Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sunday, 13 November 2011

தமிழக வானிலை அறிக்கை – மோனிகா, ரமணனில் இருந்து கடவுள் வரை



ஆரம்பத்தில் வானிலை அறிக்கைகள் தொலைக்காட்சி செய்தியின் முடிவில் சில அசுவாரஸ்யமான வாக்கியங்களாக சுருக்கப்படுவதில் இருந்து இன்று கிராபிக்ஸ் மற்றும் வரைபடங்களையும் கொண்டு செல்வி மோனிகாக்கள் திக்கித் திக்கி தலையை ஆட்டி ஆட்டி விளக்குவது வரை வளர்ந்துள்ளது. பருவநிலை அறிக்கைகள் அறிவியல்பூர்வமாகிய சூழலில் அறிவிப்பாளினியும் மரபான சேலையில் அல்லாமல் நவீன ஆடையில் வருவதும் கவனிப்புக்குரியது. இந்த மசாலா சேர்க்கைக்கு ஒரு காரணம் இந்தியாவில் பொதுவாக மழைக்காலங்களில் தான் வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது என்பது.
காய்கறி விலை ஏற்றம், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு செய்திகளில் இருந்து அன்றாட போக்குவரத்தை பாதிக்கும் இன்று குடை மழைகோட்டு எடுக்க வேண்டுமா, சாலையில் எந்தளவு நீர்த்தேக்கம் போன்ற கேள்விகள் வரை உயிர் பெறுகின்றன. நமது பருவகாலம் நான்காக பிரிக்கப் படுகிறது. குளிர்காலம், கோடை, முன்மழைக்காலம், மழைக்காலம். ஆனால் நமது பருவச்சூழல் ஐரோப்பாவில் போல் இங்கு தினசரி வாழ்வை தொடர்ந்து பாதிக்கிற ஒன்றாக இல்லை. போக்குவரத்தை பாதிக்கும் கடும் பனிப்பொழிவு, புயல், காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்கள் இங்கு குறைவே.
போலாந்து இயக்குநரின் டெகலாக்ஸ் எனும் தொலைக்காட்சி படங்களில் ஒன்றில் ஒரு விஞ்ஞானி தனது மகனுக்கு வெளியே விளையாடுவதற்கு தோதாக சூழல் உள்ளதா என்று வானிலையை சில அறிவியல் சூத்திரங்கள் கொண்டு ஆய்ந்து சொல்வார். வெளியே தரையில் அடர்த்தியான பனி படர்ந்துள்ளது. குறிப்பாக, உறைந்துள்ள ஒரு ஏரியில் பனிச்சறுக்கு விளையாட குழந்தைகள் பிரியப்படுகிறார்கள். வானிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறக் கூடியது. அப்பாவின் விஞ்ஞான கணிப்புக்கு எதிராக ஏரி உருகி அவரது மகன் மூழ்கி இறந்து போகிறான். நாத்திகவாதியான அப்பா தேவாலயத்திற்கு சென்று மண்டியிட்டு அழுகிறார். ஒருவிதத்தில் மனித அறிவு எவ்வளவு குறைபாடுள்ளது, நாம் வாழும் பிரபஞ்சம் எவ்வளவு பிரம்மாண்டமான எளிதில் வரைவறுக்க முடியாத கணித சூத்திரங்களால் இயங்குவது என்பதை நடைமுறை வாழ்வில் அடிக்கடி நினைவுபடுத்துவதற்கான ஒரு கருவியாகவும் வானிலை அறிக்கைகள் இயங்குகின்றன. இவ்வாறு மழை நாட்களில் ரமணனின் சொற்களில் அடிக்கடி கடவுளும் எட்டிப் பார்க்கிறார்.
மனித அறிவின் எல்லை பற்றி இப்படியான உயர்ந்த தத்துவ விசாரங்களில் இருந்து டீ.வியில் ரமணனின் கணிப்புகளும், அவரைத் தொடர்ந்து “இன்று டீவியில் மழை பெய்யாது என்றால் கண்டிப்பாக பெய்யும் என்று நக்கலாக குடை எடுத்துக் கொண்டு செல்லும் சினிமா நகைச்சுவை பாத்திரம் வரை நமது மீடியாவிலும் பொதுமக்கள் பிரக்ஞையிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது. வானிலை கணிப்பின் நிச்சயமின்மை ஜோதிடத்தை போன்றே அதனளவிலான சுவாரஸ்யம் கொண்டது. இதனாலேயே கிரகங்களின் நிலையை அவதானித்து வாழ்வைப் போன்றே பருவநிலையையும் கணிக்க இந்தியர்கள் கி.மு 300இலேயே முயன்றிருக்கிறார்கள். 
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
Read More

Tuesday, 22 March 2011

விருதை காப்பாற்றுவது எப்படி?


ஒரு பிரபல விருதை ஒருங்கிணைக்கும் பிரபல நபரிடம் பேசிக் கொண்டிருந்தேன். விருதுகளின் தேர்வில் சார்புநிலை தவிர்ப்பது எப்படி என கவலைப்பட்டார். அவரிடம் ஒரு தீர்வும் இருந்தது.

“ஜனநாயக முறைப்படி சென்றால் இந்த விருது மிக சரியான நபருக்கு போய் சேராது. குளறுபடி நடந்து விடும். என்ன செய்ய அனைவரும் ஜனநாயகத்தை நம்பும் தப்பான சூழலில் வாழ்கிறோமே” என்றார். யாரையும் நம்பக் கூடாது என்கிற சற்றும் நம்பிக்கைக்கு புறம்பான ஜனநாயகவாதிகள். “ஜனநாயகம் நல்லது தான். ஆனால் ஜனநாயகத்தை நம்பும் மக்கள் நல்லவர்களாக இல்லை” என்று மேலும் பெருமூச்சு விட்டார். விருதை ஜனநாயக அராஜவாதிகளிடம் இருந்து காப்பாற்ற அதை மேலும் ஜனநாயகப்படுத்த போவதாக சொன்னார். சரி, இது வாசல் வரை வந்தவரை நடுவீதிக்கு தள்ளுவது ஆகாதா? விருதின் மதிப்பு இன்னும் தாழாதா? இல்லை அவர் ஒரு தீர்வு வைத்திருக்கிறார்.
என்ன ஒரு சர்வாதிகாரமான மனிதர்!
Read More

Tuesday, 9 November 2010

தமிழில் ஏன் இத்தனை கவிதைகள் எழுதப்படுகின்றன?


 விசிட்டிங் கார்டுகளுக்கு அடுத்தபடியாய் தமிழில் அவசரமாய் பிரசுரம் ஆவது கவிதைத் தொகுப்புகள் என்று நமக்குத் தெரியும். தமிழ்க்கவிதையின் நோய்மை இது என்று தீர்ப்பளித்து பேனாமுனை உடைப்பதும் எளிது. கவிதைக்கான் ஆதார நுட்பமோ சொல்வதற்கு ஏதாவது சங்கதியோ இல்லாதவர்கள் இப்படி மானாவரியாய் எழுதி அழகான அட்டை வடிவமைப்புடன் வழவழ தாள்களில் முன்னணி பதிப்பக முத்திரையுடன் புத்தகமாக்குவதன் உத்தேசம் என்னவாக இருக்கும்? இன்று ஒரு பதிப்பகம் சென்று 2010இல் அவர்கள் வெளியிட்ட எட்டு தொகுப்புகளை புரட்டி படித்தபின் ஒரு குமட்டல் போல் இந்த கேள்வி மீளமீள தோன்றிக் கொண்டிருந்தது. ஏன் கட்டுரைகள் அல்லது கதைத் தொகுப்புகளை விட கவிதைகள் அதிகம் தொகுப்புகளாகின்றன?
வெளிப்படையான காரணங்கள்: தமிழனுக்கு கவிதை எழுதுவது அவன் ரெண்டாயிரமாண்டு மரபின் தொடர்ச்சியாக இருக்கலாம். சில ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் மந்தையை ஒழுங்கி படுத்தின முன்னோடி நினைவில் மனிதர்களின் உள்ளங்காலைக் கடித்து வழிப்படுத்துவது போல். அல்லது வீட்டுப் பூனை பல்லி பிடிப்பது போல். குருதியில் ரெண்டறக் கலந்த ஒன்றாக கவிதை நமக்கு இருக்கிறது. அதைப் போன்றே வாசகர் மற்றும் பொதுமக்கள் இடத்து இன்றும் எழுத்தாளன் என்றால் கவிஞன் தான். கவிதைக்கு அடுத்தபடியாய் இங்கு மதிப்புள்ளது மேடைப் பேச்சுக்கு. உரை அறிவுஜீவுகளின் பரப்பாகவே இன்றும் உள்ளது.
கவிதை எழுதி பழகித் தான் பலரும் உரைக்கு வருகிறோம். இது உலகம் முற்றும் காணப்படுகிற பழக்கம் தான். நீட்சேவும் மார்க்வெஸும் சுராவும் ஜெயகாந்தனும் இந்த நீண்ட பட்டியலில் வருகிறவர்கள் தாம். மொழி விளையாட்டின், அதன் சங்கீதத்தின் மயக்கத்தில் இருந்து தான் வாசிப்பின் பின்னர் எழுத்தின் ஆரம்பம். ஓசையின் கிளர்ச்சி தான் மொழியின் முதல் படி. இப்படி கவிதை எழுதி தனக்கான அசல் திறமையை கண்டறிந்து கிளைபிரிந்து செல்பவர்கள் சமர்த்துகள். சிலர் கவிதைதான் தனது காண்டிப வில் என்று நம்பி ஊக்கத்துடன் நாணைப் பூட்டுகின்றனர். மிகப்பலர் ஹ்ட்லைட் வெளிச்சத்தில் உறைந்து நின்ற முயலைப் போல் ஒரு குழப்பத்தில் கவிதையிலேயே தங்கி விடுகின்றனர். அவர்களுக்கு மொழியுடனும் பண்பாட்டுடனுன் தங்கி நிற்பதற்கு கவிதையை எழுத வேண்டும். ஒருவித காலைக்கடன்.


அடுத்து வளவளவெனும் உணர்ச்சிகர கவிதை எழுதுவது ஆற்றல் சிக்கனமுள்ள செயல். ஒரு உந்துதலில் கொட்டித் தள்ளி இறுதியாய் புள்ளிகளை இணைத்து சீராக்கினால் கவிதை வடிவில் ஒன்று உருவாகி விடும். ஒரு கட்டுரைக்கு அல்லது நாவலுக்கு போல் மணிக்கணக்காய் உழைக்க வேண்டாம். அதிகமான பத்திரிகையில் பரவலாய் பிரசுரிக்கவும் கவிதைகள் எழுதுவது தான் உசிதம்.
கவிதை எழுதுவது நீத்தார் சடங்கு போல் ஒரு புனிதச் செயலாகவும் உள்ளது. மோசமான கட்டுரைகள் மற்றும் அசட்டுத்தனமான கதைகளுக்கு நிச்சயம் எதிர்மறை விமர்சனங்கள் வரும். கவிதையின் வடிவத்துக்குள் அபத்தமாக என்ன உளறி பிரசுரித்தாலும் அது அதிக கண்டனத்துக்கு உள்ளாகாது. தமிழ் சமூகம் கவிஞனை மரித்தவர்கள், முதியோர்கள், குழந்தைகள் என்ற வரிசையில் கடைசியாய் வைத்திருக்கிறது. மிகுந்த அனுசரணை மற்றும் காருண்யத்துடன் கவிஞர்கள் நடத்தப்படுகிறார்கள்.
கடைசியாகவும் முக்கியமாகவும் ஒன்று சொல்லலாம். கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது காதலை சொல்வது போல், பட்டாசு கொளுத்துவது போல், தற்கொலை முயற்சி போல் தள்ளிப் போடக் கூடாதது. என் முதல் கவிதைத் தொகுப்பை பிரசுரிக்க நான் தயங்கிய போது நண்பரும் இதழாசிரியருமான ஹமீம் முஸ்தபா
இப்படி சொன்னார்: “நீ இப்போது இக்கவிதைகளை வெளியிடுவது போல் பின்னெப்போதுமே சாத்தியப்படாது. தொகுப்பின் தரம், எதிர்வினை என்பதை விட வாழ்வின் இந்த ஒரு பருவத்தில் நீ விட்டு போகிற ஒரு அடையாளமாக இது இருக்கும். நாம் வேடிக்கையாய் அசட்டுத்தனமாய் எத்தனையோ செய்கிறோம் இல்லையா அது போல். ஆக கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது ஒரு கொண்டாட்டம். பிறந்த நாள், பூப்படைதல், சாந்திமுகூர்த்தம் போல். எண்ணற்று வெளியாகும் கவிதைத் தொகுப்புகளுக்கு பதில் சொல்லாமல் நாம் வாசகர்களும் விமர்சகர்களும் மௌனம் காப்பதன் கண்ணியம் புரிகிறதில்லையா?
Read More

Thursday, 17 June 2010

சளி உடம்புக்கு நல்லது

சளி தொண்டை வலி நிவாரணத்துக்காக டாக்டர் அறைக்குள் நுழைந்த போது அவர் மடித்து வைத்த நாளிதழ் பக்கங்களை ஓரமாய் திறந்து அவசரமாக நுணுகி பார்த்துக் கொண்டிருந்தார். என் சளி தொந்தரவுகளை திரும்பத் திரும்ப சொன்னதை பொறுமையாக கேட்டவர் இரட்டிப்பு வேகத்தில் மருந்து பரிந்துரையை எழுதினார். “ஒரு வருடமாய் சளியே இல்லை டாக்டர், ஆனால் இந்த ஒரு மாதமாக திரும்பத் திரும்ப ஜலதோசம் பிடித்துக் கொள்கிறது”.


“இல்லை அப்படி வராமல் இருந்தால் தான் நீங்கள் கவலைப் பட வேண்டும். ஒரு வருடம் சளி, ஜுரமே வராமல் இருந்தால் தான் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம்”, என்றார் டாக்டர்.

ஜுரம் வந்தது போல் ஒரு ஜில்லிடல் உடலில் பரவியது. தொடர்ந்தார்,  “இதோ பாருங்க, சளி வந்தா உங்கள் தடுப்பு சக்தி புதுப்பிக்கப்பட்டு வலுப்படும். உங்கள் உடல்நலம் அப்போது தான் மேம்படும்”. அவர் பார்வை பத்திரிகை பக்கம் சென்றது. “ஒரு நாட்டுல எந்த பிரச்சனையும் இல்லேண்ணு வச்சுக்குங்க அது நாட்டோட வளர்ச்சிக்கு கேடு. அதே மாதிரி ...”
வீட்டுக்கு வரும் வரை தலைவலி பிடித்துக் கொண்டது. ஒரு பரிணாமக் கோட்பாட்டாளர்  எழுதியது நினைவு வந்தது. ஒரு தீவு. இயற்கை வளங்கள் அதிகப்படியாக உள்ள பிரதேசம். அங்கு வாழும் பழங்குடிகளுக்கு சவாலாக புலி, சிங்கம் போன்ற வேட்டை மிருகங்களுக்கும் இல்லை. ரொம்ப ரம்மியமான அமைதியான தீவு. பல தலைமுறைகளாக அந்த மனிதக் குழு அங்கு பிற மனிதக் குழுக்களின் தொடர்பின்றி சௌகர்யமாக வாழ்ந்து வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு அறிவியலாளர்கள் இந்த தனிமைத் திவு மனிதர்களை கண்டடைகிறார்கள். பக்கத்து வனங்களின் பழங்குடிகளுடன் ஒப்பிடுகையில்  மிகவும் குள்ளர்களாக இருந்தார்கள் இவர்கள். தலைமுறை தலைமுறையாக சவாலற்ற வாழ்வு அவர்களை குறுக்கி விட்டது. பிரச்சனைகளற்ற சூழல் அவர்களை குள்ளர்களாக்கி விட்டது. கண்ணீரற்ற வாழ்க்கை கசப்பானது.
Read More

Sunday, 28 March 2010

நிலவை வாங்கிய MRF நிறுவனம்



தீபாவளி வாணவேடிக்கையின் போது வெடி கொளுத்த மத்தாப்பு பயன்படுவது போல் ஆகி விட்டது ஐ.பி.எல்லில் கிரிக்கெட்டின் அந்தஸ்து. மூன்று பந்துகளிடையே விளம்பரம், ராட்சத திரையில் விளம்பரம் ... பந்தை பிடித்தால், விட்டால், அடித்தால், வெளியேறினால், விழுந்தால் என ஒவ்வொன்றுக்கும் ஒரு விளம்பரதாரரின் பெயரிட்டு சூடம் காட்டுவது ... இப்படி இந்த சந்தைப்படுத்தல் ஜூரம் இப்போது நூறு டிகிரி தாண்டி நடுங்குகிற நிலை வந்து விட்டது. பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் கிங் பிஷர் விளம்பரத்துக்கான ராட்சத பலூன் அரங்குக்கு மேலே வாலில்லாத கங்காரு போல் தொங்க வர்ணனையாளர்கள் கிரிக்கெட்டை விட்டு அதனை நிமிடத்துக்கு ஒருமுறை குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். இன்றைய சென்னை - ராஜஸ்தான் ஆட்டத்தில் எம்.ஆர்.எப் ராட்சத பலூன் மிதக்க MRF நாமவளி. “எம்.ஆர்.எப் இந்தியாவிலேயே அதிகப்படியான பைக் டயர்களை உற்பத்தி செய்கிறார்கள்” என்று திரும்பத் திரும்ப சொன்னவர்கள் சங்கடம் தோன்றியதாலோ என்னமோ “டென்னிஸ் லில்லி எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேசனில் 20 வருடங்களுக்கு மேலாக பணி செய்கிறார்” என்று சேர்த்துக் கொண்டனர். டேனி மோரிசன் “டென்னிஸ் லில்லி ஒருவேளை இந்த பலூனில் இருப்பாரோ” என்று அடக்கமாய் நக்கல் செய்தார்.



அவர் பேசி முடித்து மைக் அடுத்த வர்ணனையாளருக்கு போனது. உடனே மீண்டும் எம்.ஆர்.எப் ராட்சத பலூன் மிதக்கும் காட்சிகள் அடுத்தடுத்து வந்தன. எம்.ஆர்.எப் குறித்து உடனே புகழ வேண்டிய கட்டாயம் இவருக்கும். “இதோ எம்.ஆர்.எப் பலூன்” என்றார். அவர் தொடருமுன் முன் எதிர்பாராமல் ஒளிப்பதிவாளர் கோணத்தை மாற்றி நிலவைக் காட்டினார். உடனே வர்ணனையாளர் கடமை வழுவாது தொடர்ந்தார்: “இதோ எம்.ஆர்.எப் நிலா;விரைவில் நிலவிலும் எம்.ஆர்.எப் சென்று விடும் ...”
Read More

Friday, 14 August 2009

பின் தொடரும் செருப்பின் குரல்



கர்நாடக மாநிலத்தின் ஹசனிலுள்ள ஜெய்ன் போஜனின் மலையுச்சிக் கோவிலுக்கு என் மனைவியின் அலுவலக சுற்றுலாக் குழுவுடன் சென்றிருந்தேன். கோயில் வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் மொய்க்கும் புகைப்பட வியாபாரிகள் மற்றும் வழக்கமான சுற்றுலாத்தல கடைகளின் வரிசை. மலையுச்சிக்கு செல்ல நெளிந்தோடும் கற்படிக்கட்டு. ஏறிட குறைந்தது 40 நிமிடங்கள் தேவைப்படும். எனக்கு உடனே படியேறிப் பார்க்கும் உற்சாகம் வந்தது. நான் அணிந்திருந்த காலிப்பர் எனும் போலியோ காலுக்கான கருவியில் ஷூவை மட்டும் தனியாக கழற்றும் வசதி உண்டு. பொதுவாய் காவித் தீவிரவாதிகளுக்கு இணங்கி நானாகவே ஷூவை கழற்றி விட்டு கோவில்களுக்குள் பிரவேசிப்பேன்; யாருமே எனக்காய் செருப்பு சம்மந்தமான ஆலய புனித விதிமுறைகளை விவரிக்கும் சிரமத்தை நான் தருவதில்லை. ஆனால் அன்று என் காலிப்பரின் பாதப் பகுதி சற்று உடைந்திருந்தது. ஷூவை கழற்றி விட்டு வலியுடன் தான் நடக்க முடியும். அதோடு காலிப்பர் மேலும் உடைந்து போய் நான் முடங்கிப் போகும் வாய்ப்பிருந்தது. கழற்றாமலே நுழைந்தேன்.

படிக்கட்டுகளின் வாயிலில் உக்கிரமான தோரணையுடன் காவலாளி நின்றான். நாலைந்து படிக்கட்டுகள் ஷூவை கழற்றாமல் ஏறியிருப்பேன். அவன் தடியை தட்டி கன்னடாவில் இறங்கு என்றான். அவனிடன் நூறு ரூபாய் தள்ளினால் என்ன என்று எங்கள் குழுத் தலைவி பிரீத்தாவிடம் கேட்டேன். அவர் பதறி விட்டார். "அய்யோ இவர்கள் எல்லாம் மிகக்கறாரானவர்கள்". தலை போனாலும் விதிமுறைகளை யாரும் மீற மாட்டார்களாம். குழு நண்பர்கள் என்னை வெளியே அமர்ந்திருக்கச் சொன்னார்கள். ஒரு காலணிக்காக குழுவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, உடல் வித்தியாசம் காரணமாய் வாழ்வனுபவம் மறுக்கப்படுவது நினைத்து எனக்கு நெஞ்சடைத்தது. தனியாய் சென்றிருந்தால் ஒருவேளை பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஊனர்களுக்கு தனிமை என்றுமே அரண் போன்றது. ஊனர்கள் பூரண மனிதர்களோடு பொது இடங்களில் செயலாற்றுவது குழந்தைகளின் பூங்காவில் முதியவர்கள் காத்திருப்பது போன்றது; அல்லது படுக்கையில் விரைப்பை அடுத்தடுத்து இழந்த ஆண் தொலைக்காட்சி பார்ப்பது போன்றது. என் வலிமையான நண்பர் குழுவுக்கு இணையாய் மலையுச்சி ஏறும் பெரும் உந்துதல் என்னை கோவில் அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்பியது. அவரது உயர்ந்த வழுக்கை நெற்றியும் புன்னகை நெளியும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உதடுகளும் ஆரம்பத்தில் நிரம்ப நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர் வார்த்தைகளுக்கு தகுந்த இடைவெளிகள் விட்டு எந்திரகதியில் சொன்னார்: "செருப்புகளுக்கு அனுமதி இல்லை".

"ஐயா நான் அணிவது துணியால் செய்த செருப்பு. மேலும் கடவுள் முன் அனைவரும் சமம்."

குழுவுக்குள் அடையாளத்தை காப்பாற்றும் பதற்றம் ஒருவரை இவ்வாறெல்லாம் படு அபத்தமாய் பிதற்ற வைக்கும். அந்த கோயில் புனித காப்பாளர் இந்த அனாவசிய விவாதங்களுள் செல்ல சிரமப்பட வில்லை.

"உங்களுக்கு வேண்டுமானால் டோலியில் போங்கள். சுவாமி சன்னதி அருகில் வரை போய் பார்க்கலாம்"

அவர் சொன்ன வசதி மூங்கில் ஊஞ்சல் நாற்காலியில் பிதாமகன் வில்லன் மகாதேவன் பாணியில் அடுத்தவர்களால் தூக்கிச் செல்லப்படுவதே. 200 ரூபாய் தட்சிணை வேறு.

அப்போது அது எனக்கு என் தனிப்பட்ட சுதந்திரம் மீதான அத்துமீறலாய் தோன்றியது. தானாய் ஏறிச் செல்ல தயாராய் இருந்த என்னை போய் ரூபாய் 200 செலவழித்து பல்லக்கில் போ என்று கட்டளையிட இந்த மாண்புமிகு மனிதர் யார் எனப் பட்டது. அதுமட்டுமல்ல, வேறு ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. எங்கள் பூனையை பிளாஸ்டிக் உணவுக் கூடையில் அடைத்து வைத்து ஸ்கூட்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம். அது போக்குவரத்து இரைச்சல் கேட்டு பயந்து ஊளையிடும். இத்தனை பேர் நடந்து போக நான் மட்டும் ஒரு பிராணி போல் கொண்டு செல்லப்படும் கற்பனை ஒரு நொடி என்னை கலங்க வைத்தது. நண்பர் குழு மலையேற நான் கொதிப்பும் குமுறலுமாய் திரும்பினேன். எனக்கு திரும்பச் சென்று அந்த புனிதக் காப்பாளரிடம் "உன் ஓத்த சாமியின் குண்டியில் நான் மிதித்தால் பாவமா?" என்று கத்திட தோன்றியது. பாதையோர கடையில் விற்கும் ஜெயின் சிலையை வாங்கி வீசி உடைக்க, கோயில் வாயில் சிற்பம் மீது காறி உமிழ என பல்வேறு வன்முறைக் கற்பனைகள் கிளர்ந்தன. ஆனால் அவை என் சிந்தனை முதிர்ச்சிக்கு (!) அப்பாற்பட்டவை ஆகையால் தவிர்த்தேன். நிலப்பிரபுத்துவ சுரணையை விடாமல் ரூபாய் ஒன்றுக்கு சுற்றுலாத்தல புகைப்படங்கள் விற்க நெருங்கும் எளிய நபர்களிடம் விரக்தி மற்றும் ஆத்திரத்தை வெளியிட்டேன்:
" இந்த குப்பை யாருக்கு வேணும், உன் கடவுளை போய் ஓக்கச் சொல் "

இவ்வாறு கத்தி முடித்து தணிந்த பின் இறுதியாய் ஒரு புகைப்பட விற்பனையாளரிடம் உண்மை நிலவரத்தை அமைதியாய் சொன்னேன். அவருக்கு ஆங்கிலம் புரிந்ததா தெரியவில்லை. ஆனால் சொன்னார்:
" எனக்கு நீங்கள் சொல்வது புரிகிறது. I am a photoseller. நீங்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் செய்யுங்கள் "

நான் நிறைய பேச வேண்டியிருந்தது. ஆனால் அவர் மேலும் இதை சொல்லி விட்டு தன் கையிலிருந்த புகைப்பட கத்தையோடு மற்றொரு வடவிந்திய வாடிக்கையாளரை நோக்கி நகர்ந்தார்:
" இந்தி பேசுவீங்களா? அப்படியென்றால் நாம் மேற்கொண்டு பேசலாம்"

அன்று வரை இந்தியை வெறுத்ததற்காக நான் என்னை சில நொடிகள் வெறுத்தேன்.

உட்காரப் பிடிக்காமல் அங்கும் இங்குமாய் தெருக்களில் அலைந்தேன்.

மலையுச்சியில் இருந்து மனைவி குறும்பேசியில் பேசினாள்:
" வரமுடியலேண்ணு வருத்தமா?"
" சேச்சே எனக்கென்ன... "

தேநீர் அருந்தி, அழகான கடைப்பெண்ணை வேடிக்கை பார்த்து, பூங்காவில் அமர்ந்து எதிர்பெஞ்சு பள்ளிக்குழந்தைகளுடன் கற்பனை உரையாடல் நடத்தி, வேலிச்செடிகளின் நேர்த்தியை கவனித்து ... எனக்கு எங்கும் இருப்பு கொள்ளவில்லை. என் மனைவி, மாமியார் சொல்வது போல் சாந்தசொரூபியான நான் அப்போது மனக்கொந்தளிப்பை எப்படி அடக்க என்று புரியாமல் தவித்தேன். எழுத வேண்டும் எனும் உணர்வு விரைப்பை அரிப்பு போல் சட்டென ஏற்பட்டு தொடர்ந்தது. பல விசயங்களை எழுத திட்டமிட்டேன். உடனடி பேனா, காகிதம் வேண்டும். அங்குள்ள கடைகள் ஒவ்வொன்றும் சுற்றுலாப் பயணிகளின் வினோத மனோபாவத்தை உத்தேசித்து உருளைக்கிழங்கு சிப்ஸ், நடுங்கும் குளிருக்கு இளநீர், கோக், பெப்ஸி, தலையில் அணிய கவ்பாய் தொப்பி, சாவி கொடுத்தால் தாவும் கோழிக்குஞ்சுகள் ஆகியவை மட்டும் நிரப்பி வைத்திருந்தன. சாலை முடிவில் இருந்த ஒரே தேனீர் கடையை ஒட்டி வரிசையில் அய்யப்ப சாமிகள் பல தோரணைகளில் வேட்டி தூக்கி சிறுநீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். பல கடைகளில் அலைந்து தேடி ஒரு கடையில் பேனா மட்டும் தருகிறேன் என்றார்கள். நான் விடாப்பிடியாய் ஏதேனும் பழைய காகிதம் ஏனும் கொடுங்கள் என்றேன். கடைக்காரர் மனைவி ஓரங்களில் எலி கடித்த அட்டையில்லாத ஒரு பழைய நோட்டு புத்தகத்தை தந்தார். கடைக்காரர் இளித்துக் கொண்டு "இலவசமாக வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். அருகிலுள்ள திண்ணையில் அமர்ந்தேன். வெகுநேரம் எழுத ஏதும் தோன்றவில்லை. பக்கத்து முடிதிருத்தும் கடைத்திண்ணைத் தாத்தா " அந்த ஊர்?" என்று ஆங்கிலத்தில் வினவினார். "தமிழ்நாடு" என்றவுடன், கண்ணில் வெளிச்சம் தெரிய, தமிழில் "தமிழ்நாட்டிலே எங்கே சார்" என்றார். " நாகர்கோவில் ". எதிரில் தொடை தெரிய வெள்ளைக்காரி நம்மூர் குறுந்தாடி நபர் ஒருவரின் கரத்தை முதுகுக்குப் பின்னால் பிடித்துக் கொண்டு விரைந்து போனார். கூட்டமாய் கடக்கும் பக்தகோடிகளின் வெறுங்கால்களை கவனிக்க எரிச்சல் மீண்டும் கிளம்பியது. " மதவாதிகள் முட்டாள்கள் தானே. குஜராத்தில் குழந்தைகளையும், கர்பிணிகளையும் குழிக்குள் தள்ளி வெட்டிக் கொன்றவர்கள் இவர்களுக்கு தூரத்து சொந்தம் தானே " எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் நேரடி அவமானமும், மறுதலிப்பும் புத்தக தர்க்கங்களை விட காத்திரமான நிஜங்களாய் தெரிந்தன. அப்போது தோன்றிய குரோதத்தில் லஷ்கர் தோயிபாவிலிருந்து கோவில்களை தகர்க்க அழைத்திருந்தால் ஆவேசமாய் கிளம்பியிருப்பேன். தலைமுறைகளாய் நிராகரிப்புக்கும், அவமானத்துக்கும் அவசியமின்றி உள்ளாக்கப்படும் தலித்துகளின் பொறுமையை எண்ணி திகைத்தேன். என் வலி எம்மாத்திரம்.

மனைவி குறும்பேசியில் மீண்டும் அழைத்தாள்: " கோயில் வளாகத்துக்குள் வா, வழியோர கடை ஒன்றில் வளையல்கள் வாங்கித் தா "

" அந்த கேவலமான இடத்தில் இனி கால் வைக்க மாட்டேன் ", நான் உறுமினேன்.

" கோயிலுக்குள் நீ வர வேண்டாம், வளாகத்துக்கு வந்தால் போதும் "

" அந்த பிராந்தியத்துக்குள் நிச்சயம் வர மாட்டேன் "

ஒரு நாற்பது வயதுப் பெண் கன்னடத்தில் பிச்சை கேட்டாள். அவளது சதுர வடிவ மர ஒடு அழகானது.
" உன் ஜெயின் கடவுளுக்கு இதோ நான் போடும் பிச்சை! " ஒரு ரூபாயை வன்மத்தோடு போட்டேன். அவள் என்னை நீடுழி வாழ வாழ்த்திப் போனாள்.

திரும்பி வந்த மனைவி கோவிலை ஏகத்துக்கு டிஜிட்டல் நிழற்படங்கள் எடுத்துத் தள்ளியுள்ளதாய் சொன்னாள். எனக்காக. ஒரு சுவர், கல் கூட விடவில்லையாம். மிக அழகான சிற்பங்களாம். எனக்குள் ரத்தம் மீண்டும் சூடாகியது. யாரையேனும் மாற்றி மாற்றி அறைய வேண்டும்.

" உன் போட்டோ ஒன்றும் பார்க்க வேண்டாம் " நிழற்படக்கருவியை தள்ளி விட்டேன்.
" உன்னை மன்னிக்கவே மாட்டேன், மடையா! "

அவள் கண்கள் பொங்கியிருந்தன.

இரவில் இப்போது குறட்டை விட்டு தூங்கும் வரை அவள் என்னிடம் பேசி விடவில்லை. திருட்டுத்தனமாய் நிழற்படக்கருவியை திறந்து படங்களை ரசிக்கிறேன். எவ்வளவு அருமையான அனுபவத்தை இழந்திருக்கிறேன். ஒருவேளை பல்லக்கில் ஏறி சென்றிருக்கலாமோ!

எனக்குப் புரிகிறது: என் தவறுதான். அன்று நான் தான் சமயோசிதமாய் விதிமுறைகளை சமாளித்திருக்க வேண்டும். மனிதன் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் உட்பட்டு மட்டுமே சிந்திக்கத் தெரிந்த மிருகம். ஒரு மதவாதியிடம் அணிபணிவது போல் ஏமாற்றி சமாளிப்பது மட்டும் உசிதம். ஒரு பூனைக்குட்டியை கூடையிலிட்டு பத்திரமாய் அழைத்துச் செல்வது போல் அவனைக் கையாள வேண்டும். நான்தான் தவறு செய்து விட்டேன். அக்கணம் என் மூளை செயல்படவில்லை.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates