Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Wednesday, 19 May 2010

ஈழத்தமிழரின் அலிபாபா குகை: kuralweb.com

இணையதளங்கள் குறித்து தாமரை இதழில் நான் எழுதி வரும் தொடரில் இந்த மாதம் kuralweb.com




தமிழீழ போராட்டம் மற்றும் அதன் அழிவு குறித்த வரலாற்று, அரசியல், சமூக பதிவுகள் இணையத்தில் ஏராளம். இவ்விசயங்களை பேச Yarl.com, globaltamilnews.com, inioru.com, nerudal.com, kuralweb.com போன்று தனிப்பட்ட இணையதளங்களும், இணையபத்திரிகைகளும் தீவிரமாக, தொடர்ச்சியாக இயங்குகின்றன. ஈழப்போருக்கு புலம் பெயர் தமிழர்கள் பொருள் மற்றும் தார்மீக உதவிகளை வெளியில் இருந்து நல்கி ஆதாரமாக விளங்கியது ஒருபுறம் இருக்க இணையத்தில் அவர்கள் எழுப்பி வரும் கருத்தியல் அலசல் மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான வெளி இணையதமிழுக்கு பெரும் கொடை எனலாம். இணையத்தில் தீவிர தமிழ் எழுத்தாளர்களையும் சில உதிரிகளையும் தவிர பெரும்பாலானவர்கள் நடத்தும் இணையதளங்கள் கேளிக்கை மற்றும் செய்திப்பகிர்வை மட்டுமே நோக்கமாய் கொண்டவை. இணையம் இந்திய தமிழர்களுக்கு ஒரு சமையல்கூடம் மட்டுமே. வாழும் சமூகம் குறித்த தீவிரமான அக்கறை கொண்ட எழுத்துக்கள் அதிகமாய் ஈழத்தமிழர்களின் இணையபக்கங்களிலேயே கிடைக்கின்றன. இணையத்தை அவர்கள் ஒரு ஆய்வுக்கூடமாக பாவிக்கின்றனர். அதற்கான தேவை உள்ளது. ஈழசமூகம் இன்று ஒரு முட்டுசந்தில் நிற்கிறது. முள்ளிவாய்க்கால் இன-அழிப்புக்கு பின் அதன் பொருளாதார, சமூக, உளவியல் அடித்தளங்கள் வேகமாய் தகர்ந்து வருகின்றன. எல்லா திசைகளிலும் அது ஒரு கேள்வியை சந்தித்து வருகிறது. தன்னை மீள்பரிசீலனை செய்வதற்கான பெரும் தேவை ஈழமக்களுக்கு இன்று உள்ளது. இலவச டீ.வி, இட்லி, வடையுடன் முடிந்து போகின்றவை அல்ல அவர்களின் நெருக்கடிகள்.

ஈழப்பிரச்சினையை பேசும் கட்டுரைகள் இரு புள்ளிகளில் நிற்கின்றன. உணர்ச்சிவசப்பட்டு ஒரு அரசியல் நிலைப்பாடெடுத்து உரையாடுபவை; தீவிரமான ஆய்வு மொழியில் பரிசீலிப்பவை. முதல் வகை கட்டுரைகள் உடனடி சமூக, கலாச்சார தீர்மானங்களை அலசி முன்வைக்கவும், அறம் குறித்த பிரக்ஞையை தக்க வைக்கவும் முக்கியமானவை. இரண்டாவது வகை அறிவியக்க கட்டுரைகள் நிதானமான ஆழமான வழிமுறையை மேற்கொள்கின்றன. ஒரு கொந்தளிக்கும் சூழலில் இவை வறட்சியாய் தெரிந்தாலும் எதிர்கால சமூகத்தின் வளர்ச்சிக்கும் மீளுருவாக்கத்திற்கும் இவை பெரும் பங்களிக்கக் கூடியவை. இவ்விருவகை கட்டுரைகளும் இன்று எதிர்கொண்டு பதிலளிக்க முயலும் முக்கிய கேள்வி புலிகளின் வீழ்ச்சி பற்றியதே. புலிகளின் தவறுகள், சர்வதேச மற்றும் சிங்கள சதிகள், புலிகளின் மறுவரவு, புலம்பெயர் ஈழ அரசு என பல்வேறு தரப்புகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இத்தகைய அணுகுமுறைகள் ஒரு musical chair விளையாட்டு மட்டுமே என்பது எளிதில் புலனாகி விடுகிறது. மெழுகுமாளிகைகள் போல் தீக்கிரையாவதற்கே எழுதப்படுபவை இவை. ஒரு சமூகம் துப்பாக்கி ரவைகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவது அல்ல. பண்பாடு, வாழ்வியல், பொருளாதாரம், நிர்வாகம், உளவியல் என எத்தனையோ கூறுகள் சமூகத்தை நகர்த்துகின்றன. ஈழப்பிரச்சினையின் இந்த பன்மைத்தன்மையை புறவயமாக விவாதிக்கும் பல நுட்பமான தெளிவான கட்டுரைகளை குரல்வெப் இணையதளத்தில் (kuralweb.com) படிக்கலாம். தீயணைப்பு கூக்குரல் எழுத்துக்களில் மறைந்து போகும் பல்வேறு சிக்கல்களை இக்கட்டுரைகள் தயக்கமின்றி அலசுகின்றன. மேலும் புலி மற்றும் மாவோயிச ஆதரவு எதிர்ப்பில் இருந்து முழுமையான வன்முறை நிராகரிப்பு வரை பல்வேறு பட்ட தரப்புகளை சார்பு நிலையற்று இந்த இணையதளம் வெளியிடுகிறது. ஏற்கனவே பிற தளங்களில் வெளியான கட்டுரைகளின் மறுபிரசுரிப்புகளும் உண்டு.



குரல்வெப்பில் உள்ள குறிப்பிடத்தக்க இடுகைகளில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஆக்போர்டு பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோரின் நேர்காணலும் ஒன்று. ”முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் இராணுவ – அரசியல் ரீதியாக மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. எமது நிலம், இனம், மொழி சார்ந்து சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது.” என்று இவர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக புலிகளை அங்கீகரித்தவர்களும் ஆதரிக்காதவர்களும் புலிகள் நடத்திய ஒரு அரசாங்கத்தின் பிரஜைகளே. இப்போது அழிந்திருப்பவை வெறும் புலிகள் மட்டுமல்ல, அவர்கள் நடத்தி வந்த அரசாஙக்த்தின் நிதி, நீதி, நிர்வாகம், பொருளாதாரம், காவல்துறை, ராணுவம், மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளும் தான். புலிகளின் அழிவுக்கு பின் அவர்களின் பிரஜைகள் இயல்பாகவே அனாதைகளாகி விடுகின்றனர். புலிகளை வெறுத்தாலும், நேசித்தாலும் உண்மை இதுவே. இவர்கள் இலங்கையில் தற்போது மிருகங்களாக நடத்தப்படுகின்றனர்; எதிர்காலத்தில் இரண்டாம் பிரஜைகளாக இருப்பர். எட்வெட், யாழியினி உள்ளிட்டோர் சமகால இலங்கைக்கும் புலம்பெயர் நாட்டு ஈழப்பிரஜைகளுக்கும் பொருளாதார பரிவர்த்தனைகள் துண்டித்து போயிருப்பதை குறிப்பிடுகின்றனர். முன்போல் புலத்தில் உள்ள ஈழர்கள் தொடர்ந்து தங்கள் சோதரர்களுக்கு பொருளுதவி வழங்கிக் கொண்டிருக்கவும் முடியாது. சமூகக் கட்டுமானங்கள் இல்லாத அனாதைப் பிரஜைகளுக்கு சம்பாதிக்கவோ, சம்பாதித்ததை புழக்கத்தில் விடவோ முடியாது. இந்த நிலைக்கு இல்ங்கை அரசு புலிகளின் சொத்து வேட்டை என்ற பெயரில் ஈழ மக்கள் செல்வத்தை பறிமுதல் செய்வதும், புலத்தில் இருந்து புலிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை ஒருசாரார் பதுக்கி வைத்திருப்பதும் முக்கிய காரணங்கள். இப்படி அனாதை பிரஜைகள் நேரிடும் இன்னல்கள் ஏராளம். அவர்களுக்கு தேவை அரசியல் போராட்டம் மட்டுமே என கருதுவது அபத்தம். புலி எதிர்ப்போ பிரபாகர வழிபாடோ இந்த மக்களை முன்னேற்றிடாது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்..
ஈழத்தை விடவும் வெளியில் தான் அதிக தமிழர்கள் உள்ளதாகவும் அதனால் தமிழ் ஈழம் கோருவது தவறு என்கின்ற சிங்களத் தரப்பின் வாதத்தை விமர்சிக்கும் ரீட்டாவின் ”தேசியம் எண்ணிக்கை அல்ல அது ஒரு பண்புநிலை” கட்டுரை காஷ்மீருக்கும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்துவதே. தேசியம் என்பது பொருண்மை நிலை மட்டுமே அல்ல அது ஒரு உளவியல், பண்பாட்டு வடிவமும் கூடவே என்று பேசும் ரீட்டா புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து தமிழ் தேசிய உணர்வுடன் ஈழத்துக்கான பங்களிப்பை செய்து வந்துள்ளதை குறிப்பிடுகிறார். ”இந்திய எதிர்ப்பு அரசியலும் ஈழத்தமிழர் போராட்டமும்” கட்டுரையில் பிரம்மா ஒரு வரலாற்றுப் பார்வையில் இந்திய எதிர்ப்பு அரசியலை விளக்குகிறார். இந்திய அரசியல் மாற்றங்கள் ஈழத்தில் நிகழ்த்திய விளைவுகளை அவர் பேசாமல் புலிகளுக்கும் இந்தியாவுக்குமான அரசியல் பகையின் பின்புலத்தை தொட்டுக் காட்டுவதோடு நின்று விடுவது இக்கட்டுரையின் ஒரு முக்கிய குறை. இந்தியாவுடன் இனிமேல் பகைபாராட்டாமல் சமயோசிதமாக ஈழம் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர். மேல்மட்டத்தில் இவ்வாறு மல்லாந்து நீச்சலடித்தாலும் பிரம்மா குறிப்பிடும் பிரச்சனை மீதான அக்கறை எதிர்கால ஈழத்திற்கு அவசியமே. நிலவனின் “ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்?” என்ற கட்டுரையில் ஒரு கூர்மையான வாதம் வருகிறது. பிரபாகரன் ஒரு வரலாற்று விளைவு மட்டுமல்ல, அவர் ஈழப் பண்பாட்டின், உளவியலின் பகுதியுமே என்கிறார் நிலவன். ஒரு மிகச்சிறிய குழு ஒரு பெரும் அரசை எதிர்த்து 25 வருடங்களாக போராடி நின்றதன் பின்னுள்ள வீரமும், மூர்க்கமும், அர்ப்பணிப்பு உணர்வும் ஒரு தனித்துவமான் சமூகக் கூறு தான். அது ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கு உள்ளும் உறைந்துள்ள ஆதி கூறு. இதற்கு பிரபாகரன் எனும் பெரும் ஆளுமை வடிகால் கொடுத்தது என்கிறார் நிலவன். விமர்சகரும், புனைவெழுத்தாளருமான தமிழவன் “தமிழுணர்வின் வரைபடம்” (உயிர்மை வெளியீடு) என்ற நூலில் ஈழப்போர் சூழலை சங்க காலகட்டத்தோடு ஒப்பிட்டு பேசுவது இங்கு நினைவு கூரத்தக்கது. தமிழ் எழுத்தாளர்களில் ஆரியச்சலவை செய்யப்பட்ட சில அங்கிள்கள் ஈழப்போரை ஒரு தீவிரவாத செயலாக சித்தரித்தனர். நாம் கலாச்சார வரலாற்று ரீதியாக ஈழத்திலுள்ள தமிழர்களை நீளந்தாண்டி இன்று வேறிடத்திற்கு வந்திருந்தாலும் நம்முள் உள்ள ஆதிப் பண்பு நிலையின் மற்றொரு வெளிப்பாடு தான் பிரபாகரன் எனபதை உணரும் நுண்ணுணர்வும். நிதானமும் அவர்களுக்கு இல்லாமல் ஆகி விட்டது. பிரபாகரன் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்பதற்கான காரணங்களை அடுக்கும் நிலவன் ஈழத்திற்கு இன்றைய தேவை கலை, கலாச்சார, அறிவியக்க தளங்களில் ஈழ சமூகத்தை கராறான ஒரு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார்.



ஈழ விடுதலைப் போரில் பெண்புலிகளின் பங்கு என்ன? அவர்களுக்கு புலி இயக்கத்துள் போதுமான அங்கீகாரம் கிடைத்ததா? இப்போது பிடிபட்ட பின் அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு உள்ளது? இக்கேள்விகளை பரிசீலிக்கும் றஞ்சி ஒரு பெருமூச்சையே பதிலாக அளிக்கிறார். “இரத்த சுவடுகளும் நிர்வாண கோலங்களும்” கட்டுரையில் அவர் பிரபாகரனால் பெண்புலிகள் மொட்டை அடிக்கப்பட்டு தப்பிச் செல்ல இயலாதபடி அலங்கோலமாக்கப்பட்டதை குறிப்பிட்டு புலிகளும் சிங்களவர்களும் பெண்களை ஒடுக்கி வந்துள்ளதாக சொல்கிறார். 1992-இல் போஸ்னியாவில் செர்பிய அரசாங்க திட்டமிடலின் படி இராணுவத்தால் 20,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். 1990-இல் போர் நடைபெற்ற போது குவைத்தில் 5000-க்கு மேற்பட்ட பெண்களுக்கும், ருவாண்டாவில் ஐந்து லட்சம் பெண்களுக்கும் இதுவே நடந்தது. இன்று இலங்கையிலும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் எத்தனையோ ஈழப்பெண்கள் விபச்சார கூடங்களில் பாலியல் ஒடுக்குமுறை உள்ளாக்கப் படுகிறார்கள். வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்புலிகள் சாட்சியமாக எஞ்சக் கூடாதென்பதால் அவர்கள் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். இது பாலியல் அத்துமீறல் மட்டுமல்ல, ஒரு இனத்தின் உயிரியல் தூய்மையை களங்கப்படுத்தி அவமானிக்கும் செயலும், அதன் சுய-அபிமானத்தை, உளவியலை சிதைக்கும் திட்டமிட்ட நடவடிக்கையுமே என்று சுட்டுகிறார் றஞ்சி.



பாராரட்சணத்தின் ”அனாமோவின் கண்ணீர் ...” கட்டுரையில் வரும் சரத் பொன்சேகா குறித்த சித்திரம் காத்திரமானது; இனதுவேசமும், வன்மமும் இணைந்து ஒரு மனிதன் வளர்த்தெடுக்கப் பட்டதை, வரலாற்றில் தடுக்கிட்ட ஒரு தடுமாற்றத்தில் அவன் பாதாள உலகத்திற்கு காணாமல் போன விதியின் முரண்களை சுட்டுகிறது.
இவ்வளவு அருமையான கட்டுரைகள் கொண்டுள்ள குரல்வெப் டாட்காம் ஒரு செய்தித் தளமும் கூட. ஆனால் இத்தளம் முறையாக வடிவமைக்கப்பட இல்லை. முகப்பில் இணையதளம் மற்றும் அதன் நோக்கம் குறித்த அறிமுகம் இல்லை. கட்டுரைகள் பக்கம் முகப்பில் இல்லை. அவற்றை காண முகப்பில் உள்ள கட்டுரை ஒன்றை சொடுக்கி அதன் தொடுப்பு வழியாக செல்ல வேண்டி உள்ளது. பக்கங்கள் மிக மெத்தனமாகவே கிரீச்சிட்டபடி திறக்கின்றன. அதன் அனைத்து அர்த்தங்களிலும் kuralweb.com ஒரு அலிபாபா குகைதான்.
Read More

Friday, 14 August 2009

அமைதியும் வன்முறையும்



சுவர்க்க வாசல்
ஈழப்போரில் சிதறின பாலகர்களின்
அடுக்கான வரிசைகள்
கைதெறித்தவர்கள் காலிழந்தவர்கள்
வயிறு கிழித்து வீசப்பட்ட
முகம் சிதைந்த சிசுக்கள்
முன்னவரில் பின்னவர் சாய்ந்து தவழ

தேவன் கட்டளையிட்டார்
பூமியில் மறுபடி உயிர்த்தெழுந்து
கருணை மொழி சொல்லித் தர

வரிசை கலைய
எதிர்பட்ட சாத்தான்
ஆறுமாத சிசு ஒன்றின் முதிராத இதயத்திடம்
உதடு வைத்து கேட்டான்
"உங்கள் தாய்மொழி என்ன?"

யாருக்கும் தெரியவில்லை.
மௌனம் இறுகி காற்று நின்றது.
"ஏதாவது பேசுங்களேன்"

கசியும் குருதியை சிசு
தொட்டுக் காட்ட
சாத்தான் மறைந்தான்.

குருதி காயும் தொறும்
தோன்றிச் சொன்னான்

"கேளுங்கள் கேள்விதான் உங்கள் மொழி"

ரத்தத்தின் குழந்தைகள்
நிற்கவே இல்லை
கடைசிச் சொட்டு குருதியை
போட்டல் பூமி உறிஞ்சும்வரை.

வரிசையில் எஞ்சினவன்
ஒரு பாலகன்.

வடுவற்ற முழு உடலாய்
தேவன் திரும்பினார்
தீர்ப்பு நாளன்று

குருதி காணாமல்
வறண்ட பூமி வெடித்தது
தேவன் உடல் சுருங்கிற்று
உயிர் வற்றியது

அக்கணம்
சிறு விரலால்
அவர் நெஞ்சைப் பிறாண்டினான் இறுதி பாலகன்
தேவன் உயிர்த்தார்
முதற்சொட்டு மழையை அறிந்தது
வானம்
பூமி தளும்பியது
மானிடம் விழித்தது.

கண்மூடுமுன் இறுதி பாலகன்
ஒரே முறை தாய்மொழி பேச வாய் திறந்தான்
தேவன்
உயிப்பித்தார் அவனை
மீண்டும்.
Read More

பொதுமையாக்கல் அரசியலும் மெரீனா கவியரங்கமும்



"இலங்கை போரின் காயம் இன்னும் ஆறாத நிலையில் தமிழக எழுத்தாளர்கள் ஈழத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நுட்பமாக கேள்விக்கு உட்படுத்தும் இக்கட்டுரை நம் வாசிப்புக்கு அவசியமானது."

07-12-2008 அன்று மெரீனாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் இனப்படுகொலை கண்டனக் கவியரங்கில் கலந்து கொண்டு திரும்புகையில் நடைபாதை கடையொன்றில் லஷ்மி மணிவண்ணனின் "குழந்தைகளுக்கு சாத்தான், பெரியவர்களுக்கு கடவுள்" நூலைப் பொறுக்கினேன். இதில் முதல் கட்டுரை "பேச முடியாமல் போகிற பேச்சு" அதிகார மைய அரசியலால் பொதுமையாக்கப்படும் தீவிர எழுத்தாளர்களைக் கண்டிக்கிறது. அன்றைய கவியரங்க மனநிலையோடு ஒட்டி வாசிக்க வேண்டிய கட்டுரை இது. அன்று பெரும்பான்மையாய் ஒலிக்கப்பட்ட ஆதங்கம் பேச்சு சுதந்திரம், அதிகார மைய கண்காணிப்பு, கட்டுப்பாடு பற்றியது. லஷ்மி இந்த குரல் ஒடுக்கத்தை, குரல் இழப்பைப் பற்றிப் பேசுகிறார். கவியரங்க பங்கேற்பாளரில் ஒருசாராரின் நிலைப்பாட்டை புரிய இந்த கட்டுரை உதவும். உலகமயமாதல் சூழலில் தனி அடையாளம் பொது அடையாளத்துக்கு, பொதுமைப்படுத்தலுக்கு பலியாகிறது. பொதுவிருப்புகள், தேர்வுகள் வணிக லாபத்துக்கு அவசியம். சர்வதேச உற்பத்திப் பொருட்களின் நுகர்வோனாக மூன்றாம் உலக மனிதன் மாறுமுன் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் இனமேலாண்மை, அரசியல் பார்வையை பிரக்ஞையற்று வரித்துக் கொள்கிறான். இவை ஏற்கனவே பேசப்பட்டவை தான். லஷ்மி இதை மேக்ரோ அளவில் தமிழ்ச்சூழலுக்குப் பொருத்துகிறார். தமிழக அரசியல், ஆதிக்க, செல்வாக்கு சக்திகளோடு தீவிர எழுத்தாளர்கள் தங்களை இணைத்துக் கொள்வதன் பொதுமை அரசியலைப் பேசுகிறார். தி.மு.கவுக்கு மக்கள் ஆட்சியுரிமை வழங்கியதற்கு அக்கட்சி மத்தியில் கூட்டணியில் உள்ளதன் அனுகூலங்கள் ஒரு காரணம். இதன் ஒரு எதிர்மறை விளைவு தி.மு.க மத்திய அரசால் பொதுமைப்படுத்தப்பட்டு கா.மு.க ஆனது. இதன் அடுத்த கட்ட குறுவிளைவாக கவியரங்கில் "இலங்கை, ஈழம், பிரபாகரன்" போன்ற வார்த்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. "எங்கோ இருக்கும் பிடல் காஸ்டுரோ பற்றிப் பேசலாம், தமிழர் விடுதலைக்காய் போராடும் பிரபாகரன் பற்றிப் பேசத் தடையா" என சில கவிஞர்கள் பொருமியதன் பின்னணி இது தான். நான் கூட இந்த குரலொடுக்கத்தை உணர்ந்தேன். முதலில் கவியரங்கத்தில் ஆளுங்கட்சியின் பச்சோந்திப் போக்கை விமர்சிக்கும் "தேர்தல் வாக்குறுதிகள்" என்ற கவிதையை கலைஞரை மிமிக்ரி செய்து படிக்கும் திட்டம் வைத்திருந்தேன். எதிர்மறை விளைவுகள் பற்றி உள்நடுக்கம் இருந்தது. ஜாமீனில் எடுக்க முடியாது என்று மனைவி திட்டவட்டமாக அறிவித்திருந்தாள். கழக ரௌடிகள் தாக்கலாம். கையில் கத்தி எடுத்துப் போவது என்று முடிவு செய்தேன். இறுதியாய் நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் நரன் அரசுக்கு எதிரான நிலைப்புடைய கவிதைகள் வேண்டாம் என்று என்னிடம் தெரிவித்தார். ஆபத்தற்ற மற்றொரு கவிதையை படித்தேன். சுதந்திரமின்மையில் பாதுகாப்பு உள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பல அடுக்குகளில் பொதுமை அரசியலாக்கப்பட்டவர்கள். கனிமொழி கழகத்தின் நேரடி தோல்பாவை. தமிழச்சி தங்கபாண்டியன் நிலவில் நடப்பது போல் கால் பதியாமலே முக்கியமான வகையில் பங்கேற்றினார்; ஈடுபாட்டோடு உழைத்தார். கவியரங்க முடிவில் நடந்த நாடகத்தில் காளி வேடத்தில் இவர் நடிப்பதாய் இருந்தது. இறுதி கட்ட கழகக் குறுக்கீடால் அதைத் தவிர்த்து வேறொரு மிதிபடும் சிறு வேடத்தை எடுத்துக் கொண்டார். தமிழச்சி ஒரு நட்சத்திரம் கூட. என் நண்பர் குழு தமிழச்சி அழகுதானா என்று அலசியது. இன்னும் மணமாகவில்லை என்று எண்ணி சிலர் விசனித்தனர் (அவரது கணவர் துணை கமிஷ்னர் அன்று முழுக்க ஜீப்பில் காத்திருந்தார்). வீட்டுக்குப் போனதும் என் மனைவி கேட்டாள்: "தமிழச்சி நேரில் பார்க்க அழகாயிருந்தாரா?" புத்திசாலித்தனமாக "இல்லை" என்றேன்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இன்பா, லீனா, சுகிர்தராணி, நரன் ஆகியோர் அடுத்த அடுக்கு பொதுமையாக்கலை சேர்ந்தவர்கள். கவியரங்கின் பின் இவர்களின் கடுமையான உழைப்பு, பொருட்செலவு, அர்ப்பணிப்பு இருந்தன. நூற்று சொச்சம் எழுத்தாளர்களை ஒன்று சேர்த்து நிகழ்ச்சியை நடத்துவது எளிதல்ல. நிகழச்சியை நடத்த குறைந்த பட்ச குரலொடுக்கத்தை அனுமதிக்க இவர்கள் தயார். இவர்களின் சமரசம் இருதரப்பிலானது. கலகக்குரல்களும் ஓரளவு அனுமதிக்கப்பட்டன. உதாரணமாய் அரசு தரப்பின் கட்டுப்பாடுகளை முழுக்க பின்பற்றியிருந்தால் நிகழ்ச்சி துக்க விசாரிப்பு போல் அமைதியாய் நடந்திருக்கும். வாசிப்பதற்கான கவிதைகளை முன்கூட்டியே அனுப்பக் கேட்டிருந்தார்கள். இது தணிக்கைக்காக என்று புரிந்து கொண்டேன். மிகவும் முறைப்படுத்தப்பட்ட ஒரு கதர் குல்லா கவியரங்கயே எதிர்பார்த்தேன். ஆனால் முறைப்படுத்தப்படாமல் நான் நீ என்று பலர் கவிதை வாசிக்க பேர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் பாதி கொளுத்திய வாலோடு அனுமார் இலங்கையில் ஓடியது போல் இருந்தது நிகழ்ச்சி. அத்துமீறல்களும் கட்டுப்படுத்தலுமாக. சிலர் ராஜபக்சேவை ஒண்டிக்கு ஒண்டி அழைத்து மண்ணை வாரி இறைத்தனர். பல கவிதைகள் வன்புணர்ச்சி பற்றியவை. இலங்கை ராணுவம் தமிழ்ப்பெண்ணை வன்புணர்வதை படிப்படியாக வர்ணித்த ஒரு கவிஞர் ஜட்டியை மட்டும் மிக நாகரிகமாக "பெண்குறியை மூடிய ஆடை" என்று சுட்டினார். நிலைமை அத்துமீறிப்போக இன்பா உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மைக்கை கைப்பற்றி அடிக்கடி எச்சரித்தனர். ஒரு கவிஞர் பொருட்படுத்தாமல் பிரபாகரனுக்கு புகழ்மாலை சூட்ட புறப்பட, கோபமான இன்பா அருகில் போல் அவரை கலவரப்படும்படியாய் காதில் ஏதோ சொன்னார். தொடர்ந்து அவர் வாசிக்க பக்கத்திலே நின்று காகிதத்தையே உற்றுப் பார்த்தார். அந்த வீரமிக்க கலகக் கவிஞர் பதறி வியர்த்து வழிந்தார். கவிதையின் இறுதி பத்தியை மட்டும் படித்து விட்டு நழுவிக் கொண்டார். இன்பா மைக்கை பிடித்துச் சொன்னார்: " நாம் நியாயப்படி இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களுக்காக போராட வேண்டும். முடியாமல் தான் கவியரங்கம் நடத்தி நம் உணர்வுகளைக் காட்டுகிறோம். அரசாங்கத்தையோ, தனி நபர்களையோ வெளிப்படையாக கண்டித்து, ஆதரித்து கவிதை வாசித்தால் ஏற்படும் விளைவுகளை அந்த தனிப்பட்ட நபர்களே சந்திக்க வேண்டும், எங்கள் அமைப்பு பொறுப்பாகாது." இலங்கைக் கவிஞர் ஒருவரை மேடையேற்ற வேண்டாம் என நிகழ்ச்சி இடையே அரசுசார்பில் வற்புறுத்தல் வந்ததாய் கேள்விப்பட்டேன். இறுதியாய் வாசித்தவர்களில் இங்குலாபின் கவிதை மறைமுகமானது. அது தெரியாமல் அவர் அறம் பாடப்போகிறார் என்று பயந்த அமைப்பாளர்கள் வாசிக்க வருமுன் மைக்கிலேயே கொஞ்சம் மிரட்டலாய் வேண்டுகோள் விடுத்தனர். பழம்போல் வெள்ளை வேட்டி சட்டையில் தெரிந்த இங்குலாப் தாத்தா பதிலடியாக கவிதையின் பின்விளைவை தானே சந்திக்கத் தயார் என்று கர்ஜிக்க எனக்கு புல்லரித்தது. நான் அன்று உரக்க கைத்தட்டியது அவருக்கு மட்டும்தான். இந்த சங்கடத்தை தவிர்த்து அவர் மேடைக்கு வருமுன் தனிப்பட்ட முறையில் கட்டுப்பாடுகளை தெரிவித்திருக்க வேண்டும்.

இந்த "கலகங்களை", குழப்படிகளை காவல்துறை கவனித்துக் கொண்டுதான் இருந்தது, குறிக்கிடவில்லை. நன்றி. மேடை அருகில் நின்று ஒரு முள்தாடி குடிகாரர் கவிஞர்களை உற்றுப்பார்த்து பயமுறுத்திக் கொண்டிருந்தார். அவரை மட்டும் சிரமப்பட்டு இரண்டு முறை விரட்டினார்கள். ஆனால் உண்மையில் அங்கு கட்டுப்பாட்டு--மீறல் அரசியல் செய்யாதவர்கள் அவரும், சுடுமணலில் படுத்துக் கிடந்து நிகழ்ச்சிப் போக்கை கவனித்த வெள்ளை நாயும் மட்டுமே: தமிழ்ப்பரப்பின் விதூசகனும், பார்வையாளனும்.

பூடகமாக, மறைமுகமாக யாரை வையவும், கொல்லவும் நிகழ்ச்சியில் அனுமதி இருந்தது. மிகச்சிலர் மட்டுமே இந்த சைலன்சர் பொருத்திய துப்பாக்கியை எடுத்து அழுத்திப்பார்க்க முயன்றனர்: ரமேஷின் பூனைக் கவிதை போல். கவிதை வாசித்த தமிழக கலகக்காரர்கள் யாரும் தம் வாழ்நாளில் ஒரு குண்டு வெடிப்பை கூட கேட்டிராதவர்கள். போரின் கொடுமை, அவலம், இழப்பு பற்றி இவர்கள் கவிதையில் மிகச்செயற்கையான உணர்ச்சிகளையே வெளியிட்டனர். உதாரணமாய் ஒருவர் இலங்கைப் படைக்கு எதிராய் மிகக் கொந்தளிப்பான ஒரு கவிதையை வாசித்து விட்டு வாயெல்லாம் பல்லாக மேடையிலிருந்து வெளிவந்தார். அன்றைய கவிமேடை ஒரு அபத்த நாடக மேடையாக முடிந்தது. கவிதை வாசிப்பதற்கு பதில் சிலர் சிங்கள அரசுக்கு எதிராக ஆவேசமாய் கூச்சலிட்டது தங்கள் படைப்பூக்கம் மீதான நம்பிக்கை இழப்பாகவே புரிந்து கொள்ள முடியும்: சில தீவிர சினிமா ரசிகர்கள் விரல், நாக்கு, மூக்கு என நடிகர்களுக்கு தபாலில் அனுப்புவது போல். இலங்கைத் தமிழர்களிடம் இருந்து விலகி வாழும் நாம் இனப்படுகொலைகளை பற்றிய நம் அதிர்வுகளை, அவதானிப்புகளை, விமர்சனங்களை, நிலைப்பாடுகளை கவிதையின் நுட்பமான மொழியில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். போலியான அரற்றல்களையும், பலவீனமான அச்சுறுத்தல்களையும் எந்த அதிகார அமைப்பும் அஞ்சாது. குழந்தைகளின் காகித ஏவுகணைகளைப் போன்றவை அவை. இலங்கை அரசின் குண்டு தமிழக மண்ணில் விழுந்தால் மட்டுமே நாம் நேரடி போர்ப்பரணி எழுத முடியும். அதுவரையில் ஜாக்கிசானின் மொழிமாற்றப் படங்களுக்கு இணையாகத் தான் நம் கொந்தளிப்பு கவியரங்கங்கள் அமையும்.

இந்த முக்கியமான நிகழ்வு சாத்தியமானதில் திமுக அதிகார மையத்தை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவரும் கனிமொழியும் ஆளுங்கட்சி ஆதரவு கோஷங்கள் போடாமல் கண்ணியமாகவே கவிதை வாசித்தார்கள். நன்றி. நண்பனும், தலித்திய சிந்தனையாளனுமான சார்லஸ் "தமிழச்சி, கனிமொழியின் பங்கேற்பு நிகழ்ச்சிக்கு பாதகமே" என்றான். இவர்களின் இருப்பு அரசை காயப்படுத்தாமல் கழைக்கூத்தாடி போல் கயிற்றில் நடக்க அமைப்பாளர்களை நிர்பந்தித்தது என்பது அவனது வாதம். அரசியல் எதிர்ப்போ சாய்வோ வேண்டாம் என்பது அமைப்பாளர்களின் நிலைப்பாடாக இருக்கலாம். அவர்கள் முழுக்க சாயவில்லை என்பதே என் அவதானிப்பு. சார்லஸ் சொல்வதும் லஷ்மி சொல்வதும் ஒன்றுதான். பொதுமை அரசியல்வாதிகளிடம் இருந்து நம்மை அன்னியப்படுத்தினால் மட்டுமே நாம் பொருள்பட இயங்க முடியும். ஆனால் கண்காணிப்பு கட்டுப்பாடுகள் அற்ற அத்தகைய 'தனிப்பட்ட' கூட்டங்களுக்கு இத்தகைய மைய அதிகாரத்தின் குரலையே ஏறத்தாழ எதிரொலிக்கும் ஒரு பொதுமை கவியரங்கின் ஊடக, சமூக கவனம் கிடைக்காது. பொதுஅரங்கில் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களுடன், அதிகார மைய ஆதரவுடன் நடத்தப்படும் நிகழ்வுகளின் சமூக வீச்சு அவசியமாக உள்ளது. லீனா நிகழ்ச்சி முடிவில் குறிப்பிட்டது போல் இதுவொரு வரலாற்று நிகழ்வு. ரயில் மறிப்பு, பேரணி போன்று. ஒரு ரயிலை மறிப்பது சாதனை அன்று, அதனால் நேரடி லாபமும் இல்லை. அது ஒரு குறியீட்டு நிகழ்வு மட்டுமே.

வரலாற்று நிகழ்வுகளால் புதிய சிந்தனைகளோ, கலாச்சார நகர்வுகளோ சாத்தியமில்லை. அதற்கு மையமற்ற குறுங்குழுக்கள் நடத்தும் விவாதங்கள், படைப்பூக்க வெளிப்பாடுகள் வேண்டும். இணையம் இதற்கு சிறந்த தளம். அரசு அதிகார எல்லைக்கு அப்பாலே அவர்கள் செயல்பட முடியும். புயலடிக்கும் பொதுமேடையில் அல்ல, பொத்திய கரங்களுக்கு உள்ளே தான் இந்த "அக்கினிக் குஞ்சுகள்" வளர்ந்து காட்டுக்குள் பிரவேசிக்க முடியும். இத்தகைய உழைப்பு, ஈடுபாடு, செல்வாக்கு, பணம், நூற்றுக்கணக்கானோரின் பங்களிப்பு தேவைப்படும் இக்கவியரங்கம் போன்ற பொது நிகழ்வுகள் பொதுமைப்படுத்தலுக்கு எதிராய் சூழலைத் தயாரிக்க பெரிதும் பயன்படும். அந்த கண்ணோட்டத்தில் இரண்டு தரப்பினரும் அவசியம். தமிழச்சி, கனிமொழியும் வேண்டும், கலக தனிச்சிந்தனையாளர்கள், கவிஞர்களும் தேவையுள்ளார்கள். இருவரின் அலைகளும் ஒரே பரப்பில் தான் எழுகின்றன. கடவுளும் சாத்தானும் எப்போதும் இருட்டில் சேர்ந்தே நடமாடுகிறார்கள்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates