Sunday 24 November 2013

மோடியும் காதலியும்





அன்பும் கருணையும் பற்றி சதா பேசுகிறவர்கள் மற்றவர்களை வதைப்பதில் அதீத விருப்பம் கொண்டிருப்பார்கள். பிரம்மச்சாரிகளும் இப்படித் தான் – மனம் முழுக்க காமத்தால் நிரம்பி இருக்கும். சட்டசபையில் போர்னோ பார்ப்பதாகட்டும், மனநலமில்லாத பெண்ணை கற்பழிப்பதாகட்டும் காவிப்படையினர் நிபுணர்களாக இருக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் அப்பாவி சிறுபான்மையினரை படுகொலை செய்யத் தூண்டிய, அவ்வன்முறையாளர்களை இந்நாள் வரை பாதுகாத்து வரும் மோடி ஒரு குரூரமான கொலையாளி என்கிற சித்திரமே நமக்குள் இருக்கிறது. இன்னொரு புறம் அவர் அத்வானியை வெளியேற்றிய விதம் அவர் எந்தளவுக்கு தயக்கமற்ற அதிகார வெறியர் என்பதையும் காட்டியது. இதோடெல்லாம் ஒப்பிடுகையில் பங்களூர் இளம்பெண்ணை அவர் போலீஸைக் கொண்டு பின் தொடர்ந்தது, தொலைபேசியை ஒட்டுக் கேட்டது போன்றவை சிறு குற்றங்கள் தாம்.

இவ்விசயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா ஒரு விநோதமான தகவல் கூறுகிறார். இப்பெண் தன்னை மோடிக்கு அறிமுகப்படுத்தி விட்டதற்காக “நீங்கள் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தீர்கள். என்றும் கடன்பட்டிருக்கிறேன்” என நன்றி கூறுகிறார். பிரதீப் சர்மா மீது மோடி பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளியதும் அப்பெண்ணும் குடும்பத்தினரும் அவரை பார்க்க செல்கிறார்கள். அப்பெண் ஜெயிலில் பிரதீப் சர்மாவுடன் பேசுகிறாள். அந்தளவுக்கு நன்றி உணர்வு ஏன்? மோடி எனும் ஒரு வயதான, சகஜமான செக்ஸ் உறவு சாத்தியப்படாத ஒருவரை காதலிக்க வாய்ப்பு உருவாக்கி கொடுத்தமைக்கா? ஏன் இளம் பெண்கள் இது போல் அதிகாரமிக்க ஆனால் ஆண்மைக்குறைவான முதியவர்களால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது நாம் விரிவாக அலச வேண்டிய ஒரு நுணுக்கமான விவகாரம்.
ஒரு கோணத்தில், மோடியைப் போன்று இரும்பிதயம் கொண்ட மனிதருக்கு இப்படியான பலவீனங்கள் இருப்பது அறிய ஆசுவாசமாகத் தான் இருக்கிறது. இளம் வயதிலேயே அவர் அழகான பெண்கள் மீது ஆர்வம் செலுத்தி இருந்தால் குஜராத் கலவரம் இவ்வளவு கொடூரமாக நடந்திருக்காது. பணமும், அதிகாரமும் சம்பாதிக்கும் வெறி பொதுவாக கட்டுப்படுத்தப்பட்ட பாலியலலில் இருந்து தான் வருகிறது. இன்னொரு பக்கம், ஆண்களின் காம வறட்சிக்கு அதிகாரத்தையும் பணத்தையும் பிரதான அளவுகோலாய் கணிசமான பெண்கள் கருதுவதும் ஒரு காரணம். ஒரு அர்த்தத்தில் சர்வாதிகாரிகளை இது போன்ற இளம்பெண்கள் தாம் தோற்றுவிக்கிறார்கள். அவர்களுக்கு வயதான பின் மட்டும் அருகாமையில் சென்று கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.
இந்த சர்ச்சை மோடியின் வீழ்ச்சிக்கு வழிகோலுமா? வாய்ப்பு குறைவு தான். அத்வானி, வாஜ்பாய் போல் மோடிக்கு ஒரு கனிவான, நாகரிகமான, ஒழுக்கவாத பிம்பம் இல்லை. அவர் ஒரு மேம்பட்ட காடுவெட்டி குரு. தந்திரங்களில் கைதேர்ந்த யாரையும் தள்ளி விட்டு முன்னேற தயங்காத அரசியல்வாதி. வாஜ்பாய்க்கு நேர் எதிர்முகம். குஜராத் கலவரத்தின் போது மோடியை தண்டிக்கவே வாஜ்பாய் விரும்பினார் என்பது ஒரு எளிய தகவல் அல்ல. மோடி ஒரு விதத்தில் அறத்திலும், பொறுமையிலும் நம்பிக்கையற்ற, அதிகாரம், பணம் அடைவதில் அவசரம் மிக்க, சாதி மத வெறி மிக்க இன்றைய இளைய தலைமுறையின் சரியான பிரதிநிதி எனலாம். தான் விரும்புகிற பெண் மீது சந்தேகம் வந்தால் இன்றைய தலைமுறை ஆண் இப்படியே தான் நடந்து கொள்வான். மோடிக்கு கட்டற்ற அதிகாரமும் பணமும் இருப்பதால் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரை கூட இந்த வேலைக்கு பணிக்க முடிகிறது. அதனால் தான் இன்றைய இளைஞன் இதை ஒரு பெரிய குற்றமாக, கறையாக, இழுக்காக எண்ண மாட்டான். மோடியின் அரசியல் வாழ்க்கையில் இது கடந்து போகும். ஆனால் குஜராத் வன்முறை நிற்கும். ஏனென்றால் அவர் ஆட்சிக்கு வந்த பின் மேலும் பல வன்முறைகள் தேசமெங்கும் கட்டவிழ்த்து விடப்படும். அப்படித் தான் பா.ஜ.க தன்னை வலுப்படுத்தி வந்துள்ளது.
தருண் தேஜ்பால் வழக்குக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. தேஜ்பால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கீழே வேலை பார்க்கும் பெண்ணை பால்யல் ஒடுக்குமுறை செய்ய முயல்கிறார். இந்த கொடுமை நம் நாட்டில் உள்ள பல பெண் ஊழியர்களுக்கு நடந்து வருவது. தருணுக்கு வலுவான தண்டனை அளிப்பது நம் பெண்களுக்கு பொதுவாக இப்படியான வழக்குகளில் முனைந்து சட்ட உதவியை நாட தன்னம்பிக்கை அளிக்கும். மோடியின் குற்றம் கணவன் மனைவி சச்சரவு போல ஒருவித குடும்ப குற்றம் எனலாம். தன்னை நாடி வந்த, பாலுறவில் ஈடுபட தயங்காத ஒரு பெண் மீதான சந்தேகத்தால் ஒருவர் செய்கிற குற்றம் அது. கணவன் மனைவியின் செல்போனை ஒட்டுக்கேட்பது போன்ற குற்றம் இது.
பிரதீப் சர்மா அதிகார வர்க்கத்தை சேர்ந்த மற்றொரு ஆள். அவரால் இதில் இருந்து தப்பிக்க தெரியும். அதற்கான தொடர்புகளும், அறிவும் அவருக்கு உண்டு. ஒரு அடிமட்ட நபர் மோடியால் நசுக்கப்பட்டால் நாம் அவரை ஆதரிக்கலாம். ஆனால் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆதரவளிக்க ஏற்கனவே ஆயிரம் கரங்கள் மீடியாவில் இருந்து நீளுகின்றன. மேலும் அவர் இந்த விவாகாரத்தை வெளியே விட்டதே தன்னை பாதுகாக்கத் தான். அவ்வளவு நல்லவர் என்றால் ஏன் இத்தனை நாள் தேமேவென இருந்தார்? நாளை ஒரு சமரசத்திற்காக இதையெல்லாம் மீண்டும் மறைத்து மௌனமாக மாட்டார் என்று என்ன நிச்சயம்?
அரசியல் தலைவர்களின் காதலிகள் அரசியலுக்கு வருவது எவ்வளவு ஆபத்தானது என அறிவோம். பொதுவாக அதிகார வெறியும், வன்முறையும் மிக்கவர்களாக அத்தகைய பெண் தலைவர்கள் இருப்பார்கள். எம்.ஜி.ஆர் சபலப்படாமல் இருந்திருந்தால் தமிழகம் நிச்சயம் பிழைத்திருக்கும். அவ்விதத்தில் நாம் இந்த பெங்களூர் பெண்ணுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் சில வருடங்கள் தாக்குப் பிடித்து பா.ஜ.க எம்.பியாக அவர் வளர்ந்திருந்தால் இன்னொரு தலைவலி நமக்கு ஆரம்பித்திருக்கும். அழகிகள் அரசியல் தலைவர்களின் கடைக்கண்ணில் மட்டுமே இருப்பது தேசத்திற்கு நல்லது.  
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates