Tuesday 25 September 2012

எழுத்தாளன் டி.வியில் தோன்றலாமா?




தமிழ் சமூகத்தில் இலக்கிய எழுத்தாளனின் நிலைமை பத்தினிகளைப் போலத் தான். அவன் எங்கெல்லாம் தோன்றலாம் என்னவெல்லாம் பேசலாம் என வாசகர்கள், கட்சிக்காரர்கள், சித்தாந்தவாதிகள் எல்லாம் கோடு கிழிப்பார்கள்.
ஒரு எழுத்தாளன் எழுதின ஆயிரக்கணக்கான பக்கங்களை திருப்பிக் கூட பார்க்காதவர்கள் அவன் டி.வியில் தோன்றினால், கலர் சட்டை போட்டால், சினிமாவில் எழுதினால் சோரம் போய் விட்டதாய் விசனிப்பார்கள். கேலி பகடி செய்து தமக்கு நம்பிக்கை துரோகம் பண்ணி விட்ட எழுத்தாளன் வரலாற்றையே கறைபடிய செய்ததாய் துக்கிப்பார்கள். இதன் ஆதார முரண் என்ன? நமக்கு எழுத்தாளனின் கருத்துக்கள், படிமங்களை விட அவனது பிம்பம் தான் முக்கியம். நித்தியானந்தா பாலியல் காணொளி வெளியான போது அவரை தூஷித்தவர்கள், காறித் துப்பியவர்கள், துரத்தி சென்று கேள்விகள் கேட்டவர்கள், கேலி செய்தவர்கள் அவர் “தூய்மையோடு இருந்த போது” அவரது சீடர்களாக இருந்தவர்களோ அவரது உரைகளுக்கு செவி மடுத்தவர்களோ அல்ல. உண்மையில் அவரது சீடர்கள் மேற்சொன்ன சர்ச்சைக்கு பின்பும் அவருடன் கேள்வி கேட்காமலே தொடர்கிறார்கள். வெளியே இருந்தவர்கள் தான் அவர்மீது திடீரென ஆர்வம் கொண்டு கேள்வி கேட்டு விமர்சிக்க துவங்கினார்கள். இந்த விநோதம் ஏன்?
நித்தியானந்தா அடிப்படையில் யார் என்பது நமக்கு முக்கியமல்ல, ஆனால் தமிழ் பிரக்ஞைக்கு அவர் தொன்றுதொட்டு இங்கு நிலைத்துள்ள புனித சாமியார் பிம்பத்துக்குள் பொருந்தியவர். அந்த பிம்பத்துக்குள் இருந்தபடி அவர் செக்ஸில் ஈடுபடக் கூடாது. இது தான் பிரச்சனை. தமிழ் சமூகம் எழுத்தாளனையும் இதே சாமியார் பிம்பத்துக்குள் தான் வைத்துள்ளது. சி.சு செல்லப்பா பற்றி இதுவரை எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை எல்லாம் படித்துப் பாருங்கள். அவரது முக்கிய கருத்துக்கள், படைப்பாளுமையை பற்றிய அலசல்கள் அல்ல, அவர் எப்படி “எழுத்தை” கடுமையான சிரமங்களுக்கு இடையே தொடர்ந்து கொண்டு. அதனால் எப்படி நட்டமடைந்தார், நண்பர்களின் பண உதவிகளை மறுத்து இறுதிவரை கொள்கைப் பிடிப்புடன் இருந்தார் போன்ற “எந்தரு மகானு பாவலு” வியப்புகள் தான் அதிகம் இருக்கும். சுருக்கமாக ஒரு எழுத்தாளன் எப்படி பிச்சைக்காரனாக செத்தான் என்பதே தமிழ் வாசகனுக்கு, குறிப்பாய் எழுபது எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகள் வரை இங்கு சிறுபத்திரிகைகளை பின் தொடர்ந்தவர்களுக்கு புளகாங்கிதம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. சுந்தர ராமசாமி க.நா.சு பற்றிய நூலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவுகூர்கிறார். இருவரும் ஒரு புத்தகக் கடையில் நிற்கிறார்கள். க.நா.சு மிக ஆர்வமாக ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது நடிகை சரிகா அங்கு நுழைகிறார். எங்கும் பரபரப்பு அமளி. ஆனால் அத்தனை கூச்சலுக்கு இடையேயும் க.நா.சு அந்த புத்தகத்தில் இருந்து தன் கண்ணை எடுக்கவே இல்லை. ஒன்றுமே நடவாதத்து போல் அவர் வாசித்துக் கொண்டே இருந்தார். இது குறித்து சு.ரா வியப்பு கொள்கிறார். ஒரு நூலில் குறிப்பிடும் அளவுக்கு முக்கியத்துவம் தருகிறார். இது மேற்கத்திய லௌகீக மனம் இருந்த சு.ராவுக்கே க.நா.சுவின் சாமியார்த்தனம் மீது ஏற்பட்ட இந்தியத்தனமான மயக்கத்தின் உதாரணம். கர்ம சிரத்தை நடைமுறையில் எல்லா இடங்களிலும் தேவை இல்லை. ஆனால் க.நா.சு சாதாரண ஆள் இல்லையே. அவர் ஒரு ரிஷி புருஷர். அவர் மேனகையின் கவர்ச்சியினால் மனம் தடுமாறாத விஷ்வாமித்திரர். இந்தியர்களின் சாமியார் பிரேமை தான் எழுத்தாளன் டி.வியில் தோன்றும் போது அவர்களை இடறுகிறது.
இன்று கழக டி.விக்கள் தவிர்த்து பிற சேனல்கள் பொது விவாதங்களில் ஒரு சிந்தனையாளனின் இடத்தை நிரப்புபவனாக தீவிர எழுத்தாளன் உருவாகி உள்ளான். ”பிரபல தீவிர எழுத்தாளன்” என்ற கூட்டுசேர்க்கை ஒரு நவீனத்துவ சிறுபத்திரிகை மனதுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால் இன்று அப்படியான ஒரு இனம் தோன்றியுள்ளது. தீவிரமாக எழுதும் அதே வேளை மக்களின் கவனத்தை அடையவும் விரும்பும் நிலைக்கு எழுத்தாளர்கள் வந்துள்ளார்கள். இது முன்னேற்றமா சீரழிவா என்கிற விவாதத்துக்கு பின்னர் வரலாம். முதலில் டி.வியில் தோன்றுவதில், வணிக பத்திரிகைகளில் பத்தி எழுதுவதன், மேடைகளில் மணிக்கணக்காய் சுவாரஸ்யமாய் உரையாற்றுவதில் தீவிர எழுத்தாளனின் உத்தேசம் என்ன என்று கேட்க வேண்டும். அதற்கான தேவை என்ன? அடுத்து புதிய தலைமுறை, விஜய் டி.வி, வின் டிவி உள்ளிட்ட சேனல்கள் தீவிர எழுத்தாளர்களுக்கு இடமளிக்க முன்வந்தது ஏன்?
ஒப்பிட்டால் ஆங்கில சேனல்களில் விவாதங்கள், ரியாலிட்டி ஷோக்களில் எழுத்தாளர்களே அநேகம் தோன்றுவதில்லை. அங்கு தொழில்சார் நிபுணர்கள் மேஜையை ஜோராய் தட்டி பேச பல தளங்களிலும் இருக்கிறார்கள். விசயம் தெரிந்தவர்கள் மொழித்திறன் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள் ஆங்கில மீடியாவில். ஆனால் இங்கு நிலக்கரியில் இருந்து அணு உலை வரை, சினிமாவில் இருந்து இன்று ஒரு சேதி வரை நல்ல தயாரிப்புடன் வந்து தெளிவாக பேசுவதற்கு எழுத்தாளர்கள் மட்டும் தாம் இருக்கிறார்கள். பட்டிமன்ற பேச்சாளர்கள் தம் இடத்தை கிட்டத்தட்ட இழந்து விட்டார்கள். முதல் இரண்டாம் தலைமுறை கல்வியறிவுடன் உயர்மத்திய வாழ்க்கையை எட்டி உள்ள இன்றைய இருபது, முப்பதுகளில் இருக்கும் இளைய தலைமுறைக்கு அறிவார்ந்த காத்திரமான உரையாடலை உருவாக்க எழுத்தாளர்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது.
கடந்த நாற்பது வருடங்களில் வணிக பத்திரிகைகளில் எழுத வந்தவர்களைப் பார்த்தோம் ஆனால் கூர்மையான மொழியும் பரவலான ஆழமான வாசிப்பும் கொண்டவர் என்று சுஜாதாவை விடுத்து மற்றொருவரை கூட சுட்ட முடியாது. வாசிப்பை அந்தளவுக்கு மட்டமான வெற்று பொழுதுபோக்காக நமது விகடன், குங்கும ஆசிரியர்கள் மாற்றி வைத்திருக்கிறார்கள். பிரபல எழுத்துக்குக் கூட கல்வியறிவிக்கும் கடமை உள்ளது. ஆனால் ராஜேஷ் குமார் போன்றவர்கள் இன்று கூகுளில் தேடி அஸைன்மெண்ட் எழுதும் எட்டாம் வகுப்பு மாணவன் அளவுக்கு கூட அறிவற்றவர்கள் என்பது இவ்விசயத்தில் மிகப்பெரும் அவலம். அறுபதுகளில் தோன்றிய மத்திய வர்க்கத்தினரில் ஆங்கில பரிச்சயமோ உலக அறிவுத்துறைகளில் வாசிப்போ அற்ற சினிமா தவிர வேறெந்த கலாச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபாடற்ற ஒரு நுகர்வோர் சதவீதம் இத்தகைய மட்டமான ஊடக எழுத்தால் திருப்தி உற்றிருக்கலாம். ஆனால் இன்று கல்வி, இணையம் மற்றும் டி.வி ஊடகம் நமது அறிவு மற்றும் கலாச்சார தேவையை விரிவானதாக பல்துறை சார்ந்ததாக மாற்றி உள்ளது. “உறவுகள்” தொடர் பார்க்கும் அதே மாமிக்கு குவிண்டின் டரண்டினோவும் தெரிந்திருக்கிறது. ஒரு பக்கம் ஏற்பட்டுள்ள இந்த தலைமுறை மாற்றத்தை வணிக பத்திரிகைகள் சரியாக அவதானித்ததாய் தெரியவில்லை. Frontline, Open Magazine போன்ற பத்திரிகைகளில் எவ்வளவு திறமையான பத்தி எழுத்தாளர்கள் தமக்கென ஒரு நிலைத்த பக்கங்களுடன் உருவாகி வந்துள்ளார்கள். ஆனால் இணையத்தில் சுவாரஸ்யமாக எழுதும் பிளாகர்கள் கூட புதிய தலைமுறை போன்ற பத்திரிகைகளுக்கு போனால் அச்சில் வார்த்தது போல் தனித்துவமற்று முதல் பத்தியை “கொ”யில் துவங்கி இறுதி பத்தியை “வி”யில் முடிக்கிறார்கள். வணிகப்பத்திரிகை ஆசிரியர்கள் வாசிப்பறிவும் எழுத்துத் திறனும் கொண்ட எழுத்தாளர்களை உருவாக்கவோ ஊக்குவிக்கவோ இல்லை. அப்படி சிலர் ஆர்வமிகுதியாய் புகுந்து விட்டாலும் விதைப்பையை அகற்றி கழுத்தில் பெல்ட் மாட்டி விடுகிறார்கள். அசட்டு துணுக்குகள், தொப்புள் படங்கள், தையல் மிஷின் வாங்கி வாழ்வில் பெண்கள் முன்னேறலாம் வகை ஸ்டோரிகள், எந்தெந்த தினங்களில் எந்தெந்த கோயில்களில் உருண்டால் தோஷம் தீரும் என அவர்கள் இன்றும் தேவர் மகனில் சிவாஜி சொன்னது போல் இன்றும் அருவாள் கம்புடன் சுற்றும் பயலுகளாகத் தான் இருக்கிறார்கள்.
ஆக வணிக பத்திரிகைகள் கற்காலத்தில் இருக்க டி.வி மீடியா சமகாலத் தன்மையுடன் பெரும் வீச்சுடன் செயல்பட்டு வருகிறது என்பது ஒரு நகைமுரண் தான். “சத்யமேவ ஜெயதே” அல்லது “நீயா நானா” போன்ற விவாத நிகழ்ச்சிகளில் முற்போக்காக தீவிரமாக உரையாடப்பட்ட விசயங்கள் குறித்து உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் இவற்றில் ஒரு சிறு சதவீத பிரச்சனைகளைக் கூட நமது வணிக பத்திரிகைகள் எடுத்துப் பேசியதில்லையே! பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு மாநிலமே எரிந்து கொண்டிருக்கும் போது இவர்கள் மாற்றான் படம் பற்றித் தானே கவர் ஸ்டோரி எழுதுவார்கள். இப்படி வாசகர்களின் அறிவு, பண்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல் இந்த பத்திரிகைகள் நமது முக்கிய எழுத்தாளுமைகளை இத்தனை காலமும் நிராகரித்தே வந்துள்ளன. அவர்களுக்கு இடமளித்த போதும் அது பெயரளவுக்கு காங்கிரஸின் சிறுபான்மையினர் மீதான அக்கறை போலத் தான் இருந்தது. ஆக தமிழில் எழுத்தாளனுக்கு பொதுவெளி என்பது இத்தனைக் காலமும் மறுக்கப்பட்டு வந்துள்ளது. அவனுக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாக இன்று டி.வி மாறியுள்ளது. அவனுக்கானது சிறு பங்குதான் என்றாலும் தன் கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்த டி.வி இன்று அவனுக்கு வாய்ப்பளிக்கிறது. இதை அவன் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. சினிமாவால் முழுக்க ஆக்கிரமிக்கப்பட்டு திரிந்து போன தமிழ் பண்பாட்டு வெளியில் எழுத்தாளன் இன்று தன் மீது விழும் ஒரு சிறு வெளிச்சத்தை முழுமையாக பயன்படுத்துவதில் ஒரு நியாயம் உள்ளது.
இங்கு பிரச்சனை உண்மையில் எழுத்தாளனின் கற்பு சம்மந்தப்பட்டதல்ல. பிரச்சனைகள் இரண்டு. ஒன்று டி.வி மீடியாவில் எழுத்தாளன் ஒரு நெடுந்தொடர் நடிகனைப் போலத் தான். அவன் ஒரு விவாதத்துக்கு கூடுதலாக ஒரு சிறு தெளிவை ஒரு திசையை அளிக்கிறான் அவ்வளவே. அவனது இடம் அங்கு மிகச் சிறியது. அவனுக்கு தனித்த அடையாளமோ தவிர்க்க இயலாத பண்போ அங்கில்லை. சிவசங்கரி பேசிய இடத்தில் குட்டிரேவதி வரலாம். குட்டிரேவதி கிடைக்கவில்லை என்றால் பறவை முனியம்மாவை கொண்டு வருவார்கள். மேலும் டி.வி பார்வையாளன் ஒரு தற்காலிக ஆர்வத்துடன் சினிமா பாடல், குண்டுவெடிப்பு செய்தி, ஈமு விளம்பரம், விவாதம் அனைத்தையும் பார்ப்பவன். அவனது ரிமோட் பொத்தான் அழுத்தலின் சில நொடி இடைவெளி தான் விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒரு எழுத்தாளனின் மூச்சிரைக்க வைக்கும் நிலைப்பாட்டின் அழுத்தத்துக்கும் பலசமயம் இருக்கிறது. பவர்ஸ்டாரையும் கோணங்கியையும் அருகருகே வைத்து விவாதம் உருவாக்கினாலும் அவன் எந்த குழப்பமும் இன்றி அதைப் பார்த்து விட்டு கடந்து போவான்.
அடுத்து ஒரு எழுத்தாளன் மீடியாவின் கோரிக்கைக்கு ஏற்ப கருத்துக்களை அவசரமாக உற்பத்தி செய்து முன்வைக்கும் ஒரு எந்திர நிலைக்கு தள்ளப்படுகிறான். எல்லாவற்றைப் பற்றியும் ஒரு கருத்தைக் கொண்டிருப்பவன் தமிழ் எழுத்தாளன் மட்டும் தான். உள்ளார்ந்த ஈடுபாடின்றி ஆர்மார்த்தமான இசைவின்றி அவன் தனது தர்க்க பலம் அறிவுக் கூர்மை மட்டும் கொண்டு தொடர்ந்து இந்த தீராத மீடியா பசிக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இது அவனை விரைவில் களைப்படைய வைத்து விடுகிறது. அவனது எழுத்துப்பணியை சத்தற்றதாக ஆக்கி விடுகிறது. எழுத்து என்பதே குமாஸ்தா நிலைக்கு எதிரானது தான். ஆனால் மீடியா நாட்டாமை பணி அவனை குமாஸ்தா நிலைக்கே திருப்பி விடுகிறது.
ரிச்சர்டு மேலப் (Richard Malouf) எனும் ஆஸ்திரேலிய நாவலாசிரியர் “ஒரு எழுத்தாளன் பேச நேர்கையில்” (When a Writer Speaks) எனும் ஒரு சுவாரஸ்யமான கட்டுரையில் இந்த சமகால எழுத்தாளன்-டிவி உறவைப் பற்றி பேசுகிறார். முதலில் அவர் ஒரு எழுத்தாளன் தன் மனதை அரிக்கும் ஒரு சிக்கலை பேச்சில் வெளிப்படுத்துகையில் அவ்விசயத்தை அவன் எழுத்தில் கொண்டு வரும் சந்தர்ப்பம் இல்லாமல் ஆகி விடுகிறது என்கிறார். இது ஒரு மனநிலை சம்மந்தப்பட்ட விசயம் தான். எழுத்துக்கு இம்மாதிரி உறுதியான விதிமுறைகள் எல்லாம் கிடையாது. பேச்சில் திருப்திகரமாய் சொல்ல முடியாததை எழுத்தாளன் தன் கட்டுரை அல்லது புனைவில் விரிவாகவோ, அல்லது கவிதையில் மேலும் உக்கிரமாகவோ சொல்ல விழையக் கூடும்.
அடுத்து மேலப் எவ்வாறு நாவல் வடிவத்தின் வருகைக்குப் பின் எழுத்தாளன் சமூக அரசியல் விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஒரு கற்பனைப்படைப்பில் பேச சாத்தியம் உருவாகிறது என்று கூறுகிறார். அதுவரை தன்னை அரசியல் கடந்தவனாக எழுத்தாளன் கருதி வந்திருக்கலாம். ஆனால் நாவலின் காலகட்டம் இந்த நிலைப்பாட்டை மாற்றுகிறது. இனி அவன் பலதரப்பட்ட சித்தாந்தங்கள், நிலைப்பாடுகள், கருத்துநிலைகளுக்கு தன் எழுத்துவெளியில் இடமளிக்க வேண்டிய தேவை உருவாகிறது. ஆரம்பத்தில் அரசியலற்றவராக தன்னை காட்டிக் கொண்ட தாமஸ் மன் எவ்வாறு ஜெர்மானிய யூத எதிர்ப்பு அரசியலுக்கு எதிரானவராக தன்னை முன்னிறுத்தினார், அவர் குடியாட்சியை எதிர்ப்பவராக ஆரம்பத்தில் இருந்து பின்னர் அதை ஆதரிப்பவராக எப்படி மாறினார் என்பதை மேலப் விவரிக்கிறார். தாமஸ் மன் தன் நாவல் எழுதும் அனுபவம் வழியாகவே தன் அரசியல் பார்வையிலும் மாற்றம் பெற்றார் என்று கூறுகிறார். இலக்கியத்தில் அரசியல் வேண்டுமா வேண்டாமா என்கிற விவாதம் இன்னும் தமிழில் நிறைவு கொள்ளாமலே இருக்கிறது. மேலப்பின் இக்கட்டுரை அவ்விதத்தில் இங்கு முக்கியமானது.
இதே கோணத்தில் யோசித்தால் எழுத்தாளன் காலத்தின் பிரதிநிதி, சமூகத்தின் குரல், நீதிக்காக போராடுபவன் என்று சொல்லத் தோன்றும். அவன் வெறுமனே கதை எழுதுபவனாகவோ, தன் தபால் பெட்டியில் இறகை விட்டுப் போன குருவியைப் பற்றி மனம் உருகுபவனாகவோ மட்டும் இருக்க தேவையில்லை. அவன் விலைவாசி உயர்வு பற்றியும் அணு உலை ஆபத்து பற்றியும் டி.வியில் உரத்து பேசலாம் தானே?
இங்கு மேலப் சன்னமாய் எச்சரிக்கிறார். இன்று எழுத்தாளன் தன்னை சமூகப் போர்வாளாக கருத வேண்டிய தேவையும் சூழலும் ஏற்பட்டால் அவன் பொதுவெளியில் ஆவேசமாக இயங்குவதில் தவறில்லை. தமிழில் இன்று நிச்சயம் அத்தகைய தேவை உள்ளது. ஆனால் அவன் ஒரு டி.வி “நடிகனாக” மாறி விடாது இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். போலியான ஊடக ஆளுமைகள் இடையே தன் தனித்துவம் இழந்திடாதிருக்க விடாப்பிடியாய் இருக்க வேண்டும். ஊடக சமூக அரசியல் உரையாடல்களில் தோன்றும் அர்த்தமற்ற ஆயிரமாயிரம் சொற்றொடர்கள் இடையே ஒரு சிறு வெளிச்சக் கீற்றை தொடர்ந்து உருவாக்குவதே தன் பணி என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
அவன் “டி.வி எழுத்தாளனாக” மாறாத வரையில் அவன் டி.வியில் பேசுவதில் பாதகம் இல்லை. அது எதுவரையில் என்பது தான் சிக்கல்.
Read More

Tuesday 18 September 2012

கால்கள்-புதிர்ப்பாதையில் கண்களை கட்டிக்கொண்டு - துரோணா



இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு யுவதியின் வாழ்க்கைதான் கதையென்பது பெரும்பாலும் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.எனவே கதை பற்றி பெரிதாய் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நேரே விஷயத்திற்குள் நுழைந்துவிடலாம்.
ஆனால் அதற்கு முன்பு நான் இந்த நாவலை வாசிக்க ஆசைப்பட்டதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்.பொதுவாகவே எனக்கு அபிலாஷின் உளவியல் கட்டுரைகள் மீது மதிப்பும் விருப்பமும் உண்டு. உறவுகளுக்கிடையேயான உளவியல் பிணைப்பை தீவிரமாக ஆராயும் நல்ல கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். உளவியல் தொடர்பான அவருடைய கருத்துக்களோடு நான் எப்பொழுதும் உடன்பட்டே இருந்திருக்கிறேன். இதற்கிடையே கால்கள் நாவலிற்கான விமர்சனங்களை வாசித்ததன் மூலம் இந்நாவல் உளவியலை மையமாக கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நேர்ந்தது.ஆக புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பே எனக்கு அதன் மீது ஒரு நல்ல அபிப்ராயம் உண்டாகிவிட்டது.இனி நாவலை வாசித்ததற்கு பிறகான என்னுடைய எண்ணங்களை பகிர்கிறேன்.


நிச்சயமாக இதுவொரு நல்ல முயற்சிதான் என்றாலும் நாவல் முழுக்க இழையோடும் செயற்கைத் தனமும் சூழலோடு பொருந்தாத துருத்தலான காட்சிகளும் நாவலை அதல பாதாளத்திற்குள் தள்ளி விடுவதாகவே எனக்கு படுகிறது.நிறைய இடங்களை உதாரணங்களாக சுட்டலாம்.பின் வருவது அத்தகையை ஒரு உதாரணம்.மைய பாத்திரமான மதுவின் கல்லூரி பேராசிரியர் மதுசூதனன். அவருடைய மகனுக்கு உடல்நிலை மோசமாகயிருக்கிறது. கிட்டத்தட்ட மரணத்திற்கு வெகு சமீபத்தில் இருக்கும் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். அவனுடைய உடல்நலம் குறித்து விசாரிக்க தொலைபேசியில் அழைக்கிறாள் மது. மறுமுனையில் தொலைபேசியை எடுப்பது கார்த்திக்.கார்த்திக் மதுவின் நண்பன். இதில் முக்கியமான ஒரு செய்தி கார்த்திக் மதுவின் நண்பன் தானேயொழிய அவனுக்கும் மதுசூதனனுக்கும் முன் பழக்கமெதுவும் கிடையாது. மதுவின் மூலம்தான் அவன் அவருக்கு அறிமுகமே ஆகியிருக்கிறான். தொலைபேசியை எடுத்து அவன் பேசவும் மது நீ அங்கு என்ன செய்கிறாய் என கேட்கிறாள்.உடனே அவன் தன் தங்கைக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது எனவும் அதற்கு இனிப்பு கொடுக்க வந்திருப்பதாகவும் பதில் சொல்கிறான்.இத்தகையை ஒரு காட்சியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. ஆனால் இந்த நாவலில் இவையெல்லாம் இயல்பாய் சொல்லப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது குறை நாவலின் பாத்திரங்கள் தமக்குள் கொண்டிருக்கும் உறவுநிலைகளின் குழப்பங்கள். மதுவிற்கும் கார்த்திக்கும் இடையேயான பரிச்சயம் மதுவிற்கும் கண்ணணிற்கும் இடையேயான பரிச்சயம் அப்புறம் மதுவிற்கும் பேராசிரியரின் மகனுக்கும் இடையிலான பரிச்சயம் என எல்லாமே கலங்கிய குட்டையாக இருக்கின்றன.ஒவ்வொருவருக்கும் இடையிலான உரையாடல்களையும் விவாதங்களையும் வைத்து பார்த்தால் எல்லோரும் வருடக்கணக்கில் பழகியிருக்கிறார்கள் போல என்றே வாசகன் நினைப்பான். ஆனால் நாவலில் அப்படியெதுவும் சொல்லப்பட்டிருப்பதாய் எனக்கு தெரியவில்லை. முன் அறிமுகமே இல்லாத இருவர் சகட்டு மேனிக்கு அந்நியோன்யமாக உரையாடிக் கொண்டிருந்தால் அது எவ்வளவு செயற்கையாக தோன்றும்? இதனாலேயே சில அற்புதமான உரையாடல்களோடுகூட என்னால் ஒன்ற முடியவில்லை.
மூன்றாவது சிக்கல் நாவலின் கிளைக் கதைகளினுடையது.எக்கச்சக்கமான மனிதர்களின் கதைகளை நாவலினூடே சொல்லியபடி செல்கிறார் ஆசிரியர்.இ.எம்.எஸ், மாத்யூ என நீளும் அந்த பட்டியல் அம்பாரமாய் கனக்கிறது.இந்த கதைகளெல்லாம் நாவலின் மைய ஓட்டத்திற்கு ஏதாவது பலம் சேர்க்கின்றனவா என்று பார்த்தால் பரிதாபமாக இல்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நாவலின் முதல் பத்து அத்தியாங்களுக்குள் சிலமுறை வந்துபோகும் இ.எம்.எஸ். அதற்கு பிறகு நாவல் முடியும் தருவாயில் ஐம்பது அத்தியாயங்கள் தாண்டி தலைக் காட்டுகிறார்.(அவருக்கு ஒரு பெரிய கதையை ஆசிரியர் முதலில் சொல்லிய வகையில் ஒரு அத்தியாயம் கழிந்திருந்தது)

அடுத்தது நாவலின் தத்துவ தாளிப்புகள்.அபிலாஷிற்கு தத்துவத்தின் மீது பெரிய ஈடுபாடுண்டு என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.அதற்கென்று இப்படி நாவல் முழுக்க தத்துவ மழையாய் பொழிந்து தள்ளியிருக்க வேண்டாம்.சாதாரண நிகழ்வுகளையும் இடியாப்ப சிக்கலாக்கி அதற்கு தத்துவார்த்தமாய் பதில் சொல்கிறார்கள் அபிலாஷின் கதாபாத்திரங்கள்.இப்படியான கதாபாத்திரங்களை படைக்கக்கூடாது என்றில்லை.ஆனால் அத்தகைய காகித சிந்தனையாளர்களை கடந்த ஆசிரியரின் இருப்பையோ அல்லது அதற்கான மாற்றையோ நாவலின் எந்த இடத்திலும் என்னால் அடையாளங் காண முடியவில்லை.உதா:வண்டியோட்ட கற்றுக் கொள்பவர்களுக்கு ஆரம்பத்தில் ஆக்ஸிலேட்டரின் மீது கட்டுப்பாடு கிடைக்காது என்பது எவ்வளவு எளிதான விஷயம்.ஆனால் அதையே மதுவின் குணாம்சத்தோடு தொடர்புபடுத்தி அதற்கு உளவியல் விளக்கம் அளிக்கிறான் கண்ணன்.(கண்ணன் ஒரு மெக்கானிக் என்பது கூடுதல் தகவல்)

இதன் மூலம் நாவலில் நல்லதே இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. நாவலில் எனக்கு ரொம்ப பிடித்த சில விஷயங்களும் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது நாவலின் நாஞ்சில் மணம்.கதையில் ஆட்கள் சாப்பிடும் உணவு வகையறாக்கள் அத்தனையும் எனக்கு சிறிதும் அறிமுகம் இல்லாதவை.புட்டு,கிழங்கு,நெய்யப்பம் என மணக்கிற உணவு பண்டங்களின் வழியே ஊர்த்தன்மையை கொண்டுவந்த அபிலாஷை நிச்சயம் பாராட்டவேண்டும்.மதுவின் அப்பா கதாபாத்திரமும் என்னை அதிகம் கவர்ந்தது. தேங்காயே பிடிக்காது ஆனால் தென்னை மரத்தை ஆசையாய் வளர்ப்பார் என்கிற ஒற்றை வரி விளக்கம் போதும் அவரது குணநலனை வாசகன் சட்டென்று புரிந்துக்கொள்ள.செயற்கையின் சாயங்களால் காணாமல் போகும் பிற கதாபாத்திரங்களுக்கு மத்தியில் இவர் மட்டும் அட்டகாசமாய் பிரகாசிக்கிறார். வைத்தியர் மதுவிற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாய் சொல்லி கடுப்பேற்றுகிற இடத்தில் இவரது கோபம் அவ்வளவு அசலாக இருக்கிறது. (மதுவின் அம்மா கதாபாத்திரம் சொத்தப்பலாய் இருப்பது வேற கதை).

அங்கங்கே ஆசிரியர் மிளிரும் இடங்களும் இருக்கவே செய்கின்றன. இளம் டாக்டர் மதுவின் கனவில் தோன்றும் காட்சி, நாவலின் இறுதியில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மதுவின் பிரய்த்தன்ங்கள்,அதை தொடர்ந்து நிகழும் விபத்து, அப்புறம் கடைசியாய் ஒரு கனவு என எல்லாம் அருமையாக இருக்கின்றன.(இடைச் சொருகல்: நாவலில் கணக்குவழக்கேயில்லாமல் சின்னதும் பெரியதுமாய் நிறைய விபத்துகள் நிகழ்ந்து கொண்டேயிருகின்றன. அதிகப்படியான விபத்துகள் ஒரு கட்டத்திற்கு மேல் என் பொறுமையை சோதித்துவிட்டன )

இறுதியாக,அபிலாஷிற்கு எழுதுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.அவரால் எளிமையாக தெளிவாய் திருகல்களின்றி எழுத முடிகிறது. காட்சிகள் எல்லாம் துல்லியமாய் கண்முன் விரிகின்றன. மழை என்றால் மழை வெயில் என்றால் வெயில்.இப்படியிருக்க அவர் தத்துவம் உளவியல் என்று அலட்டிக்கொள்ளாமல் தனது மண்ணை சரியாக பதிவு பண்ண நினைத்திருந்தால் ஒரு செமத்தியான நாவல் நமக்கு கிடைத்திருக்கும். ஒருவேளை நான் முன்வைக்கும் அனைத்து எதிர்விமர்சனங்களுக்கும் அபிலாஷிடம் நியாயமான பதில்களும் காரணங்களும் இருக்கக்கூடும்.இருந்துவிட்டு போகட்டும். ஒரு வாசகனாக என்னிடமிருப்பது சிறிய வேண்டுகோள்தான், முழுமையாய் எழுதப்படாத உங்கள் ஊர் அதன் கலாச்சாரத்தோடும் ஈரத்தோடு உங்களிடம் இன்னும் பத்திரமாக இருக்கிறது அபிலாஷ், அடுத்த படைப்பிலாவது அதை எங்களுக்கு பார்க்க கொடுங்கள்….

Read More

Monday 10 September 2012

வி.வி.எஸ் - ஒரு நடனத்தின் முடிவு


வி.வி.எஸ் விடைபெறுகிறார் - கண்ணீருடன், கோபத்துடன், ஏமாற்றத்துடன், பெருந்தன்மையுடன், அவரது மட்டையாட்டம் வெளிப்படுத்திய அதே மென்மையான கவித்துவத்துடன்.

லஷ்மண் இந்தியாவில் நடக்கப் போகும் மூன்று டெஸ்ட் தொடர்களுக்காக தனிப்பட்ட வகையில் தயாராகிக் கொண்டு தான் வந்தார். அவர் கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி செய்து வந்தார். மைசூரில் உள்ளூர் கிளப் ஆட்டம் ஒன்றும் 150 சொச்சம் கூட அடித்தார். அப்போது அதைப் பார்த்த சுனில் ஜோஷி “லஷ்மண் முன்பு போல் கவர் பகுதிக்கு மேலாக பந்தை தூக்கி அடிப்பது, கம்பீரமாக ப்ளிக் செய்வது பார்க்கையில் தனது உச்சத்தை அவர் மீண்டும் எட்டி விட்டார் என்று தோன்றியது” என்று அவதானித்தார். தனது உடற்தகுதியை மேம்படுத்தவும் கடுமையாக முயன்று வந்தார். தான் பயிற்சிக்கு செல்லும் போதெல்லாம் மதியம் இரண்டு மணிக்கு அவர் மைதானத்தை சுற்றி ஓட்டம் பயில்வதை பார்த்ததாக ஓஜ்ஹா தெரிவிக்கிறார். ஓஜ்ஹாவுடன் உரையாடும் போது தம் சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடக்கபோகும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் பங்கெடுப்பது பற்றி இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் எண்ணங்களை பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் டெஸ்ட் அணிக்கான பட்டியல் வெளியிடப்பட்டு இரண்டே நாட்களில் நிலைமை தலைகீழானது. லஷ்மண் தானாகவே ஓய்வை அறிவிக்கும் நிராதரவான நிலைக்கு சென்றார்.

ஒருநாள் அணியில் இருந்து நிரந்தரமாக விலக்கப்பட்ட பின்னர் லஷ்மணின் துர்விதி ஆட்டச்சூழல் பயிற்சியின்றி நேராக டெஸ்ட் ஆட்டம் ஆடப் போவதாக இருந்தது. ஆனால் அவர் இந்த குறையை மிக நேர்த்தியாக சொல்லப்போனால் மிக அட்டகாசமாக கடந்து வந்திருக்கிறார். தொடர்ச்சியாக ஆடி வந்த பல மட்டையாளர்களை விட மிக முக்கியமான ஸ்கோர்களை கடந்த ஏழு வருடங்களில் அவர் கீழ்மத்திய மட்டை வரிசையில் தோன்றி ஆடியிருக்கிறார். எண்ணற்ற முறைகள் தனது அணியை தன்னந்தனியாக வெற்றிகளை நோக்கி நடத்தி இருக்கிறார். தன்னைச் சுற்றி அவ்வளவு குழப்பமும் பதற்றமும் நிலவும் போது நிதானமாக ஒரு தியான மனநிலையில் ஒன்றுமே நடக்காதது போல் தான் மட்டும் முற்றிலும் வேறொரு ஆடுதளத்தில், வேறொரு அமைதியான ஆட்டத்தில் ஆடுவது போல் தொடர்ந்து மட்டையாடிக் கொண்டு வந்திருக்கிறார். இந்தியா இலக்குகளை துரத்தும் போது லஷ்மண் ஆடுவதைக் காணும் போது அவர் இலக்கை எட்டிய பின்னரும் கூட விட்டால் இன்னும் ஒரு நூறு ஓட்டங்களுக்கு மட்டையாடச் சொன்னால் ஏனென்று கேட்காமல் மட்டையை சில எண்ணிக்கைகளுக்கு தளத்தில் தட்டி விட்டு ஆட்டத்தை தொடர்ந்திருப்பார் என்று தோன்றும். லஷ்மண் ஓட்டங்களுக்காக ஒரு இலக்குக்காக எளிய வெற்றிக்காக ஆடுபவர் அல்ல அவர் மட்டையாடுவதற்காகவே ஆடுபவர் என்று சொல்லத் தோன்றும். அதனால் தான் மாதக்கணக்கான இடைவெளிக்குப் பின்னர் அவர் மிக சகஜமாய் அணிக்கு திரும்பி வேறு எல்லாரையும் விட சரளமாய் பந்தை கவர் பகுதிக்கு குழந்தையை வருடுவது போல் விரட்டும் போது நமக்கு அவரது ஆட்டம் போன இன்னிங்ஸின் விநோதத் தொடர்ச்சியாகவே படும். வி.வி.எஸ்சின் சிறப்பு அவர் கால-இடத் தடைகளைக் கடந்தவராக தன் கலையை மேம்படுத்தி இருந்தார் என்பது. எப்படி ஒரு நல்ல எழுத்தாளனால் எப்போது வேண்டுமானாலும், இரைச்சல் கூச்சல் நடுவேயோ, கொதிக்கும் ஜுரத்தின் இடையேயோ, கொந்தளிப்பான மனநிலையிலோ எப்போதும் போல் விட்ட இடத்திலிருந்து அதே சரளத்துடன் எழுதிக் கொண்டு செல்ல முடியுமோ அது போலத் தான் கிரிக்கெட்டிலும் ஒரு அபௌதிக உச்சம் உள்ளது. பொதுவாக கிரிக்கெட்டர்கள் தம் கலைவாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் அந்த உச்சத்தை நினைத்தபடி அடையும் ரகசியத்தை கண்டடைகிறார்கள். சௌரவ் கங்குலி தந்து இறுதியான இங்கிலாந்து பயணத்தில் form எனப்படும் ஆட்டநிலைக்கு ஒரு நல்ல விளக்கமளித்தார்: “ஆட்டநிலை என்பது தன்னை மறந்து, புறச்சூழலின் எந்த தகவலும் ஆட்டத்தை பாதிக்காதபடி தொடர்ந்து நிலைப்பது தான். நான் இப்போது அந்த அபூர்வ மனநிலையில் தான் இருக்கிறேன்” என்றார். சுவாரஸ்யமாக கங்குலி தனது கலையின் உச்சத்தை அடைந்த போது அவர் புறநெருக்கடிகளால் ஓய்வறிவிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். அவர் தனது இறுதித் தொடர்களான தெ.ஆ மற்றும் பாக் டெஸ்ட் ஆட்டங்களிலும் அதே தொழில்நுட்ப குறைபாடுகளுடன் தான் இருந்தார்; ஆனால் மனம் ஒரு ஜென் நிச்சலனத்தை அடையும் போது தொழில்நுட்பம், ஆடுதளம், பந்து வீச்சு என்பவையெல்லாம் பொருட்டே அல்ல என்று அவர் நிரூபித்தார். இது ஒரு இருட்டறை ஸ்விட்சு போல. மனதில் அது எங்கிருக்கிறது என்று அனுபவத்தில் கண்டடையும் கலைஞர்கள் பிறகு இருட்டில் தடுமாறுவதே இல்லை. தனது உடற்தகுதி மோசமாக இருந்த, களத்தடுப்பு மேலும் மேலும் மெத்தனமாகி வந்த, காயங்கள் ஒன்றுக்கு மேல் இன்னொன்றாக ஏற்பட்டுக் கொண்டிருந்த இந்த கடந்த ஏழு வருடங்களில் தான் வி.வி.எஸ்ஸும் தனது பௌதிக கட்டுப்பாடுகளை உதறி எழும் சூத்திரத்தை கண்டறிந்தார். ஆனால் அதிர்ஷ்டத்தை அப்படி கட்டுப்படுத்த முடியாதாகையால் அவரது ஆட்டம் கடந்த இங்கிலாந்து ஆஸ்திரேலிய பயணத்தொடர்களில் தொடர்ந்து சீரழிந்தது. அவர் தூங்கி விழித்தது போல் ஆடுதளத்துக்கு வந்தார்; தூங்கி விழித்ததும் அம்மா அருகில் இல்லை என்றறிந்த குழந்தை போல் அவ்வளவு அதைரியமாக, அவநம்பிக்கையாக, தயக்கமாக இயங்கினார்.

லஷ்மண் மீது தேர்வாளர்களுக்கு, ரசிகர்களுக்கு, வாரியத்துக்கு நம்பிக்கை இருந்தது. அவர் உடனடியாக விலகும்படி நம்மால் நேரடியாக கோர முடியாது; ஏனெனில் அவரால் இன்னும் சில வருடங்கள் நிலைக்க முடியும்; ஆட்டங்கள் வென்று தர முடியும். அணி மேலாண்மையும், தேர்வாளர்களும், ரசிகர்களும் அவர் இளைஞர்களுக்காக அணியில் இருந்து விலகினால் நல்லது தானே என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் அதை அவ்வளவு உறுதியுடன் தீர்க்கத்துடன் நம்மால் சொல்ல முடியவில்லை. வி.வி.எஸ்ஸுக்கு இன்னும் அணியில் முக்கிய இடம் இருந்ததே காரணம். அவரது இடத்துக்கு இன்னும் ஒரு மாற்றுவீரர் தயாராக இல்லை என்பதே காரணம். சஞ்சய் மஞ்சிரேக்கர் போன்ற விமர்சகர்கள் தயக்கமாய் பரிந்துரைத்தது இந்தியாவில் நடைபெறப்போகும் ஆட்டங்களில் அவர் இடத்தில் ஒரு இளம் வீரரை வளர்த்தெடுக்கலாம் என்று தான். அந்த தகுதியான புது வீரர் யார் என்பது பற்றி யாருக்கும் உறுதியான கருத்து இல்லை. ரெய்னாவா, சட்டீஷ்வர் பூஜாராவா, பதிரிநாத்தா? இவர்களில் யாரும் தேர்வாளர்கள், அணித்தலைவர் உள்ளிட்ட யாரது முழுமையான நம்பிக்கையை பெறவில்லை. கடந்த ஆஸி பயணத்தின் போது லஷ்மண் உள்ளிட மூத்த வீரர்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த போது ரோஹித் ஷர்மாவை லஷ்மணின் இடத்தில் ஆட வைக்குமாறு ஊடகங்கள் பெரும் நெருக்கடியை அளித்தன. பின்னர் ரோஹித் ஒருநாள் தொடரில் ஆடிய போது அவரது மோசமான காலாட்டமும் பொறுமையின்மையும் அந்த கோரிக்கையை கொஞ்ச நாள் கிடப்பில் போட வைத்தது. பின்னர் இலங்கைத் தொடரில் ரோஹித் ஷர்மாவை விலக்கி இன்னொருவரை கொண்டு வரவேண்டும் என்ற கூச்சல் எழுந்தது. அந்த இன்னொருவரான மனோஜ் திவாரி உயரப்பந்தை ஆடும் திறனற்றவர் என்ற உண்மை புலனானதும் ஊடக பரபரப்பு மீண்டும் அடங்கியது. உண்மையில் இந்தியாவின் அவலம் வி.வி.எஸ்ஸின் ஆட்டநிலையோ உடற்தகுதியோ 37 வயதோ அல்ல – டெஸ்ட் ஆட்டங்களுக்கு தோதான திறமையும் மனநிலையும் கொண்ட இளம் வீரர்களை கடந்த ஐந்து வருடங்களில் நம்மால் கண்டறிந்து தயார்ப்படுத்த முடியவில்லை என்பது தான். ஆனால் நாம் அதற்காக மூத்த வீரர்களை காலங்காலமாய் ஆடிக் கொண்டே இருக்க எதிர்பார்க்கவும் முடியாது. இளைஞர்களை முயன்று தான் ஆக வேண்டும். கங்குலி இடத்திற்கு ஒரு கோலி வர நான்கு வருடங்களுக்கு மேல் பிடித்தது என்ற கசப்பான புரிதலுடன் நாம் காத்து தான் ஆக வேண்டும்.

வி.வி.எஸ் இதற்கு முன்னரும் கடுமையான மீடியா நெருக்கடிக்கு கீழ் தான் 16 வருடங்களாக விடாது போராடி வந்தார். ஆனால் இப்போது அவர் மீடியா விமர்சனம் முன்பு பலவீனமாக உணர்ந்திருக்கக் கூடும். முன்பு இந்தியா மோசமாக ஆடினால் முதலில் அணியில் இருந்து தியாகம் செய்ய வேண்டியவராக லஷ்மணைத் தான் எதிர்பார்ப்பார்கள். அவரது மெத்தனமான உடல்மொழி அவர் மீதான இந்த வெறுப்புக்கு உதவியது. சச்சினுக்கும் திராவிடுக்கும் இருந்த நிலைத்த வீரர் என்கிற பிம்பம் வி.வி.எஸ்ஸுக்கு என்றும் இருந்ததில்லை. அவர் என்றுமே ஓட்டமெடுக்க திணறியதில்லை, மூச்சு வாங்க, வியர்வை வழிய ஓடி ஓடி உழைத்ததில்லை என்பது இந்த எதிர்மறை பிம்பத்துக்கு நிச்சயம் துணை போயின. அதனால் அணியில் அவரது இடத்திற்காக அவரே மியூசிக்கல் சேர் ஆட்டம் நெடுங்காலத்துக்கு ஆடி வந்தார். அவராகவே ஓடி ஓடி தன் நாற்காலிக்கு வேகமாக வந்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு ஆசுவாசமாக அமர்ந்து கொள்வார். ஒரு கட்டத்தில் லஷ்மண் எண் 5 ஐ நிரந்தரமாக தனதாக்கிக் கொண்டார். கங்குலியின் ஓய்வுக்குப் பின் 6 மற்றும் 7வது எண்களில் வலுவான மட்டையாளர்கள் இல்லாததால் அவரது பொறுப்புணர்வும் அணியில் அவருக்கான தேவையும் அதிகரித்தது. இது லஷ்மணின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்த மிகவும் உதவியது.

இங்கிலாந்து பயணத்தில் அவர் மட்டமாக ஆடினார். ஆனால் அவர் என்றுமே இங்கிலாந்தில் நன்றாக ஆடியதில்லையே என்று சமாதானம் செய்து கொண்டோம். கடந்த ஆஸ்திரேலிய பயணத்தில் அவரது தேர்வு அதுவரையிலான ஆஸிக்களுக்கு எதிரான அவரது பிரம்மாண்ட சாதனைகளுக்கான வெகுமதி தான் என சொல்ல வேண்டும். அவர் தனது ஆட்டவாழ்வில் என்றுமே நெருக்கடிகளை சந்திக்கும் போது ஒரு ஆஸ்திரேலிய பயணம் வரும். சதம் அடிக்கும் எந்திரமாக மாறுவார். அணியில் அவர் இடம் நிரந்தரமாகும். ஆனால் இம்முறை ஆஸி பயணத்தில் ஆஸியினர் சாமர்த்தியமாக லஷ்மணை எதிர்கொண்டனர். முன்பு போல் அவரை தாக்கி வெளியேற்ற பார்க்காமல் அவரது பொறுமையுடன் விளையாடி வென்றனர். லஷ்மணும் மனதில் நிம்மதியிழந்து ஆட்டத்தில் சமநிலை இன்றி காணப்பட்டார். இத்தொடரில் அவரது தோல்விகள் தாம் அவரது முதுகை முறித்த கடைசி துரும்பு. விமர்சனங்களையும் சீண்டல்களையும் பொருட்படுத்தத் துவங்குகிறோம் என்றால் நாம் பயந்து குழம்பி போயிருக்கிறோம் என்று பொருள். வி.வி.எஸ் அப்படியான ஒரு தெளிவற்ற, கொந்தளிப்பான, கண்ணீர ததும்பும் மனநிலையில் தான் தன் ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார். வி.வி.எஸ் இம்முடிவை எட்டும் முன் தன் உறவினர்கள், நண்பர்கள், உற்றவர்களை கலந்தாலோசித்தார். அவரது தனிப்பட்ட பயிற்சியாளர் ஆஸி டெஸ்ட் தொடர் வரை பொறுமை காக்க வேண்டினார். ஆனால் வி.வி.எஸ் “நான் இன்னும் மூன்று தொடர்கள் ஏனும் ஆடத் தயாராகத் தான் இருந்தேன். ஆனால் அதற்காக ஒரு இளைய வீரரின் வாய்ப்பை பறிக்க நான் தயாராக இல்லை. நான் என்றுமே சுயநலமின்றி என் அணியின் வளர்ச்சிக்காக பங்காற்றத் தான் முயன்றிருக்கிறேன். என்றுமே அணியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்க மாட்டேன்” என்று காரணம் சொன்னார். அந்த “தானை” கவனியுங்கள். எப்போதுமே நாம் தன்னம்பிக்கை குன்றும் போது தான் சுயநலமற்ற சேவை பற்றி நெகிழ்ந்து உருகுவோம்.

வி.வி.எஸ் ஓய்வு பெறுவதால் உடனடியாக ஒரு இளைய வீரர் தோன்றி வெற்றியடையவார் என்று எந்த உறுதியும் இல்லை. அவர் முதல் டெஸ்ட் ஆட்டம் மட்டுமே ஆவது ஆடி ரசிகர்களுக்கு விடைகூறி இன்னும் இனிமையான நேர்மறையான மனநிலையில் கிளம்பியிருக்கலாம். அவரது நீண்ட ஆட்டவாழ்வு இப்படி கசப்பாக அரைகுறையாக முடிந்திருக்க வேண்டியதில்லை. பாகிஸ்தானில் வாரத்திற்கு ஒருமுறை ஒரு மூத்த வீரர் ஓய்வுற்று பின் திரும்புவார். மே.இ தீவுகளில் கெய்லும், இங்கிலாந்தில் பீட்டர்ஸனும் ஓய்வு என்பது ஒரு திருடன் போலீஸ் விளையாட்டு என்று சமீபமாக பலமுறை நிரூபித்துள்ளனர். வி.வி.எஸ்ஸும் திரும்ப வேண்டுமென்று ஆதரவுக் கரங்கள் நீண்டனவா, கோரிக்கைகள் எழுந்தனவா? எல்லாரும் நன்கு எதிர்பார்த்து நிகழ்ந்த ஒரு மரணம் போல அவரது ஓய்வு அறிவிப்பு ஒரு விசித்திர மௌனத்தை, சங்கடமான புன்னகையை, எதிர்பார்ப்பின் அசௌகரிய பெருமூச்சுகளைக் கொண்ட ஒரு சூழலைத் தான் தோற்றுவித்தன. கொலை செய்யவிருந்த ஒருவர் தாமாகவே தற்கொலை பண்ணிக் கொண்டால் கொலையாளி அடையும் நிம்மதியுடன் ஊடகங்கள் அவரை குற்றவுணர்வுடன் அவசர அவசரமாக பாராட்டி முடித்தன.

வி.வி.எஸ் ஓய்வு பெறுவதாய் முடிவெடுத்ததும் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்திடம் பேசினார். அதற்குப் பின் தோனியிடமும் உரையாடி இருப்பார். அணி மேலாண்மையும் பிறரும் தனது பங்களிப்பை பாராட்டி தனக்கான தேவையை வலியுறுத்தி அணிக்குள் தொடர கோரிக்கை வைப்பார்கள் என அவர் எதிர்பார்த்திருக்கலாம். அது நிகழாததால் அவர் தனிமைப்பட்டு அந்நியப்பட்டு உணர்ந்திருக்கலாம். வி.வி.எஸ்ஸின் இந்த அவசர விடைபெறல் தன்னை நிராகரிப்பவர் மீதான கோப வெளிப்பாடாக தான் தோன்றுகிறது. நிஜமாகவே அணி எதிர்காலம் குறித்த அக்கறை மிக்கவர் என்றால் அவர் திராவிடுடன் சேர்ந்து அப்போதே ஓய்வை அறிவித்திருக்க வேண்டும் அல்லவா?

வி.வி.எஸ்ஸின் இடம் என்ன?

• மணிக்கட்டை சுழற்றி சொடுக்கி விரும்பின இடங்களுக்கு எல்லாம் பந்தை விரட்டும் தென்னிந்திய மட்டையாளர்களின் மிகச் சிறந்த பிரதிநிதியாகவா?

• ஷேர் வார்னை லெக் பக்கமாய் இவ்வளவு துச்சமாய் ஆட முடியும் என்று நிரூபித்தவராகவா?

• தனது 281 ஸ்கோர் கொண்டு ஒரு தொடரின் மட்டுமல்ல ஒரு அணியின் விதியையே திருத்தி எழுதி, அத்தோடு பாலோ ஆன் செய்ய எதிரணியை அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை உலகம் முழுக்க அணித்தலைவர்களிடத்து ஏற்படுத்தியவராகவா?

• ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2500 சொச்சம் ஓட்டங்களை எடுத்தவராகவா, ஆஸ்திரேலியாவில் ஒரே ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் அடித்த ஒரே இந்தியனாகவா?

• டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய இலக்குகளை துரத்தும் போது தன்னந்தனியாக வழிகாட்டியதா?

இவை எல்லாவற்றையும் விட வி.வி.எஸ்ஸின் முக்கிய இடம் சச்சினின் தரத்தை மிக நெருக்கமாக வந்து தொட்டவராகவே இருக்க முடியும். தொண்ணூறுகளில் சச்சின் தன்னந்தினியாக ஆதிக்கம் செலுத்தியதன் பின் சில நல்ல மட்டையாளர்கள் வந்தார்கள், கங்குலி, திராவிட் போல். அவர்களுக்குப் பின் சேவாக், காம்பிர் வந்தார்கள். சச்சின் காலத்திலேயே அசார் இருந்தார். ஆனால் யாருமே சச்சினின் நீண்ட சகாப்தத்தின் போது வேகமான உயரப்பந்துகளை இவ்வளவு சௌகரியமாக அசட்டையுடன் சந்தித்து தாக்கி ஆடவில்லை. யாருமே வேக மற்றும் சுழல் பந்து வீச்சை இவ்வளவு சுலபமாக தடையின்றி ஆடிக் காட்டியதில்லை. குறிப்பாக ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் லஷ்மண் சச்சினை மிக நெருங்கி வருவார் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஸ்டீவ் வாஹின் ஆஸி அணியை இந்தியாவில் முறியடித்த பின் இந்தியா தென்னாப்பிரிக்கா செல்லவிருந்தது. அத்தொடரில் இந்தியா சோபிக்க சச்சின் அல்ல லஷ்மண் தான் சிறப்பாக ஆட வேண்டும் என்று மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்தார்கள். தொண்ணூறுகளில் சச்சின் காட்டின ஆட்டசுதந்திரம் இப்போது லஷ்மணிடம் மட்டுமே இருந்தது. சச்சினின் மட்டையாட்டம் ஒரு சிறு சறுக்கலை சந்தித்த கட்டம் இது. சச்சினுக்கும் லஷ்மணுக்கு திறமையை பொறுத்த மட்டில் எட்ட வைத்தால் தாண்டும் அளவுக்கு தொலைவே அப்போது இருந்தது. சச்சினைப் போன்று லஷ்மணுக்கு அநேகமாக எல்லா ஷாட்களும் இருந்தது, எந்த ஷாட்டையும் யாருக்கெதிராகவும் எப்போது வேண்டுமானாலும் அடிக்கும் தன்னம்பிக்கை இருந்தது. பந்தை சில நொடிகளுக்கு முன் கணிக்கும் பார்வை, அபூர்வமான டைமிங், உடல் சமநிலை இருந்தன. ஆனால் சச்சினின் முதிர்ச்சி மற்றும் தொழில்நுட்ப தேர்ச்சி லஷ்மணுக்கு இல்லை. அதற்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டன. அவர் அங்கு வந்து அடைந்ததும் சச்சின் தொலைவானுக்கு அருகே எங்கேயோ போய் விட்டார். ஆனாலும் தரம் எனும் ஒரே அளவுகோலின் படி, கடந்த இரு பத்தாண்டுகளில் சச்சினுடன் ஒப்பிடும் அளவுக்கு நெருங்கி வந்த ஒரே மட்டையாளராக இந்தியாவில் உருவானவர் என்ற ஆகப்பெரும் சிறப்பு லஷ்மணுக்கு உண்டு. இதைவிட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும்?

லஷ்மணின் ஆட்டவாழ்வை அவரது சகபாடிகளான திராவிட், கங்குலி ஆகியோருடன் ஒப்பிடும் போது முக்கிய குறையாக அவரது ஒருநாள் ஆட்ட சாதனை தெரிகிறது. லஷ்மண் 86 ஆட்டங்களில் 30 சராசரிக்கு 6 சதங்கள் எடுத்தார். இந்த சதங்கள் அவரது ஒருநாள் ஆட்டவாழ்வின் இறுதியில் அடிக்கப்பட்டவை. அவர் டெஸ்டுகளில் எய்திய ஆட்டநிலையின் தொடர்ச்சியாகவே அதே தன்னம்பிக்கையுடன் ஒருநாள் ஆட்டங்களிலும் ஆடினார். அவருக்கு ஒரு காலத்தில் ஒருநாள் ஆட்டங்களிலும் நிலைப்படும் விருப்பம் இருந்தது. ஆனால் அவரது ஆட்டமுறை ஒருநாளுக்கு முழுக்க மாறானதாக இருந்தது. அவருக்கு பந்தை தடுக்கும் வாகில் மென்மையாக உருள விட்டு ஒற்றை ஓட்டங்களை எடுக்கும் பாணி வரவில்லை. ஒரு பக்கம் நேர்த்தியாக ஆடியபடி தேவையான போது சச்சின், கங்குலி போல் ஆறு அடிக்கவும் அவருக்கு வலு இல்லை. ஜெயவர்தனே போன்று பாடில், ஸ்கூப், லேட் கட் போன்ற பரிசோதனை ஷாட்களை அடிக்கவும் தெரியாது. நாலு அல்லது இரண்டு. இவை மட்டுமே கொண்டு தான் லஷ்மண் ஆஸ்திரேலியாவில் ஒரே தொடரில் மூன்று ஒருநாள் சதங்களை அடித்தார். ஆச்சரியமாக அவர் ஒருநாள் போட்டிகளில் இப்படி ஒற்றைப்பரிமான மட்டையாளராக இருந்தும் கூட தடங்கலின்றி மிக சரளமாகத் தான் ஆடினார். ஒருநாள் வீரராக அவரது மொத்த ஸ்டிரைக் ரேட் 70 ஆக இருந்த போதும், தனது சிறந்த கட்டத்தில் அவரால் எளிதில் 90க்கு மேல் ஸ்டிரைக் ரேட்டுடன் ஆட முடிந்தது. நன்றாக ஆடி வந்த போது தான் அவர் எதிர்பாராத விதமாக ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார். திராவிட் அக்கட்டத்தில் எண் 3இல் நன்றாக ஆடி வந்தார். கங்குலி தலைமையின் கீழ் கீழ்மத்திய மட்டைவரிசையில் பந்து வீசவும் நன்றாக களத்தடுப்பு பண்ணவும் தெரிந்த வீரர்களை ஆட வைக்கும் கொள்கை கொண்டு வரப்பட்டது. யுவ்ராஜ்களும், காயிப்களும் அடுத்த தலைமுறை ஒருநாள் மட்டையாட்டத்தின் அழகியலை முன்னெடுக்க லஷ்மண் எளிதில் பின் தங்கிப் போனார். ஒருநாள் வடிவத்துக்கு ஆட்டத்தரம் மட்டுமல்ல வேறு பல கூறுகளும் தேவை என்பதை அவர் மிக மிக தாமதமாக உணர்ந்தார், அப்போது அவர் இனி தாமதமாகி விட்டது, டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவோம் என்கிற மனநிலைக்கு வந்து விட்டார். 2003 உலகக் கோப்பையில் லஷ்மணின் இடம் அவருக்கு எவ்விதத்திலும் நிகரில்லாத தினேஷ் மோங்கியாவுக்கு சென்றது. உலகக் கோப்பை முழுக்க மோங்கியா எந்தவொரு குறிப்பிட்ட வகையிலும் பங்காற்றவில்லை. ஆனால் சுமாராக பந்து வீசினார். நன்றாக களத்தடுப்பு செய்தார். இவை இரண்டும் லஷ்மணுக்கு வராது என்ற காரணத்தாலே அவர உலகக் கோப்பை அணியில் இடம் தவறவிட்டார். ஆனால் உலகக் கோப்பை அணியில் இட வாய்ப்பு மட்டுமல்ல ஒருநாளில் சோபிக்காததனால் லஷ்மண் இந்திய அணியின் தலைவராகும் முக்கியமான வாய்ப்பையும் தவறவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அவர் தனது உடற்தகுதி, களத்தடுப்பு, விக்கெட்கள் இடையிலான ஓட்டம் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டிருந்தால் அவரது ஆட்டவாழ்வு இன்னும் அங்கீகாரம் மிக்கதாக நிலைத்ததாக அதனாலேயே சுலபமானதாக இருந்திருக்கும். உதாரணத்திற்கு கங்குலியையும் திராவிடையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

கங்குலி ஒரு நல்ல ஒருநாள் வீரராக இருந்ததனால் மட்டுமே அணித்தலைவரானார். அணித்தலைவராக இருந்ததனால் மட்டுமே அவர் டெஸ்ட் அணியில் சராசரியாக ஆடிய போதும் எளிதில் தொடர்ந்து இடம் பெற்றார். திராவிடும் அதே போன்று விக்கெட் கீப்பிங், உடற்தகுதி, ஓட்டம், எண் 6இல் வந்து அதிரடியாக ஆடும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டதனாலே ஒருநாள் அணியில் நிலைத்தார். அதே காரணத்தினால் தான் அவர் அணித்தலைராகவும் ஆனார். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ஒரு பத்தாண்டுகள் ஒருநாள் வடிவத்தின் ஆதிக்க காலமாக இருந்தது. அப்போது ஒருவர் டெஸ்டு மட்டுமே ஆடுவேன் என்பது நாவல் ஆதிக்கம் செலுத்திய இருபதாம் நூற்றாண்டில் பிடிவாதமாக கவிஞனாக மட்டுமே இருப்பேன் என்பதைப் போன்றது. பிடிவாதம் என்பது காலக்கடிகாரத்தின் முள்ளைப் பிடித்து தொங்குவதைப் போன்றது. லஷ்மணுக்கு எல்லா வடிவங்களிலும் சோபிக்கும் அபரித திறமை இருந்தது. அதே வேளை டெஸ்டை மட்டுமே தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவருக்கு உண்டு தான். ஆனால் ஒருநாள் வடிவத்தில் நிலைப்படாததால் அவருக்கு நடைமுறை இழப்புகள் பல ஏற்பட்டன. அவர் ஒரு நல்ல அணித்தலைவராக வரும் திறமை கொண்டவர் என்று பல முன்னாள் வீரரகள் நம்பினர். குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்கள் லஷ்மணின் கீழ் மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆடினர். அவர் பொறுமையான கூர்மையான தலைவராக உள்ளூர் ஆட்டங்களில் விளங்கினார். ஆனால் ரவி சாஸ்திரி, அஜய் ஜடேஜா போன்று அவரது தலைமைப் பண்புகளும் இந்திய அணிக்கு பயன்படாமல் போயின. சமீபமாக ஒரு பேட்டியில் ஐபிஎல் அனுபவம் பற்றி பேசும் போது லஷ்மண் “நான் ஒரு சிறுவனாக கிரிக்கெட் பயின்ற போது வெளியேறாமல் நாட்கணக்கில் ஆடுதளத்தில் தங்கி ஆடுவதே லட்சியமாக இருந்தது. அப்படி பயின்று வந்த பின் இப்போது பார்ப்பது போல இரண்டு ஓவர்கள் மட்டையை வீசி சிக்சர்கள் அடித்து இருபது முப்பதுகள் அடித்து அணிக்கு வெற்றிகரமாக பங்காற்றுவதே ஏற்றது எனும் T20 பாணி எனக்கு விநோதமாக இருக்கிறது” என்றார். காலத்துக்கு ஏற்றவாறு தகவமைவது என்பது சீரழிவது அல்ல; மாறாமல் இருப்பதில் தூய்மை எதுவும் இல்லை. ஓடுகிற நீர் தான் உண்மையில் தூய்மையாக இருக்கும்.

லஷ்மணின் இடத்தில் இனி யார் என்கிற கேள்வி இனி வரும் மாதங்களில் ஊடகங்களில் ஆவேசமாக ஆர்வமாக விவாதிக்கப்படும். ஒருவிதத்தில் லஷ்மணின் தற்போதைய இந்த ஓய்வெடுக்கும் நெருக்கடி, மாற்றுவீரருக்கான பரபரப்பான தேடல், காத்திருப்பு எல்லாம் செயற்கையான ஊடக விளையாட்டாக கூட இருக்கலாம். அவர் இடத்தில் வருகிற இளைஞர்கள் மக்களின் எதிர்பார்ப்பின் ஏமாற்றத்துக்கும், விமர்சனத்தின் நெருக்கடிக்கும் எளிதில் ஆளாவார்கள். டெஸ்ட் ஆட்டங்களைப் பற்றி மக்களுக்கு சின்ன அளவிலான சுவாரஸ்யத்தை இனி ஏற்படுத்துவதற்கு முடிந்து போன ஒரு யுகம் பற்றின ஏக்கத்தை கிளர்த்துவதை தவிர மீடியாவுக்கு வேறு வழியில்லை. டைனசர்களின் அழிவு போல், தமிழ் சிறுபத்திரிகை தொன்ம வரவலாற்றில் சி.சு.செல்லப்பா, க.நா.சு தியாகங்கள் போல் லஷ்மணும் திராவிடும் இனி அவ்வாறு ஒரு கற்பனாவாத கிளர்ச்சிக்குத் தான் பயன்படப் போகிறார்கள்.

உலகத்தர வீரர்களும், சாதனையாளர்களும் எல்லா ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும் தேசங்களில் தோன்றுவதில்லை. சச்சின், திராவிட், லஷ்மண்களை இனி எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு மரபார்ந்த புனிதமும் தூய்மையும் துறவி மனப்பான்மையும் தேவையுள்ளது. இன்று அவை நிச்சயம் காலாவதியாக விட்டன. எப்படி இன்னொரு “போரும் வாழ்வும்” யாரும் எழுதப்பட போவதில்லையோ அதே போல் டெஸ்ட் ஆட்டமும் கடந்தகால எச்சமாக மாறி விட்டது; சச்சின், திராவிட், வி.வி.எஸ்களின் கிளாசிக்கல் காலகட்டம் ஒரு முடிவுக்கு வருகிறது. ஆனால் எப்படி “போரும் வாழ்வுக்கு” ஒரு முக்கியத்தும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்குமோ அது போல் டெஸ்ட் கிரிக்கெட்டும் உயர்கலாச்சார குறியீடாக இருந்து கொண்டு தான் இருக்கும். நாற்பதுகளைத் தொடும் இம்மூவரும் நம் காலகட்டத்தின் பிரதிநிதிகள் அல்ல. அர்த்தபூர்வமான, தொடர்ச்சியான எந்த தேடல்களுக்கும் இடமில்லாத இந்த தலைமுறை மனிதர்களுக்கு இவர்களோடு பயணிக்கும் தகுதி இல்லை என்றே கூறவேண்டும். நம் தகுதிக்கு நமக்கு ரெய்னாக்களும் பத்ரிநாத்துகளும் தான் கிடைப்பார்கள். இவர்கள் கீழானவர்கள் என்றல்ல பொருள்., மாறாக நமது ஆழமின்மைக்கு மிகத் தோதானவர்கள் இவர்கள் மட்டுமே.

(2012 ஆகஸ்டு மாத உயிர்மையில் வெளியானது)
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates