Tuesday 13 September 2011

திலீப் குமாரின் “கடவு” – நிலையாமையின் அபத்தம்



கடவு தொகுப்பில் திலீப் குமார் 77இல் இருந்து 87வரை எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் உள்ளன. திலீப்குமார் ஒரு குறுப்பிட்ட பிரதேசம் அல்லது சாதியின் அல்லது காலகட்டத்தின் மொழி வழக்கை பயன்படுத்தாமல் அல்லது அதன் பாதிப்பில்லாமல் ஒரு வித வடிகட்டப்பட்ட மொழியை பயன்படுத்துகிறார். அதனால் சு.ரா அல்லது க.நா.சுவை போல் அல்லாமல், அவரது உரைநடை இன்றும் ஓரளவு புதுமையை தக்க வைத்துள்ளது. தேர்ந்தெடுத்து உருவாக்கின தனதான தமிழை கொண்ட சுகுமாரனோடு இவ்விசயத்தில் திலீப் குமாரை ஒப்பிடலாம்.
திலீப் குமார் ஒரு குஜராத்தி என்று நமக்குத் தெரியும். அதற்காக அவர் நீலபத்மநாபன், அல்லது ஜே.டிகுரூஸ் போன்று தன் சமுதாயத்தின் கலாச்சார செய்திகளையோ வரலாற்றையோ ஒரு சின்ன சுவாரஸ்யத்துடன் சொல்ல முனைந்தவர் அல்ல. சுயசாதி கிண்டலும் விமர்சனமும் தான் அவரது பிரதான நோக்கம். அங்கதம் தான் அவரது வலிமை. ஆனால் கொஞ்சம் அடிபிசகி வேறுபிரதேசத்தில் நுழைந்தால் திணறுகிறார். எப்படி மகாபாரதபோரில் துரியோதனனை அர்ஜுனன் சந்திக்கக் கூடாதோ அதே போல் சீரியஸான கதைகளை திலீப்குமார நேரிடும் போது பல குழப்பமான கணங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக எல்லாவற்றையும் சொல்லி விடும் அவசரம் காரணமாக ஒரு கதாபாத்திரம் தன் போக்கில் குறியீடாக மாற அவர் அனுமதிப்பதில்லை. தனது சீரியஸ் கதைகளில் கடைசி வரை கருத்தாக சுமந்து வந்த மூட்டையை திடீரென்று திறந்து பூனையை கொஞ்சம் தாவிப் போக விடுகிறார். அவரது கங்குப்பாட்டி, பப்லி பாட்டி போன்றோர் கொஞ்சம் அதிக நீளமாக, அதைவிட இன்னும் அதி சாமர்த்தியமாக பேசுவதனால் செயற்கையாக தோன்றுகிறார்கள். அதே நேரம் திலீப்குமாரின் சாமர்த்தியமான பாத்திரங்களின் வக்கணையான வம்பளப்பு தான் அவற்றின் முக்கிய சுவாரஸ்யம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
துரதிஷ்டவசமாக இந்த பாத்திரங்கள் குழந்தையின் கையில் மாட்டின பேசும் பொம்மை போல் படாத பாடு படுகின்றன. அதே போல் அவரது அநேகமான தீவிர கதைகளில் கடைசி பத்தி ஒன்று தோன்றி அநாவசிய அழுத்தம் தருகிறது. துலாபாரத்தில் யானை அமர்ந்தது போல் ஆகிறது. மேலும் விபரீதமாக அவரது பாத்திரங்கள் “தான் இப்பிரபஞ்சத்தின் கண் ஒரு துகள் என்றெல்லாம் மிகையாக தத்துவம் உதிர்க்கிறார்கள். நகுலன் இதை செய்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் நகுலன் கதைகளில் பாத்திரங்கள் அவரது ஆளுமையின் துண்டுபட்ட வடிவங்கள். படிப்படியாக தன்னையே அவர் ஒரு குறியீடாக மாற்றிக் கொள்கிறார். நகுலன் ஒரு கலாச்சார மனநிலை. அவரது பாத்திரம் ஒன்று தான் பேசுவதில் பயனில்லை என்று நினைத்து நாள்பூரா பிராந்தி குடித்து அர்த்தமற்ற ஒலிகளை எழுப்பிக் கொண்டிருக்கலாம் (வாக்குமூலம்). ஆனால் ஒரு மரபான சிறுகதை வடிவில் ஒரு சௌகார்பேட்டை கங்குப்பாட்டி அதை செய்ய முடியாது. இப்படியான சொற்றொடர்கள் திலீப்குமாரின் கதையை மேற்கொண்டு நகர விடாமல் அடைத்து விடுகின்றன. ஆனால் இந்த இடறுகின்ற தத்துவ ரத்தினங்கள் போக, பகடி எழுத்தில் திலீப் செய்யும் சாதனை அபாரமானது.
உதாரணமாக “மனம் எனும் தோணி பற்றி எனும் கதை. வாழ்க்கை நிலையற்றது என்பதால் அர்த்தமற்றது. அர்த்தமற்ற வாழ்வில் ஆர்வம் காட்டுவது ஒரு அபத்தம். இப்படி யோசிக்கிறான் இக்கதையில் வரும் ஒரு கவிஞன். அவன் ராஜகுமாரனின் மூலை என்ற பெயருள்ள துணிக்கடையில் வேலை செய்கிறான். அங்கு வேலை செய்யும் ராஜகுமாரி என்ற பெண் அவனை காதலிப்பதாக தெரிவிக்கிறாள். ராஜகுமாரி கவிஞனின் எதிர்தரப்பு. கவிஞனுக்கு வாழ்க்கை மாயை என்பதற்கு எந்த காரணமும் வேண்டாம். அதே போல் குள்ளமும் சராசரி அழகும் சுமாரான சம்பாத்தியமும் அக்குளில் சகிக்க முடியாத வியர்வை வீச்சம் கொண்ட ராஜகுமாரிக்கு வாழ்க்கை மீது மிகுந்த உற்சாகம் கொள்ளவும் காரணம் தேவை இல்லை. நடைமுறை வாழ்க்கையை நேர்மறையாய் ஏற்றுக் கொள்வது, அதில் மகிழ்ச்சி அடைவது அவள் இயல்பு. அபத்தத்தின் உச்சமாக இந்த ராஜகுமாரி கவிஞனை காதலிக்கிறாள். ஆனால் மாயையான வாழ்வில் காதலிப்பது சரியா தவறா என்று அவனுக்கு தெரியவில்லை. காதலிப்பதற்கு சாதகமான காரணம் கிடைக்காததால அவளை நிராகரிக்கிறான். ராஜகுமாரியிடம் அவளது அக்குள் நாற்றம் பிடிக்கவில்லை என்று சப்பைகட்டு கட்டுகிறான். பிறகு கோபத்தில் ராஜகுமாரி அவன் வேலைக்கு வேட்டு வைக்கிறாள். வேலை போன பின் அவன் தற்கொலை செய்ய கடற்கரைக்கு வருகிறான். அப்போதும் அவனுக்கு தற்கொலைக்கு ஒரு நல்ல காரணம் கிடைக்கவில்லை. சும்மா வேறொன்றும் செய்ய பிடிக்காமல் தறகொலை செய்ய முனைகிறான். முடிவில் அவனுக்கு புரியவருகிறது, ஆகப் பெரும் மாயை மாயையை மாயை என்று நம்புவது தான் என்று. மனித மனத்தின் அகம்பாவம் தான் இத்தகைய பாசாங்குகளை நோக்கி தள்ளுகிறது. இக்கதையில் வரும் கடையின் பெயரான “ராஜகுமாரனின் மூலை என்பதில் உள்ள நகைமுரணை கவனியுங்கள். இங்கு தான் மிக சலிப்பான ஜவுளி விறபனை வேலையை அற்பமான சம்பளத்துக்கு கதாபாத்திரங்கள் செய்கிறார்கள். இங்கு வேலை செய்யும் சராசரி பெண்ணுக்குத் தான் ராஜகுமாரி என்ற பெயரும் உள்ளது. இக்கதையில் ஒவ்வொரு சின்ன தகவலிலும் பிரமாதமான அங்கதம் உள்ளது. கவிஞன் வானிலும் ராஜகுமாரி மண்ணிலும் வசிக்கிறாள். நூற்றாண்டுகளின் தத்துவ வரலாற்றில் மண்ணிலும் விண்ணிலுமாக நின்று தத்துவவாதிகள் சண்டை போட்டிருக்கிறார்கள். இரண்டு தரப்புக்கும் ஒரு கோளாறு உள்ளது. நிலையாமை மண்ணுலகை அர்த்தமற்றது ஆக்குகிறது. ஆனால் எதிர்தரப்பு தத்துவவாதிகள் முழுக்க பிரக்ஞை வழி நாம் காணும் உலகம் செயற்கையானதாக உண்மையின் சாரம் குறைந்ததாக உள்ளது. பூமியில் நிலைத்து காலூன்றிய சிந்தனையாளன் தான் வாழ்வின் ரகசியங்கள் திறக்கிறான். மகிழ்ச்சியை அனுபவிக்க அதன் ஒரு பகுதியாக இருந்தால் போதும் அதை அறிய வேண்டியதில்லை என்று புரிந்து கொள்கிறான். இக்கதையில் கடற்கரையில் தொடர்ந்து தற்கொலை திட்டங்கள் இன்றி, உத்தேசங்கள் இன்றி, ஆனால் அதன் கிளர்ச்சியான அம்சத்தில் மட்டும் மனம் பறிகொடுத்து அமர்ந்திருக்கும் கவிஞன் ஒரு கற்பனை செய்கிறான். அந்த பகற்கனவு அவனுக்கு உண்மையாகவே தோன்றி விடுகிறது. அதில் ராஜகுமாரி தோன்றி அவனிடம் மீண்டும் காதல் யாசிக்கிறாள். அவனுக்கு காதலித்தால் ஒன்றும் மோசமில்லை என்று தோன்றினாலும் காதல் ஒரு மண்ணுலக சமாச்சாரம் என்பதால் அதை அவனது அகங்காரம் மறுக்கிறது. ஒரு தருணத்தில் அவன் அவளை முத்தமிடுகிறான். ஒரு அர்த்தமும் இல்லாத மண்ணுலக காதல் அவனுக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. முதன்முறை உற்சாகமடைகிறான். பிரமை விலகும் போது அவன் ஸ்தம்பித்து போகிறான். சுவாரஸ்யமாக இந்த தத்துவப் பகடியில் எந்த தத்துவ ரத்தினங்களும் இல்லை. திலீப் குமாரின் சிறந்த கதைகளில் ஒன்று இது.  இதே வரிசையில் கொஞ்சம் தாழ்வாக வைக்க வேண்டிய வேறு இரண்டு அங்கதக் கதைகள் ஜனம் மற்றும் தீர்வு .
திலீப் குமாரின் அநேக கதைகளில் நிலையாமை மீது பகடி பிரதானமாக உள்ளது. நிலையற்ற, அவலங்கள் நிறைந்த இந்த வாழ்வில் ஒரு நிலையான உயிர்த்தன்மை உள்ளது என்பதை அவரது கங்குப்பாட்டி, கவிஞன் போன்றவர்கள் மிக தாமதமாக புரிந்து கொள்கிறார்கள். வாழ்வின் இந்த ஆதார ஆற்றல் தான் அவர்களை பிரபஞ்சத்தின் போக்கோடு ஒழுகிப் போக வைக்கிறது. கடவு கதையில் பழுத்த கங்குப்பாட்டி சாவதற்கான தருணம் அருகில் வந்து மீண்டும் மீண்டும் தள்ளிப் போகிறது. கங்குப்பாட்டியின் அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் அவரது சாவை எதிர்பார்த்து அடையும் ஏமாற்றம் வெகு தமாஷானது. பாட்டிக்கு பாடை கட்டித் தருவதற்கென்றே ரஜ்னி என்ற ஒருவர் கங்கணம் கட்டி அலைகிறார். கடைசியில் எல்லாருடைய எதிர்பார்ப்பையும் கடந்து பாட்டி ஒரு அநாமதேய வேளையில் சாதுவாக இறந்து போகிறாள். நினைத்தபடிக்கு தன்னால் பாடை கட்டமுடியவில்லையே என்று ரஜ்னி பெரும் ஏமாற்றம் கொண்டு அழுகிறார். கடிதம் கதையில் கண்ஷியாம்ஜி எனும் தனது உறவுக்கார புரவலருக்கு மன்மோகன் தாஸ் துவாரகா தாஸ் எனும் வயதான வறுமையில் வாடும் மிட்டு மாமா பணம் கேட்டு ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார். அதில் பணம் வராவிட்டால் தான் சாக வேண்டியது தான் என்று அடிக்கொரு தரம் மறைமுகமாக குறிப்பிட்டு நுட்பமாக மிரட்டுகிறார். இந்த மிரட்டல் கடிதத்தை இரண்டு மூன்று தரம் படித்து விட்டு அன்றே கண்ஷியாம்ஜி எதிர்பாராமல் செத்துப் போய் விடுகிறார். தன் சாவை தள்ளிப் போடுவதில் அக்கறை கொண்ட ஒரே மனிதரும் செத்துப் போய் விட மிட்டுமாமா மேற்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார். ஒரு மாற்றத்தை - அது மரணமோ கழிப்பறைக்கு செல்வதோ - திட்டவட்டமாக எதிர்பார்த்து செய்வதில் ஒரு அபத்தம் உள்ளது. இது நம் நடைமுறை வாழ்வில் தினமும் ஒவ்வொரு நொடியும் நிகழ்கிறது. ஒரு விசயம் நிலைக்கும் என்று நினைப்பது மட்டுமல்ல நிலைக்காது என்று நம்புவது கூட அபத்தம் தான். திலீப்குமார் கதைகளின் மைய கருப்பொருள் இது தான்.
வெளியீடு: கிரியா
விலை: 160
Read More

Tuesday 6 September 2011

மகாஎழுத்தாளரும் நீதிவான்களும்




ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் குறித்த கட்டுரை (மூவருக்கு தூக்கு தள்ளிவைப்பு) ஒன்றில் ஜெ.மோ சொல்கிறார் இந்திய நீதிமன்றங்கள் நேர்மையானவை, இதுவரை உச்சநீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லாமல் யாரையும் தண்டித்ததில்லை, அதனால் சாந்தன், முருகன், பேரறிவாளன் குற்றவாளிகளே என்று. அவ்வப்போது நீதிபதிகள் சி.பி.ஐயை கேள்வி கேட்டு நெளிய வைப்பதை வைத்து ஜெ.மோ இந்த முடிவுக்கு வருவது வருத்தத்துக்கு உரியது. முதலில் எல்லா நாட்டு நீதிமன்றங்களும் அரசுக்கு சார்பாகவே தீர்ப்பளிக்கின்றன. ஒருவர் தீவிரவாதி என்று நிறுவ போதிய சான்றுகள் இல்லாத பட்சத்திலும் அவர் அப்படியே என்று நீதிமன்றம் நம்புமானால் அந்த ஊகத்தின் அடிப்படையிலும், மக்களின் உணர்வுகள் குற்றவாளிக்கு எதிராக திரண்டால் அதற்கு ஏற்றபடியும் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. அமெரிக்காவில் அறுபதுகளில் எதிர்கம்யூனிஸ் அலை வீசப்பட்ட போது மின்நாற்காலியில் எரித்து கொல்லப்பட்ட ரோஸன்பெர்குகளில் இருந்து சதாம் ஹுசேன் வரை இதுவே நடக்கிறது. முஷாரப், ஹுசேன் உள்ளிட்ட எந்த ஆட்சியாளரும் பதவி கவிழ்க்கப்பட்டவுடன் நீதிமன்றம் அவர்களை குற்றவாளிகள் என்று எளிதில் தீர்ப்பு வழங்குகிறது. இதன் மூலம் ஒன்று விளங்குகிறது அரசும், மக்களும், விசாரணை அமைப்புகளும் தான் ஒரு வழக்கின் போக்கையும் முடிவையும் தீர்மானிக்கிறார்கள். இவர்களை மீறி எந்த நீதியும் வெல்ல முடியும். இவர்களால் எந்த அநீதியும் வெல்ல முடியும். மக்களின் குவிக்கப்பட்ட உணர்வுகள் என்றும் நீதியின் பக்கம் இருந்ததில்லை. ஜெர்மானியர்களில் இருந்து சிங்களர்கள் வரை இன அழிப்பை ஆதரித்து வந்ததை நாம் காண்கிறோம். அந்த நாடுகளிலும் நீதியமைப்புகளும் கர்த்தரும் புத்தனும் இருந்தார்கள். அரசுகள் முதலாளித்துவம் மற்றும் மதநிறுவனங்களின் கருவியாகத் தான் இதுவரை வரலாற்றில் இருந்து வந்துள்ளன. விசாரணை அமைப்புகள் தனியாக செயல்பட முடியாதவை ஆக நீதிமன்றம் ஒரு கிளிப்பிள்ளை. (எந்த கிளியையும் போல அது சில வேளை உண்மையும் சொல்லலாம்.)
இந்தியாவில் ஊழலுக்கு படுகொலைகளுக்கும் காரணமான எந்த அரசியல்வாதியும் இதுவரை தண்டிக்கப்படாததற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பெரும்பான்மை மக்கள் மறைமுகமாக அநீதியை ஆதரிப்பது. அது ஊழலோ மதவாதமோ விளிம்புநிலை மக்கள் மீதான வன்முறையோ ஆக இருக்கலாம். பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து சமீப காலம் வரையிலான இந்துத்துவா படுகொலைகள் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவுடன் நடந்ததால் ஒரு எதிர்க்கட்சி அரசால் கூட அத்வானியையோ மோடியையோ வேடிக்கை பார்த்த காவலதிகாரிகளையோ தண்டிக்க முடியவில்லை. மாறாக கோத்ரா படுகொலையில் மோடியின் நேரடி பங்கை வெளியிட்ட ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தற்காலிக பணிநீக்க செய்யப்பட்டு அவருக்கு எதிராக பழைய வழக்கொன்று துடைத்தெடுக்கப்பட்டு நடக்கிறது.
இரண்டு, வளர்ச்சி என்ற பெயரில் வியாபார நிறுவனங்களுக்கு ஆதரவான சலுகை மனப்பான்மை. அதிகார வர்க்கத்தினரை நீதியின் பெயரால் அதிகமாக தொந்தரவு செய்யக்கூடாது என்பது இங்கு மீடியாவும் அரசியல்வாதிகளும் முன்வைக்கும் நிலைப்பாடு. கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக எந்த நியாய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதனால் இந்தியாவின் வணிக வளர்ச்சி பாதிக்கப்படுவதாக இந்தியா டுடே போன்ற வலதுசாரி பத்திரிகைகள் எழுதும். வளர்ச்சிக்காக வணிக நிறுவனங்களின் விதிமுறை அத்துமீறல்களை பொருட்படுத்தக் கூடாது என்பதே இன்று நம்மிடையே நடைமுறையில் உள்ள ஒரு வாதம். மேலும் பன்னாட்டு முதலாளிகளால் எளிதில் சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளையும் அரசு எந்திரத்தையும் விலைக்கு வாங்கிட முடியும். ஆக மக்களின் மிகை உணர்வுகளை, அது மதவாதமாக இருந்தாலும், கார்ப்பரேட்டுகளின் அத்துமீறல்களை, அது குற்றமாக இருந்தாலும், கண்மூடி ஏற்க வேண்டும் என்பதே இதன் பொருள். இந்த காரணத்தினாலே 2011 மே மாதம் போபால் குற்றத்திற்காக யூனியன் கார்பைடுக்கு எதிராக தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் மறுத்தது. 2G வழக்கில் இன்றும் அம்பானியோ டாட்டாவோ சிறைக்கு செல்லாமல் இருக்கிறார்கள். மும்பையில் போலீசுக்கே தெரிந்தே இண்டர்போலால் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள் பதினைந்து பேர் நட்சத்திர ஹோட்டல் நடத்துகிறார்கள், தாவூதின் சகோதரனை சோட்டா ஷக்கீலின் அடியாள் தாக்க முயன்றால் போலீஸ் பாதுகாப்பு தருவதுடன் உடனடியாக ஒரு பெரும் குற்றவாளிக்காக மற்றொரு சிறு குற்றவாளி கைது செய்யப்படுகிறார். தாவூத் மும்பையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில் வெள்ளைக்காரனில் இருந்து கொள்ளைக்காரன் வரை வியாபாரம் தொழில்வளர்ச்சி என்ற பெயரில் குற்றங்களை பட்டவர்த்தமாக இழைக்க முடிகிறது. இஸ்லாமியரை படுகொலை செய்ததற்காக அத்வானியில் இருந்து இன்று மோடி வரை தண்டிக்கப்படாமல் அப்பழுக்கற்ற சூட்டுகளில் தோன்றி மீடியா வலம் வருகிறார்கள்; ஜெயின் கமிஷன் சந்தேகம் எழுப்பிய சந்திராசாமி மற்றும் சுப்பிரமணிய சாமி வரை தப்பிக்க விடப்பட்டு ஆனால் சிவராசனால் அச்சுறுத்தப்பட்டு வீடு ஆக்கிரமிக்கப்பட்ட குற்றத்திற்காக புலி என்றே சொல்லே தெரியாத ஒரு கன்னடியர் பத்து வருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்கிறார். இந்தியாவில் மேற்சொன்ன இரு எழுதப்படாத விதிகளை மீறி நீதி செயல்பட முடியாது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கில் இடப்படவுள்ளவர்கள் நேரடியாக சம்மந்தப்படாதவர்கள் என்பது நாம் அறிந்தது. பேரறிவாளன் குண்டு தயாரித்தார் என்பதற்கு சி.பி.ஐ தரும் ஆதாரம் அவர் குண்டுக்கான பாட்டெரிகளை வாங்கித் தந்தார் என்பதே. ஆனால் குண்டுக்கான வெடிமருந்தை சப்ளை செய்த கெ.பியை தான் நாம் இங்கு கொண்டு வந்து தூக்கில் இட வேண்டும். அல்லது ராஜீவுக்கு ஆபத்து வரப்போகிறது என்று தெரிந்திருந்தும் தடுக்காத வாழப்பாடி ராமமூர்த்தி, சுப்பிரமணியம் சாமி போன்றோரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இருக்க வேண்டும். முயன்றிருந்தால் பேட்டரி வாங்கியதற்கான பில்லை ஆதாரமாக தந்ததை போல் ஒரு தேசலான ஆதாரத்தை இவர்களுக்கு எதிராக சி.பி.ஐயால் திரட்டியிருக்க முடியும். மேலும் சி.பி.ஐயின் கூற்று உண்மை என்றாலும் இவர்கள் செய்தது ஒரு குறைந்தபட்ச குற்றம் மட்டுமே அதற்கு தூக்குத்தண்டனை அதிகப்படியான தண்டனை. ஜெ.மோ சொல்வது போல் இவர்கள் ராஜீவ் கொலையாளிகளோ இவர்களுக்கு நாம் தயைகூர்ந்து மன்னிக்க வேண்டியதோ இல்லை. இவர்களுக்கு அதிகப்படியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது; அநீதி நிகழ்ந்துள்ளது. ஒருவரை குற்றவாளி என்று தீர்மானித்து மன்னிப்பது தண்டிப்பதற்கு சமானமானது. இந்த குற்றம் சுமத்தி மன்னிக்கும் தாராளமனப்பான்மை ஒருவித குரூரத்தின் விளைவு. தண்டிக்கும் போதும் குற்றம் சுமத்தி ‘தப்பித்து ஓடிப் போ என்று அனுமதிக்கும் போதும் நாம் அதே சாடிஸ திருப்தியை தான் உணர்கிறோம்.
அடுத்து உச்சநீதிமன்றத்தின் மீது அபார நம்பிக்கை உள்ள ஜெ.மோ ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை “ஒரு வரலாற்று தருணம், மக்களின் உணர்வுகளை ஊழலுக்கு எதிரான போராட்டம் நோக்கி திருப்பும் வல்லமை கொண்டது என்று கொண்டாடுகிறார். 2G, CWG, அம்மாவின் சொத்துக்குவிப்பு என்று ஏகப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தின் விசாரணையில் நிலுவையில் தானே உள்ளன. சர்வ வல்லமை பொருந்திய அறம் பிழைக்காத (ஆனால் ஊழல் மற்றும் நில அபகரிப்பு குற்றங்களுக்காக பதவி விலக்கப்படும் சௌமித்ர சென்களும் தினகரன்களும் ஆளும்) நீதிமன்றங்கள் இருக்கும் போது அன்னா ஹசேரேவின் உண்ணாவிரத போராட்ட எதற்கு? இத்தனை டி.வி சேனல்கள், மற்றும் வலதுசாரிகள், தன்னார்வ குழுக்களின் ஆதரவுடன் தொடர்ந்து பத்துநாட்கள் இந்தியா மொத்தத்தையும் டிராபிக் ஜாம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? லோக் பாலின் தேவை என்ன? ரேஷன் கார்டில் இருந்து 2G, 3G வரை என்ன பிரச்சனை இருந்தாலும் ஒரு எளிய பாமரர் தன்னார்வ வழக்கு தொடுத்தால் போதுமே! ராஜீவ் கொலைவழக்கில் சுருக்கமாக முடித்து நீதியை நிலைநாட்டிய சி.பி.ஐ சான்றுகளை தந்து நீதிவான்கள் தீர்ப்பளித்து ஊழலை அழிக்க மாட்டார்களா? அப்பழுக்கற்ற நீதிபதிகளும், நேர்மையான விசாரணை அதிகாரிகளும் உள்ள போது அன்னா ஹசேரேயின் தேவை என்ன?  உண்மை என்னவெனில் கோணலாக சிந்திக்கும் ஒரு இந்துத்துவ சமூகமும், ஊழல் மலிந்த காவல்துறை, சி.பி.ஐ அதிகாரிகள், அரசியல்வாதிகளையும் தாண்டி நீதிமன்றங்களில் உள்ளதாக நம்பப்படும் ரட்சகர்களாலோ, லோக்பால் குழுவில் நியமிக்கப்படும் அதே குட்டையை சேர்ந்த தனிமனிதர்களாலோ ஊழலை அழிக்க முடியாது. இதை ஜெயமோகனே முன்னர் தீராநதியில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஊழல் நம் சமூகத்தில் என்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக உள்ளது என்று திருவிதாங்கூர் சமஸ்தான வரலாற்றை சுட்டிக் காட்டி அன்று ஜெ.மோ எழுதினார். அரசின் நலத்திட்டங்களுக்கான பணம் மக்களை சென்று சேருமுன் பல வாய்கள் கொஞ்ச கொஞ்சமாக கடித்து கடைசியில் எலும்பு மட்டுமே மக்களுக்கு எஞ்சும் என்பது ஒரு நடைமுறை உண்மை. ஊழலை அழிக்க முடியாது மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் குறைக்கலாம் என்றார் ஜெ.மோ. அப்படியென்றால் லோக்பாலால் மட்டும் மக்கள் பணத்தை காப்பாற்ற முடியும்?
மற்றொரு கட்டுரையில் (“மேலிருந்து ஊழலை அழிக்க முடியுமா) நேர்மையான தலைவர்கள் மேல் இருந்தால் ஊழல் குறையும் என்கிறார். முன்பை விட இன்று அரசியல் தலைவர்கள் ஊழல் குறைவாக செய்வதாக சொல்கிறார். மக்கள் சகித்துக் கொள்வதில்லையாம். உண்மை என்ன? முன்னெப்போதையும் விட இன்று தான் செல்வந்தர்களும், வணிகர்களும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விபரத்தை வெளியிட்ட போது நமது நாட்டில் கோடிக்கணக்கில் பணமில்லாமல் ஒருவர் தேர்தலில் நிற்க முடியாது என்ற உண்மை தெரிய வந்தது. ஊடகங்களில் இது பரவலாக பேசப்பட்டது. கவுன்சிலர்களில் இருந்து எம்.எல்.ஏக்கள் வரை இன்று தங்கள் தொகுதியில் தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. நான்கு வருடங்களில் எவ்வளவு சுருட்ட முடியுமோ அது போதும் என்று வெளிப்படையாகவே மக்களிடம் சொல்லி ஐம்பதில் இருந்து ஐம்பதாயிரம் வரை கிஸ்தி கேட்கிறார்கள். இன்று அரசியல் என்பது மீடியா மற்றும் பன்னாட்டு நிறுவன துணையுடன் செய்யும் ஒரு வியாபாரம். ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் அளவுக்கு நம் வரலாற்றிலேயே யாரும் ஊழல் செய்ததில்லை. இன்றைய தலைமுறை அரசியல் தலைவர்கள் மேம்பட்டவர்கள் என்பதற்கு நித்தீஷ்குமாரை மட்டும் உதாரணம் காட்டும் ஜெ.மோ எந்த காலத்தில் வாழ்கிறார்? எறும்புகள் வாழும் காட்டில் சில யானைகளும் வாழலாம். அதற்காக யானைகள் தான் இன்று இருக்கின்றன என்பதா?
விழிப்புணர்வு என்றால் என்ன? அது அன்னா ஹசாரே போன்றவர்கள் தூண்டி விடும் பொதுப்புத்தி கிளர்ச்சியா? திரண்டெழும் மக்கள் சக்தியின் ஆவேசமா? இல்லை. CNNIBN பேட்டியில் அருந்ததி ராய் இதைத் தான் கேள்வி கேட்கிறார்: “இதைவிடப் பெரிய கூட்டத்தை நான் காஷ்மீர் போராட்டங்களில் பார்த்திருக்கிறேன், பாபர் மசூதி இடிப்பின் போதும் பார்த்திருக்கிறேன்
1965இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இதே போல் மக்கள் கிளர்ச்சி நடந்தது. அதைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் ராபர்ட் ஹார்டுகிரேவ் என்பவர் அப்போராட்டம் மக்களின் அடிப்படையான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இருந்தது என்கிறார். அதாவது அப்போராட்டத்தை நடத்தியது தி.மு.கவோ இடதுசாரிகளோ அல்ல. அது மக்களின் அன்றாட பிரச்சனை சார்ந்த கோபத்தின் வெளிப்பாடு. மக்களுக்கு மூன்று மொழி படிக்கிறோமா என்பதல்ல, மூன்று வேளை சோறு கிடைக்குமா என்பது தான் ஆதார பிரச்சனை. விழிப்புணர்வு என்பது அரசியல் பிரக்ஞை, சமூகப் பொறுப்புணர்வு, கலாச்சார பங்களிப்பு, கோட்பாட்டு அறிவு போன்ற பல்வேறு காரணிகளால் உருவாவது. பத்து நாள் மீடியா ஸ்டண்டால் அன்னாவால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாது. தூண்டவும் முடியாது. மக்கள் பொதுவாக விலையுயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால் அதிருப்தியுற்றிருக்கிறார்கள். ஆதற்கு இந்த போராட்டம் ஒரு வடிகால் அவ்வளவே. ஜெயலலிதா அரசு ஊழியர்களை கைது செய்த போது இதே மத்தியவர்க்கத்தினர் அந்த நடவடிக்கையை ஆதரித்தார்கள். அதன் பொருள் சமூகம் அரசு ஊழியர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளது, அவர்களை நீக்க விரும்புகிறது என்றல்ல. ஒரு எளிய வடிகால் அவ்வளவே. மற்றபடி அன்னா ஹசாரேவுக்காக களமிறங்கிய மத்திய உயர்மத்திய வர்க்கத்தினர் ஊழலை தொடர்ந்து ஆதரிக்க போகிறார்கள். ஒரு அரசாங்க வேலையை சுளுவாக முடிக்க அதிகாரிகளுக்கு அன்பளிப்பு வழங்குவது ஒரு கலாச்சார பிரச்சனை. நண்பர் என்ற ஒரே காரணத்துக்காக “இலக்கிய நுட்பமோ உபபிரதிகளோ இன்றி எழுதுபவர் என்று தானே விமர்சித்த நாஞ்சில் நாடனுக்காக ஜெ.மோ பலமுறை விழா எடுத்துள்ளதும் இதே ஊழல் கலாச்சாரத்தின் மற்றொரு பகுதி தான். ஊழல் நம் நூற்றாண்டு கால கலாச்சார வரலாற்றோடு தொடர்புடையது. ஜெ.மோவின் முந்தைய தர்க்கப்படி கறை நல்லது என்பது போல ஊழலும் நல்லதே; நமக்கு இரண்டுக்குமான தேவை உள்ளது.
இந்தியா என்பது மத்திய வர்க்கம் மற்றும் உயர்வர்க்கத்தினால் மட்டும் ஆனதல்ல. அருந்ததி ராய் சொல்வது போல் நிலமற்ற, பணமற்ற, வாழ வழியற்ற, மீடியா ஆதரவற்ற கோடானு கோடி மக்களால் உருவானது இந்தியா (“யானை வாழும் காட்டில் தான் சின்ன எறும்புகள் வாழ்கின்றன்). எளிய மக்களுக்கான கல்வி, அடிப்படை வசதிகளில் இருந்து அவர்களின் நிலங்களும் உரிமைகளும் பறிக்கப்படுவது, இந்திய அரசியல் அமைப்பை  சர்வதேச சக்திகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மறைமுகமாக கட்டுப்படுத்துவது, இயற்கையையும் சூழலையும் சீரழிப்பது என நமக்கு விவாதிக்கவும் எதிர்த்து போராடவும் இன்று ஏகப்பட்ட உடனடி முக்கிய பிரச்சனைகள் உள்ளன. நமது கால்களை கரையான்கள் தின்னும்போது தலையில் நரைமயிர் பிடுங்குவதே அன்னாவும் ஆதரவாளர்களும் செய்வது.
லோக்பாலை ஜெ.மோ தேர்தல் கமிஷனுடன் ஒப்பிட்டு தேர்தலை அது ஒழுங்காக நடத்தியது போல் லோஜ்பாலும் களையெடுக்க உதவும் என்கிறார். ஆனால் தே.க போல் லோக்பால் ஒரு தனியதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்பட முடியாது. தேர்தலின் போது மட்டுமே அரசின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் உரிமை தே.கமிஷனுக்கு வழங்கப்படுகிறது. ஏனெனில் அப்போது கொள்கை அடிப்படையில் அரசு தற்காலிக நீக்கத்தில் உள்ளது. மற்றொரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கும் வரை முந்தைய அரசு முழுஅதிகாரமற்றதாகிறது. தேர்தல் முடிந்ததும் அனுமார் மீண்டும் குரங்கானது போல் தே.க சிறுத்து விடும். லோக்பால் என்பது ஒரு காலவரையறை அற்ற தேர்தல் கமிஷன். அது அரசை காவல்காப்பதற்கு என்றால் அதனை யார் காவல் காக்க? கோழி முட்டை விவகாரம் போல் இது நீண்டு கொண்டே போகும். இதற்கு பதில் சொல்லும் ஜெ.மோ லோக்பால் குழுவினரின் நேர்மையை சந்தேகிக்கிறவர்கள் அடிப்படையில் நேர்மையற்றவர்கள். நேர்மையற்றவர்கள் தம்மைச் சுற்றிலும் நேர்மை இல்லை என்று நம்ப விரும்புகிறார்கள் என்கிறார். குற்றவுணர்வு கொண்டவர்களே பிறரை குற்றவாளிகள் என நம்புகிறார்கள் எனும் ஒரு ஒழுக்கவாத தர்க்கம் இது. ஒழுக்கவாதம் அடிப்படையில் மக்கள் மிக நல்லவர்கள், நல்லவர்களாகவே வாழ வேண்டும், இல்லையென்றால் தண்டிப்போம் என்று நன்மையை கொண்டு அச்சுறுத்துவது. “நான் நல்லவன் நான் நல்லவன் என்று திரும்பத் திரும்ப சொல்வது. ஒழுக்கவாதம் தாழ்வுமனப்பான்மையின் திரிந்த வடிவம். மனிதன் அடிப்படையில் தன்னிடம் இல்லாததைத் தான் அடுத்தவரிடம் பார்க்க விரும்புகிறான். காந்தி தன் சபர்மதி ஆசிரமத்தில் காதலித்த ஒரு பெண்ணை மொட்டையடிக்க வைத்து தண்டித்தார். ஏனென்றார் காந்தியால் படுக்கையில் தனிப்பட்ட தன் காமத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நம்மிடம் எது இல்லையோ அதைப் பற்றித் தான் சதா சிந்திக்கிறோம். காமம், பணம், நேர்மை என எல்லா விசயங்களிலும் இதுவே நடக்கிறது. அறம், ஒழுக்கம், கருணை பற்றி ஆயிரக்கணக்கில் எழுதிக் கொண்டே இரங்கல் கட்டுரைகளில் தனிநபர்களை அவதூறு செய்யும் ஜெ.மோவே இதற்கு சிறந்த உதாரணம். இந்நாட்டில் லோக்பாலை நிர்வகிக்கும் அளவுக்கு நேர்மையான தலைவர்கள் மலிந்து கிடக்கிறார்கள் என்றால் லோக்பால் எதற்கு? அவர்களே நாட்டை ஆளலாமே? எலிகள் இல்லாத சாமியாருக்கு பூனையும், பால்காரியும் எதற்கு?

வலதுசாரிகளால் நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தை ஒரு வலதுசாரி எழுத்தாளர் ஆதரித்து புத்தகமாக எழுதி அதை ஒரு வலதுசாரி பதிப்பகம் வெளியிடுவதில் உள்ள குறைந்தபட்ச தர்க்கம் கூட அவரது முன்னுக்குபின் முரணான ஊழல் எதிர்ப்பு விவாதத்தில் இல்லை என்பது பரிதாபத்துக்குரியது.
Read More

Monday 5 September 2011

Raji’s Father




Raji sneezed three times. Each time her eyes widened and shone brightly. First time she said “papa is thinking of me”. Then second time “mom is thinking of me”. Finally she said with a smile: “papa”. I sneezed four times and I said all four times “my mom is thinking of me”. Raji lifted a book and clonked my head.


Raji’s papa is jogging. His potbelly shakes with a rhythm and sun shine reflects on the bald patch of his head. Suddenly he slips on a banana skin and falls flat on his back with a thud. Joggers who follow him also follow suit. Soon they all lie down flat like banana skins. Huge skins with black dots on yellow, their bottom torn into two like widened legs. As I wake with this dream I can hardly control my laughter. Neither could I remain calm as I narrate the dream to Raji the same day. Though she gave a stern expression I could guess she was amused too. Her eyes twinkled as she giggled. Then as if she suddenly remembered something she knocked on my head and said “you are an idiot. You have never seen my papa, how could your see him in dreams then?”. I said we see in dreams only those whom we have never seen in real life.
The dream continued the following night. A multitude of plantain skins. Her father’face grinned in all of them. Raji prances ahead and throws behind skins of plantains she has gobbled.
After mom returned home, for a few days I hardly met Raji. Like in the past I slept holding on to mom and the starchy smell of her saree permeated through to my dreams. One day I introduced Raji to mom as she came to pick me up at school. “Mom this is Raji, my friend”. Mom bent down and pinched Raji’s chubby cheeks and crooned to her “ such a cute girl”. Then she bent again to plant a kiss. Meanwhile, sitting on mom’s hands, I tapped Raji’s jimiki. Raji pulled up a long face and did not speak a word to me the whole day.
  
I saw Raji’s father at the annual day for the first time. Though he looked different from the dream, he seemed like one who would slip down on a banana skin any given moment.  Twice I found him cracking jokes with my mom and his belly was jerky like jelly. Raji sat next to me humming a tune and shaking lightly her double-plaited hair. Then she whispered to me suddenly “you know what, I dreamt of your mom.” She giggled and her plaits shook rhythmically. “A huge elephant was holding her aloft and running wild. Then it ran and ran and ran and then finally threw her in the temple pond. Boom!”. The tube lights above shone directly on her face and sweat drops were crystal clear. I softly tapped on her head “you have no brains. My mom won’t come in your dreams, because you have seen her already”
That night in the dream Raji and I are ambling down the Neelakanda Swamy Temple street and chattering endlessly. Raji’s shoes raise a whistling noise each time she stomps forward. she says “can you hear that, these are musical shoes. When I dance I don’t need any music”. Then She says “see like this…” and does does a little dance step. She then tears a fruit from the bunch of bananas in her hand; she relishes every bite and throws the skin behind with abandon. We hardly notice her papa jogging behind us. As always he slips down like one born to do it. In no time he sticks to the surface of the road. He is as thin as a banana skin and his features are flattened. He is unmoved, but his scream could still be heard. It reverberates across all the empty houses in that desolated street. Raji kicks the soil vigorously and a cloud of dust rises. Then I could feel shake and vibration below my feet. In no time a huge elephant runs across us. It is holding my mom aloft. Mom’s red silk saree glitters in the evening rays of the setting sun. The elephant runs to the end of the street, takes its right and turns towards the greenish temple pond. In the eerie silence it drops my mom on the pond. There is an unbelievable splash of water. It starts to rain and the sky is green. We walk uncaringly towards the setting sun.

I never revealed this dream to anyone. Not even to Raji.

After many years, one evening Raji was plaiting our child’s hair with her eyes fixed on TV. Then Raji suddenly sneezed. Her moist eyes widened and shone brightly. I said “someone must be thinking of you”. She carefully applies kajal to the child’s eyes and smiles.

Read More

Sunday 4 September 2011

ராஜீவ் மற்றும் குற்றவாளிகளின் கொலைகள்: அமைதியான கண்களுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்


ராஜீ கொலை வழக்கு குற்றவாளிகளை நீதிபதி வி.நவநீதம் ஒரு ஊர்வலத்தில் பங்கெடுப்போர்களுடன் ஒப்பிட்டார். ஒரு ஊர்வலத்தை நடத்துபவர்கள் ஒரு பிரிவு, ஒருங்கிணைப்பவர்கள் அடுத்த பிரிவு, வந்து இணைந்தபடியும், பிரிந்தபடியும் இருப்பவர்கள் இறுதிப் பிரிவு. இக்கொலை வழக்கின் மூளையாகிய பிரபாகரனை இந்திய அரசு மறைமுகமாக தீர்த்துக் கட்டியது. கே.பியை இங்கே கொண்டு வந்து விசாரிப்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு சிக்கலானது என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது பிரிவினரான சுபா, தனு உள்ளிட்டோர் உயிரோடில்லை, சிவராசன் சிறப்பு விசாரணைக் குழுவால் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடைசியில் எஞ்சியவர்களில் 26 பேர் “ராஜீவ் கொலைகாரர்கள் என்று மீடியாவால் முத்திரை குத்தப்பட்டு 98இல் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டனர். உச்சநீதிமன்றம் இவர்களில் 4 பேருக்கு மட்டுமே மரண தண்டனை என்று தீர்ப்பை திருத்தியது. நளினி மன்னிக்கப்பட்டு விட்ட நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் மட்டும் தூக்கிலப்படுவர். இந்த மரணதண்டனையை ரத்து செய்யக் கோருபவர்கள் இடையே பல தரப்புகள் உள்ளன.
முதலில் மரணதண்டனையை எதிர்ப்பவர்கள். ராஜீவ் குற்ற்வாளிகள், அப்சல் குரு போன்றோர்களை வெளிப்படையாக ஆவேசமாக ஆதரிக்கும் மனிதஉரிமையாளர்கள் அஜ்மல் கசாப் விசயத்தில் அதே நிலைப்பாட்டை எடுக்கப்போவதில்லை. தமிழக ஈழ ஆதரவாளர்கள் ஏன் அதே போன்ற உரிமைக்காக போராடும் காஷ்மீர் தீவிரவாதிகளை ஆதரிப்பதில்லை என்ற கேள்விக்கான விடையே இதற்கும். தேசியவாதம். மற்றொன்று அப்சல் குரு, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் கொலைத்திட்டத்தில் பங்கு வகித்ததாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கசாப்பை போல் துப்பாக்கி ஏந்தி நிற்கும் கொலைகார சித்திரம் இவர்களைப் பற்றி பொது மனநிலையில் இல்லை. நீதிபதி நவநீதம் ராஜீவ் குற்றவாளிகளை கொலையின் வெளிவட்டத்தில் இருப்பவர்கள் என்றே குறிப்பிட்டார். மேலும் இவர்களின் குற்றத்தை புலனாய்வாளர்கள் தீர்மானமாக நிரூபிக்கவில்லை. தோராயமான சந்தேகத்தின் அடிப்படையில் குற்றத்தின் பின்னணியில் மட்டும் இருந்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கலாமா என்பதே மீடியா நிபுணர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் எழுப்பும் வினா. இங்கு நாம் இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும்.
போலீஸ் என்றுமே ஒரு குற்றத்தை ஆராயும் போது முன்முடிவுகளுடன் தான் செயல்படுகிறது. குற்றமற்றவர்கள் தொடர்ந்து பலியாவதற்கு இது ஒரு முக்கிய காரணம். இது ஒரு உலகளாவிய பிரச்சனை. ஈராக்கில் சதாம் ஆதரவாளர்களுக்கு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், எப்போதாவது நலம் விசாரித்தவர்கள், தூரத்து உறவினர்கள் என பலர் அமெரிக்க ராணுவத்தால் அள்ளிக் கொண்டு போகப்பட்டு தேசலான சந்தேகத்தின் அடிப்படையில் மாதக்கணக்காக சித்திரவதை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட போது அவர்கள் மனநோயாளிகளாக திரும்பினர். சிரியாவிலும், இலங்கையிலும், முன்னர் சோவியத்திலும் அரசுக்கு எதிரானவர்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கானவர்கள் காணாமல் போவது, கொன்று புதைக்கப்படுவது வாடிக்கை. ராஜீவ் புலனாய்வு குழுவின் தலைவரான கார்த்திகேயன் இந்திய அமைதிப்படைக்கும் புலிகளுக்கும் போர் நடந்த போது அதைப் பற்றி புலனாய்ந்து அறிக்கை தயாரிக்க இலங்கை சென்றவர். புலிகளைக் குறித்த முன்தீர்மானம் கொண்டவர். அவர் ராஜீவ் வழக்குக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்ததுமே “இது புலிகளின் வேலை என்று தனக்கு புரிந்து விட்டதாய் சொல்கிறார். அதற்கு பின் அவர் செய்ததெல்லாம் அதற்கான ஆதாரங்களை ஒன்று திரட்டியது தான். அவர் அந்த வேலையிலும் தோல்வி அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். தடாவின் கீழ் விசாரணை நடந்ததால் மட்டுமே சிறப்பு நீதிமன்றம் கார்த்திகேயனின் மரபுக்கு மாறான, குறைவான ஆதாரங்களை ஏற்றுக் கொண்டது. குற்றவாளிகளை வதைத்து மிரட்டி வாங்கப்பட்ட, பின்னர் அவர்களே நீதிமன்றத்தில் மறுத்த, வாக்குமூலங்கள் முக்கிய சாட்சியமாக கருதப்பட்டது இன்றளவிலும் விமர்சிக்கப்படுகிறது. வழமையான நடைமுறை என்றால் சி.பி.ஐ அடிக்கடி செய்வது போல் நீதிமன்றம் முன் சாட்சிய போதாமை காரணமாய் கார்த்திகேயன் முழிபிதுங்கி நின்றிருப்பார். பேரறிவாளன் குண்டு தயாரித்தார் என்பதற்கு அவர் வழ்ங்கிய ஆதாரம் தான் இருப்பதிலேயே வேடிக்கை. ஒன்பது வால்ட் பேட்டரிகள் இரண்டு வாங்கியதற்கான பில். இதுவும் போலியாக தயாரிக்கப்பட்டது என்கிறார் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள்.
மூன்றாம் நிலை குற்றவாளிகளை பிடித்தது, பங்களூரில் சிவராசனின் இருப்பிடத்தை அடைந்து தாக்கியது ஆகியவை கார்த்திகேயனுக்கு உடனடி நட்சத்திர அந்தஸ்தை மீடியாவில் பெற்றுத் தந்தது. பூஜ்யத்தில் இருந்து விசாரணையை ஆரம்பித்து யாரும் எதிர்பாரா வகையில் குற்றவாளிகளை அவர் கண்டடைந்து வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் இன்று அவரது இந்த சாமர்த்தியம் கேள்விக்குள்ளாகிறது. ராஜீவ் கொலையில் இந்திய அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க, தொடர்புள்ளதாக ஜெயின் கமிசன் சந்தேகித்தது. தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் மீடியாவிடம் இது உண்மை என்று உறுதி செய்தனர். ரஹோத்தமன், ராஜீவ் சர்மா ஆகியோரின் சமீப புத்தகங்களும் இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட விசாரணையோ என்ற ஐயத்தை எழுப்புகின்றன. அன்று விடுதலைப்புலிகளுக்கு நம் அரசியல்வாதிகளிடையே பொதுவான ஆதரவு இருந்தது உண்மை. இதை நாம் இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும்.
ஒன்று ராஜீவ் கொலைக்கு முன் புலி ஆதரவு மத்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக இருந்தது. கொலைக்கு சில மாதங்கள் வரை ராஜீவுக்கு புலிகளின் பிரதிநிதிகளுடன் தொடர்பு இருந்தது. இது ஜெயின் அறிக்கையில் தெரிய வருகிறது. தூக்கில் தொங்கப் போகும் சாந்தனை தனது கோவை பண்ணைவீட்டில் பதுக்கி வைத்தவர் இன்று எம்.பியாக உள்ள தி.மு.கவின் சுப்புலட்சுமி ஜெகதீசன். தி.கவின் டி.எஸ் மணி இரண்டரை கிலோ தங்கம் புலிகளின் செயல்பாட்டுக்காக அளித்ததாக சொல்லப்படுகிறது. இக்கொலையில் முக்கிய பங்கு வகித்த சந்திரஹாசனை (வேலை முடிந்த பின் இவரை கத்தியால் குத்த வேண்டாம், துப்பாக்கியால் சுட்டு விடு என்று பிரபாகரன் சிவராசனுக்கு கட்டளையிடுகிறார்) சென்னையில் கொலை நடந்த நாள் ஒரு உயர்தர ஓட்டலில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த சுப்பிரமணியம் சாமி சந்திக்கிறார். அதே நாளில் டிரைடெண்ட் ஹோட்டலில் ராஜீவின் எதிரி என்று அறியப்பட்ட சந்திராசாமி வந்து தங்குகிறார். கொலைக்கு முன் நரசிம்மராவின் குருவான இந்த சந்திராசாமியிடம் ஒரு பூஜையின் போது சிவராசன் ஆசீர்வாதம் பெற்றார். இந்தியாவில் புலிகளின் புழக்கம் முதல் மும்பை குண்டுவெடிப்புக்கு முன் தாவூத்துக்கு இந்தியாவில் இருந்த ஆதரவுக்கு நிகரானது. ஆனால் ஒரு சில நொடிகளில் வரலாறு மாற, அதுவரை புலிகளுடன் நெருக்கம் காட்டிய அதிகார மட்டத்தினர் பதுங்கத் தொடங்கினர். ராஜீவ் மரணத்துக்குப் பின் ஏற்பட்ட அவநம்பிக்கையான சூழலில் பழைய புலி நண்பர்கள் யார் வேண்டுமானாலும் சந்தேகிக்கப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையில் தான் வைக்கோ, கலைஞர் உள்ளிட்ட பல தமிழக அரசியல்வாதிகள் ஏன் தீர விசாரிக்கப்படவில்லை என்று ஜெயின் கேட்டார். புலிகளை ஒரு விடுதலை இயக்கமாக கொள்கை ரீதியாக ஆதரிப்பவர்கள் அவர்களது படுகொலைகளுக்கு பொறுப்பாக முடியாது. ஜெயின் தனது முதல் அறிக்கையில் ஒட்டுமொத்தமாக தமிழர்களை குற்றம் சாட்டி இருந்தார். தனது இந்த அவரச புத்தியை கடிந்து கொண்டு இரண்டாது அறிக்கையில் இதை திருத்திக் கொண்டார். புலி ஆதரவு இந்திய அரசியல்வாதிகள் ராஜீவ் கொலைக்கு எந்தளவு பொறுப்பாக முடியும் என்பது ஒரு சிக்கலான கேள்வி. அடுத்து இக்கொலையால் பயன்பெறும் அரசியல்வாதிகள் யார் என்ற கோணத்திலும் ஜெயின் யோசித்தார். இதை மேலும் துப்புத்துலக்கிய Frontline பத்திரிகை ராஜீவ் கொலைக்கு பின்னணியில் உள்ள இரட்டையராக நரசிம்மராவ் மற்றும் சந்திராசாமியை சாடியது. சந்திராசாமி அத்னான் கஷோகி என்ற ஆயுத கடத்தல்காரருடன் சேர்ந்து ராஜீவ் கொலைக்கு பண ஆதரவு தந்ததாக சொல்லப்படுகிறது. BCCI எனும் புலிகள் பயன்படுத்தின வெளிநாட்டு வங்கியில் அவர் பெயரில் செலுத்தப்பட் 11 மில்லியன், அவரது ஆதரவாளர் பெர்னாண்டோ எனும் இலங்கைக்காரருக்கு கொடுத்த ஒன்பது லட்சம் ரூபாய் போன்றவை அவர் பெயரில் சந்தேகங்களை கிளப்பின. “ராஜீவ் அவரது அம்மாவை போல சாகப் போகிறார் என்று சந்திராசாமி பக்த்ர்கள் முன்னிலையில் சபித்ததாகவும், அவர் தொடர்ந்து எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து ராஜீவை கவிழ்க்க சதி செய்தததை ரா அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளதாகவும் ஜெயின் கூறுகிறார். ராஜீவின் உட்கட்சி எதிரிகளின் ஒருமித்த முகம் தான் சந்திராசாமி. இந்தியாவில் சாமியார்கள் என்றும் பினாமிகளாகவும், மத்தியஸ்தர்களாகவும் அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்து வந்துள்ளனர். சிவராசன் குழுவினருக்கு அடைக்கலம் அளித்த பெங்களூரை சேர்ந்த ஜெயராம் ரங்கநாத் சிவராசன் சந்திராசாமியை பற்றி அடிக்கடி குறிப்பிட்டவதாக சொல்லுகிறார். (“ஜெயின் சாமியார் என்னை நேரடி விமானம் மூலம் வெளிநாடு அனுப்புவார். அதற்குத் தான் நேரடியாக பெங்களூர் வந்தேன்). சந்திராசாமியை சந்திரகுப்தனின் சாணக்கியனாக ஊகிப்பதற்கான முகாந்திரங்கள் ஏராளம். ராஜீவ் மரித்த பின் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், நரசிம்ம ராவ் பிரதமரானதும், அவர் தனது குருநாதரை விடாப்பிடியாக காப்பாற்ற முயன்றதும் இந்த ஊகங்களை வலுவாக்கின. இந்துத்துவ காங்கிரஸ்காரரான ராவ் பிரதமரானதால் அயோத்தி இடிப்பது பி.ஜெ.பிக்கு சாத்தியமானதாகவும், அதனாலேயே அவர்கள் மத உணர்வின் அடிப்படையில் அடுத்து ஆட்சிக்கு வந்ததாகவும். இதனால் இக்கொலைக்கு பின் பி.ஜெ.பியின் கரமும் உண்டு என்று ஊகித்துக் கொண்டே போகலாம். ஜெயின் மேலும் பாலஸ்தீன, சீக்கிய பயங்கரவாதிகள் மீதும் சந்தேகம் எழுப்புகிறார். கொலையை நடத்தியது சி.ஐ.ஏவாக இருக்கவும் கூடும் என்றார். விடுதலைப்புலிகளுக்கு அப்பால் நூலில் சர்மா இலங்கைப் பிரதமர் பிரேமதாசாவை சந்தேகிக்கிறார். பால்ஸ்தீன் பிரதமர் அராபத் ராஜீவ் மீது கொலை சதி உள்ளதாக தெரிவித்தும் கொலைக்கு சில நாட்களுக்கு முன் ராஜீவின் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை பெருமளவில் குறைத்தது, தமிழகத்தில் பாதுகாப்பான சூழல் இல்லை என்று அஞ்சப்பட்ட போதும் அவரை இங்கு அழைத்து வர சில தமிழக தலைவர்கள் வற்புறுத்தியது, பிரச்சார நிகழ்ச்சிக்கான மேடை போலீஸ் அனுமதி இல்லாத இடத்தில் அமைத்தது, குண்டு வெடித்த போது எந்த அரசியல் தலைவரும் ராஜீவ் அருகில் இல்லாமல் இருந்தவை பல சந்தேகங்களை எழுப்புகின்றன. விசாரணைக்கு நரசிம்ம ராவ் ஒத்துழைக்கவில்லை என்றும், சந்திராசாமி தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர் மறைத்து விட்டதாகவும் ஜெயின் குற்றம் சாட்டினார். கொலை நடந்த சில நாட்களில் குற்றம் துலங்காத நிலையில் தான் ஒரு விடுதலைப் புலி பெண் ஒரு கூடையில் வெடிகுண்டுடன் செல்வதை பார்த்ததாக வாழப்பாடியார் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் ராஜீவை தாக்கியிருக்கக் கூடும் என்ற நம்பிக்கை காங்கிரஸ் அதிகார மட்டத்தில் நிலவியது என்பதை இது சொல்கிறது. ஆனால் தாக்கியது பெண் என்று அவருக்கு எப்படித் தெரியும்? சிறப்பு புலனாய்வு குழுவினர் மத்தியில் சிலருக்கு விசாரணைப் போக்கு அதிருப்தி அளித்தது. அரசியல் பிரமுகர்கள் விசாரிக்கப்படாதது, சிவராசன் தங்கி உள்ள விபரம் கிடைத்தும் உடனடியாக அவனை பிடிக்காமல் ஒன்றரை நாள் தாமதித்தது, இந்த விசாரணைக்கான அவசர தொலைபேசி எண்ணில் வரும் அழைப்புகளை எடுத்து பேச தமிழறியாத தெலுங்கர் ஒருவரை நியமித்தது ஆகியன சில காரணங்கள். ஒரு அதிகாரி விசாரணையின் இந்த மெத்தன போக்கை குறித்து தன் நணபர் மூலம் மூப்பனாரின் பரிச்சயக்காரர் ஒருவரிடம் தெரிவித்திருக்கிறார். “வழக்கு அப்பிடியா போகுது என்று கேட்டு மூப்பனார் மகிழ்ச்சியில் சிரித்தாராம். (யூடியூபில் உள்ள குமுதம் டாட்காம் பேட்டியில் காணலாம்). ஆக ராஜீவ் கொலை ஒரு உள்ளூர் சதியா, சர்வதேச சதியா? இதற்கு பொறுப்பு காங்கிரஸ், பி.ஜெ.பி, திமுக, தி.கவா அல்லது சி.ஐ.ஏ, பிரேமதாசாவா? தொடர்ந்த எச்சரிக்கைகளை மீறி ராஜீவ் தமிழகம் வருகிறார். அதற்கு முன் வெளிநாட்டில் உள்ள தன் மகனை அழைத்து கவனமாக இருக்கும் படி எச்சரிக்கிறார். சற்று முன் சந்திரசேகர் அரசால் அவரது பாதுகாப்பு பலவீனமாக்கப்படுகிறது. முந்தின நாள் அவரது விமானம் பழுதாகி பயணம் ஒரு நாள் தள்ளி வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அவசரமாக அதை பழுதுபார்த்து ராஜீவை அன்று மாலையே தமிழகம் அனுப்புகிறார்கள். “அவர் தில்லியில் இருந்தால் கொல்லுவது மிக மிக சிரமம். தமிழகம் வந்தால் எளிது என்று சிவராசன் பிரபாகரனிடம் வயர்லெசில் சொன்னதை ரா உளவாளிகள் ஒட்டுக் கேட்கிறார்கள். ஆனால் குறியீட்டு மொழியை தமிழில் இருந்து மொழியாக்கும் நபர் அப்போது அங்கில்லாததால் அச்செய்தியை அவர்கள் உடனடியாக டீகோட் செய்யவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு புரிந்து கொள்ளும் போது அது பழைய பத்திரிகை செய்தியாகி விடுகிறது. வெடிகுண்டுடன் ராஜீவின் அருகில் செல்லும் தனுவை ஒரு பெண் உதவி ஆய்வாளர் திரும்பத் திரும்ப விரட்டியடிக்கிறார். ராஜீவே குறுக்கிட்டு தனுவை அருகில் வர அனுமதிக்கும்படி சொல்கிறார். சர்வதேச உள்ளூர் சதியாலோசனைகளை கடந்து இக்கொலை நாம் விவாதிக்க விவாதிக்க மேலும் மர்மம் கூடும் ஒரு புனைவாக மாறுகிறது. ஒரு அர்த்தத்தில் மார்க்வெஸின் முன்கூறப்பட்ட மரணத்தின் வரலாற்றில் போல் ராஜீவ் தன் மரணத்தை நோக்கி ஒவ்வொரு தடையாக கடந்து நடந்து செல்கிறார். ஒரு துயரநாடக நாயகனைப் போல் அவர் தப்பிக்க ஆயிரம் வழிகள் இருந்தும் சாவை நோக்கி அந்த குறுகின வழியை தேர்ந்தெடுக்கிறார். அவர் கால்கள் பயணிப்பதை வியாசனின் துயரக் கண்களுடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் மேற்சொன்ன ஊகங்களுக்கு நீதி விசாரணையில் மதிப்பில்லை. இருந்தும் சமூக கோபம், மீடியா நெருக்கடி காரணமாக இதே போன்ற ஊகங்களின் அடிப்படையில் தான் மூன்றாம் நிலை புலிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் கார்த்திகேயன் குற்றவாளிகளாக முன்னிறுத்தினார். எப்போதும் போல் நீதிபதிகள் வெளி நெருக்கடிக்கு பணிந்து அவசர தீர்ப்பு வழங்கினர். நீதித்துறை பொதுப்புத்தியின் ஆயுதமாவது கண்டனத்துக்குரியது, விவாதத்துக்குரியது. ஆனால் எல்லா நாடுகளிலும் இதுவே நீதிபதிகளின் நடைமுறை. அவர்கள் காவல் அதிகாரிகளின் தரப்பை நம்பத்தான் முதலில் ஒப்புகிறார்கள். மீடியாவின் திருகலுக்கு வளைகிறார்கள். ஒரு கூட்டத்தில் கண்டனக்குரல்களுக்கு மத்தியில் தயங்காமல் ஊடகங்களை இக்காரணத்துக்காக குற்றம் சாட்டினார் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள். “எந்த தடயமும் இல்லாத பட்சத்திலும் இந்தியா டுடே என் மகனின் போட்டோவை போட்டு ‘ராஜீவ் காந்தி கொலைகாரன் என்றது. அது ஒரு திருப்புமுனை. இது என்ன நியாயம்? என்றார். பிரவீன் சாமி போன்ற ஆங்கில பத்திரிகையாளர்கள் போலீஸ் தம் காதில் சொல்லும் அரைகுறை ஊகத்தை கூட இரட்டிப்பு நம்பிக்கையுடன் ஆவேசமாக எழுதுபவர்கள். அது மக்களிடம் சென்று பூம்ராங் போல் நீதித்துறையிடமும் காவலர்களிடம் திரும்ப வருகிறது. இறையாண்மைக்கு எதிரான குற்றத்துக்கு மரணத்தண்டனையை ஒப்புக் கொள்பவர்கள் கூட போதுமான ஆதாரங்கள் இல்லாமல் தண்டிப்பதை எதிர்க்கிறார்கள். மேலும் முதல், இரண்டாம் நிலை குற்றவாளிகள் ஏன் உயிரோடு பிடிக்கப்படவில்லை, வெடிமருந்தை அனுப்பிய கே.பியை விசாரிக்க ஏன் தயங்குகிறோம், பின்னணியில் இருந்த அரசியல் தலைவர்கள் ஏன் காப்பாற்றப்பட்டார்கள் என்பதைக் கேட்டு இதனால் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் ஒரு மாபெரும் குற்றத்தை மறைப்பதற்கான பலிகடாக்கள் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
நளினி மட்டும் ஏன் மன்னிக்கப்பட்டார்? அவர் ஒரு தாய் என்ற சலுகை உச்சநீதிமன்ற நீதிக்குழுவால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது. கொலை பற்றின சங்கடமான சில உண்மைகளை முருகன் புத்தகமாக எழுத தீர்மானித்ததாகவும் அதை தடுப்பதற்கான சமரசம் தான் மன்னிப்பு என்று ஒரு ஊகம் உள்ளது. நளினி மூளைச்சலவை செய்யப்பட்டார், பின்னர் வருந்தினார், ஆனால் அப்போது சதியாலோசனையில் இருந்து வெளியேற முடியாதபடி மாட்டி இருந்தார் எனப்படுகிறது. இதே தர்க்கம் பேரறிவாளனுக்கு செல்லுபடியாகும். குண்டு தயாரித்ததோ ரெண்டு பாட்டரிகள் வாங்கிக் கொடுத்ததோ அவரும் இளமையின் உந்துதலில் செயல்பட்டிருக்கலாம்.
மரண தண்டனையின் நோக்கம் என்ன? தேசத்துரோகம் செய்யாதபடி மக்களை அச்சுறுத்துவது  அடுத்து தேசத்துக்கும் மக்களுக்கும் ஆபத்தானவர்களை அழிப்பது. புலிகள் இயக்கம் விழுந்து விட்ட நிலையில் இம்மூவரையும் தூக்கிலிடுவது யாரையும் அச்சுறுத்தவோ, இறந்த பாம்பான புலிகள் இயக்கத்தை அடிப்பதன் மூலம் இந்திய சமூகத்தை பாதுக்காக்கவோ பயன்படாது. குறைந்தது ஐந்து வருடங்களுக்கு முன்னாவது நாம் பாபர் மசூதி இடித்தவர்களை தூக்கிலிட்டிருந்தால் குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இறந்திருக்க மாட்டார்கள். குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். காஷ்மீர் மற்றும் வடமேற்கு பிரதேச மக்களை சமமாக பாவித்து அவர்களுக்கான உரிமைகளை அளித்து வளர்ச்சியில் கவனம் காட்டி இருந்தால், வனப்பிரதேசத்தை, விவசாய நிலங்களை தொழிலதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் பறிக்க அனுமதிக்காதிருந்தால் ஏகப்பட்ட தீவிரவாத நக்சலைட் தாக்குதல்களை, அதைத் தடுப்பதற்கான ராணுவ செலவுகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் நாம் என்றும் நிழல்யுத்தம் செய்து கரகோசம் பெறத் தான் விரும்புகிறோம்.
அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 1963இல் ஓஸ்வால்ட் என்பவரால் கொல்லப்ப்பட்டார். ஆனால் ஓஸ்வால்ட் இரண்டு நாட்களில் உண்மையை மறைக்கும் நோக்கத்துடன் ஜேக் ரூபி என்பவரால் கொல்லப்பட்டார். கென்னடியின் படுகொலை ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்று வாரென் கமிஷன், எப்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏவால் ஆரம்பத்தில் கூறப்பட்டது அமெரிக்க மக்கள் அதை நம்ப தலைப்பட இல்லை. அவர்கள் பின்னணியில் உள்ள நிஜத்தை அறிய தலைப்பட்டார். நூற்றுக்கணக்கான புத்தகங்கள், மீடியா அறிக்கைகள், விவாதங்கள் நடந்தன. 79இல் ஹவுஸ் செலக்ட் குழு அமைக்கப்பட்டு அதன் விசாரணை முடிவில் புலனாய்வு அதிகாரிகளின் தவறுகளும், அவர்கள் உண்மையை மூடி வைக்க முயன்றதும், சதியாலோசனை என்ற கோணத்தில் விசாரிக்க மறுத்ததும் கண்டறியப்பட்டன. அடுத்து வந்த அரசுகள் ராக்பெல்லர் மற்றும் சர்ச் கமிட்டிகள் விசாரித்து சி.ஐ.ஏ மீது சந்தேகத்தை எழுப்பின. உண்மையை அறிவதற்கான மக்களின் இந்த தொடர் நிர்பந்தம் அமெரிக்காவில் விசாரணையை இன்றும் செலுத்துகிறது. இறுதியில் மாபியா திட்டமிட்டு இக்கொலையை நடத்தியிருக்கலாம் என்றும், அரசியல் தலைவர்களின் குறுக்கீடு காரணமாய் சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ தடயங்களை அழித்தது, சதியாலோசனை பின்னணியை ஆராய தயங்கியது என்றும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல 92இல் சமூக அழுத்தத்தின் விளைவாக இக்கொலை வழக்கு சம்மந்தமான 98 சதவீத ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டது. 2004இல் நடந்த கணக்கெடுப்பில் 75 சதவீக அமெரிக்கர்கள் தங்களுக்கு இக்கொலை வழக்கில் இன்னமும் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். ஓஸ்வால்ட் எனும் தனிமனிதரை பலி வாங்கியதும் அவர்கள் நம்மைப் போல் அமைதியடையவில்லை. 32 வருடங்களுக்குப் பின் Science and Justice என்ற பத்திரிகையில் ஒருவர் விஞ்ஞான ஆய்வு செய்து கென்னடியின் கொலையாளி ஒருவர் அல்ல, இரண்டாவது ஒருவர் இருந்திருக்கலாம் என்று கண்டறிந்துள்ளார். அவர்கள் அநீதியின் சிதையை அணைய விடுவதே இல்லை. ஆனால் இதற்கு மாறாக, நம்மைப் போன்ற ஒரு சமூகம் தேசத்தலைவரின் கொலையின் ஆதார காரணத்தை அறிய விரும்பாது புனைவுகளை எளிதில் நம்பத் தலைப்படுகிறது என்றால் அதன் பொருள் நாம் அக்கொலையை மறைமுகமாக ஆதரிக்கிறோம் என்பதே. சமூகத்தின் கொலை விழைவு தான் தனிநபர் தாக்குதலாக வெடிக்கிறது.
ராஜீவை கொன்றது நாமா அல்லது முருகன், சாந்தன், பேரறிவாளனா? இருட்டில் தெரியும் அவ்விரு கண்கள் யாருடையவை?
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates