Monday 20 July 2009

ஜெயமோகனின் கருடபுராணத் தண்டனை: : ஃபூக்கோவும் அமர்நாத்தின் ஒழுக்கவியலும்






அமர்நாத் என்பவர் ஜெயமோகனின் அரசியலை தாக்கி எழுதின கடிதம் (அல்லது வாசகரை எதிர் நோக்கி எழுதப்பட்ட கட்டுரை) சாருஆன்லைனில் பிரசுரமாகியுள்ளது. சுருக்கமாக, இக்கடிதம் ஜெவின் திரைமறை சதிராட்டங்களை அம்பலப்படுத்த விழைகிறது. இதன் ஒரே சுவாரசியம் இரவு விடுதி துகிலுரிப்பு போல் சிறிது சிறிதாக திரைமறைவு சேதிகளை வெளிப்படுத்துவது தான். படித்து முடித்ததும் அட தெரிந்ததுதானே என்று உங்களுக்குத் தோன்றும். இதற்கான பதிலில் சாரு "நான் கடவுள்" ஆர்யா பாணியில் வெற்றிலை மென்றவாறே முத்தாய்ப்பாக இதையெல்லாம் புட்டு வைக்கத்தான் நான் இருக்கிறேனே, 15 வருடங்களாக மல்லுக்கட்டுகிறேனே, நீயெல்லாம் ஏன் காலத்தை வீணடிக்கிறாய், வா உலக இலக்கியம் பேசுவோம்; கஸான்சாகிஸ், அப்துல் ரகுமான் முனீப்பின் படைப்புகள் பற்றி தரமான உரையாடல் நடத்தலாமே என்று அமர்நாத்தை அறிவுறுத்தி முடிக்கிறார். எனது இந்த பதிவின் நோக்கம் வாசகரை அக்கடிதம் நோக்கித் திருப்புவதோ மேலும் செருப்படி வார்த்தை விளையாட்டை நீட்டிப்பதோ அல்ல. வலுவான விமர்சன அளவுகோல்களோ, தர்க்கப் பின்னணியோ இன்றி இலக்கிய ஆளுமைகள் பரபரப்புக்காக தாக்கப்படுவதை, இந்த தாக்குதல் பின்னுள்ள ஒழுக்கமனப்பான்மை, மற்றும் ஆதர்ச ரீதியிலான எதிர்பார்ப்புகளையும் ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

எனது முதல் கேள்வி: தினசரி வாழ்வில் எத்தனையோ வசைகள், பொய் பித்தலாட்டங்களை தாங்கும் நாம் இலக்கியப் பரப்பில் ஒரு உன்னதமான நிலையை ஏன் எதிர்பார்க்கிறோம்? எழுத்தாளனை ஏன் லட்சியப்படுத்துகிறோம்? ஜெயமோகன் இயக்குனர்கள் முன் ஆதாயத்துக்காக புழுவாய் குழைவதை கண்டிக்கும் அமர்நாத் தன் தனிப்பட்ட வாழ்வில் யாரையும் ஜால்ரா போட்டதில்லையா? கூஜா தூக்காத மனிதனே பூமிப்பரப்பில் இல்லை எனலாம். இலக்கியவாதியும் தினசரி வாழ்வுத் தளத்தை சேர்ந்தவன் தானே? இலக்கியவாதி ஆதர்ச நாயகனாக இருந்த காலம் கற்பனாவாத சகாப்தத்துடன் முடிந்து விட்டது. எழுத்தாளனை அவனது அரசியலுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியது இன்றைய சூழலின் கட்டாயம். எந்த அணுகுமுறைச்சாய்வும் இல்லாதவன் மன நிலை பிறழ்ந்தவன் மட்டுமே. அவன் எழுத்தாளனாக முடியாது. உலகவாழ்வின் பாசாங்கு, குழிபறித்தல், கபடம் எழுத்தில் நுழைந்தால் அதை தர்க்கரீதியாக எதிர்கொண்டு, மறுக்கலாம், மௌனிக்கலாம்; உணர்ச்சிவசப்பட்டு எதிர்ப்பது மடத்தனம். 



மேற்குறிப்பிட்ட வலைமனையில் ஜெவை வைய தேவடியா, பிம்ப் (மாமா), கருட புராணத் தண்டனை ஆகிய பதங்களை அமர்நாத் மற்றும் சாரு பயன்படுத்தப்படுத்துகிறார்கள். இதை நாம் ஆராய வேண்டும். சமூகத்தை கட்டுப்படுத்த விழையும் உயர்குடி, பிராமணீய, ஒழுக்கவியல் பயன்பாடுகள் இவை. பழங்கால அரச சமூகத்தில் பொதுப்பார்வைக்கு முன் குற்றவாளிகளை தாக்கி அழிக்கும் தண்டனை முறைகள் இருந்தன. ஃபூக்கோ தனது "ஒழுக்கமும், தண்டனையும்: சிறையின் பிறப்பு" எனும் நூலில் இந்த வகை தண்டனைக்கு இரு கூறான நோக்கங்கள் உண்டு என்கிறார்: எதிர்பார்த்த, எதிர்பாராத நோக்கங்கள். பொதுமக்கள் முன்னிலையிலான தண்டனையின் போது குற்றவாளியின் உடல் அவனது குற்றத்தை மறுஒளிபரப்பு செய்யும் டி.வி. சானல் போல் ஆகிறது. அதாவது இப்படியாகப் பட்ட குற்றத்தை செய்திருக்கிறான் என்பதை மக்களுக்கு உணர்த்துவது. அடுத்து சட்டம் என்கிற தனது உடல் நீட்சியை காய்ப்படுத்தியதற்காக குற்றவாளியின் உடல் மீது அரசாங்கம் பழி தீர்த்துக் கொள்கிறது. எதிர்பாராத நோக்கம் என்னவென்றால், குற்றவாளியின் உடல் மீது பெரும்பாலான கட்டங்களில் மக்களுக்கு இரக்கம் ஏற்பட்டு அதனால் அரசாங்கத்துக்கு பாதகமான கலகங்கள் விளைகின்றன. இந்த கடைசிக் கூற்றுக்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பாசாங்கு, பித்தலாட்டத்தின் அடிப்படையில் ஜெவை கூண்டில் ஏற்றி தீர்ப்பு சொல்லி தண்டனை விதிப்பது ("மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டாம்; கருட புராணத்தில் தண்டனை உண்டு") தன்னை நியாயப் பீடமாக கற்பிக்கும் கடித ஆசிரியரின் ஒழுக்கவியல், மேட்டுக்குடி மனப்பான்மையை குறிக்கிறது. ஃபூக்கோவை பொறுத்த மட்டில் இது பூர்ஷுவா நிலைப்பாடு. இதன் எதிர்பாரா விளைவு (பச்சாதாபம்) ஜேவுக்கு ஆதரவாக அமையலாம்.

பிரபல ஆளுமைகளை போற்றுதலும், தூற்றுதலும் வலுவற்ற வாசகப் பரப்பின் நோய்க் கூறுகள். நுட்பமான அறிதல் அற்ற வாசகர்கள் எதை சார்வது என்று புரியாமல் ஆரம்பத்தில் தடுமாறுவார்கள்; பாதுகாப்பின்மை போக்க குழுக்களில் இணைவார்கள்; அவதூறுகள் கிசுகிசுப்பார்கள். இறுதியாய் வழிபாட்டு, எதிர்நிலை பிம்பங்களை ஏற்படுத்துக் கொள்வார்கள். ஒரு தேர்ந்த வாசகனுக்கு எழுத்தாளனின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு மீது கசப்பு ஏற்படாது. அப்படி நேர்ந்தால் அவன் போன தலைமுறை ஆதர்சவாதத்தின் எச்சமாக மட்டுமே இருப்பான். எழுத்தாளன் பிரதிநிதி அல்ல; அவன் தனிக்குரல் மட்டுமே. கடல் ஆரவாரத்தினிடையே ஆயிரம் முறைகளில் ஒன்றாய் கரையில் உடையும் ஒரு அலை அவன். 


நமது வாசகர்கள் பரந்து பட்ட, ஆழ்வாசிப்பின் முதிர்ச்சியையும், விழிப்புணர்வையும் பெறும்போது மட்டுமே இத்தகைய பாதுகாப்பின்மை பதற்றம் குறைந்து, சச்சரவுகள் நிற்கும். நமக்கு அவசியம் ஜெ போன்ற பிரபல ஆளுமைகளை ஒழுக்க சிலுவையில் அறைவதல்ல. திட்டவட்டமான கருவிகளுடன அவரது படைப்புகளை விமர்சித்து அறுதியிடுவதே. சாரு எச்சிற் பருக்கை கையுடன் அவசரமாக "ஜெவின் படைப்புகளை புறக்கணியுங்கள்" என்று வேண்டாமல், அதற்கான காரணங்களை தர்க்க ரீதியாக பட்டியலிட வேண்டும். (உதாரணமாக, அவரது விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் ஆகிய நாவல்களில் லட்சியவாதிகள், அவர்களின் வீழ்ச்சிக்கு இன்றைய பின் நவீனத்துவ யுகத்தில் ஏற்படும் சமகாலமற்றத்தன்மை, பொருத்தமின்மை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் ). இதுவரை ஜெவின் படைப்புகளை பற்றின நுட்பமான விமர்சன மறுப்புகள் எழுந்ததில்லை. நாம் திரும்பத்திரும்ப சொல்வதெல்லாம் அவர் இந்துத்துவாவாதி, ஆதிக்கவியலாளர், அரசியல் சூழ்ச்சிக்காரர் என்பதே. இந்துத்துவா கட்சி இன்று இந்தியாவின் பெரும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அதன் குரலாக ஒரு நபர் இருப்பதில் என்ன தவறு. அல்கொய்தாவின் நிலைப்பாட்டை ஆதரிக்க இணையதளம் இல்லையா? இடதோ வலதோ தீமைக்கும் நன்மைக்கும் ஒரு வலுவான கருத்துத் தளம் தருவது இன்றைய காலத்தின் அவசியம். இடது கையோ, வலது கையோ வலுவுற்றால் நிச்சயம் அடிக்கத்தான் ஓங்கும். ஒருவர் ஆதிக்க சக்தி ஆதரவாளர் என்றால் கண்டிக்க தேவை இல்லை. அவரது அடிப்படையில் உள்ள ஓட்டையை மட்டுமே கவனித்து விவாதிக்க வேண்டும். 

ஒரு ஆளுமையின் அரசியல் காய் நகர்த்தல்களை நிர்வாணப்படுத்தல் அறிவுத்தளத்தின் பணி அல்ல. ஆதிக்க அரசியல் இன்றைய மனித இயல்பு. நமது களம் மனித மனத்தின் நுட்பங்கள் பற்றின தேடலாகவே இருக்க வேண்டும். 

உயிர்மையின் தரம் பற்றின ஜெவின் கேள்விக்கு பதில் "வார்த்தை" வலதுசாரி இதழ் என்று சொல்லுவதல்ல. ஒரு மாதாந்திர இதழான உயிர்மைக்கு பரந்துபட்ட வாசகர்களை சென்றடையும் நோக்கம் உள்ளது. பக்கங்களை நிரப்பும் நிர்பந்தம் உள்ளது. தீவிர, வணிக இதழ் வாசகர்களுக்கு இடையிலான ஒரு பாலமாகத்தான் உயிர்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆழமான கட்டுரைகளை சுவாரஸ்யமாக, தொடர்ச்சியாக எழுதும் எழுத்தாளர்கள் எத்தனை பேர் நம் இலக்கியப் பரப்பில் உள்ளனர்? ஆங்கிலத்திலிருந்து கோட்பாட்டு எழுத்தை தமிழில் பிரதியெடுப்பதை நான் குறிப்பிடவில்லை. புதிய கலை, அறிவியல், சமூக, வரலாற்று அணுகுமுறைகளை நம் சூழலுக்கு அல்லது தலைமைப் பொருளுக்கு பொருத்தி அவதானிக்கும் மிகச்சில எழுத்தாளர்களே உள்ளனர்; ஒரு மாதாந்திர பத்திரிகைக்கு அவர்களால் மட்டுமே தீனி போட முடியாது. உயிர்மை அனைத்து எழுத்தாளர்களுக்குமான பொதுத் தளம். தீவிர ஆய்வுப் பின்னணி மற்றும் தயாரிப்புடன் உருவாக்கப்படும் கட்டுரைகளை "உயிர்மை" எதிர்பார்க்கிறது என்பதே உண்மை. மிக முக்கியமான படைப்புகளுடன் பலவீனமானவையும் வெளிவந்தால் அது நம் தமிழ்ச்சூழலின் பிரதிபலிப்பு தான். எழுத்தாளர்களின் மறுபிம்பம் தான் பத்திரிகை. உயிர்மையில் தொழில் நுட்ப ரீதியிலான ஆழமான சினிமா விமரசனங்களை வெளியிடாதது பற்றி நான் அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரனிடம் கேட்டிருக்கிறேன். தமிழில் அத்தகைய திரைவிமர்சகர்கள் இல்லை என்பதே அவரது பதில் (இதையே "கற்றது தமிழ்" ராமும் "புதிய பார்வை" பேட்டி ஒன்றில் குறிப்பிடுள்ளார்). மற்ற துறை சார்ந்த படைப்புகளின் பஞ்சத்திற்கும் இப்பதிலே பொருந்தும் என நினைக்கிறேன். ஜெவின் திருப்திக்காக வேண்டுமானால் எச்.பீர்முகமது உயிரொசையில் எழுதின சில தத்துவக் கட்டுரைகளை உயிர்மையில் மறுபிரசுரித்து மிரட்டலாம். 

 மேலும் ஜெயன் உயிர்மைக்கு செய்வது போல் ஒருவர் தனக்குப் பிடித்த மூன்று பத்திகளை மட்டுமே படித்து பத்திரிகையை வீசினாலும் அது பிரச்சனை அல்ல. நமது இன்றைய முடிவற்ற ஊடக வெளியில் தரம் என்பதற்கு பொது அளவுகோல் அமைப்பது சிக்கலானது. தரம் தனிமனித தீர்வு சார்ந்தே அமைகிறது. இந்நிலைக்கு இன்றைய இணைய, பதிப்பு, டி.வி.ஊடகங்களில் மையமற்று அலைவுறும் விவாத சச்சரவுகள் (இவ்விவாதத்தையும் உள்ளிட்டு) உதாரணம்.

கடைசியாக "நொண்டி நாய்" விவகாரம் பற்றி. ம.பு இவ்விவகாரத்தில் சமயோசிதமாகவே நடந்து கொண்டிருக்கிறார். இதில் எதிர்கால பதிப்பாளர்களுக்கு பாடம் உள்ளது. சண்டை சச்சரவுகள் மத்தியிலும் தமிழின் மும்மூர்த்திகள் ஜெ, எஸ்.ரா, சா.நி ஆகியோர் உயிர்மை பதிப்பகத்துக்காக தொடந்து எழுதி வந்துள்ளதை கவனியுங்கள். அரசியலில் போலவே தொழிலிலும் எதிரிகளை பயன்படுத்துவது அல்லது நண்பர்களாக்குவது அவசியம். இலக்கிய மும்மூர்த்திகள் ஒரே படகில் வாளேந்தியபடி வெவ்வேறு சுருதிகளில் முழங்கியபடி பயணித்ததனாலே பல முக்கிய நூல்கள் நமக்குக் கிடைத்தன. 

அடுத்து, ஊனர்கள் தங்கள் சமூக உறவாடல்களின் போது தங்கள் உடல் வித்தியாசம் பற்றின பல வசைகளை கேட்டு பல்லிளிக்க வேண்டியுள்ளது. தலித்துகளை அவரகள் சாதிப் பெயர் குறிப்பிட்டு வைதால் நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஊனர்களை பாதுகாக்கவும் இத்தகைய சட்டம் வேண்டும். அத்துடன், "தேவடியாளுக்கு" நேர்ந்தது போல் "நொண்டி" எனும் தட்டையான வார்த்தைக்குப் பதிலீடாக வேறு பொருத்தமான, வாயில் நுழையாத சொல்லை அல்லது சொற்றொடரை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் அனைத்து கால் ஊனர்களும் நொண்டுவதில்லை. சக்கர நாற்காலிக்காரர்களை உதாரணமாக சொல்லலாம். அப்படிச்செய்தால் "நொண்டி" ஒரு பொது வசையாக மாறும் (நிலையற்ற தன்மை கொண்ட பிரபல எழுத்தாளரை "அட நொண்டி" என அழைக்கலாம்)---ஊனர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.

 
Share This

9 comments :

  1. அன்பு அபிலாஷ் ,

    உயிரோசையிலும் , இங்கும் உங்கள் நல்ல கட்டுரைகளை தொடர்ந்து படிக்கிறேன் ,

    நிறைய புதிய சிந்தனைகளை தூண்டுகிறது , நன்றி

    ReplyDelete
  2. Your writing is good but I dont like the subject you have written.

    I hope you will write on other subjects too, there I will read fullly.

    ReplyDelete
  3. கருத்துக்களத்தனையையும் எழுத்தாய் வடிப்பதன் சூட்சுமம் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். அதே ஆசையை உங்களைப் படிக்கும்போது பொறாமையாக உணருகிறேன். தொடர்ந்து கலக்குங்கள்..!

    ReplyDelete
  4. நல்லவன் என்று ஒருவனை சொல்ல நாம் வைத்திருக்கும் அளவுகோல்கள் மேலோட்டமானவை. அவை வெளிப்படையானவை. திருடாதிருத்தல், பொறாமை படாதிருத்தல், கொலை செய்யாதிருத்தல் etc போன்றவையே அந்த அள‌வுகோல்கள். LKGயில் இருந்து இதையே சொல்லி த‌ருகின்றார்கள். நல்லவன் என்று ஒருவனை சொல்ல வெளிப்படையாக தெரியாத நுட்பமான அளவுகோல்கள் உண்டு. அதில் ஒன்று கொஞ்சமே கொஞ்சம் சிறப்பில்லாத ஒன்றை ரொம்பவே சிறப்பில்லாத ஒன்றின் உருவகமாய் காணும் மனித மன இயல்பு.

    நொண்டி வேறு ஊனம் வேறு என்கின்றீகள். தர வேறுபாடு உள்ளது என்கின்றீர்கள். உண்மையே. மனிதர்கள் பொதுவாக சிறப்பான விஷயங்களை மட்டுமே தரம் பிரிப்பாகள்(உதா:பிகர், கட்டை, அழகி, தேவதை)....சிறப்பற்ற விஷயங்களை தரம் பிரிக்க யாருக்கும் பொறுமை இல்லை. சுயநலம். சிறப்பற்ற விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு மார்க் தான் விழுகும் என்றாலும் தரம் பிரிக்க மாட்டார்கள். கொஞ்சமே கொஞ்சம் சிறப்பில்லாத ஒன்றைக் கூட ரொம்ப ரொம்ப சிறப்பில்லாத ஒன்றின் 'உருவகமாய்' மட்டுமே காண்பார்கள்.(இந்த கருத்தை வந்தடையவே முன்பு உருவகம் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தேன்.)

    அதனால்தான் 10 ரூபாய் பிக்பாக்கெட் அடிக்கும் ஒருவனுக்கு 50000 கோடி ஊழல் செய்தவனுக்கு தர வேண்டிய தர்ம அடியை தருகின்றார்கள். மனிதர்களை பொறுத்தவரை இந்த ரெண்டு பேரும் ஒன்று. ஆகவே உங்களை நொண்டி என்று மட்டுமே சொல்வார்கள்.

    நொண்டிக்கு 100 குசும்பு என்பார்கள். நான் கூட கண்டிருக்கின்றேன். நொண்டியை நம்பக் கூடாது. ஊனனையும் நம்பக் கூடாது.

    ReplyDelete
  5. நல்ல கூர்மையான பார்வை d. நீங்கள் சொல்வது போல் யோசிப்பது மனித இயல்பே. அதன் நோக்கம் ஆற்றல் சிக்கனம். இலக்கிய பயிற்சியும் வாசிப்பும் நம்மை அதில் இருந்து விடுவிக்க வேண்டும்.

    ReplyDelete
  6. ஜே.கே வின் சில நூல்கள் தவிற வேறு எந்த ஒரு உளவியல் நூல்களும் படித்ததில்லை நான்.

    எனக்கு இலக்கிய பயிற்சி எல்லாம் கிடையாது.(புத்தகம் படித்தே 2 வருடங்கள் ஆகி விட்டன. படிக்கவும் பிடிக்கவில்லை. அவை எதார்த்தத்தை பேசுகின்றனவே ஒழிய ஒரு ஞானியைப் போல் உண்மையை பேசுவதில்லை. எதார்த்தம் என்றால் பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாகவும் நம்புவது)

    உருவகம் என்ற வார்த்தை கிடைக்கும் முன்னரே மேற்சொன்ன கருத்தை நான் அனுபவத்தில் அடைந்து விட்டேன். கருத்துதான் முக்கியம். அதை சுட்ட வார்த்தை கிடைக்காவிட்டால் கூட நான் என் வசதிக்கு ஞாபகம் வைத்துக் கொள்ள ஏதாவது ஒரு வார்த்தையை போட்டு விடுவேன். வார்த்தை கூட மறந்து போகலாம் என்பதால் ஏதாவது ஒரு உருவத்தை அந்த கருத்திற்கு தந்து அதை மனதில் பதிய வைத்து விடுவேன்.

    ReplyDelete
  7. //அதன் நோக்கம் ஆற்றல் சிக்கனம்//--> you are wrong.

    உயிறற்ற பொருட்களில் சிறப்பில்லாத பொருள்களை தரம் பிரிக்கவில்லை என்றால் அதற்கு காரணமாய் மட்டும் 'ஆற்றல் சிக்கனத்தை' சொல்லலாம். உயிருள்ள மனிதர்களில் தரம் இல்லாதவர்களை தரம் பிரிக்காமல் இருக்கக் காரணம் ஆற்றல் சிக்கனம் அல்ல. எப்படி முடிவு செய்தால் 200% self securityக்கு உதவுமோ அப்படி யோசிப்பதுதான் தரம் இல்லாதவர்களை தரம் பிரிக்காமல் அவர்கள் யாவரும் ஒன்றே என எண்ணக் காரணம்.

    ReplyDelete
  8. நீங்கள் சொல்லும் சுயபாதுகாப்புக்காக மனிதன் பார்க்கும் கேட்கும் விசயங்களை ஒரு சட்டகத்துள் நுழைக்கிறான். அது சிந்தனையை தட்டையாக்கினாலும் தேவையானது தான்.

    ReplyDelete
  9. அது தேவைதான் என்கின்றீர்கள். எனக்கு இதில் கொஞ்சம் உடன்பாடு உள்ளது. ஆனால் முழுமையான உடன்பாடு இல்லை. Bcoz, சிந்தனையோடு சேர்த்து இதயத்தையும் இது தட்டையாக்குகின்றது


    ஒரு சம்பவம்.

    என் ஸ்கூல்மேட் ஒருவன்(say X) இன்று doctor.

    12 ஆம் வகுப்பில் பப்ளிக் எக்சாமில் பயலாஜியில் fail ஆகி விடுவேன் என்ற சூழ்நிலை. கண்டிப்பாக fail என்று வினாத்தாளை பார்த்தவுடன் முடிவு செய்து விட்டேன். 25 ஒன் வேர்டுகளை யாராவது காட்டினால் அதை வைத்து மட்டுமே நான் pass ஆக முடியும் என்ற சூழ்நிலை. எனக்கு இடது புறம் ஒரு ஐயர். வல‌ப்புறம் ஒரு ஐயர். அந்த இருவரிடமும் choose d best answer(total 10), fill in the blanks(total 10), மற்றும் match the following(total 5)ஆகியவற்றை காட்டச் சொன்ன போது என்னை கண்டு கொள்ளவே இல்லை.

    ஆனால் டாக்டர் ஆகிய தீர வேண்டும் என்ற ambitionனோடு ஒரு வருடம் முழுவது கடினமாய் படித்த‌X எனக்கு பின்புறம் பரீட்ச்சை எழுதிக் கொண்டு இருந்தான். அவனிடம் திரும்பி 25 ஒன் வேர்ட்களுக்கான ஆன்சர்களை சொல்லச் சொன்னேன். choose d best answersகளுக்கு விரல் மூலம் பதில் சொல்லி விட்டான். match d followingற்கும் விரகள் மூலம் சொல்லி விட்டான். Fill in blanksற்கு வாயால் கத்தி கத்தி சொன்னான். Flying squardயிடம் மாட்டிக் கொண்டோம். அவர் warn செய்து விட்டு போய் விட்டார். அதன் பிறகும் அந்த X என் மேல் கொண்ட அக்கறையினால் அவனது நன்மையையும் ambitionயும் பொருட்படுத்தாமல் fill in d blanksற்க்கு answersஐ கத்தி கத்தி சொன்னான். இன்னொரு முறை flying squardயிடம் மாட்டியிருந்தால் அவனது பேப்பர் பிடுங்கப்பட்டிருக்கும். ஒரு வருடம் முழுவதும் அவன் படித்த படிப்பு வீண் ஆகியிருக்கும். இன்று அவன் டாக்டர் ஆகியிருக்கவும் முடியாது. இருந்தும் அவன் என் மேல் கொண்ட அக்கறையினால் உதவினான். இத்தனைக்கு அவன் எனக்கு நண்பனும் இல்லை. வெறும் கிளாஸ்மெட். அவ்வ‌ளவே.

    இப்படிப்பட்ட நல்ல இதயம் உள்ள X பெண்கள் என்றால் விழுந்து விடுவான். ஆகவே அவனுக்கு அந்த விஷயத்தில் வீக் என்ற முத்திரை குத்தப்பட்டு அவனது நண்பர்கள் சிலரைத் தவிர மற்றவர்களால் ஒதுக்கப்பட்டான். இன்றும் கூட அழகிய தங்கைகளை உடையவர்கள் அவனைக் கண்டால் உஷார் ஆகின்றார்கள்.(I don't have a sister) :)

    அவன் தரம் இல்லாதவனா?
    தரம் என்பதற்கு நம் அளவுகோல் என்ன?

    பெண் விஷயத்தில் X வீக் என்பதால் அவன் எல்லா விஷயத்திலும் மிகப் பெரும் அயோக்கியனாக மட்டுமே இருப்பான் என பலர் கற்பனை செய்து கொண்டு செயல்பட்டார்கள்.

    So, எப்படி யோசித்தால் நாம் 200% securedடாக இருப்போமோ அதை முழுவதுமாய் நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

    அதாவது சில விஷயங்களில் தரம் இல்லாதவனை எல்லா விஷயத்திலும் தரம் இல்லாதவனின் உருவகமாய் காண்பது(கற்பனை செய்வது) மனித மனதின் இயல்பு. இது தவறு என்கின்றேன்.

    அது தேவையானது என்று நீங்கள் சொல்வதை எல்லா சமயங்களிலும் எல்லாருக்கும் பொருத்திப் பார்க்கக் கூடாது.

    பிம்பங்கள் தட்டையானவை என்கின்றார் ருத்ரன். அதன் முப்பரிமானத்தை நாம் காண்பதில்லை என்கின்றார் அவர். தட்டையான பிம்பம் ஒன்றில் கொஞ்சம் அழுக்கு இருந்தால் எல்லாப் பக்கமும் அழுக்கு என்றே நினைக்கின்றார்கள்.(நானே பல சமயங்களில் self securityக்காக‌
    அப்படித்தான் நினைக்கின்றேன்.)...இப்படி நினைக்கும் மனிதர்களில் எவனாவது Xன் இடத்தில் இருந்திருந்தால் எனக்கு 25 one wordகளை சொல்லி தந்திருப்பானா என்று யோசிக்கையில் ஒன்று புரிகின்றது.

    'நல்லவன்' என்று ஒவ்வொருவனும் தன்னை நம்பிக் கொள்ள அவன் வைத்திருக்கும் அளவுகோல் அவனால் மிக மிக எளிமையாக கடை பிடிக்கக் கூடிய அளவுகோல்கள் மட்டுமே.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates