Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Friday, 31 January 2014

மெய்ப்பாடும் மிளகாயும்




சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத்துறையும் பிரசிடென்ஸி கல்லூரியில் தமிழ்த்துறையும் இணைந்து கவிதையில் பற்றி நேற்று ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தொல்காப்பிய மெய்ப்பாடு கோட்பாட்டை பச்சை மிளகாய் உதாரணம் கொண்டு மிக எளிதாய் விளக்கினார்.

 மெய்ப்பாடு வாசிப்பு எனும் செயல் எப்படி நடக்கிறது என்பதை படிப்படியாய் விளக்கும் ஒரு கோட்பாடு. மெய்ப்பாட்டை புரிந்து கொள்ளும் பார்வை எப்படி சமகாலத்தில் எப்படி மாறி வந்துள்ளது என்பதை பேராசிரியர் அழகரசன் என்னிடம் பின்னர் தனிப்பட்ட முறையில் விளக்கினார். சமகாலத்தில் பிரபலமாய் உள்ள reader response விமர்சன கோட்பாட்டோடு தொல்காப்பிய சிந்தனை எவ்வளவு நெருக்கமாய் உள்ளது என்பது வியப்பான விசயம். இதையெல்லாம் பிறகு பேசுவோம். முதலில் பச்சை மிளகாய்.
ஸ்ரீனிவாசன் ஒரு புத்தகத்தை பச்சை மிளகாயோடு ஒப்பிடுகிறார். பச்சை மிளகாயின் வடிவம் இருக்கிறது அல்லவா அது தான் ஒரு புத்தகம். அதன் உள்ளே உறைந்துள்ள காரம் தான் புத்தகத்தின் உணர்ச்சி அல்லது கருத்து. மிளகாய் கடித்ததும் காரம் உறைக்கிறது அல்லவா இது தான் புத்தகம் வாசித்த்தும் நமக்குத் தோன்றும் மனநிலை. இனி ஒரு நிலை உள்ளது. இது தான் விசயத்தை சிக்கலாக்குகிறது. பச்சை மிளகாயை கடித்த்தும் நீங்கள் ஒரு முகபாவனை வெளிப்படுத்துகிறீர்களே அது போல் புத்தகம் வாசித்த்தும் நீங்கள் மனதினுள் அதை புதைக்காமல் வெளிப்படுத்துகிறீர்கள் என்கிறார் ஸ்ரீனிவாசன். இது புத்தகம் பற்றின உங்கள் மனநிலையோ எதிர்வினையோ ஆக இருக்கலாம். இந்த மனநிலையை நீங்கள் வெளியே சொல்லாமலோ எழுதாமலோ இருந்தால் கூட இது வெளிப்பாடு தான் என்கிறார். குழப்பமாக இருக்கிறதா? இது குழப்பமான ஒன்று தான்.

இன்றைய விமர்சன போக்கு வாசகனையும் படைப்பாளியாகத் தான் பார்க்கிறது. கற்பனை மற்றும் தன் அனுபவம் அல்லது அறிவு மூலம் அவன் ஒரு படைப்பை வாசிக்கையில் விரித்துக் கொண்டே போகிறான். பல சமயங்களில் எழுத்தாளன் உத்தேசிக்காத்து எல்லாம் அவனுக்கு தோன்றுகிறது. இப்போது அவன் எழுத்தாளனுக்கு நிகர் ஆகிறான். அவன் மனதில் தோன்றுகிறது புத்தகத்தில் எழுதப்பட்ட படைப்புக்கு நிகர் ஆகிறது. வாசகனின் படைப்பாக்கம் ஒரு அரூப நிலையில் நடக்கிறது என்பது தான் வித்தியாசம். பச்சை மிளகாய் கடித்து முகம் கோணும் போது வெளியே தெரிகிறது. ஒரு கவிதையை வாசிக்கையில் அது போல் தெரிவதில்லை. ஆனாலும் அதுவும் ஒரு வெளிப்பாடு தான் என்கிறது தொல்காப்பியம்; அல்லது ஸ்ரீனிவாசன் அவ்வாறு மெய்ப்பாட்டை அவதானிக்கிறார்.

இன்றுள்ள ஒரு கோட்பாட்டுக்கான விதை ரெண்டாயிரம் முன்பே விதைக்கப்பட்டுள்ளது என்பது மிக மிக வியப்பானது. நமக்கு எப்படியான ஒரு தொடர்ச்சி இருக்கிறது பாருங்கள். ஒரு விசையை துவக்கவோ அழிக்கவே முடியாது என்ற நியூட்டானிய கருத்தாக்கத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அரிஸ்டாட்டில் பேசி இருக்கிறார். நாம் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் முன்னோடிகளின் காலடிச் சுவடுகள் நீள்கின்றன. நாம் தனியாகவே இல்லை!

கடைசியாக: இப்படியான செறிவான கூட்டங்கள் நம் இலக்கியப் பரப்பில் நடப்பதில்லை என்பது மிக வருத்தத்திற்குரிய விசயம். இங்கு நடப்பதெல்லாம் புத்தக சந்தைப்படுத்தல் கூட்டங்கள் தாம். கருத்தாக்கம் சார்ந்த, புதிய விசயங்களை விளக்கும் விவாதங்கள் நவீன இலக்கிய பரப்பில் முன்பு போல் நடைபெற வேண்டும். சென்னையில் நடைபெறும் தற்போதைய கூட்டங்கள் விளம்பரங்கள் மட்டுமே இடைவெளியின்றி வரும் ஒரு டிவி சேனல் போல் உள்ளன. இந்நிலைமை மாறும் என எதிர்பார்ப்போம்
Read More

Wednesday, 28 December 2011

பாலியலும் தமிழ்ப்புனைவும்: பிராய்டில் இருந்து கலகம் வரை




பாலியலை காத்திரமாக நேரடியாக பேச பொதுவெளியில் தடை உள்ளது. அதனால் வெகுஜன இதழ் கதைகளில் பாலியல் வேறுவிதமாக எழுதப்பட்டது. மிகையாக குற்றவுணர்வு தோன்ற சற்று வக்கிரமான சித்திரங்களுடன். ஆனால் சிற்றிதழ்களில் பாலியல் எழுத அபாரமான சுதந்திரம் இருந்தது. பாலியல் கதைகள் எழுதினவர்கள் உடனடியாக கவனிக்கப்பட்டார்கள்
அவை பொதுவாக மூன்று வகை. கிளர்ச்சி பாலியல் எழுத்து. உளவியல் பாலியல். அரசியல் பாலியல். இந்த மூன்று வகையுமே முக்கியம் தான்.
கிளர்ச்சி பாலியல் எழுத்தின் சமகால உதாரணம் வா.மு.கோமு, ஜே.பி சாணக்யா ஆகியோர். இருவருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. கோமுவின் சித்தரிப்புகள் பெண் காமம் பற்றின ஆணின் பகற்கனவுகள். ஏற்கனவே பாலகுமாரன், புஷ்பா தங்கதுரை போன்றவர்கள் ஒரு ஒழுக்கமனதுக்குள் இருந்து எழுதியவற்றை அநேகமாய் அதே மொழியில் ஆனால் ஒழுக்க நெருக்கடி இன்றி அரை சிட்டிகை எதார்த்தமும் சேர்த்து எழுதுவது கோமுவின் பாணி. அவரை தீவிர இலக்கிய-வணிக இலக்கியத்துக்கு இடையேயான பாலியல் பாலம் எனலாம். ஜே.பி சாணக்யா ஒருவகையில் கோணங்கி, எஸ்.ராவின் மரபின் தொடர்ச்சி. குறியீட்டு/உருவக மொழியில் பாலியல் உறவுகள் பற்றி பேசுபவர். ஆனால் நமது பாலியல் கதை மரபை உடைத்து காமப் பிறழ்வை சுவாரஸ்யமான நடையில் எழுதியவர் சாரு நிவேதிதா. ஒருபால் உறவு, சுயமைதுனம், taboo காமம் ஆகியவை அவரது களம். பரவசமான நடையில் எழுதப்பட்ட உன்னத சங்கீதம்தமிழின் கிளர்ச்சியான பாலியல் எழுத்தின் சிறந்த உதாரணம். சாருவை நாம் தி.ஜானகிராமனுடன் ஒப்பிடலாம்.
தி.ஜா இரண்டாவது வகை பாலியல் எழுத்தாளர். Taboo தான் அவரது முக்கிய களம். ஆனாலும் நிகழாமல் அடக்கி வைக்கப்பட்ட காமம். இதனால் மிக கற்பனை சாத்தியம் கொண்டதாக தி.ஜாவின் புனைவுகள் விளங்குகின்றன. வயதில் மூத்த யமுனாவை பாபு மோகிக்கும் கதை மோகமுள். மகன் அம்மாவை காமுறும் கதை அம்மா வந்தாள். தி.ஜா சாரு, கோமு, சாணக்யா அளவுக்கு சர்ர்சைகளை உருவாக்கவில்லை. அதற்கு இரு காரணங்கள். ஒன்று அவர் ஒரு இலக்கிய காமத்தை எழுதினார். நிஜ வாழ்வில் இருந்து சற்றே விலகிய நாடகீயமான காமம் ஆ.மாதவனும் இந்த ராஜபாட்டையில் தான் சென்றார். உதாரணமாய் “முலைகளை வெறித்தான் என்பதை “கழுத்துக்கு கீழ் மேடிட்ட பகுதியில் பார்வையை ஓட்டினான் என எழுதுவது. இரண்டாவது சொற்றொடர் தான் அதிக கிளர்ச்சி தருவது என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அது நம்மை அதிர்ச்சியுற வைக்காது. தி.ஜாவும் ஆ.மாதவனும் பிராய்டின் உளப்பகுப்பிவியலால் கவரப்பட்டவர்கள். வெளிப்படாமல் மனதுக்குள் தேங்கிய காமமே மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் செலுத்துகிறது என்றார் பிராயிட். ஆக “அம்மா வந்தாளில் அம்மா தன் பாலியல் குற்றவுணர்வில் இருந்து விடுபட மகனை வேதபாடசாலையில் பயிற்றுவிக்க அனுப்புகிறாள். மகனுக்கு அம்மா மீது உள்ள மோகத்தில் இருந்து விடுபட வேண்டும்  அதற்கு அவன் வேதம் படிக்காமல் அம்மாவுக்கு நிகரான மற்றொரு பெண்ணை அணுகி காதலிக்கிறான். ஆனால் ஆ.மாதவனை விட தி.ஜாவில் வாசிப்பு சுதந்திரம் அதிகம். சமீபமாக வெளிவந்த பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி மற்றொரு குறிப்புணர்த்தும் taboo கதை. சாரு “மோகமுள்ளுக்கான ஒரு எதிர்வினைக்கதை எழுதி உள்ளார். “முள் என்றொரு சிறுகதை. அதில் கதைசொல்லி தன் அத்தை உடனான காமத்தை வெளிப்படையான லகுவான மொழியில் பேசுகிறான். தி.ஜாவில் இருந்து சாரு மற்றும் கோமுவரை உள்ள தூரம் வாசலுக்கும் படுக்கைக்கும் இடையே இருப்பது தான். இன்றுள்ள “மலர்மஞ்சத்தை அடைய நமக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்துள்ளன. அதே வேளையில் நிகழ்ந்து முடியும் காமத்திற்கு இலக்கியமதிப்பு குறைவு என்ற நகைமுரணையும் சொல்லியாக வேண்டும்.
இன்றைய பாலியலுக்கும் நேற்றைய பாலியலுக்கும் மற்றொரு முக்கிய வித்தியாசம் உள்ளது. அது அரசியல்.
காமமும் வன்முறையும் நமக்குள் உறைந்துள்ள பண்புகள். அவை நம் தீமையை வெளிப்படுத்துகின்றன என்று இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்கள் நம்பினார்கள். உதாரணமாக புதுமைப்பித்தனின் “காஞ்சனையில் காமம் ஒரு மோகினிப் பேயின் வடிவில் வெளிப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜெயமோகன் தம்புரானும் தம்புராட்டிகளும் தோன்றும் காமப் பேய்க் கதைகள் (நிழல்வெளிக் கதைகள்) எழுதினார். தீமை கொடியது என்பதால் இந்த வகை கதைகளில் காமத்துடனான மனப்போராட்டம் பிரதானமாகிறது. ஜெயமோகன் காமத்தை தூயமிருக நிலையாக (ஊமைச்செந்நாய்), உளவியல் சிடுக்கின் விடுபலாக (பின்தொடரும் நிழலின் குரல்) சித்தரிப்பவர். அவரது பாத்திரங்கள் காமத்தின் உச்சத்தை எட்டியதும் ஏமாற்றமும் வெறுப்பும் அடைகின்றனர் (நாகம், காடு)
ஜி.நாகராஜன் விபச்சாரிகளை முன்வைத்து பல கதைகள் எழுதினார். ஆனால் அவரது விபச்சாரிகள் அபலைகள். ஒரு ஆண் தோன்றி தன்னை காப்பாற்றக் கூடும் என்று ஏங்கும் காமக் கைதிகள். இவர்கள் ஆணின் பார்வையில் படைக்கப்பட்ட கற்பனாவாத பாத்திரங்கள் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. ஜி.நாகராஜன் பாலியலை கையாண்ட விதம் பிரத்யேகமானது.
அவரது பாத்திரங்களுக்கு கட்டற்ற காமம் லட்சியம். ஏன்? ஜி.நாவுக்கு காமம் என்பது காமம் அல்ல. மரபில் இருந்து விடுதலை. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்திரமயமாக்கம், உலகப்போர், அறிவியல் வளர்ச்சி ஆகிய காரணங்களால் மரபான விழுமியங்கள் மீது மனிதன் நம்பிக்கை இழந்தான். பரஸ்பர அன்பும் காதலும் அப்படியான ஒரு விழுமியம். ஜி.நாவின் நாயகன் காதலை மறுத்து காமத்தை மட்டும் ஏற்கிறான். அதன் எதிர்விளைவுகளை சந்திக்கிறான். இந்த மரபு vs காமம் மோதலை லா.ச.ரா தனது “அன்புள்ள ஸ்நேகிதனுக்கு கதையில் சித்தரித்திருக்கிறார்.
ஆனால் கலாச்சார அரசியல், அதிகார அரசியல், பெண்ணியம் போன்ற சமகால கருத்தாக்கங்கள் காமத்தை ஒரு அரசியல்/தத்துவப் பிரச்சனையாக்கின. சுருக்கமாக காமம் ஒரு கலகம் ஆகியது. சமூகம் காமத்தைக் கொண்டு மனிதனின் மீது அதிகாரம் செலுத்துகிறது. காமத்தை நேரடியாக எழுத்தில் சந்திப்பது இந்த அதிகாரத்துக்கு எதிரான ஒரு கலகம். ஆக இன்றைய எழுத்தில் ஒருவன் சுயமைதுனம் அல்லது ஆசனப்புணர்ச்சியில் ஈடுபட்டால் அது பீறிடும் காமத்தால் மட்டுமல்ல, சமூக அடக்குமுறையை எதிர்க்க; பொதுப்போக்கோடு உடன்படாத தனது அடையாளத்தை வலியுறுத்த. இவர்களுக்கான முன்னோடிக் கதைகளை எண்பதுகளில் எழுதியவர்கள் ராஜேந்திர சோழன், ஜெயகாந்தன் போன்றோர். பிராயிடிய காமத்துக்கும் இன்றைய அரசியல் காமத்துக்கும் இடையில் உள்ள புள்ளி இவர்கள்.
குழந்தைகள் மீதான காமம்? சுஜாதாவின் சங்கிலிகதையில் ஜெஞ்சுலட்சுமி என்ற லட்சணமான சின்ன குழந்தை ரயிலில் வருகிறது. பிரயாணிகள் அதை வாங்கி ஆளாளுக்கு ‘பச்சக் பச்சக் என்று முத்துகிறார்கள். சுஜாதா எழுதுகிறார் “பேருக்கு பேர் கொடுத்த எல்லா முத்தங்களிலும் களங்கமில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை
கவிதையில் கடந்த பத்துவருடங்களில் எழுத வந்த பெண் கவிஞர்கள் அனைவருமே அநேகமாக பாலியல் அரசியல் கவிதைகள் எழுதினார்கள். பெண்மொழி என்ற சொல்லாடல் பிரபலமாகியது. சரி “ஆண்மொழி என்றால் என்ன? “திமிறிப் புடைத்து எழுந்தது காமம் என்ற சாதாரண வாக்கியத்தில் உள்ளது ஒரு ஆண்குறி விரைப்பு பற்றின உருவகம் தான் அது. இப்படி தமிழ் முழுக்க கறைப்பட்டுள்ளதால் அதனை பெண்மொழியாக்கி சலவை செய்வது இவர்களின் நோக்கம் சுகிர்தராணி குறிப்பிடத்தக்கவர். சுவாரஸ்யமாக, பிரமிளை தவிர நமது ஆண்கவிஞர்கள் மிக அரிதாகவே பாலியல் தொனிக்கும் வரிகளை (ஆடையின் இரவினுள் உதயத்தை தேடும் பருவ இருள்) எழுதினர். பெண்ணிய கவிஞர்கள் தங்களது லட்சியம் “இரவினுள் உதயத்தை (லிங்கத்தை) தேடுவது அல்ல என்று உறுதியாக மறுக்கிறார்கள். 1960இல் இருந்து இன்று நாம் பாலியல் கவிதையில் வந்துள்ள புள்ளியை பிரமிள் vs பெண்ணியம் என்று சுருக்கலாம்.
(2011 டைம்ஸ் நவ் தீபாவளி மலரில் வெளியானது)
Read More

Sunday, 11 December 2011

ஒரு கவிதை உரையாடலும் நிறைய சிரிப்பும்




நேற்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் அவர்களின் படைப்பாற்றல் ஸ்டுடியோ எனும் நிகழ்வுக்காக 11ஆம் வகுப்பு மாணவர்களிடம் நவீன கவிதை குறித்து இரு பகுதிகளாக ஐந்து மணிநேரம் உரையாடினேன். நான் எதிர்பார்த்ததை விட மாணவ மாணவிகள் கூர்மையாக ஆர்வமுடன் இருந்தார்கள். 
பொதுவாக என் வகுப்பில் கவிஞர்கள் யாராவது உள்ளார்களா என்று விசாரித்தால் ரொம்ப தயங்கிய பிறகு ஒருவர் இருவர் கை தூக்குவார்கள். ஆனால் இங்கே அநேகமாய் மொத்த வகுப்பும் தம்மை எழுத்தாளர்கள் என்று தன்னம்பிக்கையுடன் அறிவித்தது. பலரும் ஆர்வமுடன் வந்து தம் கவிதையை வாசித்தனர். அதற்கு பிறர் அசட்டுத்தனமாய் கமெண்ட் அடிக்காமல் ஒழுங்காய் கைத்தட்டி ஆதரித்தார்கள், அங்கங்கே பிசிறாய் சிரித்தார்கள். தொடர்ந்து எழுத்தாளர்களை சந்தித்து உரையாடுவது தான் இந்த எழுத்தாள ஆர்வத்துக்கு காரணம் என்று யூகித்தேன்.
யாரெல்லாம் வாழ்வில் தனிமையை உணர்கிறீர்கள் என்று கேட்டால் பத்து பேர் எழுந்து கொண்டார்கள். சற்று அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தாலும் தங்கள் தனிமையின் காரணத்தை தயக்கமின்றி அவர்கள் வெளிப்படுத்தியது ஆறுதல் ஏற்படுத்தியது.
கற்பனாவாத கவிதைக்கும் நவீன கவிதைக்குமான வித்தியாசங்களை விளக்கி நவீன கவிஞர்களை கவிதைகளை அறிமுகப்படுத்துவதில் முடித்தேன். பயர்பாயிண்ட் பயன்படுத்தியது எனக்கு ஒரு வித்தியாசமான உபயோகமான அனுபவமாக இருந்தது. உரையாடல் முடித்ததும் செஸ்லோவ் மற்றும் பசுவய்யாவின் இரு கவிதைகளை காட்டி அவை என்ன வகை மற்றும் அவற்றில் உள்ள கவிதைக்கருவிகளை அடையாளப்படுத்த கேட்டேன். பசங்க எந்தளவுக்கு கூர்மை என்றால் பலரும் பகடி, குறியீடு,படிமம் என்று சரளமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் செஸ்லோவின் கவிதையில் வரும் குறியீடு வீடு தான், அக்குறியீட்டின் பொருள் வாழ்க்கைக் கனவுகள் என்று இரு மாணவர்கள் சொன்னது போது ரொம்பவும் நெகிழ்ந்து போனேன்.
தமிழ் மற்றும் ஆங்கில நவீன எழுத்தாள ஆளுமைகளை விவரித்த போது ரொம்பவும் ரசித்தார்கள். குறிப்பாய் விக்கிரமாதித்யன். பிற்பாடு அவரது “வாழவும் பிடிக்கவில்லை, வாழாமல் இருக்கவும் பிடிக்கவில்லை கவிதையில் வரும் “குடிக்கவும் பிடிக்கவில்லை குடிக்காமல் இருக்கவும் பிடிக்கவில்லை என்று வரிக்கு சிரிப்பலை எழுந்தது. தேவதேவன் எப்படி பேசுவார் என்று பேசிக்காட்டிய போது விழுந்து விழுந்து சிரித்தார்கள். கலாப்பிரியாவின் பெயர்க்காரணம் சொன்ன போதும் அப்படியே.
இரண்டாவது அமர்வில் பிரமிள், நகுலன், பசுவய்யா, மனுஷ்யபுத்திரன், விக்கிரமாதித்யன், குட்டிரேவதி, யுவன், முகுந்த் நாகராஜன், என்.டி ராஜ்குமார், அப்பாஸ், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைகளை அதிகமாய் விவாதித்தேன். மனுஷ்யபுத்திரனை ஏதோ சொந்த தம்பி போல் தெரிந்து வைத்திருக்கிறார்கள். என்.டியின் வட்டார மொழி அவர்களை வசீகரித்தது. அவரது இரு கவிதைகளின் எதார்த்தம் பாதித்தது கண்களில் தெரிந்தது. அவர் கவிதைகளை எப்படி ஒரு தாளலயத்துடன் வாசிக்க வேண்டும் என்று காண்பித்தேன். அப்பாஸின் ஒரு பெருவெளியை அவர்கள் உள்வாங்கியது ஆச்சரியம் அளித்தது. யுவனின் குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் ஒரு சம்பவத்தோடு ஒப்பிட்டு நம் வாழ்வில் எப்படி இத்தகைய அனுபவங்கள் ஏற்படுகின்றன என்று சொன்னேன். எதிர்பார்த்தது போல் பெண்களுக்கு பிடித்தமானவராக முகுந்த் இருந்தார். கூட “எனக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்னால் வர முடியாது என்ற வரி மூலம் நகுலன் சில பெண்களின் ஆதரவையும் புன்னகையையும் பெற்றது ஒரு சின்ன ஆச்சரியம்.
வழக்கம் போல் உரையாடலை முடிக்க மனமின்றி கிளம்பி வந்தேன்.
எஸ்.ஆர்.வி பள்ளியினரின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது. விடிகாலையில் சென்னை வந்தேன். மனைவியும் நாய்க்குட்டியும் இல்லாத பட்சத்தில் கதவை நெருங்கும் முன்னரே என் பூனை மோப்பம் பிடித்து என்னை அழைத்து, உள்ளே வந்ததும் வளைந்த முதுகும் நிமிர்ந்த வாலுமாய் கொஞ்சியபடி வாழ்வில் முதன்முறையாய் என்னை அப்படி வரவேற்றது. அப்படி ஒரு இனிய அனுபவம் முடிவுக்கு வந்தது.
Read More

Monday, 5 December 2011

தமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டு தளத்தை அடையவில்லை?




தமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டு தளத்தை அடைந்து விட்டதா? உலகின் மூத்த செவ்வியல் மொழிகளுள் ஒன்று தமிழ்; உலகின் தலைசிறந்த கவிஞர் தமிழர் (வள்ளுவர்); உலகின் தலைசிறந்த காவியங்கள் தமிழில் உள்ளன; எழுத்தாளர்களை நெடுங்காலம் அரியணையில் வைத்திருந்த சமூகம் தமிழ் சமூகம்; தமிழ் நாவல் ஒன்று அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் உண்மை என்றால் தமிழ் இலக்கியம் பன்னாட்டு அளவில் புகழ் பெற்று விட்டது என்று பொருள். ஆனால் இவை முழுக்க உண்மை அல்ல. சர்வதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர்களான மார்க்வெஸ், பாஷெவிஸ் சிங்கர், பாமுக் என பலரும் ஆங்கிலத்தில் எழுதவில்லை. தமிழை விட குறைவான மக்கள் தொகையினரால் பேசப்படும் போலிஷ், ஸ்பானிஷ், துருக்கி போன்ற மொழிகளில் எழுதியவர்கள். அவர்களின் நூல்கள் கோடிக்கணக்கிற விற்கின்றன. இவர்களுடன் ஒப்பிடுகையில் நமது தமிழ் எழுத்தாளர்கள் சர்வதேசம் என்ன உள்நாட்டு அளவில் கூட அதிக அங்கீகாரம் பெறாதவர்கள். இந்த சாபக் கேட்டுக்கு காரணம் என்ன?
முதலில் உள்ளூர் காரணம். நமது பக்கத்து ஊரான கேரளா மற்றும் கர்நாடகாவுடன் ஒப்பிட்டு தமிழில் இலக்கியவாதிகளுக்கு அந்தஸ்து இல்லை என்று புலம்பப்படுகிறது. தமிழர்களுக்கு பண்பாட்டு நடவடிக்கைகள் சினிமா மற்றும் சமய சடங்குகளுடன் முடிந்து விடுகின்றன. பொதுமக்கள் எந்தளவுக்கு இலக்கிய வாசிப்பில் இருந்து விலகி நிற்கிறார்களோ அந்தளவுக்கு எழுத்தாளர்கள் சமூகத்தில் இருந்து தம்மை துண்டித்துக் கொண்டவர்களாகவே அரைநூற்றாண்டாக இங்கே இருந்தனர். குறிப்பாக தமிழ் நவீனத்துவதாகிகளுக்கு வெகுஜனம் என்பது ஒரு கெட்டவார்த்தை. அதே வேளையில் திராவிட கழகங்கள் போன்ற சமூக அரசியல் இயக்கங்கள் சமூக ஈடுபாடு தான் இலக்கிய கடப்பாடு என்ற நம்பிக்கையில் இயங்கினர். இந்த பரஸ்பர அக்கறையின்மை இலக்கியவாதிகளிடம் இருந்து மக்களை அந்நியப்படுத்தியது. மாறாக கேரளா மற்றும் கர்நாடகாவில் மாபெரும் மக்கள் இயக்கங்களில் பங்கெடுத்தவர்களாக எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். அதனாலே அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரமும் உள்ளது. நம்மூர் தீவிர இலக்கியவாதிகள் ஒரு பஸ் மறியல் கூட செய்ய முடியாது. அதற்காக சாரு கேரளா போகிறார். மார்க்வெஸ், போர்ஹெஸ், பாமுக், லோசா என சமூக அரசியல் பங்களிப்பு செய்துள்ள ஏராளமான இலக்கியவாதிகளை, இந்த அக்கறையினால் நாடுகடத்தப்படும் அளவுக்கு அச்சுறுத்தல்களை சந்தித்த எழுத்தாளர்களை சர்வதேச தளத்திலும் நாம் காண முடியும். ஆனால் நேரடி அரசியல் பங்கேற்பு ஒரு இலக்கியவாதிக்கான அளவுகோல் அல்ல. இருந்தாலும், தமிழகத்தில் இலக்கியம் அந்நியப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
அடுத்து சர்வதே அளவில் நாம் புகழடையாததற்கு காரணங்களாக ஆங்கிலம் கருதப்படுகிறது. நமக்கு போதுமான தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்று தொடர்ந்து புகார் சொல்லப்பட்டது. ஆனால் அக்குறை ஓரளவுக்கு நீங்கி வருகிறது. தமிழின் பல முக்கிய நாவல்கள் மொழியாக்கப்பட்டு பெங்குவின், கதா, பிளேப்ட் போன்ற பதிப்பகங்களில் வெளிவந்தன. ஆனால் அவை இந்தியர்களால் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படுகிற ஆங்கிலோ இந்திய நாவல்கள் அளவுக்கு பிரபலமடையவோ விமர்சன கவனிப்புக்குள்ளாகவோ இல்லை. இதற்கு வியாபார ரீதியான காரணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதை விட, இந்திய மற்றும் சர்வதேச ஆங்கில வாசகப் பரப்பை தமதாக்கி விட்ட ஆங்கிலோ இந்திய நாவல்கள் மற்றும் அபுனைவுகள் நமக்கு தொடர்ந்து ஒரு மாற்றுத்தரப்பாக இருப்பது ஒரு முக்கிய காரணம்.
தமிழ் மொழியாக்கத்தை ஆங்கிலோ இந்திய பிரதியுடன் ஒப்பிடும் போது நடை மற்றும் பேசுபொருள் இரண்டிலும் மாறுபட்டிருப்பதை காண்கிறோம். உதாரணம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒருவர் ஆங்கிலத்தில் நேரடியாக தமிழகம் குறித்து எழுதினால் அது தமிழர்களுக்காக அல்ல, மொழியும் கலாச்சாரமும் பழக்கமில்லாத புலம் பெயர்ந்த மற்றொரு பெரும் மக்கள் பரப்புக்காகவே. அவர்களுக்கு நமது கலாச்சாரமும் எளிதாக பொறுமையாக சொல்லிப் புரியவைக்க வேண்டி உள்ளது. உதாரணமாக ஜும்பா லஹரியின் கதைபாத்திரம் போஸ்டனில் பேல்பூரி சாப்பிடுகிறாள் என்றால் பேல்பூரியின் சமையல் குறிப்பையும் அவர் நாலுவரிகளில் விளக்கி விட்டே நகர்வார். இன்றைய வங்காளி இளைஞனின் சமூக பொருளாதார கலாச்சார பிரச்சனை அல்ல அவரது அக்கறை. புலம்பெயர்ந்த இந்தியனின் பொதுவான வேரற்ற நிலையை பேசுகிறார். இது அவரைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு சர்வதேச விரிவை ஆழத்தை கொடுக்கிறது. புலம்பெயர்தலும் அடையாளமிழப்பும் பரவலாகி விட்ட உலக சமூகங்களில் இப்படியான எழுத்துக்கு தான் செலாவணி அதிகம். கடந்த பத்துவருடங்களில் ஆங்கில பதிப்புலகில் காலனிய இந்தியா மற்றும் தற்போதைய ‘ஒளிரும் இந்தியா குறித்த வரலாறு புதினங்களுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளன. நாம் மாறாக உள்ளூர் பிள்ளைமார் அல்லது கள்ளர்களின் குடும்ப வரலாற்றை பேசினால் அது சர்வதேச வாசகர்களின் கிணற்றுச் சுவரை தாண்டாது. இதே பிரச்சனை ஜப்பானிய இலக்கியத்திலும் உள்ளது. மிஷிமோ கிணற்றுக்கு உள்ளே, ஹருகி முராகாமி வெளியே.
மேலும் நையாண்டி, அங்கதம் கலந்த நெகிழ்ச்சியற்ற மொழிநடை ஒன்றை ஆ.-இ நாவல்கள் வெற்றிகரமாய் நிறுவி உள்ளன. நமது படைப்புமொழி இம்மரபுக்கு வெளியே நிற்கிறது. ஆங்கிலோஇந்திய படைப்புகள் ஐந்துநட்சத்திர ஓட்டல் சாம்பார் என்று ஜெயமோகன் குற்றம் சாட்டினார். அது உண்மை அல்ல. ஆங்கிலத்தில் வெளியாகும் சர்வதேச இந்திய இலக்கியத்தை சொந்தம் கொண்டாடுவதற்கான வீச்சும் விரிவும் நம்மிடம் இல்லை. உலக வாசகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. செருப்பு கடிக்கிறது என்றால் செருப்பின் மீதா குற்றம்?
Read More

Sunday, 20 November 2011

இன்றைய இலக்கிய வாசகன்



இன்றைய இலக்கிய வாசகன் ஜனரஞ்சக வாசிப்பில் இருந்து சமீபமாக தீவிர இலக்கியம் நோக்கி வந்தவன் அல்லது எந்த வாசிப்பு பயிற்சியும் அற்றவன். அவனுக்கு வாசிப்பு என்பது ஒரு அடையாள அட்டை. முன்னெப்போதையும் விட ஊடகங்களில் நேர்ந்துள்ள திறப்பு காரணமாய் அவனுக்கு எழுத்தாளர்களையும் சகவாசகர்களையும் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. அவன் இரண்டு காரியங்களை செய்கிறான். மின்னஞ்சல்கள் அனுப்பி, தொலைபேசியில் பேசி எழுத்தாளன் முன் ஒரு தாசனாக பணிகிறான். கையில் பிரசாதம் வாங்கியதும் தான் ஒரு இலக்கிய வாசகன் என்ற அங்கீகாரம் வாங்குகிறான். ஆம் அவன் எதையும் அடைவதில்லை. சிக்கனமாக எளிதாக வாங்கி பத்திரப்படுத்துகிறான்.
இன்றைய வாசகன் எழுத்தாளனுக்கு நிகராக தன்னை பாவித்துக் கொள்வதில்லை. தன் வீட்டில் உள்ள ஒரு புத்தம் புது எல்.சி.டி டீவி மட்டுமே அவனுக்கு தான் புதிதாய் அபகரித்த ஒரு முன்னணி தீவிர எழுத்தாளன். எழுத்தாளனுக்கோ இந்த புதுவாசகன் தன் இணையதள வருகைப்பட்டியலில் சேர்ந்துள்ள ஒரு உபரி எண், தன் நுண்பேசி கால் லிஸ்டில் ஒரு அநாமதேய நபர். முதிர்ச்சியின்மை, அவசரம் மற்றும் பயிற்சியின்மையால் தான் இந்த பரஸ்பர அக்கறையின்மை நேர்கிறது.
நெடுங்காலமாய் வாசகனே இல்லாமல் இருந்த தீவிர எழுத்தாளனுக்கு இன்று தன்னை நோக்கி வரும் ஒரு பத்தாயிரம் வாசகர்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். இதே பத்தாயிரம் பேர்கள் தாம் தன் போட்டி எழுத்தாளனையும் வாசிக்க போவதாய் சற்று பதற்றம் ஏற்படுகிறது. கற்பனை பெயர்களில் கூட வாசகர்களை உருவாக்கி தமக்குத் தாமே கடிதம் எழுதி தங்கள் இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். ஒரு கதையில் நீங்கள் அம்மா என்று எழுதிய சொல்லை படித்து நான் நேற்று இரவெல்லாம் அழுதேன் என்று இதே வாசகன் அசட்டுத்தனமாக சொன்னால் ஒரு தீவிர எழுத்தாளன் பத்து ஆண்டுகளுக்கு முன் அதை வறட்டுப் புன்னகையுடன் நிராகரித்திருப்பான். இன்றோ அதை பொருட்படுத்தி உங்களைப் போல் நூற்றுக்கணக்கானோர் கடிதம் எழுதி உள்ளார்கள். அதை எல்லாம் படித்து நானும் அழுதேன் என்று பதில் எழுதுகிறான். மற்றொரு வகை வாசகன் புத்தகத்தை விடுத்து எழுத்தாளனை நாயகனாக்கி கொண்டாடுகிறான். ஒரு எளிய சினிமா ரசிகன் போல் நடந்து கொள்கிறான். கடந்த சில ஆண்டுகளில் நமது வாசகப் பரப்பு மாறி உள்ளதற்கு இது ஒரு உதாரணம்.
மற்றொரு பரிமாணம் உள்ளது. அசலான வாசகனுக்கு தொலைபேசி மற்றும் இணையம் வழியாக புத்தகங்களை அடைவது இன்று எளிதாகி உள்ளது. Facebook மூலம் சக-ஆர்வலர்களை தொடர்பில் வைப்பதும், இலக்கிய நடப்புகளை அறிவதும், தம் கருத்துக்களை சுதந்திரமாக உடனடி பதிவு செய்வதும் லகுவாகி உள்ளது. ஆங்கிலம் அறிந்த தமிழ் வாசகனுக்கு இன்று திறந்துள்ள சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் இத்தகைய வாசகர்கள் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே.
(2011 டைம்ஸ் நவ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
Read More

Saturday, 19 November 2011

இணையம் இன்று இலக்கியத்தை எப்படி பாதித்துள்ளது


கடந்த சில வருடங்களில் இணையம் தமிழ் உரைநடையை கவனிக்கும்படியாய் மாற்றி உள்ளது. சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டது போல், தொண்ணூறுகளில் தீவிர உரைநடையாளர்கள் சிடுக்காக நீளமாக எழுதுவதை கௌரவமாக கருதினார்கள். பொதுவாகவும் தனிப்பட்ட முறையில் நம்பப்படுவது போல் எனக்கு சளி பிடித்துள்ளது என்பதை சொல்லியாக வேண்டும் என்று நினைக்கிறேன் என்பது போல் எதையும் வளைத்து சுழித்து சொன்னால் மேலானது என்று நினைத்தார்கள். ஒரு புத்தகத்தை சற்று குதர்க்கமாய் பார்க்க முடிந்தால் “கட்டுடைத்ததாய் கோரினார்கள். இணைய வருகையால் நேரடியாக கிளர்ச்சியாக சுருக்கமாக எழுதும் பாணி பிரபலமாகி உள்ளது. இணைய பாதிப்பை நாம் கடந்த பத்து வருடங்களில் தமிழில் புத்தகப் பதிப்பு அடைந்த அபரித வளர்ச்சி மற்றும் இடைநிலை பத்திரிகைகள் பெற்றுள்ள வெற்றியையும் கணக்கில் கொண்டே புரிய வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் ஜெயமோகன், எஸ்.ரா, சாரு உள்ளிட்ட எழுத்தாளர்கள் புனைகதைக்கு நிகராக பத்திகளும் எழுதினார்கள். வாசகர்களை பெருக்கினார்கள். கவனத்தை தொடர்ந்து தக்க வைத்தார்கள். இது அவர்களின் புத்தக விற்பனையை அதிகப்படுத்தியது. எஸ்.ரா இடைநிலை, ஜனரஞ்சக இதழ்களிலும், சாரு மற்றும் ஜெ.மோ தம் இணையதளங்களிலும்.
சாரு இணைய பத்தி எழுத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். வாசகனுக்கு அணுக்கமாக, தன்னிலையாக, கொஞ்சம் அதிரடியாக, நிறைய சுவாரஸ்யமாக படுக்கையறை ரகசியங்கள், சமையலறை விவகாரங்கள், புலம்பல்கள், புகார்களில் இருந்து துவங்கி லத்தீன் அமர இலக்கியத்தில் சென்று முடிவது சாருவின் பாணி. இன்று ஏராளமான இளம் எழுத்தாளர்கள் இணையத்தில் உருவாகி அங்கிருந்து பத்திரிகைகளுக்கும் வருகிறார்கள். இவர்களிடம் சாருவின் வலுவான பாதிப்பை காண முடிகிறது. கட்டுடைக்கும் ஆர்வமின்றி தன்னிலையாக கிளர்ச்சியாக எழுத முயல்கிறார்கள். உடனடியான ஆனால் நிலையற்ற கவனமே நோக்கம்
ஜெ.மோ தன் இணையதளத்தில் வழமையானவற்றை தான் எழுதினாலும் அவரது உரைநடை லகுவாகி நேரடியானதாக மாறி உள்ளது. உலோகம் “அனல் காற்று போன்ற அவரது சமீப நாவல்களும் “சோற்றுக்கடன் போன்ற சிறுகதைகளும் எளிய லட்சியங்களும் வளவள சித்தரிப்புகளும் மிகையான உணர்ச்சிகளும் கொண்டவை. ஜனரஞ்சக வாசகனை தக்க வைக்கும் பதற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
கனமான கவித்துவ மொழிக்காக அறியப்பட்ட எஸ்.ரா இன்று எளிமையான சற்று உணர்ச்சிகரமான மொழியையே பயன்படுத்துகிறார். “உபபாண்டவத்தில் இருந்து உறுபசியில் இருந்து “துயிலில் அவரது மொழி குறிப்பிடும்படியாய் மாறி உள்ளது. உருவக இறுக்கத்தில் இருந்து உலர்வான சொற்களில் இருந்து இன்று அது மாறி இளகிப் போய் உள்ளது. இதற்கு கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த மேற்சொன்ன மாற்றங்கள் ஒரு காரணம் எனலாம்.
வேறெந்த இந்திய மொழியை விடவும் தமிழில் தான் அதிகபட்சமாக இணையத்தில் இலக்கியம் வாசிக்க கிடைக்கிறது. 10,000 இலக்கிய வாசகர்களில் கணிசமானோர் இணையத்தில் மட்டும் வாசிப்பவர்கள். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இணையதளம் உள்ளது. பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து கடந்த ஐம்பது வருட நவீன இலக்கியம் வரை அநேகமாய் அனைத்து எழுத்தாளர்களின் பல அல்லது ஒரு மாதிரி படைப்பாவது வாசிக்க கிடைக்கிறது. முன்பிருந்த அறியப்படாத எழுத்தாளன் என்ற மர்மவெளி இன்றில்லை. இணையம் நல்கும் சுயபிரசுர வாய்ப்பு எழுத விரும்புபவர்களுக்கு இன்று தரும் சுதந்திரம் அபாரமானது. சுயமேம்பாட்டுக்கும் பரஸ்பர தாக்குதலுக்கு அது மலினப்படுத்தப்பட்டாலும் எதிர்காலம் நம்பிக்கை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
Read More

Thursday, 10 November 2011

மனு ஜோசப்பின் “தீவிர மனிதர்கள்” (Serious Men): வெங்காயம் தேவைப்படாத நாவல்



2010இன் தெ ஹிந்து சிறந்த புனைவுக்கான விருதை வென்ற மனு ஜோசப்பின் இந்நாவல் ஆங்கில இந்திய நாவல் மரபில் தனித்துவம் பொருந்தியது. ஆர்.கெ நாராயண், அருந்ததி ராய், அனிதா நாயரை விட தென்னிந்திய சமூக வாழ்வை அவர் தீவிரமாக அணுகியுள்ளார். வழக்கமாக ஆங்கில இந்திய நாவல்களில் காண்பது போல் ஒரு பிராந்திய அடையாளத்தை மொத்த இந்தியாவுக்கான அடையாளமாக மாற்றி உள்ளார். ஒரு நாஞ்சில்நாடன் நாவலில் தமிழன் மும்பையில் வேலை பார்த்து வாழ்கிறான் என்றால் அது முழுக்க தமிழகத்து கிராமம் ஒன்றின் சில குடும்பங்களையும் சாதி பண்பாட்டையும் பேசி மேலும் மேலும் ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கி நுணுகி போகும். மனு ஜோசப் போன்ற ஆங்கில இந்திய எழுத்தாளர்களை இதே களத்தை எடுத்துக் கொண்டால் நாஞ்சில் பிரதேசத்தில் இருந்து மும்பை வரை மக்களையும் அவர்களின் அரசியல் பண்பாட்டை ஒரே போன்ற பண்புகளால் தட்டையாக்கி முணுசாமியை ஆங்கிலம்-இந்தி பேசும் இந்திய பிரஜை ஆக்கி விடுவார்கள். “தீவிர மனிதர்களிலும் இதுவே நடக்கிறது. அய்யன் மணி என்கிற தமிழக தலித்தும் ஆச்சாரியா, ஜன நம்பூதிரி ஆகிய கேரள பிராமணர்களும், ஒபர்ணா என்கிற வங்காளியும் ஒரே புள்ளியில் சந்தித்து தமது சாதியில் இருந்து அறிவியல், மனித சிருஷ்டி வரை வெவ்வேறு பிரச்சனைகளை எடை தூக்கி பார்த்துக் கொள்கிறார்கள். வெவ்வேறு பாத்திரங்களின் மோதலில் விளையும் சிடுக்குகள் தாம் நாவலின் எளிய களன். இக்களனுக்கு “போரும் வாழ்வின் ஐம்பது பக்கங்களுக்கான கனம் தான். இருந்தும் மூன்று விசயங்களுக்காக நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.
முதலில், இந்திய மக்கள் ஏன் சாதனை பிரியர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. நமக்கு அறிவார்ந்த தேடல்களிலோ, விளையாட்டு, கலாச்சார சாதனைகளிலோ அல்ல, உபயோகமற்ற லிம்கா புத்தக சாதனைகளிலே மிகுந்த ஆர்வம். உதாரணமாக ஒருவர் திருக்குறளை புதுக் கண்ணோட்டத்தில் விளக்க முயன்றால் யாரும் சீந்த மாட்டார்கள். ஆனால் ஐந்து வயது குழந்தை திருக்குறளை முன் பின்னாக, பின் முன்னாக, நடுவில் இருந்து ஆரம்பத்திற்கு ஒப்பிக்கும் என்றால் விழா எடுப்போம். டிஸ்கவரி சேனலில் ஒரு இந்தியர் பேட்டி அளித்தார். அவரது விதைப்பையில் ஐம்பது முறை கூட ஓங்கி மிதிக்கலாம். வலிக்கவே வலிக்காது. கடுமையாக முயன்று அப்படி விதைப்பையை பழக்கி இருக்கிறார். இதே போல் மணிக்கணக்காக தலைகீழ் தொங்குபவர், ஊசிகளை விழுங்குபவர், மின்சார வயரை உடம்பில் இணைத்து புன்னகைப்பவர் என இந்தியாவில் விநோத அசட்டு சாதனைகள் முயல்பவர்கள் ஏராளம். சன்நியூஸ் விளையாட்டு செய்திகளில் விநோத சாதனை நிகழ்வுகளையே முன்னிலைப்படுத்துவார்கள். பிஞ்சு குழந்தைகளை அலங்கரித்து ரியாலிட்டி ஷோக்களில் “தீம்தனக்கா தில்லானா என்று அர்த்தமற்ற வகையில் இடுப்பை வளைக்க ஏன் அனுப்புகிறோம்? அபஸ்வரத்தில் பொருந்தாக பாடல்களை இசைத்து போட்டியிட டீ.வி முன் தள்ளுகிறோம்? அரசியல் அறிவு இல்லாத குழந்தைகள் வசனங்களை மனப்பாடம் செய்து அரட்டை அரங்கத்தில் அரசை விமர்சனம் செய்து பேசுவதை பார்த்து ஏன் ரசிக்கிறோம்? நாமே ஒரு கதை புனைந்து அதில் நாமே ஒரு பாத்திரமாக ஏன் ஆகிறோம்?
செவிடனான தன் பத்து வயது குழந்தையை சமூகத்தில் முன்னிலைப்படுத்த அவனை prodigy எனப்படும் ஒரு குழந்தைப்பருவ மேதையாக போலியாக சித்தரிக்கிறார் அய்யன் மணி. அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் இந்நாவலின் கூர்மையான ஒரு பகுதி. அதிரடியாக மாறி வரும் சமூகத்தில் குழந்தைகள் தம்மை ஈடுகொடுக்க எண்ணற்ற பிரேமைகளை தம் மேல் திணித்து சிலாகித்து ஒரு கட்டத்தில் சுய அடையாளத்தை மறந்து போகிறார்கள். பெற்றோர்களால் ஒரு சூப்பர் மேனாக சிறுக சிறுக இரு பத்தாண்டுகள் பயிற்றுவிக்கப் பட்டு இறுதியில் டை கட்டின பன்னாட்டு குமாஸ்தாவாக முடிகிறார்கள். ஐயன் மணி தன் குழந்தைக்கு தினமும் சிரமமான அறிவியல் வினாக்களை மனப்பாடம் செய்வித்து அதை பள்ளிக் கூட வகுப்பில் ஆசிரியர்களிடம் கேட்டு திணறடிக்குமாறு செய்கிறான். மெல்ல மெல்ல அவன் பிரத்யேக திறமை கொண்ட சிறுவன் என்று பெயர் பெறுகிறான். அடுத்து பெல்ஜியம் நாட்டு அரசால் நடத்தப்பட்ட அறிவியல் தேர்வு ஒன்றில் தேறி அவன் வெளிநாட்டுக்கு செல்ல உதவித் தொகை கிடைத்துள்ளதாக ஒரு பொய்த்தகவலை லஞ்சம் கொடுத்து மராத்தி பத்திரிகை ஒன்றில் வெளியிடுகிறான். அடுத்து பள்ளிக் கூட விநாடிவினா தாள்களை திருடி அதிலும் தன் மகனை சரியாக பதில் சொல்ல வைக்கிறான். மற்றொரு ஏமாற்றின் மூலம் அவனால் ஆயிரம் பிரைம் எண்களை ஒப்பிக்க முடியும் என்று ஒரு செய்தியை ஒரு ஆங்கில பத்திரிகையில் கொண்டு வருகிறான் மகன் பெரும் புகழ் பெறுகிறான். அண்டை வீட்டார்களும், கூட வேலை பார்ப்பவர்களும், பள்ளிக் கூடத்திலும் அவனை மேதை என்று கொண்டாடுகிறார்கள். இத்தோடு இந்த நாடகத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று அய்யன் முடிவு செய்கிறான். ஆனால அவன் உதவியாளனாக வேலை பார்க்கும் அறிவியல் ஆய்வு மையத்தில் பிராமண அறிவியல் அறிஞர்கள் அவனது தலித் அடையாளத்தை கேலி செய்கிறார்கள். அம்பேத்கரையும், இடஒதுக்கீட்டையும் பழிக்கிறார்கள். காயமுறும் அய்யன் இதற்கு பதிலாக ஆய்வு மையம் நடத்தும் மிக சிரமமான நுழைவுத் தேர்வில் தன் மகனை பங்கேற்க வைத்து மற்றொரு ஏமாற்று வழியில் தேறவும் வைக்கிறான். பத்து வயது சிறுவன் இருபது முப்பது வயதினராலே வெல்ல முடியாத தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெற்றுள்ளது தேசிய செய்தியாகிறது. இதன் பொருள் தலித்துகள் தமது சமூக அநீதியை சூதால் வெல்கிறார்கள் என்றல்ல. இங்கு அய்யன் தலித் என்றாலும் அவன் இந்தியாவின் கீழ் மத்திய, கீழ் மட்ட மக்களை பிரதிநுத்தப்படுத்துகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தலித் பாத்திரம் இங்கு பொதுமைப்படுத்தப்படுகிறது. பொதுமைப்படுத்தலின் ஒரு அனுகூலம் அதன் விரிவு. மனு ஜோசப் அய்யன் மூலம் முன்னேற முடியாத பாதை அடைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குமுறலை, பிரயத்தனங்களை, மனக்கசப்பை வெளிப்படுத்துகிறார். தலித் ஒரு விளிம்புநிலை இந்தியனாக விரிவு பெறுகிறான்.
நாவலின் அடுத்த முக்கியமான பரிமாணம் மதத்துக்கும் அறிவியலுக்கும்/தலித் அரசியலுக்குமான உரையாடல். அய்யன் மணி அம்பேத்கர் வழியில் பௌத்தத்தை தழுவுகிறான். வீட்டில் பிராமண மதமான இந்துமதத்தை தடை செய்கிறான். அவன் மனைவி ஒரு எளிய பிறவி. அதனால் பிள்ளையார் விக்கிரகங்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து கும்பிடுகிறாள். மணி அவற்றை கண்டெடுத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறான். மதத்தை பகிஷ்கரிப்பதால் தான் தனது குழந்தைக்கு செவிடாக போயிற்று என்று அவள் குற்றவுணர்வு கொள்கிறாள். அய்யன் மணிக்கு மற்றொரு பிரச்சனை. அவனுக்கு தன் மகனுக்கு ராமாயண, மகாபாரத கதைகள் சொல்லித்தர வேண்டும், கலாச்சாரம் அறிவுறுத்தும் விழுமியங்களை கற்றுத்தர வேண்டும். அதற்கு இந்துமத இதிகாசங்கள், சடங்குகள் தேவையானவை. ஆனால் அவற்றை சொல்லித் தந்து தன் மகனை ஒரு சாதி அடிமையாக்கவும் அவன் தயாரில்லை. வளர்ந்த பிறகு அக்கதைகள் மற்றும் சடங்குகளின் பின்னுள்ள சாதி ஒடுக்குமுறையை தன் மகன் புரிந்து கொள்ளுவானோ என்று அவர் ஐயப்படுகிறார். கடவுள் இல்லாமல் மதத்தையும் சடங்குகளையும் எப்படி கற்றுத் தருவது? அப்பமும் தின்ன வேண்டும். அதில் உள்ள குழிகளையும் எண்ண வேண்டும். அவரது மனம் தான் மறுத்தாலும் தன் மகன் அம்மாவை பேச்சைக் கேட்டு இந்துமதத்தை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த ஊசலாட்டமும் அதன் நகைமுரணும் மிக சுவையான பகுதி. அடுத்து பள்ளிக் கூடத்தில் மகனின் தலைமையாசிரியர் சிஸ்டர் சேஸ்டிட்டி அவனை கிறுத்துவத்துக்கு மதம் மாற தூண்டுகிறார். “நீங்கள் தலித்துகள் ஏன் இப்போதும் சாதிவெறி பிடித்த இந்து மதத்தில் இருக்கிறீர்கள்? கிறுத்துவத்துக்கு வரலாமே, உங்கள் மகனுக்கு ஊக்கத்தொகை. கல்வி வேலை வாய்ப்புகள் அதிகமாகும், அவனது எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும் என்று கேரட்டுகளை வரிசையாக நீட்டுகிறார். அய்யன் சொல்கிறார் “நான் இந்து அல்லவே
“பின்?
 நாங்கள் பௌத்த மதம்
“அட நீங்க வேற, பௌத்தம் என்பது இந்துமத்தின் மற்றொரு பெயர்
நாவலின் மற்றொரு முக்கிய பாத்திரமான் ஆச்சாரியா இறைநம்பிக்கையுடன் சஞ்சலம் கொண்டுள்ள மற்றொரு பகுத்தறிவுவாதி. அவர் தேசிய ஆய்வு மையத்தின் இயக்குநர். நோபல் பரிசுக்காக அடிக்கடி பரிந்துரைக்கப்பட்ட உலகப்புகழ் வாய்ந்த விஞ்ஞானி. உலகில் ஜீவராசிகள் வெற்றுகிரக வாசிகளில் இருந்து தோன்றின, இந்த வெற்று கிரகவாசிகள் வேறொருவரும் அல்ல வெறும் நுண்கிருமிகள் தாம். அவை காற்றின் மேல்தளத்தில் இருந்து பூமி மீது தூவப்பட்டவாறே உள்ளன. இப்படியாக பூமியை கண்டடைந்து நுண்கிருமியில் இருந்து தான் மனிதன் தோன்றினான். இது தான் ஆச்சாரியாவின் கோட்பாடு. இதை நிறுவ அவர் விண்வெளிக்கு ராட்சத பலூன்கள் ஏவுகிறார். அவற்றில் உலோக பாத்திரங்களை இணைத்து விடுவார்கள். பலூன்கள் திரும்ப வந்திட ஆய்வு செய்து அவற்றில் நுண்கிருமிகள் கண்டால் தன் கோட்பாடு நிரூபணம் ஆகும் என்று நம்புகிறார். இப்படியாக தன் கற்பனையை நிரூபிக்கும் ஆவேசத்தில் அவர் இயங்கிக் கொண்டிருக்க சில அதிரடி திருப்பங்களால் அவர் தன் பதிவியையும் அந்தஸ்தையும் இழந்து குடும்பத்தையும் மனைவியையும் தொலைத்து பாதி பைத்தியமாக ஆக நேர்கிறது. அப்போது அவர் முன்னெப்போதும் இல்லாத அகசுதந்திரத்தை உணர்கிறார். தனது உள்ளார்ந்த ஈடுபாடு உண்மையில் நுண்கிருமிகளை மனிதர்களை சிருஷ்டித்ததாக வறட்டுத்தனமாக நிரூபிப்பதல்ல, இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை மேலும் நுணுக்கமாக அறிவது என்று புரிந்து கொள்கிறார். சமூக மைய நீரோட்டத்தில் இருந்து விலகிய பின் ஆச்சாரியாவுக்கு இனி அவர் அறிவது அனைத்தையும் நிரூபிக்க வேண்டியதில்லை. சுதந்திரமாக ஒரு தத்துவவாதி போல் சிந்தித்துக் கொண்டு போகிறார். பிரபஞ்சத்தின் அனைத்து அசைவுகளும் நிகழ்வுகளும் மாற்றங்களும் முன்-தீர்மானிக்கப்பட்டவை என்று அனுமானிக்கிறார். முன்னர் இதே விஞ்ஞானி உலகம் ஒரு பெருவெடிப்பில் இருந்து தோன்றியது என்ற Big Bang கோட்பாட்டை அது உலகத்திற்கு தீர்க்கமான ஆரம்பம் உண்டு என்கிற கிறுத்துவ சிந்தனை பாதிப்பில் இருந்து தோன்றியது என்று கூறி வன்மையாக நிராகரித்தவர். தன் வாழ்நாள் முழுக்க Big Bang கோட்பாட்டை எதிர்த்ததற்காக நோபல் பரிசு பெறும் வாய்ப்பை இழந்தவர். ஆனால் அதே மனிதர் பிற்பாடு பிரபஞ்ச மனம் என்று ஒன்று உண்டு, அதன் தீர்மானங்கள் தான் மனித வாழ்வின் செயல்கள் என்று ஒரு சற்றே இறையியல் வாடை வீசும் கருத்துக்கு வந்து சேர்கிறார். மிகச் சின்ன வயதில் இருந்தே அவருக்குள் இந்த கருத்தின் விதை விழுந்துள்ளது. தன் இறுதிக் காலத்தில் இதனை விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பதற்காக ஆய்வுகள் செய்வதில் ஈடுபடுகிறார். இவ்வாறு ஆச்சாரியா நுண்ணுயிரில் இருந்து கடவுளை சென்றடைவது மனித மனம் குறித்த ஒரு சுவாரஸ்யமான அவதானிப்பு. நாம் கற்பனைகளை பின்னிக் கொண்டு அதற்கு ஒரு கோட்பாடு உருவாக்குகிறோம். நேர்மாறாக கூட செய்கிறோம். இவ்விசயத்தில் எளிய பாமரனும் விஞ்ஞானியும் ஒன்று தான். தர்க்கம் அல்லாத ஒன்றை ஏற்பதற்கு அவிசுவாசிக்கு தயக்கம் உள்ளது. ஆனாலும் அவன் மனம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் பிரபஞ்ச மனம் நோக்கி விழைகிறது. விசுவாசத்திற்கும் அவிசுவாசத்திற்கும் இடையில் அவன் ஊசலாடியபடியே இருக்கிறான். மதம் மட்டுமல்ல அறிவியலும் ஒரு வசதியான புனைவே என்பது நீட்சேயில் இருந்து பின்நவீனத்துவ வாதிகள் வரை முன்வைத்து வரும் ஒரு விமர்சனம். உதாரணமாக வெற்றுகிரக மனிதர்கள் பற்றின தேடல். அண்டத்தை அறிந்த மனிதன் தான் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோம் என்ற தனிமையை தீர்க்க ஏற்பட்டதாக, அதனாலேயே மனிதன் வெற்றுகிரக வாசிகளை கற்பனை பண்ணிக் கொள்வதாக, அவர்களை தனது மனித எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி வனைந்து கொண்டுள்ளதாக விமர்சிக்கும் ஒரு தரப்பினர் உள்ளனர்  இந்த பிரபஞ்ச தனிமையை தணிக்கும் கற்பனைக்கு ஆதரவாக ஒரு தர்க்க கட்டுமானம் அறிவியலால் உருவாக்கப்படுக்கிறது. அதற்கு கோடானுகோடி பணம் இறைக்கப்படுகிறது. இந்த அர்த்தத்தில் மதமும் அறிவியலும் ஒன்றிற்கொன்று நிகரானவை. ஒன்று கடவுளை தேடுகிறது, மற்றது வெற்றுகிரக வாசியை தேடுகிறது.
மூன்றாவதாக கவனிக்கத்தக்கது மனு ஜோசப்பின் அங்கதமும் தனித்துவமும் கூடிய மொழி. மனித வாழ்வின் அபத்தத்தை சுட்டும் எண்ணற்ற வரிகள் இந்த புனைவில் உள்ளன. உதாரணமாக வாமன் என்றொரு தலித் தலைவரும், மத்திய அமைச்சரும் வருகிறார். அவர் மைக்கேல் ஜேக்சனை சந்தித்தது பற்றி பெருமிதமாக குறிப்பிடுகிறார் “ஜாக்சன் மிக பணிவானவர். இயல்பானவர். வெள்ளைக்காரர்களில் இப்படி ஒருவரை காண்பது மிக அரிது என்கிறார். வெற்றுகிரக வாசிகள் ஆச்சாரியார் அனுப்பின பலூன் பாத்திரத்தில் நுண்கிருமிகள் உள்ளதாய் தவறுதலாய் கண்டறியப்படுகிறது. மீடியாவுக்கு இதனை அறிவுக்கும் ஆச்சாரியா சொல்கிறார் “மனிதனை சிருஷ்டித்ததை விடுங்கள் நம் வீட்டு தயிரை உறைய வைப்பது கூட வெற்றுகிரகவாசிகள் தாம்.
அய்யன் தன் மனைவியிடம் சொல்கிறான் “தீவிரமான மனிதர்களை போதுமான படி நீண்ட நேரம் முறைத்துப் பார்த்தோமானால் அவர்கள் வேடிக்கையாக தோன்ற ஆரம்பிப்பார்கள். இந்த வாசகத்தில் இருந்து தான் நாவல் ஆரம்பிக்கிறது எனலாம். மனித வாழ்வு எவ்வளவு அற்பத்தனமானதோ அந்தளவு நாடகத்தன்மையும் விளையாட்டுத்தனமும் கொண்டதாக உள்ளதை காட்டுகிறார். விஞ்ஞானிகளில் இருந்து வீட்டு மனைவி வரை ஒரு புனைவை உருவாக்கி வசதியாய் அதைத் தமது பட்டுக் கூடாக்கி கொள்கிறார்கள். மற்றொரு தருணத்தில் அய்யன் அவளிடம் சொல்கிறான் “மக்கள் ஏன் எதையாவது செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேறொன்றும் மேலானதாய் இல்லை என்பதாலே. ஐன்ஸ்டினுக்கு சார்புக் கொள்கை என்ற ஒன்று இருந்தது. நீ தினமும் இருமுறை தரை துடைக்கிறாய்.
மற்றொரு பக்கத்தில் இந்த உரையாடல் வருகிறது.
 உனக்குத் தெரியுமா ஓஜா (அவனது மனைவி), அவன் சொன்னான், தான் வழக்கமாய் இவ்விசயங்களை ஆரம்பிக்கும் பாணியில் “பணக்காரர்களுக்கு எல்லாவற்றுக்கும் ஒரு பெயர் உண்டு. ஒருவன் தன் குடும்பத்துடன் செல்வழிக்கும் பெயருக்கு கூட ஒரு சொல் உண்டு
“நிஜமாகவா?, அவள் திரும்பாமலே கேட்டாள்.
“அவர்கள் அதை தரமான நேரம் (Quality Time) என்கிறார்கள்
ஆங்கிலத்தில் அப்படி ஒரு சொல் உண்டுமா என்ன?
“ஆமாம்
“ஏன் அப்படி ஒன்றுக்கு பெயர் சூட்ட வேண்டும்?
“அவர்கள் தம் உலகில் எல்லாவற்றுக்கும் பெயர் சூட்டுவார்கள், அவன் சொன்னான். “உனக்குத் தெரியுமா ஓஜா, அந்த நெடுதுயர்ந்த கட்டிடங்களில் உள்ள மனிதர்கள் திடீரென்று ‘நான் யார்? நான் எப்படியானவன்என்றெல்லாம் வியக்க தொடங்குவார்கள் அதற்கும் அவர்களிடம் ஒரு பெயர் உண்டு

மனிதர்களின் இந்த அறிவார்ந்த பாவனை நாவலின் மையம் எனலாம்.
மனு ஜோசப்பின் உவமைகள் சற்று பிரத்யேகமானவை. உதாரணத்துக்கு பாருங்கள்:
மாலைகளில் அவர்கள் (பள்ளிக்குழந்தைகள்) வாயிற்கதவுகளை நோக்கி, நம்மூரில் பி.பி.ஸி நிருபரை நோக்கி நிலநடுக்கத்தில் இருந்து தப்பினவர்கள் ஒடுவதைப் போல் மகிழ்ச்சியாக ஓடுவார்கள்
“அய்யன் மணியின் அடர்த்தியான கரும் தலைமயிர் பக்கவாட்டாய் வாரப்பட்டிருந்தது, பகையான அண்டை நாடுகளுக்கு இடையில் பிரிட்டிஷார் உருவாக்கும் எல்லைக்கோடுகளைப் போன்ற அசிரத்தையான ஒரு ஒழுங்கற்ற வகிடு சிகையை பிரித்தது
நாவலின் முக்கிய குறைகள் என்ன? ஒன்று அது இயல்பான போக்கில் விரிய மறுக்கிறது. அப்படி நிகழ்கிற போது மிகையாகவும் தேய்வழக்காகவும் மாறுகிறது. மனு ஜோசப் வேகம் மற்றும் விறுவிறுப்புக்காக நாவலை சில இடங்களில் நாடகீயமாக்குகிறார். நாடகீயத்தை கையாளுவதற்கான மொழி வன்மை அவருக்கு இல்லை. அவரது பேனா அங்கதத்திற்கு மட்டுமே நன்றாக வளைந்து கொடுக்கிறது. முரணான பாத்திரங்களை அவற்றின் போக்கில் கதையாடலின் ஊடே வளர விடுகிறார். இது பாராட்டத்தக்கது.
முழுக்க முழுக்க அங்கதம் சொட்டும் நாவல்களின் விதி பாத்திரங்கள் சவலையாகி விடும் என்பது. எழுத்தாளன் இடையிடையே யதார்த்தமோ, மிகு-எதார்த்தமோ கலந்து தான் பாத்திரங்களுக்கு உயிர்ப்பளிக்க முடியும். மனு அதை செய்யவில்லை. இது ஒரு சின்ன பலவீனம்.
மற்றபடி சாமர்த்தியமான மொழிநடைக்காகவும், கூர்மையான எண்ணவோட்டத்திற்காகவும் படிக்க விரும்புபவர்களுக்கு தடையில்லை. மேற்தட்டு இந்திய வாசகர்களுக்கு வெங்காயம் பிடிக்காது என்பதாலோ ஏனோ இந்நாவலை படித்து விட்டு நாளெல்லாம் அழுதேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
(உயிரோசையில் வெளியான கட்டுரை)
Read More

Saturday, 5 November 2011

இருநாள் இலக்கிய விழா: எழுத்தாளர்களும், கதாபாத்திரங்களும், எளிய மனிதர்களும்



 தமிழில் பிரபலமாகாத எழுத்தாளர்கள் கூட தங்கள் பெயருக்கு விருது அறிவித்து ரொம்ப பிரபலமான ஒருவருக்கு அன்றாடம் கொடுத்து விடுகிற ஒரு அதிரடி நிலைமையில் தேசிய பத்திரிகையான தெ ஹிந்து வேறுவழியில்லாமல் போன வருடம் சிறந்த புனைவுக்கான இலக்கிய விருதொன்று அறிவித்தது. அதை பத்திரிகையாளரும் பத்தியாளருமான மனு ஜோசப் தனது Serious Men என்கிற அறிவியல் சமூக பகடி நாவலுக்காக வென்றார். சர்ச்சை ஒன்றும் இல்லை. பரவலாக பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இவ்வருடம் தற்போதைய மோஸ்தர் படி பெரும் கார்ப்பரேட் விளம்பர ஆதரவுடன் தெ ஹிந்து Lit for Life என்ற தலைப்பில் செப்டம்பர் 29, 30 ஆம் தேதிகளில் இலக்கிய விழா நடத்தியது. தேனாம்பேட்டை ஹயட் ரெசிடென்ஸி அரங்கத்தில். நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்த விதம் நமது தமிழ் கருத்தரங்குகள் மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கும் இடைப்பட்ட ஒன்றாக இருந்தது. உதாரணமாக பாகிஸ்தானி வங்கதேச இலக்கியம், பயண இலக்கியம், தலித் இலக்கியம், படைப்பாக்கத்தின் சிரமங்கள், இந்திய ஆங்கில பதிப்பகங்களின் நிலைப்பாடு, எதிர்பார்ப்பு, சவால்கள், திரைக்கதை எழுத்து மற்றும் இணைய எழுத்து என்று முதல் நாள் விழா திட்டமிடப்பட்டிருந்தது. காலை பத்தரையில் இருந்து மாலை ஆறரை வரை ஏழு அமர்வுகள். ஒவ்வொரு விவாதப் பொருளுக்கும் அரை மணி நேரம் தான். மிச்ச பொழுது பார்வையாளர் விவாதத்திற்கு தரப்பட்டது. இந்த குறுகின கால அளவில் மேற்சொன்ன தலைப்புகளுக்குள் நுழைந்து வெளியேறவே முடியாது, குறிப்பாய் ஒவ்வொரு அமர்விலும் இரண்டு மூன்று சிறப்பு விருந்தினர்கள் இருக்கும் போது. ஆக அடிப்படையான ஒரு பிரச்சனையோ, அல்லது தொடர்புள்ள ஒரு கருத்தோ எடுத்து அறிமுகப்படுத்தப்பட்டது. சில அமர்வுகளில் எழுத்தாளர்கள் தம் தரப்பை முன்வைத்தனர். சிலர் கடந்த கால நினைவுகளில் தொய்ந்தனர். இவ்விழாவின் நோக்கம் இப்படி பரவலான விசயங்களை தொட்டு நக்கி பார்ப்பதாகவே இருந்தது. மேலும் முதல் நாள் சிறப்பு விருந்தினர்களில் இந்திய ஆங்கில இலக்கிய ஜாம்பவான்கள் யாரும் காட்சி அளிக்கவில்லை. சமீபத்தில் அறிமுகமாகி பிரபலமான முகமது ஹனீப், ராகுல் பட்டாசாரியா, தலித் தமிழ் எழுத்தை தமிழில் துவக்கின கடந்த காலகட்ட எழுத்தாளர்களான பாமா, சிவகாமி போன்றோர், மற்றும் நடுத்தர எழுத்தாளர்களுடன் பத்திரிகையாளர்கள். ஒரு எழுத்தாளனாய் இருப்பது வேறு. அருந்ததி ராய், ஷஷி தாருர், சாரு, எஸ்.ரா போல் மீடியா ஆளுமையாகவும் கூட இருப்பது வேறு. உதாரணமாக எஸ்.ராவில் ஒரு மேடையில் நம்மை பிரமிப்பூட்ட முடியும். ஜெ.மொ சாருவால் இலக்கியம் கலாச்சாரம் குறித்த வலுவான விவாதங்களை மேடையில் ஏற்படுத்த முடியும். அப்படியான வலுவான ஆளுமை எழுத்தாளர்களுக்கு அரிதாகவே அமைகிறது. அநேகமான எழுத்தாளர்கள் கூச்சமிக்கவர்கள், சொல்ல அதிகம் ஒன்றும் இல்லாதவர்கள். வெறும் எழுத்துக் கலைஞர்கள். ஹிந்துவின் இலக்கிய விழா இவர்களை சுற்றித் தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு ஜீரோ வால்ட் பல்புகளின் தோரணம். இருந்தும் இரண்டு விசயங்களுக்காக விழா கவனிக்கத்தக்கதாகிறது.
முதலில் ஒரு விழா சூழலை உருவாக்க முடிந்தது. இதற்கு அரங்கின் வெளியே உள்ள விரிவான லாபியும் தாராளமான காபியும் உதவியது. நம் தமிழ் எழுத்தாளர்களை போல் அல்லாது இந்திய ஆங்கில ஆளுமைகள் தம் பேச்சு முடிந்ததும் மேடையில் இருந்து குதித்தோடி விடவில்லை. அநேகானவர்கள் லாபியில் வாசகர்களுடன் எளிதாக உரையாடிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அடுத்து நிகழ்ச்சிகள் திட்டமிட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் நீண்ட நேரம் இருக்கையில் முடக்கப்படும் மனச்சோர்வும் பார்வையாளர்களுக்கு இல்லை. உள்ளேயும் வெளியேயும் திரைகளில் மேடை நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பானதால் பார்வையாளர்கள் இருக்கையை இழக்கும் கவலை இன்றி வெளியே வந்து லாபியில் உரையாடியபடி நிகழ்ச்சியையும் கவனிக்க முடிந்தது. அடுத்து விருந்தினர்கள் மேடையில் ஒரு கையை ஊன்றியபடி “நான் என்ன நினைக்கிறேன் என்றால் என்று ரெண்டு மணிநேரம் முதல் வாக்கியத்திலேயே தொக்கியபடி உரையாற்றவில்லை. அதற்குப் பதில் நிகழ்ச்சிக்ள் உரையாடல் வடிவில் அமைந்திருந்தன. இரண்டு எழுத்தாளர்கள், ஒரு ஒருங்கிணைப்பாளர், ஒரு தலைப்பு. ஒருங்கிணைப்பாளரை கட்டுப்படுத்த கீழே ஒரு நிகழ்ச்சி அமைப்பாளர். இரண்டு எழுத்தாளர்களை மேடையில் ஏற்றினால் ஒருபக்கம் ஸ்டார்ட் பொத்தானும் மறுபக்கம் பிரேக்கும் இருக்க வேண்டும் என்பதை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டிருந்தார்கள். பேச்சாளனை நோக்கி சீட்டு அனுப்புவது, மௌனமான ஆணையிடுவது ஆகிய அவஸ்தைகள் இல்லாமல் இருந்தது. விவாத முறையில் இருந்ததால் பார்வையாளர்களால் பங்கேற்கவும் சற்று மூச்சு விடவும் முடிந்தது.
பொதுவாக பார்வையாளர் கேள்விகள் அசட்டுத்தனமாக சில வேளைகளில் கூர்மையாக இருந்தன. விருந்தினர்கள் அநேகமாக களைப்பாக சில பொழுது பொறுமையாக பதில் சொன்னார்கள். எப்போதும் அறிவார்ந்த விதத்தில் கேட்கும் பாணியில் தமாஷ் செய்யும் இரண்டு பேர் எல்லா அமர்வுகளையும் சுவையானதாக்கினார்கள். அவர்கள் எப்போது கேள்வி கேட்பார்கள் என்று மக்கள் எதிர்பார்க்க தொடங்கினார்கள். உதாரணமாக பயண இலக்கியம் அமர்வில் கையில்லாத பனியன்காரர் ஒருவர் “ஏன் விண்வெளிப் பயணங்கள் குறித்த பயண நூல்கள் அதிகம் வருவதில்லை? என்றார். ஒரு கையில் டாட்டுவும் மறுகையில் ஆப்பிள் ஐபாடுமாக அவர் இப்படி மொத்த அம்ர்வுகளையும் கலக்கினார். மற்றொரு வட இந்தியக் காரர் விக்டோரிய ஆங்கில உச்சரிப்பில் கேட்ட நீளமான கேள்விகள் எந்த எளிய ஜீவனுக்கும் புரியவில்லை. ஒருமுறை “நீங்கள் எழுதும் பிரதியில் நீங்கள் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? என்பதையும் குழப்பமான முறையில் கேட்டார். அதற்கு ஒரு எழுத்தாளர் “பாகிஸ்தானில் என்றார். இப்படி அரங்கம் எழுத்தாளர்களும் “கதாபாத்திரங்களுமாக நிறைந்திருந்தது.
பார்வையாளர் கூட்டம் அநேகமாக முதியவர்களும் இளைஞர்களுமாக கலந்திருந்தது. வெளிமாநிலங்களில் இருந்து ஊடகவியல் மாணவர்கள் வந்திருந்தார்கள். பெண்கள் கூட்டமும் பெருமளவு இருந்தது. நாள் முழுக்க அரங்கம் காலியாகவில்லை. மத்திய வயதினர் அதிகம் வராதது நம் தமிழ் இலக்கிய கூட்டங்களில் கூட ஒரு போக்கு தான். இந்திய மாமாக்களுக்கும் கலாச்சார நடவடிக்கைகளுக்கும் ஏன் இடைவெளி? இது ஏன் என்பது குறித்து நாம் பின்னர் ஆராய்ந்து பார்க்கலாம்.
நாள்பூரா இலவசமாக விநியோகித்த காபுசீனா காப்பி கடைக்காரர் “காபி நல்லா இருக்கிறதா? என்று என்னிடம் சற்று சோகமான முகத்துடன் கேட்டார். பிறகு தன் காபி கசக்கிறது என்று பார்வையாளர்கள் பலர் நிகழ்ச்சிக் குழுவினரிடம் முறையிட்டதாக வருத்தப்பட்டார். காபி கசந்தது உண்மை தான். ஆனால் பிரச்சனை அது இலவசமாக கொடுக்கப்படுகிறது என்பதே. நான் நன்றாக கசக்கிறது என்றவரை பாராட்டினேன்.
கடைசியாக அவர் லாபியில் நின்ற வாசகர்-சூழ் எழுத்தாளர்களை காட்டி “இவர்களிடம் ஏன் கையெழுத்து வாங்குகிறார்கள்? யார் இவர்கள்? என்று கேட்டார். விளக்கினேன். “உள்ளே என்ன கூட்டம் நடக்கிறது? என்றார். விளக்கினேன். “அதானே பார்த்தேன். இவர்களை தான் எங்கேயும் பார்த்ததில்லையே என்று என்றார் அந்த வட-இந்தியர்.
புத்தகக்கடை போட்டிருந்தார்கள். இந்திய ஆங்கில புத்தகங்கள். அநேகமாக நாவல்கள். முகம்து ஹனீபின் A case of Exploding Mangoes என்கிற பாகிஸ்தானிய அரசியல் சமூக நாவல் தான் அதிகமாக வாங்கப்பட்டது. எந்தளவுக்கு என்றால் நான் கடைக்கு சென்று “மாங்காய் கொடுங்கள் என்றவுடன் நூலை கொடுத்து விட்டார்கள். தமிழில் இங்கே நீங்கள் போய் ‘பேன்சி பனியன் கேட்க முடியுமா? கேட்டால் தான் உடனடி கிடைக்குமா? ஓஹ்!
நடைமுறை வசதிகள் தவிர மிச்ச நட்சத்திர வசதிகள் அனைத்தையும் அற்புதமாக செய்து தருவது இந்திய பாணி. அதன் படி ஹியட் ரெஸிடென்ஸியில் வண்டியை ஒரு பாதாளத்தில் பத்திரப்படுத்தி விட்டு மூச்சைப் பிடித்து நடந்து தான் அரங்கை அடைய முடியும். நடக்க முடியாத வயோதிகர்கள், ஊனமுற்றவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதை நேரடியாக கேட்க விரும்பாமல் வரவேற்பாளரிடம் இப்படி கேட்டேன் “உங்க ஹோட்டலுக்கு ஊனமுற்றவர்கள் வருவதில்லையா?
அவர் நேர்மையாக சொன்னார் “இல்லை
இன்னொருவரும் இதையே சொன்னார். இறுதியில் ஒரு அதிகாரி வந்து ஹோட்டல் பேஸ்மண்டில் இன்னும் மின் தூக்கி அமைக்கவில்லை, அதனாலே நடந்து வரும் சிரமம் என்றார். முன்னர் ஒருமுறை ஊனம் குறித்து புரிய வைப்பதற்காக என் உறவுக்கார பையனிடம் “உன் கூட பள்ளியில் ஊனமுற்றவர்கள் யாரேனும் படித்துள்ளார்களா? என்று கேட்டேன். யாருமே இல்லை என்று சாதித்தான். இன்னும் கொஞ்ச நாள் போனால் “ஊனமுற்றவர்களா? அப்படி ஒரு உயிர் உள்ளதா? என்று மக்கள் கேட்கும் நிலை வந்தால் மகிழ்ச்சி அடைவேன்.
அமர்வுகளில் தொடர்ந்து ஒரு சிரிப்பலை எழுந்து கொண்டே இருந்தது ஆரோக்கியமானது. இத்தனைக்கும் பேசினவர்கள் வலிந்து ஜோக் சொல்லவோ வலிப்பு காட்டவோ இல்லை. எளிய மெலிதான அங்கதம் கலந்து பேசுவது மேற்தட்டு எழுத்தாளர்களின் பாணியாக உள்ளது. மதியம் படைப்பாக்க பட்டறை நடத்தின ஸ்விச்சர்லாந்து எழுத்தாளர் ஸாக் ஒ யா எதைக் கேட்டாலும் குதர்க்கமாக பதில் முதலில் கூறி விட்டு அடுத்தது நடைமுறை ஞானம் சொட்டினார். உதாரணமாக “நாவலுக்கு கள-ஆய்வு செய்வது எப்படி? ஒரு ஆஸ்பத்திரி பற்றி எழுதுவதானால் என்ன செய்ய?
“அதற்கு சிறந்த வழி காலை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவது தான். நானும் அப்படித் தான் பண்ணிக் கொண்டேன். வெளியே வந்த பின் உங்களுக்கு ஆஸ்பத்திரி பற்றி எல்லாம் தெரிந்திருக்கும் சற்று இடைவெளி விட்டு “ஆனால் அது நடைமுறை சாத்தியமானது அல்ல. அதனால் நீங்கள் ஆஸ்பத்திரி பற்றி, மருத்துவர்கள், அறுவை சிகிச்சை, மருந்துகள் குறித்து வந்துள்ள ஏராளமான நூல்களை படித்து பயன்படுத்தலாம் என்றார். கடைசி அமர்வில் சுஹாசினியும் பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கனும் திரைக்கதை குறித்து உரையாடினார்கள். இதைக் குறிப்பிடக் காரணம் வழக்கத்துக்கு மாறாய் சுஹாசினி அன்று மிக தெளிவாக பேசினார் என்பதே.. மிகச் சிறந்த அமர்வு பாமா, சிவகாமி மற்றும் சுசி தரூர் பங்கேற்ற தலித் அமர்வு தான். அதற்கு ஒரு காரணம் உண்டு.
ஹிந்து குழுமத்தினர் தங்களது வழமையான அரசியல் நிலைப்பாட்டை காட்டும் விதத்தில் இவ்வமர்வுக்கு “எழுதுவதை நம்மை குணமாக்குமா? என்ற கேள்வியை தலைப்பாக வைத்திருந்தார்கள். பாமா முதலில் இந்த தலைப்பே அசட்டுத்தனமானது என்றார். சாதி அடக்குமுறை என்பது ஒரு நோய் பாதிப்பு அல்ல. அதற்கு தேவை மருந்து அல்ல, எதிர்ப்பு என்றார். தாக்குபவனை ஆற்றுப்படுத்த அல்ல, தாக்கப்படும் தாழ்த்தப்பட்ட சாதிக்காரர்களை ஒன்று திரட்டி எதிர்க்க தூண்டவே தான் எழுதுவதாக சொன்னார். அந்த கலவையான சபையில் சாதி குறித்த விவாதம் ஒரு புறம் சூடாக ஆரம்பித்தாலும் ஒரு பக்கம் பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் தலித்தியத்துக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்றே ஆர்வமின்றி அமர்ந்திருந்தனர். பார்வையாளர்கள் வினா பகுதியில் ஒருவர் எழுந்து தலித்துகள் தம் சாதி அடையாளத்தை பயன்படுத்தி வெட்டி அரசியல் செய்வதாக சொல்லி “ஏன் நீங்கள் தலித்துகளுக்கு நடக்கிற நல்ல விசயங்களைப் பற்றி எழுதுவதில்லை என்று கேட்டார். அதற்கு பாமா “தலித்துகளுக்கு நல்லது ஒன்று கூட நடக்க வில்லையே என்று சொல்ல கரகோஷம் எழுந்தது. பொதுவாக கேள்வி கேட்டவர்கள் ஒரு சின்ன குற்றவுணர்வால் தூண்டப்பட்டு கோபமுற்ற மேற்தட்டு சாதியினர். அவர்கள் “உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும் என்கிற ரீதியில் எதிர்வினை செய்தனர். இந்த அமர்வின் முக்கியத்துவம் இப்படியான பொது அரங்கில் சங்கடமான அரசியல் பிரச்சனைகளை எழுப்பியது தான். தூய இலக்கியவாதத்தில் இருந்து அரங்கை அது காப்பாற்றியது.
சிவகாமி சற்று தமிழச்சி தங்கபாண்டியன் போல் நளினமான பாதி புரியாத கோட்பாட்டு ஆங்கிலத்தில் பேசினாலும் அவர் சொன்ன சில கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. தலித் மக்கள் இன்று சோரம் போன தங்கள் தலைமை மீது நம்பிக்கை இழந்து நிற்பதாக தெரிவித்தார். அடுத்து முத்துராமலிங்கத் தேவர் மீதுள்ள குற்றக்கறையை குறிப்பிட்ட போது அரங்கம் நிச்சலமாக இருந்தது. ஒரு பார்வையாளர் “தலித் பிரச்சனைகள் ஒழிந்து உலகம் உத்தமமானால் நீங்கள் என்ன எழுதுவீர்கள்? என்றொரு கேள்வியை கேட்டார். அதன் மறைபொருள் உயர்ந்த இலக்கியம் என்பது நிரந்தரமான சில விழுமியங்களை விசாரணை செய்வது. தற்காலிக அரசியல் பிரச்சனைகளை அல்ல, உங்களைப் போன்றவர்கள் எவ்வளவு நாள் தான் அவற்றைக் கொண்டு இலக்கிய அங்கீகாரம் பெறுவீர்கள் என்பது தான். சிவகாமி தனக்கு எழுத பௌத்தம் உள்ளிட்ட ஏகப்பட்ட விசயங்கள் உள்ளதால் அப்படியான கவலைகள் இல்லை என்று நேரடியாக பதில் கூறினார். சுசி அடுத்து பாமாவிடம் மதம் எந்தளவுக்கு சாதி அமைப்பை தக்க வைக்கிறது, தலித் எழுத்தாளராக அவரது கிறித்துவ நிலைப்பாடு என்ன என்றார். பாமா அதற்கு தான் கர்த்தரை நேசிப்பதாக ஆனால் எல்லா மதங்களுக்கும் வெளியே இருக்க விரும்புவதாக சொன்னார். அன்று பல சமயங்களில் பாமா உணர்ச்சிவசப்பட்டே பேசினார். மதம் ஒரு சமூக உறுப்பு என்ற வகையில் அது சாதியவயப்படுவது தவிர்க்க இயலாதது எனினும் இன்றைய நிலையில் பௌத்தம் போன்றொரு மாற்று மதத்தை குறித்து இந்தியாவில் தலித்துகள் ஆழமாக சிந்திக்க வேண்டியது குறித்து அவர் பரிசீலிக்கவில்லை. ஆனால் சிவகாமி அதன் அவசியத்தை வலியுறுத்தினார். மற்றொரு சந்தர்பத்தில் பாமா இட ஒதுக்கீடு தேவையில்லை என்றார். “எங்களுக்கு ஒதுக்கீடு தர நீங்கள் யார்? என்று அவர் கேள்வி எழுப்பிய போது எழுந்த பலத்த மேற்தட்டினரின் கரவொலி எத்தனை சமயோஜிதமானது என்பதை அவர் அறிந்தாரா என்பது தெரியவில்லை. பின்னர் லாபியில் பாமாவை நேரில் சந்தித்து பேசிய போது அவரது முகம் எத்தனை தெளிவானது, அமைதி கூர்ந்தது என்பதை கவனித்தேன்.
இறுதியாக வீர் தாஸ் நிகழ்த்திய stand-up comedy நமது யூகி சேது போன்றவர்கள் செய்யும் டீ.வி ஓரங்க நகைச்சுவைகளில் இருந்து முக்கியமான ஒருவிதத்தில் வித்தியாசப்பட்டது. வீர் தாஸின் ஜோக்குகள் கிரிக்கெட், அரசியல், ஆண்-பெண் உறவுகள் என்பதை சுற்றி மையமிட்டிருந்தன. ஆனால் யூகி சேது போன்றோர் மத்தியதர வாழ்வின் விழுமியங்களின் அடிப்படையில் கிணற்றில் இருந்து எட்டிப் பார்த்து பேசுகையில் வீர் தாஸ் உலக/தேசிய அரசியல், பொதுவான மனிதப் பண்புகள் என்ற விரிவான தளத்தில் பகடி செய்கிறார். உதாரணமாக வாஸ்கோடகாமா வங்காளத்திற்கு வந்து ஒரு கருத்தரங்கில் இறங்கி அங்கொரு அறிவுஜீவியை சந்தித்தால் என்னவாகும் என்கிற கற்பனை உரையாடல்.
இரண்டாம் நாள் ஆறு அமர்வுகள். இலக்கியம், சினிமா, மொழிபெயர்ப்பு, கிரிக்கெட் ஆகியன தலைப்புகள். இறுதியாக ஏழரை மணிக்கு தெ ஹிந்து புனைவு விருது அறிவிக்கப்படும். குறிப்பிடத்தக்க அமர்வுகளாக மொழிபெயர்ப்பு பட்டறை/அமர்வு அமைந்தது. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் மொழிபெயர்ப்பு ஆசிரியராக உள்ள மினி கிருஷ்ணனும், வங்காள-ஆங்கில மொழிபெயர்ப்பாளரான அருணவா சின்ஹவாவும் நடத்தினர். இருவரும் வேறுபட்ட ஆளுமைகள் கொண்டவர்கள். மினி அடங்கின குரலில் கூர்மையான அபிப்பிராயங்களுடன் நுட்பமான நகைச்சுவையுடன் பேசினார். அரங்கம் அதிர்ந்த போதும் அவர் அதிரவில்லை. அரங்கம் அமைதியான போது மேலும் அமைதியானார். அறிவார்ந்த மிடுக்குடன் மாணவர்களை சின்னதொரு கையசைவால் கட்டுப்படுத்தும் கௌரவமான பேராசிரியரை நினைவுறுத்தினார். சின்ஹா அநேக குள்ளமான உருவக்காரர்களை போல் ஓரிடத்தில் நில்லாமல் சற்று ஆவேசமாக குரலை உயர்த்தி பேசினார். அடிக்கடி “மிஸ் என்று இருக்கையில் இருந்து துள்ளி எழும் பள்ளிக்குழந்தையை நினைவுபடுத்தினார். அவர் தெளிவாக ஒரு விசயத்தை அறிவுறுத்தினார். மொழிபெயர்ப்பு ஒரு விஞ்ஞானம் அல்ல. அது ஒரு கலை. அது சற்று தன்னிச்சையாக மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யப்பட வேண்டியது. பிரதி படிக்கும்படியாக இருப்பது முக்கியம், சிறிது சுதந்திரம் எடுத்து சொற்களை, வாக்கியங்களை மாற்றியமைத்தால் தவறில்லை. மினி யு.அனந்தமூர்த்தியின் “சம்ஸ்காரா நாவல் மொழிபெயர்பை குறிப்பிட்டார். அதன் ஒரு பத்தியை திரையில் காட்டினார். ஏ.கே ராமானுஜன் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு சின்ன சறுக்கல் சறுக்கியிருந்தார். மையகதாபாத்திரம் தனது நோயுற்ற மனைவியை குளிப்பாட்டுகிறார். ராமானுஜன் அங்கு மனைவியின் உடல் குளிப்பாட்டப்படுவதாக மொழிபெயர்த்திருந்தார். இது அப்பெண் இறந்து போய் விட்டதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது..அப்பெண் ஏறத்தாழ மரணித்திருந்த நிலையை குறிக்க ராமானுஜன் அவ்வாறு மொழிபெயர்த்தாரா அல்லது அது கவனப்பிழையா என்று விவாதம் கிளம்பியது. பிறகு ஒரு கன்னடிய பெண் எழுந்து ராமானுஜன் மற்றொரு இடத்தில் மல்லிகார்ஜுனா என்ற பதத்தை மொழிபெயர்த்ததன் தவறை சுட்டிக் காட்டினார். மொழியாக்கும் போது பிரதியின் பின்னுள்ள கலாச்சாரத்தை புரிந்திருக்க வேண்டிய அவசியத்தை மினி வலியுறுத்தினார். எவ்வளவோ சிரமங்களுக்கு பின் ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பாளன் புதுமொழிக்கு கொண்டு வருகிறான். ஆனால் அவன் பெயர் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இந்த அங்கீகாரம் இன்மை அரங்கில் சற்று நேரம் விசனிக்கப்பட்டது. உதாரணமாக ஷங்கரின் சௌரங்கீ நாவலை சின்ஹா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போது முன்னட்டையில் அவர் பெயர் வரவில்லை. ஷங்கர் பெயர் மட்டுமே கொட்டை எழுத்தில் அச்சாகியிருந்தது. ஆனால் மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைக்க வேண்டிய பங்கை எழுத்தாளன் அபேஸ் செய்தில் ஒரு இயற்கை நியதி உண்டு. உதாரணமாக, பிரபலமற்ற ஒரு படைப்பாளியை அறிமுகப்படுத்தினால் மொழிபெயர்ப்பாளனுக்கு அதிகப் புகழ் செல்லும். ஆனால் பிரபலமான படைப்பாளியை அறிமுகப்படுத்தி பிரபலமாக முயன்றாலோ நேர்மாறாக நடக்கும்.
இந்த பட்டறையில் ஒரு சின்ன குறை. பார்வையாளர்களின் பெரும்பான்மையான மொழிப்பரிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தேன்மொழியின் கதையின் முதல் பத்தியை சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் அழகரசன் அவசரமாக படித்து முடிக்க புரியாமையின் அமைதி அரங்கில் நிலவியது. அடுத்து ஆங்கில மொழிபெயர்ப்பாளர் தோன்றி அதன் மொழிபெயர்ப்பை படித்த போது பெரும் கரகோஷம். பிறகு ஒரு இந்தி பிரதியின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூன்று ஒப்பிடப்பட்ட போது சில இந்திவாலாக்கள் பங்கேற்றார்கள். ஆனால் பொதுவாக குழப்பமே நிலவியது. மீரா பஜன் ஒன்றை கல்கி மொழிபெயர்த்து தமிழ் சினிமாவில் பாடலாக்கி உள்ளார். அதன் இரு மொழி வடிவங்களையும் கல்கியின் பேத்தி பாடிக் காட்டினார். சில போனதலைமுறைக்காரர்கள் புளகாங்கிதமடைந்தாலும் இதன் நோக்கமும் விளங்கவில்லை. கல்கி மொழிபெயர்ப்பில் எங்கு சேர்த்தார், எதை விட்டார் என்பதையாவது பேசி இருக்க வேண்டும். ருபயாத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் குறைகளை பேசினார்கள். ஆனால் நமது கவிமணியின் மொழியாக்க வரிகளை குறிப்பிடவில்லை. அதே போல் சு.ராவின் “ஒரு புளியமரத்தின் கதை மொழிபெயர்ப்பில் கோயில் கொடை umbrella ஆனதை சொல்லி மேலும் சில நவீன தமிழ் நாவல்கள் எப்படி ஆங்கிலமாக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் விவாதித்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
மாலையில் ஷபானா ஆஸ்மியின் அமர்வு அவரது அம்மாவின் சுயசரிதை பற்றியது இது நம்மூர் இலக்கிய மேடைகளில் சினிமா நட்சத்திரங்கள் செய்யும் சேஷ்டைகளை நினைவுபடுத்தியது. தனது பெற்றோர் குறித்த அவரது சித்தரிப்பில் மிகையும் நாடகத்தனமும் சலிப்பூட்டியது. இப்படிப்பட்ட லட்சிய பெற்றோர்கள் பிற வரலாற்று நாயகர்களுக்கு கிடைத்திருந்தால் நம் வரலாறு வேறு ஒன்றாக இருந்திருக்கும். ஆனாலும் ஷபானா ஆஸ்மியை பார்த்து சில முதிர்-இளைஞர்களுக்கு கண்ணில் நீர் வந்து விட்டது. ஒருவர் எழுந்து சொன்னார் “ஷபானா இளமையாக இருந்த போது நானும் இளமையாகத் தான் இருந்தேன். இந்த பிரச்சனை இல்லாத ஒருவர் இருந்தார். அவர் தமிழ் திரைப்படங்களில் தாடியுடன் கருணை குவிந்த கண்களுடன் எப்போதாவது தோன்றி உள்ள, எல்லா உலக மாற்று சினிமா அரங்குகளிலும் எப்போதும் தோன்றக் கூடிய சத்யேந்திரா Lit for Life அரங்கின் பிற பார்வையாள கதாபாத்திரங்களுடன் அவரும் சரளமாக கலந்து விட்டார். அவருக்கு ஓய்வுபெற்ற நடிகைகள் மீது ஏதோ காண்டு உள்ளது. போன முறை ஒரு திரை அரங்கில் பார்த்த போது குஷ்புவை வைது கொண்டிருந்தார். இம்முறை லாபியில் நின்று சுஹாசினியை திட்டினார். அன்று ஷபானா தான் அறியாத மொழிப்படங்களில் நடித்ததில்லை என்று சொன்னார். இரண்டே விதிவிலக்குகள். கன்னடப் படமொன்றில் வசனமில்லாத வேடம். தெலுங்குப் படமொன்றில் பாட்டு மட்டும் பாடும் ஒரு பாடகியாக. உடனே சத்யேந்திரா குரலெழுப்பினார். “இல்லை நீங்கள் இரண்டு வேற்று மொழி படங்களில் நடித்துள்ளீர்கள்”. ஷபானா அமைதியாக தலையாட்டி இல்லை என்றார். “ஆமாம் நடித்துள்ளீர்கள். ஒன்று கன்னடா, இன்னொன்று தெலுங்கு. இதற்கு எப்படி பதில் சொல்ல என்ற ஷபானாவுக்கு விளங்கவில்லை. பின்னர் லாபியில் என் நண்பரான காப்பிக் கடைக்காரர் ஒரு முக்கியமான கேள்வி கேட்டார். அவர் சத்யேந்திராவை சுட்டிக் காட்டி என்னிடம் கேட்டார் “யார் அவர்? நான் அவரை வேறெங்கும் பார்த்ததில்லையே
இறுதியாக ராகுல் பட்டாசாரியாவின் “The Sly Company of People Who Careநாவலுக்கு இவ்வருடத்துக்கான சிறந்த ஆங்கில இந்திய புனைவு வழங்கப்பட்டது. மேடையில் தேர்வுக்குழுவை சேர்ந்த கவிஞர் சச்சிதானந்தன் தோன்றி காரணங்களை சொன்னார். ஒன்று இந்நாவல் கரீபியன் ஆங்கிலத்தை இந்திய ஆங்கிலத்துடன் கலந்து புதுமொழியை உற்பத்தி செய்துள்ளது. அடுத்து மனிதனின் ஆதார அபத்த நிலையை பகடி செய்துள்ளது. கடைசியாக இந்தியாவையோ மே.இ தீவுகளையோ விநோதமான ஆச்சரியம் தூண்ட சித்தரிக்காமல் எதார்த்தமாக புனைந்தது. ராகுல் உலக அழகிகளுக்கான வியப்பு தோன்றும் ஈரக் கண்களுடன் மேடைக்கு வந்து விருதை வாங்கி நன்றி தெரிவித்தார்.
கூட்டம் கலைந்ததும் லாபியில் சச்சிதானந்தனை வளைத்து இரண்டு கேள்விகளை கேட்டேன். ஒன்று தமிழ் நவீன கவிதைகள் ஒரு விரிவான வரலாற்று/தத்துவ பரப்பை பின்னணியாக கொள்ளாமல் மனிதனின் அகவுலகம் பற்றின சின்னஞ்சுறு தருணங்களை மட்டுமே ஏன் சித்தரிக்கின்றன? தனிமனிதனின் சங்கடங்கள், மிகைப்படுத்தப்பட்ட எளிய துயரங்கள், சஞ்சலங்கள், குற்றவுணர்வுகள், புலம்பல் புகார்கள் என ஏன் நம் கவிதைகள் குறுகிப் போய் விட்டன? தமிழ் நவீன கவிதை குறித்து இதே புகார் தனக்கும் உண்டு என்றார் சச்சிதானந்தன். அடுத்த கேள்வி. கேரள கவிஞர்கள் வெகுமக்கள் அங்கீகாரத்தை பெற்றதற்கு அவர்களின் அரசியல், சமூக ஈடுபாடும் பங்களிப்பும் காரணமா? சச்சிதானந்தன் அது உண்மையே என்றார். அவருக்கு பிரியமான கவிஞர்கள் அனைவரும் மக்கள் வாழ்வினோடு கலந்து பங்களித்தவர்களாக, சமூக அரசியல் பிரச்சனைகளில் அக்கறை கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள் என்றார். தமிழ் நவீன கவிதையின் அரசியலின்மையும் சமூக அக்கறையின்மையும் வருந்தத்தக்கது என்றார். இதற்கு காரணம் அநேக நவீன கவிஞர்கள் பிராமணர்களாக இருந்ததும், மத்திய வர்க்க பிராமணர்கள் பொதுவாக வெளிப்படையான அரசியல் நிலைப்பாடு எடுக்க விரும்பாதவர்களாகவும் உள்ளவர்களாக இருப்பதும் என்று இங்கு ஒரு விமர்சன தரப்பு உள்ளதாக சொன்னேன். சச்சிதானந்தன் சாதியக் காரணம் பல காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று சொன்னார். வேறு காரணங்கள் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். திராவிட அரசியல் பால் ஏற்பட்ட மனக்கசப்பு, தூய இலக்கியவாதம், elitism இப்படி தோன்றிக் கொண்டே போனது.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates