Wednesday 6 October 2010

பல் குத்துவது எத்தனை முக்கியம்?




எனக்கு ராசி, அதிர்ஷ்டம், விதி ஆகிய பிரயோகங்களில் நம்பிக்கை இல்லை. இவற்றில் மானுட மனஊக்கம் கலந்துள்ளது. சந்தர்ப்ப சுழற்சிகளில் ஒரு குருட்டத்தன்மை இருப்பதே உண்மை. அதனால் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்றெல்லாம் சொல்லும் போது ஒரு கருத்து தன்னிச்சையாக உருவாகிறது. சந்தர்ப்ப மாற்றங்கள் ஒரு பெரும் மானுட அல்ல பிரபஞ்ச நன்மையை நோக்கி செலுத்தப்படுவன என்பதே அது. எனக்கு இறுதிகட்ட பிரபஞ்ச நன்மையில் நம்பிக்கை இல்லாததால் முக்கியமற்ற அன்றாட பேச்சில் மட்டுமே இவற்றை புரட்ட தலைப்படுவேன். ஆனால் இப்போது என் வாழ்க்கைப் போக்கின் நெளிவு வளைவுகளை பேச நினைக்கையில் சற்று சங்கடமாகிறது. ஆனாலும் ’ராசியுடனே’ ஆரம்பிக்கிறேன்.


எனக்கு வேலை விசயத்தில் அதிக ராசி இல்லை. அதாவது மனநிறைவு மற்றும் மகிழ்ச்சியை பொறுத்தமட்டில். 2006-இல் மாலைமலரில் செய்த வேலை எனக்கு மிகப்பிடித்தமான முதல் பணி. ஆனால் சில மாதங்களிலேயே எங்கள் குழு கலைந்தது. நானும் கிளம்ப வேண்டியதாகியது. பிறகு கிரீம்ஸ் ரோடில் ஒரு தனியார் நிறுவனத்தில் செய்திகளை சுருக்கி எழுதும் பணி பட்டியலில் இரண்டாவது. சில மாதங்களில் லே ஆப் என்று மென்னியை பிடித்து தள்ளினார்கள். பிறகு மூன்றாவதாக தற்போதுள்ள கல்லூரி வேலை. கல்லூரி வேலையில் மகிழ்ச்சியோடு காலவசதியும் ஒரு தனிச்சிறப்பு. ஆனால் அங்கும் ஒரு சிக்கல்.
எம்.பில் படிப்பை தொலைதூர கல்வி முறையில் முடித்தேன். வெகுவாக தாமதித்து சமீபமாகத்தான் ஆய்வை சமர்ப்பித்தேன். 2009 மேமாதத்துக்குள் எம்.பில் முடிக்காதவர்களை வீட்டுக்கு அனுப்ப ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்கள். ஆகையால் கல்லூரியில் இருந்தும் விரைவில் வெளியேற்றப் பட்டு விடுவேன். இதற்கு பின் இன்னொரு கதை உள்ளது. 2005இல் நேரடி எம்.பில் வகுப்பில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்பாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட நான் நேரடி எம்.பிலில் இருந்து விலகி உடனே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஒரேயடியாக பி.எச்.டி முடித்துவிட்டுத் தான் கிளம்பியிருப்பேன். கிறித்தவக் கல்லூரி மீது அப்படி ஒரு காதல் எனக்கு. இந்த அரசாணை பற்றி எனது துறைத்தலைவர் அழைத்து சொன்ன போது எனக்கு 2005-இல் பாதி கட்டணத்தை திரும்ப வாங்கி படிப்பில் இருந்து விலக நேர்ந்த அவலம் நினைவு வந்தது. இளங்கலை முதுகலை சேர்த்து ஐந்து வருடங்கள் நான் முதல் மாணவனாக வந்தேன். முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்றேன். என்னை விட பத்து பதினைந்து சதவீதம் குறைவாக மதிப்பெண்கள் பெற்ற சகமாணவர்கள் வசதியாக எம்.பில் படிக்க முடிந்ததை நினைக்கும் போது அநியாயமாக பட்டது. எத்தனையோ கவனிக்காமல் விடப்படும் அன்றாட தருணங்கள் போல் இச்சம்பவங்களை கோர்த்துப் பார்க்க ஒரு கதை உள்ளதாக தோன்றியது. துரதிஷ்டத்தின் கதை. என் விதியை கொஞ்ச நேரம் நொந்த பிறகு விதியே இல்லையே என்பது நினைவு வந்தது. (பிடிக்காத சில வேலைகளில் இருந்துள்ளேன். அங்கிருந்து நானாக கழன்று கொள்ள வேண்டும். அவர்களாக அனுப்பவே மாட்டார்கள்; எத்தனை மோசமாக பணி செய்தாலும், நடந்து கொண்டாலும்.)

இது போன்ற அல்லது மேலும் மோசமான ராசி பலருக்கும் இருந்திருக்கலாம்/இருக்கலாம். கண்ணீர்க் கதைகள் அதிகம் நினைவில் தங்கி இருக்கின்றன. அவற்றை மீட்டுவதில் அகங்காரம் கொஞ்சம் சுகம் காண்கிறது. சொறிந்து சுகம் காண்பது நமது நோக்கமல்ல அல்ல என்பதால் அதற்காக நான் இத்தனையும் சொல்லவில்லை. இப்படி சந்தப்பங்களை கதைப்படுத்தும் அபத்தம் ஏன் நடக்கிறது? வாழ்க்கையில் அப்படி ஒரு கட்டமைப்பு தர்க்கம் இல்லையே! வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பது பற்றி ரசல் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்: Conquest of Happiness. அதில் மனிதனின் ஒரு ஆதாரப் பிரச்சனையை சுட்டுகிறார். சதா வாழ்க்கையை அர்த்தப்படுத்துவது. அதுவும் அகங்காரத்தை சும்மா சும்மா தொட்டு நக்கியபடி. இது குறைபட்ட உண்மையையே நமக்கு காட்டுகிறது. அதனால் மனிதன் வாழ்க்கையை நிறைவு செய்யப்படாத ஒரு கதையாக கற்பித்து அதில் தனக்கு மிகுந்த உணர்வெழுச்சி தரும் சம்பவங்களை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்பி வருகிறான். பிறரிடம் அரட்டையடிப்பது இதனாலேயே சுகமான ஒன்றாக உள்ளது. ஆனால் தர்க்கரீதியான கதையாக வாழ்க்கையை புனைவு செய்வது மகிழ்ச்சிக்கு எதிரானது. பிரக்ஞையை மறந்து விட்டு மனதின் தர்க்க மாவு மிஷினை அணைத்து விட்டு பிடித்த விசயங்களில் திசை திரும்பி ஈடுபடுவதே மகிழ்ச்சியின் திறவுகோல் என்று வலியுறுத்துகிறார் ரசல். எப்படியாயினும் தர்க்கம் என்கிற அருமையான கருவியைக் கொண்டு அகங்காரத்தை முதுகு சொறிவது வீண் தான். அதற்கு தேமேவென்று ’பொழுது போக்கலாம்’.
அடிக்கடி பல்குத்த வேண்டும் தான். நமது வாழ்க்கை சேதி முக்கியம் தான். ஆனால் ஒன்றும் அத்தனை முக்கியமில்லையே!
Share This

3 comments :

  1. வாழ்க்கையை சதா துரத்தியபடி வாழ்வதில் உள்ள பெருமிதத்தை இழக்காமல் இயங்க வாழ்த்துகிறேன். நேரடியாக உங்களை எனக்குத் தெரியாதெனினும் ரசலினுடைய வார்த்தைபடி உங்கள் விருப்பம் போல் வேலையும் அமைய வாழ்த்துக்கள். உங்களின் ஏனைய பதிவுகளை மௌனமாக வாசித்துவிட்டு இதற்கு மட்டும் ஏன் பின்னூட்டமிடுகிறேன் என்பது எனக்கே விளங்கவில்லை.

    ReplyDelete
  2. நன்றி ரெட்டைவால்ஸ் மற்றும் செல்வேந்திரன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates