Wednesday 28 August 2013

கைமாறும் நூல்கள்




திருவல்லிக்கேணி சாலையோர கடைகளில் தான் நான் பல நல்ல நூல்களை வாங்கி உள்ளேன். புத்தகக் கடைகளில் போலல்லாது பல தரப்பட்ட புதிய பழைய நூல்கள் வரும். இவ்வளவு விலைவாசி ஏறினாலும் அதே விலை தான். ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதன் நிலை, கனம், அட்டை பார்த்து ஒரு விலை மனதுக்குள் போடுவேன். இதற்கும் தரத்துக்கும் சம்மந்தமில்லை. பின் கடைக்காரரிடம் விலை கேட்பேன். அவர் எப்போதும் ஒரு ஐம்பது நூறு கூட்டி கேட்பார். ஆனால் பேரம் நிச்சயம் என் கணக்கில் படிந்து விடும். நேற்று உம்பர்த்தோ ஈக்கோவின் How to Travel with Salmon என்கிற பத்தி தொகுப்பு வாங்கினேன். 2008இல் லஷ்மி என்பவர் வாங்கி பெயரெழுதி இருக்கிறார். 


ஈக்கோவை வாங்கும் அளவுக்கு அவர் வாசிப்பு முதிர்ச்சியோ குறைந்தது உலக இலக்கிய பரிச்சயமோ கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இலக்கிய வெறியராக இருந்திருக்க வேண்டும். பொதுவாக இப்படியான உலக மகா எழுத்தாளனின் நூல்களை கைவிட மனம் வராது. ஆனாலும் அவர் எப்படி இந்த நூலை தூக்கி விலைக்கு போட்டிருக்க முடியும் என யோசித்தேன். அதுவும் பழைய நூல் வியாபாரிகள் கிலோ கணக்கில் தான் விலை நிர்ணயிப்பார்கள். இந்த நூலுக்கு ஐந்து ரூபாய் கிடைத்திருக்குமா? ஆனால் அசல் விலை 800. நான் வாங்கினது ஐம்பது. ஒருவேளை அவரது வீட்டில் யாராவது தூக்கி போட்டிருக்கலாம். ஏதாவது ஒரு காகித குவியலில் விழுந்து கிடந்து தெரியாமல் செய்தித் தாள் விலைக்கு போடும் போது கொடுத்திருக்கலாம். அல்லது அவர் வீடு மாறி போகும் போது வேறு வழியில்லாமல் தன் அரிய நூல்களை விற்க வேண்டி வந்திருக்கலாம். இன்னொரு சாத்தியம் யாராவது நண்பர் வாசிக்க வாங்கி திரும்ப கொடுத்தாமல் கைமறதியாய் வைத்து பின்னர் அவரே தெரியாமல் விலைக்கு போட்டிருக்கலாம்.
அப்போது இன்னொன்றும் தோன்றியது. ஏன் இவ்வளவு நல்ல விலைமதிப்பான நூல்களை கிலோ கணக்குக்கு கொடுக்க வேண்டும்? நம் புத்தகக் கடைகளிலே பழைய நல்ல நூல்களை வாங்கி தனியாய் ஒரு பிரிவில் விற்பனைக்கு வைக்கலாம். நாம் படிக்கிற அத்தனை நல்ல நூல்களும் திரும்ப திரும்ப படிக்க வேண்டியவை அல்ல. ஒரு தடவைக்கு மேல் திறக்கப்படாமல் பல புத்தகங்கள் வருடக்கணக்கில் ஏதாவது அட்டைப்பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும். அவற்றை பாதி விலைக்கு விற்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதை புதிதாய் புத்தகக்கடை திறந்திருக்கிற வாசுதேவனிடம் சொன்னேன். அவர் இது போல் பழைய நூல்களை வாங்கி புது நூல்களை கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தலாம் என்றார்.
ஐநூறு ரூபாய்க்கு மேல் கொடுத்து நீங்கள் வாங்கின சில ஆயிரம்பக்க நாவல்கள் இருக்கும். அவை உங்களுக்கு வாசிக்க ஆரம்பித்து பிடிக்காமல் போயிருக்கலாம். என்னிடம் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை”, பா.வெங்கடேசனின் “தாண்டவராயன் கதை” போன்ற வாதை புகுந்த நாவல்கள் பல இருக்கின்றன. அவற்றை படிக்க முயன்ற போதெல்லாம் ஒரு கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாகும் உணர்வு ஏற்பட்டு மூடி வைத்து விடுவேன். ஆனால் தூக்கி போடவும் மனம் வராது. பார்க்கும் போதெல்லாம் ஐநூறு ரூபாய் வீணாகி விட்டதே என கடுப்பாக இருக்கும்.
அவற்றை எல்லாம் வாங்கி ஒரே வாரத்தில் திரும்ப கொடுத்து வேறு ஒரு நானூறு ரூபாய் புத்தகமாக வாங்கிச் செல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏனென்றால் நமக்கு கழுத்து வலி ஏற்படுத்தும் தலையணை நூல்கள் வேறு சிலருக்கு மயிலிறகாய் தோன்றலாம். மனுஷ்யபுத்திரன் இத்தகைய வாசகர்களை புற்றுக்குள் கைவிட்டு பாம்பு பிடிப்பவர்கள் என்பார். இவர்கள் எத்தகைய சுயவதை நூல்களையும் பதறாமல் பல் படாமல் படித்து விடுவார்கள். இந்த நூல்கள் அவர்களிடமே போகட்டுமே! நாம் புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு மகுடியை கொடுத்து விடுவோம். அது தானே சரியான ஜனநாயகம்.
Read More

Monday 26 August 2013

மீண்டும் ஒரு பசு அரசியல்




புறப்பாடு” கட்டுரையில் நாம் ஏன் பசும் பால் குடிக்கக் கூடாதுன்னா பசு குப்பை மற்றும் மலம் சாப்பிடுகிறது என்கிறார் ஜெயமோகன். அவருக்கு மிருகங்களை பற்றி போதுமான புரிதல் இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. பொதுவாக நாய் கூட மலம் சாப்பிடும். அதற்கு பசி என்று அர்த்தம் இல்லை. மிருகங்களுக்கு மூத்திரம் மலம் எல்லாம் அசிங்கம் அல்ல


 மூத்திரம் மூலமாக தான் காதல் தூதே விடும். என் வீட்டு நாய் பூனை மூத்திரத்தை தினமும் நக்கும். அதன் பொருளே வேறு. அது என்னுடைய மலத்தை கூட வாய்ப்பு கிடைத்தால் விரும்பி சாப்பிடும். அதற்கு பசி ஒன்றும் இல்லை. ஆனால் மலத்தில் அப்படி ஒரு ருசி போல.

இது மிருகங்கள் வழக்கமாக செய்கிற ஒன்று தான். பெரும்பாலும் மலத்தில் உள்ள சத்துக்களை அடையவே சாப்பிடுகின்றன. இதை cacrophagia என்கிறார்கள். காண்டாமிருக, யானைக் குட்டிகள் பிறந்ததும் தாயின் மலத்தை உண்ணும். அதன் மூலம் தான் தம் குடலுக்கு ஜீரணுத்துக்கான நுண்ணுயிர்களை பெறும். இது போல் டயரியாவுக்கு பிறகு மனிதர்களுக்கு மலத்தை குழாய் வழி செலுத்தி நல்ல பேக்டீரியாக்களை அனுப்பும் ஒரு மருத்துவ முறை உள்ளது. ஒரு காலத்தில் மருத்துவர்கள் மலத்தை தொட்டு நக்கி தான் நோயை அறிவார்களாம். இப்படி மலம் மீதான அருவருப்பு கலாச்சாரரீதியானது தான். மிருகங்களுக்கு அதெல்லாம் இல்லை.
மலைவாழ் இனத்தை சேர்ந்த பழங்குடி மாணவர்கள் விடுதியில் பாலே பயன்படுத்துவது இல்லை; ஏனென்றால் அம்மக்களுக்கு எருமை தெய்வம். சரி, அப்படி என்றால் எருமைப்பால் தானே குடிக்கக் கூடாது. பசும்பாலுக்கு என்ன சிக்கல்? இப்படி ஒரு வைதிக மனோபாவத்துக்கு கீழ்த்தட்டு வக்காலத்து வாங்க முயன்று சொதப்பவும் செய்கிறார்.
குப்பை அழுகின உணவு மலம் சாப்பிடும் பசு என்பதால் ஜெமோ ஒரு கட்டத்தில் பால் சாப்பிடுவதை நிறுத்துகிறாராம். சரி, இதே லாஜிக்படி வயலில் சாணி உரம் போடுகிறார்கள். சிலர் மனித மலத்தை வைத்து பயிரிட்டு மிக அதிகமாக விளைச்சல் கிடைக்கும் என தமிழ்நாட்டில் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார்கள். இப்படி விளைச்சலான காய்கறி, தானியங்களை இவர் சாப்பிட மாட்டாரா? என்ன சாப்பிட்டாலும் உள்ளே போய் பாலாக தானே வெளிவருகிறது.
மாட்டின் பால் மட்டும் அல்ல பொதுவாக நான் பயன்படுத்தும் எல்லா பொருட்கள் பின்னாலும் ஒரு வதையும் ஒடுக்குமுறையும் மறைமுகமாக இருக்கத் தான் செய்கிறது. அதனால் அவற்றை பயன்படுத்தாமல் இருக்கிறோமா? உங்கள் பிள்ளை படிக்கிற பள்ளிக்கூடத்தில் வாத்தியாருக்கு சம்பளம் மிக குறைவென்று பள்ளியில் இருந்து நீக்கி விடுவீர்களா? எல்லா பிரச்சனைகளையும் ஒன்றாக்கி பார்த்தால் வாழ முடியாது.

இந்தபுறப்பாடுதொடர் ஏன் சிலருக்கு பிடித்திருக்கிறது என புரிகிறது. வர வர ஜெயமோகன் மசாலா பட திரைக்கதை பாணியில் தான் கட்டுரை கூட எழுதுகிறார். இப்பதிவில் பசு கடைசியில் தற்கொலை கூட பண்ணுகிறது. இந்த பசுவை ஹீரோயினாக்கி ஒரு பாதிரியாரை அதன் மீட்பராக்கி ஒரு படம் கூட எடுக்கலாம். பசு தன் செத்துப் போன பாப்பாவை பத்தி பாட்டு கூட பாடலாம். எவ்வளவோ பண்ணலாம். தமிழ் சினிமா இதையும் தாங்கும்.
Read More

Sunday 25 August 2013

ராஞ்சனா: காதலின் “களைப்பு”



ராஞ்சனா மிக உணர்ச்சிகரமான நாடகியமான தனுஷ் மற்றும் ரஹ்மானின் சில அற்புதமான தருணங்களை உள்ளடக்கிய படம். ஆனால் இது மட்டுமே அல்ல அது வெற்றி பெற்றுள்ளதற்கு காரணம். சொல்லப் போனால் படத்தின் பல திரைக்கதை கோளாறுகள், லாஜிக் நெருடல்கள், தேய்வழக்குகள், மீள்கூறல்கள் காரணமாய் நெஞ்சில் தங்குகிற படைப்பூக்கமுள்ள காட்சி என ஒன்றும் இல்லை என கூறலாம். ஒட்டுமொத்தமாய் ஒரு மனத்திறப்புக்கு இட்டு செல்ல எண்ணிலா காட்சிகளில் ஒன்றாகவோ ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளது. தனியாய் எதற்கும் முக்கியத்துவம் இல்லை. தனியாய் பார்க்கையில் காட்சிகள் இதுவரை பார்த்த எத்தனையோ தமிழ் இந்திப்படங்களின் பிரதியாகவோ தோன்றும். படமும் துவங்கியதில் இருந்து பழகிய மாட்டு வண்டியை போல் பரிச்சயமுள்ள தடத்தில் பிசகாமல் நடந்து வீடு போய் சேர்ந்து விடுகிறது. ஆனாலும் இப்படம் நம்மை நெகிழ வைக்கிறது. ஏதோ ஒரு புள்ளியில் ஈர்க்கிறது. இந்தியா முழுக்க அதைப் பார்த்த சாதாரண ஜனத்திரளின் அகத்தின் ஒரு உணர்கொம்பை அது மிகச்சரியாக சென்று தொட்டுள்ளது. ராஞ்சனா நமக்கு ஏன் பிடிக்கிறது?


பொதுவான ஒருதலைக் காதல்களில் காதலனின் விடா முயற்சிகளை கல்லிதயம் கொண்ட நாயகி இறுதியில் உணர்ந்து ஏற்பாள். ராஞ்சனாவிலும் கிட்டத்தட்ட இது தான் நடக்கிறது. ஒரே வேறுபாடு நாயகி காதலனை கொல்லுகிறாள் என்பது. இது ஒரு முக்கியமான கதை மாற்றம். அவள் ஏன் கொல்லுகிறாள் என்பதில் இந்திய பெண்களின் உளவியலும் இருக்கிறது, இந்தியாவில் பொதுவாக உறவுகள் இடையே உள்ள பரஸ்பர அழிவு விருப்பமும் இருக்கிறது.
முதலில் பெண்களைப் பற்றி பார்ப்போம். இந்திய பெண்கள் இங்குள்ள பொருளாதார பண்பாட்டு அமைப்பு காரணமாக பாதுகாப்பின்மை மனப்பான்மையுடன் மிக சிறு வயதில் இருந்தே வளர்கிறார்கள். தம்மை பாதுகாக்க வேண்டும் என்கிற அளவுகோலின் அடிப்படையில் இருந்தே உறவுகளில் இருந்து வேலை, குடும்பம், வெளி உலக தொடர்புகள் என அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இந்த பாதுகாப்பின்மை முடிவெடுப்பதில் உள்ள எளிய தயக்கங்கள், சிக்கல் வருகையில் அதிகாரத்திடம் சரணடைதல், குடும்பத்தை பாதுகாப்பதற்காக வெளிநபர் யாரையும் பலி கொடுக்க தயாராவது, தம் வட்டத்துக்கு வெளியே என்ன கொடுமை நடந்தாலும் அதை பார்க்கவோ கவனிக்கவோ விடாப்பிடியாக மறுத்தல் என ஆரம்பித்து பெரும் வெறுப்பு, வன்மம், கொலை வரை போய் முடிகிறது. இது மிக நுட்பமான தளத்தில் இயங்குகிறது. வெளியே இருக்கிற எதிரியினால் அல்ல உங்களை ஆவேசமாக நேசிக்கும் காதலி அல்லது மனைவியால் நீங்கள் மறைமுகமாகவோ நேரடியாகவோ கொல்லப்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.
செய்தித் தாளை திறந்து பார்த்தால் இதற்கு ஏராளமான உதாரணங்களை பார்க்கலாம். பெண்களை மெல்லியல் என்பது மிக தவறான அவதானிப்பு. பெண்கள் ஆண்களை விட வன்மம் மிகுந்தவர்கள். முக்கியமாக ஒரு வன்முறையான செயலில் இறங்குவதற்கு அவர்கள் சற்றும் தயங்குவதில்லை. ஒரே வித்தியாசம் ஆண்கள் வன்முறைக்காக வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் தம்மை பாதுகாப்பது சம்மந்தப்பட்ட உணர்வெழுச்சியினால் கொலை செய்வதில் மிக சுலபமாக குற்றவுணர்வின்றி ஈடுபடுகிறார்கள். பொதுவாக நம்முடைய பெண் மேலதிகாரிகள் பிற பெண்களை அலுவலகங்களில் நடத்தும் விதம், ஜாதி கலவரங்களில், படுகொலைகளின் போது மேல்சாதி அம்மாக்கள் நடந்து கொள்ளும் விதம், பெண் முதலமைச்சர்கள் மனசாட்சி இன்றி பல சமயங்களில் நடக்கும் விதம், கேரளாவில் சமீபமாக பெருகி வரும் பெண் கொலையாளிகளின் எண்ணிக்கை தரும் உதாரணம், மற்றும் குஜராத் கலவரத்தின் போது பெண் அரசியல்வாதி ஒருவரின் பங்களிப்பு ஆகியவை இதற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளன. வீடுகளிலும் பள்ளி, கல்லூரிகளிலும் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் துன்புறுத்துவது மற்றும் உளவியல் வதை பண்ணுவதிலும் ஆண்களை விட பெண்களே முன்னிலையில் இருப்பதும் ஒரு எதார்த்தம். நீங்கள் எந்த குழந்தை மற்றும் மாணவரிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அப்பா அல்லது ஆண் ஆசிரியரிடத்தே அதிக பாதுகாப்பாக, தொந்தரவில்லாமல் உணர்வார்கள். பள்ளி கல்லூரிகளில் பெண்களின் ஆடை கட்டுப்பாட்டை கடுமையாக வலியுறுத்துபவர்களும், காதலை ஒடுக்குவதும் ஆண்களை விட பெண் ஆசிரியர்களாகவே இருப்பார்கள். இரண்டு பெண்கள் பேசும் போது கவனியுங்கள், பெரும்பாலும் இன்னொரு பெண்ணின் காதல் உறவு பற்றி கடும் வெறுப்புடன் பேசிக் கொண்டிருப்பார்கள்; எப்படி அந்த உறவை அழிப்பது என்று தான் தமக்குள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
இந்திய பெண்களின் உடல் சார்ந்த பாதுகாப்பின்மை வெறுப்பாக, வன்முறையாகவும், சம்பிரதாய விழுமியங்களை ஆதரிப்பதாகவும் வெளிப்படுகிறது. இந்த பெண்களையும் முழுமையான பழமைவாதிகள், பழமைக்கும் புதுமைக்கும் (நவீனத்துக்கும்) இடைப்பட்ட மத்தியவர்க்கத்தினர், புதுமையான மேற்தட்டினர் அல்லது மேல்மத்திய தட்டினர் என பிரிக்கலாம். இந்த தட்டினர் இடையேயும் சில கொடுக்கல் வாங்கல் இருக்கலாம். ராஞ்சனா இந்த பகுப்பில் இடைப்பட்ட பெண்களின் தரப்பை பேசுகிறது.
பாதுகாப்பின்மை அச்சம் கொண்ட பெண்களுக்கும் அவர்களை அடைய முடியாத ஆண்களுக்கும் இடையே ஒரு முரண்பாடு தொடர்ந்து இங்கு நிலவுகிறது. இது பதின்வயதில் இருந்தே துவங்குகிறது எனலாம். ஆண்கள் தரப்பில் இருந்து ஒரு வன்முறையை இது கிளப்புகிறது. ஆண்கள் தம்மைத் தாமே வருத்துவது, உடலை காயப்படுத்துவது, தற்கொலை செய்வது என ஒரு பக்கமும் பெண் மீது அமிலம் வீசுவது மற்றும் பல்வேறு விதங்களில் அவளை துன்புறுத்துவது ஆகியவற்றை செய்கிறார்கள். பெண் இன்னொரு புறம் தான் உறவு கொள்ளும் ஆணை உளவியல் ரீதியாக துன்புறுத்துவது, நிராகரித்தல், கைவிடுதல், ஏமாற்றுதல், திருமணத்துக்கு பின் சிறுக சிறுக வதைத்தல் அல்லது மரணத்தை நோக்கி தள்ளுதல் என தம்மளவில் வன்முறையை காட்டுகிறார்கள். இந்தியாவில் காதல் என்பது சிறுக சிறுக நடக்கிற ஒரு மறைமுக வன்முறை அன்றி வேறில்லை. இந்த உண்மையை தான் ”ராஞ்சனா” படம் தொட்டுணர்த்துகிறது.
ஒரு ஆண் தான் காதலித்த பெண்ணுக்காக அவஸ்தைகளுக்கு உள்ளாவது ஒன்றும் நம் சினிமாவுக்கு புதிதில்லை. ஆனால் ராஞ்சனாவில் அந்த ஆண் எதையும் அடையாமல் தன் காதலின் பரிசாக காதலியின் தீராத வன்முறையை தான் பெறுகிறான். ஒரு முக்கிய கட்டத்தில் தன் காதலியை காதலனோடு இணைத்து வைக்கிறேன் என வழக்கமான ஒருதலை சினிமா காதலன் போல் கிளம்பி ஆனால் தன் காதலி தன்னை ஏமாற்றுகிறாள் என அறிந்து கடும் வன்மம் கொள்கிறான். கீழ்த்தட்டை சேர்ந்த குந்தன் மேல்தட்டை சேர்ந்த ஸியாவை ஒருதலையாக காதலிக்கிறான். முஸ்லீமான ஸியா அவன் இந்து என்பதால் நிராகரிக்கிறாள். அதுவரை சரி, இந்த நிராகரிப்பை குந்தனும் ஏற்கிறான். மற்றொரு முஸ்லீமான அக்பருடன் அவளை சேர்த்து வைக்கவும் உதவுகிறான். ஆனால் அக்பர் உண்மையில் ஜஸ்வீர் எனும் சீக்கியன் என அறிய அவன் தான் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அவளது திருமணத்தை இந்த உண்மையை வெளிப்படுத்தி நிறுத்துகிறான். இங்கு தான் படம் சுவாரசியமாகிறது.
சோயாவின் குடும்பத்தினர் ஜஸ்வீரை தாக்கி குற்றியிராக்குகிறார்கள். பிறகு அவன் இறந்து போகிறான். சோயா தன் காதலனுடனான திருமணத்தை முறித்து, காதலனையும் கொன்ற பழியை குந்தன் மீது போட்டு அவனை கடுமையாக வெறுக்க ஆரம்பிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவளது அரசியல் இயக்கத்தில் அவன் பங்கு பெற்று வளர்வதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் ஆகிறது. பின்னர் ஒரு சதியில் பங்கேற்று குந்தன் கொல்லப்படுவதற்கு காரணமாகிறாள்.
இது கலப்பு காதல் பற்றின படம் அல்ல. இது அன்பு திரிந்து போய் கடும் வெறுப்பாக வன்மமாக ஆவதைப் பற்றின படம். இன்னும் சொல்லப் போனால் ஏன் நாம் தீவிரமாக நேசிப்பவர்கள் நம்மை கொடூரமாக வெறுக்க நேர்கிறது என்பதை கேட்கும் படம். இந்த காரணமற்ற வெறுப்பு ஒரு கட்டத்தில் நம்மை களைப்பாக்குகிறது. இறுதிக் காட்சியில் குந்தனும் மரணப்படுக்கையில் “இனி எதற்கு வாழ வேண்டும்? ரொம்ப களைப்பாக இருக்கிறது” என்றே சொல்கிறான்.
இந்தியாவில் இந்த அனுபவம், காதலிக்காதவர்களுக்கு கூட, பலவேறு நிலைகளில் எப்போதாவது ஏற்பட்டிருக்கும். படம் முடிகையில் நம் மனம் சுண்டிப் போவதற்கு, படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதற்கு இதுவும் காரணம். தமிழில் கிட்டத்தட்ட இதே கருவை கையாண்ட படம் “சுப்பிரமணியபுரம்”. ராஞ்சனா இந்த வெறுப்பான காதல் குறித்த கேள்விகளை இன்னும் உக்கிரமாக கேட்கிறது.
எங்கிருந்து வருகிறது இவ்வளவு வெறுப்பு? இந்தியா சமூக பொருளாதார அளவில் மிகுந்த ஏற்றத்தாழ்வு கொண்ட நாடாக இருப்பது, அந்த அமைப்பு இப்போது மெல்ல மெல்ல நவீனப்பட்டு வருவது ஒரு காரணம். முழுமையாக அங்கும் இங்கும் இல்லாத நாட்டில் காலடியில் நசுங்கிக் கொண்டிருக்கும் ஒரு வஸ்துவைப் போலத் தான் ஜனங்கள் உணர்வார்கள். மேலும் இங்குள்ள பெரும் மக்கள் தொகையும் எல்லோர் மீதும் ஒரு சந்தேக உணர்வையும் வெறுப்பையும் ஏற்படுத்தியபடி இருக்கிறது. இங்கு நீங்கு ஒருவர் உங்களை கேட்க கத்தி பேச வேண்டியிருக்கிறது, உங்களை அறிய வைக்க மிகையாக நடிக்க வேண்டி இருக்கிறது, அன்பைப் பெற அமிலம் வீச வேண்டி வருகிறது. அன்பாலான குற்றங்கள் சமீப காலத்தில் எகிறி வருவதற்கும் “ராஞ்சனாவின்” வெற்றிக்கும் ஒரு தொடர்பு உள்ளதா? இருக்கலாம்.
ஸோயா குந்தனை நிராகரித்தற்கு அவன் வேற்று மதத்தவன் என்பதை பிரதான காரணமாக கூறுகிறாள். ஆனால் அவளே பிற்பாடு ஒரு இந்துவை காதலிக்கிறாள். ஆக குந்தனை காதலிக்காததன் காரணம் அவன் அவளை மனதின் அடியாழத்தில் கவர வில்லை என்பது. ஒரு ஆண் என்னதான் தலைகீழாக நின்று போராடினாலும் பெண்ணின் ஆழ்மனதை கவர்வது எளிதல்ல, அது தானாக நிகழ வேண்டும். பெண்களின் வேட்கை தோன்றும் ஊற்று மிக மிக மர்மமானது. வெறுமனே அன்பையும் தொடர்ச்சியான முயற்சியையும் பார்த்து காதல் தோன்றுவதில்லை என இந்த படம் சொல்லுகிறது. குந்தன் கடைசியில் மரண படுக்கையில் அதைத் தான் புரிந்து கொள்கிறான். ஆனால் இன்னொரு புறம், தன்னை நேசிக்காத பெண்ணை ஒரு ஆண் இப்படி வேட்டையாடுவது போல் துரத்தி காதலை திணிப்பது நியாயமா என்கிற கேள்வியும் எழுகிறது. ஆனால் ஒரு அப்பத்துக்கு நூறு குரங்குகள் போட்டியிடும் இந்த நாட்டில் ஒரு சிறு இலக்கிய பத்திரிகையில் ஒரு கவிதையை பிரசுரிக்கவே நீங்கள் ஒரு பெண்ணை போல் ஆசிரியரை துரத்த நேர்கிறதே! அப்படி இருக்க காதலிக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது. குந்தன் தான் ஐ லவ் யு சொன்னால் சோயா கேலி பண்ணுகிறாள் என்பதால் தன் கையை அறுத்து குருதியை அவளுக்கு காட்டுகிறான். மொழி ஊமையாக்கப்படும் போது குருதி காட்டி பேசும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.
ஷோபா டே ஒரு பத்தியில் இப்படத்தில் வரும் காதல் காட்சிகள் பெண்களை விரட்டி தொந்தரவு செய்யும் stalking எனும் குற்றத்தை ரொமாண்டிக்காக காட்டி ஆதரிக்கின்றன என கடுமையாக விமர்சித்தார். அதற்கு படத்தின் இயக்குநர் ஆனந்த ராய் மாநகரங்களில் போல் சிறுநகரங்களில் மக்கள் காபி டேக்களிலும் பப்புகளிலும் பெண்களை பார்த்து காதலிக்க வசதி இருக்காது என பதில் அளித்தார். இதை மாநகரத்து மேல்தட்டினர் போல் என நாம் திருத்தி படிக்க வேண்டும். ஷோபா டேவின் தரப்பிலும் ஒரு நியாயம் உள்ளது. ஆனால் பிரச்சனை இங்கு stalking அல்ல.
பெண்கள் மிக எதிர்மறையாக இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மையான பிரச்சனை. ஷோபா டேயை போன்ற மேற்தட்டை சேர்ந்த ஓரளவு திறந்த சுதந்திர கலாச்சாரத்தில் இருக்கும் பெண்களுக்கு ஸோயாவின் பாத்திர சித்தரிப்பு அநியாயமாக படுவது நியாயம் தான். பொதுவாக நவீனமாக சிந்திக்கும் பெண்களுக்கு நிச்சயம் சோயாவின் பாத்திரம் எரிச்சல் ஊட்டும். அவர்கள் விடுதலை பெற்றவர்கள். அவர்கள் காதலை இவ்வளவு சிக்கலாக ஆக்காமல் இருக்கலாம். காதலில் பல பரிசீலனைகள் செய்ய அவர்கள் தயாராக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் உள்ள கணிசமான பெண்கள் அப்படி அல்ல. கணிசமான பெண்கள் காதலை ஒரு வெடிகுண்டு போல் உள்ளங்கையில் வைத்து காத்திருக்கிறார்கள். அதை வீசவா வைக்கவா என இறுதி வரை தீர்மானிக்க மாட்டார்கள். தம்மை நேசிக்கிற ஒரு ஆணை அதே காரணத்துக்காக வெறுத்து நிராகரிப்பார்கள். பின்னர் தம்மை சுத்தமாக நேசிக்காத மதிக்காத ஒரு ஆணை மணப்பார்கள். அடுத்து தம்மை யாரும் நேசிக்கவில்லையே என மறுகி மறுகி வெறுப்பில் உழல்வார்கள். அந்த வெறுப்பை தம் குழந்தைகளுக்கும் ஊட்டி வளர்ப்பார்கள். பெண்கள் ஏன் இப்படி சிடுக்குண்ட நூல்கண்டு போல் இருக்கிறார்கள் என அவர்களுக்கே தெரியாது.
பெண்களை குறித்து இதுவரை நான் சொன்னது அத்தனையும் தவறு என நினைப்பவர்கள் கூட ஷோபா டேயை போன்று தான். நீங்கள் மிருகக்காட்சி சாலையின் வெளியே நின்று ஏன் இந்த டைகரை பாவம் பூட்டி வைத்திருக்கிறீர்கள், அது தப்பில்லையா, குற்றமில்லையா என கேட்கிறீர்கள். டைகர் எங்களை கடிச்சிடும் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. ஆனால் எங்களுக்கு இதையெல்லாம் பார்த்து பார்த்து குந்தனை போல் இது தான் சொல்லத் தோன்றுகிறது: “ரொம்ப களைப்பாக இருக்கிறது”.
இறுதியாக, குந்தன் மரண படுக்கையில் கிடக்கையில் நமக்கு நத்தம் இளவரசனின் முகம் ஒரு நொடி கண் முடி நிழலாடுகிறது.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates