Wednesday 27 January 2010

கேதி கல்லிஸ் கவிதை

இந்த மாத தாமரை இதழில் வெளியாகி உள்ள என் மொழியாக்க கவிதை.

பொன்னிறம்




ஆக நான் அவனிடன் சொன்னேன்: கட்டில் மேல் நின்று வெளியே பார்,
மரங்களுக்கு கீழ் தங்க இலைகளின் விரிப்பு எத்தனை தடிமனாக உள்ளது பார், இலைகள் விழுவதை கவனி.
அவன் தயங்கினான். நான் யாருடைய கட்டிலின் மீதாவது
நின்று ரொம்ப காலமாகிறது, அவன் சொன்னான்.
மேலும், ஒருவேளை நான் வெளியே பார்த்திட நீ
காண்பதை பார்க்கவில்லை என்றால், என்ன செய்ய. ஒருவேளை எனக்கு
இலைகள் பொன்னிறமாக இல்லை எனில். ரொம்ப
காலமாகி விட்டது, அவன் திரும்பவும் சொன்னான்,
தன் கால்சட்டையின் மந்தமான பழுப்பை நீவியபடி,
தன் ரொம்பவே சின்ன கண்ணாடிகளை
சரி செய்தபடி; இதோ பார், நான் சொன்னேன்,
என் கையை பிடித்துக் கொள், நாம் சேர்ந்து
கட்டிலில் நிற்போம். ஆக
அவன் என் கைகளை பற்றினான்; ஒன்றாக
நாங்கள் கட்டிலில் நின்றபடி கவனித்தோம்,
நாங்கள் தொடர்ந்து கவனித்தோம்
இலை-அகற்று எந்திரம் கொண்டு ஆட்கள்
புல்வெளியை சுத்தப்படுத்திட, குழந்தைகள்
ஒரு நாயுடன், வாலில்
ஒரு பொன்னிற இலை கொண்டிருந்த கறுப்பு நாய், நடைபழகுவதை
கவனித்தோம். மௌன உறைபனி பொழுதுகள் வர,
நாட்கள் சாம்பலாகி, மேலும் வெள்ளையாகி,
பனிப் பொழிந்து, முடிவற்று மீண்டும் சாம்பலாக கவனித்தோம்.
வசந்தத்திற்காக பறவைகள் வட்டமிடுவதை
மேலும் வெற்று மரங்கள்
உவகையில் நடுங்குவதை கவனித்தோம்.
மரங்கள் மீண்டும் தொடங்குவதை நாங்கள் கவனித்தோம்
Read More

ராபர்ட் பிளை கவிதைகள்

இந்த மாத தாமரை இதழில் வெளியாகி உள்ள எனது மொழியாக்க கவிதைகள்



மகிழ்ச்சியின் மாதம்

குருட்டுக் குதிரை செர்ரி மரங்களுடன் நிற்கிறது.
தண்மையான பூமியில் இருந்து எலும்புகள் மின்னும்.
ஏறத்தாழ ஆகாயம் வரை
இதயம் துள்ளும்! ஆனால் அரற்றல்களும் தாவர இழை உறுப்புகளும்
நம்மை திரும்ப இருளுக்குள் இழுக்கும்.
இரவு நம்மை எடுத்துக் கொள்ளும். ஆனால்
ஒரு விலங்குப்பாதம்
சாலையை வெளிச்சமூட்ட இருட்டில் இருந்து
வெளிவருகிறது. ஒன்றும் பிரச்சனையில்லை.
எனது அனல் தடயங்களை இரவின் ஊடாக தொடர்வேன்.


மரணத்துக்குப் பிறகு காலம் பின்னோடுகிறது


விதவைகள் மற்றும் அனாதைகளுக்காக ரொட்டி அரைக்கும் சாம்சன்
தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதை மறக்கிறான், பிலிஸ்டைனர்கள்
அவனிடமிருந்து பிடுங்கின பதில்கள் சிங்கத்துக்குள் திரும்புகின்றன. கசப்பும் இனிமையும் மணம் புரியும்.
அவனே சிங்கத்துக்கு அநியாயம் செய்தான். இப்போது கோதுமைப் பயிர்
காற்றை தன் மனைவி வாலால் வருடுகிறது; கழுதை
நீண்ட புற்களில் ஓடுகிறது, மேலும், சுவர்க்கத்தை விரைந்து பார்த்தபடியால், நரியின் உடல் இளங்காவி பூமியில் ஓய்வாகச் செல்லும்.


மரணத்துக்குப் பின் ஆன்மா தன் சந்தடியற்ற வீட்டுக்கு
பாலும் தேனும் அருந்த திரும்பும். உடைந்த உத்தரங்கள் சூரியோதய வாயிற்கதவுகளை திரும்ப சேர்க்கும், மேலும் தேனீக்கள் புளித்த
இறைச்சியில் பாடும். மீண்டும் தொட்டிலில் அவனது முடி
நீளமாய் பொன்னிறமாய் வளரும்; டிலிலாவின் கத்திரிக்கோல்
இரு குட்டி விளையாட்டுக் கத்திகளாக திரும்ப மாறும்.
பின் எப்போதும் அஸ்தமனம் மற்றும் நிழல்களால் துரத்தப்படாமல், சாம்சன்
கிழக்கு சமுத்திரத்தில் மூழ்கி, பிறக்கிறான்.


பழைய ஆசிரியர்களிடத்து நன்றியறிதல்



உறைந்த ஏரி மேல் வீறாப்பாய் அல்லது ஓய்வாய் நடக்கையில்
நாம் இதுவரை என்றுமே இருந்திராத இடத்தில் நம் காலடிகளை வைக்கிறோம்.
நாம் நடக்காததன் மீது நடக்கிறோம். ஆனால் சங்கடப்படுகிறோம்.
கீழே உள்ளது நம் பழைய ஆசிரியர்கள் அன்றி வேறு யார்?

மனிதப் பளுவை என்றுமே ஏற்றிராத நீர் – நாங்கள்
அப்போது மாணவர்கள் – எங்கள் பாதங்களை ஏந்துகிறது,
மேலும் ஒரு மைல் தொலைவுக்கு முன்னே செல்கிறது.
நமக்கு கீழே ஆசிரியர்கள், மேலும் நம்மைச் சுற்றி நிச்சலனம்.
Read More

வாசனை

தாமரை டிசம்பர் இதழில் வெளியான என் சிறுகதை

மகிழ் கவனமாக பைக் கண்ணாடியில் தலை சீவிக் கொண்டான். பேராசிரியர் வீட்டு வாசலில் நாய் இருக்கும் அடையாளம் இல்லை. ஆனால் நிறைய பூந்தொட்டிகள் தாறுமாறாய் அடுக்கப்படிருந்தன. வாசல் பக்க தொட்டிகளில் ஜெவ்வந்தி மற்றும் வண்ணப்புள்ளி குரோட்டன்ஸ். இரண்டு பெரிய தொட்டிகளில் சூரிய காந்தி பூக்கள் மெல்ல தள்ளாடின. கறுத்த ஈர மண். முன்புற தொட்டிகள் இருந்த இடத்தில் கசிவின் தடம். பின்புறம் தொட்டிகளில் மிளகுச்செடி, சாம்பிலை குரோட்டன்ஸ் என பலவகைகள். ஆனால் அவை வாடி நின்றன. சில தொட்டிகள் இடுப்பு நொறுங்கி வேர்க்குவியல் சரிய சுவரில் சாய்ந்து நிதானித்தன. வாசல் கதவுக்கு மேலே ஒரு பூக்கொடி தொட்டி கம்பி பிணைப்பில் ஆடியது. அதில் மோதிடாது சுதாரிக்க வேண்டி இருந்தது. மகிழுக்கு ஆச்சரியம். பேராசிரியருக்கு என்றுமே தோட்டக்கலை, பூந்தொட்ட சமாச்சாரங்களில் ஆர்வம் இருந்ததில்லை. கடந்த முறை விச்சு வந்திருந்த போது லவ்பெர்ட்ஸ், கிளிகள், மைனாக்கள் என கூண்டுப் பறவைகளை வாசல் முகப்பில் தொங்க விட்டிருந்ததாக சொன்னான். மகிழுக்கு தெரிந்த வரையில் பேராசியருக்கு எந்த ஜீவராசியிலும் அனாவசியமாய் ஈடுபாடில்லை.அப்போது போல் இப்போதும் நம்ப முடியாதவற்றை அவன் பொருட்படுத்த இல்லை.

வாசலில் தொங்கின தேங்காய் அளவிலான வெங்கல மணி வெறும் அலங்காரத்துக்கு என்று பட்டாலும் அதன் நாவை தட்டி பார்த்தான். விரல் கூசியது. உலோகத்தின் முனகல் ஒலியின் தொடர்ச்சியாக பேராசிரியர் கதவு திறந்தார். “வா” என்ற படி நேராக சென்று வரவேற்பறை சோபாவில் அமர்ந்தார். பேராசிரியரின் சாலச்சிறந்த குணமாக அவன் கருதியது அவர் மக்கு பையன்களுக்கும் சமத்துகளுக்கும் வேறுபாடு காட்டியதில்லை என்பது. ஐந்து வருட படிப்பில் இருந்து பத்து வருடங்கள் கழித்தும் அவன் மறக்காத மற்றொரு விசயம் அவர் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் குலுக்கு சீட்டு போல் யாருக்கும் அமைவது. அவர் வினோதமான ஒரு சனநாயகத்தை கடைபிடித்தார். அதன் கணக்கு புரியாவிட்டாலும் அவரை நாடுவதே அவனுக்கு விருப்பமானதாக இருந்து வந்துள்ளது.



பேராசிரியர் முன்னிருந்த ஆஷ் டிரேயை அவன் வினோதமாய் பார்த்தான். அந்த பார்வையை அவர் விரும்ப இல்லை. இடது கையில் புத்தரது தாமரை போல் புத்தகம் ஏந்தியிருந்தார்: ஹாம்லெட். சின்ன எழுத்து, வழவழ தாள், கனமற்ற, கையடக்க பதிப்பு … எவ்ரிமேன் பதிப்பக சின்னம் படபடத்தது.

“உன் அம்மாவை காதலித்திருக்கிறாயா எப்போதாவது?”

ரொம்ப நேரம் யோசித்து என்ன யோசிக்கிறொம் என்பது கடைசியில் மகிழுக்கு புரியவில்லை. அவன் அசையவில்லை. பேராசிரியர் புன்னகைத்தார். நல்ல சகுனமாய் அதை கொண்டு மகிழ் வந்த விசயத்தை வெளியிட்டான்.

அந்த மங்கலான மஞ்சள் புத்தகங்கள் மற்றும் மரசாமான்களின் நிறச் சூழலாக இருக்கலாம்; பழுத்த வாசனை கிளர்த்தின நினைவுகளாக இருக்கலாம். அங்கு அவன் மிக சகஜமாக உணர்ந்தான். ஆனால் கைகளின் திடீர் பழுப்பு நிறம் தவிர. அங்குள்ள ஒளிச்சூழலின் விளைவு என்று நம்ப முயன்றான். பழுத்த தாளின் மென்மையை தோலில் உணரத் தொடங்கினான்.

”ஆங்கிலத்துறையில் ஓப்பனிங் இருக்கிறது தான். இரண்டு மாதமாக காலியாக தான் உள்ளது. சரியான ஆள் அமையவில்லை. தேர்வானவர்களும் குறைவான சம்பளம் என்றால் ஓடிப் போய் விடுகிறார்கள் “ புன்னகைத்தார் மீண்டும். அப்போது அவரது உதடு பக்கவாட்டு S எழுத்து போல் நெளிந்தது.

“ நீ அரியர்ஸ் வைத்திருந்தாய் அல்லவா”
“க்ளியர் செய்து விட்டேன்”
“உம்”
“ஐந்து வருடமாய் எந்த வேலையிலும் நிலைக்கவில்லை. சாதிரீதியாய் எல்லா இடத்திலும் நெருக்கடி தருகிறார்கள். உயர்பதவிகளில் எல்லாம் அவர்கள் இருக்கிறார்கள். அதுதான் சார் உங்க கிட்ட வந்தேன். இந்த கல்லூரியில் தான் எனக்கு பாதுகாப்பு கிடைக்கும்”

“எனக்கு சாதிகளில் நம்பிகை இல்லை”
“போன முறை நிரந்தர போஸ்டிங் வந்த போது லலிதாவுக்கு நீங்கள் தான் வாங்கிக் கொடுத்ததாக சொன்னாள்”

முழுப்பல்வரிசையை பளிச்சென்று காட்டினார், ஆனால் சிரிக்கவில்லை. ஒரு தினுசான பாவனை.

“சார் நீங்கள் தான் எப்படியாவது …”

முதுகை வளைத்து அவர் காலை பார்த்தபடி சொன்னான். அதற்கு மேல் வளையவில்லை.

மேஜையில் இருந்த ஹாம்லெட்டை நாடகீயமாய் விரல் ஊன்றி சுழல விட்டார். அதே தொடர்ச்சியில் “செய்யட்டுமா வேண்டாமா? To be or not to be” என்றார்.
“சார் நான் சிபாரிசுக்காக வரவில்லை; உங்கள் ஆதரவு … தேர்வுக் குழுவில் நீங்கள் தான் எக்ஸ்டெர்னல் என்றார்கள்”. மேலும் சற்று வளைந்தான்.

“பார்க்கலாம். உனக்காக பேசுகிறேன். ஆனால் பிரின்சிபால் பற்றி தான் தெரியுமே! He is very particular about qualification. கடுமையான கறாரான மனிதர். உனக்கு எம்.பில் வேறு கிடையாது. அப்புறம் மிஸிஸ் யசோதா கோபாலன் HOD, அவரிடம் பேசி விட்டாயா?”

யசோதாவும் பேராசிரியரும் பரம வைரிகள்.
“இல்லை சார், எனக்கு அவரிடம் போக வேண்டாம்.” வேண்டாமை அழுத்தினான். புன்னகைத்தார். இம்முறை மேலும், தெளிவு. அவனுக்கு மேலும் நம்பிக்கை சுரந்தது.

“சரி போய் வா, பார்க்கலாம். லலிதாவிடம் என்னுடைய புத்தகம் ஒன்று உள்ளது. நினைவுபடுத்து”
“சரி சார்”
“காப்பி கீப்பி சாப்புடுறியா…”
“இல்லை சார்”
அவர் தலை அசைத்து விட்டு உள்ளே எழுந்து சென்றார். அவன் தனியாக வெளியேறினான்.

அழைப்பு மணியை தட்ட தோன்றியது. வாசல் வராந்தாவின் வலது முனையில் இருந்து ஒரு கறுப்பு நாய் கழுத்து பட்டையுடன் மூச்சிரைக்க ஓடி வந்தது. ஒரு தொட்டியை கீழே தள்ளி உருட்டியது. அதே ஓட்டத்தில் இடது ஓர மாடிப்படியில் ஏறியது. இவனை பொருட்படுத்தவில்லை. மூச்சு திரும்பியது. தன்னைத்தானே முகர்ந்து பார்த்தான். ஒரு புத்தம் புது தாளின் வாசனை. பிறகு அதுவும் இல்லை என்று உணர்ந்தான். “என் வாசனை எங்கே?”

மாலை மொட்டை மாடியில் புறாக்காட்டம் திட்டுகளாய் சிதறிக் கிடந்தது. ஆவி கிளம்பியது. உலாத்திய படி மகிழ் ஒத்திகை பார்த்தான். நேர்முகத் தேர்வு ஒத்திகையில் இருந்து மிகக் குறைந்த அளவில் ஆனால் முக்கியமான வகையில் வேறுபட்டது.

“சரி மிஸ்டர் மகிழ்” கல்லூரி முதல்வர் கோப்புகளில் எதையோ தேடிய படி கேட்டார், “ஏன் இத்தனை கம்பனிகள் தாவி இருக்கிறீர்கள்? எங்கேயும் நாலு மாதத்திற்கு மேலாய் நிலைத்ததாக தெரியவில்லையே”. அவன் வழக்கமான தன் பதிலை ஆரம்பித்தான். அதை பிசிறின்றி ஒலி நாடா போல் சொல்ல பயின்றிருந்தான். பேராசிரியர் பக்கத்தில் இருந்த முதிய பெண் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினார். ஆனால் மகிழ் பதிலை முடித்ததும் தலையாட்டினார். பேராசிரியர் கேள்விப் பொறுப்பை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அவரே கேட்டார். ”To be or not to be இதன் மிச்ச வரிகளை சொல்?” அவனது உள்ளுணர்வு சரியாகவே இருந்தது. ஹாம்லெட்டில் இருந்து தான் தயாரித்து வைத்திருந்த வரிகளை ஒப்பித்தான். முதல்வர் கண்களில் ஒளி தெறித்தது. ஆனால் அடுத்த கேள்வி அவனை தடம் புரட்டியது.

“ஷேக்ஸ்பியர் தனது சானெட்டுகளில் குறிப்பிடும் அந்த புரவலர் யார்?”

அவன் மேலும் சற்று பொறுத்து பார்த்தான். தவறி கேட்டு விட்டாரா அல்லது அடுத்த நபருக்கான கேள்வியா? பேராசிரியரின் பூனைக் கண்கள் அவனை முறைத்தன. அவரது இடது இமை விடாமல் துடித்தது. கண்ணாடியை துடைத்துக் கொண்டு அடுத்துக் கேட்டார். அவனது குளறுபடி பதில்களை அல்லது மௌனங்களை பொருட்படுத்தாது கேட்டபடியே இருந்தார். கண்ணாடி கழற்ற தெரிந்த அவரது பளபளக்கும் கண்களையே மகிழ் யோசித்தபடி இருந்தான். அனாதி காலத்துக்கு முற்பட்ட வேட்டை மிருக கண்கள். அக்கண்கள் அவன் வயிற்றுக்குள் உருண்டு துருவின,

“செமியாட்டிக்ஸின் தந்தை யார்?
“---”
“சரி மிக எளிதான ஒரு கேள்வி. சி.ஐ.சி கலைக்கல்லூரி மாணவன் என்ற முறையில் கட்டாயம் உனக்கு இதற்கு பதில் தெரிய வேண்டும்”

சுற்றுமுற்றும் அயர்ந்திருந்த முகங்கள் அசைந்து ஆமோதித்தன. முகத்தில் ரோமங்கள் கொண்ட ஒரு பெண்மணி வழமையான தாழ்வுணர்வு தோன்ற புன்னகைத்தார். இடுப்பு மடிப்பில் மூன்று மருக்கள். அவரை எப்போது முதலில் பார்த்தான் என்பது நினைவில்லை.

“புத்திஜீவிகளின் குழுவிடம் ஒரு ஒட்டகம் சென்றால் திரும்பி வரும்போது அது குதிரை ஆகி விடும். இதன் பொருள் என்ன?”

“உண்மைக்கும் பொய்க்கும் ஆன நுட்பமான இடைவெளியைப் பற்றின …”
குறுக்கிட்டார்: “No no தத்துவத்துக்கு எல்லாம் செல்லாதே …”

“அதாவது குதிரையை நாம் ஒட்டகமாக பார்த்தோமானால் ..” அதற்கு மேல் விக்கித்தான். ஓடி விட்டால் என்ன?

“ரொம்ப ஸிம்பிள் பா, language is arbitrary … அவ்வளவு தான்”



முகத்தில் சற்று கருணை தெரியும் போது எல்லாம் கையில் நெல்லிக்காய் வைத்திருப்பது போல் உருட்டினார். தொடர்ந்து கேள்விகள் உருள தேர்வுக் குழுவினர் ஒவ்வொருவராய் விழித்துக் கொண்டனர். பலரது விழிகளை சுற்றிலும் சுருக்கங்கள். பச்சாதாபம், வெறுமை, உறுதியற்ற வெறுப்பு. ஒருவர் தைரியமாக விழிகளை மீண்டும் மூடினார். பேராசிரியரை தவிர யாரும் அவன் கண்களை சந்திக்க முற்படவில்லை. விழித்தவர் பார்வைகள் வாசலை நோக்கி நிலைத்தன. பேராசிரியர் நிறுத்திக் கொண்டதும் குறிப்புப் அட்டையில் இருந்து முதல்வர் நிமிர்ந்தார். மகிழ் அனைவருக்கும் நன்றி சொல்லி தன் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் படி கழுத்தை வளைத்து வேண்டினான். பரவலான ஆமோதிப்பு புன்னகை மற்றும் உற்சாகமான ஒத்திசைவு தலையாட்டல். மகிழுக்கு முதல் முறையாக மனிதர்கள் பால் நம்பிக்கை ஏற்பட்டது. ஒருவர் எழுந்து கதவு கூட திறந்து விட்டார்.

நேர்முகத் தேர்வு முடித்து வந்தவரிடம் மகிழ் தேனீர்க்கடையில் உரையாடினான். நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி விசாரித்ததில் யாரிடம் விலாவரியாய் கேட்கப்படவில்லை என்று அறிந்தான். பெரும்பாலும் அப்பா, அம்மா, கல்விப் பின்ன்ணி போன்ற கேள்விகளே. வந்தவர்களில் ஒருவர் மட்டும் பெண் பால். சற்று குள்ளமாய் கூரிய மூக்கு குறுகிய இடையுடன் தெரிந்தாள். அவளை நோக்கும் அனைவரின் பார்வையிலும் ஒரு தாலாட்டு தெரிந்தது. இந்த சந்திப்பில் மகிழுக்கு நிறைய நண்பர்கள் வாய்த்தார்கள். “வேலை உங்களுக்கே கிடைக்கட்டும்” என்று அவனை வாழ்த்தினார்கள். அவனுக்கு ராஜ்குமாரை அதிகம் பிடித்திருந்தது. பிற்பாடு பலமுறை சந்தித்துக் கொண்டார்கள். இருவருக்கும் ஒரே எண்ண அலைகள். குறிப்பாய் வேலை என்பது வீண் சுமை என்று நம்பினார்கள். “அந்த பாப்பாவுக்கு தான் கண்டிப்பா கொடுப்பாங்க” என்றான் ரா.குவிடம், உதட்டில் நுரை படிய கண்ணாடிக் கோப்பையை ஆட்டியபடி.

“அவருக்கு கிறித்துவர்கள் என்றால் பிடிக்காது”

மகிழ் இதைச் சொன்னதும் ரா.குவின் கண்கள் பளிச்சிட்டன. அவன் கிறித்துவன்.
“அதோட சாருக்கு பெண்கள் மீதான பலவீனத்தையும் கணக்கிடும் போது … அந்த சோன்பப்டிக்கு தான் வாய்ப்புண்ணு தோணுது”

ரா.கு புன்னகைத்தான். உரையாடல் அப்பெண்ணில் முடியும்போது அவர்கள் வழக்கமாய் ஆசுவாசித்தனர். அது ஒரு பிரியமான முற்றுப் புள்ளியாக எப்போதும் அமைந்தது.

மகிழ் அடுத்து பங்கேற்ற நேர்முகங்களில் எளிய அறிமுகக் கேள்விகள் கேட்கப்பட்டு சுறுசுறுப்பாக சம்பள பேரத்துக்கு நகர்ந்தார்கள். முக்கியமான கேள்வி: “இதுதான் நாங்க வழக்கமா தரது, ஓ.கேயா?”
இரண்டு இடங்கள் ஓகேயாகி, ஒவ்வொரு இடத்திலும் ரெண்டு மூன்று மாதங்களுக்கு மேல் அவனால் தாக்குபிடிக்க முடியவில்லை. மேலாண்மைக்கு தன்னை பிடிக்கவில்லை என்று மோப்பம் கிடைத்ததும் காரணம் சொல்லாது கிளம்பினான். “உனக்கு ஏற்ற வேலைதான் என்ன?” என்று உறவினர்கள், நண்பர்கள், பரிச்சயக்காரர்கள், கடன் தந்தவர்கள், புதிய அறிமுகங்கள் கேட்டார்கள். எளிய பதில்கள் தர பிரயாசைப்பட்டான். பதில்கள் கண்டுபிடிப்பதற்கு மற்றொரு வேலை முயலலாம் என்று அப்போது தான் முடிவெடுத்தான்.

ஒரு பிரபலமான ஊடக குழுமத்தினர் நடத்தும் எப்.எம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளதாய் தெரிய வந்தது. குழுமத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் பேராசிரியருக்கு நெருக்கமானவர்கள். ஒரு தொலைபேசி அழைப்பு போதும். வேலை நிச்சயம். பேராசிரியரை மீண்டும் அணுகினான். அப்போது தான் அது நடந்தது. அதற்கு பின் அவன் இதுவரையில் சொன்னது போல் யோசிக்கவில்லை.

தொலைபேசியில் பேராசிரியர் குரலில் கோபம் ஆறியிருக்கவில்லை. ‘அன்னிக்கு எல்லாக் கேள்விகளுக்கும் முன்கூட்டியே பதில் சொல்லித் தரல்ல? ஆனா நீ நேர்முகத்தில் சொதப்பி என் மானத்த வாங்கீட்ட”. மகிழ் மறுத்துரைக்க வில்லை. உண்மைகள் மீது சுவாரஸ்யம் இழந்திருந்தான். வீட்டுக்கு வரச்சொன்னார். “பார்க்கலாம்” என்று பட்டென்று வைத்தார். சனிக்கிழமை செல்வதாய் முடிவு.




இம்முறை அவன் துணைக்கு ரா.குவை அழைத்தான். அன்று நடந்த நேர்முகத்தில் சி.ஐ.சி கலைக்கல்லூரியில் அவனுக்கு வேலை கிடைத்ததாய் அவன் சொன்னான். மகிழ் அதற்கு மேல் உரையாடலை வளர்க்கவில்லை. ஆனால் ரா.கு ஆங்கிலத்தில் தொடர்ந்தான்: “என் பெயரால் உன் பேராசிரியர் குழம்பியிருக்க வேண்டும். என் அப்பா அந்த பிரபல கன்னட நடிகரின் பெரிய விசிறி. அப்படி அவர் இட்ட பெயரால் நான் முதன்முறையாக பயனுற்றிருக்கிறேன். இதுவரை இந்த பெயரை எப்படி வெறுத்திருக்கிறேன் தெரியுமா”. புன்னகையுடன் சிகரெட் புகையை பிசிறு பிசிறாய் வெளியிட்டான்.

சனிக்கிழமை மாலை. பேராசிரியர் வீட்டு முற்றத்தில் பல வீனோதமான தாவரத் தொட்டிகள் புதிதாக நின்றன. ஏறத்தாழ வாசலை மறித்தன. குறுக்கு நெடுக்காக எறும்புகளின் சாரிகள் வேறு. இறந்த சிறு உடல் உறுப்புகளை கலவரமின்றி சுமந்து சென்றன. வாசலில் கிடந்த நாய் பற்களை காட்டி உறுமினதால் மேற்கொண்டு வர ரா.கு மறுத்தான். நாய் மகிழை பொருட்படுத்தவில்லை. அதன் கவனம் எறும்புகள் மீது இருந்தது. வால் காற்றுக்கு தன்னிச்சையாக விசிறியது. அதில் எறும்புகள் சில பறந்தன. வெண்கல மணியின் நாவைக் காணவில்லை.

“சார்”



வரவேற்பறையில் சிறுசிறு மாற்றங்கள். குறிப்பாய் இடது சுவர் மீது ஒரு நவீன ஓவியம் பெரிதாய். சிவப்பு பின்னணி. ஒரு பெரிய கண் மட்டும் கொண்ட பெண் முகம். முகக் கோட்டுக்கு வெளியே செம்பரப்பு அலையாடியது. அவன் பார்க்க உயிர்ப்பின் சலனம்.

ஓவியத்தின் நேர் எதிரே உள்ளறையின் திரை திறந்து இருந்தது. அங்கு மேலும் சன்னமாக வெளிச்சம். எட்டிப் பார்த்தான். சோபாவில் பேராசிரியர் சாய்ந்து கிடந்தார். வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட். எதிரே டீபாயில் ஒரு கண்ணாடிக் கிண்ணம். அதில் நிறமற்ற கொழ்கொழ திரவத்தில் உலோகக் கண்கள். ஒளியின் ஊடாடல் அடிக்கடி அவனை நோக்கி வெட்டி அடித்தது.

ஒரு விகாரமான சாவை பார்த்தது போன்ற அதிர்ச்சி மற்றும் ஒவ்வாமையில் மகிழ் திரும்பி ஓடினான். பாதி நடை பாதி தாவல். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும் அவனை உத்தேசமற்று திரும்பிப் பார்த்தன. வாசலை நெருங்கிய போது நாயை மிதித்திருப்பான் – பேராசிரியரின் குரல் ஒரு பனிமூட்டம் போல், மழையின் சிறகுகள் போல் பின் எழுந்தது; அவனை அணைத்தது. நடுக்கமுற்ற, சொற்களை அசை அசையாய் உச்சரிக்கும் அதே குரல். அக்குரல் அவனை நிதானமடைய வைத்தது. நரம்புகளின் இறுக்கம் தளர்ந்தது. மிக சகஜமாக கட்டுப்படுத்தி செலுத்தியது. அரூபமாய் அவனை தொடர்ந்து பேசிக் கொண்டு வந்தார். பேச்சு என்பதை விட பித்து மனதின் சொல் ஒழுங்கு. அவனுள் புகுந்து ஒரு வாசனையை கிளர்த்தியது. வேறெப்போதும் புலப்பட்டிராதபடி அது மிகக் கூர்மையாக இருந்தது. அது தன் சொந்த வீடு என்பதாக உணர்ந்தான்.

பேராசிரியர் உடனான இறுதி சந்திப்பாக அது அமைந்தது. அவனுக்கு வேலை கிடைத்தது: பல வருடங்கள் அவன் நிலைத்த வேலை.
Read More

வலைப்பூக்களின் பால்வெளியில்

தாமரை இதழில் வலைப்பூக்கள் குறித்து ஒரு தொடர் எழுதுகிறேன். இந்த மாதம் வெளியாகி உள்ள முதல் கட்டுரை இது

செவ்வாய்க்கிழமை கவிதைகள்

தமிழ் வலைப்பூக்களை ஒரு விளக்க வளையத்துள் நுழைத்து எடுப்பது தான் இன்றைய சவால். இது ஒரு திறந்த நாட்குறிப்பேடா? இருக்கும் பட்சத்தில் அதை படிக்க வேண்டிய அவசியம் என்ன? படிப்பதற்காக எழுதப்படும் குறிப்பேடு ஒரு படைப்பாக்க பிரதி ஆகிவிடுகிறது. அல்லது பயிற்சிக்களமா, சுயபிரசுர மார்க்கம் மட்டுமா அல்லது பிரச்சார தளமா?பிற இடங்களில் இருந்து கத்தரித்து ஒட்டும் சைபர் பொதுச்சுவரா? தமிழ் வலைப்பூ வெளி முழுமையாக உருவாக வில்லை.

வலைப்பூ எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் ஒரு அணுக்கமான வெளியை ஏற்படுத்துகிறது. கால/வெளி கட்டாயங்களில் இருந்து விடுவிக்கிறது. ஒரு இணைய படைப்பு எழுதப்பட்ட உடனே பிரசுரமாகி எதிர்வினை பெற்று மற்றொரு பதிவை எழுத தூண்டி தன் அடுத்த சுழற்சிப்பாதைக்கு ஆயத்தமாகும். உயிரோசை இணைய இதழ் அனுபவத்தை பற்றி குறிப்பிடும் போது மனுஷ்யபுத்திரன் என்னிடம் “உயிர்மையை விட உயிரோசை பலருக்கும் மனதளவில் நெருக்கமானதாக உள்ளது” என்றார். இதழ் பதிவேற்றம் ஒரு நாள் தாமதமானாலே அவருக்கு தொலைபேசி அழைப்புகள் பறக்கின்றன. ஜெயமோகனின் இணைய இதழில் எதிர்வினையாற்றும் வாசகர்கள் “போதை” எனும் பொருள்பட தங்கள் ஈர்ப்பை குறிப்பிடுவதை கவனித்திருக்கிறேன். பொதுவாக விடுதிகளில் ஒரு சில அறைகளில் தினமும் அரட்டைக்காக கூட்டம் கூடும். ஒரு கட்டத்தில் அவ்வறை தனி நபரின் கட்டுப்பாடு இழந்து அரட்டை-விரும்பி கூட்டத்தின் அறையாகி விடும். எல்லா கிராமத்திலும் இத்தகைய ஒரு ஆலமரத்தடி, கடைத்திண்ணை இருக்கும்.



தொடர்ச்சியாக வாரம் ஒருமுறை ஏனும் பதிவேற்றப்படும் வலைப்பூக்கள் உயிர்ப்புடன் இருக்கும். தினசரி பதிவேற்றம் பெறும் வலைப்பூக்கள் கூட உள்ளன. இவை தகவல்களை திரட்டி தரும் அல்லது மற்றொரு வலைமனையில் இருந்து ஒரு செய்திப் பத்தியை பிய்த்து ஒட்டிக் கொள்ளும். இவற்றை பற்றி குறிப்பிடும் எஸ்.ராமகிருஷ்ணன் பதிவர்களை எழுத்தாளர்கள் மற்றும் எழுத்தாளர் அல்லாதவர்கள் என்று பிரிக்க வேண்டும் என்கிறார்.

மூன்றாவதாக தீவிர வலைப்பக்கங்களில் வாசக எழுத்தாளர்கள் என்றொரு இனம் உண்டு. மெனக்கெட்டு இலக்கிய கலாச்சார இதழ்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதும் இந்த வாசக ஆர்வலர்கள் பிரசுர ஆர்வம் மிக்கவர்கள். ஆனால் முழுஆக்க பல்டி அடிக்க எத்தனித்து ஒரு கும்பிடு மட்டும் போட்டு கிளம்பி விடுவார்கள். என் நண்பர் ஒருவர் பத்து வருடங்களுக்கு மேலாக கடிதம் எழுதுபவர். அனைத்து கடிதங்களின் பிரதிகளையும் வைத்துள்ளார். தனது பிரசுரிக்கப்பட்ட கடிதப் பகுதிகளை காட்டி ஆசிரியர்களால் கத்திரிக்கப்பட்ட பகுதிகளை குறித்து கனவு காண்பார். இணைய எழுத்தாளர்களில் எண்ணிக்கை அளவில் இவர்களே பேரினம். தமிழில் இவர்களுக்கான இரு பெரும் தேன்கூடுகள்: jeyamohan.in மற்றும் charuonline.com.

இணைய தமிழுக்கு வலைப்பூக்களின் பங்களிப்பு என்ன? தீவிர மற்றும் பயன்பாட்டு எழுத்துக்கான வெற்றிடத்தை அவை நிரப்ப முடியும். ஆங்கில இணைய தளங்களில் தீவிர நுகர்வுக்கும் தாராள வெளி உண்டு. ஆனால் தமிழில் பெரும்பான்மையானவரின் கவனம் பயன்பாட்டு மற்றும் ஜனரஞ்சக வாசிப்பு நோக்கியே உள்ளது. இந்த இடைநிலை பத்திரிகைகளின் காலத்தில் தீவிர இலக்கிய பத்திரிகைகள் கமுக்கமாக இணையத்தில் மறுவரவு நடத்த முடியும். ஆங்கிலத்தில் இத்தகைய பல பத்திரிகைகள் உள்ளன. உதாரணம் http://www.fringemagazine.org/.. Blogspot போன்ற வலைப்பூ ஆதார தளத்தில் கூட தனி நபர்களால் இத்தகைய முயற்சிகள் நடந்து வருகின்றன. உதாரணமாக, http://mordenhaikupoetry.blogspot.com/ .தமிழில் இம்முயற்சிகள் குறைவே. இத்தனைக்கும் Blogspot-இல் பத்திரிகை நடத்த எந்த செலவும் இல்லை. ஆனாலும் ஒரு பெரும் இயக்கம் இங்கு ஏன் உருவாக இல்லை? இணைய எழுத்துக்கான பாரம்பரியம் நமக்கில்லை. நம்மவர்கள் ஆனந்தவிகடன் அல்லது காலச்சுவடை பிரதியெடுக்க முயல்கிறார்கள். இரண்டாவது அதற்கான வரலாற்று மற்றும் கலாச்சார அழுத்தம் உருவாகி வர வேண்டும். சிறிதுசிறிதாக கட்டி எழுப்பப்பட வேண்டும். தீவிர தேடல் கொண்ட வலைப்பூவர்களை கண்டடைய வேண்டும். எப்படி?

மீசை முளைக்க தவிக்கும் சிறார்களை எளிதில் வலைதளங்களில் அடையாளம் காணமுடியும். இவர்களை தவிர்த்து விடலாம். பொதுவாக சினிமா செய்திகள், கிசுகிசுக்கள், படங்கள், சுயமுன்னேற்ற உளறல், பக்தி கதைகள், ஊர் நினைவுகள், நினைவேக்க பரஸ்பர சொறிதல் என்று இவர்களின் குப்பைத்தொட்டி முதுகு வளையும். இப்படி. தீவிர எழுத்து தேடி பயணிப்பவர்கள் எளிதில் சோர்ந்திடாமல் இருக்க ஒரு அசலான வலைப்பூக்களின் பட்டியல் வேண்டும். இதுவே இப்பத்தியின் நோக்கம். தெளிவான தேடல் கொண்ட தமிழ் மற்றும் ஆங்கில இணைய எழுத்தாளர்களை இலக்கியம், அரசியல், அறிவியல், கலாச்சாரம் என்று பல்வேறுபட்ட பேட்டை, சந்துகள் படி அறிமுகப்படுத்த போகிறேன். குறிப்பாய், அதிக பரிச்சயமற்றவர்களுக்கு முன்னுரிமை. இன்று \\htttp\இலக்கியம்\ கவிதை\...சாய்ராமின் “செவ்வாய்க்கிழமை கவிதைகள்”

http://poetry-tuesday.blogspot.com/




ஆசிரியர் குறிப்பு:
சாய்ராம் 33 வயது சென்னைக்காரர். தொலைக்காட்சி ஊடவியலாளர்.

ஒவ்வொரு நகரத்திலும் பக்கபலமின்றி பிழைப்புக்கு போராடும் ஒரு கூட்டம் உண்டு. ”சாந்தாராம்” எனும் இந்திய-ஆங்கில தன்வரலாற்று நாவலில் கிரகரி ராபர்ட்ஸ் ஒரு மும்பை சேரி உருவாகி அழியும் வாடிக்கை வரலாற்றை சித்தரிக்கிறார். நகரத்து விளிம்பு நிலை வாசிகளுக்கு அரசாங்கங்கள் பொறுப்பேற்பதில்லை; வெளிப்படையாக துரத்துவதும் இல்லை. ஒட்டுமொத்த சமூகம் வலுவற்றவர் மீது செலுத்தும் ஒருவித வன்முறையை அரசும் பிரயோகிக்கிறது -- புறக்கணிப்பு. வருடக்கணக்கில் பிரம்மாண்ட கட்டிட பணிகளுக்காக கொண்டு வரப்படும் தொழிலாளிகளுக்கு திருட்டு நிலத்தில், திருட்டு தண்ணீர் மற்றும் மின்சாரம் நல்கி, அரசின் மறைமுக அங்கீகாரத்துடன் தற்காலிக பொருட்களால் ஒரு சேரி உருவாக்கப்படுகிறது. இயல்பாகவே உருவாக்கும் சேரியுடன் இது சிறிது சிறிதாக இணைந்து ஆகிருதி பெருக்கிறது. அரசு இயந்திரம் அசௌகரியமாக உணரும் தோறும் சில குடில்களை பிடுங்கி, சாமான்களை வீசி எறிந்து அழிக்கும். சில வாரங்களில் இந்த சேரி வீடுகள் முளைக்கும் என்று அரசு அதிகாரிகளுக்கு தெரியும். ஆனாலும் இதுவொரு தீராத விளையாட்டு. கட்டிட வேலை நிறைவடையும் போது சேரி முழுமையாக அழிக்கப்படும். நம் சமூகம் மனித அடிப்படை உரிமைகளுக்கு இதற்கு மேல் இடமளிப்பதில்லை. இங்கு உள்ள ஒவ்வொருவரும் உயிர்வாழும் கடுமையான முனைப்பு கொண்டவர்கள் என்று அது ஏற்பதும் இல்லை. உய்வதற்கான உரிமை படி நிலைபொறுத்தே அளிக்கப்படுகிறது. அடுத்த உயிர் மீது அக்கறை இல்லாமை ஒரு சமூக நோய்மை. இது குறித்து சாய்ராம் எழுதியுள்ள ”ரோட்ல டிராபிக் ஜாம் பண்ணீட்டாளே” கவிதை முக்கியமானது. போக்குவரத்து நெரிசலின் பிளிறும் ஹாரன், வசைமாரி நடுவே சாலையில் குத்திட்டபடி ஒரு கிழவி அமர்ந்து சிரத்தையாக ஒன்று செய்கிறாள். அது யாருக்கும் புரியவில்லை. நெரிசல் ஏற்படுத்தியதற்காக சினம் அடைகிறார்கள். கிழவி எதையும் கேட்காமல் சிந்தின தன் அரிசியை பொறுக்கி மஞ்சள் பைக்குள் திணிக்கிறாள். “பைத்தியமா அவள்?” என்கிறது கவிதை. மனிதன் அப்படி இருக்கவும் நிர்பந்திக்கப்படுகிறான்.




வலைப்பூ கவிதைகளில் சாய்ராமின் படைப்புகள் அவற்றின் தீவிர தேடலால் கவனிக்கத்தக்கவை ஆகின்றன, குறிப்பாக மனித இருப்பின் நெருக்கடி பற்றிய கவிதைகள்.

இலக்கியத்தில் உருவகங்கள் மற்றும் படிமங்கள் முத்துக்குளித்து மீண்டும் மீண்டும் கண்டடையப்பட்டவை. உதாரணமாய் சாத்தான். பதிமூன்றாம் நூற்றாண்டில் கிறித்துவ சமய நெறியை பரப்ப இங்கிலாந்து பாதிரிகளால் நடத்தப்பட்ட ஒழுக்கவாத (morality) நாடகங்களில் சாத்தான் தான் கோமாளி. அதீத தீமை மற்றும் கோமாளித்தனத்தின் கலவை. விகடத்தன்மை எந்த ஒரு தீய பாத்திரத்துக்கும் மானுட எதார்த்தம் அளிப்பதை பார்த்திருக்கிறோம். இத்தகைய சாம்பல் (grey) பாத்திரங்களை பின்னர் ஷேக்ஸ்பியர் தன் கோமாளிகளில் உருவாக்கினார். அவர்கள் பொது நீரோட்டத்திற்கு எதிராக தங்களுக்கான நியாயங்களை வலுவாக முன்வைத்தார்கள். குறிப்பாக, கிங் லியரின் விதூஷகன். பின்னர் மில்டன் தனது ”இழந்த சொர்க்கம்” காவியத்தில் மானிட வார்ப்பில் உருவாக்கிய சாத்தான், தெஸ்தாவஸ்கியின் ”கரமசோவ் சகோதர்களில்” வரும் பியோடர் பாவ்லோவிச்சிலிருந்து இன்றைய வணிகசினிமாவின் எதிர்நிலை நாயகர்கள் வரை அதே பதிமூன்றாம் நூற்றாண்டு கிறித்துவ சாத்தான் உருவகத்தின் வெவ்வேறு திரிபுகள் தான். ஒரு கவிஞன் உருவகங்களை உருவாக்குவதில்லை. ஏற்கனவே உள்ள அச்சில் தனக்கேற்றாற் போல் தகவமைக்கிறான். இவ்வாறு உருவகங்களை புத்துருவாக்குவது இலக்கியத்தின் முக்கிய பணி. சாய்ராமின் கவிதைகளின் பலமும் பலவீனமும் உருவகங்களே.

பாம்பு மற்றும் புழு போன்ற உருவகங்கள் இவரது கவிதைகளில் உயிர் பெறாமல் போய் விடுகின்றன. ஆனால் ”விழிப்பே இல்லாத கனவு” கவிதையில் மேகத்தை ஒரு உருவகமாய் மீட்டெடுக்கிறார். ஒரு நாள் கவிதை சொல்லி மேகங்கள் திடீரென வேகமெடுத்து ஓடுவதை பார்க்கிறார். சில உவமைகள் மூலம் மிக நுட்பமாக இவ்வுருவகத்துக்கு வண்ணம் தீட்டுகிறார். இம்மேகங்கள் ஆற்றுத்தண்ணீர் போல், போர் விமானம், சோகம் போல், ஓவியத்தின் மீது ஊற்றப்பட்ட தண்ணீர் போல் அபரித வேகம் கொள்கின்றன. இங்கே இரண்டு விசயங்கள் கவனிக்கலாம். இழப்புகளும், கடுந்துயரமும் நேரும் போது அவை நம்மை இழுத்துச் செல்லும் வேகமே நம் இருப்பை சம்மட்டியால் நொறுக்கும். உலகமே பார்த்திருக்க ஒரு இனம் அழியலாம். எப்போதும் நம்மால் சுதாரிக்க முடியாத படியான மூர்க்கத்தில் காலம் நம் கண்மூன்னே கனவுகளை கலைக்கும். வியப்பும் ஆற்றாமையுமே எஞ்சும். அடுத்து முன்கூறிய உவமைகளில் உறைந்துள்ள வன்மத்தை கவனியுங்கள்.

“தினமும் காலையில் கண்விழித்தவுடன்
இன்றாவது மேகங்களின் போராட்டம்
முடிவிற்கு வந்து விடாதா என்கிற
ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
பார்க்க தொடங்கினேன்”.

நான் படித்ததில் ஈழப்போர் குறித்த மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று இது.

கூடுதலாக சில நுட்பமும் சுவாரஸ்யமும் கூடின சமூக அரசியல் கட்டுரைகளும் இந்த வலைப்பூவில் உள்ளன. அதிகார பரவலாக்கம் குறித்த இவரது அவதானிப்புகள் விவாதிக்கத்தக்கவை. ஈழம் மற்றும் தலித் பிரச்சனைகள் மையப்புள்ளிகள் எனலாம். “வோட்டுப் போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?“ மற்றும் ”விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம்” ஆகியவை சிறப்பான கட்டுரைகள்.

இவரது பெயரைப் பார்த்து காவி நிறமோ என்ற முதலில் துணுக்குற்றேன். ம்ஹூம்!
Read More

ஜெயமோகனின் கடுஞ்சாயா


வாழ்வில் முதன்முறையாக என் குருநாதரின் அறிவுரையை பின்பற்றி, அவர் தன் தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ... கடுஞ்சாயா (black tea) செய்து குடித்தபடி இதோ எழுதுகிறேன். ஆஹா, இந்த ஜன்னல் வழி வெளிச்சாரலை கவனித்தபடி கறுப்பு டீயை குடிக்கும் சுகம் அருமை. நாம் வழக்கமாக குடிக்கும் டீயை விடவும் இதற்கு ஒரு அலாதியான சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளது. சில நொடிகள் இளமை திரும்பி விட்டாற் போல் ஒரு உணர்வு வேறு.

குருநாதர் இந்திய டீயின் வரலாறு, பண்பாடு குறித்தெல்லாம் விரிவாக எழுதி உள்ளார். வெறுமனே இந்த அதிஅற்புத தேநீரின் செய்குறிப்பு மட்டும் தெரிந்து கொள்ள விருப்பம் கொண்டவர்கள் அவர் தளத்துக்கு சென்று தொலைந்து போக வேண்டாம். கீழே சுருக்கமாக தருகிறேன்.

1. தண்ணீரை கொதிக்க வையுங்கள்
2. குமிழ்கள் தோன்றும் முன்னரே இறக்கி விடுங்கள்
3. கால் ஸ்பூன் தேயிலை சேர்த்து கலக்குங்கள்.
4. சரியாக நாற்பது நொடிகளில் எடுத்து வடிகட்டவும்.
5. சர்க்கரை சேர்க்கவும்.

இது கீழைத்தேய தேனீராக இருக்க வேண்டும். ஆங்கில டீ முற்றிலும் மாறாக தயாரிக்கப் படுகிறது. நிமிடக்கணக்கில் கொதிக்க வைக்க்கிறார்கள். 41 நொடிகள் கொதிக்க வைத்தால் அது விஷம் என்று சீனர்கள் கருதுவதாகவும் மிருகங்களுக்கு கூட அதை கொடுக்க மாட்டார்கள் என்றும் ஜெ குறிப்பிடுகிறார். சரிதான், குரு ஒரு சந்தேகம்.

சீனர்கள் மிருகங்களுக்கு டீ கொடுப்பார்களா என்ன?
Read More

Tuesday 26 January 2010

வெறுப்பு நேசம் எனும் புதிர்கள்

ஒரு மனிதரை வெறுக்கிறோமா நேசிக்கிறோமா என்பது தான் மிக்கபெரிய புதிர் என்று நினைக்கிறேன்.

அப்பாவை நேசிப்பதை ஒரு இயல்பு மீறிய செயலாகவே நம்பி வந்துள்ளேன். பதின்பருவத்தில் ஆளுமை முதிரத் தொடங்கனதில் இருந்தே அவருடன் முரண்பட்டு வந்திருக்கிறேன். பிறகு அவரது வன்மத்தை வெறுக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என் ஆளுமையில் தெரிந்த அவரது குணாதசியங்களை வெறுக்க முனைந்தேன். சில வருடங்களுக்கு முன் அப்பா இறந்து போனார். அப்போது அவரை செத்துப் போக மாட்டாரா என்று ஏங்கிய நாட்கள் நினைவு வந்து திகைப்பூட்டின.

என் இளமையில் அப்பா மாலைகளில் ரொம்ப கொடுமைகள் செய்வார். காலையில் போதை தெளிந்து சவரம் குளியலுக்கு பின் பதிவிசாக நல்ல அப்பாவாக அவர் அலுவலகம் கிளம்பிய பின் நான் அம்மா அக்கா சேர்ந்து அவரது துஷ்டத்தனத்தை குறித்து புகார் பேசி மனதை ஆற்றுவோம். புகார் படலம் முடிந்ததும் எனக்குள் சிறு குற்றவுணர்வு ஏற்படும். காலையில் அப்பாவிடம் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். மிக சுறுசுறுப்பாக இயங்குவார். உட்காரவே மாட்டார். நடந்து கொண்டே செய்தி படிப்பார். நின்று கொண்டே சன் செய்திகள் கேட்பார். என்னை கண்டிப்பதானாலும் மிகக்குறைவான வார்த்தைகளே பேசுவார். வீட்டுக்கு யாராவது தேடி வந்தால் வாசலில் நிற்க வைத்து அவர் பாட்டுக்கு அரை மணிக்கு குறையாது பேசுவார். தினசரி சவரம் செய்து மோவாய் கறுத்திருக்கும். உலாவியபடியே அதில் எலுமிச்சம் தோல் வேறு பிசிறு படிய தேய்ப்பார். அடி, மிதி, கெட்ட வார்த்தைகளின் அப்பா மாலையிலே தோன்றுவார். அவருக்கு எதிராய் காலையின் பரிசுத்த வேளையில் ரகசிய கூட்டத்தை அவரது வீட்டுக்குள்ளே நிகழ்த்துவது தோதாக படவில்லை.



ஒரு மாலையில் டியூசன் முடித்து வீட்டுக்கு வந்தபோது அம்மா உடம்பெல்லாம் புலித்தடங்களுடன் தலையை பிடித்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குரல் அடைத்திருந்ததால் அவளால் அழ முடியவில்லை. எங்கள் வீட்டில் புதிதாய் நட்டு தினமும் தண்ணீர் விட்டு நான் வளர்த்திருந்த முருங்கைக்காய் தோற்றமுள்ள குரோட்டன் செடியை பிடுங்கி அப்பா விளாசி இருந்தார். நான் சென்று பார்த்த போது அவர் மகிழ்ச்சியாக எம்.ஜி.ஆர் பாட்டு பாடிக் கொண்டிருந்தார். ஆவேசமாக குரோட்டன்ஸ்களை பிழுது வீச மட்டுமே என்னால் முடிந்தது. பிறகு அவைகளை நறுக்கென்று முறித்தேன். அவருக்கு புற்று நோய் வரட்டும் என்று சபித்தேன். அம்மாவும் அக்காவும் கூட இதுபோல் சபித்திருக்கிறார்கள். காரணம் அப்பா வழி பாட்டி புற்று நோயால் மரித்திருந்தாள்.

அப்பா இறந்த போது என்னால் துளி கண்ணீர் கூட சிந்த முடியவில்லை. ஓரிரவு முழுக்க அவரது பிணமிருந்த கண்ணாடிப்பெட்டியை வெறித்தபடி அவரைக் குறித்து சிந்தித்தபடி இருந்தேன். சில மாதங்கள் தொடர்ந்து நள்ளிரவில் கனவில் தோன்றினார். பிறகு விழித்துக் கிடப்பேன். ஒவ்வொரு இரவும் தூங்க முயலும் போதே வியர்க்க ஆரம்பிக்கும்.

அப்பா குறித்த எந்த உவப்பான நினைவுகளும் தோன்றியதில்லை. அவை நிச்சயம் உள்ளே இருக்கும். ஆனால் மேல்தட்டின் முரண்பாடுகளும் கசப்பும் அவற்றை மேலெழாதபடி தடுக்கின்றன. ஒருவரது ஆளுமையின் பிரச்சனைகள் பெரும்பாலும் தன் பெற்றோரின் தவறான பாதிப்புகளால் ஏற்படுவதே என்று ஒரு கோட்பாடை வேறு வகுத்து வைத்திருந்தேன். அப்பாவிடம் இருந்து மீள்வதே என் வாழ்க்கைக் கடன். எப்போது யோசித்தாலும் அவரது தீமைகள், குறைபாடுகள், தவறுகள் வரிசையாக தோன்றும். உச்சி வெயிலின் தகிப்பில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு நிற்கையில் அவரைக் குறித்து நினைப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தேன்.



கடந்த சில நாட்களாக அப்பா கனவில் தோன்றிக் கொண்டிருக்கிறார். அப்போது நன்மை—தீமையின் இரு துருவங்களில் அவர் இல்லை. நடுவில் இருக்கிறார். மிக எளிதான செயல்களில் ஈடுபடுகிறார். அவற்றை ஒரு சிறுவனின் மிகை-ஆதர்சத்துடன் வியப்பாக கவனித்தபடி இருக்கிறேன். அவரது சாதாரண நடவடிக்கைகள் எனக்கு சாதனைகளாக பட்டிருக்க வேண்டும். சில கனவுகளில் அவர் என்ன செய்தார் என்பது நினைவில் இல்லை. எனக்கு கனவு மனநிலையை விட, முடிந்த பின்னான பிரக்ஞை மீதே ஆர்வம். அப்பா வந்து போன பின் மனதில் அலாதியான பூரிப்பு மற்றும் இனிமை. அப்பா ஒரு உற்சாக ஊக்கி ஆகி விட்டார்.

மனோதத்துவம் பேசும் அப்பா வெறுப்பு மன-இயல்பில் அவநம்பிக்கை கொள்கிறேன். அதை விட முக்கியமாய் அப்பா மீதான வெறுப்பு ஒரு பெரும் பொய். நான் அதை மிக கவனமாக கட்டுவித்து காப்பாற்றி வந்திருக்கிறேன்.

அவருக்காக என் வாசலை திறந்து வைத்திருக்கிறேன்.
Read More

Monday 25 January 2010

ஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதி



பலவிதங்களில் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை ஒரு முன்னோடி படம் எனலாம்.

இது தமிழின் முதல் அசலான மிகுகற்பனை, மாய-எதார்த்த படம் என்பதால்; காதல், திகில், சாகசம் போன்ற குறிப்பான வகைமைக்குள் சிக்காமல் ஒரு விரிவான காவிய பரப்பில் அமைவதால், அடிவாங்கி, தோல்வி மற்றும் ஆற்றாமை உணர்வுகளால் அடிக்கடி அழும் எதார்த்த நாயகனை காட்டியிருப்பதால் ... இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இது ஒரு மிகுகற்பனை படத்தின் சாத்தியங்களை பயன்படுத்திகிறது. உக்கிரமான பல கவித்துவ படிமங்களை இதன் வழி உருவாக்கிறது. குறிப்பாக வெறும் காட்சிபூர்வ கிளர்ச்சி என்பதையும் மீறி மாந்திரிகம் குறித்த தருணங்களை மனித ஆழ்மனதின் ரகசியங்களை பேச மிகுந்த படைப்பூக்கத்துடன் பயன்படுத்தி உள்ளது. தமிழ் ஈழ இன-அழிப்பை இந்திய அரசியல் பின்புலத்தில் விசாரிக்கும் தமிழின் முதல் திரைப்படமும் கூட.

பார்க்காதவர்களுக்கு ஒரு எளிய கதைச்சுருக்கம்

1279-இல் சோழ பேரசு வீழ்கிறது. வாரிசை கண்காணா இடத்தில் பாதுகாப்பாய் வளர்க்குமாறு அரச குரு உள்ளிட்ட ஒரு படையினரிடம் ஒப்படைத்து கூடவே பாண்டிய குலத்தவரின் குலதெய்வ சிலையையும் கொடுத்து விடுகிறார் சோழமன்னர். இந்த குழுவினர் தங்களை பின் தொடர்ந்து வருபவர்களை தடுத்து அழிக்கும் வண்ணம் பல மாந்திரிக பொறிகளை ஏற்படுத்துகின்றனர். பல நூற்றாண்டுகளாக முயன்றும் பாண்டியர்களால் அந்த வாரிசு மற்றும் சிலையை கண்டடைய முடியவில்லை. சென்றவர்கள் கண்ட பட்சத்தில் திரும்ப வில்லை. தேடல் நவீன யுகத்திலும் தொடர்கிறது. பாண்டிய குலவாரிசான அனிதா எனும் பெண் அதிகாரி மத்திய மந்திரி மற்றும் ராணுவ அதிகாரியான பிற அரச வம்சத்தவரின் துணை கொண்டு சோழர்களை அழித்தொழித்து, சிலையை மீட்க வியட்னாமில் உள்ள காட்டிற்கு செல்கிறாள். இவளுடன் ஒரு அகழ்வாராய்ச்சியாளரின் மகளான லாவண்யாவும், கூலியான முத்துவும் எதேச்சையாக இணைகிறார்கள். காட்டு குகையொன்றினுள்ன் நூற்றாண்டுகளாய் பதுங்கி வாழும் சோழப்பழங்குடிகளை பல தடைகள் தாண்டி கண்டடைகிறார்கள். அனிதா சோழமன்னனை துரோகித்து போரில் தோற்கடிக்கிறாள். மன்னனின் வாரிசை முத்து காப்பாற்றி செல்கிறான்.

இழப்பின் உரையாடல்



செல்வராகவன் படங்களில் இழப்பு மீள மீள பேசப்படும் ஒருவித மானுட வலி. ‘காதல் கொண்டேனில்’ வினோத் தான் இழந்ததாய் கருதும் குழந்தைப்பருவ பரிசுத்தத்தை பெண்ணின் அருகாமை மூலமாய் மீட்க ஏங்குகிறான். முடிவில் சுயபலி மூலம் அன்பின் தூய்மையை மீட்கிறான். ‘ரெயின் போ காலனியில்’ கதிர் தன் இறந்த காதலிக்கு கற்பனையால் உயிர்ப்பளித்து இழப்பை முன்னேற்றமாக மாற்றுகிறான்.



புதுப்பேட்டையில் அதிகாரம் மற்றும் உயிரை தக்க வைக்கும் போராட்டத்தில் தன் குழந்தையை இழக்கும் கொக்கி குமார் வாழ்வின் இறுதிவரை அதனை கண்டடைவது இல்லை. செல்வாவின் படைப்புகள் இழப்பின் மீதான் வெவ்வேறு சுருதி மீட்டல்கள் எனலாம்.




‘ஆயிரத்தின் ஒருவனில்’ வரலாற்றின் முன் இழப்பின் கொடுஞ்சித்திரம் ஒன்று தீட்டப்படுகிறது. படத்தின் ஒரு காட்சியில் தன் நண்பர்களை இழந்து அரற்றும் முத்துவிடம் லாவண்யா கூறுகிறாள்: ‘இறந்தவர்களை எண்ணி அழுதும் ஒன்று ஆகப்போவதில்லை. பேசாமல் படுத்து தூங்கு’. படம் முழுக்க பாத்திரங்கள் இப்படியான மறுப்பு மனநிலையில்தான் உள்ளார்கள்.

இழப்பில் இருந்து மீள இவர்கள் தீரா நம்பிக்கையுடன் எதிர்காலத்தின் அடுத்த தருணத்துள் குதிக்கிறார்கள். இழப்பும் மீட்பும் தொடர்ந்த இழப்புமே இவர்களின் பயணம். சோழ வாரிசை காப்பாற்ற தப்பி ஓடும் அரச கும்பல், அவர்களை பின் தொடரும் பாண்டிய வீரர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், தந்தையை தேசிச்செல்லும் மகள் லாவண்யா, சோழர்களை பழிவாங்க செல்லும் பாண்டிய குல நவீன பெண் அனிதா, தொடர்ந்து தன் தோழர்களை பறிகொடுக்கும், தன் சுய-அபிமானத்தை தொடர்ந்து இழந்து அவமானப்படும் முத்து, நூற்றாண்டுகளாய் தாய்மண்ணுக்காக இருள்குகைகளில் காத்திருக்கும் பழங்குடிக் கூட்டம் என இழந்ததை திரும்ப அடைவதற்கான மனிதர்களின் பலதரப்பட்ட பாய்ச்சல்களை படத்தில் காணலாம். முத்துவை பன்றிக்கூட்டம் என்று மேஜர் ரவி அழைக்கும் இடம் முக்கியம். அவனது ஒரே சாதனை அக்குழந்தையை காப்பாற்றுவது. ஏறத்தாழ அவனது விதிக் கடமை அது. அது தவிர அவன் ஒன்றுமேயற்ற காலத்தில் கரைந்து செல்லும் ஒரு புள்ளி மட்டுமே. ஏறத்தாழ அனைத்து பாத்திரங்களும் இப்படி உள்ளீடு அற்ற, காலத்தின் கைப்பாவைகளாகவே உள்ளனர். ஆரம்பம் முதல் இறுதி வரை அனைவரையும் ஏமாற்றம் தொடர்கிறது. இதனாலே ’திடகாத்திரமான’ நாயகனோ, வில்லனோ அற்ற முதல் படம் இது.

தளர்வான இத்திரைக்கதையை மூன்று பகுதிகளாக படத்தை பிரிக்கலாம்.

1. ஆரவாரமான ஆரம்பம். கதை பாத்திரங்கள் நிறுவ பயன்படும் படலம் இது. சாவகாசமான கால அளவில் கதை சொல்லும் படத்தின் போக்கை இப்பகுதி ஆரம்பித்து வைக்கிறது. இங்கு அறிமுகம் ஆகும் பாத்திரங்களுக்கு பின்னர் வளர்ச்சியே இல்லை எனலாம்.

2. முத்து, லாவண்யா மற்றும் அனிதா நாகரிகத்தின் பின்னோக்கி சென்று உய்வு மட்டுமே இலக்காக ஆகும் கட்டத்தில் தங்கள் மறைவான உணர்வுகளால் சுதந்திரமாக செலுத்தப்படுகிறார்கள். குளிர், பசி, தாகம், மனம் பேதலிக்க வைக்கும் ஓசைகள் என இயற்கையின் இன்னல்களை கடந்து அவர்கள் சோழ பழங்குடியை அடையும் போது ஏறத்தாழ முன் நாகரிக சூழலுக்கு சென்று விடுகிறார்கள். இப்படத்திற்கு தூண்டுதல் எனக் கூறப்படும் படமான Timeline-இல் போல் ஆ.ஒ-வில் இம்மூவரும் காலஎந்திர அறிவியல் விசித்திரங்களை பயன்படுத்துவது இல்லை. முழுக்கவே ஆழ்மனம் நோக்கிய ஒரு காலப்பயணமாக செல்வராகவன் இதை சித்திரித்துள்ளார்.

உடல் உணரும் காமம் மற்றும் பசி

குளிரைத்தாங்கும் பொருட்டு மிருகங்கள், குறிப்பாய் இளம் விலங்குகள், ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடக்கும். இப்படத்தில் லாவண்யா மற்றும் அனிதா முத்துவை கட்டிக்கொண்டு படுத்து குளிரைப் போக்கும் காட்சி வருகிறது. இது காமத்திற்காக அல்ல என்பதை கவனியுங்கள். நரமாமிசம் உண்ணும் காட்டுவாசிகளை முத்து கடக்கும் இடம் ஒன்று வரும். அப்போது குறிப்பாக அவனது அருவருப்பு மற்றும் வியப்பு கலந்த முகபாவம் காட்டப்படும். பின்னர் பாலையில் அகப்பட்டு பசியில் வாடின சூழலில் முத்து தன் இருபக்கமும் உள்ள லாவண்யா மற்றும் அனிதா பார்க்கிறான். அவனுக்கு அவர்கள் இருவரும் கோழி வறுவல் மற்றும் பீர் கோப்பையாக தெரிகிறார்கள். இரு காட்சிகளையும் தொடர்புறுத்தி பார்க்கும் போது நமக்கு முத்துவின் மனம் காலப்பயணத்தில் பின்னோக்கி வந்துள்ள தூரம் விளங்கும். சிலந்தி வகையில் பெண்சிலந்தி ஆஜானுபாகுவானது. புணர்ச்சி முடிந்ததும் சமர்த்து ஆண் சிலந்திகள் எட்ட ஓடிவிடும். இல்லாவிட்டால் களைத்த பெண்ணுக்கு பலியாக வேண்டியது தான். முத்து இங்கு பசியை முழுக்க உடலால் உணர்கிறான். மற்றொரு இடத்தில் பசி முற்றி அவனுக்கு காமம் பெருக்கெடுக்கும். அவனை சொழப்பழங்குடியினர் ஒரு பெரும் தீக்குண்டத்தின் மீது தொங்கப் போட்டு விசாரிப்பார்கள். ஆரம்பத்தில் ‘சாப்ட்டு பத்து நாளாசு ... எனக்கு பிரியாணி வேணும் பீர் கொடு ’ என்று அழுது அரற்றும் அவன் சட்டென்று அனிதாவை வன்புணர்வது குறித்த கட்டற்ற கனவு நிலைக்கு செல்கிறான். சோழமன்னன் வாளால் அவன் முதுகில் கோடுகள் கிழிக்க முத்துவுக்கு அது பெண் ஸ்பரிசத்தின் கிச்சுகிச்சாக கிளுகிளுக்கிறது. பிதற்றுகிறான். முத்து தன் நினைவிலி மனதின் ஆளுகைக்கு உள்ளாகும் காட்சிகள் மிக முக்கியமானவை.

மெல்ல நகரும் காலம்

கிளாடியேட்டரை நினைவுறுத்தும் பொதுஅரங்க களத்தில் மோதல் காட்சி ஒன்று வருகிறது. சோழபழங்குடி ராஜாங்கத்தில் அடிமைகள் பொதுமக்கள் முன்னிலையில் திற்ந்து விடப்பட்டு ஒரு ராட்சச உருவத்தினால் சங்கிலியில் பிணைக்கப்பட்ட இரும்பு குண்டு வீசி அடித்து கொல்லப்படுகிறார்கள். அங்கு பயந்து நடுங்கும் முத்துவின் மீது மூத்திரம் பீய்ச்சி அடித்து ஒரு சிறுவன் அசிங்கப்ப்டுத்துகிறான். அஞ்சாமல் போரிட தூண்டுகிறான். அப்போது சட்டென்று முத்துவின் பிரக்ஞையில் பார்வையாளர்கள், அரங்கு யாவும் மறைகிறது. காலம் மிக மெதுவாக நகர்கிறது. தன் மீது வீசப்படும் குண்டை சமாளித்து தப்ப அவனுக்கு ஏகப்பட்ட அவகாசம் கிடைக்கிறது. ராட்சத உருவத்தை எளிதில் வீழ்த்துகிறான். பிறகு உடனே பழைய பிரக்ஞை மீள்கிறது, கூடவே அவனை முன்னர் அச்சுறுத்திய அனைத்தும்: அதே பார்வையாளர்கள், கரவொலி, கூச்சல், ரத்தம், நிணம், கோரம். இந்த மனநிலையை மிகாலிசெக்சென்மிகாலி எனும் மனவியல் ஆய்வாளர் flow என்கிறார். Flow-இன் போது காலம் ஸ்லோமோஷனின்ல் போல் மிக தாமதாக இயங்கும். ஒரு விபத்தில் நீங்கள் தூக்கி வீசப்படும் போது அந்த சில நொடிகளை காற்றில் பறப்பது அரைமணி போல் துல்லியமாக உணரக்கூடும். பொதுவாக விளையாட்டில் சாதனைகள் காலம் உறையும் மனநிலையில் தான் செய்யப்படுகின்றன. ஆபத்தின் உச்சத்தில் முத்துவின் ஆழ்மனம் சட்டென்று தூண்டப்பெற்று, தற்காப்பு நடவடிக்கையாக காலத்தை மிக மெதுவாக பார்க்கத் தொடங்குகிறான். எதிரியை விஞ்ச இந்த அவகாசம் உதவுகிறது. மனித மனம் குறித்த செல்வராகவனின் இந்த அவதானிப்பு மிக் சுவாரஸ்யமானது.

படத்தில் சோழமன்னனின் பாத்திரம் மிக சமநிலையுடன் உருவாக்கப்படுள்ளது. அவன் தன் மக்களை பட்டியிட்டு வதைத்து அரண்மனை போகங்களில் மூழ்கி கிடக்கிறான். ஒரு மதலை ஏந்திய தாய் தன் முலையை பிழிந்து குருதியை பீய்ச்சி அடித்து காட்டின பின்னரே அவனுக்கு பசியின் அவலம் விளங்குகிறது. அதன் பின்னரே தான் கொண்டு வந்துள்ள மாமிசத் துண்டுகளை மக்களுக்கு வழங்கும் எண்ணமே அவனுக்கு வருகிறது. சம்போக மயக்கத்தில் தன் மக்கள் கூட்டத்தையே அவன் எதிரிக்கு பலி கொடுக்க நேர்கிறது. செல்வா இப்பாத்திரத்தை எவ்வித மதிப்பீட்டு சாய்வும் இன்றி உருவாக்கியிருக்கிறார். நம் மன்னர்கள் இப்படியே இருந்து வந்துள்ளனர் என்பது ஒரு வரலாற்று நிஜம். அந்த தாயின் முலைப் பீய்ச்சல் தான் இன்றும் புரட்சியாகவோ, தேர்தல் முடிவுகளாகவோ வெளிப்படுவது. இரவில் ராணுவத்தால் கொல்லப்பட்டு வீழும் இறுதி நொடியில் சோழமன்னன் கண்முன் கடலில் ஒரு சித்திரம் தெரிந்து மறைகிறது: தீவட்டிகள் ஏந்திய கப்பல்களில் சோழபேரசின் படைகள் அவனை காப்பாற்ற வந்துள்ளன. அவற்றை நோக்கியபடியே ஆவேசங்கொண்டு வீழ்ந்து மடிகிறான். மகுடாபிசேகம் குறித்த நூற்றாண்டுகளான சோழ கனவுடன் பிறந்த மன்னன் அக்கனவு தன் கண்களில் உறைந்திருக்க மாள்கிறான். செங்கோல் இடறிய வீழ்ச்சியை இதைவிட காத்திரமாக எப்படி காட்டுவது?

மாந்திரிகமும் மனதின் அடுக்குகளும்

இப்படத்தின் மிகுகற்பனை தன்மை பல்வெறு குறியீட்டு சாத்தியங்களை திறந்து விடுகிறது. பழம்சோழர்கள் தங்கள் பதுங்கிடம் நோக்கிய பாதையில் அமைத்துள்ள பொறிகள் கவித்துவம் மிக்க காட்சிகள். கடல், கிராமம், பாம்பு, புதைமணல், பசி, தாகம், படைவீரர் எனும் 7 மரணபொறிகள் குறியீட்டுப் பொருளில் மனித மனத்தின் பல்வேறு அடுக்குகள் தாம். இவற்றுள் மிகச்சிறந்த படிமமாக எனக்குப் படுவது தானாக திறந்து மூடும் புதைகுழிகள் நிறைந்த பாலை வெளி. இந்த மணல் வெளியில் சூரிய சந்திர உதய மற்றும் அஸ்தமனங்களின் போது விழும் நடராஜர் வடிவ நிழல் ஓடினால் மட்டுமே அங்குள்ள புதைகுழிகளில் விழாமல் தப்பிக்க முடியும். ஆழமான மனக்கிளர்ச்சி ஏற்படுத்தும் சித்திரம் இது. இதைப் போன்றே மாந்திரிகம் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் மிக கவித்துவமானவை. பரவசத்தின் எல்லைக் கோட்டை அடையும் இந்த மூன்று பாத்திரங்களின் மனம் பிறழ்வுறும் சில அலாதியான சித்தரிப்புகள் இவற்றுள் அடங்கும். இரு காட்சிகளை உதாரணமாக கூறலாம்.

சோழர்கள் குடியிருந்த ஒரு பாழடைந்த கோட்டையில் திரியும் முத்து, லாவண்யா மற்றும் அனிதாவுக்கு ஒரு இரவில் தாங்கவொண்னா ஒலியலை வரிசையில் ஓசைகள் கேட்கின்றன: உலோக முழக்கங்கள், மூதாதையரின் கூச்சல், அலறல், ஆரவாரம். காதில் ரத்தம் வர மனம் பேதலித்து ஓடுகிறார்கள். வன்முறை விருப்பு உள்ளோங்குகிறது. முத்து பெரிய இரும்பு தூண் ஒன்றை பெயர்ந்துக் கொண்டு தன் காதலி லாவண்யாவை துரத்துகிறான். கீழே விழுந்தவளின் கூந்தலை மிதித்து எக்களிப்புடன் அவளை தாக்க முனைகிறான். அப்போது அனிதா அவனை சுட, சன்னதம் கண்டவன் போல் அவளை கொல்ல துரத்துகிறாள். அவள் அந்த வன்முறையில் பெரும் கிளர்ச்சியுற்று ஒரு வனவிலங்கு போல் ஓலமிட்டு முன்னோடுகிறாள். பின்னால் லாவண்யாவும் சேர்ந்து கொள்கிறாள். சோழரின் ராஜகுரு ஒரு தீப்பந்தத்துடன் எதிரில் தோன்ற உன்மத்தத்தின் உச்சத்தில் அவர்கள் ஒவ்வொருவராய் அவர் முன் ஆடைகளை கழற்றி நிர்வாணிக்கிறார்கள். மயங்கி துவள்கிறார்கள். சால்மன் மீன்கள் நினைவு வருகின்றன. ஆற்றுநீரில் பொரியும் அவை கடலுக்கு சென்று சில வருடங்கள் வளர்ந்து முதிர்ந்த பின்னர் ஆற்றில் தாம் பிறந்த அதே இடத்துக்கு துல்லியமாக திரும்பும். அங்கு முட்டையிட்டு விட்டு, சில நாட்களில் குஞ்சுகள் பொரியும் முன்னர் இறந்து போகும். குஞ்சுகள் பின்பு கடலுக்கு பயணமாகி ஒரு கால வட்டம் அடித்து பிறப்பிடத்தில் சாக திரும்ப வரும்.

மற்றொரு கவித்துவ காட்சி சோழ மன்னனும் அனிதாவும் புணரும் காட்சி. ஆரம்பத்தில் அனிதாவை அடித்து துன்புறுத்தும் அவன் அவள் நிழலுடன் புணர்கிறான். அவளது பருவுடல் பன்மனங்கு கிளர்ச்சி உறுகிறது. நிழலின் கழுத்தைப் பற்றி நெரித்து உதடுகளை அவன் சுவைக்கும் இடம் மிக முக்கியமானது. அந்த நிழல் அவன் ஈகோ தான். புணர்ச்சியில் கற்பனைக்கு பெரும் இடம் உண்டு. நமது துணையைக் கூட ஒரு பிரதிபிம்பமாகவே காண்கிறோம். நம் நினைவின் அடுக்குகளின் ம்த்தியில் இருந்து வாசனைகளை கிளர்த்துபவர் அல்லவா வாழ்வெல்லாம் தேடும் லட்சிய காமத்துணை.

இறுதிப் போர்

3. இறுதி கட்டம் தாய்மண்னை இழக்கும் தமிழ்மனம் பற்றியது. இது இலங்கைப் போர் குறித்த ஒரு உருவகக் கதை. படம் நம்மை ஆழமாக சோகத்தில் ஆழ்த்துவது இதனாலே. உண்மையில் படத்தில் பலமும் பலவீனமும் அதுவே. ஒரு வரலாற்று உண்மையை உணர்த்துவதற்காக திரைக்கதையில் பல்வேறு பொறிகளை செல்வராகவன் சற்று வெளிப்படையாகவே வைத்திருக்கிறார்.




ஒரு இணைய விமர்சகர் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை ஆண்ட சோழரின் மொழி ஏன் ஈழத்தமிழை ஒத்துள்ளது என்று கேட்டுள்ளார். அது மட்டுமல்ல சோழரை தாக்கி அழிக்க இந்திய ராணுவ படையினர் வியட்நாம் காடுகளுக்கு வான்வழி வந்து இறங்குகிறார்கள். அவர்களுடன் ஒரு மத்திய மத்திரி வேறு துணை வருகிறார். இவர்கள் எல்லோரும் பாண்டிய வம்சாவழியினர், நூற்றாண்டுகளுக்கு முந்திய வரலாற்று கோபம் மாறாதவர்கள், வெறும் சிலை ஒன்றினை மீட்பதற்காக ஒரு நாட்டின் கஜானானை காலி செய்து போரிடுகிறார்கள் போன்ற மிக பலவீனமான காரணங்கள் படத்தில் சொல்லப்படுகின்றன. ஏன் மத்திய மந்திரி, ராணுவம் எல்லாம் திணிக்கப்ப்பட வேண்டும்? இன்று ஊடகங்களின் கண்ணைக் கட்டிக் கொண்டு அயல் நாட்டில் ராணுவம் இறக்கி ஒரு மத்திய மந்திரி போரிடுவது சாத்தியம் இல்லை. அது மட்டும் இன்றி வரலாற்று நினைவுச்சின்னங்களையே பாதுகாக்காத, தமிழை செம்மொழியாய ஆதரிக்க நெடுங்காலம் தயங்கிய வடக்க்கத்திய மத்திய அரசு சோழ வம்சம் குறித்த ஒரு வரலாற்று உண்மையை கண்டறிவதில் ஆர்வம் காட்டி செலவு செய்யும் என்பது மிகத்தமாஷான காரணம் மட்டுமே. மேலும் இந்த போரில் சோழர்களின் இனம் ஏறத்தாழ அழித்தொழிக்கப்படுவதற்கு ’உள்ளே’ இருப்பவர்களால் துரோகிக்கப்படுவது ஒரு முக்கிய காரணம். இப்படத்தில் ரெட்டை வேடதாரி தி.மு.க தலைமை என்பதும், மத்திய மந்திரி காங்கிரசின் உருவகம் என்பதும் வெளிப்படையானவை. மேலும் குறிப்பாக ராணுவத்தினரால் சோழப்பெண்கள் வன்புணரப்படும் காட்சிகளை தகவல் செறிவுடன் காட்டும் அவசியம் திரைக்கதைக்கு என்ன என்ற கேள்வி இயல்பாக எழலாம். ஈழ மண்ணில் இந்திய ராணுவத்தின் துணையுடன் நடந்த எண்ணற்ற வன்கொடுமைகளை அல்லவா இக்காட்சி சொல்ல விழைகிறது!

ஆயிரத்தில் ஒருவன்: மூலமும் இருண்மை பிரதியும்

அப்புறம் நாம் கவனிக்க வேண்டியது முத்து ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன் என்பது. அவனது ஆரம்ப காட்சிகளுக்கு பல எம்.ஜி.ஆர் பாடல்கள் பின்னணி ஆகின்றன. உடம்பில் அவர் பெயரை பச்சை குத்தி உள்ளான். எம்.ஜி.ஆருக்கும் ஈழ ஆதரவுக்கு உள்ள தொடர்பு குறித்து விவரிக்க வேண்டியதில்லை. இங்கிருந்து எம்.ஜி. ராமசந்திரனின் 1965-ஆம் ஆண்டு மூலப்படத்துடன் செல்வராகவனின் படம் உருவாக்கும் உரையாடல் எதேச்சையானது அல்ல.



மூலப் படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு எளிய மருத்துவனாக அறிமுகமாகி, பின்னர் சந்தர்ப்ப சூழல் காரணமாக அடிமையாகிறார். பல்வேறு சோதனைகளுக்கு பின் தன் சக அடிமைகளுக்கு அவர் விடுதலை வாங்கித் தருவதாக அப்படம் முடிகிறது. செல்வாவின் படத்தில் முத்து பாத்திரத்தால் தன் நண்பர்களை காப்பாற்ற முடிவதில்லை. அவன் தொடர்ந்து யாராவது ஒருவரின் ஆளுகையின் கீழ் ஒரு கைதியாகவே இருக்கிறான். ஆரம்பத்தில் ராணுவத்தின் மிரட்டலுக்கு பணிகிறான். பின்னர் லாவண்யாவின் வழிகாட்டுதல் மற்றும் அனிதாவின் துப்ப்பாக்கிக்கு கட்டுப்படுகிறான். பின்னர் சோழக்குடிகள் மற்றும் ராணுவத்திடன் தொடர்ச்சியாக சிறைபட்டு தப்புகிறான். தன் கையாலாகாத நிலைமை எண்ணி அவன் அடிக்கடி அழும் காட்சிகள் சமகால மனிதன் அதிகாரத்தின் கைதியாக இருக்க வேண்டியதன் தவிர்க்க இயலாத நிலைமை பேசுவன. போரிட்டு தோற்றபின் முத்துவால் ஒரு இனம் கண்முன் அழித்தொழிக்கப்படும் துர்கனவை மௌனமாக வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. முதலாளித்துவ தேவைகள் முன் எளிய மக்கள் சர்வசாதாரணமாக அழிக்கப்படும், அறமதிப்பீடுகள் விழுந்து விட்ட இந்த நூற்றாண்டில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மனிதன் ஒரு வெட்டவெளிக் கைதியாகவே உணர முடியும். எம்.ஜி.ஆரின் ஈஸ்ட்மேன் படத்தின் ஒரு இருண்மையான பிரதிதான் சமகால ஆயிரத்தில் ஒருவன்.



இப்படத்திலும் செல்வா ஒரு நம்பிக்கை சுடரை பொத்தி கொணர்ந்து கைமாற்றுகிறார். சோழகுலத்தின் கடைசி இளங்குருத்தை முத்து காப்பாற்றி கொண்டு செல்வதான இறுதிக் காட்சியும், இவ்வரலாறு தொடரும் என்பதான இயக்குனரின் அறிவிப்பும் ஏதோ ஒரு ரகசிய தகவலை நம்முடன் பரிமாறுகின்றன. நம் வரலாறு தொடரும் என்பதா அது?
Read More

Sunday 24 January 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 11


அம்மா தான் இத்தகைய வாதைகளில் இருந்து விடுபட்டவள் என்று நினைத்தாள்; ஏனெனில் அவளது பெற்றோர்களின் மரணத்திற்குப் பின் அரகடாகா உடனான எல்லா தொடர்புகளையும் துண்டித்திருந்தாள். அவளது கனவுகள் அவளை ஏமாற்றின.
குறைந்தது காலை சிற்றுண்டியின் போது யாரும் ஆர்வம் உடையோர் இருந்தால் அவள் சொல்வதெல்லாம் வாழைத்தோட்ட பிராந்தியம் தொடர்பான பழங்கால ஏக்க நினைவுகளுக்கு தொடர்புள்ள விசயங்களாகவே எப்போதும் இருக்கும். நிறுவனம் திரும்ப வந்த பின் மும்மடங்காக விலையை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையில் மிகச்சிரமமான வேளைகளில் எல்லாம் வீட்டை விற்காமல் தாக்குப்பிடித்து வந்திருந்தாள். கடைசியில் எதார்த்தத்தின் தாங்கவொண்ணா நெருக்கடி அவளை தோற்கடித்து விட்டது. ஆனால் ரயிலில் பாதிரியார் அந்நிறுவனம் திரும்பி வருவதாக சொல்லக் கேட்ட போது அவள் துயரமிக்க சைகை ஒன்றை செய்துவிட்டு என் காதில் கிசுகிசுத்தாள், “என்னவொரு வெட்கக்கேடு, நம்மால் இன்னும் சற்று பொறுத்து, அதிக விலைக்கு வீட்டை விற்க முடியாதே”

பாதிரியார் பேசிக் கொண்டிருக்கையில் சதுக்கம் முழுக்க நிரம்பி நின்ற கூட்டம் மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் உற்சாகமாக கச்சேரி வாசிக்கும் இசைக்குழுவினர் தென்பட்ட நகரம் ஒன்றைக் கடந்தோம். இந்த அனைத்து நகரங்களும் எனக்கு ஒன்று போலவே தோன்றின.
பாப்பலேலோ என்னை டோன் ஆண்டோனியோ போகோண்டேவின் புத்தம் புதிய ஒலிம்பிய சினிமாவுக்கு அழைத்துச் சென்ற போதெல்லாம் அங்கு காட்டப்படும் கவ்பாய் திரைப்படங்களில் வரும் ரயில்நிலையங்கள் எங்களது நிலையங்கள் போலே உள்ளதை கவனித்திருக்கிறேன். பின்னர் பாக்னரை படிக்கையில் அவரது நாவல்களில் வரும் சிறு நகரங்களும் எங்களுடையது போல் தோன்றியது. அதில் வியப்படைய ஒன்றுமில்லை; ஏனெனில் ஒருங்கிணைக்கப்பட்ட வாழைப்பழ நிறுவனத்தின் மீட்பாளர் பாணி தூண்டுதலால், ஒரு தற்காலிக முகாமின் மோஸ்தரில், கட்டியெழுப்பப் பட்டவையே அவை. சதுக்கத்திலுள்ள தேவாலயம் மற்றும் அடிப்படை வண்ணங்கள் மட்டும் தீட்டப்பட்ட தேவதைக்கதை வீடுகளையும் சேர்த்து எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தேன். வைகறையில் பாடும் கறுப்பின தொழிலாளர்களின் குழுக்கள், தோட்டங்களில் நிலக்கூலிகள் ஆர அமர்ந்து சரக்கு ரயில்கள் போவதை வேடிக்கை பார்த்தபடி இருக்கும் குடிசைகள் மற்றும் சனி இரவு கலாட்டாக்களில் வெட்டப்பட்ட தலைகள் காலையில் கிடக்கும் பள்ளங்களும் நினைவுக்கு வந்தன.



ரயில் தண்டவாளங்களின் மறுபுறம், குளிர், கோடை விடிகாலைகளில் கருகின தூக்கணாங்குருவிகளால் கறுப்பாய் தோற்றமளிக்கும் மின்சார கம்பி வேலியால் சூழப்பட்ட கோழிப்பண்ணை போன்ற அரகடகாவிலும், செவில்லகாவிலுமுள்ள ஆங்கிலேயர்களின் தனிப்பட்ட நகரங்களை ஞாபகம் கொண்டேன். மயில்களும், கௌதாரிகளும் கொண்ட அவர்களது நிச்சலமான புல்வெளிகள், சிவப்புக் கூரை, ஜன்னல்களில் கம்பிக்கிராதிகள், பனைமரங்கள், தூசு மண்டிய ரோஜாப்புதர்களிடையே பால்கனியில் உணவருந்த சிறுமேஜைகள், மடிப்பு நாற்காலிகள் உடைய குடியிருப்புகளையும் நினைவு கூர்ந்தேன். சில நேரங்களில் கம்பி வேலியினூடே மென்துகில் உடுத்து, அகன்ற பட்டுவலை தொப்பிகள் அணிந்த அழகான சோம்பலுற்ற பெண்கள் தங்கக் கத்திரிக்கோலால் தங்கள் தோட்டங்களில் பூக்கள் வெட்டுவதை காணலாம்.
Read More

Friday 22 January 2010

சு.ராவின் காற்று: வெளியேறலின் தவிப்பு



காற்று கதவை தட்டும்
முட்டும்
தாழிட்டதில்லை.

ஒருக்களித்த கதவுகள் மீது
ஆங்காரம் கொள்ளும்
திற அல்லது மூடு
எனக் கத்தும்.

எனினும் தூசு போர்த்தும்
நெடுகிலும் பரப்பும்.

எனது பெயர்
உக்கிரப்பெருவழுதி
எனக் கூறிச் செல்லும்.

சருகு உதிர்க்கும்
எனினும் தளிர் ஒடிக்கும்.

மூட ஜென்மம்.

எனினும் குருவிகளை முத்தமிடும்
அதிர்ஷ்டம் கொண்டது.


இருபதாம் நூற்றாண்டு எழுத்தில் மனிதன் எதிலாவது சிக்குண்டு வெளியேற முடியாமல் தவிக்கிறான்: சமூக, அரசியல், தத்துவார்த்த தளங்களில் இந்த வெளிவருதலுக்கான தவிப்பு சு.ராவின் கவிதைகளிலும் காணலாம். அவரது ”ஜன்னல்” சிறுகதை நினைவிருக்கலாம். இந்த சிறைபட்ட மனிதன் உள்ளே இருக்க காற்று வெளியே உலாவுகிறது. இக்கவிதை ஷெல்லியின் Ode to Westwind-ஐ நினைவுபடுத்துகிறது. அந்த ரொமாண்டிக் கவிதையில் காற்று எனும் மகாசக்தி அழிவுக்கும் பிறப்புக்கும் ஆதாரமாக காட்டப்படும். சு.ரா இங்கு மேலும் யதார்த்தமாக பேசுகிறார். சு.ராவின் நவீன காற்றால் ஆங்காரம் கொள்ள, ஜன்னலை முட்டி திற என்று கத்த மட்டுமே முடியும். எங்கும் தூசு பரத்தி தன் ’அடையாளம்’ நிறுவுகிறது. “உக்கிரப்பெருவழுதி” என்பது பெயரில் மட்டுமே.



“சருகு” உதிர்க்கும் என்பதிலுள்ள மெல்லிய கேலியை கவனியுங்கள். “தளிர்” ஒடிக்கும் எனும் போது கவிதை மெல்ல தடம் மாறுகிறது. ஒரு சமூக\அரசியல் அரசியல் தளம் உருவாகி வருகிறது. ஜெயமோகன் சொல்வது போல் சு.ரா வார்த்தைகளை சுண்டி சுண்டி தொனி மாற்றுவதில் நிபுணர். கவிதையை இங்கேயே கூட முடித்திருக்கலாம். “குருவிகளை முத்தமிடும் அதிர்ஷ்டம் கொண்டது” கூட அழகான வரிதான். இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும். “அதிர்ஷ்டம்” எனும் சொல் இவ்வரியை ஒரு அறிக்கை கூற்றாக்கி விடுகிறது. ஒரு நுண்மையான வாழ்வுக் கூறை பேசும் கவிதையில் சற்று கனமான சொல் இது. பொதுவாக சு.ராவின் மென்மையான கவிதைகளில் ‘கத்துவது’ ‘சீறுவது’ போன்ற உச்சபட்ச வினைச்சொற்கள் வலுக்கட்டாயமாக விழுகின்றன. இது ஒரு பிரச்சனையா அல்லது அவரது நடையின் ஒரு ஆபத்தற்ற கூறா?
Read More

Tuesday 19 January 2010

ஹர்பஜன் தேங்கி விட்டாரா?

சச்சின் தேங்கி விட்டதாக சொல்லி திட்டு வாங்கிய முன்னாள் இந்திய மட்டையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தற்போது மீண்டும் அதே விமர்சனத்தை ஹர்பஜன் மீது வைத்துள்ளார். சொல்லப்போனால் ஹர்பஜன் தன் ஆட்டத்திறனை மீட்டு விக்கெட்டுகள் எடுத்து வரும் கட்டத்தில் சஞ்சய் இதைச் சொல்லியிருக்கிறார். சஞ்சய் சொல்ல வருவது ஹர்பஜன் ஒரு சராசரி வீச்சாளராக உள்ளார், இன்னும் உயரங்களை எட்டவில்லை என்றே. சரி, ஹர்பஜனை எந்த உச்சவரம்பு கொண்டு மதிப்பிடுவது?



2001 ஆஸ்திரேலியா டெஸ்டு தொடரில் 32 விக்கெட்டுகள் சாய்த்த பின் ஹர்பஜனால் தனிப்பட்ட முறையில் ஆட்டங்களை வென்று கொடுக்க முடிந்ததில்லை. ஒரு கட்டம் வரை கும்பிளேவுக்கும் பின்னர் சஹீர், இஷாந்த போன்ற வேக வீச்சாளர்களுக்கும் துணை பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஆனால் முதல் நிலை வீச்சாளராக இயங்க வேண்டிய ஆட்டங்களில் அவரால் சுதாரிக்க முடியவில்லை. இந்தியாவின் தலையான சுழலர் சாய தோள் நாடி தவிக்கிறார். இதுவே சஞ்சயை காட்டமாக விமர்சிக்க வைத்துள்ளது. ஹர்பஜனை உலகத்தரம் என்பது தமிழில் உலக இலக்கியம் படைக்கிறோம் என்று பொத்தாம் பொதுவாக சொல்வது போன்றே. மேலும் தீர்க்கமாய் மதிப்பிட்டு தரம் நிறுவ உரைகற்கள் வேண்டும். பஜ்ஜியை நாம் முரளி, கும்ப்ளே மற்றும் வார்னேயோடு ஒப்பிட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட சுழல் மேதைகள் வேறுபட்ட ஆட்டமுறை கொண்டவர்கள். வார்னே சம்பிரதாய கால்சுழல் பந்தையே ஆயுதமாக கொண்டிருந்தார். நினைத்த இடத்தில், தேவைப்படும் திருப்பத்துடன், வேற்பட்ட அளவுகளில் பந்தை இறக்க அவரால் முடிந்தது. அவரது 708 விக்கெட்டுகளில் பெரும்பாலானவை ஸ்லிப்பில் மார்க் டெய்லர் பிடித்தவை அல்லது அவரது பிரம்மாண்ட திருப்பத்துக்காக ஆடி நேராக வந்த பிளிப்பர் பந்துகளில் இழந்தவை. ஐரோப்பிய மட்டையாளர்கள் வார்னேவை அவரது தொழில்வாழ்வின் இறுதிவரை ஒருவித கிலியுடனே ஆடினர். அதே போல் இறுதி வரை அவரால் துணைக்கண்ட மட்டையாளர்களை எளிதில் வீழ்த்தி சோபிக்க முடியவில்லை. வார்னேயுடன் ஒப்பிடுகையில் முரளிதரன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். அவர் மீது எந்த மட்டையாளரும் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தியது இல்லை. ஆனால் முரளியை விட வார்னே கற்பனைத் திறன் மற்றும் திட்டமிட்டு செயலாற்றும் மதிநுட்பம் மிகுந்தவர். முரளி அளவிற்கு அவர் பந்தின் திருப்பத்தை நம்பி இருக்கவில்லை. இவ்விருவரோடும் நாம் ஹர்பஜனை ஒப்பிடலாம்.



ஹர்பஜனுக்கு இயல்பாகவே சற்று அதிகம் பவுன்ஸ் கிடைக்கும். அவர் தனது பெரும்பாலான விக்கெட்டுகளுக்கு இதனையே நம்பி உள்ளார். மேற்சொன்ன இருவர் அளவுக்கு பஜ்ஜியின் பந்து திரும்பாது. அவர் அதிகம் சிந்திக்கும் வகையறாவும் அல்ல. பொறுமையும் குறைவு. பஜ்ஜியின் ஆயுதங்கள் இரண்டு. திருப்பமுள்ள ஆடுதளத்தில் உள்வரும்-வெளிச்செல்லும் பந்துகளை மாற்றி மாற்றி வீசுவார். புதிய மட்டையாளர்கள் வலதுகை என்றால் ஸ்லிப்பிலும், இடது கை என்றாலும் எல்.பி. அல்லது பவுல்ட் ஆவார்கள். ஆட்டத்திறனின் உச்சத்தில் மட்டும் அவர் வீசும் புளோட்டர் எனும் சுழன்று மிதந்து உள்வருவது போல் தோற்றம் தந்து வெளியே அல்லது நேராக செல்லும் பந்து மிகச்சிறப்பானது. ஆனால் பொதுவாக அவரது தூஸ்ரா எனும் வெளிச்செல்லும் பந்தை மட்டையாளர் கணிக்க ஆரம்பித்து விட்டால் பஜ்ஜியின் ஒரு கை ஒடிந்தது போல. இதோடு ப்வுன்ஸ் இல்லாத மெத்தனமாக தளத்தில் ஆட்டம் என்றால் ஹர்பஜன் முழுக்க சொங்கி ஆகி விடுவார். தட்டையான ஆடுதளத்தில் ஹர்பஜனின் பந்து வீச்சை வார்னே, முரளி மற்றும் கும்பிளேவோடு ஒப்பிடுவது மேலும் நமக்கு புதிய புரிதல்களை தரும்.

ஒரு உதவாக்கரை ஆடுதளத்தில் முரளிதரன் தனது கட்டுப்பாடு மற்றும் இயல்பான திருப்பம் கொண்டு சமாளிப்பார். வார்னே பந்தின் நீளம் மற்றும் கோணத்தை எதிர்பாராமல் தொடர்ச்சியாக மாற்றி மட்டையாளரை குழப்புவார். வார்னேவுக்கும் பந்தை திருப்புவது எந்த தளத்திலும் சுலபமே. மேலும் லைன் மற்றும் லெங்த் மீது அபாரமான கட்டுப்பாடு கொண்டவர் வார்னே. இவ்விருவரையும் விட வேகமாக வீசிய கும்பிளே மெத்தன தளத்தில் கூட சிறப்பான பவுன்ஸ் பெற்றார். அதுவே அவருக்கு பெரும்பாலான விக்கெட்டுகளை பெற்றுத் தந்தது. கும்பிளே லைன் விசயத்தில் கூர்மையானவர். குறை நீளத்தில் வீசுவதே அவரது ஒரே குறையாக இருந்தது. ஒரு விக்கெட்டை வீழ்த்த மணிக்கணக்காய் முயலும் அளவுக்கு இம்மூன்று மேதைகளுமே மகா பொறுமைசாலிகள். பொறுமை தன்னம்பிக்கையில் இருந்து ஊற்றெடுப்பது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். திருப்பம், கட்டுப்பாடு, கற்பனை மற்றும் பொறுமை ஆகிய நான்கிலும் ஹர்பஜனுக்கு போதாமை உண்டு. இந்த போதாமைக்கு அவரது உணர்ச்சிகரமான மன-இயல்பு ஒரு முக்கிய காரணம்.

337 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தும் ஹர்பஜன் தோல்வி மனப்பான்மை மிக்கவர். பொதுவாக ஒரு வீச்சாளரின் சம நிலையை குலைக்க மட்டையாளர்கள் ஆரம்ப ஓவர்களிலேயே ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள். ஆனால் ஹர்பஜன் விசயத்தில் சமீப தொடர்களில் ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை மட்டையாளர்கள் மற்றொரு விசித்திர தந்திரத்தை கையாண்டார்கள். அவரை மிக கவனமாக ஆடி ஆரம்ப ஸ்பெல்களில் விக்கெட்டுகள் வழங்காமல் பார்த்துக் கொண்டார்கள். விக்கெட் விழாவிட்டால் தன் பெயரை வரலாற்று நூலில் காணாத முதலமைச்சர் மாதிரி அவர் பதற்றமாவார். அவரது மன-அமைதி குலையும். விக்கெட்டுகள் வீழ்வதில் சூழல், அதிர்ஷ்டம் மற்றும் மட்டையாளரின் திறன் மற்றும் மனநிலை ஆகியவற்றின் பங்கு அதிகம். ஆனால் ஹர்பஜன் அது முழுக்க தன் தவறு என்று எண்ணியபடி அடுத்த ஸ்பெல்களில் மோசமாக் வீச ஆரம்பிப்பார். பிறகு அவரை ஆடுவது சுலபமாகி விடும். உலகில் இந்த நூதனமான முறை ஹர்பஜனுக்கு எதிராக மட்டுமே கையாளப்படுகிறது.

மேற்சொன்ன நான்கு குறைகளும் தற்போது உலக சுழலர்கள் அனைவருக்கும் உள்ள பிரச்சனை எனலாம். பிளைட், லூப் மற்றும் திருப்பத்தை நம்பி மட்டையாளனுக்கு சவால் விட எந்த சுழலருமே இன்று தயாரில்லை. அத்தகைய ஒரு சுழல் பந்து ஆதிக்க காலகட்டம் மேற்சொன்ன மூவர் அணியின் ஓய்வுடன் முடிந்து விட்டது எனலாம். இதற்கு சமீப ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் மட்டையாட்டத்துக்கு சாதகமான ஆடுதளங்களும் காரணம் எனலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் சுழல் பந்தாளர்களுக்கு சாதகமான ஆடுதளங்கள் இலங்கையை தவிர வேறு எங்குமே உருவாக்கப்படவில்லை. இந்தியா கூட தன் உள்ளூர் வெற்றிகளுக்கு வேக வீச்சாளர்களை பெரிதும் நம்ப வேண்டியதாகியது. இதுவே இன்றைய சுழலர் தலைமுறையை எதிர்மறை மனப்பான்மையுடன் ஆட வைக்கிறது.

ஹர்பஜனின் கற்பனை வறட்சி மற்றும் எதிர்மறை மனப்பான்மை ஆகியவற்றையே தேக்கம் என்று மஞ்சுரேக்கர் குறிப்பிட்டார். இதை உலக கிரிக்கெட் பந்துவீச்சுக்கு நேர்ந்துள்ள பொதுவான பின்னடைவின் விளைவு என்பதே தகும்.
Read More

Tuesday 12 January 2010

வசையின் உத்தேசம் என்ன: அசோகமித்திரனின் ”முக்தி”

அவதூறு மற்றும் பழிச்சொற்களுக்கு குற்றம் சுமத்தப்பட்டவர் மட்டுமே காரணம் அல்ல. மழைப்பருவத்தில் சென்னை மாநகரின் வெள்ளப்பெருக்கிற்கு மழை மட்டுமே காரணம் இல்லை அல்லவா. அவகாசம் கிடைக்கிற போது யார் பக்கமாவது சாக்கடையை திருப்பி விட அல்லது சில துளிகளை பன்னீர் தெளிக்க நமக்கு விருப்பமாக உள்ளது. பெரும்பாலும் யாரும் விதிவிலக்கு அல்ல என்று நினைக்கிறேன்.

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு ரயில் பயணத்தில் ஒரு தீவிர இலக்கிய வாசகரை சந்தித்தேன். விசித்திரம் என்னவென்றால் அவர் ஆறாம் வகுப்புக்கு மேல் படித்திருக்க இல்லை. இலக்கிய அமைப்புகள், கூட்டங்கள், ஆசான்களின் வெளிச்சமும் அவர் மீது விழுந்திருக்க இல்லை. அவர் ஒரு மீனவர். படகில் கடலுக்கு போகும் போது பொழுது போக்காக தீவிர இலக்கியம் அறிமுகம் ஆகியிருக்கிறது. குறிப்பாய், தனக்குள் உள்ள கல்வி வெற்றிடத்தை இலக்கிய வாசிப்பால் நிரப்பும் ஆவேசம் அவரிடம் இருந்தது. அவருடைய மச்சினிச்சி கூடவே வந்திருந்தார். அவர் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்திருந்தார். குடும்ப எதிர்ப்பை மீறி கன்னியாஸ்திரி ஆகி, தற்போது காசியில் ஊனமுற்ற குழந்தைகளுக்காக நாளும் 12 மணி நேரம் மகத்தான சேவை புரிந்து வருகிறார். நான் சொல்ல வரும் விசயம் இரவு ஒன்பது மணிக்கு மேல் நடந்தது. அதுவரை ஆண்களின் புத்தக தர்பார். முடிந்து, அரை வெளிச்சத்தில் மீனவ நண்பரின் மனைவியும் அவரது சகோதரியான கன்னியாஸ்திரியும் எதிரெதிர் இருக்கைகள் அமர்ந்தபடி சம்பாஷணையை ஆரம்பித்தனர். விரல்களை கோர்த்தபடி, கண்கள் வெளிச்சம் கொள்ள ... அவரது உடல் மொழி சிறிது சிறிதாக மாற்றம் கொள்ள ஆரம்பித்தது: துறவு பாவனையின் கண்ணியம் தளர்ந்தது, உபதேசியின் தொனி கிசுகிசுப்பாகியது. அவரது உலகு பன்னிரண்டு வருடங்களுக்கு பின்னால் உருண்டது. மிகுந்த ஈடுபாட்டுடன் அவர்கள் உரையாடியது எதைக் குறித்து? குடும்பத்து மற்றும் அண்டையிலுள்ள பெண்களின் குசும்பு, அழிச்சாட்டியம், குதிகால் வெட்டு, ரகசியங்கள், துரோகங்கள் ... இப்படி.



சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் செரியன் குரியன் ஒரு வகுப்பில் வந்ததுமே இதை சொன்னார்: “வரும் வழியில் ஒரு ஜோடி இறுக்கமாக முத்தமிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தேன். உங்களுக்கு அதைப் பார்த்தால் என்ன தோன்றியிருக்கும்? எப்படி எதிர்வினை ஆற்றுவீர்கள்?”. அவரவர் உலகில் இருந்ததபடி இசொற்களின் ஊடாக யோசித்தோம். கோபம், அருவருப்பு, சிரிப்பு இப்படியாக உணர்வுகள்.



செரியன் அவரால் மட்டுமே சொல்லக்கூடியதாக அவரே நம்பின அப்பதிலை சொன்னார்: “கோபமுற்று கத்தி இருப்பீர்கள். குறைந்த பட்சம் முணுமுணுத்திருப்பீர்கள், எதிர்ப்புணர்வை ஒரு பெருமூச்சாகவாவது வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் அந்த இடத்தில் இல்லையே என்ற பொறாமையில் விளைந்த கோபம்”. மூன்று வருடங்களுக்குப் பிறகு சென்னை மவுண்ட் சாலையில் ஒரு திரையரங்கில் இவ்விளக்கம் எனக்கு நினைவூட்டப்பட்டது. படம் போரடிக்க ஏறத்தாழ காலியான அந்த அரங்கில் பக்கவாட்டாக சற்று சங்கடமான அமைவில் என் காதலியை அணைத்துக் கொண்டேன். படம் மேலும் இழுவையாக அவளை ஆவேசமாக முத்தமிடத் தொடங்கினேன். இருக்கை ஸ்பிரிங் விடாமல் அழுதது. காரியத்தில் கண்வைத்தபடியே அந்த அழுகையை நிப்பாட்ட முயன்ற போது ஒருவர் குறுக்கிட்டார். கையில் ஒரு துப்பாக்கியை கற்பித்தபடி அவர் சற்று உரக்க கேட்ட போது தான் அவரை கவனிக்கவே செய்தேன். “என்ன நடக்கிறது இங்கே? இது தியேட்டர் தானே?”. சுதாரித்து யோசித்து வார்த்தைகளை தேட வேண்டாமா? அதற்குள் அவராகவே “போலீசை அழைக்கிறேன்” என்றார். அவர் சிரிப்பு போலீஸ் என்று விளங்க ஆரம்பித்ததும் வெளியே சென்று வாசலில் நின்றபடி நுண்பேசியில் எண்களை தேடுவதாக பாவித்தார். நொந்தபடி அரங்கை விட்டு கிளம்பினோம். இத்தனை வருடங்களாகியும் அந்த திரையரங்கு பக்கமே செல்லவில்லை. இருக்கைகளை மாற்றியிருக்க மாட்டார்கள். செரியன் மேரி மக்தலீனை காப்பாற்ற ஏசு ஏவிய பஞ்ச் வசனத்தை குறிப்பிட்டிருந்தார். அந்த விவிலிய கதையின் வெளிச்சத்தில் அசோகமித்திரன் ஒரு கர்ண பரம்பரை கதை எழுதியுள்ளார்: முக்தி. ஓம் சக்தி இதழில் வெளியானது. பயங்கர சுவாரசியமானது.

ஒரு நல்ல மன்னர். மக்களிடம் நல்ல பேர். அவருக்கு நல்ல குருநாதர் வேறு இந்த நல்ல என்கிற சொல்லை கவனியுங்கள். ராஜாவுக்கு குழந்தைப் பேறு இல்லை. குருவிடம் வினவ அவர் மன்னரின் பாவம் காரணம் என்கிறார். அதை அவருக்கு காண்பிக்கவும் செய்கிறார். பாவ மலை. இத்தனையையும் கரைக்க என்ன செய்ய? அப்போது மன்னருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குரு ஒரு உபாயம் சொல்கிறார்: “ஊருக்கு வெளியே ஒரு அரண்மனை கட்டு. அதில் ஒரே ஒரு அறை மட்டுமே. அங்கு நீ உன் மகளுடன் தனியாக ஒவ்வொரு இரவையும் கழிக்க வேண்டும்”. மன்னர் பின்பற்றுகிறார். காலம் உருண்டோட ராஜா இரவை அரண்மனையில் கழிக்காதது குறித்து மக்கள் முணுமுணுக்கிறார்கள். தற்போது வளர்ந்து பேரழகியாக நிற்கும் அரசகுமாரியை ஒரு வெளியூர் நபர் எதேச்சையாக அந்த தனியான அரண்மனை உப்பரிகையில் பார்த்து பரபரப்பாய் விசாரிக்க ஒரு சின்ன கலவரமெ ஆரம்பிக்கிறது. மக்கள் ஆளாளுக்கு முக்காடிட்டு மறைவாக சென்று பேரழகியை பார்த்து வருகிறார்கள். இவளுடனா ராஜா தினமும் இரவை கழிக்கிறார்? மகளுடன் தந்தை உடல் உறவு கொள்வதாக அவர்களின் கற்பனை வெடித்து கிளம்புகிறது. குருநாதரை தவிர அனைவரும் அவரை வைகிறார்கள். மன்னரின் பாவம் குறைய ஆரம்பிக்கிறது. அப்புறம் அவரது காதுபடவே விமர்சிக்கிறார்கள். இன்னும் வேகமாய் குறைகிறது.



கடைசியில் ஒரு கைப்பிடியே பாவம் மிஞ்சுகிறது. அதை எப்படி கரைப்பது? அப்போது பார்த்து குருநாதர் கண்களில் அரசகுமாரி படுகிறாள். அசந்து போய் அதைப் பற்றியே யோசித்தபடி இருக்கும் கு.நாவுக்கு சட்டென்று இடறுகிறது: “இந்த மன்னன் தான் மகாபாவி ஆயிற்றே. இவனை ஒரு சிறுபெண்ணுடன் தனி அறையில் வைத்து எப்படி நம்புவது”. தாபம் கோபம் எல்லாம் சேர்ந்து கொள்ள நேரே அரசசபைக்கு சென்று நிற்கிறார்: “மன்னா, பெற்ற பெண்ணையே எப்படி நீ இப்படி செய்யலாம் ...” இப்படியான குருவின் தொடர்ந்த தரவிறக்கம் முடியும் போது மன்னன் அசந்து போகிறான். கடைசி பிடி பாவமும் போயாயிற்று! அவன் குருவிடம் சொல்லும் கடைசி வசனம் முக்கியம்: “என் மீது பிறரை அபவாதம் கூற வைத்தே தூய்மையாக்கி விட்டீர்கள். ஆனால் தாங்கள் பாவியாகி விட்டீர்களே குரு!”

கொஞ்சம் தண்டவாளம் தாவி, மற்றொரு விசயத்திற்கு ... இறந்து போன எழுத்தாளர்களின் அழுக்குகளை உயிருடன் உள்ளவர்கள் அம்பலமாய் அலசுவது, தொங்க போடுவது அல்லது பதனப்படுத்துபது குறித்து இங்கே விளக்க விரும்புகிறேன். பதில் சொல்ல அவர்கள் உள்ள பட்சத்தில் பாவம் எவ்வளவு குவிந்திருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் அப்பம் தின்னட்டும். நாங்கள் பூமியில் குழி எண்ணுகிறோம். இதையெல்லாம் யார் புரிந்து கொள்கிறார்கள்!
Read More

Sunday 10 January 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 10



ஒருவேளை அந்த மொத்த ரயிலிலும் நாங்கள் மட்டுமே பயணிகளாய் இருந்திருப்போம்; அதுவரையிலும் எதுவுமே எனக்கு நிஜமான சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை. "ஆகஸ்டில் வெளிச்சத்தின்" மந்தத்துக்குள், இடைவிடாது புகைத்தபடி, ஆனால் அடிக்கடி வேகமாக பார்வையை வீசி நாங்கள் கடந்து செல்லும் இடங்களை அடையாளம் கண்டவாறு, ஆழ்ந்தேன்.

நீண்ட சீட்டி ஒலியுடன் ரயில் உப்பு சதுப்பு நிலங்களை கடந்து. எலும்புகளை உதற வைக்கும் சிவப்புப்பாறை இடைவழி நிலத்தின் மீது முழுவேகத்தில் சென்றது; அங்கு தொடர்வண்டிகளின் செவிடாக்கும் சத்தம் தாங்கவொண்ணா விதமாக இருந்தது; ஆனால் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு பின், வண்டி வேகம் குறைந்து தோட்டங்களின் நிழல்மண்டிய குளிர்மைக்குள் விவேகமான மௌனத்துடன் நுழைந்தது; காற்று மண்டலம் மேலும் அடர்த்தியானது; பின்னெப்போதும் கடற்காற்றை உணர முடியவில்லை. வாழைத் தோட்ட பிரதேசத்தின் ஆசிரம எல்லையின் மாயமண்டலத்துள் நுழைந்து விட்டோம் என்பதை அறிய நான் என் வாசிப்பை தடை செய்ய வேண்டி இருக்கவில்லை.
உலகம் மாற்றம் கொண்டது. சரிச்சீரமைவுடைய முடிவடையாத வாழைத் தோட்ட பாதைகள் இருபுறங்களிலாய் விரிந்து சென்றன; அவ்வழியே வாழைத் தண்டுகள் ஏற்றப்பட்ட காளை வண்டிகள் நகர்ந்து கொண்டிருந்தன. பயிரிடப்படாத இடங்களில் திடீரெனத் தோன்றின செங்கல் முகாம்கள், ஜன்னலின் கரடுமுரடான திரைச்சீலைகள் கொண்ட, கூரையிலிருந்து மின்விசிறிகள் தொங்கும் அலுவலகங்கள் மற்றும் போப்பி வயலில் ஏகாந்தமாய் நிற்கும் மருத்துவமனை ஒன்றும் இருந்தன. ஒவ்வொரு ஆற்றிற்கும் அதற்கென ஒரு கிராமமும், ஒரு இரும்பு பாலமும் இருந்தன; அப்பாலத்தில் சிதறடிக்கும் விசில் சத்தததுடன் ரயில் கடக்கையில் ஐஸ் போன்று சில்லிட்ட நீரில் குளிக்கும் இளம்பெண்கள் ஷாட்மீன் போல் மின்னலென மறையும் மார்புகளால் பயணிகளை நிலைகுலைய செய்தபடி தாவினர்.



ரியோபிரியோ நகரத்தில் அந்நாட்டிலேயே பெரிதான, சுவையில் சிறந்ததான பேரிக்காய்கள் திணித்த மூட்டைகளை சுமந்து கொண்டு பல அரசுவாக் குடும்பங்கள் ரயிலில் ஏறினர். உட்கார இடம் தேடி தொடர்வண்டிக்குள் மேலும் கீழுமாய் தயக்கத்துடன் அலைந்தனர்; ஆனால் ரயில் மீண்டும் நகர ஆரம்பித்த போது சிறுகுழந்தையை வைத்திருந்த வெள்ளைகாரியும் ஒரு பாதிரியாருமே மிச்சமிருந்தார்கள். அந்த குழந்தை மீதமுள்ள பயணத்தில் எப்போதும் அழகையை நிறுத்தவில்லை. பாதிரியார் ஒரு ஆய்வு பயணிக்கான பூட்ஸ், தலைக்கவசம் மற்றும் சொரசொரப்பான துணியால் செய்யப்பட்ட, கப்பற்பாய் போன்று சதுர வடிவிலான, அங்கங்கே ஒட்டுப்போட்ட நீண்ட இறுக்கமான அங்கி ஒன்றை அணிந்திருந்தார்; குழந்தை அழும் நேரத்தில் அவரும் பெசினார், எப்போதும் எதோ தேவாலய உரைமேடையில் பேசுவது போல். வாழைப்பழ நிறுவனம் திரும்பி வருவதற்கான சாத்தியப்பாடே அவரது உரையின் மையப்பொருளாக இருந்தது. அது போன பின் வேறெதையும் பற்றி அந்த பிரதேசத்தில் பேசப்படவில்லை. எல்லோரும் அது திரும்ப வரவேண்டும் என்றும், வேண்டாம் என்றும் கருத்துரீதியாக முரண்பாட்டாலும், அதன் மறுவருகை நிச்சயம் என்றே கருதினர். பாதிரியார் அதன் மீள்வருகைக்கு எதிராக இருந்தார். மேலும் அவர் தன் நிலைப்பாட்டை மிகவும் தனிப்பட்ட ஒரு விவாதத்தில் வெளிப்படுத்தியதை அப்பெண்கள் படுமுட்டாள்தனம் எனக்கருதினர். “அந்நிறுவனம் போகும் இடம் எல்லாம் நசிவை விட்டுச் செல்கிறது”. அவர் சொன்ன ஒரே சுவாரஸ்யமான விசயம் அதுதான்; ஆனால் அவரால் அதை விளக்க முடியவில்லை; இறுதியில் சிறுகுழந்தையுடன் வந்திருந்த பெண் கடவுள் அவருடன் கருத்தொற்றுமை கொள்ள மாட்டார் என்று சொல்லி அவரை குழப்பினாள். நினைவு ஏக்கம், எப்போதும் போல், கெட்ட நினைவுகளை வழித்து துடைத்து நீக்கி, நல்லவற்றை பெரிதாக்கி காட்டி விட்டது. அதன் தாக்குதலில் இருந்து யாரும் தப்பிக்க இல்லை. ஆண்கள் தங்கள் வீட்டு வாசற்படியில் அம்ர்ந்திருந்ததை ரயில் ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது; அவர்கள் எதற்காக் காத்திருந்தனர் என்று அறிந்து கொள்ள அவர்கள் முகத்தை நோக்கினாலே போதும். கற்கள் பாவிய கடற்கரையில் துணி துவைத்துக் கொண்டு இருந்த பெண்கள் ரயில் கடப்பதை அதே எதிர்பார்ப்புடனே பார்த்தனர். பிரீப்கெசுடன் வந்தடையும் ஒவ்வொரு அந்நியனும் ஒருங்கிணைந்த பழ நிறுவனத்திலிருந்து இறந்த காலத்தை மறுபடியும் ஸ்தாபிக்க வருவதாகவே அவர்கள் நினைத்தனர். ஒவ்வொரு சந்திப்பின் போதும், ஒவ்வொரு பயணத்தின் போதும், உடனேயோ பிறகோ இந்த மறைநிலை மெய்வாக்கியம் வெளிப்படும்: ”நிறுவனம் திரும்ப வரப் போவதாக் சொல்கிறார்கள்”. யார் சொன்னதென்றோ எப்போது அல்லது ஏன் என்றோ யாருக்கும் தெரியாது; ஆனால் யாரும் அது பொய்யென்று சந்தேகிக்க இல்லை.
Read More

Friday 8 January 2010

ஜெயமோகன்: வழுக்கி செல்லும் மீன்



எழுத்தாளர் யுவகிருஷ்ணா தனது பதிவொன்றில் ஜெயமோகன் இந்துமத்தை பின்நவீனத்துவ இயக்கம் என்று கூறும் கட்டுரையை கண்டித்து பகடி செய்திருக்கிறார். இப்படி ஜெ.மோவின் வலதுசாரி அரசியலை கண்டிப்பதில் ஒரு கலாச்சார காரணம் உள்ளது. அதைக் குறித்ததே இச்சிறு பதிவு.

ஜெ.மோ போன்றவர்களின் மதச்சாய்வை வாசகர் கண்டிப்பதற்கு ஒரு அரசியல் கலாச்சார காரணம் உள்ளது. ஒரு எழுத்தாளன் தீவிர வலதுசாரியாகவும் இருக்கலாம். தவறில்லை. உலக இலக்கியத்தில் இவர்களை விமர்சகர்கள் பொங்கி வடிப்பதில்லை. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் கலகத்தை வெறுத்தவர்; முடியாட்சியை, அதன் எண்ணற்ற குறைகளுடன் சேர்த்தே, ஆதரித்து எழுதியுள்ளார். எனக்குத் தெரிந்து இடதுசாரிகள் இவருக்கு எதிராக கோஷம் இட்டதில்லை.



ஆனால் இங்கு திராவிட பாரம்பரியம் அதன் எழுத்தாளர்களிடத்து இந்து மதத்தை கண்டிக்கும் போக்கை வளர்த்து விட்டது. நாகர்கோவில் பகுதியிலுள்ள ஒரு மிகப்பிரபலமான இடதுசாரி நாவலாசிரியர் குமாரகோவிலுக்கு ரகசியமாய் சென்று வருபவர். மேலும் பல தமிழ் எழுத்தாளர்கள் இப்படியான கொரில்லா பக்தியாளர்களே. அவர்கள் தங்கள் ’பக்தியை’ வெளிப்படையாக எழுத முடியாததற்கு மேற்சொன்ன திராவிட கலாச்சாரம் காரணம். மனுஷ்யபுத்திரன் தனது சமீபத்திய அகநாழிகை பேட்டியில் சொல்லியுள்ளது போல் எழுத்தாளர்கள் தங்கள் வக்கிரங்களை அல்லது மறைவான எண்ணங்களை நாற்சந்திக்கு கொண்டு வரவேண்டும். அதுவே உகந்தது.

ஜெ.மோவை நாம் அரசியல் ரீதியாக அணுகக் கூடாது; வழுக்கி விடுவார். அதற்கு அவரது ஆயுதத்தையே எடுக்க வேண்டும்: தர்க்கம்.
Read More

Wednesday 6 January 2010

வாசகர்கள்: இணையமும் அச்சுத்தளமும்

இணையத்தில் நான் செக்ஸ் குறித்து அதிர்ச்சியூட்டும்படி எழுதியிருக்கிறேன். அழகியல் மற்றும் ஒழுக்கவியலை சற்று ஒதுக்கி விட்டு அறிவியல் ரீதியாக செக்ஸ் குறித்து பேச வேண்டும் என்ற விருப்பமே காரணம். உயிரோசையில் வெளியான எனது “வால்” கதையிலும் பாலுறுப்புகளுக்கு கதாபாத்திரங்களின் அந்தஸ்து உண்டு. இணைய வாசகர்கள் இதுவரை என்னை கண்டித்ததில்லை. ஆனால் சம்பிரதாய பத்திரிகைகளில் ஒரு ஆச்சாரமான சூழல் உள்ளது. 2009 டிசம்பர் மாத உயிர்மை இதழில் வெளிவந்த எனது சிறுகதை “நித்திய கன்னிக்கு” கடுமையான கண்டனங்கள் வந்துள்ளன. ஜனவரி இதழில் பிரசுரமான கடிதங்களில் நான்கு பேர் இதை போர்னோகிராபி என்றுள்ளனர். போர்னோகிராபி மேல் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. என் கதைக்கு அத்தகுதி இல்லை என்று பவ்யமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

போர்னோ ஈடுபாடு உள்ளவர்கள் சொல்லுங்கள் -- என் கதையில் அந்தரங்க வெளியற்ற காதலர்கள் கிடைத்த சில வினாடிகளில் முத்தமிடுகிறார்கள், அவசரமாக அந்தரங்க உறுப்புகளை வருடுகிறார்கள். இதுவா போர்னோ?

இங்கு ரெண்டு விசயங்கள் கவனிக்க வேண்டும்.

இந்த விமர்சனங்களை வைத்தவர்களுக்கு போர்னோ தெரியாது. போர்னோவை அரசாங்கம் தடைசெய்து மறைவாக விற்கப்படும் வஸ்து என்ற அளவிலே புரிந்து வைத்திருக்கிறார்கள். என் கதையில் செக்ஸ் ஒரு சிறு பகுதி மட்டுமே. அதில் உள்ள மிகை விவரணைகளுக்கு (காதலியின் குறி ஈரம் அவளது தொடை எல்லாம் நனைந்து அவள் காலில் இருந்து செருப்பு வழுவிப் போகிறது) ஒரு காரணம் உள்ளது. அவனது முதல் அனுபவம் அது என்பதாலே முதல் புணர்ச்சி அனுபவம் மிகையாகவே பிரக்ஞையில் படிகிறது. முதல் முத்தம் இதனாலே பொதுவாக சிலாகிக்கப்படுகிறது.




அடுத்து நான் நேரடியாக காமத்தை சொல்லியதனால் உயிர்மை வாசகர்களில் சிலர் மஞ்சள் எழுத்து என்று விட்டார்கள். உருவக அல்லது பூடக மொழி பாலியலை படிக்கும் முதிராத வாசகனுக்கு ஒரு புத்திஜீவி சமாதானத்தை கொடுக்கிறது. அல்லது காமத்தை சித்தரித்த பின் அதன் ஒழுக்கவியல் கோணத்தை சுட்ட வேண்டும். குறைந்தது ஒரு பின்நவீனத்துவ தத்துவார்த்த நிலைப்பாடாவது வேண்டும். பாசாங்கில்லாத நேரடி காமம் பயிற்சியற்ற வாசகனுக்கு ஒரு திகைப்பை ஏற்படுத்துகிறது. புதுவையில் இருந்து கா.ஞானம் என்பவர் அவரது பதின்பருவ மகனை உயிர்மை இதழ் வாசிக்க அனுபமதித்ததாகவும், என் கதை படித்த பின் அம்முடிவு குறித்து சங்கடப்பட்டதாக குறிப்பிட்டு, “இது உயிர்மைக்கு அழகல்ல” என்று தி.மு.க தலைவர்கள் பாணியில் எச்சரித்திருக்கிறார். மனுஷ்யபுத்திரனின் நுட்பமான தலையங்கங்களின் தொகுப்பின் தலைப்பு நினைவு வந்தது: “என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்?”.

இதே டிசம்பர் உயிர்மையில் எஸ்.ரா நாகராஜனின் ”குறத்தி முடுக்கு” குறுநாவல் குறித்தான கட்டுரையில் “வேசை“ என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார் அவரது மற்றொரு சுவாரஸ்யமான பதம் “சுகப்பெண்கள்”. மார்பில் முத்தமிடுவது, ஒரு வேசை ரவிக்கை அவிழ்த்து தன் கிராக்கியிடம் மாரை வெளிப்படுத்துவது குறித்தெல்லாம் வர்ணிக்கிறார். மேற்சொன்ன வாசகரின் மகன் ’குறத்திமுடுக்கின் கனவுகள்’ படித்து விட்டு “அப்பா, நீங்கள் கற்றுக் கொடுத்ததற்கு மாறாக இப்படி வேசிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளாரே இது தவறில்லையா; அவர்கள் ஏன் ஜம்பர் அவிழ்க்கிறார்கள். ச்சீ அசிங்கம்” என்றெல்லாம் கேட்கவில்லையா? இராது. இங்கு நாகராஜனுக்கு இன்று கிடைத்துள்ள கிளாசிக் முத்திரையும், அவருக்கு எஸ்.ரா நல்கும் இலக்கிய ரீதியான அதிகார பூர்வ ஏற்பும் கறுப்புப் பூனை பாதுகாப்பு அளிக்கிறது. குழந்தைகள் படிப்பது பற்றி கருத்திற் கொள்வதானால் எஸ்.ரா இந்த முக்கியமான கட்டுரையை உயிர்மையில் வெளியிட்டிருக்கவும் முடியாது.

உயிர்மையில் வெளிவந்த என் முதல் கட்டுரையான மிருகம்-மனிதன்-எந்திரனில் எந்திரன்கள் பாலியல் தொழிலாளிகளானால் நேரும் அறவியல் குழப்பம் பற்றி பேசியிருந்தேன். அக்கட்டுரையின் அறிவார்ந்த தொனி அல்லது அறிவியல் ஒளிவட்டம் என்னை போர்னோ கண்டனங்களில் இருந்து அப்போது காப்பாற்றியது. வன்முறைக்கு வெள்ளை வேட்டி என்றால் செக்ஸுக்கு ஜுப்பா, ஜோல்னா பை.

இதே கதைக்கு இணைய வாசகர்கள் பலத்த வரவேற்பு தந்தார்கள். மதி மற்றும் கைலாஷ் ஆகிய வாசகர்கள் இப்படி கூறியிருந்தார்கள்:

உயிர்மைக்காக இல்லாமல் பிளாகுக்காகவே இதுபோன்ற படைப்புகள் எழுதலாம் அபிலாஷ் , அருமை

Excellent!.such a bold writing.
I am regular reader of your blog.
write more as you think and feel .


இணையத்தில் வாசகன் மற்றும் எழுத்தாளனுக்கு அறிவார்ந்த மற்றும் படைப்பியல் சுதந்திரம் மேம்பட்டதாக உள்ளது. ஒழுக்க போலீஸ் இல்லை. முக்கியமாக, இதை எழுதாதே என்று யாரும் வற்புறுத்தியது இல்லை. மேலும், தான் தனி இதழ் ஒன்றுக்கு செலுத்தும் 20 ரூபாய் விலை ஒரு வாடிக்கையாளர் மனோபாவத்தை அந்த வாசகருக்கு ஏற்படுத்தலாம். “ ’நித்தியகன்னி’ கதை கொஞ்சம் ஆபாசமாகவே பட்டது. இதை எப்படி உயிர்மை ஏற்றுக் கொண்டது என்றே தெரியவில்லை” என்கிறார் கீழ்கலயத்தில் இருந்து இரா.சண்முகவேல். ஒரு தீவிர வாசகன் என்றும் ஆசிரியக்குழுவின் ஒழுக்க தார்மீகத்தை கேள்வி கேட்க மாட்டான். மேலும் சொல்வதானால் ஆனந்த விகடன், குமுதம் மற்றும் குங்குமத்துக்கு “இன்னும் அதிகமாக நமீதா படங்கள், அசின் பற்றின கிசிகிசுக்கள் போடுங்கள்” என்று விடாமல் தபால் அட்டைகள் அனுப்பும் வாடிக்கையாள மனோபாவம் இது.

மனுஷ்யபுத்திரன் இத்தகைய எதிர்ப்புகளை மிக வேடிக்கையாகவே பார்க்கிறார். ஒரு தேர்ந்த வாசகரான அவர் வெறும் கிளுகிளுப்பு கதையை வெளியிடுபவர் அல்ல. இது கூட புரியாத சில வணிகஎழுத்தின் முலைகுடி மறக்காத வாசகர்களின் ஆசிரியக்குழுவையே கேள்வி கேட்கும் அகங்காரம் என்னை திகைப்படைய வைக்கிறது. முந்தைய பதிவில் சொல்லியிருந்தது போல் இவர்கள் அ-அ வகையினர். இவர்களை கையாளுவதில் ம.பு ஒரு நிபுணர். உயிர்மையில் இதைவிட வெளிப்படையான ஒரு கதை எழுத வேண்டும் என்பதே எனது அடுத்த ஆசை.
Read More

Tuesday 5 January 2010

ஜெயமோகனின் கிளி எடுத்த சீட்டு: ஊனம்

“நான் ஒரு தொழில்முறை கவிஞனே ஒழிய உணர்ச்சிகளின் கவிஞன் அல்ல.”
- மனுஷ்யபுத்திரன் (”என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ்”)



ஜெயமோகன் சமீபத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையான ”கடவுள்ளவனின் பக்திக் கவிதைகள்” ஒரு தட்டையான, முழுக்க தன்வயமான சித்திரத்தை முன்வைக்கின்றன. ஒரு வாசகனுக்கு அவர் கவிதை மீதான இரும்புத்திரையாக இவ்விமர்சனம் அமைகிறது. எப்படி என்று விளக்குகிறது இக்கட்டுரை.

ஜெயமோகனின் புரட்டுகள் இவை:

• மனுஷ்யபுத்திரன் பக்தி இலக்கியத்தின் நீட்சி. நம்மாழ்வாரின் பேரன். குணங்குடி மஸ்தானின் மறுபிறவி.

• இறைவனை அடைதலே அவரது கவிதையின் ஆதார தேவை.

• அவர் ஊனத்திலிருந்து எழுந்த குறையுணர்வு தான் அவரை தன் ஆத்மீக குறையை உணர வைத்து ஆன்மீக கவிஞராக்குகிறது.

• மனுஷ்யபுத்திரன் ஒரு எழுச்சிக்கவிஞர். அவரது கவிதைகளில் ”உணர்ச்சி கொப்புளிக்கிறது.”

பக்தி இலக்கியத்தின் நெகிழ்தல் மனுஷ்யபுத்திரனின் பொதுப்பண்பு என்று ஜெயமோகன் கூறுகிறார். நெகிழ்தலை ஜெ.மோ பிரபஞ்சத்தை புன்னகையுடன் வரித்துக் கொள்ளும் தன்மையாக புரிந்து கொள்கிறார். அதாவது ம.பு வின் படைப்பாக்க தரிசனத்தில் எதிர்மறை மற்றும் நேர்மறைப் பண்புகள் சமதளத்தில் சந்திப்பது. இதை அவர் சில குறிப்பிட்ட கவிதைகள் வழி நிறுவுகிறார். நீங்கள் வேறு எத்தனையோ கவிதைகளை காட்டி இந்த ஆழ்வார்த்தனத்தை மறுக்க முடியும். இங்கே நான் கூற விரும்புவது தன்னிலை ரீதியாக ஒரு படைப்புலகின் ஆதார சுருதியை கண்டு ’அவனா நீ’ என்று பொதுவயப்படுத்தும் பிடிவாதம் ஒரு நல்ல விமர்சன பண்பு அல்லவே என்று. பொதுவாக சிறுகுழந்தைகளிடம் காணப்படுவது இத்தகைய குணம். என் பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தை அவரை அப்பா என்று அழைக்க மறுக்கிறது. அவரைப் பார்த்ததும் விடாப்பிடியாக சூப்பின் விரலை விடுத்து “மாமா” என்கிறது.

ஜெயமோகன் சு.ராவை வெறும் பிரக்ஞை எழுத்தின் தோல்வி என்றது போல், அசோகமித்திரன் ஒரு சிறுகதையாளர் மட்டுமே என்றது போல் தான் மனுஷ்யபுத்திரன் ஒரு பக்தி கலாச்சாரத்தின் நீட்சியான கோஷ்டி வாத்தியக்காரர் என்கிறார். ஒரு படைப்பாளிக்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதி இப்படியான ஒரு விளக்கத்துக்குள் அவனை அடக்கி சீல் வைப்பதே.

தன்னிலை வாதத்தை ஆதாரமின்றி பொதுவிமர்சனமாக நீட்டிப்பதை பார்த்தோம். அடுத்து அவர் வாழ்க்கைசரிதை விமர்சன பாணியை தன்னிச்சையாக, தரவுகளின் எந்த ஆதாரமும் இன்றி பயன்படுத்துகிறார். தமிழினி வெளியீடான இலக்கிய முன்னோடிகள் வரிசையில் இக்கேள்வி கேட்கிறார்? புதுமைப்பித்தன் ஏன் தன் நாவலை பூர்த்தி செய்யவோ தன் சிறுகதைகளை அவசரமின்றி எழுதவோ இல்லை? பதிலும் தருகிறார்: காச நோயினால் ஏற்பட்ட உடல் பலவீனத்தினால். இது ஒரு எளிய கற்பிதம் அல்லது ஊகம் மட்டுமே. ஸ்டெல்லா புரூஸ் ”இரு மாயவலைகளில் சிக்கி அழிந்தவர்” ; ராஜ மார்த்தாண்டன் குடித்து கெட்டதனால் தன் இலக்கிய ஸ்தானத்தை சென்றடையாதவர். பட்டியல் ஓரத்தில் ஒருவர் தயாராக இருக்கிறார். காலம் ஆகும். லஷ்மி மணிவண்ணன். இலக்கிய சாதனையாளர்கள் அனைவரும் ஒழுக்கவாதிகள் அல்லர். தஸ்தாவஸ்கி சூதாட்ட போதையில் எழுதாத படைப்புகளையும் கடன் வைத்தவர். ஆண்டொனி டுரொலாப் எனும் பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலாசிரியர் நேர்மாறான ஒழுக்க உழைப்பாளி. அலுவலகம் போகும் முன் காலையில் ரெண்டரை மணி நேரம் எழுதுவார். காலக்கெடு முடியும் போது வாக்கியம் பாதியில் நின்றாலும் அப்பிடியே கிளம்பி விடுவார். அடுத்த நாள் காலை தான் மிச்ச வாக்கியம் முடிவடையும். கெடுவுக்கு பதினைந்து நிமிடம் முன்னாடி நாவல் முடிந்து விட்டால், “முடிவு” என்று எழுதி கோடிட்டு அடுத்த நாவல் ஆரம்பிப்பார். இப்படியாக ஐம்பதுக்கும் மேல் நாவல் மற்றும் நாடகங்கள் எழுதினார். இன்று அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன. ஒழுக்கம் மற்றும் உடல் வலு பயன்படும் என்றாலும் எழுத்தாளனை தீர்மானிப்பது அவனது தேடல் அல்லது காலத்தின் அழுத்தம். தண்டால் எடுப்பதும் தியானம் பழகுவதும் அல்ல. எழுத்தாளர்களில் ஹோமர், மில்டன், ஜேம்ஸ் ஜாய்ஸ் நொள்ளைக்கண்ணர்களின் பட்டியல் பெரிசு. இந்த குறைபாடு கொண்டு அவர்களை புரிந்து கொள்வது விமர்சனத்தின் ஆதாரமாக இதுவரை இருக்கவில்லை.



உண்மையில் சுயவரலாற்று விமர்சனம் எழுத்தாளன் குறித்த ஒரு மிகச்சின்ன திறப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது. உதாரணமாக, சார்லஸ் டிக்கென்சின் The Tale of Two Cities. இந்நாவலில் நாயகி லூசியின் வயதான அப்பா டாக்டர் அலெக்சாண்டுரே மேனெட் தவறுதலாக 18 ஆண்டுகள் பிரஞ்சு சிறைச்சாலையில் கழிக்கிறார். சிறைவாசம் அவரை பித்தாக்குகிறது. சதா செருப்புகளாக செய்து தள்ளுகிறாள். அவரது பெண் அவரை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டு வருகிறார். ஆனாலும் அடிக்கடி சிறை நினைவுகள் அவரை சித்தபிரமைக்கு ஆளாக்குகிறது; அப்போதெல்லாம் அவரது பெண்ணின் அணுக்கம் அவரை மீட்டெடுக்கிறது. இப்போது டிக்கின்சின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு வருவோம். அவர் 40 வயதில் 18 வயது நடிகை எல்லென் டெர்னன் என்பவரிடம் காதல் கொண்டு மனைவியை விவாகரத்து செய்கிறார். அவரது பொதுவாழ்வில் பெரும் சலசலப்பையும் மனஅளவில் நெருக்கடியையும் ஏற்படுத்தின உறவு இது. விமர்சகர்களின் கவுண்டவுன் ஆரம்பம் ஆகிறது. டிக்கென்ஸ் தான் டாக்டர் மென்னெட். எல்லென் அவரது பெண்ணான லூசி. சிறை? அதுதான் இருப்பதிலே தமாஷ். டிக்கென்சின் மனைவி. இப்படி ஒரு எளிய சுவாரசியம் தாண்டி சுயவரலாற்று விமர்சனம் பயனற்றது. இதில் ஒரு வன்முறையும் உண்டு. பேருண்மை நோக்கி விரியும் படைப்பாக்க தேடலை அல்லது இயக்கத்தை லௌகீக தளத்திலிருந்து பார்த்து விளக்க முடியாது. பந்து உருள்கிறது என்பதற்காக உருண்டோடுவது எல்லாம் பந்து ஆகாதே. ஜெயன் இந்த ஆதார தவறை செய்கிறார்.

மனுஷ்யபுத்திரன் புரட்சிகர இயக்கங்களில் இருந்து விடைபெறல், அவரது கவிதை இருத்தலியல் எழுத்தின் அடையாளம் இன்மையில் இருந்து தப்பித்தல் மற்றும் அவர் கைவிடப்பட்ட சமூகத்துடன் தன்னை அடையாளம் காண்பது உட்பட்ட அனைத்து கவித்துவ எழுச்சிகளுக்கும் உடல் ஊனமே காரணம் என்கிறார். இன்னும் அசட்டுத்தனம் அவர் ம.புவுக்கு உடல் ரீதியான குறையுணர்வு உள்ளதாக சொல்வது. இந்த குறையுணர்வினால் ம.பு தலைகீழாக நடந்து, மண்டையெல்லாம் சீழ் வழிய இறைவனை ஆரத் தழுவி நிறைவு கண்டவராம். இத்தனை பேசுவதற்கு குறைந்தது ம.புவின் ஒரு பேட்டியையாவது ஆதாரமாக அவர் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். வாழ்க்கை-சரிதை விமர்சனத்தின் ஒரு அராஜக உதாரணமாக மட்டுமே நாம் மேற்படியான கூற்றுகளை புரிந்து கொள்ள முடியும். அதை விட முக்கியமாக, இப்படியான ஒரு ஆதாரமற்ற தன்னிலையான முடிவுக்கு இலக்கிய விமர்சனத்தில் எந்த ஒரு மதிப்பும் இல்லை. அவரது சுயபிரகடனப்படி அவர் உள்ளுணர்வால் வழிநடத்தப்படும் விமர்சகன் என்றாலும் கூட, சரியான தரவுகளை தராமல் விவாதிப்பது ஆற்றல் விரையம் மட்டுமே. இத்தகைய தான்தோன்றித்த்னத்துக்கு அவருக்கு முன்னோடிகள் உண்டா?



தாராளமாக. “கரமசோவ் சகோதரர்கள்” நாவலில் தஸ்தாவஸ்கி நான்கு மகன்கள் சேர்ந்து (நேரடியாகவும் மறைமுகமாகவும்) தம் அப்பாவை கொல்வதைப் பற்றி சொல்லியிருப்பார். தஸ்தாவஸ்கிக்கு இழுப்பு நோய் உண்டு. அவரது அப்பா அவரை சிறுவயதில் நிறைய கொடுமைப்படுத்தி இருக்கிறார். மேலும் அவர் சிறுவனாக இருக்கும் போது அப்பாவின் வேலைக்காரர்கள் அவரை கொன்று விடுகின்றனர். மனவியலாளர் சிக்மண்ட் பிராய்டு இவை அனைத்தையும் தனது சித்தாந்தப்படி முடிச்சுப் போட்டு அறிவித்தார்: தஸ்தாவஸ்கிக்கு ஏற்கனவே அப்பாவை கொல்லும் உத்தேசம் இருந்துள்ளது. ஆக அப்பா பிறரால் கொல்லப்பட, தஸ்தாவஸ்கி கடுமையான குற்றவுணர்ச்சி அடைந்தார். விளைவாக அவருக்கு இழுப்பு வருகிறது.



இந்த குற்றவுணர்ச்சியை தாண்டி தன்னை தூய்மைப்படுத்த (ஜெ.மோவின் மொழிப்படி கசப்பில் இருந்து கனிய) கரமசோவ் சகோதரர்கள் நாவலில் புனைவின் வழி அப்பாவை மீண்டும் கொல்கிறார். ஜெ.மோவை போலல்லாது பிராயிடு ஒரு ஆதாரம் தருகிறார். பதினைந்து வயதுக்கு பிறகு அப்பா இறந்த நிகழ்வின் தொடர்ச்சியாகவே தஸ்தாவஸ்கிக்கி இழுப்பின் தாக்குதல்கள் ஆரம்பமாகின்றன. ஆனால், ஜெ.மோவைப் போன்று பிராயிடும் தன்னிலையான ஊகத்தில் இருந்து ஒரு பொதுவய முடிவுக்கு வருகிறார்: அதாவது அனைத்து மகன்களுக்கும் தங்கள் அம்மாவை அடையத் தடையாக உள்ள அப்பா மீது கொலைவெறி. ஆனால் சீக்கிரமே பிராயிடுக்கு பல்ப் கிடைத்தது. தஸ்தாவஸ்கியின் மகன் நாலு வயதிலே இழுப்பு காரணமாய் செத்துப் போனது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, ஆய்வாளர்கள் தஸ்தாவஸ்கிக்கு இருந்த இழுப்பு மரபியல் கோளாறு என்று நிறுவினர். இப்படி பிராயிடின் அப்பா-அம்மா-கொலைவெறி வடை பறிக்கப்பட்டது. இந்த நோய் பிரேமை கணினி வைரஸ் போல் எளிதில் பரவக்கூடியது; ஆபத்தானது. அசட்டுத்தனமான ஆங்கில ஆசிரியர்கள் கீட்ஸை இப்படி சவபரிசோதனை செய்வதை பார்க்கலாம். சமீபத்தில் நான் என் கல்லூரியில் மாணவர்களின் தேர்வுத்தாள்களை திருத்தும் போது இப்படியான கடுமையான ஒரு பல்முனை நோய்த்தாக்குதலுக்கு உள்ளானேன். கீட்ஸின் மரணம் குறித்த ஒரு கவிதையை (When I Have Fears) விமர்சித்த மாணவ்ர்கள் அவருக்கு புற்று நோய், மாரடைப்பு, இழுப்பு என்று ஆளாளுக்கு ஒரு நோய்ப்பட்டியலை நீட்டி இருந்தனர். காரணம் ஆசிரியர்கள் கீட்ஸின் சாஸ்வதம் குறித்த வரிகளைப் பார்த்தாலே காச நோய் பாதித்ததனாலே அப்படி எழுதினார் என்று வாழ்க்கை வரலாற்று விமர்சனத்தை நீட்டி முழக்குகிறார்கள். அவர்களுக்கு சொல்வதற்கு வேறொன்றும் இருப்பதில்லை என்பது போக இதில் ஒரு சேடிசமும், உயர்வு மனப்பான்மையும் உள்ளது. இப்படி அந்த மகாகவிஞன் ஒரு மகா நோயாளியாக ஒரு தலைமுறையின் மனதில் நிறைந்து விட்டான். அவனது ஒவ்வொரு கால்புள்ளி அரைப்புள்ளியிலும் அவர்கள் இருமலையும் மரணக்கேவலையுமே கேட்கின்றனர். ஜெயமோகன் தன் பெயர் பொறித்த சக்கர நாற்காலி ஒன்றை மனுஷ்யபுத்திரனுக்கு வலுக்கட்டாயமாக அளித்து இதுவே நீ என்கிறார்.

டொரொண்டோ பல்கலையை சேர்ந்த இயன் மற்றும் கிரேம் எனும் பேராசிரியர்களை அகதா கிறிஸ்டி எனும் பிரபல மர்ம நாவலாசிரியரின் 14 நாவல்களை ஒரு மென்பொருள் கொண்டு அலசினர். அவரது இறுதி இரண்டு நாவல்களில் வார்த்தை வளம் 30 விழுக்காடு குறைந்திருப்பதை கண்டறிந்தனர். இதன் மூலம் இவர்களின் வந்தடைந்த முடிவு என்ன? அட, அகதா கிறிஸ்டிக்கு அல்சமைர்ஸ் எனும் நினைவிழப்பு நோய் இருந்ததாம். ஜெயனுக்கு ஒரு படி முன்னே சென்று இந்த ஆய்வாளர்கள் இலக்கை எட்டி விட்டார்கள்.



லட்சியவாதம் எழுச்சிவாதத்தின் ஆதார விசை. ஜெயன் குறிப்பிடும் சமயவாத, அரசியல் எழுச்சிக்கார படைப்பாளிகள் அனைவருக்கும் இத்தகையதொரு லட்சிய சாய்வு உண்டு (இறைவன், இயற்கை, சோசலிசம்). குறிப்பாய் இவர்கள் சமகாலத்தவர்கள் அல்ல என்பதை கவனியுங்கள். லட்சியவாதம் காந்தி தலைமுறையுடன் முடிந்து விட்டது. இன்றைய நம்பிக்கை வறட்சி, அதன் மீது நிறுவப்படும் உறவுகள், உண்மையை ஊடறுக்கும் அபத்தங்கள், அவற்றை கடக்க பகடி என்று சமகால படைப்பிலக்கியம் முற்றிலும் வேறு பாதையில் செல்கிறது. நவீன கவிதையின் மொழி இறுக்கத்தை மட்டும் கொண்டுள்ள கி.மு கவிஞனாக ம.பு வகைப்படுத்துவது அவரது இரண்டாவது தவறு. எழுச்சிவாதி ஸ்திரமான திடமான மேடையிலிருந்து ஊன்றி எழுகிறான். எட்டித் தொட எத்தனிக்கும் இலக்கும் அவன் முன்னே தெரிகிறது. சமகால மனிதன் மூன் இந்த இலக்கு ஒரு புகைமூட்டமாக உள்ளது. மனுஷ்யபுத்திரன் கவிதையில் இந்த வெறுமையை காட்ட பல மேற்கோள்களை தர முடியும். ஆனால் அது ஜெயனின் தவறை பிரதியெடுப்பதாகவே முடியும். உதாரணமாக, ம.புவின் கவிதையில் “ நீ” என்பது இறைவன் என்கிறார். ஆனால் ஒரு கவிஞனின் படைப்புகளை இப்படி சுண்ணாம்படிப்பது ஆபத்தாகவே முடியும். ம.பு வின் “நீ” பல்வேறு அர்த்தப்பண்புக்ளை கொண்ட ஒரு குறியீடு. அதை கடவுளாக படிக்க முடியாத பல கவிதைகள் உள்ளன. ஒரு படைப்பாளியின் பொதுவான சில அக்கறைகளை பேசலாம். ஆனால் வலுக்கட்டாயமாக பூணூல் போடுவதும் குல்லா அணிவிப்பதும் சமநிலையற்ற விமர்சனம். எனக்குத் தெரிந்த உலக இலக்கியப் பரப்பில் எந்த முக்கிய விமர்சகனும் தனக்கு விருப்பமான வகையில் ஒரு படைப்பாளியை ஒரு கருத்து வகைமைக்குள் சுருக்குவதில்லை. அப்படியான விமர்சனங்கள் அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை.



அடுத்து ம.புவின் கவிதை தொழில்நுட்பம் நாடகீய தனிமொழி வகை என்கிறார். நாடகீய தனிமொழியின் சாயலில் ஆங்கில எழுச்சிவாத காலத்தில் கவிதைகள் எழுதப்பட்டன என்றாலும் (வெர்ட்ஸ்வொர்த்தின் Tintern Abbey), விக்டோரிய காலகட்டத்திலே அது செம்மையான வடிவம் பெற்றது. அதன் முக்கிய பண்பு கவிதை சொல்லியின் ஒரு குறிப்பிட்ட மனவியல அம்சத்தை வெளிப்படுத்துவது. மேலும் நாடகீய தனிமொழியில் ஒரு கதை இருக்கும். நல்ல உதாரணம் My Last Dutchess. மனுஷ்யபுத்திரனிடன் கதையாடல் கவிதைகள் எத்தனை? லா.சா.ராவை கதாகாலேட்சபக்காரர் என்று அடைப்புக் குறிக்குள் மாட்டுவது போல் மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு துணிக்கொடி கிளிப் மட்டுமே நாடகீய தனிமொழி. ஜெயனே குறிப்பிடும் மிகச்சிறந்த கவிதை பட்டியலில் வரும் ம.புவின் கவிதைகள் நாடகீய தனிமொழி வடிவம் பெற்றவையல்ல. அப்படியான கச்சித நா.த கவிதை அவரிடம் இல்லை என்பேன். எந்த தேர்ந்த கவிஞனையும் போல் வேறுபட்ட (கதை, ஆய்வு அறிக்கை ...) வடிவங்களை முயன்றுள்ளார். இதுதான் முத்திரை வடிவம் என்று வரையறுக்க முடியாதபடி அவை முக்கியமான கவிதைகளாகவும் உள்ளன: அரசி, உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள் ...

அடுத்து, மனுஷ்யபுத்திரனின் உணர்ச்சிகரம் குறித்து.
நாம் ஸ்திரமற்ற உண்மைகளின் யுகத்தில் வாழ்கிறோம். இன்று எங்கும் கால் பாவாத அவநம்பிக்கையுடன் அணுகுவது அல்லது உண்மைகளை நக்கலும் கிண்டலுமாக கட்டவிழ்ப்பதே சாத்தியம். அவரது ”அபாயம்” கவிதையில் வருவது போல் ஒருவரது இருப்பே பெரும் ஆசுவாசம். கொந்தளிக்கும் உண்ர்ச்சிகள் மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் அவை குறித்த ஐயப்பாடுகளுடன் தோன்றுகின்றன. உணர்வெழுச்சிகளை மறுக்கும் உணர்வுகள் என்பேன். இது சமகாலத்துக்கே உரிய தன்மை. எதிர்தரப்புடன் ஓயாது மோதி எழும் பல கவிதைகள் இவருடையவை. திருவாய்மொழி போன்ற இலக்கியங்கள் சிக்கென்று ஒரு பாதத்தை பற்றிக் கொண்டு நிலைத்து எழுச்சி கொள்கின்றன. இந்த ஒருமுகமான விசுவாசமே உணர்ச்சிகர வரிகளை சாத்தியமாக்குகின்றன. மேலும், ம.புவிடம் நாம் கவிதையென காண்பது ஒரு செய்யப்பட்ட படைப்பு. அதில் உண்ர்ச்சிகரமும் ஒரு தொழில்நுட்ப உபாயமே. சன்னதத்தில் தள்ளாடிய குறிசொல்லிகளிடம் இருந்து கவிதை இன்று நெடுந்தூரம் வந்து விட்டது. மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் நிச்சயம் உணர்ச்சிவசப்பட அனுமதிப்பதில்லை. ஜெயன் முன்னிறுத்துவது போல் ம.பு தனிப்பட்ட முறையில் சொற்களின் தாளத்தால் உத்வேகம் அடைகிறாரா கருத்தியல் தரிசனத்தை முன்வைக்கும் ஆவேசத்தால் தூண்டப்படுகிறாரா என்பதும் வாசிப்புக்கு முக்கியமல்ல. அக்கவிதைகள் நமக்குள் உள்ள ஒரு உணர்ச்சிகர மனச்சித்திரத்தை அதே தொனியில் பேசி வந்து சட்டென்று கலைத்து விடுகிறது. கவனித்தால் உணர்வெழுச்சிகளை ஐயப்படும் குரலைதான் அவரது மொழிபில் உள்ள முரண் மற்றும் மறுப்பில் காண முடியும். உரையாடுகையில் கூட அதன் சித்திரத்தை, சில சமயம் சுயசித்திரத்தை கூட, அழித்து புள்ளிகள் வைக்கிறது. மீண்டும், இதனை பிரதிநுத்துவப்படுத்தும் கவிதைகளை இங்கே தந்து வாசகனுக்கு இதுதான் யானை என்று தொட்டுக் காட்ட எனக்கு விருப்பமில்லை. வாசகர்களே அவரது கவிதைகளில் மொத்த யானையையும் பார்த்துக் கொள்ளலாம். ம.புவை தூமணி மாடத்தில் கண்வளர வைப்பது ஒரு போலி பிம்பத்தை உருவாக்குவது மட்டுமே.

மேலும் தன்னை பிரக்ஞை கழன்ற அவேசமான எழுத்தாளன் மட்டுமேயாக ஒரு கற்பிதத்தை ஜெயமோகன் தனது தன்வரலாற்று கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் வழி கட்டமைத்து வந்துள்ளார். தற்போது ம.புவை வேறு (”ஆவேச நெருப்பு பற்றிக் கொண்ட திரைச்சீலை”) இந்த பலிகுண்டத்தில் இழுத்து விடுகிறார். எழுத்து ஒரு நூதன மனநிலையில் செய்யப்படுவது. எந்த எழுத்தாளனும் தீக்குளிப்பு மனநிலையில் இல்லை. அப்படியான சித்திரம் வாசகனுக்கு கிளர்ச்சி ஊட்டினாலும் கூட அது போலியானது தான். ஒரு உதாரணத்துக்கு, சு.ராவின் மரணத்தின் போது அவரது நினைவுகளை எழுதும் ஜெயமோகன் (நினைவின் நதி) மிக இனிமையான மனநிலையிலே இருக்கிறார். இதை அவரே மேற்குறிப்பிட்ட கட்டுரையில் பதிவு செய்கிறார். இன்னும் ரெண்டு லட்சம் பேர் செத்தது பற்றி ம.பு எழுதும் போது கூட இதுவே நிகழும். வாசகனுக்கு ஜீரணிக்க சற்று சிரமம் தான் என்றாலும் இதில் தவறொன்றும் இல்லை. மற்றபடி ஜெயமோகன் சொல்கிறபடி தினசரி நடப்பதானால மனுஷ்யபுத்திரனை காப்பாற்ற தீயணைப்பு வண்டியே தேவைப்படும்.

உங்களை ஒரு துளி கண்ணீர் சிந்த, அதிர்ச்சி அடைய அல்லது சினம் கொள்ள வைக்கும் போது எழுத்தாளன் தந்திரமாய் புன்னகைக்கிறான். வணிக எழுத்தாளன் இதை மட்டுமே நம்பி உள்ளான் என்பதே அவனுக்கும் தீவிரனுக்குமான வித்தியாசம். சரி, படைப்பூக்கத்துக்கு ஆதாரமாக உள்ள அந்த உணர்ச்சி என்ன? அந்த ஆதார உணர்வை அறச்சீற்றம் அல்லது தெய்வீகத் தேடல் என்று எளிமைப்படுத்த முடியாது. எளிமைப்படுத்தும் பட்சத்தில் அப்போ சீறினீர்கள் இப்போ ஏன் சீறவில்லை என்று ஆளாளுக்கு கேள்வி கேட்பார்கள். இவை வெறும் பாமரக் கேள்விகள் அல்ல. சுந்தர ராமசாமி ”பின்தொடரும் நிழலின் குரல்” குறித்து கேட்டார்: “நியாயப்படி ஜெயமோகன் தான் ஆர்.எஸ்.எஸில் இணைந்து வெளியேறியது குறித்தல்லவா அந்நாவலை எழுதியிருக்க வேண்டும்?”.

கடைசியாக ... இந்த கிளியை யாராவது திறந்து விடுங்களேன்!

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates