கென்சிங்டன் பூங்கா
முதிய பெண்கள் மற்றும் துலிப் பூக்கள், மாதிரிப் படகுகள்
கையடக்கக் குழந்தைகள், நடமாட்ட அம்மாக்கள்,
கிளிகள் போல் தூரத்து பேருந்துகள்
தனியான ஆண்கள் மழை அங்கிகளை
கைமேல் கொண்டு – எங்கே போகிறார்கள்? தற்போது கோடையின்
மூட்டை முடிச்சுக்கள் மற்றும் வண்ணத் தெளிப்பு
ஒரு வருடத்துக்கு முன் விதைத்தது போல் வெளிவந்து விட்டபடியால்.
அந்நியள் வியந்தது என்ன?
லண்டனில் தனியாய் காபி உறிஞ்சியபடி
இவள் எங்கிருந்து வருகிறாள்?
ஷூக்கள், கூந்தல் – வங்கியில் அவளுக்கு ஏதுமிருப்பதாக எனக்கு படவில்லை.
அவளுக்கு ஆண்துணை உண்டா, எனில் அவன் எங்கே,
பத்தரை மணிக்கு லண்டனில் புத்தகம் படித்தபடி
ஏன் அமர்ந்து இருக்கிறாள்?
அவளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது
ஆண்துணை இன்றி, வேலையற்று, மளிகைக் கடையில் நாயுடன் அவசரமாக ஓடாமல்
தனித்து இருக்கும் படியாக. உறிஞ்சிடும் படியாக.
ஓய்வு நாள்
மூன்றே கால் மணிக்கு கடிகாரம் நின்று போனது;
மேலும் கைகளை அகலமாக விரித்து கொட்டாவி விட்டு அங்கே இருந்தது,
மேலும் அதை திரும்ப ஓட வைக்கவில்லை யாரும்,
ஞாயிற்றுக்கிழமை ஆகையால், நாங்கள் வேலையில் மூழ்கி இருந்தமையால்.
ஆகையால் அந்நாள் நிகழ்ந்தது, மறைந்தது.
ஆனால் துண்டுத் துண்டாய் கிழிக்க, தைக்க, நேசிக்க, வெறுக்க
நாங்கள் பின்பற்றின நேரம் சரியானதா
என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை; நிகழந்தவை எல்லாம்
ஞாயிற்றுக் கிழமை, லண்டன், மணிமுழக்கங்கள், பேச்சு, விதி.

மூரியல் ஸ்பார்க்: சிறுகுறிப்பு
The Mandelbaum Gate, The Prime of Miss Jean Brodie போன்ற தனது நாவல்களுக்காகவே பிரதானமாக அறியப்பட்ட ஸ்காட்லாந்து எழுத்தாளர் மூரியல் ஸ்பார்க் கவிஞராகவே எழுத்தை ஆரம்பித்தார். ஆங்கிலேய அம்மாவுக்கும் யூத அப்பாவுக்கும் பிறந்த ஸ்பார்க் பின்னர் கத்தோலிக்க மதத்துக்கு மாறி, அது தனக்கு நாவல் எழுத ஒரு விரிவான பார்வை அளித்திருப்பதாய் அறிவித்தார். இந்த மதமாற்றம் காரணமான மனஸ்தாபம் மூன்று வருடங்களுக்கு முன் 88 வயதில் சாகும் வரை அவரை தன் மகனிடம் இருந்து பிரித்து வைத்தது. வாழ்வின் ஒழுக்கில் ஒவ்வொரு பிடிமானமாக நாடி சென்றுள்ள மூரியலின் எழுத்தின் முக்கிய தேடல் வஸ்து அடையாளம். இங்கு தமிழாக்கப்பட்டுள்ள கவிதைகள் All the Poems என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.
No comments :
Post a Comment