Tuesday 26 November 2013

செக்ஸ் கிளப், பெற்றோர் மற்றும் ஆருஷி




ஆருஷி தல்வாரை யார் கொன்றார், எதற்கு கொன்றார் என்பதை விட தொடர்ந்து இக்குற்றத்தில் இருந்து தப்பிக்க ஆருஷியின் பெற்றோரான ஒரு மேல் மத்தியவர்க்க தம்பதியினரால் இத்தனைக் காலம் எப்படி போலீஸ், மீடியாவை விலைக்கு வாங்கி கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்பது இன்னும் வியப்பூட்டும் கேள்வி.

2008 மே 15ஆம் நாள் ஆருஷி தன் வீட்டு வேலைக்காரனுடன் சேர்த்து கழுத்தறுத்து கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பின் அவரது உடல் அலம்பப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டு படுக்கையறையில் கிடத்தப்பட்டது. வேலைக்காரர் ஹேம்ராஜின் உடல் ஒரு நாள் அழுகுகிற வரை மொட்டைமாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இரு கொலைகளும் நடக்கும் போது ஆருஷியின் பெற்றோர் தாம் அருகில் உள்ள படுக்கை அறையில் தாம் தூங்கிக் கொண்டிருந்ததாய் கூறினர். பூட்டின ஏஸி அறைக்குள் இருந்ததால் தமக்கு ஏதும் கேட்கவில்லை என அவர்கள் கோருகிறார்கள். ஆனால் இது நம்பும்படியாய் இல்லை. அப்படியே நம்பினாலும் வீட்டில் எப்பகுதியையும் உடைக்காமல் கொலையாளி எப்படி உள்ளே நுழைந்திருக்க முடியும்? கொன்ற பின் தல்வாரின் மறைவான இடத்தில் உள்ள மினிபாரில் இருந்து விஸ்கி பாட்டிலை எடுத்து கொலையாளி குடிக்கிறார். குருதிக் கறை அதில் உள்ளது. மேலும் கழுத்தில் இருந்து மூளைக்கு ஆக்ஸிஷன் செல்லும் நரம்பை மிக சரியாய் அறுக்க ஒரு மருத்துவரால் மட்டுமே முடியும். கொலையை ஒன்று அப்பாவான ராஜேஷ் தல்வார் செய்திருக்க வேண்டும். அல்லது செய்தவரை அவர் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். ஐந்து வருடங்களுக்கு மேலாக அவர் வேறு யார் பெயரையும் வெளியிடாத நிலையில் அவர் மீதே குற்ற வளையம் விழுந்தாக வேண்டும்.
மேலும் கொலை நடந்த இடத்தை சுத்தமாய் அலம்பி சாட்சியங்களை அழித்தது, சம்மந்தமில்லாமல் வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது ஆரம்பத்திலேயே பழி சுமத்தியது, இறந்து மாடியில் கிடக்கும் அவரைப் பிடிக்க போலிசாருக்கு 25,000 லஞ்சம் தர முயன்றது, தொடர்ந்து உ.பி போலீஸ் இவ்வழக்கில் மெத்தனமாகவே இருந்தது, பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்களை தொடர்பு கொண்டு அறிக்கையை மாற்ற முயன்றது, காணாமல் போன ஆருஷியின் நுண்பேசி எண்ணில் சற்று நேரம் மட்டும் யாரோ பஞ்சாபில் இருந்து பேசியது (தல்வார்கள் பஞ்சாபியர்) என பெற்றோர் மீது சந்தேகம் வலுக்க பல காரணங்கள். முக்கியமான வேறு இரு காரணங்கள் உண்டு.
ஹேம்ராஜ் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தன் மனைவியிடம் ராஜேஷ் தல்வாரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறினார். ராஜேஷின் ரகசியங்கள் சில தனக்கு தெரியும் என்பதால் அவர் தன்னை கொன்று விடுவதாய் மிரட்டி இருப்பதாக கூறினார். என்ன ரகசியம் என்பதற்கு பிறகு வருவோம். ஹேம்ராஜின் பல மாத சம்பளத்தை ராஜேஷ் வைத்திருந்தார். ஹேம்ராஜ் இறந்த பிறகு அத்தொகையை எதிர்பார்த்து அவரது மனைவி இவ்விசயத்தை வெளியே விடாமல் மௌனம் காத்தார். ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் சம்பளத் தொகையை ராஜேஷ் தராமல் இருக்க ஹேம்ராஜின் மனைவி தன் வக்கீல் மூலம் இவ்விசயத்தை வெளிக்கொணர்ந்தார். உண்மையை நிலைநாட்டுவது எளியவர்களுக்கு இந்நாட்டில் எவ்வளவு சிரமம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஹேம்ராஜை ராஜேஷ் முன்னர் துரத்தி தாக்கி இருக்கிறார். இரவு அவர் கொல்லப்படும் முன் ஹேம்ராஜ் ராஜேஷ் குடும்பத்துடன் 10 மணிக்கு இருந்ததாய் சாட்சியம் உள்ளது.
இந்த ரகசியம் குறித்த தகவலை அளித்தது ஆருஷியின் உற்ற நண்பனான அன்மோல். போலீஸ் விசாரணையில் அவர் ஆருஷி தன் அப்பாவுக்கு அனிதா துரானி எனும் மற்றொரு பெண் மருத்துவருடன் கள்ள உறவு இருப்பதாக வருந்தியதாக கூறினார். சமீபமாக ஒரு பெண் தன் கணவர் மற்றும் மாமனாருக்கு எதிராக அவர்கள் தன்னை மனைவி பகிர்தலுக்கு (wife swapping) கட்டாயப்படுத்துவதாக காவல் துறையிடம் புகார் செய்தார். இதை விசாரித்த போலீசார் மனைவி பகிர்தல் கிளப்பில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என ஒரு பட்டியல் தயாரித்த போது எதேச்சையாக தல்வார் தம்பதியினரும் உட்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த கேங்கின் தலைவர் ஒரு பெரும் தொழிலதிபர். அவர் தற்போது சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். கொலை நடந்ததற்கு முந்தின தினம் ஹேம்ராஜ் இந்த தொழிலதிபருக்கு துபாய்க்கு போன் பண்ணி இருக்கிறான். ஏன் என தெரியாது. ஆனால் இந்த மனைவி பகிர்தல் குழுவின் உள்விவரங்கள் அறிந்தவர் ஹேம்ராஜ் என ஊகிக்க முடிகிறது. பிரேத பரிசோதனையில் ஆருஷி கொலைக்கு முன்னர் உடலுறவு கொண்டிருப்பதாய் புலனாகி உள்ளது. என்ன நடந்திருக்கும் என நான் இதற்கு மேல் கூறத் தேவையில்லை. நீங்களே புள்ளிகளை இணைத்துக் கொள்ளலாம்.
பெற்ற தகப்பனே கொல்வானா? ஷோபா டே தனது பதிவு ஒன்றில் ஆருஷி இந்த தம்பதியினரின் வளர்ப்பு மகள் என கூறினார். இது உண்மையா என தெரியவில்லை. ஆனால் உண்மையெனில் குழப்பங்கள் மேலும் தெளிவாகின்றன.
ராஜேஷ் தல்வார் பட்டென கோபப்பட்டு வன்முறையில் ஈடுபடக் கூடியவர் என ஹேம்ராஜ் தன் மனைவியிடம் கூறி உள்ளான். இந்த தகவல்களை எல்லாம் இணைத்து தான் சி.பி.ஐ வழக்காடு மன்றம் தல்வார் தம்பதியினர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.
வெறும் சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்து அவர்களை குற்றவாளி எனலாமா? பெரும்பாலான கொலை வழக்குகளில் அப்படித் தான் இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கூடத் தான். கொலையை யாரும் சாட்சியத்தோடு செய்வதில்லை. தெளிவாக சாட்சியத்தை அழித்து கொலைக்கருவியையும் மறைத்து விட்டால் நேரடியாக நிரூபிப்பது மிக மிக சிரமம். ஆதலால் சில சந்தர்பங்களில் சூழ்நிலையை தான் சாட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது.
சரி, அது நீதிமன்றத்தின் தலைவலி. ஒரு மருத்துவ தம்பதியினரால் எப்படி காவல் துறை, சி.பி.ஐ வரை கடந்த ஐந்து வருடங்களில் தாக்கம் செலுத்த முடிந்தது? தெஹல்கா, NDTV போன்ற மீடியாக்களை கையில் வைத்து தனக்கு சாதகமாய் பேச வைக்க எப்படி முடிந்தது? NDTVயில் இதற்காக தனி நேரம் ஒதுக்கி தல்வார்களின் சொந்தக்காரர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறார்கள். ஒரு நிகழ்ச்சி முழுக்க தல்வார்களின் ஆதரவு ஆட்களை மட்டுமே பேச விடுகிறார்கள். பேட்டி எடுக்கும் ரிப்போர்ட்டர் வேறு அழுகிறார். ஒரு 13 வயதுப் பெண்ணை கொன்று விட்டார்களே என்றா? இல்லை. பாவம் தல்வார் தம்பதியினருக்கு எதிராக தீர்ப்பு வந்து விட்டதே என்று. அரசியல் தலைவர்கள் ஜெயிலுக்கு போன போது கூட மீடியா இப்படி கண்ணீர் வடித்ததில்லை. ஏன் இந்த நாடகம்?
தல்வார்களின் மனைவி பகிர்வு கிளப்பில் தெஹல்கா, பிற மீடியா ஆட்கள் மற்றும் பல பெரும்புள்ளிகள் அடக்கம் என்கிறார்கள். இந்த கிளப் மிக மிக ரகசியமானது. தல்வாரை காப்பாற்றுவது தம் பாதுகாப்புக்கும் முக்கியம் என கிளப்பின் செல்வாக்கான நபர்கள் அறிவார்கள். இந்தியாவில் அதிகாரம் பணத்தில் மட்டுமல்ல செக்ஸிலும் தாம் என அறிந்தவர்களில் கார்ப்பரேட் சாமியார்களுக்கு அடுத்தபடியாய் தல்வார்களும் பிரதானமானவர்கள். செக்ஸ் ரகசியங்கள் என்றுமே தலைகாக்கும்!
Share This

3 comments :

  1. தல்வார் தான் அந்த க்ளபப்பை நிர்வகித்ததாகவும்(அவரது Hi class patients தொடர்பு மூலமாக) அவர் பிடிப்படும் பட்சத்தில் அவை அனைத்தும் அம்பலப்படுத்தப்படும் என்ற காரணத்தால் அந்த க்ளப்பில் உள்ள bureaucrats, Police and media மூலம் காப்பற்றப்பட்டனர்.

    ReplyDelete
  2. It's a very sad that child was murdered by her parents. What to say? Kadavulukku dhan velicham.nenjam thunbathil niraindhadhu.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates