Monday 31 May 2010

சுஜாதாவின் “கடவுள் வந்திருந்தார்”: தனிமையும் எந்திர நட்பும்

மே 24 மாலை ஏழு மணிக்கு சுஜாதாவின் ”கடவுள் வந்திருந்தார்” நாடகம் சென்னை கிருஷ்ணகான சபாவில் குருகுலம் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. இயக்குனர் மற்றும் மையபாத்திரமாக நடித்தவர் எம்.பி.மூர்த்தி. எம்.பி மூர்த்தி பயங்கர தன்னடக்கவாதி. எந்தளவுக்கு என்றால் தொடர்பு கொண்டு கேட்டபோது நாடகத்தை இயக்கியது தான் என்பதை ஒத்துக் கொள்ள மறுத்தார்; ஒரு மாந்திரிக எதார்த்த பாணியில், மறைந்த பூர்ணம் விஸ்வனாதன் தான் இயக்கினார் என்று தெரிவித்தார். அவர் பூர்ணமின் ஆத்மீக வழிகாட்டலை உத்தேசித்திருக்கக் கூடும். இந்நாடகம் 1975-ஆம் வருடத்தில் இருந்து பூர்ணம் விச்வநாதனின் New Theatre-ஆல் 250 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப் பட்ட ஒன்று.

”கடவுள் வந்திருந்தார்” அறிவியல் புனைவின் பூச்சு கொண்ட சமூக பகடி இந்நாடகம். ஒரு நகைச்சுவை நாடகமாக இது முழுமையான கேளிக்கை அனுபவத்தையும் தரலாம். ஒரு தனிமனிதன் தன்னை சூழ்ந்துள்ள ஆதமார்த்தமான தனிமையை உணர்ந்து கொள்ளும் பிரச்சனையும் பேசப்படுகிறது. அந்நிலையின் வெறுமையை, கசப்பை, கைவிடப்படலை பேசும் சூட்சுமமான பகுதி வெளிப்படையாக காட்டப்பட இல்லை என்பதே சுஜாதாவின் மிகப்பெரிய சாமர்த்தியம். அதாவது மையபாத்திரமான ஸ்ரீனிவாசன் ஓய்வு பெற்ற பின் சிறுக சிறுக குடும்ப உறவுகளின் மரியாதையை, சமூக பயன்பாட்டு வாழ்வின் மீதான பிடிப்பை இழந்து வரும் மனிதர். துயரம் என்னவென்றால் அவர் அதை மிக துல்லியமாய் உணர்ந்து கொள்கிறார். அல்லது மிகச் சரியாக ஏற்கனவே எதிர்பார்த்து இருந்துள்ளார். தீமையைப் போன்று தனிமை நம் வெகுஅருகில் எப்போதுமே காத்திருக்கிறது. மிகப்பலர் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தனது இடம் காலியாக உள்ளதை, அதன் விளைவாக தனிமைப்பட்டுப் போவதை உள்ளார்ந்து உணர்வதில்லை. உணர்ந்தால் கூட ஏற்றுக் கொள்வதில்லை. இந்நாடகத்தில் ஸ்ரீனிவாசனுக்கு வேலையில் இருந்து ஓய்வு தனது தனது உள்ளார்ந்த தனிமையை சுட்டும் போதி மரமாக உள்ளது. அவர் கிடைக்கிற பொழுதில், மனைவி, மகள் இல்லாத வீட்டின் தனிமையில், சுஜாதா (நாடகத்துள் வரும் எழுத்தாளர்) எழுதிய ”எதிர்காலமனிதன்” என்ற விஞ்ஞான புனைகதையை படிக்கிறார். இங்கே ஸ்ரீனிவாசன் படிப்பது செய்தித்தாளோ, எளிய பாகவத சுருக்கமோ அல்ல என்பது முக்கியம்.

அறிவியல் புனைவுகளில் கணிசமானவை விண்வெளி மனிதன் பற்றிய அலாதியான கற்பனை சித்திரங்களால் உருவாக்கப்பட்டவை. வெறுமனே விண்வெளியின் தன்மை என்றல்லாமல், விண்வெளியின் உயிர் சாத்தியப்பாடுகளே அறிவியல் புனைவிலக்கியம் அல்லது விண்வெளி ஆய்வின் ஒரு பிரதான தேடலாக உள்ளது. தனது கட்டுரை ஒன்றில் இந்த தேடலை பற்றி அவதானிக்கும் சுஜாதா அண்டத்தில் தான் மட்டுமே ஒரே மனித இனம் என்ற எண்ணம் தரும் தனிமையுணர்வு, கோடானுகோடி கோளங்கள் பூமியைச் சுற்றி அனாதையாக சுற்றுவது என்பது மனிதனுக்கு மிகுந்த பிரயாசை தரும் எண்ணமாக இருக்கலாம் என்கிறார். இந்த விண்வெளித் தனிமையை ஜீரணிக்க முடியாமல் தான் மனிதன் ஒரு சக-கோள உயிரை கற்பிக்கவோ கண்டறியவோ முனைகிறான். ஸ்ரீனிவாசன் படிக்கும் அறிவியல் புனைகதையில் காலப் பயணம் குறித்து பேசப்பட்டுள்ளது. அதாவது 2080இல் மனிதன் கால-எந்திரங்களில் எந்த நூற்றாண்டுக்கு வேண்டுமானாலும் சென்று வர முடியலாம். அப்படியான ஒரு மனிதன் இந்த நூற்றாண்டுக்கு வந்தால் அவனிடம் எதிர்காலம் குறித்து, அம்மனிதர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் குறித்து விசாரிக்கலாமே என்று அவர் சத்தமாக யோசிக்கிறார். அப்போது 2080இல் இருந்து ஒரு மனிதன் நிஜமாகவே இந்த நூற்றாண்டுக்கு ஒரு கால-எந்திரத்தில் வந்து அவர் வீட்டுக்குள் குதித்து விடுகிறான். அவனால் உருவாகும் சிக்கல்களும், குழப்பங்களுமே நாடகத்தின் பிற அங்கங்களை நகர்த்துகின்றன. உறவாட ஒரு எதிர்கால மனிதன் வரும் அளவுக்கு முதியவர் வாழ்வின் விளிம்புக்கு நகர்த்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் எதிர்கால மனிதன் மீது வெறுப்பு காட்டி, அவனை துரத்த முயன்றாலும் அவன் மீது அவர் கொள்ளும் தீவிர பிடிப்பு ஒவ்வொரு காட்சியினூடும் சுஜாதாவால் நுட்பமாக காட்டப்டுகிறது. முதிய்வர் ஆரம்பத்தில் எதிர்கால மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். மனிதப்பெயர் வைக்க வேண்டுகிறார். எண்கள் மட்டுமே அடையாளமாய் கொண்ட எ.கா மனிதனுக்கு ஜோ என்று பெயர் முடிவாகிறது. பூஜை மணியால் ஒரு முறை கிணுக்கினால் அவன் தோன்ற வேண்டும் . இரண்டு முறை என்றால் அவன் மறைந்து விட வேண்டும். பிறர் முன்னிலையில் அவனிடம் பேசுவது சங்கடமாகவும், பிரச்சனைகள் தருவதாகவும் இருப்பதால் இந்த ஏற்பாடு என்கிறார் ஸ்ரீனிவாசன். அதனால அவர் தனியாக இருக்கும் போது ஒரு மணிச்சத்தம் எழுப்புவார். ஜோ ”தனியா என்றால் என்ன” என்கிறான். தனது அகராதியில் தேடி அது ஒரு மளிகைப் பொருளாச்சே என்கிறான். முதிய்வர் “இல்லை இல்லை இது lonely” என்கிறார். ஜோ அதை அவன் மொழியில் ’லூனிமா’ என்கிறான். ஸ்ரீனிவாசன் உடனே “இங்கே எல்லாரும் லூனிமா தான் ” என்கிறார். இது நாடகத்தின் சாவி போன்ற வசனம். இறுதியில் எ.கா மனிதன் தன் காலத்துக்கு திரும்ப வேண்டி வருகையில் ஸ்ரீனிவாசன் தடுமாறிப் போகிறார். அவனை தடுக்க, மேலும் தங்கிட வைக்க போராடுகிறார். அவன் கிளம்பின உடன் பழைய மணியை எடுத்து அடித்துப் பார்க்கிறார். இந்த கையறு நிலைமை நாடகத்தின் மையக் கரு. எ.கா மனிதனால் விளையும் லௌகீக பயன்களை முதியவர் தன்னுடைய சுயவசதிக்காக பயன்படுத்திக் கொள்வதில்லை. அவனுடைய பிரிவு ஒரு லௌகீக் இழப்பல்ல. ஆதமார்த்த நிலையில் தனக்கான ஒரு பிடிப்பை, அணுக்கமான இருப்பை, பாசாங்கற்ற உறவை இழந்து விட்டதாக உணர்கிறார். இது தான் அவரது பெரும் ஆற்றாமை. அடுத்து ஜோ எனப்படும் இந்த எ.கா மனிதன் ஒரு மின்சாரம் உண்டு வாழும், கணினியால் இயக்கப்படும் எந்திரம் என்ற குறிப்பு சுவாரஸ்யமானது. அதாவது நவீன மனிதன் ஒரு எந்திரத்துடன் உறவாடும் படியாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளான் என்பது எத்தனை முக்கியமான அவதானிப்பு! இந்த நெருக்கடியின் உருவகம் தான் ஸ்ரீனிவாசன். அவர் ஒரே நிலையில் மக்களால் பைத்தியமாகவும் கடவுள் அவதாரமாகவும் பார்க்கப்படுகிறார். இந்த முரண்பாடுகளால் பிளவுபடும் சமூகமும் வேறொரு நிலையில் தனிமைப்பட்டு தான் உள்ளது. எந்திர விலைமாதுகள், மீடியா சாமியார்கள் மற்றும் விர்ச்சுவல் காம பரிவர்த்தனையின் இன்றைய காலகட்டத்தில் அறுபதுகளில் சுஜாதா பேசிய இச்சங்கதியை நாம் மேலும் மேலும் காத்திரமாக உணர்ந்து வருகிறோம்.



நாடகம் முழுக்க ஸ்ரீனிவாசன் பேசும் தன்னுரைகள் மேலும் முக்கியமானவை. அவர் எ.கா மனிதனிடம் பேசும் போது அடுத்தவர்களுக்கு அவனது உருவமோ, குரலோ பார்க்க முடியாது, கேட்காது. இதனால் முதியவ்ர் தனக்கு தானே பேசிக் கொள்வதாய் தவறாய் புரிந்து கொண்டு அவரை பைத்தியம் என்று முடிவு கட்டுகின்றனர். இந்த “பைத்திய” வசனங்களும் ஒரு வித தன்னுரைகள் தாம். அடுத்து ஸ்ரீனிவாசனின் அறிவார்ந்த நகைச்சுவை வசனங்கள். சதா தான் எதிர்கொள்ளும் மனிதர்களின் போலித்தனங்களை, அசட்டு பாவனைகளை பகடி செய்து கொண்டே போகிறார். அவரது நெருக்கடிகள் தீவிரம் ஆக ஆக இந்த பகடியும் கேலியும் மிகுதியாகிய படி செல்கின்றன. இது ஏன்? மக்கள் ஏன் உண்மையை தொடர்ந்து மறுக்கிறார்கள் என்ற வருத்தமே இந்த நகைச்சுவை தோலுரிப்பில் வெளிப்படுகிறது. ஒரு துன்பியல் பாத்திரமாக அவர் தோற்றம் கொள்ளாமல் காப்பாற்றுவது இந்த அங்கதச்சுவை மிக்க வசனங்கள் தாம். ஸ்ரீனிவாசனின் துயரம் கண்டு பார்வையாளன் உள்ளார்ந்து நுட்பமாய் இரங்கி, மனம் கலங்கினாலும் அவன் காணும் பிரதான ரசம் வேடிக்கையும், மகிழ்ச்சியும் தான். மேலோட்டமான தளத்தில் “கடவுள்வந்திருந்தார்” ஒரு எளிய வேடிக்கை நாடகமாக, horse play-ஆக தெரிவதற்கான நிறைய சந்தர்பங்கள் உள்ளன. மருத்துவர், போலீஸ், காதலன், காது டமாரமான கிழம் என்று தட்டையான, தேய்வழக்கு கதாபாத்திரங்கள் மற்றும் இவர்கள் உருவாக்கும் நகைச்சுவை சந்தர்பங்கள் ஆகியன் உயர்தர நாடகத்துக்கு உரியன அல்ல. ஆனால் ஒரு எளிய ஷெரிடன், காங்கிரீவ் அல்லது நம்மூர் கிரேசி மோகன் பாணியிலான குணாதிசய நகைச்சுவை நாடகமாக (comedy of manners) தாழ்ந்து விடாமல் உயர்த்துவது மேற்சொன்ன துன்பியல்-நகைச்சுவை அம்சம் தான். இருக்கையில் இருந்து துள்ளித் துள்ளி சிரித்தவர்களில் நுண்ணுணர்வு கொண்டவர்களை ஆழமாய் அலைகழிக்கும் ஒரு இருத்தலியல் துயரம் ஸ்ரீனிவாசனின் வரிகளிலும், அவர் சந்திக்கும் நூதனமான, மிகுகற்பனை சூழல்களிலும் உண்டு. ஆனால் ஒரு தீவிர நாடகத்தின் எந்த தோற்றமும் ஏற்பட்டு விடாமல் சுஜாதா கவனமாக எழுதியுள்ளார்.





நகைச்சுவை நாடகம் சூழ்நிலை அல்லது வசனங்களை மையமாக கொண்டு இயங்கலாம். சுஜாதா உருவாக்கும் சூழ்நிலைகள் நகைச்சுவை பாந்தமாக எப்போதும் இருப்பதில்லை. குறிப்பாக இந்நாடகத்தில் சாமர்த்தியமான மதிநுட்ப நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் தான் அவரது பலவீனமான காட்சியமைப்புகளை தாங்கி நிறுத்துகின்றன. சூழல் ரீதியான நகைச்சுவையில் வசனம் மழுங்கினாலும், நடிகர்கள் சிறிது சொதப்பினாலும் கூட காட்சியமைப்பின் சிறப்பு பார்வையாளனை சிரிப்பில் ஆழ்த்தும். பார்வையாளன் காட்சியின் தன்மையை எண்ணி அனுபவிப்பதால் நடிகர்கள் சும்மா முட்டுக் கொடுத்தாலே அவ்விடம் வெற்றியடையும். ஆனால் வசனம்-சார் நகைச்சுவையில் நடிகர்களின் டைமிங் மிக முக்கியம். பொதுவாக நடிப்பில் பிரக்ஞைபூர்வமாக இருந்தாலும் இந்நாடகத்தில் நடித்தவர்கள் டைமிங் மற்றும் குரலின் ஏற்ற இறக்கம் போன்ற வெளிப்பாட்டுகளில் சோபித்தார்கள். ஸ்ரீனிவாசனாக நடித்த எம்.பி மூர்த்தி மற்றும் மருத்துவராக நடித்த விஸ்வனாதன் ரமேஷை இவ்விசயத்தில் பாராட்ட வேண்டும். வினோதமாக சில்லறை பாத்திரங்களில் இயங்கினவர்களே மிக நன்றாக நடித்தார்கள். குறிப்பாக செவிட்டு மாமனார் பாத்திரத்தில் நடித்த விஷ்ணு மற்றும் பக்கத்து வீட்டு சேஷகிரி ராவாக வந்த ஆர்.பாஸ்கர். இருவருக்கும் உணர்ச்சி வெளிப்பட்டில் கட்டுப்பாடும் தேர்ச்சியும் இருந்தது. எம்.பி மூர்த்திக்கு சிறு இடைவேளைகளும், பார்வையாளரை நோக்கி பிரசங்கிக்க வேண்டிய கட்டங்களும் சோதனைகள் தாம்..இப்படி கியர் மாற வேண்டிய தருணங்களில் பிரக்ஞைபூர்வமாகி விடுவார். உக்கிரமான கட்டங்களில் நன்றாகவே நடித்தார். ஆனால் வெளிவந்ததும் உடனே வேறுபட்ட காட்சிக்கான மனநிலைக்கு செல்ல முடியாமல் தத்தளித்தார், சுத்த தமிழ் உச்சரிப்பை விட பிராமணத் தமிழ் பேசும் இடங்களில் தான் மிக சரளமாக நடித்து ஸ்ரீனிவாசன் பாத்திரத்துக்கு அவர் ஒரு தனி அடையாளமே தந்து விடுகிறார். குறிப்பாக, அவர் முகத்தை தொங்கப் போட்டபடி, அமர்த்தலான தொனியில் பேசும் தோரணை இந்த பாத்திரத்தை பற்றிய ஒரு நடிகருக்கான சிறந்த அவதானிப்பு எனலாம்.. ஆனால் பிற பாத்திரங்களில் வந்தவர்களின் நடிப்பு பிரக்ஞைபூர்வமாகவும் அதனால் சொதப்பலாகவும் இருந்தது. மகள் பாத்திரத்தில் வசுமதியாக நடித்தவர் ஷாந்தி கணேஷ். பிதாமகனில் வில்லனுக்கு மனைவியாக வந்தவர். அவர் நடிப்பு தான் உள்ளதிலேயே கடுமையான விஷப்பரிட்சையாக இருந்தது. எழுபதுகளில் பூர்ணம் விசுவநாதனுடன் இயங்கிய நடிகர் குழு தான் இம்முறையும் நடித்திருந்ததால் பாத்திர அமைப்புக்கு பொருத்தமற்ற தோற்றம் ஒரு நெருடலாகவே இருந்தது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தது அம்பியாக நடித்த சிறுவன் மட்டும்தான்.

குருகுலம் குழுவினரின் அடுத்த நாடகம் ”யாதுமாகி நின்றாய்” ஜூன் 16 அன்று ராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூலில் நிகழ உள்ளது.
Read More

Sunday 30 May 2010

மாறி விட்ட மண்



ஜெப்ரி சாஸர் தனது ”காண்டர்பெரி டேல்ஸின்” ஆரம்ப வரிகளில் மண்ணை பாலியல் வளமையின் உருவகமாக காட்டுகிறார். இருபதாம் நூற்றாண்டில் நவீன அறிவியலும், முதலாளித்துவமும், பன்னாட்டு நிறுவனங்களும் வேறொரு மண்ணாசை கொண்டு நிலத்தை ஆக்கிரமித்த பின் ”மண்” இன்று மாறி விட்டது. மண்ணோடு சேர்ந்து மண்புழுக்களும் “உழைப்பின் உதாரணங்களாக” இல்லாமல் வேறொன்றாகி விட்டன. “கையில் ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு அவன் நகரத்துக்கு வந்தான்” என்று நீங்கள் நேரடி அர்த்தத்தில் இன்று எழுத முடியாது. அவ்வரி வேறு எத்தனையோ வாசிப்புகளுக்கு இட்டுச் செல்லும். கீழ்வரும் ஞானக்கூத்தனின் நேரடிக் கவிதையில் மண்புழு மிக இயல்பானதொரு குறியீடாக எந்த பிரயத்தனமும் இன்றி மலர்கிறது. இக்கவிதையின் சிறப்புகளில் ஒன்று அது. கடைசி வரியில் “மண்ணின்” என்ற அழுத்தத்தை தவிர்த்து இருக்கலாம் என்று மட்டும் படுகிறது.
கேள்வி

தோண்டினார்கள் நாலடி ஆழம்.
குடிநீர் குழாய்களும் சாக்கடை குழாய்களும்
அருகில் இருந்தன.
கம்பிக் குழாய்களும் கண்ணில் பட்டன.

வெள்ளைக் காரர்களின் ஆட்சிக்காலத்தில்
போட்ட குழாய்கள் என்கிறார்கள்.
நாலடி ஆழப் பள்ளத்துக்குப் பக்கத்தில்
குவிந்து கிடக்கும் அரை ஈர மண்ணில்
மண்புழு ஒன்றைக் கூட காணோம்.
சென்னை மாநகரத்தை விட்டு
என்றைக்கு நீங்கின மண்ணின் புழுக்கள்.

நன்றி: ஞானக்கூத்தன் கவிதைகள்; ஆழி பதிப்பகம்

Read More

Saturday 29 May 2010

தகவல்தொடர்பும், கவனக்குலைவும்: துண்டாகி வரும் மனித சமூகம்

இந்த மாத உயிர்மையில் வெளியாகி உள்ள என் கட்டுரை. கவனக் குலைவு ஒரு நோய் அல்ல சமகால கலாச்சாரத் தன்மை என்று பேசுகிறது.


ADD எனப்படும் கவனக்குறைவு கோளாறின் சில அறிகுறிகள் இன்றைய தலைமுறையின் பெரும்பாலான குழந்தைகளின் ஆளுமைக் கூறு ஆகி விட்டது. அவர்களால் ஓரிடத்தில் சில நொடிகள் கூட அமைதியாக இருக்க முடிவதில்லை. கணினி விளையாட்டு, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக பெறும் மூளைக்கிளர்ச்சி ஒரு நிரந்தரத் தேவையாகி விட்டது. குழந்தைகளின் இயல்பான மூளை வளர்ச்சிக்கு வெளிப்புற விளையாட்டுக்கள் அவசியம். ஆனால் விளையாட்டு வெளிகள் ஒருபுறம் சுருங்கி வந்தாலும், இன்றைய குழந்தைகளுக்கு எந்திரங்களுடன் விளையாடுவதுதான் பிரியமானதாக உள்ளது. புலன்களை அதிகப்படியாக தூண்டும் செயல்களே அவர்களுக்கு இயல்பாகப் படுகின்றன. முன்னெப்போதையும் விட இன்றைய தலைமுறை தான் மிகச்சின்ன வயதில் இருந்தே பலவித போதைப் பழக்கங்களை பரிச்சயப்படுத்திக் கொள்கின்றன. இப்படிப்பட்ட மிகை-கிளர்ச்சி தூண்டுதலுக்காய் ஏங்கும், நரம்புகள் மின்சாரம் பாய்ச்சப்பட்ட குழந்தைகளால் அமைதியாக அமர்ந்து பள்ளியில் கவனிக்க முடிவதில்லை. சுலபமாக சலிப்படைவதால் நீண்ட புலன் தூண்டுதலற்ற உழைப்பை கோரும் கல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆறுமாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இந்த நோய்க்குறிகளிகளை வெளிப்படுத்தும் பத்து சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் உலகமெங்கும் ADD-யால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்படுகிறார்கள். கல்வியில் கவனமில்லை என்பது தான் இவர்களைப் பற்றி பெற்றோர்களுக்கு கிடைக்கும் முதல் புகாராக இருக்கும். அடுத்து பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளின் ஆவேசத்தை, நிலையில்லாத மிகை செயல்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாமல் ஆகிறது. குழந்தைகளின் மட்டுமீறிய ஆற்றல் வெளிப்பாடு முன் தத்தளிக்கும் பெற்றோர்களை சாதாரணமாக்வே இன்று காண முடிகிறது. என் நண்பரின் குழந்தை நடப்பதே இல்லை. எல்லாவற்றுக்கும் ஓட்டம் தான். குறிப்பாக அப்பா\அம்மா வீட்டுக்குள் வந்தால் தாறுமாறாக ஓடி சுவரில் மோதிக் கொள்கிறது. குழந்தை தினமும் இப்படி விழுவதும் மோதிக் கொள்வதும் வழக்கமாகி விட பதற்றமான நண்பர் மனவியல் நிபுணரிடம் அழைத்து செல்ல வேண்டியதாயிற்று. உலகம் பூரா ADD குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உளவியல் மருத்துவர்கள் மன-அழுத்த மருந்துகளை அளித்து ஆற்றுப்படுத்துகிறார்கள் அல்லது சைக்கியாட்ரிக் பயிற்சிகள் அளிக்கிறார்கள். இவர்களில் 60 சதவீதத்தினர் வாழ்நாள் பூரா ADD-ஆல் அவதிப்படுகின்றனர். ஹாலிவுட் நடிகர் ஜிம்கேரி ஒரு உதாரணம். ஏறத்தாழ இந்த பெற்றோர்கள் அளவுக்கு பி.பி.ஓ நிறுவன மேலாண்மைகள் தங்கள் ஊழியர்களின் மிகை-ஆற்றல் மற்றும் கவன இழப்பு குறித்து பதற்றம் கொள்கின்றன. இணையத்தமிழில் இன்று உருவாக்கப்படும் படைப்புகளில் கணிசமானவை அலுவலகங்களில் ஊழியர்களால் உலகம் பூரா படிக்கப்படுபவை. தமிழின் முன்னணி எழுத்தாளர்களை இணையம் வழி மட்டுமே அறிந்துள்ள ஆயிரக்கணக்கான வாசகர்கள் உள்ளனர். ஆங்கிலத்தில் இப்படி அலுவலக வாசகர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தொடும். இதை விட அதிகமாய கோடிக்கணக்கான அலுவலக மணிநேரங்கள் facebook, arkoot போன்ற சமூக வலைதொடர்பு தளங்களில் தொடர்புறுத்தவும், skype, gtalk, yahoo மெசஞ்சர்களில் அரட்டையடிக்கவும் செலவிடப்படுகின்றன. பெரும்பாலான அலுவலக நேரம் விரயமாவதாக கலவரமான மேலாண்மைகள் இத்தகைய தளங்களை தடை செய்யும் மென்பொருட்களை லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கி பயன்படுத்துகின்றன. எறத்தாழ எல்லா அலுவலகங்களிலும் மேலாண்மைகள் நுண்பேசி பயன்பாட்டை வரவேற்பதில்லை. இன்றைய தகவல் யுகத்தில் இப்படியான தடை ஒரு ஒடுக்குமுறை என்றும், இணைய உலாவல் ஊழியர்களுக்கு மனதளவிலான ஓய்வு என்றும் சர்ச்சை நிலவும் போது அதை விட முக்கியமாய், facebook-இல்கோடிக்கணக்கான மணிநேரங்களை விரயமாகும் பட்சத்தில் நிறுவனங்கள் எப்படி லாபகரமாக செயல்படுகின்றன என்ற ஐயம் எழுகின்றது. ஒவ்வொரு நிறுவனமும் தன் ஊழியருக்கு ஒரு இலக்கை விதிக்கின்றன. கணிசமான அலுவலக மணிநேரங்களை இணையம் மற்றும் நுண்பேசியில் கழிக்கும் ஊழியர்கள் இந்த இலக்கையும் சுலபமாக எட்டி விடுகின்றனர். இலக்கு எட்டப்படும் பட்சத்திலும் தரம் பாதிப்புக்குள்ளாகிறது என்பதே நிறுவனங்களின் கவலை. மேற்சொன்ன குழந்தைகளின் பெற்றோரைப் போன்று ஊழியர்களை ஒரு குறிப்பிட்ட வேலையில் கவனமாக இருத்தி வைப்பதே இன்றைய மேலாண்மைகளின் சவால். சரி இப்படியான ADD ஊழியர்களை துரத்தி விட்டு கவனம் கூர்ந்த அடக்கமானவர்களை சேர்க்கலாமே ஆனால் நகைமுரணாக தனியார் நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றவே இந்த மிகையான ஆற்றல் வெளிப்பாடு தேவையுள்ளது. கவனச்சிதறலுக்கு ஒரு காரணமான மல்டி டாஸ்கிங் எனப்படும் பலபணிகளை ஒரே நேரத்தில் செய்யும் திறனும், தொடர்ச்சியாக மாறும் பணி இயல்புகள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்றபடி உடனடியாக தன்னை தகவமைக்கும் சாமர்த்தியமும் அவசியமாக உள்ளது. அதாவது, நிலையின்மையை ஒரு ஆளுமை இயல்பாக கொண்டுள்ளவர்களுக்கே இன்றைய வேலைசூழலில் சோபிக்க முடியும். மேலும் அயராத ஆற்றல் வெளிப்பாடு, மூளைக்கிளர்ச்சியால் ஆகர்சிக்கப்பட்ட நேரங்காலமற்ற உழைப்பு, அபாய விழைவு போன்ற ADD அறிகுறிகள் கொண்டவர்களே BPO படிநிலைகளில் முன்னேறுபவர்களாக இருக்கிறார்கள். அமைதி, விசுவாசம், பதவிமூப்பு போன்ற பண்புகளுக்கு மதிப்பு குறைந்து விட்டது. இவர்களால் சத்தமான அலுவலக சூழலிலும் பாட்டு கேட்டபடி பக்கத்தில் பேசிக் கொண்டே facebook-இல் தொடர்புகளை புதுப்பித்தப்படியே, நுண்பேசியில் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டு தங்கள் அலுவலக பணி இலக்கையும் பிழையின்றி எட்ட முடிகிறது. 16 மணிநேரம் அலுவலகத்தில் கழித்தபடியே புறவுலக தொடர்புகளை தக்க வைக்க, தங்கள் கலாச்சார சமூக புரிதலை புதுப்பிக்கவும் முடிகிறது. முன்னர் நோய் அறிகுறிகளாய் கருதப்பட்டவை இன்று வாழ்வின் நடப்பியல் தேவைகள் ஆகிவிட்டன. வளர்ந்தோருக்கான கவனக்குறைவு கோளாறு ADHD என்று அழைக்கப்படுகிறது. Attention Deficit Hyperactivity Disorder. இந்த பத்துகை இருபது தலை சமாச்சாரம் ஒரு இழப்புடனே வருகிறது. அதைப் பிறகு பார்ப்போம்.



கவனக்குறைவு கோளாறு நவீன சமூகத்தின் கலாச்சார பகுதி ஆகிவிட்டது. கீழே தரப்பட்டுள்ள அறிகுறிகளில் சிலவாவது உங்களிடம் தென்படுகிறது என்றால் சமகால பிளவுண்ட தலைமுறையின் படகில் நீங்களும் இருக்கிறீர்கள் என்று பொருள். இவற்றை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ வாழ்வில் பயன்படுத்தலாம்.
• குறைவாகவே சாதித்திருப்பதான உணர்வு
• ஒழுங்கமைவற்ற வாழ்வு
• வேலையை ஆரம்பிப்பதில் சிரமம் அல்லது தொடர்ச்சியாக வேலையை தள்ளிப் போடுதல்
• பணிகளை ஆரம்பித்த வேகத்தில் கைவிடுதல்
• மனதிற் பட்டதை சமயோசிதம் பாராமல் உளறி விடுதல்
• உச்சபட்ச தூண்டலுக்கான விழைவு
• சலிப்பு மற்றும் எரிச்சலை தாங்க முடியாமை.
• எதிலும் பாதியிலே கவனம் கலைதல்
• பாதுகாப்பிமை உணர்வு

நமது மூளை புறமாற்றங்கள் அல்லது அகத்தூண்டல்களுக்கு ஏற்றபடி தன்னையே தகவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இதனை plasticity என்கின்றனர். பக்கவாதத்தால் செயலிழந்தவர்கள் தங்கள் மூளையை பயிற்றுவித்து உறுப்புகளில் ஆற்றலை மீட்க முடியும் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இப்படி தனிப்பட்டு அன்றி மனித குலத்தின் மூளை ஒட்டுமொத்தமாக மாறுமா? ரெண்டு லட்சம் வருடங்களுக்கு முன்னர் கருவிகளின் பயன்பாடு, கூட்டு வேட்டை, மொழி காரணமாக மனித மூளை மாற்றமடைந்தது. அதற்கு பின்னர் இப்போது தான் குறிப்பிடத்தக்க மாற்றத்தை மனித மூளையின் வடிவமைப்பில் காண முடிகிறது. இதற்கு காரணம் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி. Wired பத்திரிகையின் இவான் சகுவார்ட்ஸ் ADHD தகவல் யுகத்தின் அதிகார பூர்வ மூளை நோய்குறித் தொகுதி என்கிறார்.

மிதமிஞ்சிய தகவல் திணிப்பும் தொடர்புறுத்தலும்: சுருங்கும் காலம் மற்றும் வெளி



தொழில்நுட்பம் இன்று நமது காலம் மற்றும் வெளியை அழுத்தி குறுக்கி விட்டது. இது மனிதனின் செயல்பாட்டு/எதிர்வினை இயல்புக்கு மீறிய வேகத்தை எதிர்பார்க்கிறது. டாக்டர் ரிச்சர்டு ரெஸ்டாக் தனது “The New Brain” நூலில் நம் பண்பாடு மீது மீடியா நிகழ்த்தியுள்ள பாதிப்பால் சுருங்கி விட்ட மொழியின் காலத்தை time-compressed speech என்கிறார். தினசரி பேச்சுக்கும் ரேடியோ மிர்ச்சி அல்லது சன் மியூசிக்கில் கேட்கும் மொழிக்குமான காலவித்தியாசத்தை கவனியுங்கள். இத்தனை வேகமாய், அதன் விளைவாய் அபத்தமாய், இந்த வர்ணனையாளர்கள் பேச வேண்டிய அவசியம் என்ன? நமது காலம் நொடிக்கு நொடி உற்பத்தியாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களால் கூறுகட்டி சந்தைப்படுத்தப்படுகிறது. எவ்வளவு விரைவில் எத்தனை அதிகம் தகவல்களை நம் மூளைக்குள் திணிக்க முடியும் என்று தொடர்ந்து முயன்றபடி சோதித்தபடி உள்ளது நவீன முதலாளித்துவம். (இந்த சந்தைப்படுத்தல் சோதனை குறித்து பெடரிக் போல் ஒரு விஞ்ஞான சிறுகதை எழுதியுள்ளார்: The Tunnel under the World). நுகர்வுப்பொருட்களில் காலாவதி தேதி உட்பட்டு வாடிக்கையாளருக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் மிகப்பொடிசான எழுத்துக்களில் படிக்க முடியாதபடி தரப்படுவது இந்த முதலாளித்துவ தந்திரத்தின் அச்சுவடிவ உதாரணம். இதற்கு நிகராக டி.வி பரஸ்பர நிதி விளம்பரங்களில் mutual funds investment are subject to market risk Please read the offer document carefully before investing.... என்ற் வாசகம் மின்னல் வேகத்தில், ஏறத்தாழ ஒரு கேலி போல, வாசிக்கப்படுவதை சொல்லலாம். மிதமிஞ்சிய தகவல் சுமையின் அதிகபட்ச சாத்தியப்பாடுகளை சமீபத்தில் முயன்று பார்த்தது லலித் மோடிதான். ஐ.பி.எல்லின் போது காற்றில் மிதக்கும் MRF ராட்சத பலூனை ஐந்து நிமிடங்களுக்கு ஒருதடவை காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு தடவையும் அதைக் காட்டும் போது வர்ணனையாளர்கள் MRF Pace Foundation குறித்து ஏதேனும் சிலாகித்து பேசும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். டேனி மோரிசனின் முறை வந்த போது அடுத்ததாக நிலவை காட்டினார்கள். டேனி சொன்னார்: “இதோ பாருங்கள் MRF நிலா”. DLF Maximum, Citi Moment of Success, Carbon Kamal Catch போன்று ஓயாத பொழியப்பட்ட அடைமொழிகள், வீரர்கள் உடல் எங்கும் ஒட்டியிருந்த விளம்பரங்கள், மூன்று பந்துகளுக்கு ஒருமுறை விளம்பரங்கள் என்று பார்த்து பதறி டேனிக்கு ஏற்பட்ட அதே அரைப்பைத்திய நிலைதான் தகவல் திணிக்கப்பட்ட பார்வையாள மூளைக்கும் ஏற்பட்டது. செய்தியின் போது வானிலை அறிக்கைகள் வண்ணமய சார்ட்டுகள் மற்றும் கிராபிக்ஸுகளுடன் தரப்படுவதை காட்டிலும் நேரடியாக வாசிக்கப்படுவதே பார்வையாளர்களுக்கு புரிய எளிதாக இருப்பதாக ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலம் மேலும் மேலும் சுருக்கப்பட்டு மேலதிக தகவல்கள் திணிக்கப்படுவதால் நவீன மனிதன் எதையும் கவனிக்கும் பொறுமையை இழந்து வருகிறான்.

தகவல் சாதனங்கள் வழியாக மனிதர்கள் இன்று மிதமிஞ்சிய தொடர்பு நிலையில் உள்ளார்கள். Distracted: The Erosion of Attention and the Coming of Dark Age என்ற நூலை எழுதியுள்ள மேகி ஜாக்சன் இந்த மட்டுமீறிய virtual தொடர்புறுத்தலின் அபத்தத்தை விளக்குகிறார். அவருக்கு தெரிந்த மைக் என்பவரின் தனிப்பட்ட மின்னஞ்சல் காப்பகத்தை ஆராய்ந்ததில் அவர் ஐந்து வருடங்களில் மட்டும் 11.7 மில்லியன் நபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை கண்டறிந்தார். இந்த வகையான தொடர்பு நெருக்கம் எத்தகைய அணுக்கத்தையும் தர இயலாதது. இப்படி தொடர்பு சாதனங்கள் உருவாக்கும் மிதமிஞ்சிய தொடர்பு நிலை நவீன மனிதனை சிதறுண்டு பரவிய ஆளுமை கொண்டவனாக்குகிறது. அர்த்தமற்று கோடிக்கணக்கானோர் தங்களுக்குள் உறவாடும் அபத்த நிலையை இந்த hyperconnectivity ஏற்படுத்துகிறது. இணைய செக்ஸ் அரட்டை இதற்கு ஒரு உருவகம் என்றே கூறலாம். இந்த அரட்டையின் பொது ஜன்னலை திறந்து நுழையும் ஒருவர் எதிர்தரப்பு பெண்ணை நோக்கி உள்ளக்கிடக்கைகளை அடித்துக் கொண்டே செல்லலாம். கூடவே உலகின் பல முனைகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் இதே அரட்டை ஜன்னலில் இதேவித உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திய படியே இருப்பர். அந்த பெண் விதவிதமாய் அசைந்து கொண்டிருப்பாள், ஆனால் பதில் அளிக்க மாட்டாள். நமது தகவல் தொடர்பு சாதனங்கள் ஒருவிதத்தில் அந்த பெண்ணை போலத்தான். தினசரி மின்னஞ்சல், குறுந்தகவல், நுண்பேசி, மெஸன்சர்கள், சமூக வலைதொடர்பு தளங்கள் வழியாக தகவல்கள் நம் முதுகைப் பற்றி பலகுரல்களில் பேசிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை உதறி விட மூளை மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் அசாதரணமானவை. இதன் விளைவாக தனிமனித உறவுகள் ஆழமும் மதிப்பும் இழக்கின்றன. மேலோட்டமான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அரட்டைகளில் நமக்குள்ள ஈடுபாடு ஆழமான உறவாடலில் இல்லை. இத்தனை தகவல் பரிமாற்ற வசதிகள் இருந்தும் நவீன மனிதன் தனித்து விடப்பட்டதாக, உள்ளீடற்று வாழ்வதாக நிறைவற்று உணர்வதன் காரணம் இதுவே.

ஒரு உதாரணம். டாக்டர் ரிச்சர்டு ரெஸ்டாக்கின் வந்த ஒரு நோயாளி ரயிலில் வேலை பார்த்தவர். ஒருமுறை ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை புரிந்ததை பார்த்து அந்நினைவில் இருந்து மீளமுடியாது கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகிறார். தனது மனவதையின் மிக சிரமமான பகுதி யாரும் தான் சொல்வதை கேட்க தயாராக இருக்கவில்லை என்பது என்கிறார் அந்த நபர். தற்கொலை சம்பவம் குறித்து பேசினால் அவர்கள் குறுக்கிட்டனர் அல்லது மெல்ல மெல்ல ஆர்வம் இழந்து கவனம் திருப்பினர்.”எனக்கு என்ன நேர்ந்தது என்பதை எத்தனை வேகமாய் சொல்ல வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. யாருக்கும் கேட்க நேரமில்லை”. இதனாலே அவரால் தன் மனச்சோர்வில் இருந்து எளிதில் வெளிவர முடியவில்லை. ரிச்சர்டிடம் ஆலோசனை பெறும் மற்றொரு ADD நபர் தன் மனைவி என்ன பேசத் தொடங்கினாலும் இப்படி சொல்லி அதிர்ச்சி அடைய வைக்கிறார்: “உனக்கு முடிப்பதற்கு 30 நொடிகளுக்கு மேல் தேவைப்படும் எதையும் சொல்லாதே”. இந்த கவனிப்பதற்கான நேரமின்மைக்கு வேலைப்பளு மட்டும் காரணமில்லை என்கிறார் ரிச்சர்டு. மட்டுமீறிய அளவுக்கு தகவல்களை குறுகின நேர அளவுகளில் செரிக்கும்படி மூளைக்கு நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மூளையில் வடிவமாற்றம் நேர்கிறது. எல்லா மூளைகளும் இம்மாற்றத்தை சுமூகமாக சமாளிப்பதில்லை.

Monsters Inc எனும் அனிமேஷன் படத்தில் பாதாளத்தில் வாழும் அரக்கர்கள் நள்ளிரவில் உலகில் தோன்றி குழந்தைகளை அழ வைத்து அந்த ஒலியை பதிவு செய்து கொண்டு போவர். இந்த அழுகை ஒலி மின்சாரமாக மாற்றப்படும். ஒரு கட்டத்தில் பாதாள உலகில் கடுமையான மின்பற்றாக்குறை ஏற்படும். காரணம் அரக்கர்களின் பயமுறுத்தல் பூமியின் குழந்தைகளுக்கு பயப்பட முடியாதபடி பழகி விடுகிறது. இக்கதை நவீன மனிதனுக்கு ஊடகங்களுக்குமான உறவின் மீதான ஒரு பகடி தான். மேலும் விளக்கமாக பார்ப்போம். நமது புலன்களால் நுகரப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும், வாசனையோ, ஒலியோ, சுவையோ, ஒரு தகவல் துணுக்குதான். இந்த தகவல் துணுக்கு நரம்பணுவால் அதன் புதுமை அளவுக்கு ஏற்றபடி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மூளைக்கு சமிக்ஞையாக மாற்றி தரப்படுகிறது. சமிக்ஞையின் தீவிரத்திற்கு ஏற்றாற் போல் மூளை விழிப்பு கொள்கிறது. பரபரப்பாகிறது. மூளையின் இந்த செயல்முறையை தமது ஆதாயத்துக்கு பயன்படுத்தும் நமது விளம்பர நிறுவனங்களும் ஊடகங்களும் அதிர்ச்சியான மற்றும் புதுமையாக தோற்றமளிக்கும் தகவல்களால் நம் மூளையை தொடர்ச்சியாக தாக்குகின்றன. மிதமிஞ்சிய தூண்டுதலால் மனித மூளை மரத்துப் போக ஊடகங்கள் மேலும் மேலும் நம்மை கிளர வைப்பதற்காக கற்பனையின் எந்த எல்லைக்கும் செல்ல, ஆட்டத்தின் அத்தனை விதிகளையும் கலைத்துப் போட தயாராகின்றன. விளம்பரங்களில் வோடோபோன் zoozoo விளம்பரங்களின் மிகை வன்முறையை சொல்லலாம். வேறெந்த விளம்பரமும் zoozoo அளவுக்கு அறமதிப்பீடுகளையும் பொருட்படுத்தாமல் வன்முறையை நேரடியாக காட்சிப்படுத்தியதில்லை. சர்க்கஸில் மிகை ஆர்வத்தில் பயிற்சி செய்யும் பணியாளன் சிங்ககூண்டுக்குள் விழுவது, தெறித்து வரும் கிரிக்கெட் பந்து பட்டு குட்டிச்சுவரில் அமர்ந்திருக்கும் ஒருவரின் மண்டை உடைய சக நண்பர்கள் ரசித்து சிரிப்பது, தொந்தரவு செய்யும் பெரியவரை சிறுவன் தன் கூட்டாளிகளை அழைத்து வந்து மொத்துவது என்று ஏகப்பட்ட உதாரணங்கள். கவனம் இழந்த நவீன பார்வையாளனை முகத்தில் குத்தி உலுக்குகின்றன இந்த விளம்பரங்கள். பார்வையாளன் ஆர்வமிழந்து விலக விலக ஊடகங்கள் மேலும் மேலும் அதிக சத்தமும், வேகமும், கூர்மையும் கொண்டதாக மாறி வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மக்களை கிலி கொள்ளச் செய்ய பார்வையாளர்களை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டாலோ, வாகனங்கள் சீறி வந்தாலோ போதும். இன்று விண்கலங்கள் சிதறவும், கோளங்கள் மோதவும் வேண்டி உள்ளன. அருவருப்பான வெற்றுகிரக வாசிகள் ஒன்றின் வயிற்றைப் பிளந்து மற்றொன்றாக குதித்து வர வேண்டி உள்ளது.



செய்தி ஊடகங்களும் வரலாற்று பிரக்ஞையற்ற மனிதர்களும்

பல்வேறுபட்ட ஈடுபாடுகள் கொண்ட பார்வையாளப் பரப்பை இணைப்பதற்காக காட்சி செய்தி ஊடகங்கள் மதிப்பற்ற செய்திகளை முன்னிலைப்படுத்துகின்றன அல்லது முக்கியத்துவம் மிக்க செய்திகளை இணையாக வழங்குகின்றன. ஆங்கில ஊடகங்கள் சூழலைப் பொறுத்து கிரிக்கெட் அல்லது சினிமா செய்திகளுக்கு அரசியலை விட அதிகம் நேரம் மற்றும் அழுத்தம் தருவதை குறிப்பிடலாம். இப்படி மதிப்பு வேறுபாடின்றி செய்திகள் திணிக்கப்பட்டு மூளை தொடர்ந்து தூண்டப்படுவதால் சமகால மனிதனின் செய்தி ஈடுபாடு, தகவல் நினைவாற்றல் குறைகிறது. தகவல் வெடிப்புக்கு முன் ஒரு அரசியல்/சமூக நிகழ்வு அவனது மனப்பரப்பில் ஏற்படுத்தும் பாதிப்பு இன்று நிகழ்வதில்லை. ஈழப்போர் ஊடகங்களில் மிகப்பரவலாக பேசப்பட்டும் தமிழக தேர்தல் வாக்குகளை பாதிக்காதது ஒரு தகுந்த உதாரணம். மனிதன் தன் வரலாற்று பிரக்ஞையை இழந்து வருவதாக, நாம் மீவரலாற்று குடியரசுகளில் வாழ்வதாக மேகி ஜாக்சன் குறிப்பிடுகிறார். அதிகபட்ச தூண்டுதலுக்கு மட்டுமே எதிர்வினையாற்றும் படி தகவமைந்து விட்ட நம்மால் எந்த செய்தியின் மனக்கிளர்ச்சியையும் அதிக நேரம் தக்க வைக்க முடிவதில்லை. சீக்கிரமே களைத்து கவனம் இழந்து அடுத்த தகவல் கிளர்ச்சியை நாடுகிறோம். கவனக்குறைபாட்டு கோளாறை உருவாக்குவதில் இந்த விட்டில்பூச்சி பண்பாட்டுக்கு பெரும்பங்கு உள்ளது.

மனித எதார்த்தம் எத்தனையோ மாறுபட்ட பிரதிகள் கொண்டது என்பதை தகவல்யுகம் முதன்முதலில் நடைமுறையில் நிரூபித்தது என்கிறார் ரிச்சர்டு. கால, வெளி மற்றும் இடத்தின் வித்தியாசங்களை அது அழித்து விட உலகின் ஒரு மூலையில் இருந்தபடி மற்றொரு மூலையில் போர், தீவிரவாத அழிவு, கட்டபஞ்சாயத்து, வணிகம், குடும்ப உறவாடல் என அனைத்தையும் சுலபமாக நடத்த முடிந்தாலும் அதன் உள்ளீடற்ற தன்மையும், அபாயங்களும் தாம் பிரதான எதிர்விளைவுகள். இன்றைய சமூக உறவாடலில் பெரும் தடைகள் தொலைதொடர்பு சாதனங்கள் தாம் என்பது மற்றொரு நகைமுரண். உரையாடலின் போது எதிர்தரப்பின் தொடர்ச்சியான கவனத்தை கோரும் சிரமத்தையும் சங்கடத்தையும் வேறெந்த நூற்றாண்டிலும் மனிதன் இப்படி அனுபவித்திருக்க மாட்டான். உரையாடல் நடுவே நுண்பேசிக்குள் நுழைவதோ, மின்னஞ்சல் திறப்பதோ, டீ.வி கவனிப்பதோ எதிர்தரப்பை அவமானிக்கும் பண்பற்ற செயல் என்பதை உணர முடியாதபடி தகவல் யுக நிஜத்தின் பல்வேறுபட்ட பிரதிகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. கவனம் இழக்கும் அந்நபர் எந்த இடத்தில் இருக்கிறார்? நுண்பேசியிலா, டீ.வி அல்லது மின்னஞ்சலிலா, அல்லது நேரடி உரையாடலிலா.



மல்டி டாஸ்கிங் நம் செயல்திறனை ஆழமாக பாதிக்கும் ஒன்று என்பதை நாம் அறிந்திருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட வேலையில் இருந்து மற்றொன்றுக்கு தடம் மாறும் போது மூளைக்கு அரை வினாடி உபரியாக வீணாகிறது. மேலும் மூளையின் ஒரே பகுதியை செயல்படுத்தும் இருவேறு செயல்கள் கடுமையான அழுத்தத்தை விளைவிக்கின்றன. உதாரணமாக மின்னஞ்சல் அடித்தபடியே தொலைபேசியில் உரையாடுவது. ஆனால் ஓவியம் கிறுக்கியபடியே பேசுவது அத்தகைய சிரமத்தை மூளைக்கு அளிக்காது. ஏனென்றால் இரண்டும் வெவ்வேறு மூளை தசைகளை செயல்படுத்துவன. இதே காரணத்தால் இசை கேட்டபடியே எழுதுவது, ஓவியம் வரைவது, அறுவை சிகிச்சை செய்வது போன்றவை செயல்திறனை அதிகரிக்க செய்யும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காப்ரியல் மார்க்வெஸ் இசை கேட்டபடியே எழுதும் பழக்கம் கொண்டவர். தொண்டை, வாய், மூக்கு நிபுணர் பிளேக் பாப்சின் தன்னால் இத்தாலிய இசையமைப்பாளர் மரியா புயுசினியின் ”லா பலாமே” கேட்டபடியே மிகுந்த ஈடுபாட்டுடன் அறுவை சிகிச்சை செய்ய முடிவதாக சொல்லியுள்ளார். இப்படி மல்டி டாஸ்கிங் நம் சிதறுண்ட சமூக ஆளுமையின் ஒரு பகுதி ஆகி விட்டபடியால் அதை விஞ்ஞானபூர்வமாக செயல்படுத்தும் மெருகேற்றப்பட்ட வழிமுறைகள் எதிர்காலத்தில் கண்டடையப்படலாம். மிதமிஞ்சிய புலன் தூண்டுதல்களை அகத்தூண்டல்களாய் திசைமாற்றும் மேம்பட்ட ஒரு மனிதகுலமும் உருவாகலாம்.
Read More

Wednesday 26 May 2010

காகத்தின் முதல் பாடம் - டெட் ஹியூக்ஸ்



கடவுள் காகத்துக்கு எப்படி பேசுவது என்று கற்றுக் கொடுக்க முயன்றார்.
‘அன்பு’, சொல் என்றார் கடவுள். ‘சொல்லு, அன்பு’
காகம் முழித்தது, வெள்ளை சுறா கடலில் பேரோசையுடன் குதித்து
கீழ் நோக்கி உருண்டு சென்றது, தன் ஆழத்தை தானே கண்டடைந்தபடி,


‘இல்லை, இல்லை’, சொன்னார் கடவுள். ‘அன்பு சொல்லு. இப்போது முயன்று பார். அ ன் பு’
காகம் முழித்தது, ஒரு நீலப்பூச்சி, ஒரு செட்சே பூச்சி, ஒரு கொசு
ரிங்கரித்தபடி வெளிப்பட்டு கீழே தங்களது
சிலபலவாறான உல்லாசவிடுதிகளுக்கு சென்றன.

‘ஒரு கடைசி முயற்சி’, கடவுள் சொன்னார், ‘இப்போது, அ ன் பு’
காகம் பயங்கரமாய் நடுங்கியது, முழித்தது, வாந்தியெடுத்தது,
மனிதனின் உடலற்ற பிரம்மாண்ட தலை பூமி மீது, சுழலும் கண்களுடன்,
மறுப்பை கத்தியபடி, உருண்டு திரண்டு வெளிவந்தது –

கடவுள் அதனை தடுக்கும் முன், காகம் மீண்டும் வாந்தியெடுத்தது.
பெண்ணின் அல்குல் மனிதனின் கழுத்தின் மீது விழுந்து இறுகியது.
புல்லின் மீது இரண்டும் சேர்ந்து போராடின.
கடவுள் அவற்றை பிரிக்க போராடினார், சபித்தார், அழுதார் –

காகம் குற்றவுணர்வுடன் பறந்து போயிற்று.
Read More

Tuesday 25 May 2010

அந்த கணம் - டெட் ஹியூக்ஸ்

இந்த வார உயிரோசையில் வெளியாகி உள்ள டெட் ஹியூக்ஸ் கவிதையின் தமிழாக்கம்






நீல ஆவி பீறிடும் துப்பாக்கி வாய்முகப்பு
சாம்பல் கிண்ணத்தில் இருந்து சிகரெட்டைப் போல
உயர்த்தப்பட்ட போது

மேலும் பூமியில் மிச்சமுள்ள ஒரே முகம்
ஓய்வு கொண்ட, ரொம்பவே தாமதமான கொண்ட கரங்களின் நடுவே
உடைந்து கிடந்த போது



மேலும் மரங்கள் எப்போதைக்குமாய் மூடியபோது
தெருக்கள் எப்போதைக்குமாய் மூடியபோது

மேலும் கைவிடப்பட்ட உலகின்
சரல் கற்கள் மீது
முடிவின்மையை என்றென்றைக்குமாய் நேரிட்டும்படி
கைவிடப்பட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மத்தியில்
அந்த உடல் கிடக்கிறது

எதையாவது சாப்பிடத் தேட வேண்டியிருந்தது காகத்துக்கு
Read More

Sunday 23 May 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 19




என் தனிப்பட்ட மாயாவி அவர்தான். தனியாய் என்றால், அவர் வீட்டை கடக்காதிருக்க ரொம்பவே சுற்றி போவேன். முதியவர்களுடன் என்றால், அவரது மருந்தகத்தை ஒரு திருட்டுப்பார்வை இட துணிவேன். அட்ரியானா அங்கு கவுன்டருக்கு பின்னால் தையற்பொறியில் தன் ஆயுட் தண்டனையை கழிப்பதை காண்பேன்; படுக்கையறை ஜன்னல் வழி அவர் மூர்க்கமான உந்துதல்களோடு தொங்குபடுக்கையில் ஊஞ்சலாடுவதை பார்ப்பேன்; என்னை மயிர்க்கூர்ச்செறிய வைக்க அதுவே போதுமானதாக இருக்கும்.

யுவான் வெசெண்டே கோமெஸ்ஸின் காட்டு மிராண்டி சர்வாதிகாரத்தில் இருந்து தப்பிக்க லா குவாஜிராவின் எல்லையை தாண்ட இயன்ற எண்ணற்ற வென்சில்வேனியர்களில் ஒருவராய் அவர் இந்நகரத்துக்கு நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்திருந்தார். இரு முரண்சக்திகளால் செலுத்தப்பட்டவர்களில் முதல்வராய் அந்த மருத்துவர் இருந்தார்: சர்வாதிகாரியின் வெஞ்சினம் மற்றும் எங்களது வாழைப்பழ செல்வசெழிப்பு பற்றின மாயத்தோற்றம். வந்ததில் இருந்தே தனது நோய் கண்டறியும் பார்வைப்புலன் மற்றும் – அப்போது பரவலாய் சொல்லப்பட்டது போல் – ஆத்மாவுக்கான நன்னடத்தைகளுக்காக பேர் பெற்றார். எனது தாத்தாபாட்டியினரின் வீட்டுக்கு மிக அடிக்கடி வருகை தருபவர்களில் அவர் ஒருவர்.; புகைவண்டியில் யார் வரபோகிறார்கள் என்று தெரியாது என்பதால் விருந்து மேஜை எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். அவரது மூத்த குழந்தைக்கு என் அம்மா ஞானஸ்தான அம்மா; தாத்தா அதற்கு தற்காப்பு கற்றுத் தந்தார். பின்னர் ஸ்பானிய உள்நாட்டு போரில் நாடு கடத்தப்பட்டவர்களுடன் தொடர்ந்து நான் வளர்ந்தது போலவே, இவர்களின் இடையே நான் வளர்ந்தேன்.
பாலகனாய் இருக்கையில் இந்த மறக்கப்பட்ட குடியொதுக்கப் பட்டவர் என் மீது ஏற்படுத்திய கிலியின் மிச்சம் மீதி அம்மாவும், நானும் அவர் கட்டிலுக்கு அடுத்தபடியாய் அமர்ந்து நகரைத் தாக்கி விட்டிருந்த அந்த துன்பியல் நிகழ்வின் விவரங்களை கேட்கையில் நீர்மூலமானது. அவரது நினைவைத் தூண்டும் ஆற்றலின் தீவிரம் எவ்விதம் என்றால் வெக்கையால் மங்கலாகிப் போன அவ்வறையில் அவரால் விவரிக்கப்பட்ட ஓவ்வொன்றும் காட்சி வடிவம் பெறுவதாய் பட்டது. இன்னல்கள் அனைத்துக்கும் ஊற்றுக்கண், நிச்சயமாய், தொழிலாளர்கள் சட்ட-ஒழுங்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்டது தான்; ஆனால் அந்த வரலாற்று உண்மை சார்ந்து சில ஐயங்கள் அப்போதும் நீடித்தன: இறந்தது மூவரா மூவாயிரமா? ஒருவேளை அத்தனை பேர்கள் இருக்க மாட்டார்கள்; ஆனால் ஜனங்கள் தங்கள் துக்கத்திற்கு ஏற்றபடி எண்ணிக்கையை உயர்த்தினர். இப்போது நிறுவனம் ஒரேயடியாக போயாகி விட்டது. “வெள்ளையர்கள் இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டார்கள்“, அவர் சொல்லி முடித்தார்.

ஒரே உறுதிப்பாடு அவர்கள் எல்லாவற்றையும் தங்களோடு கொண்டு போயினர் என்பதே: பணம், டிசம்பர், ரொட்டிக் கத்தி, மதியம் மூன்று மணிக்கு முழங்கும் இடி, மல்லிகை வாசம், காதல். மிச்சம் இருந்தது எல்லாம் தூசு படிந்த வாதாம் மரங்கள், அலையதிர்வு கொள்ளும் தெருக்கள் மற்றும் நினைவுகளால் நிலைகுலைந்த, பேச்சில் அமர்த்தலான மக்கள் குடியுருக்கும், துருபிடிக்கும் தகரக்கூரை கொண்ட, மரவீடுகள். தகரக் கூரையில் தெறிக்கும் மழை போன்ற கூர்மையான தடதட ஒசை கேட்டு நான் வியப்புற்ற போது தான் அந்த மதிய வேளையில் டாக்டர் என்னிடம் முதன்முறையாக் கவனம் காட்டினார். “அவை வான்கோழிகள்”, அவர் என்னிடம் சொன்னார்; பிறகு மூடியிருந்த கதவை நோக்கி தன் அயர்வான சுட்டுவிரலால் சுட்டி முடிவாக சொன்னார், “ராத்திரியில் படு மோசம், ஏன் என்றால் தெருக்களில் மேலும் கீழுமாக ஆவிகள் நடமாடுவதை கேட்கலாம்”
அவர் எங்களை மதிய உணவருந்த வேண்டினார்; நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளாதிருக்க எந்த காரணமும் இல்லை; ஏன் என்றால் வீட்டு விற்பனையில் சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. குடியிருப்போர் தாம் வாங்குபவர்கள்; தந்திச்செய்தி வழி விபரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாகி விட்டன. எங்களுக்கு நேரம் இருக்குமா? “தேவைக்கு அதிகமாகவே”, அட்ரியானா சொன்னாள், “அதோடு ரயில் வண்டி எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாதே?”
ஆக, நாங்கள் அவர்களுடன் ஒரு உள்ளூர் உணவை பகிர்ந்தோம்; அதன் எளிமைக்கு அவர் உணவு மேஜையில் மட்டுமல்லாது வாழ்வின் எல்லா நடவடிக்கைகளுக்கும் கண்டிப்பாய் பயின்று வந்த மிதத்தன்மையின் திட்டமுறையை தவிர ஏழ்மையுடன் எந்த உறவும் இல்லை. சூப்பை சுவைத்த அந்த கணத்தில் இருந்தே ஒரு முழுமையான தூங்கும் உலகம் என் ஞாபகத்தில் விழித்தெழும் புலனுணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு கரண்டி சூப்போடும் பால்யகாலத்தில் எனதாக இருந்து நகரை விட்டு போன பின்னர் நான் தொலைத்து விட்ட சுவைகள் முழுதாக திரும்ப வந்தன; அவை என் இதயத்தை கவ்வின.
Read More

Friday 21 May 2010

நித்யானந்தாவும் FTV மாடலும்




சில மாதங்களுக்கு முன் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை/அரசியல் கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன்


குடுமி போட்ட ஐயங்காரர் மாமா வாயில் இருந்து காலை வேளையில் அதுவும் ஒரு பக்தி நிகழ்ச்சியில் நித்யானந்தாவுக்கான விளக்கம் வரும் என்று நான் எதிர்பார்க்க இல்லை. மேலும் விளக்குவதற்கு முன் சத்தியபிரமாணம் ஒன்று:
நான் விசுவாசியோ அவிசுவாசியோ அல்ல. நித்யானந்தாவின் நடைமுறை ஞானம் மற்றும் லௌகீக சாமர்த்தியத்தின் மீது அபார மரியாதை கொண்டவன்.


விஜய் டீவியில் சுமார் ஏழு மணிக்கு, எச்சில் சாப்பாடு கேட்டு ஜன்னல் திண்டில் காக்கா கரையும் வேளையில், குடுமி மாமா சொன்னது என்னவென்றால்: “ஒருவருக்கு நல்ல குரு அமையாமல் போவது ஒரு நல்ல மனைவி அல்லது நல்ல மகன் அல்லது நல்ல மருகள் அமையாமல் போவது போல். இதற்கெல்லாம் காரணம் முன் ஜென்ம பாவம். நல்ல குரு அமைவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்”.

நான் எவ்வளவு பெரிய பாவி என்பதை உடனே உணர முடிந்தது. ஜெயா டீவியில் ஒரு குடுமி பஜார் சுருதி டான்ஸ் (அதாவது பாட்டின் சுருதி)ஆட பஜனை செய்து கொண்டிருந்தது. குருக்கள் அசுரன் வாமனனை விஷ்ணு பாதாளத்துக்கு அனுப்பின கதையை விளக்கி கொண்டிருந்தார். வாமனனின் கதிக்கு காரணம் அவர் விஷ்ணுவின் கால்களின் சரியான சைஸ் என்ன என்று கவனிக்காததே என்றார் பஜனைத் தலைவர். அதுவும் விஷ்ணு இந்த அளவைப் பற்றி பன்னிப் பன்னி வெவ்வேறு ஸ்தாய்களில் பாடி பாடி சொல்லியிருக்கிறார். ஆனால் பாவம் செய்த வாமனன் நம்ம வகை.attention deficit disorder. பஜனை குழுவில் ஒரு சிறுவன் ஸ்பஷ்டமாக கொட்டாவி விடும் வேளையில் நான் அங்கிருந்து ராஜ் டீவிக்கு வந்தேன். பால் தினகரன் நம்மைப் பிடித்த சாத்தானும், இலவச இணைப்பான பாவங்களும் இப்போதே துரத்தப்படும் என்றார். காலை வேளையில் முன்னணி தொலைக்காட்சிகள் பக்தி மார்க்கம் செல்வதற்கு மக்களின் ஒரு சின்ன செண்டிமண்ட் தான் காரணம் என்று நினைத்திருந்தேன். அதாவது கடவுள் நாமம் நினைத்து, சொல்லி அல்லது கேட்டு ஆரம்பித்தால் அனறைய நாள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் நடப்பதோ வேறு. பாவி பாவி என்று நினைவுறுத்தப்பட்டு குற்றவுணர்வுடன் நமது மக்களின் காலை வேளை ஆரம்பிக்கிறது.

இதற்கு Ftv-ஏ தேவலாம் போல. Ftv Breakfast-இல் சிகையலங்கராம், முக ஒப்பனை, இமை வரைதல் என வெவ்வேறு உதவியாளர் கரங்கள் தன் மீது ஈடுபட்டிருக்க பிளாக்பெரி நுண்பேசியில் விரல்களால் உலாவியபடி கன்ன எலும்புகள் துருத்தின ஒரு மாடல் சொல்கிறாள்: “இந்த மழைப்பருவ ஷோவுக்காக மூன்று மாதங்களாய் கடுமையாக தயாரித்துக் கொண்டு வருகிறேன்”. இத்தனை வேலைகளுக்கு இடையே பாவமூட்டைகள், பார்ப்பானின் காலடி அளப்பது, குற்றவுணர்வுக்கு எல்லாம் எங்கே நேரம் சொல்லுங்கள்.
Read More

இளையராஜா நல்லவரா கெட்டவரா?




சில மாதங்களுக்கு முன் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை/அரசியல் கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் உயிர்மையில் ஷாஜி இளையராஜா குறித்து எழுதின “ நீங்க நல்லவரா கெட்டவரா” கட்டுரை தெ ஹிந்துவுக்கு பிறகு உயிர்மை படிக்கிற மத்தியதர மாமாக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்பட்டது. சிலர் இக்கட்டுரையை எழுதியது சாரு என்று நினைத்து அவரை அடிக்க தேடியதாக தகவல் அடிபட்டது. ஆனால் இளையராஜா ரசிகர்களின் மனதை நோகடித்த ஷாஜி புத்தக விழாவின் போது உயிர்மை அரங்கின் வாசலில் பிளாஸ்டிக் நாற்காலியில் ஓஷோ தண்ணி அடித்தது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்தார். இளையராஜா அடியாள் படை “அந்த மலையாளத்தான பார்த்தா சொல்லி வை” என்று ஷாஜியின் காலரைப் பிடித்து உலுக்கி சொல்லிப் போனதாக மிகைப்படுத்த விரும்பாவிட்டாலும் அக்கட்டுரையால் அவர் பரபரப்புக்குரிய நபர் ஆனார் என்பது உண்மை. திண்ணையில் முன்பு இளையராஜாவின் பின்னணி இசையை சாடி கட்டுரை எழுதின ஜெயமோகன் இம்முறை ராஜாவுக்காக பரிந்து ஆதரித்து எழுதினார். ஷாஜி இதற்கு நுண்பேசியில் அளித்த பதிலை ஜெ.மோ தன் தளத்தில் பிரசுரித்து அதற்கு மறுமொழியும் எழுதினார். இரண்டையும் அவர் ஷாஜியிடம் பேசியபடியே இட-வல கைகளால் ஒரே நேரத்தில் எழுதியதாக செய்தி உலவுகிறது. தனக்கு தொடர்ந்து பல மிரட்டல் மற்றும் கண்டனக் கடிதங்கள் வந்ததாக ஷாஜியே சற்று வருத்தமும் மகிழ்ச்சியும் கலந்து தெரிவித்தார்.


ஒரு மலையாளக் கவிஞரை இளையராஜா விமர்சித்ததனாலே தாயகப் பற்றால் ஷாஜி ராஜாவை திரும்பத் தாக்கினதாக அஜயன் பாலா கடிந்து கொண்டார். இக்கட்டுரையை மனுஷ்யபுத்திரன் பிரசுரித்தது அவரது நிஜப் பெயர் ஹமீது என்பதாலே என்று காவி விசுவாசிகள் வேறு கொதித்தார்கள். விளைவாக மனுஷ் “ நானே ராஜாவின் பெரிய விசிறி. இது முழுக்க ஷாஜியின் கருத்து மட்டுமே” என்று அடுத்த உயிர்மை இதழில் சாட்சிமொழி எழுத நெர்ந்தது.

இந்த சர்ச்சைக்கு காரணமான ஷாஜியின் கட்டுரை சாராம்சம் என்ன? இளையராஜா கெட்டவர். அதனால் அவர் இசைவாழ்க்கையில் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது என்பதே அது. ஏப்ரல் 2010 இதழில் உயிர்மை இவ்விசயத்தில் ஒரு U-திருப்பம் எடுத்தது. ஒன்றுக்கு ரெண்டாக ஷாஜியும் சாருவும் ஏ.ஆர்.ரகுமானை தாக்கினார்கள். ஷாஜி இம்முறை என்ன சொன்னார்?

ஏ.ஆரின் பின்னணி இசை பலவீனமானதாம். அடுத்து ஸ்லம் டாக் மில்லனருக்கு கொடுத்த விருது தவறாம். அப்பட பாடல்கள் மிக சாதாரணமானவை. சரிதான், இதற்கு முன் ஏ.ஆரை பாராட்டி இதே உயிர்மையில் கட்டுரை எழுதியுள்ள ஷாஜி இப்போது ஏன் திடீரென அவர் பின்னணி இசை நன்றாக இல்லை என்கிறார். ஸ்லம்டாக் இசை ஏமாற்றமளிப்பது ஏன் இத்தனை தாமதமாக நினைவு வருகிறது அவருக்கு? ஸ்லம்டாக் பாடல்கள் பிரமாதம் என்று யாருமே சொல்லவில்லையே? அவ்விருது இதுவரையிலான ஏ.ஆரின் சாதனைகளுக்கான அடையாள விருது மட்டுமே. இதுவரையில் பல ஜாம்பவான்களுக்கும் அவர்களின் சிறந்த படைப்புகளுக்கு ஆஸ்கார் கிடைத்ததில்லையே! இதையெல்லாம் ஷாஜி சொல்ல வேறொரு பின்னணி உள்ளதாம்.அதையும் அவரே சொல்கிறார். அவரை விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்கள் பற்றி பேச ஒரு தொலைக்காட்சியில் அழைத்தார்களாம். ஷாஜிக்கு வி.தா.வ இசை பிடிகாததால் அவர் செல்லவில்லையாம். அதற்கான காரணங்களை உயிர்மையில் எழுதுகிறாராம். நண்பர்களே இப்போது நரிகள் எல்லாம் கனவில் தின்று ஏப்பம் விட்ட படியே “ஒரே புளிப்பு” என்கின்றன. ஷாஜி கட்டுரை முடிவில் வி.தா.வ பாடல்கள் குறித்து சுருக்கமாக தொழிநுட்ப விமர்சனம் ஒன்று வைக்கிறார். சபா முன்வரிசையில் மடியில் தட்டி ரசிக்கும் தாத்தாக்கள் நடுவே புகுந்து மண்டையில் தட்டு வாங்கியது போல் உள்ளது அதைப் படித்தால்.

அரிஸ்டாட்டிலின் தர்க்க சூத்திரம் ஒன்று உண்டு. அதாவது ஒரு தேங்காய் விலை 10 என்றால் ரெண்டு தேங்காய் 20 ரூபாய். இப்போது ஒரு மாங்காய் விலையும் 10 என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தேங்காயும் மாங்காயும் சேர்த்து வாங்கினால் 20 ஆகிறது. இதே தர்க்கப்படி

ராஜா = கெட்டவர்
அதனால்
ராஜா இசை = கெட்ட இசை

இதே போல் ஏ.ஆர் ரஹ்மானி பின்னணி இசை = கெட்ட இசை
அப்படி என்றால்
ஏர்.ஆர்.ரஹ்மான் = ?
Read More

என்கவுண்டர் இன்னும் நடக்கவில்லை






















 என்கவுண்டர் செய்யப்படும் தொழில்முறை கொலைகாரர்களுக்கு அது ஏற்கனவே தெரிய வருவதால் ஒரு மரண தண்டனை கைதியின் மனநிலை அவர்களுக்கு ஏற்படும். சாவை விட அதை எதிர்பார்த்து அச்சத்தில் வாழ்வது இரங்கத்தக்கது.சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நடராஜனின் பிணத்தை வாங்க பெற்றோர் ஆரம்பத்தில் மறுத்தார்கள். என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை மட்டும் பார்வையிட்டு விட்டு ஊர் திரும்பினார்கள். ஒருவழியாய் சமாதானமாகி நடஜாஜனின் அப்பா பிணத்தை பெற்று சென்றார். ஒரு குறைந்த பட்ச எதிர்ப்புணர்வாக மட்டுமே இதை பார்க்க முடிகிறது. ஒரு சமூக விரோதிக்கு நீதி விசாரணைக்கு பின்னான மரியாதையான சாவு அவசியமா என்று நீங்கள் கேட்கலாம். பதிலுக்கு இப்படியும் கேட்கலாம்: வெறி நாயை ஏன் கட்டையால் தாக்கி கொல்லக் கூடாது? விவசாய நிலங்களை அழிக்கும் யானைகளை மின்சார வேலி அமைத்து ஏன் சாவடிக்க கூடாது?


இப்படி மிருகங்களோடு நடராஜனை ஒப்பிட்டதற்கு காரணம் உண்டு. மும்பையில் திட்டமிட்டு சிறுகுழந்தைகள் உள்ளிட்ட மனிதர்களை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்ற கஸாப் போன்றோரை என்கவுண்டர் செய்தோமா? கோடிக்கணக்கில் செலவு செய்து அவன் வழக்கை இன்று வரை நடத்தவில்லை? தமிழகம் முழுவதும் காலாவதி மருந்துகளை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த சஞ்சய் குமார், மீனாட்சி சுந்தரம் போன்றோர் எத்தனை மனித உயிர்களுக்கு உலை வைத்திருப்பார்கள் என்பது இன்னமும் தெரியாது; தெரியவும் வராது. நிச்சயம் நடராஜன் போன்ற எளிய கொலைஞர்களை விட பலமடங்கு அதிகமே. இந்த போலி மருந்து வியாபாரிகள் என்கவுண்டர் செய்யப்படுவார்களா? தாவூதின் பினாமிகள் மும்பையில் ரியல் எஸ்டேட் வெற்றிகரமாக வியாபாரம் செய்து வளமாக உள்ளார்கள். அவர்கள் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தையே காலி செய்து விற்ற தமாஷும் நடந்தது. தாவூத்தை நமது போலீஸ் இந்தியாவுக்கு நாடுகடத்தி அனுப்ப வேண்டும் என்று அவ்வப்போது கோரிக்கைகள் வைக்கிறார்கள். அப்படி தாவூதாக விரும்பி இந்தியா வந்தாலும் அவருக்காக வாதிட இந்தியாவின் ஆகச்சிறந்த வக்கீல்கள் வரிசையில் நிற்பார்கள். நமது சமூகத்தின் மின்வேலி உயர்மட்ட குற்றவாளிகளை தாக்காது.

தொழில்முறை கொலைஞர்களின் தேவை மன்னர் காலங்களில் இருந்தே உலகம் முழுக்க இருந்து வந்துள்ளது. அலெக்சாண்டரின் தந்தை பிலிப் ஒரு தொழில்முறை கொலைகாரரால் கொல்லப்பட்டது நாம் அறிந்ததே. ரோம சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான மன்னர்கள் இப்படியான ஒப்பந்த கொலைகளுக்கு பலியானவர்கள் தாம். இங்கிலாந்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஹென்ரி மன்னர்களுக்கும் இதுவே நேர்ந்தது. அரசியல், புரட்சி, தொழில் என்று ஒப்பந்த கொலைஞர்கள் மூன்று வகைமைகளை சேந்தவர்கள். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவில் இத்தகையவர்கள் பிரத்யேக நிறுவனங்களால் தேர்ச்சி அளிக்கப்பட்டு நிழல் உலகங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறார்கள். ரஷ்யாவில் இவர்களின் பெயரே சுவாரஸ்யமானது. க்ளீனர். போலீசார் அத்துமீறும் வன்முறைத் தொழிலாளர்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டுவது கொசு-அடி சாதனை மட்டும் தான். ஆயிரக்கணக்கான வருடங்களின் வரலாற்று நீட்சியுள்ள இந்த குட்டைகளில் இருக்கும் வரையில் என்கவுண்டர்கள் அசட்டு தீர்வுகள் மட்டும்தான். இத்தகைய அதிகாரங்களை போலீசுக்கு அளிப்பதும், இதற்காக அவர்களை கொண்டாடுவதும் நம் சமூகம் மன சமநிலை இழந்துள்ளதை சொல்கிறது.

சமீபமாக என்கவுண்டர் செய்யப்பட்ட மற்றொரு ரவுடியின் என்கவுண்டர் செய்தி ஒரு நிருபருக்கு கசிந்து நேரம் இடம் போன்ற தகவல்கள் நான் வேலை பார்த்த பத்திரிகை ஒன்றுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. செய்தி எழுதி, அச்சுக்கு தயாராக்கப்பட்ட நிலையில் மற்றொரு தொலைபேசி அழைப்பு. ”செய்தியை போட்டு விடாதீர்கள். என்கவுண்டர் இன்னும் நடக்க இல்லை. இடமும் காலமும் மாற்றப்பட்டு விட்டது.” இன்னும் கொஞ்ச நாட்களில் சன் டீவியில் இத்தகைய என்கவுண்டர்கள் நேரலையாக காண்பிக்கப்படலாம். அப்போதும் நாம் அதிர்ச்சியடைய மாட்டோம். மனக்கிளர்ச்சி அடைவோமே தவிர அறவுணர்வுகள் தூண்டப்படாது. தொடர்ந்து லத்திகா சரண் தோன்றி “அத்தனையும் கிராபிக்ஸ்” என்பார். சில காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படி பழகி விட்டோம்
Read More

காவலர்களை யார் காவல் காப்பது




நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன்.


ஜெயலலிதாவுக்கு தி.மு.கவை பிடிக்காததற்கான மிக சின்ன காரணங்களில் ஒன்று மு.க ஆட்சியில் ரவுடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டு ”சட்டம்-ஒழுங்கு சீர் குலைவது. அவர் தூங்கி பெட்காபி குடித்தபடி எழுந்துததுமே “கருணாநிதியின் மைனாரிட்டி குடும்ப ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ...” என்று கூறி தொடங்குவதாக நம்பகமான இடங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சட்டம் ஒழுங்கை கராறாக கையில் எடுத்தால் புல்லட்புரூப் அம்மாவை பாசிஸ்டு என்கிறார்கள். வரும் உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிடப் போகும் கலைஞர் அகராதியில் பாசிஸம் என்ற வார்த்தையை அரசியல் பிரிவில் சேர்க்கப்படும் அளவிற்கு ஜெவை குறிப்பிடும் போதெல்லாம் அந்த வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டு விட்டது. வேலை செய்வதே பிடிக்காத என் நண்பன் ஒருவன் இந்த இரு தீவிர நிலைப்பாடுகளுக்கு ஒரு மாற்று சொல்கிறான். அவனுக்கு மறந்து விட்ட ஒரு குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள படி ஒரு ஆட்சியாளன் இரண்டு எதிரிடைகளுக்கும் நடுவே ஒரு கோடுகிழித்து அதில் பயணிக்க வேண்டுமாம். அது சாத்தியமே இல்லை என்று நான் சொன்னதற்கு அவன் அவனது பெண் மேலாளர் சொன்ன ஒரு கதையை சொன்னான்.

இந்த மேலாளர் ஜெவை போல ஒரு அம்மையார். அதாவது அடுத்தவர்கள் எப்போதும் முதுகு வளைந்தபடியே நடக்க வேண்டும் என்று விரும்புபவர். கதை அவர் ஐம்பதுகளில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி தலைமை ஆசிரியரால் சட்டம் ஒழுங்கு எப்படி பேணப்பட்டது என்பதைப் பற்றியது. அதில் குறிப்பிடத்தக்கது நோட் புத்தகங்களுக்கு பழுப்பு வண்ண அட்டை அணிவிக்காத மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தரும் தண்டனை. சட்டையை கழற்றி வாசலில் முட்டி போட்டு நிற்க வைப்பாராம். (அது பெண்களுக்கு மட்டுமேயான பள்ளியா என்ற ஐயம் உங்களைப் போன்று எனக்கும் எழுந்தது). ஆனால் தண்டனைக்காலம் முடிந்ததும் ஆசிரியர்கள் ஓடி வந்து குற்றவாளியை அள்ளி எடுத்து “செல்லம், புஜ்ஜு, ஜூஜூ” என்றெல்லாம் கொஞ்சி உடலின் பலபாகங்களை கிள்ளி சீராட்டுவார்களாம். இதன் விளைவு? உங்களுக்கு தண்டனை மீது கோபமே வராதாம்!
ஜெ சொல்வதில் அவரது கட்சிக்காரர்களுக்கே நம்பிக்கை இல்லை போல. அவர்கள் முழுக்க மாறுபடுகிறார்கள். சட்டசபையில் சமீபத்தில் நடந்த விவாதத்தில் கலையரசன் தி.மு.க ஆட்சியில் போலிசாரிடையே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறியுள்ளார். குறிப்பாக நடைபாதை கடைக்காரர்களிடம் கூட லஞ்சம் வாங்குவதாக அவர் கூறியுள்ளதை முக்கியமாக கருதுகிறேன். அடிக்கடி போலி டி.வி.டி தயாரித்து, விற்பனை செய்ததாக சிலரை கைது செய்து பத்திரிகைகளில் படம் வெளியிடுவார்கள். ஆனாலும் பட்டப்பகலில் திருட்டு டி.வி.டிக்கள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. இவை வெறுமனே மாமூல் கைதுகள் தாம். கிண்டி பகுதியில் ஒரு தொப்பை போலீஸ் மாமா பைக்கில் இருந்தபடியே திருட்டு டி.வி.டிக்காரரிடம் லஞ்சம் கேட்டுப் பெற்று சட்டைப் பையில் சொருகுவதை கண்டேன். எனக்கு கரப்பான்பூச்சியையும் போலீசையும் கண்டால் சின்ன வயசில் இருந்தே பயம் என்பதால் இந்த காட்சியை உங்களுக்காக நுண்பேசியில் படம் பிடிக்கும் முயற்சியை கைவிட்டேன். இங்கு ஒன்றை ctrl+U போட்டு சொல்ல வேண்டும். மாமூல் கொடுக்கும் கடைக்காரர் போலீசை சிறிதும் சட்டை செய்யவில்லை. நாய்க்கு புரை வாங்கிப் போடும் ஒருவித அலட்சிய பாவனை. அடுத்து இந்த கடைக்காரரிடம் விசாரித்ததற்கு படிநிலை பொறுத்து லஞ்ச தொகை மாறுபடும் என்றார். அதாவது நூறில் இருந்து ரெண்டாயிரம் ரூபாய் வரை அடிக்கடி வாங்கி செல்வார்களாம். காவல்துறை இதற்கெல்லாம் ஒரு நிலையான கணக்கு வைத்துக் கொண்டு கடை, இடை, தலை ஊழியர்களை எல்லாம் கண்டமேனிக்கு தோன்றும் போதெல்லாம் அனுப்பி கை நீட்டும் அவலத்தை தவிர்க்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அடுத்து தர்பூசணி மற்றும் இளநீர் விற்கும் மற்றொரு சாலையோர கடைக்காரர் தி.மு.க ஆட்சி பற்றி இதே போன்றே அலுத்துக் கொண்டார். “அ.தி.முக ஆட்சியில் போலீஸ்கரங்க லஞ்சம் வாங்கவே பயப்படுவாங்க. இப்போது வெளிப்படையாவே வந்து புடுங்கீட்டு போறாங்க.” மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் போலீசுக்கு தாரை வார்க்க வேண்டி உள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார். “மாமூல் கொடுக்காட்டா கேஸ் போடுவாங்க. இவனுவளுக்கு கொடுக்கிற லஞ்சக் காசை கோர்டில பைனாவே கட்டீரலமுன்னு சில சமயங்களில் தோணும்”.



”காவலர்களை யார் காவல் காப்பது?”
சாகரடீஸ் தனது லட்சிய நாடான utopia-வை விளக்கிக் கொண்டிருக்கும் போது அவரிடம் இந்த கேள்வி கேட்கப்படுகிறது. பின்னர் இதற்கு தீர்வு சொல்லும் சீடர் பிளேட்டோ “அதிகார மோகம் இல்லாதவர்கள் காவலர்களாக வேண்டும்” என்கிறார். இது சாத்தியமில்லை என்று உணர்ந்து விட்ட பின் இன்று மற்றொரு தீர்வு சொல்லப்படுகிறது: அதிகாரத்தை பிரித்தளிப்பது. எந்த பெரிய குழுவிடமும் அதிகாரம் மொத்தமாக சேர்ந்து விடுவதை தவிர்ப்பது. ஆட்சி அதிகாரம் இப்படி பகிர்ந்தளிக்கப்படுவது ஊழல் மற்றும் பொறுப்பின்மையை குறைக்க உதவலாம். எனக்கென்னமோ ஜராசந்தன் கதை தான் நினைவுக்கு வருகிறது.
Read More

புதுமையான உவமைகள்




விஜயராகவன் இயக்குனர் கனவுகள் கொண்ட எழுத்தாளர். இயக்குனர் ராமின் கீழ் பணி புரிந்த அனுபவம் உண்டு. உறங்கும் இமைகளும் இனிமையான புன்னகையும் கொண்டவர். சுவாரஸ்ய உரையாடல்காரர். அவரது இணையதளம் கைக்கொண்ட நதி. இத்தளத்தில் சில கவனம் கவரும் குட்டிக் கவிதைகள், சரளமாக எழுதப்பட்ட சிறுகதை, நல்லதொரு சினிமாக் கட்டுரை உள்ளது. விஜயின் கவிதைகள் படிக்கும் போது நவீன கவிதையின் தனித்துவமாக புதுமையான உருவகங்கள் உவமைகளை சுஜாதா நீராலானது புத்தகத்தின் முன்னுரையில் சுட்டிக் காட்டினது நினைவு வருகிறது. இருளுக்குள் பதுங்கும் தீக்குச்சி, வலியின் போது மட்டும் உணரப்படும் உறுப்பு என சற்றும் எதிர்பாராத உவமைகள் வருகின்றன. கீழ்வரும் கவிதைகளை பாருங்கள்

1.
இருள்வேண்டும் தீ

காதலியுடன் தனித்திருக்க
தவித்தலைந்த நாளொன்றில்,
சிகரெட் நெருப்பிற்காய்
திறந்த தீப்பெட்டியில்,
இணைந்திருந்தன
ஈற்றிரண்டு தீக்குச்சிகள்.
மூடி இருள் தந்து
புதரொன்றில் மறைத்து வைத்தேன்.


2.
மின்சாரமற்ற இரவின் மெழுகுதிரிச்சுடரில்
அப்பாவின் புகைப்படம்,
வலியின்போது மட்டும் உணரும்
உடலுறுப்பு ஒன்றைப் போல.
Read More

தத்தம் இடங்களுக்கு




வானைக் கலைத்து எழும்
பறக்கும் தீநாக்குகள் --

எட்டாவது மொட்டை மாடி
பூனை ஜன்னல் திண்டில் ஏறி
ஆழம் பார்க்கும் முன் --

ஈர பூமியில்
தத்தம் இடங்களுக்கு
Read More

Wednesday 19 May 2010

ஈழத்தமிழரின் அலிபாபா குகை: kuralweb.com

இணையதளங்கள் குறித்து தாமரை இதழில் நான் எழுதி வரும் தொடரில் இந்த மாதம் kuralweb.com




தமிழீழ போராட்டம் மற்றும் அதன் அழிவு குறித்த வரலாற்று, அரசியல், சமூக பதிவுகள் இணையத்தில் ஏராளம். இவ்விசயங்களை பேச Yarl.com, globaltamilnews.com, inioru.com, nerudal.com, kuralweb.com போன்று தனிப்பட்ட இணையதளங்களும், இணையபத்திரிகைகளும் தீவிரமாக, தொடர்ச்சியாக இயங்குகின்றன. ஈழப்போருக்கு புலம் பெயர் தமிழர்கள் பொருள் மற்றும் தார்மீக உதவிகளை வெளியில் இருந்து நல்கி ஆதாரமாக விளங்கியது ஒருபுறம் இருக்க இணையத்தில் அவர்கள் எழுப்பி வரும் கருத்தியல் அலசல் மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான வெளி இணையதமிழுக்கு பெரும் கொடை எனலாம். இணையத்தில் தீவிர தமிழ் எழுத்தாளர்களையும் சில உதிரிகளையும் தவிர பெரும்பாலானவர்கள் நடத்தும் இணையதளங்கள் கேளிக்கை மற்றும் செய்திப்பகிர்வை மட்டுமே நோக்கமாய் கொண்டவை. இணையம் இந்திய தமிழர்களுக்கு ஒரு சமையல்கூடம் மட்டுமே. வாழும் சமூகம் குறித்த தீவிரமான அக்கறை கொண்ட எழுத்துக்கள் அதிகமாய் ஈழத்தமிழர்களின் இணையபக்கங்களிலேயே கிடைக்கின்றன. இணையத்தை அவர்கள் ஒரு ஆய்வுக்கூடமாக பாவிக்கின்றனர். அதற்கான தேவை உள்ளது. ஈழசமூகம் இன்று ஒரு முட்டுசந்தில் நிற்கிறது. முள்ளிவாய்க்கால் இன-அழிப்புக்கு பின் அதன் பொருளாதார, சமூக, உளவியல் அடித்தளங்கள் வேகமாய் தகர்ந்து வருகின்றன. எல்லா திசைகளிலும் அது ஒரு கேள்வியை சந்தித்து வருகிறது. தன்னை மீள்பரிசீலனை செய்வதற்கான பெரும் தேவை ஈழமக்களுக்கு இன்று உள்ளது. இலவச டீ.வி, இட்லி, வடையுடன் முடிந்து போகின்றவை அல்ல அவர்களின் நெருக்கடிகள்.

ஈழப்பிரச்சினையை பேசும் கட்டுரைகள் இரு புள்ளிகளில் நிற்கின்றன. உணர்ச்சிவசப்பட்டு ஒரு அரசியல் நிலைப்பாடெடுத்து உரையாடுபவை; தீவிரமான ஆய்வு மொழியில் பரிசீலிப்பவை. முதல் வகை கட்டுரைகள் உடனடி சமூக, கலாச்சார தீர்மானங்களை அலசி முன்வைக்கவும், அறம் குறித்த பிரக்ஞையை தக்க வைக்கவும் முக்கியமானவை. இரண்டாவது வகை அறிவியக்க கட்டுரைகள் நிதானமான ஆழமான வழிமுறையை மேற்கொள்கின்றன. ஒரு கொந்தளிக்கும் சூழலில் இவை வறட்சியாய் தெரிந்தாலும் எதிர்கால சமூகத்தின் வளர்ச்சிக்கும் மீளுருவாக்கத்திற்கும் இவை பெரும் பங்களிக்கக் கூடியவை. இவ்விருவகை கட்டுரைகளும் இன்று எதிர்கொண்டு பதிலளிக்க முயலும் முக்கிய கேள்வி புலிகளின் வீழ்ச்சி பற்றியதே. புலிகளின் தவறுகள், சர்வதேச மற்றும் சிங்கள சதிகள், புலிகளின் மறுவரவு, புலம்பெயர் ஈழ அரசு என பல்வேறு தரப்புகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இத்தகைய அணுகுமுறைகள் ஒரு musical chair விளையாட்டு மட்டுமே என்பது எளிதில் புலனாகி விடுகிறது. மெழுகுமாளிகைகள் போல் தீக்கிரையாவதற்கே எழுதப்படுபவை இவை. ஒரு சமூகம் துப்பாக்கி ரவைகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவது அல்ல. பண்பாடு, வாழ்வியல், பொருளாதாரம், நிர்வாகம், உளவியல் என எத்தனையோ கூறுகள் சமூகத்தை நகர்த்துகின்றன. ஈழப்பிரச்சினையின் இந்த பன்மைத்தன்மையை புறவயமாக விவாதிக்கும் பல நுட்பமான தெளிவான கட்டுரைகளை குரல்வெப் இணையதளத்தில் (kuralweb.com) படிக்கலாம். தீயணைப்பு கூக்குரல் எழுத்துக்களில் மறைந்து போகும் பல்வேறு சிக்கல்களை இக்கட்டுரைகள் தயக்கமின்றி அலசுகின்றன. மேலும் புலி மற்றும் மாவோயிச ஆதரவு எதிர்ப்பில் இருந்து முழுமையான வன்முறை நிராகரிப்பு வரை பல்வேறு பட்ட தரப்புகளை சார்பு நிலையற்று இந்த இணையதளம் வெளியிடுகிறது. ஏற்கனவே பிற தளங்களில் வெளியான கட்டுரைகளின் மறுபிரசுரிப்புகளும் உண்டு.



குரல்வெப்பில் உள்ள குறிப்பிடத்தக்க இடுகைகளில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஆக்போர்டு பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோரின் நேர்காணலும் ஒன்று. ”முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் இராணுவ – அரசியல் ரீதியாக மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. எமது நிலம், இனம், மொழி சார்ந்து சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது.” என்று இவர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக புலிகளை அங்கீகரித்தவர்களும் ஆதரிக்காதவர்களும் புலிகள் நடத்திய ஒரு அரசாங்கத்தின் பிரஜைகளே. இப்போது அழிந்திருப்பவை வெறும் புலிகள் மட்டுமல்ல, அவர்கள் நடத்தி வந்த அரசாஙக்த்தின் நிதி, நீதி, நிர்வாகம், பொருளாதாரம், காவல்துறை, ராணுவம், மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளும் தான். புலிகளின் அழிவுக்கு பின் அவர்களின் பிரஜைகள் இயல்பாகவே அனாதைகளாகி விடுகின்றனர். புலிகளை வெறுத்தாலும், நேசித்தாலும் உண்மை இதுவே. இவர்கள் இலங்கையில் தற்போது மிருகங்களாக நடத்தப்படுகின்றனர்; எதிர்காலத்தில் இரண்டாம் பிரஜைகளாக இருப்பர். எட்வெட், யாழியினி உள்ளிட்டோர் சமகால இலங்கைக்கும் புலம்பெயர் நாட்டு ஈழப்பிரஜைகளுக்கும் பொருளாதார பரிவர்த்தனைகள் துண்டித்து போயிருப்பதை குறிப்பிடுகின்றனர். முன்போல் புலத்தில் உள்ள ஈழர்கள் தொடர்ந்து தங்கள் சோதரர்களுக்கு பொருளுதவி வழங்கிக் கொண்டிருக்கவும் முடியாது. சமூகக் கட்டுமானங்கள் இல்லாத அனாதைப் பிரஜைகளுக்கு சம்பாதிக்கவோ, சம்பாதித்ததை புழக்கத்தில் விடவோ முடியாது. இந்த நிலைக்கு இல்ங்கை அரசு புலிகளின் சொத்து வேட்டை என்ற பெயரில் ஈழ மக்கள் செல்வத்தை பறிமுதல் செய்வதும், புலத்தில் இருந்து புலிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை ஒருசாரார் பதுக்கி வைத்திருப்பதும் முக்கிய காரணங்கள். இப்படி அனாதை பிரஜைகள் நேரிடும் இன்னல்கள் ஏராளம். அவர்களுக்கு தேவை அரசியல் போராட்டம் மட்டுமே என கருதுவது அபத்தம். புலி எதிர்ப்போ பிரபாகர வழிபாடோ இந்த மக்களை முன்னேற்றிடாது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்..
ஈழத்தை விடவும் வெளியில் தான் அதிக தமிழர்கள் உள்ளதாகவும் அதனால் தமிழ் ஈழம் கோருவது தவறு என்கின்ற சிங்களத் தரப்பின் வாதத்தை விமர்சிக்கும் ரீட்டாவின் ”தேசியம் எண்ணிக்கை அல்ல அது ஒரு பண்புநிலை” கட்டுரை காஷ்மீருக்கும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்துவதே. தேசியம் என்பது பொருண்மை நிலை மட்டுமே அல்ல அது ஒரு உளவியல், பண்பாட்டு வடிவமும் கூடவே என்று பேசும் ரீட்டா புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து தமிழ் தேசிய உணர்வுடன் ஈழத்துக்கான பங்களிப்பை செய்து வந்துள்ளதை குறிப்பிடுகிறார். ”இந்திய எதிர்ப்பு அரசியலும் ஈழத்தமிழர் போராட்டமும்” கட்டுரையில் பிரம்மா ஒரு வரலாற்றுப் பார்வையில் இந்திய எதிர்ப்பு அரசியலை விளக்குகிறார். இந்திய அரசியல் மாற்றங்கள் ஈழத்தில் நிகழ்த்திய விளைவுகளை அவர் பேசாமல் புலிகளுக்கும் இந்தியாவுக்குமான அரசியல் பகையின் பின்புலத்தை தொட்டுக் காட்டுவதோடு நின்று விடுவது இக்கட்டுரையின் ஒரு முக்கிய குறை. இந்தியாவுடன் இனிமேல் பகைபாராட்டாமல் சமயோசிதமாக ஈழம் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர். மேல்மட்டத்தில் இவ்வாறு மல்லாந்து நீச்சலடித்தாலும் பிரம்மா குறிப்பிடும் பிரச்சனை மீதான அக்கறை எதிர்கால ஈழத்திற்கு அவசியமே. நிலவனின் “ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்?” என்ற கட்டுரையில் ஒரு கூர்மையான வாதம் வருகிறது. பிரபாகரன் ஒரு வரலாற்று விளைவு மட்டுமல்ல, அவர் ஈழப் பண்பாட்டின், உளவியலின் பகுதியுமே என்கிறார் நிலவன். ஒரு மிகச்சிறிய குழு ஒரு பெரும் அரசை எதிர்த்து 25 வருடங்களாக போராடி நின்றதன் பின்னுள்ள வீரமும், மூர்க்கமும், அர்ப்பணிப்பு உணர்வும் ஒரு தனித்துவமான் சமூகக் கூறு தான். அது ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கு உள்ளும் உறைந்துள்ள ஆதி கூறு. இதற்கு பிரபாகரன் எனும் பெரும் ஆளுமை வடிகால் கொடுத்தது என்கிறார் நிலவன். விமர்சகரும், புனைவெழுத்தாளருமான தமிழவன் “தமிழுணர்வின் வரைபடம்” (உயிர்மை வெளியீடு) என்ற நூலில் ஈழப்போர் சூழலை சங்க காலகட்டத்தோடு ஒப்பிட்டு பேசுவது இங்கு நினைவு கூரத்தக்கது. தமிழ் எழுத்தாளர்களில் ஆரியச்சலவை செய்யப்பட்ட சில அங்கிள்கள் ஈழப்போரை ஒரு தீவிரவாத செயலாக சித்தரித்தனர். நாம் கலாச்சார வரலாற்று ரீதியாக ஈழத்திலுள்ள தமிழர்களை நீளந்தாண்டி இன்று வேறிடத்திற்கு வந்திருந்தாலும் நம்முள் உள்ள ஆதிப் பண்பு நிலையின் மற்றொரு வெளிப்பாடு தான் பிரபாகரன் எனபதை உணரும் நுண்ணுணர்வும். நிதானமும் அவர்களுக்கு இல்லாமல் ஆகி விட்டது. பிரபாகரன் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்பதற்கான காரணங்களை அடுக்கும் நிலவன் ஈழத்திற்கு இன்றைய தேவை கலை, கலாச்சார, அறிவியக்க தளங்களில் ஈழ சமூகத்தை கராறான ஒரு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார்.



ஈழ விடுதலைப் போரில் பெண்புலிகளின் பங்கு என்ன? அவர்களுக்கு புலி இயக்கத்துள் போதுமான அங்கீகாரம் கிடைத்ததா? இப்போது பிடிபட்ட பின் அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு உள்ளது? இக்கேள்விகளை பரிசீலிக்கும் றஞ்சி ஒரு பெருமூச்சையே பதிலாக அளிக்கிறார். “இரத்த சுவடுகளும் நிர்வாண கோலங்களும்” கட்டுரையில் அவர் பிரபாகரனால் பெண்புலிகள் மொட்டை அடிக்கப்பட்டு தப்பிச் செல்ல இயலாதபடி அலங்கோலமாக்கப்பட்டதை குறிப்பிட்டு புலிகளும் சிங்களவர்களும் பெண்களை ஒடுக்கி வந்துள்ளதாக சொல்கிறார். 1992-இல் போஸ்னியாவில் செர்பிய அரசாங்க திட்டமிடலின் படி இராணுவத்தால் 20,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். 1990-இல் போர் நடைபெற்ற போது குவைத்தில் 5000-க்கு மேற்பட்ட பெண்களுக்கும், ருவாண்டாவில் ஐந்து லட்சம் பெண்களுக்கும் இதுவே நடந்தது. இன்று இலங்கையிலும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் எத்தனையோ ஈழப்பெண்கள் விபச்சார கூடங்களில் பாலியல் ஒடுக்குமுறை உள்ளாக்கப் படுகிறார்கள். வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்புலிகள் சாட்சியமாக எஞ்சக் கூடாதென்பதால் அவர்கள் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இது பாலியல் அத்துமீறல் மட்டுமல்ல, ஒரு இனத்தின் உயிரியல் தூய்மையை களங்கப்படுத்தி அவமானிக்கும் செயலும், அதன் சுய-அபிமானத்தை, உளவியலை சிதைக்கும் திட்டமிட்ட நடவடிக்கையுமே என்று சுட்டுகிறார் றஞ்சி.



பாராரட்சணத்தின் ”அனாமோவின் கண்ணீர் ...” கட்டுரையில் வரும் சரத் பொன்சேகா குறித்த சித்திரம் காத்திரமானது; இனதுவேசமும், வன்மமும் இணைந்து ஒரு மனிதன் வளர்த்தெடுக்கப் பட்டதை, வரலாற்றில் தடுக்கிட்ட ஒரு தடுமாற்றத்தில் அவன் பாதாள உலகத்திற்கு காணாமல் போன விதியின் முரண்களை சுட்டுகிறது.
இவ்வளவு அருமையான கட்டுரைகள் கொண்டுள்ள குரல்வெப் டாட்காம் ஒரு செய்தித் தளமும் கூட. ஆனால் இத்தளம் முறையாக வடிவமைக்கப்பட இல்லை. முகப்பில் இணையதளம் மற்றும் அதன் நோக்கம் குறித்த அறிமுகம் இல்லை. கட்டுரைகள் பக்கம் முகப்பில் இல்லை. அவற்றை காண முகப்பில் உள்ள கட்டுரை ஒன்றை சொடுக்கி அதன் தொடுப்பு வழியாக செல்ல வேண்டி உள்ளது. பக்கங்கள் மிக மெத்தனமாகவே கிரீச்சிட்டபடி திறக்கின்றன. அதன் அனைத்து அர்த்தங்களிலும் kuralweb.com ஒரு அலிபாபா குகைதான்.
Read More

Tuesday 18 May 2010

T20 உலகக் கோப்பை: இந்தியா சறுக்கியது எங்கே?




இந்தியாவின் 2010 உலகக் கோப்பை பின்னடைவுக்கு அனில் கும்பிளே, அருண் லால் உள்ளிட்ட பல விமர்சகர்களும் தோனியில் திட்டமிடல் மற்றும் அணுகுமுறையையே காரணமென சாடி உள்ளனர். சஞ்சய் மஞ்சுரேக்கர் மற்றும் கவாஸ்கர் இந்திய மட்டையாளர்கள் குறைநீள அல்லது பவுன்சர் பந்துகளை சந்திப்பதற்காக மனதளவிலான ஒழுக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இந்திய அணி பொதுவாக உற்சாகமும் ஈடுபாடும் குன்றியவர்களாகவே காணப்பட்டனர் என்று மஞ்சுரேக்கர் கூறுகையில், கவாஸ்கர் வீரர்கள் இந்தியா திரும்பியதும் அவர்களின் ஓய்வை ரத்து செய்து விட்டு, கட்டாயமாக பங்களூரில் உள்ள NCA-வுக்கு அனுப்பி உயர்ப்பந்துகளை சமாளிக்க பயில செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கிந்திய தீவு அணியின் தலைவர் கிறிஸ் கெய்லும் மஞ்சுரேக்கரை போன்று மனத்தயாரிப்பையே சுட்டுகிறார். அவரை பொறுத்தவரையில் இந்தியர்கள் தொழில்நுட்ப அளவில் அல்ல உளவியல் ரீதியாகவே மேலும் உறுதியாக வேண்டும். கெய்ல் கூறியுள்ளது சற்று விவேகமானதாக படுகிறது. அதாவது ஒரு மட்டையாளன் ஒரு குறிப்பிட்ட வகை பந்துவீச்சை சமாளிக்க அதில் நிபுணனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாமர்த்தியமான ஒரு செயல்திட்டம் மற்றும் அதை நிறைவேற்றும் மனவலிமை போதும். நாம் பவுன்சரை சந்திக்க திறனுள்ள மட்டையாளர்களை (திராவிட்?) மே.இ தீவுகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று கும்பிளே சொல்கிறார். மேலும், பார்படோஸ் ஆடுகளத்தில் தோனி சுழலர்களை நம்பி களமிறங்கியதை கும்பிளே கண்டித்துள்ளார்.

ரவிசாஸ்திரி ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதியுள்ள பத்தியில் சற்று உணர்ச்சி வசப்பட்டு 20-20 அணித் தலைமையிலிருந்து தோனியை நீக்கி ஒரு இளைஞரை (ரெய்னா?) நியமிக்க வேண்டும் என்று குறிப்புணர்த்தி உள்ளார். பின்னர் தோனி நீக்கம் ஒரு புரளியாக கிளம்ப இந்திய கிரிக்கெட் வாரியம் அவசரமாக அதை மறுத்தது. திரிவேதி, அஷ்வின், உமேஷ் யாதவ், திண்டா, ஓஜ்ஹா போன்ற இளைய வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்று ரவிசாஸ்திரி நம்புகிறார். இந்திய அணி மேலாண்மை வேகவீச்சாளர்களை சரியாக பராமரிப்பது இல்லை என்கிறார் கும்பிளே. கடந்த ஐந்து வருடங்களில் பல திறமையான வீச்சாளர்கள் தோன்றி மறைந்துள்ளனர். முனாப் படேல், ஆர்.பி சிங் போன்றவர்களின் தேக்கத்தை கும்பிளே குறிப்பிடுகிறார். இர்பான் பதான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதையும் கும்பிளே சாடுகிறார். ஆனால் ஐ.பி.எல் இந்திய உள்ளூர் பந்து வீச்சாளர்களின் தரத்தை அம்பலப்படுத்தி விட்டதால் இனிமேல் இப்படியான வாதங்கள் எடுபடுவது சந்தேகமே. உதாரணமாக இந்த வருட ஐ.பி.எல்லில் ஏறத்தாழ அனைத்து அணிகளும் வேகப்பந்து வீச்சுக்கு ஆஸி, தெ.ஆ, மே.இ நாட்டு வீரர்களையே நம்பி இருந்தன. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை போல நம்மிடம் வேகவீச்சாளர்களின் சுரங்கம் இல்லை.

இந்திய அணியின் இறங்குமுகத்துக்கு ஹர்ஷா போக்ளே மூன்று காரணங்களை தனது cricinfo பத்தியில் குறிப்பிட்டுள்ளார். துவக்க பந்து வீச்சு, களத்தடுப்பு, உயரப்பந்து. இதை விட முக்கியமாய், ஹர்ஷா சொல்லும் வேறிரண்டு விசயங்கள் கவனிக்கத்தக்கவை. முதலாவதாய், இந்திய அணியினர் வெற்றிக்கான மனப்பாங்கை கொண்டிருக்க இல்லை. அடுத்து, இந்த அணியை விட்டால் நமக்கு வேறு வழியில்லை. அதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ”A different batsman might have been picked, another spinner might have made his way here, but there was no Bradman or Sobers left behind” என்கிறார்.

பத்திரிகையாள சந்திப்பில் Respected Sir, as I am … விடுப்புக்கடித பாணியில் தோனி சொன்ன செயல்விளக்கத்தில் அசரூதீன் உள்ளிட்ட முன்னாள் உதிரி ஆட்டக்காரர்களில் இருந்து ஊடகவியலாளர்கள் வரை ஓட்டை காண தோனியின் யங்ஙிஸ்தான் பிம்பத்தில் சில செங்கற்கள் சரிந்து விட்டன. இந்தியாவிலிருந்து தத்தளித்தபடி வெளிப்பட்ட ஒரே சமாதானப் புறா சச்சினுடையது.

உயரப்பந்தை சமாளிக்க இரு முரண்பட்ட வழிகள்

தொண்ணூறுகளில் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் அனைத்து அணிகளையும் தனது தூஸ்ராவால் குழப்பிக் கொண்டிருந்தார். இந்தியா. இலங்கை போன்ற சுழலர்களை உடைத்து குடிக்கும் அணிகளுக்கே சக்லைன் பந்து எங்கே திரும்பும் என்பது புதிராக இருந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்ற தென்னாப்பிரிக்க அணி முதன்முதலாக சக்லைனை நன்றாக சமாளித்து விக்கெட் அளிக்காமல் ஆடியது. அதற்கு ஒரு எளிய செயல்திட்டம் பயன்பட்டது. பொதுவாக காற்றில் ப்ளைட் செய்து வீசப்படும் சுழல்பந்தை மட்டையாளர்கள் இறங்கி வந்து அடித்து சமா`ளிப்பார்கள். ஆனால் தெ.ஆ மட்டையாளர்கள் கிரீசிலே நின்று சக்லைனை நேராக ஆடினார்கள். சக்லைன் பந்தை அதிகம் திருப்புவதில்லை என்பதால் இந்த திட்டம் வெற்றி பெற்றது. பின்னர் இந்தியாவுக்கு வந்த ஆஸி மற்றும் தெ.ஆ அணி வீரர்கள் ஹர்பஜனுக்கு எதிராக மற்றொரு வித்தியாசமான முறையை பயன்படுத்தினர். ஹெய்டன், காலிஸ் போன்றோர் ஆப் குச்சியில் கார்டு எடுத்து நின்று கொண்டனர். இதனால் ஹர்பஜன் மிடில் மற்றும் ஆப் குச்சிகளுக்கு வீச ஆரம்பித்தார். ஜெயவர்தனே ஹர்பஜனை சந்திக்கையிலும், திராவிட் மற்றும் காம்பிர் போன்றோர் முரளிதரனை சந்திக்கும் போது அவர்களின் பந்தின் உயரத்தை சமாளிக்க லெக் குச்சி பக்கமாக விலகி நின்றி வெட்ட முயன்றனர். இது பஜ்ஜி மற்றும் முரளியின் லைனை வெகுவாக எதிர்மறையாக மாற்றியது. இது போன்றதொரு செயல்திட்டத்தை உயரப்பந்துக்கு உகந்ததாக இந்தியர்களாலும் பின்பற்ற முடியும். உதாரணமாக, இந்தியாவின் கடந்த ஆஸி சுற்றுப்பயணத்தில் சச்சினுக்கு ஜான்சன் லெக்-ஆப் ஆக குறுக்கே வீசும் உயரப்பந்துகள் பெரும் தொந்தரவாக இருந்தது. காரணம் சச்சின் ஹூக் மற்றும் புல் ஷாட்டுகளை கிடப்பில் போட்டிருந்தார். இதை சமாளிக்கும் விதமாக சச்சின் தொடர்ச்சியாக சற்று விலகி நின்று கீப்பர் அல்லது ஸ்லிப் களத்தடுப்பாளர்களுக்கு மேலாக பந்தை வெட்டி நாலுக்கு விரட்டினார். ஒரு கட்டத்தில் ஜான்சன் வெறுத்துப் போய் அப்படி வீசுவதை நிறுத்திக் கொண்டார். அந்த டெஸ்டு தொடரில் தான் அடைந்த மிக முக்கியமான உளவியல் வெற்றியாக இந்த ஷாட்டை சச்சின் கருதுகிறார். முன்னாள் ஆஸி மட்டையாளர் ஸ்டீவ் வாஹ் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ரெண்டாயிரத்தின் துவக்கம் வரை உலகின் மிகச்சிறந்த மட்டையாளர்கள் பட்டியலில் இருந்தவர். ஒரு கட்டத்தில் அவர் உச்சத்தில் இருந்த சச்சினையே நெருக்கித் தள்ளும் அளவுக்கு தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்தார். ஸ்டீவ் இளமையில் உயரப்பந்துக்கு ஹூக் மற்றும் புல் ஷாட்டுகளை அதிரடியாக பிரயோகித்து விக்கெட்டை எளிதில் இழந்து வந்தார். ஒரு கட்டத்தில் இனிமேல் உயரப்பந்துகளை தாக்குவதில்லை என்று முடிவு செய்தார். அப்போதில் இருந்து அவரது ஆட்டவாழ்வின் நிறைவு வரை உயரப்பந்துகள் அவரது பலவீன பிரதேசமாகவே இருந்தன. ஸ்டீவ் இப்பந்துகளுக்கு பவ்யமாக குனிந்து வழி விட்டார்; அல்லது கண் சிமிட்டாமல் நெஞ்சில் தோளில் வாங்கிக் கொண்டார்; ஆனால் தற்போதைய இந்திய மட்டையாளர்களை போலன்றி எப்போதுமே உயர்பந்துகள் தன் ஈகோவை தாக்காமல் பார்த்துக் கொண்டார். ஒற்றை ஓட்டங்கள் எடுத்து வேகவீச்சு முனையில் இருந்து விலகிக் கொள்வார். மட்டையில் பட்டாலும் நெஞ்சில் வாங்கினாலும் இறுதியில் ஓட்டங்களே முக்கியம் என்பது ஸ்டீவின் நம்பிக்கை. உலகின் மிகச்சிறந்த மட்டையாளர்கள் இருவர் உயரப்பந்தை இவ்வாறு இரு முரணான விதங்களில் சந்தித்து வெற்றி கண்டனர். இங்கு நமது சமகால இந்திய மட்டையாளர்களுக்கு ஒரு பாடம் உள்ளது: திறமை அளவுக்கு மனத்திடம் மற்றும் துணிவு அவசியமான பண்புகள்.



இந்தியாவின் செயல்திட்டம் பழுதுபட்டதா?

2010 ஐ.பி.எல்லின் போது பெரும்பாலான ஆடுகளங்கள் மெதுவாக இருந்தன. இதனால் மும்பை, ராஜஸ்தான், சென்னை, கர்நாடகா என்று பெரும்பாலான அணிகள் ஆரம்ப 6 ஓவர்களை வீச வெற்றிகரமாக சுழலர்களை பயன்படுத்தினர். இதற்கு பின்னர் T20 உலகக்கோப்பை நடைபெறும் மே.தீவுகளில் ஆடுகளங்கள் இதே போன்றே மெதுவானவையாய், சுழலுக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே.தீவுகளில் ஆடுகளங்கள் இருவகைப்பட்டதாக இருந்தன. செயிண்ட் லூசியா போன்ற மைதானங்கள் மெதுவானவை; ஆசிய அணிகளுக்கு உகந்தவை. பார்படோஸ் மைதானம் எகிறும் ஆடுகளம் கொண்டது. இங்கு ஆஸி, தெ.ஆ, இங்கிலாந்து அணிகள் சிறப்பாக ஆட முடியும். ஆனால் பொதுவாக மே.இந்திய அணியைத் தவிர பிற அணிகள் தங்களது பந்து வீச்சு சேர்க்கையை தங்களது மரபுப்படியே அமைத்துக் கொண்டன. மெதுவான ஆடுகளத்தில் தெ.ஆ, இங்கிலாந்து மற்றும் ஆஸியினர் ஒரு சுழலருடன் ஆடினர். இந்த செயல்திட்ட இறுக்கம் காரணமாக தெ.ஆ இந்தியாவிடம் முதல் ஆட்டத்தில் வீழ்ந்தது. ஆஸ்திரேலியா பங்களாதேசிடம் ஏறத்தாழ மண்டியிட்டது. அரைஇறுதியில் பாகிஸ்தான் சுழலர்களை ஆடத் திணறி ஆஸி அணி பத்து ஓவர்களில் 60 சொச்சத்துக்கு ஐந்து விக்கெட்டுகள் இழந்து கிட்டத்தட்ட தோற்றது. இந்தியா அனைத்து ஆட்டங்களிலும் சுழலர்களை நம்பியே இறங்கியது. வேக ஆடுதளங்களில் இந்த செயல்திட்டம் எதிர்மறையான விளைவுகளை தந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக, இந்த உலகக்கோப்பையில் பந்துவீச்சு அமைவு மட்டுமே ஆட்டமுடிவுகளை தீர்மானிக்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். அணிகளின் முன்னேற்றத்துக்கும் பின்னடைவுக்கும் ஆட்டத்தரம் தான் தீர்மானிக்கும் காரணியாக இருந்தது. எந்த ஆடுகளத்திலும் வேகவீச்சாளர்கள நம்பி ஆடி வெற்றி பெற்று வந்துள்ள ஆஸ்திரேலியா ஒரு சிறந்த உதாரணம். பன்னிரெண்டு ஓவர்களும் சுழலர்களை கொண்டே வீச முனைந்த தோனியின் செயல்திட்டத்தில் எந்த கோளாறும் இல்லை. அவரது பந்து வீச்சாளர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதே நிஜம். இந்த விசயத்தில் தேர்வாளர்களுக்கும் தோனிக்கும் எந்த அளவுக்கு ஒத்திசைவு இருந்துள்ளது என்பதே நாம் எழுப்ப வேண்டிய கேள்வி. இந்திய முழு அணியில் இரு முழுநேர சுழலர்களும், நான்கு வேகவீச்சாளர்களும் உள்ளனர். இரண்டு வேக வீச்சாளர்களுடன் களமிறங்குவதே தோனியின் திட்டம் என்றால் நான்கு வேகவீச்சாளர்களை தேர்ந்தெடுத்தது ஏன்? உள்ளூர் ஆட்டங்களில் 36.16 மட்டையாட்ட சராசரியும் இரண்டு சதமும் அடித்துள்ள அஷ்வின் அல்லது 32.64 மட்டையாட்ட சராசரி உள்ள இக்பால் அப்துல்லா போன்ற மட்டையாடத் தெரிந்த முழுநேர சுழலர்களில் ஒருவரை நான்காவது வேகவீச்சாளருக்கு பதிலாக சேர்த்திருக்கலாம்.



உயரப்பந்துகள் நம் வாய்ப்புகளை எவ்வளவு தாழ்த்தின?

இந்தியாவின் T20 உலகக்கோப்பை சொதப்பலுக்கு உயரப்பந்தை சந்திப்பதற்கான தொழில்நுட்பக் குறைபாடே பிரதான காரணமாக இன்று பேசப்படுகிறது. ஆனால் இது ஒரு பரிமாணம் மட்டுமே. 2009 மற்றும் 2010 T20 உலகக்கோப்பை தொடர்களில் மிக முக்கியமான ஆட்டங்களில் நாம் சாதகமற்ற ஆடுகளங்களில் ஆட நேர்ந்துள்ளது. 2009 தொடரின் போது மிக முக்கியமான இரு ஆட்டங்களில் நாம் இங்கிலாந்து மற்றும் மே.இ தீவுகளை உயரப்பந்து வீச்சுக்கு சாதகமான லார்ட்ஸ் ஆடுகளத்தில் சந்தித்தோம். இழந்தோம். ஆனால் மெதுவான நாட்டிங்கம் ஆடுகளத்தில் இலங்கை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை ஆடி வீழ்த்தியது. இதே ஆசியாவுக்கு சாதகமான மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் வீழ்த்தியது. இப்படி 2009 உலகக்கோப்பையில் மிக முக்கிய ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாக் அணிகள் ஐரோப்பிய அணிகளை மெதுவான ஆடுகளங்களில் சந்திக்கும் சாதக வாய்ப்பை பெற்றனர். இதனால் இவ்விரு அணிகளும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று லார்ட்ஸின் வேகமாக ஆடுகளத்தில் ஆடின. பாகிஸ்தானிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால் இலங்கையை அது சுலபமாக தோற்கடித்தது. ஆனால் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தை இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் சந்தித்திருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும். 2010 20-20 உலகக்கோப்பையிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இதுவே நடந்துள்ளது. இந்தியா முதல் கட்ட ஆட்டத்தில் தெ.ஆ-வை செயிண்ட் லூயிசின் மெதுவான ஆடுகளத்தில் சந்தித்து வென்றது. ஆனால் அவ்வாட்டம் அத்தனை முக்கியமானது அல்ல. செயிண்ட்.லூசியாவில் நாம் ஆஸ்திரேலியா மற்றும் மே.இ அணிகளை ஆடியிருந்தால் நிலைமை நிச்சயம் வேறாக இருந்திருக்கும். மீண்டும் இவ்வருடமும் மிக முக்கியமான ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவை சுழல்சாதகமான செயிண்ட் லூசியாவில் ஆடி வெற்றி பெற்றது. அரை இறுதிக்குள் நுழைந்து செயிண்ட் லூசியாவில் ஆஸ்திரேலியாவின் மென்னியை 19வது ஓவர் வரை காலால் நெரித்து பிறகே விட்டது. இரு உலகக்கோப்பைகளின் போதும் இந்தியாவின் ஆட்டநிரலை தீர்மானித்தவரின் குசும்பு வெற்றி தோல்விகளுக்கு இடையேயான மிக மெல்லிய கோட்டை கிழிப்பதாக இருந்துள்ளது.

கிரிக்கெட் ஆட்டத்தின் நுரை பொங்கும் சுழற்சியில் உயரப்பந்தை ஆடுவது மட்டும் திசையை தீர்மானிப்பதில்லை. அணியின் ஆட்டத்திறன் உள்ளிட்டு விளக்க முடிகிற, முடியாத எத்தனையோ காரணிகள் ஒரு ஆட்டத்தொடரின் பின்னணியில் உள்ளன. ஆற்றொழுக்குக்கு எதிராக துரும்புகள் எப்போதும் பயணிப்பதில்லை.
Read More

Saturday 15 May 2010

குலசேகரனின் “திரும்பிச் செல்லும் வழி”




திரும்பிச் செல்லும் வழி மே மாத காலச்சுவடில் வெளிவந்துள்ள குலசேகரனின் சிறுகதை. திரும்பிச் செல்லவோ முன்னகரவோ முடியாது காலத்தில் மாட்டிக் கொண்ட ஒரு முதியவரின் அவஸ்தையை பேசுகிறது. இக்கதைக்கு இரு சிறப்பம்சங்கள். ஒன்று அசாதாரண லாவகத்துடன் மனிதனின் உளவியல் தேக்கத்தை பேசியபடி இக்கதை முதுமையின் தனிமை, சிரமங்கள், தன்னிரக்கம், பாலியல் நெருக்கடி, பயம் என பல பரிமாணங்களை திறந்து விட்டபடியே செல்கிறது. அடுத்து இத்தனை செறிவான கதையின் அடுக்குகளை உருவாக்குவதற்கான எந்த பிரயாசையையும் கதைசொல்லி காட்டுவதில்லை. இங்கே தான் மொழிநடையின் சுருக்கமும், கூர்மையும் விசேசமாகிறது.

உதாரணமாக கதையின் ஆரம்பத்தில் கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்து புறநகர்ப் பகுதியில் ஒரு குறுகின அறையில் குடும்பத்துடன் வாழும் முதியவர் சுந்தரேசன் காலையில் விழித்தெழுவதை சொல்லும் இந்த வாக்கியம்

பக்கத்துத் தெருவிலிருந்தோ வேறெங்கிருந்தோ சேவல் சத்தம் கேட்டதும் நீண்ட இரவு முடிந்துவிட்டதென்று சுந்தரேசன் கண்களைத் திறந்தார் ... பிறந்து வளர்ந்த ஊரில் தனக்குச் சொந்தமான பழைய ஓட்டு வீட்டுக்குள் மரக்கட்டிலின் மேல் மல்லாந்து படுத்திருப்பதைப் போல் அவருக்குத் தோன்றியது.

முதியவரின் வெளி அவரது கடந்த காலத்துடன் பிணைக்கப்பட்டு விட்டது.

சேவல்கள் கூவுவதும் காகங்கள் கூவுவதும் வேறு கேட்க், அதனோடு வாகனங்கள் கடந்து செல்லும் இரைச்சலும் கலந்து அவரை மேலும் குழப்புகிறது. நிஜமாகவே கிராமத்தில் தான் இருக்கிறோமா என்று நினைத்துக் கொள்கிறார். பிறகு இல்லை அவை நகரத்து பறவைகள் என்று படுகிறது. முழித்ததும் கிழவருக்கு வரும் முதல் எண்ணமும் சுவாரஸ்யமானது.

மருமகள் பத்மாவதி எழுந்து வெளியே வர இன்னும் நீண்ட நேரமாகும். அவளையும் மகனையும்கூட அந்தப் பழைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விடியற்காலையின் சத்தங்களைக் கேட்கவைக்க வேண்டும் என்று சுந்தரேசன் நினைத்துக்கொண்டார்.

கிழவர் இன்னமும் தந்தையின் பீடத்திலேயே தங்கி இருக்கிறார். குடும்பமும் உலகமும் அவரை முதியோர் பூங்காவில் அமர்த்தி வைக்க அவர் இன்னமும் தந்தை நாற்காலியில் இருந்தபடி அதன் சுதந்திரங்களை கையாண்டபடி வழிநடத்த (விடியற்காலையை கவனிக்க)விரும்புகிறார். அடுத்து நாம் இதற்கு முந்தின வாக்கியத்தை கவனிக்க வேண்டும்.

நேரெதிரிலிருந்த அறை சலனமில்லாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது

கிழவருக்கு முன்னே மகனின் பள்ளியறை. அவருக்கு மருகள் மீது பாலியல் ஈடுபாடு. அதனால் விழித்ததுமே கவனம் அவர்களின் அறை மீது செல்கிறது. அவ்வறையின் நிசப்தம் அவரது கற்பனைகளை கிளர்த்தி இருக்கலாம்; தொந்தரவு செய்திருக்கலாம். அவர்களை எழுப்ப மனம் தவிக்கிறது.

கதைப்பக்கத்தின் மையக் கட்டத்தில் பத்திரிகை ஆசிரியரால் இந்த வாக்கியம் பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. மருமகள் பத்மாவதி மாமனாரின் அழுக்கு ஆடைகளை படுக்கையில் இருந்து திரட்டும் போது அவளது மார்புகள் அவர் மீது அழுந்துகின்றன

அவளுடைய ஒரு மார்பு கோழிக்குஞ்சைப் போல் அவர்மேல் தவழ்ந்து சென்றது.

இச்சொற்றொடரால் ஈர்க்கப்பட்டு இதை ஒரு பாலியல் கதையாக வாசிக்க கணிசமான் வாச்கர்கள் முயன்றிருக்கலாம். ஆசிரியரின் நோக்கமும் அதுவா என்பது தெரியவில்லை. இருந்தாலும் தவறில்லை. ஆனால் கிழவரின் பாலியல் சஞ்சலம் இக்கதையின் நோக்கம் அல்ல. அவருக்கு ஏற்கனவே அவரது நண்பரின் மனைவியின் பால் ஈடுபாடு இருந்திருக்கிறது. மருகள் விசயமும் தெரிந்து போக மனைவி அவர் மீது வன்மமாக இருக்கிறாள். கிழவர் இதனால் தனிமைப்படுகிறார். பாலியல் அத்துமீறல் மேலதிக ஆசையால் மட்டும் விளைவதில்லை. அது பாதுகாப்பின்மையின் பிராந்தியம். கிழவர் தொடர்ந்து தான் இழந்து விட்ட இளமையை, அதன் அதிகாரத்தை மீட்டெடுக்க முயல்கிறார். மருமகளை உடலளவில் அடைவது என்பதை விட அவ்வெண்ணம் தரும் உளவியல் திருப்தி அவருக்கு முக்கியம். காலையில் குளியலறையில் பல்துலக்கும் போது அங்கு கதவில் தொங்கும் மருகளின் வெதுவெதுப்பு மாறாத ஆடைகளை அந்தரங்கமாக தொட்டுப் பார்க்கும் இடம் வருகிறது. அவ்வாடைகளின் மிருதுத்தன்மையை சிலாகிக்கிறார். கவித்துவமான இடம் இது.

மருந்து வாங்குவதற்காக மகனிடம் தன் காசோலையில் கையொப்பம் இட்டுத் தரும் போது கிழவருக்கு ஒரு அசட்டுப் பெருமை ஏற்படுகிறது. அவரால் இன்னும் கையெழுத்தைத் தெளிவாகவும் வேகமாகவும் போட முடிகிறது. பிறகு வெற்றுக் காசோலையில் கையெழுத்திட்டதால், வங்கி கணக்கு புத்தகத்தை மகனிடம் தந்து விட்டதால் அச்சமும் ஏற்படுகிறது. மகன் காசையெல்லாம் காலி செய்து விட்டால்? சுந்தரேசனின் பாலியல் வாழ்வு மட்டும் அல்ல பொருண்மை வாழ்வும் பலவீனமாக நொறுங்கிப் போய்விடுவதாகவே உள்ளது. அவருக்கு எதிலும் பிடிப்பு கிடைக்காத பதற்றம் உள்ளது.

இக்கதையை முதியவர்களின் நிலையற்ற ஓட்டம் பற்றின விசாரணையாகவும் புரிந்து கொள்ளலாம். கதை நிகழ்வதற்கு முன் சுந்தரேசன் ஒருமுறை வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறி மயங்கி விழுந்திருக்கிறார். இக்கதை நடக்கும் போது மருகளை அவர் கட்டியணைக்க முயல வீட்டுக்குள் ஒரு விரோதச் சூழல் உருவாகிறது. இதை எதிர்பார்த்து அவர் இரண்டாவது தடவையாக வெளியேறி விட தயாராகிறார். தட்டுத் தடுமாறி பேருந்து நிலையம் செல்பவருக்கு எந்த வண்டி பிடிக்க வேண்டும் என்று புரியவில்லை. எதுவும் நினைவில் இல்லை. அவரது குழப்பத்துடன் கதை முடிகிறது. ஒரு தனிப்பட்ட நினைவை குறிப்பிடுகிறேன். என் தாத்தாவுக்கு எட்டு குழந்தைகள். முதுமையின் தள்ளாட்டத்தில் கடும் கோபக்காரராக மாறி இருந்தார். ஒவ்வொரு மாதமும் ஒரு பிள்ளையிடம் கோபித்துக் கொண்டு வெளியேறி மற்றொரு பிள்ளை வீட்டுக்கு செல்வார். இவரிடம் அவரை பற்றி புகார் சொல்வார். சபிப்பார். பிறகு சில வாரங்களில் இங்கும் பிடிக்காமல் போக அடுத்த குழந்தை வீடு. ஒரு சுழற்சி முடிந்ததும் முதலில் பிணங்கின மகன் வீட்டுக்கே திரும்பி கடைசி மகன் பற்றி புகார் சொல்லி அடைக்கலாம் தேடுவார். இத்தனைக்கும் அவர் பொருளாதார ரீதியாக சுயசார்பு கொண்டிருந்தவர். இளமையில் நாங்கள் பேரப்பிள்ளைகள் இதனை ஒரு வேடிக்கையாகவும் புதிராகவும் கருதி கேலி செய்வோம். ஒரு இரவில் ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக முழுங்கி தற்கொலை செய்து கொண்டார். தாத்தாவின் வெளியேற்றம் வீடுகளில் இருந்தல்ல அவரிடம் இருந்து தான் என்று இப்போது புரிகிறது.

திரும்பிச் செல்லும் வழியில் மிகை உணர்வுகள் இன்றி முதுமை பேசப்பட்டிருப்பதும் பாராட்டத்தக்கது. கதைக்கு சந்தோஷ் வரைந்துள்ள ஓவியங்கள் நுண்வாசிப்புக்கு தூண்டும்படியானவை. உதாரணமாக இந்த ஓவியம்.



கீழே வலது கோடியில் உள்ள எலிப்பொறி சற்றே வெளிப்படையாக துருத்தும் உருவகம் தான் என்றாலும் அது கதையின் ஆழங்களுக்கு பயணிக்க ஒரு திசைகாட்டியாக உதவுகிறது. சுந்தரேசனின் அந்த எலிப்பொறி அவரது மனமே.

குலசேகரனின் இக்கதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.
Read More

Friday 14 May 2010

பசியும் பிரார்த்தனையும்






தேவாலய மணி ஒலிப்புக்கு
படுத்தபடி
பசித்த பூனை நெட்டி முறித்தது

கண்மூடியிருக்க
தேய்ந்து காற்றில் தோயும் கனத்த ஓசைகளிடம்
முறுக்கி
கைத்தூக்கி பிரார்த்திக்கும் பாணியில்

முடிவில்
துழாவி நீந்தி வேதாகாம ஒலி நாடாவுக்கு
ஏதோ சொல்லியது

கழூத்துமணி ஒருபுறம்
விடாமல் கிலுகிலுக்க
Read More

Thursday 13 May 2010

அந்நிமிடத்தில் மட்டும்




அந்நிமிடத்தில் மட்டும் நான்கு முறைகள்
திரும்பிப் படுத்தது
பூனை
சுதாரிக்கத் தவறின நிழல்கள் மட்டும் ...
Read More

பூனை முன்னே





பூனை கொட்டாவி
தப்பியது ஈ

கவலை ஏன்?
வால் விடாமல் துரத்துகிறது

மூடாமல் பார்க்கும் பூனை முன்னே
காற்று வெளி
Read More

Wednesday 12 May 2010

சந்திராவின் விக்கிரமாதித்யன் பேட்டி




சந்திராவின் இணையதளம் காற்றிலாடும் இறகு படித்தேன். அதில் அவர் 2000-இல் விக்கிரமாதித்யனை ஆறாம்திணைக்காக எடுத்த பேட்டியை வெளியிட்டுள்ளார். விக்கி நேரடியான, தயக்கமற்ற, சுவாரஸ்யமான பல கருத்துக்களை முன்வைக்கிறார். கவிதை, எழுத்தாளர்கள் குறித்த அவரது அவதானிப்புகள், மதிப்பீடுகள் தாம் பிரதான கவர்ச்சி. எனக்கு பிடித்த கருத்து தமிழ்க்கவிதை ஏன் ஒன்று போல அல்லது ஒரே பள்ளியை சேர்ந்தது போன்ற தன்மையுடன் உள்ளது என்பதற்கு அவர் சொல்லும் பதில். அப்புறம் சில கேள்விகள் இன்று படிக்கும் போது ஒரு வரலாற்று நகைமுரண் கொண்டு விடுகின்றன. இன்றைய சூழலில் படிக்கையில் சற்று வேடிக்கையாக தோன்றலாம். உதாரணமாக

பிரமிள் பெரிய கவிஞன் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

நவீன இலக்கியவாதிகளுடைய படைப்புகள் எந்த அளவில் வரவேற்கப்படுகிறது?

பெண் கவிஞர்கள் அதிகமாக இல்லாததற்குக் காரணம்?


ஆனால், தமிழ்க்கவிதை ஏன் அகவயமாக உள்ளது என்ற கேள்வி இன்று உயிருடன் உள்ளது.

சமீபமாக அம்ருதாவில் வந்த விக்கிரமாதித்யனின் பேட்டியால் காயடிக்கப்பட்டவர்கள் ஆற்றிக் கொள்ளலாம்.
Read More

கண்காணிப்பின் அறிவுரை




நிலா சாய்ந்ததும்
கிளைகள் களைத்து சாய்வதும்
நாய்களின் ஊளையும்
இரவு நேரத்தின் தனித்த காலடிச் சத்தமும்
நீ துளைத்து பார்ப்பதும்
மிகத் துல்லியமாக தெரிவது
உனக்கு புரியவில்லை

இருந்தாலும் சொல்கிறேன்

இரவு பதினொன்றரைக்கு
மொட்டைமாடி மூலையில்
சிறுநீர் கழிப்பது வேண்டாம்

மழைநீர் வடியும் ஓட்டை உள்ள
பாசி படிந்த பகுதியில்
அரையடி நீள பாம்பு ஒன்று
பளிச்சென்ற கருநீலத்தில்
நெளிந்து செல்வது கண்டேன்
குத்திட்டு அமர்ந்து நீ பாதங்கள் நகர்த்தும் போது
உன் பெருவிரல் அருகே
Read More

ஒழுங்கும் முன்னோடியும்



"நடக்கும் போது நாய்க்குட்டி உன்னை
முந்துகிறதா
எதிர்திசையில் மூர்க்கமாய் இழுத்து நட
வில்லென்று கத்தும் --
கண்டுக்காதே

வீட்டுக்குள்
படுக்கையறை போன்ற பிரத்யேக அறைகளில்
நாய்க்குட்டியை விடாதே முக்கியமது
அதுக்கு சில இடங்களில் அனுமதி இல்லைண்ணு
தெளிவாப் புரியட்டும்

உன் சாப்பாட்டில் அதுக்கு
பங்கில்லை
நீ ஏப்பம் விட்டபின் தான்
அதற்கு உணவு

ஒழுங்கு மீறி
சோபாவை கடித்து கட்டில் காலை பிறாண்டுதா
உடனே தனிக்கூட்டில் இட்டு அடை

முதல் ஆறு மாதம் கட்டாயம் சங்கிலியில்

பயிற்சி எத்தனை சீக்கிரமோ
அத்தனை நல்லது

இப்போ நம்ம குமார் சார் வீட்டு லேப்ரடார் பாத்ததில்லை
மிதியடியில் கம்முணு படித்துக்கிட்டு
இன்னா நடந்தாலும் யாரு வந்தாலும்
"come" சொல்லாங்காட்டி அசையாதே
அது பயிற்சிங்க!

Caninie Behavior and Psychology Diploma ஹோல்டர் சார் நான்
நல்லா கேளுங்க --
நாய்களுக்குன்னு ஒரு படிநிலை இருக்கு
ஒரு நாயை முன்னே போக விட்டீங்க
அது தலைவன்
நீங்க தொண்டன்னு பொருள்

அதுனால தான் திரும்ப திரும்ப சொல்றேன்
இதோ இப்போ பண்ணுனீங்க இல்லை, அதைப் போல
வீட்டுக்குள்ள நுழையறச்ச
நாய்க்குட்டியை முன்னே போக விடாதீங்க
முதல் காலடிஉங்களுது .. சரியா? "

எங்களுக்கு முன் தண்ணீர் லாரி
பின்
ஏறத்தாழ முட்டியபடி மாநகர பேருந்து
அப்பால்
ஒரு ராட்சத உறுப்பென நெளியும்
கட்டுமான வாகனம்

சிதறி ஒன்று சேரும் வரிசைகளில்
மீறும் ஜனங்கள்

ஒவ்வொரு வெற்றிடத்தையும் உடனடி
நிரப்பும்
புகை மேகம், ஒலிகள்

லாரி நகர
நாங்களும் முன்னே எத்தனிக்க
இரண்டு பைக்குகள் குறுக்கே பாய்ந்தன

காற்றில் சிறு எம்பலுடன்
கடந்து பாய்ந்தது முன்னால்
தெருநாய் ஒன்று
Read More

Tuesday 11 May 2010

எல்.எஸ்.டி, சைலோசிபின், சாரஸ், மெய்ஞானம்: ஒரு விஞ்ஞான மேம்பாலம்.



வரலாறு நெடுக அறிவியல் முதலாளித்துவத்தினோடு கைகோர்த்தே வளர்ந்துள்ளது. மனித அறிவை விகாசிக்கும் உன்னத நோக்கம் கொண்டிருந்தாலும் வணிக வாய்ப்புள்ள சாத்தியப்படுகள் தாம் அறிவியலில் என்றும் ஊக்கம் பெறுகின்றன. இதனாலே எந்த அறிவியல் தேடலையும் மனித குலம் ஒரு கண்ணை சந்தேகத்தில் மூடியபடியே பார்க்கிறது. அறிவியலுக்கு மெய்ஞான தரிசனத்திற்கான மனநிலையை கண்டறிவதில் பேரார்வம் உண்டு. சுருக்கமாக ஒரு உயிரியல் கடவுளை கண்டுபிடிப்பதற்கான இந்த ஆவலை நாம் திருச்சபைக்கும் அறிவியல் உலகுக்குமான பகைமையின் பின்னணியில் காண்பது சுவாரஸ்யமானது. அறுபதுகளிலேயே விஞ்ஞானிகள் சைக்கெடெலிக் மருந்துகள் எனப்படும் போதை மருந்துகளை சரியான அளவில் உட்கொள்ளும் ஒருவர் துறவிகளுக்கு இணையான மெய்ஞான பரவச மனநிலையை அடைய முடியும் என்ற ஒரு ஆய்வு முடிவை அறிவித்து எதிர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தினர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகள் போதை மருந்துகளின் மருத்துவ பயன் குறித்து எழுதப்பட்டன. குறிப்பாக 1966-இல் வால்டர் பான்கே என்பவர் போதை மருந்துகளால் ஏற்படும் மெய்ஞான திறப்புக்கும், துறவிகளின் ஆன்மீக அனுபவத்துக்கும் உள்ள வேறுபாடுகள் ஒற்றுமைகள் குறித்து விரிவாக ஆய்ந்து இந்த மெய்ஞான நிலையை புறவயமாக நிறுவ முயன்றார். இம்மனநிலைக்கு ஒருமை, கால, வெளி கடத்தல், ஆழ்ந்த நேர்மறை மனநிலை, இறைநிலை உணர்வு, உள்ளுண்ர்வு-சார் அவதானிப்புகளை புறவய உண்மையாக அடைவது, மெய்நிலையின் முரண்பாடுகள் (உ.தா: வெளியில் இருப்பதாகவும் இல்லாமல் இருப்பதாவும் தோன்றுவது), அனுபவத்தை மொழியில் கடத்த முடியாமை, காலமற்ற அனுபவத்தின் தற்காலிக தன்மை என ஒன்பது பண்புகள் உள்ளதாக வால்டர் தெரிவித்தார். ஆன்மீக பின்புலமற்றவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் என இரு குழுவினருக்கும் சைலோசிபின் போதை மருந்தை (மேஜிக் காளான்களில் உள்ளது) அளித்து ஆராய்ந்த வால்டர் இரு சாராரின் மெய்ஞான அனுபவங்களுக்கு அதிக வித்தியாசமில்லை என்ற முடிவை அடைந்தார். மேலும் இவர்கள் இம்மருந்தை உட்கொண்ட ஆறுமாதங்களுக்கு பிறகு இந்நபர்கள் மனஆரோக்கியத்தில் பெரும் முன்னேற்றத்தையும், ஆன்மீக ரீதியாக முதிர்ச்சியையும் அடைந்திருப்பதாக வால்டர் குறிப்பிட்டார். குறிப்பாக இவர்கள் ஆழமானதொரு அமைதி மற்றும் வெளி-உறவுகளுடனான ஒருங்கிணைவு பெறுவதில் தொடங்கி சமூக அல்லது பிரபஞ்சம் முழுமையின் ஒரு பகுதி தனது சுயம் என்று தொடர்புறுத்த முடிகிற வரை இம்மருந்து உட்கொள்ளல் அனுபவம் பயன்பட்டிருக்கிறது. ஆனால் வால்டரின் ஆய்வு இரு குறுங்குழுக்களை கொண்டு செய்யப்பட்ட ஒன்று. ஒரு பெரிதுபட்ட விரிவான களத்தில் இப்படியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இத்தகைய போதை-ஆன்மீக விடுதலை கோட்பாடுகளை நாம் சமூக அளவில் பரிசீலிக்க முடியும். ஆனாலும் அப்படி விரிவான ஆய்வுகள் மேற்கொள்வதற்கான சூழல் ஏறத்தாழ 50 வருடங்களுக்கு பின் இன்னும் சாத்தியமாக இல்லை. காரணம் அறுபதுகளில் இத்தகைய ஆய்வு முடிவுகள் மிகையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு அழிவு கலாச்சாரத்துக்கு இட்டுச் சென்றது. போதை ஆய்வின் சமூக விளைவுகளை விளக்க நமக்கு திமோதி லியறியின் சிறிதொரு வாழ்க்கைக் குறிப்பே போதும்.



உளவியலாளர் திமோதி லியரி பீட் கலாச்சார நட்சத்திரமான் ஆலன் கின்ஸ்பெர்குடன் இணைந்து கொண்டு அமெரிக்காவின் எதிர்கலாச்சாரத்தை அதன் உச்சத்துக்கு எடுத்து சென்றார். பிரேசிலில் வாழும் மசாடெக் எனும் பழங்குடி மக்கள் தங்கள் மதச்சடங்குகளுக்கு பயன்படுத்தும் சைலோசைபின் எனும் போதைப்பொருள் கொண்டுள்ள காளான்களை உண்ட லியரி அதை ஒரு பெரும் மனத்திறப்பாக அறிவித்தார். “ஐந்து மணிநேரங்களில் நான் அப்போது மனித மூளை குறித்து கற்றறிந்தவை எனது பதினைந்து வருட உளவியல் படிப்பு மற்றும் ஆய்வுகளில் பெற்றதை விட பலமடங்கு அதிகம்” என்றார். ஊருக்கு திரும்பிய திமோதி முன்னூறுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்கள், தத்துவவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மெக்சிக்கிய போதை காளானை ஒத்த செயற்கை மருந்தை அளித்தார். இக்குழுவில் 75 சதவீதத்தினருக்கு இந்த போதை அனுபவம் ஒரு பெரும் தரிசனமாக இருந்தது என்று லியரி அறிவித்தார். திமோதி லியரியின் இந்த போதை ஆய்வுக்கு கின்ஸ்பெர்க் தன்னிச்சையாக தன்னை ஒப்புவிக்க, அதனால் உந்தப்பட்ட ஹிப்பி கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் என ஒரு பெருங்கூட்டம் எல்.எஸ்.டி, சைலோசைபின் போன்ற போதை பொருட்களை கட்டற்ற மன-அனுபவத்திற்காக பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். லியரி சிறைக்கைதிகளுக்கு போதை மருந்தளித்து அவர்களை திருத்த முடியும் என்று ஒரு ஆய்வில் நிரூபித்தார். பின்னர் இந்த ஆய்வு சரியான முறைமைகளை பின்பற்ற இல்லை என்று நிராகரிக்கப்பட்டது. லியரி மதுபோதைக்கு அடிமையானவர்களையும் தனது சைகடிலிக் மருத்துவத்தின் மூலம் விடுவிக்க முடியும் என்று பிரச்சாரம் செய்தார். ஆல்பர்ட் என்பவருடன் சேர்ந்து லியரி ”உள்விடுதலைக்கான சர்வதேச நிறுவனத்தை” ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இந்த சிகிச்சையில் கலந்து கொள்ள பெருகி வந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் லியரி திருப்பி அனுப்ப, அவர்களுக்கு போதை மருந்துகள் விற்க கறுப்பு சந்தை உருவானது.



மெல்ல மெல்ல சமூகத்தின் ஒரு பகுதி போதை கலாச்சாரத்தில் செயலிழப்பது கண்டு அஞ்சிய அமெரிக்க அரசு எல்.எஸ்.டியை தடை செய்தது. மரிஜுவானா வைத்திருந்ததர்காக லியரி கைது செய்து 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. சுவஸ்சர்லாந்து, அப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளுக்கு தப்பி ஓடிய லியரியை ஜனாதிபதி நிக்சன் “அமெரிக்காவிலேயே மிக அபாயகரமான ஆள்” என்று வர்ணித்தார். அறுபதுகளுக்கு பின்னர் போதை வஸ்துக்களின் பயன்பாடு மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ”போதை-வழி மெய்ஞானத் தேடல்” ஆய்வுகளும் கரடு தட்டி நின்றன. பின்னர் சமீபமாக மேற்கத்திய அரசுகள் இத்தகைய ஆய்வுகளுக்கான வாசலை ஒருக்களித்து திறந்து வைத்துள்ளன. இப்போது மெய்ஞானமெல்லாம் நோக்கமல்ல. மன-அழுத்த நோயாளிகளை குணப்படுத்தவும், மக்களின் பொதுவான சமூக உறவாடல்களை மேம்படுத்துவதற்குமான மற்றொரு அதிசய மருந்தாக சைகலெடிக் மருந்துகளை பயன்படுத்தலாம் என்பதே தற்போதைய அறிவியல்-மருந்தாக்க தொழில்துறையின் திட்டவரைவு.

இரண்டு வருடங்களுக்கு முன் ஜான் ஹாப்கின்ஸ் மெடிக்கல் ஸ்கூலில் தான் இந்த ஆய்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆய்வில் மருத்துவரான கிளார்க் மார்டின் என்பவரும் கலந்து கொண்டார். 65 வயதாகும் கிளார்க் சிறுநீரக புற்றுநோய் சிகிச்சைகளின் விளைவான மன-அழுத்தத்துடன் போராடி வந்தவர். இவ்வாய்வின் போது கிளார்குக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சைலோசிபின் தரப்பட்டது. அப்போது கண் மூடியை அணிந்து கொண்டு இயர் போன் மாட்டி செவ்வியல் இசை கேட்டபடி பிரபஞ்சம் குறித்த விசாரத்துடன் கிடந்ததாய் கிளார்க் சொல்கிறார். ”சட்டென்று பரிச்சயமானவை எல்லாம் மறைய ஆரம்பித்தன. திறந்த சமுத்திரத்தில் ஒரு படகிலிருந்து விழுந்து விடுகிறீர்கள் என்று நினைத்து கொள்ளுங்கள். திரும்பிப் பார்க்கிறீர்கள், படகைக் காணவில்லை. பிறகு தண்ணீரையும் காணவில்லை. பிறகு நீங்களும் காணாமல் போய் விடுகிறீர்கள்”. மேற்கண்ட 6 மணிநேர அனுபவத்திற்கு பின்னர் கிளார்க் சிறுக சிறுக மன-அழுத்தத்திலிருந்து விடுபட்டார். அது மட்டுமல்ல இதனால் தனது மகள் மற்றும் நண்பர்களுடனான உறவும் பெருமளவில் மேம்பட்டதாக கிளார்க் சொல்லுகிறார். இது எப்படி? போதை மருந்து சுயத்தின் இறுக்கத்தை தளர்த்துகிறது; பிரக்ஞை வெளி மற்றும் காலத்தில் இருந்து விடுபட்டு பிரபஞ்சமும் தானும் ஒன்று என்பதை உணர்கிறது. அல்லது குறைந்த பட்சம் ஒரு சமூகம் அல்லது குழுவுடன் தன்னை ஈகோ வேறுபாடற்று அடையாளப்படுத்திக் கொள்ளுகிறது. எந்தவொரு அனுபவத்தைப் போலவும் இந்த கட்டற்ற மனநிலை ஒரு பாடத்தை கற்றுத்தருகிறது. அது உள்ளுணர்வால் உணரப்படும் அகவய தரிசனம். இதை ஒரு பண்பட்ட தேடல் கொண்ட மனதால் தான் வாழ்வின் ஒரு திருப்பு-முனை அனுபவமாக மாற்றிக் கொள்ள முடியும். மேம்போக்கானவர்களுக்கு இந்த போதை அனுபவம் மனதில் ஒரு எளிய நினைவாக மட்டுமே எஞ்சும். கிளார்க் இந்த அனுபவம் தன் ஆளுமையில் ஒரு ஒரு முக்கிய வளர்ச்சியை எற்படுத்தியதாக கூறுகிறார்; ”எனது செயல்பாடுகளுடன் மட்டுமே என்னை இணைத்துக் கொள்வதை, வெளிக்காரணிகளை கட்டுப்படுத்த அனாவசியமாக முயல்வதை நிறுத்தினேன்.” கிளார்க்கும், இதே ஆய்வில் பங்குகொண்ட அவரைப் போன்ற பிறரும் சைகடெலிக் அனுபவத்தின் போது ஒரு மாபெரும் பிரக்ஞையில் தங்கள் கவலைகள் மற்றும் அக்கறைகள் கரைந்து விடுவதாகவும், தங்களுக்கும் பிறருக்கும் இடையிலான எல்லைகள் மறைந்து விடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். பரிணாம மனவியலாளர்கள் இப்படியான போதை வஸ்துக்களின் மூலம் பிரக்ஞையை கடப்பதற்கான ஒரு மரபணு பண்பை நாம் பல நூற்றாண்டுகளாக முன்னோர்கள் வழி கைகடத்தி வந்துள்ளதாக கூறுகின்றனர். போதை வஸ்து அனுபவம் சமூகத்தினுடனான மனிதனின் ஒருங்கிணைவை மேம்படுத்துவதால், இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும் பயனுள்ள உளவியல் கூறாகிறது. நமது மரபணுவில் போதை வஸ்து பயன்பாட்டுக்குமான மென்பொருளும் சேர்த்தே எழுதப்பட்டுள்ளது.
மேற்சொன்ன ஆய்வு அறிக்கை வெளியான பின் அமெரிக்காவில் இத்தகைய ஆய்வுகளுக்கு தன்னிச்சையாக தம்மை ஒப்புக் கொடுக்கும் மக்கள் அறுபதுகளின் ஹிப்பி-சைகடெலிக் கலாச்சார கலவரத்துக்கு பின்னர் மீண்டும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். நவீன சமூகத்தின் ”மீட்பர் மறுவருகையாக” சைலோசிபின் சிகிச்சை மாறி வருகிறது. அரிசோனா பல்கலை, நியூயார்க் பல்கலை, கலிபோர்னியா பல்கலை ஆகியவற்றில் இத்தகைய ஆய்வுகள் மக்கள் பங்களிப்புடன் நடந்து வருகின்றன. மரண படுக்கையில் பதற்றம் மற்றும் வேதனையில் அவதியுறும் மக்களுக்கு ஆறுதலளிக்கவும் இம்மருந்துகள் பயன்படப் போகின்றன. இவ்வகை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்.குரோப் “இம்மருந்துகள் உடலுடன் நம்மை அடையாளப்படுத்துவதில் இருந்து விடுவித்து ஈகோ கடந்த நிலைகளை அடைய உதவுகின்றன. வாழ்வியக்கம் குறித்த ஒரு பெரும் புரிதலுடன் இதற்கு பின்னர் நம்மால் மரணத்தை அணுக முடிகிறது. அந்த புரிதல் வாழ்வு அடிப்படையில் மாற்றம் தான் என்பதே” என்கிறார்.



ஒரு ஆயுட்கால துறவு வாழ்வு, பயிற்சி, புலனடக்கம் போன்றவற்றுக்கான துரிதமான எளிய மாற்று என சைகடெலிக் மருந்துகளை கூற முடியுமா? The Psychedelic Experience என்ற நூலில் திமோதி லியரி மெய்ஞான அனுபவங்கள் பல்வேறு வழிகளில் சாத்தியமாகலாம் என்கிறார். ”புலனடக்கம், யோகா, தியானம், மதபூர்வ அல்லது அழகியல் பரவசம் மூலமாக, அல்லது தன்னியல்பாக ஒருவருக்கு மெய்யுணர் நிலை ஏற்படலாம். எல்.எஸ்.டி, சைலோசைபின், மெஸ்கலைன், டி.எம்.டி போன்ற போதை வஸ்துக்களும் இத்தகைய நிலையை தூண்டலாம். இவை தனிப்பட்டு இவ்வனுபவத்தை அளிக்க முடியாது; போதை மருந்து ஒரு ரசாயன சாவி மட்டுமே. அது நம் மனதைத் திறக்கிறது; நமது நரம்பு மண்டலத்தை வழமையான வார்ப்புகள் மற்றும் வடிவமைப்புகளில் இருந்து விடுதலை செய்கிறது”. லியரியின் அவதானிப்பு மிக முக்கியமானது. சாவி இருந்தால் மட்டும் போதாது. கதவை கண்டுபிடிப்பதற்கான தேடல் வேண்டும். அதற்கான மன-அமைவு வேண்டும். ஆனால் எந்தவொரு கண்டுபிடிப்பும் மையநீரோட்டத்துக்கு கொண்டு வரப்படுகையில் மிகைப்படுத்தப்பட்டு அனைத்து தீர்வுகளுக்குமான துரித வழியாக முன்வைக்கப்படுகிறது. அறுபதுகளில் ஐரோப்பாவில் நிகழ்ந்த சமூக அவலம் இதுவே. சைகடெலிக் மருந்துகள் மனித சமூகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. சைபீரியா, தென்மேற்கு வட-அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஆதி பழங்குடியினர் பல்வேறு மூலிகைச் செடிகள் மற்றும் காளான்களில் இருந்து எடுக்கப்பட்ட போதை பொருட்களை தமது மதச்சடங்குகளில் மேற்சொன்ன ஆன்மீக பரவசத்துக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். சீன தாவோ மரபு, ஜெர்மானிய பேகன் மரபு, யூத சடங்குகள், இஸ்லாமிய சூபி மரபு ஆகியவற்றில் மக்கள் போதை மருந்துகளை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தியே வந்துள்ளனர். புத்தர் ஞானமடைவதற்கு முன் ஆறு வருடங்கள் கஞ்சா விதைகளை மென்றதாக ஒரு ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இந்து மரபில் சாதுக்களில் இருந்து நித்யானந்தர் வரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஆன்மீக விடுதலைக்காக பயன்படுத்தி வருகிறார்கள். பெனாரஸ்,பைத்யனாத் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் பாங் எனப்படும் கஞ்சா பானம் சிவனுக்கு படைக்கப்படுகிறது. சாதுக்கள் சாரஸ் புகைப்பதை ஏற்றுக் கொண்ட நம் சமூகம் நித்யானந்தர் அமெரிக்க ஆசிரமங்களில் போதை மருந்துகளை பக்தர்களுக்கு அளித்ததாக செய்தி வெளியாகும் போது எதிர்ப்பது ஏன்? போதை மருந்து பயன்பாடு மேற்சொன்ன எந்த கலாச்சாரங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தொடர்ச்சியாக மனித குலத்தில் வரலாற்றில் சிறு குழுக்கள் மட்டுமே போதை மருந்துகளை தங்கள் மனதை திறந்து கொள்ள பயன்படுத்தி வந்துள்ளன. ஆனால் நித்யானந்தர் ஒரு பெரும் மக்கள் அமைப்புக்குள் வந்த பின் தாந்திரிக முறைகளை, போதை வஸ்துக்களை மெய்யறிவுக்காகவோ அல்லது வெறுமனே வித்தை காட்டவோ பயன்படுத்துவது மிக இயல்பாகவே கண்டனத்துக்கு உள்ளாகிறது. அறிவியல் அறிஞர்களின் கையில் சைகலெடிக் மருந்துகள் செல்லும் போதும் இதே சிக்கலே நிகழ்கிறது. விஞ்ஞானிகள் உடல்நலக் கேடு இல்லை என்று உத்தரவாதம் வழங்கி விட்டால், நோய்நொடிகள், மனித உறவுகளிடையேயான பிரச்சனைகள், சலிப்பு மற்றும் சோர்வு ஆகிய உணர்வுகளில் இருந்து தப்பிப்பு, மரணபயம் என பல்வேறு மனித சவால்களுக்கு ஒரு பின்வாசல் திறப்பாக இம்மருந்துகள் எம்.என்.சிகளால் எதிர்காலத்தில் சந்தைப்படுத்தப்படும். எந்தவொரு பிரச்சனையும் சவாலாக எதிர்கொள்ளப்படும் போது தான் மனிதகுலம் முன்னகர்வதான உந்துதல் ஏற்படுகிறது. குறுக்குவழி மருந்துகள் சவால்களை எதிர்கொள்ள முடியாதபடி மனிதனை முடக்கி விடும். 1966-இல் போதை அனுபவத்தையும் மெய்ஞான மனநிலையையும் ஒப்பிட்டு ஆய்வறிக்கை எழுதின வால்டர் பாங்கே சைகலெடிக் பொருட்களை மருந்துகளாக சந்தையில் கொண்டு வருவதன் பல ஆபத்துகளை குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய மருந்துகள் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் அடிமையாகாத படிக்கு பரிந்துரைக்கப்படுகிற அளவில் வழங்கப்பட்டாலும் கூட போதை அனுபவம் தரும் பேரின்பமும் கிளர்ச்சியும் தொடர்ச்சியான பயன்பாட்டிற்கான ஒரு சார்புநிலையை பயனரிடத்து ஏற்படுத்தலாம். அடுத்து இதனை பயன்படுத்தும் மனப்பிறழ்வு அறிகுறிகள் கொண்டவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படலாம் அல்லது முழுபைத்தியமாகலாம். சமூகத்தின் உழைப்புத் திறனை இப்போதை பழக்கம் வெகுவாக குறைக்கலாம்.

விஞ்ஞானத்தில் இருந்து மதம் வரை எந்த உடனடி மார்க்கத்தையும், மிகையான கூற்றையையும் அதன் தலை கூட நம் கூடாரத்தினுள் நீட்ட விடாமல் தடுப்பதே நலம்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates