Sunday 15 May 2011

மிக அதிகமாக அன்பு செய்யப்படும் போது




மிக அதிகமாக அன்பு செய்யப்படும் போதும்
மிக அதிகமாக வெறுக்கப்படும் போதும்
நாம் இருக்கிறோம்
உறக்கத்தில் மரிப்பதை போல

மிகச் சிறந்த அன்பு
குருதி சொரியும் வாளைப் போலவும்
மிகக் கொடூரமான வெறுப்பு
ஆக சௌந்தர்யமான பூக்களின் ஒரு மழையை போலவும்
இருப்பதும்
ஒரு இயல்பு என்பதை
இயல்பாகவே அப்போது நாம்
உணர்வதில்லை

குளிர்கால குளிரை போல்
அழுத்தமான தெளிவான
அடையாளங்களுடன் வரும்
அன்பையும் வெறுப்பையும்
நாம் செயற்கை என்று
உதாசீனிக்கிறோம்
இரண்டுக்கும் நியாய அநியாயங்களும்
விதிகளும்
அளிக்கிறோம்
இருட்டில் வெளிச்சத்தை காண்கிற ஒரு பூனையை போல்
இரண்டும்
இயல்பாய் இருப்பது குறித்து அச்சம் கொள்கின்றன

கசப்பை அல்லது இனிப்பை
மட்டுமே
அருந்தி வாழ்பவர்கள்
ஏதாவதொன்றின் இன்மையை அல்ல
பேரொளியின் திகைப்பை தான்
அஞ்சுகிறார்கள்
கடவுளும் சாத்தானும் எங்கிருந்தோ
ஒரு புள்ளியில் இருந்து வெடித்து தோன்றாதவரை
கடவுளும் சாத்தானும்
அவர்களுக்கு ஏற்பே

கசப்பை அல்லது இனிப்பை
மட்டுமே
அருந்தி வாழ்பவர்களுக்கு
கசப்பதோ இனிப்பதோ
இல்லை

அவர்களை யாரும்
நேசிக்கவோ வெறுக்கவோ
முடிவதில்லை

வாலை வாய் முழுங்கிய பின்
வால் எங்கிருந்து தொடங்குகிறது
என்று அவர்களுக்கு புரிவதில்லை

அவர்களால் யாரையும்
நேசிக்கவோ வெறுக்கவோ
முடிவதில்லை

மிகுந்தோ மிகாமலோ
Share This

2 comments :

  1. அபிலாஷ்,என்னை கவர்ந்த ஆகச்சிறந்த கவிதை இது.மனிதன் வதைப்பதிலும் ,வதைபடுவதிலும் வுள்ளார்ந்த விருப்பம் கொண்டவன்.அன்பின் ஆழம் வலி மிகுந்த தருணங்களாக வுணரப்படுவதுவும்,வெறுப்பு,அன்பு இரண்டுமே அதன் எல்லைகளின் விளிம்பில் வித்தியாசமற்றது எனவும் அழகாக சொல்கிறது வுங்கள் கவிதை.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates