமிழியில் வானவில் போல் மிகச்சுருக்கமாய் மற்றும் காட்சிபூர்வமாய் ஆழமான பொருள் தளங்களுக்குள் போக முடிவதாலே நாம் இத்தகைய பயணப் படிமங்களை விருப்பத்துடன் பயன்படுத்துகிறோம். காக்னிடிவ் பொயடிக்ஸில் இதனை இமேஞ் ஸ்கீமா (image schema) என்கிறார்கள்.

உலகுடனான நமது உடல்சார் உறவாடலை பிரதிநுத்துவப்படுத்தும் ஒரு மனச்சித்திரம் என பயணப் படிமத்தை அழைக்கலாம். இந்த சித்திரங்கள் சார்ந்து நம் சமூக கூட்டு மனத்தில் ஒரு ஒருங்கிணைவு உள்ளதாலே இவற்றை பயன்படுத்தி தொடர்புபடுத்த முடிகிறது. நாம் அனைவருக்குமான மனவார்ப்புகள் இவை. பிரயாணம், உள்ளே-வெளியே, மேலே-கீழே, கொள்கலன் என நம் நரம்பணுக்குள் எத்தனையோ வார்ப்புகள். இந்த அச்சுகளில் பிறந்த பல இலக்கிய தலைப்புகள் வசீகரமானவை.

“யாரும் கர்னலுக்கு கடிதம் எழுதுவதில்லை” (கார்சியா மார்க்வெஸ்) என்ற நாவல் தலைப்பில் (நிலக்குறியை) சென்று சேராத கடிதங்களின் பயணம் உள்ளது. “என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” என்ற ம.புவின் தொகுப்பின் தலைப்பில் “கொள்கலன்” படிமம் உள்ளது. கென் கெஸ்ஸே என்பவரின் பிரபல நாவல் One Flew Over the Cuckoo’s Nest (குயிலின் கூட்டுக்கு மீதாக ஒன்று பறந்து சென்றது) என்ற காட்சிபூர்வ தலைப்பில் பறவை ஓரிடத்தில் இருந்து கிளம்பி, கூட்டுக்கு மீதாக பறந்து, மற்றோர் இடத்தை அடையும் காட்சி கிடைக்கிறது. இவ்விசயத்தை மேலும் நுட்பமாக அலச ”காலை வணக்கங்கள்” கவிதைக்கு வருவோம்.



“இன்றைய விழிப்பு
உன்னை நினைத்துக் கொள்வதோடு
தொடங்குகிறது

இன்று பறவைகளுக்கு முன்னதாக விழித்து
வெளிச்சத்துக்காக காத்திருக்கிறேன்

எனது உலோகங்களை தொட்டுப்பார்
அவை நெகிழ்ந்து கிடக்கின்றன

எனது கட்டுமானங்களின்
விரிசல்களில் நீர் கசிந்து கொண்டிருக்கிறது

உன் அன்பை பற்றிய
சந்தேகங்களுக்கு
இன்று எந்த தேவையும் இருக்கவில்லை
அவை சந்தேகங்கள் கூட அல்ல
எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும்
நிரந்தரமின்மையின் அவலம்

உன்னை நினைத்துக் கொள்ளும்
இந்த சன்னமான வெளிச்சத்தில்
அந்த பயங்களும் எங்கோ மங்கி விட்டிருக்கின்றன

நான் எழுந்து கொள்ளத்தான் வேண்டுமா
இவ்வளவு லேசான காலையிலிருந்து

பிறகு உன்னிடம் வரும்போது
நான் கொண்டு வருவது
ஒரு பஞ்சு நீரில் நனைந்தது போல
கனத்த ஒரு பொழுதாகியிருக்கும்”


முதல் வரி முக்கியமானது. இங்கு ”விழிப்பு” பிரக்ஞைபூர்வ அரசியல் விழிப்பு அல்ல. முன்பிரக்ஞை விழிப்பு. வெளிச்சத்துக்கு முந்தைய விடியல். நிரந்தரமின்மையின் பயங்கள் கலைந்து போகும் கவிதாபூர்வ, “சன்னமான” ஒளி கொண்ட மனநிலை. ஒரு திசைகாட்டியுடன் மேலும் நகர்வோம்: காலத்தின் வெளியில் மனம் கொள்ளும் பயணம் குறித்தான பயங்கள் கொண்டது இக்கவிதை.


இந்த கவிதை பேசும் நிகழ்வை மூன்று நிலைகளாக பிரிக்கலாம். அதாவது மூன்று பயணங்களாக.

1. முந்தைய கனத்த பகலில் இருந்து இன்றைய முன்காலை வரையிலான பயணம். எல்லையற்ற அன்பின், உஷாரற்ற பிரியத்தின் மனவாசலில் வந்து முடியும் விழிப்பு யாத்திரை. (இந்த யாத்திரை ஒரு சுழல் என்பதை கடைசி பயணப்படிமம் சொல்லும்.) வினைகடத்தி – விழிப்பு மனநிலை. இலக்கு – முன்காலை. “பறவைகளுக்கு முன்னதாக” என்பதில் பறவைகளின், அதாவது பிரக்ஞையின், முடிவுறாத பயணம் உள்ளது. நெகிழ்ந்து கிடக்கும் உலோகங்கள் மற்றும் கசிவுறும் கட்டுமானங்கள் இப்பயணத்தை மேலும் பேசும் உருவகங்கள். முதல் உருவகமே ஒரு வினைகடத்தி. இது திடநிலையில் இருந்து பயணித்து நெகிழ்ச்சி எனும் நிலக்குறியை அடைகிறது. இறுக்கத்தில் இருந்து கட்டுமானங்கள் விரிசலுற்று பிரியத்தின் “நீர்மையை” அடைகின்றன.



2. அடுத்தது ஒரு அ-பயணம். இது இம்மனநிலையில் உறைவதில் நிகழ்கிறது. ஒருவித mindfulness. கவிதையில் இது “ நினைத்தலாக” குறிக்கப்படுகிறது. இதனை மேலும் புரிய பஞ்சு என்கிற இறுதி உவமையுடன் தொடர்புறுத்த வேண்டும். அதாவது, ஈரம் உலர்ந்த பஞ்சின் இலக்கு பற்றின பதற்றமற்ற பறந்து திரிதலாக நாம் இந்த அ-பயணத்தை கற்பனை செய்யலாம். சுருக்கமாக, சாஸ்வதம்.
3. மூன்றாவது “இவ்வளவு லேசான காலையிலிருந்து” ”நினைத்தலில்” இருந்து “எழுதல்”. பிரக்ஞையால் தட்டி எழுப்பப்பட காலம் (லேசான காலை) ”கனத்த ... பொழுதாகிறது”. முதல் பயணப் படிமம் திட நிலையில் இருந்து லகுவாவது எனில் இது நேர்மாறானது. விட்டு விடுதலை நிலையில் இருந்து இறுக்கத்துக்கு திரும்புகிறது. வினைகடத்தி – முன்பிரக்ஞை. நிலக்குறி – பிரக்ஞை. இதற்கு ஆழம் சேர்க்க மற்றொரு உவமை தொடர்கிறது: நனைந்து கனத்த பஞ்சு. இங்கு இரண்டு விசயங்கள் கவனிக்க வேண்டும். கனம் பஞ்சின் இயல்பான நிலை அல்ல. உலர்ந்ததும் அது கட்டறுந்து காலத்தில் மிதந்து தங்கும் ஒரு பயணத்தை தொடரப் போகிறது. மிக சமர்த்தான ஒரு உவமை பயன்பாடு இது. ஏனெனில் கவிதை இங்கிருந்து மீண்டும் விட்ட இடத்தில் தொடர்கிறது. அடுத்து நீர் எனும் சொல்லின் இருவிதமான பயன்பாடு. “நெகிழ்ச்சி” “கனம்” ஆகிய இரு முரண் நிலைகளுக்கு நீர்மை பயன்படுத்தப்படுகிறது. இந்த முரணை முன்கொண்டு உங்கள் கற்பனை அலாதியாக விரிந்து செல்லலாம்.




இக்கவிதையில் பயண மற்றும் அ-பயண படிமங்களின் சந்திப்பு தான் மிகப்பெரும் திறப்பை ஏற்படுத்துகிறது. காக்னிடிவ் பொயடிக்ஸ் கவிதையில் இத்தகையை நுண்-முரண் அமைப்புகளை கவனிக்க சொல்கிறது. குறிப்புணர்த்தப்படும், காலச்சுழலில் நனைந்த பஞ்சின் பயண மீட்சி மனிதனின் மீட்சி என்ற பார்வையில் இருந்து மறுவாசிப்பையும் நிகழ்த்தலாம்.

உங்கள் நுண்பேசி படக்கருவியை தயாரித்தபடி மேலும் பல கவிதைகளுள், பிரதிகளுள் நுழையுங்கள். பதிவாகும் தரிசனங்களை எனக்கு எழுதுங்கள். இது ஒரு விவாதத்துக்கான தொடக்கப் புள்ளி ஆகட்டும்.

abilashchandran70@gmail.com
Read More

Saturday 12 December 2009

கல்லூரி ஆசிரியர்களுக்கு அதிக பணி: எதிர்வினையும் பதிலும்

கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியத்துக்கு ஏற்ப அதிக பணி தர வேண்டும் என்ற என் பரிந்துரையை கண்டித்து ஐந்து வருடங்களுக்கு மேலாக விரிவுரையாளராக பணி புரிந்து வரும் சாமுவல் ஜான்சன் எதிர்வினை எழுதியுள்ளார்.

ஜான்சனின் ஆங்கில எதிர்வினையின் தேர்ந்தெடுத்த் பகுதிகளின் மொழியாக்கம்:

வணக்கம் அபிலாஷ்,

இன்று ஒரு அரசு கால்நடை மருத்துவரை சந்திக்க நேர்ந்தது; அவளுக்கு ஒரு வருடத்துக்கு முன் வேலை கிடைத்தது; வேலை பிடித்துள்ளது என்றும், காலை எட்டில் இருந்து பன்னிரண்டு வரை வெறும் நாலு மணி நேரங்களே வேலை செய்வதாய் அவள் பெருமையுடன் அறிவித்தாள். அவள் ஊதியம் கல்லூரி ஆசிரியர்களின் ஊதியத்துக்கு சமமானதே. அவர்களுடைய பல உதவித் தொகைகளும் சேர்த்தால் மொத்த சம்பளம் கல்லூரி ஆசிரியர்களின் உடையதை விட பத்தாயிரம் அதிகம். சில வாரங்களுக்கு முன் ... இளங்கலை பட்டம் முடித்த ஒரு வேளாண்மை அதிகாரியை சந்தித்தேன். அவரது ஊதியம் ஏறத்தாழ கல்லூரி ஆசியர்களின் உடையதைப் போன்றதே. ஆனால் பகட்டாய் ஆடையுடுத்தி ஆசனம் அலங்கரிப்பதன்றி வேறு வேலை இல்லை. அரிதாகவே மண் சோதனைக்கு வரும்; அவள் தன் உதவியாளர்களை பணித்து வேலை வாங்கி, தரவுகளை அனுப்பி விடுவாள்.



காவல் மற்றும் மின்வாரியத் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு கண்ட நேரங்களில் அலையும் தொல்லை இருக்கும்; பணிச்சுமை மற்றபடி அனைத்து அரசுத் துறைகளிலும் இப்படித்தான். தனியார் நிறுவனங்களிலும் படிநிலையில் உயர்ந்திட நிலைமை இதுவே. தொழிலாளர்கள் மட்டுமே குறைந்த ஊதியத்துக்கு போராடுவது; அதிகாரிகளின் வாழ்வு வேறு. மும்பையில் ஒரு முன்னணி நிறுவன அலுவலகத்தில் என் தம்பியை காண சென்றேன். அங்கு ஊழியர்கள் சதா அரட்டை அடித்தபடி இருந்தனர். அவர்களின் ஊதியம் அறிய எனக்கு அதிர்ச்சியாகியது: மாதம் ஒன்றரை லட்சம். சிலர் மாதம் மூன்று லட்சத்துக்கு மேல் வாங்கினர். தொழிலாளர்களின் பால் அவர்கள் இரக்கம் கொள்ளாமல் இருப்பதற்கே அவர்களுக்கு காசு தரப்படுகிறது. கடிவாளத்தில் இருந்து கீழே பார்த்தபடி இவர்கள் கல்வியறிவற்ற உழைப்பாளிகளிடம் கொடூரமான முறைகளில் வேலை வாங்க திட்டமிடுகிறார்கள் ... மென்பொருள் துறையில் பணிசெய்யும் என் பள்ளி நண்பர்கள் அங்கு அவர்களுக்கு வெளியில் அறியப்படுவது போன்ற வேலை ஒன்றும் இல்லை என்கிறார்கள். பெரும்பாலும் அலுவலகத்துக்கு தாமதமாக சென்று வெறுமனே அரட்டையடிக்கிறார்கள். புராஜக்ட் முடிக்கும் கடைசி நாள் நெருங்கும் போது மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே இரவு பகல் உழைப்பு. இவர்கள் எல்லாம் சமூகத்தட்டின் உச்சத்தில் உள்ளவர்கள் ... உழைப்பாளர்களுக்கு வேலை நரகமே.

கல்லுரி ஆசிரியர்களை உயர்வர்க்கம் என்று கருதலாமா?

கருத்துக்களை முதலாளிகள் தேர்ந்து முன்னிறுத்த, ஆசிரியர்கள் செயலாக்குகிறார்கள். கால்சென்டர்கள் மற்றும் பி.பி.ஓக்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு முன் யு.ஜி.சி இ.எல்.டி கருத்தரங்குகளுக்கு பணம் செலவிடுவதில் ஆர்வம் கொண்டிருந்தது; இப்போது அது பழங்குடி இலக்கியம் மற்றும் சூழலியல் சார்ந்த கருத்தரங்குகள் நடத்த ஆர்வம் காட்டுகிறது. தனது அடித்தளத்தை பழங்குடிகளின் இருப்பிடம் மீது விரிவுபடுத்த முத்லாளித்துவம் கண் வைக்கும் தளங்கள் இவையே. ஆக, முதலாளித்துவ திட்டப் பட்டியலுடன் ஒரு கல்லூரி ஆசிரியருக்கு நிறையவே தொடர்புண்டு.

இளைய மனங்கள் ஆசிரியர்களாலே செதுக்கப்படுதால், இந்தியா ஒரு வல்லரசு, இந்தியா ஒளிவிடுகிறது என்றெல்லாம் சொல்லித் தர அவர்களுக்கு அதிக பணம் தரப்பட வேண்டியதாகிறது. மாணவர்களுக்கு வலியும் துயரமும் சொல்லிதரல் ஆகாது; ஏனெனில் கல்வி உற்சாகமான ஊழியர்களை உருவாக்க வேண்டுமே.

சமீபமாக மிகச்சிலரே கல்லூரி ஆசிரியப் பணிக்கு வர விரும்புகிறார்கள். சிறந்த மாணவர்கள் வேறு துறைக்கு போய் விடுகிறார்கள். இதனால் கல்லூரி ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவது ஒரு கட்டாயம் ஆகி விட்டது.

கல்வி வளாகத்துள் நடைபெறும் பெரும்பாலான பாலியல் வன்முறைக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியமே காரணம். ஒழுக்கம் பணக்கார மத்திய வர்க்கங்களுடன் தொடர்புடையது; நன்றாக ஊதியம் நல்குவது அற நெறிகளை தொடர்ந்து பேச மற்றும் ஒழுக்கத்தை தக்க வைக்க அவசியம்.

பள்ளி ஆசிரியர்களுக்கு தொடக்க ஊதியமாக 20,000 வழங்கப்பட கல்லூரி ஆசிரியர்களுக்கு தொடக்க ஊதியமாக தரப்படும் 28,000 மிகச்சற்றே அதிகம். நான் ஆரம்பத்தில் கூறின துறைகளுக்கு ஒப்பாகவே நமது கல்வித்துறைக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இதை அதிகம் என்று நாம் கூற முடியாது.

ஆனாலும், எப்படியோ ஆசிரியப் பணிக்கு அதிக ஊதியம் தரப்படுவதாக முன்வைக்கப்படுகிறது ... பணிச்சுமையை அதிகரிக்க நீங்கள் வைக்கும் பரிந்துரை ச்ற்று அபத்தமாக உள்ளது; ஏனெனில் மனிதர்கள் ஊழியர்களோ எந்திரங்களோ அல்லர். அறிவியல் வளர மனிதன் ஒப்பிடுகையில் அதிக ஓய்வு பெற வேண்டும். 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு மனிதன் 8 மணிநெரம் உழைக்க வெண்டும் எனில், அறிவியல் பெற்றுள்ள வளர்ச்சியை கணக்கில் கொள்கையில் அவன் இப்போது 4 மணிநேரங்களே உழைக்க வேண்டும். ஆக எல்லோருக்கும் உழைப்பில் இருந்து இந்த விடுதலை கிடைக்க வில்லை. ஒரு பணக்கார நாடு தன் குடிகளுக்கு அவர்கள் குடும்பத்துடன் கழிக்க மற்றும் கேளிக்கைகளில் ஈடுபட மேலும் அதிக ஓய்வு நேரம் அளிக்க வேண்டும்.



இனி என் பதில்:

அன்புள்ள ஜான்சனுக்கு

உங்கள் தர்க்கங்கள் இந்த விவாதத்தின் மற்றொரு பக்கத்தை காட்டுகின்றன. குறிப்பாய் ஒரு சிவப்பு கண்ணோட்டத்தில் சில அவதானிப்புகளையும் உங்கள் அனுபவம் சார்ந்து பிறவும் சொல்லி உள்ளீர்கள். நாம் வாழ்வது ஒரு சூட்சுமமான முதலாளித்துவ சமூகத்தில் என்று நம்புகிறேன். முதலாளித்துவ கரத்தை தொட்டுக் காட்டியுள்ளது முக்கியமானதே.

முதலாளித்துவ தேவைகள் மட்டுமே சமூக இயக்கத்தை தீர்மானிப்பதில்லை. சமூக-முதலாளித்துவ சமரசப் புள்ளி ஒன்றுள்ளது. அங்கிருந்தே நான் பேசுகிறேன்.

சமூகத்தின் பொருள் மற்றும் ஆற்றல் வளம் எப்படி யாரால் வீணடிக்கப்படாலும் தவறே. அரசு மற்றும் தனியார் துறைகளில் உலகம் பூரா இது நடைபெறக் கூடும். தொடர்ந்த கண்டனமும் அறிவார்ந்த விவாதமும் இந்த வீணடிப்பை நோக்கின எதிர்குரல். இதோ நீங்களும் நானும் பேசிக் கொள்வது தொடர்ந்து சிலரை சிந்திக்க பேச எழுத வைக்க செய்து ஒரு சிந்தனை சங்கிலியின் கண்ணியாகும். ஒரு முக்கிய வரலாற்று பொறுப்பு இது.

ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளின் செயல்பாட்டையும் அலசுவது சிரமம் என்பதாலே கல்லூரி ஆசிரியர்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட காழ்ப்போ சமூகத்தின் பொதுப்புத்தியில் இணைவதோ நோக்கமல்ல.


நாம் இன்னமும் பணக்கார நாடல்ல. ஒருபுறம் வீங்கின ஏழை நாடு. இங்கு, அதிக ஊதியம் போன்றே மக்கள் ஆற்றல் வீணடிப்பு குறித்தும் கவலை கொள்ள வேண்டியதாகிறது. 5 மணி நேர வேலை, கேளிக்கை மற்றும் ஓய்வு ஆகியவை இந்தியாவில் இன்றும் சொகுசு தான். மேலும் சொல்வதானால், அதிக ஊதியத்தை விட ஆற்றல் வீணடிப்பே பெரும் அநியாயம் என்று நம்புகிறேன். சமூக படிநிலையை தக்க வைக்க உச்சபடி நிலைக்காரர்களுக்கு அதிக ஊதியம் வசதிகள் தரப்படுகிறது என்ற கருத்தை முதலில் பேராசிரியர் செரியன் சொல்லித் தான் அறிந்தேன். அது உண்மையே. ஒருவித அவசியமும் கூட. இயற்கையில் நாய், குரங்கு போன்ற விலங்கு சமூகங்களில் தலைமையிடத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அந்தஸ்து சமாச்சாரம் உள்ளது. ஆனால் கல்லூரி ஆசிரியர்களோ நீங்கள் குறிப்பிட்ட விலங்கியல் மருத்துவர்களோ மேலாண்மை வகுப்பல்ல.



கல்லூரி ஆசிரியர்களின் வேலை போதுமானதல்ல என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. அதனாலே அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆய்வரங்க தமாஷில் இவை மிகையான பாசாங்காக முடிந்து விடுகிறது. பெரும்பாலும் யாருக்கும் சொந்த அவதானிப்பு என்ற ஒன்று இக்கட்டுரைகளில் இருப்பதில்லை அல்லது உரைகளை நிகழ்த்த கருத்தரங்குகளில் நேரம் வாய்ப்பதில்லை. இதை விட செயலூக்கத்துடன் ஆசிரியர்களின் ஆற்றலை அவர்களது திறமை பொறுத்து செலுத்த வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. சுமைதூக்கிகளாக்க வேண்டாம். இது குறித்தே விரிவாக என் கட்டுரையில் எழுத விரும்புகிறேன். அதிக சம்பளத்தை பறிப்பது பற்றியல்ல. ஒரு அறிவார்ந்த தளத்தில் சமரசமின்றி கல்லூரி ஆசிரியர்களை எப்படி வேலை வாங்கலாம் என்று நினைக்கிறீர்கள்? இது குறித்து கட்டாயம் எழுதுங்கள்.

நீங்கள் சொல்வது போன்றே கல்லூரி ஆசிரியர்கள் ஒழுக்க வழிகாட்டிகளாக இருக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள். மத்திய, கீழ்மத்திய நபர்கள் கூட ஜோதியில் கலந்த பின் குறைவான ஊதியம் வழங்கப்பட்டாலும் சட்டமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்களாக, ஒழுக்கவாதிகளாக இருப்பதையே என் அனுபவத்தில் காண்கிறேன். முதலாளித்துவத்துடன் அல்லது பொதுப்புத்தியுடன் முரண்படுவர்களுக்கு வேறொரு பின்னணி இருக்கக் கூடும். சுருக்கமாக சொல்வதானால், அம்பியாக இருப்பதற்கு பொருளாதார வெகுமதி மட்டும் காரணமல்ல. குனிந்து போவது ஒரு மரபியல் கூறு, அது குழந்தைகளிடத்து கூட காணப்படுவது என்று சமீப ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பொருளாதார பலன் மட்டுமேயல்ல என்பதை கவனியுங்கள். முற்றிலும் இல்லை என்று சொல்லவில்லை.

மூன்று மாதங்களுக்கு முன் ஒரு வேலை நாளின் போது கல்லூரி வேலைக்கான நேர்முகத்துக்கு போயிருந்தேன். நூற்றுக்கு மேல் வந்திருந்தனர். இத்தனைக்கும் பிரபலமற்ற கல்லூரி. ஆழ்வார்பேட்டையில் ஒரு குட்டி அறையை மட்டுமே வாடகைக்கு எடுத்திருந்தார்கள். கூட்டம் வாசல் வரை தவம் கிடந்தது. பலரிடமும் விசாரித்ததில் சம்பளம் குறைவென்றாலும் வேலை எளிது, சச்சரவற்றது, அதனாலே வந்துள்ளதாய் தெரிவித்தார்கள். ஒருவர் 3500 ரூபாய்க்கு 5 வருடங்களாய் கல்லூரி நூலகராய் பணி செய்திருக்கிறார். சற்று அதிகமாக இங்கு கிடைத்தாலே போதும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. நான் எனது முந்தைய தனியார் நிறுவனத்தில் copyediting பணிக்காக ஒரு மாதம் ஹிந்துவில் விளம்பரம் கொடுத்து, கன்சல்டன்சிக்கு காசு கொடுத்து தேடியதில் 25 பேருக்கு மேல் வரவில்லை. அவர்களில் பலரும் பத்தாயிரம் ரூபாய் ஊதியத்தையே நிராகரிக்கிறார்கள். இதற்கு நான் மேற்சொன்ன பணி அதிகம் அறியப்படாத ஒன்று என்பது மட்டுமே காரணமல்ல. சொகுசுப் பணிக்காக ஒரு பெரும் கும்பலே காத்துக் கிடக்கிறது.

ஊதியத்தை அதிகப்படுத்துவதால் திறமையானவர்களை கல்லூரிக்குள் ஈர்க்க முடியுமா? இதற்கான பதில் எதிர்கால வரலாற்றிடமே உள்ளது. இது ஒரு கலாச்சாரம் சம்மந்தப்பட்ட விசயமுமே. ஆழமான நுண்-அறிவு விவாதம் நிகழ்த்தும், அறிவுத்துறைகளை போற்றும் சமூகத்தில் சிறந்த ஆசிரியர்கள் இயல்பாகவே தோன்றுவார்கள். கலாச்சார வறட்சி உள்ள பட்சத்தில் ஊதிய உயர்வு உதவாது. யு.ஜி.சி தேர்வு முறை இதை மேலும் அபத்தமாக்கிறது. ஒரு தகவல் வங்கி எப்படி ஒரு கூட்டத்தை தன் நாவன்மையால் கட்டிப் போட முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்கு ஒரு இயல்பான திறன் தேவையுள்ளது. யு.ஜி.சியில் தேர்வாகும் ஒரு திக்குவாயனின்\ உம்மணாமூஞ்சியின் \ ஸ்காட் கிறித்துவ கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியர் போன்ற பதற்ற நோய் கொண்டவரின் (கட்டுப்பாடிழந்து ஒரு வகுப்பில் “குண்ண” என்றார்) நிலை என்ன? ராணுவம், காவல்துறை போன்ற துறைகளில் சேர உடற்தகுதி அவசியமாக உள்ளது போல் ஆசிரியத் துறைக்கு பொதுமக்கள் மற்றும் அறிவுஜீவிகள் பார்வையாளராக பங்கேற்கும் (அறிவார்ந்த தளத்தில்) பேச்சுத் திறன் போட்டி வைத்தால் என்ன?

வாசிப்பு, ஆய்வு மற்றும் எழுத்தை தேடலாக கொண்டவர்கள் கல்லூரி பணியில் இருந்தாலும் சமூகத்துக்கு உபரியான பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால் அத்தகையோர் மிகச்சிறுபான்மையே. பெரும்பாலானோர் ஊதாரித்தனமாய் கழிக்கிறார்கள் அல்லது தனிப்பட்ட நலனுக்காக வியாபாரம் செய்கிறார்கள். இது குறித்து ராஜேஸ் எனும் நண்பர் விரிவாகவே எழுதியிருக்கிறார் (அக்கடிதத்தை அடுத்து பிரசுரிக்கிறேன்). இந்த பங்களிப்பே என் அக்கறை. இது போதுமான உழைப்பை கோராத பிற பணிகளில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், அவர்களை விமர்சிக்க மற்றும் மாற்றுவழி பரிந்துரைக்க எனக்கு போதிய அறிவு இல்லை. எனது சிறு வட்டத்துக்குள் இருந்து எட்டவே முயல்கிறேன்.
Read More

Sunday 6 December 2009

நித்தியகன்னி

அந்த பகுதியில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. முகத்தில் அப்பின மண்ணும், உலோகமும் கலந்த துகள்களை அழுத்தித் துடைத்தான். கண்கள் எரிந்தன. இத்தனை பளிச்சென்ற பகல் இதற்கு முன் பார்த்ததில்லை. சாலை ஓரமாய் நெளிந்து சென்ற பெரிய கற்கள் பதித்த நடைபாதை மின்னியது. அவளை பின் தொடர்ந்து நடப்பதிலும் ஸ்பரிச இன்பம். சற்று காலகட்டி நடந்தாள். ஒவ்வொரு சுவடாக பதிந்தது. சொட்ட சொட்ட நடந்து கொண்டிருந்தாள். அவன் குனிந்து அந்த ஈர சுவடுகளை பார்த்தபடி அதில் தன் கால்கள் பதித்தான். செருப்பை உதறி விட்டு, அந்த சுவடுகளின் தடத்தை தொடந்தான், வாத்து போல கால்கள் அகட்டியபடி அவன் நடந்ததை தலையில் துண்டு கட்டி, சட்டை அணிந்திருந்த சிமிண்டை குழைக்கும் கட்டிட வேலைப் பெண்கள் விசித்திரமாய் பார்த்தனர். கறுத்த முகத்தில் வியர்வைக் கோடுகள்.



அவள் நைட்டி அணிந்து நூலகத்துக்கு வந்ததன் வியப்பு இன்னும் அடங்கவில்லை. அதை விட மற்றொரு அதிர்ச்சி இருந்தது. அதை அவன் ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. நூலகத்தில் சந்திப்பது அவள் திட்டம் தான். வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நடந்து இருவரும் பத்து நிமிடத்தில் அந்த பழைய இரும்பு சாமாங்கள் குவிந்து கிடக்கும் கடைக்கு வந்தார்கள். அவள் சற்றும் பதற்றத்தை காட்டிக் கொள்ளவில்லை. இரண்டு தெருக்கள் தள்ளி அவள் அண்ணன் வேலை செய்யும் பள்ளிக் கூட்டம். இரண்டாவது அண்ணனுக்கு நிறையப் பரிச்சயக்காரர்கள் இந்த தெருவிலே திரிந்தார்கள். அவன் ரோட்டின் வலதுசாரியில் சின்ன நடுக்கத்துடன் அவளைத் தொடர்ந்தான். கடையை ஒட்டின சின்ன சந்தில் திரும்பி நடந்தாள். நான்கு வீடுகள் கடந்ததும் கிம்பர்லி தனியார் நூலக பலகை. உள்ளே சென்று அவள் நூலகரிடம் பேசினாள். காசு செலுத்தி விட்டு அவனைக் காட்டி ஏதோ சொல்ல, நூலகர் மாமி அவனை நோக்கி புன்னகைத்தாள். அதில் சற்று சங்கடம் தெரிந்தது. அவன் வண்ண ஆங்கிலப் பத்திரிகைகள் சிதறிக் கிடந்த வரவேற்பறை மேஜையில் அமர்ந்தான். படித்த கொஞ்ச நேரம் அது ஆங்கிலம் அல்ல எனத் தோன்றியது. தலை நிமிராமலே அவனுக்கு அவள் உள்-அறைக்கு சென்று அங்குள்ள மாடிப்படியில் எறுவது தெரிந்ததது.

குளிர்பதனப் பெட்டி பேருக்கு முனகியதே அன்றி லேசான புழுக்கம்; கசகசத்தது. முன்னறையில் தினப்பத்திரிகை கிழவர்களும், காமிக்ஸ் குழந்தைகள் மொய்த்தனர். அகன்ற உள்ளறையில் ஒரு மெல்லிசான குழல் விளக்கு படபடத்து சிரித்தது. மற்றொரு குமிழ்விளக்கு அரைஜீவனில் உயிர்விட மறுத்தது. மங்கல் ஒளியில் மூன்று பேர் சிவப்புத் தோல் தடிமன் நூல்களை அலமாரிகளில் இழுத்து பக்கங்களுள் தேடினார்கள். உறக்கத்தில் போல் மூலைக்கு மூலை அலைந்தார்கள். ஏதோ ரகசியத்தை புதைத்து வைத்திருக்கும் தோற்றம் கொண்டிருந்தன நூலக் அறைகள்: அலமாரிகள் ஊடே மவுனம் வலுத்தது, மூச்சு காற்று நூல் கெட்டி அட்டைகளில் எதிரொலித்தது. அவனை நோக்கி எங்கும் ஒரு காலடி ஓசை வந்து நின்றது, அவனை ஒத்த, அதே தொனியில், கால இடைவெளிகளில் நடக்கும் ஓசை. அவர்கள் ஏதும் திட்டமிட்டிருக்க இல்லை. ஒரு உள்ளுணர்வில் மாடி அறைக்கு செல்ல விழைந்தான். அங்கு அவள் தனிமையில் மாடிப்படிகளை பார்த்தபடி பெருமூச்சுகளுடன் நிற்பதாய் கற்பனையில். அவனுக்கு மூச்சுத் திணறியது.

மாடிபடி நெருங்கிட நூலகர் நான்கு பெரும் புத்தகங்களை மார்போடு அணைத்தபடி அவனை கடந்து சென்றார். இல்லை கடக்கவில்லை. அவன் கண்களை சந்தித்து நின்றார். கண்காணிப்புப் பார்வை. அவனது படிப்பு, பெற்றோர் விவரங்கள் விசாரித்தார். அவர் பகுதி நேர பள்ளி ஆசிரியை என்றார். பிறகு "மாணவர்களின் நன்னடத்தை மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. அத்னாலே மாணவரகளுடன் என்னால் இளமையுடன் பழக முடிகிறது. நட்பு பரிசுத்தமானது. மனதை கட்டுப் படுத்தி அதைக் காப்பாற்றிட வேண்டும்" இப்படி சொல்லிருக்க வேண்டும். சில நொடிகள் அவரிடம் மௌனமாக அவனது பதில் எதிர்பார்ப்பது போல் புன்னகையை வழிமறித்த பாவனை. அந்த நொடிகளில் அவர் நிஜமாகவே தான் பேசினாரா என்று சந்தேகம் நேர்ந்தது. அசடாய் சிரித்தபடி மாடிப்படியை கடந்து தத்துவ நூல் வரிசைப் பக்கமாய் நடந்தான். பிறகு சட்டென திரும்பி மாடிப்படிகளில் தாவி ஏறினான. அவனது செய்கை எண்ணி அவனுக்கே சிரிப்பு வந்தது.



மாடி நூலக அறை விஸ்தீகரமானது. இருபெரும் ஜென்னல்களில் பக்கத்து கட்டிட வெயில் ஜொலிக்கும் மொட்டை மாடியின் பரப்பு விரிந்தது. இருப்பதிலேயே பழசான, கிழிந்து வீணான நூலகளை சீரற்று அடுக்கியிருந்தார்கள். மின்விசிறி ஓட வில்லை. ஆனால் திறந்த ஜன்னல் காற்றில் புத்தக காகிதங்கள் படபடத்து நொறுங்கின, காலடிகள் திம் திம்மென எதிரொலித்தன. அவன் வாழ் நாளின் ஆசை அது. ஒரு பெண்ணை தனியாக சந்திக்கப் போகிறான். முதல் முறையாக மறைக்கப்பட்ட பெண்ணூறுப்புகளை பார்க்க ஸ்பரிசிக்க போகிறான். அவர்கள் எதையும் திட்டம் இடவில்லை. ஆனால் அவனுக்கு அது நடக்கப் போவதாக திண்ணமாகத் தோன்றியது.

அவள் பெயரை அழைக்க கூசியது. ஒரு நம்பிக்கையில் அங்குள்ள ஒரே உள்ளறைக்குள் நுழைந்தான். பழைய காகிதங்கள் பொடிந்து அழுகும் நெடி. அங்கு நாற்காலி இல்லை, அலமாரி கூட இல்லை, புத்தகங்கள், குறிப்பாய் என்சைக்குளோபீடியாக்கள், இறைந்து கிடந்தன. முக்கியமாய் அவள் அங்கு இல்லை. நெஞ்சுக்குள் மிதிக்கும் ஓசை. அவள் பெயரை காற்றுக்கு மட்டும் கேட்கும் படி அழைத்தான்: "கதீ.." நீண்டு செல்லும் மௌனம். அலமாரி வரிசைகளில் ஒவ்வொன்றாக தேடினான். புரியாத பீதி அடிவயிற்றைக் கவ்வியது. தடுமாறினான். அலமாரி ஒன்றில் சாய்ந்து நிதானித்திட குளுக்கென அவள் சிரிப்பது கேட்டது. எதிரில் நின்று விளம்பரப் பெண் போல் முழுப்பல் வரிசையும் காட்டி சிரித்தாள். வாசலை கவனித்தபடி நெருங்கினான். அவளது வாசனை கிறங்க வைத்தது.

கழுத்தில் முகம் பதித்து முகர்ந்தான். வியர்வை கசத்தது. உதடுகளை முத்தினான். நாக்கால் அவள் நாக்கை நெருடினான். உதடுகளால் அதைப் பற்றி உறிஞ்சி எச்சில் முழுங்கினான். மாறி மாறி முத்தியபின் பொம்மைகளை பரிமாறின குழந்தைகள் போல் சிரித்தனர். சால்வையை விலக்கி மார்பை நோக்கினான். கண்களை தாழ்த்தி சிரமப்பட்டு வெட்கினாள். கைகள் அவள் வலுவான இடை மற்றும் வடிவான புட்டத்தை மாறிமாறி பற்றின. அவன் அப்போது செய்யப் போவதை அவள் அக்கணம் எதிர்பார்க்கவில்லை; ஆனால் முற்றிலுமாக அல்ல.

நைட்டியை இழுத்து தூக்கி இடது தொடையை வருடியபடி மேல் வந்தான். ஜட்டி அணிந்திருக்கவில்லை என்பதை அவன் எண்ணிப் உணரவில்லை. மயிடர்ந்த பகுதிக்கு வந்தான். அவன் தோளில் வெப்பமான மூச்சுக் காற்று. ஈரம். அவள் தொடை இடுக்கு வரை ஈரம். விரல் நுழைக்க வழுவழுவென்றது. புசுக்கென்று உள்ளே போனது. அவள் குறியை அழுத்தி கீழாக வருடினான்; தோளில் அவள் தலை புரண்டது. கிச்சுகிச்சு. "கிளிட்டொரிஸ் எந்த பகுதி?" என யோசிக்க, அவன் கைகள் மேலும் ஈரமாகின. வழவழப்பான திரவத்தில் அவள் புட்டம் வரை நனைத்திருந்தது. விரலில் ஒரு துளி இறங்கி அவன் உள்ளங்கையை அடைந்தது. அல்குல் மயிர்களின் முனையில் துளிகள் சில்ர்த்து நிற்பதாக கற்பித்தான். மரப்படிகளில் கனத்த காலடிகள் ஏறி வந்தன.

சட்டென பின்பாய்ந்தாள். அவன் சுழன்று திரும்பி ஒரு நாற்காலியில் விழுந்து கெட்டி அட்டை நூலொன்றை உருவினான். அட்டையும், முதல் பக்கங்களும் வந்தன. பாரெடைஸ் லாஸ்டு -- இழந்த சொர்க்கம். ஜான் மில்டன். அவன் மனம் அமைதியாக பெயர் மற்றும் முன்னுரையை படித்தன. மாடிப்படி முகப்பில் நூலகர் நின்றார். அருகில் புத்தகங்களை ஏந்தியபடி சென்றாள். சால்வையை எடுத்துப் போட மறந்திருந்தாள். "நீங்கள் ரெண்டு பேரும் தனியே இங்கே வரக்கூடாது"

"இல்லை புத்தகம் எடுக்கவே வந்தேன்"

"தெரியும்; என்னைப் போல் மற்ற்வர்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் யாராவது ஒருவர் கீழே சென்று படியுங்கள்"

தலையாட்டினாள். அவர் திரும்பும் போது கீழே கிடக்கும் சால்வையை கவனித்தார். சலனமின்றி முகந்திருப்பி இறங்கினார். கூடவே அவளும் இறங்கினாள். அவர் அவனை விசாரிக்காதது அவனுக்கு உறுத்தியது; மேலும் படிக்க முடியவில்லை.

அவன் விரல் இன்னும் ஈரத்தில் மினுமினுத்தது. முகர்ந்தான். சுவைத்தான். உள்-நாக்கில் அது ஒட்டிக் கொண்டது. ஒவ்வொரு நினைவாக ஆனால் முன்பின்னாக அசை போட்டபடி உலாத்தினான். நெஞ்சே வெடிக்கும் போல் தோன்றியது. நிதானித்திட மூச்சு முட்டியது. பெண்ணுக்கு விந்து வரும் என்று அம்பட்டன் ரமேஷ் சொன்னதை நம்பவில்லை.கிளரர்ச்சியடைந்தால் பெண் குறியில் வழவழப்புக்கான நீர் சுரக்கும் என்று தான் படித்திருந்தான். "அப்படியென்றால் ... எப்படி நான் தொட்டதும் கிளர்ச்சியில் ஈரமாகி விட்டாளா? கன்யாகுமரியில் சரக்கு தள்ளிப் போன சுந்தரேசன் இந்த கதை சொல்லவில்லையே. எச்சில் தொட்டு ஈரப்படுத்தியாக அல்லவா கூறினான்; எது உண்மை?" அவனுக்கு குழம்பியது. அலமாரி வரிசை முழுக்க கறுப்பு ரெக்சின் அட்டைகளில் இருனூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பரிச்சயமற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள். எடுத்து புரட்டி படம் பார்த்தான். ஒரு ஜேனட் புகைப்படத்தில் மிக இளமையாக தோன்றினாள். கறுத்த கவுன் போட்டு இறுக்கமாக முக்காலியில் அமர்ந்திருந்தாள். நேரான பார்வை. அங்கங்காய் புரட்டினான். அறுபது வயதில் சாவு. இசை, தோட்டக்கலை ஈடுபாடு. மணமுடிக்க வில்லை. ஏன்? சகோதரிகளின் குடும்பத்துடன் அவர்கள் பிள்ளைகளை வளர்த்து, ஐம்பதாவது வயதில் லெசான கிறுக்கின் அறிகுறிகள். அவளை முதுமையாக அவனால் கற்பனை செய்யமுடியவில்லை. கடைசி காலத்தில் தனியறையில் அடைத்து சாவு. பெட்டி பெட்டியாய் நாட்குறிப்புகள் எழுதியிருக்கிறாள். குறிப்பாய் சிறு குழந்தைகளை குளிப்பாட்டுவதை துல்லியமான, அலாதியான விருப்பத்துடன் வருணிக்கும் ஏராள பக்கங்கள். இதை நூலாசிரியர் நீள்வாக்கியங்களில் சுற்றி சுற்றி வந்து வியக்கிறார். "ஏதோ மனசாந்திக்கு எழுதுகிறாள், விடேன்". அவனுக்கு மீசை, கண்ணின் சுருக்கங்களில் வியர்த்தது. முக வியர்வையை ஒரு சைக்கோ-தீவிரத்துடன் இம்மி விடாமல் துடைக்கும் பழக்கம் சின்ன வயதிலிருந்து. மாடிப்படிக்களில் ஓடி வரும் அதிர்வு. காற்றடிப்பது நின்றது. புழுக்கம் ஒரேயடியாக ஏறியது.

அவள் வந்து சால்வையை எடுத்து அவசரமாக சுற்றிக் கொண்டாள். அவன் அசையவில்லை. அவனைப் பார்க்காது புத்தகங்களை அதனதன் இடத்தில் அடுக்கினாள். நிமிர்ந்து பளிச் சிரிப்பு சிரித்தாள். மூச்சு தளர்த்தி நெருங்கினான்; பசு காடிக்குடத்தை முகர்வது போல் உடை மேலாக மார்புகளை முத்தினான். கணு இருந்த இடமென்று உத்தேசமாக கடித்தான். முகத்தில் வலியாக பரவும் சிவப்பு. சில கணங்கள் தாமதமாக "ஆவ்" என்றாள். வேகமாக மாடிப்படிகள் இறங்கின பாணியில் அவளுக்கு வயதுக்கு மீறின மூப்பு தெரிந்தது. ஒரு தலை நரைத்த பெண் சிசுவை டப்பில் போட்டு குளிப்பாட்டும் காட்சி நினைவில் தோன்றியது.


பாதசாரிகள் நடைபாதையின் பெரிய பாராங்கற்களை இரண்டு பேர் சேர்ந்து பெயர்த்து நகர்த்திக் கொண்டிருந்தனர். வலது புறமாய் சிமிண்டு நடைபாதை இடும் வேலை பக்கத்தில். சிமிண்டு சட்டி சுமந்து வந்த பெண் சட்டென அசௌகரியமாக பாதி நிமிர்ந்து "பிள்ளே என்ன இந்த பக்கம்?" என்று இழுத்தாள். "புஸ்தகம் வாங்க வந்தேன்". அவன் வீட்டுக்கு மூன்று வீடுகள் தாண்டின வீட்டில் தாய்க்கிழவி செத்த பின் தனியாக குடியிருந்தாள் மேரி. அவன் பள்ளியில் கொஞ்ச காலம் சத்துணவுக் கூடத்தில் வேலை செய்திருந்தாள். ஊர்ப்பக்கமாய் அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். சாப்பாடு முடிந்த பின் ரெண்டு முட்டை தனியாக அழைத்து முந்தானை மறைப்பில்ருந்து எடுத்து தருவாள். குட்டையானவள். ஆனால் தொப்புளுக்கு கீழே சேலை கட்டி, குட்டையான ரவிக்கை அணிந்து இடை பாம்பு போல் நீண்டிருக்கும். சத்துணவிலிருந்து நின்று பின் கடனில் வெற்றிலை பாக்கு குடிசைக்கடை நடத்தினாள்; அவ்வப்போது கட்டுமானப் பணிக்கும் வருவாள். மெலிந்திருந்தாள். மார்பில் பாக்கெட்டுகள் கொண்ட ஆண்களின் வெள்ளை சட்டை, பாவாடையில் கருமை பளபளப்பு தனித்து நின்றது. "வரெச்சில கூட பார்த்தேன்; கூப்பிடேல, வரட்டும்னு பா...த்தேன்". அருகே சிமெண்டு குழைத்து ஜல்லி அள்ளின மூன்று ஆண்கள் நின்று எதிரில் பார்த்து குசுகுசுத்தனர். ஒருவர் இளித்தபடி பக்கவாட்டாய் கண்சிமிட்டினார். அவனுக்கு வயிற்றைக் கலக்கியது. அவர்களைத் தவிர அந்த ஓய்வு தினத்தில் சாலை வேறிச்சோடியிருந்தது. நடமாட்டமற்ற வெளியில் யாருமற்று இரண்டு பேர் இடைவெளி விட்டு நடந்தாலும் சந்தேகம் வரும் என்று தனக்கு ஏன் முன்பு தோன்றவில்லை.

கேலியும், கொச்சையும் முன்னே செல்பவளைப் பற்றி என ஊகித்தான். மேரியின் பார்வையில் பரிவு: "பிள்ளே போணும்". அவன் கிளம்பிய போது பார்த்தான்: அவள் அவனுக்காக பாதை திருப்பத்தில் நின்றிருந்தாள்.

நடைபாதை திருப்பம் கட்டுமான உடைவுகளால் ஒருவர் மட்டுமே நடக்குவண்ணம் குறுகலாகியிருந்தது. முதன்முதலாய் வெளியிடத்தில் அவளை அத்தனை நெருக்கத்தில் சந்தித்தான். முட்டியபடி கடந்தான்: "என்ன வளியில நின்னு பேச்சு?"

"நீ எதுக்காவ ஜட்டி போடாம வந்தேன்னு தெரியுமே"

அவள் அவனைத் தாண்டி ஓடினாள். மெயின் ரோடு ஜனங்களிடையே கலக்க ஆசுவாசம் ஆகியது. பேருந்து நிறுத்த தூணில் சாய்ந்து பின் நின்று அவளிடம் பேசினான். கைத்தூண்டால் வாய் மூடி பேசினாள். அவளுக்கு தெரிந்த ஒரு குறுந்தாடி குல்லா மாமா வர, நிறுத்ததின் எதிர்ப்பக்கமாய் நகர்ந்து நின்று அவளை பார்த்தபடி, நினைவுகளை மீட்டினான். அவள் நான்கைந்து பேருந்துகளை தவற விட்டாள். செருப்பு ஈரத்தில் மினுமினுத்தது. உதறிப் போட்டுக் கொண்டாள். சால்வை தளர்த்தி கழுத்தை அழுத்தித் துடைத்தாள். வியர்வையின் வீச்சமும், அழுக்கின் சுவையும் அவன் நாவில் சுரந்தன. காற்று பலமாக வீசியது. பக்கத்து ஆல்மரத்திலிருந்து குருவிகள் கலைந்து பறந்தன. நைட்டி அவள் தொடையோடு ஒட்டிக் கொண்டது. விடுத்து சீராக்கினாள்; தொடை படிந்த இடங்களில் நீலம் கரு நீலமாக படிந்தது. கடைசி பேருந்தில் ஏற முயன்ற போது அவளது நனைந்த ஒருகால் செருப்பு வழுவியது. சுதாரித்து ஏறினாள். கூட்டத்தில் முகம் திணித்து வெளிப்பட்டு சிரித்து, கையசைக்கும் பாவனை காட்டினாள். உடனே அவன் பார்த்திருக்கையிலே முகம் பரிச்சயமற்ற பாவனைக்கு மாறியது; அவன் மேலும் ஆவேசமாக கையசைத்தான்; எதிர்வினையின்றி முகத்தை கூட்டத்துள் இழுத்துக் கொண்டாள்.

மழை பலமாக கொட்டியது. மின்-கம்பிகளில் இருந்து காகங்கள் விடுவித்து சிதறின. மரக்கிளைகள் முறிவது போல் மோதின. சில நிமிடங்களில் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கட்டிடத்தொழிலாளர்கள் பிளாஸ்டிக் கவர்களை போத்தியபடி ஓடிக் கடந்தனர். வாகனங்கள் சேறு இறைப்பது பொருட்படுத்தாது அவன் சாலை விளிம்பில் நின்று பார்த்தான். அவனுக்குள் அப்போதும் வெப்பம் மீதமிருந்தது.

சாரலாக குறைந்த பின் நெடு நேரமாகியும் பேருந்து வரவில்லை. பதினைந்து நிமிடம் நடந்து அடுத்த முக்கிய நிறுத்தத்துக்கு போகலாம். அல்லது பக்கத்தில் நண்பன் மணியின் வீட்டுக்கு போகலாம்; அவன் அம்மா சூடாக தோசை தேங்காய் சட்னியுடன் பாயசம் போல் டீ தருவாள். கூட ஐந்து நிமிட நடை என்றால் பிரின்ஸ் தியேட்டரில் ஒரு மணி நேரம் முடிந்த புரூஸ்லீ ஓடும். அவன் திரும்பி நடந்தான்.

நூலக வாசலில் குடை தொப்பிகள் சகிதம் கூடி நின்றார்கள். நெருக்கினபடி உள்ளே நகர்ந்தான். வேளி, உள்-அறைகள் காலி. நூலகர் அறை பூட்டியிருந்தது. மேலும் உள் நகர்ந்தான். ஒவ்வொரு விளக்காக போட்டான். ஒரு பழங்கால வீட்டை மாற்றியைமைத்திருக்கிறார்கள் என்ற விசயம் அவனுக்கு அப்போது உறைத்தது. ரொமான்ஸ் நாவல்கள் வைத்திருந்த அலமாரியின் பக்கவாட்டாக இடுப்புயரத்துக்கு கீழாக ஸ்விட்சு போர்டு. "இது படுக்கை அறை", யூகித்தான். நூலகர் அறையின் ஜன்னலை வெளியிலிருந்து தள்ளித் திறந்தான். அங்கு மேரிமாதாவின் கருணை விழிகளுக்குக் கீழே அடுப்படி திண்டு. சில தின்பண்ட டப்பாக்களும், தண்ணீர்க் கூஜாவும் வைத்திருந்தார். ஒவ்வொரு அறையாக விளக்குகளை அணைத்தபடி நடந்தான். காலையில் இருந்த பதற்றம் அறவே இப்போது இல்லை. அந்த பெண்ணின் நினைவு வந்தது. அந்நூலை பிறர் எடுக்காத மட்டில் வரலாற்று பகுதி அலமாரி அடுக்கில் ஒளித்து வைத்திருந்தான். படிக்கும் நோக்கத்தில் அல்ல, பதுக்கும் திகிலுக்காக.

சுதந்திரமாக மரப்படிகளில் ஏறினான். மொத்த கட்டிடமும் எதிரொலித்தது. மேலே சென்றதும் ஜன்னல் பக்கமாய் அமர நாற்காலியை தேடினான். விட்ட இடத்தில் இல்லை. உள்ளே அலமாரிகள் இடைவெளியில் மென்வெளிச்சத்தில் இருந்தது. அங்கு முகத்துக்கு நேராய் அப்புத்தகத்தை தூக்கிப் பிடித்து வாசித்தபடி இருந்தாள் ஒரு சிறுமி.

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates