Friday 3 May 2013

மந்திர தந்திர வசீகரமும் பேனா நட்பும்

இன்று தினகரனின் விளம்பரங்களில் பார்வையோட்டிக் கொண்டிருந்த போது சட்டென்று சுவாரஸ்யம் ஏற்பட்டது.

சில ஆண்குறியை வளர்க்கும் மருந்து விளம்பரங்கள். அதில் ஒருவர் தன்னை டாக்டர் என்று கூட குறிப்பிட்டிருந்தார். இந்த கூச்சமும் பயமும் மிகை கற்பனையும் ரொம்ப காலமாய் நம்மவர்களுக்கு இருக்கிறது போலும். சின்ன வயதில் மாத்ருபூதம் டி.வியில் இதிலுள்ள அபத்தத்தை நக்கலாய் விளக்கியது நினைவு வந்தது.   பெண்களின் மார்பகத்தை பெரிசாக்குவதற்கு கூட மருந்து விளம்பரம். அதைப் பார்த்து ஏதோ ஒரு பெண் ரகசியமாய் அஞ்சலில் பணம் அனுப்பலாம்.

அடுத்ததாய் ஆண், பெண்ணை, தம்பதியிரனரை வசீகரிக்கும் மந்திரவாதிகள் மூவர் விளம்பரம் செய்திருந்தனர். இன்னொருவர் நாலே மணி நேரத்தில் மந்திரவாதம் கற்றுத் தருகிறாராம். பக்கத்தில் மூவர் மெழுகுவர்த்தி செய்ய கற்றுத் தருவதாக ஒரே போல் விளம்பரம் செய்திருந்தனர். என்னன்னவோ மனிதர்கள் கற்கும் இக்காலத்தில் கேவலம் மெழுகுவர்த்தி செய்வதற்கு அவ்வளவு டிமாண்டா என்ன? ஆனால் மாந்திரகம் போல் சுவாரஸ்யமாக இராது. அதுவும் நாலே மணிநேரத்தில்!

இதெற்கெல்லாம் உச்சம் பேனா நண்பர்கள். ஒருவர் ரெண்டு செல் நம்பர்கள் கொடுத்து ”ஆண்/பெண் தம்பதிகள்” பேனா நண்பராக விரும்பினால் தொடர்பு கொள்ள கேட்டிருந்தார். சந்தேகங்கள் மூன்று. ஒன்று, பேனா நண்பராக வேண்டியவர் ஏன் அதற்கு செல் நம்பர் கொடுக்கணும்? இரண்டு, செல்லில் பேசிய பிறகு எதற்கு மெனக்கெட்டு பேனா காகிதம் ஸ்டாம்பு எடுத்து எழுதி ஒட்டி ஸ்நேகிகம் வளர்க்க வேண்டும்? கடைசியாய், அதென்ன “ஆண் பெண் தம்பதியர்”? சாதா ஆண் பெண்ணிடம் எல்லாம் நட்பு வளர்க்க மாட்டாரா?
எனக்கு இது நிஜமாகவே பேனா நட்பு விளம்பரமாக படவில்லை.

சரி எதற்கும் கூப்பிட்டு பார்க்கலாம் என நினைத்தேன். அப்புறம் மறந்து விட்டேன்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates