Saturday 9 July 2011

ஒரே முகபாவம் கொண்ட பூனை



ஒரே முகபாவம் கொண்ட பூனையின்
முகம்
வெளிப்படையாய் காட்டுவது
உண்மை அல்ல
ஏனெனில்
அம்முகம் ஒருபோதும் மாறாமல்
இருக்கிறது

யாருக்கோ காத்திருப்பது போல்
மறந்த எத்தனையோ முகங்களைப் போல்
அது மாறினாலும் மாறாமலே இருக்கிறது

அது முகமோ
அம்முகத்தின் ஜாடை ஒரு சேதியோ
அல்ல
என்று உறுதியாக தெரிகிறது

நிலைத்த முகமென்பதால்
அது சிந்தனை வயப்பட்டும் இல்லை
என்று
நம்பத் தலைப்படுகிறோம்

மணிக்கணக்காய் ஒரே இடத்தில்
நகராமல் கிடந்தாலும்
அது
எதற்கும் காத்திருக்கவில்லை

காத்திருப்பவர்கள்
எதை நோக்கியோ நகர்ந்து கொண்டிருப்பவர்கள்

ஒரு கனத்த இறுக்கமான
கருங்கல் குன்று
எதற்காகவும் காத்திருக்கவில்லை
அதைப் போன்றே
பூனையும்

பூனை
புது இடத்திற்கு நகர்வது
ஒரு பூகோள வரைபடத்தை
இடம் மாற்றி வைப்பது போல

விநோத ஓசைகளுக்கு
தன் செவிகளை திருப்பி
திசைகளை சோதிக்கும் பூனை
நகர்வுகளை நம்புவதில்லை

காற்று அடிப்பதும்
சூரியன் உதிப்பதும்
பேராறுகள் புதுத் தடங்களை தேர்வதும்
ஒரு பூ உதிர்வதும்
ஒரு சொல் மற்றொரு சொல்லை நோக்கி செல்வதும்
பிரயாணம் அல்ல
எந்த இடத்துக்கும் சொந்த மில்லாத ஒன்று
எந்த இடத்துக்கு செல்ல முடியும்
என பூனை கேட்கிறது

வீடெங்கும் தன் மயிர்களை
உதிர்க்கும்
பூனை
தான் அவ்விடங்களில் எல்லாம்
இருக்கவில்லை
என்று வாதிக்கிறது

அடிக்கடி வழமையான இடங்களில்
இருந்து மறையும் பூனை
இருட்டிலோ வெளிச்சத்திலோ
மறைவிலோ வெட்டவெளியிலோ
எங்கும் இருக்கலாம் என்பதாலே
அதை தேடுவதும்
மிக சிரமமாகிறது

டீவி பார்க்கும் பூனை
பாட்டு கேட்கும் பூனை
எலி பிடிக்கும் பூனை
மடியில் மட்டும் தூங்கும் பூனை
ரகசியமாய் குட்டிகளிட்டு வெளிப்படும் பூனை
குழந்தைகளால் துன்புறுத்தப்படும் பூனைகள்
ஒரு ஓய்வுப் பொழுதில் நம்மை தேடி வரும் அனாமநேய பூனை
ஏதோ ஒரு பொறுப்புடன் திரியும் பூனைகள்
யாவும் பூனைகள் அல்ல

அவை
பல்வேறுபட்ட வேடங்கள்

அசலான பூனை
தன் வேடத்தை ஒரு போதும் களையாது
தன் முகத்தை
ஒரு போதும் மறக்க முடியாததால்
அது
எந்த முகத்துடன் பேசினாலும்
ஒரே முகத்துடன் கவனிக்கும்

பூனையுடன் பேசும் போது
எந்த முகத்தையும் அணியலாம்
அதன் முகத்தை அணிந்தால் மட்டும்
நம்மை பொருட்படுத்தாது

முந்தின நாள் இருந்த இடத்தில்
அதற்கு முந்தின நாளும்
நாளைய இடத்தில்
இன்றும்
இருக்க முடிவதால்
தொடர்ச்சியான எதையும்
விட்டுவிட்டு செய்வதே சாத்தியம் என்பதால்
அது
தனக்கு நெருக்கமாய் அசைவது
காலம் மட்டுமே என்றபடி
வைக்கப்பட்ட இடத்திலே வைக்கப்பட்டு விட்ட
ஒரு பிளாஸ்டி புட்டியை
கைகளால் நகர்த்தப் பார்த்து
ஆர்வம் இழக்கிறது
Share This

2 comments :

  1. மனித மனதின் விசித்திரங்களையும் இயல்பையும் கூர்மையாய் சொல்லும் கவிதை.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates