Thursday 30 May 2013

அரசியல்வாதிகளை, காவலர்களை கொல்லுவது





சட்டீஸ்கர் முதல்வர் “மாவோயிஸ்டுகள் போலீஸ்கார்களை கொன்றால் அது மனித உரிமை மீறல் இல்லையா?” என கேட்டுள்ளார். முக்கியமான கேள்வி. சமீப மாவோயிஸ்டு தாக்குதலை ஒட்டி அறிவுஜீவிகளின் மாவோயிஸ ஆதரவை கண்டித்தும் இத்தாக்குதலை தீவிரவாத நடவடிக்கையாக பாவித்தும் டி.வி விவாதங்கள் நடந்தன. அதில் காங்கிரஸ்காரர்களும் அரசு அதிகாரிகளும் மட்டும் தான் இந்நிலைப்பாட்டை எடுத்தனர்.


வேறு புலங்களை சேர்ந்தவர்கள் இறந்தவர்கள் மீது எந்த ஒரு இரக்கமோ கண்ணீரோ காட்டாமல் பழங்குடிகளின் நிலையை எப்படி முன்னேற்றுவது என பேசினர். சமூக வலை தளங்களிலும் இது சம்மந்தமாக துக்க அலை அடிக்கவில்லை. யாரும் அழுது புலம்ப பதறவில்லை. எனக்கும் போலீஸ், காங்கிரசார் கொலைகள் வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. சமீபமாக இங்கிலாந்தில் இரு ராணுவ வீரர்கள் தலைவெட்டி கொல்லப்பட்ட போதும் எனக்கு அது ஒரு குற்றமாக படவில்லை. அந்தளவுக்கு ராணுவத்தினர், போலீசார், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது வெறுப்பும் கோபமும் வளர்ந்துள்ளது.

ஆனால் அதே வேளை தீவிரவாதிகள் பொதுமக்களை கொல்லும் போது கடுமையான கோபமும் வருத்தமும் ஏற்படுகிறது. இஸ்லாமியர் இந்துக்கோயில்களை அல்லது இந்துத்துவ அரசியல்வாதிகளை தாக்காமல் சிறுபான்மையினரும் உள்ளிட்ட பொதுமக்களை சந்தைகளிலும் பொதுவிடங்களிலும் கொல்லுவது ஒரு அபத்தமாகவே நினைத்திருக்கிறேன். அது வசதியானது என்பதைத் தவிர எளிய மக்களை கொல்லுவதில் எந்த நியாயமும் இல்லை. ஆகவே ஒரு தீவிரவாத எதிர்ப்பு என்கிற நிலையில் மேற்சொன்ன சம்பவங்களில் தாக்குதலின் இலக்கு சரி தான் என்கிற உணர்வு எனக்கு இருந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அரசியல்வாதியோ காவலரோ யாரைக் கொல்வதும் பிரச்சனைக்கும் தீர்வை கொண்டு வராது என புரிகிறது.
நஷ்டமும் இல்லை லாபமும் இல்லை. தற்போதைய மாவோயிஸ நிலைப்புக்கு அது பயன்படலாம். தம் தரப்பை வலுப்படுத்தத் தான் ஆயுதப்போராளிகள் தாக்குகிறார்கள். யாரும் யாரையும் முழுக்க அழித்து விடப் போவதில்லை என இரு தரப்புக்கும் புரியாமல் இல்லை. இடையில் அப்பாவி மக்கள் பலியாவது தான் கொடுமை.

இதெல்லாம் மாவோயிசத்தை ஆதரிக்கும் அருந்ததி ராய் போன்றோருக்கு தெரியும். அரசியல் அமைப்பு, நீதி, காவல்துறை இவற்றின் மீதெல்லாம் முழுக்க நம்பிக்கை இழந்து விட்டதனால் நாம் இன்று நம் எதிரியின் அதே ஆயுதத்தை ஏந்திய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். மக்கள் அறவாதிகளாக இருக்கும் பட்சம் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இதே ஆயுதங்கள் கொண்டு காவலரும் ராணுவமும் பழங்குடி மக்களை அழித்திருக்கும். வலுக்கட்டாயமாக அவர்களின் நிலத்தை பறித்திருக்கும். சரி, அவர்கள் நியாயமான முறையில் ஜனநாயக வழியில் போராடி இருக்க முடியுமா?

சமீபத்தில் நாம் நிறைய மக்கள் போராட்டங்களை பார்த்தோம். அவை அத்தனையும் ஒடுக்கப்பட்டன அல்லது சுரத்து இழந்து ஓய்ந்து போயின. ஆனாலும் தொடர்ந்து போராடுவதே தற்போதைய இருப்பை தக்க வைக்க அவசியம் என நாம் நம்மையே நம்ப வைக்க முயல்கிறோம். ஆனால் அறவழி போராட்டங்கள் மீது இன்றைய சமூகத்துக்கு நிஜமாகவே நம்பிக்கை உள்ளதா என்ன?
அரசு ஊழியர்கள் போன்று அமைப்பு ரீதியான ஆதரவு உள்ளவர்கள் தாம் இனி கொடி பிடித்து கோஷமிட்டு பேரம் பேச முடியும். அரசும் அவர்களை மயில்தோகை கொண்டு அடித்து கொஞ்சி மிரட்டும். மற்றபடி இந்த சமூகம் முழுக்க முழுக்க அநீதி முன் அடிபணிந்து விட்ட ஒன்று. அநீதிக்கு எதிராக போராடுகையில் நீங்க அநீதியாகவே மாற வேண்டியது தான். 

அநியாயமாக உங்கள் மக்கள் கொல்லப்படும் போது நீங்கள் உண்ணாவிரதம் இருக்க முடியாது. அந்த லட்சியவாதம் செத்து அரைநூற்றாண்டு கடந்து விட்டது. கூடிய பட்சம் குழாயில் தண்ணீர் வரவில்லை என சாலை மறியல் பண்ணலாம். ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக அறவழி போராட்டங்கள் சாத்தியம் இல்லை. ஏனென்றால் அதற்கு நிறைய செலவாகும். செலவுக்கு நாம் ஹசாரே போல் கார்ப்பரேட்டுகளிடம் கையேந்த நேரிடும். மக்களும் சுயநலம் மிக்கவராகி தீமையில் கலந்து போய்க் கொண்டிருக்கிற காலத்தில் ஒரு பொது நீதியின் கீழ் ஒன்று திரளும் நம்பிக்கையும் அனைவருக்கும் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது.

இதனால் தான் சமூக ஆர்வலர்களும் அறிவுஜீவிகளும் மௌனமாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்க வேண்டி உள்ளது.

உயர்தட்டினர், உயர்ஜாதியினர், வலதுசாரிகள் போலீஸ், ராணுவத்தின் மீதுள்ள தாக்குதலை ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு ஆதரவான சமூக படிநிலையை தக்க வைக்க காவலர்களும் ராணுவமும் தானே கைத்தடி. அவர்கள் எப்போது ஒழுக்கம் கட்டுப்பாட்டுக்கு அதிக அழுத்தம் கொடுப்பார்கள். அந்த பதற்றம் எங்கே தம் சமூக அந்தஸ்து மற்றும் இடம் காலியாகி விடுமோ என்கிற அச்சத்தில் இருந்து வருவது. அந்த அச்சம் பல நூற்றாண்டுகளாய் தாம் அநியாயமாய் அடுத்தவரின் உரிமைகளை பறித்து அனுபவித்து வருகிறோம் என்கிற குற்றவுணர்வில் இருந்து தோன்றுவது.

நாம் ஏதாவது ஒரு பக்கம் நிற்க வேண்டியதாகிறது. அது ஒரு வரலாற்று நிர்பந்தம். நாம் நம் பக்கம் தானே நிற்க முடியும்!
Share This

1 comment :

  1. //அந்த அச்சம் பல நூற்றாண்டுகளாய் தாம் அநியாயமாய் அடுத்தவரின் உரிமைகளை பறித்து அனுபவித்து வருகிறோம் என்கிற குற்றவுணர்வில் இருந்து தோன்றுவது.//....உண்மை.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates