Tuesday 30 October 2012

சின்மயி சர்ச்சை: “அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?”




சின்மயி விவராகத்துக்குள் போகும் முன், யார் பக்கம் தவறு என்று நியாயம் தேடும் முன் இன்று இணையத்தில் வசை எழுதுபவது சரியா, இவர்கள் எல்லாம் எந்த மரபில் இருந்து வருகிறார்கள் என்று கேட்க வேண்டும்.
வசை எனும் கலாச்சாரம்
மாறி மாறி சாதிப்பெயரால் திட்டுவது, பாலியல் வக்கிரங்களால் ஒடுக்குவது என்பது நம் அன்றாட பண்பாட்டில் ஆழமாக உள்ளது. குழந்தைகளை, நண்பர்களை, அரசியல் தலைவர்களை கெட்ட வார்த்தைகால் அன்னியோன்யமாய் சகஜமாய் குறிக்கும் கலாச்சாரம் நமக்கு உண்டு. எனக்குத் தெரிந்து கேரளாவில் வசை பாடும் பண்பாட்டுச் சடங்கு ஒன்று உள்ளது. கொடுங்களூர் பகவதி அம்மன் கோயிலில் வருடந்தோறும் பரணி அல்லது பூரப்பாட்டு என்கிற பெயரில் இது நடந்து வருகிறது. மக்கள் கூட்டங்கூட்டமாக பயணித்து கோயிலுக்கு சென்று பகவதி முன்னிலையில் சரளமாக முடிவற்று கெட்ட வார்த்தைகளால் மாறி மாறி திட்டி போட்டியிடுவார்கள். இது மணிக்கணக்காக நடக்கும். பகவதியை விரசமான சொற்களால் அசிங்கப்படுத்தி அதன் வழி வழிபடுவதே நோக்கம். நம்மூர் கானா பாடல்கள் போன்று கற்பனாபூர்வமாக அந்த இடத்தில் தோன்றும் வக்கிரப் பாடல்களும் மரபுவழி வந்த பாடல்களும் உண்டு. இப்போது கேரள அரசு பூரப்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. ஏர்.ஆர்.ரகுமான் யோதா எனும் ஒரு படத்தில் இப்படியான ஒரு பூரப்பாட்டுக்கு இசையமைத்துள்ளார். இதைக் கேட்பவர்களுக்கு நம்முடைய இணையவெளி சச்சரவுகள் எந்தளவுக்கு இவற்றை ஒத்துள்ளன என புரியும். இணைய பயனர்களும் இவர்களைப் போன்றே கொள்கைப்பிடிப்பு என்ற பாவனையில் வசைமாரி பொழிகிறார்கள். இரண்டும் ஒரு சடங்கைப் போல மக்களின் கூட்டங்கூட்டமான பங்களிப்புடன் நிகழ்கிறது. தடைக்குப் பின் பூரப்பாட்டுக்கு நேர்வது போன்றே சின்மயி விவகாரத்திற்குப் பின் நாம் காவலர்கள் கண்காணிக்கிறார்கள் என்கிற பிரக்ஞையுடன் இணைய வசை சடங்கை செய்யப்போகிறோம்.
இணையத்தில் ராஜன் லீக்ஸ் செந்தில் போன்றவர்கள் ஆபாசமான மொழியில் சின்மயியை கேலி செய்த பக்கங்கள் இன்று இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. படிக்கிற யாரும் ராஜன் செய்தது குற்றம் என்று ஒப்புக் கொள்வார்கள். சினம்யியோ ஜெயலலிதாவோ யார் கூறும் கருத்துக்களுக்காகவும் அவர்களை ஆபாசமாய் பழிப்பது நியாயமல்ல. இன்னொரு கேள்வி: வசவுப் பண்பாடு நம் சமூகத்தில் ஏற்கனவே வலுவாக உள்ள பட்சத்தில் அதை இணைய உரையாடலுக்கு அரசியல் விமர்சனத்துக்கு ஒருவர் நீட்டிப்பது சரிதானே என்பது.
இல்லை என்பதே பதில். ஏனென்றால் இணையம் என்னதான் கட்டற்ற சுதந்திரம் தந்தாலும் அது தனிவெளி அல்ல. பொதுவெளி. அங்கு நாம் கண்ணியமாகவே இருந்தாக வேண்டும்.
ஏன் தனிவெளி இல்லை? இணையம் மட்டுமல்ல தொலைதொடர்பு கட்டுமீறிய வளர்ச்சியை அடைந்து வரும் சூழலில் நுண்பேசி குறுங்செய்திகள் கூட இன்று தவறான சித்தரிப்புகளுக்கும் சச்சரவுகளுக்கும் இட்டுச் செல்கின்றன. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்ஸன் தன் அணித்தலைவர் ஸ்டுராஸை குறித்து அனுப்பிய அவதூறான குறுஞ்செய்தி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியதை அறிவோம். அதை விடுங்கள். இன்று நீங்கள் நுண்பேசியில் என்ன நேரடியாக கூட ஒரு பரிச்சயமானவரைப் பற்றி கோபமாக பேசினால் கூட அது நிமிடங்கள் பலபேருக்கு போய் சேர்ந்து விடுகிறது. ஒரு இலக்கிய பத்திரிகையில் ஒரு எழுத்தாள நண்பர் வேலை கேட்டு தொந்தரவு செய்தார். அவரது அப்பாவை அழைத்து ஆசிரியரிடம் கெஞ்ச வைத்து உணர்ச்சி மிரட்டல் கூட கொடுத்துப் பார்த்தார். ஆனால் பத்திரிகை ஆசிரியர் தொடர்ந்து மறுத்து வந்தார். என்னவென்று விசாரித்தால் ”அவருக்கு வேலை கொடுத்தால் என் அலுவலகத்தில் நடப்பதை பண்பலை வானொலி போல் நேரலை செய்து கொண்டே இருப்பார். அதனால் வரும் பிரச்சனைகளை சரி செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கும்” என்றார் அவர். எப்படியான பீதிச் சூழலில் பத்திரிகை ஆசிரியர்களே இருக்கிறார்கள் பாருங்கள்.
தொலைதொடர்பு வெளியில் என்ன பிரச்சனை என்றால் அது ஏதோ ஒரு அந்தரங்கமான வெளி போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் பிறந்தநாள் விழாவுக்கு நிர்வாண ஆடையணிந்த ராஜாவின் நிலைமை தான் அதில் பங்கெடுக்கும் எல்லாருக்கும். ஒவ்வொரு சிறு அசைவையும் சொல்லையும் யாரோ எங்கிருந்தோ கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக வசைபாடுவது சரியா தவறா என்பது முக்கியமல்ல. அதை நாம் எங்கு செய்கிறோம் என்பது தான் முக்கியம். வசையை நாம் மீண்டும் அணுக்கமான குழு வெளிகளில் வைத்துக் கொள்வது தான் பாதுகாப்பானது. அதாவது மின் அணு சாதனங்கள் அண்டாத எந்த இடங்களிலும் நின்று கொண்டு யாரை வேண்டுமானாலும் சாதிப்பெயர் சொல்லி பாலியல் உறுப்புகளை குறிப்பிட்டு திட்டிக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை. அதாவது உங்கள் உரிமை உங்கள் மூக்கு என் மூக்கு நுனியை தொடாதவரை தான். “நாயே செருப்பால் அடிப்பேன்” கலாச்சாரத்துக்குள்ளே நாம் இருக்கலாம். அது நம் சமூக இயல்பாகவும் இருக்கட்டுமே. ஆனால் தனிவெளி என்ன பொதுவெளி என்ன என்கிற பிரக்ஞையுடன் இருப்போம்.  
“அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?”
இந்த கேள்வி முக்கியம். சின்மயியின் அம்மா பத்மஹாசினி ஒரு எளிய ஆனால் அவசியமான வினாவை கீழே எழுப்புகிறார் பாருங்கள்:
”சின்மயி சாதி பத்தி பெருமையாப் பேசித் தம்பட்டம் அடிச்சதா சொல்றாங்க. சாதிப்பெருமை பேசுற, ‘இந்த சாதிக்காறன்னு’ சொல்லி போஸ்டர் அடிச்சுக்கிற ஆட்கள் இங்கேதானே இருக்காங்க. அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?” (நன்றி விகடன்).
இந்த கேள்வி நமக்குள்ளே பலமுறை எழுந்திருக்கிறது. “அவங்க எல்லாம்” என்று பத்மஹாசன் குறிப்பிடுவது மேல்மத்திய, மத்திய சாதிகளைத் தான். அண்ணா தமிழகத்து சாதிச் சிக்கல் குறித்த உரையாடலை “தமிழ்தேசியம்” என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அதை முளையிலே கிள்ளி விட்டார் என்பது தான் உண்மை. இன்னும் கொஞ்சம் பின்னால் போனோம் என்றால் பெரியார் இந்த உரையாடலை பிராமணர் versus மத்திய சாதிகள் என்று ஒற்றைபட்டையாக்கினார். பெரியாருக்கு முன் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தமிழர்களுடன் ஒன்றிணைந்த ஜஸ்டிஸ் கட்சி இந்த முரண் எதிர்வை துவங்கி வைத்தது. பெரியார் இதை மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்தார். பெரியார் சமரசமற்ற தலைவர் என்பதால் இந்த இயக்கத்தினால் நமக்கு பல முக்கியமான பயன்கள் கிடைத்தன. பெரியார் மத்திய சாதிகளை திராவிடம் என்ற பிராந்திய அடையாளத்தின் கீழ் இணைத்ததற்கு சாதி கடந்த அரசியல் காரணங்களும் அன்று இருந்தன. அன்று தமிழகம், கர்நாடகம், ஆந்திராவை இணைத்து ஒரே மாநிலமாக்க மத்திய காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. இந்தியை வலியுறுத்துவதன் மூலம் பிராந்திய சக்திகளை ஒடுக்கப் பார்த்தது. அதனால் அன்று தற்காலிகமாக மத்திய சாதிகள் கீழ்த்தட்டு சாதிகளை ஒடுக்கும் கொடுமைகளை மறந்து நாம் பிராமணர் versus மத்திய சாதிகள் என்ற முரண் எதிர்வின் கீழ் இணைந்தோம்.

ஆனால் பெரியார் தமிழ் மொழியின் அருமைபெருமைகளை நினைவுகூர்ந்து சிலாகிக்கும் வகை அரசியல் தலைவர் அல்ல. அவர் ஒரு நடைமுறைவாதி. பண்பாட்டுப் பெருமைகள் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்காது என அவருக்கு தெரியும். அதனால் தான் அவர் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றும் அது சமூக முன்னேற்றத்திற்கு உதவாது என்றும் கூறினார். அவரது இந்த நிலைப்பாட்டை நாம் ஆங்கிலேய ஆட்சி தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த, சுதந்திர போராட்டத்தை எதிர்த்த ஜஸ்டிஸ் கட்சியின் வரலாற்றோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். பிராந்திய அடையாளங்களை தக்க வைக்க ஆங்கிலம் பொதுமொழியாக இருக்க வேண்டும் என அவர்கள் வேண்டினார்கள். ஜஸ்டிஸ் கட்சியினர் முழுக்க தமிழர்கள் அல்ல என்றும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் பெரியாருடன் இந்த மொழி மற்றும் பண்பாட்டு பெருமித விசயத்தில் அண்ணா முரண்பட்டார். அவர் அனைத்து மதங்கள், சாதிகள் சேர்ந்தவர்களையும் தமிழர் எனும் அடையாளம் கீழ் ஒருங்கிணைக்க விரும்பினார். ஏனெனில் வேறுபாடுகளை தவிர்க்கும் சமரசப் போக்கு தான் தன் கட்சியின் நிலைப்பாட்டுக்கும் உதவும் என அவர் அறிந்திருந்தார். ஆக இந்த தமிழ்தேசிய அரசியலின் விளைவாக மத்திய சாதிகள் தமக்கு கீழுள்ளோரை ஒடுக்குவதை நாம் கடந்து ஐம்பது வருடங்களுக்கு மேலாக கண்டும் காணாமல் விட்டு வருகிறோம். தமிழகத்தில் பிராமனர்கள் மட்டுமே சாதி ஒடுக்குமுறை செய்வதாய் இன்றும் தொடர்ந்து வலியுறுத்த முயல்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சியினரும் பெரியாரும் ஒரு காலத்தில் இப்படியான ஒற்றைபட்டை சித்திரத்தை முன்வைத்ததற்கும் ஒரு சமூக அரசியல் தேவை இருந்தது. அது இன்று இல்லை.
சின்மயி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு அவரது டிவிட்டர் வசனங்களில் இருந்து வருகிறது. என் தனிப்பட்ட வாழ்வில் பிரமாணரல்லாத எத்தனையோ மத்திய சாதியினர் இட ஒதுக்கீட்டு எதிராக பேசியதை கேட்டுள்ளேன். அதாவது இவர்கள் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து பின்னர் கடும் உழைப்பு மற்றும் பிற காரணிகளால் முன்னேறி மேற்தட்டை அடைந்தவர்கள். இன்று அவர்கள் தமக்கு கீழ் உள்ள சமூகத்தினர் இடஒதுக்கீடு பெறுவதை எதிர்க்கிறார்கள். நான் சொல்ல விரும்புவது இடஒதுக்கீடு எதிர்ப்பு விவகாரத்தில் சின்மயி உள்ளிட்ட பிராமணர்களுடன் உயர் மத்திய, மத்திய சாதிகளும் நிச்சயம் கைகோர்க்கிறார்கள் என்பது தான். மீண்டும் இந்த பிரச்சனையை பிராமணர் versus தாழ்த்தப்பட்டவர் என்று பார்த்தோமானால் நம்மை விட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.
பிராந்திய அரசியலுக்கு நெருக்கடி வந்த போது பெரியார் திராவிடவாதத்தை முன்னெடுத்தார். ஆனால் இப்போது வடநாட்டவர் × தென்னாட்டவர் என்கிற முரண் அரசியல் பிராந்திய சமூகங்களில் வளர்ச்சியால் மெல்ல மெல்ல சமகாலத்தேவையை இழந்து வருகிறது. அதனால் தான் இன்றைய தமிழ்தேசிய வாதிகள் ஈழத்தமிழர் பிரச்சனையை முன்னெடுத்து அதைக் கொண்டு சாதி கடந்த ஒரு தமிழ்தேசிய சமூகத்தை கட்டமைக்க முயல்கிறார்கள். தமது எதிரிகளாக சிங்களவர்களையும் வடநாட்டினரையும் வெளிநாட்டு காங்கிரஸ் தலைவியையும் முன் வைக்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் வெள்ளாள, இந்துத்துவ அரசியலை கேள்விக்குள்ளாக்கும் போது அவர்கள் “நம்மைப் பிரிக்கப் பார்க்கிறார்கள்” என கூச்சலிடுகிறார்கள். ராஜன்லீக்ஸ் கூட அவரது பிளாக்பதிவு பொன்றில் இதே தொனியில் உள்சாதிய அரசியலை பேசுவதை தவிர்க்க வேண்டுகிறார். இது ஒரு போர்த்தந்திரம் மட்டுமே. பொதுவாக உள்நாட்டுக் குழப்பங்கள் விளையும் போது சர்வாதிகாரிகள் வெளிநாட்டு பொதுவிரோதியை கட்டமைப்பு உள்விரோதங்களை முடக்கி ஒற்றுமை உருவாக்கப் பார்ப்பார்கள். ஒரு பிரச்சனையை பேசாமல் தவிர்ப்பது அதை தக்க வைக்கத் தான். இவ்விவகாரத்தில் ராஜன், சரவணகுமாரும் ஒரே ஆதிக்க சாதிய அரசியலை தான் பேசுகிறார்கள்.
ராஜன் உள்ளிட்டோர் தமிழ்தேசியவாதி என்கிற அடையாளத்தில் நின்று தான் சின்மையியின் மேல்சாதிய மனநிலை எதிர்ப்பதாய் கூறுகிறார்கள். தமிழ்தேசியவாதிகள் என்பவர்கள் தமிழகத்தின் வேறு சாதிய (தமது மத்திய சாதிகளின் ஆதிக்க நோக்கம் உட்பட்ட) கோளாறுகளை பொதுவில் விவாதிக்க வேண்டிய சூழல் இன்று தேவையிருக்கும் போது அவர்கள் மீண்டும் ஒரு ”அகண்ட தமிழ்பாரத” ஒற்றை அடையாளத்தை நிறுவி தப்பிக்க பார்க்கிறார்கள். ஆனால் பெரியாரின் சித்தாந்த கட்டமைப்பை போல் அல்லாமல் இது போலியாக உள்ளது. உங்கள் சொந்த மாநில மக்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்படும் போது, தாமிர பரணியில் மிதித்து கொல்லப்பட்ட போது, எரித்து அழிக்கப்பட்ட போது பேரணி நடத்தாத நீங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக ராப்பகலாக பிரச்சார வேலைகளில் ஈடுபடுவது கண்ணீர் வடிப்பது முகநூல் போராட்டங்கள் நடத்துவது இணைய கையெழுத்து இயக்கம் நடத்துவது மத்திய சாதி பாசாங்கு இல்லாமல் வேறு என்ன? ஈழத்தமிழர்களுக்கு நடந்தது மிகப்பெரிய அநீதி என்றாலும் அதை முன்னிட்டு இங்கு நிகழ்வது ஒரு பெரும் போலி மத்திய சாதி இயக்கம் மட்டுமே. ஐம்பது வருடங்களுக்கு முன் திராவிட இனப்போருக்காக சமூகங்கள் ஒன்று திரண்டது போல் இம்முறை நிகழவில்லை. பொதுமக்கள் தமிழ்தேசியவாதத்தை முழுக்க நிராகரித்து விட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகளில் துல்லியமாகத் தெரிந்தது.
ஆக “அவங்கள் எல்லாம் இவங்க ஏன் தட்டிக் கேட்கலை?”. ஏனென்றால் அவங்க தானே இவங்க. பிராமணியம் என்பது சாதி மனநிலை அல்ல அனைத்து சாதியினருக்குள்ளும் இருக்கும் மனநிலை என்று தமிழவன் ஒருமுறை சொன்னதை நினைவுபடுத்துகிறேன். என்னைப் பொறுத்தவரை சின்மயியும் ராஜன் லீக்ஸும் சரிசமமாக மீனவர், பறையர், பள்ளர் என பல தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கும் எதிரானவர்களே. ஒரே வித்தியாசம் ராஜன் லீக்ஸ் போன்றவர்கள் தமிழ்தேசிய அடையாளம் மூலம் அந்த குறுகின மனப்பான்மையை கடந்து செல்வதாக பாவனை செய்கிறார்கள் என்பது தான்.
நாம் நமது சாதிய அடையாளங்களால் பிளவுபட்டு தான் இருக்க வேண்டுமா என கேட்கலாம். முதலில் சாதிய பிளவுகளை ஏற்றுக் கொண்டு நமக்குள் உள்ள தீமைகளை எதிர்கொள்ள முன்வர வேண்டும்.
இந்தியர்கள் சுதந்திரம் கிடைத்த பின்னரும் கூட அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரவில்லை என தனது “பண்டைய இந்தியா” நூலில் எழுதுகிறார் ரோமிலா தாப்பர். காரணம் அவர்களின் சாதியம். இந்தியா அப்போதும் இப்போதும் நூற்றுக்கணப்பான சாதிகளின் இனங்களின் நூறுநூறு இந்தியாக்களாக தான் இருந்து வருகிறது. பி.ஜெ.பியின் அகண்ட பாரதம் அளவுக்கு நம்மவர்களின் தமிழ்தேசியமும் ஒரு பிரிவினரின் ஆதிக்கவாத அஜெண்டாவை கொண்டது தான்; இரண்டுமே போலியான கனவுகள் தாம். இந்திய சமூகம் ஒரு ஏணி என்றால் ஒவ்வொரு சமூகமும் படிகள். ஒன்றை ஒன்று மிதித்து தானே நம் சமுதாயங்கள் மேலே போகின்றன. ஐக்கிய சமூதாய லட்சியாவாதம் ஒரு விழுமியம் மட்டுமே. நாம் வெளிப்படையாக நம் சார்பை முன்வைத்து கண்ணியமான சாமர்த்தியமான முறையில் போராடி முன்னேற வேண்டும். இந்தியர்கள் வரலாற்று ரீதியாக சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்பதால் சிதறுண்டு விட மாட்டோம்.
மத்திய சாதிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் இனி வேறு சாதிகளை ஒடுக்கும் ஒரு சமுதாய தீமையாக பார்க்கப்பட வேண்டும். அது ஈழத்தமிழரை முன்னிட்டே நடந்தாலும் சரி! அதுவே இனி நடைமுறை நிதர்சனம். அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.
இதுவரை ஐநூறுக்கு மேல் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தார்கள்; கூட்டணிக் குடுமியை கையில் வைத்திருந்தார்கள். ஆனாலும் இலங்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவோ கொலைகளை தடுக்கவோ நம்மால் முடியவில்லை. ஆனால் கேரள மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றதற்கு இத்தாலிய கப்பற்படை அதிகாரிகளை கைது செய்து வழக்கு தொடுத்திருக்கிறாகள். இத்தாலி மட்டும் நமக்கு பகை நாடா? இல்லை. கேரள அரசியல்வாதிகள் இதை மீனவ சாதியின் பிரச்சனையாக கருதவில்லை. கேரள சமூகமும் மீடியாவும் இது ஒட்டுமொத்த சமூக அநீதியாக பார்த்து எதிர்த்தது. ஏ.கெ ஆண்டனி சோனியாவுக்கு நெருக்கமானவர் தான். ஆனால் அவர் கடுமையாக இந்த கொலைகளை எதிர்த்தார். அந்தளவுக்கு அவருக்கு நெருக்கடி வழங்க கேரள சமூகத்தால் முடிந்தது. நம்மால் ஏன் முடியவில்லை? சாதிய மனநிலை தான் காரணம். மீனவர்கள் இறந்தால் அது ஒரு குறிப்பிட்ட சாதியின் இழப்பாகத் தான் பொதுநீரோட்ட சமூகத்தால் இங்கு பார்க்கப்படுகிறது. கூடங்குளம் போராட்டம் கூட மீனவ சமூகத்தினரை ஒருங்கிணைத்து தானே வலுவாக நடத்துகிறார்கள். இப்போராட்டத்தில் அவர்களை தவிர பிற ஆதிக்க சமூகத்தினரின் நேரடியாக பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்களா? இல்லை. மீனவர்கள் இறந்ததற்கு பதில் ஐநூறு முக்குலத்தோர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் இப்பிரச்சனையின் அரசியல் பரிமாணமே வேறாக இருந்திருக்கும். இங்கு பெரும் போராட்டங்கள் வெடித்திருக்கும். இது தான் தமிழகத்தின் நிதர்சனம்.
கேரளா நம்மை விட சாதியம் வேரூன்றிய சமூகம் தான். ஆனால் அங்கு இடதுசாரி இயக்கங்கள் பல வருடங்களாக வலுவாக செயல்படும் பாரம்பரியம் உள்ளது. கம்யூனிஸம் எனும் தத்துவம் அம்மக்களை ஒருங்கிணைக்கிறது. திராவிட அரசியலுக்கு இந்த ஒருங்கிணைக்கும் வலு இல்லை. இங்கு கம்யூனிஸமும் பலவீனமாக இருந்து வந்துள்ளது. இதையும் கடந்து அவர்களால் ஒரு அரசியல் ஒருங்கிணைவை பொதுப்பிரச்சனைகளில் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அங்கு கொக்கோகோலாவுக்கும் இயற்கை சீரழிவுக்கும் எதிராக மக்கள் இயக்கமாக இணைந்து போராடியதை போல் ஒரு எழுச்சியை நாம் இங்கு கற்பனை செய்ய முடியாது. கூடங்குளம் கேரளாவில் நிகழ்ந்திருந்தால் அது தேசிய கவனத்தை ஈர்த்திருக்கும். பிரச்சனை என்றால் அடுத்த சாதிக்குத் தானே என்கிற மனப்பான்மை நமக்குள் வலுவாக உள்ளது. நமது பிரச்சனைகளுக்கு அடிப்படை திராவிட கட்சிகளின் சமசரமும் ஊழலும் மட்டுமல்ல மேற்சொன்ன சாதிய மனநிலையும் தான். தமிழர்களை சாதி கடந்து ஒருங்கிணைக்க எந்த சித்தாந்த சக்தியாலும் இன்று வரை இயன்றதில்லை. அனைத்து சமூக மக்களும் மெல்ல மெல்ல படிப்பறிவு பெற்று வரும் நிலையில் நமது சமூக கட்டமைப்பு சிறுக சிறுக குலைந்து வருகிறது. இனி அறுபதுகளில் நிகழ்ந்த அளவுக்கு கூட ஒரு மக்கள் எழுச்சி இங்கு எளிதில் சாத்தியப்படாது.
இந்த பின்புலத்தில் இருந்து பார்க்கும் போது மீனவர் கொலைகளை ஒரு “தமிழர்” பிரச்சனையாக தமிழ்தேசிய கொள்கையாக்கமாக மாற்றுவது எப்படி தோல்வியடைந்தது என நமக்கு புரிகிறது. அப்படிச் செய்வது பிரச்சனையில் இருந்து நம்மை திசைதிருப்பவே செய்கிறது. இலங்கை ராணுவம் சுடும் போது ஜெயலலிதாவை கிளர்ந்தெழுந்து மத்திய அரசை கேள்வி கேட்கவும் தனது காவலர்படையினர் அதே மக்களை கூடங்குளத்தில் தாக்கும் போது அமைதி காக்கவும் வைக்கிறது. ஏனெனில் முதலாவது “தமிழர்” மீதான தாக்குதல். இரண்டாவது “மீனவர்” மீதான தாக்குதல். கட்சிகளும் அமைப்புகளும் இரண்டு விசயங்களை அணுகுவதும் இவ்வாறான குழப்பத்தோடு தான்.
இன்னும் ஆழமாக யோசித்தால் இந்த இரட்டை மனநிலை ஒற்றை செயற்திட்டத்தோடு வரும் எல்லா குழுவினருக்கும் பொதுவானது எனப் புரியும். தமிழ்தேசியவாதிகள், திராவிட கட்சியினர், இந்துத்துவாவாதிகள், அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு கட்சியினர் என பலரும் தனிப்பிரச்சனைகளை மூடி மறைக்க ஆவேசப்படுவார்கள். பொதுவான ஒரு இலக்கை முன்வைத்து அதை அடைவதற்கு உள்சிக்கல்களை நாம் மறக்க வேண்டும் என கோருவார்கள். ஊழலுக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டும் என்பார்கள். கார்ப்பரேட்டுகளை எதிர்க்க மாட்டார்கள். கார்ப்பரேட்டுகளை மட்டுமே எதிர்ப்பவர்கள் தமது கட்சியின் சாதியத்தை கண்டுகொள்ள மாட்டார்கள். மொழி,இன அரசியலை மட்டுமே பேசுகிறவர்களின் கண்ணுக்கு வேறு மக்கள் பிரச்சனைகளே தெரியாது. சமூகப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாம் இந்த ஒற்றை செயற்திட்டக்காரர்களை எதிர்க்க வேண்டும். இன்று சின்மயியின் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் கிளம்பியிருப்பவர்கள் மீண்டும் பிராமணர் × பிராமணரல்லாதோர் என்கிற ஒற்றை கட்டமைப்பைக் கொண்டு மீண்டும் அசலான பிரச்சனைகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.
மலையாளிகளைப் போல் அல்லாது நாம் பிளவுபட்டவர்களக இருப்பதற்கு சாதியம் மட்டுமல்ல சாதியத்தை வசதியாக வாழ வைக்கும் போலி சாதிய எதிர்ப்பரசியலான பிராந்திய அடையாள அரசியலும் தான் பிரதான காரணம். நமக்குத் தேவை பிராந்திய அடையாள அரசியலை கடந்த கம்யூனிஸத்தைப் போன்ற ஒரு மனவிரிவைத் தரும் ஒரு பண்பாட்டு அரசியல் இயக்கம்.
இங்கு வசைபாடுவது யார்?
சின்மயியை ஆவேசமாக எதிர்ப்பவர்களை தமிழ்தேசியவாதிகள், சுதந்திர இணைய பயனர்கள் என இரண்டாக பிரிக்கலாம். இரண்டாமவர்கள் ராஜன், செந்திலுக்கு எதிராக போலியான குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டதை தான் எதிர்க்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவருமே ராஜனின் வக்கிரத்தை கண்டிக்கிறார்கள். ஆனால் இதன் பொருட்டு தன் இணைய சுதந்திரம் பறிபோகுமோ என இவர்கள் அனைவருக்கும் உள்ளூர பயம் வந்திருக்கிறது.
இணையத்தை நாம் பயன்படுத்த துவங்கிய காலத்தில் இருந்தே அந்தளவு அவதூறும் வசவுகளும் தினசரி தோன்றி வந்துள்ளது. இதையெல்லாம் செய்வது யாரென்று பார்த்தால் பொதுமக்கள் அல்ல. அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், மற்றும் அரசியல் ஆர்வலர்கள் தாம் அதிகமாக சர்ச்சைகளை இங்கு கிளப்பியவர்கள். தர்க்கரீதியாக சிந்திக்கவும் மொழியை சரளமாக பயன்படுத்தவும் தெரிந்தவர்கள் இணையவெளியில் ஒருசேர சச்சரவுகளில் ஈடுபட்ட போது நம்மிடையே இவ்வளவு கீழ்மையா என்ற வியப்பு வாசகர்களுக்கு ஏற்பட்டது. இரண்டு விசயங்களை இந்த அவதூறு கேளிக்கைகள் உணர்த்துகின்றன.
ஒன்று, இதுவரை நம் சமூகத்தில் வன்மத்தை, காழ்ப்புணர்வை, பரஸ்பர வெறுப்பை காட்டுவதற்கு சாத்தியப்பாடோ வெளியோ இருந்ததில்லை. ஏனென்றால் தமிழர்கள் நாம் வெளியே கண்ணியமாக இருக்க விரும்புபவர்கள். உணர்ச்சிகரமானவர்கள். மிக சீரியசானவர்கள். முதன்முதலாக இணையத்தை பார்த்த போது ஒரு பெரும் மூத்திர சந்தாக நாம் நினைத்து மழைநடனம் போட்டத்தில் ஒன்றும் வியப்பில்லை. இணைய செயல்பாடு நமக்கு ஒரு கொடுங்களூர் பூரப்பாட்டு ஆக ஆனது.
அடுத்து, இதுவரை குறுகின மனப்பான்மையுடன் ஒற்றை செயல்திட்டத்துடன் இயங்கி வந்த குழுக்களான சிறுபத்திரிகையாளர்கள், அறிவுஜீவுகள், தமிழ்தேசியவாதிகள், திராவிட அரசியல் அபிமானிகள், சாதிய அபிமானிகள், வலதுசாரிகள் ஆகியோர் தான் மிக அதிகமாக சர்ச்சை என்ற பெயரில் அவதூறு பரப்புபவர்கள். இவர்களின் பிரச்சனை தங்களது எளிய கொள்கையை கடந்து எந்த சமூக அரசியல் பிரச்சனைகளிலும் ஈடுபடவோ விவாதிக்கவோ மாட்டார்கள் என்பது. மே 17 இயக்கத்தினர் ஊழல் பற்றியோ, காஷ்மீர் முஸ்லீம்கள் பற்றியோ, கார்ப்பரேட் ஆதிக்கம் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள். மாவீரர் தினம் பற்றி ஆவேசமாக சர்ச்சை செய்வார்கள். ஆனால் பரமக்குடியில் இறந்தவர்களின் தினம் அவர்களுக்கு முக்கியமாய் இராது. இப்படியே ஒவ்வொரு ஒற்றை செயல்திட்ட வீரர்களும் இன்று இயங்குகிறார்கள்.
நமது இலக்கியவாதிகளும் இப்படி ஒற்றைபட்டையானவர்களே. நமது சிறுபத்திரிகை இயக்கம் வசைகள் மற்றும் சர்ச்சைகள் வழியே வளர்ந்ததாக ஜெயமோகன் கூறுகிறார். இன்று அவை தொகுப்புகளாக படிக்கக் கிடைக்கின்றன. உண்மையில் இவர்கள் அவற்றின் வழி எந்த ஒரு பெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தவோ உண்மையின் வெளிச்சத்தை கண்டடையவோ இல்லை என்பதை நாம் வாசித்து அறிந்து கொள்ள இயல்கிறது. எளிய சாதிய காழ்ப்புகளும் இடதுசாரிகள் திராவிட கட்சிகள் மீதான வெறுப்பும் தத்துவப் பிடிப்பில்லாத எளிய கருத்துகளும் தான் இன்று அவற்றில் இருந்து எஞ்சுகின்றன. சர்ச்சைகள் அர்த்தபூர்வமாக அமைய அவற்றுக்கு தத்துவ அமைப்பின் சார்பு வேண்டும். சார்த்தரின் சிமன் டி பூவரின் கருத்தாக்கங்கள் அவ்வாறே வளர்ந்து வந்தன. அல்லது சமூக அரசியல் ஈடுபாடு வேண்டும். மக்களோடு தம்மை அடையாளப்படுத்த வேண்டும். இவை ஏதும் இன்றி அறுபதுகளில் இருந்து ரெண்டாயிரத்து பத்துவரை நம் தமிழ் சிறுபத்திரிகை சர்ச்சைகள் வெறும் தனிநபர் மற்றும் இயக்க தாக்குதல்கள் மட்டுமாகவே இருந்து வருகின்றன. ஒரு தனிப்பட்ட உதாரணம் சொல்கிறேன். எனது முகநூல் பக்கத்தில் ஒருமுறை சிறுபத்திரிகைக்காரர்களை பொதுவாக கேலி செய்து எழுதினேன். சிபிச்செல்வன் எனும் ஒரு சிறுபத்திரிகைக்காரர் தோன்றி என்னை கடுமையாக திட்டினார். நான் அவரது கமெண்டை அழித்து விட்டு இன்னொரு பகடி எழுதினார். அவர் விடாமல் என்னை அவதூறு செய்து கொண்டே இருந்தார். என் முகநூல் தகவலில் பேராசிரியர் என்று இருப்பதை பார்த்து “உங்களைப் போன்ற பேராசிரியர்களுக்கு எங்கள் சிறுபத்திரிகைகளைப் பற்றி என்ன தெரியும்” என்று கோபமாக திட்டிக் கொண்டே இருந்தார். நான் கடந்த நான்கு வருடங்களில் நான்கு நூல்களும் நூற்றுக்கணக்கான பக்கங்களும் தமிழில் எழுதியிருக்கிறேன் என்பதை அறியும் பொறுமை கூட அவருக்கு இல்லை. எங்கிருந்தோ வந்தார், வசை பாடினார், சென்றார். அதாவது அவர் மாலேலா பற்றியோ முகேஷ் அம்பானி பற்றியோ நீங்கள் நிலைத்தகவல் எழுதினார் தோன்றமாட்டார். அலாவுதீன் விளக்கு போல சிறுபத்திரிகையாளர்களைப் பற்றி குறிப்பிட்டால் மட்டுமே சட்டென்று காற்றில் இருந்து தோன்றி எதிர்ப்பார். வேறு எதைப்பற்றியும் இவர்களுக்கு அக்கறை இல்லையா எனும் வியப்பு ஏற்படுகிறது. எப்படி ஒரு மனிதனால் வெறும் சிறுபத்திரிகை இயக்கம் பற்றி மட்டுமே அக்கறைக்கப்பட்டு எதிர்வினையாற்றி இருக்க முடிகிறது?
இப்படி ஒற்றை செயல்திட்டத்துடன் இருப்பது இந்திய சாதிய மனநிலையின் ஒரு வெளிப்பாடு தான். சிறுபத்திரிகை நடத்துபவன் அதைப் பற்றி மட்டுமே கவலைப்படுவது, நாம் தமிழர் இயக்கத்தினர் மாவீரர் தினம் பற்றி மட்டுமே பேசுவது எனபதே நெசவாளி நெசவு மட்டுமே செய்ய வேண்டும், பொற்கொல்லன் தங்கத்தை மட்டும் உருக்க வேண்டும் என்கிற பண்பாட்டு மனநிலையில் இருந்து தான் ஏற்படுகிறது. மனுதர்மத்தை எதிர்ப்பவர்கள் முதலில் இந்த ஒற்றை செயல்திட்ட மனநிலையை எதிர்க்க வேண்டும். இன்று இணைய வெளியில் தோன்றும் இது போன்ற ஒற்றைசெயல் திட்ட வீரர்களின் விவாதங்கள் ஆழமற்றவையாய் பயனற்றவையாய் இருப்பதற்கு இதுவே காரணம்.
வினவும் அ.மார்க்ஸும் எழுதியது போல இவர்கள் தமது சமூக அக்கறைகளை கொண்டு சராசரி நபரான சின்மயியிடம் ஏன் காட்ட வேண்டும்? மீனவர்கள் மீனைக் கொல்லுவது நியாயமா என நீங்கள் காஞ்சி சங்கராச்சாரியரிடம் கேட்டு விவாதிக்கலாம். சாதி ஒதுக்கீடு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனை சீண்டிப் பார்க்கலாம். இம்மாதிரி விசயங்களுக்கு எல்லாம் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் இருக்கும் போது ஏன் நாம் எப்போதும் கனிமொழி, குஷ்பு, சின்மயி என மென்மையான இலக்குகளை சினிமா நட்சத்திரங்களை தேடுகிறோம்? ஏனென்றால் நமக்கு அசலான பிரச்சனைகளில் எப்போதும் ஈடுபாடில்லை. மேலும், எம்.ஜி.ஆரை அரசியலுக்கு இழுத்த அண்ணாயிசத்தின் ஒரு நீண்ட வரலாறும் இதன் பின் உள்ளது.
இன்று ராஜன்லீக்ஸை ஆதரிப்பவர்கள் பயப்படுவது போல இணைய சுதந்திரம் எளிதில் பறி போவப் போவதில்லை. அதற்காக இந்த வழக்கின் காரணமாக இணையத்து வசைபாடிகள் திருந்தி விடப் போவதும் இல்லை. இதே போன்று நட்சத்திரங்களை அவதூறு பேசிக் கொண்டும், பிரச்சனைகளை நேரடியாக சந்திக்கும் துணிவற்றும், இணையத்தில் தாம் அறிவு சுதந்திரத்தோடு இயங்குவதான பாசாங்குடனும் நாம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கப் போகிறோம். கொஞ்ச நாள் பம்மி விட்டு வொய்ய்ங் என்று சிறகடித்து கிளம்பி விடுவார்கள். ராஜன் உள்ளிட்டோரை போலீஸும் பத்திரிகைகளும் கையாண்ட விதத்தின் நியாயத்தை அலசாமல் நாம் இதை விட கொடுமையான சமூக அவலங்களை நேரடியாக ஆழமாக அறிய முயல வேண்டும்.
ராஜன், செந்தில் போன்றோர் செய்தது குற்றம் தான். அதை சட்டரீதியாக எதிர்கொள்ள முடியாது என்று அறிந்தே காவல்துறை பொய்வழக்குகளை போட்டு ஊடகங்களில் திரித்து செய்து வெளியிட்டு அவர்களை துன்புறுத்தி வதைக்கிறது. எல்லாக் காலங்களிலும் அதிகார வர்க்கம் இவ்வாறு தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் நாம் ராஜனை முன்னிட்டு அதிகார துஷ்பிரயோகம் பற்றின ஒரு விவாதத்தை ஆரம்பிக்கலாமா என்பதே கேள்வி. அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் கார்ப்பரேட் எதிர்ப்பாளர்கள், அணு உலை போராளிகள், சாதிய கலவரங்களில் திட்டமிட்டு கொல்லப்பட்ட மக்கள் என ஏராளம் அசல் அரசியல் தியாகிகள் ஏற்கனவே இருக்கிறார்கள். அவர்களின் பீடத்தில் வெறும் அவதூறுக்காக பாலியல் வக்கிரத்துக்காக கைதானவரை நாம் வைத்து வழிபட வேண்டாம்.
சின்மயி×ராஜன் லீக்ஸ் சர்ச்சைக்கு விஜய்×அஜித் ரசிகர் சச்சரவு அளவுக்குத் தான் முக்கியத்துவம் உள்ளது. நாம் இந்த சர்ச்சை வழி நம் சமூகத்தின் போலி அரசியல் போராளிகளை மீண்டும் ஒருமுறை கண்டுகொண்டோம் என்பதே இதன் ஒரே பயன்.
Share This

2 comments :

  1. சின்மயியை ஆபாசமாகப் பேசியவர்கள் தண்டிக்கப் படட்டும்; அதே சமயத்தில் தலித்துகளையும் அவர்களின் இட ஒதுக்கீடு உரிமைகளைக் கொச்சைப் படுத்தி ட்விட் எழுதிய சின்மயியும் தண்டிக்கப் படத்தானே வேண்டும்! ஆபாசமாக ட்விட் எழுதுவது போலவே தலித்களைக் கேவலமாக ட்விடுவது அதை விடப் பெரிய குற்றமில்லையா? உங்களின் ஆசான் மனுஷ்யபுத்திரனுக்குத் தெரிந்த நியாயம் ஏன் உங்களுக்குப் புரியாமல் போயிற்று!

    ReplyDelete
  2. சோ.சுப்புராஜ்
    அதிகாரத்தில் உயர்மட்டத்தில் இருப்பவர்களை இந்திய திருநாட்டில் தண்டிக்க முடியாது. இதுவரை அப்படி நடந்ததாக வரலாறும் இல்லை. நான் நடைமுறைவாதி, மனுஷ் லட்சியவாதி. எனக்கு நீதி பரிபாலனத்தில் நம்பிக்கை இல்லை. அதிகாரத்தால் மட்டுமே அதிகாரத்தை அடக்கவும் வெல்லவும் முடியும். அதனாலே சின்மயியை கைது செய்ய வேண்டும் என நான் குரல் கொடுக்கவோ வழக்கிடவோ மாட்டேன். எனக்கு கீழ் ஒரு கட்சி இருந்தால் அவருக்கு எதிராக மாநிலம் முழுவதும் பேரணி நடத்துவேன். என்னிடம் அரசியல் பதவி இருந்தால் அவர் மீது எப்போதேனும் பொய் வழக்கு போடுவேன். தேசிய ஆங்கிலப்பத்திரிகைகளில் செல்வாக்கு இருந்தால் அவரைக் கண்டித்து எழுத வைப்பேன்.
    சட்டம், நீதி, அறம் இவையெல்லாம் நடைமுறையில் இல்லாத கற்பனை சமாச்சாரங்கள்.
    அதனாலே சின்மயியின் பக்கம் தவறுண்டு என்று கொதித்துக் கொண்டிருக்க மாட்டேன். எனது வாதமெல்லாம் நாம் சாதி குறித்து ஒரு வெளிப்படையான விவாதத்தை இத்தருணத்தில் நிகழ்த்த வேண்டும் என்பது தான்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates