Monday 28 February 2011

அமைதி - சார்லஸ் புக்காவஸ்கி



உணவகத்தின்
ஓர மேஜை முன்
அமர்ந்திருக்கிறார்கள்
ஒரு மத்திய வயது ஜோடி.
அவர் தங்கள் சாப்பாட்டை
முடித்தாகி விட்டது
ஒரு பீர் குடித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
மாலை 9 மணி.
அவள் சிகரெட்
புகைக்கிறாள்.
பிறகு அவன் என்னவோ சொல்கிறான்.
அவள் தலையாட்டுகிறாள்.
பின் அவள் பேசுகிறாள்.
அவன் இளிக்கிறான், தன்
கையை நகர்த்துகிறான்.
பிறகு அவர்கள்
அமைதியாகிறார்கள்.
அவர்களின் பக்கத்துக்கு மேஜையின்
திரைகள் வழி
சிவப்பு நியோன்
எரிந்து அணைந்து
சிமிட்டுகிறது.

போர் இல்லை.
நரகம் இல்லை.

பிறகு அவன் தன் பீர் புட்டியை
தூக்குகிறான்.
பச்சை நிறம்.
அதை தன் உதட்டருகே உயர்த்துகிறான்,
சாய்க்கிறான்.

அது கரோனட்

அவளது வலது முழங்கை
மேஜையில் உள்ளது
அவளது கையில்
கட்டை விரலுக்கும் சுண்டு விரலுக்கும்
இடையே
சிகரெட் பிடித்திருக்கிறாள்
அவள் அவனை
வேடிக்கை பார்க்கையில்
வெளியே தெருக்கள்
இரவில்
மலர்கின்றன.

Read More

Thursday 24 February 2011

என் நண்பன் புத்தன் - புக்காவஸ்கி



என் மேஜையில் இருக்கும் இந்த புத்தனை நான் கழுவியாக வேண்டும் ---
அவன் மீது முழுக்க தூசும் எண்ணெய் பசையும்
அதிகமும் அவனது நெஞ்சு மற்றும் வயிற்றில்; ஆஹ்
எத்தனையோ நெடிய இரவுகளை ஒன்றாய் பொறுத்திருக்கிறோம்;
சப்பையானவையையும் பயங்கரமானவையையும் நாங்கள் தாங்கியிருக்கிறோம்
பண்பற்ற காலங்களில்
சிரித்திருக்கிறோம் இப்போது
குறைந்தது நான் அவனுக்கு செய்ய வேண்டியது
ஈரத் துணியால் துடைப்பதாவது தான்;
சில நீண்ட இரவுகள்
நிஜமாகவே கொடூரமாகவே இருந்துள்ளன ஆனால்
புத்தன் ஒரு நல்ல அமைதியான துணையாகவே
இருந்து வந்திருக்கிறான்; சொல்லப் போனால் அவன் என்னை பார்ப்பதில்லை ஆனால்
எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பதாய் தெரியும் இந்த
பீத்தனமான இருப்பை நோக்கி
சிரித்துக் கொண்டிருக்கிறான்: வேறொன்றும் இல்லை செய்வதற்கு.

“ஏன் என்னை சுத்தம் செய்கிறாய்? அவன் கேட்கிறான், “நான் திரும்பவும்
அசுத்தமாகத் தான் போகிறேன்
“ஏதோ சுத்தம் பேணுவதாய் கிறுக்கத்தனமாய் பாவிக்கிறேன், நான் பதிலிறுக்கிறேன்.
“வைனை குடி, அவன் சொல்கிறான், “அது தான் உனக்கு நன்றாக வருவது
அப்போ நான் கேட்கிறேன் “உனக்கு என்ன நன்றாக
வருமாம்?
திரும்ப சொல்கிறான் “உன்னை பார்த்துக் கொண்டிருப்பது நன்றாக வரும்

பிறகு அவன் மௌனமாகிறான்.
குஞ்சம் வைத்த ஒரு உருள்மணிகளின் வட்டமொன்றை
ஏந்தியிருக்கிறான்.

எப்படி இவன் வந்தான்
இங்கு?
Read More

Wednesday 23 February 2011

பிச்சையிடல்கள் - புக்காவஸ்கி



சில நேரங்களில்
இருபது நிமிடங்களில்
3 அல்லது 4 முறைகள்
என்னிடம் பிச்சை கேட்கப்படுவதுண்டு
நானும்
பத்தில்
ஒன்பது தடவைகள்
கொடுத்து விடுவேன்.
நான் கொடுக்காத
ஒன்றிரண்டு தடவைகள்
எனக்கு கொடுக்க வேண்டாம்
என்ற உள்ளுணர்வு சார் எதிர்வினை தோன்றுகிறது
நானும்
கொடுப்பதில்லை
ஆனால் பெரும்பாலும்
நான் தோண்டி எடுத்து
கொடுப்பேன்
ஆனால் ஒவ்வொரு முறையும்
நினைப்பதை தவிர்க்க முடியவில்லை
கண்ணில் குழி விழுந்து
விலா எலும்புகளுடன் தோல்
இறுக்கமாய் ஒட்டியிருக்க
மனம் காலியாக
வெறி கொண்டிருக்க
நான் யாரிடமும்
எதையும்
கேட்டதில்லை
அது
கௌரவத்தினால் அல்ல
எளிதாய் சொன்னால் நான் அவர்களை
மதிக்கவில்லை
அவர்களை
பொருட்படுத்தத்தக்க
மனிதர்களாய்
கருதவில்லை
என்பதால் மட்டுமே
அவர்கள் தாம்
விரோதிகள்
நான்
தோண்டி
எடுத்து
கொடுக்கையில்
இப்போதும் கூட
விரோதிகளே.

Read More

Tuesday 22 February 2011

நீயா நானாவில் நான்

விஜய் டி.வி "நீயா நானா” நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று விருந்தினனாக பங்கெடுத்தேன். நான் பேசின பகுதியை கீழே காணலாம்.


Read More

Saturday 19 February 2011

ஓரு கனவு வேண்டும்




கனவுகள் என்னை
கடித்து பிராண்டியும் விளையாடியும் தொந்தரவு செய்கின்றன
துரத்துகின்றன.
வால் துடிக்க
சில பொழுது
கருமணி விழிகளால்
மெழுகாய் பேசுகின்றன

நான் பேச ஆரம்பிக்கையில் கனவுகள்
பிரக்ஞையின் குறிப்புகளை ஒரு நீள் கோடாய் இழுத்து சுற்றுகின்றன
பின்னர் அவை ஒரு தொடர் இசையாகின்றன
நான் பேச்சை நிறுத்துகையில்
கனவுகள் ஒரே வரியில் தொக்கின இசையின் மொழியில்
என்னை கேலி செய்கின்றன

இரக்கத்தால் அல்ல
அவை இறுதியில் விடைபெறுவது
எதேச்சையாய்
திருகி விட்ட பொம்மையை மறந்து போன குழந்தையை போல் அது நடக்கிறது

நான் யோசிக்கிறேன்
கனவுகள் ஒன்றா பலவையா என்று

எனக்கு வேண்டியது
கனவுகளற்ற ஒரு வெண் தூக்கமோ
ஆழ்மனதில் அலெயெழுப்பாமல் மிதந்து விழிப்பதோ
கண்டடைதலின் உற்சாகத்தில் கண் திறப்பதோ
மறதியை
வெகுநாள் பழகிய ஒரு இசைக்கருவியென
சுருதி சேர்ப்பதோ அல்ல.

துவங்கி முடிவதாக
மைய பகுதி அற்றதாக
ஒரு கனவு.
திரும்பிச் செல்ல வேண்டியிராததாக
அது இருக்கட்டும்.
நிஜத்தில், தொந்தரவு செய்பவை
மிகையான பிம்பங்களோ
விசித்திரமான எண்ண வெடிப்புகளோ
அல்ல -
நமதல்லாத
வீடோ உணவோ தேவையிராத
ஒரு மிருகம்
அவசர சந்தடிப் பாதையில்
நம்மை வழிமறிப்பது தான்.
என்னவென்ற சொல்ல முடியாவண்ணம்
அது சிதைவுற்று உள்ளது என்பதும்
இன்னும் வாழ்கிறது, சாவே இல்லை என்பதும் தான்

நமக்கு ஓர் கனவு வேண்டும்
அது இப்படியாக இருக்கக் கூடாது.
Read More

Wednesday 16 February 2011

மூடுபனித் திரைக்கு அப்பால் என்ன உள்ளது?




நமது உலகம் கதைகளால் நிறைந்துள்ளது என்று சொன்னார் எம்.டி வாசுதேவன் நாயர். அந்த கதைகள் எவ்வளவு முக்கியமானவை, சுவாரஸ்யமானவை, கவனிக்கத்தக்கவை? எவை கதையாகின்றன? எம்.டியின் எழுத்து கலையில் இதற்கு விடை உள்ளது. எம்.டியை வாசிக்கையில் கதைக் கலை வாழ்வின் எளிமையை அதன் வசீகரத்தை உணர்த்துவதற்கான முயற்சியோ என்று வியக்கிறோம். குறிப்பாக, அவரது “மூடுபனி எனும் குறுநாவலை படிக்கையில்.

வாழ்வு எத்தனை சாதாரணமானது என்பதை அதை மிக நுணுக்கமாக அணுகி சிந்திக்கும் கதைகள் உணர்த்துகின்றன. மிக மிக சாதாரணமான கவனிக்கவே அவசியமற்ற ஒன்றான வாழ்வின் வசீகரத்தன்மையை உணர்த்துவதில் கதையாளர்கள் பரவலாக மாறுபடுகிறார்கள். ஆய்வகத்தில் மரபணுக்களுக்கு நிறமூட்டி மாறுபடுத்தி ஆய்வது போல் இது நிகழ்கிறது.

ஒரு துளி நீரில் பாக்டீரியாக்கள் போல கதையில் மலிந்துள்ள ஏகப்பட்ட தகவல்களை கத்தரித்து ஒடுக்குவதன் மூலம் அசோகமித்திரன் இதை அநாயசமாய் செய்கிறார். அவரது கதைகள் பின்னோக்கி வளர்வன. ஆ.முத்துலிங்கமும், சுஜாதாவும் பகடியையும் விசித்திர குணாதசியங்களை கூர்மையான அவதானிப்புகளையும் கொண்டு நிறமூட்டுகிறார்கள். ஜெயமோகன் உணர்ச்சிகரமான தருணங்களை, கொந்தளிப்பான மனநிலையை, நாடகீய காட்சிகளை நேரடியாகவும் உருவகமாகவும் முன்னிறுத்துகிறார். ஹெமிங்வே எண்ணெய் தாழி ஒன்றில் இருந்து சொட்டும் துளிகளை போல் தன் இருப்பு சார் தத்துவ சிந்தனையை கதாபாத்திரங்கள் மேல் வடிக்கிறார். இத்தனை ரசவாதமும் மிக எளிய கதைகள் மேல் தான் நடக்கின்றன. எம்.டி தன் கணக்குக்கு உருவகங்களை, குறியீடுகளை நம்பி இருக்கிறார். ஆனால் அவர் கத்தரிப்பதோ தருணங்களை மலர வைக்கப்பதோ இல்லை. எம்.டி சன்னமான சொற்றொடர்களை, சொற்களை மீட்டுகிறார். மனுஷ்யபுத்திரன் அல்லது புக்காவஸ்கியினது போன்ற நேரடிக் கவிதைகளின் உத்தியை மிக அற்புதமாக எம்.டி தன் கதைகளில் பயன்படுத்துகிறார். குருடன் ஒருவன் வண்ணங்களின் சொற்களை அழுத்தி சொலவது போன்றது இது. எம்.டியின் எழுத்துக்களில் நிறமே இல்லாமல் ஒரு நிறம் உருவாகிறது. 


மூடுபனி மனோரமா, மங்களம் போன்ற மலையாள பைங்கிளி பத்திரிகைகளில் படங்களுடன் வரும் சோகமான காதல் கதையொன்றின் அச்சை கொண்டிருக்கிறது. ஒரு முப்பத்தெட்டு வயதான பெண். விமலா. அவளது வட இந்தியாவில் குடியேறிய ஒரு சிதிலமான கேரள குடும்பம். உறவினர்களோடு பகைத்து ஊருக்கு திரும்ப விரும்பாமல் வேரற்று நோய்வாய்ப்பட்டு சிறிது சிறிதாக படுக்கையில் சாகும் அப்பா. கள்ள உறவு கொள்ளும் அம்மா. குடிகார தம்பி. இவர்கள் இடையே மாட்டி முழிக்கும் வளர்-இளம் பருவ தங்கை. இத்தனை பேரிடமும் பொருந்த முடியாமல் விமலா இமய மலை அடிவாரத்தில் நைனிட்டாலில் குமவோன் மலைவாச தலத்தில் உள்ள ஒரு போர்டிங் பள்ளியில் ஆசிரியையாக சென்று சேர்கிறாள். இத்தனை கண்ணீர் சுவையும் போதாதென்று விமலாவுக்கு ஒரு முன்னாள் காதலன் வேறு சுதீர் ஷர்மா. அவளது நினைவுகளில் அடிக்கடி தோன்றி துன்புறுத்துகிறான்; நிராசையை, அவநம்பிக்கையை, தப்பித்தல் மனநிலையை தூண்டுகிறான். 16 வருடங்களுக்கு முன் பிரிந்து விடுகிறார்கள் அல்லது அவன் கைவிட்டு விடுகிறான். நாவலின் பாதியில் அப்பா இறந்து விடுகிறார். நமது காதுகளில் எத்தனையோ நெடுந்தொடர் டைட்டில் பாடல்கள் குழப்படியாக ஓடுகின்றன. ஆனால் எம்.டி ஒரு கையில் இந்த பைங்கிளி கதையினோடு மறுகையில் தீவிர வாசகனை எந்த துணுக்குறலும் இல்லாமல் அழைத்து செல்கிறார். தீவிர வாசகனுக்கு அவர் போடும் முதல் கொக்கி மிக நன்றாகவே மாட்டி விடுவது. அது தலைப்பு. தொடர்ந்து நாவலின் பின்னணியில் மூடி மூடி திறக்கும் மூடுபனியை அவன் கவனிக்கிறான். நாயகி கதைக்களனை மீண்டும் மீண்டும் சுற்றி வருவது கதைக்குள் இருக்கும் மற்றொரு உலகுக்கான குறிப்பு என்று அவனுக்கு புரிய வருகிறது. அடுத்து இருபதாம் நூற்றாண்டு நவீன நாவல் அணிந்துள்ள கறுப்பு கண்ணாடியின் இரு துண்டுகளை கவனிக்கிறான்: வெறுமையும், அபத்தமும். அவற்றின் வழி நாவலை மேலும் பார்க்கிறான்.

மூட்டம். அது தான் நாவலின் பிரச்சனை. வெவ்வேறு கட்டங்களில் வாழ்க்கை மூடிக் கொள்கிறது. மனிதன் அதை தாமதித்து உணரலாம். இல்லாவிட்டால் உணர்ந்த பின்னரும் ஓடி ஒளியலாம். விமலாவை போல் ஒரு மலைத் தொடரின் பனித்திரைக்கு பின் அபயம் தேடலாம். பதினாறு வருடங்களாக பழகின பாதைகளை, ஏரியை, அதன் படகுகளை, மலை உச்சி கோவிலை, மாறும் பருவங்களை, தோன்றி மறையும் சுற்றுலா பயணிகளை அவள் தன் வெறித்த ஒளியிழந்த கண்களால் கவனித்த படியே உள்ளாள். ஒரு நுண்பெருக்கியின் கீழுள்ள ஆய்வுப்பொருளைப் போல் குமவோன் குன்று அவளுக்கு தெரிகிறது. அதன் வழி வாழ்வும் தெரிகிறது. வாழ்வு மொத்தத்தையும் கையடக்கமாய் சுருக்கி எறும்பு போல் ஓட விட்டும் பார்க்கும் மனநிலை அவளுடையது. மனிதர்களின் தொடர் அலைச்சலின், பாய்ச்சலின், மாற்றங்களின், அர்த்தமற்ற மன எழுச்சிகளின் பின்னால் அவளுக்கு எந்த நோக்கமும் தெரிவதில்லை. அவள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறாள். தொடர்ந்து கவனிப்பதன் மூலம் தன் முடிவை உறுதி செய்து கொண்டபடி இருக்கிறாள். பதினாறு வருடங்களாக. விமலாவின் வாழ்வு ஒரு கலைக்கப்பட்ட வாக்கியத்தை போன்று உள்ளது. அவள் மீள மீள செய்வது அதை படித்து பொருள் கொள்ளத் தான். அதை சரியாக வடிவமைக்க அவளுக்கு தெரிவதில்லை. ஆனால் கிங் லியரை போல அவள் கடவுளை சபிப்பதும் இல்லை. அவள் இருபதாம் நூற்றாண்டு மனநெருக்கடியின் விளிம்பில் நின்று வியக்கும் பெண். அவளுக்கு கடவுள் இல்லை. மேலும் சாய குடும்பமும், உறவுகளும், லட்சியங்களும் இல்லை.

நாவலின் ஆரம்பத்தில் ரேஷ்மி என்றொரு மாணவி விடுதி வார்டனான விமலாவிடம் ஊருக்கு போவதாய் பொய் சொல்லி தன் காதலனுடன் ஒரு விடுதியில் இரவு தங்குகிறாள். பொய் என்று நன்றாக தெரிந்து தான் விமலா அனுமதிக்கிறாள். காதல் மீது விமலாவுக்கு எந்த அபிமானமும் இல்லை. ஆனாலும் அனுமதிக்கிறாள். ரேஷ்மி தன் காதலனை மணப்பாள் என்று விமலாவுக்கு நம்பிக்கை இல்லை. வேறொருவனை மணந்த பிறகு அவளுக்கு திரும்பி பார்த்து புன்னகைக்க ஒரு கிளர்ச்சியான அனுபவம். இனிப்பான கசப்பான வாழ்வின் தொகுப்பில் மற்றொரு அர்த்தமற்ற பக்கம். காமம் ஒரு மிருகநிலை அனுபவமாக மட்டுமே நாவலில் வருகிறது. காதலை அது மகத்துவப்படுத்துவதோ கீழ்மைப்படுத்துவதோ இல்லை. அவ்விரவின் போது நடைபழக செல்லும் விமலா ரேஷ்மி புணரும் விடுதியை திரும்ப திரும்ப பார்க்கிறாள்; நினைக்கிறாள். அவளுள் ஒரு மெல்லிய பொறாமை கிளர்கிறது. இது கூட தூய மிருகநிலையிலே நடக்கிறது; அவளுக்கு ரஷ்மி மேல் கோபமோ வெறுப்போ இல்லை. காமத்தை அவள் ஒழுக்க அடிப்படையில் பார்ப்பதில்லை. குடும்பத்தை, உறவை, கடவுளை இழந்த பின் அவள் எந்த அடிப்படை மதிப்பீட்டையும் கொண்டு வாழ்வை அளப்பதில்லை. மேலும் ரேஷ்மியின் புணர்ச்சி முதல் அனுபவமாகவே காட்டப்படுகிறது. பின்னர் வேறொரு அத்யாயத்தில் விமலாவுக்கு தன் முதல் புணர்ச்சி நினைவு வருகிறது. ஜவ்வு கிழிபடுதலின் வலியும் கிளர்ச்சியின் உச்சமும் பிரக்ஞை இழத்தல் மூலம் சுயத்தை கடப்பதும் கலந்த ஒரு அனுபவமாக காமம் அவளுக்குள் குருதியின் லிபியில் எழுதப்பட்டுள்ளது. காமத்தின் போதும் மூடுபனி ஒன்று விலகுகிறது. படுக்கையில் இருந்து எழுந்த பின அவள் பதற்றபட்டு தன் நிர்வாணத்தை மறைத்துக் கொள்கிறாள். காமம் மூடிக் கொள்கிறது.
வெறுமையின் மறுபக்கம் போல் விமலா மனிதர்களிடத்து காண்பதெல்லாம் அபத்தம் மட்டுமே. அபத்தம் பொருத்தமின்மையின் இன்னொரு பெயர். நுட்பமாக கவனிக்கையில் வாழ்வில் இது புலனாகிறது. திருமதி.புஷ்பா சர்கார் என்கிற ஆசிரியை விமலாவுக்கு முன் விடுதி வார்டனாக இருந்தவள். அவள் நடத்தை ஒழுங்கீனம் காரணமாக வேலையில் இருந்து நீக்கப்பட்டவள். அவள் செய்த தவறு தனது அறைக்கு ஒரு இளைஞனை இரவுத் துணைக்காக அழைத்து வந்தது. வேலைக்கு சேரும் விமலாவுக்கு திருமதி புஷ்பாவின் அறை கிடைக்கிறது. தனது அறையை காலி செய்து செல்லும் திருமதி புஷ்பாவை விமலா சந்திக்க நேர்கிறது. அவளது இடத்தை கைப்பற்ற வந்த தன் மீது திருமதி.புஷ்பா கடுமையான துவேசம் கொண்டிருப்பாள் என்று விமலா எதிர்பார்க்கலாம். ஆனால் வெறுப்பு போக திருமதி.புஷ்பாவிடம் தனது ஒழுக்கம் குறித்த குற்றவுணர்வு கூட இல்லை. அவள் விமலாவிடம் சொல்கிறாள் “எனது அறையை எடுத்துக் கொள், இந்த விடுதியிலேயே மிகச் சிறந்தது அது தான். இதற்காக நீ பின்னர் எப்போதுமே வருந்த மாட்டாய்  அந்த அறையில் இருந்து பார்த்தால் மட்டுமே சூரிய வெளிச்சத்தில் பனிமலைகள் ஒளிர்வது தெளிவாக தெரியும். திருமதி.புஷ்பா கள்ள உறவு கொள்கிறாள், மூன்று முறை திருமணம் செய்கிறாள், தொடர்ந்து ஒழுக்க சிலுவையில் அறையப் படுகிறாள். ஆனால் இவை யாவுமே அவளுக்கு ஒரு அர்த்தத்தில் வெறும் வேடிக்கை தாம். அவள் வழிமொழிந்த அந்த ஜன்னல் தான் விமலாவுக்கு பல வருடங்களாய் இயற்கையின் தொடர்மாற்றங்களையும் மாறாமையையும் ஒரு சேர காட்டி வருகிறது. வசந்தமும், இலையுதிர் பருவமும், பனிக்காலமும், கோடையும் மாறி மாறி செல்கிறது. ஆனால் பனிக்காலமும் வசந்தமும் இடம் மாறும் இடைக் கோட்டில் தான் திருமதி.புஷ்கர் நிற்கிறாள். தனது இருப்பின் பொருத்தமின்மை அவளுக்கு புரிந்திருக்க கூடும். திட்டவட்டமான விதிமுறைகளால் அர்த்தப்படுத்தல்களால் ஆன வாழ்வின் மீதுள்ள அவளது எதிர்வினை அசட்டை. தொடர்ந்து காதலர்களை மாற்றி சலித்த பின் அவள் மதம் மாறுகிறாள். அதையும் ஒரு அசட்டையுடனே திருமதி.புஷ்கர் செய்திருக்க கூடும்.


அந்த பகுதியில் உள்ள மலை உச்சயில் ஒரு கோவில் உள்ளது. வசந்தத்தின் போது அங்கு வரும் சுற்றுலாவாசிகளில் காதலர்கள் அம்மலைக்கு செல்லும் வழியில் கைகோர்த்து நடப்பார்கள். கட்டிப்பிடித்து உருளுவார்கள். அங்கு ஒரு கூர்மையான பாறை உச்சி உள்ளது. அதில் ஏறி நின்று காற்றில் அலைமோதியபடி தொலைவில் ஆழத்தில் தெரியும் குமவோனின் சிறுத்த காட்சியை பார்க்கலாம். அந்த பாதைக்கு “lovers trackஎன்று பெயர் காதலர்களால் அந்த மலைக் கோவிலுக்கு அமோக வசூல். ஆனால் ஒருநாள் ஒரு பெண் அந்த பாதையின் பெயரையும் கோவிலின் நிலைமையையும் தலைகீழாக மாற்றி விடுகிறாள். காதல் ஏமாற்றத்தால் அவள் கூர்மைமான அப்பாறை மீது ஏறி குதித்து விடுகிறாள். அப்பாதை அன்றில் இருந்து “devil’s track” என்று அழைக்கப்படுகிறது. பயணிகள் வருகை கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிறது. கோவில் பாழடைந்து போகிறது. சாமி அநாதையாகிறார். அக்கோவிலின் பூசாரி தன் வாழ்நாள் முழுக்க இனி அந்த தற்கொலை செய்த பெண்ணை சபித்துக் கொண்டிருக்கக் கூடும் என்று விமலா நினைத்துக் கொள்கிறாள். நாவலின் மற்றொரு முக்கிய பாத்திரம் ஒரு சர்தார்ஜி. அவர் விமலாவின் அண்டையில் உள்ள ஒரு விடுதியில் தங்க வருகிறார். வயதான அம்மனிதர் புற்றுநோய் தாக்குதலின் இறுதி கட்டத்தில் இருக்கிறார். ஒருநாள் அவர் விமலாவின் தனித்த மலை ஏற்ற சாகசத்தில் எதிர்பாராமல் கலந்து கொள்கிறார். அவர் அந்த கூர்மையான பாறைக்கு இட்டு செல்லும் பாதையை சுட்டி இங்கு காதலுக்கும் மரணத்துக்கும் மனிதர்கள் ஒருசேர வருவதில் ஒரு நியாயம் உள்ளது என்கிறார். “வாழ்க்கை மலரக் கூடிய ஆதே இடத்தில் தான் அது அழிக்கப்படவும் வேண்டும். மனித நடவடிக்கையின் பொருத்தமின்மையை இவ்வசனம் சுட்டிக் காட்டுவதை கவனியுங்கள்.
மரணமும், இழப்பும், வேரின்மையும் உண்மைத் தேடலை, கண்டறிதலை தூண்டுகின்றன. இதற்கான மனித எதிர்வினை ஆளாளுக்கு மாறுபடும். விமலா தன் ஆன்மாவின் புலன்களை இறுக்க மூடிக் கொள்கிறாள். இயற்கை வெறுமனே தன்னை கடந்து செல்வதை பார்த்தபடி இருக்கிறாள். ஒரு உறைந்த புதைபடிமம் போன்று உள்ளது அவள் மனது. சர்தார்ஜி நேர்மாறாக வாழ்வை எதிர்கொண்டு அனுபவிக்கும் அவசரத்தில் இருக்கிறார். புத்து என்றொரு படகோட்டி வருகிறான். ஒரு வெள்ளைக்கார பயணியின் ஓரிரவு இச்சைக்கு உடன்படும் இந்திய ஏழைப் பெண்ணுக்கு பிறந்தவன். அவன் தினமும் தன் அப்பாவை எதிர்பார்த்து அவரது பழைய புகைப்படம் ஒன்றுடன் காத்திருக்கிறான். வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டு சென்று விட்டார்கள் என்றும் காத்திருந்து ஏமாற வேண்டாம் என்றும் அவனுக்கு சொல்லப்படுகிறது. ஆனால் அவன் அந்த காத்திருப்பின் மூலம் மட்டுமே தன் வாழ்வை உறுதிப்படுத்துகிறான். அந்த எதிர்பார்ப்பு அவனது பிடிமானம். தனது அசட்டுத்தனம் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் “இந்த முறை எப்படியும் என் அப்பாவை பார்த்து விடுவேன் என்று அவன் திரும்பத் திரும்ப சொல்கிறான். வாழ்வின் அபத்தத்தை அறிவீனம் கொண்டு எதிர்கொள்வதில் ஒரு குழந்தைமை உள்ளதாக எம்.டி அவதானிக்கிறார். அவனது பாத்திரம் தான் நாவலின் பரிசுத்தமானது. அவன் மட்டுமே தொடர்ந்து மனம் திறந்து சிரிக்கக் கூடியவனாக வருகிறான். புத்து என்றால் பேதை என்று பொருள். (இப்பொருள் எந்த ருஷ்ய நாவலை நினைவுபடுத்துகிறது?)
மரணம் பற்றின சித்தரிப்புகள் நாவலின் மிகத் தீவிரமான இடங்கள். விமலாவின் அப்பா இறக்கிறார். அந்த செய்தியை கேட்டதும் அவள் தான் உடைந்து அழப் போவதாய், தடுமாறி மயங்கப் போவதாய் எதிர்பார்க்கிறாள். ஆனால் காம்யூவின் மெர்சால்டை போல அவள் மிக அமைதியாகவே இருக்கிறாள். ஒரு சொட்டு கண்ணீர் வர மாட்டேன் என்கிறது. மரண வீட்டில் நிம்மதியாக தூங்குகிறாள். அங்கு தன் அம்மா, தம்பி மற்றும் உறவினரின் பாசாங்கு அவளை அருவருப்படைய வைக்கிறது. அன்பை விட சுயநலத்தையே மிகையாக காண்கிறாள். அதற்கு மேல் தாங்க முடியாமல் அடுத்த நாள் காலையில் கிளம்பி விடுகிறாள்.
சர்தார்ஜி மரணத்துடன் ஒரு அமைதி உடன்படிக்கை செய்து கொள்கிறார். தினமும் மாலையில் உருக்கமான ஒரு காதல் பாடலை பாடியபடி அற்புதமாக இக்தாரா எனும் ஒரு இசைக்கருவியை மீட்டுகிறார். தன்னுடன் ஒரு நண்பன் தங்கி இருப்பதாய் அடிக்கடி விமலாவிடம் கூறுகிறார். ஒரு நாள் அவளை நடைக்கு அழைத்து செல்வதாய் சொல்லி பின்னர் தன் நண்பன் அனுமதிக்கவில்லை என்று வர மறுக்கிறார். சர்தார்ஜி விடை பெற்று அந்த ஊரை விட்ட சென்ற பின் தான் விமலாவுக்கு தெரிய வருகிறது அவர் தனிமையில் தான் தங்கி இருந்தார் என்று. ஆனாலும் அவர் தனியாக இருக்கவில்லை. நண்பருடன் தான் இருந்தார்: மரணம்.
மலை மீது விமலாவை சந்தித்து அவர் மேற்கொள்ளும் உரையாடல் கவித்துவமானது. விமலா சதா மிக அமைதியாக இருக்கிறாள். சர்தார்ஜி சொல்கிறார் “இளமையில் நானும் உங்களைப் போலத் தான் இருந்தேன். பெரும்பாலும் தனக்குத் தானே தான் பேசிக் கொண்டு இருப்பேன். இப்போது என்னால் எதனுடனும் பேச முடியும். பாறைகள், மரங்கள், விளக்கு கம்பங்கள். இது ஒரு வரம் இல்லையா, பேச முடிவது, டீச்சர்ஜி. பின்னர் விமலாவின் அப்பாவின் மரணம் குறித்து உரையாடும் போது சொல்கிறார் “நீங்கள் அழுவது பார்த்தால் அருவருப்பாக இருந்தது. ஆனால் நீங்கள் அதை மறைத்து புன்னகைப்பது இன்னும் சகிக்கவில்லை. மரணத்தை வேறு என்னதான் செய்வதாம்? இதற்கு காட்சிபூர்வ விடை போல் ஒரு காட்சியில் சர்தார்ஜி மலை மீதுள்ள கூர்மையான தற்கொலை பாறையின் மீது நின்று உற்சாகமாக புன்னகைத்தபடி கையை தூக்கி காட்டி சொல்கிறார் “பாருங்கள் இங்கிருந்து மரணத்தை பார்க்க முடியும். அப்பாறைக்கு அப்பால் உள்ள பனித்திரைக்கு அப்பால் பெரும் பள்ளம் தான். இந்த வெறுமை நிஜம் என்றால் அவரால் அதை உள்ளார்ந்த திருப்தியுடன் ஏற்றுக் கொள்ள முடிகிறது; கிங்லியரை நினைவுபடுத்தும் படியாய் சர்தார்ஜி ஒரு மணிமொழி உதிர்க்கிறார் “மரணம் மேடை பிரக்ஞை இல்லாத ஒரு கோமாளி. அவரால் அமைதியாக இந்த கோமாளியுடன் கைகுலுக்க முடிகிறது. ஆனால் நாவலின் முடிவில் விமலா வேறொரு முடிவுக்கு வந்து சேருகிறாள்.

சுதீர் ஏன் விமலாவை கைவிடுகிறான். இதற்கு நேரடியான காரணங்கள் சொல்லப்படவில்லை. சுதீருக்கு மிக விருப்பமான சில கவிதை வரிகள் உள்ளன. அடிக்கடி அவற்றை அவன் மேற்கோள் காட்டுவான்.

“எனது வாழ்வினாலும், எனக்கு பின்வரப் போகிறவர்களின் வாழ்வினாலும் நான் சோர்ந்து போகிறேன்
என் மரணத்தையும், எனக்கு பின்னார் வருபவர்களின் மரணங்களையும் நான் இறந்து கொண்டிருக்கிறேன்

காதலை அதன் விதிமுறைகளுடனும் சம்பிரதாயங்களுடனும் வாழ முயலும் போதும் இந்த சோர்வு நமக்கு ஏற்படும். காதலில் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. மற்ற எல்லா இறுகிப் போன உறவுமுறைகளைப் போலவும் காதல் மியூசியத்தில் பாதுகாக்க வேண்டியிய ஒன்றாகிறது. காதலுக்கு துரோகம் அவசியமான ஒன்றா? குன்றின் மேலேறி செய்யும் காதலை அங்கிருந்து குதித்தே அழித்துக் கொள்ள வேண்டுமா? மேற்சொன்ன கவிதை வரிகளின் சோர்வு சுதீரின் துரோகத்தின் காரணங்களில் ஒன்றா?

சர்தார்ஜி விமலாவிடம் “ஒரு ஜோக் சொல்லவா? உங்களை எனக்கு பிடித்திருக்கிறது என்கிறார். விமலா பதற்றமாகிறாள்.
அவர் சொல்கிறார் “கவலைப்படாதீர்கள் உங்களை வழிமறிக்கவோ காதல் கடிதங்கள் எழுதவோ எல்லாம் செய்ய மாட்டேன், அப்படித் தான், எந்த உறவும் கற்பனை செய்யாமல் தான் உங்களை நேசிக்கிறேன்
விமலா சொல்கிறாள் “உங்களுக்கு என்னை பற்றி எதுவுமே தெரியாதே?
“அப்படித் தான் இருக்க வேண்டும். நான் வேண்டுமானால் பிறரிடம் விசாரித்து உங்கள் மொத்த பின்னணியையும் தெரிந்து கொள்ளலாம். நூற்றுக்கணக்கான தகவல்கள். எல்லாவற்றையும் சேர்க்கும் போது உங்கள் சித்திரத்தில் ஓராயிரம் இலைகளும் வேர்களும் இருக்கும். நீங்கள் அதில் ஒரு புள்ளியாக மட்டும் இருப்பீர்கள். திட்டவட்ட நிலைத்த உறவின் பிரச்சனை இதுதான். எதிர்தரப்பை நமது அறிவின் தூசு மண்டலத்தில் மூழ்கடித்து விடுகிறோம். விழுமியங்களின் சட்டகத்தில் மாட்டி கண்காணிப்பின் கடும்வெயிலில் காய வைக்கிறோம். சுவாசம் கிட்டாமல் காதல் மெல்ல மெல்ல காய்ந்து சாகிறது. (சுதந்திரமான காதல் சர்தார்ஜி சொன்னது படி தான் இருக்க வேண்டும் என்று ஒரு இருத்தலியலாளர் சொன்னார். யார் அவர்?)

இந்த தத்துவ இரைச்சலை எல்லாம் மீறி அன்பின் பரிசுத்தத்தை விமலா இந்த இடத்தில் முதன்முறை தொடுகிறாள். இந்த தொடுகை முக்கியம். விமலா மெல்ல இளகுகிறாள். சர்தார்ஜி ஊரை விட்டு கிளம்புகிறார். விமலாவை அவரது பிரிவு மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது. நான்கே மாதங்களில் சர்தார்ஜி இறந்து விடுவார். அன்பை பல சமயங்களில் முட்டாள் தனமாக வெளிப்படுத்தி அவ்வாறே முடித்து கொள்ள வேண்டி இருக்கிறது. சர்தார்ஜி அதுவரை தனது துணைவன் என்று குறிப்பிட்டது மரணத்தை தான் என்று அவளுக்கு அவர் சென்ற பின்னர் தான் தெரிய வருகிறது. அறைக் கதவை சாத்திக் கொள்கிறாள். அவளும் தனக்குள் மூடிக் கொள்கிறாள். ஆனால் இம்முறை மூடுபனிக்கு அப்பால் வெறுமை அல்ல என்று அவளுக்கு தெரியும். மூடுதல் என்பது ஒரு அணைப்பாகவே இருக்கிறது.

நாவலின் கடைசி காட்சியில் விமலா விமலமான, முட்டாள்தனமான தன் நண்பன் புத்துவுடன் படகில் செல்கிறாள். சீஸன் முடிந்து விட்டது. இனிமேல் சுற்றுலா பயணிகளும், அவர்களுடன் அவனது வெள்ளைக்கார அப்பாவும், வரப் போவதில்லை. அவன் சொல்கிறான் “சீஸன் முடிந்து விட்டது, யாரும் வரவில்லை. அவள் திரும்ப சொல்கிறாள் “யாரும் வரவில்லை”.
“மேம்சாப் நாம் அடுத்த வருடத்துக்காக காத்திருப்போம் என்கிறான் அவன். அவள் முதன்முறையாக தலையாட்டி ஆமோதிக்கிறாள். நாவல் விமலா முணுமுணுத்து தனக்குள் சொல்லும் இவ்வரியுடன் முடிகிறது:
“அவர் கண்டிப்பாக வருவார். இங்கு “அவர் சுதிர் எனும் காதலனில் இருந்து புத்துவின் அப்பாவில் இருந்து வேறொருவராக பொருள் மாறுகிறது.

கடைசி வரியில் இருந்து நாவல் மீண்டும் தொடங்குகிறது.

(பின்குறிப்பு: இக்குறுநாவல் கீதா கிருஷ்ணன் குட்டியால் அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Writings of M.T. Vasudevan Nair என்ற மொத்த தொகுப்பில் இடம் பெற்று உள்ளது. பிரசுரம் Orient Blackswan.)
Read More

Saturday 12 February 2011

மது நீரிழிவை தடுக்க உதவுமா? நீரிழிவு இருந்தால் குடிக்கலாமா?




நீரிழிவு தீவிரமான வாழ்வு முறை மாற்றங்களை கோருவது என்பது நமக்கு தெரியும். காப்பியில் சர்க்கரையை தவிர்க்கும் அளவுக்கு அது எளிதல்ல. உதாரணமாய், செரிமானத்தின் போது எளிதில் சர்க்கரையாக மாறக் கூடிய மாவுச் சத்து உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும், அது என்ன உணவுப் பொருள் என்று தெரிய வேண்டும்? இனிப்பில்லாத ஆனால் கலோரி எனப்படும் ஆற்றல் கணக்கு அதிகமான உணவை தவிர்க்க அல்லது குறைக்க வேண்டும். இனிப்பில்லாத ஆனால் காரமான பொரித்த தின்பண்டம் சாப்பிடக் கூடியதல்ல என்று தெரிய வேண்டும். ரத்த சர்க்கரையை உயர்த்தக் கூடிய சங்கதிகள் நம் உணவில் மறைமுகமாகவே அதிகம் உள்ளது. சுருக்கமாக ஒரு வாய் அருந்தும் முன் மென்று முழுங்கும் முன் யோசித்து அலச வேண்டும். இது மனிதனின் உணவுக் கலாச்சாரத்துக்கு பொதுவான இயற்கை பண்புக்கே விரோதமானது. இதனாலே உணவு முறை மாற்றங்கள் ஆரம்ப கால நீரிழிவாளனை எரிச்சலூட்டுகின்றன. யோசித்து உண்பது யோசித்து பின் புணர்வது போல். எங்கோ உதைக்கிறது!

இதனாலே நாம் இங்கு இது குறித்து யோசிக்கிறோம். குறிப்பாக குடி பற்றி. மது மற்றும் புகை பழக்கம் நிச்சயம் ரத்த சர்க்கரையை திமிற வைக்கும். ஆனால் நான் சமீபமாக படித்த ஆய்வொன்று மது சர்க்கரையை அளவை குறைக்கும் என்கிறது. குறிப்பாய் இதுவரை நீரிழிவு இல்லாதவர்களுக்கு அதை தவிர்க்க மது உதவும் என்கிறது இவ்வாய்வு. குறிப்பாய் மதுவுக்கு சர்க்கரை அளவை எகிறாமல் பார்க்கும் பண்பு உள்ளது. ஆய்வாளர்களை பொறுத்த மட்டில் ஒரு நாளைக்கு ஒரு பெக் குடித்தால் இருபது சதவீதம் வரை நீரிழிவு வரும் வாய்ப்பை தவிர்க்கலாம். சிக்கல் என்னவென்றால் இது ஐரோப்பிய பண்பாட்டுக்கு பொருந்தும் ஒரு கலாச்சார பழக்கம். அவர்கள் சாதாரணமாக்வே உணவின் போது ஒரு பெக் மது அருந்தக் கூடியவர்கள் தாம். அது பெரும்பாலும் வைனாக இருக்கிறது. ஆனால் வைனும் பீரும் அதிக கலோரிகள் கொண்ட மது வகைகள். விஸ்கி போன்று ஹாட்டானவை ஒப்பீட்டளவில் குறைந்த ஆற்றல் உள்ளவை. அதாவது சர்க்கரையை அதிகமாய் எகிற வைக்காது. ஆனால் ஒரு பெக் விஸ்கி ஒரு கோப்பை சர்க்கரை சேர்க்காத பழரசத்தை போன்றது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இயற்கையான சர்க்கரை அல்லது கலோரிகள் அதில் உண்டு. நீரிழிவாளர்கள் தினமும் குடிக்கலாம். ஆனால் மூன்று விசயங்களை கணக்கில் கொள்ள வேண்டும்.

முதலில் தொடர்ச்சியாக ரத்த சர்க்கரையை பரிசோதிக்கும் பழக்கம் கொண்டவராக நீங்கள் இருக்க வேண்டும். இதை அக்யு செக் போன்ற ரத்த சர்க்கரை சோதனை எந்திரங்கள் மூலம் எளிதாக ஐந்து நொடிகளில் செய்யலாம். வாரத்துக்கு சில முறையேனும் இவ்வாறு செய்தால் உங்கள் ரத்த சர்க்கரை அளவாக உள்ளதா என்று அறியலாம். கட்டுப்பாடில் உள்ளதென்றால் முதல் பச்சை விளக்கு.
அடுத்து குடிக்கும் முன் அந்த வேளையில் ஒரு முறை சோதித்து பார்ப்பது நல்லது. அப்போதும் கட்டுப்பாட்டில் இருந்தால் மிகவும் நல்லது. ஒரு பெக் மட்டும் சாப்பிடப் போகிறீர்கள் என்றால் உங்கள் வழக்கமான உணவில் கொஞ்சம் குறைத்து கொள்ளலாம். உதாரணமாய் ஒரு தோசை அல்லது சப்பாத்தியை குறைக்கலாம். சைட் டிஷ்ஷாக வெள்ளரிக்காய் தக்காளி, அதிக எண்ணெயில்லாமல் செய்த காலி பிளவர் மசாலா போன்ற சாதுவானவற்றை உட்கொள்ளலாம். முக்கியமாக குடிக்கும் ஆர்வத்தில் அல்லது குடித்த போதையில் வழக்கமாக எடுக்கும் மருந்தை மறக்காதீர்கள். மறந்தால் நீங்கள் அடுத்த நாள் ஒருவேளை ஆஸ்பத்திரி படுக்கையில் விழிக்கலாம். இன்சுலின் எடுப்பவர்கள் பெக்குக்கு ஏற்றபடி இன்சுலின் மற்றும் உணவு கணக்கை கூட்டி குறைக்கலாம். எல்லாம் மிதமாகத் தான்.

மூன்றாவதாக, குடித்து இரண்டு மணிநேரம் கழித்து ரதத சர்க்கரையை பரிசோதிக்கலாம். நானூறை தாண்டி விட்டால் நள்ளிரவு என்றாலும் மருத்துவரை அழையுங்கள். இல்லாவிட்டால் முன்னர் சொன்னது போல் மருத்துவமனை படுக்கையில் வழக்கமான சினிமா வசனத்துடன் விழிப்பீர்கள்.

ஒரு மன திருப்திக்காக கொஞ்சம் குடித்து அதிகமாய் சலம்பலாம். எனக்கு கொஞ்சம் சாப்டாலே ஏறிடும் என்று ஒரு வசனம் சேர்த்துக் கொள்ளலாம். இத்தனையும் கொஞ்ச நாளில் பழகி விடும்.

ஆனால் ... குடிக்க ஆரம்பித்து அன்றைய கலாச்சார மனநிலையில் ஒன்றிய பின் இத்தனையும் நினைவில் வைத்திருப்பது எப்படி என்று தான் தெரியவில்லை!
Read More

இடைப்பட்ட வெளியில்



நாய்க்கு கதவின் பொருள்
புரிவது இல்லை
அது கதவுக்கும் வெளிக்கும் நடுவாக
அமர்ந்து வாலசைக்கிறது
தன் காதை அறைக்கு உள்ளாக
அறை ஜன்னலின் திசைக்கு
திருப்புகிறது
தொலைவில் கேட்கும் குரைப்புகள் விசும்பல்கள் ஊளைகள் சத்தமான அழைப்புகள் ரயில் சைரன் குழந்தைகளின் கீச்சிடலுக்கு
திடுக்கிட்டு பதற்றமாகி
இடைப்பட்ட வெளியில் இருந்து வெளியே சென்று உறுதிசெய்து
மீண்டும் திரும்பி
மூடின கதவிடம் முறையிடுகிறது
பிறாண்டுகிறது
சிலமுறை அறைகிறது
ஒருமுறை நின்று தள்ளுகிறது
தட்டினால் திறப்பதில்லை கதவு
என்பது நாய்க்கு தெரிந்தது தான்
அறைக்குள் அதன் பிராந்தியமும் இல்லைதான்
மறுபுறம் ஓசைகளின் குழப்பத்துக்குள் திரும்புதலும்
அவஸ்தையே
அதனால்
அதன் காதுகள் திசைக்கொன்றாய் திரும்பி கேட்கின்றன
இடைவெளியின் இடத்தில்
கதவு ஏன் இருக்கிறது?
Read More

Sunday 6 February 2011

நாங்கள் காதுகளை திருப்பிய போது


என்னைப் பார்த்து தான்

தலையணையில் தலை சாய்க்க

படுக்கை ஓரமாய் உருள

சதா காதுகளை பல கோணங்களிலாய் தூக்கி திருப்பி ஒட்டு கேட்க


உணவையும் உறவையும் நுகர்ந்தவுடன் முதுகெலும்பை வால் போல் தூக்கிக் கொண்டு நடக்க

பார்க்காதவற்றுக்குக் கூட பயந்து கொள்ள

கற்றிருந்தது

இருப்பதிலே வினோதம்

எனக்கு முன்னரே

புரியாததற்கு பதிலாக மீயாவும்

புரிந்ததற்கு கேள்வியாக மௌனமும்

தெரிந்திருந்தது தான்

நாங்கள் இருவரும் மௌனித்திருக்கும் போது

உலகம் தன் அனைத்து துளைகள் வழியும்

ரத்தம் கசிந்தது

எதிரெதிர் துருவங்களில் அக்குருதியால்

உறைந்தது

இறந்த கடல்களில் ஒவ்வொரு அணுவாய்

உயிர்த்தது

அனைத்து திசைகளிலும் புயல்களை

உள்ளிழுத்து ஆசுவாசித்தது

வானின் கண்ணாடி பாளங்களில் விண்கற்களை

வாங்கிக் கொண்டது

தன் கருப்பையை திறந்து திறந்து மூடியது

நாங்கள் காதுகளை காதுகளை திருப்பிய போது

அது ஒருமித்து அலறியது
Read More

பூனையிடம் மன்றாடும் ஆசிரியர்


நவீன பெண்களைப் போலவே நவீன கவிதைகளும் உள்ளடக்கத்தில் குழப்புவனவாகவும் ஏமாற்றம் தருபவையாகவும் இருப்பது நமக்கு பரிச்சயமானது தான். பத்திரிகைகளில் கவிதைப் பக்கங்களை எங்கே சுட்டு விடுமோ என்ற அச்சத்தில் புரட்ட நேரிடுவது கவிஞனுக்கும் வாசகனுக்கும் இன்று ஒருசேர ஆபத்து தான். இந்த நெருக்கடி வாசிப்பு நிலையில் சில கவிதைகள் வண்ணமடித்த கோழிக் குஞ்சுகளாக தெரிகின்றன. ஒன்று செல்மா ப்ரியதர்சனின் “பூனையிடம் மன்றாடும் ஆசிரியர். மிக அரிதான ஒரு நவீன நகைச்சுவை கவிதை. மொழியில் புதுமையும் கூர்மையும் உள்ளது. வகுப்பறையில் நடக்கும் ஒரு வன்முறையை நுட்பமாக அலட்டாமல் சொல்கிறது. பிப்ரவரி மாத தீராநதியில் 32வது பக்கத்தில் உள்ளது. வன்முறை நகைச்சுவை எனும் இரு எதிர் துருவங்களில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்கலாம்
Read More

Friday 4 February 2011

மரணத்தை மெல்ல பற்றி




காலை வெயிலுக்கு பின்னரும்
தங்கிடும் கொசுக்கள்
எண்ணிக்கையில் குறைவானவை
உருவத்தில் பெரியவை
போதையில் சலம்பும் நள்ளிரவு குடிகாரர்களை போல்
அவை உடலில் அமர்ந்திருக்க
காற்றில் மெல்ல நடுங்குகின்றன
அவை கடிப்பதே இல்லை
அல்லது தெரியாதபடி மிருதுவாக கடிக்கும்
பரிணாமத்துக்கும் அழிவுக்கும்
நடுவிலான
இக்கொசுக்கள்
அடிக்கப் போகும் நம் கையின்
நிழலை
காண்பதில்லை அல்லது அலட்சியப்படுத்துகின்றன
நீங்கள் வேகமாகவோ மெல்லவோ அசைந்தபடியோ
அடிக்கலாம்
திட்டமிடலும் சூழ்ச்சியும் வஞ்சகமும்
அவை முன் தோற்கின்றன
அடித்த உடன்
அவை ரத்தம் சிந்துவதில்லை
கொசுவின் ரத்தம் எவர் ரத்தம்?
ரத்தம் தெறிக்கும் போது
நாம் இதை கேட்பதில்லை
நம்மிடம் இருந்து
மிக காருண்யமான ஒரு அடியையே
அவை வேண்டுகின்றன
அதனால்
ஒரு செல்லப்பிராணியை போல்
நாம் அதை அன்பாக தட்டுகிறோம்
அடிபட்ட பின்
அவை சிதைவது இல்லை
உருண்டோடி பக்கத்தில்
எங்காவது விழுந்து
காணாமல் போகின்றன
சிறிது நேரம் தேடி விட்டு ஓய்கிறோம்
வற்புறுத்தாமல் வலியுறுத்தாமல் எதையும்
உறுதி செய்யாமல் உயிர் பிரியும் அவை
ஒரு வேளை நம்
முழங்கையில் இருந்த போதே
இறந்து விட்டிருந்தனவா
என்று நினைக்கும் போது
நமக்கு லஜ்ஜை ஏற்படுகிறது

காலை வெளிச்சத்தை அருந்தியபடி இருக்கும்
கொசுக்கள்
உறுதியின்மையால்
நம்மை வியப்பூட்டுகின்றன
மரணத்தின் விரலை
அவை
மிருதுவாக பற்றி இருக்கின்றன
எதையும் எதிர்பார்த்து இருக்கும் போது
எதுவும் நிகழ்வதில்லை
என் நாளை ஆரம்பிக்கும் பரபரப்பு
தொற்றும் முன்
இதோ அடுத்த கொசு
கட்டை விரலில் அமர்ந்து
மெல்ல தியானிக்கிறது
Read More

Tuesday 1 February 2011

127 Hours: “இந்த பாறை இங்கே எப்படி வந்தது?”




டேனி பாயிலின் புதிய படமான 127 Hours பாதியில் ஆரம்பித்து பாதியிலே முடிகிறது. ஒருநாள் கிரிக்கெட் ஆட்டமொன்றின் மிகச்சிறந்த மத்திய ஓவர் ஆட்டப் பகுதியில் சாத்தியப்படும் அளவுக்கு திகிலும் சாகசமும் சுவாரஸ்யமும் படிப்பினைகளும் கொண்டுள்ளது. ஆழமான அமெரிக்க பள்ளத்தாக்கு ஒன்றில் பாறை இடுக்கில் வெளியேற முடியாத படி மாட்டிக் கொண்ட ஆரன் ரேல்ஸ்டன் எனும் மலை ஏற்ற பயணி ஒருவன் 5 நாட்கள் போராடி வேறு வழியின்றி தன் கையை அறுத்து தப்பிக்கிறான். இந்த மெலிதான கதைச் சரடை ஏற்கனவே அறிந்த நாம் எப்படி இதைக் கொண்டு படம் செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வத்திலோ, பேராபத்தில் இருந்து மீளும் வழமையான ஹாலிவுட் சாகச காட்சிகள் காணும் கிளுகிளுப்பிலோ 127 மணிநேரங்களை பார்க்க அமர்கிறோம். ஆனால் பாய்ல் இரண்டையும் உத்தேசிப்பதில்லை. ஹாலிவுட்டின் வெற்றிகர சூத்திரப்படி இப்படம் ஒரு சிக்கலை முன்வைத்து அதை படிப்படியாக சிரமங்களுக்கிடையே அவிழ்த்து காண்பிப்பதில்லை. பிரச்சனையும் அதன் முடிவும் மட்டுமே படத்தில் பிரதானப்படுத்தபடும் காட்சிகள். ஸ்லோமோஷனும் உக்கிகரமான பின்னணி இசையும் நாடகீயமும் இக்காட்சிகளில் மட்டுமே குவிக்கப்படுகின்றன. இருந்தும் திரைக்கதை இந்த இரண்டு உச்சப் புள்ளிகளில் அமைக்கப்படவில்லை. 127 மணிநேரங்களில் பாயிலின் சினிமா மொழி இரண்டு கதைகளை சொல்லுகிறது. ஒன்று, உடல் மற்றும் மனரீதியாக கடும் நெருக்கடிக்கும் வலிக்கும் உள்ளாகும் ஒருவனின் மனப்பிராந்தி, கடும் அவநம்பிக்கைக்கும், வெறுப்புக்கும், உற்சாகத்துக்கும், தன்னம்பிக்கைக்குமாய் அலைபாயும் அவன் எண்ணங்கள். இதன் தொடர்ச்சியாக இச்சை மனித மனதின் மிக அடிப்படையான உந்துதல் என்பதை, மனித உய்வை செலுத்தும் ஆற்றல்களில் ஒன்று என்று அவதானிக்கிறார். அடுத்தது, பாறை இடுக்கில் கை மாட்டி ஐந்து நாட்கள் தவிக்கும் தனியனான நாயகனுக்கு உறவுகளும், அவை தரும் ஆதரவும் நிலைப்பும், அன்பும் தனது வாழ்வில் எத்தனை முக்கியம் என்பதை புரியவைக்கும் ஒரு படிப்பினை கதை. இரண்டு கதைகளையும் தீவிரமாக காட்சிப்படுத்துவதில் பாயில் எந்தளவு வெற்றி அடைகிறார் என்பதை நாம் யோசிக்க வேண்டும். மற்றபடி தொலைந்தால் தேடிக் கிடைக்காத ஒரு ஊசிக் கதையை கொண்டு இயக்குநரால் ஈடுபாட்டுடன், தொய்வின்றி படத்தை நகர்த்த முடிந்திருக்கிறது; இது சாதனை அல்ல; பாய்லிடம் நாம் எதிர்பார்க்கக் கூடியதே. அவரால் வேறென்ன செய்ய முடிந்திருக்கிறது என்பதை பார்ப்போம்.
படத்தின் முதல் காட்சி ஒரு ரக்பை ஆட்ட அரங்கில் ஆர்ப்பரிக்கும் பார்வையாளர்களை காண்பிக்கிறது. பின்னர் சோர்வு மயக்கத்திலும் மரண பீதியிலும் இக்காட்சி நாயகனின் நினைவில் மீள்கிறது. அங்கு அந்த பெரும் கொண்டாட்ட சூழலில் தான் அவன் தன் காதலியை பிரிகிறான். பிரியும் போது காதலி சொல்கிறாள் “நீ தனிமையில் துயரப்படப் போகிறாய் என்று. ஒரு சாப வாக்கு போல் அவனுக்கு பின்னால் அது அவன் நினைவில் மோதுகிறது. அந்த ஆர்ப்பரிக்கும் அரங்கு தான் அவனது அதுவரையிலான வாழ்வு எனலாம். அங்கிருந்து வாழ்வின் குரூரமான அமைதியின் பள்ளத்தாக்கில் தவறி விழும் அவன் நிஜம் அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாத எளிய ஒரு சமகோட்டுப் பாதை என்று அறிகிறான். அந்த விபத்து இதை கற்றுக் கொடுக்கும் ஒரு மார்க்கம். விபத்து நிகழும் வரையிலான ஒவ்வொரு காட்சியையும் பாயில் நாயகனின் பிரதானமான ஆளுமைப் பண்பு ஒன்றை நிறுவுவதற்கே செலவழிக்கிறார்: அவசரம், சாகச விழைவு, வேகம் ஆகியவற்றை முடிச்சிட்டால அவனது ஆளுமை உருவாகிறது. வாழ்வை ஒரு தனித்த ஒற்றைபட்டையான சாகசப் பயணம் மட்டுமேயாக அவன் பார்க்கிறான். இதனால் பெற்றோருக்கும், காதலுக்கும் ஆன இடம் அவனது பரப்பில் சுருங்குகிறது. பள்ளத்தாக்கில் இரண்டு வழிதவறின அழகான யுவதிகளை சந்திக்கிறான். ஆனால் அவர்களின் காமம் அவனை தூண்டவே இல்லை. இவ்விசயம் பிற்பாடு அப்பெண்களுக்கும் வியப்பளிக்கிறது. காமம் தொடர்பான மற்றொரு நினைவு காட்சி வருகிறது. படுக்கையில் காதலியோடு இருக்கிறான். அவள் கேட்கிறாள் “உன் இதயத்துக்கான ரகசிய சங்கேத எண் என்ன?
அதற்கு அவன் “அதை சொல்லி விட்டால் நான் உன்னை கொன்று விட வேண்டுமே. அடுத்து அப்பெண் அவனது ஆண்குறியை வருடியபடி “கண்டுபிடித்து விட்டேனே என்கிறாள். இதற்கு அவனிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. எதிர்பாராமைகளும் பள்ளத்தாக்கின் ரகசியங்களுமே தனது இதயத்தின் திறவுகோல் என்று நினைத்தவனுக்கு பின்னர் நிகழும் விபத்து உடல் தான் உடலின் சாவி என்று கற்றுக் கொடுக்கிறது. மனது உடலின் ஒரு முகமூடி மட்டும் தான். உடல் ஒரே மொழி தான் பேசுகிறது. மனம் அதை பல்வேறு லிபிகளில் மொழிபெயர்க்கிறது. ஆக மலை இடுக்கில் தொங்கியபடி அவன் தான் புறக்கணித்த காதலியை கற்பனையில் வருவித்து தன் மார்புக் கணுக்களை தானே வருடுகிறான். மற்றொரு காட்சியில் வலுவிழந்து துவண்டு போன தன்னை உயிர்ப்புடன் வைக்க கேம்கார்டரில் பதிவான இளம் யுவதிகளின் மார்பகப் பிளவை பார்த்து சுயமைதுனிக்க முயல்கிறான். இந்த “சுயதரிசனத்தினால் பிறகு தன் மீதே அவனுக்கு கசப்பு ஏற்படுகிறது. விபத்தில் உயிர் சொட்டிக் கொண்டிருக்கும் போது அவன் தனக்கு மிக விருப்பமான அனுபவங்களை அசை போடுகிறான். அம்மா, அப்பா, தங்கை, பள்ளத்தாக்கு குன்று ஒன்றில் பார்த்த முதல் சூரியோதயம், காதலி, சுவையான உணவுகள், பீர், குளிர்பானங்கள், நடன விருந்து, பனிச்சாலை ஒன்றில் காருக்குள் ஆடையில்லாத ஆண் பெண்கள், அவர்களில் ஒருத்தி சொல்லும் ஐ.லவ்.யூ. ஏன் அவனது மலை ஏறும் சாகச அனுபவம் ஒன்று கூட அவனது மனப்பிரமைகளில் தோன்றுவதில்லை?. அவனது மனதுக்கு மிக நெருக்கமான சாகச மயிர்க்கூச்செறிதல்களை அந்த மலை இடுக்கில் அவன் சற்றும் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. ஏன்?
காரணம், மனித மனம் எத்தனை சிக்கலானதோ அத்தனை எளிமையானதும் என்பதே. அந்த பள்ளத்தாக்கு விபத்தின் போது தான் அவன் தன் மனதை உடலின் வழி பார்க்கிறான். பெரும் நோக்கங்களும், அக்கறைகளும் கொண்ட ஒரு வரலாற்றின் நீட்சியாக தோன்றினாலும் மனிதனின் ஆழ்மன குகையில் எதிரொலிக்கும் ஆசைகள் உணவு, காமம் மற்றும் உய்வுக்கான ஊக்கம் தான். உடலின் மனம் இந்த மூன்று சொற்களாலான ஒரு எளிய மொழியைத் தான் பேசுகிறது. கடுமையான வேதனையின் போது அவன் உடல் விழித்து அதை பேசத் தொடங்குகிறது.

அடுத்து ஆரன் வாழ்வை புரிந்து கொள்ள எத்தனிக்கும் ஒரு சரடு படம் முழுக்க ஓடுகிறது. இந்த தேடலின் துவக்கமும் சேருமிடமும் பாறைகள் தாம். ஒரு நினைவுக் காட்சியில் அவன் ஒரு பெரும் பாறை உருளையில் ஏறி நின்று “இப்படி ஒரு பாறை எப்படி இங்கு வந்திருக்கக் கூடும் என்று நண்பனிடம் கேட்கிறான். அடுத்து மலையில் சிறு பாறைகளில் மிதித்து ஏறும் போது வழி தவறிய யுவதிகளில் ஒருத்தி கேட்கிறாள் “இவை நகருமா? நகர்ந்து வழுக்கி விட்டால்?. அதற்கு அவன் “பாறைகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்று நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவை இருந்த இடத்தில் இருந்து நகராது என்கிறான். பின்னர் அப்படி ஒரு அதிர்ஷ்டம் கெட்ட நொடியில் ஒரு பாறை நகர்ந்து உருண்டு அவன் கை மீது விழுந்து அவனை இடுக்கில் மாட்ட வைக்கிறது. அதைப் பற்றி தனக்குள் அலசும் அவனுக்கு தோன்றுகிறது தான் இந்த பாறையை எதிர்நோக்கித் தான் இதுநாள் வரை ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்று. சாத்தியம் தான். நகராத நகரும் பாறைகள் மேல் நாம் நடந்து கொண்டே தான் இருக்கிறோம். உருளாத போது பாறைகள் வாழ்வை உயர் லட்சியங்கள் கொண்டதாக நம்பிக்கை மிகுந்ததாக காட்டுகிறது. சம்பவங்களின் கோர்வையில் சின்ன பிசிறு நிகழ்ந்தால், பாறைகள் உருளத் தொடங்கினால், பெரும் கசப்பின் பாலையாக வாழ்வு அவநம்பிக்கையை மட்டும் தருகிறது. அவன் தன் காலுக்கு கீழ் தரை ஸ்திரமாக உள்ளதா என்பதை பொறுத்து மாறி மாறி இரு நிலைப்பாடுகளையும் எடுக்கிறான். மலை ஏறக் கிளம்பும் முன் பல்பொருள் அங்காடிக் கடை நண்பன் ஒருவனிடம் “என் வாழ்வில் எல்லாமே சிறப்பாய் தான் நடக்கும் என்று கர்வத்தோடு சொல்கிறான். இந்த வசனம் பின்னர் விபத்தில் மாட்டின பின் வரும் 127 மணி நேரங்களில் அவனுக்கு மீள மீள நினைவில் வருகிறது. ஏனெனில் தன் வாழ்வு இந்த நம்பிக்கைக்கு நேர்மாறான ஒன்றானது என்று அவனுக்கு தோன்றி விடுகிறது. அழிவை நோக்கின ஒரு மாயப் பயணம். இறுதியில் பாறை இடுக்கில் இருந்து தப்பித்து கிளம்பும் போது அவன் நேர்மறை சிந்தனை பற்றி முத்திரை வசனங்கள் ஒன்றும் சொல்லுவதில்லை. நேர்மறை அணுகுமுறையின் அவசியம் பற்றி அழுத்திச் சொல்லும் காட்சிகளையும் கிளைமேக்சில் டேனி பாயில் அமைக்கவில்லை. மேலோட்டமாக பார்க்கும் போது இப்படியான கிளைமேக்ஸ் பார்வையாளனுக்கு தட்டையானதாக தெரியலாம். ஆனால் பாயில் இதை திட்டமிட்டே இப்படி எளிமையானதாக ஆர்ப்பாட்டமற்ற தாக அமைத்திருக்கிறார்.

நேர்மறையோ எதிர்மறையோ இந்த இரண்டு அணுகுமுறைகளும் உண்மை அல்ல. உருளாத, உருண்டோடும் பாறைகள் மீது நாம் நடந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே உண்மை.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates