Saturday 18 December 2010

நிலவு தீண்டிய மரம்




பியாட்ரைஸ் பிரிஸ்மேன் (வட அமெரிக்கா)
BEATRICE BRISSMAN (வட அமெரிக்கா)
மௌனம் மீள மீள காத்துக் காத்திருக்கும்
விதம் ... அடுத்த
லூன் பறவைக் கத்தலுக்கு
The way silence waits
and waits ... for the next
cry of the loon

நவோமி வொய். பிரவுண் (வட அமெரிக்கா)
NAOMI Y. BROWN (வட அமெரிக்கா)
அந்தி சாயும் --
மெஸ்கீட் மர விதைத் தோடுகளின் சடசடப்பில்
சிள்வண்டின் சன்னமான குரல்
dusk settles-
in rattling mesquite pods
a cicada's faint voice

ராபேல் டி கிரட்டுல்லா (வட அமெரிக்கா)
RAFFAEL DE GRUTTOLA (வட அமெரிக்கா)

நிலவு தீண்டிய
தேவதாரு மரம்
பனியில் கனத்து
touched by the moon
pines
heavy with snow

முடிவற்ற நாள் --
ஒரு ரயில் விசில் விகாசிக்கும்
குளிர் காற்றில்
endless day—
a train whistle widens
in the cold air
Read More

இந்தியா ஏன் வெல்ல வேண்டும்?


தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டெஸ்டு ஆட்டத்தில் இந்தியாவால் ஆட்டத்தை காப்பாற்ற முடியும் மற்றும் வெல்லக் கூட முடியும் என்று மீடியா விமர்சகர்கள் நம்பத் தொடங்கி உள்ளனர். இதற்கு காரணம் எந்த ஒரு கிரிக்கெட் தர்க்கமோ விவேகமோ அல்ல.
இன்று ஒரு செஷன் நமது துவக்க ஆட்டக்காரர்கள் நேர்மறையாக ஆடி தாக்குப்பிடித்து ஓட்டம் எடுத்தது தான். தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தும் ஒரு சிறுவனைப் போல் நம் மீடியா உடனே பரபரப்பாகி விட்டது. இந்த மனப்போக்கின் அடிப்படையில் ஒரு அசட்டுத் தனம் உள்ளது.
முதலில், கிரிக்கெட் எண்களின், முடிவுகளின் ஆட்டம் அல்ல. வெற்றி தோல்விகளை விட பார்வையாளர்களின் நினைவில் நிற்பவை உயர்ந்த மனிதப் பண்புகளை சோதித்த காவிய ஆட்டங்களே. உதாரணமாய் 2000இல் இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் டெஸ்டு ஆட்டங்கள். அதற்கு பின் அவர்கள் திரும்ப வந்து ஜெயித்தார்கள். அடுத்து இருமுறை வந்து தோற்றார்கள். ஆனால் நம் கற்பனையை கவர்ந்தவை கொல்கத்தாவிலும், சென்னையிலும் நடந்த அந்த தராசு முள் ஆட்டங்கள். ஏன்? கிரிக்கெட் ஆடுகளம் ஒரு போராட்டத்தை, அபார பொறுமையை, அதிர்ஷட்டத்தின் குரூர சாய்வுகளை, உடல்ரீதியான சாகசங்களை, இறுதியாய் தனிமனித ஆற்றல்களை அழகியல் பூர்வமாய் நிகழ்த்திக் காட்டும் ஒரு மேடை. மனிதனின் சிலுவை விளைவுகள் பற்றின கவலை தான். கிரிக்கெட்டில் இந்த சிலுவையில் அறையப்பட்ட எந்த அணிக்கும் உயிர்த்தெழுப்பு இல்லை. மேற்சொன்ன ஆஸ்திரேலிய டெஸ்டுகளை போல் மிகச் சிறந்த காவிய ஆட்டங்கள் வெற்றி தோல்விகளை கடந்தவை.
இனிவரும் இரண்டு நாட்களுக்கு இந்தியா தாக்குப் பிடிக்காவிட்டால் என்ன என்று நாம் கேட்க வேண்டும். இந்த தொடரில் மீண்டு வர இந்தியாவுக்கு எப்போதும் வாய்ப்பிருக்கும். இத்தொடரின் முடிவு என்னவாக இருந்தாலும் அடுத்த தொடருக்குள் மறந்து விடுவோம். இங்கிலாந்திலும் மே.இ தீவுகளிலும் நாம் டெஸ்டு தொடர்களை வென்றுள்ளதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறோம். உயர் மனிதப் பண்புகளை காட்சிப்படுத்துவது தான் இத்தொடரின், எந்த டெஸ்டு தொடரின்,  முக்கிய லட்சியமாக இருக்கும். எந்த நொடிய்ல் இருந்து இந்தியா இந்த ஆட்டத்தை காப்பாற்றுவது பற்றி யோசிக்க ஆரம்பிக்குமோ அப்போதில் இருந்து அவர்கள் ஏறுவது ஒரு வழுக்கு மரமாகத் தான் இருக்கும்.
இப்படியும் யோசிக்கலாம். இயற்கை விதியின் படி யார் இந்த ஆட்டத்தை வெல்ல தகுதியானவர்கள். இதுவரை குறைவான தவறுகளே செய்துள்ள தென்னாப்பிரிக்கர்கள் தாம். ஆக இந்தியா கடிகார முள்ளை திருப்பி விட முயலாமல் இந்த நிலைமை சகஜமாக நடைமுறை ஞானத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். மட்டையாளர்கள் ஆளுக்கு சதமோ அரை சதமோ அடித்து தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். அடுத்து வரும் ஆட்டங்களுக்கு தம்மை தயாரிக்க முயலவேண்டும். ஒரு வேளை இந்த ஆட்டத்தை காப்பாற்ற முடிந்தால் அது ஒரு உபரி வெகுமதி மட்டும் தான். இரண்டு நாள் ஆட்ட வரலாற்றின் பாரத்துடன் ஆடினால் இந்தியாவால் நாளை மதியம் வரை கூட தாக்குப் பிடிக்க முடியாது.
தென்னாப்ப்ரிக்கா இரண்டு தவறுகளை செய்கிறது. ஒன்று அவர்கள் கறுப்பின சலுகை தேர்வு. இது சமீபமாக பெரும் சர்ச்சையை தோற்றுவித்து வந்த ஒன்று. தென்னாப்பிரிக்க அணியில் தகுதியை மீறி கறுப்பர்களுக்கு ஒதுக்கீட்டை வழங்க அரசு நெருக்கடி கொடுக்கிறது. இது தற்போது ஒரு மறைமுக கொள்கையாக உள்ளது. டூமினி நீக்கப்பட்டால் அந்த இடத்திற்கு ஆஷ்வல் பிரின்ஸ் எனும் மற்றொரு கறுப்பர் வருகிறார். நித்தினி எனும் வேக வீச்சாளர் ஓய்வு பெற்ற பின் அந்த இடத்திற்கு சொட்சொபெ எனும் மற்றொரு சுமார் ரக கறுப்பரான வீச்சாளர் கொண்டு வரப்படுகிறார். அவரால் நடந்து வரும் ஆட்டத்தில் எந்தவொரு பாதிப்பையும் மட்டையாளர்கள் மீது ஏற்படுத்த முடியவில்லை. வேடிக்கை என்னவென்றால் அவர் பந்து வீசும் முன்னரே அவர் மொத்தமாக இந்த ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளாவது எடுக்க வேண்டும் என்று அணியில் 11 பேருமே பிரயத்தனப்படுகிறார்கள். அணித்தலைவர் ஸ்மித்துக்கும் சொட்சொபேவின் வெற்றி ஒரு தனி அழுத்தமாகவே உள்ளது. அவர் அணியின் வெற்றிக்கு நிகராக சொட்சொபேவின் நிலைப்பையும் வேண்டுகிறார். அந்த அழகான பெயரைத் தவிர சொட்சொபேவிடம் விசேசமாக ஒன்றும் இல்லை. முன்பு குரோன்யேவின் குற்றமன்னிப்பு பரபரப்பில் சில தலைகள் உருண்ட போதும் கிப்ஸ் இந்த இன ஒதுக்கீட்டு பரிவினாலே அணியில் பாதுகாக்கப்பட்டார். தென்னாப்ப்ரிக்கா போன்ற ஒரு சீரிய அணியில் அரசியல் தான் ஒரே கோளாறு. ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதும் இதன் அடிப்படையில் அணித்தலைமையும் தேர்வாளர்களும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி சுமப்பதும் மாபெரும் கிரிக்கெட் வேடிக்கைகளில் ஒன்று. சமூக அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் கிரிக்கெட்டில் நிச்சயம் இல்லை. கிரிக்கெட்டில் ஒரு நிறபேதம் மட்டும் தான். அது பந்தின் நிறம்.
Read More

Thursday 16 December 2010

தென்னாப்பிரிக்க டெஸ்டு தொடர் அம்பலமாக்குவது என்ன?



இந்திய அணி உள்ளூர பீதியுற்று இருக்கிறது என்பதைத் தான். 16 டிடம்பர் 2010 தொடங்கிய டெஸ்டு ஆட்டத்தின் முதல் நாளில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு எந்தளவுக்கு ஆதரவு அளித்தது என்பது விவாதத்துக்கு உரியது. ஸ்விங் குறைவாகவே இருந்தது.
மழைக்கால இங்கிலாந்து ஆடுதளங்களுடன் ஒப்பிட்டால் சூப்பர்ஸ்போர்ட் பார்க்க் ஆடுதளத்தின் குணாதசியம் விளங்கும். இந்த ஆடுதளம் சற்று மெதுவாக ஆனால் எகிறக் கூடியதாக இருந்தது. தென்னாப்பிரிக்க வீச்சாளர்கள் குறைவாகவே ஸ்விங் செய்தார்கள். அவர்களது ஸ்விங் அல்ல, வேகமும் பந்தின் உயரமுமே மட்டையாளர்களை அடிப்படையில் அச்சுறுத்தியவை. இந்திய மட்டையாளர்கள் உயரப்பந்தை சந்திக்கும் கச்சிதமான தொழில்நுட்பம் கொண்டவர்கள் அல்ல. இது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் உயரப்பந்தை ஆட ஒருவர் ரிக்கி பாண்டிங்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றில் உயரப்பந்தை ஆடுவதில் அசௌகரியம் இல்லை என்று வீச்சாளருக்கு உணர்த்தும் படியாக தடுப்பாட்டம் ஆட வேண்டும். அல்லாவிட்டால் உயரப்பந்துகளை அடித்தாடி அதிக ஓட்டங்கள் எடுக்க வேண்டும். முதல் நாளில் தோனி இதைத் தான் செய்தார். சமன் செய்ய அவர் கத்திரிக் கோல் போல காலை தூக்க வேண்டி வந்தாலும் கூட உயரப் பந்துக்கு அவர் அதிரடியாய் ஓட்டங்கள் எடுக்க ஆரம்பித்ததும் தென்னாப்பிரிக்கர்களின் வீச்சு நீளம் முழுமையான நீளமாக மாறியது. மாறாக திராவிடும் காம்பிரும் லக்‌ஷ்மணும் ஆடுதளத்தில் ஆழமாக நின்று உயரப் பந்தை சமாளிக்க முயன்றனர். குறிப்பாக ஊக்கமற்ற தடுப்பாட்டம் இவர்களின் அச்சத்தை பட்டவர்த்தமாக்கியது. இது பந்து வீச்சாளர்களை ஊக்குவித்தது.

அச்சம் ஆட்டக்காரர்களுக்கு பொதுவானது என்றாலும் தந்திரம் அதை வெளிக்காட்டாமல் இருப்பது தான். இதனாலே கிரிக்கெட்டை ஒரு உளவியல் ஆட்டம் என்கிறார்கள். உயரப்பந்துக்கு தகுந்த பதிலை தர முடியாவிட்டால் இந்த தொடரில் இந்தியாவால் ஒரு இன்னிங்சில் நூறு ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடியாது. சங்கீத மேடையில் ஊமைகளுக்கு என்ன இடம்?
Read More

விடியலுக்கு முன்னான மழை

ஜான் பிராண்டி
John Brandi

காற்றிறங்கின டயர்
பசுக்கள் வெறுமனே நிற்கும் பிறகு மெல்ல
திரும்பும் நோக்க
flat tire
the cows just stand and slowly
turn to look
மந்தார பிற்பகல
ஒரு வெண்-கிறைசாந்தெமப் பூ
ஒன்று மட்டும்
cloudy afternoon
a white chrysanthemum
just one
 
சர்ச்சைக்குப் பிறகு
-- ஒரு கார்டீனியூ இதழ்
மேசையில்
After the argument
-a gardenia petal
on the table.

விடியலுக்கு முன்னான
மழையில்: நத்தைகள்
இடம்பெயரும்
In the rain
before the dawn: snails
migrating

Read More

Tuesday 14 December 2010

நீட்சே: அறிமுகக் குறிப்புகள் 7


ஷோப்பென்ஹெர்: உள்ளிருந்து இயக்கும் ஆற்றல் - 1

 
ஒரு புத்தகத்தாலோ அல்லது மனிதராலோ தூண்டப்படும் முன் ஒரு மனிதனின் தேடல் எங்கிருக்கிறது? ஒரு மனிதனின் தேடல் அவனது நீண்ட சிந்தனை மரபின் அவனறியாத ஒரு தொடர்ச்சியா?
ஷோப்பென்ஹெர் (1788-1860) ஒரு ஜெர்மானிய தத்துவஞானி. இவரது சோர்வுவாத கோட்பாடு தத்துவவரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஷோப்பென்ஹெரின் ஊக்க கோட்பாட்டை நாம் இவ்வாறு எளிதாக விளக்கலாம். ஷோப்பென்ஹெர் மனிதர்கள் அனைவரையும் ஒரு பிரபஞ்ச ஊக்க ஆற்றல் இயக்குவதாக கூறினார். இந்த ஊக்க ஆற்றல் நன்மை தீமைகள் கடந்தது. இதற்கு மனிதனின் ஷேமம் பற்றின எந்த கவலையும் இல்லை. மனித வாழ்க்கை துயர் மிகுந்ததாகவும் அசட்டுத்தனமாகவும் இருப்பதற்கு இந்த துஷ்ட ஊக்க ஆற்றலே காரணம். ஷோப்பென்ஹெர் ஒரு தனிப்பட்ட அசல் சிந்தனையாளராகவும், வரலாற்றின் பெரும் சிந்தனையாளர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை தீவிரமாக பாதித்த வகையிலும் மிகவும் குறிப்பிடத்தக்கவர். ஷோப்பன்ஹெரால் பாதிக்கப்பட்டவர்களில் நீட்சே, வாக்னர், பிராயிட், தல்ஸ்தாய், ஜேம்ஸ்ஜாய்ஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். தல்ஸ்தாய் தனது போரும் வாழ்வும் நாவலில் போரின் வெற்றி தோல்வி விளக்க முடியாத ஒரு ஆற்றலால் உருப்பெறுவதாக அவதானிப்பார். போர் எந்தளவு துல்லியமாக கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறதோ அந்தளவு அது அத்திட்டத்தின் எல்லைகளை வெகு இயல்பாக தாண்டி தனதான ஒரு உள்ளுணர்வுடன் செயல்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரஷ்ய படையின் தலைமை தளபதியான ஒரு முதியவர் ஒரு தீவிரமான யுத்த தந்திர விவாதத்தின் போது நன்றாக தூங்கி விடுவதை இங்கு நினைவுபடுத்தலாம். என்னதான் வழிநடத்தினாலும் போர் அதன் போக்கிலே வழிநடக்கும் என்று அம்முதிய தளபதி நம்புகிறார். இந்த அவதானிப்பை தல்ஸ்தாய் ஷோப்பென்ஹெரின் பாதிப்பிலே உருவாக்குகிறார். பிராயிடின் நனவிலி கோட்பாடு நாம் நன்கு அறிந்ததே. சுருக்கமாக பிராயிட் சொல்லும் நனவிலி நமது அடிமனம். அமைதியான எரிமலையின் உள்ளார்ந்த கொதி நிலை. இதை பிராயிட் ஒரு காமப் பெருங்கடலாக கருதினார். இதன் சீற்றங்கள் மீது நாவாய்கள் நாம். இந்த கோட்பாட்டில் ஷோப்பென்ஹெரின் நிழல் அசைவதை நாம் கவனிக்க முடியும். ஷோப்பென்ஹெர் தத்துவப் பரப்பில் ஒரு புதிய பாதையை உருவாக்கினவர் மட்டுமல்ல அவர் கூர்மையும் பகடியும் பளிச்சிடும் எழுத்தாளரும் கூட. நீட்சேவைப் போன்று தனது ஆளுமையின் மையத்தில் இருந்து சிந்தனைகளை தோற்றுவித்தவர். ஆனால் ஷோப்பென்ஹெரின் ஆளுமையில் ஒரு ஆழமான முரண்பாடு இருந்ததாக தத்துவ விமர்சகர் போல் ஸ்டுரேதெர்ன் கருதுகிறார். பிராயிடிய மொழியில் இது அவரது id மற்றும் super-egoவுக்கு இடையிலான உரசல் என்று ஸ்டுராதெர்ன் ஊகிக்கிறார். காரணம் ஷோப்பென்ஹெரின் சோர்வுவாத தத்துவ கோட்பாடுகளுக்கு அவரது வாழ்க்கை முறை மற்றும் மனப்போக்குக்கும் குறிப்பிடும்படியான வேறுபாடுகள் இருந்தன. வாழ்வு அடிப்படையில் தீமையானது என்றும், இத்தீமையில் இருந்து விடுபட ஒருவர் இச்சைகளில் விலகி ஒரு துறவியின் விடுதலை நிலையை அடைய வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் நிஜவாழ்வில் ஷோப்பென்ஹெர் ஒரு மைனராகவே வாழ்ந்தார். ஒருபக்கம் உணவும், காமமும் அவரது லௌகீக இலக்குகளாக இருந்தன. மற்றொரு பக்கம் அவர் கலை, இலக்கிய ஈடுபாடுகளின் வழி தனது ஆன்மீக விடுபடலை நாடினார். நீட்சேயையும் வாக்னரையும் போன்று தனது படைப்புக்கு சமமாகவே வாழ்க்கையின் விபரீதங்களால் அறியப்படுபவரானார்.

1819-இல் நீட்சே ஒரு பழைய புத்தகக் கடையில் எதேச்சையாக ஷோப்பென்ஹெரின் உலகம் எனும் ஊக்க ஆற்றல் மற்றும் கருத்து (The World as Will and Idea) என்னும் நூலை கண்டெடுத்து அங்கேயே சில பக்கங்கள் படித்து பார்க்கிறார். நீட்சே எளிதில் எந்த புத்தகத்தையும் வாங்கக் கூடியவரல்ல. ஆனால் அந்த சிறு நூல், அதிகம் அறியப்படாத அந்நூல், அவரது அவநம்பிக்கையை கடந்து பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. வீட்டுக்கு போன பின் சோபாவில் படுத்து ஒரே மூச்சில் மொத்த நூலையும் படித்து விடுகிறார். நீட்சே ஷோப்பென்ஹெரால் ஆட்கொள்ளப் படுகிறார். நீட்சே அவரது கருத்துக்களை மட்டுமல்ல ஆசான்களையும் எதேச்சையாக கண்டுபிடித்தவர் ஆகிறார். நீட்சேவின் பிரபலமான அதிகாரத்துக்கான ஊக்க ஆற்றல் என்ற கருத்தாக்கம் ஷோப்பன்ஹெரின் கருத்தாக்கத்தில் இருந்தே துவக்கம் கொள்கிறது. இந்த சிந்தனைத் தாவல் மட்டுமல்ல ஷோப்பென்ஹெருக்கு சற்று பின்னால் சென்று தத்துவ மரபில் நீட்சேயியத்தின் முளை எங்கு உள்ளது என்று தேடுவதும் அதிக வெளிச்சம் தருவது. ஆக நாம் ஷோப்பன்ஹெரின் தூரத்து தத்துவ உறவுக்காரர்களின் கண்டுபிடிப்புகளை சுருக்கமாக அறிமுகம் செய்யலாம்.

பிளேட்டோவில் இருந்து காண்ட் வரை
தத்துவம் தனது பரப்பில் உண்மை என்ன என்ற கேள்வியையே மீண்டும் மீண்டும் வரைந்து பார்த்துள்ளது. வெவ்வேறு காலகட்டங்களில் இதற்கு வெவ்வேறு பதில்கள் காணப்பட்டுள்ளன. கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ நாம் உண்மை என்று அறிவன நம் புலன்களால் ஏற்படும் ஒரு தோற்றம் மட்டுமே என்று நம்பினார். அவர் அறிவை அசல் உண்மை, பிரதிநுத்துவ உண்மை என்று இருவாறாக பிரித்தார். மனிதனின் உலகம் பிரதிநுத்துவ உண்மையாலே உருவாகிறது. பொய்யான உலகம் யாருக்கு தேவை? நமது சமதளமான வாழ்வில் இருந்து கைக்கு எட்டிய உலகம் தாண்டிய ஒரு உன்னத உண்மைக்காகத் தானே மனம் ஏங்குகிறது! நகல்களின் திரைக்கு அப்பால் அசல் எங்குள்ளது? அதை எப்படி கண்டடைவது? பிளேட்டோ இதற்கு பகுத்தறிவை ஒரு கருவியாக முவைக்கிறார். இது எளிய கறுப்பு சட்டை பகுத்தறிவு அல்ல. தத்துவத்தின் பகுத்தறிவு கூர்மையான தர்க்கத்தால் வழிநடத்தப்படுகிறது. பிளேட்டோவின் இருள்குகை கதை அவரது மேற்சொன்ன இருபொருள் வாதத்துக்கு (அசல்-பிரதுநுத்துவ உண்மைகள்) பிரபலமான உதாரணம். இந்த கதைப்படி உலகம் ஒரு பெரும் குகை. அங்கு சிறைப்பட்டுள்ள மனிதர்கள் இருளை மட்டுமே அறிந்தவர்கள். அவர்களுக்கு முன் ஒரு வெற்று சுவர். பின்னால் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. நெருப்பின் முன் அசையும் பொருட்களின் நிழல்கள் முன்னுள்ள சுவரில் விழுகின்றன. சிறைப்பட்ட குகைவாசிகள் நெருப்பையோ அசையும் பொருட்களையோ பார்ப்பதில்லை. அவர்கள் நிழலை மட்டுமே கண்டு அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். ஒரு தத்துவஞானி இந்த குகையில் இருந்து வெளியே வந்து நிழல் தோற்றங்கள் உண்மை அல்ல என்று கண்டறிபவனாக இருப்பான் என்றார் பிளேட்டோ.
அடுத்து நாம் ஒரு தாவு தாவி ரெனெ டெகார்டே எனும் பிரஞ்சு சிந்தனையாளருக்கு செல்லலாம். நான் சிந்திக்கிறேன்; அதனால் நான் இருக்கிறேன்(I think therefore I am) என்ற மேற்கோளுக்காக மிக பிரபலமானவர் இவர். இந்த உலகம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இதை படித்து கொண்டிருக்கும் நீங்கள் இந்நொடி இறந்து போனால் நான் எழுதியுள்ளது இக்கடைசி எழுத்துவரை இல்லாமல் போய் விடுமா? அதாவது நீங்கள் வாசிப்பதனால் தான் என் எழுத்தும், அதனால் நானும் இருக்கிறோமா? இதற்கு ஆம், இல்லை என்று இருவிதமாய் பதில் சொல்லலாம். ரெனெ டெகார்டே ஆம் என்பார். நீங்கள் வாழும் உலகம் புலன்களால் தான் தெரிய வருகிறது; அதனால் அது புலன்களால் கட்டுப்படுத்தப்பட்டது ஆகிறது. டெகார்டே இதை திருப்பிப் போட்டு நான் பார்த்து கேட்டு முகர்ந்து தொட்டு உணரும் இந்த உலகம் நிஜம் தான். ஏனென்றால் அது என்னில் இருந்து ஆரம்பிக்கிறது. நான் சிந்தித்துக் கொண்டு இருக்கும் வரை அதுவும் இருக்கிறது. என் சுயம் உலகை நிர்மாணிக்கிறது என்றார். ஆக டெகார்டே பிளேட்டோவின் இருபொருள்வாதத்துக்கு (dualism) வேறொரு வடிவம் அளிக்கிறார். இரண்டே உண்மைகள்/இருப்புகள் தாம். ஒன்று நான் என்கிற சுயம். வெறும் சுயம் அல்ல, சிந்திக்கும் சுயம். மற்றொன்று, இதன் நீட்சியான பொருள். அதுவே வெளியே தெரியும் உலகம்.
பதினேழாவது நூற்றாண்டை சேர்ந்த தத்துவவியலாளர் பரூக் ஸ்பினோசா ஒரு டச்சுக்காரர். அவர் டெகார்டேவின் இருபொருள்வாதத்தை பாதி மட்டுமே ஒத்துக் கொள்கிறார். மீதிப் பாதியில் கடவுளை சேர்த்துக் கொள்கிறார். ஆக சிந்திக்கும் சுயமும் அதன் நீட்சியான சுயமும் கடவுளில் இருந்தே ஏற்படுகின்றன. இது அனைத்திறைக் கொள்கை (pantheism) எனப்படுகிறது.
(தொடரும்)
Read More

Monday 6 December 2010

நந்தலாலா: உருவகக் குப்பையில் ஒரு மாணிக்கம்



 செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் எப்படி தமிழின் முதல் மாயஎதார்த்த படமோ நந்தலாலாவும் தமிழின் முதல் உருவகப் படமே. உருவகம் மிஷ்கினின் சினிமா மொழியாக என்றும் இருந்துள்ளது. காட்சியமைப்பில் இருந்து நடிப்பு வரை உருவகத்தன்மையை கொண்டு வர அவர் எதார்த்தத்தை கத்தரிக்கிறார். சித்திரம் பேசுதடி, “அஞ்சாதே ஆகிய படங்களில் இருந்து நாம் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் தர முடியும். இதில் ஒரு அசட்டை இருப்பதாக தெரியலாம். மிகையான பாவனை என்று சந்தேகம் எழலாம். காரணம் தமிழ் சினிமாவுக்கு அப்படி ஒரு மரபு இல்லை. இன்று சத்யஜித் ரேயை கல்லறையில் இருந்து சுலபமாக தட்டி எழுப்பி தமிழில் ஒரு படம் பண்ண வைக்க முடியும். யாருக்கும் முரண்பாடாக இராது. மாறாக அது நமக்கு நிச்சயம் நவீனமாகவும் இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் தமிழின் எதார்த்த சினிமா மேலும் சற்று எதார்த்த்த்தை, பண்பாட்டுக் கூறுகளை தொழில்நுட்ப மெருகை சேர்த்துக் கொண்டுள்ளது. அவ்வளவே. மொழிதலின் பல்வேறு சாத்தியங்களை நாம் இன்னும் முயலவில்லை. தத்துவம், அரசியல், சமூகவியல் என்று எந்த தளங்களையும் தொடவில்லை. தமிழ் சினிமா இதுவரை என்ன பேசி வருகிறது? மூன்றாக நமது சினிமாவின் பேசுபொருளை வகுக்கலாம். காதல், வன்மம் போன்ற உணர்ச்சிகளின் நாடகியம்; குடும்பச் சிக்கல்கள் எழுப்பும் எளிய கேள்விகள்; மற்றும் ஒழுக்க பிரச்சனைகள். அதாவது காதல் அடிதடி படங்கள், குடும்பப் படங்கள் மற்றும் சமூக சீர்திருத்தப் படங்கள். நமது மாபெரும் இயக்குநர்களை அநேகமாக இந்த முட்டை ஓட்டுக்குள் அடக்கி விடலாம். இந்த ஓட்டின் மேல் நாம் தற்போது மிகச்சில விரிசல்களை காண்கிறோம். அதில் ஒன்று நந்தலாலா.

முதல் இரு படங்களில் மிஷ்கினின் இந்த திரைமொழியை யாரும் அதிக கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அவை மையநீரோட்ட படங்கள் என்பதால் மிஷ்கின் மேற்சொன்ன பகுப்புகளில், சற்றே கைகால் வெளியே நீட்டிக் கொண்டிருந்தாலும், அடங்கும்படியாகவே எதார்த்தமான கதைத் தளத்தில் உருவாக்கி இருந்தார். இதுவரை மிஷ்கினுக்கு ஒரு தனித்துவத்தை பெற்றுத் தந்த உருவக மொழி இப்போது நந்தலாலாவில் ஒரு சாராரிடம் எதிர்ப்பையும் நிராகரிப்பையும் ஏற்படுத்தி உள்ளது..மற்றொரு சாராருக்கு இப்படம் உணர்ச்சிகரமாக பங்கேற்க அனுமதிக்க இல்லை என்ற புகார் உள்ளது. நாம் இங்கு கவனிக்க வேண்டியது மிஷ்கின் தமிழின் முப்பகுப்பு இயக்குநர்களில் ஒருவர் அல்ல, அவர் ஒரு எதார்த்த கதை சொல்லி அல்ல என்பது.

உருவகம் ஒரு உயர்ந்த கருவி அல்ல என்று நமக்குத் தெரியும். அதை விட குறியீடு மேலானது. குறியீட்டை விட படிமம் சிறந்தது. ஆனால் உருவகங்களால் பேசுவது ஒருவரின் மொழி சுதந்திரம். கோணங்கியும், எஸ்.ராவும், மேலும் பலரும் நூற்றுக்கணக்கான உருவகக் கதைகளை எழுதியுள்ளார்கள். சினிமாவில் ரேயும், குரசேவாவும், கீஸ்லாவஸ்கியும் பல உருவகங்களை பிரேமுக்குள் வைப்பதை காண்கிறோம். உதாரணமாக Three Colors Whiteஇல் மையபாத்திரம் ஒரு சூட்கேசுக்குள் அமர்ந்து விமானத்தில் வருகிறான். மற்றொரு காட்சியில் அவன் படிக்கட்டில் ஏறும் போது வானத்து புறாக்களை வியக்கிறான். அவை அவன் மீது எச்சமிடுகின்றன. இங்கு சூட்கேஸ், புறா, வானம் எல்லாமே கீஸ்லாவஸ்கியால் உருவகமாக உத்தேசிக்கப்படுகின்றன. இதை அவர் ஒரு பேட்டியில் நேரடியாக சொல்லுகிறார். உருவகமாக சொல்ல உத்தேசிப்பதை அவர் ஏன் எதார்த்த காட்சி மூலம் சொல்லவில்லை?. ஏன் என்றால அது அவரது மொழிதல் முறை.  உருவக மொழிக்கு அதற்கான வலிமையும் பலவீனமும் உண்டு. இந்த இரண்டுடனும் நாம் மிஷ்கினின் திரைமொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன்? ஏனென்றால் மிஷ்கின் தனது கறுப்புக் கண்ணாடியை நமக்கு அணிவித்து தமிழின் இதுவரையிலான முப்பகுப்பு சினிமாக்களில் தொடாத ஒரு தளத்தை காட்டுகிறார். அது தேடல். ஏன் வாழ்க்கை வலி நிரம்பியதாக உள்ளது என்ற தேடல். மனித துக்கத்தின் விடை என்ன என்கிற தேடல்.
இங்கு இதே போன்ற தேடலை முன்னெடுத்த வேறு இரண்டு இயக்குநர்களை நாம் இந்த விவாதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் பாலா மற்றும் செல்வராகவன். இவர்கள் இருவரும் மிஷ்கினைப் போன்று விளிம்புநிலை வாழ்வின் தளத்தில் நின்று துக்கத்தின் அடிப்படையை வெவ்வேறு விதமாய் தேடினவர்கள். பாலாவுக்கு இறையியலும் செல்வராகவனுக்கு உளவியலும் இந்த தத்துவத் தேடலுக்கு வெவ்வேறு நிறங்கள் அளித்தன. பாலா அழிவின் மூலமாக படைப்பாக்கம் செய்யும் அழிவுக் கடவுளை இந்த துக்கத்தின் விடையாக முன்வைத்தார். பாலாவின் படங்களில் அழிவு நிறைவைத் தருகிறது. இதை மேலும் ஆழமாக அணுக அவர் இறுதியாக ஒரு முழு உருவகப் படத்தை எடுத்தது நமக்கு நினைவிருக்கும். அதில் ஹீரோ ஹீரோயினை தின்று துக்கத்தை முடித்து விடுவார். எதார்த்த படம் பார்த்து பழகின நாம் ஊனமுற்றவளை கொல்வது ஒரு பாசிசம் என்று நினைத்தோம். பாலாவின் மிகையான உருவகமும் அதற்கு நாம் செய்த பாசிச எதிர்வினையும் சமமாக வேடிக்கையானவை. செல்வராகவனின் மையபாத்திரங்கள் தொடர்ந்து மீட்க முடியாத ஒரு இழப்பை அல்லது முழுமையின்மையை எதிர்கொள்ள பயணிப்பவர்கள். அவரது சமீபத்திய படமான ஆயிரத்தில் ஒருவனில் இது ஒரு வரலாற்று இழப்பாக நிறைவடைந்தது. இப்படமும் எதார்த்த படம் அல்ல. மாயஎதார்த்த மொழி என்பதால் செல்வராகவனுக்கு பாலா மற்றும் மிஷ்கினை விட அதிக சுதந்திரம் இருந்தது. அவர் இப்படத்தில் சில அற்புதமான படிமங்களை உருவாக்கினார். இவர்களைத் தொடர்ந்து இந்த வரிசையில் தான் மிஷ்கினின் நந்தலாலாவை பார்க்க வேண்டும். மனிதத் துயரத்திற்கு விடையாக சுடலை நெருப்பை, காலத்தின் முன்னான கையாலாகத்தனத்தை சொல்வதைக் கடந்து மிஷ்கின் நந்தலாலாவில் களங்கமற்ற அன்பை முன்வைக்கிறார். சுவாரஸ்யமாக செல்வராகவன் மற்றும் மிஷ்கினிடம் மேற்கத்திய பாதிப்பை அதிகமும், பாலாவிடம் மரபான இந்தியத்தன்மையையும் பார்க்க முடிகிறது. உதாரணமாக, செல்வா மற்றும் மிஷ்கினின் காட்சிகளில் கர்த்தரை சுமந்த மேரிமாதா அடிக்கடி வரும் உருவகம். இதே காரணத்தினாலே பாலாவை விட மற்ற இருவரிடமும் நவீன நுண்ணுணர்வு அதிகமாக இருக்கும். இந்த மூவரின் எதார்த்தமற்ற இறுதிப் படங்கள் அவை பயணித்த புதிய தடங்கள் காரணமாகவே முக்கியமானவை. நமக்கு சலிப்பாக, புரியாமல், வேரற்று தெரிந்தாலும் கூட நாம் கவனிக்க வேண்டியவை இந்த படங்கள். நந்தலாலாவின் பார்வை அனுபவத்தில் உருவகங்கள் இடறிக் கொண்டே சென்றாலும் அது வகுக்கும் பாதையில் ஒரு எட்டு நடந்து போய் வருவது நல்லது. நந்தலாலா என்ன சொல்ல வருகிறது? நந்தலாலாவை நாம் எப்படி பார்க்க வேண்டும்?

முழுமையான உருவக குறியீட்டுப் படங்கள் ஒரு வினோதமான கதையமைப்பை கொண்டிருத்தல் உசிதம். இது கதை வேறொன்றை சொல்ல வருகிறது என்று பார்வையாளனை தயார்படுத்தி விடும். Clockwork Orange ஒரு நல்ல உதாரணம். ஆனால் நந்தலாலா தாய்ப்பாசம் பற்றின படமாக தோற்றம் அளிக்கிறது. இருவர் சேர்ந்து அம்மாவைத் தேடி பயணிக்கிறார்கள். சிறுவன் அம்மாவை பற்றி நேர்மறையான எண்ணங்களுடன் செல்கிறான். இறுதியில் அவன் எதிர்மறையான அனுபவத்தை அடைகிறான். வளர்ந்தவன் அம்மாவை பற்றி எதிர்மறையான எண்ணத்துடன் சென்று நேர்மறையான மனநிலையை அடைகிறான். இவர்களின் இலக்குகளான ஊர்கள் அன்னை வயல், தாய்வாசல் போன்ற பெயர்கள் கொண்டுள்ளன. படத்தில் தொடர்ந்து அம்மா நினைவுபடுத்தப்படுகிறாள். ஆக ஒரு நெகிழ்ச்சியான தாய்ப்பாச படத்தை குறைந்த பட்சம் தாய்மை பற்றின விளக்கத்தை அல்லது இந்த உறவின் பரிணாமத்தை எதிர்பார்த்து ஒரு பார்வையாளன் தன் விழிகளை திறந்து வைத்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அம்மா தொடர்ந்து தேடப்படுகிறாளே ஒழிய அம்மா குறித்த நினைவுகளோ, சம்பவங்களோ, நெகிழ்ச்சியான நினைவு கூறல்களோ படத்தில் இல்லை. அம்மாவை விட படத்தின் பரப்பை தேடுபவர்களும் பயணிப்பவர்களும் பாதைகளுமே ஆக்கிரமிக்கின்றன. ஆக இப்படத்தில் பார்வையாளனின் உணர்வுசார் பங்கெடுப்பை தக்கவைப்பது ஒரு சவால். அவன் இவர்கள் எல்லாம் ஏன், எங்கு செல்கிறார்கள், என் அன்றாட வாழ்வில் நான் இப்படி எல்லாம் செய்வதில்லையே என்று கேட்கிறான். அன்றாட வாழ்வை புரிவதற்கான பல முக்கியமான தகவல்களை இயக்குநர் வேண்டுமென்றே கத்திரித்து விடுகிறார். உதாரணமாக அகியின் அம்மா யார், அப்பா யார், என்ன பொருளாதார, நிலவியல், சாதிப் பின்னணி என்று ஒவ்வொன்றாக கத்தரிக்கப்பட்டு வால் ஒட்ட வெட்டப்படுகிறது. எதார்த்த பார்வையாளன் இயல்பாகவே இப்படியான ஒரு கதைத்தளத்தில் தத்தளித்து போகிறான். மிஷ்கின் ஏன் இப்படி செய்கிறார்? இது ஒரு குடியிருந்த கோவில் அல்ல என்று வலியுறுத்தத் தான். இந்த வலியுறுத்தலின் விளைவுகள் என்பவை வேறு. நாம் உத்தேசத்தை கவனிக்க வேண்டும். இணையத்தில் எழுதப்படும் சில விமர்சனங்களில் சொல்வது போல் மிஷ்கின் தன்னை ஒரு மேதாவியாக காட்ட முயல்வதாக நான் நம்பவில்லை. ஒரு வினோதமான குறியீட்டுப் படத்தில் இந்த தத்தளிப்புகள் நிகழாது. தொடர்ந்து வியப்பை உருவாக்கியே இயக்குநர் உங்களை படத்தின் ஓட்டத்தோடு பங்கேற்க வைத்து விடுவார். நந்தலாலா எதார்த்தத்துக்கும் விநோதத்துக்கும் இடைப்பட்ட படம். அது இயல்பான வாழ்வின் நம்பகத்தன்மையை கத்தரித்து விட்டு அதே இயல்பு வாழ்வின் எளிய அற்புதங்களை காட்ட முயல்கிறது. அற்புதங்கள் மூலம் இரு மனிதர்கள் முதிர்ச்சி அடைவதை சொல்லும் இந்த coming-of-age படம் அதை மிகை எதார்த்ததின் மூலம் அல்ல எளிய அன்றாட வாழ்க்கை தருணங்களின் மூலமே செய்கிறது; படித்த அறிவாளிகளை அல்ல எளிய படிப்பறிவற்ற, குற்றங்களில் வழுக்கிய மனிதர்களையே திசைகாட்டிகளாக அல்லது மீட்பர்களாக காட்டுகிறது. கதைகூறலில் உள்ள இந்த சின்ன முரண்பாடு தான் படத்தை சற்று குழப்பமானதாக, சில இடஙகளில் உணர்வுரீதியாக எட்ட முடியாததாக ஆக்குகிறது. கிக்குஜீரோவில் நம்ப முடியாத காட்சிகளை இயக்குநர் ஒரு குழந்தையின் பார்வையில் இருந்து நாட்குறிப்பில் இருந்து சொல்வதால் தப்பித்து விடுகிறார். இப்படியான சுதந்திரத்தை மிஷ்கின் எடுத்துக் கொள்வதில்லை.அவரது கதைக்களன் ஒரு வீடியோகேமொ, கனவுநிலையோ, குழந்தையின் கற்பனை கலந்த நாட்குறிப்போ அல்ல. தரையில் இருந்து மேலெழுந்து மிதக்கும் எதார்த்த களன். இதற்கு உலகசினிமாவில் முன்னோடிகள் உண்டு என்றாலும் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவது தான். ஆனால் இது ஒரு எளிய தடை என்பது விளங்கினால் நமக்கு இப்படம் உத்தேசிக்கும் மனவெழுச்சிகளை அடைய முடியும்.


நந்தலாலாவில் மைய பாத்திரங்களின் முதல் பிரச்சனை தனிமை. இந்த தனிமை ஒரு தாயின் கைவிடப்படலினால் மட்டும் விளைவதல்ல. அகி, பாஸ்கர் மணி தங்கள் பயணத்தில் சந்திக்கும் லாரி ஓட்டுநர், ஊனன், விபச்சாரி உள்ளிட்ட சிறுபாத்திரங்களும் அவர்கள் தேடிச் சொல்லும் அம்மாக்களும் பல்வேறு பட்ட கைவிடல்களுக்கு உள்ளாகி தனிமையில் இருக்கிறார்கள். அங்கீகாரமின்மையும் ஏமாற்றமும் இத்தனிமையான நிலைமையின் பரிமாணங்கள். எல்லாரும் வெவ்வேறு கட்டங்களில் கோபப்படுகிறார்கள். “ஏன் இப்படி வாழ நேர்கிறது என்று கேள்வி கேட்கிறார்கள். யாரிடம் கேட்கிறார்கள்? வாழ்க்கையிடம் தான். வாழ்வின் அநியாயம் மீது கோபம் கொள்கிறார்கள். இந்த கோபம் அதிகபட்சமாக பாஸ்கர்மணி எனும் பைத்தியக்காரனிடம் தான் வெளிப்படுகிறது. அவனே கோபத்தை முதலில் ஏந்திச் செல்பவன். ஆனால் இறுதியாகவே அவன் அங்கு சென்றடைகிறான். அவனே கடைசியில் அதிக நிதானம் பெறுபவனாகவும் காட்டப்படுகிறான். இது முக்கியம். யார் மிக அதிக வறுமை கொண்டு அல்லாடுகிறார்களோ அவர்கள் ஆத்மார்த்தமாய் செல்வந்தர் ஆகிறார்கள்.
இதை மனித துக்கம் பற்றின படம் என்றேன். இந்த துக்கம் எப்படி ஏற்படுகிறது. படத்தில் பாத்திரங்கள் துக்கவயப்பட்டு தான் அறிமுகம் ஆகிறார்கள். ஏன் அப்படி ஆகிறார்கள் என்பது காட்டப்படுவது இல்லை. மாறாக அது வசனங்களில் குறிப்புணர்த்தப்படுகிறது. பாஸ்கர் மணி “அம்மா கெட்டது என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறான். அகி அம்மா நல்லவள் என்று சொல்லி வருகிறான். விபசாரி வெள்ளை உடை அணிந்த, வெள்ளை பற்கள் கொண்ட கார் ஓட்டுநரால் ஆகர்சிக்கப்பட்டு இருண்மைக்குள் தள்ளப்படுகிறாள். இந்த நன்மை-தீமை இருமை தான் துக்கத்தின் ஆதாரமாக படத்தில் வருகிறது. இம்மூவரின் கோபமும் இந்த இருமை கண்ணாடி வழி வாழ்க்கையை பார்ப்பதனாலேயே ஏற்படுகிறது. ஏதோ ஒரு சந்தர்பத்தில் இந்த கண்ணாடியை எடுத்து விட்டு பார்க்க வாழ்க்கை அதன் முழுமையில் அவர்களுக்கு தென்படுகிறது. இந்த தரிசனம் அன்பின் வழியாகவே அவர்களுக்கு சாத்தியப்படுகிறது. விழுமியங்களுக்கும் லாபங்களுக்கும் உட்பட்ட அன்பு அல்ல இது. அப்பாற்பட்டது. சரி அன்புக்கா வாழ்வில் பஞ்சம். ஏதாவது ஒரு வடிவில் அன்பு நம்மோடு இருந்து கொண்டு தான் இருக்கிறது. பிறகு மேற்சொன்ன தரிசனம் ஏன் எளிதில் வாய்ப்பதில்லை?. ஏன் வாழ்க்கை துயரமாகவே கசப்பாகவே மூடப்பட்டதாகவே இருக்கிறது?

இதற்கான விடையை படம் பூரா மிஷ்கின் குறிப்புணர்த்திக் கொண்டே வருகிறார்: குழந்தைமை தரும் களங்கமின்மை. பைத்தியக்காரர்கள் குழந்தைமை கொண்டவர்களோ களங்கமற்றவர்களோ அல்ல. இங்கே நாம் தஸ்தாவஸ்கியின் பேதை நாவலை நாம் நினைவுகூரலாம். மிஷ்கினும் கிறிஸ்துவின் வடிவில் தான் பாஸ்கர் மணியை உத்தேசித்திருக்கிறார். சகமனிதர்களுக்கு துயரம் ஏற்படும் போது பாஸ்கர் மணி அங்கு மீட்பராக முயல்கிறான். அவன் அற்புதங்களை நிகழ்த்துவது இல்லை என்றாலும் அவனது காப்பாற்றும் படலங்கள் ஒரு அற்புதத்தின் எதிர்பாரா தன்மையுடன் தான் முடிகின்றன. தூய குழந்தைமை ஒரு லட்சிய வடிவம் மட்டும் தான். பைத்தியத்தை ஒரு நோயாக இங்கு மிஷ்கின் காட்டுவது இல்லை. மையத்தில் இருந்து ஒரு பிறழ்வு. அவ்வளவு தான். இந்த பிறழ்வு அவனிடம் குழந்தைத்தனமான விளையாட்டுத்தனத்துடன் வெளிப்படுகிறது. எல்லையற்ற அன்பை சாத்தியமாக்குகிறது. ஆக அன்புக்கு முதல் தடை குழந்தைமை இழந்து விடுவது. பித்துநிலைக்கு செல்லாமலே நம்மால் குழந்தைமையை தக்க வைத்துக் கொள்ள முடியும். கலையும், அன்பும், வாழ்வின் எளிய நுட்பமான திறப்புகளை கவனிப்பதும் இதை சாத்தியமாக்கும். மிஷ்கின் அன்பை எடுத்துக் கொள்கிறார். அன்பு நமக்கு பக்கத்தில் மட்டுமே இருக்கிறது. பறவையை, பட்டாம்பூச்சியை, மின்மின்மினியைப் போன்று. ஆனால் அது நம் உள்ளங்கையில் அமர்வது இல்லை. அன்பு இருந்தும் நாம் அன்பற்று இருக்கிறோம். ஏன்? அச்சத்தினால்.

பாஸ்கர் மணி எதையும் துணிந்து செய்பவனாக இருக்கிறான். சகமனிதருக்கு வலி ஏற்பட்டால் அதை துடைக்க முயல்கிறான். இந்த அன்பின் முயற்சிகள் அவனுக்கு எதிர்மறை பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. கற்பழிக்கப்படும் பெண்ணை காப்பாற்றுகிறான். அவள் அவனிடம் “என்ன சாதி என்று கேட்டு வெறுப்பேற்றுகிறாள். அடுத்து விபச்சாரம் நடக்கும் போது கற்பழிப்பென்று நினைத்து இறங்கி ஒரு கிராக்கியை துரத்தி விடுகிறான். அப்பெண் ஐம்பது ரூபாய் கூலியை இழக்கிறாள். “உன்னை யார் எம்.ஜி.ஆர் மாதிரி வந்து காப்பாத்த சொன்னது? என்று அவனை வைகிறாள். அடுத்த முறை அவளை நிஜமாகவே ஒரு கும்பல் கற்பழிக்க கடத்தும் போது பாஸ்கர் மணி உதவ தயங்குகிறான். ஆக மனிதர்கள் தங்கள் பிரதேசத்துக்குள் யாரையும் அன்பு செய்யக் கூட எளிதில் அனுமதிப்பதில்லை. நாம் நான்கு பக்கமும் மூடப்பட்டவர்களாக இருக்கிறோம். ஆனால் பாஸ்கர்மணி காற்றைப் போல் தடையற்றவனாக இருக்கிறான். அவன் மனிதர்களின் தனிப்பட்ட இடத்தில் கேட்காமலே நுழைகிறான். இதனால் பட இடங்களில் கடிந்து கொள்ளப்பட்டு, அடிக்கப்பட்டு, காயப்படுகிறான். பாஸ்கர் மணியின் சாகசங்கள் நமக்கு சற்று டான் குவிக்சோட்டை நினைவுபடுக்கின்றன. அவன் மனிதர்களிடம் இருந்து பொருட்களை எடுத்துக் கொள்கிறான். திருடுவதில்லை. மனிதர்களை அடிக்கிறான். ஆனால் அதில் வன்மம் இல்லை. காரணம் அவன் யாரையும் வேறாளாக நினைப்பது இல்லை. நமது தனிமனித இடத்துக்குள் அந்நிய பிரவேசத்தை நாம் தடுப்பதற்கு காரணம் அச்சம். ஆனால் பாஸ்கர் மணி தயக்கமின்றி உரிமை கொண்டாடுகிறான். அவனிடம் இருந்து இந்த தயக்கமற்ற அன்பை பிற பாத்திரங்கள் மெல்ல மெல்ல பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களின் சீர்திருத்தம்அப்படித்தான் நிகழ்கிறது. கிகுஜீரோவில் இருந்து நந்தலாலா வேறுபடும் இடம் இது. குழந்தைமையின் களங்கமின்மையும், தயக்கமின்மையும், அன்பின் பாலான மனிதர்களின் அச்சமும், அதில் இருந்து விடுபட்டு மேலெழுவதும் மிஷ்கினின் முக்கிய பங்களிப்புகள். 

ஜப்பானிய படத்தில் கிக்குஜிரோ தன் மனநலமற்ற தாயை தொலைவில் இருந்து பார்த்து விட்டு மௌனமாக திரும்பி விடுகிறான். மிஷ்கின் இக்காட்சியை நாடகீயமாக்குவதகாக பார்வையாளனுக்கு படலாம். மிஷ்கின் இங்கு மிகையாகவே ஆர்ப்பாட்டமாகவே நடிக்கிறார். சுருக்கமாக அல்லாமல் இத்தருணத்தை நீட்டுகிறார். இந்த குறையையும் மீறி இந்த காட்சி முக்கியமானது தான். பாஸ்கர்மணி தனது துயரத்தை காட்டிலும் அம்மாவின் துயரம் மிகப்பெரியது என்று உணர்ந்து கொண்டு அவளை ஏற்றுக் கொள்கிறான். நமது எதிர்பார்ப்பை மீறி, அவன் அன்பினால் அல்ல துயரத்தைக் கொண்டே தனது துயரத்தை கடக்கிறான். துயரத்தின் வழி அவன் தன் மீட்சியை அடைகிறான். இங்கு தகாஷி கிட்டானோவிடம் இருந்தும் தஸ்தாவஸ்கியிடம் இருந்தும் இரு சரடுகளை மிஷ்கின் முடிச்சிடுகிறார். இந்த முடிச்சிடல் ஒரு அவதானிப்பு.
இப்படம் அறிதலைப் பற்றின அறிதல். தமிழின் மரபான எளிய உணர்ச்சிகளின் உச்சம், உறவுகளின் சிக்கல், ஒழுக்க பிரச்சனைகள் போன்றவற்றை கடந்து வாழ்வின் ஆதாரமான கேள்விகளை தீவிரமாக கேட்க முயன்றிருக்கும் ஒரு படம். மிகைகள், செயற்கையான இடங்கள், பாம்பு, மழை, கால்கள், பாதை, மேரிமாதாவின் விளக்குள் போன்ற எண்ணற்ற உருவகங்கள் மற்றும் இளையராஜாவின் இசை போன்ற தடைகள் இருந்தாலும் நந்தலாலா அது கேட்கும் கேள்விகளுக்காகவும் நிகழ்த்தும் கண்டுபிடிப்புகளுக்காகவும் ஒரு முக்கியமான படைப்பு தான்.
Read More

Saturday 4 December 2010

பிறந்த நாளின் போது



நேற்று பிறந்தநாளின் போது எப்படி முப்ப்து வயது வரை வாழ்ந்தோம் என்று வியப்பு ஏற்பட்டது. 


கிராமத்து குழந்தைகளுக்கு திருவிழா போல் தான் எனக்கும் பிறந்த நாள் இருந்து வந்துள்ளது.  பருப்பு அப்பளம் கடலை பாயச மதிய உணவுக்காக ஏற்பட்ட நாள். அந்நாளில் வீட்டில் இருந்து பூதத்தான் கோவிலுக்கு அரிசிப் பாயசம் படையல் வைத்து பெரிய போணியில் பள்ளிக் கூட குழந்தைகளுக்கு விளம்புவார்கள். அப்பாயசம் வேறு ஒரு சுவை கொண்டிருக்கும். எத்தனையோ குழந்தைகள் குடித்த பாயச பாத்திரத்தின் ஒரு கரண்டி தரும் ஆழ்நிறைவு தனியானது. இளமையின் பிறந்தநாள் காரணமற்ற உற்சாகம், புத்துணர்ச்சி, தன்னம்பிக்கையின் கூட்டுசேர்க்கை. கல்லூரி வரை பிறந்த நாள் காலத்தின் நினைவூட்டலே அல்ல. அது காலத்தை நினைக்காத காலம். மாநகரத்தில் பிறந்த நாட்கள் வாழ்த்துக்களின், பரிசுகளின், உணவக மதுக்கூட பங்கேற்புகளின் நாள். கிராமத்தில் என்னை யாரும் வாழ்த்தியதாக, பரிசு தந்ததாக நினைவில்லை. என் மிகச் சிறந்த நண்பர்களின் பிறந்த நாளைக் கூட நான் நினைவு வைத்தது இல்லை. அவர்களுமே.
மேற்சொன்ன பண்பாட்டு மாறுபாடு காரணமாக மாமியார், நண்பர்கள், அறிமுகமானவர்கள், கூட பணி செய்பவர்கள் யாருக்கும் சொல்லவில்லை. அப்படி பிறந்த நாளை அறிவிக்கவே கூச்சமாக இருந்தது. அதற்கு வேறொரு காரணம் உள்ளது.
கடந்த சில மாதங்களாக ஒரு கசப்பான மாத்திரையைப் போல நாட்களை விழுங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு இரவு கூட நன்றாக தூங்கவில்லை. தினமும் ஒரு எரிமலை வாயின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதான உணர்வு. இரவு தூங்க முற்படும் போது எப்படி இவ்வேளை வரை உயிரோடு இருந்தோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பூனையின் கால்நகங்கள் உள்ளடங்கியவை. திடீரென்று பூனையால் தன் நகங்களை வெளிப்படுத்த முடியாமல் போனால் என்னாகும்? இவ்வளவு சலிப்பான அசட்டுத்தனமான வாழ்வை எப்படி அர்த்தமானதாக இதுவரை ஆக்கினோம் என்று வியப்பேற்படுகிறது. வாழ்வில் ஒளி காண்பது நிஜமாகவே ஒரு திறன். அத்திறனை இழப்பது ஒரு புலன் சட்டென்று மூடிக் கொள்வது போல். அப்போது மொழியில் இருந்து கிடைக்கும் பிரதிபலிக்கப்பட்ட வெளிச்சத்தை நம்பி இருக்க வேண்டியதாகிறது. இந்த மாதங்களில் கசப்பு கலந்த வியப்பு மட்டுமே மேலோங்கிய  உணர்வு. ஒரு நிறக்குருடனின் முன் நிறங்களால் பளபளக்கும் உலகம்.
ஆக ஒரு பெரும் கடனாளியான சூதாடியாக உணர்ந்தேன். என் கைகளை யார் பற்றி குலுக்கினாலும் சற்று நெகிழ்ச்சியாகவும் நிறைய கூச்சமாகவும் இருந்தது. கைகளை ஆழமாக சட்டைப்பைக்குள் புதைத்துக் கொண்டேன். நண்பர்கள் மற்றும் பிற உறவுகள் பாலான அவநம்பிக்கையால் அல்ல. இணையம் மூலம் அறிந்து வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.
Read More

Thursday 2 December 2010

கல்கியின் சுண்டு: சுருங்குகிறதா விரிகிறதா உலகம்?




கல்கியின் சுண்டுவின் சந்நியாசம்என்ற சிறுகதை சற்று மிகையான ஒரு வேடிக்கை கதை. கல்கியின் நகைச்சுவை அ.மித்திரன் (அல்லது சுஜாதா) போல் அல்லாது சற்று அட்டகாசமான நகைச்சுவை. மேற்சொன்ன மிகை காரணமாகவே கலைத்தன்மை குறைவாக் இருந்தாலும் இது ஒருவிதத்தில் ஒரு முக்கியமான கதை. எப்படி என்பதை பார்க்கப் போகிறோம்.
சுப்பிரமணியன் என்பவன் தன் பெயரை சுண்டு என்று சுருக்கிக் கொண்டிருக்கிறான். இது ஒரு கவனிப்புக்குரிய தகவல். அவன் வாழ்க்கையை இப்படி சின்ன சின்ன சாகச கனவுகளாக சுருக்கும் மனப்போக்கு கொண்டவன். அவனுக்கென்ற பல உயரிய லட்சியங்கள் உள்ளன. என்ன நடைமுறை படுத்துமுன்னே அவை முடிந்து போகின்றன!. அந்த காலத்தய சாத்தியங்களுக்கு ஏற்றபடியான லட்சியங்கள். அவை பணம் சம்பாதிப்பது மற்றும் உலகை உய்விப்பது என்று இருவகையானது. ஐ.சி.எஸ் பரிட்சையில் அவன் ஒரு மார்க் வித்தியாசத்தில் தோற்றுப் போனதால் உயர்வேலைக்கு போக முடியாதிருப்பதாக கதைசொல்லியான கிருஷ்ணசாமியிடம் அல்லது நாராயணசாமியிடம் சலித்துக் கொள்கிறான்.(இந்த இரட்டைப்பெயர் கதைக்கு பின்னால் வருவோம்) உலகம் பணக்காரர்களின் பேச்சையே நம்புகிறது என்று புகார் சொல்கிறான். அடுத்து கதைசொல்லி சுண்டுவை சந்திக்கும் போது அவன் மேலும் ஒரு புகார் கூறுகிறான். பணக்காரர்களால் உலகம் சீரழிந்து வருகிறது. அதனால் சமூகத்தை உத்தாரணம் செய்ய எழுத்தாளனாகப் போவதாய் சூளுரைக்கிறான். ஏன் அதற்கு எழுத்தாளனாக வேண்டும்? அதற்கு சுண்டுவின் பதில் சுவாரஸ்யமானது: “ஒரு விஷயம் அச்சில் வந்து விட்டதானால் முட்டாள் ஜனங்கள் அது எவ்வளவு அபத்தமானாலும் அப்படியே முழுங்கி விடுகிறார்கள்! இந்த உலகத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கு எழுத்தாளனாவது தான் ஒரே வழி. சுண்டுவின் இந்த அசட்டையை கவனியுங்கள். அடுத்து சுண்டு திரும்பி வந்து எழுத்தாளனை பத்திரிகை ஆசிரியர்கள் அங்கீகரிக்கவில்லை என்ற ஒரு மடிப்பு கலையாத மரபான புகாரை சொல்கிறான்: “தெருக்கூட்டலாம்; ஹோட்டல் வைக்கலாம்; மந்திரி வேலை வேண்டுமானாலும் பார்க்கலாம்; ஆனால் எழுத்தாளனாகவே ஆகக் கூடாது என்கிறான். அடுத்த படி என்ன? அதுவும் நம் மரபில் உள்ளது தான். பத்திரிகை ஆரம்பிப்பது. அதுவும் சுண்டுவுக்கு சீக்கிரமே சலிப்பாகி விடுகிறது. உலகத்தை ஷேமிப்பதில் இருந்து அவன் சற்று லௌகீக அக்கறைக்கு வருகிறான். கொஞ்ச நாள் பங்குசந்தை சந்தை ஜுரத்தில் இருக்கிறான். பத்தே நாளில் ஒரேயடியாய் லட்சக்கணக்காய் சம்பாதிப்பதை பற்றி விதந்தோம்புகிறான். மைசூர் நிலக்கரியில் ஆயிரம் ரூபாய்க்கோ, திருவாங்கூர் கடலை பிண்ணாக்கில் ரெண்டாயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கிட சாமியை வற்புறுத்துகிறான். அடுத்து சுண்டு பள்ளிக்கூடம் கட்டி சட்டமன்றத்தினருக்கு கல்வி அளித்து சமூக சேவை செய்து அத்தோடு கல்விதந்தையாகி கோடீவரனும் ஆகிடலாம் என்று திட்டமிட்டு அதைப் பற்றியும் சாமியிடம் ஆவேசமாய் பேசுகிறான். கடைசியில் தான் சுண்டுவுக்கு (நமது மூத்த தீவிர இலக்கியவாதிகளைப் போல்) தாமதமாக அது புரிய வருகிறது. தமிழர்களை மேம்படுத்த வேண்டுமானால் எழுத்தாளனாகவோ, பத்திரிகையாளனாகவோ, பங்குசந்தை நிபுணனனாகவோ, கல்வித்தந்தையாகவோ ஆனால் பயனில்லை. தமிழர்களுக்கு புரியும் ஒரே மொழி சினிமா. “சினிமாவைக் கொண்டு நமது யுனிவர்ஸிட்டி வைஸ் சான்ஸலர்களையும் பாட்புத்தக கமிட்டி அங்கத்தினர்களையும் கூட புதுப்பித்து விடலாம். ஆனால் சினிமா மோகம் கொண்ட புத்திஜீவிகளையும் வெளியாட்களையும் போல் அவனுக்கும் ஒரே கவலை: “சினிமா உலகம் கெட்டுக் கிடக்கிறது. அதனால் சினிமாவையும் சீர்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சுண்டு கோலிவுட்டில் நுழைகிறான். சினிமாவின் அரிச்சுவடி தெரியாத போதிலும் பத்துலட்சம் பணம் முடக்கி, “அப்புறம் என்ன என்று கேட்காத ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் அவன் சினிமா உலகையே தலைகீழாய் திருப்பிட துடிக்கிறான். காலக் கொடுமையால் சுண்டு ஒரு இயக்குநரின் கீழ் உதவியாளனாகவே தன் திரைவாழ்வை ஆரம்பிக்கிறான். ஒரு திரைக்கதை எழுதி லீலா மனோகரி என்ற லுல்லுவை நாயகியை தேர்வு செய்து தயாரிப்பாளரையும் பிடித்து விடுகிறான். காதலி, கரிய மேகங்களும் கண்டு வெட்கும்படியான கன்னங்களிலே குமிழ் விட்டுக் கொப்புளிக்கும் அழகு வெள்ளத்தின் ஆழத்திலே ஆழத்திலே என்பதான வசனங்களும் அவன் படத்தில் உண்டு. ஆனால அங்கும் சுண்டுவின் கவனம் சிறிது சிதறுகிறது. கதையை விட லுல்லுவைப் பற்றி அதிகம் யோசிக்கிறான்; காதலிக்கிறான்; அவளை எப்படியும் “உலகம் மெட்சும் சினிமா நட்சத்திரமாக்கி விட வேண்டும்என்று அவன் கங்கணம் கட்டிய நிலையில் லுல்லு படத்தின் தயாரிப்பாளரை காதலித்து மணந்தும் விடுகிறாள். தயாரிப்பாளர் புதுநாயகியைப் போட்டு படமெடுக்க தயார்தான். ஆனால் சுண்டு தான் வெறுத்தொதுக்கி சந்நியாசம் போவதாய் இறுதி முடிவெடுக்கிறான். இதிலும் அவன் உறுதியாய் இருக்கப் போவதில்லை; தற்காலிக மனமாற்றங்கள் இருக்கும் என்று சாமியும் நாமும் நினைக்கும் போது சுண்டு நிஜமாகவே சாமியாராகித் தோன்றுகிறான். என்ன படப்பிடிப்பு தளத்தில் சினிமா சாமியார் வேடத்தில். இந்த கதையில் சொல்லப்படும் மனநிலை 60 வருடங்களுக்கு மேலாகி விட்ட பின் இன்று நனவாகியிருக்கிறது என்பதுதான் நமக்கு முதலில் வியப்பேற்படுத்துவது.
சுண்டுவின் பிரச்சனை முடிவெடுப்பது அதில் நிலைத்து நிற்பது என்பது மட்டுமல்ல. அது வெறும் மேலோட்டமான நிலையே. முதலில் அவனுக்கு எந்த துறையிலும் ஆழ்ந்த ஈடுபாடோ நம்பிக்கையோ ஏற்படுவதில்லை. அனைத்திலும் அவன் ஒரு பரிகாச மனநிலையில் தான் ஈடுபடுகிறான். எதுவுமே பயன் தராது என்ற ஒரு உள்ளார்ந்த எண்ணம் அவனுக்கு உள்ளது. அடுத்து எதிலும் அவனுக்கு ஆர்வத்தை தக்க வைக்க முடிவதில்லை. ஆரம்ப நிலையில் தங்கின பின் உடனே வெளியேறுகிறான். இதற்கு காரணம் அவனுக்கு உண்மையை அறிந்து செயல்படுவதை விடவும் தற்காலிக உச்சபட்ச கிளர்ச்சி தான் தேவையாக இருக்கிறது.என்பதே ஒவ்வொன்றாக அவன் கிளை தாவுவது இதற்குத் தான். முதலில் இந்த அவநம்பிக்கையும் ஆர்வமிழப்பும் கல்கியின் கால மனிதர்களுக்கு இருந்ததா என்று நமக்கு வியப்பேற்படுகிறது. சுதந்திரத்துக்குப் பின் லட்சியவாதம் ஓங்கியிருந்த காலம் அல்லவா அது. இன்று நிலைமை வேறு என்பது நமக்குத் தெரியும். வேலை, கலைத்துறை, சமூகம், உறவுகள் என ஒவ்வொன்றிலும் நாம் இன்று சக்கர கால்களுடன் தான் விரைகிறோம். நாம் அனைத்திலும் இருக்கிறோம்; ஆனால் அனைத்திலும் இல்லை. நமக்கு தொடர்புவலைகளில் ஆயிரக்கணக்கான நண்பர்கள்; ஆனால் அந்தரங்கமாய் பேச ஒரு நண்பர் கூட இல்லை.

சுண்டுவைப் போல் நாம் அனைத்தையும் சுருக்கி கடந்து விடவே பிரயத்தனிக்கிறோம். The Depreciated Legacy of Cervantes என்ற கட்டுரையில் மிலன் குந்தெரா இன்றைய அறிவு மற்றும் கலாச்சாரத் துறைகள் விரிவும் ஆழமும் இழந்து விட்டன என்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சியால் பரந்து பட்டதான உலகை நம்மால் எளிதில் விரைவில் அணுக முடியும் என்பதான தோற்றம் இருந்தாலும் மனதளவில் நாம் சுருங்கியே வருகிறோம். மீடியாவும் அரசியலும் இன்னபிற அதிகார நிறுவனவாதிகளும் பலகுரல்களில் ஒரே கருத்தியலைத் தான் பேசுகின்றன என்கிறார் குந்தெரா. இரண்டு உலகப் போரிலும் அதற்கு பின் நடந்து வரும் பல்வேறு போர்களிலும் அதிகாரம் பொருளாதாரம் போன்றவை வெளிப்படையான நோக்கங்கள் மட்டுமே. நிஜத்தில் அவை காரணமே அல்ல. போர்களை ஒரு வெளி ஊக்கம் உள்ளார்ந்து செலுத்துகிறது. அதாவது இன்றைய அதிகாரப் போர்கள் அதிகாரம் கடந்த ஒரு நோக்கமற்ற நோக்கத்திற்காய் நடத்தப்படுகின்றன என்கிறார் அவர். தனிநபர் மட்டத்திலும் இன்று அத்தகைய நோக்கமற்ற நோக்கம் காணப்படுகிறது. நுகர்வோராகவும், அதிகாரவிரும்பிகளாகவும், வன்முறையாளர்களாகவும் நாம் புரியாத ஒரு சக்தியால் செலுத்தப்படுபதை பார்க்க முடியும். சுண்டுவின் அலைகழிப்பு இத்தகைய தனிமனித மட்டத்தில் தான் நடைபெறுகிறது.

இன்று, கிளர்ச்சி தராத எதுவும் நிஜமில்லை/பயனில்லை என்றோ அல்லது நிஜமாக இருக்க அருகதை இல்லை என்றோ நம்புகிறோம். ஆக துறவியாவது என்றாலும் சினிமாவில் காஷாயம் அணிவது தான் வசதி, அப்போது தான் சீக்கிரம் அப்பாத்திரத்தில் இருந்து வெளியேறி மற்றொன்றுக்குள் நுழைய முடியும். சுண்டு நம் ஒவ்வொருவரையும் போல் பாசி படியாதிருக்க சாமர்த்தியமாய் உருண்டு கொண்டே இருக்கும் ஒரு உருளைக்கல். சமகாலத்தின் பிரதிநிதி. அவனுக்கும் கதைசொல்லிக்குமான உறவு கூட கவனிக்கத்தக்கது; சுவாரஸ்யமானது.
பள்ளி ஆசிரியர்களின் சொற்பொழிவு ஒன்றின் போது கதைசொல்லியை சுண்டு தனக்கு பரிச்சயமானவன் என்று நினைத்து முதுகில் அறைந்து “என்ன தெரியவில்லையா என்று புரியவைக்கிறான். கதைசொல்லி தான் வேறாள் என்று சொல்லும் போதும் அவன் பொருட்படுத்துவதில்லை. அவனுக்கு யாராக இருந்தாலும் சரிதான். அவன் கிருஷ்ணசாமி என்று அழைக்க கதைசொல்லி தன் பெயர் அதுவல்ல என்கிறான். மாட்டிக் கொள்ளாமல் இருக்க தன் பெயர் நாராயணசாமி என்று ஒரு பொய்ப் பெயரை சொல்கிறான். உடனே சுண்டு “ஏதோ உன் பெயர் கிருஷ்ணசாமி என்று சொல்லி டிமிக்கி கொடுக்க பார்க்கிறாயோ என்று சோதித்தேன் என்கிறான். இப்படி சுண்டுவுக்கே தனிநபர் அடையாளமே முக்கியம் அல்ல. கடைசி வரை அவன் இப்படி தவறான பெயரிலேயே அழைத்து தொடர்பு கொள்கிறான். ஒவ்வொரு முறை வீம்பளந்து விட்டு கதைசொல்லியிடம் இருந்து ஐந்து பத்து கடன் பெற்றும் செல்கிறான். இருவரும் இப்படி எதிர்பாராது பலமுறை சந்தித்து நண்பர்களாகி விடுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களைப் பற்றின தனிப்பட்ட விவரங்களை பேசிக் கொள்வதும் இல்லை. கல்கி கதைசொல்லியின் நிஜமான பெயரை தருவதில்லை என்பதும் சுப்பிரமணியத்தை சுண்டு என்றே கதைமுழுக்க அழைப்பதும் இந்த உறுதிப்பாடற்ற வேடிக்கையான உறவை சுட்டத் தான் எனலாம். ஒருவிதத்தில் இது இன்றைய வாசக-எழுத்தாள உறவையும் பிரதிபலிக்கிறது. இன்றைய வாசகன் தீவிரனா, ஜனரஞ்சகனா, கலை இலக்கிய பரிச்சயமுள்ளவனா என்பதும் எழுத்தாளனுக்கு புதிரே. அவன் நாராயணசாமியாய் இருந்தாலென்ன கிருஷ்ணசாமியாய் இருந்தால் என்ன!
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates