Thursday 25 April 2013

வா.மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்


வா.மணிகண்டனுக்கு சுஜாதா விருது கிடைத்துள்ளது. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

அவர் சரளமாக சுவாரஸ்யமாக எழுதக் கூடியவர். சில வேளை இணையத்தில் அவர் வேண்டுமென்றே பரபரப்பான மேட்டரை எழுதுவார். சிலவேளை இலக்கில்லாமல் ஓட்டுவார். ஆனால் நம்மோடு நேரடியாக பேசும் தொனியில் சலிக்காமல் எழுதுவார். முக்கியமாக அவர் பொய் சொல்வதாக படாது.


வா.மணிகண்டன் ஒரு முடுக்கிவிடப்பட்ட எந்திரத்தை போன்றவர். பட்படென்று நிறைய எழுதி விடுவார். அந்த எனர்ஜி முக்கியம். எழுத சுணக்கமே இல்லை. இப்படியானவர்கள் தமிழில் அரிது. அதனால் தான் பத்திரிகைகள் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு. மேலும் நிறைய உழைத்து தகவல் சேர்த்து எழுதக் கூடியவர். கல்கியில் வந்த தொடரை குறிப்பிடலாம். உயிர்மையில் வேலை செய்த ஒரு மாதத்தில் நான் அவரை உயிரோசைக்கு எழுத வைக்க முயன்றேன். நான் ஒரு பத்திரிகை ஆசிரியன் என்றால் அவரை நிறைய பயன்படுத்திக் கொள்வேன். உந்தித் தள்ளி எழுத வைக்க வேண்டியதில்லை. அவராகவே எழுதிக் கொடுப்பார்.

வா.மணிகண்டன் கட்டுரையாளர் என்பதை விட மேலான கவிஞர் என்பேன். அவரது மரணவீடு குறித்த கவிதை ஒன்று நினைவில் உள்ளது. நல்ல கவிதை. ஒரு கவிஞராகவும் அவர் மீது எனக்கு எதிர்பார்ப்புகள் உண்டு.

நிசப்தம் இணையதளத்துக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்த எனக்கு மகிழ்ச்சி!
Read More

Wednesday 24 April 2013

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்





இன்று தான்
அந்த நாள்
பிறந்தநாள்

எழுந்து பார்க்கிறாய்
சுற்றும் முற்றும்
வெளியே
ஜன்னல்களில்
மனிதர்களை மிருகங்கள் பூச்சிகளை
நீங்காப் புன்னகையுடன்
உலகை மீண்டும் ஒருமுறை
உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் ஏற்புடன் பார்க்கிறாய்
கண் திறந்ததும் வாழ்த்தத் தவறிய
என்னைக் கண்டிக்கிறாய்
முகம் கோணி அழ உத்தேசிக்கிறாய்
பின் விழ அரும்பிய கண்ணீரை
நிறுத்தி விட்டு
சிரிக்கிறாய்
இன்று நீ ஏமாற்றத்தை மறுப்பை கசப்பை
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை
ஒருக்காலும் இல்லை


இன்று உன்னை வாழ்த்தியவர்களை
அழுத்தமாய் நினைவில் வைக்கிறாய்
அவர்கள் உன் நினைவில் கடந்து போனவர்கள்
உன் முகத்தை நிமிர்ந்து நோக்கும் அவகாசம் அற்றவர்கள்
எத்தனையோ பெயர்களில் ஒன்றாக உன்னைக் கருதி உரையாடுபவர்கள்
ம்ஹும் இன்று உனக்கு விரோதிகளோ நண்பர்களோ இல்லை
இந்த நாளில் உன்னைச் சுற்றி
வாழ்த்துகிறவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்

இந்த நாளுக்காக அவ்வளவு
தயாராக இருந்தாய்
இந்த நாள் உனக்காகவே அச்சடிக்கப்பட்டு
வெதுவெதுப்பாய்
உன் உள்ளங்கையில் காத்திருக்கிறது
இந்த நாள் முடியும் முன்
வாழ்த்தினவர்களுக்கு
அவசர அவசரமாய் நன்றி
சொல்லிக் கொண்டு வருகிறாய்
உன் செல்போன் ஓயவில்லை
குறுஞ்செய்தி பெட்டி வழிகிறது
முகநூல் பக்கம் ஒரு சரம் போல் நீண்டு செல்கிறது
இன்று நீ
களைக்கவே மாட்டாய்
இன்றைய நாள்
உனக்கும் வாழ்த்துகிறவர்களுக்கும் இடையிலானது
இன்றைய நாள்
மெல்ல மங்கி இருண்டு
கேக்கின் கடைசி துண்டை
நீ வாயில் மெல்லும் போது
வைனின் இறுதித் துளியை
நுனிநாவில் வழிய விடும் போது
நீ ஆசீர்வதிக்கப்பட்டவளாகவே எண்ணுகிறாய்

இதோ கடிகார முள்
நாளின் இறுதி விநாடியை கடக்கும் போது
முதன்முறை அக்களைப்பை உணர்கிறாய்
இந்த முப்பது வருடங்களாய்
உணர்ந்த களைப்பை உணர்கிறாய்
ஒரே ஒரு பிறந்தநாளில் கடந்து விடக் கூடிய அக்களைப்பை
ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வெறும் களைப்பு என
உன் கண்ணாடியிடம் கூறி விட்டு
அரைதூக்கத்தில் விழுகிறாய்
ஆனால் அதற்கு முன்
அத்தனை வாழ்த்து செய்திகளையும் நினைவுகளையும் எண்ணிப் பார்த்து
கோப்பில் இட்டு மூடுகிறாய்
பரிசுகளை பரணில் பத்திரப்படுத்துகிறாய்
கசங்கிப் போன புத்தாடையை
அழுக்குத்துணி குவியல் மீது வைக்கிறாய்
வியர்வை வீச்சத்துடன் பிசுபிசுப்புடன்
ஏப்பங்களுடன் கண்ணெரிச்சலுடன் -
களைப்பு முழுமையாய்
மூடிக் கொள்கிறது

கடைசியாக ஓர் அழைப்பு
தாமதமாய் வாழ்த்துவதற்கு மன்னிப்பு கேட்டபடி
ஒரு பரிச்சயக் குரல்
ஒரு முழுநாளின் அலுப்புக்கு பின்னரும் மிச்சமுள்ள
சின்ன அன்புடன்.
“நேற்று முடிந்து போயிற்றே” என்கிறாய்
சின்ன வருத்தத்துடன்.
“எங்கே இன்னும் ஒரு நிமிடம் ஒரு நொடி இருக்கிறதே
என் கடிகாரத்தில்” என அங்கிருந்து நினைவுறுத்தப்படுகிறது
சட்டென்று உற்சாகம் பற்றிக் கொள்ள
“நன்றி” கூறுகிறாய்
அப்போது
கண்ணில் திரண்ட
அத்துளிக்கு
அர்த்தமே
விளங்கவில்லை
உனக்கு.
எல்லா பிறந்தநாள் முடிகையிலும் அழுகிறேனே
என உன்னையே கடிந்து கொள்வதன்றி
வேறெதுவும் தோன்றவில்லை
உனக்கு.
Read More

Tuesday 23 April 2013

சதயம்: குற்றமும் தூக்குத்தண்டனையும்




எம்.டி வாசுதேவன் நாயர் ஒரு முக்கியமான நாவலாசிரியருடன் வெற்றி பெற்ற திரைக்கதையாளரும் கூட. மலையாளத்தின் பொற்கால நடுநிலைப் படங்களில் சிறந்த ஒன்றான “சதயம்” அவரது திரைக்கதையில் உருவானது. 92இல் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. மோகன் லாலின் நுட்பமான நடிப்பும் சிபி மலயிலின் கூர்மையான இயக்குமும் கூடுதல் பலங்கள். படம் தூக்குத்தண்டனையை பற்றியது.


சமீபத்தில் காங்கிரஸ் தேர்தல் முன்னோட்டமாக தொடர் தூக்குத்தண்டனைகளை நிறைவேற்றியதை ஒட்டி மரண தண்டனை குறித்த விவாதங்கள் மீண்டும் தூசு தட்டி எழுப்பப்பட்டன. அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட போது கூட அது தவறு தான் என நிலைப்பாடு எடுத்த அறிவுஜீவிகள் இங்கு உண்டு; அவர்கள் கடுமையான நெருக்கடியையும் சந்தித்தனர். தூக்குத்தண்டனை எப்போதும் உணர்ச்சிகரமான நிலைப்பாடுகளை நோக்கி தள்ளுவது. நம் இதயம் கொடும் குற்றவாளிகளையும் தேசத்துரோகிகளையும் கொல்லும் தீர்ப்பையே ஆதரிக்கும். மூளை அதை மறுக்கும். அப்படியான சூழலில் ஒரு கலைப்படைப்பு தான் மக்களுக்கு தூக்குதண்டனையின் பல்வேறு சிக்கல்களை புரிய வைக்க முடியும். விநோதமாக அப்படி ஒரு படம் 92இல் தான் வந்தது: “சதயம்”. பிறகு தமிழிலோ இந்தியிலோ சமீபத்தில் வரவில்லை. கமலின் “விருமாண்டி”, வசந்தபாலனின் “அரவான்” போன்ற படங்கள் தூக்குத்தண்டனையின் அறம் பற்றின கேள்விகளை எழுப்பவில்லை. அவை ஒரு செண்டிமெண்டுக்காக மட்டுமே இந்த பிரச்சனையை எடுத்துக் கொண்டது. நமக்கு “சதயத்தை” போன்ற ஒரு படம் இப்போது தேவைப்படுகிறது.


“சதயம்” இதைப் பற்றியது என்று குறிப்பாக கூறுவது ஒரு அநியாயம் தான். அது பல்வேறு விசயங்களை துருத்தாமல் பேசுகிறது. படத்தின் நோக்கங்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று அது குற்றவாளியின் மனநிலையை அலசுகிறது. ஒருவன் ஏன் கொலைக் குற்றம் செய்ய தூண்டப்படுகிறான்? இந்த கேள்வியை எம்.டி அநாயசமாக கையாண்டிருக்கிறார். அடுத்த நோக்கம் தூக்குத்தண்டனைக்கு உள்ளாகும் அக்குற்றவாளி அனுபவிக்கும் மனவதை, அவனது தடுமாற்றங்கள், மனச்சிதைவு, இறுதியான மனமாற்றம் ஆகியவற்றை சித்தரிப்பது. இதனிடையே மலையாள சினிமாவின் வழக்கமான வளவளவென்ற கதைகூறும் பிரயத்தனம் உள்ளது. அது ஒரு பலவீனம். இந்த இரண்டாம் பகுதியில் சிறை வாழ்வில் தூக்குக்காக காத்திருப்பவனின் மனநிலையை சித்தரிக்கும் அற்புதமான காட்சிகள் வருகின்றன.

மோகன் லாலின் பாத்திரமான சத்யன் சிறுவனாக அறிமுகமாகும் காட்சி முக்கியமானது. அவன் தனியாக கடற்கரையில் மணற்சிற்பம் செய்து கொண்டிருக்கிறான். ஒரு பாதிரியார் அங்கு புகைப்படம் எடுக்க வருகிறார். அவர் மணற்சிற்பத்தால் கவரப்பட்டு புகைப்படம் எடுக்க முயல் அதற்குள் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் சில சிறுவர்கள் சிற்பத்தை உடைத்து விடுகிறார்கள். சத்யன் கோபத்தில் அவர்களில் ஒருவனைப் பிடித்து ஒரு மரக்கட்டையால் அடிக்கிறான். பாதிரியார் அவனைத் தடுக்கிறார். ஏன் இவ்வளவு வன்மத்தோடு இருக்கிறாய் என வினவுகிறார். அவனது அம்மா ஒரு விபச்சாரி. அப்பா இல்லை. தன்னை எல்லோரும் அவமானப்படுத்துவதாய் புகார் கூறுகிறான். அந்த சிற்பம் அவனது கனவுலகம். அவன் அங்கு சென்று தப்பித்துக் கொள்கிறான். ஆனால் உலகம் அவன் கனவை அடிக்கடி கலைக்கிறது. அவனை மேலும் மேலும் அற்பமாக உணர வைக்கிறது. அவனுக்கு எல்லோரையும் கொல்லும் வெறி ஏற்படுகிறது. இப்படித் தான் சத்யனின் பாத்திரம் நிறுவப்படுகிறது.

குற்றம் செய்பவர்கள் உலகின் மீது கொள்ளும் வெறுப்பு தம்மீதுள்ள வெறுப்பின் பிரதிபலிப்பு தான். தம்மிடம் இருந்து தப்பித்து புது அடையாளத்தை, லட்சியத்தை, விழுமியங்களை கட்டமைக்க பார்க்கிறார்கள். அதை உலகம் அனுமதிக்காத போது எதிரிகளை அழிப்பதன் மூலம் தன் இடத்தை புதிதாக உருவாக்க முனைகிறார்கள். கொலை என்பது முத்தம், அரவணைப்பு போல ஒரு உறவாடல் தான். எதிர்மறையானது, மறுப்பை அடிப்படையாக கொண்டது என்பது தான் வேறுபாடு. சத்யனுக்கு தன்னுடைய அவமானகரமான வாழ்வு பிடிக்கவில்லை. பாதிரியாரின் பாதிப்பில் இதை பாவம் என அடையாளப்படுத்துகிறான். அவனுடைய வாழ்வின் லட்சியமே தன் விபச்சார அம்மாவை மறக்க வேண்டும், தன் வாழ்வில் இருந்து அவமானங்களை துடைக்க வேண்டும் என்பது. இதில் சிக்கல், எல்லா பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேர்வது போல, அவனுக்கு தன் கடந்த காலத்தை திருத்தி எழுத ஆசை தோன்றுவது. கடந்தகாலம் என்று ஒன்று இல்லை. அது நம் நினைவில் நிழலாட்டம் மட்டும் தான்.
அவனுக்கு இதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவன் வீட்டுப் பக்கத்தில் ஜெயா என்று ஒரு பெண் தனது இரு பதின் வயது சகோதரிகளுடன் வசிக்கிறாள். அவளுக்கு அம்மா இல்லை. சித்தியுடன் வசிக்கிறாள். விபச்சாரியான சித்தி அவளையும் அவ்வழிக்கு இழுக்கிறாள். ஜெயாவுக்கு அந்த இழிவில் இருந்து தப்பிக்க சத்யன் உதவத் துவங்குகிறான். அவனுக்கு இது தன் இளமையை மீளுருவாக்க ஒரு அரிய வாய்ப்பு. ஜெயாவின் சிறு சகோதரிகளை மீண்டும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புகிறான். அவளுக்கு மாடலாக தன் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறான். அவளை துன்புறுத்தும் ஒரு மாமாவை அடித்து துரத்துகிறான். எல்லாம் நன்றாக போவது போல் இருக்கிறது. சத்யனுக்கு ஜெயாவை மணக்கும் கனவும் ஏற்படுகிறது. அப்போது சத்யனின் முதலாளி அவளை கெடுத்து விடுகிறாள். அவள் கர்ப்பமாக ரெண்டாயிரம் ரூபாயை வீசி அவளை விபச்சாரி போல் நடத்தி காயப்படுத்துகிறான். தொடர்ந்து அவள் வேலையை இழந்து சமூகத்தின் மீதான கோபத்திலும் அவநம்பிக்கையிலும் பணத்துக்காகவும் விபச்சாரியாகிறாள்.
தன் கண்முன்னே தன் லட்சியம் பாழாவது கண்டு சத்யன் வெகுண்டெழாமல் இயல்பாக ஆவேசப்படாமல் அமைதியாக கவனிக்கிறான். அவன் தன் மனசமநிலையை இழந்து விட்டான். என்னதான் முயன்றாலும் உலகம் மீண்டும் மீண்டும் படுகுழியை நோக்கி ஒருவனை தள்ளுகிறது என நம்புகிறான். இதற்கு மேல் மீட்பு இல்லை. அவன் வன்முறை மூலம் உலகை தோற்கடிக்க முனைகிறான். ஜெயாவின் தங்கையான 12 வயதுப் பெண்ணை அந்த மாமா விற்பதற்கு துரத்தி வருகிறான். சத்யன் அவளைக் காப்பாற்றி தன் ஓவியம் தீட்டும் கத்தியால் அவளைக் கொல்லுகிறான். ஒரு படுக்கையில் தூங்குவது போல் படுக்க வைத்து போர்வையால் மூடி வைக்கிறான். பிறகு அவளது சின்ன தங்கையையும் கொன்று பக்கத்தில் படுக்க வைக்கிறான். பிறகு அவன் “இனி மேல் உங்களை யாரும் பாவ வாழ்க்கையை நோக்கி தள்ள முடியாது. நான் அதை அனுமதிக்க முடியாது” என எக்காளத்துடன் சொல்கிறான். மனம் பிறழ்ந்து அந்த சில நிமிடங்களில் அவன் வன்முறையில் குதூகலம் அடைவதை மோகன் லால் அற்புதமாக சித்தரித்திருப்பார். அடுத்து அவன் தன் முதலாளியையும் அவனது நண்பனையும் கொல்லுகிறான்.

அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் அவன் அதை மறுப்பதில்லை. குற்றமன்னிப்பு கேட்பதில்லை. கழிவிரக்கத்துக்கு பதில் இறுமாப்பு அடைகிறான். அச்சத்துக்கு பதில் தன்னம்பிக்கை மிக்கவனாகிறான். மறுப்புவாதத்தின் இன்னொரு முனையில் போய் நிற்கும் ஒருவன் இப்படித் தான் யோசிப்பான். அவன் தன்னை பிறர் கண்டிக்க கண்டிக்க அதிகமாய் நியாயப்படுத்திக் கொண்டே போகிறான். அடுத்தவர் தன்னை நிராகரிக்கிறார் என்பதே அவனது நியாயம். அதன் மீது தான் தன் தன்னம்பிக்கையை கட்டமைக்கிறான். ஆனால் படத்தின் பிற்பாதியில் கதை மாறுகிறது. அவனுக்கு ஒவ்வொருவராய் கருணை காட்டுகிறார்கள். கருணையின் பிரகாசம் தாங்காமல் அவன் பலவீனமாகி மனம் நொறுங்குகிறான். இது அவனது மனம் மாற்ற கட்டம். படத்தின் தலைப்பே இதைப் பற்றியது தான்: “கருணையுடன்”
எம்.டியிடம் தஸ்தாவஸ்கியின் பாதிப்பு அதிகம். சத்யனின் பாத்திரம் ரஸ்கால்நிக்கோவை நினைவுபடுத்துகிறது. அவனும் ஒரு கொலைமூலம் சமூக நியாயம் அடைய முயல்கிறவன் தான். அவனும் கருணை முன்பு மண்டி இடுகிறான். குற்றத்தை ஒப்புக் கொண்டு சத்யனைப் போல் பாவ மன்னிப்பு கோருகிறான். படத்தில் கணிசமான இருத்தலிய பாதிப்பும் உள்ளது. இருத்தலியம் ஒரு மீட்பற்ற குரூரமான உலகை சித்தரிக்கிறது. அங்கு ஒரு மூர்க்கமான சக்தி மனிதனை அர்த்தமற்று தண்டிக்கிறது. எளிமையாக சொல்வதானால், இருத்தலியத்தில் உலகம் ஒரு சிறை; அங்கு மனிதன் ஒரு தப்பிக்க முடியாத கைதி. இந்த படத்தில் சீரழிவில் இருந்து தப்பிக்க மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வி அடைகிறது. சத்யன் ஜெயா மூலம் மீட்பு அடைய முயல்கிறான். ஜெயாவும் தன் விபச்சார/சேரி வாழ்வில் இருந்து விடுதலை பெற போராடுகிறாள். ஆனாலும் மேற்தட்டை சென்றடையும் போதும் அங்கும் அவளை ஒரு விபச்சாரியாகவே பார்த்து அப்படியே மாற்றி விடுகிறார்கள். அங்கு அவள் ஆங்கிலம் கற்று நவீன ஆடையணிந்து ஆங்கிலம் பேசும் அதிக பணத்துக்கு விலை போகிறவள் ஆகிறாள். மனிதனுக்கு சமூகத்தின் எந்த தளத்துக்கு சென்றாலும் சூழல் மாறாமல் அப்படியே இருக்கிறது. ஒரு பெரும் எந்திரத்தின் சக்கரம் போல் அவன் சுதந்திரம் அற்று இருக்கிறான்.
படத்தில் வரும் ஜெயிலர் ஒரு சுவாரஸ்யமான பாத்திரம். அவர் தூக்கில் இடுவது ஒரு கடமை மட்டுமே என தட்டையாக ஒரு அறப்பிரச்சனையை பார்ப்பவர். ஒவ்வொரு முறையும் யாராவது சத்யனுக்கு பரிந்து பேசும் போது அவர் “தூக்கு என்று முடிவான பின் உணர்ச்சிவசப்படாமல் அதை நிறைவேற்றுவது நம் கடமை” என்பார். அதே போல் சத்யனின் கருணை மனுக்கள் தள்ளுபடியாகி அவனது தண்டனை விபரங்கள் உறுதியாகின ஆணைகள் வரும் போது அவர் அவற்றை கோப்பில் இட்டு கட்டி வைக்கும் காட்சி இடையிடையே வரும். ஒவ்வொரு முறை கோப்பு கட்டப்படும் போதும் சத்யன் மரணத்தை மேலும் நெருங்குகிறான். கோப்பு இந்த சட்ட அமைப்பின் எந்திரத்தனத்தின் உருவகம் தான். அதே போன்றே ஜெயிலர் தூக்குமேடையின் தொழில்நுட்பத்தை வியந்து பாராட்டும் காட்சியும். அந்த ஜெயிலர் காம்யுவிடம் நாம் பார்ப்பது போன்ற ஒரு கராறான இருத்தலிய பாத்திரம்.

படத்தில் கர்த்தருக்கும் மேரி மக்தலினாவுக்குமான உறவு நுட்பமாய் நினைவுபடுத்துப்படுகிறது. கர்ப்பமான ஜெயாவை தலைமுடியை பற்றி இழுத்து வந்து அவளது சித்தி சத்யனின் வீட்டு வாசலில் தள்ளி “சமுக சீர்கேடுகளை திருத்துகிறேன் என்று திரிந்தாயே, உன்னால் அவள் இந்த நிலைக்கு வந்திருக்கிறாள், பதில் கூறு” எனக் கூறும் காட்சி ஒரு உதாரணம். படத்தின் பிற்பகுதியில் ஜெயாவின் தோற்றமும் மேரி மெக்தலீனாவை நினைவுறுத்துகிறது.

சத்யன் தீமையில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக குழந்தைகளை கொன்றதாக கூறுகிறான். நம்மூரில் கூட பெற்றோர்கள் தற்கொலை செய்வதற்கு முன் தம் குழந்தைகளையும் கொன்று விடுவதை பார்க்கிறோம். சத்யனின் தவறு அவன் நியாயவானின் பாத்திரத்தை எடுக்கிறான் என்பது. காந்தியைப் போன்று சீர்திருத்தவாதிகள் பலருக்கும் நேரும் சறுக்கல் இது. இந்த உலகில் திருந்த மட்டும் அல்ல, கெட்டு சீரழியவும் மனிதனுக்கு உரிமை உண்டு. அதில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை. அக்குழந்தைகள் எதிர்காலத்தில் எந்த கதவையும் திறக்கலாம். விபச்சாரியாகலாம், வேறுவிதமாகவும் ஆகலாம். அதை முடிவு செய்யும் நியாயவாதியின் ஆணவம் தான் சத்தியனை அவர்களை கொல்ல தூண்டுகிறது. காந்தி இப்படித் தான் தன் ஆசிரமத்தில் காதலித்த பாவத்துக்காக ஒரு பெண்ணை மொட்டையடிக்க வைத்தார். கழிவறை அலம்ப மறுத்ததற்கு மனைவியை அடித்தார். ஆனால் அடுத்தவர் வாழ்வை கையாள்வது நம் வேலை அல்ல.

படத்தில் அழகான நுட்பமான காட்சிகள் பல இருக்கின்றன. தூக்குக் கயிற்றை சோதிக்க மூட்டையை கட்டி விழ வைக்கும் போது எழும் சத்தத்தில் சிறை அறையில் இருக்கும் சத்யன் திடுக்கிடும் காட்சி அதில் ஒன்று. அதைப் போன்றே அவன் தூக்கிலடப்படும் முன்பு அமைதியாக நள்ளிரவில் குளிப்பது, அவனுடைய பெயரைக் கேட்டு உறுதிப் படுத்தி, மச்சம் போன்ற அடையாளங்களை சரி பார்க்கும் சடங்குகளை அதிகாரிகள் மேற்கொள்ளும் காட்சிகளும் மறக்க முடியாதவை. இது மோகன் லாலின் ஆகச்சிறந்த நடிப்பு அல்லாவிட்டாலும் அவரது சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று. குறிப்பாக உடல் மொழியை சொல்ல வேண்டும். படத்தின் முதல் பாதியில் அவர் மிகுந்த பணிவும் கூச்சமும் கொண்டவர். கொலைக்கு பின் தன்னை நியாயவாதியாக நினைத்துக் கொண்டபின் ஒரு அபார தன்னம்பிக்கை அவனுக்கு வருகிறது. அப்போது ஒரு இறுமாப்பு கொண்ட உடல்மொழியை நுட்பமாக காட்டுகிறார்.

உப பாத்திரங்கள், சிறுபாத்திரங்கள் ஆகியவற்றின் அமைப்பும் நடிப்பும் படத்தின் பிற சிறப்புகள். சின்ன சின்ன கூர்மையான வசனங்களையும் குறிப்பிட வேண்டும்.

தூக்குத்தண்டனைக்கு ஆளாகும் கைதி அதற்கு முன்பே மனதளவில் பல தடவைகள் செத்து விடுகிறான். மரணத்துக்கான காத்திருப்பு அவனுக்கு எவ்வளவு கொடூரமானது என படம் வலுவாக சித்தரிக்கிறது. பிற மொழிகளில் மீண்டும் வர வேண்டிய படம். பேரறிவாளன் போன்றவர்கள் தூக்கிலடப்படும் முன் அது இங்கு வர வேண்டும்.
Read More

மண்ணைப் போல இருப்பது



“பூமியில்
பூக்கட்டி
பீடி சுற்றி
சுண்டல் வடை விற்று
சுக்குக்காப்பி விற்று
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்”
- விக்கிரமாதித்யன்


மண்மாதிரி இருப்பது என விக்கிரமாதித்யன் சுரணைகெட்டத்தனத்தை குறிக்கிறார். எனக்கு இன்னொன்று தோன்றுகிறது.

மோகன்லாலின் வெற்றியை பற்றி குறிப்பிடும் போது இயக்குநர் பிரியதர்ஷன் அவருக்கு ஒரு அப்பாவித்தனமான முகம் வாய்த்தது அனுகூலம் என்கிறார். அந்த முகத்தை கொண்டு சீரியஸாக நடித்தாலும் நகைச்சுவை பண்ணினாலும் மக்களுக்கு ஈர்ப்பாக இருக்கிறது. தமிழில் இது ரஜினிக்கும் பொருந்தும். அவர் பண்ணுகிற அதே ஸ்டைலை கமல் செய்தால் நமக்கு அது அலட்டலாக தோன்றி எரிச்சல் தருகிறது. எல்லாத்துக்கும் முகம் தான் காரணம்.

அன்றாட வாழ்விலும் இது போல் அப்பாவி முகம் கிடைத்தால் நல்லது. என்ன தான் கிரிமினல் வேலை பண்ணினாலும் ஜனம் சீக்கிரம் நம்பி விடும். எவ்வளவு தான் புத்திசாலியாய் இருந்தாலும் அது சட்டென்று வெளியே தோன்றினால் உடன் இருப்பவர்கள் நம்மை வெறுப்பார்கள். புத்திசாலித்தனத்தை மறைக்க கற்க வேண்டும். அதற்கென்று முகத்தை மாற்ற முடியாதல்லவா!

சராசரிகள் புத்திசாலிகளை பார்த்து அஞ்சுகிறார்கள். எதிரிகளை கூட விட்டு விடுவார்கள். ஆனால் உங்களை தேடி தேடி அழிப்பார்கள். அதனால் சராசரிகளால்  காரியம் ஆக வேண்டிய போது மண்ணைப் போல் இரு! அதற்குள் விதை, புதையல், கண்ணி வெடி என்னவேண்டுனாலும் இருக்கலாம். ஆனால் மேலாக மண்ணைப் போல் இரு.
Read More

Monday 22 April 2013

எனக்கு கல்யாணம் - உனக்கு சாவு


எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். பெயரளவில் தான். ஒரு முறை நான் ஆஸ்பத்திரியில் சாகக் கிடக்கும் போது போன் பண்ணினான். நான் மயக்கத்தில் இருந்தேன். என் மனைவியிடம் பேசினான்.


மனைவி: “ஹலோ யாருங்க? அபிலாஷ் கோமாவில இருக்காரு. பேச முடியாது”
நண்பன்: “எனக்கு 22தேதி கல்யாணம் நடக்கப் போவுது. அவனை அழைக்கலாமுன்னு தான் கூப்பிட்டேன்”
மனைவி: “அவரு ரொம்ப சீரியஸா ஆஸ்பத்திரியில இருக்காருங்க.”
நண்பன்: “ஆமா அதுக்குத் தான் கூப்பிட்டேன். எனக்கு கல்யாணம் 22ஆம் தேதி. சொல்லாமுன்னு கூப்பிட்டேன்”
மனைவி: “இல்லை அவருக்கு...”
நண்பன்: “எனக்கு கல்யாணம்...எனக்கு கல்யாணம்...எனக்கு கல்யாணம்”

நான் நலமான பிறகு இதை தெரிந்து கொண்டேன். ஒருவேளை போன் லைனில் ஏதாவது தகராறு இருந்திருக்கலாம். அதனால் தான் அவன் புரியாமல் சொன்னதையே சொல்லி இருப்பான் என நினைத்துக் கொண்டேன். ஆனால் கொஞ்ச நேரத்தில் அதே நண்பன் அழைத்தான்.

“டேய்  உன்னை எவ்வளவு நாளா புடிக்க டிரை பண்றேண்டா. இன்னும் ஒரு வாரத்துல எனக்கு கல்யாணம் டா”

“நான் இப்போ தான் உயிருக்கு போராடி பொழைச்சு வந்திருக்கேன். ரெஸ்டில இருக்கேன்”

“அதாண்டா. உனக்கு போன் பண்ணினா நீ பேச மாட்டேங்குற. உன்  மனைவி தான் பேசுறா. எனக்கு கல்யாணம்னு உங்கிட்ட சொல்ல ஆசையா வந்தேன்”

“டேய் நான் அப்போ கோமாவில இருந்தேன். எப்பிடி பேச முடியும்?”

“ஆங்...? சரி உனக்கு போன் பண்ணினா நீ எடுக்க மாட்டேங்குற. ஆளை பிடிக்க முடியல. ரொம்ப பெரிய ஆளாயிட்ட இப்போ. சரி எனக்கு கல்யாணம். அதுக்காவது இப்போ வந்து தொலை”
அதுக்கு மேல் முடியாமல் கட் செய்து விட்டேன்.

இந்த அளவுக்கு இல்லையென்றாலும் கிட்டத்தட்ட இதோ போன்ற பலருடன் தினமும் உரையாடி வருகிறேன். “என்னடா மச்சான் எப்படி இருக்க?” அல்லது “வணக்கம் எப்பிடி இருக்கீங்க?” என்று வாஞ்சையாக கூட கேட்பார்கள்/நலம் விசாரிப்பார்கள். நீங்கள் உங்கள் நிலைமையை விவரித்தால் அதை கேட்காமல் தம்மைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அதெப்படி நான் பேசும் போது மட்டும் உங்களுக்கு காது கேட்காம போகுதுடா?
Read More

Thursday 18 April 2013

நீயா நானாவில் சிவகாமி


பெண் உயரதிகாரிகள் பற்றின நீயா நானாவில் சிவகாமி அருமையாக பேசினார். அவர் சொன்னதில் என்னைக் கவர்ந்தவை:


1. பெண்கள் இரட்டை வாழ்க்கை வேண்டி இருக்கிறது. வீட்டில் அடிமை. வேலையிடத்தில் உயரதிகாரி. ஆண்களுக்கு நேர்மாறாக நடக்கிறது. விளைவாக முரண்பாடுகள் தோன்றுகின்றன

2. பெண்கள் ஒரு வேலையை நேரத்துக்கு செய்து முடிப்பதில் மிகையான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கீழ்நிலை பணியாளர்கள் செய்யாவிட்டால் திட்டி டென்ஷன் பார்ட்டி என பெயர் வாங்குகிறார்கள்

3. அவர்கள் விமர்சனத்தை தாங்கும் பக்குவம் இல்லாமல் இருக்கிறார்கள். உம்மென்றால் அழுது விடுகிறார்கள். இந்த பயம் தான் அவர்களிடம் கோபத்தை உண்டு பண்ணுகிறது.


4. அதிகாரத்துக்கு அனுசரணையாக இருக்க தலைப்படுகிறார்கள். இதுவும் உயரதிகாரியாக அவர்கள் காட்டும் இறுக்கத்துக்கு காரணம்.


5. இந்தியர்கள் இயல்பில் படிநிலை உணர்வு மிக்கவர்கள். அவர்களால் ஒரு குழுவில் கூட்டாக வேலை செய்வது கடினம். உயரதிகாரியை பெயர் சொல்லி அழைப்பது, அவர் முன் அமர்வது எல்லாம் தவறு என இன்றும் நம்புகிறார்கள்.

பெண்கள் இளவயதில் இருந்தே இப்படி படிநிலைக்கு பழக்கப்படுத்தப்படுவதால் அவர்கள் அலுவலகத்தில் சகஜமாக பழக சிரமப்படுகிகிறார்கள்.
 

 5. இதையெல்லாம் மாற்ற முதலில் நிறுவனங்கள் தொழிலாளர் நலனில் ஆர்வம் காட்டி லாபமே முழுமுதல் நோக்கு எனும் நிலையை மாற்ற வேண்டும்.
 

சிவகாமிக்கு வாழ்த்துக்கள்! எனக்கு அவர் மீதிருந்த மரியாதை பன்மடங்காகி விட்டது. மேலும் பல பெண்கள் அவரை ஒரு முன்மாதிரியாக கொண்டு உணர்ச்சிவசப்படாமல் தர்க்கரீதியாக அறிவார்த்தமாக யோசிக்க துவங்க வேண்டும்.
Read More

புத்தக விமர்சனக் கூட்டங்கள்: வேடிக்கை விரோதங்கள்





என்னுடையநண்பர் ஒருவரை சுமார் பத்துவருடங்களுக்கு முன் ஒரு சினிமா நடிகரின் சார்பில் அவரது உதவியாளர் எழுதின கவிதைத் தொகுப்பு வெளியீட்டு கூப்பிட்டு பேசக் கேட்டார். நண்பர் அப்போது தீப்பிழம்பு போல் இருப்பாராம். அவர் சொன்னார்: “நான் பேசுகிறேன். ஆனால் புத்தகம் பற்றின என் உண்மைக் கருத்துக்களை தான் சொல்லுவேன்”.
அரைமணி கழித்து உதவியாளர் போனில் மீண்டும் அழைத்து “நீங்க கூட்டத்துக்கு வாங்க, ஆனால் பேச வேணாமுன்னு சார் சொல்றாரு” என்றாராம் பணிவாக. இப்போதெல்லாம் நண்பர் தணிந்து விட்டார். பொதுவாக என்னை விமர்சனக் கூட்டங்களுக்கு அழைக்கும் போது இந்த சம்பவம் நினைவு வரும்.
பிடித்த புத்தகங்களைப் பற்றி பேசுவது ஒரு கொடை. ஒரு அற்புத வாய்ப்பு. ஆனால் அது அரிது. 

பொதுவாக புத்தகக் கூட்டங்கள் கல்யாண வரவேற்பு போல. பையன் வீடு பெண் வீடு என பல பக்கங்களில் இருந்து வருவார்கள். எழுத்தாளனின் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், கூட்டங்களில் கலந்து கொண்டு இலக்கிய அப்டேட் செய்வதற்காக, பொழுது போக்க, என்னவென்றே தெரியாமல் வந்து அமர்வது என பல ரகங்களில் வருவார்கள். 
இடங்களைப் பொறுத்து எல்லா கூட்டங்களுக்கு ஒரு எண்ணிக்கையில் கூட்டம் வரும். 

மாலையானால் பூங்கா, கடற்கரை, டீக்கடை என கூடுவது போல் மக்கள் நிகழ்ச்சி அரங்கங்களுக்கும் கூடுவார்கள். பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கெடுக்க மக்களுக்கு நிச்சயம் ஆர்வமுண்டு. சென்னையில் அதற்கான இடம் குறைவு. இருந்தால் நூற்றுக்கணக்கான மக்களை தினமும் கூட திரட்டி பேச்சு, விவாதம் கொஞ்சம் இசை, நகைச்சுவை என வெற்றிகரமாக நடத்த முடியும். மேலும் கிராமங்களில் வாழ்ந்த காலத்தில் இருந்தே வேலை முடித்த பின் வில்லுப்பாட்டு, அரசியல் பேச்சு என கூடிய மரபு நமக்குண்டல்லவா. இந்த இடத்தை பின்னர் பட்டிமன்றம் ஆக்கிரமித்தது. இப்போது இலக்கிய கூட்டங்கள். தமிழர்களுக்கு பேச்சை கேட்பதிலும் பேசுவதிலும் உள்ள தாகம் அளப்பரியது. ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்து கூடி கைத்தட்டும் மக்கள் எங்கிருந்து வருகிறார்கள் என விளக்கவே இவ்வளவும் சொன்னேன். 

ஒரு பெரிய பேச்சாள எழுத்தாளருக்கு வரும் ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், சின்ன எழுத்தாள பேச்சாளர்களுக்கு வரும் நூற்றுக்கணக்கானோரையும் வைத்து நாம் இங்கு இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டு விட்டதாய் மயங்கி விடக் கூடாது.

சரி, அடுத்து வேறு விசயத்துக்கு வருவோம். விமர்சன அல்லது நூல் அறிமுகக் கூட்டங்களில் பேசுபவர்கள் இரண்டு அணுகுமுறைகள் வைத்திருப்பார்கள். மூத்த எழுத்தாளர் என்றால் கண்ணை மூடி புகழ்ந்து தள்ளி விடுவார்கள். அந்த மூத்த எழுத்தாளரை விட பேச்சாளர் மூத்தவர் என்றால் ஒன்றிரண்டு அறிவுரைகள் சொல்லலாம். இளம் எழுத்தாளர் என்றால் ஏகத்துக்கு அறிவுரையாய் பொழிந்து விடுவார்கள். “சின்னப் பையன் என்னவோ பண்ணி வச்சிருக்கான், பாருங்க” என்கிற ரேஞ்சில் தைரியமாக விமர்சிப்பார்கள். இது கூட நல்லது தான். நேர்மையான கருத்துக்கள் வந்து விழும்.

நடுவயது எழுத்தாளன் என்றால் பேச வந்திருப்பவர்கள் அவனுடன் அதே காலகட்டத்தில் எழுத வந்த அதே வெளுத்த ஆடையும் பிய்ந்த செருப்பும் அணிந்த ஆசாமிகளாக இருப்பார்கள். அவர்கள் “இவனை புகழக் கூடாது. அதுக்காக திட்டவும் வேணாம். ஏதாவது மையமாக பேசுவோம்” என நினைத்து பேசுவார்கள். பெரும்பாலும் “எழுத்தாளர்” என்றில்லாமல் “என் நண்பர்” என்று அழைத்து பேச ஆரம்பித்தால் “உன்னை எல்லாம் எழுத்தாளனாக அங்கீகரிக்க நாங்க தயார் இல்லை” என பொருள். அதனால் கடந்த கால நினைவுகள், கசப்புகள், வருத்தங்கள், சுயதம்பட்டம் என அரைமணிக்கு குறைவாக பேசுவார்கள். பேச்சை முடிக்கும் போது “இந்த புத்தகத்தில் எனக்கு சில இடங்கள் பிடித்திருக்கின்றன” என கண்ணாடியை பொருத்திக் கொண்டு புத்தகத்தை திறந்து தேடத் துவங்குவார்கள். சம்மந்தப்பட்ட எழுத்தாளன் அப்போது தான் ஆர்வமாகி நிமிர்ந்து உட்கார்ந்து கவனிப்பான். ஆனால் தேடின பக்கம் கிடைக்காது. பொத்தாம் பொதுவாக வாழ்த்தி அமர்வார்கள். மொத்தம் பத்தே நொடிகள் தான் புத்தகம் பற்றி பேசி இருப்பார்கள். அதற்கே “ரொம்ப புகழ்ந்துட்டோமோ” என மனசுக்குள் குமுறுவார்கள். 

இன்னும் ஒரு வகை நடுவயது அறிவுஜீவி பேச்சாளர்கள். இவர்கள் கோட்பாடு, தாம் படித்த பிற நூல்களைப் பற்றி அரைமணி ஜல்லியடித்து விட்டு “சார்த்தர், காம்யு இடத்தில் இந்த எழுத்தாளரையும் நாம் வைக்கலாம்” என சொல்லி சம்மந்தப்பட்ட எழுத்தாளரை நெளிய வைப்பார்கள். இந்த மாதிரி மிகையாக புகழ்வதும் பாராட்டாமல் இருப்பதற்கான ஒரு தந்திரம் தான். யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

உண்மையிலேயே நமக்கு உவப்பில்லாத ஒரு நூலைப் பற்றி எப்படி பேசுவது? ஒன்று நேர்மையாக மனதில் பட்டதை காயப்படுத்தாமல் சொல்லி விடலாம். யாரும் உங்களை கடித்து விடப் போவதில்லை. இறுதியில் பேசினால் நல்லது. முதலில் பேசினால் அடுத்து வருபவர் உங்களுக்கு பதில் கூறும் சாக்கில் நிறைய freehit சிக்ஸர்கள் அடித்து கைத்தட்டு வாங்குவார். நடுவில் பேசும் போது முன்னே வந்தவர்கள் பேசி உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட பாங்கை, தொனியை நீங்கள் முறித்து பேசும் சிக்கல் வரும்.

இன்று ஆங்கில நூல் விமர்சனக் கூட்டங்களில் உள்ள விவாத முறை இன்னும் மேலானது. நான்கு பேர் சுற்றி உட்கார்ந்து புத்தகம் பற்றி ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தம் விவாதத்தை ஆரம்பிக்கலாம். உதாரணமாக, “எனக்கு இந்த நாவல் சரளமாக எழுதப்பட்டது போல உள்ளது. ரெண்டே நாளில் படித்து விட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என ஒருவர் ஆரம்பித்து இன்னொரு பேச்சாளரிடம் மைக்கை கொடுக்கலாம். பின்னர் பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்க சொல்லலாம். யாராவது ஒருவர் புத்திசாலித்தனமாக ஒருங்கிணைத்தால் இந்த மாடல் வெற்றி பெறும்.

தமிழில் புத்தக கூட்டங்களில் உள்ள மேடைப்பேச்சு பாணியை யாராவது மாற்ற வேண்டும்.
Read More

இலங்கை எதிர்ப்பு மக்கள் போராட்டம்: முடிவில் இருந்து துவங்குவோம்



(மூன்று வாரங்களுக்கு முன் எழுதினது)



இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டம் அதன் கீழ்ஸ்தாயை அடைந்து விக்கி விக்கி நிற்கிறது. அவர்களுக்கு எப்படி முடிப்பது எனத் தெரியவில்லை. தமிழகத்தில் விடுதலைப்புலி இயக்கத்தை துவங்குவது போன்ற இன்னும் பல புரட்சிகர முடிவுகளை எடுத்து போராட்டத்தை முன்னெடுக்க பார்க்கிறார்கள். சரியான கொள்கை பின்னணி இல்லாத இப்போராட்டம் அனுமார் வால் பற்றிக் கொண்டது போல இப்படித் தான் முடியும் என பலரும் எதிர்பார்த்தோம். இப்போது நாம் இந்த போராட்டத்தை எப்படி அணுகுவது, இதன் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் ரொம்ப காலத்துக்குப் பிறகு மீண்டும் மக்கள் பங்களிப்புடன் ஒரு போராட்ட இயக்கம் உண்டானது என்பது உற்சாகத்துக்குரியது. போராட்டங்கள் மக்களுக்கு அரசியல் பிரக்ஞை ஏற்படுத்தும். அரசியல் ஈடுபாடு ஏற்படுத்தும். இந்தி எதிர்ப்பு போராட்டங்களினால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறை இன்றும் ஒரு குறைந்தபட்ச அரசியல் அறிவுடன் உள்ளதை பார்க்கிறோம். முழுக்க முழுக்க அரசியல் சுரணையற்ற ஒரு மத்திய வர்க்கத்தின் மத்தியில் சின்ன அளவிலான இன உணர்வு, தமிழ்ப்பெயரிடுவது, பெரியாரியம், சாதி, மத எதிர்ப்பு என அவர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் (என்ன மனதளவில் நாற்பது வருடத்துக்கு முன்பு தான் நிற்கிறார்கள்). எதிர்ப்பு இயக்கங்களின் கொடையாகத் தான் இந்த அரசியல் உணர்வை பார்க்க வேண்டும்.
லட்சியபூர்வமாக அரசியலும் பொதுவாழ்வும் அன்றாட வாழ்வின் பகுதியாக இருக்க வேண்டும். கேரளாவில் போல. அங்கு வலுவான தொழிற்சங்கங்களும் இடதுசாரிகளின் வெற்றியும் கல்வியறிவும் இன்னபிற நானறியாத சமாச்சாரங்களும் மக்களுக்குள் தனிநபர் வழிபாடற்ற, சினிமா மோகமற்ற அரசியல் உணர்வை உருவாக்கி இருக்கிறது. திருவனந்தபுரம் கலக்டிரேட்டின் முன் யாராவது தினமும் போராட்டம் பண்ணுவதை பார்க்க முடியும். சமூக வளர்ச்சி, பொதுமக்கள் உரிமை சார்ந்த ஒரு அரசியலுக்கு அங்கு மதிப்புள்ளது. இங்குள்ள பற்பல அரசியல் தில்லுமுல்லுகளும், பிரிவினைகளும் அங்குண்டு என்றாலும் அங்கு ஒரு தலைவரின் முகத்துக்காக சினிமா பிம்பத்துக்காக ஓட்டுப்போடும் வழக்கம் இல்லை. இதன் விளைவாக குடும்ப அரசியலும் ஜாதி பிரதிநுத்துவமும் ஓட்டை தீர்மானிக்கும் காரணியாக உருவாகவில்லை. மக்கள் உணர்வுகளை முன்னெடுக்கும் ஒரு நிர்பந்தம் அங்கு அரசியல்வாதிகளுக்கு உண்டு. இத்தாலிய கடற்படையினர் இரு மீனவர்களை கொன்ற சம்பவம் நல்ல உதாரணம்.
தமிழகத்தில் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர். இங்கே ஒரு சின்ன அசைவு கூட பொதுமக்கள் தரப்பிலோ மீடியாவிலோ இல்லை. ஆனால் கேரளாவில் இரு கொலைகளுக்காக தேசிய ஊடகங்களையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். கொலைகாரர்களை கைது செய்து விசாரணைக்கு உற்படுத்தினார்கள். அவர்கள் ஏமாற்றி ஊரில் போய் இருந்து இந்தியாவுக்கு வரமறுத்த போது அன்று மாலையே உம்மன் சாண்டி தில்லிக்கு விமானம் மூலம் கிளம்பிப் போய் பிரதமருக்கு நெருக்கடி கொடுத்தார். உடனே பிரதமர், மந்திரிகள் தரப்பில் இருந்து இத்தாலியை கண்டித்து அறிக்கைகள் பறந்தன. நாம் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை அறிக்கையில் சேர்க்க ஒரு மாதத்துக்கு மேலாக போராடினோம். மத்தியில் கண்டு கொண்டார்களா? தேசிய மீடியா மாநில இனவெறி என போராட்டங்களை கேலி பேசியது. ஏன் இந்த இரட்டை நிலை?
ஒன்று கேரளாவில் தேசிய கட்சிகளின் வளர்ச்சி அம்மாநில மக்களுக்கு தேசிய அளவிலான அதிகாரத்தை கொடுக்கிறது. ஆனால் அது மட்டுமல்ல காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் ஆந்திராவில் தெலுங்கானா போராட்டங்கள் அல்லோலப்பட்டதை பார்த்தோம். ஆக தேசிய கட்சிகளின் ஓட்டுத்தேவை மட்டுமல்ல மக்களுக்கு மாநில தலைவர்கள் மீதுள்ள கட்டுப்பாடும் முக்கியம். ஆம், தமிழகத்தில் தலைவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஆனால் அசல் மக்களாட்சியில் இது நேர்மாறாக நடக்க வேண்டும். கலைஞரையும் ஜெயலலிதாவையும் போல தலைவர்கள் கொள்கை உறுதிப்பாடு இல்லாமல் சந்தர்ப்பவாத முடிவுகள் எடுத்தால் மக்கள் ஏமாறும் நிலை இருக்கக் கூடாது. ஒவ்வொரு தேர்தலிலும் நாம் செய்யும் தவறு கழகங்களுக்கு மாற்றி மாற்றி ஆட்சியை அளிப்பது தான். இதற்கு காரணம் கழக பக்தி. மீடியாவில், சினிமாவில், அரசு அதிகாரிகள், பொதும்மக்களிடத்தில் கழகங்கள் மீது பக்தி இன்றும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. பத்திரிகைகள் திமுக அதிகமுக என பிரிந்து கிடக்கின்றன. சாதி அரசியல் மட்டும் தான் கடந்த பத்து வருடங்களில் இதில் வந்துள்ள ஒரே மாறுதல். சாதிக் கட்சிகளும் பணம் வாங்கிக் கொண்டு கழகங்களின் நிழலில் இளைப்பாறி மக்களை ஏமாற்றின. இந்த தலைவர் வழிபாட்டினால் தான் தமிழக மக்களுக்கு என்று ஒன்றுபட்ட ஒரு அரசியல் நோக்கம் இல்லாமல் போயிற்று. அரசியல் என்றாலே கலைஞர் vs ஜெயா என்றானது தான் தமிழக வரலாற்றின் மிகப்பெரிய துயரம்.
விளைவாக எந்த மக்கள் பிரச்சனை வரும் போது நம் அரசியல்தலைவர்கள் ஒருங்கிணைந்து போராட மறுக்கிறார்கள். கர்நாடக நதிநீர் பங்கீடு பிரச்சனை வந்த போது அங்கு பா.ஜ.கவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியதை பார்த்தோம். ஆனால் தமிழகத்தில் கழகங்கள் இதனால் எதிர்த்தரப்புக்கு எந்த நலனும் கிடைத்துவிடக் கூடாதே எனத் தான் யோசித்தன.
கேரள, கன்னட மக்களும் நம்மைப் போல திராவிட இனம் தான். ஆனால் அவர்கள் இன உணர்வு அரசியலில் தம்மை இழந்து விடவில்லை. அதனால் தான் அங்கு வலுவான அரசியல் பிரக்ஞை செயல்படுகிறது. உண்மையில் நாம் இன்று பார்ப்பது தமிழ் தேசியத்தின் தோல்வி தான்.
தமிழ் தேசியம் நம்மை மக்களின் பொதுவான அன்றாட பிரச்சனைகளுக்காக அன்றி, பண்பாட்டு அடையாளங்களுக்காக போராட தூண்டுகிறது. ஆனால் பண்பாடு நம்மை துப்பாக்கி ரவைகளிடம் இருந்து காப்பாற்றாது, சோறு போடாது, வளர்ச்சித் திட்டங்கள் அமைக்காது. இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றும் சமீபத்திய இலங்கை எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு நல்ல உதாரணம். ஒரு போராட்டம் என்ற அளவில் உள்ளதைத் தவிர இவற்றுக்கு வேறு பிரயோஜனமில்லை. ஒரு பண்பாட்டு சின்னத்தைக் கொண்டு மக்களை இணைக்க உதவும் இவை. ஆனால் இணைத்த மக்களை வைத்து அடுத்த போராட்டங்களை நடத்த திராணி இருக்காது. ஏனென்றால் பொது நலனை அடிப்படையாக கொண்ட கொள்கைத் திட்டங்கள் தமிழ் தேசியத்துக்கு இல்லை. உதாரணமாக கடந்த பத்து இருபது வருடங்களில் தமிழ்தேசியவாதிகள் விலைவாசி உயர்வு, இலவச கல்வி, ஊழல், விவசாய நில ஆக்கிரமிப்பு, நில மாபியா, கொத்தடிமை கொடுமை போன்ற ஏதாவது ஒரு விசயத்துகாக போராடி பார்த்திருக்கிறீர்களா?
தமிழ் தேசியத்தின் இன்னொரு சிக்கல் அது நம்முடைய உள்ளார்ந்த வேறுபாடுகளை மூடி மறைக்கும் ஒரு பாசாங்கு அமைப்பு என்பது. தமிழர்கள் நூறு நூறு சாதி வேறுபாடுகளுக்குள் பிரிந்து கிடைகிறார்கள். தமிழ் என்கிற உணர்ச்சிகர அடையாளம் அவர்களை மேம்போக்காக இணைக்கிறது. ஆனால் அதற்கான காலாவதி முடிந்ததும் அவர்கள் மறுபடி கலைந்து போவார்கள். இப்போதைய மாணவர் போராட்டத்தை லைம் ஜூஸ் குடித்து முடித்து வைக்காமல் மற்றொரு போராட்டம் மூலம் புதுப்பிக்கலாமே என்று நண்பர் ஒருவரிடம் கேட்டேன். உதாரணமாய், மீனவர் கொலைகளை எடுக்கலாமே? “அது முடியாது. மீனவர் என்றால் தனிசாதி. அவர்களுக்காக பிற சாதி மாணவர்கள் ஒன்று திரள மாட்டார்கள்” என்றார். இது இப்படி இருக்க தர்மபுரி கலவரத்துகாக போராடுவதை எல்லாம் யோசிக்கவே முடியாது. சரி “இலவச படிப்பை கோரி அவர்கள் புதிதாய் போராடலாமே?” என்றேன். ”அதுவும் முடியாது. மத்திய, மேல் வர்க்க மாணவர்கள் இலவச கல்விக்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்” என்றார். அது மட்டுமல்ல இலவச கல்விக்கான போராட்டம் என்றால் புதிய தலைமுறை போன்ற சானல்களில் அது பற்றி மூச்சே விட மாட்டார்கள். கணிசமான கல்லூரிகளை அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் நடத்துவதால், அவர்களின் விளம்பரங்கள் முக்கியம் என்பதால் மீடியா ஆதரவும் கிடைக்காது, காவல் துறையும் கடுமையாய் ஒடுக்கும். ஆனால் அடிப்படை பிரச்சனை மாணவரிடமே ஒற்றுமை இருக்காது என்பது என்றார்.
இந்த பிரச்சனைகளை கடந்து போக மாணவர்களுக்கு ஒரு கருத்தியல் பிடிமானம் இருக்க வேண்டும். நல்ல அரசியல் தெளிவு உள்ள தலைவர் வேண்டும். போராட்டத்தை மக்கள் பிரச்சனைகள் நோக்கி திருப்ப வேண்டும். வெறும் உணர்ச்சிகள் நம்மை இந்தி ஒழிக என்றும் இலங்கை ஒழிக என்றும் மட்டுமே கத்த வைக்கும். முதலில் நம் உலைகளில் தீ எரிகிறதா என்று பார்க்க வேண்டும். உணர்வுத் தீ அல்ல வயிற்றில் எரியும் தீ தான் முக்கியம். தமிழகம் போலி உணர்வுகளை மறந்து நடைமுறை அரசியலுக்கு வர வேண்டும். ஒரு துவக்கத்துக்கு, மீனவர் படுகொலைகளை கண்டித்து உண்ணா விரதம் இருப்போம். அடுத்து ஒவ்வொரு மக்கள் பிரச்சனையாக கையில் எடுப்போம்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates