Thursday 30 September 2010

இறைவனின் ஒன்பது பில்லியன் பெயர்கள் - ஆர்தர் சி கிளார்க்




”இது சற்று விசித்திரமான வேண்டுகோள் தான்”, பாராட்டத்தக்க கட்டுப்பாடு என்று தான் எதிர்பார்த்த ஒன்றுடன் டாக்டர் வாக்னர் கேட்டார். “எனக்கு தெரிந்த வரையில் ஒரு திபத்திய மடாலயத்துக்கு ஆட்டோமெட்டிக் சீக்குவன்ஸ் கணினி வழங்கும்படி கேட்கப்பட்டது இதுவே முதன் முறை. நான் அத்துமீறி ஆர்வம் காட்ட விரும்பவில்லை, ஆனால், உங்கள் உ ...ம்... நிறுவனத்துக்கு இத்தகைய ஒர் எந்திரத்தினால் பயனுண்டு என்று நான் சிறிதும் நினைத்திருக்க மாட்டேன். நீங்கள் அதைக் கொண்டு என்ன செய்ய உத்தேசிக்கிறீர்கள் என்று தயவு கூர்ந்து விளக்க முடியுமா?”

“மகிழ்ச்சியுடன்”, செலாவணி உரையாடல்களுக்காக தான் பயன்படுத்தி வந்த உழற்படி அளவைகோலை கவனமாக போட்டு விட்டு, தன் பட்டு மேலங்கியை சரிசெய்தபடி லாமா பதிலுரைத்தார். “உங்கள் மார்க் V கணினியால் எந்த வழக்கமான பத்து இலக்கங்கள் சார்ந்த கணித இயக்க செயல்களை செய்ய முடியும். ஆனால் எங்கள் பணிக்கு நாங்கள் எண்களில் அல்ல எழுத்துக்களிலேயே ஈடுபாடு கொண்டுள்ளோம். வெளியீட்டு தரவுகளின் மின்சுற்றுப் பாதையை நீங்கள் மாற்றி அமைக்க நாங்கள் விரும்புவதால், கணினி சொற்களை அச்சிடும், நிலைக்குத்தான எண்வரிசைகளை அல்ல”
“எனக்கு அவ்வளவாய் புரியவில்லை ..”

“கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நாங்கள் உழைத்து வரும் திட்டப்பணி இது – சொல்லப்போனால், லாமாலயம் ஆரம்பித்ததில் இருந்தே. உங்கள் சிந்தனாமுறைகு இது ஒருவிதத்தில் அந்நியமானது என்பதால் நான் இதை விளக்கும் போது நீங்கள் ஒரு திறந்த மனதுடன் கவனிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்”

”நியாயமாகவே”
“நிஜமாகவே இது ரொம்ப எளிதானது. இறைவனின் சாத்தியமுள்ள அனைத்து பெயர்களின் பட்டியல் ஒன்றை தயாரித்து வருகிறொம்”
“புரியவில்லை மன்னிக்கவும்”
”இந்த பெயர்களை எல்லாம்“, லாமா நிதானம் குன்றாமல் தொடர்ந்தார், ”நாங்கள் உருவாக்கி உள்ள எழுத்துத் தொகுதியின் ஒன்பது எழுத்துக்களுக்கு உள்ளாகவே எழுதிட முடியும் என்பதை நம்ப எங்களிடம் காரணம் உள்ளது”
“ஆக நீங்கள் இதை மூன்று நூற்றாண்டுகளாக செய்து வருகிறீர்கள்?”
“ஆமாம் எங்களுக்கு இப்பணியை முடிக்க பதினைந்தாயிரம் வருடங்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்தோம்”
”ஓ”, டாக்டர் வேக்னர் பிரமித்தது போல் தோன்றினார், “எங்களுடைய கணினிகளில் ஒன்றை நீங்கள் வாடகைக்கு எடுக்க ஏன் விரும்பினீர்க்ள் என்பது இப்போது தெரிகிறது. ஆனால் உங்களது திட்டப்பணியின் நோக்கம் சரியாக என்ன?”

லாமா நொடியின் ஒரு சிறு பகுதி அளவுக்கு தயங்கினார்; வேக்னர் தான் அவரை காயப்படுத்தி விட்டோமோ என்று வியந்தார். ஒருவேளை இருந்தாலும், அவரது பதிலில் எரிச்சலின் சிறுதடயமும் இல்லை.
“ நீங்கள் இதை ஒரு சடங்கு என்று வேண்டுமானால் அழைக்கலாம், ஆனால் அது எங்கள் நம்பிக்கையின் ஆதாரப் பகுதி. இறைவனின் அனைத்து பெயர்களும் – கடவுள், ஜெனோவா, அல்லா, மேலும் பலர் – மனிதனால் செய்யப்பட்ட
அடையாளக் குறிப்புகள் மட்டுமே. சற்று சிரமமான ஒரு தத்துவ பிரச்சினை இங்குள்ளது, அதை நான் விவாதிக்க உத்தேசிக்கவில்லை; ஆனால் எழுத்துக்களின், நிகழ்-சாத்தியம் உள்ள், அனைத்து விதமான சேர்க்கைகளின் இடையே இறைவனின் நிஜப் பெயர்கள் என்று சொல்லக்கூடியவை உள்ளன. திட்டமிட்ட வரிசை-மாற்ற ஒழுங்கமைவின் வழி நாங்கள் அனைத்தையும் பட்டியலிட முயன்று வருகிறோம்”

ஓஹோ, நீங்கள் AAAAAAAAA-வில் ஆரம்பித்து ... ZZZZZZZZZ வரை போட்டு பார்த்து வருகிறீர்கள்”
“மிகச்சரியாக – ஆனால், நாங்கள் எங்களுக்கேயான ஒரு பிரத்தியேகமான எழுத்துத் தொகுதியை பயன்படுத்துகிறோம். இதை சமாளிக்க எலக்டுரோமெட்டிக் தட்டச்சு எந்திரத்தை தகவமைப்பது, நிச்சயமாக, அற்பமே. ஏறத்தாழ அதைவிட பிரச்சினை முட்டாள்தனமான சேர்க்கைகளை நிர்மூலமாக்க தோதான மின்சுற்றுப் பாதையை உருவாக்குவதே. உதாரணமாக, எந்த ஒரு எழுத்தும் தொடர்வரிசையில் மூன்று தடவைகளுக்கு மேல் தோன்றக் கூடாது”
“மூன்றா? நிச்சயமாக இரண்டு என்று தானே உத்தேசித்தீர்கள்”
“மூன்றுதான் சரி. ஏன் என்பதை விளக்க ரொம்பவே காலம் பிடிக்கும் என்று அஞ்சுகிறேன், உங்களுக்கு எங்கள் மொழி விளங்கும் பட்சத்திலும் கூட”
“அதிர்ஷ்டவசமாக உங்கள் ஆட்டோமெடிக் சீக்குவென்ஸ் கணினியை இந்த பணிக்காக மாற்றியமைப்பது எளிய விசயமாகவே இருக்கும், ஏனென்றால் அதை சரியாக புரோகுரோம் செய்து விட்டால் ஒவ்வொரு எழுத்தையும் அதன் முறைப்படி வரிசை மாற்ற ஒழுங்கமைவு செய்து, முடிவை அச்சாக்கி தரும். எங்களுக்கு பதினைந்தாயிரம் வருடங்கள் தேவைப்பட்டிருக்கக் கூடியதை அதனால் ஒரு ஆயிரம் வருடங்களில் செய்து விட முடியும்”

கீழே உள்ள மன்ஹாட்டன் தெருக்களின் சன்னமான ஒலிகள் குறித்து சிறிதும் டாக்டர் வேக்னர் பிரக்ஞை கொண்டிருக்கவில்லை. அவர் ஒரு வித்தியாசமான உலகில் இருந்தார், மனிதனால் செய்யபட்டிராமல், இயற்கையால் உருவான மலைகளின் உலகில் இருந்தார். உயரே தங்களது தொலைதூர கூடுகளில் இந்த பிக்குக்கள், பரம்பரை பரம்பரையாக, பொறுமையாக, தங்களது பொருளற்ற சொற்களின் பட்டியல்களை தொகுத்து பணி செய்து வந்துள்ளனர். மனிதகுலத்தின் அசட்டுத்தனங்களுக்கு எல்லையே இல்லையா? இருந்தாலும், அவர் தனது உள்-எண்ணங்கள் குறிதத எந்த ஒரு ஜாடையும் காட்டக் கூடாது. வாடிக்கையாளர் எப்போதும் சரிதான் ...
“இந்த விதத்திலான பட்டியல்களை அச்சிடும்படி மார்க் V-ஐ மாற்றியமைக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை”:, பதிலுரைத்தார் டாக்டர், “ நிறுவுதல் மற்றும் பராமரித்தல் குறித்துதான் எனக்கு அதிக கவலை. திபெத்துக்கு கொண்டு போவது தற்போது எளிதல்லவே”
“அதை நாம் ஏற்பாடு செய்யலாம். விமானத்தில் அனுப்பும் வண்ணம் பகுதிகள் சிறியனவே – அதனால் தானே உங்கள் கணினியை தேர்ந்தெடுத்தோம். உங்களால் அவற்றை இந்தியாவுக்கு கொண்டு போக முடிந்தால், அங்கிருந்து போக்குவரத்தை நாங்கள் அளிக்க முடியும்”

”அதோடு உங்களுக்கு எங்களது பொறியாளர்களில் இருவரை நியமிக்க வேண்டும் அல்லவா?”
“ஆமாம், திட்டப்பணி நடக்கும் மூன்று மாதங்களுக்கு”
“எங்களது பணியாளர்களால் அதை சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை”, டாக்டர் வேக்னர் தனது மேஜைக் குறிப்பேட்டில் குறிப்பொன்றை கிறுக்கினார். “வேறு இரண்டு விசயங்கள் உள்ளன –”

அவர் தனது சொற்றொடரை முடிக்கும் முன் லாமா ஒரு சிறிய காகிகத் துண்டை நீட்டினார்.
“ஏசியாட்டிக் வங்கியில் எனது அங்கீகரிக்கப்பட்ட வங்கி இருப்பு மிச்சத் தொகை”
“ நன்றி. இது உ ... ம் போதுமானது என்று படுகிறது. ரெண்டாவது விசயம் ரொம்ப அற்பமானது என்பதால் அதை குறிப்பிடவே தயக்கமாக உள்ளது – ஆனால் வெளிப்படையானவை எவ்வளவு முறை அடிக்கடி உதாசீனிக்கப்படுகின்றன என்பது வியப்பளிப்பது. உங்களிடம் உள்ள மின்சக்தி ஆதாரம் என்ன?”

“110 வோல்ட்ஸில் 50 கிலோவாட்ஸ் தரும் ஒரு டீஸல் ஜெனரேட்டர். அது ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது. பிரார்த்தனை சக்கரங்களை இயக்குவதற்கான மின்சாரம் பெறுவதற்காக நிறுவப்பட்டாலும், அது லாமாலய் வாழ்வை மேலும் வசதியானதாக்கி உள்ளது”
“நிச்சயமாக”, டாக்டர் வேக்னர் எதிரொலித்தார், “ நான் அதை பற்றி யோசித்திருக்க வேண்டும்”

கைப்பிடிச்சுவரில் இருந்து காட்சி தலைசுற்ற வைத்தது, ஆனால் காலம் செல்ல ஒருவர் எதற்கும் பழகி விடுவார். மூன்று மாதங்களுக்கு பின்னர் படுபாதாளம் நோக்கிய ரெண்டாயிரம்-அடி பாய்ச்சலோ அல்லது கீழே பள்ளத்தாக்கில் உள்ள தொலைதூர சதுரங்கப்பலகை வயல்களோ ஜார்ஜ் ஹேன்லியை கவரவில்லை. காற்றில் மிருதுவான கற்கள் மீது சாய்ந்தபடி, தான் எப்போதுமே கண்டறிய விரும்பியிராத பெயர் கொண்ட தூரத்து மலைகளை கடுகடுப்புடன் வெறித்துக் கொண்டிருந்தான். ஜார்ஜ் நினைத்தான், அவனுக்கு நேர்ந்து இருப்பதிலே பைத்தியக்கார விசயம் இதுதான். “திட்டப்பணி ஷாங்க்ரி லா”, ஆய்வுக்கூடங்களில் உள்ள எவனோ புத்திஜீவி இப்படி பெயரிட்டிருக்கிறான். பல வாரங்களாக மார்க் V ஏக்கர் கணக்காய் தாள்களில் பொருளற்ற சொற்களை கக்கியபடி உள்ளது. ஒரு பிரிவை சார்ந்த சொற்களை காலி செய்த பின் அடுத்தது என்று பொறுமையாக, விடாப்பிடியாக கணினி எழுத்துக்களை அனைத்து சேர்க்கைகளிலுமாக மாற்றியமைத்து வருகிறது. எலெக்டுரோமெட்ரிக் தட்டச்சு எந்திரத்திலிருந்து
தாள்கள் வெளிவர, பிக்குக்கள் அவற்றை கவனமாக வெட்டியெடுத்து பிரம்மாண்ட புத்தகங்களில் ஒட்டினர். இன்னொரு வாரத்தில், ஆண்டவரே ஸ்தோத்திரம், அவர்கள் முடித்து விடுவார்கள். பத்து, இருபது அல்லது நூறு எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளை நாடிச் செல்லாதிருக்க அவர்களை எந்த குழப்படியான கணக்குகள் நம்ப வைத்தனவோ ஜார்ஜுக்கு தெரியவில்லை. திட்டத்தில் ஏதாவது ஒரு மாற்றம் நேர்ந்து, திட்டப்பணி ஏறக்குறைய கி.பி 2069 வரை நீட்டிக்கப்படும் என்று தலைமை லாமா (அவரை அவர்கள் சேம் ஜாப் என்று இயல்பாகவே அழைத்திருந்தனர், ஆனால் அவரை போல் இவர் சிறிதும் தோன்றவில்லை) திடீரென்று அறிவிப்பது அவனுக்கு மீண்டும் மீண்டும் வரும் துர்சொப்பனங்களில் ஒன்று. அவர்கள் செய்யக் கூடியவர்கள் தாம்.
சக் அவனருகே மாடிச்சுவருக்கு வந்த போது ஜார்ஜ் தடிமனான மரக்கதவு காற்றில் மோதி அறையப்படும் ஓசையை கேட்டான். வழக்கம் போல், சக் தன்னை பிக்குக்களிடம் மிகவும் பிரபலப்படுத்தி இருந்த சுருட்டு ஒன்றை புகைத்தபடி இருந்தான்; இந்த பிக்குக்கள் அனைத்து சிறு மற்றும் பெரும்பாலான பேரின்பங்களை அரவணைக்க ரொம்பவே தயாராக இருப்பதாக பட்டது. அவர்களுக்கு அனுகூலமாக இருந்த ஒன்று அதுதான்: அவர்கள் கிறுக்கர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் கடுந்தூய்மைவாதிகள் அல்லர். உதாரணமாக, கிராமங்களுக்கு அவர்கள் அடிக்கடி மேற்கொண்ட பயணங்கள் ... “கேள் ஜார்ஜ்”, சக் அவசரமாக சொன்னான், “ நான் இடர்பாட்டுக்கு உரிய ஒன்றை அறிந்து வந்துள்ளேன்.”.

“என்ன பிரச்சனை? கணினி சரியாக வேலை செய்யவில்லையா?” இருப்பதிலே மட்டமான எதிர்கால சூழலாக ஜார்ஜால் அதைத்தான் கற்பனை செய்ய முடிந்தது. அது அவன் ஊர்திரும்பலை தாமதமாக்கும், அதை விட கொடுமையான வேறொன்று இல்லை. இப்போது அவன் உணர்வது படி ஒரு தொலைக்காட்சி விளம்பரக் காட்சி கூட சுவர்க்கத்தில் இருந்து வரும் அமிர்தம் தான். குறைந்தது ஊருடனான ஏதாவது ஒரு தொடர்பாக ஆவது அது இருக்கும்.
"இல்லை – அப்படி ஒன்றும் இல்லை”, சக் மாடிச்சுவர் மீது நிலைப்படுத்திக் கொண்டான்; அவனுக்கு கீழே விழுவது குறித்து பீதி ஆதலால் அது வழக்கத்துக்கு மாறான் ஒன்றே.
“இதெல்லாம் எதற்கு என்று நான் தற்போதுதான் கண்டறிந்தேன்”
“என்ன சொல்றே – நமக்கு தெரியும் என்றல்லவா நினைத்தேன்”
“ நிச்சயமாக – பிக்குக்கள் செய்ய முனைவது என்ன என்று நமக்குத் தெரியும். ஆனால் நமக்கு அது ஏன் என்று தெரியாது. அது இருப்பதிலே லூசுத்தனமானது –”
“ஏதாவது புதுசாக சொல்லு”, ஜார்ஜ் உறுமினான்.
“ஆனால் நம்மாளு சேம் இப்போது தான் என்னிடம் ஒத்துக் கொண்டார். தாள்கள் சுருண்டு வருவதைக் காண ஒவ்வொரு பிற்பகலும் அவர் வருகிற விதம் தான் உனக்கு தெரியுமே. சரி இம்முறை அவர் கிளர்ச்சிடடைந்து, அல்லது அவரால் அடைய முடிகிற அளவு அடைந்து, தெரிந்தார். நாம் கடைசி சுழற்சியில் இருப்பதாய் அவரிடம் நான் சொன்னபோது, தன்னுடைய சுட்டியான ஆங்கிலத்தில், தாங்கள் செய்ய முயலவது என்ன என்று நான் வியந்தது உண்டா என்று கேட்டார். நான் சொன்னேன், ’ நிச்சயமாக’ – அவர் சொன்னார்”

“தொடர்ந்து சொல், நான் வெளியே சொல்ல மாட்டேன்”
“அதாவது, அவர்கள் இறைவனின் அனைத்து பெயர்களையும் – அவை ஒன்பது பில்லியன் என்று அவர்க்ள் நம்புகிறார்கள் – பட்டியலிட்ட உடன் இறைவனின் நோக்கம் நிறைவேறி விடும். மனித குலம் அது என்ன செய்ய படைக்கப்பட்டதோ அதை முடித்திருக்கும்; மேலும் தொடர்வதில் எந்த பொருளும் இருக்காது. அட, இக்கருத்தே ஏதொ ஒரு தெய்வ நிந்தனையை போன்றது”
“அதனால் நாம் என்ன பண்ண வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள்? தற்கொலை செய்ய வேண்டுமா?”
“அதற்கெல்லாம் தேவை இருக்காது. பட்டியல் முடிக்கப்பட்ட உடன், இறைவன் இறங்கி வந்து எல்லாவற்றையும் இழுத்து மூடி விடுவார் ... புஸ்”
“ஓ, புரிகிறது. நாம் பணியை முடிக்கும் போது அது உலகின் முடிவாக இருக்கும்”
சக் பதற்றமாக குறுஞ்சிரிப்பு சிரித்தான்.
” நான் சேமிடம் அதைத்தான் சொன்னேன். உனக்கு என்னாச்சு என்று தெரியுமா? அவர் என்னை படு விநோதமாக பார்த்தார், நான் ஏதோ வகுப்பிலே முட்டாள் என்பது போல்; அதோடு சொன்னார், “அது அத்தனை சிறுமையானது அல்ல”
ஜார்ஜ் இதைக் குறித்து ஒரு நொடி யோசித்தான்.
“இதைத்தான் விரிவான பார்வையை மேற்கொள்வது என்று சொல்வது”, அவன் அப்போது சொன்னான்.
“நாம் இதைக் குறித்து என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்? நாம் இதை எதற்கு பொருட்படுத்த வேணும் என்று தெரியவில்லை. எப்படி என்றாலும், அவர்கள் பைத்தியங்கள் என்று நமக்கு ஏற்கனவே தெரியுமே”
“ஆமா, -- ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று உனக்கு புரியவில்லையா? பட்டியல் நிறைவடைந்து கடைசி துருப்பு சீட்டும் -– அல்லது அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ -- எடுபடாமல் போகையில், நம் மீது தான் பழி வரும். நம்முடைய் கணினியை அல்லவா அவர்கள் பயன்படுத்துவது. எனக்கு நிலைமை சற்றும் பிடிக்கவில்லை”

“அப்படியா”, ஜார்ஜ் மெதுவாக சொன்னான், “ நீ சொன்னதில் விசயம் இருக்குது. ஆனால் இது போன்ற விசயங்கள் இங்கு முன்னர் நடந்துள்ளன, தெரியுமில்லையா. லூசியானாவில் நான் சிறு பையனாக இருக்கையில் உலகம் அடுத்த ஞாயிறு அழியப் போகிறது என்று சொன்ன ஒரு மரைகழன்ற போதகர் இருந்தார். நூற்றுக்கணக்கான மக்கள் அவரை நம்பினர் – தங்களுடைய விட்டைக் கூட விற்றனர். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை; எதிர்பார்த்தது போல் அவர்கள் சினம் கொள்ளவும் இல்லை. அவர் தனது கணிப்பில் ஏதோ தவறிழைத்து விட்டதாக மட்டும் முடிவு செய்து, தொடர்ந்து அவரை நம்பினர். இன்னும் சில பேர் நம்பி வருகின்றனர் என்று நம்புகிறேன்”

“ஆனால் இது லூசியானா கிடையாதே, நீ கவனித்திருக்காத பட்சத்தில் சொன்னேன். நாம் இருவரும், நூற்றுக்கணக்கான பிக்குகளும் தாம் உள்ளோம். எனக்கு அவர்களை பிடிக்கும்; சேமின் வாழ்க்கைப் பணி எதிர்மாறான பலனை தரும் போது நான் அவருக்காக இரக்கப்படுவேன். ஆனாலும், நான் வேறெங்காவது இருந்திருக்கலாம் என்று விரும்புகிறேன்”

“நான் அதை வாரக்கணக்காக ஆசைபடுகிறேன். ஆனால் ஒப்பந்தம் முடிந்து, நம்மை ஏற்றிக் கொண்டு பறக்க போக்குவரத்து வரும் வரை நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது”
“நிச்சயமாக”, சக் சிந்தனைவயப்பட்டபடி சொன்னான், “ நாம் சற்று சேதம் எற்படுத்த முயலலாம்”
“கிழித்தோம்! அது விசயங்களை இன்னும் மோசமாக்கும்”
“நீ நினைப்பது போல் அல்ல. இப்படி யோசி. தற்போதைய நாளுக்கு இருபத்தி நாலு மணி நேர அடிப்படையில் இன்றிலிருந்து நாலு நாட்களில் கணினி தன் ஓட்டத்தை முடித்து விடும். போக்குவரத்து ஒரு வாரத்தில் வந்து விடும். சரி, நாம் செய்ய வேண்டியது எல்லாம் செப்பனிடும் வேளைகளில் ஒன்றில் மாற்றீடு செய்ய வேண்டிய ஏதாவது ஒன்றை -- ரெண்டு நாட்கள் வேலையை நிறுத்தி வைக்கும் ஒன்றை – கண்டுபிடிக்க வேண்டியது தான். நாம் அதை, நிச்சயமாய், சரி செய்வோம், ஆனால் ரொம்ப விரைவாக அல்ல. நாம் விசயங்களை ஒழுங்காக நேரத்தை கணித்தோமானால், பதிவுப்பட்டியலில் இருந்து கடைசி பெயர் சட்டென வெளிவரும் போது நாம் விமானதளத்தில் இருக்கலாம். அவர்களால் அப்போது நம்மை பிடிக்க முடியாது”
”எனக்கு அது பிடிக்கவில்லை”, ஜார்ஜ் சொன்னன், “நான் ஒரு வேலையை துறப்பது அதுவே முதல் தடவையாக இருக்கும். மேலும், இது அவர்களை சந்தேகப்பட வைக்கும். இல்லை, நான் பொறுமை காத்து, வருகிறதை சந்திப்பேன்”
“இப்போதும் எனக்கு அது பிடிக்கவில்லை”, ஏழு நாட்கள் கழித்து சிறு வலுவான மட்டக்குதிரைகள் அவர்களை நேளிந்து போகும் சாலையில் சுமந்து சென்றிட அவன் சொன்னான்.” நான் பயந்து போய் ஓடிப் போவதாய் உனக்கு படவில்லையா. அங்கே உள்ள அந்த பாவம் மனிதர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது; தாம் எத்தகைய ஏமாளிகளாக இருந்து உள்ளோம் என்று அவர்கள் அறியும் போது அங்கிருக்க நான் விரும்பவில்லை. சேம் இதை எப்படி எடுத்துக் கொள்வார் என்று வியக்கிறேன்”
“இது வேடிக்கையானது”, சக் பதில் சொன்னான், “ஆனால் நான் விடைபெற சென்ற போது நாம் அவரை கைவிட்டு போவதான எண்ணம் எற்பட்டது – மேலும் கணினி தடையற்று ஓடிக் கொண்டிருப்பதாலும் பணி சீக்கிரம் முடிந்து விடும் என்பதாலும் அவர் பொருட்படுத்த இல்லை என்று பட்டது. அதற்கு பிறகு – சரி நிச்சயமாய், அவருக்கு தான் அதற்கு பின்னால் என்று ஒன்று இல்லையே …”

ஜார்க் தனது சேணத்தில் திரும்பி அந்த மலைப்பாதையை வெறித்துப் பார்த்தான். லாமாலயத்தின் ஒரு தெளிவான காட்சி கிடைக்கும் இறுதி இடம் அதுதான். குட்டையாய், வீங்கி, கூர்முனைகள் கொண்ட கட்டிடங்கள் அஸ்தமனத்தின் பின் அழலொளிக்கு எதிராக கருவுருவங்களாகின; அங்குமிங்குமாய் விளக்குகள் ஒரு நெடுந்தொலைவு சமுத்திர பயணக்கப்பலின் பக்கச்சுவர் சாளரங்களைப் போன்று ஒளிவிட்டன. கட்டாயம், மார்க் V-இன் அதே மின்சுற்றுப்பாதையை பங்கிடும் மின்விளக்குகள். எவ்வளவு நேரம் அவை பங்கிடும்?, ஜார்ஜ் வியந்தான். பிக்குகள் தங்கள் வெஞ்சினம் மற்றும் ஏமாற்றத்தில் கணினியை அடித்து நொறுக்குவார்களா? அல்லது அமைதியாக அமர்ந்து கணிப்புகளை மீண்டும் ஆரம்பிப்பார்களா?

மலைக்கு மேல் அந்த கணத்தில் என்ன நடக்கிறது என்று அவனுக்கு மிகச்சரியாக தெரிந்தது. அவர்களது கீழ்நிலை பிக்குகள் தாள்களை தட்டச்சுகளில் இருந்து எடுத்து போய் பெரும் நூல்களில் ஒட்டிட, தலைமை லாமா மற்றும் அவரது உதவியாளர்கள் பட்டு ஆடைகள் அணிந்து அமர்ந்தபடி அவற்றை சோதித்துக் கொண்டிருப்பர். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். பொத்தான்கள் காகிதத்தை தட்டும் தொடர்ச்சியான மென்தட்டல்கள், ஒருபோதும் முடிவுறாத புயல்மழை, தாம் ஒரே சத்தமாக இருக்கும்; ஏனெனில் தனது பல்லாயிரம் கணிப்புகளின் ஊடாய் நொடியில் பளிச்சிட மார்க் V அறவே அமைதியாக இருந்தது. இப்படியான மூன்று மாதங்கள் போதும், ஜார்ஜ் யோசித்தான், எவரையும் மதில் ஏற வைக்க.
“அதோ பார்” சக் கூவினான், பள்ளத்தாக்கை சுட்டியபடி, “என்ன அழகு இல்லையா!”
ஆமாம் நிச்சயமாய், ஜார்ஜ் யோசித்தான். பொலிவிழந்து பழசாகிய DC-3 ஓடுதளத்தின் முடிவில் ஒரு குட்டி வெள்ளி சிலுவை போல் கிடந்தது. இரண்டு மணி நேரத்தில் அது அவர்களை சுதந்திரம் மற்றும் இயல்பான மனநிலைக்கு சுமந்து சொல்லும். அருமையான மதுவைப் போன்று சுவைத்து நுகர வேண்டிய எண்ணம் அது. மட்டக்குதிரை பொறுமையாக இறக்கத்தில் உலைந்து இறங்கிட ஜார்ஜ் அவ்வெண்ணத்தை தன் மனதை சுற்றி உருள விட்டான்.

இமய உச்சியின் விரையும் இரவு அப்போது ஏறத்தாழ அவர்கள் மீது சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக, அப்பிரதேசத்தில் உள்ள சாலைகள் போன்றே, அச்சாலை மிக நன்றாக இருந்தது; அவர்கள் கைவிளக்குகள் வைத்திருந்தனர். அங்கு சற்றும் ஆபத்தில்லை; கடுமையான பனியினாலான குறிப்பிட்ட அசௌகரியம் தவிர. தலைக்கு மேல் ஆகாயம் பரிச்சயமான, நட்பார்ந்த நட்சத்திரங்களால் மிகத் துல்லியமாக கொழுந்துவிட்டு எரிந்தது. குறைந்த பட்சமாய், பருவ நிலை காரணமாய் விமான ஓட்டி விமானத்தை பறக்க முடியாதபடியான ஆபத்து-வாய்ப்பு ஒன்றும் இல்லை, ஜார்ஜ் யோசித்தான். அதுதான் அவனது ஒரே மிச்ச கவலையாக இருந்தது.

அவன் பாட தொடங்கினான், ஆனால் சற்று நேரத்துக்கு பின் கைவிட்டான். இருபக்கமும் வெண்ணிறமாய் முக்காடிட்ட பிசாசுகளைப் போல் மென்னொளி வீசும் அந்த மாபெரும் மலைகளின் பரப்பு அத்தகைய உற்சாகப் பீறிடலை ஊக்குவிக்க இல்லை. தற்போது ஜார்ஜ் தன் கைக்கடிகாரம் மீது பார்வையை ஓடவிட்டான்.

“இன்னும் ஒரு மணிநேரத்தில் அங்கிருக்க வேண்டும்:, அவன் தன் தோளுக்கு பின்னால் சக்கிடம் கூவினான். பிறகு ஒரு மறுயோசனையாக சேர்த்தான், “கணினி தன் ஓட்டத்தை முடித்திருக்குமா என்று வியக்கிறேன்? இப்போதுதான் எதிர்பார்த்த நேரம்”
சக் பதில் கூறவில்லை; அதனால் ஜார்ஜ் தன் சேணத்தில் இருந்து பின்னால் திரும்பினான். அவனால் சக்கின் முகத்தை மட்டுமே காண முடிந்தது, ஆகாயம் நோக்கி திரும்பிய ஒரு வெள்ளை முட்டை வடிவம்.
“பார்” சக் முணுமுணுத்தான்; ஜார்ஜ் தன் கண்களை வானம் நோக்கி உயர்த்தினான். (எல்லாவற்றுக்கும் ஒரு கடைசி தடவை எப்போதும் உண்டு)

தலைக்கு மேல், அலட்டாமல் கொள்ளாமல், நட்சத்திரங்கள் அணைந்து கொண்டிருந்தன.
Read More

Wednesday 29 September 2010

T20 கிரிக்கெட்டும் குஸ்தி பயில்வானின் சங்கடமும்





குறைநீள பந்து வீச்சை ஆடுவது பற்றி நினைவுகூரும் போது சஞ்சய் மஞ்சுரேக்கர் “அப்போதெல்லாம் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க மட்டையாளர்களைப் பார்த்தால் எங்களுக்கு அசூயையாக இருக்கும். நாங்கள் குறைநீள பந்திற்கு வெளியேறாமல் எப்படி சமாளிப்பது என்று கவலைப்படுகையில், அவர்களோ அதை ஒரு ஓட்டமெடுக்கும் வாய்ப்பாக கருதி நேர்மறையாக ஆடினர். என்கிறார். சஞ்சய் குறிப்பிடும் தொண்ணூறுகளுக்கு முன்பிருந்தே இந்திய கிரிக்கெட்டர்களுக்கு குறைநீளப் பந்து முதுகில் தொற்றிய முள்ளாகத் தான் இருந்து வந்துள்ளது.
மொஹிந்தர் அமர்நாத்தும் கவாஸ்கரும் அப்போதைய விதிவிலக்குகள். தொண்ணூறுகளில் உருவான மட்டையாளர்கள் ஆஸ்திரேலியர்களை முன்மாதிரிகளாக வழிபட்டு வளர்ந்தவர்கள் என்கிறார் சஞ்சய். விளைவாக திராவிட், சச்சின், லக்‌ஷ்மண் ஆகியோர் புள் மற்றும் ஹூக் ஷாட்டுகளை நன்றாக ஆடக் கூடியவர்களாக இருந்தனர். ஆனால் 60 வருடங்களுக்கு மேலான வரலாற்றில் இந்த மிகச் சிலரைத் தவிர அனைத்து தரப்பு மட்டையாளர்களுக்கும் குறைவேகப் பந்துவீச்சு ஒவ்வாமையாக இருந்தும் அது ஒரு பெரும் பலவீனமாக கண்டறியப்பட்டு தொடர்ர்சியாக பிற அணி வீச்சாளர்களால் சோதித்து பார்க்கப்படுவது மிக சமீபமாகத் தான் நடைபெறுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் T20 கிரிக்கெட். ஆஸ்திரேலிய வேக வீச்சாளர் மிச்சல் ஜான்சன் நடக்கப் போகும் இந்திய சுற்றுப்பயணத்தில் இந்தியர்களை குறைவேக பந்துகளை இலக்காக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான எதிரணி வீச்சாளர்களின் நீளத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடியான சமீப மாற்றம் T20 கிரிக்கெட்டால் ஏற்பட்டது என்பது ஒரு சுவாரஸ்யமான பரிமாணம்.
டெஸ்டு கிரிக்கெட் தான் பொதுவாக ஒரு வீரரின் உடல் மற்றும் மனத்திறன்களை மொத்தமாய் சோதிப்பதாய் கூறப் பட்டாலும் இந்திய சட்டவியல் போல் கோளாறுகளை மறைக்க அதில் ஓட்டைகள் மறைவுகள் உண்டு. டெஸ்டு கிரிக்கெட் என்பது ஒருவரின் அனைத்து குறைகள் மற்றும் நிறைகளை பரிசீலிப்பது அல்ல. மாறாக பலவீனங்களை விட வலிமையை முன்னிறுத்துவது. உதாரணமாக டெஸ்டு ஆட்டத்தில் வெற்றி பெற ஒரு மட்டையாளனுக்கு கச்சிதமான தொழில்நுட்பமோ அனைத்து விட ஷாட்களோ தேவை இருப்பது இல்லை. மே.இ தீவுகளின் கோளாறான தொழில்நுட்பமும், குறைந்தபட்ச ஷாட்களும் கொண்ட ஷிவ்நரைன் சந்தர்பவுல் இதற்கு ஒரு நெடுங்கால வெற்றி உதாரணம். நேர்மாறாக பலவீனங்களை மறைக்கும் எந்தவொரு அவகாசத்தையும் அளிக்காத ஆட்டம் T20 அசலான சோதனைக்களமாக ஆக இருக்கிறது. T20-இல் ஒரு மட்டையாளன் தொடர்ந்து பரிணமிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். குறைகளில், அதன் விளைவான வீழ்ச்சிகளில் இருந்து சீக்கிரம் மீண்டு எழத் தெரிய வேண்டும். T20இல் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து மேடை பின்வாசல் வழியாக வெளியேறுவதற்கு இதுவே காரணம். உதாரணமாக யூசுப் பதானையும் கிரன் பொல்லார்டையும் எடுத்துக் கொள்ளலாம்.



பதானும் பொலார்டும் முன்கால் ஆட்டக்காரர்கள். ஒற்றை இரட்டை ஓட்டங்கள் எடுத்து சோர்ந்து போவதில் நம்பிக்கை இல்லாதவர்கள். எளிய அளவிலான தடுப்பாட்டம் கொண்டவர்கள். சுருக்கமாக ஒற்றை-பரிமாண மட்டையாளர்கள். மிக வெற்றிகரமான முதலாம் ஐ.பி.எல்லுக்கு பிறகு ஆட்டத்திறன் இழந்த காரணத்தால் விரைவில் இந்திய அணியில் இருந்து யூசுப் வெளியேற்றப்பட்டார். அடுத்து துலீப் கோப்பை இறுதி ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து தனி ஆளாக யூசுப் தனது அணியை நானூறுக்கு மேற்பட்ட ஒரு பெரும் இலக்கை நோக்கி கொண்டு சென்றார். அடுத்து வந்த மூன்றாவது ஐ.பி.எல்லில் முப்பத்து ஏழு பந்துகளில் அவர் சதம் அடிக்க ஷேன் வார்ன் அது தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த சதம் என்று புகழ யூசுப் பெருங் கவனம் பெற்றார். அடுத்து வந்த சில ஆட்டங்களில் யூசுப்பின் பலவீனம் குறைநீளப் பந்து என்று விரைவிலே கண்டறியப்பட நிலைமை தலைகீழாகியது. முப்பது சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் யாரும் ஒளிபாய்ச்சாத இந்த பலவீனத்தை யூசுப்பால் T20யின் ஜுரவேக அவகாசத்தில் நிவர்த்தி செய்ய முடியவில்லை. பந்தின் நீளம் குறையும் போதெல்லாம் அவர் அச்சத்தில் உள்ளொடுங்கினார். யூசுப் தொடர்ந்து வேட்டையாடப்பட்டார். T20ஆல் பிரம்மாண்டப்படுத்தப் பட்ட இந்த தொழில்நுட்ப பலவீனத்தால் யூசுப் இந்திய ஒருநாள் அணியில் தன் இடத்தை இழந்தார், அவரது கனவான டெஸ்டு கிரிக்கெட் ஆடும் வாய்ப்பும் நெடுந்தூரம் நகர்ந்தது. எதேச்சையாக இப்படி T20யில் குறைநீளப் பந்தின் முன் நிர்வாணப்படாவிட்டால் யூசுப்பின் ஆட்டவரலாறு நிச்சயம் வேறுமாதிரியாக இருந்திருக்கும். ஒருவேளை டெஸ்ட்டில் ஆடக் கூட அவர் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம்.
கிரன் பொல்லார்டு “ஒரு கிரிக்கெட்டரே அல்ல என்று முன்னாள் மே.இ வேகவீச்சாளர் ஹோல்டிங்கால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். பதானைப் போன்று குறைநீளப் பந்து அவருக்கும் குறை என்று கண்டறியப்பட்டது. ஆனால் பொலார்டு தனது பல்வீனத்தில் இருந்து மீள கடுமையாக பயின்றார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் லீகில் ஷான் டெயிட்டின் படுவேக குறைநீளப் பந்தை ஆறு ஓட்டங்களுக்கு மைதானத்துக்கு வெளியே ஹூக் செய்து தனது புது பரிமாணத்தை அறிவித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த நாளே ஆஸ்திரேலிய கிரிக்கெட் பத்தியாளர் பீட்டர் ரீபக் பொலார்டின் குறைநீளப் பந்துக்கு எதிரான எழுச்சியை கொண்டாடினார். பந்து வீச்சாளர்கள் குறைநீளப் பந்தால் பொலார்டை வேட்டையாடும் நம்பிக்கையை அதற்கு பின் கைவிட்டனர். ஒருசில வலுவான ஊடக பிம்பங்களால் வரலாறு வனையப்படும் இன்று ஒரு வீரரின் எழுச்சி ஒரு முழுமையான T20 ஆட்டத்தால் அல்ல, அதன் ஒரு பந்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. கால்நொடி தான் அங்கீகார ஆயுளின் அவகாசம். மீடியா எந்த வடுவையையும் ஆற விடுவதே இல்லை. பொலார்டு ஹூக் செய்த அந்த பந்து சற்றே மேலாக மட்டையின் விளிம்பில் பட்டிருந்தால் வரலாறு ஹோல்டிங்கின் பக்கம் மிக எளிதாக சாய்ந்திருக்கும்.
வேறெப்போதையும் விட ஒரு மட்டையாளரின் தொழில்நுட்ப கோளாறு அதிகமாய் பேசப்படுவது மைக்கேல் ஹோல்டிங் போன்றோர் அரைவேக்காடு ஆட்டம் என்று வர்ணிக்கிற T20யில் தான் என்பது ஒரு நகைமுரண். தன் ஆட்டவாழ்வில் பாதி வரை கங்குலிக்கு கால்பக்கம் அடிக்க வராது; பின்னர் குறைநீளப் பந்தை கௌரவமாய் எதிர்கொள்ளத் தெரியாது. ஆனால் இத்தனை குறைகள் இருந்தும் உலகின் மிக முக்கியமான ஒருநாள் மட்டையாளர்களில் கருதப்படும் அளவிற்கு சிறப்பான சாதனைகளை அவரால் செய்ய முடிந்தது..இன்றைய T20 யுகத்தில் இது சாத்தியமல்ல. சுரேஷ் ரெய்னாவும் இதே பலவீனம் கொண்டவர். அவரால் டெஸ்டு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் தன்னை ஸ்தாபிக்க முடிந்துள்ளது. ஆனால் T20யில் ரெய்னாவின் குறைநீளப் பந்து பலவீனம் பளிச்சென்று தெரிகிறது. பி.பத்மராஜனின் ஓரிடத்து ஒரு பயில்வான் என்ற படத்தில் ஒரு குஸ்தி பயில்வான் யாரையும் ஆட்டக்களத்தில் சாய்ப்பவனாக இருப்பான். திருமணம் புரிந்த பின் ஆண்மையற்றவன் என்று தெரியவர மனைவி அவனை விட்டு சென்று விடுவாள். ரெய்னா, பதான் போன்றவர்களின் சங்கடம் இது போன்றது தான்.
Read More

Tuesday 28 September 2010

ஆர்.பிரகதீசின் ”உணர்வு”: வெளியேற்றமும் மனவிகாசமும்




திரைக்கதை மற்றும் இயக்கம்: ஆர்.பிரகதீஷ்
நடிப்பு: பிரவீன் மற்றும் ஜானி
குரல்கள்: ஆர்.பிரகதீஷ் மற்றும் புவனேஷ்வரி
ஒளிப்பதிவு: ஆர்.அரவிந்த்
படத்தொகுப்பு: டி.சிவமணி

ஆர்.பிரகதீசின் இக்குறும்படம், மேலோட்டமாக சொல்வதானால், ஒரு சிறுவனுக்கும் நாய்க்குமான நட்பைப் பற்றியது. இன்னும், அந்நாய் தான் வாழும் தெருவுடன் கொள்ளும் பந்தத்தை பற்றியது. ஒரு மிகச் சின்ன இழையை நுட்பமாகவும் உணர்வுபூர்வமாகவும் திரைக்கதையாக இயக்குநர் பின்னி வளர்த்துள்ளது படத்துக்குள் எளிதில் நுழைந்து அடையாளம் காண, மனம் ஒன்ற பார்வையாளனை தூண்டுகிறது.
பிரகதீஷ் சில இயக்குநர்களைப் போல் ஒரு இரண்டரை மணிநேர நாடகத்தை இரண்டு நிமிடங்களுக்குள் திணிக்க முயலாதது ஆறுதலான விசயம். வடிவரீதியாக ”உணர்வு” ஒரு அசலான குறும்படம். ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்களின் காட்சிப்படுத்துவது குறும்படத்தின் இயல்பாக அறியப்படுகிற குறியீட்டு, தத்துவார்த்த தளங்களை உருவாக்குவதற்கு முக்கியம். இப்படம் தன் போக்கிலேயே இப்படியான தளங்களை சென்றடைகிறது.

ஒரு சிறுவன் தெருநாயை வளர்க்க பிரியப்படுகிறான். வீட்டு சொந்தக்காரர் அனுமதிக்க மறுக்கிறார். அப்பா அவனுக்காக குடியிருப்பு சங்கத்தாரிடம் முறையிட செல்கிறார். அவர் திரும்பும் வரை அவன் உண்ண மறுத்து நாய் பற்றின நினைவுகளில் கழிக்கிறான். அம்மா அவனை கெஞ்சியும் கண்டித்தும் புலம்பியும் வைக்கும் பிலாக்கணம் வாயிஸ் ஓவராக வந்து பார்வையாளனுக்கு ”பின்கதை சுருக்கம்” தருகிறது. ஒரு விஸ்காம் மாணவராக இருந்த காலத்தில் ஆர்.பிரகதீஷ் இப்படியாக கதையை காட்சிக் கோர்வையில் ஆரம்பித்திருப்பது அவரது முதிர்ச்சியை, கதைகூறலின் நேர்த்தியில் காட்டும் சிரத்தையை சொல்லுகிறது. ஒரு தேர்ச்சியற்ற இயக்குநர் இத்தனை பின்கதையையும் சில நேரடிக் காட்சிகள் மூலமோ காட்சியற்ற உரையாடல் மூலமோ சொல்ல முயன்றிருக்கக் கூடும். பிரகதீசுக்கு ஆரம்பத்தில் இருந்தே திரைமொழியில் பிடிப்பு உள்ளது. மேலும் காட்சி பூர்வமாக கதையை சொல்வதிலும் அவருக்கு மிகுந்த சிரத்தை உள்ளது. நாயுடன் சிறுவன் பழகுகிற நினைவுமீட்டல் காட்சிகளை அவன் தனிமையில் சோர்ந்திருக்கும் காட்சிகளுடன் முரண் கோர்வையில் வைக்கிறார். இக்காட்சிகள் அழகியல்பூர்வமாகவும் புத்திசாலித்தனமாகவும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அருமையான ஆரம்பம் தரும் எதிர்பார்ப்பு காரணமாக சில அதிருப்திகள் தோன்றுகின்றன. நாய்க்கும் சிறுவனுக்குமான உறவாடல் காட்சிகளை மேலும் ஆர்வமூட்டும் படியாக அமைத்திருக்கலாம்; அதற்கான ஏராளமான சாத்தியங்கள் உள்ளன. அடுத்து வாயிஸ் ஓவரில் புலம்பும் அம்மா கிட்டத்தட்ட ஒப்பிக்கிறார். உணர்ச்சிபூர்வமாக குரல் வழங்கி நடித்திருந்தார் என்றால் இக்காட்சி தீவிர மனவெழுச்சியை உருவாக்கி இருக்கும்; எஸ்.ரா சொல்வது போல் உறவும் பிரிவும் தமிழனின் ஆதார உண்ர்ச்சிகள் அல்லவா!

நாயை அனுமதிக்க சம்மதம் கிடைக்கிறது; சிறுவன் உற்சாகமடைகிறான். ஆனால் திடுதிப்பென்று அடுத்த காட்சியில் அவர்கள் வீடு மாற்றிப் போவதாக வருகிறது. இத்திடும் மாற்றத்திற்கு பார்வையாளன் தயாரிக்கப்படுவதில்லை. படத்தின் திருப்புமுனை காட்சி இது. நாய் புதுவீட்டுக்கு வர மறுக்கிறது. அத்தெருவே அதன் வீடு. அங்கேயே தங்குகிறது. பூட்டப்பட்ட வீட்டின் முன் அது ஏக்கத்துடன் நின்று தவிப்பது அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இயக்குநர் அச்சிறுவனை விட நாயை சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இப்படம் பார்வையாளனுக்கு தரும் திறப்புகள் என்ன? பால்யத்தில் பெரும்பாலாரோருக்கு தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி வளர்த்து பாதுகாக்கும் உந்துதல் ஏற்படுகிறது. இதை ஒரு பரிணாம உள்ளுணர்வு எனலாம். அதாவது குடும்பப் பொறுப்புக்கு பழகுதல் மிகச் சின்ன வயதில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. பொம்மையோ, தோட்டமோ, நாய்க்குட்டியோ, பின்னர் நண்பர் குழாமோ எதையாவது வளர்ப்பது அப்பருவத்தில் மிகுந்த உணர்வெழுச்சி தரும் அனுபவமாக இருக்கும். தன் வரம்புக்குள் வரும் அத்தனையையும் ”சொந்தம் கொண்டாடுவதும்” ஒரு முக்கிய மனநிலை. மத்திய தர வாழ்வை சேர்ந்த இச்சிறுவன் ஒரு தெருப் பிராணியை தன் குடும்பமாக பழக்கப்பார்க்கிறான். அது இறுதியில் தனது பெரிய குடும்பமாகிய தெருவுக்கே திரும்ப பிரியப்படுகிறது. அதற்கு பழைய வீட்டுடன் உள்ள பந்தமும் குறைவதில்லை. சிறுவன் மனம் உடைகிறான்; ஆனாலும் மனவிரிவுடன் புரிந்து கொண்டு விசனமும் நிதானமும் ஒருசேர நாயிடம் விடை பெறுகிறான். நாயின் தேர்வை ஏற்றுக் கொள்ளும் சிறுவனின் மனப்பாங்கு கவனிக்க வேண்டியது. படத்தின் ஆரம்பத்தில் அவன் தன் பெற்றோரின் சிக்கலை புரிந்து ஏற்றுக் கொள்ள மறுத்து அவனளவில் கலகம் செய்கிறான். இறுதியில் முதிர்ச்சியடைந்து நாயின் பார்வையில் இருந்து உலகை புரியும்படி “வளர்ந்து” விடுகிறான். ஒருவிதத்தில் இது மையப்பாத்திரம் முதிர்ச்சியடைவதை சொல்லும் coming-of-age படம் தான். வீட்டை குடும்பமாகவும் தெருவை வெளிஉலகமாகவும் நாம் புரிந்து கொண்டால் படத்தின் இறுதியில் அவன் கற்கும் பாடம் மிக முக்கியமானதாகிறது. அனைத்தையும் ஒரு உள்வட்டத்துக்குள் சுருக்கி தட்டையாக்கும் ஒரு மத்தியதர மனநிலையை பற்றின நுட்பமான விமர்சனம் இப்படத்தில் உள்ளது. அப்படியான மனநிலையில் இருந்து தான் சிறுவன் வளர்ந்து படம் முடிகையில் வெளியே வருகிறான். இந்த வெளியேற்றம் மனவிகாசத்தின் விளைவு. உள்ளே சுருங்குவதை விட வெளியே விரிவதை வலியுறுத்தும் புரிதல். மற்றொரு உலகில் ஒரு உறவை விட்டு பயணிக்கும் தத்துவார்த்த, கவித்துவ இழையொன்றும் இப்படத்தில் துண்டுபட்டு நிற்கிறது. இந்த கைவிடலின் கசப்பை பத்மராஜன் தனது பல படங்களில் மிகுந்த கவித்துவத்துடன் சொல்லியிருக்கிறான். உதாரணமாக “தேசானக் கிளி கரயாறில்லா”. ஆர்.பிரகதீஷ் இந்த உபபிரதியை தன் எதிர்காலப் படங்களில் மேலெடுத்து செல்ல முடியும்.
Read More

Sunday 26 September 2010

என்.டி ராஜ்குமார்: கோமாளி ஆக்கப்பட்ட கோமாளியின் குரல்





என்.டி ராஜ்குமார் தனது உச்சாடன தொனி மற்றும் தனித்துவமான நடைக்காக முதல் தொகுப்பான தெறியிலிருந்தே கவனிக்கப்பட்டவர். தலித் கவிதை வரலாற்றில் நிலைபெற்ற பெயர். அவரது ஆறாவது கவிதைத் தொகுப்பின் தலைப்பு குட்டிரேவதியின் “பூனையைப் போல் அலையும் வெளிச்சத்தை போல் நம்மை நெடுநேரம் அட்டைப் பக்கத்திலேயே நிலைக்க வைப்பது: சொட்டுச் சொட்டாய் விழுகின்றன செவ்வரளிப் பூக்கள்.
இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் கேலி, அறச்சீற்றம், வன்மம், மாந்திரீகம், சமூக விமர்சனம், ஏக்கம், தலித் அரசியல், மதவிமர்சனம் (கிறித்துவம்), சுயமறுகல்-வெறுப்பு என பல்வேறு பழுத்த பழுக்காத சுளைகள் கொண்டவை. பல கவிதைகள் வடிவ ரீதியாக மரபார்ந்த பொருளில் முழுமையை அடைவதில்லை அல்லது திறக்காமலே மூடி விடலாம். அதாவது என்.டி ஒரு தொழில்நுட்ப கவிஞர் அல்ல.
நவீன கவிதைக்கான வழமையான இறுக்கம் கொண்டிருந்தாலும் இவரது படைப்புகள் சமூகவியல், தத்துவம், பௌதிகம், மதம் போன்ற நவீன கவிதையின் ஆழப்பதிந்த பாதைகளில் பயணிப்பதில்லை. தலித் தொல்வரலாற்று மற்றும் சடங்குகளின் அடையாளத்தை சுட்டி பேசுவது என்.டியின் தளம். ஆனால் முதலில் குறிப்பிட்ட மரபார்ந்த கவிதை தோற்றுவாய்களைப் போல் தலித் மரபை படிமமாக்குவது எளிதல்ல. மைய ஒழுக்கில் இருந்து அது விலகி இருப்பதும், வலுவான தத்துவ மரபு இல்லாததும் முக்கிய காரணங்கள்.


மேலும் archetype எனும் மூலப்படிமங்களை பயனபடுத்துவதும் எளிதல்ல. உதாரணமாக, டெட் ஹியூக்ஸ் விவிலிய வரிகளை காகக் கவிதைகள் மூலம் பகடி செய்யும் போது அல்லது பிரமிள் சைவப் படிமங்களை மீளுருவாக்கும் போது ஆழம் இயல்பாகவே உருவாவது அவை மைய சமூகத்தின் நனவிலி படிமங்கள் என்பதால் தான். தலித் வரலாற்றின் மரபான கதையாடல்களில் இருந்து அத்தகைய நனவிலிப் படிமங்களை உருவாக்குவது ஒரு பெரும் சவால். (என்.டி தனது வலுவான மொழி மூலம் இச்சவாலை திடமாகவே எதிர்கொள்கிறார், சில இடங்களில் நீர்,  நாய், சிவப்பு, மஞ்சள் போன்ற வழமையான மூலப்படிமங்களையும் கையாள்கிறார்.) ஆனால் இச்சவால ஒரு பரிமாணம் மட்டுமே. நமது தலித் படைப்பாளிகள் தங்களது வரலாற்றை அதன் மொழியில் எழுதித் தான் சமகால தமிழிலக்கியத்துக்கு வீரியமும், வேர்ப்பிடிப்பும் கொண்டு வந்தார்கள். படைப்பு மொழியை புதுப்பித்தார்கள். என்.டியின் பங்கு இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது.
என்.டியை வாசிக்கும் போது அவர் வரலாற்றுத் துணிச்சலோடு வகுத்துக் கொள்ளும் எல்லையை கருத்தில் கொள்ள வேண்டும். வாள் வீசுவதானாலும், கனவு காண்பதானாலும், முன்னோர்களின் சுடலையில் அலைந்து திரிவதானாலும் அவர் தன் குதிரையில் இருந்து இறங்குவதில்லை. குதிரைப் பாய்ச்சல் தான் தனது குரல் என்பதில் தெளிவாக உள்ளார். அவர் இத்தொகுப்பில் மைய நீரோட்டத்தை ஒட்டியும் விலகியும் எழுதியுள்ள வரிகள் நாம் எண்ணற்ற முறை எழுதி உள்ளவை தாம்; ஆனால் தனது உயிர்ப்பும் உக்கிரமும் கூடிய உச்சாடன மொழியால் அவற்றை தனதாக்குகிறார். தீவிரமும் நுட்பமும் அபாரமான வாசிப்பு சுவாரஸ்யமும் கொண்டவை ஆக மாற்றுகிறார். தமிழில் அக்கறையின்றி பதிப்பிக்கப்படும் ஆயிரக்கணக்கான கவிதைகளின் பக்கம் சாய்ந்து விடாமல் தனது வரிகளை அவர் காப்பாற்றும் சூட்சுமம் ஆர்வமூட்டுவது. ஒரே சமயம் உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததுமான ஒரு இடம் இவரது கவிதைகளில் உள்ளது. மீள மீள வாசிக்கும் போது பொறிகள் தெறித்தபடியே உள்ளன. என்.டியின் தவிர்க்க முடியாத அம்சம் இதுதான். சுருக்கமாக, என்.டி ராஜ்குமாரின் கவிதைகள் மரபான விமர்சகனுக்கானவை அல்ல. மீண்டும் மீண்டும் புரட்டும் வாசக மனதுக்கானவை. உதாரணமாய்,

நடுநிசி நீராய் பரவிக்கிடந்த நான்
உள்ளிருந்தெழுந்த மீன்களை விட்டுன்
ஐம்புலனை கொத்திச் சென்றேன்

“மூடையில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட
காட்டுநெல்லிக் கூட்டத்திலிருந்து
உருண்டோடிச் சென்று கிடந்ததிந்த
இடமற்ற இடத்தில் தான்
இங்கு தான்
எனது சாமிக்கும் இன்னொரு சாமிக்கும்
முடிச்சு விழுந்தது

“எரியும் எனது பிணத்தின்
புகைகுடிக்கும் சுடலைப் பெண்ணே

“பச்சிலை மணக்கும் மூப்பத்தியின் சுவைகளைப் போல
கனிந்து தொங்கியது முலைகள்

சுடலைக்கு தின்ன வைத்திருக்கும்
எனதுடம்பில் ஒரு சூடேறிய கொள்ளி வந்து விழ

“சாராயம் மணக்கும் எனதுடம்பை
ஆதியில் அப்பன்
அம்மையின் அடிவயிற்கோடுகளாய்
போதையில் வரைந்து பார்க்க

“தாலிக்கயிற்றின் முடிச்சுகள் கொண்டெனது
ஆன்மாவின் மர்ம உறுப்பை இறுக்குகிறாள்
கட்டியவள்

“கள்ளுக்கலையம் பொங்குவது போல்
அப்பன் செத்த நாள் வருகிறது

“ஜன்னலுக்கு வெளியே காலொடிந்த காக்கைகளாய்
அலறிப் பறக்கின்றது புகைமூட்டம்

“முக்கண் சிரட்டைகளையும்
நுங்கு வண்டிகளையும் தொலைத்த நான்
கதைகளையும் விளையாட்டுகளையும்
போட்டு வைத்திருந்த ஓலைப்பெட்டியை தேடிய போது
அம்மா சொன்னாள்
“காக்க கொண்டு போச்சு

“நண்பர்கள் இல்லாத வாழ்க்கை நரகம்
மேலும்
நண்பர்களே இல்லாத வாழ்க்கை
சுபம்

என்.டியின் இந்த தொகுப்பின் தலைப்பு மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. “சொட்டுச் சொட்டாய் விழுகின்றன செவ்வரளிப் பூக்கள் என்பதில் விழுதல் எனும் செயலும், அரளிப் பூவின் செந்நிறமும் குறியீட்டு முக்கியத்துவம் கொண்டவை. தடையற்ற ஒரு வெளிப்படலை விழுதல் நிகழ்வும், தீவிர ஆழ்மன எழுச்சியை செவ்வரளியும் குறிக்கின்றன. தொகுப்பின் முக்கியமான கவிதைகள் இந்த ஆழ்ந்த தீவிர வெளிப்படலின் புள்ளியில் குவிபவை தான். சில கவிதைகள் தடைபட்ட வெளிப்படலின் பெருந்துயரை பேசுபவை. சமூக விழுமியங்கள் பூட்டும் கட்டுகளை உடைத்து மனம் தனதேயான வாழ்வுநோக்கை அடைய வேண்டும் என்று என்.டியின் வரிகள் சொல்லுகின்றன. என்.டியின் கவிதைகளில் “நீ என்ற எதிர்நிலை சமூகமைய நீரோட்டத்தில் முக்குளித்து மறைந்த நடுநிலை மக்களை சுட்டுகிறது. தன்னிலை கவிதைசொல்லி பொதுசமூகத்தின் எதிர்சாரியில் ஒரு வேதாளமாக, பேயோட்டியாக, தலித்தாக, விளிம்புநிலை கலகவாதியாக, திருட்டு எலியாக தனியாக நின்று நடுநிலை மனப்போக்கை புறக்கணிக்கிறான், பரிகசிக்கிறான், கண்டிக்கிறான். தமிழில் நாம் எதிர்கொள்ளும் பொதுவான கவிதை ஆளுமைகளை விட என்.டியின் இந்த தனிமனித குரல் மிகுந்த வன்மமும், ஆவேசமும் கூடி ராட்சச ஆகிருதி பெறுகிறது. என்.டியின் கவிதைப் பரப்பில் மூன்று நிலைகளிலான மனிதர்கள் வருகிறார்கள். (1) நடுநிலை மனிதர்கள், (2) சுய-ஆற்றலை உணர்ந்தும் தன்னை முழுதும் வெளிப்படுத்தாது குடும்ப உணர்ச்சிகளின் அடிமையாக முன்னகர முடியாது தேங்கி விட்டவன். ஒரு நாணயமான பொறுக்கி. கவிதைசொல்லி இந்நிலையில் இருந்து தன்னிரக்கத்துடன் பலசமயம் புலம்புகிறான். (3) சமூகத்தில் இருந்து மீறி ஆழ்மனதின் பேராற்றலை வெளிப்படுத்தும், உச்சங்களை அடையும் மனத்திண்ணம் கொண்டவன். கிட்டத்தட்ட நீட்சேயின் அதிமனிதன். என்.டியின் கவிதைசொல்லி இந்த அதிநிலையை மாந்திரகத்தின் மற்றும் கனவு அல்லது புனைவின் பித்துநிலையில் மட்டும் அடைபவன். நீட்சேயின் பாதிப்பால் எழுதிய ஆலன் கின்ஸ்பெர்க், சார்ல்ஸ் புக்காவஸ்கி போன்றோரின் பிறழ்வின் உச்சவெளிப்படலை நாம் என்.டியின் வரிகளில் அடையாளம் காண முடியும். மேற்சொன்ன இரு கவிஞர்களும் ஒரு வலுவான தன்னிலை சுயத்தை பொது சமுகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக முன்வைத்தவர்கள் என்பதையும் இங்கு சொல்ல வேண்டும். ஆனால் என்.டியிடம் நாம் காணும் வேறுபாடு (அவரது மாந்திரிகப் பின்னணியுடன்) மேற்சொன்ன ஆளுமை முரண்பாடு. பொறியில் மாட்டிக் கொண்ட ஒரு வனமிருகத்தை போல் அவர் குருதிவடியும் கோரப் பற்களை திறந்து காட்டியபடி திமிறி ஒலமிட்டபடுகிறார். அறிவார்ந்த அமைதி அவரது தங்கப்பல் அல்ல.



என்.டியின் அதிஆளுமை சில தொடர்ச்சியான உருவகங்கள் மற்றும் உவமைகளால் இத்தொகுப்பில் கட்டப்பட்டுள்ளது. கருத்துக்களால் அவர் வெளிப்படுத்தும் அரசியல் ஆளுமை போக, இந்த அதி-ஆளுமை கவித்துவ எழுச்சியால் மட்டுமே தோற்றம் கொள்கிறது. இதுவே சமூகத்தில் எதிர்நிலையில் வைத்து பேசுவது. ஒரு கவிதையில் பாட்டி சுட்ட வடையை காக்கா திருடிப் பறக்க, பாட்டி காகத்தின் கவனம் திருப்ப நவீன கவிதை பாடக் கேட்டு முயன்று தோற்கிறாள். பிறகு அவளது பூர்வீக மனம் “நரியைப் போல் ஊளையிட சொல்கிறது. மற்றொரு கவிதையில் பட்டு விழுந்த வேதாள (முருங்கை) மரம் அவர் மீது தொற்றிக் கொள்கிறது. “மரநாயின் உருவமோ நரியின் ஊளைச்சத்தமோ வராத கனவு என்னை நடுவழியில் விட்டுச் சென்று விடுகிறது என்கிறார். தொடர்ந்து எலி, காகம், பன்றி போன்ற மிருகநிலைகளிலும், கோமாளி போன்ற விளிம்புநிலையிலும், கூடுவிட்டு கூடு தாவும் ஆன்மா, மனிதனின் ஐம்புலன்களை சுவீகரிக்கும் பிசாசு என அமானுட நிலையிலும் தன்னை இனம் காண்கிறார். இந்த விளிம்புநிலை, மிருக, அமானுட மொழி தான் என்.டி ராஜ்குமாரின் அதிஆளுமையை சொல்லும் ஆதாரக் குரல். இம்மொழி உயிர்கொள்ளும் இடங்களில் அவரது மிகச் சிறந்த கவிதைகள் பிறக்கின்றன.

தனது அதிமனித ஆளுமையை படைப்பியல் முறையில் வெளிப்படும் கவிதைகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் கீழ்வருவது:

“தேனீச்சிகளில் இருந்து வேறுபட்டு
வெகுகாலமாயிற்று
அம்மை என் அதீத வளர்ச்சி கண்டு
அந்தம் விட்டு நிற்கிறாள் (1)
கிளைக்கதைகள் சொல்லும் பசுமையான
கடம்பமரம் கொண்டு
வினோதமான வீடொன்றை
எழுப்புகிறேன்
பின்வாசலென்று இங்கு எதுவுமில்லை
ஒருவாசல் வழியாக நுழைந்து
இன்னொரு வாசல் வழியாக
குருவிகள் சிலம்புகள் போல்
பறந்து சளைக்கின்றது

(1)     அந்தம் விடுதல் என்றால் பெரும் வியப்பில் உறைந்து போவது

தொடர்ச்சியான பலநிலைகளிலான திறப்புகளை இது பேசுவதை கவனியுங்கள். பக்கவாசல்கள் மட்டும் கொண்ட மரவீடு; அதன் வழி பறவைகள் வெளிப்படுவதால் இருந்த இடத்திலேயே பெருவெளியின் மற்றொரு வாசலாக மாறும் அதன் விரிவு. அடுத்து, வீட்டிலிருந்து வானம் ஏகும் பறவைகள் சிலம்புகள் போல் ஒலித்து பறப்பதாய் சொல்கிறார். இந்த ஒலிப்படிமம் வானம் ஏகும் பறவையை மனதின் குறியீடாக்கி அலாதியான ஒரு அனுபவத்தை நமக்கு தருகிறது. இங்கு வீடு கட்டுவது முடங்க அல்ல, பறந்து உச்சி நோக்கி எழ. நடுநிலை வாழ்வை மீறுவது என்று இதையே குறிப்பிட்டேன்.

அபோத நிலையில் மட்டும் அடைய முடிகிற தூயமிருக நிலையை கொண்டாடுவதன் மூலம் இதே மீறலை மீண்டும் நிகழ்த்துகின்றன அவருடைய கவிதைகள். இதைப் பாருங்கள்.

கோளாறாகிவிட்ட  
உனது உள்ளொடுங்கிய வீடு
புதவல்களால் நிரம்பிக் கிடக்கிறது
பூச்சிகளோடு உள்ளிருக்கும்
மிக அழகான பூரான்கள்
வன்மம் இழையோடும் கால்களோடுப்
பின்னி பின்னி முன் விரைந்து
அற்புதமான குறும்புகளோடு வெளிவருகின்றது

இங்கும் வீடு கோளாறாகி இருப்பதே அதன் சாதகத்தன்மை. மனிதன் மேனிலை அடைவதற்கு அதீத துயரமே உதவும் என்று கருதினார் நீட்சே. அழிவு மனித மேம்பாட்டுக்கான பாதை என்றார் அவர். சிதிலமாகிய வீட்டில் இருந்தே அழகான பூரான்கள் வருகின்றன. இதில் குறிப்புணர்த்தப்படும் வன்மத்தின் அழகியல் மேலும் வலுவாக கூட்டில் கிடந்த புறாக் கூட்டம் கவிதையில் மேலெடுக்கப்படுகிறது. ஜோடிப் புறாக்களில் ஒவ்வொன்றை மட்டும் பிடித்து தின்கிறது ஒரு பூனை. புறா வளர்ப்பவன் பூனையை கொல்ல பலவிதங்களில் முயன்று தோற்கிறான். கடைசியில் பசியில் அது பரிதாபமாக தவிப்பது கண்டு அவன், வினோதமாக, தன்னிடம் மிஞ்சியிருந்த் ஒரே புறாக் குஞ்சைப் பிடித்து அதற்கு தின்னக் கொடுக்கிறான். ஒரு விதத்தில் இக்கவிதை பூனையின் நீதியை நீட்சேயிய பாணியில் ஏற்றுக் கொள்கிறது. புறாக்கள் அழிவதை விட பூனை கீழிறங்கி காந்தியாகாமல் இருப்பது முக்கியம். இதே அதிமனித அனுபவம் கனவிலும் (நடுஇரவை புனைந்து ...) எதேச்சையாக நடைமுறை வாழ்விலும் (எங்கெல்லாமோ அலைந்து ...) கூட நம்முன் திறக்கலாம். இரண்டுமே முக்கியமான கவிதைகள்.

மேலே குறிப்பிட்ட இரண்டாம் நிலையை இரங்கும் கவிதைகளும் தனிச்சிறப்பானவை தாம். நண்பனை அவனது அம்மா என்ற கவிதையில் அரைப்பைத்திய நண்பனும், கவிதைசொல்லியும் “பனங்காட்டுக்குள் வேதாள சிறகசைத்து ஆந்தைகள் தள்ளியிடும் பழங்கள்தின்று வாழாமல் நகரத்துக்கு வந்து மஞ்சளித்து போகிறார்கள். மஞ்சள் வண்டியில் நண்பனை ஏற்றி கொல்ல முயல்வதன் இடையில் அவன் பாதியில் இறங்கி விட முழுப்பைத்தியமாகிறான். இருவரும் பின்னர் பிரம்மையின் ஓலைத்தும்பில் பனித்துளி போல் தொங்குகிறார்கள். இந்த வெளியேற முடியா திணறல் மேலும் தீவிரமாக “நானொரு கோமாளி கவிதையில் வெளிப்படுகிறது. “இயல்பில் திரிய முடியாத கோமாளி/வலிந்து திணிக்கப்பட்ட கோமாளித்தனத்தோடு/திரிகிறான் என்னும் வரியில் கோமாளித்தனம் இயல்பானது என்ற குறிப்பை கவனியுங்கள். வாழ்வின் நடுநிலை சீரழிவை Thus Spoke Zarathustraவில் வரும் கழைக்கூத்தாடியைப் போன்று எதிர்கொள்வது ஒரு முறை. வாழ்வின் அபத்தத்திற்கு கெக்கலிப்பை பதிலாக தருவது ஒருவித உரையாடல் தான். அறிவுஜீவுக்கு கோமாளி மேல்!

அகநாழிகையில் வெளிவந்துள்ள எனது கட்டுரை
Read More

Friday 24 September 2010

வாக்குமூலம் - புக்காவஸ்கி




மரணத்துக்கு காத்திருக்கிறேன்
படுக்கை மேல் தாவும் ஒரு பூனை போல்

என் மனைவிக்காக ரொம்ப ரொம்ப
இரக்கப்படுகிறேன்


இந்த விறைத்த
வெளுத்த
உடலை
அவள் காண்பாள்

ஒருமுறை உலுக்குவாள், பிறகு
ஒருவேளை
மீண்டும்

"ஹேங்க்"

ஹேங்க் பதிலளிக்க
மாட்டான்

என்னை வருத்துவது
என் மரணமல்ல, என் மனைவிக்கு
இந்த இன்மைக் குவியலை
விட்டுப் போகிறேன் என்பதுதான்.

ஆனாலும்,
அவள் அருகே
உறங்கிய
அத்தனை இரவுகளும்

பயனற்ற அந்த
சர்ச்சைகளும்
கூட

எப்போதுமே அற்புதமான
விஷயங்கள்
என்பதை

அவள் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்

அத்தோடு அந்த
நான் எப்போதும்
சொல்ல பயந்த
கடின வார்த்தைகளையும்
இப்போது
சொல்லி விடலாம்:

உன்னை
காதலிக்கிறேன்.
Read More

கிளாடிஸ் உணர்கிறாள் -ஜிம் ஹென்ரி




தாமரை இதழில் வெளியான எனது மொழியாக்கம்

புல்வெட்டும் எந்திரத்தை புல்லுக்கு குறுக்காய் தள்ளிய போது கிளாடிஸ் அம்மாவை மூச்சுக்குக் கீழ் சபித்துக் கொண்டாள். அவளது சகோதரன் எடி நேர்கோடுகளை எப்போதும் உருவாக்குவான், ஆனால் அதை செய்வது அவளுக்கு சாத்தியமற்றதாகவே படுகிறது.

வெக்கை தாங்கவொண்ணா விதம் உள்ளது; கிளாடிஸுக்கு போதை களைப்பு வேறு.

அவளுக்கு ஒரு சிகரெட் வேண்டும் கண்டிப்பாக. ஒவ்வொரு கோட்டின் முடிவிலும் அவள், வேர்த்துக் கொட்டியபடி, நிற்கிறாள்; சற்றுமுன் கத்தரித்த பகுதியை அணுக்கமாய் கவனிக்கிறாள், வழக்கம் போல் கோணி விட்டதை கண்டறிகிறாள். எப்போதுமே. தான் இதுவரை முடித்த அரை கெஜத்தை அவள் திரும்பிப் பார்க்கையில் அது ஒரு குடிகாரியால், ஒரு பைத்தியக்காரியால், ஒரு மனவளர்ச்சி குன்றியவளால் வெட்டப்பட்டது போல் தெரிகிறது.

கிளாடிஸ் தனக்குள் சிரித்துக் கொள்கிறாள். அடுத்த கோட்டை முடிக்கும் முன் புல்லை விரைவில் அகற்ற வேண்டும். அவளது பிரா பட்டை சிவப்பான தடிப்பை ஏற்படுத்துகிறது.

புழக்கடையில் கேப் ரெட்டையர்கள் நாற்றுப்பண்ணையில் இருந்து போன வார இறுதியில் விட்டுப் போயிருந்து மேல்மண் குவியலை தோண்டுகிறார்கள். இதை தள்ளுவண்டியில் கொண்டு வந்து இறக்கி, அவளது அப்பாவுக்கு சொந்தமாக இருந்த ரா டீல் எனும் பாரிலிருந்து வந்த ஆட்களில் ஒருவரைக் கொண்டு அம்மா கடந்த வார இறுதியில் முற்றத்தில் தோண்டிய பல்வேறு பாத்திகளில் பரத்த வேண்டும் என்று நினைத்தபடி கிளாடிஸ் பெருமூச்சு விட்டாள். அவரது பெயர் ஜெய்ம்; அவர் சுருட்டு பிடித்தார், சட்டையின்றி வேலை செய்தார். சமீபமாக வந்து கொண்டிருந்த பல ஆண்களில் அவரும் ஒருவராக இருந்தார்.

அவர் அவர்களில் பலரையும் போல, சமீபமாக, ஈமச்சடங்கின் போது வந்த ஆண்களில் ஒருவர் அல்ல. அம்மாவை நாடி வந்த ஆண்களை சுட்டுவதற்கான ஒரு முக்கிய சட்டகமாக இது உள்ளது: ஈமச்சடங்குக்கு வந்தவர்களில் அவள் நினைவில் நிற்பவர்கள், நினைவில் இல்லாதவர்கள்.

கிளாடிஸ் புல் கத்தரிப்புகளை தூக்கிப் போட்டு விட்டு கேப் ரெட்டையர்கள் சேற்றில் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க செல்கிறாள். அவர்கள் ரெண்டு வீடு தாண்டி வாழும் ஊமைக்குசும்பர்களான பத்துவயது குட்டிப் பையன்கள். அவர்கள் ஒரே போன்று எப்போது ஆடை உடுத்துவதில்லை; தங்கள் ரெட்டைத்தனத்தினால் சிறப்பாக அடையாளம் காணப்படுவதை வெறுத்தார்கள்.
அவள் குனிந்து தனது பெரிய சிரிப்பை சிரித்தபடி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறாள். சிறுவர்கள் தலையை மேல் நோக்கி வளைத்து வெயிலில் கண்கள் கூச ஓரக்கண்ணால் பார்க்கிறார்கள்.

“வேலையை பார்த்திட்டு போடி மயிரே! அவர்களில் ஒருவன் சொல்கிறான்; அவர்கள் மெல்ல சிரித்துக் கொள்கிறார்கள்; தோண்டுவதை தொடர்கிறார்கள்.
முன் முற்றத்தில் திரும்பிய கிளாடிஸ் தன்னால் ஒரு நேர்கோட்டை கூட வெட்ட முடியாததை நினைத்து வெறுப்பாகிறாள். இடுப்பில் கைகளை வைத்தபடி தனது வெட்டுகுத்தை உன்னிப்பாய் நோக்கி அவள் நிற்கையில் தபால்காரர் வண்டியில் வந்து அவளை நோக்கி ஹாரன் அடிக்கிறார். மேல்தெருவில் இருந்து பில்லி வாக்கர் ஒரு குச்சி ஐஸ்கிரீம் சப்பியபடி வருகிறான் எண்ணைப்பசை முடி, கிழிசல் ஜீன்ஸ் மற்றும் மூக்கு வளையங்களின் ஒரு குழப்படி உருவம் அவள் புல்லை வெறிப்பதை கண்டு அவளை வெறித்தபடி நிற்கிறான்.
நீ எங்கே பார்க்கிறாய் என்பதை பொறுத்தது அது”, அவன் புல்வெளியின் குறுக்கே வந்து சொல்கிறான். “போகும் போது உனக்கு நேராக பார்த்தாய் என்றால், நீ நேர்கோடாய் என்றுமே வெட்டிச் செல்ல முடியாது. முற்றத்தின் எல்லையை பார்த்த படி இங்கிருந்து செலுத்திச் செல்ல வேண்டும் நீ”.
கிளாடிஸ் பில்லியை அவன் வேலையை பார்த்துக் கொண்டு போகச் சொல்கிறாள்; அவன், குச்சி ஐஸ் தன் சத்தத்தை அமுக்கிட, ஏதோ சிரிக்க உத்தேசிப்பது போல் தலையை அசைக்கிறான். கிளாடிஸ் பில்லி வாக்கரை கடுமையாக வெறுக்கிறாள், ஒரு புட்டி கின் அடித்து விட்டு ஒரு முறை காட்டுக்குள் இருவரும் கிட்டத்தட்ட புணர்ந்திருந்தும் கூட.
“புறநகர முனிவர்களின் ஞானத்தை உனக்கு கைமாற முயல்கிறேன் அவ்வளவுதான். புல்வெட்டுவது ஒரு கலை என் அருமை கிளாடிஸ்.அவன் பல்லிளிக்கிறான், தெரிந்தது போல். அவன் மீண்டும் ஆரம்பிக்கிறான், “வாய்வழி புணர்ச்சி போல, அது பார்க்க மட்டும் தான் எளிது. சரியாக செய்வதற்கு திறமை வேண்டும்.
கிளாடிஸ் எதுவும் சொல்லவில்லை.
வாய்வழி புணர்ச்சி கருத்து அவளது இதயத்துடிப்பை எகிற வைக்கிறது. மெடோக்ஸும் பில்லியின் நல்ல நண்பர்களில் ஒருவன் மற்றும் கிளாடிஸின் காதலன் அவளும் கடந்த இரவில் அவன் அவளது வாயில் வெளியிட விரும்பியதை முன்னிட்டு சண்டையிட்டிருந்தனர் என்பது பில்லிக்கு தெரிந்திருக்க வேண்டும். அவள் அவனை அனுமதிக்க இல்லை, ஏனெனில் அவன் எம்மாவை ஒரு வாரத்துக்கு முன்பு போகி நெருப்பின் போது ஓத்திருந்தது அவளுக்கு தெரியும். அது ஒரு பெரிய தகராறாக முடிந்தது, எப்படியும் அதன் அவசியத்தை விட பெரியதாகவே; மெடோக்ஸ் கிட்டத்தட்ட அவளை அடித்து விட்டான். பில்லியிடம் அவன் எல்லாவற்றையும் சொல்லி இருக்க வேண்டும்.
அந்த உரையாடல் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை கிளாடிஸ் அருவருப்புடன் கற்பனை செய்கிறாள்.
ஐஸ்குச்சியை வாயிலிருந்து வெளியெடுத்து, உள்ளே திணித்து ... வெளியெடுத்து .. உள்ளே திணித்து ... வெளியே ... உள்ளே ... செய்யும் பில்லியை அவள் முறைக்கிறாள். ஒரு அருவருப்பான ஆபாசச் சிரிப்பு அவனது பருக்கள் அடர்ந்த முகத்துக்கு குறுக்காய் வெட்டி மறைகிறது; பிறகு அவன், தலையை பின் சாய்த்து கொக்கரித்த படி, கிளம்புவதற்கு திரும்புகிறான்.
கிளாடிஸ் பையை புல்வெட்டும் எந்திரத்தின் பக்கமாய் மீண்டும் இணைத்து விட்டு, இயக்கியை இழுக்கிறாள். சில முழுமூச்சான இழுப்புகளுக்கு பிறகு இறுதியாக அது கிளம்புகிறது; அவள் முற்றத்தை நோக்கியபடி திரும்பிக் கொள்கிறாள். ஒரு ஆழ்ந்த மூச்சை இழுக்கிறாள்; வெட்டிய துண்டுகளை கொட்டிய பின் தான் ஒரு சிகரெட் இழுக்க உத்தேசித்தது அவளுக்கு அப்போது நினைவு வருகிறது, ஆனால் கேப் இரட்டையரின் அந்த மயிர் விமர்சனம் அவளை மறக்க வைத்து விட்டது.

இரண்டு

கிளாடிஸின் சகோதரன் இரவுணவின் போது அம்மாவிடம் தன் காதலியை வி.சி.ஆரில் படம் பார்க்க அழைத்து வரலாமா என்று கேட்க, கிளாடிஸ் அமைதியாக அமர்ந்திருக்கிறாள்.
திருமதி.லெகர் தன் பட்டாணிகளை முகர்ந்து விட்டு, பதப்படுத்தப்பட் பட்டாணிகளுக்கு அது ஒரு வினோதமான பருவம் என்கிறாள். எடி திரும்பவும் தன் காதலியைப் பற்றி கேட்கிறான், அவள் வந்து அவனுடன் சேர்ந்து ஒரு படம் பார்த்தால் ஒன்றும் பிரச்சனையில்லையே. “சரி தான், தன் இமைகளை நாடகீயமாக நெரித்து, பெரிய சாயம் பூசிய உதடுகளை குவித்து, அவள் சொல்கிறாள். “சரிதானா? என்ன, அப்போது உன்னால் அவளை ஓய்வு இருக்கையிலேயே ஓக்க முடியுமில்லையா. உன்னைப் போன்ற பசங்க என்ன செய்வீர்கள் என்பது எனக்கு தெரியும். பன்றி குட்டியே
இந்த வாதத்தில் இருந்து எடியின் முகம் பின்வாங்குவதை அவள் கவனிக்கிறாள். அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்பதெண்ணி வியக்கிறாள். அம்மாவிடம் காதலர்கள் அல்லது காதலிகள் பற்றி வாய் திறக்காமல் இருப்பது தான் சிறந்தது. எதிர்பாராமல் அவர்களை அழைத்து வந்து, அவளை சத்தம் போட அனுமதித்து, அப்படியே சமாச்சாரத்தை முடித்து விடுவது தான் சரிப்படும். அதை முடித்த உடன் அவள் தனது அறைக்குள் நீண்ட அழுகை ஒன்றுக்காக மறைந்து விடுவாள் என்பது உறுதி.
ஆனாலும், சமீபமாக, அவள் ரா டீலை அழைக்கிறாள்; “துணைக்காக”, அவள் சொல்கிறாள், “ஒரு விதவைக்கு அது அவ்வப்போது தேவைப்படும்”. இதுதான் அவளது புதிய செய்கை. பகலிலோ இரவிலோ எந்நேரமும் இந்த அந்நியர்கள் வீட்டுக்குள் முட்டியபடி வருகிறாள், பெரும்பாலும் மப்பில்; அவர்கள் அப்படியே நேரே அவள் அறைக்கு போய் விடுவார்கள். சிலநேரம் அவர்கள் போகும் போது கிளாடிஸை நோக்கி புன்னகைக்க வழியில் நிற்பார்கள். சிலரை அவளுக்கு தெரியும், பெரும்பாலானோரை தெரியாது.
“அப்படியானால் ஓகே தானேஎடி சொல்கிறான்.
அவன் ஏன் இப்படி வலுக்கட்டாயமாக தொடர்கிறான் என்று கிளாடிஸ் வியக்கிறாள்.

சரியா என்ன சரி? இங்கே என் சம்மதம் எப்போது தான் தேவைப்பட்டது? என்று தான் இந்த வீட்டில் நான் சொல்வதை எழவு யாராவது காதுகொடுத்து கேட்கவாவது தலைப்பட்டார்கள்? அவளைக் கொண்டு வா. சமையலறை மேஜையிலேயே அவளோடு உறவு கொள், எனக்கென்ன.
கிளாடிஸ் குளிர்பதனப்பெட்டியில் இருந்து டெஸர்ட் எடுக்கிறாள். அவள் அந்த முற்றத்து வேலையை முடித்த அந்த பிற்பகலில் அவளது அம்மா ஏதோ அகத்தூண்டலில் ஐஸ்கிரீமையும் பிஸ்கட்டுகளையும் சேர்த்து அடித்து செய்தது. தொளதொள ஜிம் குட்டை கால்சட்டைகளும், உள்ளே பிரா அணியாது V வடிவ கழுத்து கொண்ட வெள்ளை டீஷர்டும் அணிந்த படி அம்மா சமையலறையில் மேஜை முன்னால் ஏழரை லிட்டர் குடுவை நிறைய வெணிலா ஐஸ்கிரீம் மற்றும் ரெண்டு திறந்த ஓரியோஸ் பைகளும் வைத்தபடி அமர்ந்து இருப்பதை அவள் பார்த்திருந்தாள். ஒரு சின்ன ரப்பர்மெய்டு வாளியில் இரண்டையும் அவள் சேர்த்து அடித்துக் கொண்டிருந்தாள். “இதை விட என்ன வேண்டும்?, கண்களில் திகில் மிளிர, கைகள் ஒட்டிப் பிசுபிசுக்க அவள் சொன்னாள். ஓரியோசும் ஐஸ்கிரீமும் சேர்வதை விட வேறேதாவது சிறப்பாய் இருக்குமா சொல் பார்ப்போம்,அவள் சொன்னாள். “ஒன்று சொல் பார்ப்போம். பிறகு காட்டுத்தனமான ஆவேசத்துடன் அவள் அவற்றை சேர்த்து கலக்குவதில் திரும்பினாள்.
கிளாடிஸ் சில் ஓரியோ பொதியுறைகளை பொறுக்கிக் கொண்டிருந்த போது அமர்வுக் கூடத்தில் இருந்து ஒரு நபர் உள்ளாடையில் வெளிப்பட்டான். அவன் ஒரு கூடைப் பந்தை தன் மார்போடு இறுக்கமாக பற்றியிருந்தான். “நாசம்அவன் சொன்னான். அப்பந்தை அவன் ஒருமுறை துள்ள விட்டான். கிளாடிஸ் அவனை முறைத்தாள்; அம்மா ஒவ்வொரு விரலாக சப்பினாள். அந்நபர் கூடைப்பந்தை மேலும் ஒருமுறை துள்ள விட்டு விட்டு திரும்பி வெளியேறினான்.
எடி பாத்திரங்களை அலம்புகையில் விசிலடிக்கிறான்; கிளாடிஸ் காய வைக்கிறாள். புல்லை வெட்டும் போது அவன் எப்படி எப்போதும் நேர்கோட்டில் வெட்டுகிறான் என்பதை அவனிடன் அவளுக்கு கேட்க வேண்டும். அம்மா மாடியில் மேஜை நாற்காலிகளை மீள்வரிசைப்படுத்தும் போது உச்சஸ்தாயில் “High Hopesபாடுகிறாள். மதிய உணவுக்கு பிறகு தன் வாழ்வை கிளர்ச்சியுறச் செய்ய சற்று அலங்காரத்துக்கான வேளை என்று அவள் சொன்னாள்.
“ஒரு நாள் அவள் அப்படியே செத்துப் போய் விடுவாள் என்று நினைக்கிறாயா?ஐஸ்கிரீம் பாத்திரத்தில் இருந்து சொப்பை அலம்புகையில் எடி கேட்கிறான்.
கிளாடிஸுக்கு புரியவில்லை. எல்லோரும் தான் சாகப் போகிறார்கள்.
“அதாவது, ஒரு நாள் அவள் தன் ஆற்றலை எல்லாம் இழந்து பாட்டரிகள் காலியான ஒரு பொம்மையை அல்லது பிறவற்றை போன்று நின்று விடுவாள் என்று நினைக்கிறாயா?
அப்படித் தான் நினைப்பதாக கிளாடிஸ் சொல்கிறாள்.
“நான் இப்படி அதை சிலநேரம் கற்பனை செய்வேன். அவள் ஒரு வெறியுடன் எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டிருப்பாள், அல்லது, மேஜை நாற்காலியை நகர்த்திக் கொண்டிருப்பாள் அல்லது, எனக்குத் தெரியவில்லை, ஏதாவது, அவளது வழக்கமான நடவடிக்கைகள், அதோடு அப்படியே நின்று விடுவாள், நிமிர்ந்து நின்று கொண்டு, ஒரு முறை புன்னகைப்பாள் ... பிறகு அப்படியே செத்து விழுந்து விடுவாள். எல்லாம் முடிந்து போகும்.
கிளாடிஸ் அவளது சகோதரனிடம் அவன் கனவு காண்பதாகவும், நிஜவாழ்க்கையில் யாரும் அப்படி மறைந்து போவதில்லை, அவர்கள் வெகுகாலம் தாமதிப்பார்கள், அவர்கள் எரிச்சல்படுத்துவார்கள், அவர்கள் வெளியேறுவதற்கு முன் நீண்ட அவகாசம் எடுத்துக் கொள்வார்கள், அது பெரும்பாலும் முன்னறிவிப்போடு நிகழவதில்லை என்று சொல்லப் போனாள்.
ஆனால் அப்போது படிகளில் துள்ளி இறங்கியபடி அம்மா தோன்றுகிறாள். அவள், “everyone knows an ant … can’t … move a rubber tree plant … but he’s got high hopes, he’s got high hopes என்று பாடியபடி சமையலறைக்குள் தாவி ஓடி வருகிறாள்.
ஒரு கையை இடுப்பில் வைத்து, மற்றொன்றை தலைக்கு மேல் வளைத்தபடி, இசைத்தட்டு இயக்கி மீதான நடன மங்கை பொம்மை போல் சுழன்றபடி அவள் சமையலறை மேஜையை சுற்றி நடனமாடுகிறாள். “He’s got high apple pie in the sky hopes.முடிவாக அவள் மேஜை முன்னாக அமர்கிறாள் நிஜத்தில் நிலைகுலைகிறாள்; ஒரு பெருமூச்சு விட்டு மிகச் சோர்ந்து கசங்கிப் போகிறாள்.
முகத்திலிருந்து தலைமயிரை மேலாக தள்ளி விட்டு சிலமுறைகள் ஆழந்து மூச்சு வாங்குகிறாள். இறுதியாக அவள் பேசுகிறாள். “இந்த மயிரு உலகை நான் வெறுக்கிறேன், அவள் சொல்கிறாள், மேலும் அழ ஆரம்பிக்கிறாள். “உங்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நான் அதை வெறுக்கிறேன்”. எடி மெல்ல தண்ணீரை மூடுகிறான் “உங்கள் வெறித்தனமான கனவுகளில் நீங்கள் கற்பனை பண்ண முடியாதளவு வீடு முழுமையான அமைதி கொள்ளும்படியாய்.
அவனும் கிளாடிஸும், நாற்காலியில் துவண்டு கிடந்த, அம்மாவை நோக்கி மெல்ல நடக்கிறார்கள். அழுக்கான தரைவிரிப்புக்கு குறுக்காய் அவர்கள் கொஞ்சங் கொஞ்சமாய் முன்னேற, அவளை அவர்கள் நெருங்குவதற்கு சற்றும் முன்பு, அவள் தன் கீழுதட்டை கடித்து, தலையைத் தூக்கி, சொல்கிறாள், “இன்னும் ஏதாவது ஐஸ்கிரீம் இருக்குதா?

மூன்று
மெடோக்ஸ் கிளாடிஸை தன் அப்பாவின் காடிலாக் காரில் ஏற்றிச் செல்கிறான். அவன் முழுக்க அலங்கரித்துக் கொண்டிருக்கிறான், தன் அங்கியின் நீண்ட கழுத்துப் பட்டியில் ஒரு பூவும், ஒரு பெட்டியில் மலர்க்கொத்தும் கொண்டுள்ளான்.
கிளாடிஸ் வியப்படைகிறாள், அதை வெளிப்படுத்துகிறாள்.
“நாம் ஒரு இணைக்குழு நடனத்துக்கு போகிறோம்,அவன் வீட்டுப் பாதையில் இருந்து வண்டியை வெளியே எடுத்தபடி சொல்கிறான்.
இணைக்குழு நடனமா?
“ஆம் சரிதான் என் சீமாட்டியே, இணைக்குழு நடனம் தான்.
கிளாடிஸுக்கு இணைக்குழு நடனமாடத் தெரியாது.
“அதில் ஒன்றும் விசேசமாக இல்லை. அது மட்டுமல்ல, ஆண் ஜோடி தான் முன்னே நடத்திப் போவது.
கிளாடிச் ஜீன்ஸ் அணிந்துள்ளாள்.
“பயப்படாதே
அவர்கள் நெடுஞ்சாலையை அடைகிறார்கள்; மெடோக்ஸ் ஒரு ஒலிப்பேழையை எடுத்து ஸ்டீரியோவில் ஓடவிடுகிறான். அவன் அப்பாவின் கேடிலாக்கில் எல்லா இடத்திலும் ஒலிபெருக்கிகள் உள்ள அற்புதமான ஸ்டீரியோ அமைப்பு உள்ளது, கிராபிக் இகுவலைசர் டாஷ்போர்டில் பொருத்தப்பட்டுள்ளது (அவன் அப்பா ஒரு வக்கீல் மற்றும் உள்ளூர் நீதிபதி). ஒலிப்பேழையில் ஓபரா ஒலிக்கிறது, அது கிளாடிஸை ஆரம்பத்தில் சிரிக்க வைக்கிறது, ஆனால் பிறகு அவள் பொறுமையாக அதைக் கேட்கிறாள், பியோனா துணையுடன் உச்ச இசைக்குரலில் பாடல்; அவள் நிதானமடைவதாய் உணர்கிறாள்.
மழை பெய்ய ஆரம்பிக்கிறது; அவள் முன் இருக்கையின் பெரும் அமெரிக்க பரப்பில் தன்னை நீட்டிக் கொள்ள அத்துளிகள் அவளை வசியப்படுத்துகின்றன. அடர்த்தியான மென் துணியால் போர்த்தப்பட்ட இருக்கை மீது அவள் தன்னைத் தான் கட்டிக் கொள்கிறாள்.; அக்கார் தரும் விமானத்தில் பறக்கின்ற உணர்வை எண்ணி வியக்கிறாள்.
மெடோக்ஸ் ஒரு கஞ்சா சிகரெட்டை பற்ற வைத்து அவளிடம் நீட்டுகிறான். அவள் ஆழ்ந்து உள்ளிழுக்கிறாள், தலைக்குள் அதன் வெதுவெதுப்பை உணர்கிறாள். அவன் இசை அளவை உயர்த்துகிறான்; காரும் அதனோடு வேகம் பிடிப்பதாக தெரிகிறது. அவள் ஜன்னல் வழி வெளியே நோக்குகிறாள்; அவர்கள் போக்குவரத்தின் ஊடே ஒரு மந்திரவித்தை போல, வீடியோ விளையாட்டு போல, சுழன்று செல்வதை பார்க்கிறாள். விளக்குகள் இடமும் வலமுமாக பறந்து கடக்கின்றன, கார்கள் அவர்களை எதிர்பார்த்து வழிவிட்டு பிரிகின்றன.ஏதோ பூங்காவில் நடப்பது போல் அது எளிதாக தோன்றுகிறது; ஆனாலும் அவர்கள் இரண்டு டன் எஃகு மற்றும் கண்ணாடி மீது இருக்கிறார்கள்.
கஞ்சா சிகரெட்டின் பெரும்பகுதி வரை மூன்று தனிப்பெரும் பாடல்களின் ஊடாக, அவற்றின் அழகு அவள் கண்களில் நீர் வரவழைக்கிறது, காம உச்சநிலையை நினைவுபடுத்தும் படியாக முதுகெலும்பில் கூர்மையான கூச்சவுணர்வை ஏற்படுத்துகிறது - அவளுக்கு இந்த நன்னிலை உணர்வு தங்குகிறது. ஒளியைப் போன்று பரிசுத்தமான, கனவைப் போன்று மென்மையான ஒரு மாயைக்குள் வழுக்கிச் செல்வதாக அவள் உணர்கிறாள். அவளது மூச்சின் ஏற்ற இறக்கம் கூட ஒரு ஒழுங்கமைவுடன் மாந்திரிகத்தன்மையுடன் உள்ளது.
காற்று சர்க்கரையை போல் இனிக்கிறது, குருதி ஆகத் தெளிவான படிக ஓடைகளைப் போல் அவள் சிரை வழி துடித்து ஓடுகிறது. அவளது கூந்தலை பட்டைப் போல் உணர்கிறாள். ஒரு ஒளிக்காட்சியை போல் உலகம் விரைந்தோடுகிறது. உலகம் ஒரு ஒளிக்காட்சியாக, ஒரு கோளகத்தில் லேசர் ஒளிக்காட்சியைப் போல ஆபத்தற்றதாகவும் தொலைவாகவும் “ஆகி விட்டது.
அவள் மெடோக்ஸை பார்க்கிறாள்; அவன் மீது உச்சபட்சமான ஒரு காதலை உணர்கிறாள். அவனை தன் வாயில் வெளியிட அனுமதிருக்கலாம் என்று விரும்புகிறாள் அவனுக்கு அதில் இருந்து அப்படியொரு திடீர் கிளர்ச்சி கிடைக்கிறது. அவன் எங்கே வெளியிட்டான், உள்ளேயோ வெளியேயோ மீதோ அல்லது பின்னாலோ, என்பதை தான் ஏன் பொருட்படுத்தி இருக்க வேண்டும் என்பது அவளுக்கு விளங்கவில்லை, யாருக்கு அக்கறை. நிஜமாகவே. நம்மை கவனம் சிதைக்க நாம் அனுமதிக்கும் விசயங்கள், அவள் சிந்திக்கிறாள், நம்மை தடுமாறச் செய்ய நாம் அனுமதிக்கும் விசயங்கள்! மெயின் ஸ்டிரீட்டில் பகல் வேளையில் வசியப்பட்டு அவனை வெறித்தபடி அவனை தன் வாயில் வர விடுவாள், அவள் யோசிக்கிறாள், அது அவனை மகிழ்ச்சிப் படுத்தும் எனில்.
ஹேலொஜன் தெருவிளக்குகள் ஒளிபெற்ற அவனது பக்கவாட்டு முகத்தை வெறித்துப் பார்க்கிறாள்; அவளது இதயம் வேகமாக அடிக்கிறது. உலகம் கச்சிதமாக முறுக்கேற்றப்பட்டு உள்ளது, எப்படி வேண்டுமோ அப்படி சுழல்கிறது. மிகத் துல்லியமாக. அவர்கள் ஏன் சண்டையிட்டார்கள்? அப்படியே போகிற போக்கில் செல், அவள் நினைத்தாள், அப்படியே அது இருக்கும்படி இருக்கட்டும்.

நாலு
ஆனால் பிறகு மெல்ல முதலில் அந்த வழக்கமான பதற்றம் அவளுக்குள் ஊர்ந்தேறுகிறது. (இது நடக்கும் என்பது அவளுக்கு தெரியும். மாதக்கணக்காய் கஞ்சா அவளுக்கு பீதியும் மனப்பிராந்தியும் ஏற்படுத்தி வந்தது). திடீரென்று அந்த பாடகரின் அலறும் கீச்சுக் குரல் அவளது ஒவ்வொரு நரம்பிலும் மீண்டும் மீண்டும் உராயத் தொடங்குகிறது, வேகக் காரின் அசைவினால் அவளுக்கு குமட்டல் உணர்வு ஏற்படுகிறது. இந்த புரிந்து கொள்ள முடியாது உதவாக்கரை தருணத்தை நோக்கின ஏதோ ஒரு வகையான இணைக்குழு நடனத்துக்காக பித்தர்களைப் போல் விரைகிற - ஒரு நீண்ட ஆபத்தான பயணமாக அவளது மொத்த வாழ்வையும் அவள் பார்த்தாள் - இணைக்குழு நடனம் மீது யாருக்கு அக்கறையாம்?

அவளுக்கு நிச்சயமாக அது வெளிப்படையாக தெரிந்தது: அவள் இப்படித்தான் சாகப் போகிறாள். அவளது நீண்ட சித்திரவதையான இருத்தலின் ஒவ்வொரு நிமிடமும் இந்த ஒரு தருணத்தை நோக்கி தான் செலுத்தப்பட்டுள்ளது. அவளது மொத்த வரலாறும் அவளுக்கு முன் திரைவிலகுகிறது; அது இரு பக்கமும் எவ்வித பிறழ்வுகளையும் தடுக்கும் உயர்ந்த செங்குத்தான தடுப்புச் சுவர்கள் கொண்ட குறுகின வளைந்து நெளியும் பாதையாக அவள் பின்னால் விரிகிறது. அவளது மரணம் முன் நிற்கிறது, எப்போதையும் போல, அவளது விதி தீர்மானிக்கப்பட்டு விட்டது. இது தெரியாமல் அவள் எத்தகைய முட்டாளாக இருந்திருக்கிறாள்.
அவளது உடல் ஒரு முடிச்சாக இறுகுகிறது. அவளால் ஏறத்தாழ மூச்சு விடவே முடியவில்லை. காற்றுக்காக தவித்தபடி அவள் தன் கைகால்களை இழுத்துக் கொள்கிறாள்.
அவளுக்குள் ஒரு அலறல் உருவெடுத்து வளர்கிறது. அது ஒரு சின்னஞ்சிறு, கீச்சென்று மன்றாடலாக காலில் அடிமட்டத்தில் இருந்து ஆரம்பமாவதை அவள் உணர்கிறாள். அது வளர்கிறது. அது வளர்கிறது. அவளது முட்டிகளை அடைகிற போது அது ஒரு கீச்சொலி கத்தலாகிறது, பிறகு அது இசைநாடக ஊளையாக, வழிமுட்டின கட்டைக்குரல் அழுகையாக, ஒரு பிரம்மாண்டமாக வசைமொழி கதறலாக, ஒரு அமானுட, இல்லை ஒரு அதிமானுட கற்பனைக்கெட்டாத அலறலாக ஆகிறது.
அவளது உறுதிப்பாட்டை மீறி அது அவளது வாயில் இருந்து வெளியேறுவதை அவள் உணர்கிறாள், அது வர, வெடித்து வெளிவர, காரின் உட்பகுதியை அது சிதறடிப்பதைப் போல் தோன்றுகிறது. ஒரு வாழ்நாள் மொத்தத்துக்குமான அடக்கப்பட்ட கதறல்கள், அனைத்தும் ஒரேயடியாக, வாழ்நாள் முழுக்க அவள் என்றுமே அலற துணிந்திராத ஒவ்வொரு கதறலும், மெடோக்ஸின் அப்பாவின் விரையும் காடிலாக் உட்புறம் மீது பாய்கின்றன.
அதற்கு உடனடி விளைவுகள் ஏற்படுகின்றன.
ஒரு தொற்றுவியாதி போல், மெடோக்ஸே அக்கதறலை தொடர்கிறான். தனது கதறலின் போது அவன் காரின் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறான். சட்டென்று அவர்கள் மழையில் சுழல்கிறார்கள், நான்கு-வழி சாலையில் கார் கட்டுப்பாடற்று சுழல்கிறது. அவர்கள் அலறுகிறார்கள், மேலும் அலறுகிறார்கள். மரணம் உடனடி நிச்சயம்; இப்போது இருவருக்கும் அது தெரியும், அதனால் அவர்கள் மேலும் அலறுகிறார்கள். இயல்புக்கு மாறாக அவர்களைச் சுற்றி நிகழ்வுகள் மெதுவாக ஆகின்றன.
“அது நம்மை நாமே டி.வியில் பார்ப்பது போன்று இருந்தது, அவர்கள் பின்னர் நினைவிலிருந்து சொல்வார்கள், “அது படம் பார்ப்பதை போல் இருந்தது”.
நெடுஞ்சாலையின் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களுக்கு இடையே புல்லின் மீது அவர்கள் சுழன்று நிற்கிறார்கள். அவர்களுக்கு காயம் இல்லை. காருக்கு சேதமில்லை. அவர்களுக்கு மூச்சு வாங்கியது.
“அடப்பாவிமெடோக்ஸ் சொல்கிறான். “என்ன எழவுக்கு அப்படி அலறினாய்?
கிளாடிஸால் ஏறத்தாழ தன் வாயை கூட திறக்க முடியவில்லை.
“அட நாசமே. நான் என் கால்சட்டையிலே கழிந்து விட்டேன் போலிருக்கிறது. அவன் ஆவேசமாக மூச்சுவாங்கிக் கொண்டிருக்கிறான், அவனது கண்கள் ஏதோ தலையிலிருந்து குதித்து விடும் எனும் படியாக அவன் கண்கள் அத்தனை விரிந்து இருக்கின்றன. “இந்த சூட் வாடகைக்கு எடுத்தது!
அவள் முடை நாற்றத்தை கவனிக்கிறாள்.

ஐந்து

இணைக்குழு நடன அரங்கு, உண்மையில் ஒரு வாடகைக்கு எடுக்கப்பட்ட விருந்து அரங்கு, வண்ணக் காகிதங்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கூரையில் இருந்து சுழலுகின்ற ஒரு கன்ணாடிப் பந்து தொங்குகிறது. டபிட்டு நீளங்கி அணிந்த வயதான சீமாட்டிகள் பழச்சாறு-மதுக் கலவையை விளம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இணைக்குழு நடன அரங்கு முழுமையிலும் அவளும் மெடோக்ஸும் மட்டும் தான் இருபது வயதுக்கு கீழுள்ளவர்கள். அவர்கள் மட்டுமே நாற்பது வயதுக்கு கீழுள்ளவர்கள், ஐம்பதுக்கு கீழுள்ளவர்கள். ஒரு விலங்குகள் காப்பிடத்துக்காக நிதி திரட்டுவதற்காக காவல்துறை நடத்துகிற நிகழ்ச்சி அது என்று தெரிய வருகிறது. உள்ளூர் நீதிபதியான மெடோக்ஸின் அப்பாவுக்கு நுழைவுச்சீட்டுகள் கிடைத்தன, ஆனால் அவரால் வயிற்றுப்போக்கு காரணமாக கடைசி நிமிடத்தில் போக முடியவில்லை. (மெடோக்ஸ் அவனது கால்சாட்டையில் கழியவில்லை, நிச்சயமாய்.)
அவ்விரவின் பெரும்பகுதி கிளாடிஸ் நடனமாட மறுக்கிறாள். அவள் ஒரு மூலையில் நின்று மெடோக்ஸ் ஓவ்வொருவரிடமும் சென்று கைகளை குலுக்கி, தோள்களை தட்டி, மூத்த சீமாட்டிகளுடன் வழிவதை பார்க்கிறாள். அவன் ஒரு நாள் ஒரு அரசியல்வாதி ஆவான், அவள் யோசிக்கிறாள். நல்ல குடும்பத் தொடர்புகள், நல்ல தோற்றம், அகன்ற தோள்கள்.
அவன் அரசியலும் அதற்கு பின் சட்டமும் படிக்கப் போவதாக சொல்லுகிறான். “நான் ஒரு கவர்ச்சிகரமான வரன், தனது காரின் பின்பகுதியில் வைத்து ஓரிரவு அவன் அவளிடம் சொன்னான். கிளாடிஸ் தனது பிரா பட்டியை நடுவிரலில் திருகியும் விடுவித்தும் வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தான் ஒரு தூண்டில் போட்டுள்ளதாக அவள் அறிந்திருக்கவில்லை.

ஆறு

சார்டுரூஸ் எனும் ஒரு பெண் ஒருவழியாக கிளாடிஸிடம் தானாகவே முயன்று பேச வருகிறார். நேரமாகி விட்டது; கூட்டமும் குறைந்து விட்டது. இசைக்குழு சலிப்பாகி தோன்றுகிறார்கள்.
சாக்சோபோன் கலைஞர் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பதை கிளாடிஸ் கவனிக்கிறாள். கிளாடிஸுக்கு எதிர் மூலையில் ஒரு பெண், அபாசமாக சிரித்தபடி சுற்றி நிற்கும் இளைஞர் குழுவுடன், குடிபோதையில் பத்து கட்டளைகளை ஒப்பிக்க முயன்று கொண்டிருக்கிறாள். “நீங்கள் பேராசைப் படாதிருப்பீராகஅவள் தொடர்ந்து சொல்லி கெக்கலிக்கிறாள்.
சார்டுரூஸ் வந்து தனது வெள்ளை கையுறையின் ஊடாக கிளாடிஸின் கைகளை குலுக்குகிறார். “எப்படி இருக்கிறீர்கள்?அவள் கேட்கிறார்கள்.
கிளாடிஸ் தயக்கமாக தலையை அசைக்கிறாள். அவர்கள் ஒரிவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்கிறார்கள்; பின்னர் சார்டுரூஸ் தனக்கு அவளது அப்பாவை பலவருடங்களுக்கு முன்னரே தெரியும் என்று சொல்கிறார். “அவர் என் மாகியின் பின் சுற்றிக் கொண்டிருந்தார், அவர் சொல்கிறார். “அது அவர் உன் அம்மாவை சந்திப்பதன் முன்னர் தான், நிச்சயமாக. அவர் கால்பந்து அணியில் இருந்தார். உனக்கு அது தெரியுமா?
கிளாடிஸுக்கு தெரியும்.
“கண்டிப்பாய் உனக்கு தெரிந்திருக்கும். அவர் ஒரு சிறந்த இளைஞராக இருந்தார். மிக பவ்யமாக, நன்றாக ஆடையுடுத்தி. அப்போதைய ஆண்களைப் போல். அவரும் என் மாகியும் டிரைவ் இன்னுக்கு, குதிரைப்பந்தய தடத்துக்கு, சிற்றுலக்களுக்கு செல்வார்கள். அப்படிப்பட்டதொரு ஒரு விசயம். ஒரு மிக களங்கமற்ற காலம். ஏறத்தாழ இப்போது வேடிக்கையாக உள்ளது.”. சார்டுரூஸ் சிந்தனாபூர்வமாக வானத்தை நோக்குகிறார், மேலும் தொடர்கிறார், “ நான் நேற்று ஒரு இளைஞன் சிவப்பு நிற மொஹொவுக்கு பாணி முடி அமைப்புடன், கன்னங்களில் வளையங்கள் துளைத்திருக்க தெருவில் நடந்து போவது பார்த்தேன்.
கிளாடிஸ் புன்னகைக்கிறாள். அது ஜிம்மி; ஒரு புறநகர் ஹெராயின் போதை பயனன்.
சார்டுரூஸ் கீச்சிட்டு கத்துகிறார். “கர்த்தரே, ஹெராயின்? நிஜமாகவா?
இந்த எரிச்சலூட்டும் பெண்ணுக்கு அதிர்ச்சியூட்டிய திருப்தியில் கிளாடிஸ் தலையாட்டுகிறாள்.
அவன் ஹெராயின் ஊசி போடுகிறானா? ஊசிகள் மூலமா?
கிளாடிஸ் நகைக்கிறாள்.
“இங்கே இந்த நாட்டுப்புறத்திலா?. பார், நான் என்ன சொல்லுகிறேன் என்று புரிகிறதா. ரொம்ப காலம் முன்னாடி இது ஒரு வித்தியாசமான உலகமாக இருந்தது. உன் அப்பா ஒரு நல்ல மனிதர்.
சார்டுரூஸின் மாகியை டிரைவ் இன்னுக்கும் சுற்றுலாக்களுக்கும் அழைத்து சென்று மனிதராகிய தன் அப்பாவைப் பற்றி கிளாடிஸ் எண்ணிப் பார்க்கிறாள். அவள் ஸ்லோ மோஷனில் மென் ஃபோகஸில், டூஷ் ஊசிக்குழல் விளம்பரத்தில் போன்று ஒளி அமைக்கப்பட்ட ஒரு உலகில் அவர்கள் வாழ்வதை அவள் பார்க்கிறாள்.
“எவ்வளவு காலம் ஆகி விட்டது? மக்கள் இறந்தவர்களைப் பற்றி பேசுகையில் கிளாடிஸ் கவனித்துள்ளதைப் போல சார்டுரூஸ் இதை கேட்கும் போது பதற்றத்தில் நெளிகிறாள்.
மூன்று வருடங்கள், ஒரு கரும் வெற்று வெளிக்குள் நாள்காட்டியின் சுழலும் பக்கங்கள் பறந்து மறைவதை கற்பனை பண்ணியபடி கிளாடிஸ் சொல்கிறாள்.
“ஒருவரை கொலையினால் இழப்பது ஒரு கொடுமையான விசயம். உன் குடும்பம் எவ்வளவு சிரமப்பட்டிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள ஆரம்பிக்க முடியாது. அதுவும் எதற்காக அதை சேய்தார்கள், என்ன அவர்களுக்கு என்ன கிடைத்தது?
“நாற்பத்தாறு டாலர்கள், கிளாடிஸ் சத்தமாக ஒப்பிக்கிறாள். அவளது அப்பாவின் கொலைகாரர்கள் அவரை நடுமண்டையில் இருமுறை சுடுமுன் குறைந்தபட்சம் ஒரு பெரிய தொகையை கொள்ளை அடித்திருந்தால் அதற்கு ஏதாவது அர்த்தமிருக்கும் (குறைந்தது அவர்கள் உலக நோக்குடன் ஒத்துப் போயிருக்கும்) என்று பொருள்பட மக்கள் வழக்கமாக நடந்து கொள்வார்கள். உலகம் அர்த்தப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக் கொண்டு அவர்கள் ஒரு சமாதானமான தூக்கத்தை அடைய இப்படியான ஒரு உயர்ந்த தொகை அவர்களுக்கு உதவும் என்பது போல்.
“நாற்பது டாலர்கள். ஹும்ம்ம்
போலீஸ்காரர்களின் குழுவில் இருந்து மெடோக்ஸ் தன்னை நோக்கி கையசைப்பதை கிளாடிஸ் அடையாளம் காண்கிறாள். அவளது கவனத்தை பெற்றதும் அவன் அவளை அருகில் செல்லும் படி சைகை செய்கிறான். ஆசுவாசமுற்று, கிளாடிஸ் தன் காதலன் தன்னை அழைப்பதாக சார்டுரூசிடம் சொல்லுகிறாள்.
அவர் மெடோக்ஸை பார்வையிட்டு விட்டு மிகவும் கவரப்பட்டு சொல்கிறாள், “மெடோக்ஸ் ஹெயின்ஸ், மிக நல்லது. இதை விட சிறப்பாக ஒரு பெண்ணால் தேர்வு செய்ய முடியாது.“
கிளாடிஸ் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறாள்.
சார்டுரூஸ் எழுந்து நின்று தன் அங்கியை தூசு தட்டுகிறாள். “அனைத்தும் மாறி விடும் என்பதை நான் கண்டிப்பாக இளைஞர்களிடம் சொல்லி விடுவேன். அவர்கள் அது நடக்காது என்பதில் மிக உறுதியாக தெரிகிறார்கள். எல்லாமும் அவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பது போல். ஆனால் அனைத்தும் மாறும் கண்ணே. இப்போது நீ யோசிப்பதிலும் உணர்வதிலும் பெரும்பாலானவை விரைவில் வெறும் நினைவாக, மூட்டமான நினைவாக இருக்கும். இப்போது மிக ஆவேசமாக உணர்வது என்ன என்பதை நினைவில் கொண்டு வருவதே உனக்கு சிரமமாக இருக்கப் போகிறது. எல்லாத்தை பற்றியுமே.
கிளாடிஸுக்கு சொல்ல ஒன்றும் இல்லை.
சார்டுரூஸ் கிளாடிஸின் தோளைத் தட்டியபடி, பெரிதாக புன்னகைத்தபடி நகர்கிறார். “பலர் வாழ்க்கையால் சிதைக்கப்படுகிறார்கள், என்னுடைய வயதில் நான் பல பேர் அதனால் முழுக்கவே துவண்டூ விடுவதை பார்த்துள்ளேன்,அவர் சொல்கிறார். “எளிதாகப் பட்டாலும் கூட, நாம் அவர்களை மதிப்பீடு செய்யக் கூடாது. எனக்கு உன் அம்மாவையும் தான் தெரியும். அவர் மேகியுடன் ஒரு காலத்தில் நட்பாக இருந்தார். இது ஒரு சின்ன நகரம்.
கிளாடிஸ் அதன் சிறியதான தன்மையை கற்பனை செய்கிறாள், மேலிருந்து அதனை, சிறு பச்சை நிலப்பகுதிகளில் இருக்கும் அனைத்து அலுமினியம் வீடுகளை, கோணல் மாணலான கோடுகளுடன் அவளது முற்றத்தை பார்ப்பதாக பாவனை செய்கிறாள்.
“என்னைப் பொறுத்தமட்டில், சார்டுரூஸ் தொடர்கிறார், “நம்மால் இப்படி, சிலசமயங்களில், தொடர முடிகிறதே என்பது ஒரு அற்புதம்தான். நிஜமாகவே. தண்ணீரில் நடப்பது உள்ளிட்ட பிற அசட்டுத்தனங்களில் இது முதலாவதாக வரும். தொடர்ந்து வாழ நமக்கு எப்படி வலிமை கிடைக்கிறது

ஏழு
வீட்டுக்கு போகும் வழியில் மெடோக்ஸ் ஒரு அரசியல்வாதியின் மனைவி அனைவரிடமும் பழகக்கூடியவளாக இருக்க வேண்டும் என்று அவளை சீண்டும்விதம் புகார் செய்கிறான். “சேர்ந்து பழகு! அவன் அவளிடம் சொல்கிறான், “எல்லாரும் மடையர்கள் என்று நீ நினைத்தாலும் கூட, தனியாக அமர்ந்திருப்பதற்கு ஒரு மடையனிடம் பேசுவது மேல்.
தன்னை நியாயப்படுத்த கிளாடிஸ் தான் சார்டுரூஸுடன் ஒரு அருமையான உரையாடலில் ஈடுபட்டதாக சொல்கிறாள்.
“அவள் ஒரு லூசு
அவர்கள் மீண்டும் இசைநாடகம் கேட்கிறார்கள், ஆனால் கஞ்சா ஏதும் புகைக்கவில்லை. அவர்கள் சுழன்று தடுமாறிய இடத்தை கடக்கிற போது கிளாடிஸின் நெஞ்சுக்குள் சில்லிடுகிறது. அவள் மெடோக்ஸின் தொடையில் கை வைக்கிறாள், படுக்க வேண்டும் என்கிறாள், அவளுக்கு சற்று படுக்க வேண்டும்.
“என்ன வேண்டுமென்றாலும் செய், அவன் சொல்கிறான்.
அவள் முழங்கைப் பலகையை விலக்கி அவனது துடையில் தலை சாய்த்து இருக்கை மீது படுக்கிறாள். காற்றுத்தடுப்பு கண்ணாடி வழியாக வானம் மிதந்து கடப்பதை வேடிக்கை பார்க்கிறாள்; மீண்டும் விமானப் பறத்தலைப் பற்றி யோசிக்கிறாள். எல்லாம் சீராக செல்வதான, பிரபஞ்சமே ஒரு சீரமைவுடன் இருப்பதான முந்தைய கிளர்ச்சியுணர்வை மீண்டும் கொண்டு வர முயல்கிறாள். ஆனால், அவளது தலை சுழல்கிறது; அவளுக்கு கண்ணை மூட வேண்டியதாகிறது.
அவள் பக்கமாக திரும்பி மெடோக்ஸின் கால் கெண்டையை வருடுகிறாள். வீட்டில் அம்மா ஏதாவது ஒரு ஆணுடன் படுத்துக் கிடப்பாள். எடி தனது புது காதலியுடன் அவனது அதி-வன்முறைப் படங்களில் ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பான். ஒருவேளை இது தான் உலகம் சீரமைவுடன் இருப்பதற்காக இருக்கலாம், அவள் நினைக்கிறாள். ஒருவேளை சீரமைவுடன் இருப்பதன்றி பிரபஞ்சத்துக்கு வேறு தேர்வு இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை சீரமைவு என்றால் என்ன என்பது பற்றி நமக்கு ஒரு கோளாறான புரிதல் இருக்கலாம்; நாம் வேறு விதமாக பார்த்து வேறேதையாவது - மேலும் குறைவானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எதிர்பார்த்தால், எல்லாம் சரியாகி விடும். விசயங்களை பார்க்கும் இந்த புதுவிதம் பற்றி கற்பனை செய்ய முயன்றபடி, அறிகிற ஆனால் அதனால் பாதிக்கப்படாத ஒரு கிளாடிஸை கற்பனை செய்தபடி, அவள் தன்னை சற்று இடம் மாற்றிக் கொள்கிறாள். மெடோக்ஸ் அவளது கூந்தலை வருட, இருக்கையில் மெல்ல நெளிய ஆரம்பிக்கிறான். அவளது முகவாய்க் கோட்டில் மிருதுவாக ஒரு விரலை இழுக்கிறான்; கிளாடிஸ் அவளது மற்ற கன்னத்தின் மீது மெடோக்ஸ் விரைப்படைவதை உணர்கிறாள்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates