Tuesday 24 April 2012

பிடிக்காத ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருப்பது




பிடிக்காத ஒருவர்
பக்கத்தில்
அமர்ந்திருப்பது
ஒரு சுகந்த மலரை
பறிக்க
மனம் தடுமாறுவதைப் போல.

பிடிக்காத ஒருவர்
வெகுவெகு அருகில்
அமர்ந்திருக்கிறார்
ஒரு விரலை வளைத்தால்
தொட்டு விடலாம்.

இதயம் விம்ம
நினைவுகள் ததும்ப
இனம்புரியா இழப்பும்
தீராத வலியும்.

பிடிக்காத ஒருவரை
இவ்வளவு நேசித்திருக்கிறோமா
என்று வியக்கிறோம்.

பிடிக்காத ஒருவரை
பிடிக்காமல் போன நொடி
பிடித்திருக்கிறது என அறிந்ததற்கு
முன்னா பின்னா.

பிடிக்காத ஒருவரை
பிடிப்பதற்கு
இவ்வளவு பிடிக்காமல் போக
வேண்டியிருக்கிறது.

பிறகு
நாங்கள்
பேச ஆரம்பிக்கிறோம்
அடிக்கடி கைகளை
தொட்டுக் கொண்டு
கண்களால் ஆறுதல்
தெரிவித்தபடி.

அவ்வளவு அமைதியாய்
சின்னதொரு இமைத்துடிப்பு கூட
பிசகாமல்
நேர்த்தியாய் அமைந்த
தெளிவான வாக்கியங்களுடன்.

மீண்டும்
வெகுஅருகில் தான்
இருக்கிறோம்
எங்களிடையேயான
கசப்பு மட்டும்
சற்றும் நிறமற்றதாய்
வாசம் அற்றதாய்
பெயர் அற்றதாய்
எங்களிடையே
அது இருக்கிறது
இரு பறவைகளிடையே
வானம் போல.

அழகான நிதானமான தெளிவான
இவ்வுலகில்
சாத்தியங்கள் எல்லையற்றவை
சுதந்திரமும் முடிவற்றது -
இங்கு
ஒரு இனிமையான பகல்
பிரித்தறிய முடியாமல்
ஒரு மெல்லிய கசப்பை கலந்ததாய்
இருக்கிறது
ஒரு சுகந்தமான
பறிக்க முடியாத
மலரைப் போல்.
Read More

Friday 20 April 2012

திருமணநாள் பரிசுகள்




திருமணநாள் பரிசுகள்
குழந்தைத்தனத்தால் புத்தொளிர்கின்றன.
வருடங்கள் முன் பின் சென்று
தூசு படிந்து
நிறம் மங்கி வரும்
ஒரு குழந்தையின் பாதுகாக்கப்பட்ட
விளையாட்டுப் பொருட்களைப் போல்

இன்று மாலை
பழைய பரிசுகளுடன்
அமர்ந்திருக்கிறேன்.

மஞ்சளான மாலை
அழுகும் இலைகளின் சலசலப்புடன்
இரவில் வெடிக்கும் பூக்களின்
வாசனையையும்
கொண்டு வருகிறது.

மாடி ஜன்னலுக்கு வெளியே
நூறு நூறு கட்டிடங்களுக்கு அப்பால்
ஒரு சோர்வுற்ற சூரியன்
இறுதியாய் ஆஸ்பத்திரிக்கு திரும்பும்
தளர்ந்து வீழ்ந்த உடலைப் போல்
எதையாவது பற்றிக் கொள்ள
விழைகிறான்.

எதிர்பாராது
மழை பெய்ய துவங்குகிறது
தயாரற்ற மனிதர்கள்
கூரைகள் தேடி சிதறுகிறார்கள்.

கால் இடறி தடுமாறுகிறேன்
உனது பரிசுப் பொருட்கள்
கலந்து விடுகின்றன
எனதுடன்.

மீண்டும் மீண்டும்
அவற்றை
இரு பகுதியாய் பிரிக்க முயன்று
தோல்வியடைகிறேன்
பின் காலவரிசைப்படி
கலைத்துக் கலைத்து
அடுக்குகிறேன்.

மழை நிற்க வெகுநேரமாகிறது
வெப்பம் கிளம்பி
பின்
பனி பொழியும் போது
திகைத்துப் போய்
பரிசுப் பொருட்கள் மத்தியில்
தற்காலிகமாய் எல்லாரும் மறந்து போன ஒரு குழந்தையைப் போல
அமர்ந்திருக்கிறேன்.

வாசலில்
மெல்ல தும்மியபடி
நுழைகிறாய்.

உன்னிடமிருந்து
பரிசுப் பொருளை வாங்கி
அருகில் வைத்து
உனக்கான புதுப் பரிசை
குவியலில் தேடி
தோற்று
வேறுவழியின்றி
கண்களில் மன்னிப்பை வைத்தபடி
அங்கு
ஆகப் பழசான பரிசு ஒன்றை
பொறுக்கி
நீட்டுகிறேன்
அதில் மிகச்சரியாய்
குறிக்கப்பட்டுள்ளது
இன்றைய தேதி...
Read More

Tuesday 17 April 2012

இனிய சேதியில் ஆரம்பமாகும் நாள்



ஒரு இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாள்
அப்போதில்
இருந்து தான்
துவங்குகிறது

ஒரு இனிய நாள்
கண்டனங்கள் ஏமாற்றங்கள் வருத்தங்களில் இருந்து
மிக பாதுகாப்பாக இருக்கிறது
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை போல்

அதற்கு மிக ரகசியமாக
உணவு போகிறது
மிக அலட்சியமாக புரண்டு படுக்கிறது
திரும்பிப் பார்க்காதவர்களுக்கு
அமைதியாக சில உதைகளை விடுகிறது

வழமையாக நம்மை
அவமானிக்கும் சங்கடப்படுத்தும் கண்ணீர் விட வைக்கும்
எதிரிகள்
ஒருநொடி குழம்பிப் போய் விடுகிறார்கள்
இனி என்ன செய்வது என.


ஒரு இனிய செய்தியுடன் துவங்கும் நாளை
யாராலும் நிறுத்த முடியாது -
துவங்கி முடியாத
அந்த நாளில்
எதேச்சையாக நீங்கள் விழிக்கிறீர்கள்

மீண்டும் அந்நாள் முடிகையில்
மழைபெய்யும் நாளில் தொப்பலாக வீடு திரும்புவது போல்
ஒவ்வொரு அறிந்த விரலாக தொட்டு
ஆசுவாசம் கொள்கிறீர்கள்
இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாள்
நம்மை
அவ்வளவு மூச்சு முட்ட வைக்கிறது

ஒரு இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாளைப் போல்
மிக அமைதியாக மகிழ்ச்சியை
வேறெதுவும்
தக்க வைப்பதில்லை
மகிழ்ச்சியோ நெகிழ்ச்சியோ எக்களிப்போ
ஒரு விரல் தீண்டலில் எதிர்தொடுகைக்கு புரிந்து விடுகிறது

நெரிசலான மக்கள் கூட்டத்தை பார்த்தபடி
அந்நியமாக தனியாக
நடைபாதையில் அமர்ந்து
கேவி கேவி அழுபவனை பார்த்திருக்கிறோம்
கடந்து போகும் நம்மை திடுக்கிட வைக்கும் படியாய்
செல்போனில் சட்டென கூவி அழும்
பெண்ணை கேட்டிருக்கிறோம்
மெல்ல கசக்கும் கண்களைப் பார்த்து
தூசா அழுகையா உண்மையா நடிப்பா என வியந்திருக்கிறோம்
துக்கத்துக்கு அவ்வளவு பிரயத்தனம் தேவையுள்ளது
நீங்கள் துக்கித்திருப்பதை நம்ப
யாருமே தயாராக இல்லை
அது சாத்தியமே இல்லை
அதில் நியாயமே இல்லை
ஒவ்வொரு பக்கமிருந்தும்
ஆறுதல் வருகிறது
களைத்து குற்றவுணர்வு அடைகிறீர்கள்

ஆனால் ஒரு இனிய செய்தியுடன் நாளை ஆரம்பித்தவனை
சட்டென்று நம்பி விடுகிறார்கள்
வறண்ட புன்னகையுடன் கைகுலுக்கிறார்கள்
மேலோட்டமான் குரலில் வாழ்த்துகிறார்கள்
கோபமாய் வெறிக்கிறார்கள்
இதெற்கெல்லாம் மகிழ்ச்சியடைவது மிகை என குறிப்புணர்த்துகிறார்கள்
துயரத்தின் போது அசலான நண்பனை கண்டறியலாம்
என யார் சொன்னது?
எனது வாழ்வின் மிக இனிய நாளின் போது
நான் கண்டேன்
ஒரு மிக இனிய நாளை
மிக கசப்பான நாளில் இருப்பவர்களால் தான்
அறிந்து கொள்ள முடியும் என

Read More

Thursday 12 April 2012

சச்சினும் திராவிடும் – ஒரே படகில் மேதையும் நடைமுறைவாதியும்


மேதைமையின் சிலுவை:

இரு கசப்பான சுற்றுப்பயணங்களுக்குப் பிறகு இரு பெரும் கிரிக்கெட் ஆளுமைகள் தம் மீதுள்ள சுமையை இறக்கி இருக்கிறார்கள். சச்சின் தனது நூறாவது சதத்தை ஆசியக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக அடித்து. திராவிட் எதிர்பாராத படி வழக்கமான நிதானத்துடன் தனது ஓய்வை அறிவித்து. சச்சினின் நூறாவது சதம் அவரது இதுவரையிலான எண்ணற்ற சாதனைகளில் ஒன்று மட்டும் தான். நூறாவது சதம் என்பது மீடியாவால் மிகையாக உற்பத்தி செய்யப்பட்ட எதிர்பார்ப்பு மட்டுமே என சச்சினே சொல்கிறார். உலகக்கோப்பையின் போது யாரும் நூறாவது சதத்தை எதிர்பார்க்கவில்லை. அது முடிந்த பின் இந்தியாவின் ஆட்டத்தரம் கீழிறங்க மீடியாவுக்கு இருந்த ஒரே விளம்பர வாய்ப்பாக இது மட்டுமே இருந்தது. அணியின் தொடர்ந்த தோல்விகள் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்த 34 ஆட்டங்களாக நூறாவது சதம் அடிக்க தவறிய சச்சின் மீது கோபத்தை திருப்பினார்கள். உணவக வெயிட்டர், ஓட்டுநரில் இருந்து பத்திரிகையாளர்கள் வரை திரும்பத் திரும்ப இதையே நினைவுபடுத்த சச்சின் தன்னையே நொந்து கொண்டார் “நான் 99 சதங்கள் அடித்தது ஒரு சாதனை இல்லையா?. இந்த சாதனை கூட அர்த்தமற்ற வெற்று எண் மட்டுமே என ஒரு விமர்சனம் எழுகிறது.

முதலில் இந்த நூறு சதங்களும் ஒரே வடிவில் அடித்தவை அல்ல. டெஸ்ட் சதங்கள் ஒருநாள் சதங்களுக்கு இணையல்ல. அடுத்து, சச்சின் உலகக்கோப்பை தவிர்த்து கடந்த சில வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் ஆட இல்லை. இங்கிலாந்து தொடரில் கூட ஒருநாள் போட்டிகளை தவிர்த்தார். பின்னர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டுகளில் 100வது சதம் தவறிய போது தான் ஒரு கட்டாயம் காரணமாக அவர் ஆஸி முத்தரப்பு தொடர் மற்றும் ஆசிய கோப்பையில் ஒருநாள் துவக்கவீரராக ரஹானேவுக்கு செல்ல வேண்டிய இடத்தை பறித்து ஆடினார். இதனால் மூன்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆஸ்திரேலியா எதிர்காலத்தை உத்தேசித்து ரிக்கி பாண்டிங்கை அணியில் இருந்து விலக்கும் போது நாம் ஒரு புள்ளியியல் சாதனைக்காக ஒரு இளைஞரின் வாய்ப்பை முதிய சச்சினுக்கு அளிக்கிறோம் என கண்டனம் எழுந்தது. நட்சத்திர கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இந்தியா ஒரு அணியாக வளரவே முடியாது என இயன் சேப்பல் மறைமுகமாக கண்டித்தார். பின்னர் மஞ்சிரேக்கரும் கங்குலியும் வெவ்வேறு தொனிகளில் இதை எதிரொலித்தனர். இரண்டு, சச்சினுக்கு சாதனைகள் மீதுள்ள மிகைவிருப்பம் முன்பு விமர்சிக்கப்பட்டிருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக அவரது கறைபட்ட முகம் அம்பலப்படவில்லை. மேலும் அணியின் சீரமைப்புக்காக கராறான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்த்த போது தேர்வாளர்கள் சச்சினுக்காக, அவர் மனச்சுமையை எளிதில் களைவதற்காக, ஒரு முழுதொடரை சமர்ப்பிப்பார்கள் என்பது நமது கிரிக்கெட் வாரியம் அணி நலன் மீது இரண்டாம் பட்ச அக்கறை தான் கொண்டுள்ளது என்பதை இது நிறுவியது. மூன்றாவதாக, கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக சச்சினின் தேர்வு விவாதிக்கப்படுவது, குறிப்பாய் கண்டிப்பட்டது, இதுவே முதல் முறை. இதற்கு சுயநலம் கடந்து சச்சினின் தொய்வான ஆட்டவேகமும், மெத்தன களத்தடுப்பும் காரணங்கள். ஆனால் இந்த வயதிலும் சச்சினால் இருநூறு ஸ்டிரைக் ரேட்டுடன் ஆட முடியும் என்பது உண்மையே. திறன்கள் மங்கவில்லை என்றாலும் அதிரடியாக ஆட வேண்டிய மனநிலையில் அவரில்லை.

இப்படி சச்சினின் நூறாவது சதம் எனும் பிரம்மாண்ட சாதனை ஒரு மிகத்தவறான காலகட்டத்தில் நடந்தது. இந்த சதத்துக்காக இரு வடிவங்களிலும் அவர் காத்திருக்க நேர்ந்த நாற்பதுக்கு மேற்பட்ட ஆட்டங்கள் தனது வாழ்வின் மிக கடினமான கட்டம் என சச்சினே தெரிவித்தார். உலகக்கோப்பை தொடர்கள், தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு, தந்தையின் மரணம், தோள்பட்டை, முதுகுக் காயங்கள், சேப்பல் மஞ்சிரேக்கரின் கடும் விமர்சனங்கள், ஆத்ம நண்பன் காம்பிளியின் குற்றச்சாட்டுகள் என தனது வாழ்வின் ஆக சோதனையான வேளைகளில் கூட அவர் அதிகம் நிதானம் தவறவில்லை. ஆடுகளத்தில் அதிருப்தி காட்டியதில்லை. பேட்டிகளில் புகார் சொன்னதில்லை. சச்சின் ஒரு அதிதிறமையாளர் என்பது போக அவர் இந்தியாவின் ஆகப்பெரும் மத்தியவர்க்க வழிபாட்டு பிம்பம் ஆனதற்கு அவரது மேற்சொன்ன பொறுப்பான நிதானமான நடத்தையும் ஒரு காரணம். சச்சின் நமக்கு என்றுமே குழந்தைமையும் களங்கமின்மையும் பொறுப்பும் மிகுந்த மனிதராகவே மனதில் பதிந்திருந்தார். ஆனால் சதத்துக்காக காத்திருந்த இந்த சில மாதங்களில் நாம் பார்த்த சச்சின் முற்றிலும் வேறொருவர்.

இங்கிலாந்தில் அவர் ஆர்வமிழந்து பதற்றமாக காணப்பட்டார். வீச்சாளர்களை முன்காலில் எதிர்கொள்ள தயங்கி அதனாலே தொடர்ந்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவில் அவர் அரைசதத்துக்கு முன் வேட்டையாளியாகவும் அரைசதம் கடந்து சதத்தின் நினைவு வந்ததும் வேட்டையில் துரத்தப்படும் பிராணியாகவும் மாறினார். உண்மையில் சச்சினின் முன் சுண்டப்படும் துப்பாக்கி அவரது பிரக்ஞை மனம் மட்டும் தான். ஒரு பாதிரியாரின் அங்கிக்குள் நுழைந்து தேவாலயத்தில் மாட்டிக் கொண்ட கர்த்தரைப் போன்று தோன்றினார் சச்சின். அவர் இதுவரை எடுத்த லட்சக்கணக்கான ஓட்டங்கள் ஒரு சிலுவையாக அவரை அழுத்தியது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இதை விட அதிமுக்கியமான சாதனைகளை நிகழ்த்திய போது சச்சின் இயல்பாகத் தானே ஆடினார். பைடு பைப்பரின் பின் எலிகள் போல் சாதனைகள் சச்சினை பின் தொடர்வதாகவே தெரிந்தது. அவர் சாதாரணமாக ஒரு ஓட்டம் எடுத்து விட்டு பிரம்மாண்டத் திரையை, தொடர்ந்து ஆர்ப்பரிக்கும் பார்வையாளக் கூட்டத்தை நோக்கினால் ஒரு புதுசாதனையை எட்டியுள்ளது அவருக்கு புரிய வந்தது. இதுவரை இப்படித் தான் இருந்தது ஆனால் அவர் தனது கடந்த நாற்பது சொச்சம் ஆட்டங்களில் மீடியா அழுத்தத்தில் கண்கூடாகவே உருக்குலைந்தார். வாழ்வில் முதல்முறையாக நடுவர் தரும் தீர்ப்புக்கு எதிராக வலுவாக பலமுறைகள் அதிருப்தி தெரிவித்தார். ஆஸ்திரேலியா முத்தரப்பு போட்டி ஒன்றில் சச்சினை ஒரு பந்தில் முறியடித்த பிரட் லீ அவரை நோக்கி கேலி சிரிப்பு சிரித்தார். பொதுவாக பந்துவீச்சாளர்கள் சச்சினை சீண்ட மாட்டார்கள். அவர் மேலும் சிறப்பாக ஆட அது தூண்டும் என்பதே காரணம். சச்சின் தான் பந்துவீச்சாளரை தூண்டுவார். உதாரணமாக 2004 உலகக்கோப்பை ஆட்டம் ஒன்றில் ஆப் குச்சிக்கு வெளியே வீசும் மெல்ராத்தை நோக்கி “தைரியமிருந்தால் நேராக வீசிப் பாரேன் என சீண்டினார். பந்துவீச்சாளர்கள் அவதூறு பேசினால் சச்சின் பொதுவாக பார்வையை திருப்பிக் கொண்டு ஒரு குட்டிநடை போய் விட்டு களத்துக்கு திரும்புவார். ஆனால் மேற்சொன்ன சம்பவத்தின் போது சச்சின் விசித்திரமாக தன்னை சீண்டும் பிரட்லீயின் கண்களைப் பார்த்தார். ஒரு வறட்டுபுன்னகை செய்தார். சச்சினின் சமீபத்திய மனநிலையை வெளிக்காட்டும் மிக முக்கிய நிகழ்வு இது. தோல்விபயமும் சுய-அதிருப்தியும் கொண்டவர்கள் தாம் எதிரியை திரும்பிப் பார்ப்பார்கள். இந்த இரு பண்புகளும் நாம் சச்சினிடம் சற்றும் எதிர்பாராதவை.

100வது சதம் நிறைவு செய்தவுடன் பேட்டியில் தன்னை விமர்சித்தவர்களை இப்படி அங்கதம் செய்தார் “என்னை விமர்சிப்பவர்கள் இதுபோன்ற ஒரு சந்தர்பத்தை வாழ்நாளிலே அனுபவித்திராதவர்கள். அதாவது தனது சாதனைகளில் கால்வாசி கூட செய்திராதவர்களுக்கு தன்னை விமர்சிக்க தகுதியில்லை என்கிறார். இது பாமரத்தனமான பதில். விமர்சிப்பதை ஒருவர் நிகழ்த்திக் காட்டவோ அதை அனுபவித்திருக்கவோ அவசியம் இல்லை. விமர்சகன் சில விழுமியங்களின் பிரதிநிதி. அவனை ஒருக்காலும் நிராகரிக்க முடியாது. சச்சின் ஏன் இவ்வளவு எரிச்சல் மிக்கவரானார்? 99 சதங்கள் ஏற்படுத்தாத நெருக்கடியை 100வது ஏன் தந்தது?

இதற்கு ஒரு பதில் சச்சினுக்கு முன்பு தன்னை முன்னெடுக்கும் வேறு பல லட்சியங்கள் கனவுகள் இருந்திருக்கலாம். அவை அவரது கவனத்தை சாதனை புள்ளிவிவரங்களில் இருந்து தற்காலிகமாக திருப்ப உதவியிருக்கலாம் என்பது. ஆனால் இப்போது சச்சின் ஒரு ஓய்ந்து விட்ட பந்தைப் போல் இருக்கிறார். தன்னை செலுத்தும் கனவுகளின் ஆற்றல் இல்லாமல் அவர் ஒரு அர்த்தத்தில் பலவீனமாகி விட்டார். மீடியாவும் ரசிகர்களும் உதைத்த இடங்களுக்கெல்லாம் ஓடுகிறார். அதற்காக தன்னையே அலுத்துக் கொள்கிறார். தான் இருப்பது கானகத்தில் அல்ல, கூண்டுக்குள் என சட்டென அறிய நேர்ந்த புலியைப் போல் குழப்பமடைகிறார். இந்த புள்ளிவிவரங்களின் கூண்டில் இருந்து தப்பித்து போக அவருக்குள் மீண்டும் வனமிருகத்தின் கற்பனையும் வேட்டை இச்சையும் குடிகொள்ள வேண்டும். வெறுமனே கிரிக்கெட் ஆடும் ஆர்வம் மட்டும் போதாது.

இந்த மாபெரும் நாயகனிடம் இருக்கும் மற்றொரு சச்சின், பலவீனமான எளிதில் நொறுங்கிடும் சச்சின், மெல்ல மெல்ல வெளிவருகிறார். வெற்றிகளும் புகழும் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியை மட்டும் அல்ல, தனது பலவீனங்களை மூடி மறைக்கும் அபாரமான ஆற்றலையும் அளிக்கின்றன. சுயகட்டுப்பாடு, தன்னம்பிக்கை போன்ற சொற்கள் எல்லாம் இயலாமையை மறைக்கும் இந்த ஆற்றலைத் தான் சுட்டுகின்றன. நாம் இந்த சச்சினை பார்க்க விரும்பவில்லை என்பதாலே அவரை நோக்கி குரசாவோவின் “மாடடேயோ படத்தின் வயதான ஆசிரியரான நாயகனை நோக்கி அவரது நலம் விரும்பிகள் மீண்டும் மீண்டும் கேட்பது போல் “இன்னும் எத்தனை நாள் முதியவரே என ஒருமித்து கேட்கிறோம். “எனக்கு விருப்பமுள்ளவரை என்கிறார் சச்சின். அந்த படத்தில் வயதான ஆசிரியர் புன்னகையோடு “இன்னும் எனக்கு வேளை வரவில்லையே என்பார். நாம் இந்தியர்களுக்கு அதுவே இணக்கமான பதிலாக இருக்கும்.

நடைமுறைவாதத்தின் நாயகன்:


நவீன மட்டையாளர்களில் ஒரு வகையினர் “பாக்கியவான்கள். அவர்கள் எவ்வளவு சாதித்தாலும் அது அதிகமாகவோ குறைவாகவோ தெரியாது. அவர்கள் எத்தனை ஆட்டங்களை வென்று தந்தாலும் அது அவர்களால் மட்டும் தான் நேர்ந்ததா என்ற சந்தேகம் துருத்தி நிற்கும். அவர்கள் தொண்ணூற்று ஒன்பதில் வெளியேறினாலும் சரி நூறை அடைந்தாலும் சரி அது அதிர்ஷடமாக உழைப்பின் கூலியாக கருதப்படும். அவர்களால் சர்ச்சைகளை ஏற்படுத்தவே முடியாது. அப்படி ஏற்படுத்தினாலும் அதன் பெருமையை மேலும் ஆர்ப்பாட்டமான ஒரு நபர் தட்டிப் போய் விடுவார். அவர்களை வீரத்துக்காகவும் மனதிடத்துக்காகவும் கடப்பாட்டுக்காகவும் மெச்சுவோம்; ஒரு போதும் திறமைக்காக அல்ல. ஸ்டீ வாஹ் என்றதும் உங்களை நினைவுக்கு வருகிற காட்சி என்ன? ஒரு அழகான கவர் டிரைவோ கம்பீரமான புல் ஷாட்டோ அல்ல, அவர் உலகக்கோப்பையை உயரத்தூக்கிய நிமிடங்கள் கூட அல்ல. நாம் நினைத்துப் பார்ப்பது மே.இ தீவுகளில் ஆம்புரோஸின் அதிவேக உயரப்பந்துகளை நெஞ்சிலும் தோளிலுமாக தொடர்ந்து வாங்கி காயங்களை கடுமையான வலியை பொறுத்து தொடர் அவமானங்களை கடந்து தன் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய காட்சி. கிரிக்கெட்டில் இப்படியான வகைமாதிரிக்குள் மாட்டிக் கொண்ட மேலும் பலர் உண்டு மட்டையாளர்களில் ஸ்டுராஸ், காலிஸ், காலிங் வுட், ஆண்டி பிளவர், சந்தர்பால்; பந்துவீச்சாளர்களில் வெட்டோரி, சமிந்தா வாஸ், கும்பிளே, பிரேசர், பிளமிங், ஆண்டி பிக்கல் என பலர். தற்போது ஓய்வு பெற்றுள்ள ராகுல் திராவிட் இந்த வரிசையில் மிக சமீபமாக சேர்ந்தவர். அவரைப் பற்றி, அவரது மனைவி உட்பட, பலரது கூறுவது அவர் தனக்கு அளிக்கப்பட்ட திறமைக்கு முழுமையாக நியாயம் செய்த கடும் உழைப்பாளி என்பது. இந்த விவரணை ஒருவிதத்தில் ராகுலுக்கு பெரும் அநியாயம் செய்கிறது.

திறமை என்பது அட்டகாசமாக தனது மன எழுச்சியை வெளிப்படுத்துவது மட்டும் அல்ல. திறமை ஒரு மனிதனின் ஆளுமையின் ஒரு பரிமாணம். அது பல்வேறு திறன்களின் கூட்டிணைவு. நாம் எதிர்பாராத சின்ன சின்ன திறன்கள், பண்புகள் ஒன்றிணைந்து ஒருவரது திறமையை தீர்மானிக்கிறது. தேவை மற்றும் சந்தர்ப்பம் பொறுத்து சிலர் திடீரென பெரும் உச்சத்தை அடைவதற்கு அவர்களது சில குறிப்பிட்ட திறன்கள் அச்சூழலுக்கு ஏற்றதாக அமைவதே காரணம். திறமையை ஒரு குறுகின விளக்கத்துக்குள் அடைப்பவர்கள் இந்த திறமை வெளிப்பாட்டை வெறும் அதிர்ஷ்டம் என்று நிராகரிப்பார்கள். அதனாலே பல சமயங்களில் நமது விருப்பம் பொறுத்து சிலரை பிரபலமாக மாற்றி கொண்டாடி பிறகு தேவை முடிந்ததும் கடலில் கரைக்கிறோம். திறமையாளர்கள் பற்றின நமது அனுமானங்கள் குழப்பமானவையாக இருப்பதற்கு இது ஒரு காரணம். உதாரணமாக தொண்ணூறுகளின் போது சச்சின் டெஸ்டை விட ஒருநாள் ஆட்ட வடிவில் தான் சிறந்த மட்டையாளராக இருந்தார். டெஸ்டில் அவசரப்பட்டு விக்கெட்டை உதறும் முதிர்ச்சியற்றவராக அவர் தோன்றினார். திராவிட் அப்போது ஒரு முழுமையான டெஸ்ட் மட்டையாளராக விளங்கினார். சச்சினை விட மேலானவராக திகழ்ந்தார். ஆனால் அது ஒருநாள் ஆட்டத்தின் காலகட்டம் என்பதால் சச்சினின் ஒருநாள் புகழ் ஒளி அவரது இந்த முக்கிய குறையை மறைத்தது.

அடுத்ததாய் சச்சினால் நெருக்கடியின் போது ஆட முடியாது என்று ஒரு குற்றச்சாட்டு இரண்டாயிரத்தின் பாதி வரை வலுவாக வைக்கப்பட்டது. இந்த பத்து வருடங்களில் மேற்சொன்ன இரு பண்புகளும் உபரியாக பெற்ற ஒருவராக ராகுல் திராவிட் திகழ்ந்தார். அதனாலே வெளிநாட்டு பயணங்களின் போது இந்தியா அவரை பெருமளவில் சார்ந்திருந்தது. இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா சென்றால் சச்சினை விட திராவிட் தான் நமக்கு அதிமுக்கியமானவராக திகழ்ந்தார். திராவிடை விட நேர்த்தியான தொழில்நுட்பமும் பந்தை சந்திக்கும் திறமையை கொண்டவராக இருந்தும் சச்சினால் அநேகமான வெளிநாட்டு தொடர்களில் நிலைத்து ஓட்டங்கள் குவிக்க முடிந்ததில்லை. 32 வயதான பின்னர் சென்னையில் தான் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நெருக்கடியான டெஸ்ட் ஆட்டத்தின் போதான தனது முதல் சதத்தை அடித்தார். ஆனால் ஒருநாள் ஆட்டத்தை பொறுத்தவரையில் நெருக்கடி நிலைமையில் சச்சின் நிலைத்து இன்றுவரை ஒருமுறை கூட ஆடியதே இல்லை. அழுத்தம் மிக்க வேளைகளில் மெல்ல நடுங்கும் ஒரு நீர்க்குமிழியை ஒத்தது சச்சினின் மனம். சச்சினால் தனது மனக்கொந்தளிப்பை நிலைப்படுத்த முடிந்ததில்லை. வாழ்நாள் முழுக்க அவர் தன்னுடன் மோதியபடியே இருக்கிறார். தன்னை அமைதிப்படுத்துவதே அவரது ஆகபெரும் போராட்டம். இந்த அகப்போராட்டத்தின் முற்றுப்புள்ளி மட்டுமே சச்சின் ஒரு சதம் அடிப்பது.

ஆனால் திராவிட்டுக்கு மனதை அமைதிப்படுத்துவது, எந்த கடுமையான சூழலிலும் நிச்சலமான சிந்தனையுடன் இலக்கை நோக்கி தன்னை செலுத்துவது மிக ஆரம்பத்தில் இருந்தே எளிதாக கைவந்த ஆற்றல். சச்சின் தன் கத்தியை எக்கணமும் தன் வயிற்றை நோக்கி செலுத்தக்கூடிய சாமுராய் வீரர், ஆனால் திராவிட் கத்தியை ஏந்துவது கை அல்ல மனம் என்றறிந்த ஒரு ஜென் துறவி. திராவிட்டின் ஜென் மனம் சச்சினுக்கு வாய்த்திருந்தால் அவர் மேலும் 20 சதங்கள் அடித்திருக்கலாம். இப்படி ஏன் நாம் யோசிக்கக் கூடாது? கவசகுண்டலங்களுடன் இரு சாபங்களும் பெற்று வந்தவர் சச்சின். ஒன்று, தேவையான நேரத்தில் அடிக்க வேண்டிய ஷாட்கள் செயல்படாது. இரண்டு அவசியமுள்ள போது கூட இருப்பவர்கள் கைவிடுவார்கள், கூடவே அப்போது மொத்த நிலைமையும் அவருக்கு விரோதமாக மாறும்.

எளிதாக சொல்வதானால் திராவிடுடன் ஒப்பிடுகையில் சச்சின் சற்று குறைபட்ட திறமை தான். இப்படியே நாம் ஒப்பிட்டபடி சென்றால் எல்லா ஆளுமையிலும் ஓட்டை தெரியும்.
ஆக திராவிடை நாம் அவரிடம் இருந்து மாறுபட்டவர்களுடன் ஒப்படுவதை விட அவர் அளவிலே புரிந்து கொள்ள முயல வேண்டும். சரியான பந்துகளை வெளியே அனுப்பி, மேலும் சரியான பந்துகளை கச்சிதமாக தடுத்து, ஆகச்சரியான பந்தை அடிக்க தேர்ந்திடும் திறன், ஒவ்வொரு பந்திலும் உறைய உதவும் வைக்கும் மனக்க்குவிப்பு, அபாரமான நிதானம், கடைசி வரை தோல்வியை ஒப்புக்கொள்ளாத விடாப்பிடித்தனம், கிரிக்கெட் எனும் ஒரு கலையை நடைமுறைவாத மனநிலையுடன் அணுகி அதையே தன்னை மறந்து ரசிக்கவும் முடிதல் ஆகிய “திராவிடிய திறன்கள் வேறு எந்த ஆசிய மட்டையாளரிடமும் கடந்த இருபது வருடங்களில் நாம் காணவில்லை. இவை எளிதில் சாதாரணர்களிடம் காணக் கிடைப்பதல்ல என்றால் திராவிட் அவருக்கான அர்த்தத்தில் அசாதாரணமானவர் தானே. ஒருவேளை இன்னும் ஐந்து வருடங்களில் இந்தியர்கள் அவரது வெற்றிடத்தை உற்று நோக்கி இந்த உண்மையை மேலும் அழுத்தமாக உணரவும் இசையவும் கூடும்.

திராவிட் ஆடிய போதைப் போன்றே அவர் விடைபெறும் போதும் நாம் கண்கலங்கப் போவதில்லை. பெருமூச்சு விடவோ நிலைமறந்து துள்ளி எழவோ போவதில்லை. இலக்கியத்தில் இயல்புவாத எழுத்தாளர்களான நீலபத்மநாபன், ஆ.மாதவன் போன்றவர் அவர். எளிய அன்றாட விசயங்களின் மீதான ஆபாரமான அக்கறை மற்றும் கவனம் கொண்டு பெரும் படைப்புகளை உருவாக்க முடியும் என்று காட்டியவர்கள் அவர்கள். திராவிட் அளவுக்கு கிரிக்கெட்டை எளிமைப்படுத்தியவர்கள், அதை கலை என்ற இடத்தில் இருந்து நகர்த்தி ஒரு அறிவியலாக மாற்றிய வேறு ஒருவர் நம் கிரிக்கெட் பண்பாட்டில் இல்லை எனலாம். ஒருநாள் மற்றும் T20 ஆட்டங்களின் காலகட்டத்தில் ஒருவர் எந்த பதற்றமும் இல்லாமல் இதை செய்து கொண்டிருந்தார் என்பது கவாஸ்கரை விட அவரை மேலும் தனித்து காட்டுகிறது. சொல்லப்போனால் திராவிட் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் மனப்பான்மை கொண்டவர். அங்கு தோன்றியிருந்தால் ஹட்சன், கிர்ஸ்டன், காலிஸ் வரிசையில் அவர் முதலிடத்தில் இருந்திருப்பார். ஒருவேளை ஜீனியஸ் என்று கொண்டாடப்பட்டிருப்பார். இங்கு அவர் சச்சினின் நிழலில் ஒளிமங்கினார் என்பதை விட தனிமனித வழிபாட்டின் மிகையில் நட்சத்திர நெரிசலில் காணாமல் போனார் என்பதே சரி.

திராவிடுக்கு ஒரு வழித்தோன்றல் உண்டென்றால் அது தோனி மட்டுமே. தோனியும் தென்னாப்பிரிக்கத் தனமான சற்று வறட்டுத்தனமான மட்டையாளர் தான். திராவிடின் அதே அணுகுமுறை கொண்ட ஆனால் சம்பிரதாயமற்ற தொழில்நுட்பம் கொண்டவர் தோனி. திராவிடை போன்றே இந்தியாவின் மிக நிலையான ஒருநாள் மட்டையாளராக ஒரு உயர்ந்த 51.16 ஒருநாள் சராசரி கொண்டவர். “நான் ஆடும் ஒவ்வொரு டெஸ்டிலும் 30 ஓவர்களேனும் குறைந்தது ஆட விரும்புவேன். அதை சாதிக்காவிட்டாலும் மிகவும் ஏமாற்றமடைவேன் என்று கூறுகிறார் திராவிட். தோனியும் இதே இலக்கை கொண்டவர் தான். என்ன ஒருநாள் ஆட்டங்களில். தற்போதைக்கு ஒருநாள் வடிவில் இத்தகைய அணுகுமுறை கொண்ட மற்றொரு வீரர் உலக கிரிக்கெட்டில் தோனியைத் தவிர இல்லை எனலாம். கடைசி பத்து ஓவர்களில் நூறு ஓட்டங்கள் தேவைப்படும் நிலையிலும் சில பந்துகளை தடுத்தாட சிலவற்றை ஒற்றை இரட்டை ஓட்டங்களுக்கு விரட்டி ஓட தோனி தயங்குவதில்லை. 4, 6 அடிப்பதற்கு பின்னரும் திராவிடை போன்று மிகுந்த திட்டமிடல்கள் தேர்வுகளும் கொண்டவர் தோனி. சச்சினின் ஆக்ரோஷமும், அவரிடம் இல்லாத திராவிடிய மனப்பண்புகளும் இணைந்தவர் தோனி. ஒருவேளை திராவிடின் வெற்றிடத்தை மற்றொரு இடத்தில் வடிவில் நிறைவேற்றுபவர் அவராக இருக்கலாம்.

பொதுவான இந்தியர்களைப் போன்று கிரிக்கெட் தனக்கு அருளப்பட்ட ஒரு சித்தியாக நினைத்தவர் அல்ல திராவிட். ஒரு பேட்டியில் சதகோபன் ரமேஷிடம் வழக்கம் போல் “நீங்கள் ஏன் எதிர்பார்த்தது போல் இந்தியாவுக்காக தொடர்ந்து ஆட இல்லை. உங்களை தடுத்தது எது?என்று கேட்கப்பட்டது. அதற்கு ரமேஷ் “எனக்கு திராவிடின் மன ஒழுக்கம் இல்லையோ என்னவோ என்றார். கலைஞர்கள் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளாவிடினும் நீடித்த பெரும் சாதனை வாழ்வுகளுக்கு பின் இருப்பது வறட்டுத்தனமான எளிய நடைமுறை வாதம் தான். நமது தலைமுறையின் மிக ஸ்டைலான மட்டையாளர்களில் ஆக சலிப்பானவர் திராவிட் தான். ஆனால் அவர் அப்படியும் கிரிக்கெட் ஆடி 16 வருடங்களுக்கு மேல் நிலைத்து 12,000 ஓட்டங்களுக்கு மேல் சேகரித்து மாபெரும் சாதனைகளில் ஒருவரின் கூடப்பிறந்த மேதைமை தூண்டுதலின் பங்கு 1% தான் என நிரூபித்தார். 


இந்தியாவின் உச்சபட்ச மேதையான சச்சின் டெண்டுல்கர் தனது 32 வயதுக்கு மேல் இந்த அணுகுமுறையை தான் வரித்தார். அப்போது பலரும் சச்சின் காயம் மற்றும் வயது காரணமாய் மெத்தனமாகி விட்டதாய் குற்றம் சாட்டினர். அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மஞ்சுரேக்கரின் சேப்பலும் வலியுறுத்தினார். ஆனால் ஒரு திராவிடிய ஆட்டமுறைக்குள் நுழைந்த பின்னரே சச்சின் தனது மிகச்சிறந்த டெஸ்ட் ஆட்டங்களை ஆடினார். கடந்த ஐந்து வருடங்கள் தான் சச்சினின் ஆட்டவரலாற்றின் மிக உன்னதமான காலங்கள் என பல நிபுணர்களும் கருத்துக் கூறினர். திராவிடை விட மிகுந்த கலை சுதந்திரம் கொண்டவர் சச்சின். ஆனால் 96இல் திராவிட் இருந்த இடத்தை வந்தடையவே சச்சின் 2006 வரை முயன்றார். தனது தொழில்நுட்பத்தை, பந்தை சந்திக்கும் பாங்கை, காலாட்டத்தை தொடர்ந்து மாற்றி மெருகேற்றியபடியே இருந்தார். திராவிட் சச்சினின் கால்வாசி திறமை கொண்டவர் என்றால் ஏன் அவர் திராவிடை நோக்கி பூமியின் திசையில் சீறி வரும் ஒரு எரிகல்லை போல் நகர்ந்து கொண்டே இருந்து கொண்டிருக்க வேண்டும்? சச்சின் லாராவை விட இரட்டிப்பு சாதனை செய்ததற்கு இந்தியாவில் அவருக்கு தூண்டுதலாக ஒரு நடைமுறை வழிகாட்டியாக திராவிட் இருந்தது காரணம். இளமையில் சச்சின் தன்னை நோக்கி வரும் பந்தை தான் விரும்பும் திசைகளில் எல்லாம் அடிக்க முயன்றார். அவரது வெற்றிக்கும் தோல்விக்கும் அப்போது இந்த சாகச மனோபாவம் காரணமாக இருந்தது. பின்னர் அவர் கிரிக்கெட் என்பது பந்தை விருப்பப்படி விரட்டும் வேலை அல்ல, அங்கு ஓட்டங்கள் இறுதியில் ஒருவரது இடத்தை நிலைப்பை வெற்றியை தீர்மானிக்கின்றன என்பதை புரிந்து கொண்டார். நான்கே ஷாட்டுகளை கொண்டு எளிதில் ஐம்பது ரன்கள் எடுக்க முடியும் என்றால் அதையே அபாயகரமான பத்து ஷாட்கள் ஆடி அடைய வேண்டும் என்பது தேவையில்லை என்ற தெளிவை அடைந்தார். இதனால் அவரது ஆட்டகவர்ச்சி சற்று குறைந்தாலும் சச்சினின் ஆட்டம் முழுமை பெற்றது. இந்த முழுமையை அடையாததனாலேயே நம் நினைவுகளில் சச்சினை விட மகத்துவமான திறமையாளனாக இருக்கும் லாரா குறுகின காலத்தில் ஓய்வு பெற்று தன் விருப்பப்படி வாழ்ந்து பின்னர் மீண்டும் கிரிக்கெட் மோகம் பெற்று தாமதமாக மீள்வருககை நிகழ்த்த முயன்று தோல்வியுற்றார். உலகமே தன்னை மறந்து விட்டிருந்ததை அறிந்தார். இறுதியாக ஐ.பி.எல்லில் கலந்து கொள்ள இந்தியா வந்து பின் நிராகரிக்கப்பட்டு உச்சபட்ச கசப்புடன் ஊர் திரும்பினார். அதே காரணத்தாலேயே சச்சினுடன் அதே பிரகாசத்துடன் அரங்கில் தோன்றி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய காம்பிளி ஒரு சிறுபுள்ளியாய் கரைந்து போனார். கிரிக்கெட் எனும் ஆட்டம் ஒரு நாளின் முடிவில் வியர்வைத்துளிகளும் புள்ளியல் எண்களுமாகத் தான் எஞ்சும்.

நம் நினைவுகளில் மிஞ்சும் அற்புதமான ஷாட்டுகளும் ஆவேசமான சாகசங்களும் மெல்ல மெல்ல ஒரு கட்டத்தில் மங்கிப் போகும். வெறும் திறமையாளர்கள் ஒரு தலைமுறை பார்வையாளர்கள் மறையும் போது வெறும் பெயராக மட்டும் எஞ்சுவர். அடுத்து வரும் தலைமுறையினர் எண்களின் நாயகர்களை கண்டு தான் வியப்பர். வரலாறு அவர்களுக்கு தான் பிரதான இடம் அளிக்கும். அதனாலே லாரா இன்றும் தனது 400 ஸ்கோருக்காக நினைக்கப்படுகிறார். அந்த ஸ்கோரையும் எதிர்காலத்தில் ஒருவர் எட்டி விட்டார் என்றால் லாரா பின் சச்சினுடன் ஒப்பிடப்பட்ட ஒருவராக மட்டும் வரலாற்றில் மாறுவார்.

சச்சின் பத்து வருடங்களுக்கு மேலாக திராவிட் ஆக முயன்றது இந்த புரிதலினால் தான். அது ஒருவிதத்தில் திராவிடின் வறட்டு நடைமுறைவாதத்தின் வெற்றி தான்.
Read More

Sunday 8 April 2012

ரத்தக்கொழுப்பும் கெப்பாசிட்டி குறைந்த குடிகாரர்களும்



ரத்தக்கொழுப்பு பணக்காரர்களின், சோம்பேறிகளின், பருத்தவர்களின் உபாதையாக கருதப்படுவது. பரிணாமவியல் உணவு ஓய்வினோடு சம்பாதிக்கிற ஒன்றல்ல, அது உழைக்கும் இனத்தும் நிறமாக கருதப்படுகிற கறுப்பினோடு மிகுந்த தொடர்புடையது என சுட்டுகிறது. ரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடுவது நமது உடலின் பராமரிப்புக்கு மிகவும் அவசியமான விட்டமின் டியை சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்வதற்காக இயற்கை ஏற்படுத்தின ஒரு வசதி மட்டுமே. இதற்கு சூரிய ஒளியில் உள்ள புற-ஊதா கதிர்களை கிரகிப்பது முக்கியம். புற-ஊதா கதிர்களை உடல் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மூலம் விட்டமின் டியாக மாற்றுகிறது. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. அது தான் மேற்சொன்ன கறுப்பு நிற விவாதத்துக்கே ஆதாரம்.

மிகுதியான வெயில் தோலுக்கு தீங்கானது என நமக்குத் தெரியும். வெப்பமிகுந்த இந்தியா போன்ற நாடுகளில் விட குளிர்பிரதேசங்களில், குறிப்பாக ஐரோப்பாவில், வாழ்பவர்களுக்கு குறைந்தபட்ச சூரிய ஒளி தோலில் படுவது கூட மெலனோமா எனும் தோல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 60,000 பேர் மெலனோமாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஐரோப்பிய வெள்ளையர்களை விட அமெரிக்க கறுப்பர்களுக்கு மெலனோமா வரும் வாய்ப்பு 10இல் இருந்து 40 மடங்கு குறைவு. இது ஏன்?

இதற்கு காரணம் நமக்கு நன்கு பரிச்சயமுள்ள, நம்மை பழுப்புநிறத்தவர்களாக வைத்து குற்றவுணர்ச்சி ஏற்படுத்தும், யூமெலனின் எனும் ஒரு நிறமி. மனிதத் தோலில் உள்ள மற்றொரு நிறமி போமெலனின். இது சிவப்புநிறத் தோலுக்கு காரணமானது. ஆப்பிரிக்கர்கள் மற்றும் ஆசியர்களுக்கு யூமெலனின் அதிகம், வெள்ளையர்களுக்கு போமெலனின். யூமெலனின் முக்கிய பணி அபரிதமான புற-ஊதாக் கதிர்களை உள்ளே நுழையாமல் தடுப்பது. தோல் புற்றுநோய்க்கு யூமெலனின் குறைபாடு தான் காரணம். வெண்குஷ்டம் எனப்படும் தோல்வியாதி உள்ளவர்கள் வெள்ளை மயிர், சிவப்பு தோலுடன் மற்றபடி நம் தோற்றத்துடன் தெரிவார்கள். அவர்களின் தோலில் யூமெலனின் முற்றிலும் குறைந்து விட்டதே வெண்குஷ்டத்தை ஏற்படுத்துகிறது. கண்கள் சிவப்பாக தெரியும். அந்த சிவப்பு கண்ணின் பின்னுள்ள ரத்தக்குழாய்கள் தாம். யூமெலனின் இல்லாமல் அவர்களின் கண்கள் தோலுரிக்கப்பட்ட கோழி போல் ஆகின்றன. இயற்கை வெயில் மிகுந்த பிரதேசத்தவர்களுக்கு தாராளமாக யூமெலனினை வழங்கியது. இது நம்மை வெறுமனே தோல்வியாதியிலிருந்து காப்பாற்ற அல்ல. மற்றொரு முக்கிய நோக்கம் இருக்கிறது. அது மிகுதியான புற-ஊதாக் கதிர்கள் உடலில் உள்ள போலேட் அமிலத்தை அழிக்காமல் தடுக்க. ஆக இயல்பாகவே கறுத்ததோலுடையவர்கள் பின்காலனிய கீழ்த்தட்டினர் ஆவது மட்டுமின்றி உடலுக்குள் குறைவான புற-ஊதாக் கதிர்கள் கிரகிக்க முடிபவர்கள் ஆவார்கள். நமக்கு புற-ஊதாக் கதிர்கள் வேண்டும். ரொம்பவும் வேண்டாம், குறைவாகவும் வேண்டாம். அளவாக வேண்டும். அதைக் கொண்டு தான் விட்டமின் டியை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் ஒளியை கிரகித்து வெளியேற்ற நமக்கு ஓர் உபாயம் இல்லை. வெயில் கொளுத்தும் நாட்டினருக்கு யூமெலனின் அரண் காரணமாக குறைவாக கிடைக்கும் புற-ஊதாக் கதிர்களை கொண்டு முடிந்த அளவு விட்டமின் டியை சமைக்க வேண்டும். விட்டமின் டி அல்லது போலேட் அமிலம் என ஒரு விருப்பத்தேர்வும் நமக்கு இல்லை. இரண்டும் மிக அத்தியாவசியாமனவை.

போலேட் அமிலம் ரத்தத்தில் சிவப்பணுக்களை சிருஷ்டிக்க தேவையானது. அணுக்கள் பிரியும் போது டி.என்.ஏவை காப்பி எடுக்கவும் இது வேண்டும். கருத்தரிப்பின் போது போலேட் அமிலம் குறைந்தால் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கும். விட்டமின் டி இல்லாவிட்டால் எலும்புருக்கி நோய் ஏற்படும். வலுவான எலும்புகளுக்கு, இதயம், நரம்புகள், நோயெதிர்ப்பு சக்தி, ரத்த உறைதல் திறன் ஆகியவற்றுக்கு விட்டமின் டி அவசியம். ஆக இரண்டுக்குமான ஒரு சமநிலை உபாயமாக இயற்கை நமது ரத்தத்தில் கொழுப்பின் அளவை உயர்த்தியது. வெயிலடிக்கிறது என்று சமிக்ஞை கிடைத்தால் கொழுப்பு உயரும். (இது கண் வழி போகிறது. ஆக வெயில் கண்ணாடி போட்டால் உடலுக்கு இச்சமிக்ஞை எளிதில் செல்லாது). ரத்தக் கொழுப்பு கறுப்பு மற்றும் பழுப்பு தோலர்கள் உள்வாங்கின கொஞ்ச நஞ்ச புற-ஊதா கதிர்களை விட்டமின் டீயாக மாற்ற உதவும்.

நவீன வாழ்வில் வெயிலில் அலைய வேண்டிய வாய்ப்புகள் அநேகமாக அற்றுப் போய் விட மனிதனுக்கு கொழுப்பு மட்டும் ஏகத்துக்கு தேங்குகிறது. அதை பயன்படுத்த புற-ஊதா கதிர்கள் இல்லை. விளைவாக ரத்தக்கொழுப்பு மட்டுமல்ல தீவிரமான விட்டமின் டி குறைபாடுகளும் ஏற்படுகின்றன. சுவாரஸ்யமாக, 1980களில் ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் பாதுகாப்புக்காக ஒரு அரசாங்க பிரச்சாரம் விரிவாக நிகழ்த்தப்பட்டது. ஸ்லிப்-ஸ்லோப்-ஸ்லாப் என்று பெயர். அதன் லட்சியம் மக்களை சன்ஸ்கீன் களிம்பு பூசி, உடலை சூரியனில் இருந்து பாதுகாக்கும்படியான ஆடைகளும், தொப்பிகளும் அணிய வலியுறுத்துவது. இந்த பிரச்சாரம் தோல் புற்றுநோய் பாதிப்பை வெகுவாக குறைக்க உதவினாலும் எதிர்விளைவு ஒன்றும் இருந்தது. பிரச்சார முடிவில் ஆஸ்திரேலியர்களில் அநேகம் பேருக்கு விட்டமின் டி குறைபாடு ஏற்பட்டது.

துணை-ஆர்ட்டிக் பகுதியிலுள்ள இனியுட் பழங்குடியினர் நல்ல கறுப்பர்கள். ஆனால் அங்கு சூரிய ஒளிய சோம்பலாய் மட்டுமே எட்டிப்பார்க்கும். குளிர்பகுதி மனிதனுக்கு ஏன் கருந்தோல்? இங்கு ஒரு மனத்திறப்பு நமக்கு கிடைக்கிறது. அது இனியுட் பழங்குடிகளின் உணவு பற்றியது. அவர்கள் மூன்று வேளையும் தாம் பிடிக்கும் மீன் உணவை மட்டும் உண்பவர்கள். அதனால் அபரிதமாகவே விட்டமின் டி கிடைப்பதால் சூரிய ஒளியில் புற-ஊதா கதிர்களை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு நாம் குறிப்பாக நினைவில் இருத்த வேண்டியது சீதோஷண நிலை ஒருவரின் நிறத்தை முழுதும் தீர்மானிப்பதில்லை என்பது. சற்று அதிகமாக வெயிலில் சுற்றி நம் சற்று நிறம் மங்கினால் அதற்கு ரொம்ப சுணங்க வேண்டியதில்லை.

சரி இப்போது ஒரு கேள்வி. கறுப்பானவர்களுக்கு மட்டும் தான் உயர் ரத்தக்கொழுப்பு வாய்ப்பு அதிகமா? இல்லை. ஏனென்பதற்குள் இங்கு ApoE4 என்கிற மரபணுவை குறிப்பிட வேண்டும். இது தான் வெயில் வருகிறதா என்று பார்த்து கொழுப்பின் அளவை எகிற வைக்கிறது. கறுப்பானவர்களுக்கு மட்டுமல்ல குறைவாக புற-ஊதாக்கதிர்கள் கிடைப்பது. வெயில் குறைந்த வட-ஐரோப்பியாவின் வெள்ளையர்களுக்கும் புற-ஊதா பற்றாக்குறை உண்டு. அவர்களுக்கும் ApoE4இன் சேவை தேவைப்படுகிறது. இந்த மரபணு ஐரோப்பாவில் வடக்குப்பகுதியில் அதிகம் மக்களிடையே காணப்படுவது சீதோஷண நிலை காரணமாகத் தான்.
இயற்கை தரும் எந்த நல்லதுக்கு ஒரு கெட்ட பக்கம் உண்டு. இரு சுவாரஸ்யமான உதாரணங்கள் பார்க்கலாம்.

ACCHOO நோய்க்குறி தொகுப்பு. சற்று நேரம் கும்மிருட்டில் வந்து விட்டு சட்டென்று வெளிச்சத்துக்கு திரும்பினால் சிலபேருக்கு விடாத தும்மல் ஏற்படும். இதுதான் ACCHOO. இந்த ACCHOO குகைகளில் வசித்த நம் முன்னோரிடம் இருந்து நம் மரபணுவில் வந்து தொற்றிக் கொண்டுள்ள ஒரு குணநலன். ஒரு எச்சம். அப்போது குகைகளில் உள்ள நுண்ணியிர்கள் ஆதிமனிதனின் சுவாசக்குழாயில் ஒட்டியிருந்து நோய் ஏற்படுத்தும் வாய்ப்பிருந்தது. அதனால் வெளியே வந்ததும் ஏற்படும் கடும் தும்மல் அவனுக்கு அவற்றை வெளியேற்ற உதவியது. இன்று அதன் தீவிர வடிவில் ACCHOO ஒரு நோய்.

குடிகாரர்களில் ஒரு சாராருக்கு ஒன்றிரண்டு பெக்குகளிலே தடுமாற்றம் வந்து விடும். சிலருக்கு எளிதில் வாந்தி வரும். வேர்த்து கொண்டு முகம் சிவந்து போகும். சிலர் மொந்தை மொந்தையாக குடித்தாலும் ஒன்றுமே நடக்காதது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டு கம்மென்று இருப்பார்கள். இந்த “கெப்பாசிட்டிக்கு ஒரு காரணம் மரபியல். இந்த கெப்பாசிட்டி குறைவானவர்களிடம் இருப்பது ALDH2*2  எனும் மரபணு. இந்த மரபணு செய்யும் விஷமம் காரணமாக ஒரு பெக் அடித்தவுடன் ஏகப்பட்ட ரத்தம் உங்கள் வயிறு, மார்பு, தலையை நோக்கி பாய்கிறது. முகம் சிவக்கிறது. வாந்தி மயக்கம் ஏற்படுகிறது. சுருக்கமாக குடிப்பது ஒரு சங்கடமான சிரமமான அனுபவமாக மாறுகிறது. இதை ஆசிய முகம்சிவத்தல் (Asian Flush) என்கிறார்கள் ALDH2*2 குடிகாரர்கள் நிச்சயம் மதுபானத்தின் அந்த அடிப்படை கிளர்ச்சிக்காக, சமூமமாக்கத்துக்காக, மற்றும் வேறுபல தேவைக்காக குடிப்பார்கள். ஆனால் இவர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக மாட்டார்கள். இந்த மரபணு செய்யும் வேலையை தான் குடி-அடிமைகளை சீர்திருத்துவதற்காக மருத்துவர்கள் தரும் disulfiram போன்ற மருந்துகளும் செய்கின்றன. அது என்ன?

மதுவை நீர், கரியமில வாயு மற்றும் கொழுப்பாக மாற்றும் முன் நமது கல்லீரல் அதிலுள்ள விஷத்தை அகற்ற முயலும். அதற்கான வேதியல் செயல்பாட்டுக்கு முக்கியமாக அசிட்டால்டிஹைட் டீஹைட்ரோஜெனேஸ் எனும் ஒரு நீண்ட பெயருள்ள நொதியூக்கி (enzyme) தேவைப்படுகிறது. முதலில் உடல் மதுவை அசிட்டால்டீஹைட் எனும் ஒரு வேதியல் பொருளாக்குகிறது. பின்னர் இதனை அசிட்டேட்டாக்க வேண்டும். அப்புறம் தான் மது உணவாகும். பீர் கொழுப்பாகி தொப்பையாக உடலில் சேரும். பொதுவாக பல வெள்ளையர்களுக்கு இந்த மாற்றம் லகுவாக நிகழ்கிறது. ஆனால் ஆசியர்களில் ALDH2*2 மரபணு கொண்டவர்களின் உடலில் இந்த வேதியல் மாற்றம் முதல் கட்டத்திலே நின்று போகிறது. போதுமான மேற்சொன்ன நொதியூக்கி இல்லாமல் மது அசிட்டால்டிஹைட்டாக அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் உடலில் தேங்குகிறது. இந்த அசிட்டால்டிஹைட் சாராயத்தை விட முப்பது மடங்கு வீரியமான விஷம். இந்த வேதியல் சொதப்பலினால் தான் ஒருவகை குடிகாரர்களுக்கு சீக்கிரம் மப்பு ஏறி உளறவும் தடுமாறவும் துவங்குகிறார்கள். ஏன் இயற்கை இவ்வாறு பாரபட்சமாக உள்ளது? சிலரை முழுமையாக குடிபோதையின் உன்மத்தத்தை உணர விடாமல் துரிதஸ்கலிதம் பண்ண வைக்கிறது? இதற்கொரு சின்ன விளக்கம் உள்ளது. கொஞ்சம் நம்ப சிரமமாக இருந்தாலும் அதுவும் ஒரு விளக்கம் தான்.

சீனர்கள் தேநீரை பயன்படுத்தத் துவங்கியதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். அவர்களின் நீர் குடித்த தோதானது அல்லவென்பதால் வெந்நீர் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது உருவாகும் பழுப்பு வண்ணத்தை போக்கவே தேயிலைகளை தூவி டியாக்கினார்கள் என்பது அக்கதை. ஐரோப்பியர்கள் நொதிப்பித்தலை இதற்கு பதில் கண்டுபிடித்தார்கள். சாராயம் பிறந்தது. மதுவில் நுண்ணியிர்கள் இல்லை என்பது மட்டுமல்ல அதைக் கலந்த நீரும் சுத்தமானதே. அதனால் குடிப்பழக்கம் அவர்களின் பண்பாட்டில் ஒரு இன்றியமையாத பகுதியாகியது. ஒரு கட்டத்தில் அவர்களின் மரபணு குடிப்பழக்கத்துக்கு ஏற்றபடி மாறியது; மதுவிலுள்ள விஷத்தை சமர்த்தாக சுத்திரிகரிக்க ஐரோப்பிய உடல் கற்றுக் கொண்டது. தேநீர் போதுமென்று விட்டதால் ஆசியர்களுக்கு இயற்கை பொறுமையாக நிரம்ப குடித்து மெல்ல மெல்ல போதையேறி நிலைத்து சுகிப்பதற்கான மரபணுவை நல்கவில்லை. இயற்கையின் தவறல்ல, நிச்சயமாக.
Read More

Saturday 7 April 2012

பனித்தவளைகள், ஐஸ்வைனுடன் உருவான சர்க்கரைநோய்

சர்க்கரை நோய் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சிறுவயதில் நிறைய சர்க்கரை சாப்பிட்டது, உடம்பில் அபரிதமாய் சக்கரை இருப்பதில் இருந்து பெற்றோருக்கு இருக்கக் கூடும், கணையம் வேலை செய்யவில்லை என்பது வரை நம்மிடையே அசட்டுத்தனமான, சுவாரஸ்யமான, தகவல்பூர்வமான நம்பிக்கைகள், விளக்கங்கள் உள்ளன. ஒருவருக்கு ரத்தக்கொழுப்பு அதிகம் என்றால் கொழுப்பை உணவில் குறைத்துக் கொண்டால் போதும். ரொம்ப இருமல் என்றால் சிகரெட்டை குறைக்கலாம். ஆனால் நீரிழிவு அத்தனை எளிதல்ல. ரத்தத்தில் சர்க்கரை ஏறி இறங்குவதன் காரணங்கள் புதிரானவை. பல சமயங்களில் மருத்துவர்களும் சில எளிய தர்க்கங்களுக்குள் முடக்கப்பார்த்து தோல்வி கொள்கிறார்கள். மனம் மற்றும் உடலின் அறியப்படாத பல ரகசிய விதிகள் கைகோர்க்கும் போது நீரிழிவு பல விசித்திரமான பாதைகளிலெல்லாம் செல்லும். உதாரணமாக, சிலருக்கு இரவெல்லாம் சர்க்கரை அளவு இயல்பாக இருந்து விட்டு விடிகாலையில் மூன்றுமடங்கு ஏறும். ஹார்மோன் மாற்றங்கள் காரணம். Dawn Phenomenon என்கிறார்கள். இப்படி சிக்கலானதாக நீரிழிவு ஏன் உள்ளது? இந்த கேள்வியை முன்னிட்டு சில விளக்கங்களை பார்க்கலாம். அவை பரிணாமவியல் விடைகள். மேற்சொன்ன “சின்ன வயதில் நிறைய ஸ்வீட் சாப்பிடுவீங்களா? வகையறாக்களை விட மேலும் ஆர்வமூட்டுபவை, நியாயமானவை.

ஒருவருக்கு நீரிழிவு இருப்பதற்கான முக்கியமான வெளிப்படையான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று நிறைய நீர் குடிப்பதும் வெளியேற்றுவதும். தீராத தாகம், குடித்து கொஞ்ச நேரத்தில் பழவீச்சமுடன் சிறுநீர். இது ஏன் ஏற்படுகிறது? அலோபதி மருத்துவம் தரும் விளக்கம் நம் சிறுநீரகம் தன்னில் சேர்ந்துள்ள உபரி சர்க்கரையை சிறுநீர் வழி வெளியேற்றுகிறது என்பது. ஆக ஒருவரின் ரத்தத்தில் உபரி சர்க்கரை நிறையும் போது தாகமும் சிறுநீர் விழைவும் மிகுகிறது. மற்றொரு ஆதாரம் சிறுநீரை நாடி வரும் எறும்புகள். பண்டைய சீனாவில் ஒருவரது ரத்த சர்க்கரையை வைத்தியர்கள் எறும்புகள் கொண்டு தான் கண்டுபிடிப்பார்களாம். பரிணாமவியல் இந்த சிறுநீர் அறிகுறிக்கு முற்றிலும் மாறுபட்ட விளக்கம் ஒன்று தருகிறது. அதை சற்று பின்னர் பார்க்கலாம்.

மனிதனின் ஆக முக்கியமான ஆற்றலாக டார்வின் கருதியது சூழலுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்துக் கொள்வது. அதனால் தான் தன்னை விட பிரம்மாண்டமான டைனோசர்கள் மற்றும் யானைகளை விட அவன் ஆதிக்கம் மிக்கவனாக மாறி உலகெங்கும் பல்கி பெருகினான். உதாரணம் சொல்வதானால் மிகக் கடுமையான பருவச் சூழல் மற்றும் பௌதிக சவால்கள் இடையே வாழப் பழகியவர்கள் வலிமையான உயரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே வேளை குள்ளமான சிறுத்த தோற்றம் கொண்டவர்களும் அவர்களிடையே வாழ்கிறார்கள். உயரமான வலிமையான உடல் தான் வெற்றிகரமானது என்றால் இயற்கை நாம் அனைவருக்கும் அதை தர வேண்டியது தானே? பரிணாமவியல் இதற்கொரு விடை தருகிறது. திடகாத்திரமான நெடும் தேகத்தை பராமரிப்பது சிரமம், அதனால் ஆபத்துகளும் அதிகம். அதனால் சூழல் தேவை இருந்தால் அன்றி மனிதர்கள் நூற்றாண்டுகளாக அப்படி தோற்றம் கொள்வதில்லை. மற்றபடியானவர்கள், குறிப்பாய் ஆபத்துகள் அதிகம் எதிர்கொள்ளாதவர்கள், சின்ன சிக்கனமான உடலமைப்புடன் வாழ்வது தான் உசிதம். இனத்துக்கும் உடலமைப்புக்கும் அவ்வளவு இணக்கமில்லை. உதாரணமாக தென்னமெரிக்காவில் ஒரு இனக்குழுவினர் மிக உயரமாக திடகாத்திரமாக இருப்பவர்கள். அதே இனக்குழுவில் ஒரு பகுதியினர் குள்ளமாக அதிக அச்சுறுத்தலற்ற தோற்றத்தில் ஒரு சிறுதீவில் வாழ்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். நூற்றாண்டுகளாக அவர்கள் வேட்டையாடி மிருகங்களின் ஆபத்துகள் அற்ற, அபரித உணவு கொண்ட ஒரு பத்திரமான சிறுதீவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நான்கடி தோற்றம் போதுமென தீர்மானித்தது இயற்கை. இது தான் பரிணாமவியலின் அடிப்படை நியதி. நமது உடலின் சிறு இயக்கத்துக்கும், திறனுக்கும், கூட பழுதுக்கும் சேர்த்து, இயற்கை ஒரு காரணம் வைத்திருக்கிறது. உதாரணமாக நாய், பூனையை போல் அன்றி, மனிதர்களுக்கு பெண்குறி எளிதில் எட்ட முடியாதபடி கால்களுக்கு நடுவே இருப்பது ஏன் என்பது பற்றி ஒரு நீண்ட சுவாரஸ்யமான விவாதம் பரிணாமவியலாளர்களுக்கு இடையே நிகழ்ந்திருக்கிறது. சரி இந்த காரணங்கள் முழுக்க சாதகமானவையா? இல்லை என்றால் அது ஏன்?

இங்கு தான் ஒரு நுட்பமான உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அது குறிப்பட்ட சூழலுக்கு ஏற்றபடி அமைந்து உள்ள ஒரு உயிரியல் செயல்பாடு மற்றொரு மாறுபட்ட சூழலுக்கு தகுந்தாற்போல உடனடி மாறுவதில்லை என்பது. உதாரணமாக, போர்க்காலங்களில் குழந்தைப் பேறு பொதுவாக குறைவதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள். ஆபத்துக்காலம் என மனம் வழி உடல் ஊகிப்பதே காரணம். ஆக மனதுக்குள் உடலுக்கும் பிரக்ஞை கடந்த ஒரு புலப்படாத பரிபாஷை உள்ளது. அது நம் காதுகளுக்கு கேட்பதே இல்லை. விளைவாக ஒரு ஜோடி குழந்தைக்காக முயல்கிறார்கள் என கொள்வோம். அந்த நெருக்கடி அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தலாம். இதை ஆபத்து என புரியும் மனம் கர்ப்ப வாய்ப்புகளை உடனடியாக நிறுத்தி வைக்கும். நெருக்கடியை இது மேலும் மேலும் அதிகரித்து பிரச்சனைகள் இன்னும் தீவிரமாக ஆக்கும். இது மனிதனுக்கு ஒரு காலத்தில் சாதகமாக இருந்த ஆனால் தற்கால நவீன சூழலில் பாதகமாக மாறியுள்ள ஒரு பரிணாமவியல் திறன். மற்றொரு உதாரணம் மனிதத் தலை. பிறமிருகங்களை விட உருவ விகிதத்துக்கு சற்றே பெரிய மண்டை ஓட்டையும் குறிப்பாக அதற்குள் அதிகமான மூளையையும் கொண்ட மனிதனுக்கு அம்மாவின் கருப்பையில் இருந்து வெளியேறும் போது அதே வீங்கின மண்டைதான் அதிக தொந்தரவை, வலியை, ஆபத்தை தருகிறது. பறவைகளை பார்த்தோமானால் மானின் கொம்புகளை, மயிலின் தோகையை இந்த இருமைக்கு உதாரணமாக சொல்லலாம்.

பரிணாம மாற்றத்துக்கு பல வருடங்கள் பிடிக்கும் என்று முன்னரும், இல்லை சில பத்து வருடங்களிலே கூட பெரும் பருவ மாற்றங்களுக்கு ஏற்றபடி மனித உடல் பரிணாமிக்க முடியும் என்று தற்காலத்தவர்களும் பரிணாமவியலில் விவாதிக்கிறார்கள். விரைந்தோ மெல்லவோ, எப்படியும் அழிவின் விளிம்பில் செல்லும் இனம் தான் பிரதானமான மாற்றங்களை தனக்கு செய்து கொள்கிறது எனலாம். நீரிழிவு மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களிலே இதற்கு ஆதாரமும் தருகிறார்கள்.

முதலில் அவர்கள் கூறும் கருத்து குளிருக்கும் சக்கரை உபாதைக்கும் தொடர்புண்டு என்பது. கடுமையான குளிர்பகுதிக்கு செல்லும் போது இந்த உபாதையற்ற இயல்பான ஒருவருக்கு கூட சர்க்கரை அளவு ரத்தத்தில் மிகுதியாகிறது. ஏற்கனவோ கூறியது போல் பரிணாமவியல் நமது உடலின் பல உபாதைகளை கூட நமது நன்மைக்காகவே ஒரு காலத்தில் ஏற்படுத்தியது. சூழல் மாறி அவை தேவையில்லாமல் ஆன போது உபாதைகளாக மாறின. அல்லது ஒரு நன்மை தரும் மாற்றத்தின் பின்விளைவாக வெகுவாக பிந்தி உபாதைகள் நேர்ந்தன. சரி, கடுங்குளிர் பிரதேசத்தில் மனிதனுக்கு ரத்த சர்க்கரை ஏறுகிறது என்றால் அதனால் ஏதாவது பலன் வேண்டும். அது என்ன? இந்த விளக்கத்துக்கு போகும் முன் ஒரு சுவாரஸ்யமான உண்மைக்கதையை பார்க்கலாம்.

மனிதனால் தாக்குப்பிடிக்க முடியாத கடுங்குளிரில் சுலபமாக வாழும் உயிர்கள் பற்றி படித்திருக்கிறோம். அண்டார்டிக்காவில் வசிக்கும் பெரும் cod மீன் பிரம்மாண்ட ஐஸ் கட்டிகள் மத்தியில் சுணங்காமல் நீந்தும். அதன் ரத்தம் உறைந்து போகாமல் இருக்க ஒரு வகை antifreeze புரதம் அதனிடம் உள்ளது. இந்த காட் மீனை விட கொஞ்சம் விநோதமானது மரத்தவளை உறைகுளிரை எதிர்கொள்ளும் முறை. அது பனிக்கால உறக்கத்துக்கு சென்று விடுகிற முறை மிக சுவாரஸ்யமானது.

கனடாவை சேர்ந்த கென் ஸ்டோரி ஒரு உயிர்வேதியில் விஞ்ஞானி. அவர் காட் மீனுக்கு உள்ளது போல் விலங்குகளின் ரத்தம் உறையாத தன்மையை பற்றி மனைவி ஜேனட்டுடன் ஆய்ந்து கொண்டிருந்தார். அவரிடம் இந்த புதிர் தவளையை பற்றி கூட வேலைபார்ப்பவர் சொல்ல இரவில் சென்று பிடித்து கார் டிரங்கில் இட்டு வீட்டுக்கு கிளம்பியிருக்கிறார். வரும் வழியில் எதிர்பாராத உறைபனி. வீட்டுக்கு வந்து திறந்து பார்த்தால் தவளைகள் சிறுசிறு பனிக் கட்டிகளாக உயிரற்று உருண்டன. எதற்கும் உருகட்டும் கிழித்துப் பார்க்கலாம் என்று ஆய்வகத்தில் கொண்டு போய் வைத்தார். கொஞ்ச நேரத்தில் பனி உருக தவளைகள் சட்டென விழித்து அங்குமிங்குமாக துள்ளி குதித்து ஓடின. இந்த திடீர் புத்தியிர்ப்பை எப்படி விளக்குவதென்றே அவருக்கு புரியவில்லை. பிறகு தான் அவரது முக்கியமான அந்த ஆய்வு துவங்கியது.

மேலும் பல உறைந்த தவளைகளை கொண்டு வந்து திறந்து பார்த்தார். அவற்றின் வயிற்றுக்குக் கீழ் சிறு தோல் பை. அதில் உடலின் நீரெல்லாம் பனிக்கட்டிப் படலமாக படிந்திருந்தது. உள்ளே உறுப்புகள் கிஸ்மிஸ் போல் உலர்ந்து சுருங்கித் தெரிந்தன. பனி-உறக்கத்தின் போது தவளை தன்னை பாதுகாப்பதன் முதல் உபாயம் நீரை வெளியேற்றி இதயம், நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகளை உலர்வாக்குவது. ஏனென்றால் நீர் உறைந்தால் சிறுசிறு பனித்துகள்கள் அவற்றில் குவியும். அவற்றின் கூர்மையாக முனைகள் உள்ளுறுப்புகளின் தசைகளை கிழித்து விடக் கூடியவை. மேலும் வெளியே தோலுக்குள் உருவாகும் பனிப்படலம் உறுப்புகள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கின்றன. உடலில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட அகற்றப்படாத நீர் உண்டு. அது ரத்தம். அது உறைந்து போகாமல் எப்படி காப்பாற்றுவது?

இங்கு தான் நீரிழிவு ஒரு உசிதமான உபாயமாக பயன்படுகிறது. தவளையின் கல்லீரல் ஏகப்பட்ட சர்க்கரையை ரத்தத்தில் கலக்கிறது. சாதாரண ரத்தசர்க்கரை அளவை விட நூறுமடங்கு சர்க்கரை அதிகரிக்கிறது. அதாவது மனிதனுக்கு சகஜ சர்க்கரை அளவு 120. அது 12000ஆக உயர்ந்தால் என்னவாகும். 1000மே நம் உடம்பு சில மணிநேரங்கள் தாங்காது. கோமாவுக்கு சென்று விடுவோம். தவளை உறைநிலையில் இருப்பதால் பிரச்சனையில்லை. எதற்கு சர்க்கரை உயர்கிறது?. ரத்தம் உறையாமல் இருக்க சர்க்கரை வேண்டும். சர்க்கரைக்கு அந்த பண்பு உண்டு.

மனிதர்களில் கடுங்குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கும் ரத்தத்தில் சர்க்கரை உயர்வது சகஜமாக நிகழ்கிறது. அவர்கள் எளிதில் சமாளிக்கிறார்கள். எப்படி? இம்மனிதர்களின் உடலில் பழுப்பு கொழுப்பு என்று ஒருவகை கொழுப்பு உள்ளது. இது மிக வீரியமான அதிரடி இன்சுலின் போன்றது. 12000 சர்க்கரையும் நொடியில் வழக்கமான இன்சுலின் இல்லாமல் இந்த பழுப்பு கொழுப்பு எரித்து ஆற்றலாக மாற்றுகிறது. நவீன மனிதன் பழுப்பு கொழுப்பை பயன்படுத்த இக்ளூ போன்ற பனிவீடுகளுக்குள் வாழ வேண்டும். வெளியே வந்தால் இக்கொழுப்பு செயல்படாது.

நாம் தான் காட் மீனோ மரத்தவளையோ இல்லையே, நமக்கு ஏன் ரத்தசர்க்கரை உபாதை?  20,000 வருடங்களுக்கு முன் வந்த பனியுகம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் சீதோஷண நிலை கடுமையான உறைகுளிராக மாறி அதனால் உலகம் வாழத்தகாத இடமாக மாறியது. உணவும் வெப்பமும் இன்றி பல உயிர்கள் அழிந்தன, இனங்கள் அருகின. உலகம் ஒரு சுழலும் பனிக்கட்டியாகியது. பொதுவாக ஆய்வாளர்கள் பனியுகம் மெல்ல மெல்ல தோன்றி நூற்றாண்டுகளுக்கு நிலைத்தது என்று நம்பினார்கள். அப்போது மனிதன் போன்ற சில இனங்கள் தங்களை மாறும் சூழலுக்கு ஏற்றபடி மாற்றி வலிமையாக பரிணமித்தன. சுமார் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த Younger Dryas என்ற காலகட்டத்தை பற்றி அறிந்ததும் ஆய்வாளர்கள் தம் முடிவை மாற்றி கடுமையான சீதோஷண மாற்றங்கள் சில பத்தாண்டுகளில் ‘உடனடியாக தோன்றி பெரும் சவால்களை உயிர்களுக்கு தோற்றுவிக்கக் கூடும் என்று கூறினர். இது கற்பனை செய்ய முடியாத “உலக அழிவு பிரளயம் போன்றதொரு இயற்கை அபாயம். மனிதர்களும் பிற உயிர்களும் நிச்சயம் குழம்பிப் போயிருப்பார்கள். Younger Dryasஇன் போது உலகின் சராசரி வெப்பநிலை 30 டிகிரியாக இருந்தது. கடல் நூறடிகளுக்கு மேல் வற்றி உறைந்தது. காடுகளும் புல்வெளிகளும் அநேகமாக காணாமல் போயின. ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் பார்க்குமிடமெங்கும் பிரம்மாண்ட மிதக்கும் பனிக்கட்டி ஆறுகள். இக்காலகட்டத்தில் வட ஐரோப்பாவில் வாழ்ந்த மனிதர்கள் பெருமளவில் அழிந்து போனார்கள் என்று டி.என்.ஏ ஆராய்ச்சி மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அப்படியும் மனிதகுலம் பிழைத்தது. அது ரத்தசர்க்கரை அளவை எகிற வைத்து, பழுப்பு கொழுப்பு மூலம் அதனை எரித்து தான் முடிந்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பனியுக பஞ்சத்தின் போது அதிக உணவு இல்லாத பட்சத்தில் ரத்த சர்க்கரை ஒரு அளவுடன் தான் இருந்திருக்கும். இந்த பெரும் மானுட நேருக்கடியின் போது நமக்கு உதவிய ஒரு உயிரியல் மாற்றம் ரொம்ப அவசியமானது என்று மரபணுக்கள் தீர்மானித்து அதற்கான நிரலை தமக்குள் பதித்துக் கொண்டுள்ளன. வெப்பமயமாதல் ஒரு முக்கிய உலக பிரச்சனையாக கருதப்படும் இந்த காலத்தில் மேற்சொன்ன மரபணு நிரல் அவசியமற்றது என்று மனித உடலுக்கு தெரியாது. அதற்கு எப்படி சொல்லிக் கொடுப்பது என்று மனிதனுக்கும் தெரியாது.

சரி கடைசியாய் ஒன்றுக்கு வருவோம். ஏன் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள்? இதன் பின்னால் இரு சுவாரஸ்யமான கதைகள் உள்ளன.

1764இல் சதர்லாந்து எனும் ஒரு மருத்துவர் மகோதரம், மஞ்சள் காமாலை, முட்டிவலி, முதுகுவலி போன்ற உபாதைகளுக்கு பரிகாரமாக நோயாளிகளை குளிர்ந்த நீரில் அமிழ்த்தி வைத்து பரிசோதனை செய்து பார்த்தார்.  அப்போது நோயாளிகள் தாம் குடித்ததை விடவும் அதிகமாக நீருக்குள் மூத்திரம் போவதை கவனித்தார். அப்போதைய மருத்துவ முடிவுகளின் படி இது வெளிப்புற அழுத்தத்தினால் உடலின் நீர் வெளியேற்றப்படுவது என்று புரிந்து கொண்டார். 1909இல் அறிவியல் உலகம் இம்முடிவை மாற்றியது. அதாவது வெளிப்புற அழுத்தம் அல்ல உடலின் உள்ளிருந்து உருவாகும் அழுத்தம் தான் காரணம் என்றது. அது என்ன அழுத்தம்?

கடுங்குளிரின் போது நமது உடலின் தன்னிச்சையான செயல்களாக தோன்றும் நடுக்கம், உதறல், விரல் நுனிகள் ரத்தம் வடிந்து வெளிறுதல் போன்றவை முழுக்க தன்னிச்சையானவை அல்ல. நடுங்கி கைகால்களை உதறும் போது வெப்பம் உற்பத்தியாகி குளிரில் இருந்து சிறிது பாதுகாக்கின்றன. அடுத்து கடுங்குளிரில் முதலில் நமது கைகள் தாம் பாதிப்புள்ளாகின்றன. இதை frost bite (பனிப்புண்) என்கிறார்கள். காரணம் உடல் விளிம்பில் உள்ள ரத்தக்குழாய்களை சுருக்கி கைகளுக்கு போக வேண்டிய ரத்தத்தை உள்ளுறுப்புகளை பாதுகாக்க உள் நோக்கி செலுத்துகின்றன. நாவேயில் உள்ள மீனவர்கள் மற்றும் இனியுட் பழங்குடி வேட்டையாளிகளுக்கு ஒரு பிரத்யேக திறன் உள்ளது. உறைபனியின் போது அவர்களின் ரத்தக்குழாய்கள் சுருங்கி விரிந்து மாற்றி மாற்றி ரத்தத்தை உள்ளூறுப்புகளுக்கும் கைகால்களுக்குமாக திருப்பி விடுகின்றன. இதனால் கடும்பனியினால் கைவிரல்களை இழக்காமல் தப்பிக்கிறார்கள். இயற்கை வழங்கி உள்ள இந்த பிரத்யேக ஆற்றலை லூயிஸ் அலை அல்லது வேட்டையாளி எதிர்வினை என்று அழைக்கிறார்கள். வியட்நாம் போரின் போது அமெரிக்க படையில் இருந்த ஆப்பிரிக்கர்கள் தாம் அதிகமாக பனிப்புண்களால் பாதிப்படைந்தார்கள். ஏனெனில் வெப்பமிக்க கண்டத்தில் இருந்து வந்த அவ்வின மக்கள் கடுங்குளிருக்கு மரபியல் ரீதியாக இனியூட் பழங்குடிகள் போல, அல்லது வெள்ளைகாரர்கள் அளவுக்கு குறைந்தபட்சமாக கூட, தயாராக இல்லை.

உள்ளார்ந்த அழுத்தம் என்பது இப்படி ரத்தக்குழாய்களை சுருக்கும் படி உடலுக்கு வரும் ஒரு கட்டளை. இப்படி அழுத்தம் ஏற்படும் போது இயல்பாக நீர் வெளியேற்றப்படுகிறது. இதனாலே நீருக்குள் இருப்பவர்களுக்கும் கடுங்குளிரில் இருப்பவர்களுக்கு மூத்திர இச்சை அதிகமாகிறது. ரத்தம் உறைந்து விடாமல் இருக்க, உடலின் நீர்கள் பனித்துகள்களாகி ரத்தக்குழாய்களை அறுத்து விடாமல் இருப்பதற்கான ஒரு உயிரியல் ஏற்பாடு இது. பதினெட்டாவது நூற்றாண்டில் ஐஸ் வைன் எனும் ஒரு இனிப்பான மிக விலையுயர்ந்த வைன் கண்டுபிடிக்கப்பட்ட கதை அடுத்தது.

ஒரு ஜெர்மானிய வைன் உற்பத்தியாளரின் தோட்டத்து திராட்சைகள் ஒரு எதிர்பாராத உறைபனியினால் உறைந்து போயின. அவர் அவற்றை பறித்து பிழிந்தால் எட்டில் இரு பகுதிதான் சாறு கிடைத்தது. மிகவும் ஏமாற்றமடைந்த அவர் எதற்கும் பார்ப்போமே என்று அந்த சாறை புளிக்க வைத்து பார்த்தார். அப்போது தயாராகிய வைன் அதுவரை அவர் சுவைத்ததிலேயே கற்பனைக்கப்பாற்பட்ட இனிப்பு கொண்டிருந்தது. பொதுவாக வைனில் உள்ள சர்க்கரை அளவு 0-3 என இருக்கும். ஆனால் ஐஸ் வைனின் அளவோ 18-28. உலகின் மிக பிரபலமான உன்னத வைன் இப்படி ஒரு விபத்தின் மூலம் கண்டறியப்பட்டது பரிணாமவியலுக்கும் பயன்பட்டது. இந்த திராட்சை இவ்வளவு இனிப்பு கொண்டிருப்பதற்கு அது கடுங்குளிரின் போது தன்னுள் இருக்கும் நீரை வெளியேற்றுவது காரணம். ஏனென்றால் உறையும் நீர் பனித்துகள்களாகி திராட்சையின் மென்படலங்களை கிழித்து விடாமல் இருப்பதற்கு.

இப்படி கடுங்குளிருக்கும் உயர்ந்த சர்க்கரை அளவுக்கும் ஒன்றுக்கு போவதற்கும் ஒரு சற்றே சிக்கலான ஒரு தொடர்பு இருக்கிறது. காட் மீன், மரத்தவளை, திராட்சைகள் போல மனிதனும் தன்னை உறைதலில் இருந்து காப்பாற்ற வேண்டி ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன் பயன்படுத்தின உபாயம் இன்று கோடானுகோடி உயிர்களை பலிவாங்கும் நீரிழிவாக வளர்ந்திருக்கிறது என்கிறது பரிணாமவியல்.

கொஞ்சம் நம்ப சிரமமாக இருக்கிறதல்லவா! இந்த மாதிரியான அறிவியல் கோட்பாடுகள் கொஞ்சம் புனைவுத்தன்மை கொண்டவை. மேற்கத்தியர்களிடையே எதார்த்த கதைகளை விட அறிவியல் புனைவுகள் அதிக பிரபலமாக இருப்பதற்கு இதுவும் காரணம்.

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates