Monday 31 January 2011

பயணக் குற்றச்சாட்டுகள்




பயணங்கள்
இல்லாத பாதைகளை
இருப்பதாய் காட்டுகின்றன

கொண்டு சேர்க்கும்
புதிய இடம்
ப்ழைய இடம் என்பதை
மறைக்கின்றன

பயணங்கள்
நம் சதுரங்க பலகையில்
இன்னும் ஏராளமாய்
காய்களை கொண்டு நிறைக்கின்றன
யாருக்காக யார் ஆடுவது
என்ற குழப்பம்

பயணங்களின் போது சந்திக்கும்
மனிதர்கள்
கடந்த காலத்தில் இருந்து
கால் அயர நடந்து வந்துள்ளனர்
அவர்களுடன் கைகுலுக்கும் போது
காலத்தின் தராசு தடுமாறுகிறது

பயணம் முடிந்து திரும்பும் போது
உலகம்
அதிக அன்பாலும்
அதிக குரூரத்தாலும்
நிரம்பி உள்ளது

நாம் கண்டறிகிறோம்
ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம்
அர்த்தம் இல்லாமைக்கும் ஒரு காரணம்

திரும்பி வந்த பிறகு
உலகிடம்
போதிக்க ஏராளம் உள்ளது

ஒன்றுமே கண்டடையாத போதிலும்
பயணங்களின் முடிவில்
ஒரு சொல் உள்ளது
அதை
மகாசமுத்திரத்தில் ஒழுக விடலாம்

ஆனால்
வஞ்சனை நடந்துள்ளது
அதன் பின்னால் ஒரு சூழ்ச்சி உள்ளது

திரும்பி வந்த பிறகு
வீட்டில் விட்டுச் சென்ற
பொருட்கள்
துடைத்து சுத்தமாய் வைக்கப்பட்டுள்ளன

காற்றோட்டத்தின் சுகந்தம் நிலவுகிறது

கலைக்கப்பட்ட பொருட்கள்
குலைவின் அமைதி மாறாமல்

வீடு
திசை மாறிப் படுத்த
ஒரு மிருகம் போல் உள்ளது

வராந்தா நாற்காலியின் மேலே
பறவைகள் இன்னும் கீச்சிடுகின்றன
மரங்கள் அமைதி காக்கின்றன
Read More

Thursday 27 January 2011

மீதமுள்ள வரிகளை சமாளிப்பது அல்லது அழிப்பது



மீதமுள்ள வரிகள்
ஒரு கண்ணாடி புட்டியின்
குடிக்கப்பட்ட
நீரின் பகுதியை போன்றவை

அவற்றை வெளியேற்ற முடியாது
அதற்கு
நீங்கள் அத்தனை வார்த்தைகளையும்
அழித்தாக வேண்டும்

ஆனால்
வேறு வழிகள் உள்ளன

என்றாவது பயன்படுத்தப் போவதாய்
உறுதி எடுத்துக் கொள்ளலாம்

மிச்சமான வரிகளைக் கொண்டு
ஒரு கவிதை எழுதலாம்
ஒரு உறவை ஆரம்பிக்கலாம்
புரியாத பரீட்சார்த்த கதையொன்றில்
எங்காவது இணைக்கலாம்
இது போன்ற வெவ்வேறு மிச்சமான் வரிகளை
இணைத்து
ஒரு கவிதை நூலுக்கான
விமர்சனக் கட்டுரை செய்யலாம்

மிச்சமான வரிகளுக்கு
புதிய அர்த்த தளங்களை
கண்டடையலாம்.

அவ்வரிகள்
தனித்தே
புகழ் தேடித் தந்து
நம் இடத்தை வரலாற்றில் நிறுவிடும்
என்று பெருமை கொள்ளலாம்

அவற்றைக் கொண்டு
ஒரு நாவலை துவக்கி
வாழ்நாளெல்லாம் எழுதலாம்

எங்குமே பொருள்பட சேர்க்க முடியாத
மிச்சமான
வரிகளைக்
கொண்டு நீங்கள் எவ்வளவோ செய்யலாம்

அழிப்பதை தவிர

அதற்கு,
நீங்கள்
பொருத்தமான
ஒரு பெயரை தந்து
தோலின் நிறம் தந்து
ஆடை அணிவித்து
நாற்காலியில் அமர்வித்து
ஒரு வரலாற்றை தந்து
வரலாற்றுக்கான விளக்கங்களும் தீர்ப்புகளும்
ஒட்டின ஊடக விவாதங்களும் தந்து

ஒவ்வொன்றாய் தர வேண்டும்.
Read More

Tuesday 25 January 2011

நீரிழிவு - குழந்தைமையை நோக்கி




காமமும் உணவும் அடிப்படையான உடல் இச்சைகள் என்பதால் அவை சார்ந்த நோய்களும், உடல் கோளாறுகளும் மனிதனின் ஒருவகை தண்டனை நிலைகளாக மாற்றப்பட்டவை. இந்த நோய் நிலைகளின் குற்ற தண்டனை வரலாறு கலாச்சாரத்துடன் கலந்தது, மறைமுகமானது. இது ஒருவகை நேர்மறை ஒடுக்குமுறை. உதாரணமாக நீரிழிவு, உடல் பருமன் போன்ற மெடபொலிசம் சம்மந்தப்பட்ட உடல் கோளாறுகள். குறிப்பாக, நீரிழிவை நுட்பமாக நோக்கும் போது அதில் மனிதனின் தண்டனை தரும் ஆசை தீவிரமாக செயல்படுவதை காணலாம். இது என்ன?
சர்க்கரை நோய் ஒரு சூழியல் சேதம் போன்றது. உடலை எண்ணற்ற வலைப்பின்னல்களின் அமைப்பு என்று கொள்வோம். ஏராளமான நடவடிக்கைகள், ஆற்றல் உருமாற்றங்கள், சேமிப்புகள், அழிவு, மீள்-உருவாக்கங்கள் ... உணவு ஆற்றல் உருமாற்றம் தொடர்பான ஒரு கோளாறு தான் நீரிழிவு. சிடுக்கு கோட்பாட்டில் சொல்வது போல நீரிழிவிலும் ஒரு இலை அசைவோ, பட்டாம்பூச்சியின் சின்ன சிறகுகளின் அடிப்போ ஒரு பூகம்பத்தை தொலைவில் ஒரு பகுதியில் விளைவிக்க முடியும். அதாவது கண்டுபிடிக்க முடியாத அல்லது கவனத்தில் கொள்ளாத ஒரு மிகச்சின்ன காரணம் ஒருவரின் ரத்த சர்க்கரை அளவை எகிறச் செய்யலாம். அதிகப் படியான உணவோ இனிப்போ ஒரு காரணமே அன்றி ஒரே காரணம் அல்ல. உடலுறவால் மட்டுமே எய்ட்ஸ் தொற்றுகிறது என்பது போன்றதே சர்க்கரை உண்டு நீரிழிவு/உயர் ரத்த சர்க்கரை ஏற்படுகிறது என்பது. எளிமைப்படுத்தல் தான் இக்கோளாறு மற்றும் பிற மெடொபொலிஸ நோய்களின் ஆதார சமூக பிரச்சனை. சமூகம் நீரிழிவு நோயாளியை ஒரு உணவுக் குற்றவாளியாக முத்திரை குத்துகிறது. அவனை ஒரு சாப்பாட்டு பண்டத்தை போல் இனிப்பில் முக்கி எடுக்கிறது. ஒரு கரண்டியால் ஒடுக்குகிறது. பழைய தேவதைக் கதையில் வரும் துடைப்பத்தில் அமர்ந்து பறக்கும் சூனியக்காரி போல் ஒரு தேக்கரண்டி மீது அமர்ந்து அவனை துரத்துகிறது. சமூகம் ஏன் இதை செய்கிறது.?

முதலில் நீரிழிவை கட்டுப்படுத்துவதில் மருந்தும் உணவுக் கட்டுப்பாடும் ஓரளவு குறிப்பிட்ட பங்கு மட்டுமே ஆற்ற முடியும். கூட்டிக் கழித்துப் பார்க்கையில் அது ஒரு பின்னோக்கிய ஓட்டம். பெட்ரோல் ஒழுகும் ஒரு காரைப் போன்றது நீரிழிவாளனின் உடல். சுருக்கமாய், ஒரு போது நிற்காத கசிவு. நீரிழிவாளனின் கையில் மருத்துவர் ஒரு லட்டு தருகிறார். தன் கையில் அவர் ஒரு பிரம்பை வைத்துள்ளார். லட்டை வாயில் வைத்தால் ஒரு அடி; கீழே போட்டலும் ஒரு அடி. நீரிழிவில் மருத்துவர்-நோயாளி உறவு இப்படித் தான் நடக்கிறது. மருத்துவர் தொடர்ந்து நோயாளியின் உடலைக் கொண்டு ஒரு பகடையாட்டம் ஆடியபடி உள்ளார். பல சமயங்களில் கட்டையின் எந்த பக்கம் விழப் போகிறது என்பது அவருக்கு பெருங்குழப்பமாக உள்ளது. மருத்துவருக்கும் நீரிழிவாளருக்கு நடுவில் உள்ளது ஒரு கதவோ திரையோ அல்ல மூடுபனி. மூடுபனிக்கு பின்னால் மின்னும் முகத்தின் மீது மருத்துவருக்கு சதா அவநம்பிக்கையும் அச்சமும் உள்ளது. இது தொடர்ந்து குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் நீளுகிறது. நீரிழிவாளன் ஏராளமான ஹெட்லைட்டுகளின் வெளிச்ச பாய்ச்சல்கள் நடுவே பதுங்கின ஒரு முயல். அவனை என்ன பண்ணுவது என்று அவர்களுக்கோ என்ன நிகழ்கிறது என்று அவனுக்கோ புரிவதில்லை.

இன்று ஏராளமான தகவல்கள் நீரிழிவு பற்றி ஆவணமாக்கப்பட்டுள்ளன; ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் நீரிழிவின் போது உடலில் நிகழும் தொடர் சலனங்களும், அதனாலான விளைவு சங்கிலிகளும் ஒரு பெரும் புதிராகவே உள்ளன. இந்த மர்மம் காரணமாக நீரிழிவாளன் அவநம்பிக்கை கூண்டில் நிற்க வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்படுகிறான்; உளவியல் வதைக்கு உள்ளாகிறான். தன் கையில் உள்ள லட்டுவின் ஒவ்வொரு பூந்திக்கும் அவன் கணக்கு சொல்ல வேண்டும். அவன் கண்ணீர் விடுகிறான்.

நோய்மை எதிர்ப்பின் பெரும்பகுதி பொறுப்பு நீரிழிவாளனுக்கு போய் விடுவதால் அவன் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறான். அவன் பார்ப்பது எல்லாம் தின்பண்டமாகிறது. எதையும் தின்பதும் தின்னாமல் இருப்பதும் அவன் முன் தீராத ஒரு கேள்வியாகிறது. உணவு மெல்ல மெல்ல ஒரு பாவமாகிறது. மர்ம உறுப்பை போல் நாக்கை அவன் பாதுகாக்க பார்க்கிறான். அதை வெறுத்து மோகித்து பின்னர் அதன் வழியாய் நரகம் திறந்து தன்னை விழுங்கிடும் என்று அஞ்சுகிறான். சமூகம் அவனுக்கு ஒரு கச்சிதமான பாதிரியார் அங்கியை அணிவித்து பழக்குகிறது. அவன் எங்கும் குற்றவுணர்வையும், மன்னிப்பு வேண்டுதலையும், மெல்லிய ஏக்கத்தையும் சிலுவையாக ஏந்தி அலைகிறான். நீரிழிவு அவனை பால்யத்தை நோக்கி திருப்புகிறது. அவன் திரும்ப இழக்க முடியாத கன்னித் தன்மையை, கற்பை தந்து பாதுகாக்க சொல்கிறது இனிப்பு. அந்த நீண்ட நெரிசலான அங்காடியில் அவன் பல் மஞ்சளித்த ஒரு சிறுவனாக ஈக்களால் மொய்க்கப்பட்டு இனிப்புகளை பற்றி கனவு கண்டு தொடர்ந்து கண்டிக்கப்பட்டு வாழ வேண்டும்; விரல் நுனிகளில் ஒட்டின இனிப்பை நக்குவதே அவன் ஆதார குற்றம். ஏனிப்படி தண்டிக்கப்படுகிறான்.

உணவு பற்றின ஒரு அடிப்படை குற்றவுணர்வின் மீது மனித அடையாளம் கட்டுவிக்கப்பட்டுள்ளது. உணவு ஆற்றல் உருமாற்றத்தின் கோளாறு தான் நீரிழிவு. ஆனால் மிகுதியாய் உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை ஏற்படுவதில்லை. அதன் காரணங்கள் சிக்கலானவை. ரத்த சர்க்கரை அளவு ஒருவருக்கு 120இல் இருந்து நானூறுக்கு உயர்வதன் காரணம் ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்ல. ஆனால் அப்படி சிந்திப்பதே எளிது. ஒரு தேக்கரண்டியால் அவனை துரத்துவதே வசதி. மெத்த படித்த நிபுணர்கள் தொடங்கி பொது மக்கள் வரை நீரிழிவாளனை ஒரு ஸ்பூன் சர்க்கரை கொண்டு துலாத்தட்டில் அளக்கும் ஒழுக்க புத்தி உள்ளது. கடந்த நான்கு வருடங்களில் பல நீரிழிவு மருத்துவர்களை பார்த்திருகிறேன். அவர்கள் அனைவரும் என்னை மிட்டாய் திருடிய சிறுவனாகவே பார்த்துள்ளனர். நான் இனிப்பை திருடித் தின்பதாகவே எப்போதும் அவநம்பிக்கை கொள்கின்றனர். பிடிபட்ட சிறுவனிடம் போலவே மிரட்டலாக பேசுகின்றனர். ஒரு ஆஸ்துமாக்காரருக்கோ முட்டி வலிக்காரருக்கோ இது நடக்காது. பின்னர் சிகிச்சைக்காக நான் ஒரு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். அங்கு நடந்தது தான் உச்சம்.

அங்கு என் ரத்த சர்க்கரை எகிறி குதித்துக் கொண்டிருந்தது. நான் மருத்துவமனையில் தந்ததை தவிர அதிகமாகவே குறைவாகவோ உண்ணவில்லை. மருத்துவர்கள் மட்டும் என்னை நம்ப தயாராக இல்லை. எந்த ஆதாரமும் இன்றி, நான் கள்ளத்தனமாய் பிஸ்கட்கள் தின்பதாய் சொன்னார்கள். சர்க்கரையோடு பழச்சாறு குடித்ததாய் குற்றம் சாட்டினார்கள். ஒரு எளிய பள்ளி உபாத்தியாயர் போல் நடந்து கொண்டார்கள். என் அக்கா மகன் கூட தங்கி இருந்தான். அவனது பிறந்த நாள் அன்று பெற்றோர் கூட இல்லாததால் என் ஆஸ்பத்திரி அறையில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினான். நான் நாவு நுனியில் கூட அதை சுவைக்கவில்லை. ஆனால் செவிலிகள் நான் கேக் தின்றதாய் மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தினார்கள். இந்த மனவதை போதாதென்று அடுத்த நாள் வந்து என்னை எச்சரித்த மருத்துவர்கள் ரெண்டு நாள் முன்பு திறந்து வைக்கப்பட்ட ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து பார்த்து என்னை முறைத்து ஒரு விசாரணை மனநிலைக்கு வந்தார்கள். “நான் தின்னவில்லை என்று சத்தியம் செய்ய வேண்டி வந்தது. ஆனால் சந்தேகம் நீங்கவில்லை என்று தெரிந்தது. வாழ்வில் என்றுமே நான் ஒரு உணவுப் பொருளை பார்த்து இவ்வளவு பயந்ததில்லை. அடுத்து அவர்கள் போன பின் நான் பாய்ந்து போய் அந்த பிஸ்கட் பாக்கெட்டை பதுக்கினேன். என் மனைவி வந்தாள். கையில் சிப்ஸ் பாக்கெட். அவளை விரட்டி அதையும் அலமாரிக்குள் வைத்து பூட்டினேன். பிறகு அறையின் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது உணவுத் துண்டுகள் கிடக்கின்றனவா என்று தேடினேன். என் எதிரில் அமர்ந்து கொறிக்காதீர்கள். எனக்கு கெட்ட கோபம் வருகிறது!

என்னை திரும்பவும் தொட்டிலில் கிடத்தி தொடையை கிள்ளி விடுகிறார்கள். வீறிட்டலறுகிறேன்
Read More

Monday 24 January 2011

விளிம்பில்




பூனைக்கான ஆழம்
கீழிருந்து பார்த்தால்
தெரிவதில்லை
பூனைக்கான உயரம்
மேலிருந்து பார்த்தால்
தெரிவதில்லை
விளிம்பில் அமர்ந்திருக்கும் பூனை
கீழே தாவுவதோ
மேலே எம்புவதோ
இல்லை
பூனையின் விளிம்பு
எங்கிருந்து பார்த்தாலும்
தெரிவதில்லை
பூனை நன்கு தெரிந்த
ஒரு சொல்லின் மீது அமர்ந்திருக்கிறது
நன்கு தெரிந்ததனாலே
யாரும் யாரிடமும் சொல்வதில்லை
அது அமர்ந்திருக்கவில்லை
விளிம்பின்
ஆழ உயரங்களை
அதன் இரு பக்கங்களை
தீர்மானிக்கிறது
அது வானத்தில் பறப்பதாய் தெரியும்
ஒரு கோணம் கூட உண்டு
பூனை அமர்ந்திருப்பது இல்லை
அதை யாரும் பார்ப்பது இல்லை
Read More

Saturday 22 January 2011

அம்மா போன பிறகு



அம்மா போன பிறகு
ஒரு மரக்கன்றை நட்டு
நீரூற்றலாம்
பூக்களை மென்மையாய் கொய்து
கண்ணாடி ஜாடியில் அடுக்கி பார்க்கலாம்
பெரும் மலைத் தொடர் ஒன்றில்
எறும்பு போல் ஏறிப் பார்க்கலாம்
மழைத் தாரைகளின் தொடர்ச்சியை
உன்னிப்பாய் பார்க்கலாம்
ஆழமற்ற உறவுகளுடன்
மணிக்கணக்காய் உரையாடலாம்
உடனே முடியாத
எதையும் செய்யலாம்
அம்மாவை பற்றி அசட்டையாக இருக்கலாம்
நீரில் துளி ரத்தம் போல்
வெறுப்பை கக்கலாம்
அம்மாவுக்காக காத்திருப்பது
எத்தனை பாசாங்கானது
என்று நினைத்துக் கொள்ளலாம்
Read More

Wednesday 19 January 2011

“முள்”: துயரம் ஒரு பரிசு




முத்துமீனாளின் முள் எளிய சுருக்கமான வாழ்க்கைக் கதை. சற்றே தீவிரத் தன்மை குறைந்த, எழுத்துத் தமிழில் எழுதப்பட்ட மற்றொரு கருக்கு. ஒரு நாவலுக்கான முன்வரைவு போலவும் உள்ளது. மிகையும் சித்தாந்த உரிமை கோரலும் இல்லாததால் தடையன்றி அணுகக் கூடியதாக உள்ளன இந்நூலின் அசல் அனுபவங்கள். சரி, இந்த புத்தகத்தை நாம் ஏன் படிக்க வேண்டும்?

ஒரு வாழ்க்கைக் கதையை முக்கியமாக ஆக்குவது எழுத்தாளரின் ஆளுமையும் அவர் அடையும் அவதானிப்புகளும் தரிசனங்களும். வாழ்க்கை பொதுவாக ஒரே மாதிரி நம்மை சுற்றி சுழித்து ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு பெரும் சமூக மாற்றம், பிரச்சனை அல்லது பேராபத்து மற்றும் நெருக்கடிகள் நம்மை நின்று நிதானித்து வாழ்வை திரும்பி பார்க்க, தர்மாவேசத்துடன் எதிர்வினை செய்ய, நுண்பெருக்கியின் கீழ் வாழ்வின் அணுவை வைத்து சோதிக்கவோ தூண்டலாம். ஒரு வாழ்க்கை கதை எழுத சிறப்பு அனுபவங்கள் அல்ல தகுதி. எழுத்தின் கண் திறந்திருந்தால் போதும்; யாரும் வாழ்வனுபவத்தை எழுதலாம், ரவுடியோ, திருடியோ, விபச்சாரியோ, மந்திரி மகளோ, போலீஸ் அதிகாரியோ அல்லாத முத்துமீனாள் கூட. முத்துமீனாள் சொல்லும் வாழ்க்கை அதனளவில் புதிது என்றாலும் தினமணி நாளிதழ் விமர்சனம் சொல்வது போல் “யாரும் அறியாத ஒரு உலகம் அல்ல. முத்துமீனாளுக்கு சிறுமியாக இருக்கும் போது தொழுநோய் வருகிறது. ஆனாலும் இந்நூலை அவர் தொழுநோயுடனான போராட்டத்தை சித்தரிக்கும் ஒரு தன்னம்பிக்கையூட்டும் போலியான சுயகதையாக அவர் எழுதவில்லை; அதிர்ச்சித் தகவல்களை சவுக்கு போல் சொடுக்கி விடவும் அவர் முயலவில்லை. இந்நூல் அதன் பொதுவாக உரையாடல் அமைதிக்காகவும் அடங்கின தன்மைக்காகவும் ஒரு சின்ன ஆச்சரியத்தை அளிக்கிறது. நாடகீயமாக்கக் கூடிய, விரித்து தகவல்களால் பின்னியிருக்கக் கூடிய சில பழமான இடங்களை அவர் வெறுமனே சுட்ட மட்டுமே செய்கிறார். கர்த்தரின் முன் மௌனமாக மண்டியிடும் ஒரு பாதிரியாரைப் போன்று அவ்வனுவங்கள் முன் நிற்கிறார்..சுகுமாரன் பின்னுரையில் குறிப்பிடுவது போல் அவர் தன் தோழிகளுக்கு நேரும் அவலங்களின் போது மட்டுமே சற்றே உணர்ச்சி வசப்படுகிறார். இது அவரது ஆளுமையின் பண்பாக இருக்கலாம். முதலிரவின் போது கூட பதற்றமின்றி அமைதியாகவே இருக்கிறார். இந்த பண்பு எப்படி அவருக்குள் உருவானது என்பதற்கான விடை கூட இந்நூலை நுட்பமாக வாசிக்கும் வாசகனுக்கு நிச்சயம் கிடைக்கும். கூறல் அமைதியுடன் முத்துமீனாளின் பொதுவான வெளிப்படைத் தன்மையும் சேர்ந்து கொள்ள ஒரு கபடமின்மை உருவாகிறது. இந்த கபடமின்மை கதைகூறும், சிறுமியாயிருந்து பூப்படைந்து மனைவியாகும், அந்த பெண்ணின் மீது நமக்கு ஒரு பிரியத்தையும் அணுக்கத்தையும் ஏற்படுத்துக்கிறது. இந்நூலின் பெரும் வசீகரம் அதுதான். வொர்ட்ஸ்வொர்த் முத்துமீனாளை சந்தித்தால் நிச்சயம் ஒரு சிறப்பு கவிதை எழுதுவார் என்று ஊகிக்கலாம்.

இந்த புத்தகத்தின் ஒரு நோக்கம் வாழ்வின் படிப்பினைகளை பதிவாக்குவது எனலாம். படிப்பினைகள் அனுபவத்தில் இருந்து நேரடியாக அனைவருக்கும் தேவை இருப்பதில்லை. மந்தை மனப்பான்மை இதற்கு காரணம். கீழ்த்தட்டு வகுப்பை சேர்ந்த குடும்பத்தில் தோன்றினாலும் அச்சிறுமி உறவுகளின் பாதுகாப்பில் தான் வளர்க்கப்படுகிறாள். அவள் வழமையான ஒரு நெருஞ்சிப் பூ பெண்ணாக வளர்ந்திருப்பார். ஆனால் தொழுநோய் அக்குழந்தையை 5 வருடங்கள் குடும்பமற்று தனியானவளாக ஆக்குகிறது. தொழுநோய் மருத்துவ இல்லத்திலும் தூய இருதய ஆண்டவர் மருத்துவமனை விடுதியிலும் முற்றிலும் அந்நிய மனிதர்கள் இடையே கடுமையான விதிமுறைகளுக்கு மத்தியில், புழு நெளியில் களி சாப்பிட்டு 5 வருடங்கள் வாழ்ந்து வெளிவரும் முத்துமீனாள் ஒரு சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றது போல் இருந்தது என்கிறார். தன் குழந்தைப் பருவத்தில் ஒரு பாதி முழுக்க விளையாட்டையும், நண்பர்களையும், உறவுகளையும் தொலைத்தாலும் மருத்துவமனை விடுதியில் அவர் வலியையும், நோய்மையையும், அவலத்தையையும் மட்டுமே கண்டு வளர இல்லை. அன்பும் கருணையும் அக்கறையும் அங்கு அவருக்கு கிடைக்கிறது. வளர்-இளம் பருவத்தில் வெளி உலகுக்கு திரும்பும் மீனாள் தனிமை, அச்சம், நெருக்கடி, வலி, துயரம் போன்ற வாழ்வின் பெரும் தண்டனைகளையும், கருணையின் உதட்டு முத்தத்தையும் ஒருசேர பெற்று பதப்பட்டுள்ளார். வாழ்வு இந்த இரு எதிர் துருவங்களிலும் இல்லை, இரண்டையும் தொட்டு மத்தியில் எங்கோ உள்ளது என்பதை புரிந்து கொள்கிறார். தனிமனிதர்கள் மீது வெறுப்போ, சரணாகதி விருப்பமோ அவரிடம் துளியும் இல்லாமல் போவது இதனாலே. மிகச் சின்ன வயதில் இருந்தே தன் உடல் மற்றும் சுயமரியாதையை யாரும் சிதைக்க விடாத ஒரு கவனம் அல்லது உஷார் மனநிலையை அவர் உருவாக்கி கொள்கிறார். இதை மேலும் புரிய வைக்கவே முத்துமீனாள் தொழுநோய் படலத்தை சீக்கிரம் முடித்து தன் வளர்ந்த தோழிகளின் பிரச்சனைகள், வதைகள், மரணங்களை ஒரு முரண் கதையாடலாக முன்வைக்கிறார். முத்துமீனாள் தன்னளவுக்கு தன் தோழிகளின் வாழ்க்கை கதைகளின் ஆர்வம் காட்டுவது தன்னிச்சையான ஒன்றோ, வம்பளக்கும் மனப்பாங்கோ அல்ல. முத்துமீனாளின் தோழிகள் மேற்சொன்ன சுயபிரக்ஞை அற்றவர்கள். அவர்களின் துன்பம் தங்கள் சுயம் மற்றும் உடலை பிறர் இடத்து ஒப்படைத்து மெத்தனமாய், அபலையாய் இருக்க சம்மதிப்பதானேயே நேர்கிறது. தோழிகளின் பிரச்சனைகளும் அதன் காரணமான வதை மற்றும் மரணங்களும் பொதுவாய் ஒரு பாலியல் சரடை கொண்டிருந்தாலும் இப்புத்தகத்தின் லட்சியம் மோகமுள்ளின் வலியை, சமூகத்துக்கு புறம்பான உறவின் சிடுக்குகளை ஆய்வதல்ல. மனிதர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிற மனிதர்களை வதைப்பதை இந்நூல் புரிய முயல்கிறது. தன் பொறுப்பை தானே எடுத்துக் கொண்டு வாழ்வின் மதிப்பை உணர்வது நம்மை பாதுகாக்க எவ்வளவு முக்கியம் என்பதை பேசுகிறது. இதனாலே இது முத்துமீனாள் தொழுநோயில் இருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டும் வருவதை சொல்லி வாசகனின் முதுகில் தட்டிக் கொடுக்கும் நம்பிக்கை ஊக்கி நூல் அல்ல. முள் சமமான ஒரு தளத்தில் வெவ்வேறு பெண்களின் சறுக்கல்களையும் கடும் வீழ்ச்சியையும் விவாதிக்க இடம் தருகிறது. இப்பெண்கள் செய்யும் ஒரு பொதுத் தவறு தம்மை கண்மூடித்தனமாய் ஆணிடம் ஒப்படைப்பது; அல்லது மற்றொருவருக்காக தம் உடலை அழித்துக் கொள்வது. சுயமரியாதையை இழப்பது. முத்துமீனாளின் எந்த தோழியும் தாமாகவே நெருக்கடியை எதிர்கொண்டு வெளிவரும் திராணியற்றவர்கள். மிக சின்ன வயதிலேயே இதை சாதித்து விடும் மீனாளுடன் இப்பெண்களை ஒப்பிட்டு பார்க்கும் இப்புத்தகம் தொழுநோய் கடவுள் அவருக்கு வழங்கிய ஒரு பரிசு தானோ என்று யோசிக்க வைக்கிறது. நம் வாழ்வை சிதைக்கும் ஒவ்வொரு அடியும் நமக்கு மீண்டு பெரும் வலுவுடன் வரும் ஒரு வாய்ப்பையுடன் சேர்த்தே தருகிறது. வலி நம்மை வலியற்றவனாக்குகிறது. துக்கம் நம்மை அதனை கடந்து போக வைக்கிறது. பெரும் வலிகளை நேரிடாமல் பாதுகாப்பாய் வாழ்பவர்கள், அதன் படிப்பினைகளை கற்காதவர்கள் எளிய ஒரு உலுக்கலில் சாய்ந்து விடக் கூடும். மீனாளின் தோழிகளுக்கு இதுவே நேர்கிறது.

அன்றாட வாழ்வுக்கு காதல் நெருக்கடி ஏற்படுத்துமானால் அந்த காதல் கூட உதாசீனிக்கப்பட வேண்டியது என்ற நிலைப்பாடு மீனாளிடம் உள்ளது. காரணம் ஒழுக்கவாதம் அல்ல. பேருந்து நிலையத்தில் உடைகள் கலைந்த நிலையில் அரைமயக்கத்தில் கிடக்கும் பாலியல் தொழிலாளிகளைக் கண்டு அவருக்கு கோபம் அல்ல இரக்கம் தான் ஏற்படுகிறது. மீனாளிடம் உள்ளது ஒரு எதிர்-கற்பனாவாத மனநிலை. சங்கரி என்ற பெண் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்ள். மீனாளுடன் அதே மருத்துவமனை விடுதியில் தங்கி படிக்கிறாள். அவள் ஒரு இளைஞனுடன் உறவு கொண்டிருந்ததால் விடுதியில் இருந்து வெளியேற்றப் படுகிறாள். பின்னர் அவ்விளைஞனால் கைவிடப்பட்டு அவள் விடுதிக்கு திரும்பி வந்து படிக்க விரும்பும் போது மதர் அவளை மன்னித்து வாய்ப்பளிக்க மறுக்கிறார். இதன் நியாய-அநியாயம் பற்றி மீனாள் சிந்திப்பதே இல்லை. அவள் அருமையன் என்ற வகுப்புத் தோழனை காதலித்து வந்தாள். தன் விடுதி வாழ்க்கைக்கு இடையூறு வரும் என்று அக்காதலை மறைத்துக் கொள்கிறாள். காதலை சுயதணிக்கை செய்து கொள்கிறாள். அதற்கு பிறகு அருமையனுடன் பாட சம்மந்தமாக மட்டுமே பேசுகிறாள். ஆனால் அவளது தோழி மல்லிகை என்பவள் தன் அம்மா காதலை மறுப்பதால் தற்கொலை செய்து கொள்கிறாள். செல்வி எனும் தோழிக்கும் காதல் எதிர்ப்பு தான் பிரச்சனை. அவள் தன் அம்மாவை மிரட்டி நகை ஒன்றை பெற எலி மருந்தை கரைத்து குடித்து அசட்டுத்தனமாக இறந்து போகிறாள். அந்த நகையுடன் தன் காதலனுடன் ஓடிப் போக திட்டமிட்டிருக்கிறாள். அவள் காதலனும் தொடர்ந்து தற்கொலை செய்கிறான். மீனா என்கிற பெண்ணை வற்புறுத்தி வசியம் வைத்து அவளது மாமனுடன் மணமுடித்து வைக்கிறார்கள். தன் தோற்றம் குறித்த தாழ்வுணர்வு கொண்ட அவன் மணமுடித்த சில வருடங்களில் அவளை கடுமையாக தாக்கி வதைக்கிறான். அவளை இறுதியில் பெற்றோர்கள் வந்து காப்பாற்றி போகிறார்கள். ஓரினச் சேர்க்கை உறவு பற்றி இரு சித்தரிப்புகள் உள்ளன. ஒரு ஜோடி கவனமாக இல்லாததால் உறவு கொள்ளும் போது விடுதி வார்டனிடம் பிடிபட்டு அவமானப்படுகிறது. சுமதி மற்றும் கீதா மற்றொரு ஜோடி. ஒருநாள் கீதா உறவு கொள்ள விழையும் போது சுமதி மறுக்கிறாள். காரணம் அவள் மாதவிலக்காக இருக்கிறாள். வேட்கை வன்மமாக மாறி கீதா அவளை கழுத்தை நெறித்து கொல்லப் பார்க்கிறாள். காதலின் போதான நிதானமின்மையும், காமத்தின் போதான பாதுகாப்பின்மையும் மீனாளை பொறுத்தமட்டில் விவேகமின்மை. இந்நூல் பூரா மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள் அல்லது அதற்கு பிறரை அனுமதிக்கிறார்கள். இது ஏன் என்ற கேள்வி இந்நூலுக்கு ஆதாரமானது.
மிக மோசமான வதைக்குள்ளாகும் பாத்திரம் ராதா எனும் பெண் தான். அவளை மீனாளுக்கு நிகராக ஆற்றல் மிக்க பாத்திரம் எனலாம். குழந்தையாக தொழுநோயால் கிட்டத்தட்ட காலை இழக்கப் போகும் நிலையில் மீனாள் போராடி மீண்டு வருகிறாள். ஆனால் கிட்டத்தட்ட உயிர் போகும் வரையிலும் ராதா பலவிதமான வதைகளை தாங்கி இறுதியில் தான் மீண்டு வருகிறாள். ராதா கள்ளக் காதலனுக்காக கணவனை துறக்கிறாள். காதலன் அவளை வேறொரு ஊருக்கு அழைத்து போய் குடி வைக்கிறான். சொந்த கணவனை விட்டு வந்தவள் தன்னையும் ஏமாற்றக் கூடும் என்று அவன் நாளடைவில் அவளை கற்பனையாய் சந்தேகிக்கிறான். தொடர்ந்து கடுமையாய் துன்புறுத்துகிறான். அவளை பார்க்க வரும் போதெல்லாம் அடிக்கவென்று ஒரு கம்பெடுத்து வருகிறான். சிகரெட்டால் அவள் உடம்பெல்லாம் சூடு வைக்கிறான். கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே அவளை சிறை வைக்கிறான். ஓரிரவில் அடித்து மண்டையை பிளக்கிறான். மறுநாள் வஞ்சகமாய் மலங்காட்டுக்கு அழைத்து போய் அவளது உடமெங்கும் அரிவாளால் கொத்துகிறான். இறுதியில் தான் தாம் ஏன் இதுவரை பொறுத்திருந்தோம் என்ற விழிப்பு ராதாவுக்கு ஏற்படுகிறது. ராதாவுக்கு உதவ வரும் அண்டை வீட்டு பெண்களுள் ஒருத்தி கேட்கிறாள் “உனக்கு என்ன தொழிலா இல்ல; பூ கட்டி வித்து தனியா பிழைக்க முடியாது உனக்கு? தினந்தினம் இப்பிடி அசிங்கமும் அவமானமும் பட்டு செத்து செத்து பிழைக்கணுமா? இதற்கு பின் அவள் தன் கள்ளக்காதலனை விட்டு அகல்கிறாள். அம்மாவுடன் நிம்மதியாக வாழ்கிறாள்.
முள்ளில் ஒரு பெரும் எழுத்தாளனின் மொழி லாவகமோ, தொழில்நுட்பமோ, தெறிக்கும் அவதானிப்புகளோ இல்லை. இந்நூல் அதற்கான தனி இடத்தை அடைவது முத்துமீனாளின் விவேகமும் முதிர்ச்சியும் கூடிய ஆளுமையால் தான். நன்மையையும் தீமையையும் கசப்பற்ற புன்னகையால் எதிர்கொள்ள செய்கிற மன சமநிலையால்!
Read More

Tuesday 18 January 2011

பிங்க் அஸ்தமனம்



ஒற்றைக்காலில் நின்று,
வாத்து ஒரு கால் நீட்டும்
பிங்க் அஸ்தமனம்
standing on one foot,
the goose stretches a leg—
pink sunset


மைக் டில்லன்
      MIKE DILLON  (வட அமெரிக்கா)
அக்டோபர் வெக்கைப் பொழுது
வேலி என்றுமே இத்தனை உயிர்ப்புடன் இல்லை
குளவிகளால்
October hot spell—
the hedge never so alive
with hornets

நிறுத்தின புல்டோசர்
பாதி இடிந்த வீடு
வசந்தகால நிலா
Parked bulldozer
half-done with the house:
     spring moon
Read More

Monday 17 January 2011

You are my sweet wife


 
ஒரு இரவில் என் மனைவியுடனான உரையாடலின் போது நான் கோமா நிலையின் இருந்த போது எப்படி நடந்து கொண்டேன் என்பது பற்றி விசாரித்தேன். மெல்ல மெல்ல நினைவுபடுத்தி சொன்னாள். கோமாவில் இருந்து பாதி மீண்ட நிலையில் என்னால் மயக்க நிலையில் கண் திறவாமல் பேச மட்டுமே முடிந்தது. அவள் என்னை பார்க்க வந்த போது நான் “எனக்கு ஜீனோவை பார்க்க வேண்டும், கொண்டு வா என்றிருக்கிறேன். ஜீனோ எங்கள் நாய்க் குட்டி. நான் என் நண்பர்களையோ உறவினர்களை குறிப்பிடவில்லை!
பிறகு நான் கண் திறந்த பின் அவள் என்னிடம் மார்க்வெஸின் “One Hundred Year’s of Solitudeநாவலை காட்டி “இது என்ன என்றிருக்கிறாள். நான் புத்தகத்தின் பெயரை சரியாக சொல்லி விட்டு “இதை நான் மொழியாக்கம் செய்து வருகிறேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறேன். அது தவறு. நான் மொழிபெயர்த்து வருவது மார்க்வெஸின் சுயசரிதையான “Living to Tell a Tale. இதை மனைவி குறிப்பிட்ட போது எனக்கு தலைப்பு குழம்பிப் போனது பொருட்டாகப் படவில்லை. மொழிபெயர்ப்பை ஏன் மீள மீள அழுத்தி சொன்னேன் என்பதே வியப்பாக இருந்தது. ஏனெனில் உயிரோசையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்த பின் மார்க்வெஸ் மொழிபெயர்ப்பில் இருந்து என் க்வனம் திரும்பி இருக்கிறது. மொழிபெயர்ப்பை விட உரை எழுதுவதை, புதிய தளங்களை அதன் மூலம் கண்டடைவதை மேலும் முக்கியமானதாக கருதி வந்திருக்கிறேன். பாதி கோமாவில் என் பிரக்ஞை அல்ல பேசியது; அபோத மனம். அபோத மனதில் மொழிபெயர்ப்பு பணி ஏன் பிரதானமாக இருந்தது?
ஒரு நாள் கழித்து மாலையில் ஒரு படம் பார்த்து முடித்த போது சட்டென்று தோன்றியது. அந்த மொழியாக்கத்தை சிறிது காலமாய் தூசு படிய விட்டதற்கு என்னுள் ஒரு குற்றவுணர்வு உள்ளது. அபோத நிலையில் மனம் திரையை திறந்து அக்குற்றவுணர்வை வெளிக்கொணர்ந்தது.
அடுத்து அவள் சொன்னது தான் இருப்பதிலேயே சுவாரஸ்யமானது. நான் கோமாவில் இருந்து பாதி விழித்து கண் திறக்க முடிந்த போது அவள் வந்து என் முன்னால் நிற்கிறாள். என்னிடம் கேட்கிறாள் “நான் யார் தெரிகிறதா?. முதலில் அவளிடம் நான் சொன்னது என்ன? “you are my sweet wife. என் வாழ்வில் முழு பிரக்ஞையுடன் இருந்த எந்த வேளையிலும் நான் இப்படி ஒரு வாக்கியத்தை அவளிடம் சொன்னதில்லை.
Read More

Wednesday 12 January 2011

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்




2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன். 28 ஆம் தேதி விழித்த போது என் வாழ்நாட்களில் நான்கை சுத்தமாய் இழந்திருந்தேன். 24ஆம் தேதி மூச்சு விட சிரமப்பட்டு நினைவிழந்து நான் 28ஆம் தேதி விழித்த போது “சாவில் இருந்து திரும்பி இருக்கிறாய் என்று நண்பர்கள் வந்து வியந்து சொன்னார்கள். நான் ஆச்சரியமாக கேட்டேன். “நன்றாகத் தானே இருந்தேன், மூச்சுத் திணறலில் இருந்து எப்படி கோமாவுக்கு நான் சென்றிருக்க முடியும்? நான் எப்படி மரணத்தை முத்தமிட்டு திரும்பினேன்.?. இந்த கேள்வி பெங்களூரில் இருந்து வந்திருந்த என் அக்காவுக்கும், அம்மாவுக்கும் இருந்தாலும் அவர்கள் மௌனித்தனர். நான் மூச்சுத் திணறல் வந்து 24ஆம் தேதி இரவு ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் படி என் மாமியாரிடம் கேட்டது, பொன்மல்லிகை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்ட நினைவுகள் இருந்தன. அந்த ஓரிரவில் கோமாவுக்கு சென்றேன் என்று நினைத்துக் கொண்டேன். அங்கிருந்து மேடவாக்கத்தில் உள்ள Global என்ற பெரிய தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறேன். ஆனால் தேதிகள் பற்றின குழப்பம் வேறு என்னை மேற்கொண்டு வினவ தடுத்தன. நான் உயிர் பிழைத்த மகிழ்ச்சியுடன் ஐ.சி.யுவில் உடல் நலத்தை மெல்ல மெல்ல மீட்டுக் கொண்டு வந்தேன். ஐ.சி.யுவில் இருந்து வெளிவந்த பிறகு தான் நான் இழந்த நாட்களின் வரலாற்றை மீட்டுருவாக்கினேன். இந்த கண்டுபிடிப்புகள் ஒரு சின்ன அதிர்ச்சியில் இருந்து மிக எதேச்சையாக ஆரம்பித்தது.
என் முதல் சந்தேகம் என் மாமியார் ஏன் மிகுந்த குற்றவுணர்வுடன் என்னிடம் நடந்து கொண்டார் என்பது. அவர் என் கண்களை சந்திக்கவே தயங்கினார். அடுத்து என் மனைவி என்னிடன் தன்னிச்சையாக நீ இரண்டு நாட்கள் (அதாவது 24-26வரை) பொன்மல்லிகை என்ற ஆஸ்பத்திரியில் இருந்தாய் என்ற போது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அந்த ஆஸ்பத்திரியில் எனக்கு சிகிச்சை தராமல் தாமதித்தார்கள் என்பது நினைவில் இருந்தது. நான் மேலும் துருவினேன். மனைவி மேலும் சொன்னாள். எனக்கு பெரும் கிலி ஏற்பட்டது. அதாவது நானாக கோமா நிலைக்கு செல்ல வில்லை, அப்படி செல்லும் வரை சிகிச்சை தராமல் விடப்பட்டிருக்கிறேன். என் நுரையீரலும், சிறுநீரகங்களும் அவையாக பழுதாக இல்லை. இரண்டு நாட்கள் பழுதாகும் வரை அவை சிகிச்சை இன்றி இயங்க விடப்பட்டிருக்கின்றன. மூளைக்குள் அமிலம் புகுந்து சேர்ந்து எடிமா எனப்படும் நோய் உள்ளிட்ட பத்து கோளாறுகள் உருவாகும் வரை நான் இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறேன். ஏன்? தவறான நோய் அறிதல் மற்றும் அசட்டை காரணமாக. எப்படி இரண்டு நாட்கள்? இக்கேள்வி என்னை தொடர்ந்து வருத்தியது. 24ஆம் நாள் இரவு நடந்ததை என் மனைவி மெல்ல மெல்ல விவரித்தாள்.
22ஆம் நாளில் இருந்து எனக்கு வைரல் ஜுரம் இருந்து வந்தது. டாக்டர் ஹஸன் என்பவர் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்து வந்தார். ஒரு வருகைக்கு ரூ300 விதம் இரண்டு நாளில் ஆயிரத்து இருநூறு மேல் கட்டணம் பெற்றிருந்தார். 24ஆம் நாள் ஜுரம் விட்டாலும் கடுமையான வயிற்று வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரி கொண்டு செல்லுமாறு என் மாமியாரை வேண்டியபோது அவர் தயங்கினாள். எனக்கு இது மிகவும் வியப்பளித்தது. இதை மனைவி பிற்பாடு விளக்கினாள். டாக்டர் ஹசன் அவளிடன் நுண்பேசியில் எனக்கு உடல்நலம் மிக நன்றாக உள்ளது என்றும் மூச்சுத் திணறல், வயிற்றுவலி என்று நான் வெறுமனே நாடகம் போடுவதாக சொல்லி இருக்கிறார். நான் வெறுமனே வெளியே செல்வதற்க்காக நடிக்கிறேனாம். இதனால் நான் சுமார் இரண்டு மணிநேரம் துடித்தேன். எனக்கு ஏன் வயிற்று வலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டன? நாலு வருடங்களாக எனக்கு நீரிழிவு கோளாறு உண்டு. ஜுரத்தின் போது ரத்த சக்கரை எகிறி நுரையீரலையும் பாதித்தது. அதனால் வலி. டாக்டர் ஹசன் ஏன் அவ்வாறு பொய் சொன்னார்? அவருக்கு நான் வெளியே சென்று ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விடக் கூடாது. பின்னர் என் துன்பமும் அலறலும் பொறுக்காமல் மாமியாரும் மனைவியுமாக பொன்மல்லிகை ஆஸ்பத்திரியில் சேர்த்த போது டாக்டர் ஹஸன் வந்து கடிந்து கொண்டார். “நான் வீட்டுக்கு வந்து பார்க்க மாட்டேனா?. எனது அபாய நிலை அவருக்கு பொருட்டல்ல. ரூபாய் முன்னூறு அவர் கண்ணுக்கு அறத்தை மறைத்தது.
என் ஊனம் என் மாமியாருக்கு ஒரு மனத்தொந்திரவாக இருந்து வருகிறது. கூட நான் அவரை விட கீழ்சாதி என்பதும். இது காரணமாக என்னை மறைமுகமாக அவமானப்படுத்தி வந்துள்ளதால் நான் என் நீரிழிவை அவரிடம் இருந்து மறைத்தேன். சொன்னால் என்னை மேலும் ஒடுக்குவார் என்பது காரணம். என் ஊகம் போலவே அன்றிரவு நடந்தது. பொன்மல்லிகை ஆஸ்பத்திரியில் அன்றிரவு என் மாமியார் என் நீரிழிவு பற்றி தெரிந்து கொண்டு கடுங்கோபம் கொண்டார். “என் பெண்ணை ஏமாற்றி விட்டான் fraudஎன்று தொடர்ந்து என்னை என் மனைவியிடம் வைது கொண்டு இருந்திருக்கிறார். அவ்வேளையில் என் நிலை? ஆஸ்பத்திரியில் டாக்டர் மருதுபாண்டியன் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற நம்பிக்கையில் இருந்தார். ரத்த சக்கரை எகிறி மூளை நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை தாக்குவதை அவர் கவனிக்க இல்லை. அதனால் எத்தனை வற்புறுத்தியும் அவர் என்னை வெறுமனே படுக்கையில் வைத்திருந்த வாந்தி மாத்திரைகள் தந்து கொண்டிருந்தார். அவர் எனக்கு பைத்தியம் என்ற முடிவுக்கு வந்து நான் வெறுமனே மூச்சுத்திணறல் என்று நடிப்பதாய் என் மாமியாரிடம் சொன்னார். ஏற்கனவே கோபமுற்றிருந்த அவர் இந்த நடிப்பு கதையை உடனடி நம்பினார். இதை கூட இருந்த கவனித்த மனைவி என்னிடம் சொன்னது. உயர் ரத்த சக்கரை மூளையை தாக்கி மனக்குழப்பம் எனும் டெலிரியம் எனக்கு ஏற்பட்டது. அதாவது மூளைக்கு செல்லும் ரத்தத்தில் சக்கரை அறுநூறு எழுநூறுக்கு மேல் சென்று மது அருந்தியது போன்ற நிலை ஏற்படும். டாக்டர் இதை பைத்தியம் என்று நினைத்துக் கொண்டு நேரெதிர் பாதையில் என்னை வைத்தியம் பார்த்தார். ஒரு அறையில் நான் சோர்ந்து கிடந்து டிரிலிரியம் காரணமாக உளற ஆரம்பித்தேன். மூச்சு விட முடியாமல் அலறிக் கொண்டிருந்தேன். அவரும் பிறரும் என்னை எழுப்பி வைத்து கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்கள். “வேசம் போடாதே ஒழுங்காய் மூச்சு விடு என்று திட்டி என்னை தொடர்ந்து உலுக்கினார்கள்.
என் மனைவிக்கு இச்சூழலை சமாளிக்கும் பக்குவமும், திறனும் போதவில்லை; அவள் இளையவள், களங்கமற்றவள். ஆனால் என் மாமியார் அப்படி அல்ல. ஐம்பத்து இரண்டு வருடங்கள் இந்த மாநகரத்தில் வாழ்ந்து, ஆசிரியையாக பணி செய்த அனுபவமும், ஏராளமான நண்பர்களும், சக்தி வாய்ந்த உறவினர்களும் கொண்டவர். ஆனால் அவ்வேளையில் அவர் மருத்துவமனைக்கு தன் உறவினர்களையோ நண்பர்களையோ அழைக்கவில்லை. மற்றொரு மருத்துவரின் கருத்து கேட்கவில்லை. அவர் உள்ளார்ந்த கோபத்துடனும் விலகலுடனும் நடந்து கொண்டார். ஒரு மூன்றாவது நபர் செய்யக் கூடிய உதவிகளை மட்டுமே செய்தார். அந்தளவு மட்டுமே ஈடுபாடு காட்டினார். பதற்றப்படவே இல்லை. இத்தனை மாற்றங்களும் அவரிடம் எனக்கு நீரிழிவு உள்ளதாய் மருத்துவர் சொன்னதும் 24 அன்று இரவு நிகழ்ந்ததாய் என் மனைவி சொன்னார்.
பிறகு நான் மயக்கமுற்று விழுந்தேன். மெல்ல கோமாவுக்குள் செல்ல ஆரம்பித்தேன். இதுவும் வெறும் நடிப்பு என்று சொல்லப்பட்டது. எனக்கு டிரிப்ஸ் ஏற்றப்பட்டு வெறுமனே விடப்படுகிறேன். தானே சரியாகி விடும் என்று டாக்டர் சொல்கிறார். நான் நினைவு தவறி கிடப்பதை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. குளத்து தேரை போல் வேடிக்கை பார்த்தார்கள். அடுத்து மாமியார் டாக்டருடன் சேர்ந்து எனக்கு மனநோய்க்கு வைத்தியம் பார்க்க ஆள் விசாரித்துக் கொண்டிருந்தார். 25ஆம் நாள் இரவு முழுக்க நான் முதல் நிலை கோமாவுக்குள் இருக்கிறேன். என் நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் மூளை செயல்பாட்டை மெல்ல நிறுத்தி வருகின்றன. மூளையில் கட்டிகள் உருவாகின்றன. வழக்கம் போல் நான் மனச்சோர்வு கொண்டு நடித்துக் கிடப்பதாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் என் வாழ்வில் இதுவரை மனநோய்க்கு எந்த வரலாறும் இல்லை. என் குடும்பத்தில் மரபார்ந்த ரீதியாய் மனநோய் இல்லை. ஆனாலும் டாக்டர் ஹசன் எனக்கு மனச்சோர்வு ஏற்பட்டுள்ளதாய் ஒரு அறிக்கை தயாரிக்கிறார். சென்னையில் எனக்கு மனுஷ்ய்பபுத்திரன், சாரு உள்ளிட்ட பெரும் ஆளுமை நண்பர்களும், விஜய், ஸ்ரீநிவாஸ், பிரகதீஷ், மாமல்லன் கார்த்தி உள்ளிட்ட நெருக்கமான படைப்பாளி நண்பர்கள் ஏராளமானோர் உள்ளனர். பெங்களூரில் என் அம்மாவும், அக்காவும் இருக்கிறாள். ஆனால் 25ஆம் தேதி முழுக்க நான் இருளில் கோமாவுக்குள் நழுவிக் கொண்டிருக்க அம்மா, அக்கா மற்றும் இந்த நண்பர்கள் யாருக்கும் சொல்லப்ப்பட இல்லை. என் நோய் ஒரு ரகசியமாக ஒன்றரை நாட்கள் காக்கப்பட்டது. இது ஏன் என்பது எனக்கு பெரும் புதிராகவே உள்ளது. என் அம்மாவும் அக்காவும் மனுஷ்புத்திரனும் சாருவும் நண்பர்களும் ஓடோடி வந்திருப்பார்கள். 28ஆம் நாள் அதுவரை நேரில் பார்த்திராத என் தோழி சம்பங்கி திருப்பத்தூரில் இருந்து சென்னை வந்து என்னை பார்த்து போனார். ஹமீம் முஸ்தபா அண்ணன் மதுரையில் இருந்து வந்து பார்த்தார். போனில் மட்டுமே பழக்கமான தமிழ்நதி அன்று வந்தார். சரியான நேரத்தில் தகவல் போயிருந்தால் இவர்கள் என்னை காப்பாற்றி இருப்பார்கள்; கண்டிப்பாக கோமாவுக்கு சென்றிருக்க மாட்டேன். ஆனால் என்னுடல் இருட்டில் திரைக்கு பின்னால் வைக்கப்பட்டது. அது சலனமற்று மூச்சு விட திணறியபடி மூளை பிரக்ஞையின்றி கிடந்தது. கிட்டத்தட்ட அரைப்பிணம்.
அது வரை நான் மிக நல்ல உடல்நிலையில் மனப்பிராந்தி காரணமாய் நோய் நடித்துக் கொண்டிருப்பதாய் சொல்லிக் கொண்டிருந்த டாக்டர்களும், மாமியாரும் 26ஆம் நாள் காலையில் என் சிறுநீரகம், நுரையீரல், மூளை உள்ளிட்ட உறுப்புகள் முழுக்க பழுதாகி போய் விட்டதை கண்டு பிடித்தார்கள். சும்மா நடித்துக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அனைத்து உறுப்புகளும் பழுதாகி இரண்டாம் கோமா நிலையில் இருக்கிறான். அட என்ன மாயம்? இரண்டு நாள் அறிக்கைகள் 26ஆம் தேதி ஒரே நாளில் மாறின. எனக்கு பத்து பெரும் அபாயங்கள் இருப்பதை பட்டியலிட்டு டாக்டர் என் மனைவியிடம் சொன்னார். “உயிர் பிழைக்க வாய்ப்பு மிகக் குறைவு என்று அவர் பதற்றத்துடன் தெரிவித்தார். ஆக பாதி செத்து விட்ட என்னைப் பற்றி தகவல் வெளியே விடப்பட்டது. நண்பர்கள் அழைக்கப்பட்டார்கள். என் அக்காவுக்கும் அம்மாவுக்கும் நான் சாகக் கிடப்பதாய் தொலைபேசியில் சொல்லப்பட்டது.
என் அக்கா மாமியாரிடம் என்னை உடனடி குளோபல் ஆஸ்பத்திரிக்கு மாற்றும்படி சொன்னார். அப்போது தான் என் மாமியார் உள்ளதிலேயே ஆக விநோதமாய் நடந்திருக்கிறார். உள்ளுறுப்புகள் நின்று போய் கோமாவில் இருந்த நிலையில் எனக்கு கழிந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்பற்றவை. போகப் போக என் உடல் சீரழிந்து கொண்டிருந்தக் கூடும். இதனால் என் மனைவி தான் ஆஸ்பத்திரியில் இருந்து கட்டணத்தை செலுத்தி, டிஸ்சார்ஜ் அறிக்கை வாங்கி வருவதாகவும், தன் அம்மாவிடம் என்னை உடனடி குளோபல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் மாமியார் மறுக்கிறார். பொறுமையாக அங்கே நின்று அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து விட்ட பின்னரே என் அரைப் பிணத்துடன் நகர்ந்திருக்கிறார். என் அக்காவிடம் என் அபாய நிலை பற்றி தெரிவிக்கும் போது 26ஆம் நாள் மதியம் 12 என்னை புது ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்த போது மணி 4. கடந்திருக்கிறது. குறைந்தது மூன்று மணி நேரம் தாமதித்திருக்கிறார். ஒரு பொறுப்பான நிலையில் இருந்து அவர் இன்னும் துரிதமாக விவேகமாக இயங்கி இருக்க வேண்டும். என்ன காரணத்துக்காக தாமதித்தாராம்? தன் மகளை தனியாக விட மாட்டாராம். ஆனால் மகளோ அதே பகுதியில் தனியாக எத்தனையோ வருடங்கள் இருந்திருக்கிறாள். குறைந்தது அவர் ஒரு நண்பரை அழைத்து என் கோமா உடலை புது ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஒப்படைத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
என் நண்பர்கள் வர என் மாமியார் என் அரைபிணத்தை பார்த்து “என் மருமகன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று சொல்லி சிரிக்கிறார். பிறகு அவர் தொடர்ந்து என்னை பழி சொல்லிக் கொண்டே இருக்கிறார். என் மனைவியை அவளது நெருங்கிய தோழியான மனிஷா அழைத்து “என்ன இருந்தாலும் உன் அம்மா அவரது மருமகனைப் பற்றி இப்படி பிறர் முன்னிலையில் கேவலப்படுத்துவது தப்பு. நீ உன் அம்மாவை இப்படி தொடர அனுமதிக்காதே என்று கண்டிக்கிறாள். என் மனைவி சென்று அவள் அம்மாவை திட்டி வெளியே போக சொல்கிறாள். என் மாமியாரின் மகன் வந்து தன் அம்மாவின் வாயை மூட சொல்கிறான். மாமியார் ரகளையை விடுவதாய் இல்லை தற்காலிகமாய் மூளை செத்துக் கிடக்கும் என்னைப் பார்த்து சொல்கிறார் “ஏமாற்றுக்காரன் என் பெண் வாழ்க்கையை கெடுத்து விட்டான். உண்மையில் என் திருமணத்துக்கு முன்னரே என் நீரிழிவு கோளாறு என் மனைவிக்கு தெரியும். அதை தெரிந்தே என்னை காதலித்தாள். அவள் அதை என்றுமே புகார் ஆக்கினது இல்லை.
என் அக்கா பெங்களூரில் இருந்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையை சேர்ந்த நண்பரான டாக்டர் ஜான் தனபாலை அழைத்து நிலைமையை சொல்கிறார். அவரது பரிந்துரையின் பேரில் நான் 26ஆம் நாள் மதியம் குளோபல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறேன். சென்ற உடனே எனக்கு மூச்சுக்கு வெண்டிலேட்டர் வழங்கப்படுகிறது. இரண்டு மணி நேரத்தில் என் சரியான பிரச்சனை கண்டறியப்படுகிறது. இரண்டு நாள் கழித்தே உயிருக்கு உத்தரவாதம் தர முடியும் என்கிறார்கள் குளோபல் மருத்துவர்கள். ரத்த சக்கரை கட்டுக்கு கொண்டு வருகிறார்கள். கோமாவில் இருந்து நான் மெல்ல வெளிவருகிறேன். என் மாமியார் என் மனைவியிடம் சொல்கிறார் “அவன் 24ஆம் தேதி உடல் நிலை சரியில்லை என்று சொன்னது உண்மைதான். அவன் நடிக்கவில்லை. நாம் ரெண்டு நாள் தாமதமாய் வந்து விட்டோம். ஆம் நான் செத்துக் கொண்டு இருந்தேன் என்பதை அவர் ரெண்டு நாட்கள் தாமதமாய் ஏற்றுக் கொண்டார். நான் முழுக்க ஏமாற்றுக் காரன் இல்லை. பைத்தியம் இல்லை. மூச்சுத் திணறல் என்று நடிக்கவில்லை. ஒரு பௌதீக உண்மையை கற்பனையால் மூடி மறைத்து சாகடிக்க பார்த்திருக்கிறார்கள்.

பிறகு இரண்டு விசயங்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்கின்றன. ஒன்று என் மனைவி கூறியது. நான் ஒன்றரை நாட்கள் “எனக்கு மூச்சு திணறுகிறது காப்பாற்றுங்கள் என்று அங்கு பொன்மல்லிகை மருத்துவமனையில் ஒவ்வொருவரிடமும் கையெடுத்து கெஞ்சியிருக்கிறேன். பிறகு யாரும் உதவாமல் விட “அம்மா காப்பாற்று என்று ஆயிரம் முறையாவது கத்தியிருக்கிறேன். பிறகு இந்த “அம்மா காப்பாற்று கெஞ்சல் வாயில் உறைய நான் கோமா நிலைக்கு சென்றிருக்கிறேன். குளோபல் ஆஸ்பத்திரியில் நான் விழித்ததும் யார் முன்னே வந்தாலும் “அம்மா என்று கைப் பற்றி இருக்கிறேன். யார் முன்னே கொண்டு வரப்பட்டாலும் எனக்கு அம்மா உருவம் தான். கடைசியில் என் அம்மா வரும் போது நான் முக்கால் செத்துப் போய் இருக்கிறேன். இந்த சென்னை மாநகரில் பெரும் நண்பர்கள் இருந்தும் என் உடல் மூச்சுக்காக இரண்டு நாட்கள் கெஞ்சித் துடித்திருக்கிறது. ஒரு வலிமையும் கூர்மையான இளைஞனை ஒரு மிருகம் போல் நடத்தியிருக்கிறார்கள். மயக்க நிலையில் அறைந்திருக்கிறார்கள். சில மணிநேரங்களில் என் உடல் அன்னியர் வசம் ஆனதும் அது கடுமையான வதைக்கு உள்ளாக்கப்பட்டு மரணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரு படித்த இளைஞனுக்கு மாநகரில் நண்பர்கள் மத்தியில் இப்படி நடக்கக் கூடும் என்பது மிகவும் அதிர்ச்சியாக நம்பமுடியாததாக உள்ளது. ஒரு குடும்பத்துக்குள் கூட இது நிகழலாம். நாம் நம் வசம் இல்லை என்பது உண்மை.
அடுத்து, இரண்டு நாள் ஒரு மனிதனை எப்படி மயக்கநிலையில் விட்டு வைத்தார்கள் என்ற கேள்வி. யாராயினும் என்ன மருத்துவ அறிக்கை இருந்தாலும் ஒரு நாளுக்கு மேல் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தால் அப்படியே விட்டு வைக்க மாட்டார்கள். புதிய மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வார்கள். எனக்கு ஏன் இரண்டு நாள் மாற்று சிகிச்சை மறுக்கப்பட்டது? நான் ஏன் இரண்டாம் கோமா நிலைக்கு சென்று சிறுநீரகம் நுரையீரல் மூளை பழுதாகும் வரை காக்க வைக்கப்பட்டேன்? இந்த 24-26 நாட்களில் நிஜமாக நடந்தது என்ன? என் மாமியார் சுட்டியாக சொல்கிறார் “பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல உன் மனைவி தான் என்னை தூண்ட வேண்டும்.. எதிர்பாராத சிரமமான வேளைகளில் ஒரு சிறு பெண் அல்ல முடிவெடுக்க வேண்டியது. அவள் குழப்பத்தில் எளிதில் உறைந்து போவாள். அவளுக்கு அனுபவம் போதாது. அப்போது ஒரு மூத்தவரே முடிவெடுத்து செயல்பட வேண்டியவர்.
என்னை ஏன் பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லவில்லை?. என் இழந்த நாட்களை நான் யாரிடம் கேட்க ? இழந்த கௌரவத்தை யாரிடம் கேட்க? நேர்ந்த வதைக்கு யாரிடம் நியாயம் கேட்க? என் காலத்தை களவாண்டது யார்?
இறுதியாக 24ஆம் நாளே என் அம்மா மற்றும் அக்காவிடம் அவர் அறிவிக்காதது ஏன்? இதை செய்ய 26ஆம் நாள் நாம் இரண்டாம் நிலை கோமாவுக்கு சென்று நான் முக்கால் செத்த வரை காத்திருந்தது ஏன்? என் நோயும் சிகிச்சையும் மயக்க நிலையும் ஏன் இருட்டில் ரகசியமாய் வைக்கப்பட்டது?
ஆனால் கோமாவில் இருந்து விழித்த நாள் நான் அடைந்தது ஒரு தெளிவான மகிழ்வான மனநிலை. அதுவரை வாழ்க்கையை ஒரு நோக்கமற்ற அர்த்தமற்ற ஓட்டம் என்றே நம்பி வந்திருந்தேன். பிறகு யோசித்தேன். எத்தனையோ தாமதங்கள், தவறான நோய் அறுதியீடுகள், நோயாளி மீதான அவநம்பிக்கை, தவறான சிகிச்சை, தவறான முடிவுகளுக்கு பிறகும், கோமாவில் சென்ற பின்னரும் வாழ்வின் அகக்கண் என்னை உயிருடன் மீட்டு வைத்துள்ளது. என் உயிர்ச்சுடரை காலம் உள்ளங்கைகளுக்குள் காத்து கொண்டு வந்து தந்துள்ளது. எழுத்துக்காகத் தான் இந்த மறுபிறப்பை கடவுள் எனக்கு தந்துள்ளார் என்று நம்புகிறேன். நான் இப்பிறப்பில் செய்துள்ள ஒரே நல்வினை அது மட்டுமே. கோமாவில் இருந்து மீண்ட இரண்டாம் நாள் என் உடல் பலவீனமாக இருந்தது. தலை விண்ணென்று வலித்தபடி இருந்தது. ஆனால் இரண்டு நாட்கள் உயிர்ப்பற்று கிடந்த கரம் கொண்டு என்னால் மிக சரளமாக உடனடி எழுத முடிந்தது. இரண்டு கவிதைகளும், இரண்டு கட்டுரைகளும் எழுதினேன். என் எழுத்து வேலை தற்காலிகமாய் அமைந்ததல்ல என்று ஆழமாக தோன்றுகிறது. எழுத்தின் முன் மண்டியிடுகிறேன்.
(ஆஸ்பத்திரியில் நடந்த அனைத்துக்கும் என்னிடம் தகுந்த ஆதார ஆவணங்கள் உள்ளன.)
Read More

Saturday 8 January 2011

கூடுறையும் தூக்கணாங்குருவிகள்




சார்லஸ் டிக்கன்ஸன் (வட அமெரிக்கா)
CHARLES DICKSON (வட அமெரிக்கா)
யெல்லோ டிரவுட் அல்லிகள் --
படகு வீட்டின் உள்ளும் புறமுமாய்
கூடுறையும் தூக்கணாங்குருவிகள்
yellow trout lilies—
in and out of the boathouse
nesting swallows

சதுப்பு நில அந்தி
கூடுறையும் ஓஸ்பிரே பருந்து
சன்னமாய் விசிலடிக்கும்
marsh twilight
a nesting osprey
whistles softly

மலை குளம்
அதன் தெளிவில் சிறுகற்கள்
மற்றும் மின்னோ மீன்களின் மினுக்கம்
mountain pool
in its clarity small stones
and the flash of minnows
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates