Showing posts with label அங்கதம். Show all posts
Showing posts with label அங்கதம். Show all posts

Friday, 21 May 2010

நித்யானந்தாவும் FTV மாடலும்




சில மாதங்களுக்கு முன் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை/அரசியல் கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன்


குடுமி போட்ட ஐயங்காரர் மாமா வாயில் இருந்து காலை வேளையில் அதுவும் ஒரு பக்தி நிகழ்ச்சியில் நித்யானந்தாவுக்கான விளக்கம் வரும் என்று நான் எதிர்பார்க்க இல்லை. மேலும் விளக்குவதற்கு முன் சத்தியபிரமாணம் ஒன்று:
நான் விசுவாசியோ அவிசுவாசியோ அல்ல. நித்யானந்தாவின் நடைமுறை ஞானம் மற்றும் லௌகீக சாமர்த்தியத்தின் மீது அபார மரியாதை கொண்டவன்.


விஜய் டீவியில் சுமார் ஏழு மணிக்கு, எச்சில் சாப்பாடு கேட்டு ஜன்னல் திண்டில் காக்கா கரையும் வேளையில், குடுமி மாமா சொன்னது என்னவென்றால்: “ஒருவருக்கு நல்ல குரு அமையாமல் போவது ஒரு நல்ல மனைவி அல்லது நல்ல மகன் அல்லது நல்ல மருகள் அமையாமல் போவது போல். இதற்கெல்லாம் காரணம் முன் ஜென்ம பாவம். நல்ல குரு அமைவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்”.

நான் எவ்வளவு பெரிய பாவி என்பதை உடனே உணர முடிந்தது. ஜெயா டீவியில் ஒரு குடுமி பஜார் சுருதி டான்ஸ் (அதாவது பாட்டின் சுருதி)ஆட பஜனை செய்து கொண்டிருந்தது. குருக்கள் அசுரன் வாமனனை விஷ்ணு பாதாளத்துக்கு அனுப்பின கதையை விளக்கி கொண்டிருந்தார். வாமனனின் கதிக்கு காரணம் அவர் விஷ்ணுவின் கால்களின் சரியான சைஸ் என்ன என்று கவனிக்காததே என்றார் பஜனைத் தலைவர். அதுவும் விஷ்ணு இந்த அளவைப் பற்றி பன்னிப் பன்னி வெவ்வேறு ஸ்தாய்களில் பாடி பாடி சொல்லியிருக்கிறார். ஆனால் பாவம் செய்த வாமனன் நம்ம வகை.attention deficit disorder. பஜனை குழுவில் ஒரு சிறுவன் ஸ்பஷ்டமாக கொட்டாவி விடும் வேளையில் நான் அங்கிருந்து ராஜ் டீவிக்கு வந்தேன். பால் தினகரன் நம்மைப் பிடித்த சாத்தானும், இலவச இணைப்பான பாவங்களும் இப்போதே துரத்தப்படும் என்றார். காலை வேளையில் முன்னணி தொலைக்காட்சிகள் பக்தி மார்க்கம் செல்வதற்கு மக்களின் ஒரு சின்ன செண்டிமண்ட் தான் காரணம் என்று நினைத்திருந்தேன். அதாவது கடவுள் நாமம் நினைத்து, சொல்லி அல்லது கேட்டு ஆரம்பித்தால் அனறைய நாள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் நடப்பதோ வேறு. பாவி பாவி என்று நினைவுறுத்தப்பட்டு குற்றவுணர்வுடன் நமது மக்களின் காலை வேளை ஆரம்பிக்கிறது.

இதற்கு Ftv-ஏ தேவலாம் போல. Ftv Breakfast-இல் சிகையலங்கராம், முக ஒப்பனை, இமை வரைதல் என வெவ்வேறு உதவியாளர் கரங்கள் தன் மீது ஈடுபட்டிருக்க பிளாக்பெரி நுண்பேசியில் விரல்களால் உலாவியபடி கன்ன எலும்புகள் துருத்தின ஒரு மாடல் சொல்கிறாள்: “இந்த மழைப்பருவ ஷோவுக்காக மூன்று மாதங்களாய் கடுமையாக தயாரித்துக் கொண்டு வருகிறேன்”. இத்தனை வேலைகளுக்கு இடையே பாவமூட்டைகள், பார்ப்பானின் காலடி அளப்பது, குற்றவுணர்வுக்கு எல்லாம் எங்கே நேரம் சொல்லுங்கள்.
Read More

இளையராஜா நல்லவரா கெட்டவரா?




சில மாதங்களுக்கு முன் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை/அரசியல் கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் உயிர்மையில் ஷாஜி இளையராஜா குறித்து எழுதின “ நீங்க நல்லவரா கெட்டவரா” கட்டுரை தெ ஹிந்துவுக்கு பிறகு உயிர்மை படிக்கிற மத்தியதர மாமாக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்பட்டது. சிலர் இக்கட்டுரையை எழுதியது சாரு என்று நினைத்து அவரை அடிக்க தேடியதாக தகவல் அடிபட்டது. ஆனால் இளையராஜா ரசிகர்களின் மனதை நோகடித்த ஷாஜி புத்தக விழாவின் போது உயிர்மை அரங்கின் வாசலில் பிளாஸ்டிக் நாற்காலியில் ஓஷோ தண்ணி அடித்தது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்தார். இளையராஜா அடியாள் படை “அந்த மலையாளத்தான பார்த்தா சொல்லி வை” என்று ஷாஜியின் காலரைப் பிடித்து உலுக்கி சொல்லிப் போனதாக மிகைப்படுத்த விரும்பாவிட்டாலும் அக்கட்டுரையால் அவர் பரபரப்புக்குரிய நபர் ஆனார் என்பது உண்மை. திண்ணையில் முன்பு இளையராஜாவின் பின்னணி இசையை சாடி கட்டுரை எழுதின ஜெயமோகன் இம்முறை ராஜாவுக்காக பரிந்து ஆதரித்து எழுதினார். ஷாஜி இதற்கு நுண்பேசியில் அளித்த பதிலை ஜெ.மோ தன் தளத்தில் பிரசுரித்து அதற்கு மறுமொழியும் எழுதினார். இரண்டையும் அவர் ஷாஜியிடம் பேசியபடியே இட-வல கைகளால் ஒரே நேரத்தில் எழுதியதாக செய்தி உலவுகிறது. தனக்கு தொடர்ந்து பல மிரட்டல் மற்றும் கண்டனக் கடிதங்கள் வந்ததாக ஷாஜியே சற்று வருத்தமும் மகிழ்ச்சியும் கலந்து தெரிவித்தார்.


ஒரு மலையாளக் கவிஞரை இளையராஜா விமர்சித்ததனாலே தாயகப் பற்றால் ஷாஜி ராஜாவை திரும்பத் தாக்கினதாக அஜயன் பாலா கடிந்து கொண்டார். இக்கட்டுரையை மனுஷ்யபுத்திரன் பிரசுரித்தது அவரது நிஜப் பெயர் ஹமீது என்பதாலே என்று காவி விசுவாசிகள் வேறு கொதித்தார்கள். விளைவாக மனுஷ் “ நானே ராஜாவின் பெரிய விசிறி. இது முழுக்க ஷாஜியின் கருத்து மட்டுமே” என்று அடுத்த உயிர்மை இதழில் சாட்சிமொழி எழுத நெர்ந்தது.

இந்த சர்ச்சைக்கு காரணமான ஷாஜியின் கட்டுரை சாராம்சம் என்ன? இளையராஜா கெட்டவர். அதனால் அவர் இசைவாழ்க்கையில் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது என்பதே அது. ஏப்ரல் 2010 இதழில் உயிர்மை இவ்விசயத்தில் ஒரு U-திருப்பம் எடுத்தது. ஒன்றுக்கு ரெண்டாக ஷாஜியும் சாருவும் ஏ.ஆர்.ரகுமானை தாக்கினார்கள். ஷாஜி இம்முறை என்ன சொன்னார்?

ஏ.ஆரின் பின்னணி இசை பலவீனமானதாம். அடுத்து ஸ்லம் டாக் மில்லனருக்கு கொடுத்த விருது தவறாம். அப்பட பாடல்கள் மிக சாதாரணமானவை. சரிதான், இதற்கு முன் ஏ.ஆரை பாராட்டி இதே உயிர்மையில் கட்டுரை எழுதியுள்ள ஷாஜி இப்போது ஏன் திடீரென அவர் பின்னணி இசை நன்றாக இல்லை என்கிறார். ஸ்லம்டாக் இசை ஏமாற்றமளிப்பது ஏன் இத்தனை தாமதமாக நினைவு வருகிறது அவருக்கு? ஸ்லம்டாக் பாடல்கள் பிரமாதம் என்று யாருமே சொல்லவில்லையே? அவ்விருது இதுவரையிலான ஏ.ஆரின் சாதனைகளுக்கான அடையாள விருது மட்டுமே. இதுவரையில் பல ஜாம்பவான்களுக்கும் அவர்களின் சிறந்த படைப்புகளுக்கு ஆஸ்கார் கிடைத்ததில்லையே! இதையெல்லாம் ஷாஜி சொல்ல வேறொரு பின்னணி உள்ளதாம்.அதையும் அவரே சொல்கிறார். அவரை விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்கள் பற்றி பேச ஒரு தொலைக்காட்சியில் அழைத்தார்களாம். ஷாஜிக்கு வி.தா.வ இசை பிடிகாததால் அவர் செல்லவில்லையாம். அதற்கான காரணங்களை உயிர்மையில் எழுதுகிறாராம். நண்பர்களே இப்போது நரிகள் எல்லாம் கனவில் தின்று ஏப்பம் விட்ட படியே “ஒரே புளிப்பு” என்கின்றன. ஷாஜி கட்டுரை முடிவில் வி.தா.வ பாடல்கள் குறித்து சுருக்கமாக தொழிநுட்ப விமர்சனம் ஒன்று வைக்கிறார். சபா முன்வரிசையில் மடியில் தட்டி ரசிக்கும் தாத்தாக்கள் நடுவே புகுந்து மண்டையில் தட்டு வாங்கியது போல் உள்ளது அதைப் படித்தால்.

அரிஸ்டாட்டிலின் தர்க்க சூத்திரம் ஒன்று உண்டு. அதாவது ஒரு தேங்காய் விலை 10 என்றால் ரெண்டு தேங்காய் 20 ரூபாய். இப்போது ஒரு மாங்காய் விலையும் 10 என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தேங்காயும் மாங்காயும் சேர்த்து வாங்கினால் 20 ஆகிறது. இதே தர்க்கப்படி

ராஜா = கெட்டவர்
அதனால்
ராஜா இசை = கெட்ட இசை

இதே போல் ஏ.ஆர் ரஹ்மானி பின்னணி இசை = கெட்ட இசை
அப்படி என்றால்
ஏர்.ஆர்.ரஹ்மான் = ?
Read More

காவலர்களை யார் காவல் காப்பது




நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன்.


ஜெயலலிதாவுக்கு தி.மு.கவை பிடிக்காததற்கான மிக சின்ன காரணங்களில் ஒன்று மு.க ஆட்சியில் ரவுடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டு ”சட்டம்-ஒழுங்கு சீர் குலைவது. அவர் தூங்கி பெட்காபி குடித்தபடி எழுந்துததுமே “கருணாநிதியின் மைனாரிட்டி குடும்ப ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ...” என்று கூறி தொடங்குவதாக நம்பகமான இடங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சட்டம் ஒழுங்கை கராறாக கையில் எடுத்தால் புல்லட்புரூப் அம்மாவை பாசிஸ்டு என்கிறார்கள். வரும் உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிடப் போகும் கலைஞர் அகராதியில் பாசிஸம் என்ற வார்த்தையை அரசியல் பிரிவில் சேர்க்கப்படும் அளவிற்கு ஜெவை குறிப்பிடும் போதெல்லாம் அந்த வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டு விட்டது. வேலை செய்வதே பிடிக்காத என் நண்பன் ஒருவன் இந்த இரு தீவிர நிலைப்பாடுகளுக்கு ஒரு மாற்று சொல்கிறான். அவனுக்கு மறந்து விட்ட ஒரு குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள படி ஒரு ஆட்சியாளன் இரண்டு எதிரிடைகளுக்கும் நடுவே ஒரு கோடுகிழித்து அதில் பயணிக்க வேண்டுமாம். அது சாத்தியமே இல்லை என்று நான் சொன்னதற்கு அவன் அவனது பெண் மேலாளர் சொன்ன ஒரு கதையை சொன்னான்.

இந்த மேலாளர் ஜெவை போல ஒரு அம்மையார். அதாவது அடுத்தவர்கள் எப்போதும் முதுகு வளைந்தபடியே நடக்க வேண்டும் என்று விரும்புபவர். கதை அவர் ஐம்பதுகளில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி தலைமை ஆசிரியரால் சட்டம் ஒழுங்கு எப்படி பேணப்பட்டது என்பதைப் பற்றியது. அதில் குறிப்பிடத்தக்கது நோட் புத்தகங்களுக்கு பழுப்பு வண்ண அட்டை அணிவிக்காத மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தரும் தண்டனை. சட்டையை கழற்றி வாசலில் முட்டி போட்டு நிற்க வைப்பாராம். (அது பெண்களுக்கு மட்டுமேயான பள்ளியா என்ற ஐயம் உங்களைப் போன்று எனக்கும் எழுந்தது). ஆனால் தண்டனைக்காலம் முடிந்ததும் ஆசிரியர்கள் ஓடி வந்து குற்றவாளியை அள்ளி எடுத்து “செல்லம், புஜ்ஜு, ஜூஜூ” என்றெல்லாம் கொஞ்சி உடலின் பலபாகங்களை கிள்ளி சீராட்டுவார்களாம். இதன் விளைவு? உங்களுக்கு தண்டனை மீது கோபமே வராதாம்!
ஜெ சொல்வதில் அவரது கட்சிக்காரர்களுக்கே நம்பிக்கை இல்லை போல. அவர்கள் முழுக்க மாறுபடுகிறார்கள். சட்டசபையில் சமீபத்தில் நடந்த விவாதத்தில் கலையரசன் தி.மு.க ஆட்சியில் போலிசாரிடையே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறியுள்ளார். குறிப்பாக நடைபாதை கடைக்காரர்களிடம் கூட லஞ்சம் வாங்குவதாக அவர் கூறியுள்ளதை முக்கியமாக கருதுகிறேன். அடிக்கடி போலி டி.வி.டி தயாரித்து, விற்பனை செய்ததாக சிலரை கைது செய்து பத்திரிகைகளில் படம் வெளியிடுவார்கள். ஆனாலும் பட்டப்பகலில் திருட்டு டி.வி.டிக்கள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. இவை வெறுமனே மாமூல் கைதுகள் தாம். கிண்டி பகுதியில் ஒரு தொப்பை போலீஸ் மாமா பைக்கில் இருந்தபடியே திருட்டு டி.வி.டிக்காரரிடம் லஞ்சம் கேட்டுப் பெற்று சட்டைப் பையில் சொருகுவதை கண்டேன். எனக்கு கரப்பான்பூச்சியையும் போலீசையும் கண்டால் சின்ன வயசில் இருந்தே பயம் என்பதால் இந்த காட்சியை உங்களுக்காக நுண்பேசியில் படம் பிடிக்கும் முயற்சியை கைவிட்டேன். இங்கு ஒன்றை ctrl+U போட்டு சொல்ல வேண்டும். மாமூல் கொடுக்கும் கடைக்காரர் போலீசை சிறிதும் சட்டை செய்யவில்லை. நாய்க்கு புரை வாங்கிப் போடும் ஒருவித அலட்சிய பாவனை. அடுத்து இந்த கடைக்காரரிடம் விசாரித்ததற்கு படிநிலை பொறுத்து லஞ்ச தொகை மாறுபடும் என்றார். அதாவது நூறில் இருந்து ரெண்டாயிரம் ரூபாய் வரை அடிக்கடி வாங்கி செல்வார்களாம். காவல்துறை இதற்கெல்லாம் ஒரு நிலையான கணக்கு வைத்துக் கொண்டு கடை, இடை, தலை ஊழியர்களை எல்லாம் கண்டமேனிக்கு தோன்றும் போதெல்லாம் அனுப்பி கை நீட்டும் அவலத்தை தவிர்க்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அடுத்து தர்பூசணி மற்றும் இளநீர் விற்கும் மற்றொரு சாலையோர கடைக்காரர் தி.மு.க ஆட்சி பற்றி இதே போன்றே அலுத்துக் கொண்டார். “அ.தி.முக ஆட்சியில் போலீஸ்கரங்க லஞ்சம் வாங்கவே பயப்படுவாங்க. இப்போது வெளிப்படையாவே வந்து புடுங்கீட்டு போறாங்க.” மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் போலீசுக்கு தாரை வார்க்க வேண்டி உள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார். “மாமூல் கொடுக்காட்டா கேஸ் போடுவாங்க. இவனுவளுக்கு கொடுக்கிற லஞ்சக் காசை கோர்டில பைனாவே கட்டீரலமுன்னு சில சமயங்களில் தோணும்”.



”காவலர்களை யார் காவல் காப்பது?”
சாகரடீஸ் தனது லட்சிய நாடான utopia-வை விளக்கிக் கொண்டிருக்கும் போது அவரிடம் இந்த கேள்வி கேட்கப்படுகிறது. பின்னர் இதற்கு தீர்வு சொல்லும் சீடர் பிளேட்டோ “அதிகார மோகம் இல்லாதவர்கள் காவலர்களாக வேண்டும்” என்கிறார். இது சாத்தியமில்லை என்று உணர்ந்து விட்ட பின் இன்று மற்றொரு தீர்வு சொல்லப்படுகிறது: அதிகாரத்தை பிரித்தளிப்பது. எந்த பெரிய குழுவிடமும் அதிகாரம் மொத்தமாக சேர்ந்து விடுவதை தவிர்ப்பது. ஆட்சி அதிகாரம் இப்படி பகிர்ந்தளிக்கப்படுவது ஊழல் மற்றும் பொறுப்பின்மையை குறைக்க உதவலாம். எனக்கென்னமோ ஜராசந்தன் கதை தான் நினைவுக்கு வருகிறது.
Read More

Friday, 14 August 2009

பொதுமையாக்கல் அரசியலும் மெரீனா கவியரங்கமும்



"இலங்கை போரின் காயம் இன்னும் ஆறாத நிலையில் தமிழக எழுத்தாளர்கள் ஈழத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நுட்பமாக கேள்விக்கு உட்படுத்தும் இக்கட்டுரை நம் வாசிப்புக்கு அவசியமானது."

07-12-2008 அன்று மெரீனாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் இனப்படுகொலை கண்டனக் கவியரங்கில் கலந்து கொண்டு திரும்புகையில் நடைபாதை கடையொன்றில் லஷ்மி மணிவண்ணனின் "குழந்தைகளுக்கு சாத்தான், பெரியவர்களுக்கு கடவுள்" நூலைப் பொறுக்கினேன். இதில் முதல் கட்டுரை "பேச முடியாமல் போகிற பேச்சு" அதிகார மைய அரசியலால் பொதுமையாக்கப்படும் தீவிர எழுத்தாளர்களைக் கண்டிக்கிறது. அன்றைய கவியரங்க மனநிலையோடு ஒட்டி வாசிக்க வேண்டிய கட்டுரை இது. அன்று பெரும்பான்மையாய் ஒலிக்கப்பட்ட ஆதங்கம் பேச்சு சுதந்திரம், அதிகார மைய கண்காணிப்பு, கட்டுப்பாடு பற்றியது. லஷ்மி இந்த குரல் ஒடுக்கத்தை, குரல் இழப்பைப் பற்றிப் பேசுகிறார். கவியரங்க பங்கேற்பாளரில் ஒருசாராரின் நிலைப்பாட்டை புரிய இந்த கட்டுரை உதவும். உலகமயமாதல் சூழலில் தனி அடையாளம் பொது அடையாளத்துக்கு, பொதுமைப்படுத்தலுக்கு பலியாகிறது. பொதுவிருப்புகள், தேர்வுகள் வணிக லாபத்துக்கு அவசியம். சர்வதேச உற்பத்திப் பொருட்களின் நுகர்வோனாக மூன்றாம் உலக மனிதன் மாறுமுன் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் இனமேலாண்மை, அரசியல் பார்வையை பிரக்ஞையற்று வரித்துக் கொள்கிறான். இவை ஏற்கனவே பேசப்பட்டவை தான். லஷ்மி இதை மேக்ரோ அளவில் தமிழ்ச்சூழலுக்குப் பொருத்துகிறார். தமிழக அரசியல், ஆதிக்க, செல்வாக்கு சக்திகளோடு தீவிர எழுத்தாளர்கள் தங்களை இணைத்துக் கொள்வதன் பொதுமை அரசியலைப் பேசுகிறார். தி.மு.கவுக்கு மக்கள் ஆட்சியுரிமை வழங்கியதற்கு அக்கட்சி மத்தியில் கூட்டணியில் உள்ளதன் அனுகூலங்கள் ஒரு காரணம். இதன் ஒரு எதிர்மறை விளைவு தி.மு.க மத்திய அரசால் பொதுமைப்படுத்தப்பட்டு கா.மு.க ஆனது. இதன் அடுத்த கட்ட குறுவிளைவாக கவியரங்கில் "இலங்கை, ஈழம், பிரபாகரன்" போன்ற வார்த்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. "எங்கோ இருக்கும் பிடல் காஸ்டுரோ பற்றிப் பேசலாம், தமிழர் விடுதலைக்காய் போராடும் பிரபாகரன் பற்றிப் பேசத் தடையா" என சில கவிஞர்கள் பொருமியதன் பின்னணி இது தான். நான் கூட இந்த குரலொடுக்கத்தை உணர்ந்தேன். முதலில் கவியரங்கத்தில் ஆளுங்கட்சியின் பச்சோந்திப் போக்கை விமர்சிக்கும் "தேர்தல் வாக்குறுதிகள்" என்ற கவிதையை கலைஞரை மிமிக்ரி செய்து படிக்கும் திட்டம் வைத்திருந்தேன். எதிர்மறை விளைவுகள் பற்றி உள்நடுக்கம் இருந்தது. ஜாமீனில் எடுக்க முடியாது என்று மனைவி திட்டவட்டமாக அறிவித்திருந்தாள். கழக ரௌடிகள் தாக்கலாம். கையில் கத்தி எடுத்துப் போவது என்று முடிவு செய்தேன். இறுதியாய் நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் நரன் அரசுக்கு எதிரான நிலைப்புடைய கவிதைகள் வேண்டாம் என்று என்னிடம் தெரிவித்தார். ஆபத்தற்ற மற்றொரு கவிதையை படித்தேன். சுதந்திரமின்மையில் பாதுகாப்பு உள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பல அடுக்குகளில் பொதுமை அரசியலாக்கப்பட்டவர்கள். கனிமொழி கழகத்தின் நேரடி தோல்பாவை. தமிழச்சி தங்கபாண்டியன் நிலவில் நடப்பது போல் கால் பதியாமலே முக்கியமான வகையில் பங்கேற்றினார்; ஈடுபாட்டோடு உழைத்தார். கவியரங்க முடிவில் நடந்த நாடகத்தில் காளி வேடத்தில் இவர் நடிப்பதாய் இருந்தது. இறுதி கட்ட கழகக் குறுக்கீடால் அதைத் தவிர்த்து வேறொரு மிதிபடும் சிறு வேடத்தை எடுத்துக் கொண்டார். தமிழச்சி ஒரு நட்சத்திரம் கூட. என் நண்பர் குழு தமிழச்சி அழகுதானா என்று அலசியது. இன்னும் மணமாகவில்லை என்று எண்ணி சிலர் விசனித்தனர் (அவரது கணவர் துணை கமிஷ்னர் அன்று முழுக்க ஜீப்பில் காத்திருந்தார்). வீட்டுக்குப் போனதும் என் மனைவி கேட்டாள்: "தமிழச்சி நேரில் பார்க்க அழகாயிருந்தாரா?" புத்திசாலித்தனமாக "இல்லை" என்றேன்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இன்பா, லீனா, சுகிர்தராணி, நரன் ஆகியோர் அடுத்த அடுக்கு பொதுமையாக்கலை சேர்ந்தவர்கள். கவியரங்கின் பின் இவர்களின் கடுமையான உழைப்பு, பொருட்செலவு, அர்ப்பணிப்பு இருந்தன. நூற்று சொச்சம் எழுத்தாளர்களை ஒன்று சேர்த்து நிகழ்ச்சியை நடத்துவது எளிதல்ல. நிகழச்சியை நடத்த குறைந்த பட்ச குரலொடுக்கத்தை அனுமதிக்க இவர்கள் தயார். இவர்களின் சமரசம் இருதரப்பிலானது. கலகக்குரல்களும் ஓரளவு அனுமதிக்கப்பட்டன. உதாரணமாய் அரசு தரப்பின் கட்டுப்பாடுகளை முழுக்க பின்பற்றியிருந்தால் நிகழ்ச்சி துக்க விசாரிப்பு போல் அமைதியாய் நடந்திருக்கும். வாசிப்பதற்கான கவிதைகளை முன்கூட்டியே அனுப்பக் கேட்டிருந்தார்கள். இது தணிக்கைக்காக என்று புரிந்து கொண்டேன். மிகவும் முறைப்படுத்தப்பட்ட ஒரு கதர் குல்லா கவியரங்கயே எதிர்பார்த்தேன். ஆனால் முறைப்படுத்தப்படாமல் நான் நீ என்று பலர் கவிதை வாசிக்க பேர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் பாதி கொளுத்திய வாலோடு அனுமார் இலங்கையில் ஓடியது போல் இருந்தது நிகழ்ச்சி. அத்துமீறல்களும் கட்டுப்படுத்தலுமாக. சிலர் ராஜபக்சேவை ஒண்டிக்கு ஒண்டி அழைத்து மண்ணை வாரி இறைத்தனர். பல கவிதைகள் வன்புணர்ச்சி பற்றியவை. இலங்கை ராணுவம் தமிழ்ப்பெண்ணை வன்புணர்வதை படிப்படியாக வர்ணித்த ஒரு கவிஞர் ஜட்டியை மட்டும் மிக நாகரிகமாக "பெண்குறியை மூடிய ஆடை" என்று சுட்டினார். நிலைமை அத்துமீறிப்போக இன்பா உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மைக்கை கைப்பற்றி அடிக்கடி எச்சரித்தனர். ஒரு கவிஞர் பொருட்படுத்தாமல் பிரபாகரனுக்கு புகழ்மாலை சூட்ட புறப்பட, கோபமான இன்பா அருகில் போல் அவரை கலவரப்படும்படியாய் காதில் ஏதோ சொன்னார். தொடர்ந்து அவர் வாசிக்க பக்கத்திலே நின்று காகிதத்தையே உற்றுப் பார்த்தார். அந்த வீரமிக்க கலகக் கவிஞர் பதறி வியர்த்து வழிந்தார். கவிதையின் இறுதி பத்தியை மட்டும் படித்து விட்டு நழுவிக் கொண்டார். இன்பா மைக்கை பிடித்துச் சொன்னார்: " நாம் நியாயப்படி இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களுக்காக போராட வேண்டும். முடியாமல் தான் கவியரங்கம் நடத்தி நம் உணர்வுகளைக் காட்டுகிறோம். அரசாங்கத்தையோ, தனி நபர்களையோ வெளிப்படையாக கண்டித்து, ஆதரித்து கவிதை வாசித்தால் ஏற்படும் விளைவுகளை அந்த தனிப்பட்ட நபர்களே சந்திக்க வேண்டும், எங்கள் அமைப்பு பொறுப்பாகாது." இலங்கைக் கவிஞர் ஒருவரை மேடையேற்ற வேண்டாம் என நிகழ்ச்சி இடையே அரசுசார்பில் வற்புறுத்தல் வந்ததாய் கேள்விப்பட்டேன். இறுதியாய் வாசித்தவர்களில் இங்குலாபின் கவிதை மறைமுகமானது. அது தெரியாமல் அவர் அறம் பாடப்போகிறார் என்று பயந்த அமைப்பாளர்கள் வாசிக்க வருமுன் மைக்கிலேயே கொஞ்சம் மிரட்டலாய் வேண்டுகோள் விடுத்தனர். பழம்போல் வெள்ளை வேட்டி சட்டையில் தெரிந்த இங்குலாப் தாத்தா பதிலடியாக கவிதையின் பின்விளைவை தானே சந்திக்கத் தயார் என்று கர்ஜிக்க எனக்கு புல்லரித்தது. நான் அன்று உரக்க கைத்தட்டியது அவருக்கு மட்டும்தான். இந்த சங்கடத்தை தவிர்த்து அவர் மேடைக்கு வருமுன் தனிப்பட்ட முறையில் கட்டுப்பாடுகளை தெரிவித்திருக்க வேண்டும்.

இந்த "கலகங்களை", குழப்படிகளை காவல்துறை கவனித்துக் கொண்டுதான் இருந்தது, குறிக்கிடவில்லை. நன்றி. மேடை அருகில் நின்று ஒரு முள்தாடி குடிகாரர் கவிஞர்களை உற்றுப்பார்த்து பயமுறுத்திக் கொண்டிருந்தார். அவரை மட்டும் சிரமப்பட்டு இரண்டு முறை விரட்டினார்கள். ஆனால் உண்மையில் அங்கு கட்டுப்பாட்டு--மீறல் அரசியல் செய்யாதவர்கள் அவரும், சுடுமணலில் படுத்துக் கிடந்து நிகழ்ச்சிப் போக்கை கவனித்த வெள்ளை நாயும் மட்டுமே: தமிழ்ப்பரப்பின் விதூசகனும், பார்வையாளனும்.

பூடகமாக, மறைமுகமாக யாரை வையவும், கொல்லவும் நிகழ்ச்சியில் அனுமதி இருந்தது. மிகச்சிலர் மட்டுமே இந்த சைலன்சர் பொருத்திய துப்பாக்கியை எடுத்து அழுத்திப்பார்க்க முயன்றனர்: ரமேஷின் பூனைக் கவிதை போல். கவிதை வாசித்த தமிழக கலகக்காரர்கள் யாரும் தம் வாழ்நாளில் ஒரு குண்டு வெடிப்பை கூட கேட்டிராதவர்கள். போரின் கொடுமை, அவலம், இழப்பு பற்றி இவர்கள் கவிதையில் மிகச்செயற்கையான உணர்ச்சிகளையே வெளியிட்டனர். உதாரணமாய் ஒருவர் இலங்கைப் படைக்கு எதிராய் மிகக் கொந்தளிப்பான ஒரு கவிதையை வாசித்து விட்டு வாயெல்லாம் பல்லாக மேடையிலிருந்து வெளிவந்தார். அன்றைய கவிமேடை ஒரு அபத்த நாடக மேடையாக முடிந்தது. கவிதை வாசிப்பதற்கு பதில் சிலர் சிங்கள அரசுக்கு எதிராக ஆவேசமாய் கூச்சலிட்டது தங்கள் படைப்பூக்கம் மீதான நம்பிக்கை இழப்பாகவே புரிந்து கொள்ள முடியும்: சில தீவிர சினிமா ரசிகர்கள் விரல், நாக்கு, மூக்கு என நடிகர்களுக்கு தபாலில் அனுப்புவது போல். இலங்கைத் தமிழர்களிடம் இருந்து விலகி வாழும் நாம் இனப்படுகொலைகளை பற்றிய நம் அதிர்வுகளை, அவதானிப்புகளை, விமர்சனங்களை, நிலைப்பாடுகளை கவிதையின் நுட்பமான மொழியில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். போலியான அரற்றல்களையும், பலவீனமான அச்சுறுத்தல்களையும் எந்த அதிகார அமைப்பும் அஞ்சாது. குழந்தைகளின் காகித ஏவுகணைகளைப் போன்றவை அவை. இலங்கை அரசின் குண்டு தமிழக மண்ணில் விழுந்தால் மட்டுமே நாம் நேரடி போர்ப்பரணி எழுத முடியும். அதுவரையில் ஜாக்கிசானின் மொழிமாற்றப் படங்களுக்கு இணையாகத் தான் நம் கொந்தளிப்பு கவியரங்கங்கள் அமையும்.

இந்த முக்கியமான நிகழ்வு சாத்தியமானதில் திமுக அதிகார மையத்தை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவரும் கனிமொழியும் ஆளுங்கட்சி ஆதரவு கோஷங்கள் போடாமல் கண்ணியமாகவே கவிதை வாசித்தார்கள். நன்றி. நண்பனும், தலித்திய சிந்தனையாளனுமான சார்லஸ் "தமிழச்சி, கனிமொழியின் பங்கேற்பு நிகழ்ச்சிக்கு பாதகமே" என்றான். இவர்களின் இருப்பு அரசை காயப்படுத்தாமல் கழைக்கூத்தாடி போல் கயிற்றில் நடக்க அமைப்பாளர்களை நிர்பந்தித்தது என்பது அவனது வாதம். அரசியல் எதிர்ப்போ சாய்வோ வேண்டாம் என்பது அமைப்பாளர்களின் நிலைப்பாடாக இருக்கலாம். அவர்கள் முழுக்க சாயவில்லை என்பதே என் அவதானிப்பு. சார்லஸ் சொல்வதும் லஷ்மி சொல்வதும் ஒன்றுதான். பொதுமை அரசியல்வாதிகளிடம் இருந்து நம்மை அன்னியப்படுத்தினால் மட்டுமே நாம் பொருள்பட இயங்க முடியும். ஆனால் கண்காணிப்பு கட்டுப்பாடுகள் அற்ற அத்தகைய 'தனிப்பட்ட' கூட்டங்களுக்கு இத்தகைய மைய அதிகாரத்தின் குரலையே ஏறத்தாழ எதிரொலிக்கும் ஒரு பொதுமை கவியரங்கின் ஊடக, சமூக கவனம் கிடைக்காது. பொதுஅரங்கில் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களுடன், அதிகார மைய ஆதரவுடன் நடத்தப்படும் நிகழ்வுகளின் சமூக வீச்சு அவசியமாக உள்ளது. லீனா நிகழ்ச்சி முடிவில் குறிப்பிட்டது போல் இதுவொரு வரலாற்று நிகழ்வு. ரயில் மறிப்பு, பேரணி போன்று. ஒரு ரயிலை மறிப்பது சாதனை அன்று, அதனால் நேரடி லாபமும் இல்லை. அது ஒரு குறியீட்டு நிகழ்வு மட்டுமே.

வரலாற்று நிகழ்வுகளால் புதிய சிந்தனைகளோ, கலாச்சார நகர்வுகளோ சாத்தியமில்லை. அதற்கு மையமற்ற குறுங்குழுக்கள் நடத்தும் விவாதங்கள், படைப்பூக்க வெளிப்பாடுகள் வேண்டும். இணையம் இதற்கு சிறந்த தளம். அரசு அதிகார எல்லைக்கு அப்பாலே அவர்கள் செயல்பட முடியும். புயலடிக்கும் பொதுமேடையில் அல்ல, பொத்திய கரங்களுக்கு உள்ளே தான் இந்த "அக்கினிக் குஞ்சுகள்" வளர்ந்து காட்டுக்குள் பிரவேசிக்க முடியும். இத்தகைய உழைப்பு, ஈடுபாடு, செல்வாக்கு, பணம், நூற்றுக்கணக்கானோரின் பங்களிப்பு தேவைப்படும் இக்கவியரங்கம் போன்ற பொது நிகழ்வுகள் பொதுமைப்படுத்தலுக்கு எதிராய் சூழலைத் தயாரிக்க பெரிதும் பயன்படும். அந்த கண்ணோட்டத்தில் இரண்டு தரப்பினரும் அவசியம். தமிழச்சி, கனிமொழியும் வேண்டும், கலக தனிச்சிந்தனையாளர்கள், கவிஞர்களும் தேவையுள்ளார்கள். இருவரின் அலைகளும் ஒரே பரப்பில் தான் எழுகின்றன. கடவுளும் சாத்தானும் எப்போதும் இருட்டில் சேர்ந்தே நடமாடுகிறார்கள்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates