Showing posts with label அர‌சிய‌ல். Show all posts
Showing posts with label அர‌சிய‌ல். Show all posts

Thursday, 20 February 2014

ராஜீவை கொன்றது சரியா என கேட்கலாமா?




புலிகள் ராஜீவை கொன்றார்கள் என்பது உண்மை. அதை நாம் மறுக்க வேண்டியதில்லை. மறுப்பது என்பதே அது ஒரு குற்றம் என்கிற எண்ணத்தில் இருந்து வருகிறது. இது அவசியமற்ற ஒன்று. ஏன் எனக் கூறுகிறேன்.
Read More

Saturday, 1 February 2014

திமுகவுக்கும் பெரியாருக்கும் சம்மந்தம் உள்ளதா?




தமிழ் ஹிந்துவில் சமஸ் எழுதிய ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் கட்டுரையை ஒட்டி ஒரு கொந்தளிப்பான விவாதம் நடந்து வருகிறது. விமர்சகர் ஜமாலன் அக்கட்டுரைக்குப் பின் பெரியாரியம் அழிய வேண்டும் என்கிற பிராமண வலதுசாரி சக்திகளின் விருப்பம் உள்ளதாக கூறுகிறார். இதைக் கேட்கும் போது பெரியாருக்கும் தி.மு.கவுக்கும் எந்தளவுக்கு சம்மந்தம் உண்டு என்கிற வியப்பு நமக்கு ஏற்படுகிறது.

தி.மு.க என்பதே பெரியாரின் தீவிரமான கருத்துக்களை மட்டுப்படுத்தி அண்ணா உருவாக்கிய ஒரு சமரச இயக்கம் தான். ஆட்சிக்கு வந்த பின் தி.மு.கவினர் நாத்திகத்தை பரப்பவோ, சுயமரியாதை திருமணங்களுக்கு முன்னுரிமை அளிக்கவோ, சாதி அமைப்பை பலவீனப்படுத்தவோ காத்திரமாய் ஏதும் செய்த்தில்லை. சுயமரியாதை தம்பதியினருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அரசு வேலை என்று ஒரு சட்டம் கொண்டு வந்திருந்தால் இங்கு காதல் மறுப்பு திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு பெரும் ஊக்கமாகவும் ஆதரவாகவும் அது இங்கு இருந்திருக்கும். ஆனால் தி.மு.க அதை செய்யவில்லை. ஏன்? அப்படி செய்தால் அது இங்குள்ள சாதிய கட்டுமானத்தை சிறிய அளவிலாவது குலைத்திருக்கும். திமுகவின் கோயிலில் தமிழில் பூஜை செய்வதற்கும், வேறு சாதியினர் பூசாரி அவதற்கான பயிற்சிகளும் கூட வெறும் பாசாங்காகவே முடிந்தது. பயிற்சி முடிந்த வேற்றுசாதி பூசாரிகளுக்கு அறநிலையம் வழி வேலை வழங்க திமுக ஒன்றும் செய்யவில்லை. ராமர் பால விசயத்தில் கலைஞர் பகுத்தறிவை போதித்த்தும் இது போல ஒரு மேலோட்டமான பிரச்சாரம் தான். இது போன்ற பேச்சுகளின் மூலம் தான் ஒரு பெரியார் சீடர் எனும் பிம்பத்தை தக்க வைக்க முயல்வார். ஆனால் காத்திரமான பெரியாரிய வேலைகளை என்றும் செய்ய மாட்டார். பழைய படங்களில் எம்.ஜி,ஆர் மாறுவேட்த்துக்காக ஒரு மருவை கன்னத்தில் ஒட்ட வைப்பார். கலைஞர் பெரியாரை அது போல் ஒட்டிக் கொள்கிறார். ஓட்டு வங்கி பிரிந்து போகும் என்கிற அச்சத்தினால் தி.மு.க சாதிய கட்டுமானத்தை முடிந்தளவு அசைக்காமலே விட்டு வைத்த்து.
கலைஞரின் மஞ்சள் துண்டின் பின்னுள்ள மூடநம்பிக்கை, அவரது குடும்பத்தினரின் கோயில் தரிசனங்கள் போன்ற உதிரி பிரச்சனைகளாக மறந்து விடலாம். ஆனால் தி.மு.க பொறுப்பில் உள்ள பலர் மஞ்சள் நீராட்டு போன்ற நிகழ்ச்சிகள் நட்த்துவதும் அதற்கு போஸ்டர்கள் அடித்து ஒட்டுவதும், ஸ்டாலினே அதற்கு தலைமை தாங்குவதும் என கீழ்மட்ட அளவு வரை தி.மு.க ஒரு பகுத்தறிவை வலியுறுத்தாத அமைப்பாகவே அதன் தொண்டர்களாலே பார்க்கப்படுவது வெட்டவெளிச்சம்.
இது உண்மையில் அண்ணாவின் காலகட்ட்த்தில் எடுக்கப்பட்ட முடிவு. பகுத்தறிவின் பெயரில் சாதியையோ மத்த்தையோ சடங்குகளையோ எதிர்க்க வேண்டாம் என்ற ஒரு சமரச மனப்பான்மையில் தான் தி.மு.க அரைநூற்றாண்டாக இயங்கி வருகிறது. தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கு உள்ள வித்தியாசம் பா.ஜ.க போல் அது நேரடியாக மதவாதத்தை, சாதியத்தை ஆதரிக்காது என்பதே. நாங்கள் மதத்தை எதிர்க்க மாட்டோர், ஆதரிக்கவும் மாட்டோம் என்பது கண்ணை மூடிக் கொண்டு போவோம் என்பதற்கு சமம். நீண்ட காலமாக தி.மு.க பெரியாரை ஒரு சின்னமாக, பதாகையாக பயன்படுத்தி வந்திருக்கிறது. அ.தி.மு.கவுக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வெளிப்படையாக மதத்தை ஆதரித்தார்கள் என்பது தான். ஆனால் ஒரு விசயத்தை நீங்கள் இருட்டில் செய்தால் என்ன, வெளிச்சத்தில் செய்தால் என்ன? ரெண்டும் ஒன்று தானே!
சோ தி.மு.கவை எதிர்ப்பதே அதிமுகவை ஆதரிக்கத்தான். அதிமுகவை ஆதரிப்பதும் அய்யங்கார் சமூகத்திற்காகத் தான். ஜெயாவுக்கு பின் வேறு சமூக ஆள் கட்சித்தலைமைக்கு வந்து சோ அப்போதும் இருந்தால் நிச்சயம் ஆதரிக்க மாட்டார். மற்றபடி கொள்கையளவில் தி.மு.க சோவை எந்தளவிலும் எரிச்சலூட்டக் கூடிய கட்சி அல்ல. தி.மு.கவின் பிராமண எதிர்ப்பு நிலைப்பாடு என்பது (அப்படி ஒன்று உண்டென்றால்) இன்றைய தலைமுறையினரை சற்றும் தீண்டாத ஒன்று. அறுபதுகளில் பிறந்த வாழ்ந்த பிராமண சமூகத்தினருக்கு திமுக மேல் கோபம் இருக்கலாம். ஆனால் இன்றைய தலைமுறை பிராமணர்களுக்கு திமுக தம்மை எதிர்க்கிற கட்சியே அல்ல. பிராமணியம், இந்துத்துவாவுக்கு எதிராக சிறுபத்திரிகைகளும், இட்துசாரி ஆதரவாளர்களும் கடந்த முப்பது வருடங்களில் எழுதியதற்கும் பேசியதற்கும் ஒரு சிறு அளவு கூட திமுக செய்யவில்லை. மோடி தமிழகம் வந்தால் திமுக கறுப்புக் கொடி காட்டுமா? செய்யாது. பேஸ்புக்கில் கூட மோடியை அதிகம் எதிர்ப்பது இட்துசாரி, சிறுபத்திரிகை, இஸ்லாமிய தரப்பை சேர்ந்தவர்கள் தாம்.
தி.மு.க எதிர்ப்பு என்பது ஒரு கட்சிரீதியான போட்டி சார்ந்த எதிர்ப்பு தான். சாதி பாசம் காரணமாய் அதிமுகவை ஆதரிக்கிற பிராமணர்கள் அந்த நோக்கில் ஒருவேளை திமுக விழுவதை எதிர்பார்க்கலாம். ஆனால் அது ஒரு போதும் திமுக வலதுசாரித்தனத்தை எதிர்க்கிறது என்றோ, பெரியாரை முன்னெடுக்கிறது என்றோ அல்ல.
பெரியார் குறித்த மிக காத்திரமான விவாதங்கள் தலித்திய எழுச்சியை ஒட்டி தொண்ணூறுகளின் இறுதியிலும் ரெண்டாயிரத்தின் துவக்கத்திலும் சிறுபத்திரிகை வட்ட்த்தில் நடந்தன. அப்போது ஆவேசமாக பெரியாரை மறுகட்டமைப்பு செய்து மீட்ட்தும், ஆதரித்ததும் திமுகவினர் அல்ல. சிறுபத்திரிகை அறிவுஜீவிகளும் ஆதரவாளர்களும் தான். இந்த விவாதங்கள் திமுகவையோ வெகுஜன கட்சிகளையோ தொடவில்லை. திமுக என்றுமே தன் கொள்கைகளை விவாதித்து விரிவுபடுத்தும் பணிகளை செய்ய ஆட்களை உருவாக்கியதில்லை. நம் பள்ளிக்கூட பாட்த்திட்ட்த்தில் பெரியாரின் கருத்துக்கள் கற்பிக்கப்படுவதில்லை. ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா? அங்கு கடவுள் எதிர்ப்பை விட கடவுள் வாழ்த்தை தான் மாணவர்கள் மீண்டும் மீண்டும் கற்கிறார்கள். எழுபதுகளுக்குப் பிறகு சினிமா, மீடியா, பத்திரிகை, கருத்தரங்கு என எந்த வழியிலும் பெரியாரியத்தை விவாதித்து முன்னெடுக்க திமுக முயலவில்லை. சொல்லப் போனால் கொள்கைகளை விவாதித்து வளர்க்கும் அறிவுஜீவிகளை திமுக கவனமாக வளர்க்காமல் தவிர்த்திருக்கிறது என்கிறார் தமிழவன். கட்சியை முழுக்க தன்னை நோக்கி குவியும் படியாய் கலைஞர் செய்தார். எந்த ஒரு கோட்பாடும் மாறும் காலத்துக்கு ஏற்ப விவாதிக்கப்பட்டு தான் வளர முடியும். அப்போது தான் புதிய தலைமுறைகளை அது சென்று அடையும். திமுக இந்த பணியை கைவிட்டதன் விளைவு தான் சாதிக்கட்சிகள் தமிழகத்தில் செழித்து வளர்ந்தது. இவை சாதி வேறுபாடுகளுக்கு ஒரு எதிர்மறையான தீர்வை தேட முயன்றன.
வீரமணி கலைஞருடன் இருக்கிறார் என்கிற காரணத்துக்காக் பெரியாரும் திமுகவுடன் இருப்பதாக கருதுவது பெரும் அபத்தம். பெரியார் தன் சவப்பெட்டியில் அடிப்பதற்காக ஒரு ஆணியை தேர்ந்தெடுத்தார். அது தான் வீரமணி.
Read More

Friday, 31 January 2014

கலைஞரை மட்டும் ஏன் திட்டுகிறார்கள்?



நாம் கலைஞரை விமர்சிப்பது போல் ஏன் ஜெயாவை செய்வதில்லை?
1.கலைஞரின் குடும்ப அரசியல் தான் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுக்கிற பேரில் அவர் எல்லாரையும் குழப்பி தன்னை மட்டும் தக்க வைக்கிற அரசியல் எரிச்சலூட்டுகிறது. ஜெயலலிதாவிடம் குடும்ப அரசியல் இல்லை. உதிரியாக ஒன்றிரண்டு காட்டலாமே ஒழிய அவருடையது குடும்ப அரசியல் அல்ல, தனிமனித அதிகார அரசியல். ரெண்டையும் குழப்ப முடியாது.

2. ஜெயாவின் சர்வாதிகாரத்தை விமர்சிக்க வேண்டிய கட்டத்தில் விமர்சித்திருக்கிறோம். குறிப்பாக அண்ணா நூலகத்தை பெயர்க்க நினைத்த போது. ஜெயா யாரையும் அதற்காக உள்ளே போடவில்லை. ஜெயாவைப் பார்த்து பேஸ்புக் அல்லது இணையத்தில் இயங்குபவர்கள் பயந்து நடங்குவதாக கூறுவது அபத்தமான பார்வை.
3. கலைஞர் மிகவும் தனிப்பட்ட முறையில் தாக்க்கப்படுகிறார் என்பது உண்மை தான். இங்கு இரண்டு விசயங்கள் சொல்ல வேண்டும். அவதூறு அரசியல் நம் நடைமுறை அரசியலின் பகுதி. பொதுமேடைகளில் பரஸ்பரம் கேவலமாக திட்டிக் கொள்வது நம் அரசியல் பண்பாடு. இன்று இணையத்தில் எழுதப்படுகிற விமர்சன்ங்களிலும் அதுவே பிரதிபலிக்கிறது. அடுத்து, கணிசமான ஈழத்தமிழர்கள் கலைஞர் தம்மை ஏமாற்றி விட்டதாக நம்புகிறார்கள். அவர்களின் கோபம் நியாயமானது. அவர்கள் காறித் தான் உமிழ்வார்கள். ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
4. ஜெயாவின் ஆட்சியின் குற்றங்களை கண்டுபிடித்து எழுத வேண்டியது மீடியாவின் பொறுப்பு. நம் மீடியா பொருளாதார லாபத்துக்காக ஆப்பில் உட்கார்ந்த குரங்கு போல் இவ்விசயத்தில் கையை கட்டி இருக்கிறது. இது நம் தவறல்ல. விமர்சனமும், ஊழல் போன்ற குற்ற வெளிப்பாடுகளும் மீடியாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அது ஜெயாவை விமர்சிப்பதற்கான சூழலை உருவாக்கும். வலைதொடர்பு தளங்களில் விமர்சனங்கள் அப்போது தான் ஆரம்பிக்கும்.
5. பொதுவாக திமுக ஆட்சியிலும் நம் மீடியா ஜெயா மீது மயிலிறகால் தான் வருடுகிறதா? இது தான் விவாதிக்க வேண்டிய விசயம். எந்தெந்த பத்திரிகை என்று முன்பு டான் அசோக் ஒரு பதிவில் எழுதியதாய் நினைவு. இப்போது இந்த பத்திரிகைகளை வெளியே கொண்டு வந்து விவாதிப்போம். அது நியாயம். இதில் பார்ப்பனிய அரசியல் செயல்படுகிறதா? அதையும் விவாதிப்போம். ஆனால் பிரச்சனை பார்ப்பனியம் மட்டும் அல்ல என்பது நிச்சயம். திமுக தான் விழ வேண்டிய ஏகப்பட்ட குழிகளை போன ஆட்சியிலும், மத்திய மந்திரிசபை பங்கேற்பிலும் செய்து வைத்திருக்கிறது. விழுந்து தான் எழ முடியும்.
6. திமுக விழ வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருக்கிறதா? ஒரு சமூக மறுமலர்ச்சி கட்சியாக திமுகவின் காலம் என்றோ முடிந்து விட்ட்து என பலரும் எழுதி இருக்கிறார்கள். வேறு மாற்றுகள் இல்லாத்தாலும், பெரியாரியத்தின் வலுவாலும் தான் திமுக இன்றும் உயிர்க்கிறது. திமுக அழிய வேண்டியதில்லை. அது தன்னை புதுப்பிக்கட்டும். கோட்பாட்டளவிலும் இயக்க அளவிலும் இது நடக்கட்டும். அதனோடு இணையாக சாதிக்கட்சிகள் அல்லாமல் லட்சியவாத்த்தின் அடிப்படையில்னான ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் (ஆம் ஆத்மியே அல்ல) இங்கு தோன்ற வேண்டும்.
 மத்திய வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குறுகிய சாதிய நோக்கம் களைந்த கட்சிகள் நமக்கு இன்று தேவையுள்ளன. அந்த வெற்றிடத்தை இனி தி.மு.கவில் நிரப்ப முடியாது. திமுகவின் நம்பிக்கைகள் மிக மிக பழையன. மக்களின் மனநிலையும் பொருளாதார தேவைகளும் சமூக எதிர்பார்ப்புகளும் மாறி விட்டன.
தி.முக. நிலைப்பதற்கு இன்னொரு காரணம் சாதிய எதிர்ப்பரசியலுக்கு மாற்று கோட்பாடு அல்லது அமைப்போ இல்லாதது. இடதுசாரிகளோ அதிமுகவோ வேறு திசை நோக்கி நகர்ந்து நீண்ட காலம் ஆகி விட்டது. நமக்கு இன்று தேவை மத்திய சாதிகளையும் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் இணையும் இரு தரப்புகளாய் இணைத்து சமரசம் கொண்டு வரும் மற்றொரு கட்சி. அப்படி இணைப்பதற்கான லட்சிய வலுவை கழக கட்சிகள் இழந்து விட்டன என்பதற்கு சமீபமாய் நடந்தேறிய சாதிய படுகொலைகளும், மீனவர் பிரச்சனையில் கழக கட்சிகள் விட்டேந்தியாக நடந்து கொண்ட முறையும் காட்டுகின்றன. சாதிய கட்சிகளுக்கான் ஒரு சமூகவியல் தேவை இருந்தாலும் அரசியலில் அவை மேலும் பிளவையும் படுகொலைகளையும் தான் நிகழ்த்துகின்றன. அறுபதுகளில் நடந்த்து போன்ற ஒரு சமூக மாற்றம் மீண்டும் தேவைப்படுகிறது. கேஜ்ரிவாலின் டெம்பிளேட்டில் (சில குறைகளைக் களைந்து) மற்றொரு அண்ணாதுரை இங்கு வர வேண்டும். கழகக் கட்சிகளின் இடத்தில் சாதிக்கட்சிகள் வரக் கூடாது.
7. இறுதியாய், கலைஞர் ஒரு காலத்தில் மிகத் துடிப்பான தைரியமான தமிழர் தலைவராக இருந்தார். ஏதோ ஒரு கட்ட்த்தில் அவரது சீரழிவு நடக்கத் தொடங்கியது. அது குடும்ப அரசியலினால் என்று மட்டும் என நான் நினைக்கவில்லை. ஒரு தனிமனிதராக அவர் வெகுவாக மாறிப் போனார். இப்போது அவர் மீது எழும் கோபம் ஒரு கட்சி மீதானது அல்ல. சீரழிந்து போன தலைவர் மீதானது. ஜெயலலிதா முகேஷ் அம்பானி, இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன் போல் ஒரு வர்த்தக முதலாளி. கம்பெனிக்கு லாபம் சம்பாதித்து தமக்கும் கொஞ்சம் அரிசி, மிக்ஸி வரும் வரை மக்க்ள் பொறுத்துக் கொள்வார்கள். உண்மையில் ஜெயல்லிதாவை வைத்து என்ன செய்வதென்றே மக்களுக்கு புரியவில்லை. எதிர்பார்ப்பும் இல்லை, ஏமாற்றமும் இல்லை. வெயில்காலம் வந்தால் சிலருக்கு கொப்புளம் வரும் அல்லவா. அது போல் சகித்துக் கொள்ள வேண்டிய ஒரு தோல் வியாதி. தானே போய் விடும்!
Read More

Tuesday, 30 October 2012

சின்மயி சர்ச்சை: “அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?”




சின்மயி விவராகத்துக்குள் போகும் முன், யார் பக்கம் தவறு என்று நியாயம் தேடும் முன் இன்று இணையத்தில் வசை எழுதுபவது சரியா, இவர்கள் எல்லாம் எந்த மரபில் இருந்து வருகிறார்கள் என்று கேட்க வேண்டும்.
வசை எனும் கலாச்சாரம்
மாறி மாறி சாதிப்பெயரால் திட்டுவது, பாலியல் வக்கிரங்களால் ஒடுக்குவது என்பது நம் அன்றாட பண்பாட்டில் ஆழமாக உள்ளது. குழந்தைகளை, நண்பர்களை, அரசியல் தலைவர்களை கெட்ட வார்த்தைகால் அன்னியோன்யமாய் சகஜமாய் குறிக்கும் கலாச்சாரம் நமக்கு உண்டு. எனக்குத் தெரிந்து கேரளாவில் வசை பாடும் பண்பாட்டுச் சடங்கு ஒன்று உள்ளது. கொடுங்களூர் பகவதி அம்மன் கோயிலில் வருடந்தோறும் பரணி அல்லது பூரப்பாட்டு என்கிற பெயரில் இது நடந்து வருகிறது. மக்கள் கூட்டங்கூட்டமாக பயணித்து கோயிலுக்கு சென்று பகவதி முன்னிலையில் சரளமாக முடிவற்று கெட்ட வார்த்தைகளால் மாறி மாறி திட்டி போட்டியிடுவார்கள். இது மணிக்கணக்காக நடக்கும். பகவதியை விரசமான சொற்களால் அசிங்கப்படுத்தி அதன் வழி வழிபடுவதே நோக்கம். நம்மூர் கானா பாடல்கள் போன்று கற்பனாபூர்வமாக அந்த இடத்தில் தோன்றும் வக்கிரப் பாடல்களும் மரபுவழி வந்த பாடல்களும் உண்டு. இப்போது கேரள அரசு பூரப்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. ஏர்.ஆர்.ரகுமான் யோதா எனும் ஒரு படத்தில் இப்படியான ஒரு பூரப்பாட்டுக்கு இசையமைத்துள்ளார். இதைக் கேட்பவர்களுக்கு நம்முடைய இணையவெளி சச்சரவுகள் எந்தளவுக்கு இவற்றை ஒத்துள்ளன என புரியும். இணைய பயனர்களும் இவர்களைப் போன்றே கொள்கைப்பிடிப்பு என்ற பாவனையில் வசைமாரி பொழிகிறார்கள். இரண்டும் ஒரு சடங்கைப் போல மக்களின் கூட்டங்கூட்டமான பங்களிப்புடன் நிகழ்கிறது. தடைக்குப் பின் பூரப்பாட்டுக்கு நேர்வது போன்றே சின்மயி விவகாரத்திற்குப் பின் நாம் காவலர்கள் கண்காணிக்கிறார்கள் என்கிற பிரக்ஞையுடன் இணைய வசை சடங்கை செய்யப்போகிறோம்.
இணையத்தில் ராஜன் லீக்ஸ் செந்தில் போன்றவர்கள் ஆபாசமான மொழியில் சின்மயியை கேலி செய்த பக்கங்கள் இன்று இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. படிக்கிற யாரும் ராஜன் செய்தது குற்றம் என்று ஒப்புக் கொள்வார்கள். சினம்யியோ ஜெயலலிதாவோ யார் கூறும் கருத்துக்களுக்காகவும் அவர்களை ஆபாசமாய் பழிப்பது நியாயமல்ல. இன்னொரு கேள்வி: வசவுப் பண்பாடு நம் சமூகத்தில் ஏற்கனவே வலுவாக உள்ள பட்சத்தில் அதை இணைய உரையாடலுக்கு அரசியல் விமர்சனத்துக்கு ஒருவர் நீட்டிப்பது சரிதானே என்பது.
இல்லை என்பதே பதில். ஏனென்றால் இணையம் என்னதான் கட்டற்ற சுதந்திரம் தந்தாலும் அது தனிவெளி அல்ல. பொதுவெளி. அங்கு நாம் கண்ணியமாகவே இருந்தாக வேண்டும்.
ஏன் தனிவெளி இல்லை? இணையம் மட்டுமல்ல தொலைதொடர்பு கட்டுமீறிய வளர்ச்சியை அடைந்து வரும் சூழலில் நுண்பேசி குறுங்செய்திகள் கூட இன்று தவறான சித்தரிப்புகளுக்கும் சச்சரவுகளுக்கும் இட்டுச் செல்கின்றன. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்ஸன் தன் அணித்தலைவர் ஸ்டுராஸை குறித்து அனுப்பிய அவதூறான குறுஞ்செய்தி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியதை அறிவோம். அதை விடுங்கள். இன்று நீங்கள் நுண்பேசியில் என்ன நேரடியாக கூட ஒரு பரிச்சயமானவரைப் பற்றி கோபமாக பேசினால் கூட அது நிமிடங்கள் பலபேருக்கு போய் சேர்ந்து விடுகிறது. ஒரு இலக்கிய பத்திரிகையில் ஒரு எழுத்தாள நண்பர் வேலை கேட்டு தொந்தரவு செய்தார். அவரது அப்பாவை அழைத்து ஆசிரியரிடம் கெஞ்ச வைத்து உணர்ச்சி மிரட்டல் கூட கொடுத்துப் பார்த்தார். ஆனால் பத்திரிகை ஆசிரியர் தொடர்ந்து மறுத்து வந்தார். என்னவென்று விசாரித்தால் ”அவருக்கு வேலை கொடுத்தால் என் அலுவலகத்தில் நடப்பதை பண்பலை வானொலி போல் நேரலை செய்து கொண்டே இருப்பார். அதனால் வரும் பிரச்சனைகளை சரி செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கும்” என்றார் அவர். எப்படியான பீதிச் சூழலில் பத்திரிகை ஆசிரியர்களே இருக்கிறார்கள் பாருங்கள்.
தொலைதொடர்பு வெளியில் என்ன பிரச்சனை என்றால் அது ஏதோ ஒரு அந்தரங்கமான வெளி போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் பிறந்தநாள் விழாவுக்கு நிர்வாண ஆடையணிந்த ராஜாவின் நிலைமை தான் அதில் பங்கெடுக்கும் எல்லாருக்கும். ஒவ்வொரு சிறு அசைவையும் சொல்லையும் யாரோ எங்கிருந்தோ கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக வசைபாடுவது சரியா தவறா என்பது முக்கியமல்ல. அதை நாம் எங்கு செய்கிறோம் என்பது தான் முக்கியம். வசையை நாம் மீண்டும் அணுக்கமான குழு வெளிகளில் வைத்துக் கொள்வது தான் பாதுகாப்பானது. அதாவது மின் அணு சாதனங்கள் அண்டாத எந்த இடங்களிலும் நின்று கொண்டு யாரை வேண்டுமானாலும் சாதிப்பெயர் சொல்லி பாலியல் உறுப்புகளை குறிப்பிட்டு திட்டிக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை. அதாவது உங்கள் உரிமை உங்கள் மூக்கு என் மூக்கு நுனியை தொடாதவரை தான். “நாயே செருப்பால் அடிப்பேன்” கலாச்சாரத்துக்குள்ளே நாம் இருக்கலாம். அது நம் சமூக இயல்பாகவும் இருக்கட்டுமே. ஆனால் தனிவெளி என்ன பொதுவெளி என்ன என்கிற பிரக்ஞையுடன் இருப்போம்.  
“அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?”
இந்த கேள்வி முக்கியம். சின்மயியின் அம்மா பத்மஹாசினி ஒரு எளிய ஆனால் அவசியமான வினாவை கீழே எழுப்புகிறார் பாருங்கள்:
”சின்மயி சாதி பத்தி பெருமையாப் பேசித் தம்பட்டம் அடிச்சதா சொல்றாங்க. சாதிப்பெருமை பேசுற, ‘இந்த சாதிக்காறன்னு’ சொல்லி போஸ்டர் அடிச்சுக்கிற ஆட்கள் இங்கேதானே இருக்காங்க. அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?” (நன்றி விகடன்).
இந்த கேள்வி நமக்குள்ளே பலமுறை எழுந்திருக்கிறது. “அவங்க எல்லாம்” என்று பத்மஹாசன் குறிப்பிடுவது மேல்மத்திய, மத்திய சாதிகளைத் தான். அண்ணா தமிழகத்து சாதிச் சிக்கல் குறித்த உரையாடலை “தமிழ்தேசியம்” என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அதை முளையிலே கிள்ளி விட்டார் என்பது தான் உண்மை. இன்னும் கொஞ்சம் பின்னால் போனோம் என்றால் பெரியார் இந்த உரையாடலை பிராமணர் versus மத்திய சாதிகள் என்று ஒற்றைபட்டையாக்கினார். பெரியாருக்கு முன் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தமிழர்களுடன் ஒன்றிணைந்த ஜஸ்டிஸ் கட்சி இந்த முரண் எதிர்வை துவங்கி வைத்தது. பெரியார் இதை மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்தார். பெரியார் சமரசமற்ற தலைவர் என்பதால் இந்த இயக்கத்தினால் நமக்கு பல முக்கியமான பயன்கள் கிடைத்தன. பெரியார் மத்திய சாதிகளை திராவிடம் என்ற பிராந்திய அடையாளத்தின் கீழ் இணைத்ததற்கு சாதி கடந்த அரசியல் காரணங்களும் அன்று இருந்தன. அன்று தமிழகம், கர்நாடகம், ஆந்திராவை இணைத்து ஒரே மாநிலமாக்க மத்திய காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. இந்தியை வலியுறுத்துவதன் மூலம் பிராந்திய சக்திகளை ஒடுக்கப் பார்த்தது. அதனால் அன்று தற்காலிகமாக மத்திய சாதிகள் கீழ்த்தட்டு சாதிகளை ஒடுக்கும் கொடுமைகளை மறந்து நாம் பிராமணர் versus மத்திய சாதிகள் என்ற முரண் எதிர்வின் கீழ் இணைந்தோம்.

ஆனால் பெரியார் தமிழ் மொழியின் அருமைபெருமைகளை நினைவுகூர்ந்து சிலாகிக்கும் வகை அரசியல் தலைவர் அல்ல. அவர் ஒரு நடைமுறைவாதி. பண்பாட்டுப் பெருமைகள் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்காது என அவருக்கு தெரியும். அதனால் தான் அவர் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றும் அது சமூக முன்னேற்றத்திற்கு உதவாது என்றும் கூறினார். அவரது இந்த நிலைப்பாட்டை நாம் ஆங்கிலேய ஆட்சி தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த, சுதந்திர போராட்டத்தை எதிர்த்த ஜஸ்டிஸ் கட்சியின் வரலாற்றோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். பிராந்திய அடையாளங்களை தக்க வைக்க ஆங்கிலம் பொதுமொழியாக இருக்க வேண்டும் என அவர்கள் வேண்டினார்கள். ஜஸ்டிஸ் கட்சியினர் முழுக்க தமிழர்கள் அல்ல என்றும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் பெரியாருடன் இந்த மொழி மற்றும் பண்பாட்டு பெருமித விசயத்தில் அண்ணா முரண்பட்டார். அவர் அனைத்து மதங்கள், சாதிகள் சேர்ந்தவர்களையும் தமிழர் எனும் அடையாளம் கீழ் ஒருங்கிணைக்க விரும்பினார். ஏனெனில் வேறுபாடுகளை தவிர்க்கும் சமரசப் போக்கு தான் தன் கட்சியின் நிலைப்பாட்டுக்கும் உதவும் என அவர் அறிந்திருந்தார். ஆக இந்த தமிழ்தேசிய அரசியலின் விளைவாக மத்திய சாதிகள் தமக்கு கீழுள்ளோரை ஒடுக்குவதை நாம் கடந்து ஐம்பது வருடங்களுக்கு மேலாக கண்டும் காணாமல் விட்டு வருகிறோம். தமிழகத்தில் பிராமனர்கள் மட்டுமே சாதி ஒடுக்குமுறை செய்வதாய் இன்றும் தொடர்ந்து வலியுறுத்த முயல்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சியினரும் பெரியாரும் ஒரு காலத்தில் இப்படியான ஒற்றைபட்டை சித்திரத்தை முன்வைத்ததற்கும் ஒரு சமூக அரசியல் தேவை இருந்தது. அது இன்று இல்லை.
சின்மயி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு அவரது டிவிட்டர் வசனங்களில் இருந்து வருகிறது. என் தனிப்பட்ட வாழ்வில் பிரமாணரல்லாத எத்தனையோ மத்திய சாதியினர் இட ஒதுக்கீட்டு எதிராக பேசியதை கேட்டுள்ளேன். அதாவது இவர்கள் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து பின்னர் கடும் உழைப்பு மற்றும் பிற காரணிகளால் முன்னேறி மேற்தட்டை அடைந்தவர்கள். இன்று அவர்கள் தமக்கு கீழ் உள்ள சமூகத்தினர் இடஒதுக்கீடு பெறுவதை எதிர்க்கிறார்கள். நான் சொல்ல விரும்புவது இடஒதுக்கீடு எதிர்ப்பு விவகாரத்தில் சின்மயி உள்ளிட்ட பிராமணர்களுடன் உயர் மத்திய, மத்திய சாதிகளும் நிச்சயம் கைகோர்க்கிறார்கள் என்பது தான். மீண்டும் இந்த பிரச்சனையை பிராமணர் versus தாழ்த்தப்பட்டவர் என்று பார்த்தோமானால் நம்மை விட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.
பிராந்திய அரசியலுக்கு நெருக்கடி வந்த போது பெரியார் திராவிடவாதத்தை முன்னெடுத்தார். ஆனால் இப்போது வடநாட்டவர் × தென்னாட்டவர் என்கிற முரண் அரசியல் பிராந்திய சமூகங்களில் வளர்ச்சியால் மெல்ல மெல்ல சமகாலத்தேவையை இழந்து வருகிறது. அதனால் தான் இன்றைய தமிழ்தேசிய வாதிகள் ஈழத்தமிழர் பிரச்சனையை முன்னெடுத்து அதைக் கொண்டு சாதி கடந்த ஒரு தமிழ்தேசிய சமூகத்தை கட்டமைக்க முயல்கிறார்கள். தமது எதிரிகளாக சிங்களவர்களையும் வடநாட்டினரையும் வெளிநாட்டு காங்கிரஸ் தலைவியையும் முன் வைக்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் வெள்ளாள, இந்துத்துவ அரசியலை கேள்விக்குள்ளாக்கும் போது அவர்கள் “நம்மைப் பிரிக்கப் பார்க்கிறார்கள்” என கூச்சலிடுகிறார்கள். ராஜன்லீக்ஸ் கூட அவரது பிளாக்பதிவு பொன்றில் இதே தொனியில் உள்சாதிய அரசியலை பேசுவதை தவிர்க்க வேண்டுகிறார். இது ஒரு போர்த்தந்திரம் மட்டுமே. பொதுவாக உள்நாட்டுக் குழப்பங்கள் விளையும் போது சர்வாதிகாரிகள் வெளிநாட்டு பொதுவிரோதியை கட்டமைப்பு உள்விரோதங்களை முடக்கி ஒற்றுமை உருவாக்கப் பார்ப்பார்கள். ஒரு பிரச்சனையை பேசாமல் தவிர்ப்பது அதை தக்க வைக்கத் தான். இவ்விவகாரத்தில் ராஜன், சரவணகுமாரும் ஒரே ஆதிக்க சாதிய அரசியலை தான் பேசுகிறார்கள்.
ராஜன் உள்ளிட்டோர் தமிழ்தேசியவாதி என்கிற அடையாளத்தில் நின்று தான் சின்மையியின் மேல்சாதிய மனநிலை எதிர்ப்பதாய் கூறுகிறார்கள். தமிழ்தேசியவாதிகள் என்பவர்கள் தமிழகத்தின் வேறு சாதிய (தமது மத்திய சாதிகளின் ஆதிக்க நோக்கம் உட்பட்ட) கோளாறுகளை பொதுவில் விவாதிக்க வேண்டிய சூழல் இன்று தேவையிருக்கும் போது அவர்கள் மீண்டும் ஒரு ”அகண்ட தமிழ்பாரத” ஒற்றை அடையாளத்தை நிறுவி தப்பிக்க பார்க்கிறார்கள். ஆனால் பெரியாரின் சித்தாந்த கட்டமைப்பை போல் அல்லாமல் இது போலியாக உள்ளது. உங்கள் சொந்த மாநில மக்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்படும் போது, தாமிர பரணியில் மிதித்து கொல்லப்பட்ட போது, எரித்து அழிக்கப்பட்ட போது பேரணி நடத்தாத நீங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக ராப்பகலாக பிரச்சார வேலைகளில் ஈடுபடுவது கண்ணீர் வடிப்பது முகநூல் போராட்டங்கள் நடத்துவது இணைய கையெழுத்து இயக்கம் நடத்துவது மத்திய சாதி பாசாங்கு இல்லாமல் வேறு என்ன? ஈழத்தமிழர்களுக்கு நடந்தது மிகப்பெரிய அநீதி என்றாலும் அதை முன்னிட்டு இங்கு நிகழ்வது ஒரு பெரும் போலி மத்திய சாதி இயக்கம் மட்டுமே. ஐம்பது வருடங்களுக்கு முன் திராவிட இனப்போருக்காக சமூகங்கள் ஒன்று திரண்டது போல் இம்முறை நிகழவில்லை. பொதுமக்கள் தமிழ்தேசியவாதத்தை முழுக்க நிராகரித்து விட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகளில் துல்லியமாகத் தெரிந்தது.
ஆக “அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?”. ஏனென்றால் அவங்க தானே இவங்க. பிராமணியம் என்பது சாதி மனநிலை அல்ல அனைத்து சாதியினருக்குள்ளும் இருக்கும் மனநிலை என்று தமிழவன் ஒருமுறை சொன்னதை நினைவுபடுத்துகிறேன். என்னைப் பொறுத்தவரை சின்மயியும் ராஜன் லீக்ஸும் சரிசமமாக மீனவர், பறையர், பள்ளர் என பல தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கும் எதிரானவர்களே. ஒரே வித்தியாசம் ராஜன் லீக்ஸ் போன்றவர்கள் தமிழ்தேசிய அடையாளம் மூலம் அந்த குறுகின மனப்பான்மையை கடந்து செல்வதாக பாவனை செய்கிறார்கள் என்பது தான்.
நாம் நமது சாதிய அடையாளங்களால் பிளவுபட்டு தான் இருக்க வேண்டுமா என கேட்கலாம். முதலில் சாதிய பிளவுகளை ஏற்றுக் கொண்டு நமக்குள் உள்ள தீமைகளை எதிர்கொள்ள முன்வர வேண்டும்.
இந்தியர்கள் சுதந்திரம் கிடைத்த பின்னரும் கூட அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரவில்லை என தனது “பண்டைய இந்தியா” நூலில் எழுதுகிறார் ரோமிலா தாப்பர். காரணம் அவர்களின் சாதியம். இந்தியா அப்போதும் இப்போதும் நூற்றுக்கணப்பான சாதிகளின் இனங்களின் நூறுநூறு இந்தியாக்களாக தான் இருந்து வருகிறது. பி.ஜெ.பியின் அகண்ட பாரதம் அளவுக்கு நம்மவர்களின் தமிழ்தேசியமும் ஒரு பிரிவினரின் ஆதிக்கவாத அஜெண்டாவை கொண்டது தான்; இரண்டுமே போலியான கனவுகள் தாம். இந்திய சமூகம் ஒரு ஏணி என்றால் ஒவ்வொரு சமூகமும் படிகள். ஒன்றை ஒன்று மிதித்து தானே நம் சமுதாயங்கள் மேலே போகின்றன. ஐக்கிய சமூதாய லட்சியாவாதம் ஒரு விழுமியம் மட்டுமே. நாம் வெளிப்படையாக நம் சார்பை முன்வைத்து கண்ணியமான சாமர்த்தியமான முறையில் போராடி முன்னேற வேண்டும். இந்தியர்கள் வரலாற்று ரீதியாக சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்பதால் சிதறுண்டு விட மாட்டோம்.
மத்திய சாதிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் இனி வேறு சாதிகளை ஒடுக்கும் ஒரு சமுதாய தீமையாக பார்க்கப்பட வேண்டும். அது ஈழத்தமிழரை முன்னிட்டே நடந்தாலும் சரி! அதுவே இனி நடைமுறை நிதர்சனம். அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.
இதுவரை ஐநூறுக்கு மேல் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தார்கள்; கூட்டணிக் குடுமியை கையில் வைத்திருந்தார்கள். ஆனாலும் இலங்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவோ கொலைகளை தடுக்கவோ நம்மால் முடியவில்லை. ஆனால் கேரள மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றதற்கு இத்தாலிய கப்பற்படை அதிகாரிகளை கைது செய்து வழக்கு தொடுத்திருக்கிறாகள். இத்தாலி மட்டும் நமக்கு பகை நாடா? இல்லை. கேரள அரசியல்வாதிகள் இதை மீனவ சாதியின் பிரச்சனையாக கருதவில்லை. கேரள சமூகமும் மீடியாவும் இது ஒட்டுமொத்த சமூக அநீதியாக பார்த்து எதிர்த்தது. ஏ.கெ ஆண்டனி சோனியாவுக்கு நெருக்கமானவர் தான். ஆனால் அவர் கடுமையாக இந்த கொலைகளை எதிர்த்தார். அந்தளவுக்கு அவருக்கு நெருக்கடி வழங்க கேரள சமூகத்தால் முடிந்தது. நம்மால் ஏன் முடியவில்லை? சாதிய மனநிலை தான் காரணம். மீனவர்கள் இறந்தால் அது ஒரு குறிப்பிட்ட சாதியின் இழப்பாகத் தான் பொதுநீரோட்ட சமூகத்தால் இங்கு பார்க்கப்படுகிறது. கூடங்குளம் போராட்டம் கூட மீனவ சமூகத்தினரை ஒருங்கிணைத்து தானே வலுவாக நடத்துகிறார்கள். இப்போராட்டத்தில் அவர்களை தவிர பிற ஆதிக்க சமூகத்தினரின் நேரடியாக பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்களா? இல்லை. மீனவர்கள் இறந்ததற்கு பதில் ஐநூறு முக்குலத்தோர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் இப்பிரச்சனையின் அரசியல் பரிமாணமே வேறாக இருந்திருக்கும். இங்கு பெரும் போராட்டங்கள் வெடித்திருக்கும். இது தான் தமிழகத்தின் நிதர்சனம்.
கேரளா நம்மை விட சாதியம் வேரூன்றிய சமூகம் தான். ஆனால் அங்கு இடதுசாரி இயக்கங்கள் பல வருடங்களாக வலுவாக செயல்படும் பாரம்பரியம் உள்ளது. கம்யூனிஸம் எனும் தத்துவம் அம்மக்களை ஒருங்கிணைக்கிறது. திராவிட அரசியலுக்கு இந்த ஒருங்கிணைக்கும் வலு இல்லை. இங்கு கம்யூனிஸமும் பலவீனமாக இருந்து வந்துள்ளது. இதையும் கடந்து அவர்களால் ஒரு அரசியல் ஒருங்கிணைவை பொதுப்பிரச்சனைகளில் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அங்கு கொக்கோகோலாவுக்கும் இயற்கை சீரழிவுக்கும் எதிராக மக்கள் இயக்கமாக இணைந்து போராடியதை போல் ஒரு எழுச்சியை நாம் இங்கு கற்பனை செய்ய முடியாது. கூடங்குளம் கேரளாவில் நிகழ்ந்திருந்தால் அது தேசிய கவனத்தை ஈர்த்திருக்கும். பிரச்சனை என்றால் அடுத்த சாதிக்குத் தானே என்கிற மனப்பான்மை நமக்குள் வலுவாக உள்ளது. நமது பிரச்சனைகளுக்கு அடிப்படை திராவிட கட்சிகளின் சமசரமும் ஊழலும் மட்டுமல்ல மேற்சொன்ன சாதிய மனநிலையும் தான். தமிழர்களை சாதி கடந்து ஒருங்கிணைக்க எந்த சித்தாந்த சக்தியாலும் இன்று வரை இயன்றதில்லை. அனைத்து சமூக மக்களும் மெல்ல மெல்ல படிப்பறிவு பெற்று வரும் நிலையில் நமது சமூக கட்டமைப்பு சிறுக சிறுக குலைந்து வருகிறது. இனி அறுபதுகளில் நிகழ்ந்த அளவுக்கு கூட ஒரு மக்கள் எழுச்சி இங்கு எளிதில் சாத்தியப்படாது.
இந்த பின்புலத்தில் இருந்து பார்க்கும் போது மீனவர் கொலைகளை ஒரு “தமிழர்” பிரச்சனையாக தமிழ்தேசிய கொள்கையாக்கமாக மாற்றுவது எப்படி தோல்வியடைந்தது என நமக்கு புரிகிறது. அப்படிச் செய்வது பிரச்சனையில் இருந்து நம்மை திசைதிருப்பவே செய்கிறது. இலங்கை ராணுவம் சுடும் போது ஜெயலலிதாவை கிளர்ந்தெழுந்து மத்திய அரசை கேள்வி கேட்கவும் தனது காவலர்படையினர் அதே மக்களை கூடங்குளத்தில் தாக்கும் போது அமைதி காக்கவும் வைக்கிறது. ஏனெனில் முதலாவது “தமிழர்” மீதான தாக்குதல். இரண்டாவது “மீனவர்” மீதான தாக்குதல். கட்சிகளும் அமைப்புகளும் இரண்டு விசயங்களை அணுகுவதும் இவ்வாறான குழப்பத்தோடு தான்.
இன்னும் ஆழமாக யோசித்தால் இந்த இரட்டை மனநிலை ஒற்றை செயற்திட்டத்தோடு வரும் எல்லா குழுவினருக்கும் பொதுவானது எனப் புரியும். தமிழ்தேசியவாதிகள், திராவிட கட்சியினர், இந்துத்துவாவாதிகள், அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு கட்சியினர் என பலரும் தனிப்பிரச்சனைகளை மூடி மறைக்க ஆவேசப்படுவார்கள். பொதுவான ஒரு இலக்கை முன்வைத்து அதை அடைவதற்கு உள்சிக்கல்களை நாம் மறக்க வேண்டும் என கோருவார்கள். ஊழலுக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டும் என்பார்கள். கார்ப்பரேட்டுகளை எதிர்க்க மாட்டார்கள். கார்ப்பரேட்டுகளை மட்டுமே எதிர்ப்பவர்கள் தமது கட்சியின் சாதியத்தை கண்டுகொள்ள மாட்டார்கள். மொழி,இன அரசியலை மட்டுமே பேசுகிறவர்களின் கண்ணுக்கு வேறு மக்கள் பிரச்சனைகளே தெரியாது. சமூகப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாம் இந்த ஒற்றை செயற்திட்டக்காரர்களை எதிர்க்க வேண்டும். இன்று சின்மயியின் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் கிளம்பியிருப்பவர்கள் மீண்டும் பிராமணர் × பிராமணரல்லாதோர் என்கிற ஒற்றை கட்டமைப்பைக் கொண்டு மீண்டும் அசலான பிரச்சனைகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.
மலையாளிகளைப் போல் அல்லாது நாம் பிளவுபட்டவர்களக இருப்பதற்கு சாதியம் மட்டுமல்ல சாதியத்தை வசதியாக வாழ வைக்கும் போலி சாதிய எதிர்ப்பரசியலான பிராந்திய அடையாள அரசியலும் தான் பிரதான காரணம். நமக்குத் தேவை பிராந்திய அடையாள அரசியலை கடந்த கம்யூனிஸத்தைப் போன்ற ஒரு மனவிரிவைத் தரும் ஒரு பண்பாட்டு அரசியல் இயக்கம்.
இங்கு வசைபாடுவது யார்?
சின்மயியை ஆவேசமாக எதிர்ப்பவர்களை தமிழ்தேசியவாதிகள், சுதந்திர இணைய பயனர்கள் என இரண்டாக பிரிக்கலாம். இரண்டாமவர்கள் ராஜன், செந்திலுக்கு எதிராக போலியான குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டதை தான் எதிர்க்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவருமே ராஜனின் வக்கிரத்தை கண்டிக்கிறார்கள். ஆனால் இதன் பொருட்டு தன் இணைய சுதந்திரம் பறிபோகுமோ என இவர்கள் அனைவருக்கும் உள்ளூர பயம் வந்திருக்கிறது.
இணையத்தை நாம் பயன்படுத்த துவங்கிய காலத்தில் இருந்தே அந்தளவு அவதூறும் வசவுகளும் தினசரி தோன்றி வந்துள்ளது. இதையெல்லாம் செய்வது யாரென்று பார்த்தால் பொதுமக்கள் அல்ல. அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், மற்றும் அரசியல் ஆர்வலர்கள் தாம் அதிகமாக சர்ச்சைகளை இங்கு கிளப்பியவர்கள். தர்க்கரீதியாக சிந்திக்கவும் மொழியை சரளமாக பயன்படுத்தவும் தெரிந்தவர்கள் இணையவெளியில் ஒருசேர சச்சரவுகளில் ஈடுபட்ட போது நம்மிடையே இவ்வளவு கீழ்மையா என்ற வியப்பு வாசகர்களுக்கு ஏற்பட்டது. இரண்டு விசயங்களை இந்த அவதூறு கேளிக்கைகள் உணர்த்துகின்றன.
ஒன்று, இதுவரை நம் சமூகத்தில் வன்மத்தை, காழ்ப்புணர்வை, பரஸ்பர வெறுப்பை காட்டுவதற்கு சாத்தியப்பாடோ வெளியோ இருந்ததில்லை. ஏனென்றால் தமிழர்கள் நாம் வெளியே கண்ணியமாக இருக்க விரும்புபவர்கள். உணர்ச்சிகரமானவர்கள். மிக சீரியசானவர்கள். முதன்முதலாக இணையத்தை பார்த்த போது ஒரு பெரும் மூத்திர சந்தாக நாம் நினைத்து மழைநடனம் போட்டத்தில் ஒன்றும் வியப்பில்லை. இணைய செயல்பாடு நமக்கு ஒரு கொடுங்களூர் பூரப்பாட்டு ஆக ஆனது.
அடுத்து, இதுவரை குறுகின மனப்பான்மையுடன் ஒற்றை செயல்திட்டத்துடன் இயங்கி வந்த குழுக்களான சிறுபத்திரிகையாளர்கள், அறிவுஜீவுகள், தமிழ்தேசியவாதிகள், திராவிட அரசியல் அபிமானிகள், சாதிய அபிமானிகள், வலதுசாரிகள் ஆகியோர் தான் மிக அதிகமாக சர்ச்சை என்ற பெயரில் அவதூறு பரப்புபவர்கள். இவர்களின் பிரச்சனை தங்களது எளிய கொள்கையை கடந்து எந்த சமூக அரசியல் பிரச்சனைகளிலும் ஈடுபடவோ விவாதிக்கவோ மாட்டார்கள் என்பது. மே 17 இயக்கத்தினர் ஊழல் பற்றியோ, காஷ்மீர் முஸ்லீம்கள் பற்றியோ, கார்ப்பரேட் ஆதிக்கம் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள். மாவீரர் தினம் பற்றி ஆவேசமாக சர்ச்சை செய்வார்கள். ஆனால் பரமக்குடியில் இறந்தவர்களின் தினம் அவர்களுக்கு முக்கியமாய் இராது. இப்படியே ஒவ்வொரு ஒற்றை செயல்திட்ட வீரர்களும் இன்று இயங்குகிறார்கள்.
நமது இலக்கியவாதிகளும் இப்படி ஒற்றைபட்டையானவர்களே. நமது சிறுபத்திரிகை இயக்கம் வசைகள் மற்றும் சர்ச்சைகள் வழியே வளர்ந்ததாக ஜெயமோகன் கூறுகிறார். இன்று அவை தொகுப்புகளாக படிக்கக் கிடைக்கின்றன. உண்மையில் இவர்கள் அவற்றின் வழி எந்த ஒரு பெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தவோ உண்மையின் வெளிச்சத்தை கண்டடையவோ இல்லை என்பதை நாம் வாசித்து அறிந்து கொள்ள இயல்கிறது. எளிய சாதிய காழ்ப்புகளும் இடதுசாரிகள் திராவிட கட்சிகள் மீதான வெறுப்பும் தத்துவப் பிடிப்பில்லாத எளிய கருத்துகளும் தான் இன்று அவற்றில் இருந்து எஞ்சுகின்றன. சர்ச்சைகள் அர்த்தபூர்வமாக அமைய அவற்றுக்கு தத்துவ அமைப்பின் சார்பு வேண்டும். சார்த்தரின் சிமன் டி பூவரின் கருத்தாக்கங்கள் அவ்வாறே வளர்ந்து வந்தன. அல்லது சமூக அரசியல் ஈடுபாடு வேண்டும். மக்களோடு தம்மை அடையாளப்படுத்த வேண்டும். இவை ஏதும் இன்றி அறுபதுகளில் இருந்து ரெண்டாயிரத்து பத்துவரை நம் தமிழ் சிறுபத்திரிகை சர்ச்சைகள் வெறும் தனிநபர் மற்றும் இயக்க தாக்குதல்கள் மட்டுமாகவே இருந்து வருகின்றன. ஒரு தனிப்பட்ட உதாரணம் சொல்கிறேன். எனது முகநூல் பக்கத்தில் ஒருமுறை சிறுபத்திரிகைக்காரர்களை பொதுவாக கேலி செய்து எழுதினேன். சிபிச்செல்வன் எனும் ஒரு சிறுபத்திரிகைக்காரர் தோன்றி என்னை கடுமையாக திட்டினார். நான் அவரது கமெண்டை அழித்து விட்டு இன்னொரு பகடி எழுதினார். அவர் விடாமல் என்னை அவதூறு செய்து கொண்டே இருந்தார். என் முகநூல் தகவலில் பேராசிரியர் என்று இருப்பதை பார்த்து “உங்களைப் போன்ற பேராசிரியர்களுக்கு எங்கள் சிறுபத்திரிகைகளைப் பற்றி என்ன தெரியும்” என்று கோபமாக திட்டிக் கொண்டே இருந்தார். நான் கடந்த நான்கு வருடங்களில் நான்கு நூல்களும் நூற்றுக்கணக்கான பக்கங்களும் தமிழில் எழுதியிருக்கிறேன் என்பதை அறியும் பொறுமை கூட அவருக்கு இல்லை. எங்கிருந்தோ வந்தார், வசை பாடினார், சென்றார். அதாவது அவர் மாலேலா பற்றியோ முகேஷ் அம்பானி பற்றியோ நீங்கள் நிலைத்தகவல் எழுதினார் தோன்றமாட்டார். அலாவுதீன் விளக்கு போல சிறுபத்திரிகையாளர்களைப் பற்றி குறிப்பிட்டால் மட்டுமே சட்டென்று காற்றில் இருந்து தோன்றி எதிர்ப்பார். வேறு எதைப்பற்றியும் இவர்களுக்கு அக்கறை இல்லையா எனும் வியப்பு ஏற்படுகிறது. எப்படி ஒரு மனிதனால் வெறும் சிறுபத்திரிகை இயக்கம் பற்றி மட்டுமே அக்கறைக்கப்பட்டு எதிர்வினையாற்றி இருக்க முடிகிறது?
இப்படி ஒற்றை செயல்திட்டத்துடன் இருப்பது இந்திய சாதிய மனநிலையின் ஒரு வெளிப்பாடு தான். சிறுபத்திரிகை நடத்துபவன் அதைப் பற்றி மட்டுமே கவலைப்படுவது, நாம் தமிழர் இயக்கத்தினர் மாவீரர் தினம் பற்றி மட்டுமே பேசுவது எனபதே நெசவாளி நெசவு மட்டுமே செய்ய வேண்டும், பொற்கொல்லன் தங்கத்தை மட்டும் உருக்க வேண்டும் என்கிற பண்பாட்டு மனநிலையில் இருந்து தான் ஏற்படுகிறது. மனுதர்மத்தை எதிர்ப்பவர்கள் முதலில் இந்த ஒற்றை செயல்திட்ட மனநிலையை எதிர்க்க வேண்டும். இன்று இணைய வெளியில் தோன்றும் இது போன்ற ஒற்றைசெயல் திட்ட வீரர்களின் விவாதங்கள் ஆழமற்றவையாய் பயனற்றவையாய் இருப்பதற்கு இதுவே காரணம்.
வினவும் அ.மார்க்ஸும் எழுதியது போல இவர்கள் தமது சமூக அக்கறைகளை கொண்டு சராசரி நபரான சின்மயியிடம் ஏன் காட்ட வேண்டும்? மீனவர்கள் மீனைக் கொல்லுவது நியாயமா என நீங்கள் காஞ்சி சங்கராச்சாரியரிடம் கேட்டு விவாதிக்கலாம். சாதி ஒதுக்கீடு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனை சீண்டிப் பார்க்கலாம். இம்மாதிரி விசயங்களுக்கு எல்லாம் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் இருக்கும் போது ஏன் நாம் எப்போதும் கனிமொழி, குஷ்பு, சின்மயி என மென்மையான இலக்குகளை சினிமா நட்சத்திரங்களை தேடுகிறோம்? ஏனென்றால் நமக்கு அசலான பிரச்சனைகளில் எப்போதும் ஈடுபாடில்லை. மேலும், எம்.ஜி.ஆரை அரசியலுக்கு இழுத்த அண்ணாயிசத்தின் ஒரு நீண்ட வரலாறும் இதன் பின் உள்ளது.
இன்று ராஜன்லீக்ஸை ஆதரிப்பவர்கள் பயப்படுவது போல இணைய சுதந்திரம் எளிதில் பறி போவப் போவதில்லை. அதற்காக இந்த வழக்கின் காரணமாக இணையத்து வசைபாடிகள் திருந்தி விடப் போவதும் இல்லை. இதே போன்று நட்சத்திரங்களை அவதூறு பேசிக் கொண்டும், பிரச்சனைகளை நேரடியாக சந்திக்கும் துணிவற்றும், இணையத்தில் தாம் அறிவு சுதந்திரத்தோடு இயங்குவதான பாசாங்குடனும் நாம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கப் போகிறோம். கொஞ்ச நாள் பம்மி விட்டு வொய்ய்ங் என்று சிறகடித்து கிளம்பி விடுவார்கள். ராஜன் உள்ளிட்டோரை போலீஸும் பத்திரிகைகளும் கையாண்ட விதத்தின் நியாயத்தை அலசாமல் நாம் இதை விட கொடுமையான சமூக அவலங்களை நேரடியாக ஆழமாக அறிய முயல வேண்டும்.
ராஜன், செந்தில் போன்றோர் செய்தது குற்றம் தான். அதை சட்டரீதியாக எதிர்கொள்ள முடியாது என்று அறிந்தே காவல்துறை பொய்வழக்குகளை போட்டு ஊடகங்களில் திரித்து செய்து வெளியிட்டு அவர்களை துன்புறுத்தி வதைக்கிறது. எல்லாக் காலங்களிலும் அதிகார வர்க்கம் இவ்வாறு தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் நாம் ராஜனை முன்னிட்டு அதிகார துஷ்பிரயோகம் பற்றின ஒரு விவாதத்தை ஆரம்பிக்கலாமா என்பதே கேள்வி. அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் கார்ப்பரேட் எதிர்ப்பாளர்கள், அணு உலை போராளிகள், சாதிய கலவரங்களில் திட்டமிட்டு கொல்லப்பட்ட மக்கள் என ஏராளம் அசல் அரசியல் தியாகிகள் ஏற்கனவே இருக்கிறார்கள். அவர்களின் பீடத்தில் வெறும் அவதூறுக்காக பாலியல் வக்கிரத்துக்காக கைதானவரை நாம் வைத்து வழிபட வேண்டாம்.
சின்மயி×ராஜன் லீக்ஸ் சர்ச்சைக்கு விஜய்×அஜித் ரசிகர் சச்சரவு அளவுக்குத் தான் முக்கியத்துவம் உள்ளது. நாம் இந்த சர்ச்சை வழி நம் சமூகத்தின் போலி அரசியல் போராளிகளை மீண்டும் ஒருமுறை கண்டுகொண்டோம் என்பதே இதன் ஒரே பயன்.
Read More

Friday, 21 May 2010

என்கவுண்டர் இன்னும் நடக்கவில்லை






















 என்கவுண்டர் செய்யப்படும் தொழில்முறை கொலைகாரர்களுக்கு அது ஏற்கனவே தெரிய வருவதால் ஒரு மரண தண்டனை கைதியின் மனநிலை அவர்களுக்கு ஏற்படும். சாவை விட அதை எதிர்பார்த்து அச்சத்தில் வாழ்வது இரங்கத்தக்கது.சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நடராஜனின் பிணத்தை வாங்க பெற்றோர் ஆரம்பத்தில் மறுத்தார்கள். என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை மட்டும் பார்வையிட்டு விட்டு ஊர் திரும்பினார்கள். ஒருவழியாய் சமாதானமாகி நடஜாஜனின் அப்பா பிணத்தை பெற்று சென்றார். ஒரு குறைந்த பட்ச எதிர்ப்புணர்வாக மட்டுமே இதை பார்க்க முடிகிறது. ஒரு சமூக விரோதிக்கு நீதி விசாரணைக்கு பின்னான மரியாதையான சாவு அவசியமா என்று நீங்கள் கேட்கலாம். பதிலுக்கு இப்படியும் கேட்கலாம்: வெறி நாயை ஏன் கட்டையால் தாக்கி கொல்லக் கூடாது? விவசாய நிலங்களை அழிக்கும் யானைகளை மின்சார வேலி அமைத்து ஏன் சாவடிக்க கூடாது?


இப்படி மிருகங்களோடு நடராஜனை ஒப்பிட்டதற்கு காரணம் உண்டு. மும்பையில் திட்டமிட்டு சிறுகுழந்தைகள் உள்ளிட்ட மனிதர்களை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்ற கஸாப் போன்றோரை என்கவுண்டர் செய்தோமா? கோடிக்கணக்கில் செலவு செய்து அவன் வழக்கை இன்று வரை நடத்தவில்லை? தமிழகம் முழுவதும் காலாவதி மருந்துகளை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த சஞ்சய் குமார், மீனாட்சி சுந்தரம் போன்றோர் எத்தனை மனித உயிர்களுக்கு உலை வைத்திருப்பார்கள் என்பது இன்னமும் தெரியாது; தெரியவும் வராது. நிச்சயம் நடராஜன் போன்ற எளிய கொலைஞர்களை விட பலமடங்கு அதிகமே. இந்த போலி மருந்து வியாபாரிகள் என்கவுண்டர் செய்யப்படுவார்களா? தாவூதின் பினாமிகள் மும்பையில் ரியல் எஸ்டேட் வெற்றிகரமாக வியாபாரம் செய்து வளமாக உள்ளார்கள். அவர்கள் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தையே காலி செய்து விற்ற தமாஷும் நடந்தது. தாவூத்தை நமது போலீஸ் இந்தியாவுக்கு நாடுகடத்தி அனுப்ப வேண்டும் என்று அவ்வப்போது கோரிக்கைகள் வைக்கிறார்கள். அப்படி தாவூதாக விரும்பி இந்தியா வந்தாலும் அவருக்காக வாதிட இந்தியாவின் ஆகச்சிறந்த வக்கீல்கள் வரிசையில் நிற்பார்கள். நமது சமூகத்தின் மின்வேலி உயர்மட்ட குற்றவாளிகளை தாக்காது.

தொழில்முறை கொலைஞர்களின் தேவை மன்னர் காலங்களில் இருந்தே உலகம் முழுக்க இருந்து வந்துள்ளது. அலெக்சாண்டரின் தந்தை பிலிப் ஒரு தொழில்முறை கொலைகாரரால் கொல்லப்பட்டது நாம் அறிந்ததே. ரோம சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான மன்னர்கள் இப்படியான ஒப்பந்த கொலைகளுக்கு பலியானவர்கள் தாம். இங்கிலாந்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஹென்ரி மன்னர்களுக்கும் இதுவே நேர்ந்தது. அரசியல், புரட்சி, தொழில் என்று ஒப்பந்த கொலைஞர்கள் மூன்று வகைமைகளை சேந்தவர்கள். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவில் இத்தகையவர்கள் பிரத்யேக நிறுவனங்களால் தேர்ச்சி அளிக்கப்பட்டு நிழல் உலகங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறார்கள். ரஷ்யாவில் இவர்களின் பெயரே சுவாரஸ்யமானது. க்ளீனர். போலீசார் அத்துமீறும் வன்முறைத் தொழிலாளர்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டுவது கொசு-அடி சாதனை மட்டும் தான். ஆயிரக்கணக்கான வருடங்களின் வரலாற்று நீட்சியுள்ள இந்த குட்டைகளில் இருக்கும் வரையில் என்கவுண்டர்கள் அசட்டு தீர்வுகள் மட்டும்தான். இத்தகைய அதிகாரங்களை போலீசுக்கு அளிப்பதும், இதற்காக அவர்களை கொண்டாடுவதும் நம் சமூகம் மன சமநிலை இழந்துள்ளதை சொல்கிறது.

சமீபமாக என்கவுண்டர் செய்யப்பட்ட மற்றொரு ரவுடியின் என்கவுண்டர் செய்தி ஒரு நிருபருக்கு கசிந்து நேரம் இடம் போன்ற தகவல்கள் நான் வேலை பார்த்த பத்திரிகை ஒன்றுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. செய்தி எழுதி, அச்சுக்கு தயாராக்கப்பட்ட நிலையில் மற்றொரு தொலைபேசி அழைப்பு. ”செய்தியை போட்டு விடாதீர்கள். என்கவுண்டர் இன்னும் நடக்க இல்லை. இடமும் காலமும் மாற்றப்பட்டு விட்டது.” இன்னும் கொஞ்ச நாட்களில் சன் டீவியில் இத்தகைய என்கவுண்டர்கள் நேரலையாக காண்பிக்கப்படலாம். அப்போதும் நாம் அதிர்ச்சியடைய மாட்டோம். மனக்கிளர்ச்சி அடைவோமே தவிர அறவுணர்வுகள் தூண்டப்படாது. தொடர்ந்து லத்திகா சரண் தோன்றி “அத்தனையும் கிராபிக்ஸ்” என்பார். சில காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படி பழகி விட்டோம்
Read More

காவலர்களை யார் காவல் காப்பது




நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன்.


ஜெயலலிதாவுக்கு தி.மு.கவை பிடிக்காததற்கான மிக சின்ன காரணங்களில் ஒன்று மு.க ஆட்சியில் ரவுடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டு ”சட்டம்-ஒழுங்கு சீர் குலைவது. அவர் தூங்கி பெட்காபி குடித்தபடி எழுந்துததுமே “கருணாநிதியின் மைனாரிட்டி குடும்ப ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ...” என்று கூறி தொடங்குவதாக நம்பகமான இடங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சட்டம் ஒழுங்கை கராறாக கையில் எடுத்தால் புல்லட்புரூப் அம்மாவை பாசிஸ்டு என்கிறார்கள். வரும் உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிடப் போகும் கலைஞர் அகராதியில் பாசிஸம் என்ற வார்த்தையை அரசியல் பிரிவில் சேர்க்கப்படும் அளவிற்கு ஜெவை குறிப்பிடும் போதெல்லாம் அந்த வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டு விட்டது. வேலை செய்வதே பிடிக்காத என் நண்பன் ஒருவன் இந்த இரு தீவிர நிலைப்பாடுகளுக்கு ஒரு மாற்று சொல்கிறான். அவனுக்கு மறந்து விட்ட ஒரு குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள படி ஒரு ஆட்சியாளன் இரண்டு எதிரிடைகளுக்கும் நடுவே ஒரு கோடுகிழித்து அதில் பயணிக்க வேண்டுமாம். அது சாத்தியமே இல்லை என்று நான் சொன்னதற்கு அவன் அவனது பெண் மேலாளர் சொன்ன ஒரு கதையை சொன்னான்.

இந்த மேலாளர் ஜெவை போல ஒரு அம்மையார். அதாவது அடுத்தவர்கள் எப்போதும் முதுகு வளைந்தபடியே நடக்க வேண்டும் என்று விரும்புபவர். கதை அவர் ஐம்பதுகளில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி தலைமை ஆசிரியரால் சட்டம் ஒழுங்கு எப்படி பேணப்பட்டது என்பதைப் பற்றியது. அதில் குறிப்பிடத்தக்கது நோட் புத்தகங்களுக்கு பழுப்பு வண்ண அட்டை அணிவிக்காத மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தரும் தண்டனை. சட்டையை கழற்றி வாசலில் முட்டி போட்டு நிற்க வைப்பாராம். (அது பெண்களுக்கு மட்டுமேயான பள்ளியா என்ற ஐயம் உங்களைப் போன்று எனக்கும் எழுந்தது). ஆனால் தண்டனைக்காலம் முடிந்ததும் ஆசிரியர்கள் ஓடி வந்து குற்றவாளியை அள்ளி எடுத்து “செல்லம், புஜ்ஜு, ஜூஜூ” என்றெல்லாம் கொஞ்சி உடலின் பலபாகங்களை கிள்ளி சீராட்டுவார்களாம். இதன் விளைவு? உங்களுக்கு தண்டனை மீது கோபமே வராதாம்!
ஜெ சொல்வதில் அவரது கட்சிக்காரர்களுக்கே நம்பிக்கை இல்லை போல. அவர்கள் முழுக்க மாறுபடுகிறார்கள். சட்டசபையில் சமீபத்தில் நடந்த விவாதத்தில் கலையரசன் தி.மு.க ஆட்சியில் போலிசாரிடையே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறியுள்ளார். குறிப்பாக நடைபாதை கடைக்காரர்களிடம் கூட லஞ்சம் வாங்குவதாக அவர் கூறியுள்ளதை முக்கியமாக கருதுகிறேன். அடிக்கடி போலி டி.வி.டி தயாரித்து, விற்பனை செய்ததாக சிலரை கைது செய்து பத்திரிகைகளில் படம் வெளியிடுவார்கள். ஆனாலும் பட்டப்பகலில் திருட்டு டி.வி.டிக்கள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. இவை வெறுமனே மாமூல் கைதுகள் தாம். கிண்டி பகுதியில் ஒரு தொப்பை போலீஸ் மாமா பைக்கில் இருந்தபடியே திருட்டு டி.வி.டிக்காரரிடம் லஞ்சம் கேட்டுப் பெற்று சட்டைப் பையில் சொருகுவதை கண்டேன். எனக்கு கரப்பான்பூச்சியையும் போலீசையும் கண்டால் சின்ன வயசில் இருந்தே பயம் என்பதால் இந்த காட்சியை உங்களுக்காக நுண்பேசியில் படம் பிடிக்கும் முயற்சியை கைவிட்டேன். இங்கு ஒன்றை ctrl+U போட்டு சொல்ல வேண்டும். மாமூல் கொடுக்கும் கடைக்காரர் போலீசை சிறிதும் சட்டை செய்யவில்லை. நாய்க்கு புரை வாங்கிப் போடும் ஒருவித அலட்சிய பாவனை. அடுத்து இந்த கடைக்காரரிடம் விசாரித்ததற்கு படிநிலை பொறுத்து லஞ்ச தொகை மாறுபடும் என்றார். அதாவது நூறில் இருந்து ரெண்டாயிரம் ரூபாய் வரை அடிக்கடி வாங்கி செல்வார்களாம். காவல்துறை இதற்கெல்லாம் ஒரு நிலையான கணக்கு வைத்துக் கொண்டு கடை, இடை, தலை ஊழியர்களை எல்லாம் கண்டமேனிக்கு தோன்றும் போதெல்லாம் அனுப்பி கை நீட்டும் அவலத்தை தவிர்க்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அடுத்து தர்பூசணி மற்றும் இளநீர் விற்கும் மற்றொரு சாலையோர கடைக்காரர் தி.மு.க ஆட்சி பற்றி இதே போன்றே அலுத்துக் கொண்டார். “அ.தி.முக ஆட்சியில் போலீஸ்கரங்க லஞ்சம் வாங்கவே பயப்படுவாங்க. இப்போது வெளிப்படையாவே வந்து புடுங்கீட்டு போறாங்க.” மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் போலீசுக்கு தாரை வார்க்க வேண்டி உள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார். “மாமூல் கொடுக்காட்டா கேஸ் போடுவாங்க. இவனுவளுக்கு கொடுக்கிற லஞ்சக் காசை கோர்டில பைனாவே கட்டீரலமுன்னு சில சமயங்களில் தோணும்”.



”காவலர்களை யார் காவல் காப்பது?”
சாகரடீஸ் தனது லட்சிய நாடான utopia-வை விளக்கிக் கொண்டிருக்கும் போது அவரிடம் இந்த கேள்வி கேட்கப்படுகிறது. பின்னர் இதற்கு தீர்வு சொல்லும் சீடர் பிளேட்டோ “அதிகார மோகம் இல்லாதவர்கள் காவலர்களாக வேண்டும்” என்கிறார். இது சாத்தியமில்லை என்று உணர்ந்து விட்ட பின் இன்று மற்றொரு தீர்வு சொல்லப்படுகிறது: அதிகாரத்தை பிரித்தளிப்பது. எந்த பெரிய குழுவிடமும் அதிகாரம் மொத்தமாக சேர்ந்து விடுவதை தவிர்ப்பது. ஆட்சி அதிகாரம் இப்படி பகிர்ந்தளிக்கப்படுவது ஊழல் மற்றும் பொறுப்பின்மையை குறைக்க உதவலாம். எனக்கென்னமோ ஜராசந்தன் கதை தான் நினைவுக்கு வருகிறது.
Read More

Thursday, 18 June 2009

பிற்போக்கின் அரசியலும் மில்லியன் ஆண்டுகளும்

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் தொலைக்காட்சியில் மனுஷ்யபுத்திரனின் கேள்விக்கு பதிலளித்த ஐயா பெரியார்தாசன் இன்றைய இளைஞர்கள் முற்போக்காளர்கள் என்று ஆர்த்துரைத்தார். இதைக் கேட்ட எனக்குப் பூரித்துப் போனது.
எனக்குத் திராவிட இயக்க முற்போக்கு சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு சிறு குழந்தைப்பருவத்திலே ஆரம்பித்து விட்டது. காரணம் அப்பா ஒரு தீவிர தி.மு.ககாரர். ஒரு சின்ன பெரியார் தாசர். அம்மா அடிக்கடி சொல்வாள். தொட்டிலில் என்னை போட்டு விட்டு கைவேலையாய் போகும்போது, அப்பாவை பார்த்துக்கொள்ள சொன்னால், "பெரியார் பெரியார்" என்று சொல்லியே தொட்டிலை ஆட்டுவாராம். டாக்டர் கலைஞரை நள்ளிரவில் உள்ளே போட்ட போது, அப்பா உணவுத் தட்டை தூக்கி வீசி விட்டு உண்ணாவிரதம் இருந்தார். எம்.ஜி.ஆரை டீ.வியில் பார்த்தால் தாரை தாரையாய் கண்ணீர் விடுவார். தந்தைப் பெரியார் பற்றி பேச ஆரம்பித்தாலே நாக்கு தழுதழுத்து அரைமணி நேரம் பேச முடியாமல் தவிப்பார். இப்படியான ஒரு திராவிட அபிமான பாரம்பரியத்தில் வளர்ந்ததால் அடிக்கடி இப்போது வரை ஒரு இறைமறுப்பு இந்தனையாளனாகவே இருக்கிறேன். எந்த அளவுக்கென்றால் "கடவுள்" என்று பேச ஆரம்பித்தாலே எனக்கு கொட்டாவி வந்து விடும்.
என் தாத்தா மைவள்ளி (வட்டப்பெயர்) நாராயணன் தந்தைப் பெரியாருடன் கைகுலுக்கி பேசியுள்ளதாக என் அப்பா வீட்டுச் சுவர்களில் எழுதி வைக்காத குறைதான். உங்களைப் போலவே நானும் அதை நம்பவில்லை.
இப்படியான முற்போக்கு திராவிட சிந்தனை பாரம்பரியத்தில் வாழையடி வாழையாய் தோன்றின எனக்கு ஒரு பெரிய தடையாய் அமைந்துள்ளது என் பெயர்தான். "தமிழ்மகன்" என்றோ "தமிழ்ச்செல்வன்" என்றோ வைத்திருக்கலாம். இவ்விசயத்தில் அப்பாவை ஒருக்காலும் மன்னிக்க மாட்டேன்.
ஐயா பெ.தா அவர்கள் குறிப்பிட்டது போல் ஒரு "முற்போக்குப் பயிரான" என் அப்பாவுக்கு தந்தைப் பெரியாரின் பெண்ணிய சிந்தனையோடு மட்டும் உடன்பாடில்லை. புரூஸ்லியின் சிந்தனையோடு ஓரளவு ஒத்து வருவார். சாப்பாட்டில் உப்பு காரம் இருந்தாலோ, சில நேரம் இல்லாவிட்டாலும் கூட, பிற்போக்குப் பயிரான என் அம்மாவின் மூக்கில் ஒரு குத்துவிடுவார். இப்படியான தொடர்தாக்குதல்களினால் அம்மாவின் பிற்போக்கு மூக்கின் எலும்பு ஒரு நாள் நொறுங்கியே விட்டது. ஆனாலும் திருந்திய பாடில்லை.
ஐயா பெ.தா அவர்கள் (என்னைப் போன்ற) முற்போக்காளர்களே இன்றைய தலைமுறையில் அதிகமாய் இருப்பதாய் கூறியது கேட்க நிச்சயம் பெருமிதமாய் இருந்தது. ஆனாலும் சமீபமாய் நவீன இளைஞர்களிடம் பழமைவாதம் பரவலாய் காணப்படுவதாய் புள்ளிவிவரங்கள் சொல்லுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. உதாரணமாய், பாண்ட், சட்டையிலிருந்து நாய்க்குட்டிக்கான உணவு வரை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் இளையதலைமுறை மிகவும் பிற்போக்காக திருமணம் போன்ற சடங்குகளை இன்னும் பின்பற்றுகிறார்கள். அன்று தரகர்கள் செய்த இந்த பல்பார்த்து ஆள்பிடிக்கும் வேலையை matrimonial.com போன்ற இணையதளங்கள் பட்டவர்த்தமாய் செய்து கோடிகள் குவிக்கின்றன. சாதி, உபசாதி, ஜாதக பொருத்தம் என பல வித மூட நம்பிக்கைகளைத் தொடர்ந்து பின்னர் தான் மணமக்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து முடிவு செய்கிறார்கள். எந்த அளவுக்கு அதிகமாய் படித்து சம்பாதிக்கிறார்களோ, நைட் கிளப், டேட்டிங் என்று ஆட்டம் போடுகிறார்களோ அந்த அளவுக்கு கட்டுப்பெட்டித்தனமாய் பிற்போக்கு சடங்குகளில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஒரு பிரபலமான உதாரணம் தருகிறேன்: ஜாதக பொருத்தமின்மைக்கு பரிகாரமாக நடிகர் அபிஷேக் பச்சனை மணமுடிக்குமுன் சர்வதேச திரைத்தாரகை ஐஸ்வர்யா ராய் ஒரு மரத்துக்கு மாலையிட்டு திருமணம் செய்தார். இல்லாவிட்டால் திருமணத்துக்குப் பின் அபிஷேக்கின் உயிருக்கு ஆபத்தாம். இன்னும் நாம் திருமணம் என்ற பெயரில் பெண்ணுக்கு மூக்கணாங்கயிறு கட்டும் பழக்கத்தை விட்டபாடில்லை. என் மனைவியை நான் மூக்கணாங்கயிறு அணிய வற்புறுத்தவில்லை என்பதால் என் மூன்று பால்யகால நண்பர்கள் (நரேந்திர மோடியின் வழிபாட்டாளர்கள்) இப்போது வரை என்னிடம் பேச மறுத்து வருகிறார்கள். இவர்களில் ஒருவன் இஸ்ரேலில் மென்பொருள் வல்லுநன். மற்றுமிருவர் பிரபல எம்.என்.சிகளில் மேலாளர்கள்.
இதில் முற்போக்குக் குடும்பங்களிருந்து வரும் பெண்கள் நிலைமைதான் ரொம்ப பாவம். என் அலுவலகத் தோழி கயல்விழியின் அப்பா தி.காவில் 20 வருடங்களாய் முற்போக்குத் தொண்டாற்றுபவர். அவர் பெண்ணுக்கு அவர் ஜாதகம் இயற்றாததால் வரனுக்காக பெரியாய் திடலிலுள்ள கட்சியின் திருமண மையத்தைதான் நம்பி இருந்தார். இரண்டு வருடங்களாய் அலைகழிக்கப்பட்டு, ஏதும் அமையாமல் நொந்து போனார். சுயமரியாதையை விட்டு அவர் பழமைவாதிகளின் வரன் தேடும் இணையதளங்களில் இப்போது பதிவு செய்துள்ளார். அங்கும் 'இறை நம்பிக்கை' இல்லை என்று தெரிவிக்கும் பையன்கள் கூட ஜாதகப் பொருத்த விசயத்தில் விடாப்பிடியாய் உள்ளார்கள். நம்மூரில் ரேசன் அட்டைக்கு அடுத்தபடியாய், ஜாதகம் இல்லையென்றால் அணுவும் நகராது என்னும் நிலை உள்ளது. ஜாதகம் இல்லாத பெண்களுக்கு மணமாகும் தகுதி இல்லை. அதுவும் திராவிட நிறம் வேறு என்றால் சொல்லவே வேண்டாம்!
இன்றைய நவீன இளைஞர்களிடம் காணப்படும் மற்றொரு மனநோய் மாட்டுப்பெண்ணை வீட்டுப் பெண்ணாகவே வைத்துக் கொள்வதற்கான தீவிரம். பொறியியல் படிப்பு முடித்து விட்டு கணவனின் வற்புறுத்தலால் வேலைக்குப் போகாமல் வீட்டை நாலுமுறை பெருக்கி, கிடைக்கிற பொருளை எல்லாம் எடுத்து துடைத்து வைத்து, இத்தனைக்குப் பிறகும் நேரம் மீதமிருப்பதால், டீ.வியில் குடும்பத்தொடர்கள் பார்த்துக் கொண்டே தூங்கி தங்கள் திறமைகளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் அலுவலக வேலைப்பிரிவை பொறுத்த மட்டிலுமே கடந்த 6 மாதங்களில் 4 பெண்கள் கணவனின் வற்புறுத்தலால் வேலையை விட்டுள்ளனர். இதைப் போன்றே இரண்டாவதாய் குழந்தை பெற்று குலதெய்வ பெயரிட்டு மக்கள் தொகையை எகிற விடும் உயர் நோக்குடன் மேலும் பல பெண்கள் வேலையை விடுகிறார்கள். இங்கும் ஆண் குழந்தை பெறுவதற்கான ஆணின் பேராசைதான் தூண்டுதல். இப்படியான 'குடும்ப' வற்புறுத்தலால் என அலுவக தோழி சுகன்யா வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை சமீபமாய் பெற்றுக் கொண்டார். ஆனால் வீட்டில் அவர் அலுவலக வேலையோடு சேர்த்து சமையல், பெருக்கி, துடைப்பது, தினமும் வடை பாயச சாப்பாடு சமைப்பது என அடிமாடாக இரட்டை வேலை செய்ய வேண்டியதாகி விட்டது. அதை விட கொடுமை அவரது மாமனார் அவரை அலுவலக வேலையை ஒரேயடியாய் துறந்து விடுமாறு தொடர்ந்து மிரட்டி வருவது. "சம்பாத்தியம் புருஷலட்சணம்" என்று என் மாமியார் அடிக்கடி காதுபட சொல்லுவார் ( நான் என் மனைவியை விட குறைவாக சம்பாதிப்பதனால்). இந்த தர்க்கப்படி எங்கே தங்கள் லட்சணம் பறிபோய் விடுமோ என பல திருமணமான, ஆகாத இளைஞர்கள் ஒருவித பதற்றத்தில் உள்ளார்கள். இதனால் ஒரு முக்கிய முன்-திருமண கோரிக்கையாக "கல்யாணத்துப் பிறகு வீட்டோடு குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், வேலைக்குப் போகக் கூடாது" என்று பரவலாய் வலியுறுத்தப்படுகிறது. பின்-திருமண பழுது சரி செய்யும் நடவடிக்கையாக வேலைக்குப் போகும் மாட்டை கொம்பைப் பிடித்து கொட்டகையில் அடைப்பது பல குடும்பங்களில் உறவினர்களின் பேராதரவுடன் நடக்கிறது. என் மனைவியின் மேலாளர் ஒரு பெண். சந்தியா. மாதம் ஐம்பதினாயிரம் சம்பாதிக்கிறார். வேலை பார்க்கும் நிறுவனத்தின் பாதி பங்கு வேறு உள்ளது. ஆனாலும் இவரது கணவனும், மாமனார் மாமியாரும் வேலையை விடும்படி தினசரி மனவதை செய்கின்றனர். கணவனுடன் 2 வருடங்களாய் சுமூக உறவில்லை. பேச்சு வார்த்தைக்கு முயன்றால் " நீ வேலையை விடு, எல்லாம் தானாய் சரியாகி விடும்" எனபது அவரது ஒரே பதில். இவருக்கு 6 வயதில் ஒரு மகள். இந்த வேலையை விடும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவதற்க்காக மாமனார் மாமியார் பேரக்குழந்தையை கவனிக்காமல் உதாசீனிக்கிறார்கள், ஒருவித மறைமுக மிரட்டல் என. ஒரு நாள் வழக்கம் போல் மதியம் பள்ளி விட்டு வந்த குழந்தைக்கு 102 டிகிரி ஜுரம். வீட்டில் யாரும் மருந்து தரவோ, பொருட்படுத்தவோயில்லை. மாலை 7 மணிக்கு வீட்டுக்கு வந்த இவரிடம் மாமியார் ரிமோட்டால் டீ.வி சானலை மாற்றிக் கொண்டே சொல்கிறார்: "கொழந்தைக்கு ஜுரம் போல, என்னன்று போய் பாரு". இவரது கணவர் ஹைதராபாதில் சத்யம் நிறுவனத்தில் பொறியியலாளர். மனைவியை விட சற்று குறைவாய் சம்பளம்.
இந்தியாவின் 18 நகரங்களில் இந்தியா டுடே நடத்திய சர்வே பெரும்பாலான இந்திய இளைஞர்கள் சம்பிரதாய குடுமிகள், பிற்போக்காளர்கள் என்று சொல்லுகிறது. இதில் தமிழ் இளைஞர்களும் விதிவிலக்கல்ல. ஆகப்பெரும் கொடுமை 70 சதவீதத்தினர் மதவெறியர்கள் என்பது. இவர்கள் எதற்காகவும் தங்கள் மதத்தை மட்டும் விட்டுக் கொடுக்க தயாரில்லை என தெரிவித்துள்ளனர். எனக்குத் தெரிந்தே நரேந்திர மோடி ஜி தான் இந்தியாவின் தேசத்தந்தை என நம்பும் பலர் இருக்கிறார்கள். இத்தகைய இளைஞர்களை ஆதிக்க சாதியர்கள், ஆதிக்க சாதி ஆதரவாளர்கள் என் இருவகையாய் பிரிக்கலாம். உதாரணமாய், என் அலுவலக மொட்டை மாடி திறந்த வெளி 'உணவறையில்' யாரும் அசைவம் (ஆரிய உணவை சைவ உணவென்பதால் நமது புலால் உணவை பௌத்த உணவென்று அழைக்க வேண்டும் எனும் நண்பர் ஹமீம் முஸ்தபாவின் உயர்கருத்தை வழிமொழிந்து இனிமேல் அவ்வாறே குறிப்பிடுவோம்) தின்னக்கூடாது என்றொரு எழுதப்படாத சட்டம் உள்ளது. ஆதிக்கசாதி ஆரியர்களுக்கு பௌத்த உணவு (அசைவ) மணம் என்றால் குமட்டிக் கொண்டு வருமாம். ஆரிய கலாச்சாரம்தான் லட்சியம் என்று கொண்டுள்ள ஆரிய ஆதரவாளர்களும், நாங்கள் ஆசையாய் பொரித்த கருவாடு, வறுத்த நண்டு என்று கொண்டு வந்து கடித்தால் முறைத்துப் பார்ப்பது மட்டும் இல்லாமல் விலகிப் போயும் அமர்கிறார்கள். தீண்டாமை ஒழிந்து விட்டதென்று யார் சொன்னது? ஆரியர்களை குஷிப்படுத்துவதெற்கென்றே எங்கள் காண்டீனில் சைவ உணவு மட்டுமே தந்து, பிறந்ததிலிருந்தே மீன் மணம் இல்லாமல் சோறிறங்காத என்னைப் போன்ற பல பௌத்த பிரியர்களை காயப் போடுகிறார்கள். மற்றொரு அலுவலக சாதிக் கொடுமையை பற்றிச் சொல்லுகிறேன். நான் பொதுவாய் சாதி வித்தியாசம் பாராமல் ஆரியர்களிடம் கூட சகஜமாக பழகக்கூடியவன். அப்படி ஒரு நாள் அல்வா சாப்பிடுவதற்காக என் கூடப் பணிபுரியும் ஒரு ஆரியப்பெண்ணிடம் கரண்டி வாங்கினேன். பிறகு நன்றாக அலம்பி உணவு நேரத்தில் திருப்பிக் கொடுத்தேன். ஆனால் அவள் அதை பயன்படுத்தாமல் வெறும் கையாலே உருட்டி விழுங்க ஆரம்பித்தாள். நான் சொன்னேன்: " நன்றாக சோப்புப் போடு அலம்பி விட்டேன் தேவி (மோடிக்கு பயந்து பெயரை மாற்றியுள்ளேன்) நீ அதை பயன்படுத்தலாம்". நான் தொடர்ச்சியாய் வற்புறுத்தியும் அவள் நான் எச்சில் படுத்தி அலம்பிய கரண்டியை மீண்டும் வாயில் வைக்க மறுத்து விட்டாள். என் முன்னே தூக்கி வீசாமல் இருந்தாளே என்று ஆறுதல் சொல்லிக் கொண்டேன். ஆனாலும் ஐயா, எனக்கு பல இரவுகள் இந்த நுட்பமான "ஒத்திப் போவை" நினைத்து தூக்கம் வரவில்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் மிக அபாயகரமானது சொந்த சாதியர்களை மேல் நிலையிலும், ஆதரவு சாதிகளை சற்று அடுத்தபடியாயும் உயர்பதவிகள் தந்து அலுவலக மேலாண்மை வட்டத்துள் ஒரு சக்கர வியூகத்தை ஆரியர்கள் அமைத்து வருவது. வெகு சீக்கிரத்தில் ஒரு ரதயாத்திரை நடத்தும் அளவுக்கு என் மேலாளரான நாமக்காரர் ஆரியர்களை அதிகமாய் பணியில் அமர்த்தி அரசியல் செய்கிறார். நான் குறிப்பிட விரும்புவது இந்த வெறியர்கள் எல்லாரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதே.
நாம, பூணூல் சக்திகளின் இந்த ஆட்டத்தைப் பார்த்தால் என் ரத்தம் கொதிக்கிறது ஐயா! எங்கல் அலுவலக முகப்பில் ஒரு பிள்ளையார் சிலை வைத்திருக்கிறார்கல். தேச, இன எல்லைகள் தாண்டி சேவை செய்யும் பி.பி.ஓ நிறுவனம், ஆனால் முகப்பிலேயே பிற்போக்கின் அடையாளம். பார்க்கும் போதெல்ல்லாம் என் நரம்புகள் புடைக்கின்றன. உடைத்து நொறுக்கலாம் என்று போனால், அட, பிளாஸ்டிக் பொம்மை.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஜெ.டபிள்யூ.டி சக்ரா எனும் ஒரு ஆய்வு சென்னை இளைஞர்கள் பழமைவாதிகள், அச்சம் மிகுந்தவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மிகவும் முற்போக்கானவர்களையே பிற்போக்காய் செயல்பட வைக்கும் சூழல் இங்கு நிலவுகிறது. திருமணத்துக்கு முன்பே நானும் என் மனைவியும் மிகவும் நவீனமாய், முற்போக்காய் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டோம். ஆனால் என் மாமியார் போலீசில் பிடித்துக் குடுப்பேன் என் மிரட்டியதால், திருமணம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பதிவாளர் அலுவலகத்துக்குப் போய் திருமணத்தை சுளுவில் முடித்து விடலாம் என்று பார்த்தால், சட்டம் மாறியது தெரிய வந்தது. போலித்திருமணங்களை தடுக்க நிலுவையில் இருந்த அச்சட்டம், மறைமுகமாய் பழமைவாதிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டது. ஏதாவது கோவிலிலோ, மண்டபத்திலோ மணமுடித்து விட்டு ஆதாரம் தந்தால் பதியலாமாம். மண்டபத்திற்கு என்னிடம் வசதி இல்லை. மனசாட்சி இடம் தராவிட்டாலும், ஒரு சின்ன கோவிலாய் ஏற்பாடு செய்தேன். ஆனால் அங்கும் பழமைவாதிகள் ஒரு ஆப்பு வைத்திருந்தார்கள். திருமணம் கோவிலில் பதிவு செய்வதற்கு மாமியார்/மாமனார் கையெழுத்திட வேண்டுமாம். என் மாமியார் திருமணத்துக்கு வருவாரா மாட்டாரா என்று கடைசி நேரம் வரை திகிலாகவே இருந்தது. ஒருவழியாய் அவர் ஒருமணி நேரத்துக்கு முன் விஜயமாகி திருமணத்தை 20-20 கிரிக்கெட் போல் முடித்து வைத்தார். இந்த சட்டக் குளறுபடி சாதிப் படிநிலையை, பழமைவாதத்தை மேலும் வலுவாக்கவே பயனபடுகிறது.
இதையெல்லாம் கடந்து, தமிழ் நாட்டுக்கு ஒரு நீண்ட திராவிட அரசியல் பாரம்பரியம் உண்டு. நமது திறமிக்க தலைவர்களின் சீரிய வழிகாட்டுதல் இருந்தும், சாலை ஓரங்களிலும் மத்தியிலுமாய் அவர்கள் சிலைகளாய் வேறு நின்று முற்போக்கு சிந்தனைகளை நினைவுபடுத்துயும் கூட, நாம் ஏன் இப்படி பிற்போக்கு மந்தைகளாய் உள்ளோம்? இதை தமிழகத்தை செவ்வனே ஆண்டு வரும் திராவிட அரசுகளின் கையாலாகாத்தனம் என்று பழி சொல்லும் சில அன்னிய சக்திகள் உள்ளன. அவர்களுக்கு நான் கூற விரும்புவது: மனிதன் குரங்கிலிருந்து பரிணமிக்க பல மில்லியன் வருடங்கள் ஆனது. அப்படியிருக்க பழமைவாதியிலிருந்து அவன் சில பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே முற்போக்குவாதியாக வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்! அதற்குள் எப்படி நம் அரசுகள் அவனை சங்க கால சிறப்புக்கு கொண்டு செல்ல முடியும். நாம் மேலும் பொறுமைசாலிகள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
நமது பிற்போக்கு நிலைக்கு எரிக் புரோம் எனும் ஜென்மானிய தத்துவ, மனவியலாளரின் சிந்தனையில் பதில் உள்ளது. என் நண்பன் ஜோர்ஜ் ஒரு நாய் பயிற்சியாளன் மற்றும் கால்நடை மருத்துவன். அவன் நாய்கள் பற்றி ஒன்று சொன்னான். நாய்கள் சமூகத்துக்குள் கண்டிப்பான ஒரு படிநிலை உண்டு. அதாவது தலைவனுக்கு கீழே வலிமை குன்றின நாய்கள். அதற்கும் கீழே நோஞ்சான்கள், குட்டிகள், இப்படி. ஆனால் இன்றைய பல நவீன குடும்பங்களில் நாய்கள் குடும்ப உறுப்பினருக்கான சமஅந்தஸ்துடன் வளர்க்கப்படுகின்றன. இதனால் யார் முதலாளி \ கூட்டத்தலைவன் என்ற குழப்பம் நாய்க்கு ஏற்படுகிறது. தொடர்ந்து தலைவன் இல்லாத பிரஜை பதற்றம் கொள்கிறது. சில நாய்கள் தங்களை தலைவன் என்று சுயமாய் முடி அணிந்து உங்களை அடக்கி ஆள முயலும். சில நாய்கள் மாறாய் ஒருவித இறுக்கத்துடன் ஆர்வமற்று காணப்படும். சொன்ன பேச்சை கேட்காத, சாப்பாட்டை பறித்து ஓடும் நாய்கள் உண்மையில் மனிதனை பிரஜை என்று கருதுபவை. மற்றவை தான் என்னவென்ற குழப்பத்தில் இருப்பவை. இந்த படிநிலை பதற்றமும், அடக்குமுறை குணமும் தொழில்மயமாக்கலின் பின்னான நவீன சமூகத்தில் காவல் மிருக நிலையிருந்து செல்லப்பிராணியாக பதவி உயவு பெற்றதில் நாய்க்கு கிடைத்த அபரிதமான சுதந்திரத்தினால்தான் ஏற்பட்டது. புரோம் தனது "சுதந்திரம் மீதான பயம்" என்னும் நூலில் இவ்விசயத்தை மனித வரலாற்றை முன்வைத்து விளக்குகிறார். முன்-தொழில்மய சமூகத்தில் மனிதன் மிகச்சட்டதிட்டமான புறாக்கூண்டு சமூக அமைப்புக்குள் வாழ்ந்தான். சமூகம் வரையறுத்தது போன்றே எளிதாய் வாழ்ந்து முடித்தான். தன் அடையாளம் என்னவென்ற கவலை அவனுக்கு இல்லை. அது ஏற்கனவே முடிவாகி இருந்தது. தொழிமயமாக்கலுக்குப் பின், முதலாளித்துவத்தின் எழுச்சியின் போது, அவனது அடையாளம் மாறியது. உற்பத்தியில் பங்களிக்கும் பணியாளன், மற்றும் உற்பத்திப் பொருளை நுகர வேண்டிய நுகர்வோனாக ஒரு புது அடையாளப்பட்டி அவன் கழுத்தில் மாட்டப்பட்டது. சமூக அமைப்பும் வெகுவாக தளர்ந்தது. மனிதன் தனிமனிதன் ஆனான். மேற்கில் மறுமலர்ச்சி காலகட்டத்தில் வாழ்வின் மையத்தில் சர்வாதிகாரியாக வீற்றிருந்த கடவுளின் இடம் கேள்விக்குறியானது. லூதர், கால்வின் போன்றோர் ஆன்மீகப் பாதையில் தனிமனிதனின் பங்கு பற்றி வாதிட்டனர். அதோடு அவன் தலையில் "சுதந்திரம்" எனும் ஒரு முள்கிரீடமும் வைக்கப்பட்டது. தன் விதியை அவனே தீர்மானிக்கும், அதற்கு அவனையே பொறுப்பாக்கும் பேஜாரான சுதந்திரம். முந்தைய சட்டதிட்டங்களும், நம்பிக்கைகளும், பிம்பங்களும் இருந்த இடத்தில் இப்போது பெரிய வெற்றிடம் இருந்தது. காலுக்கு கீழே நிலம் நகர்ந்து எங்கும் அந்தரம் ஆகிவிட்டது போலிருந்தது அவனுக்கு. அவனுக்கு முன் இரண்டு வழிகள் இருந்தன. வெற்றிடத்தில் புதிதாய் ஒரு சமூக ஒழுங்கு முறையை தனிமனித நிலையிலிருந்து உருவாக்குவது. இரண்டாவது, எஞ்சின பழைய அமைப்புகளுக்குள் ஓடி ஒளிவது. தனிமை, ஸ்திரமின்மை, பொறுப்பின் பதற்றம் அவனை கடுமையாய் அழுத்தியது. பலரும் ஓடி ஒளிந்தனர். ஏதாவது ஒரு வசதியான முகமூடியை மாட்டிக் கொண்டனர். நமது முந்தைய தலைமுறைக்கு தலைவர்களில், அரசியல் மாற்றத்தின் நன்மையில் நம்பிக்கை இருந்தது. அவர்கள் சித்தாந்தங்களை முகங்களில் மாட்டியிருந்தனர். நமது முந்தைய தலைமுறையில் தலைவர்களின் பெயரை குழந்தைகளுக்கு ஆசையாய் சூட்டினார்கள், நேரு, இந்திரா என. இப்போது வாஜ்பாய், லல்லு என பெயர் வைக்கும் தைரியம் உண்டா? நவீனத் தனிமனிதனுக்கு பொருள் நுகர்வதிலும், கேளிக்கையிலும் மட்டும் நம்பிக்கை மீதமிருக்கிறது. அவன் ஊடகங்கள் கட்டி எழுப்பும் கேளிக்கை நட்சத்திர பிம்பங்கள் பின்னிருந்து எட்டிப் பார்க்கிறான்.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உலகமயமாக்கல் கொண்டு வந்துள்ள கருத்தியல், அரசியல் சுதந்திரம் ஒரு நிலஅதிர்வு போல் சமாளிக்க முடியாததாக உள்ளது. அரசியல் சுதந்திரம் பொருளாதார சுயசார்பு தந்து பெண்களை பெருமளவில் விடுவித்துள்ளது. இது ஆண்களை தகிடுதித்தாட வைத்துள்ளதால், அவர்கள் பெண்கள் மீதான் தங்கள் பிடியை மேலும் வன்மமாக்கியுள்ளனர். விளைவுகள்: ஒழுக்கப் போலீஸ், தொலைக்காட்சி சேனல்கள் மீதான பாலியல் கெடுபிடி, கருத்தடை மாத்திரை மீதான எதிர்ப்பலை, பல்கலை, கல்லூரி ஆடைக்கட்டுப்பாடு போன்றவை. இரவுப்பணியின் போது சில பி.பி.ஓ பெண்கள் பரிதாபமாய் கொல்லப்பட்ட போது மக்களின் கவனம் பாலியல் பாதுகாப்பில் குவிந்திருந்ததை கவனியுங்கள். இப்போதும் கூட பி.பி.ஓக்கள் மீதான குற்றச்சாட்டு பாலியல் ஒழுக்கம் பற்றியதே. இது நவீன இந்திய ஆணின் பதற்றம். கருத்தியல் சுதந்திரம் பலவித புது கலாச்சாரங்கள், பழக்கங்கள், கருத்துக்களை நம் பரிசீலனைக்கு கொண்டு வருகிறது. ஒரு விதத்தில் நம் சிந்தனை, கலாச்சார தளத்தை இது விரிவு செய்தாலும், நமது காலங்காலமான சில அடிப்படைகளை மறுபரிசீலனை செய்யும் கட்டாயமும் ஏற்படுகிறது. பாதுகாப்பு இழந்ததாய் பதறுகிறோம். மீண்டும் பழைய மரபுகள், நம்பிக்கைகளில் போய் ஒளிந்து கொள்வோம். இது ஒருவித இடத்தை தக்கவைப்பதற்கான முயற்சி. ஐ.டி படித்த என் தோழி அபர்ணா உடல் பருமனுக்காக சிகிச்சை எடுத்து வந்தாள். அவள் ஐயர். சோறு, கூட்டு, சப்பாத்தி என எதிலும் நெய் வடியாவிட்டால் இறங்காது. நெய் அவள் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டிய போது, அவள் கடுமையாக மறுத்தாள். நெய் புத்தி கூர்மைக்கு சிறந்ததாம். அவள் சாதியில் பலர் விஞ்ஞானி, பொறியியலாளர் என்று உயர் பதவிகளில் இருப்பதற்கு நெய் தான் காரணமாம். அவளது வாதத்தின் அபத்தம் அவளுக்கு புரியாமலில்லை. ஆனாலும் தனது சம்பிரதாய அடையாளம் ஒன்றையே அவள் பெரிதும் நம்பி, ஒட்டிக் கொண்டிருப்பதால், இதுபோல் அவளுக்கு முன்னோர்கள் வழங்கின மூட நம்பிக்கைகள், அபத்த பெருமைகளை எல்லாம் வாங்கி தலைமேல் தூக்கி கொண்டாட வேண்டியுள்ளது. இது ஒரு வசதி. மாற்றத்தை நேருக்கு நேர் ச்ந்திக்கும் திராணி இல்லாததன் விளைவு. இப்படி மாற்றம் கண்டு பதறும் மனிதன் புரியும் எதிவினைகளை புரோம் வகைப்படுத்துகிறார்: சர்வாதிகார வகை, எந்திரமனித உடன்படு முறை மற்றும் அழிவுசார் முறை. சர்வாதிகார எதிர்வினைக்கு ஹிட்லர் சிறந்த எடுத்துக்காட்டு. இத்தகைய மனிதர்கள் தங்கள் அடையாளம் சார்ந்த குறைபாட்டை பிறரை அடக்கி ஆள்வதன் மூலம் நிறைவு செய்யப் முயல்வார்கள். இரண்டாவதான எந்திரமனித உடன்படு வகை மனிதர்கள் அபர்ணா வகை. மத்திய, உயர்மத்திய வகுப்புகளை சேர்ந்தவர்கள். மூன்றாவது வகை மனிதர்கள் பிறிதை அழிப்பது மூலம் தங்கள் இருப்பை பத்திரப்படுத்த முயல்பவர்கள். சமீபத்திய பஜ்ரங்தள், எம்.என்.எஸ் மற்றும் இந்து இஸ்லாம் போன்ற மதம்சார் தீவிரவாத நடவடிக்கைகள், பழமைவாத செயல்களில் ஈடுபடுபவர்கள், துணை நிற்பவர்களை நாம் இந்த பிரிவுகளுக்குள் அடக்கலாம். நாசி ஜெர்மனிக்கும் தற்போதைய இந்தியாவுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. முதலாம் உலகப்போருக்குப் பின் ஜெர்மன் பாதுகாப்பற்றதாய் உணர்ந்தது. மக்கள் நம்பிக்கை அற்றிருந்தனர். ஹிட்லர் தன் மக்களிடம் யூதர்கள் மீது இனவெறியையும், ஆரிய சுய அபிமானத்தையும் வளர்த்தெடுத்தான். அதன் மூலம் சர்வாதிகாரியானான். இன்றைய இந்தியாவில் மக்களிடம் மாநில, மொழி, மதம் வாரியான சுய அபிமானம் முதலாம் வகை மனிதர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது. மோடி, அத்வானி, தாக்ரே நமது சமகால ஹிட்லர்கள். மொழி, மத, மாநில ரீதியான கலவரங்களில் மூன்றாவது வகை மனிதர்கள் செலுத்தப்படுகிறார்கள். ஹைடெக் தீவிரவாத்தை முன்னெடுத்துப் போவது இரண்டாவது மற்றும் மூன்றாவது வகைகள்: லெப்டனண்டு கர்னல், காவி சாமியார், மென்பொருள் பொறியாளர் என மேதாவிப் படை.
இப்படியாக, தமிழக மக்களின் பழமைப்போக்கிற்கு திராவிட கட்சி அரசுகள் பொறுப்பல்ல. மேலும், தமிழர்கள் சிறந்த பகுத்தறிவாளர்களாய் பரிணமிக்கும் பொருட்டு, மேலும் பல சிலைகளை நிறுவ வேண்டியுள்ளது; வீட்டுக்கு வீடு இலவச டி.விக்கள் வினியோகிக்க வேண்டியுள்ளது. பல சாலைகள், சந்து, பொந்துகளுக்கும் தலைவர்களின் திருநாமங்களை சூட்டியாக வேண்டும். ஆகையால் மக்களின் பரிணாமத்துக்கு போதுமான கால அவகாசம் அளித்து திராவிட கட்சிகளையே இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates