Wednesday 31 July 2013

இளவரசனும் திவ்யாவும்: சில கேள்விகளும் விடைகளும்




கொல்லப்பட்ட அல்லது மரணத்தை நோக்கி துரத்தப்பட்ட இளவரன் மற்றும் திவ்யாவின் மன அமைப்புகளை நுணுகி அறிவதன் வழி காதல் / கலப்பு மணம் புரியப் போகும் ஆண்கள் சில முக்கிய பாடங்களை கற்க முடியும். 


இளவரசன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் அவர் திவ்யாவின் மீது எந்த குற்றசாட்டையும் வைக்க மறுக்கிறார். தனக்கு எதிராக ஆட்கொணர்வு மனு தொடுத்த மாமியார் தேன்மொழியை மிக நல்லவர் என வர்ணிக்கிறார். முழுக்க பா.ம.கவின் சதி என ஒரு பக்கமாய் மட்டும் பிரச்சனையை பார்க்கிறார். இது தன்னுடைய மணவாழ்க்கை பிரச்சனையை தனித்து அவர் பார்ப்பதன், உலக இயல்பை அறியாததன் கோளாறு தான்.
இந்தியாவில் எத்தனையோ இளம் ஜோடிகளை அவர்களின் பெற்றோர் பிரித்து வைக்கிறார்கள். குறிப்பாக மாமியார்கள் தாம் மாமனார்களை விட தம்பதிகளை பிரிப்பதில் ஆவேசம் காட்டுகிறார்கள். இதன் பாலியல் பரிமாணங்களை வேறொரு சமயம் விவாதிப்போம். திவ்யாவுக்கு சேர வேண்டிய வேலையை அவரது அம்மா பெறுவதற்காக கையெழுத்து பெறுவதற்காக இளவரசன் தான் தன் பைக்கில் மாமியாரை அழைத்து வந்து கொண்டு விடுகிறார். இதில் இருந்தே இளவரசன் ஒரு பத்தாம்பசலி என அறியலாம். சாமர்த்தியசாலிகள் அந்த வேலையை மாமியாருக்கு விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர் இதற்காக திவ்யாவை எந்த அளவிலும் வற்புறுத்தியதாக தெரியவில்லை. பொதுவாக இளவரசன் மிகையான நேர்மறை எண்ணம் கொண்டவராக இருந்திருக்கிறார். இதனால் தான் பல தம்பதிகளுக்கும் நடந்தது போல் தன் வாழ்விலும் மாமியார் தான் பிரதான எதிரி என உணராமல் விட்டு விட்டார். பொதுவாக கலப்பு மணங்களில் மருமகன் பவ்யமாக இனிமையாக நடந்து கொண்டால் அவர் பலவீனமானவர் என கருதி மட்டம் தட்டி பிரச்சனைகளை உருவாக்கி குடும்பத்தை பிரிக்க மாமனார் மாமியார் முயற்சி செய்வார்கள். இளவரசன் இந்த வலையில் எளிதில் விழுந்து விட்டார். அவரது இந்தியா டுடே பேட்டியின் படி மாமியாரை வேலைக்கான கையெழுத்து வாங்க அவர் அழைத்து வந்ததை அடுத்து தான் அவர் தனக்கு உடல்நலமில்லை என பொய் கூறி தன் மகளை அருகே அழைத்து வைத்துக் கொண்டார். இளவரசன் உடனே போக வேண்டாம் என கூறியதையும் மறுத்து திவ்யா போயுள்ளதும் கவனிக்கத்தக்கது. கையெழுத்து படலத்தின் போது அவர் கராறாக எதிர்த்திருந்தால் தேன்மொழிக்கும் திவ்யாவுக்கும் அவர் மீது கொஞ்சம் பயம் வந்திருக்கும். இத்தனை எளிதில் கணவனை மறுத்து விட்டு போகவும் அவர் துணிந்திருக்க மாட்டார்.
இங்கு நாம் இந்தியப் பெண்களின் உளவியல் பற்றி தெளிவாக ஒரு விசயத்தை உணர்ந்திட வேண்டும். இந்தியாவில் பெண்கள் சிறு வயதில் இருந்தே கடும் கட்டுப்பாடுகளுடன் ஆதிக்கவாதத்துக்கு பணியும் படி வளர்க்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஒன்று தகப்பன், தாய், ஆசிரியர், கணவன், முதலாளி போன்று அதிகாரத்துக்கு எளிதில் அடிபணிவார்கள். அல்லது இவர்களில் யாராவது அதிகாரத்தை பிரயோகிக்காமல் இருந்தால் அவர்களை தம்முடைய அதிகாரத்துக்கு கீழ் கொண்டு வர முயல்வார்கள். அதிகாரத்துக்கு பழகுபவர்களுக்கு வளர்ப்பு நாயின் மனோபாவம் வந்து விடும். ஒன்று நாய்க்கு நீங்கள் எஜமான் அல்லது நாய் உங்களுக்கு எஜமான். காதல் மணம் புரிகிறவர்கள் பொதுவாக ஜனநாயக மனோபாவம் கொண்டவர்கள் என்பதால் தம் மனைவியருக்கு சம உரிமை கொடுக்க விரும்புவார்கள். ஆனால் சிறுவயதில் இருந்தே அடிமையாக வளர்க்கப்படும் பெண்களோ திடீரென்று இந்த சுதந்திரத்துக்கு, படிநிலையற்ற ஜனநாயக உறவுக்கு தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு யாராவது “எஜமானாக” இருக்க வேண்டும். கணவன் அந்த பாத்திரத்தை நவீன சிந்தனை காரணமாக எடுக்க மறுக்கையில் அவர்கள் அதிகார சமநிலை குழப்பத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்கள் கணவனை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்த துவங்குகிறார்கள். இது உறவில் பிரச்சனைகளை ஏற்படுத்தி கணவன் மீதான ஒரு மரியாதைக்குறைவான எண்ணத்தையும் வளர்க்கிறது. ஆனாலும் இந்த வகை பெண்களுக்கு வெறுமனே அதிகாரத்தை பிரயோகிப்பதுடன் திருப்தியடைய முடியாது; யாராவது “எஜமான்” இடத்தை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். விளைவாக அவர்கள் தம் தாயின் பக்கம் சாய்வார்கள். தாய் அல்லது தந்தை சொல்வதை கேட்டு கணவனை வெறுக்க அல்லது துச்சமாய் மதிக்க துவங்குவார்கள். மீண்டும் பெற்றோரின் கைப்பாவையாக மாறுவார்கள். இதனிடையே இளவரசனைப் போன்ற ஜனநாயகபூர்வாக இயங்க நினைக்கும் அப்பாவிக் கணவன்கள் மாட்டி அவஸ்தைப்படுவார்கள். சிலவேளை உயிர் விடுவார்கள்.
நான் கூறுவது திவ்யா விசயத்தில் முழுக்க உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சின்ன சதவீதம் உண்மையாக இருந்தாலும் அதிகாரத்தை உறவுநிலையில் கையாளத் தெரியாதது தான் இளவரசனின் குடும்பம் சிதைந்து உயிர் பறிபோனதற்கு ஒரு முக்கிய காரணம். இவ்விசயத்தில் திவ்யா இளவரசனை விட இரண்டு வயது மூத்தவர் என்பதையும் கவனிக்க வேண்டும். மூத்த பெண் என்கிற நிலையில் அவர் இளவரசனுக்கு குறைவான மதிப்பளித்திருக்கவும் சாத்தியம் உண்டு. வயதில் மூத்த பெண்களை காதலிக்கையில் ஒரு பக்கம் தம்மை ஆணின் விருப்பத்துக்கு உட்படுத்தியபடியே இன்னொரு பக்கம் அவர்கள் காதலனை ஆதிக்கம் செலுத்தவும் முயல்வதை தனிப்பட்ட முறையில் கவனித்திருக்கிறேன். அவர்களுக்குள் எப்போதுமே இவன் சின்னப் பையன் தானே என்கிற ஒரு துச்ச பாவம் இருந்து கொண்டிருக்கும்.
தன் தாயின் உயிரா கணவனின் உயிரா என வரும் போது திவ்யா தன் தாயை தேர்ந்ததன் உளவியலை கவனிக்க வேண்டும். இப்படியான சிக்கலான தேர்வு வரும் போது நாம் பொதுவாக நல்லவர்களை அல்ல வலிமையானவர்களை தான் தேர்ந்தெடுப்போம். இது ஒரு ஆதிமனித மனோபாவம். திவ்யா தன் அம்மாவை அல்லது சொந்த சாதி சார்ந்த ஆதரவாளர்களை தான் வலிமையான தரப்பாக கருதி இருக்கிறார். இப்படியான நெருக்கடி மிக்க கட்டங்களில் மனிதர்கள் அன்பு, கருணை எனவெல்லாம் யோசிக்க மாட்டார்கள்.
இளவரசனின் காதல் தோல்வி மற்றும் மரணத்தில் பிறருக்கு உள்ள முக்கிய பாடம் காதலில் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது என்பது. காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்றுவது வாடிக்கையாக நாட்டில் இளவரசன் தன் மனைவி தன்னை விட்டு சென்று தனக்கு எதிராக வழக்கு தொடுப்பதை அனுமதித்து தனக்கு எதிராக மீடியாவில் பேசுவதையும் பார்த்த பிறகும் அவளைப் பற்றி சின்ன பழி கூறவும் தயங்கி உள்ளான். இதுவே இளவரசனின் இடத்தில் வேறு ஆண்கள் இருந்திருந்தால் ஒன்று திவ்யாவின் நிலை சின்னாபின்னமாகி இருக்கும். அடுத்து அவர் அத்தனை எளிதாக பா.ம.கவின் வசம் அகப்பட்டிருக்க மாட்டார். எந்த அளவுக்கும் சென்று திவ்யாவை பதுக்கியோ அடைத்தோ வைத்திருப்பார்கள். இப்போதும் இளவரசனின் மரணத்துக்கு பிறகு அவரது அப்பா திவ்யாவுக்கு தான் பொறுப்பேற்று மறுமணம் பண்ணி வைக்கப் போவதாக சொல்லி இருக்கிறார். தன் மகனின் மரணத்தில் இருந்தும் அவர் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இந்த அப்பாவித்தனம் தான் அவரிடம் இருந்து இளவரசனுக்கு சென்று அவன் உயிரை காவு வாங்கியிருக்கிறது.
ஒரு திருமண உறவில் அதிகாரத்தின் சாட்டை மிக நுட்பமாக மறைமுகமாக சொடுக்கிக் கொண்டே இருக்கும். அதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அது நம் கையை விட்டு போகாமல் ஆண்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சாட்டை கைதவறினால் தோல்வி அல்லது மரணம் நிச்சயம். மற்ற மனைவிகளை விட காதல் மனைவிகள் இன்னும் ஆபத்தானவர்கள். அன்பும் ஆசையும் ஒரு புறம் மனதுக்கு ஒரு கடுமையான வெறுப்பையும் உண்டு பண்ணுகிறது. இது அவர்களுக்கே தெரியாமல் ஆழ்மனதில் இருந்து அவர்களை இயக்குகிறது. மிக அதிகமாக நேசிக்கிறவர்கள் தான் இன்னொரு புறம் தம்மையே அறியாமல் நம்மை மிக அதிகமாக வெறுக்கவும் செய்கிறார்கள். அந்த வெறுப்பு ஒரு குண்டாந்தடியாக மாறி உங்கள் மண்டையை பிளக்கவும் கூடும். அதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள நாம் அதிகாரத்தை சாமர்த்தியமாக பயன்படுத்துவது அவசியம்.

Share This

6 comments :

  1. இருநூறு சதம் உண்மை. உங்களை இருக்கித்தழுவி கண்ணீர் விடணும் போலுள்ளது

    ReplyDelete
  2. Nice Post, I agree the facts told.

    ReplyDelete
  3. yes it is absolutely correct that women repose more faith on power and domination in reverse will fetch them security and comfort ,they believe and how they reject love...in most cases love is not at all proposed by women it is only men do that and that is how corruption is an accepted value addition in arranged marriages.no divorce takes place when husbands are corrupt.

    ReplyDelete
  4. மிக அருமையான பதிவு. நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது. கொஞ்சம் தந்திரமும் வேண்டும். கடிக்கும் பாம்பாக இல்லாவிட்டாலும் சீறும் பாம்பாக இருந்தால் தான் பிழைக்க முடியும்.

    ReplyDelete
  5. என் வாழ்வில் சில சம்பவங்கள் நடந்த போது புரியாது விழித்தேன். இந்த பதிவை படித்த பிறகு தான் அனைத்து காரணங்களும் புரிந்தது. *** காதல் மணம் புரிகிறவர்கள் பொதுவாக ஜனநாயக மனோபாவம் கொண்டவர்கள் என்பதால் தம் மனைவியருக்கு சம உரிமை கொடுக்க விரும்புவார்கள். ஆனால் சிறுவயதில் இருந்தே அடிமையாக வளர்க்கப்படும் பெண்களோ திடீரென்று இந்த சுதந்திரத்துக்கு, படிநிலையற்ற ஜனநாயக உறவுக்கு தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு யாராவது “எஜமானாக” இருக்க வேண்டும். கணவன் அந்த பாத்திரத்தை நவீன சிந்தனை காரணமாக எடுக்க மறுக்கையில் அவர்கள் அதிகார சமநிலை குழப்பத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்கள் கணவனை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்த துவங்குகிறார்கள். இது உறவில் பிரச்சனைகளை ஏற்படுத்தி கணவன் மீதான ஒரு மரியாதைக்குறைவான எண்ணத்தையும் வளர்க்கிறது. ஆனாலும் இந்த வகை பெண்களுக்கு வெறுமனே அதிகாரத்தை பிரயோகிப்பதுடன் திருப்தியடைய முடியாது; யாராவது “எஜமான்” இடத்தை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். விளைவாக அவர்கள் தம் தாயின் பக்கம் சாய்வார்கள். தாய் அல்லது தந்தை சொல்வதை கேட்டு கணவனை வெறுக்க அல்லது துச்சமாய் மதிக்க துவங்குவார்கள். மீண்டும் பெற்றோரின் கைப்பாவையாக மாறுவார்கள்.*** பத்து வருடம் முன்பே இந்த உளவியல் காரணம் எனக்கு தெரிந்திருந்தால் என் வாழ்க்கை இன்னும் இனித்திருக்கும். நல்ல பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates