
மணிமேகலையில் வரும் காயசண்டிகையின் யானைப்பசியை எளிய சாபம் அல்லது குறியீடு என்றில்லாமல் அதற்கு அறிவியல் காரணங்கள் யோசித்துப் பார்த்தால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும். மூளைத்திசுக்களில் ஏற்பட்ட காயம் காரணமாக யானைப்பசி ஏற்பட்டிருக்கலாம். அல்லது மரபியல் ரீதியாக மிகு-உணவு உபாதையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் அவர் தோன்றியிருக்கலாம். இப்படி அடங்காத பசிப்பிணி கொண்ட காயசண்டிகையின் தோற்றம் எப்படி இருந்திருக்கும். அவர் உண்ட உணவை உடனே வாந்தி எடுத்திருப்பாரா? அல்லது உடல் பருத்து அதனால் மனச்சோர்வு உற்றிருப்பாரா? இப்படியான ஒரு உபாதை அன்றைய சமூகத்தில் இருந்திருக்கக் கூடும் என்ற ஊகமே சுவாரஸ்யமானது. இன்று நிச்சயம் இது வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் பெரும் சவால்களில் ஒன்று புலிமியா எனப்படும் இந்த மிகு-உணவு உபாதை. புலிமியா உபாதை கொண்டவர்கள் அளவற்று உண்டபின் அட்சயபாத்திரம் நாடாமல் விரலை தொண்டைக்குள் விட்டு வாந்தியெடுத்தோ அல்லது மருந்துகள் விழ்ங்கி உணவை செரிக்குமுன் வெளியேற்ற முயற்சிப்பர். வேறு சிலர் கடுமையாக உடற்பயிற்சி செய்வார்கள்; உண்ணாநோன்பு இருப்பர். தொடர்ந்து இவர்களிடம் உடல் பருமன் குறித்த குற்ற உணர்வு மற்றும் மெல்லிய உடலமைப்புக்கான அதீக அக்கறையும் இருக்கும். மேலதிகமாக உண்ணவும் ஒல்லியாக இருக்கவும் முரணாக விழைவதே புலிமியா.
அவ்வப்போது கட்டுப்பாடு இன்றி உண்டு சேகரமாகும் சிறிது கவலையை செரிக்க முயல்வது ஒரு நோய்க்கூறு அல்ல. தொடர்ச்சியாக இந்த முரண் பண்பு வெளிப்பட்டாலே நாம் கவலை கொள்ள வேண்டும். உடல்பருமன் மட்டுமல்ல புலிமியா கூட ஒரு குடும்ப உபாதையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தற்போது கூறுகின்றனர். பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு இந்த கோளாறு இருந்தால் உங்களுக்கும் தொற்றலாம். இதனால் பொலிமியாக்காரர்கள் மருத்துவரீதியாக இதைக் கட்டுப்படுத்துவது அவசியம். அல்லது ஒரு சங்கிலித்தொடர் போல் பரம்பரையே உணவு குறித்த குற்றவுணர்வில் அல்லாடும்.
எனக்கு கல்லூரியில் புஷ்டியாய் ஒரு நண்பன் இருந்தான். அவனது விருப்பங்கள் எனக்கு வினோதமாக பட்டன. பொதுவாக ஒரு குறை கொண்டவர்கள் மாறானவர்களை ஆதர்சமாக கொண்டிருப்பர். குள்ளமான ஆண்கள் உயரமான பெண்களை, கறுப்பானவர்கள், தமிழர் எனும் பட்சத்தில், சிகப்பானவர்களை விரும்புவர். ஆனால் என் நண்பன் குண்டானவர்கள் மீது பிரியம் வைத்திருந்தான். மோகன்லால், டெண்டுல்கர், குஷ்பு போன்றவர்கள் அவர் விருப்பப்பட்டியலில் இருந்ததற்கு திறமையோ அழகோ தவிர்த்த காரணமே இருந்தது. சமீபத்தில் இதைவிட விபரீதமான ஒரு சம்பவம் படித்தேன். எரிக் என்ற அமெரிக்கர் தன் மனைவியின் உடற்கேடு காரணமாய் பருமனான கதை இது.

எரிக்கின் மனைவிக்கு புலிமியா கோளாறு இருந்தது. உணவு மேஜையை நிறைத்தபடி அமரும் மனைவி சகட்டுமேனிக்கு உணவை வெட்டியபடி எரிக்கையும் அதிகமாய் உண்ண தூண்டுவார். தயங்கினால் கடுமையாக வற்புறுத்துவார். அதிகப்படியான உணவுக்கு பின்னும் தான் சிக்கென்று இருப்பதை காட்டி எரிக்கை ஊக்குவிக்க வேறு செய்வார். ஆனால் எரிக்குக்கு ஒன்று தெரியாது. வயிறு பெருக்க தின்ற பின் மனைவி கழிப்பறைக்கு சென்று அத்தனையையும் வாந்தி எடுத்து விடுவார். விளைவு: உணவாசை மிகுந்த மனைவி மெலிய, வயிறு சிறுத்த எரிக் பெருத்தார். மனைவிக்காக உண்டு உண்டு ஒரு கட்டத்தில் 20 கிலோவுக்கு மேலாக வீங்கினார். இந்த பிரச்சனை மேலும் மேலும் தீவிரமாக எரிக் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இது குறித்து விளக்கும் மருத்துவர் செர்பே எரிக்கின் மனைவிக்கு அவரை பழி வாங்கும் நோக்கம் ஏது இருந்திருக்காது என்கிறார். அவர் எரிக்கை தன் மறுபிம்பமாக கண்டிருந்தார். உண்டதை செரிக்காமல் வாந்தியெடுக்க வேண்டிய தன் நிலையை மனவியல் ரீதியாக ஈடு செய்யவே அவர் தன் கணவனை அதிகப்படியாக உண்ணும்படி ஊக்குவித்தார். அடுத்து செர்பே கூறும் விளக்கம் என் நண்பனுக்கும் பொருந்தும். எரிக்கின் மனைவி குண்டாகிடும் தன் கணவனுடன் தன்னை ஒப்பிட்டு திருப்தி கண்டார். அவர் தனக்கு நேர விரும்பாத உடல் பருமனை தன் கணவனுக்கு கடத்தி தற்காலிக நிம்மதி பெற்றார்.
புலிமியா நேர்வோசா ... ம்ம்ம்... CBT தான் ஒரே மருந்து.... ஆனா..!!!!
ReplyDeleteஇந்த கட்டுரையின் உள்குத்து என்ன.????