Tuesday 26 November 2013

செக்ஸ் கிளப், பெற்றோர் மற்றும் ஆருஷி




ஆருஷி தல்வாரை யார் கொன்றார், எதற்கு கொன்றார் என்பதை விட தொடர்ந்து இக்குற்றத்தில் இருந்து தப்பிக்க ஆருஷியின் பெற்றோரான ஒரு மேல் மத்தியவர்க்க தம்பதியினரால் இத்தனைக் காலம் எப்படி போலீஸ், மீடியாவை விலைக்கு வாங்கி கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்பது இன்னும் வியப்பூட்டும் கேள்வி.

2008 மே 15ஆம் நாள் ஆருஷி தன் வீட்டு வேலைக்காரனுடன் சேர்த்து கழுத்தறுத்து கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பின் அவரது உடல் அலம்பப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டு படுக்கையறையில் கிடத்தப்பட்டது. வேலைக்காரர் ஹேம்ராஜின் உடல் ஒரு நாள் அழுகுகிற வரை மொட்டைமாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இரு கொலைகளும் நடக்கும் போது ஆருஷியின் பெற்றோர் தாம் அருகில் உள்ள படுக்கை அறையில் தாம் தூங்கிக் கொண்டிருந்ததாய் கூறினர். பூட்டின ஏஸி அறைக்குள் இருந்ததால் தமக்கு ஏதும் கேட்கவில்லை என அவர்கள் கோருகிறார்கள். ஆனால் இது நம்பும்படியாய் இல்லை. அப்படியே நம்பினாலும் வீட்டில் எப்பகுதியையும் உடைக்காமல் கொலையாளி எப்படி உள்ளே நுழைந்திருக்க முடியும்? கொன்ற பின் தல்வாரின் மறைவான இடத்தில் உள்ள மினிபாரில் இருந்து விஸ்கி பாட்டிலை எடுத்து கொலையாளி குடிக்கிறார். குருதிக் கறை அதில் உள்ளது. மேலும் கழுத்தில் இருந்து மூளைக்கு ஆக்ஸிஷன் செல்லும் நரம்பை மிக சரியாய் அறுக்க ஒரு மருத்துவரால் மட்டுமே முடியும். கொலையை ஒன்று அப்பாவான ராஜேஷ் தல்வார் செய்திருக்க வேண்டும். அல்லது செய்தவரை அவர் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். ஐந்து வருடங்களுக்கு மேலாக அவர் வேறு யார் பெயரையும் வெளியிடாத நிலையில் அவர் மீதே குற்ற வளையம் விழுந்தாக வேண்டும்.
மேலும் கொலை நடந்த இடத்தை சுத்தமாய் அலம்பி சாட்சியங்களை அழித்தது, சம்மந்தமில்லாமல் வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது ஆரம்பத்திலேயே பழி சுமத்தியது, இறந்து மாடியில் கிடக்கும் அவரைப் பிடிக்க போலிசாருக்கு 25,000 லஞ்சம் தர முயன்றது, தொடர்ந்து உ.பி போலீஸ் இவ்வழக்கில் மெத்தனமாகவே இருந்தது, பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்களை தொடர்பு கொண்டு அறிக்கையை மாற்ற முயன்றது, காணாமல் போன ஆருஷியின் நுண்பேசி எண்ணில் சற்று நேரம் மட்டும் யாரோ பஞ்சாபில் இருந்து பேசியது (தல்வார்கள் பஞ்சாபியர்) என பெற்றோர் மீது சந்தேகம் வலுக்க பல காரணங்கள். முக்கியமான வேறு இரு காரணங்கள் உண்டு.
ஹேம்ராஜ் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தன் மனைவியிடம் ராஜேஷ் தல்வாரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறினார். ராஜேஷின் ரகசியங்கள் சில தனக்கு தெரியும் என்பதால் அவர் தன்னை கொன்று விடுவதாய் மிரட்டி இருப்பதாக கூறினார். என்ன ரகசியம் என்பதற்கு பிறகு வருவோம். ஹேம்ராஜின் பல மாத சம்பளத்தை ராஜேஷ் வைத்திருந்தார். ஹேம்ராஜ் இறந்த பிறகு அத்தொகையை எதிர்பார்த்து அவரது மனைவி இவ்விசயத்தை வெளியே விடாமல் மௌனம் காத்தார். ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் சம்பளத் தொகையை ராஜேஷ் தராமல் இருக்க ஹேம்ராஜின் மனைவி தன் வக்கீல் மூலம் இவ்விசயத்தை வெளிக்கொணர்ந்தார். உண்மையை நிலைநாட்டுவது எளியவர்களுக்கு இந்நாட்டில் எவ்வளவு சிரமம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஹேம்ராஜை ராஜேஷ் முன்னர் துரத்தி தாக்கி இருக்கிறார். இரவு அவர் கொல்லப்படும் முன் ஹேம்ராஜ் ராஜேஷ் குடும்பத்துடன் 10 மணிக்கு இருந்ததாய் சாட்சியம் உள்ளது.
இந்த ரகசியம் குறித்த தகவலை அளித்தது ஆருஷியின் உற்ற நண்பனான அன்மோல். போலீஸ் விசாரணையில் அவர் ஆருஷி தன் அப்பாவுக்கு அனிதா துரானி எனும் மற்றொரு பெண் மருத்துவருடன் கள்ள உறவு இருப்பதாக வருந்தியதாக கூறினார். சமீபமாக ஒரு பெண் தன் கணவர் மற்றும் மாமனாருக்கு எதிராக அவர்கள் தன்னை மனைவி பகிர்தலுக்கு (wife swapping) கட்டாயப்படுத்துவதாக காவல் துறையிடம் புகார் செய்தார். இதை விசாரித்த போலீசார் மனைவி பகிர்தல் கிளப்பில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என ஒரு பட்டியல் தயாரித்த போது எதேச்சையாக தல்வார் தம்பதியினரும் உட்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த கேங்கின் தலைவர் ஒரு பெரும் தொழிலதிபர். அவர் தற்போது சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். கொலை நடந்ததற்கு முந்தின தினம் ஹேம்ராஜ் இந்த தொழிலதிபருக்கு துபாய்க்கு போன் பண்ணி இருக்கிறான். ஏன் என தெரியாது. ஆனால் இந்த மனைவி பகிர்தல் குழுவின் உள்விவரங்கள் அறிந்தவர் ஹேம்ராஜ் என ஊகிக்க முடிகிறது. பிரேத பரிசோதனையில் ஆருஷி கொலைக்கு முன்னர் உடலுறவு கொண்டிருப்பதாய் புலனாகி உள்ளது. என்ன நடந்திருக்கும் என நான் இதற்கு மேல் கூறத் தேவையில்லை. நீங்களே புள்ளிகளை இணைத்துக் கொள்ளலாம்.
பெற்ற தகப்பனே கொல்வானா? ஷோபா டே தனது பதிவு ஒன்றில் ஆருஷி இந்த தம்பதியினரின் வளர்ப்பு மகள் என கூறினார். இது உண்மையா என தெரியவில்லை. ஆனால் உண்மையெனில் குழப்பங்கள் மேலும் தெளிவாகின்றன.
ராஜேஷ் தல்வார் பட்டென கோபப்பட்டு வன்முறையில் ஈடுபடக் கூடியவர் என ஹேம்ராஜ் தன் மனைவியிடம் கூறி உள்ளான். இந்த தகவல்களை எல்லாம் இணைத்து தான் சி.பி.ஐ வழக்காடு மன்றம் தல்வார் தம்பதியினர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.
வெறும் சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்து அவர்களை குற்றவாளி எனலாமா? பெரும்பாலான கொலை வழக்குகளில் அப்படித் தான் இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கூடத் தான். கொலையை யாரும் சாட்சியத்தோடு செய்வதில்லை. தெளிவாக சாட்சியத்தை அழித்து கொலைக்கருவியையும் மறைத்து விட்டால் நேரடியாக நிரூபிப்பது மிக மிக சிரமம். ஆதலால் சில சந்தர்பங்களில் சூழ்நிலையை தான் சாட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது.
சரி, அது நீதிமன்றத்தின் தலைவலி. ஒரு மருத்துவ தம்பதியினரால் எப்படி காவல் துறை, சி.பி.ஐ வரை கடந்த ஐந்து வருடங்களில் தாக்கம் செலுத்த முடிந்தது? தெஹல்கா, NDTV போன்ற மீடியாக்களை கையில் வைத்து தனக்கு சாதகமாய் பேச வைக்க எப்படி முடிந்தது? NDTVயில் இதற்காக தனி நேரம் ஒதுக்கி தல்வார்களின் சொந்தக்காரர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறார்கள். ஒரு நிகழ்ச்சி முழுக்க தல்வார்களின் ஆதரவு ஆட்களை மட்டுமே பேச விடுகிறார்கள். பேட்டி எடுக்கும் ரிப்போர்ட்டர் வேறு அழுகிறார். ஒரு 13 வயதுப் பெண்ணை கொன்று விட்டார்களே என்றா? இல்லை. பாவம் தல்வார் தம்பதியினருக்கு எதிராக தீர்ப்பு வந்து விட்டதே என்று. அரசியல் தலைவர்கள் ஜெயிலுக்கு போன போது கூட மீடியா இப்படி கண்ணீர் வடித்ததில்லை. ஏன் இந்த நாடகம்?
தல்வார்களின் மனைவி பகிர்வு கிளப்பில் தெஹல்கா, பிற மீடியா ஆட்கள் மற்றும் பல பெரும்புள்ளிகள் அடக்கம் என்கிறார்கள். இந்த கிளப் மிக மிக ரகசியமானது. தல்வாரை காப்பாற்றுவது தம் பாதுகாப்புக்கும் முக்கியம் என கிளப்பின் செல்வாக்கான நபர்கள் அறிவார்கள். இந்தியாவில் அதிகாரம் பணத்தில் மட்டுமல்ல செக்ஸிலும் தாம் என அறிந்தவர்களில் கார்ப்பரேட் சாமியார்களுக்கு அடுத்தபடியாய் தல்வார்களும் பிரதானமானவர்கள். செக்ஸ் ரகசியங்கள் என்றுமே தலைகாக்கும்!
Read More

Sunday 24 November 2013

மோடியும் காதலியும்





அன்பும் கருணையும் பற்றி சதா பேசுகிறவர்கள் மற்றவர்களை வதைப்பதில் அதீத விருப்பம் கொண்டிருப்பார்கள். பிரம்மச்சாரிகளும் இப்படித் தான் – மனம் முழுக்க காமத்தால் நிரம்பி இருக்கும். சட்டசபையில் போர்னோ பார்ப்பதாகட்டும், மனநலமில்லாத பெண்ணை கற்பழிப்பதாகட்டும் காவிப்படையினர் நிபுணர்களாக இருக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் அப்பாவி சிறுபான்மையினரை படுகொலை செய்யத் தூண்டிய, அவ்வன்முறையாளர்களை இந்நாள் வரை பாதுகாத்து வரும் மோடி ஒரு குரூரமான கொலையாளி என்கிற சித்திரமே நமக்குள் இருக்கிறது. இன்னொரு புறம் அவர் அத்வானியை வெளியேற்றிய விதம் அவர் எந்தளவுக்கு தயக்கமற்ற அதிகார வெறியர் என்பதையும் காட்டியது. இதோடெல்லாம் ஒப்பிடுகையில் பங்களூர் இளம்பெண்ணை அவர் போலீஸைக் கொண்டு பின் தொடர்ந்தது, தொலைபேசியை ஒட்டுக் கேட்டது போன்றவை சிறு குற்றங்கள் தாம்.

இவ்விசயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா ஒரு விநோதமான தகவல் கூறுகிறார். இப்பெண் தன்னை மோடிக்கு அறிமுகப்படுத்தி விட்டதற்காக “நீங்கள் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தீர்கள். என்றும் கடன்பட்டிருக்கிறேன்” என நன்றி கூறுகிறார். பிரதீப் சர்மா மீது மோடி பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளியதும் அப்பெண்ணும் குடும்பத்தினரும் அவரை பார்க்க செல்கிறார்கள். அப்பெண் ஜெயிலில் பிரதீப் சர்மாவுடன் பேசுகிறாள். அந்தளவுக்கு நன்றி உணர்வு ஏன்? மோடி எனும் ஒரு வயதான, சகஜமான செக்ஸ் உறவு சாத்தியப்படாத ஒருவரை காதலிக்க வாய்ப்பு உருவாக்கி கொடுத்தமைக்கா? ஏன் இளம் பெண்கள் இது போல் அதிகாரமிக்க ஆனால் ஆண்மைக்குறைவான முதியவர்களால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது நாம் விரிவாக அலச வேண்டிய ஒரு நுணுக்கமான விவகாரம்.
ஒரு கோணத்தில், மோடியைப் போன்று இரும்பிதயம் கொண்ட மனிதருக்கு இப்படியான பலவீனங்கள் இருப்பது அறிய ஆசுவாசமாகத் தான் இருக்கிறது. இளம் வயதிலேயே அவர் அழகான பெண்கள் மீது ஆர்வம் செலுத்தி இருந்தால் குஜராத் கலவரம் இவ்வளவு கொடூரமாக நடந்திருக்காது. பணமும், அதிகாரமும் சம்பாதிக்கும் வெறி பொதுவாக கட்டுப்படுத்தப்பட்ட பாலியலலில் இருந்து தான் வருகிறது. இன்னொரு பக்கம், ஆண்களின் காம வறட்சிக்கு அதிகாரத்தையும் பணத்தையும் பிரதான அளவுகோலாய் கணிசமான பெண்கள் கருதுவதும் ஒரு காரணம். ஒரு அர்த்தத்தில் சர்வாதிகாரிகளை இது போன்ற இளம்பெண்கள் தாம் தோற்றுவிக்கிறார்கள். அவர்களுக்கு வயதான பின் மட்டும் அருகாமையில் சென்று கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.
இந்த சர்ச்சை மோடியின் வீழ்ச்சிக்கு வழிகோலுமா? வாய்ப்பு குறைவு தான். அத்வானி, வாஜ்பாய் போல் மோடிக்கு ஒரு கனிவான, நாகரிகமான, ஒழுக்கவாத பிம்பம் இல்லை. அவர் ஒரு மேம்பட்ட காடுவெட்டி குரு. தந்திரங்களில் கைதேர்ந்த யாரையும் தள்ளி விட்டு முன்னேற தயங்காத அரசியல்வாதி. வாஜ்பாய்க்கு நேர் எதிர்முகம். குஜராத் கலவரத்தின் போது மோடியை தண்டிக்கவே வாஜ்பாய் விரும்பினார் என்பது ஒரு எளிய தகவல் அல்ல. மோடி ஒரு விதத்தில் அறத்திலும், பொறுமையிலும் நம்பிக்கையற்ற, அதிகாரம், பணம் அடைவதில் அவசரம் மிக்க, சாதி மத வெறி மிக்க இன்றைய இளைய தலைமுறையின் சரியான பிரதிநிதி எனலாம். தான் விரும்புகிற பெண் மீது சந்தேகம் வந்தால் இன்றைய தலைமுறை ஆண் இப்படியே தான் நடந்து கொள்வான். மோடிக்கு கட்டற்ற அதிகாரமும் பணமும் இருப்பதால் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரை கூட இந்த வேலைக்கு பணிக்க முடிகிறது. அதனால் தான் இன்றைய இளைஞன் இதை ஒரு பெரிய குற்றமாக, கறையாக, இழுக்காக எண்ண மாட்டான். மோடியின் அரசியல் வாழ்க்கையில் இது கடந்து போகும். ஆனால் குஜராத் வன்முறை நிற்கும். ஏனென்றால் அவர் ஆட்சிக்கு வந்த பின் மேலும் பல வன்முறைகள் தேசமெங்கும் கட்டவிழ்த்து விடப்படும். அப்படித் தான் பா.ஜ.க தன்னை வலுப்படுத்தி வந்துள்ளது.
தருண் தேஜ்பால் வழக்குக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. தேஜ்பால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கீழே வேலை பார்க்கும் பெண்ணை பால்யல் ஒடுக்குமுறை செய்ய முயல்கிறார். இந்த கொடுமை நம் நாட்டில் உள்ள பல பெண் ஊழியர்களுக்கு நடந்து வருவது. தருணுக்கு வலுவான தண்டனை அளிப்பது நம் பெண்களுக்கு பொதுவாக இப்படியான வழக்குகளில் முனைந்து சட்ட உதவியை நாட தன்னம்பிக்கை அளிக்கும். மோடியின் குற்றம் கணவன் மனைவி சச்சரவு போல ஒருவித குடும்ப குற்றம் எனலாம். தன்னை நாடி வந்த, பாலுறவில் ஈடுபட தயங்காத ஒரு பெண் மீதான சந்தேகத்தால் ஒருவர் செய்கிற குற்றம் அது. கணவன் மனைவியின் செல்போனை ஒட்டுக்கேட்பது போன்ற குற்றம் இது.
பிரதீப் சர்மா அதிகார வர்க்கத்தை சேர்ந்த மற்றொரு ஆள். அவரால் இதில் இருந்து தப்பிக்க தெரியும். அதற்கான தொடர்புகளும், அறிவும் அவருக்கு உண்டு. ஒரு அடிமட்ட நபர் மோடியால் நசுக்கப்பட்டால் நாம் அவரை ஆதரிக்கலாம். ஆனால் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆதரவளிக்க ஏற்கனவே ஆயிரம் கரங்கள் மீடியாவில் இருந்து நீளுகின்றன. மேலும் அவர் இந்த விவாகாரத்தை வெளியே விட்டதே தன்னை பாதுகாக்கத் தான். அவ்வளவு நல்லவர் என்றால் ஏன் இத்தனை நாள் தேமேவென இருந்தார்? நாளை ஒரு சமரசத்திற்காக இதையெல்லாம் மீண்டும் மறைத்து மௌனமாக மாட்டார் என்று என்ன நிச்சயம்?
அரசியல் தலைவர்களின் காதலிகள் அரசியலுக்கு வருவது எவ்வளவு ஆபத்தானது என அறிவோம். பொதுவாக அதிகார வெறியும், வன்முறையும் மிக்கவர்களாக அத்தகைய பெண் தலைவர்கள் இருப்பார்கள். எம்.ஜி.ஆர் சபலப்படாமல் இருந்திருந்தால் தமிழகம் நிச்சயம் பிழைத்திருக்கும். அவ்விதத்தில் நாம் இந்த பெங்களூர் பெண்ணுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் சில வருடங்கள் தாக்குப் பிடித்து பா.ஜ.க எம்.பியாக அவர் வளர்ந்திருந்தால் இன்னொரு தலைவலி நமக்கு ஆரம்பித்திருக்கும். அழகிகள் அரசியல் தலைவர்களின் கடைக்கண்ணில் மட்டுமே இருப்பது தேசத்திற்கு நல்லது.  
Read More

Tuesday 19 November 2013

ஒரு மலைப்பிரசங்கத்துக்கான குறிப்புகள் -- நின் ஆண்டிரூவ்ஸ்


  1. அல்குல்கள் கடவுள்கள் அல்ல. அவை படைக்கப்பட்டவை.
  2.   கடவுளைப் போலல்லாது அவை நித்தியமானவை அல்ல.
  3.  கண்ணியமாய், கம்பீரமாய், புத்திசாலித்தனமாய் உள்ள அவற்றை நாம் எப்படியும் கவனத்தில் கொள்ளத் தான் வேண்டும்.
  4.    எல்லா ஆன்மீக தோற்றங்களையும் போல அல்குல்களும் ஒரு நாளில் எப்போது வேண்டுமெனிலும் மனிதக் கண்ணால் காணக் கூடியவை அல்ல. 
  5.   அல்குல்கள் கண்ணுக்கு புலப்படுபவை, புலப்படாதவை, புனிதமானவை, பங்கமானவை என இரண்டையும் பிரநுத்துவப்படுத்துகின்றன.
  6.   அவை ஒரே நேரத்தில் எங்கும் தோன்றுவதில்லை, எங்கும் தோன்றுகின்றன. அந்தரங்கமானவையாகவும் பொதுவானவையாகவும், மனிதனாகவும் இறையாகவும் உள்ளன.
  7.  ஆதாம் மற்று ஏவாளின் மாந்திரிகக் கதையில் ஆண்டவர் தெய்வீக அல்குலின் நுழைவாயிலில் வாளேந்திய தேவன் ஒருவனை நிறுத்தி திரும்பி வருகிற பத்தாம்பசலிகளை தடுக்கும்படி செய்தார்.
  8.  தரிசனங்கள் அவற்றை “ஒரு மேகத்தால் மூடப்பட்டு தலைக்கு மேல் வானவில்லுடன் உள்ளதாய்” விவரிக்கின்றன.
  9.  பல சமயங்களில் ஒரு அல்குல் ஒரு நிஜப்பெண்ணின் உருவை எடுப்பதுண்டு; அப்போது அதற்கு சிலவேளை மனித ஆன்மா உள்ளதாகவும் தவறாக நினைக்கப்பட்டுள்ளது.
  10. ஒருவர் அந்நியர்களை வரவேற்க மறக்கக் கூடாது, ஏனெனில் ஒரு அல்குலை அவர் அறியாமலே உபசரிக்க நேரிடலாம்.
  11. எப்போது நினைவில் கொள்ளுங்கள்: ஒருவர் ஒருக்காலும் அல்குல்களை வணங்குதல் கூடாது. அல்லது பிற பொன்னிற பசுக்கன்றுகளையும்.
  12. அல்லது ஒருவர் தனது ஆன்மாவை வழிநடத்தும் வண்ணம் ஒரு அல்குலை பூமிக்கு அனுப்பும் படி வேண்டுதலோ கூடாது.
  13. ஒரு அல்குல் தன்னிச்சைப்படி வரவேண்டும். ஏனெனில் ஒரு அல்குலின் மார்க்கம் அதுவே, ஆதி அந்தத்தினுடையதும் அதுவே.
Read More

Thursday 14 November 2013

ரஜினி எனும் தொன்மமும் இந்திய குடும்பமும்




ஒவ்வொரு சினிமா நட்சத்திரமும் ஒரு தொன்மம் எனும் போது ரஜினி தான் நம் சமூகத்தின் ஆக சுவாரஸ்யமான தொன்மம். ஒரு புனைவு. அவரது எல்லா சிறந்த படங்கள் மெல்ல மெல்ல கூடுதலாக பல வர்ணங்களை இந்த புனைவில் சேர்த்து விட்டு செல்லுகின்றன என நமக்குத் தெரியும். அவரது ஆன்மீகம், விட்டேத்தி மனோபாவம், வாழ்வில் ஒட்டாமை, பணிவு, எளிமை, முதிர்ச்சி இவையும் சேர்த்து தான். இத்தொன்மத்தில் நிஜத்தில் நாம் அறிந்த ரஜினியும் சினிமா ரஜினியும் பிரித்தறிய முடியாதபடி ஒரு இலையின் இரு பக்கங்களாகி வெகுநாட்களாகி விட்டன. 

இது போல் மேலும் சில நாயகர்களுக்கும் தொன்மங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர் பரோபகாரியாக, கண்ணியமானவராக, வீரராக, மென்மையான, நேர்மையானவராக தன்னைக் குறித்து ஒரு சித்திரத்தை உருவாக்கினார். ஆனால் அவர் ஒரு அரசியல் இயக்கத்தின் பகுதியாகவும் இருந்தார். திராவிட இயக்கம் முன்னெடுக்கவில்லை என்றால் எம்.ஜி.ஆர் இவ்வளவு காவியத் தன்மை பெற்ற நாயகனாகியிருக்க மாட்டார். ஆனாலும் ரஜினியின் தொன்மம் முற்றிலும் வேறானது. அவரிடம் உள்ள விளையாட்டுத் தனம் நாம் மலையாளத்தில் மோகன்லாலின் பாத்திரங்களிலும் காண்கிறோம். ஆனால் ரஜினியிடம் கூடுதலாக கள்ளங்கபடமின்மையும், அப்பாவித்தனமும் இருக்கும். தொண்ணூறுகளில் இருந்து ரஜினியின் படங்களில் ஒரு தத்துவார்த்த சரடை தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பயன்படுத்தி வந்துள்ளதை காணலாம். சமகாலத்தில் அவரை போல் வேறெந்த நாயகனுக்கும் இவ்வளவு தொடர்ச்சியுடன் ஒரு அடிப்படை தொன்மம் பல கதைகளிலும் மாறாமல் மீள மீள பேசப்பட்டு வந்ததில்லை. ரஜினிக்கு பிறகு வந்த பல நடிகர்களும் அவரைப் போல் ஒரு தொன்மத்தை உருவாக்க முயன்றனர். அவருடைய ஸ்டைலை பல்வேறு அளவுகளில் வரித்துக் கொள்ள பார்த்தனர். எதுவுமே வெற்றி பெறவில்லை.
ரஜினியின் தொன்மம் வெற்றி பெற்றதற்கும் நம் சமூக மனதுக்கும் ஒரு ஆழமான தொடர்பு உள்ளது. நாம் பொதுவாக எப்படி யோசிக்கிறோம் என்பதை இத்தொன்மத்தை அறிவதன் வழி உணரலாம். தொன்மப்படி ரஜினி முதலில் ஒரு அதிமனிதன். ஆனால் இதன் இன்னொரு அடுக்கில் அவர் பிறரை விட மிக பலவீனமானவராகவும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படவும், துன்புறுத்தப்படவும், அழிக்கப்படவும் தன்னை அனுமதிக்கிறவரகவும் வருகிறார். இரண்டு அடுக்குகளும் படம் முழுக்க சேர்ந்தே அவர் பாத்திரத்தின் பண்புகளாக இருக்குகின்றன. தொடர்ந்து தோற்கடிக்கப்படும் போது தான் அவர் வெற்றி அடையும் போது கூடுதல் தாக்கம் இருக்கும் என நீங்கள் வாதிடலாம். கைத்தட்டும் ஆரவாரமும் பொங்கும் என கூறலாம். ஆனால் கிளைமேக்ஸில் ரஜினி ஒரு பிரம்மாண்டமான எதிரியை வீழ்த்திய பின், அல்லது மாய-எதார்த்த பழங்கதைகளின் வருவது போன்ற தடைகளை கடந்த பின்னரும் அவர் முழுமையான வெற்றி பெறுவதில்லை. தொடர்ந்து படம் முழுக்க சிறுக சிறுக அவர் அடைந்த தோல்விகளும், இழப்புகளும், பெற்ற காயங்களும் இந்த கடைசி வெற்றியை சமனப்படுத்துவதில்லை. நுணுக்கமாக கவனித்தால் அவரது பெரும் வெற்றி பெற்ற படங்களில் முடிவில் அவர் ஒரு கசப்புடனும், வெறுப்புடனும் தான் வெற்றியை பார்த்து புன்னகைப்பார். அல்லது குடும்பம், நட்பு போன்ற ஏதாவது உறவுகளின் நீரோட்டத்தில் ஒரு குருதி படிந்த வாளை கழுவுவது போல் தன்னை கரைத்துக் கொள்வார். கமல், விஜய், விக்ரம், விஜயகாந்த், சரத்குமார் என யாரிடமும் இந்த கசப்பான, கிட்டத்தட்ட தோல்விக்கு நிகரான வெற்றியை காண முடியாது. மேலும் ரஜினியின் படங்களில் வில்லன் விழும் போது அது ரஜினியின் சாகசமாக, சாமர்த்தியமாக நாம் காண்பதில்லை. தீமையின் அழிவாகவே தோன்றுகிறது. ஏனென்றால் தீமை ஒரு பிரம்மாண்ட மரத்தை போலத் தான் விழும். அப்போது அதன் அழிவுடன் சேர்த்து குருவிகளும், அதன் முட்டைகளும், சிறு சிறு உயிரனங்களும், மனிதர்களும் தான் சாக வேண்டும். மாபெரும் தீமைகள் முடிவுக்கு வரும் போது நன்மையையும் பெருமளவுக்கு காவு வாங்கியிருக்கும். மகாபாரதப் போர் முடியும் போது வரும் கசப்பு இது எனக் கூறுவது மிகையாக இருக்கும் என்பதால் அதில் ஒரு கால்வாசி எனலாம். ஆனால் ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள நாயக தொன்மங்களிடையே உள்ள முக்கிய வித்தியாசம் இது.
நமக்கு ஏன் கமலை விட ரஜினியை பிடித்திருக்கிறது? ஏனென்றால் இந்திய சமூகத்தில் தினம் தினம் தோல்விகளையும் அவமானங்களையும் பல்வேறு நிலைகளில் சந்திக்கிறவர்கள் தாம் அதிகம். சராசரி இந்தியனை ஒரு மிதியடி எனலாம். தினம் தினம் அவனை குடும்பத்தில், அண்டை வீடுகளில், சொந்தங்களில், வேலையிடத்தில், சமூகத்தில் யாராவது மிதித்து தேய்த்தபடியே இருக்கிறார்கள். மிதிக்கப்பட்டு மிதிக்கப்பட்டு அவன் தன் தனித்தன்மையை சுரணையை கிட்டத்தட்ட இழந்து விட்டான். அவன் எதிர்ப்பது எப்படி என யோசிக்க மாட்டான். கசப்புகளையும், அவமதிப்புகளையும், பிரச்சனைகளையும் சாலையில் கிடக்கும் ஒரு நாயின் பிணத்தை போல், ஈ மொய்க்கும் ஒரு பைத்தியக்காரனின் உடலைப் போல், தேங்கி நிற்கும் சாக்கடை வெள்ளத்தை போல் கடந்து போவதெப்படி எனத் தான் யோசிப்பான். இந்தியனுக்கு வாழ்க்கை ஒரு சவால் அல்ல. பனிமூட்டம். அதன் வழி அதைக் கடந்து போவது தான் அவன் உத்தேசம், விருப்பம், பாணி. கமல் வாழ்க்கையின் பிரச்சனைகளை கேள்வித்தாள் சவால்களாக பார்க்கும் ஒரு சமூகத் தட்டின் பிரதிநிதி. இந்த மேல்தட்டு நுண்ணுணர்வு என்றுமே இந்திய மனதுக்கு ஏற்பானது அல்ல.
ரஜினியின் தொன்மத்தில் உள்ள இன்னொரு முரண்பாடு குடும்பம். அவரது வெற்றிப்படங்களில் குடும்பத்தோடு தீவிரமாக ஒட்டுறவாடுபவராகத் தான் வருகிறார். எல்லா பெரிய பிரச்சனைகளும் குடும்பத்தில் இருந்து தான் ஆரம்பிக்கின்றன. ஆனால் குடும்ப உறவுகளின் அநிச்சயம், வஞ்சகம், மேலோட்ட தன்மை ஆகியவை பற்றி சதா வருந்துகிறவராகவும் வருகிறார். வில்லனை விட ரஜினியை அதிகம் நோகடிப்பது, துன்புறுத்துவது, மார்க் ஆண்டனி பாணி கத்திகளை அவர் மீது சொருகுவது குடும்ப உறவுகளாகத் தான் இருக்கிறார்கள். வீட்டுக்குக் கோபத்தை வெளியே காட்டுபவர் போலத் தான் ரஜினியும் ஏதோ ஒரு வில்லனை இறுதியில் துவைத்தெடுக்கிறார். இதுவும் நம் கதை தான். உலகத்தை பற்றியும் சமூகத்தை பற்றியும் சதா கவலைப்படுகிறவர்கள் நாம். ஆனால் வாசற்படியை தாண்டிய எந்த பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு தேடுவதோ அக்கறை காட்டுவதில்லை. இந்த முரண்பாடு நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியது. இவ்வளவு அரசியல் கட்டுரைகள், வாதங்கள், டி.வி விவாதங்கள், அலுவலக, டீக்கடை, இணைய அரட்டைகள். சினிமாவுக்கு அடுத்தபடியாய் நாம் அதிகம் ஈடுபடுவது அரசியல் அரட்டையில் தான். ஆனால் நம்மை விட படிப்பறிவும் முன்னேற்றமும் குறைந்த நாடுகளில் கூட அடிக்கடி சமூகப் போராட்டங்கள் வெடிக்கின்றன. ஆனால் இந்தியர்கள் ஒரு பொதுப்பிரச்சனைக்காக துருக்கியர், வங்கதேசத்தினர் போல் போராடியதாய் வரலாறு இல்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் கூட சாமியார் என பொதுமக்களிடையே நம்பப்பட்ட ஒருவரால், சாதி அடுக்குநிலையை அசைக்க விரும்பாத ஒருவரால் பொது எதிரி ஒருவர் மீது எல்லா கோபங்களையும் குவித்து தான் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வெளியே ஆயிரம் பேர் செத்தாலும் நாலு சுவர்களுக்கும் நாமும் குடும்பமும் நம் சாதியினரும் மட்டும் பத்திரமாக இருந்தால் போதும் என நினைப்பதே இந்திய மனநிலை. இந்திய என்பது தனிமனிதர்கள் வாழும் இடம் அல்ல. சிறுக சிறுக சிதறிய கோடி குடும்பங்கள் வாழும் இடம். இந்த குடும்பங்களை வேறு அரசியல் குடும்பங்கள் ஆட்சி புரிகின்றன. இந்த குடும்பங்கள் தம் அடுத்த நீட்சியான சாதியோடு மட்டும் தான் தம்மை பிணைத்துக் கொள்ளும், அடையாளப்படுத்தும். இந்தளவுக்கு குடும்பப்பாங்கான இந்தியர்களின் கணிசமான துன்பங்களும் இயல்பாக குடும்பங்களில் இருந்து தான் வருகின்றன. பரஸ்பரம் காயப்படுத்துவது நம் ஜனநாயகமற்ற இறுக்கமான உறவுகளிடையே மிக மிக சகஜம். வேறு எந்த சமூகத்தையும் விட நாம் அம்மா, அப்பா, தங்கை, தம்பிகளுக்கு அதிகமான் பாசத்தையும், மரியாதையும் அள்ளி வழங்குகிறோம். ஆனால் எந்த அம்மா, அப்பா, தங்கை, தம்பிகளிடம் பேசிப் பாருங்கள் – நம்மைப் பற்றிய ஆயிரம் புகார்களும், கோபங்களும் அவர்களிடம் இருக்கும். குடும்பத்தை கரையேற்ற நகரத்தில் தங்கி சொற்பமான வருமானத்தில் வாழ்ந்து காசு சேமிக்கிற எத்தனையே பேர்களை அறிவேன். அது போன்றே பிள்ளைகளுக்காக எல்லா சுகங்களையும் தியாகம் செய்ய முனைகிற பெற்றோர்களும். சிறுவயதில் அம்மா என்னை டியூசனுக்கும் பல இடங்களுக்கும் தூக்கி சுமந்து போவாள். என் பெற்றோர்கள் தம் ஆயுளின் கால்வாசியை என்னை குறித்த கண்ணீரிலேயே கரைத்திருப்பார்கள். குறிப்பாக தமிழர்களுக்கு இந்த குடும்ப செண்டிமெண்ட் மிக மிக அதிகம். ஆனால் எல்லா மிகையான அன்பும் ஆழத்தில் கசப்பைத் தான் சுரக்கும். அன்பை இவ்வளவு உக்கிரமாக கையாள்வது ஒரு கைப்பிடி இல்லாத கத்தியை கொண்டு வெட்டுவதை போன்றது. இதனால் தான் நம் வீடுகள் போர்க்களங்களை போல் இருக்கின்றன. கட்டில், சோபா, மேஜைகளிடையே சடலங்களை மறைத்தபடி வீட்டை அப்பழுக்கின்றி வைத்தபடி சகஜமாக வாழ்க்கையை தொடர்ந்த படி இருப்போம். ஆனால் அணுக்கமாக சென்று விசாரித்தால் உற்ற உறவுகள் தம்மை மிக மோசமாக காயப்படுத்திய ஆயிரம் கதைகள் அவர்களிடம் இருக்கும். ஆனால் இதே உறவுகளை விட்டு விட்டும் நம்மால் வாழ முடியாது. ரஜினியின் படங்களில் மிக நெருக்கமான குடும்ப உறவுகள் இருக்கும். பிறகு ஒரு கட்டத்தில் சுயநலம், அகம்பாவம், புரிந்துணர்வு இல்லாமை காரணமாய் அவரை “கைவிடுவார்கள்”. துன்புறுத்துவார்கள். கொட்டுகிற மழையில் ரஜினி ரத்தம் வழிய வீட்டில் இருந்து துரத்தப்படுகிற காட்சி நம் சமூக பிரக்ஞையில் உறைந்து விட்ட ஒரு தனி தொன்மம் எனலாம். இதன் பிறகு தான் ரஜினி சமூகத்துக்குள் செல்கிறார். தீமையும் சூதும் மிகுந்த இடங்களுக்கு சென்று வெற்றிகரமாக செயல்பட்டு இறுதியில் பெற்ற அனைத்தையும் கைவிட்டு மீண்டும் குடும்பத்துக்குள் திரும்புகிறார். இதை இரண்டு விதங்களில் பார்க்கலாம்.
ஒன்று, நாம் விரும்பும் மிகப்பெரிய வசதி “குடும்பத்துக்குள்ளே” இருந்து விடுவது. கருவறை போல் குடும்பம் மிகவும் பாதுகாப்பு என நம்புகிறோம். குடும்பத்துக்குள் இருப்பது சாதிக்குள் இருப்பது தான். நம் முன்னோர்கள் “குடும்பத்தில்” இருந்து என்றுமே வெளியேறியவர்கள் இல்லை. ஒரு மாறாக சமூக அடுக்கில் ஒரு மூலையில் இருந்து சின்னஞ்சிறு கற்கள் உடைத்துக் கொண்டிருந்தார்கள் – பிறகு பிறந்த மண்ணிலேயே சாவதை விரும்பினார்கள். இந்த சமூக இறுக்கம் ஒரு நிலைப்பையும் தந்தது என்கிறார் எரிக் புரோம். அதாவது சமூகத்தில் கொந்தளிப்பு குறைவாக இருந்தது. பீ அள்ளுகிறவர் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றல்ல. ஆனால் படிநிலையை எதிர்ப்பது தவறு என்னும் எண்ணமும் வேறு வாய்ப்பு இல்லாமையும் அவர்களை மௌனமாக வைத்திருந்தது. இந்த போலி மௌனம் சுதந்திர கிடைத்த பின்னான இந்த அரைநூற்றாண்டில் பெருமளவு கலைந்துள்ளது. நிறைய எதிர்குரல்கள் அமைதியை கலைத்துள்ளது. பலதரப்பட்ட நிலைகளில் இருந்து மக்கள் படித்து முன்னேற சமூக அடுக்கு மீண்டும் மீண்டும் சீட்டுக்கட்டு போல் கலைத்து கலைத்து அடுக்கப்பட்டது. எல்லோருக்குள்ளும் பாதுகாப்பு பற்றிய அநிச்சயம் குறித்த பயமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. மத்திய, மேல் சாதியினர் கொட்டுகிற மழையில் வழியும் ரத்தத்தோடு வீட்டை விட்டு வெளியேறத் துவங்கினர். பொருளாதார ஸிதிரமின்னை குடும்ப கலகங்களுக்கும் பந்தங்களிடையே துரோகங்களுக்கு பிரதான தூண்டுகோல். குடும்பத்தையும் சொத்தையும் பிரித்து, ஊரை சொந்தங்களை பிரிந்து, பிரிக்க ஒன்றுமே இல்லாதவர்கள் ஊரிலுள்ள் அந்தஸ்தை நகரங்களில் அடைய முடியாத துக்கத்துடன் பட்ட சான்றிதழுடன் பிழைப்புக்காக அலைவது இந்த காலகட்டத்தில் பரவலாக நடந்துள்ளது. “வீட்டை” விட்டு வெளியேறும் இந்த வலி நம் அனைவருக்குள்ளும் உள்ளது. நம்முடைய மிகப்பெரிய ஏக்கம் திரும்ப “வீட்டுக்கு” போவது தான். இந்த நகரத்து அவசரத்தில் இரைச்சலில் அடையாளக் குழப்பத்தில் “நாம்” யாரென யாருக்கும் தெரியவில்லை எனும் வருத்தம் கண்ணில் விழுந்த தூசி போல் தொடர்ந்து உறுத்துகிறது. ரஜினி பார்முலா என்பது ஒருவிதத்தில் தொடர்ந்து சொந்தபந்தங்களை இழப்பதும் மீட்பதும் அதன் மூலம் வீட்டுக்கு திரும்புவதும் தான். அவர் படங்களில் உள்ள மிகையான குடும்ப செண்டிமெண்ட் நம்மை எரிச்சலடைய வைக்காததன் காரணம் உறவுகளின் கசப்பான எதிர்மறையான பக்கத்தையும் அது காட்டுவது தான். விசு பாணி குடும்ப விமர்சனத்துக்கும் இதற்குமான வித்தியாசம் ரஜினியிடம் லட்சியமான நல்ல உறவுகளே இல்லை என்பது. எல்லாரும் நம்மை ஒரு கட்டத்தில் கைவிடுவது தான் எதார்த்தம் என அவர் படங்களில் ஒரு அழுத்தம் உள்ளது. இன்னொரு பக்கம் ஒரு எதிர்குடும்ப நாயகனாகவும் இருக்கிறார். “வேலைக்காரன்”, “தளபதி”, “முத்து” போன்ற படங்களில் அம்மா அல்லது அப்பாவால் கைவிடப்பட்ட ’அநாதையல்லாத அநாதையாக’ வருகிறார். கைவிடப்பட்ட குழந்தைகளிடம் ஒரு அவசர முதிர்ச்சியும் நீட்டிக்கப்பட்ட குழந்தைமையும் முரண்பாடாக சேர்ந்தே இருக்கும். “தளபதியில்” அம்மாவை முதன்முறை நேரில் சந்தித்து பேச முடியாது தேம்பும் இடத்திலும், “பாட்ஷாவில்” தன்னை வீட்டை விட்டு துரத்திய அப்பா வீட்டுக்கு வந்து பார்த்து திட்டும் போது தலையை குனித்து எதிர்க்காமல் கேட்கும் அந்த அழகான காட்சியில் அந்த அநாதைத்தனமும், கைவிடப்பட்டவனின் தீராத ஏக்கமும் உள்ளது. குடும்பத்தால் கைவிடப்பட்ட குடும்பத்துக்காக ஏங்கும் எதிர்பிம்பம் எண்பதுகளில் இருந்தே ரஜினி கட்டுவித்த எதிர்சமூக நாயக பிம்பத்தோடு பொருந்திப் போகிறது.
வீட்டில் இருந்து வெளியேறுவதை நாம் ஒரு உலகப் பொதுவான தொன்மமாகவும் பார்க்கலாம் என்கிறார் உளவியலாளர் கார்ல் யுங். “துரத்தப்பட்ட இளவரசனின்” தொன்மம் பல சமூகங்களிலும் ஆதிகாலத்தில் இருந்த ஒன்று என்கிறார். ஒரு இளவரசன் தன் அரசியல் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு இன்னொரு ஊருக்கு தப்பி செல்வான். அங்கு பல அபாயங்களை சந்தித்து முறியடித்து வாழ்வான். பிறகு வளர்ந்த இழந்த தன் சமூக இடத்தை மீட்பான். யுங் இந்த தொன்மம் கர்த்தருக்கும் கண்ணனுக்கும் பொதுவாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். இதை ஒத்த வேறு பல நாட்டு தொன்மங்களையும் பட்டியலிடுகிறார். ரஜினியின் “வீட்டில் இருந்து வெளியேற்றப்படும்” தொன்மம் இந்த கண்ணனின் “துரத்தப்பட்ட இளவரசனின்” தொன்மத்தின் இன்னொரு வடிவம் தான். குசேலனின் கதையை தலைகீழாக எடுக்கப்பட்ட “அண்ணாமலை” இந்த விதத்தில் வெகுசுவாரஸ்யமான படம். 80 லட்சம் சொத்துக்கு மதிப்புள்ள அண்ணாமலை அத்தனையும் வஞ்சகத்தால் இழக்கிறான். ஆனால் அவன் பிரச்சனை பணமல்ல. நண்பனுக்கு இணையாக மாறுவது. இருசமூகத் தட்டுகளில் இருப்பவர்கள் நண்பர்களாக இருக்கும் சிக்கலை பற்றிய படம். இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால் இது சமூகத்தில் உள்ள சமத்துவமின்மை பற்றின படமும் தான். அதாவது இடதுசாரிகள் பேசும் சமத்துவம் அல்ல. நம்மளவுக்கு நுணுக்கமான பல சமநிலையின்மைகள் கொண்ட இன்னொரு சமூகம் கிடையாது. எல்லா நிலையினரோடும் உறவாடும் போது பல நெருக்கடிகள் வருகின்றன. கண்முன்னே தினம் தினம் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளைப் பார்க்கிறோம். பிரச்சனை இத்தனை ஏற்றத்தாழ்வுகளின் மத்தியில் இது எதுவுமே இல்லாதது போல் நம்மை விட உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்களிடம் உறவாடுவது என்பது. அடுத்தவருக்கு இணையாக உயர வேண்டும் என்பது நம் அனைவருக்குள்ளும் உள்ள மற்றொரு தீராத ஏக்கம். அலுவலகத்தில் அண்டை வீட்டில் இன்னொருவர் சட்டென்று நம்மை விட பொருளாதார நிலையில் உயர்ந்து விடும் போது நமக்கேற்படும் பதற்றம் ரஜினியை போல் ஆகாயத்தை நோக்கி சவால் விட தூண்டுகிறது. ஆனால் இன்றுள்ள போட்டியில் இன்னொருவருக்கு இணையாக உயர்வதற்கு அவரை நாம் அழிக்கவும் வேண்டி இருக்கிறது. அண்ணாமலையும் மெல்ல மெல்ல தன் நண்பனை அழிக்கிறான். இறுதியில் தன் முன்னேற்றத்தின் வெறுமையை உணர்கிறான். இறுதியில் ரஜினி தொன்மத்தின் படி எல்லாவற்றையும் உதறி விட்டு மீண்டும் பால்காரன் ஆகிறார். உண்மையில் சமநிலை என்பது ஒரு கற்பிதம் தான். அண்ணாமலையால் தன் நண்பன் அசோக்குக்கு என்றுமே இணையாக முடியாது. இன்றைய சமூக நிலையில் யாராவது ஒருவர் விழ வேண்டும், இன்னொருவர் எழ வேண்டும். நகரமயமாக்கலில் உள்ள போட்டி என்பது தற்காலிகமான சமநிலைக்கான போட்டியும் தான். அதாவது நிறைய உருவக ரத்தம் சிந்தி ஏற்கனவே இருந்தவனை அழித்து விட்டு அவன் இடத்தை நாம் அடையும் போது தராசு ஒரு கணம் சீராகிறது. ஆனால் மீண்டும் சாயத் துவங்குகிறது. இன்னொருவன் நம் பதவிக்காக கால் பாதத்தை சுரண்டி தன் கூர் பற்களால் கடிக்க ஆரம்பிப்பான். பழைய நிலப்பிரபுத்துவ சமூகம் மீதான ஏக்கம் கொண்டவர்கள் இன்றைய சமூக நகர்வில் உள்ள இந்த வன்முறையை, குரூரத்தை இப்படித் தான் பார்ப்பார்கள். சமூக மேல்நிலையாக்கம் (upward mobilization) குறித்த ஒரு ஆழமான் கசப்பு நம் தமிழ் சமூகத்தில் இருக்கிறது. ரஜினியின் தொன்மம் இந்த கசப்பான மனதிடம் தான் பேசுகிறது. பழைய நிலையான சமூகம் இனி கிடைக்காது. அதேவேளை சமத்துவத்துக்கான வன்முறையும் வெறுப்பும் நமக்கு வேண்டாம். அதனால் அனைத்தையும் துறந்து விடுவோம் என்கிற தற்காலிக தீர்வை அளிக்கிறது. சமூக முன்னேற்றத்தில் மேலேயும் போக முடியாமல் கீழேயும் செல்ல விரும்பாமல் இடையில் எந்திர சக்கரத்தினிடையே மாட்டிக் கொண்ட நிறைய பேர் இருக்கிறோம். நமக்கிந்த தற்காலிக “பற்றற்று இருப்போம்” தீர்ப்பு பிடித்து போகிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன் இந்தியா சிதறி விடும் என பரவலாக எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அப்படி நிகழாமல் இருந்தற்கு வேற்றுமையில் ஒற்றுமை எண்ணம் அல்ல காரணம். நம் பக்கத்தில் சுத்தமாய் பிடிக்காமல் இருவர் இருந்து சுத்தமாய் பிடிக்காத ஒரு காரியம் பண்ணிக் கொண்டிருந்தால் கூட எளிதில் நம்மால் அதை தாங்கிக் கொள்ள முடியும். நம் நாடு கடந்த ஐநூறு வருடங்களில் பல பெரும் மாற்றங்களை ஆக்கிரமிப்புகளை கொந்தளிப்புகளை எளிதில் ஒன்றுமே நடக்காதது போல் கடந்து வந்தது இப்படித் தான். எதையும் செய்யாமல் இருந்தாலும் ஏதோ ஒன்று நடக்கும் என நம்பிக் கொண்டு இருக்கிறோம். உளவியல் ரீதியாக, உறவுகளை கையாள்வதை பொறுத்தவரையிலும், அக ஆரோக்கியத்துக்கும் இந்த பட்டும்படாத அணுகுமுறை மிக நல்லது தான். எல்லா ஆசியர்களுக்கும் இந்த ஒட்டாமை கருதுகோளின் மீது ஆகர்சம் உள்ளது. புரூஸ்லீயின் படங்களுக்கும் ரஜினியின் தொன்மத்துக்கும் உள்ள முக்கிய ஒற்றுமை இந்த ஒட்டாமை தான். கிளைமேக்ஸில் வில்லனை கொன்று விட்டு ஒன்றுமே நடக்காதது போல் அவனது கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு தனியான பாதையில் நடந்து செல்வார் (Return of the Dragon). ரஜினியின் பல படங்களில் வில்லன் ஏதோ திருஷ்டி பூசணிக்காய் போலத் தான் இருப்பான். ஒரு சடங்கு போல் ஈடுபாடில்லாமல் அவனை தூக்கிப் போட்டு உடைத்து விட்டு போவார். “சிவாஜி”, “பாட்ஷா” போன்ற படங்களை சொல்லலாம். “தளபதியில்” கிளைமேக்ஸில் ரஜினி அவ்வளவு ஆவேசமாக வில்லனை அடித்துக் கொல்லும் போது அவன் ஏற்கனவே தன் நண்பனை இழந்து வில்லனிடம் தோற்றுப் போயிருக்கிறான். அது “ஆரண்யகாண்டத்தில்” பிணத்தை நோக்கி “நீ மட்டும் உயிரோட உயிரோடு இருந்திருந்தால் உன்னை கொன்னிருப்பேன்” என்று கூறுவது போலத் தான். வில்லனை ஒரு பொருட்டாகவே கருதாமல் “கடந்து” செல்வதை பின்னர் மிஸ்னும் தன் “அஞ்சாதே”, “முகமூடி”, “ஓநாயும் ஆட்டுக்குட்டியிலும்” சித்தரித்தார். “அஞ்சாதேவில்” சுவாரஸ்யமாக பிரச்சனா கொல்லப்படும் போது தன் நின்று போன கைக்கடிகாரத்தை பார்த்து தனக்குள் சிரித்துக் கொள்வான். அவனை ஹீரோ கொல்லவில்லை. அவன் காலம் நின்று விட்டது, கூட அவனும் நின்று விட்டான். “முகமூடியிலும்” வில்லன் தன் சாவை இதே கனிவுடன் தான் ஏற்கிறான். கதம் ததம்.
இதே போன்றது தான் பெண்கள் மீதான கடும் வெறுப்பு. ரஜினியின் படங்களில் தான் நாயகி ஒரு கட்டத்துக்கு மேல் கதையில் பயணிக்க மாட்டாள். அல்லது அவள் ரஜினியை தன் அப்பாவித்தனத்தால் காட்டிக் கொடுப்பாள் (”சிவாஜி”) அல்லது அவனை புரிந்து கொள்ள முடியாதவளாக இருப்பாள் (”பாபா”). கல்லூரியில் படிக்கையில் “கதம் ததம்” என்கிற வசனம் என்னை மிகவும் ஈர்த்தது. பெண்கள் மீதான வெறுப்பும் கோபமும் இன்று பல படங்களில் வெளிப்படுகிறது. இது பெண் மீதான பயத்தில் இருந்து வருவது தான். ஜெயலலிதாவிடம் மோதல் ஏற்பட்ட பின் பெண்களை பழிக்கும் வசனங்களும் பாத்திர, கதை அமைப்புகளும் ரஜினி படங்களில் வந்ததை பார்த்தோம். ஆனால் அதற்கு முன்பிருந்தே பெண்களுக்கும் சமூக மாற்றத்துக்கும் எதிரான நிலப்பிரபுத்துவ கருத்துக்கள் தான் ரஜினி தொன்மத்தின் வேராக இருந்து உள்ளன. பெண்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் எனும், ஆண்களால் மட்டும் நிரம்பிய வைதிக மரபின் தாக்கம் அவரது ஆரம்ப படங்களில் இருந்தே உள்ளது. பெண்களின் முன்னேற்றம், அவர்கள் முன்பை விட அதிக வன்முறையுடன் ஆண்களிடம் இன்று நடந்து கொள்வதும், வீட்டுக்குள்ளும் வெளியேயும் நம் முதுகில் ஒரு துப்பாக்கியை சதா அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பதும் சமூக மாற்றத்தின் அசலான பிரதிபலிப்பு எனலாம். ரஜினியை நமக்கு பிடிப்பதற்கு இன்னொரு காரணம் இந்த சமூக மாற்றம் நமக்கு பிடிக்கவில்லை என்பதும் தான்.
Read More

Saturday 9 November 2013

திருடப்பட்ட தேசம்


பொதுவாக சூழலியல் கட்டுரைகள் அலுப்பாக இருக்கும். வெறும் தகவல்கோர்வையாக அல்லது வியப்பூட்டும் செய்திகளை ஆச்சரியக்குறிகளால் நிறைத்து மூச்சு முட்ட வைக்கும். ஆனால் நக்கீரன் “பூவுலகு”, கொம்பு, “வலசை” போன்ற சிறுபத்திரிகைகளில் எழுதின கட்டுரைகளின் தொகுப்பான “திருடப்பட்ட தேசம்” மிகவும் வாசிக்கத்தக்க தகவல்பூர்வமான சரியான அணுகுமுறை கொண்ட நூல். ஒரு சூழலியல் ஆர்வலருக்கு அரசியலும் தெரியும் போது தான் இத்தகைய விரிவான பார்வை கொண்ட எழுத்து சாத்தியமாகும்.

பன்னாட்டு நிறுவனங்களின் இன்று இந்தியா முழுக்க வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டி வரும் பின்னணியில் நக்கீரன் இப்பிரச்சனைகளை சூழலியல் அடிப்படையில் இந்நூலில் விவாதிக்கிறார். மருத்துவ ஆய்வுகளின் பேரில் உலகம் முழுக்க பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு திருடப்பட்டு அலோபதி மருந்துகளாக விற்கப்படும் தொழிலாக நடைபெறும் அவலத்தை குறித்த கட்டுரை “மழைக்காடுகளில் திரியும் மருந்து கொள்ளையர்கள்” முக்கியமானது. அகத்திய மலையில் உள்ள காணிகள் எனும் பழங்குடிகளிடம் இருந்து உடலாற்றலை மேம்படுத்தும் ஜின்செங் எனும் தாவரத்தை அறிந்து கொள்ளூம் ஆய்வாளர்கள் சிலர் இதை ஒரு மருந்து நிறுவனத்துக்கு ஐந்து லட்சத்துக்கு விற்க அவர்கள் ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள். பழங்குடிகளுக்கு உரிமைத் தொகையாக ஐந்து லட்சமும் தர வேண்டும். இத்தாவரத்தை அடையாளம் காட்டிய மாதன் குட்டிக்காணி டைம்ஸ் பத்திரிகையில் இடம் பிடிக்கிறார். ஆனால் இன்றும் மாதன் குட்டிக்காணி தன் நோயுள்ள இரு பெண் குழந்தைகளுக்கு மருத்துவம் செய்ய காசின்றி தவிக்கிறார். அவருக்கு மட்டுமல்ல எந்த பழங்குடிக்கும் ஒப்பந்தப்படி பணம் வழங்கப்படவில்லை. மருந்து நிறுவனம் மருந்தின் சூத்திரத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்க விற்பனை கோடிகளில் புரள்கிறது. மருந்து நிறுவனம் காணிகளுக்கு சல்லிப்பைசா தராமல் ஏமாற்றி விட்டது. எதிர்த்து வழக்காட பழங்குடிகளுக்கு சக்தியோ கல்வியோ இல்லை. நக்கீரன் கூறுவது போல் இது சூழ்ச்சி, திருட்டு மற்றும் சுரண்டல் தான். அதாவது அறவியல் படி. சட்டப்படியோ வியாபாரரீதியாகவோ பேட்டண்ட் வாங்காத பாரம்பரிய மருத்துவத்துக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது. நம்மால் செய்ய முடிவது பழங்குடிகளிடம் இன்று உள்ள மூலிகை அறிவை ஆவணப்படுத்தி பழங்குடிகளுக்கு போதுமான வெகுமதியும் கல்வியறிவும் வழங்கி மேம்படுத்துவது தான். இதை அரசே செய்ய வேண்டும். மாறாக அரசு பழ்ங்குடிகளை துரத்தி கானகங்களை கையகப்படுத்தவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்ளூர் முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதிலேயே அதிக அக்கறையுடன் இருக்கிறது.
“பிஞ்சு வௌவாலுடன் ஒரு நாள்” வெகுசுவாரஸ்யமான கட்டுரை. ஆசிரியர் ஒரு குஞ்சு வவ்வால் தரையில் ஊர்ந்து போவதை பார்த்து அதை எப்படி காப்பாற்றுவது என யோசிப்ப்தில் இருந்து இது துவங்குகிறது. விளக்குமாறு குச்சியில் அதை ஏந்தி இருட்டான இடத்தில் வைக்கிறார். அதன் தாய் வந்து எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கிறார். கட்டுரை முடிவில் வவ்வால் குஞ்சு அந்த இடத்தில் இல்லை. “தாய் வௌவால் எடுத்து போயிருக்கலாம். அப்படித் தானே நீங்களும் நம்புகிறீர்கள்?” என முடிக்கிறார். அவநம்பிக்கையும் நம்பிக்கையும் கலந்த இந்த பதபதைப்பு சூழலியல் மற்றும் பழங்குடி உரிமை மீது அக்கறை கொண்ட எல்லோருக்குமானது தான். கானுயிரும் கான்வாழ் மனிதரும் இந்த வௌவால் குஞ்சை போல் தொட்டார் நொறுங்கி விடும்படி பலவீனமானவர்கள். இது போன்ற அழகான நெகிழ்ச்சியான முடிவுகளை எழுதுவதில் நக்கீரனுக்கு ஒரு தனி லாவகம் இருக்கிறது. இக்கட்டுரையின் முடிவும் அப்படிப்பட்டது. வௌவால்களை ஏன் இயற்கை உருவாக்கியது (இரவுப்பூச்சிகளின் எண்ணிகையை கட்டுப்படுத்த), வௌவாலால் ஏன் ஒன்றுக்கு மேல் குட்டி ஈன முடிவதில்லை (கர்ப்ப பாரத்தை சுமந்து பறப்பதில் உள்ள சிரமம்) என ஒரு வௌவாலால் 60 வகையான தாவரங்களை ஒரு நிலத்தில்  புதிதாக உருவாக்க முடியும் என பல தகவல்களை அறியும் போது நம் அறியாமை மீது லஜ்ஜையை விட பிரபஞ்ச மனம் மீதான வியப்பு தான் அதிகமாகிறது. இயற்கை அறிவை பொறுத்தவரையில் மனிதனும் மண்புழுவும் ஒன்று தான்.
   “குழந்தைகள் மீது மருத்துவம் நிகழ்த்தும் வன்முறைகள்” தடுப்பூசியின் அபாயங்களை விரிவாக அலசுகிறது. நம் அறிவியல் எவ்வளவு குருட்டுத்தனமான லாபவெறியுடன் இயங்க முடியும் என்பதற்கு பல சான்றுகள் தருகிறார். மனிதர்களுக்காக மருந்துகள் உருவாக்கப்படுவதில்லை, மனிதர்கள் மருந்து நிறுவனங்களின் லாபத்துக்கு பலியாக்கப்படுகிறார்கள் என்கிறார். இது நாம் அறிந்தது தான். ஆனால் குழந்தைகளின் உடலுக்கு இவ்வளவு அலட்சியத்துடன் விஷமான வேதிப்பொருட்கள் பல கலந்த தடுப்புமருந்துகள் செலுத்தப்படுகின்றன என்பதை ஜீரணிக்க வெகுசிரமமாக இருக்கிறது. கணிசமான நோய்கள் தன் பாட்டுக்கு தோன்றி மறையக் கூடியவை. தடுப்புமருந்து தரப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்நோய்களால் பின்னர் தாக்கப்படுகிறார்கள். மேலும் இந்த தடுப்புமருந்துகள் மூளை வீக்கம் ஏற்படச் செய்யக் கூடியவை. அமெரிக்காவில் தடுப்பு மருந்துகளால் ஆட்டிசம் எனும் மூளைக்கோளாறு குழந்தைகளுக்கு ஏற்படுவது 3000 மடங்கு பெருகியிருக்கிறது. இத்தகவல்கள் மிகவும் அச்சமூட்டக்கூடியவை. இனிமேலும் செய்தித்தாள்களில் நோய்த்தடுப்பு சொட்டு மருந்து தரப்பட்ட குழந்தைகள் மரணம் எனப் படிக்கும் போது அது ஏதோ அந்த மருந்தில் கோளாறு என அலட்சியமாக நாம் தாண்டி சென்று விட முடியாது. போலியோ தடுப்புமருந்தை கண்டுபிடித்தவரான ஜொனாஸ் சால்க் தன் தடுப்புமருந்து வீணானது என கூறும் போது சொட்டுமருந்து தரப்படாததால் போலியோ வியாதி தாக்கப்பட்ட, அப்படியே இதுநாள் அவரை நம்ப வைக்கப்பட்ட எனக்கு அதை எப்படி எடுத்துக் கொள்ள எனத் தெரியவில்லை.
மஞ்சள் காமாலை தடுப்புமருந்தை அமெரிக்காவில் தடை செய்ய கடும் நஷ்டமடையும் மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக இம்மருந்தை ஆந்திராவில் உள்ள நாலரை லட்சத்துக்கு மேலான பள்ளிக்குழந்தைகளுக்கு பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் அளிக்கிறார்கள். இந்த செலவை பில்கேட்ஸ் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் முதல்தவணை மட்டும் தான். மிச்சதவணைகளுக்கான கோடிக்கணக்கான செலவு அரசின் தலையில் விழுகிறது. இம்மருந்து நிறுவனங்களின் கணிசமான பங்குகளை வாங்கி உள்ள பில்கேட்ஸின் புகழை பரப்பவும் கொடை போல் தெரிந்த இந்த முதலீடு பயன்பட்டு, கோடிக்கணக்கில் லாபமும் ஈட்டித் தந்தது. ஏழை இந்தியர்களை பலியாக்கி அமெரிக்க நிறுவனங்கள் தம்மை தக்க வைத்தும் கொண்டன. HPV வைரஸ் கர்ப்பப்பை நுழைவாயிலில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியது. ஆனால் கட்டற்ற பாலுறவில் ஈடுபடும் பெண்களைத் தான் இந்த வைரஸ் தாக்கும். இதற்கான தடுப்பு மருந்தை சோதிக்க அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆந்திராவில் உள்ள 14,000 14 வயது சிறுமிகளை பயன்படுத்தியது. இதில் 120 சிறுமிகளுக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்பட்ட அவலம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் தரப்பட்டு ஐந்து வருடங்கள் மட்டுமே பலன் தரக்கூடிய மருந்தை ஏன் 14 வயதுள்ள, பாலியல் அனுபவமே அநேகமாய் இல்லாத குழந்தைளுக்கு தர வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. நம்மூரில் மருந்து சோதனைகள் எவ்வளவு அலட்சியமாய் அபத்தமாய் நடக்கிறது என்பதற்கொரு உதாரணம் இது.
“பகன்றை பன்னிரெண்டு” எனும் பகன்றை பூ ஒன்றின் பின்னுள்ள வரலாற்று கதையை, அரசியலை பேசும் கட்டுரையும் வாசிக்கத்தக்கது. “திருடப்பட்ட தேசம்” பிரித்தானிய காலனியாக இருந்த மாலத்தீவின் பகுதியாக இருந்து பின்னர் பிரித்தனால் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டு ஒருநாளில் தம் வாழ்நிலத்தை இழந்த ஆயிரக்கணக்கான சாகோஸ் தீவு மக்களின் அவலமான கதையை சொல்கிறது. பலவீனமான தேசங்களும் மக்களும் இன்று உலகம் முழுக்க அரசியல்-ஆயுத வியாபார கூட்டு படையெடுப்புக்கு ஆளாகி வருவதை சித்தரிக்கிறது.
 கட்டுரைக்கும் சிறுகதைக்கும் இடையில் உள்ள மெல்லிய கயிற்றில் நடக்கத் தெரிந்தவர்கள் தாம் அற்புதமான கட்டுரையாளர்களாக இருக்கிறார்கள். நக்கீரன் அப்படி ஒருவராக நம்பிக்கை ஊட்டுகிறார்.

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates