Sunday 26 June 2011

ஸ்டான்லி க டப்பா: குடும்பத்திற்கு அப்பால் உள்ள அம்மா



ஸ்டான்லி க டப்பா வணிக சினிமாவின் வடிவொழுங்கை ஓரளவு மீற முயலும் படம் என்பதும், குழந்தைகளுக்கு க்ற்பனை மீசை ஒட்டி பேச வைக்காத படம் என்பதும், குழந்தைகளின் பெயரில் அமீர்க்கான் போன்றவர்கள் “ரஜினி அங்கிள் வேசம் போடாத படம் என்பதும் காட்சிகள் ஓடத் துவங்கின கொஞ்ச நேரத்திலே உங்களுக்கு புரிந்து விடும். குழந்தைகளின் காதலும் இல்லை. ஒரு உயர்மத்திய தர கத்தோலிக்க பள்ளிக்கூடம். அங்கு உணவு இடைவேளைகள் மற்றும் வகுப்புகளுக்கு இடையிலான சிறு இடைவேளைகளின் போது குழந்தைகள் தங்கள் இயல்புலகத்துக்கு திரும்புவதை, வீம்பும் வேடிக்கையுமாக அரட்டையடிப்பதை, கூச்சலெழுப்புவதை ஆவணப்பட பாணியில் காண்பிக்கிறார்கள். மெல்ல மெல்ல தான் ஒரு கதையொழுங்குக்குள் படம் வருகிறது.
அடுத்து ஆங்கில ஆசிரியர் ரோசி (திவ்யா தத்தா) வருகிறார். அவர் நவீன தோற்றம், அழகு, இளமை கொண்டவர். ரோஸி தன் காதலனின் பைக்கில் தான் பள்ளிக் கூடத்தில் வந்து இறங்குகிறாள். இது முக்கியம். படத்தில் தோற்றம் சார்ந்த கிளிஷெ உள்ளது. நவீன ரோஸி ஜனநாயக பண்புகள் கொண்டவர். அவர் மாணவர்களை “how are you my sweet babiesஎன்று அழைத்தபடி தான் நாளும் வகுப்புக்குள் நுழைகிறார். அவர் குழந்தைகளை கண்டிப்பதில்லை, ஒழுங்குபடுத்த முயல்வதில்லை. பாடம் எடுப்பவர்கள் எல்லாம் மோசமான டீச்சர்கள் என்று இயக்குநர் நம்புவதாலோ ஏனோ ரோஸி பாடமே எடுப்பதில்லை. மற்ற வாத்தியார்களை வில்லனாக காண்பிக்க வெறுமனே அவர்கள் பாடம் எடுக்கும் காட்சிகளை மட்டும் சில நொடிகள் காண்பித்து விடுகிறார்.

பாடம் எடுப்பதென்றால் என்ன? கல்வியியல் கோட்பாடுகள் இவ்விசயத்தில் முரண்பாடான நிலைப்பாடுகள் கொண்டவை. சுருக்கமாக இரண்டாக பிரிக்கலாம். பசங்களை வலியுறுத்தி படிக்க வைக்க வேண்டும். அவர்களாகவே படிக்கும் படி விட்டு விட வேண்டும். முதல் வகையினர் கல்வியின் முக்கிய நோக்கம் குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்பிப்பது என்று நம்புகிறார்கள். இரண்டாம் வகையினர் கல்வி என்பது ஆளுமை வளர்ச்சிக்கான பயிற்சி என்று நினைக்கிறார்கள். ஆளுமை ஏற்கனவே ஒருவருக்குள் இருக்கிறது என்பதால் அதை வளர அனுமதித்தால் மட்டும் போதும். நவீன கல்வியியல் மாணவர்களின் ஆர்வத்தை கிளர்த்தி அவர்களை இசை, விளையாட்டு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கற்பிக்க பரிந்துரைக்கிறது. ஆனால் பாடம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை சமூக, பொருளாதார சூழல் தான் தீர்மானிக்கிறது. இந்திய பெற்றோர்களுக்கு தேவை முடிந்தால் பத்து வயதிலேயே அலுவலகத்துக்கு அனுப்புவதற்கான கல்வி. இந்தியாவில் அனைத்து கல்வி முறைகளும் கலந்து கட்டி நடைமுறைப் படுத்தப்படுகின்றன. நாற்காலி, கரும்பலகை வசதி இல்லாத அரசு ஆரம்ப பள்ளிகளின் டீச்சர்களுக்கு கூட மாண்டிசாரி கல்வி பயிற்சி வழங்கப்படுகிறது. ஆக ஸ்டான்லியின் பள்ளிக்கூடமும் எந்த ஒரு வகைமையையும் சார்ந்ததல்ல. அங்கு பலவகையான வாத்தியார்கள் வருகிறார்கள். சம்பிரதாய தென்னிந்திய காட்டன் சேலை பிராமண அறிவியல் டீச்சர், நடந்தபடியே லூயிஸ் காரலின் கணித சூத்திரத்தை விளக்கும் கணக்கு வாத்தியார், நாடகீயமாக கற்பிக்கும் வரலாற்று வாத்தியார், இப்படியே பலவகையினர்.

இவர்கள் அறிமுகமாவதற்கு சற்று முன்னர் ஸ்டான்லி எனும் சிறுவன் அழுக்கான முகத்துடன் வகுப்புக்கு வருகிறான். அவன் தான் காட்சிகளின் குவிமையம். அவன் இடைவேளையின் போது தனது அன்று காலைப் பொழுதின் சாகசம் ஒன்றை நண்பர்களுக்கு விவரிக்கிறான். அவர்கள் அதை ரசிக்கிறார்கள். அது ஸ்டான்லியின் நண்பர் குழு. படம் அவர்களை சுற்றி நடக்கிறது. அடுத்து வகுப்புக்கு வரும் ரோஸி டீச்சர் ஸ்டான்லியிடம் அவன் முகம் ஏன் அழுக்காக உள்ளது என்று விசாரிக்கிறார். ஸ்டான்லி தான் வகுப்புக்கு வரும் வழியில் ஒரு பெரிய பையன் தன்னை அழைத்து அடிக்க, அவனை தான் திரும்ப அடிக்க, மேலும் பல சாகசங்கள் செய்ய அழுக்காகி விட்டதாய் சொல்கிறான். ரோஸி கேட்கிறார் “நீ அவனை கொன்று விடவில்லை அல்லவா?. வகுப்பு மொத்தமாய் சிரிக்கிறது. ஸ்டான்லி நாணி கோணிக் கொண்டே “இல்லை டீச்சர் என்கிறான். பிறகு வீட்டுப்பாடமாக எழுதி வரும் கட்டுரையில் ஸ்டான்லி அவன் அம்மா ரயில் மற்றும் பேருந்துகளில் இருந்து தாவி பறந்து இறங்குவதாக மிகை கற்பனையில் எழுதுகிறான். இதை ரோஸி மிகவும் ரசித்து கட்டுரையின் விளிம்பில் அவனை பாராட்டி குறிப்பெழுதுகிறாள். ஸ்டான்லி உண்மையில் ஒரு உணவகத்தில் குழந்தைத்தொழிலாளி. அங்கு அவன் சுத்தம் செய்யும் போது பட்ட அழுக்குடன் வகுப்புக்கு வந்து விடுகிறான். அவன் ஒரு அநாதை. அவன் தன்னிடம் இல்லாத ஒவ்வொன்றுக்கும் மிகைப்படுத்தி சமனப்படுத்த பார்க்கிறான். இது தான் அவனது அடிப்படை குணம். இதை வகுப்பு நண்பர்களும், ரோஸியும் ஏற்றுக் கொள்கிறார்கள், ரசிக்கிறார்கள்.
படத்தின் அடுத்த கட்டம் உணவை பற்றியது. இது மிக முக்கியமான இடமும் கூட. இடைவேளைகளின் போது டப்பாக்கள் திறக்கப்பட்டு பல விதமான உணவுப்பண்டங்கள் வெளிப்படுகின்றன. பிஸ்கட், ரொட்டி, பாஜி, ஆலுபராத்தா, இப்படி பல சைவ உணவுகளாக புசிக்கப்படுகின்றன. தொடர்ந்து பல காட்சிகளில் உணவுகளும், அவை பகிர்ந்தும் தனித்தும் சுவைக்கப்படுவதும் காட்டப்படுகிறது. இக்காட்சிகள் அலாதியானவை. மேலும் படம் இந்த உணவுகளை பற்றியது என்றும் குறிப்புணர்த்துகின்றன. ஏனென்றால் உணவு மாணவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களின் கற்பனையையும் ஆக்கிரமித்த ஒன்றாக உள்ளது. இடைவேளைகளின் போது ஆசிரியர் அறையில் அவர்கள் வீட்டில் செய்த பிஸ்கட்டில் இருந்து ரொட்டி வரை விநியோகித்து பகிர்ந்து ருசிக்கிறார்கள். உணவு தவிர்த்த வேளைகளில் ஆசிரியர்களின் அறை காண்பிக்கப்படுவதே இல்லை. உணவு பசியடக்குவதற்கான, ருசிப்பதற்கான பொருள் மட்டும் அல்ல. அது ஒருவரின் பின்னணியை, கலாச்சாரத்தை காட்ட செய்திகளை பகிர பயன்படுகிறது. தென்னிந்திய பிராமண டீச்சரிடம் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க “தோசா என்கிறார் சலிப்புடன். ரோஸி தன் திருமண செய்தியை சொல்ல சாக்லேட் கேக் நீட்டுகிறார். புதிதாக வேலைக்கு சேர வந்திருக்கும் வரலாற்று ஆசிரியர் சுட்ஷியிடம் தன்னுடன் உணவு உண்ணுமாறு கேட்கிறார். தலைமை ஆசிரியர். சூட்ஷி தன்னிடம் சாப்பாட்டு டப்பா இருப்பதாக சொல்லி மறுக்கிறார். சூட்ஷி தினமும் ஒவ்வொரு மாநில உணவாக கொண்டு வந்து சுவைக்கிறார். உணவு டப்பா ஒரு அடையாளமும் கூட. உணவை இழந்தவன் தன் வாழ்வின் ஒரு தனித்துவத்தை இழந்தவனாகிறான். அப்படி ரெண்டு பேர் இருக்கிறார்கள்.
ஒருவன் ஸ்டான்லி. மற்றொருவர் அவனது இந்தி வாத்தியார் பாபுபாய் வர்மா (இயக்குநர் அமொல் குப்தெ). 

பாபுபாயும் ஸ்டான்லியை போன்று ஒழுங்கற்ற தோற்றம் கொண்டவர். நெற்றியில் புரளும் கலைந்த சுருட்டு மயிர், கட்டற்ற தாடி, வெறித்த கண்கள், சட்டையை மீறி புரளும் தொப்பை. எதையோ இழந்த பரபரப்பில் இருப்பவர். அவருக்கு சதா பசிக்கிறது. அவர் அறிமுகமாகும் முதல் காட்சியில் வகுப்பை பாதியில் நிறுத்தி ஆசிரியர் அறைக்கு ஓடி செல்கிறார். ஆவேசமாய் மற்றொருவர் டிபன் டப்பாவை திறந்து ஜிலேபி திருடி தின்கிறார். அதையும் ஒவ்வொன்றாய் எடுத்து வைத்து பார்த்து பார்த்து ருசித்த பின்னரே தின்கிறார். அவர் தின்று முடிக்கும் முன் வகுப்பு முடிந்து விடுகிறது. இடைவேளையின் போது ஒவ்வொரு சக-ஆசிரியராக பாபுபாய்க்கு தங்களது வீட்டு உணவை கொடுக்கிறார்கள். சில அலுத்துக் கொண்டு கொடுக்கிறார்கள். தனக்கு பிடிக்காத உணவு (bread-jam) என்றால்  பாபுபாய் அவராகவே அலுப்பாகி மறுத்து விடுகிறார். தராதவர்களின் டப்பாவை எட்டிப் பார்த்து “என்னம்மா இன்னிக்கு ஸ்பெஷல்? என்கிறார். சிலர் அவசரமாக உணவை முழுங்கி அவரை பார்த்து “தீர்ந்து போசுப்பா என்கிறார்கள். புதிதாய் வரும் வரலாற்று ஆசிரியர் கொண்டு வந்து தரும் மாநில வகையான உணவுகள் அவரை சொக்கி போக செய்கின்றன. பாபுபாய் ஸ்கூலில் இருக்கும் முழுநேரமும் உணவை பற்றி சிந்தித்தபடியே இருக்கிறார். வகுப்பு நடக்கும் போது மூலையில் குவிக்கப்பட்டிருக்கும் உணவு டப்பாக்களை பார்வையிடுகிறார். அதில் ஒரு பிரம்மாண்ட அடுக்கு கேரியர் இருக்கிறது. அது அவரை கவர்கிறது. விசாரிக்கிறார். அது குடும்பத்தால் நன்றாக பராமரிக்கப்படுகிற ஒரு குண்டுப்பையனுடையது. அவன் தாராள மனம் கொண்டவன். தன் பிரம்மாண்ட டப்பாவை சகமாணவர்களுடன் பகிர்ந்து உண்கிறான். அவன் ஆர்வமாக மிகுதியாக சாப்பிடுவதாகவே படத்தில் காண்பிப்பதில்லை. வெறுமனே கொறிக்கிறான். ஒல்லிப்பீச்சான் மாணவர்களே ஆவேசமாக முழிபிதுங்க உணவை விழுங்குகிறார்கள். சுவையான நிறைய உணவு உள்ள குண்டுப்பையன் அசட்டையாக இருக்கிறான். ஏனென்றால் உணவு சதை வளர்ப்பதற்கானது மட்டுமல்ல. இன்று உணவு பெரிதும் மனதால் புசிக்கப்படும் ஒரு பொருள். வளரும், வளர்ந்த நாடுகளில் நகரவாசிகள் உணவில் பல்வேறு நிற வடிவ காட்சிகளை தங்கள் மனதால் நாளும் ஒரு டில்டோ போல் சப்பிக் கொண்டே இருக்கிறார்கள். உணவுக்கான மனப்பசி அடங்குவதே இல்லை. உணவு இடைவேளையின் போது சாப்பாட்டு டப்பா இல்லாத ஸ்டான்லி வழக்கம் போல் தான் வெளியே சென்று பாவ்பஜ்ஜி வாங்கி சாப்பிடப் போவதாக பொய் சொல்லி உண்மையில் டாய்லெட் குழாயில் தண்ணீர் குடித்து வயிற்றை ரொப்புவதற்காக கிளம்பும் போது நண்பனின் சாப்பாட்டு டப்பாவை பார்க்கிறான். “அது என்ன?
“ஆலு பராத்தா
“நான் கொஞ்சம் சுவைக்கலாமா?
“ஓ தாராளமா.
அப்போது பாபுபாய் அந்த குண்டுப்பையனை தேடி வகுப்புக்கு வந்து விடுகிறார். ஸ்டான்லி உணவை பிறரிடம் இருந்து வாங்கி சாப்பிடுவதை பார்க்கிறான். அவருக்கு கடுமையான கோபம் ஏற்படுகிறது. அடுத்தவர் உணவை உண்பது குற்றம் என்றி ஸ்டான்லியை கண்டித்து விரட்டுகிறார். பிறகு அவர் குண்டுப்பையனிடம் அதே கேள்வியை கேட்கிறார். “அது என்ன?
“ஆலு பராத்தா
“நான் கொஞ்சம் சுவைக்கலாமா?
“ஓ தாராளமா.
இங்கிருந்து ஸ்டான்லிக்கும் பாபுபாய்க்குமான மறைமுக மோதல் ஆரம்பிக்கிறது. சுவாரஸ்யமாக, இருவரும் ஒரே ஆளுமையின் இரு பக்கங்கள் தாம். பாபுபாய் ஒரு வளராத குழந்தை. ஆனால் இருவருக்கும் இடையே ஒரு ஒரு நுட்பமான வித்தியாசம் உள்ளது. ஸ்டான்லி தன் மனக்குறையை மிகையான பொய்களின் மூலம் இட்டு நிரப்புகிறான். பாபுபாய் தன் பதினாறு கரங்களையும் நீட்டி வலுக்கட்டாயமாக வாங்கி தன் இன்மையை நிரப்புகிறார். அவருக்கு தன்னை யார் மறுத்தாலும் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஸ்டான்லி தன் இல்லாமையுடன் ஒரு சமரசம் செய்துள்ளான். பாபுபாயால் அது முடியவில்லை. அவர் ஏன் ஸ்டான்லியை உக்கிரமாக வெறுக்கிறார்?
சார்லி சாப்ளின் குழந்தைகளை வெறுத்தார் என்று நமக்குத் தெரியும். அவர் மனதுக்குள் வளரவே இல்லை. டாக்‌ஷ்ஹண்டு போன்ற குள்ளமான நாய் வகைகளும் குழந்தைகளை பார்த்தால் அதிகம் குலைக்கின்றன. சில ஊனமுற்றோர் சக ஊனர்கள் மீது வெறுப்பு கொள்வதையும் பார்த்திருக்கிறேன். பாபுபாயால் தனது இன்னொரு உருவமான ஸ்டான்லியை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அவர் பெரியவர்களுக்கான விழுமியங்களை முன்னெடுப்பதன் மூலம் தன்னை அவனில் இருந்து வேறுபடுத்தி காட்ட விரும்புகிறார். ஸ்டான்லிக்கு இடக் கை பழக்கம் இருப்பது அறிந்து அவனை வலது கைக்கு மாறுமாறு வலியுறுத்துகிறார். “Right கையால் எழுதினால் தான் right” என்கிறார் அழுத்தமாக. உணவு விசயத்தில் மட்டும் அவரது அசலான குணம் வெளியே வந்து விடுகிறது. பாபுபாயிடம் இருந்து ஸ்டான்லியை காப்பாற்ற குண்டுப் பையன் குழுவினர் தங்கள் பிரம்மாண்ட அடுக்கு டப்பாவுடன் இடைவேளைகளின் போது ஒவ்வொரு நாளும் புதுப்புது இடங்களுக்கு சென்று அமர்ந்து ஸ்டான்லியுடன் பகிர்ந்து உண்கின்றனர். பாபுபாய் அவர்களை தேடி மாடிப்படிக்கு கீழே, விளையாட்டு மைதானம், அரங்கம் என்று பல்வேறு இடங்களிலாய் அலைகிறார். ஒவ்வொரு முறையும் அவர் வந்து சேரும் போது காலி பாத்திரங்களே எஞ்சுகின்றன. கடைசியில் ஒருநாள் அவர்கள் மொட்டைமாடியில் இருந்து உண்பதை கண்டுபிடித்து விடுகிறார். தன்னை அவர்கள் ஏன் ஏமாற்றினார்கள் என்று பொருமுகிறார். கோபமாய் மிரட்டுகிறார். பிறகு குழந்தைகளின் உணவை இரக்கமின்றி காலி செய்கிறார். இங்கு அவர் ஒரு குழந்தையை விட குழந்தைத்தனமாகி விடுகிறார். ஸ்டான்லியிடன் உணவு டப்பா இல்லாமல் அவன் வகுப்புக்குள் வரக்கூடாது என்று கட்டளையிடுகிறார். பாபுபாய் மாணவர்களை துரத்தி தொந்தரவு செய்யும் காட்சிகள் slapstick தன்மை கொண்டவை. நம்ப முடியாதபடி விநோதமானவையும். அதற்கு காரணம் உணவு இங்கு ஒரு குறியீடு என்பதே. இது குறியீட்டு படைப்புகளின் இயல்பே.

உணவு இல்லாமல் போவதும், உணவை சம்பாதிப்பதும் ஒருவன் தன்னை சமூகத்தில் பண்பாட்டுரீதியாக தாழ்த்தி உயர்த்தும் நிகழ்வுகள். இதற்கு ஒரு உதாரணம் காட்பாதரில்பார்க்கலாம். கார்லோ ரிஸி ஒரு சோட்டா குற்றவாளி. பாதி ஸிஸிலியன். அவன் காட்பாதரான விட்டோ கோர்லியாவின் மகள் கோனியை காதலித்து மணக்கிறான். அவனுக்கு கோர்லியோனா குடும்பத்துக்குள் சமமரியாதை இல்லை. மரியோ பூசோ அவனை “a punk at sore with the world” என்கிறார். அவனுக்கும் கோனிக்கும் சச்சரவுகள் வரும். அதை அத்துமீறி போவதில்லை. ஆனால் ஒருநாள் கோனி அவனை தூண்டுவதற்கன்றே ஒரு காரியம் செய்கிறாள். எளிய பின்னணியில் இருந்து வந்த ரிஸ்ஸியை எவ்வளவு கெட்ட வார்த்தைகளால் வைதாலும் தாங்கிக் கொள்வான்; அவமானங்களை சகித்துக் கொள்வான். ஆனால் தன் உணவு வீணாவதை மட்டும் அவனால் தாங்க முடியாது. அது அவனை கொந்தளிக்க செய்யும். இதனால் ஒரு சண்டையின் போது கோனி வேண்டுமென்றே சமையலறையில் செய்து வைத்த உணவை வாரி இறைக்கிறாள். அவன் சமநிலை இழந்து மனைவியை பெல்டால் விளாசுகிறான். இதன் தொடர்விளைவாக அவன் கோனியின் சகோதரன் சன்னியின் மரணத்துக்கு காரணமாகிறான்; இரண்டாம் காட்பாதராகும் மைக்கேலால் இறுதியில் கொல்லப்படுகிறான். கோர்லியானா குடும்பத்துக்குள் நடக்கும் முதல் இரு துரோகங்கள் ஒரு தனிமனிதனின் போதாமை கேலி செய்யப்படுவதில் இருந்தே ஆரம்பிக்கின்றன. மைக்கேல் செய்த முதல் பெரும் பாவமாக இதுவே காண்பிக்கப்படுகிறது. அவன் தன் சகோதரியின் கணவனை கொன்ற பாவத்திற்கு மன்னிப்பில்லாமல் வாழ்நாளெல்லாம் மனசாட்சியுடன் போராடுகிறான். மறைமுகமாக அக்குடும்பத்தின் அறவீழ்ச்சி உணவில் இருந்து தான் தொடங்குகிறது.
ஸ்டான்லி க டப்பாவில்வரும் முக்கிய அவதானிப்பு பொதுவாக வணிக படைப்புகளில் காட்டப்படுவது போல் மனிதர்கள் முடிவில் தம் குறைகளை நிவர்த்தி செய்து மேன்மை அடைவதில்லை என்பதே. பொதுவாக coming-of-age படங்களில் ஹீரோவின் கண்களில் ஒரு போதி மரம் தென்படும். ஆனால் நிஜத்தில் மனிதர்கள் தம் போதாமையுடன் வாழ கற்றுக் கொள்கிறார்கள். அதை மறைத்தோ, அதனை மறுத்து பொருதி முரண்பட்டோ, அல்லது ஏற்று அமைதியடைந்தோ அவர்கள் தொடர்ந்து வாழ்கிறார்கள். சதா கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனிதன் கலை, தியாகம், வன்முறை போன்ற ஏதாவதொரு வழியில் மனசமநிலை அடைகிறான். ஹருகி முராகாமியின் நாவல்களில் அவர் வலியையும், இழப்பையும் எப்போதும் நம்முடன் தான் இருக்கின்றன. அவற்றை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் ஒருவரை தீர்மானிக்கிறது என்கிறார். ஸ்டான்லி அபாரமான கற்பனை கொண்டவன். அவன் இறுதிவரை தான் அநாதை என்பதை வெளியில் யாருக்கும் தெரிவிப்பதில்லை. நண்பனின் நுண்பேசி வாங்கி அம்மாவிடம் பேசுவதாக நடிக்கிறான். உணவகத்தில் அவனுடன் பணிபுரியும் சமையற்காரர் அவனுக்கு உதவ அவன் மீதமாகும் வகைவகையான ஓட்டல் உணவுகளை ஒரு அடுக்கு கேரியரில் நிறைத்து பாபுபாயிடம் முன் கொண்டு வைக்கிறான். அவன் அவரிடம் சொல்கிறான். “இது தான் ஸ்டான்லியின் டப்பா. இரு குழந்தைகளுக்கு இடையிலான போட்டியில் ஸ்டான்லி ஜெயிக்கிறான். பிறகு அவன் அனைத்து ஆசிரியர்களுக்கும், தன் வகுப்பு நண்பர்களுக்கும் உணவு வகைகளை தினமும் கேரியரில் கொண்டு சென்று விளம்புகிறான். அனைவரும் அவனது உணவை வியக்கிறார்கள். பன்னீர் மசாலாவை காட்டி சொல்கிறான் “இதிலுள்ளது அசலான பன்னீர். இங்கே எல்லாம் கிடைக்காது. இதை வாங்க என் அம்மா பஞ்சாப் வரை சென்றார்கள். இப்படி அவன் உணவை காட்டி தம்பட்டம் அடிப்பதுடன் படம் முடிகிறது. ஸ்டான்லியின் அந்த டிபன் கேரியர் பாதி அவன் கற்பனையால் உருவானது தான். அது அவன் அம்மா, அவனது குடும்பம், அவன் தனது போதாமை மீது அடைந்த வெற்றி.
படத்தின் இறுதியில் ஒரு மேடை நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ஸ்டான்லியை தங்கள் காரில் வீட்டில் சென்று விடுவதாய் ஜோடியாய் வந்த ரோஸி டீச்சர் சொல்கிறார். ஸ்டான்லி மறுக்கிறான்: “என் அம்மா வருவார்கள். நான் அவருக்காக காத்திருக்கிறேன். ஸ்டான்லியின் அம்மா யார்? பின்னர் அவனது தலைமையாசிரியரான கத்தோலிக்க ஃபாதர் ஒருவர் அவனை வீட்டில் விடுவதாக அழைக்கும் போது மறுக்காமல் அவர் காரில் ஏறி செல்கிறான். அடுத்து, அவனுடன் வேலை செய்யும் ஒருவர் தான் அவனுக்கு தினமும் டப்பா கட்டிக் கொடுக்கிறார். வகுப்பில் அவன் தன் அம்மா குறித்து பீற்றிக் கொள்ளும் போதெல்லாம் அவர் தான் குறிக்கப்படுகிறார். அவர் இரவில் அவனை சாப்பிட அழைத்து கொடுத்து, படுக்கை அமைத்து தூங்க வைக்கும் மிக பரிவான காட்சி ஒன்றுள்ளது. ஸ்டான்லி இங்கு தான் தம் அம்மாவை கண்டடைகிறான்.
வெவ்வேறு முகமற்ற மனிதர்கள் உண்டு போக உணவகத்தில் மீதமாகும் உணவை தான் அவன் தினமும் கேரியரில் பள்ளிக்கு கொண்டு வந்து அம்மா தந்தது என்று சொல்லி பீற்றுகிறான். கழிவு உணவால் ஆன அந்த சாப்பாட்டு டப்பா அனைத்தின் கலவையுமான இந்த உலகம் தான். அதனால் தான் அவ்வுணவு அலாதியான சுவை கொண்டதாக இருக்கிறது. அதை தன் கற்பனை சேர்த்து அவன் எல்லாருக்கும் விளம்புகிறான்.
Read More

Thursday 9 June 2011

லில்லிபுட் தேசத்தில் கிரிக்கெட்



ஐ.பி.எல்லை கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உருவாக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே இயன் சேப்பல் கூறி வந்தார். ஐ.பி.எல்லை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? அது ஒரு நல்ல பொழுதுபோக்காக, விளம்பர நிறுவனங்களின் வேட்டைக்களனாக, உள்ளூர் வீரர்கள் மற்றும் ஓய்வு பெறப் போகும் வீரர்களின் எதிர்காலத்தை பத்திரப்படுத்தும் மார்க்கமாக பல பரிமாணங்கள் கொண்டுள்ளது. ஏன் ஐ.பி.எல் வேண்டும் என்று ஒரு எளிய இந்திய கிரிக்கெட் ஆதரவாளர் கூட மூச்சுவிடாமல் பேச முடியும். ஆனாலும் நமது கண்ணாடியை கழற்றி விட்டு பார்த்தால் அது உலகக் கிரிக்கெட்டின் சத்தை உறிஞ்சி சக்கையாக்குவது புரியும். ஐ.பி.எல் வெற்றி பெறுவதற்கு காரணம் அதன் தரமான சர்வதேச ஆட்டக்காரர்கள். ஷொன் மார்ஷ், பொலார்ட் போன்ற பல வெளிநாட்டு உள்ளூர் கிரிக்கெட்டர்களும் ஐ.பி.எல்லினால் புகழடைந்த அதே வேளையில் அதன் தரத்தையும் தான் வெகுவாக உயர்த்தினர். வார்னர் போன்ற சிலர் தேசிய அணிக்காக அறிமுகமானாலும் அவர்களின் திறன்கள் ஐ.பி.எல்லை வளர்க்கவே பெரிதும் பயன்பட்டுள்ளன. ஷேன் வார்னின் தலைமைப் பண்புகளை ஆஸ்திரேலியாவை விட இந்தியாவால் சிறப்பாக பயன்படுத்த முடிந்தது. உலக கிரிக்கெட்டர்களை ஒருமித்து இந்தியாவுக்குள் குவித்து ஒரு உள்ளூர் ஆட்டத்த் தொடரை ஆட வைக்க முடிந்தது. இவர்களை பயன்படுத்தும் தார்மீக உரிமை இந்தியாவுக்கு உண்டா என்பதே சேப்பல் போன்றவர்கள் எழுப்பும் கேள்வி. ஏனெனில் எப்படி இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஒரு விஞ்ஞானியோ பொறியியலாளனோ முழுக்க சுயம்பு அல்லவோ அதைப் போன்று மேற்கிலிருந்து இங்கு வந்து ஆடும் வீரர்கள் தாமாகவே உருவானவர்கள் அல்ல. அவர்களை உருவாக்க அவர்களின் தேசம் உள்கட்டமைப்பு, பயிற்சி, காலம் போன்று ஏகப்பட்ட செலவுகளை செய்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட்டரும் அந்நாட்டு வாரியத்தின் முதலீடு. மேலும் ஒரு வீரர் ஆடி உருவாகும் போது மற்றொருவருக்கான இடம் அதே வேளையில் மறுக்கப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக ஐ.பி.எல்லுக்காக சமீபமாக தேசிய அணிக்கு ஆட மறுத்த லசித் மலிங்காவை எடுத்துக் கொள்ளலாம்.
மலிங்காவை ஒரு கிராமத்தில் நடக்கும் தெருக் கிரிக்கெட் போட்டியில் ஒரு பயிற்சியாளர் கவனிக்கிறார். ஒரு மெலிதான குள்ளமான சிறுவன். அவனுக்கு விநோதமான வீச்சு பாணி. பொறி பறக்கும் வேகம். அவனை அணுகி ஊக்குவித்து பெற்றோர்களிடம் பேசி உள்ளூர் போட்டிகளில் ஆட வைக்கிறார். உடலை தேற்றி வலுப்பெற ஆலோசனைகள் அளிக்கிறார். லசித் மலிங்கா பின்னர் ஒரு பெரும் ஆற்றலாம மாறியதன் பின்னால் இலங்கை பயிற்சியாளர்களின் அக்கறை, உழைப்பு, உள்ளூர் உட்கட்டமைப்பு, தேர்வாளர்களின் ஈடுபாடு என்று தொடங்கி மைதானங்களில் ஆடுதளத்தை அமைக்க வேலை பார்க்கும் கூலியாட்களின் வியர்வை வரை ஏகப்ப்ட்ட அர்ப்பணிப்பும் உழைப்பும் உள்ளது. அவர் இடத்தில் வேறொருவருக்கு வாய்ப்பும் ஊக்குவிப்பும் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் மலிங்கா ஒரு நொடியில் சுயநலம் கருதி இந்த இளமைக்கால ஆதரவின் நினைவுகளை புறங்கையால் ஒதுக்கி விடுகிறார். இலங்கை கிரிக்கெட் இன்றி மலிங்கா என்றொருவர் உருவாகி இருக்க முடியாது. அதை அவர் மறந்து விடுகிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள மறுத்து ஐ.பி.எல்லில் மிக அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். விளைவாக பலவீனமான அவரது தேசிய அணி இங்கிலாந்தில் முதல் டெஸ்டை இழக்கிறது. மலிங்கா ஒரு இலங்கை கிரிக்கெட் முதலீடு என்றால் அவரை முழுமையாக அபேஸ் செய்வது இந்தியாவின் திறமைத் திருட்டு. தமக்காக ஒரு போரை தாராளமாக நடத்தித் தந்த இந்தியாவை இலங்கை இந்த சிறு கிரிக்கெட் விசயத்தில் கண்டிக்காமல் சுமூகமாக போகலாம். ஆனால் சேப்பல் உள்ளிட்ட மேற்கத்திய விமர்சகர்கள் இந்த திறமைத் திருட்டை வேறொன்றாக பார்க்க தயாராக இல்லை. ஆஸ்திரேலியா, மே.இ தீவுகள், தெ.ஆ போன்ற நாடுகளின் உள்ளூர் கட்டமைப்பின் மூலம் விளைந்த திறமைகளை இந்தியா பயன்படுத்துகிற பட்சத்தில் ஐ.பி.எல் லாபத்தில் ஒரு பகுதியை அந்நாடுகளுக்கும் உள்ளூர் கிரிக்கெட்டை வளர்க்க வழங்கலாமே என்று கேட்கிறார்கள். இந்தியா கிரிக்கெட்டின் அதிகார மையம் என்பதால் அதற்கு மூக்கணாங்கயிறு கட்ட முடியாது. ஆனால் திருடப்படும் முதலீடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பிற நாட்டு வாரியங்கள் இப்போது ஆரம்பித்து உள்ளன. இது கிரிக்கெட்டில் நிகழ்ந்து வரும் ஒரு மௌனமான புகைச்சலை சுட்டுகிறது.
இந்த வருட ஐ.பி.எல்லினால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியுசிலாந்து பாதிக்கப்பட இல்லை. இங்கிலாந்து வீரர்கள் எப்போதுமே ஐ.பி.எல்லை விட தம்மூர் கவுண்டி ஆடுவதில் பெருமையும், அர்ப்பணிப்பு உணர்வும் காட்டுபவர்கள். உலகக்கோப்பை முடிந்ததும் சர்வதேச தொடர்கள் ஆட ஆரம்பித்த இலங்கை, மே.இ தீவுகள் ஆகிய அணிகள் தாம் முழுமையாக பாதிக்கப்பட்டன. இவ்வணியின் மூத்த வீரர்கள் ஐ.பி.எல் ஆடியதால் தேசிய அணிக்கு ஆட மறுத்தனர், சொந்த வாரியங்களுடன் முரண்பட்டனர், அல்லது ஜெயவர்த்தனே, சங்கக்காரா போன்றவர்கள் ஐ.பி.எல் முடித்து களைத்துப் போய் சர்வதேச ஆட்டங்களுக்கு சுரத்தில்லாமல் திரும்பி கால்பாவாத ஆவிகளைப் போல் உலாவினர்.
இந்த துரோகங்களுக்கு எதிர்வினையாக முதலில் மே.இ தீவுகள் தேர்வாளர்கள் சில கராறான முடிவுகள் எடுத்துள்ளனர்.
மே.இ தீவுகள் அணியின் கடந்த பத்தாண்டு கீழ்த்தர ஆட்டத்துக்கு அவ்வணியின் மூத்த வீரர்களின் சுயநல நடத்தை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. சில வருடங்களுக்கு முன் மே.இ தீவுகளின் கிரிக்கெட்டர்கள் சங்கம் அமைத்து வாரியத்துக்கு எதிராக சம்பள உயர்வுக்காக போராடினர். முதலில் அக்காரணத்துக்காக வாரிய நிர்வாகிகள் மூத்தவீரர்களை கொத்தாக நீக்கினர். பிறகு தொடர்ந்த தடுமாற்றங்களுக்கு பிறகு கெயிலின் தலைமையின் கீழ் அணி சற்று நிலைப்பட்டது. ஆனால் கெயிலும் முரண்பட தேர்வாளர்கள் அவரை தலைமையில் இருந்து நீக்கி அனுபவமும் திற்மையும் குறைந்த சேமி என்பவரை அணித் தலைவராக்கியது. இலங்கைக்கு பயணித்த முதிராத மே.இ அணி அங்கு நன்றாக ஆடியது. உலகக்கோப்பையில் கூட அவர்கள் எதிர்பார்த்ததை விட சற்று மேலாகவே ஆடினர். அடுத்து பயணம் வந்த பாக் அணியை சமீபமாக ஒரு டெஸ்டில் தோற்கடித்தனர். இந்த வெற்றிகளில் எங்கும் பங்கேற்காமல் அவ்வேளையில் கெயில், பிராவோ போன்ற நட்சத்திரங்கள் இந்தியாவின் உள்ளூர் T20 தொடர் ஒன்றில் கோடிக்கணக்கான சம்பளத்துக்காக ஆடிக் கொண்டிருந்தனர். போதாததற்கு கெயில் வானொலி பேட்டி ஒன்றில் தனது நாட்டு தேர்வாளர்களை அவமானித்து பேசினார். கெயில் பின்னர் ஐ.பி.எல்லில் அதிக பட்சமாக 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்தார். தனது வாழ்வின் மிகச்சிறந்த ஆட்டநிலையில் இருந்ததால் அவர் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அணியில் சேர்க்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்சொன்ன வெற்றிகள் அளித்த நம்பிக்கை ஊக்கத்தால் தேர்வாளர்கள் கெயில், சந்தர் பால், பிராவொ, பிடல் எட்வர்ட்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களை இந்தியாவுக்கு எதிரான அணியில் சேர்க்கவில்லை. வெளியில் இருந்து பார்க்க இந்த கரார் நடவடிக்கைகள் அவசர அதிகார சீற்றங்களாக தெரிந்தாலும் அணி ஒற்றுமை, பொறுப்பு, அர்ப்பணிப்புணர்வு போன்ற விழுமியங்களை தக்கவைக்க, ன்னெடுக்க மே.இ தேர்வாளர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் தீரம் பாராட்டத்தக்கது.

ஐ.பி.எல்லில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் தொடர்ந்து மூத்த வீரர்களின் சுயநலம் மற்றும் பெட்டிங் ஊழலால் இழப்புகளை சந்தித்து வரும் மற்றொரு அணி பாகிஸ்தான். பாகிஸ்தான் என்றுமே ஒரு வலுவான தலைவரின் கீழ் தான் சிறப்பாக ஆடியுள்ளது. இம்ரான், வாசிம் அக்ரம், இன்சமாம் என ஒவ்வொருவரும் ஒரு திடமான மரபை உருவாக்கி சென்றார்கள். அவர்கள் தங்களுக்குக் கீழ் விசுவாசமான சில அணி வீரர்களை பாதுகாத்தார்கள். இந்த உட்குழு என்றுமே பாகிஸ்தானின் நியூக்ளியஸாக இருந்துள்ளது. உதாரணமாக அக்ரமின் கீழ் சக்லைன், அன்வர், ரசாக், மோயின், இன்ஸியின் கீழ் அக்தர், யூனிஸ், யூசுப் போன்றோர். இந்த உட்குழுவுக்கு உள்ள பாதுகாப்பு வட்டம் சமீபமாக உடைந்துள்ளது. கடந்து இரண்டு வருடங்களாக பாக் வாரிய தலைவராக உள்ள இஜாஸ் பட் மாதம் ஒரு தலைவர் என்று மாற்றி வந்ததால் பாக் அணிக்கு தலைமைக்கு புதிதாக ஆளே இல்லை என்ற நிலைமை வந்தது. வனவாசம் போயிருந்த அப்ரிடி திரும்ப அழைக்கப்ப்பட்டு அணித்தலைவராக மாற்றப்பட்டார். பின்னர் அவர் பயிற்சியாளருடன் முரண்பட்டதால் விலக்கப்பட்டு சற்று முன்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த முப்பத்தாறு வயதான உல் ஹக் தலைவராக்கப்பட்டுள்ளார். இத்தனை அதிரடி மாற்றங்களால் இஜாஸ் பட் ஒரு நிதானமற்ற நிர்வாகி என்று விமர்சனத்துக்கு உள்ளானாலும் அவர் இதுவரையிலான பாகிஸ்தானின் ஹிமேன் தலைமை மரபை, மூத்தவீரர்களின் ஆதிக்கத்தை மாற்றி அமைக்க முயன்று வருவதை நாம் கவனிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் கிரிக்கெட்டர்கள் பெரும் சஞ்சலத்தை எதிர்கொள்ளும் ஒரு திருப்பம் இது. திராவிட், சச்சின், பாண்டிங், லாரா போல் இருபது வருடங்கள் மூஞ்சுறு மேல் வலம் வந்து சாதிக்க இன்றைய வீரர்கள் முயல மாட்டார்கள். காவிய நாயகர்களின் நிழலும் கூட இறந்த காலத்திற்கு திரும்பி விட்டது. ஐ.பி.எல்லின் அதிர்வுகள் தம் வேர்களை பறித்து விடாமல் இருக்க பல வாரியங்களும் சுதாரிக்க தொடங்கி உள்ளன. இவ்வாரியங்கள் வெள்ளி நாணயங்களுக்கு விலை போகாத இளைய வீரர்களின் அணி ஒன்றை கட்டியெழுப்ப பார்க்கின்றன. இதனால் அடுத்த பத்து வருடங்களில் கிரிக்கெட்டின் முகம் வெகுவாக மாறப் போகிறது.
 ஆனால் இந்தியாவில் திருடனும் போலிசும் ஒருவரே என்பதால் இதே தண்டனைகளை தோனி, சச்சின், சஹீர், காம்பிர் போன்ற சீனியர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க முடியாது. அவர்களுக்கு தொடர்ந்து அதிகாரபூர்வ பாதுகாப்பு கிடைக்கும் என்றாலும் மேற்கிந்திய பயணத்தில் காலியான இருக்கைகள் இளைஞர்களுக்கு உருவாக்கி உள்ள வாய்ப்புகள் மற்றொரு தரப்பை சொல்கின்றன. உலகம் முழுவதும் பல்வேறு அளவிலான T20 ஆட்டத்தொடர்கள் நடத்தப்பட உள்ள பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவு மேஜையை போல் நிறைந்துள்ளது. உயர்ந்த அந்தஸ்தில் உள்ள வீரர்கள் இனி சர்வதேச ஆட்டங்களை அவற்றின் முக்கியத்துவம் பொறுத்து, தம் விருப்பம் மற்றும் வசதி பொறுத்து தேர்வு செய்து ஆடலாம்; உதாரணமாக வங்கதேச, மே.இ தீவுகள் பயணத்திற்கு செல்ல மாட்டார்கள், ஆனால் ஆஸ்திரேலியா, தெ.ஆ, இங்கிலாந்து செல்வார்கள். சர்வதேச ஆட்டங்கள் இனி உள்ளூர் ஆட்டங்களுக்கு அடுத்தபடியான பயிற்சி ஆட்டங்களின் அந்தஸ்தை பெறலாம். உச்சபட்சமாக ஐ.பி.எல், ஆஸ்திரேலிய பிக்பேஷ் போன்ற உள்ளூர் T20 ஆட்டத்தொடர்களுக்கு ஐ.சி.சி சர்வதேச அந்தஸ்து வழங்கலாம். கலிவர் அறிய நேர்ந்தது போல் குள்ளர்களின் நாட்டில் உயரமாக இருப்பதும் ஒரு ஊனம் தான். சர்வதேச கிரிக்கெட் தன்  பெரிய ஆகிருதியை வைத்து என்ன செய்வது என்று முழிக்கிறது.
Read More

Saturday 4 June 2011

போனபார்ட்டின் பின்னடைவு - சார்லஸ் புக்காவஸ்கி







அவரை பிரெட் என்று தான் அழைத்தார்கள்
அவர் எப்போதுமே பாரின் கடைசி இருக்கையில்
கதவருகே
இருந்தார்.
திறப்பதில் இருந்து மூடும் வரை
அவர் எப்போதுமே
அங்கே தான் இருந்து கொண்டிருப்பார்.
என்னை விட அதிகமாகவே
அங்கே அவர் இருந்தார்,
அது ஒன்றும்
சாதாரண விசயமல்ல.
அவர் யாரிடமும்
எப்போதும் பேசினதில்லை.
கோப்பை கோப்பையாய்
குழாய் பியரை குடித்து
அங்கே வெறுமனே இருப்பார்.
பாருக்கு நேர் குறுக்காய்
தனக்கு முன்னார் பார்ப்பார்,
ஆனால் என்றுமே
யாரையுமே அவர் பார்த்ததில்லை.

மற்றொரு விசயமும்
உள்ளது.

அவ்வப்போது
எழுந்து
தானியங்கு இசை பெட்டியிடம்
செல்வார்;
எப்போதுமே
ஒரே இசைத்தட்டை தான் ஓட விடுவார்:
“போனபார்ட்டின் பின்னடைவு
அந்த பாடலை
இரவு பகலாய்
அவர் ஓட விட்டார்.

அது அவரது பாட்டு,
சரிதான்.

குழாய் பியர்
தலைக்கு ஏறியதும்
அவர் எழுந்து
“போனபார்ட்டின் பின்னடைவை
ஆறு ஏழு முறைகள்
ஓட விடுவார்.

அவர் யார் என்றோ
எப்படி வாழ்கிறார் என்றோ
யாருக்கும் தெரியவில்லை.
தெருவுக்கு குறுக்காய்
ஒரு விடுதி அறையில்
தங்கி இருந்தார்.
தினமும்
பார் திறந்ததும்
அதன் முதல் வாடிக்கையாளர்
அவர்
என்பதை தவிர

நான் பார் பணியாளர்
கிளைடிடம் எதிர்ப்பு தெரிவித்தேன்
கேள், அவர்
அதை வைத்து
எங்களை எல்லாம் பைத்தியமாக அடிக்கிறார்
ஒரு கட்டத்தில்
எல்லா இசைத்தட்டுகளும்
சுழற்சி வரிசையில் வருகின்றன
ஆனால்
‘போனபார்ட்டின் பின்னடைவு
போவதில்லை
இதன் பொருள்
என்ன?
“அது அவரது பாடல்
கிளைட் சொன்னார்.
“உங்களுக்கு என்று
ஒரு பாடல் இல்லையா?

சரி, இன்று நான்
ஒரு மணி போல் உள்ளே வந்தேன்;
வழமையனவர்கள் எல்லாரும்
இருந்தார்கள்
ஆனால் பிரெட் அங்கு
இல்லை

எனக்கான மதுவுக்கு உத்தரவிட்டேன்
பிறகு சத்தமாக கேட்டேன்
“அட இந்த பிரெட்
எங்கே?
“பிரெட் இறந்து விட்டான்
கிளைட் சொன்னார்.

பாரின் இறுதி வரை
பார்வையிட்டேன்
திரைச்சீலைகள் ஊடே
சூரியன் இறங்குயது
ஆனால் கடைசி
முக்காலியி;
யாரும் இல்லை.

“என்னிடம் விளையாடுகிறாயா,
நான் சொன்னேன்
“பிரெட் கழிப்பறைக்கோ
எங்கேயோவாவது
சென்றிருப்பான்
“இன்று காலை
பிரெட் வரவில்லை கிளைட்
சொன்னார், “அதனால்
நான அவரது
ஹோட்டல் அறைக்கு சென்று பார்த்தேன்
அங்கே அவர்
இருந்தார்
ஒரு சுருட்டு பெட்டியை
போல்
விறைத்து போய்

எல்லாரும் மிகவும்
அமைதியானார்கள்
எப்படியும்
அந்த மக்கள்
அதிகம்
பேசுபவர்கள் அல்ல.

“சரிதான், நான் சொன்னேன், “குறைந்தது
போனபார்ட்டின் பின்னடைவை
நாம் இனிமேல்
கேட்க வேண்டி இராது
யாருமே
எதுவும் சொல்லவில்லை.
“அந்த இசைத்தட்டு
இன்னும்
தானியங்கி இசைப்பெட்டியில் தான் உள்ளதா?
நான் கேட்டேன்.
“ஆமாம், கிளைட்
சொன்னார்.
“சரி, நான் சொன்னேன்,
“நான் அதை மேலும் ஒருமுறை
போடப் போகிறேன்
நான் எழுந்தேன்
“நிறுத்து
கிளைட் சொன்னார்.
அவர் பாரை சுற்றி வந்து
தானியங்கி இசைப்பெட்டியிடம்
சென்றார்.
அவர்
கையில்
ஒரு சிறு சாவி இருந்தது.

தானியங்கி இசைப்பெட்டியில்
சாவியை நுழைத்து
அதை
திறந்தார்.
உள்ளே கைவிட்டு
ஒரு இசைத்தட்டை
வெளியே
எடுத்தார்.

பிறகு அந்த
இசைத்தட்டை
தன் முட்டியில்
மோதி உடைத்தார்.
“அது அவரது
பாடல் கிளைட்
சொன்னார்.
பிறகு அவர்
தனையங்கி இசைப்பெட்டியை பூட்டினார்,
உடைந்த இசைத்தட்டை
பாருக்கு பின்புறம்
கொண்டு சென்று
குப்பையில் எறிந்தார்.

பாரின்
பெயர்
ஜுவல்ஸ்
அது
கெரன்ஷா மற்றும்
ஆடம்ஸில்
இருந்தது
இப்போது
அது
அங்கில்லை



Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates