Tuesday 31 January 2012

ஒரு கத்தியின் அம்மணம்



ஒரு கத்தியை போல்
பூமிக்குள்
மறைத்துக் கொள்ள வேண்டும்
என் உடலை

ஒரு கத்தி யாரிடம் இருந்து தன்னை
பாதுகாக்கிறதோ
அவரையும் தான் தன்னிடம் இருந்து
பாதுகாக்கிறது
என்பதை அறியும்

ஒளிந்திருக்கும் கத்தி ஒரு போதும்
தூக்கம் அறியாது
ஆனாலும் அது
உடல்கள் நிறைந்த பிரபஞ்சத்தை பார்க்கையில்
முதன்முதலாய் புத்தாடையை அறியும்
குழந்தையை போல்
மெலிதாய் கூச்சம் அடைகிறது

கத்தி
ஒரு உடலுக்குள் நுழையும் போதே
தான் முழுநிர்வாணம் கொள்கிறோம்
என்பதை அறிந்திருக்கிறது
ஒளிந்திருக்கும் போது அது
அம்மணக் கடற்கரையில்
எதேச்சையாய் ஆடைகளுடன் நுழைந்தவனைப் போல்
அந்நியமாய் உணர்கிறது

வெளிப்பட்டு உடலுக்குள் நுழைவதற்கு இடையிலான
காலத்திலே
அது
மனிதனுக்கு
ஆடை என்பது
எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கிறது

தன்னைப் போல் ஒளிந்திருக்கும்
பல்லாயிரம் கத்திகளை
அது அறியும்
இறகுகள் புடைத்த வெள்ளை அன்னத்தை போல்
அவை அத்தனையும்
ஒருநாளில் வெளிப்பட துடிக்கின்றன
அவற்றை தடுப்பது
பறத்தலுக்கும் இருத்தலுக்கும் இடையிலான ஒருகண தயக்கம்

கத்தி தான் பயப்படுவது
தன் நிர்வாணத்தையா ஆடைகளையா
என்று அடிக்கடி யோசிக்கிறது
ஆடையை களைவதற்கும் களைந்ததற்கும் இடையில்
ஏதோ ஒன்று நிகழ்கிறது

காமமும்
சுயபரிசீலனையும்
நிர்பந்தமும்
அவநம்பிக்கையும்
சுயபிரேமையும்
ஒரு பிரேதத்தின் விரைப்பும்
அவமானப்படுத்தப்படும் பயன்படுத்தப்படும் கிழிக்கப்படும்
உடலின் கண்களில் மிளிரும் ஒளியும்
வெவ்வேறு அம்மணங்கள்

ஆனால் கத்தி பயப்படுவது
அத்தகைய விடுவிப்பையோ கைவிடுதலையோ அல்ல

ஒளிந்திருந்து பாயும் முன்
இப்பூமியின் அத்தனை கத்திகளும்
உறங்காதிருப்பது அதனால் தான்.

(புறநடை பத்திரிகையில் வெளியான கவிதை)
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates