Tuesday 21 January 2014

ராயல்டி விவகாரம்




நூல்கள் சரியாக விற்காத போது ராயல்டி தரலாமா? இது தான் கேள்வி. ஒரு படம் பயங்கரமாய் தோல்வி அடைகிறது. அதில் நடித்துள்ளோர் மற்றும் இயக்குநருக்கு சம்பளம் கொடுக்கலாமா? எனக்குத் தெரிந்து கொடுக்கிறார்கள். ஆரம்பித்து நின்று போன படங்களில் பாட்டு எழுதியவருக்கு கூட பத்தாயிரம் சுலபமாய் வருகிறது. ஒரு பதிப்பாளர் எப்படியும் ரிஸ்க் எடுக்கிறார். புத்தகம் குறைவாய் விற்பது தவிர்க்க இயலாத பிரச்சனை.குறைவாய் ராயல்டி கொடுங்கள் என்பது என் வேண்டுகோள். முன்னூறோ ஐநூறோ அனுப்பி வையுங்கள். நேற்று கூட ஒரு கவிஞர் தனக்கு அறுநூறு ரூபாய் ஒரு தொகுப்புக்கு ராயல்டி வந்ததாய் சொன்னார். சின்ன தொகை என்றாலும் எழுத்தாளன் திருப்தியாய் உணர்வான். நண்பர் சிவராமன் கூறுவதை நான் ஏற்கவில்லை.

 மேலும் ராயல்டி போன்ற பிரச்சனைகள் ஒரு பதிப்பகத்தின் பெயரை கெடுத்து விடும். இதுவரை சிறு எழுத்தாளர்களுக்கு ராயல்டி தராதவர்களுக்கு இப்போது திடீரென தருவதில் வேறொரு சிக்கல் இருக்கும். பழைய கணக்கை எல்லாம் தூசு தட்டி ஒவ்வொருவருக்காய் அனுப்ப வேண்டும். அது ஒரு மெனக்கட்ட கடுப்படிக்கும் வேலை. ஆனால் இதை சிறுக சிறுக செய்யத் துவங்கலாம்.
நூல்கள் சரியாக விற்காக நிலையில் அந்த எழுத்தாளன் பதிப்பாளனுக்கு காசு தரலாமா? கொடுக்கலாம் என்றால் மிக அதிகமாக விற்கும் எழுத்தாளனுக்கு பதிப்பாளர் வெறும் ராயல்டி தொகை மற்றும் தரக் கூடாது. லாபத்தில் 50% மேல் கொடுக்க வேண்டும். அப்படி நடைமுறை இல்லை. வியாபாரத்தில் இரண்டுக்கும் ஒரே நடைமுறை தானே இருக்க வேண்டும். 5 கோடிக்கு ஒரு படத்தை தயாரித்து 25 கோடி லாபம் என்றால் வெற்றிக்கு பிரதான காரணமான இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் சொற்ப தொகை தான் வரும். அதே வேளை தோல்வி என்றால் கடும் நஷ்டம் தயாரிப்பாளருக்கும் வெளியிடுபவருக்கும் தான். இந்த ரிஸ்கை அவர்கள் எடுப்பதால் தான் அதிக பணம் லாபமாக எடுப்பதை யாரும் கேள்வி கேட்பதில்லை. சினிமாவில் 50%மாவது வெற்றி வாய்ப்புண்டு; புத்தக பதிப்பில் அது கூட இல்லையே என ஒருவர் கேட்கலாம். கடந்த மற்றும் இந்த புத்தக சந்தையில் எனக்குத் தெரிந்தே இரு இளைய எழுத்தாளர்களின் நூல்கள் நன்கு விற்பனையாகின. இன்னொன்று, சில புத்தகங்கள் பதிப்பதகத்திற்கு மதிப்பை பெற்றுத் தருகின்றன. தேவசத்தனின் கவிதை நூல் எஸ்.ரா அளவுக்கு விற்காது. ஆனால் தேவதச்சனின் வாசகர்கள் அபூர்வமாக இருந்தாலும் அவர்களையும் தம் பால் இழுப்பது பதிப்பகங்களுக்கு அவசியமே!
சரி பிரபல எழுத்தாளர்களின் அத்தனை நூல்களும் விற்பதில்லையே! சில வருடங்களுக்கு முன் சாரு தனது கட்டுரைகள், கடிதங்கள், அரட்டைகள் அனைத்தையும் சிறு சிறு தொகுப்புகளாக 20க்கு மேல் வெளிக்கொணர்ந்தார். அவரது நாவல் தவிர கட்டுரை நூல்கள் சரியாக விற்பனை ஆகவில்லை என அறிந்தேன். அப்படி இருக்கையில் விற்காத நூல்களுக்கு சாருவுக்கு ராயல்டி வழங்கப்படாதா? வழங்குவார்கள். ஆக ராயல்டி ஒரு எழுத்தாளனின் பேரம் பேசும் மதிப்பை பொறுத்தது. எழுத்தாளன் பொன் முட்டை இடுகிற வாத்து என்றால் அவன் சில கல்முட்டைகள் இட்டாலும் அதற்கும் பணம் கொடுப்பார்கள். சாதாரண வாத்துக்கள் ஒரு பொன் முட்டையாவது எக்கி இடுகிற வரை காத்திருக்க வேண்டும்.
வேறென்ன மாற்றுவழிகள் உள்ளன? ஒன்று மின்நூல்கள். அமேசானில் மின்நூலை ஆங்கிலத்தில் சுயமாக பிரசுரிக்க வாய்ப்புண்டு. லாபத்தில் 60% எழுத்தாளனுக்கு என நினைக்கிறேன். செல்லமுத்து குப்புசாமி தன் நாவலை ஆங்கிலத்தில் இப்படி வெளியிட்டிருக்கிறார். விலை 1 டாலர். எழுபது ரூபாய். நூறு பேர் வாங்கினாலே நல்ல லாபம் தான். தமிழில் இப்படியான ஒரு விற்பனைத்தளத்தை உருவாக்க முயன்று வருவதாக பத்ரி கூறியிருக்கிறார்.
இன்னொரு வழி புத்தகத்தை தாமே விற்கும் சக்தியும் அவகாசமும் ஆர்வமும் கொண்டவர்களுக்கானது. இவர்கள் புத்தக பதிப்பில் 50% அல்லது முழு செலவை தந்து விட்டு புத்தகங்களை தாமே வாங்கி வெவ்வேறு கடைகளில் கொடுத்து விற்க முயல வேண்டும். முத்துக்கிருஷ்ணன் தான் பேசப் போகிற இடங்களில் தன் நூல்களை கொண்டு போய் ஐநூறை கொடுத்து விற்றுத் தர கேட்கிறார். அவர் தன் நூல்களை கணிசமாக இப்படி விற்றுள்ளார். வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கும் வேலை நெருக்கடி கொண்டோருக்கும் இது ஒத்து வராது. நூலுக்கு விலை ஐம்பதுக்குள் இருக்கும்படி பார்க்க வேண்டும். ஆனால் கொஞ்சம் முனைந்தால் இதை செய்ய முடியும். காசில் ஒரு பகுதியை பதிப்பாளருக்கு கொடுக்க வேண்டும். அவருடைய லோகோவுக்கு கொடுக்கிற பிரதிபலனாக.
இன்னொரு விசயம். ராயல்டி வந்தாலும் இல்லை என்றாலும் புது எழுத்தாளன் பிரசுர இடத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் தருவான். அவன் உதவி இயக்குனர் போல. வாய்ப்பு தான் முக்கியம். மிச்சத்தை பொருட்படுத்த மாட்டான். என் நண்பர் ஒருவர் மறியான் படத்தில் கடுமையாக உழைத்தார். அஞ்சு காசு கொடுக்கவில்லை. அப்படத்தில் வேலை செய்த இன்னொரு எழுத்தாளரிடம் கேட்ட போது ஆரம்பத்திலேயே அவங்களுக்கு காசு கொடுக்கிற ஐடியா இல்லஎன்றார். ஆனால் டெக்னீஷியன்களுக்கு கொடுத்திருப்பார்களே என்றேன். அவர்களுக்கு யூனியன் இருக்கிறதே என்றார். வாய்ப்புக்காக கூலியின்றி உழைப்பது பல துறைகளிலும் இருக்கிறது. சுதந்திர போராட்டத்துக்காக செக்கெல்லாம் இழுத்தார்களே! இதென்ன கொஞ்ச காசு தானே என நினைத்து நம்மொழிக்கும் பண்பாட்டுக்காகவும், சுயதிருப்திக்காகவும் எழுத வேண்டியது தான். இந்த மாதிரி கசப்பெல்லாம் தோன்றக் கூடாது என்று தான் நான் எழுதும் போது கேட்கும் எம்.ஜி.ஆர் பாட்டு இது. இதன் பின்னணி இசை நமக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
Share This

2 comments :

  1. இனி வருங்காலத்தில் இந்தப் பிரச்சனைகளே இருக்கப் போவதில்லை...

    பாட்டு சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இந்தப் பிரச்னைக்கு அவ்வளவு சிக்கலானதல்ல என்று படுகிறது.

    ராயல்ட்டி என்பது அடிப்படையில் பதிப்பகத்திற்கும், எழுத்தாளருக்கும் இடையிலான, சட்டப்பூர்வமான ஒப்பந்தம். எழுத்தாளர் எழுதிய ஒரே ஒரு புத்தகம் விற்றாலும் கூட, அதற்கான ராயல்ட்டியை தருவது தான் நியாயமான செயல் மட்டுமல்ல, சட்டப்பூர்வமானதும் கூட.

    அதே போல் புத்தக விற்பனையில் ஒரு transparent accounting தேவை. ஒரு வருடத்திற்கு, இவ்வளவு புத்தகம் விற்றது என்று ஒரு எழுத்தாளனுக்குச் சொல்வதில் ஒரு பதிப்பாளருக்கு என்ன சிரமம்? முகநூலில் மொக்கையாக எதையாவது எழுதி விட்டு, எத்தனை பேர் லைக் செய்தார்கள் என்று பார்க்கிறவர்கள் மத்தியில், தான் எழுதிய புத்தகத்தை எத்தனை பேர் படித்தார்கள் என்று தெரிந்து கொள்ள எழுத்தாளன் விரும்ப மாட்டானா? இந்த அடிப்படை நாகரிகத்தை/ தொழில் நாணயத்தைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள் பதிப்பகத் தொழிலில் இருப்பது, அந்தத் தொழிலுக்கே இழுக்கு.

    இதில், உன் புத்தகம் விற்கவில்லை. அதனால் எனக்கு நஷ்டம். தமிழ் சமுதாயம் புத்தகங்கள் வாங்காத சமுதாயம். உன் புத்தகத்தை பதிப்பித்ததற்கு நீ எனக்கு நன்றிக் கடனோடு இருக்க வேண்டும். நான் என் 'நண்பர்களுக்கு' மட்டும் தான் பதிப்பகம் நடத்துகிறேன் என்றெல்லாம் கூவுவது, ஒரு நிலப்பிரபுத்துவ மன நிலையின் வெளிப்பாடுகள் - அல்லது அடிப்படை தொழில் முறை விழுமியங்களை மறந்த ஒரு வியாபாரியின் தந்திரங்கள் என்று மட்டுமே கொள்ள முடியும்.

    அன்புடன்,
    ராஜா

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates