Wednesday 25 November 2009

ஒரு வறண்ட நாளின் வளமையான பக்கங்கள்

இன்று எழுந்து காப்பி பல் துலக்கம் முடிந்து எழுதலாம் என்று அமர்ந்து பிடிக்காமல் இணையம் மேய்ந்து ... இதோ இப்போது இரவு 12:45-க்கு எழுதுகிறேன். காப்பிக்கும் இணையத்துக்கும் இடையே ஒரு கசப்பான ஞாபகம் தொந்தரவு செய்தது. எனது “இந்திய குறுக்குவிதிகளும் ...” கட்டுரை (http://thiruttusavi.blogspot.com/2009/11/blog-post_17.html) பற்றி புலன்விசாரித்து ஒரு நபர் என் நண்பரை அழைத்து அபிலாஷ் தெரியுமா உங்களைப் பற்றி எழுதியுள்ளாரே என்று போட்டுக் கொடுக்க நண்பர் ”என்னைப் பற்றி எழுதியதை என்னிடமே ஏன் சொல்லவில்லை” என்று கோபித்துக் கொண்டார். கட்டுரைகளில் குறிப்பிட்டதற்காக ஏற்கனவே இரண்டு நண்பர்களை இழந்த நான் நிஜமாகவே பயந்து போனேன். பதற்றத்தில் தத்துபித்தென்று உளறினேன். என் முகக்கலவரத்தை பார்த்து, என் உளறலைக் கேட்டு தவறாக ஊகித்த நண்பர் “என்னைப் பற்றி ஏதோ விவகாரமாக சொல்லியுள்ளீர்கள்” என்றார். அவரது ஆளுமை தவறாக பதிவாகி விட்டதோ என்ற கவலையில் நான் கூறிய இந்த முக்கியமான கருத்தை கவனித்தாரா தெரியவில்லை: “ நான் எழுதும் போது பார்த்தது, கேட்டு, படித்த உயிருள்ள உயிரற்ற பொருட்கள் வெறும் தரவுகள் தாம். நான் இத்தரவுகளை பற்றி எழுதுவதில்லை; ஒரு விவாதப் பொருளை, அவதானிப்பை அல்லது கற்பனையை நிறுவ இவை பயன்படுகின்றன, அவ்வளவே”. நேரடியாக / மறைமுகமாக குறிப்பிடப்படும் ஒரு தனி நபர் பற்றின சித்திரம் எத்தனை சரியானது என்பது பற்றி அந்த நபர் கவலைப்படுவது வீணானது. நம்மைப் பற்றின அடுத்தவர் மனதிலுள்ள பிம்பத்தை பற்றி எப்படி பொருட்படுத்தக் கூடாதோ அப்படியே இதுவும். பொதுவான அக்கறைகள் அல்லது தேடல் தவிர்த்து எனக்கு உங்கள் உலகம் குறித்தோ உங்களுக்கு எனது பற்றியோ கவலை இல்லை.



என்னைப் பற்றி ஜெயமோகன் தனது வலைதளத்தில் எழுதியிருந்த குறிப்பில் (http://jeyamohan.in/?p=3684) தகவல் பிழைகள் உண்டு. நான் ஏன் பொருட்படுத்த இல்லை என்றால் அவரது கட்டுரை அந்த தகவல்கள் பற்றியது அல்ல என்பதால். உதாரணமாக அவர் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் உரையாற்றின போது எனது சிவப்பு அபிமானம் காரணமாய் நான் அங்கு செல்லவில்லை என்கிறார். இரண்டுமே உண்மையல்ல. ஆனால் இப்பிழைகள் முக்கியமல்ல. காரணம் முதற்பத்தியின் கடைசி வரியில்.



நான் இதுவரை சொன்னதற்கு மற்றொரு பக்கமும் உண்டு என்பதை அறிவேன். கீஸ்லாவஸ்கி தனது Camera Buff படத்தில் படைப்புக்கும் அந்தரங்க மீறலுக்குமான உறவு பற்றி பேசியிருப்பார். இப்படத்தின் நாயகன் இனிமேல் பிறரை பதிவு செய்யக் கூடாது என்ற தீர்மானத்துடன் இறுதிக்காட்சியில் படக்கருவியை தன்னை நோக்கி திருப்பி ஓட விடுவான். ஊனம் பற்றின எனது சில கட்டுரைகளை பற்றி கூறுகையில் மனுஷ்யபுத்திரன் “இதில் பலவும் எனக்கும் நிகழ்ந்தன” என்றார். ”நீங்கள் எழுதியிருக்கலாமே” என்றேன். “பலரை காயப்படுத்த வேண்டியிருக்கும்” என்றார். விரல் சுட்டினாலே காயப்படுவது ஒருவித மனநோய். ஒரு பத்திரிகை ஆசிரியராக, பிரபல ஆளுமையாக, பிரதான கவிஞராக எத்தனை அனுபவங்களை இப்படி உறை போட்டு மூடியிருப்பார்.



சூழலின் நோய்மை எழுத்தாளனின் சுட்டு விரலை இப்படி மடித்து விடுகிறது. நான் பேசியிருந்த கருத்துக்களை மேலும் வலுவாக, நுட்பமாக அவரால் வெளிகொணர்ந்திருக்க முடியும். அக்கட்டுரைகளை நான் வலியுடன் எழுதியிருக்க வேண்டியிராது. படக்கருவியை நம்மை நோக்கி திருப்பியதும் அதில் புறவுலகின் பிம்பங்களும் விழுகின்றன. படக்கருவியின் பிம்பங்கள் தனதல்ல என்று புறவுலகம் புரிந்து கொள்ள வேண்டும்.




இன்று Terrorists, Victims and Society என்றொரு நூல் படித்தேன். அதைப் பற்றி நாளை எழுதுகிறேன். இன்று வலையில் காணக்கிடைத்ததில் இந்த இரு தளங்களை குறிப்பிட வேண்டும்:
http://cybersimman.wordpress.com/
மற்றும்
http://www.athishaonline.com/

சிம்மன் மிக எளிமையாக, நேரடியாக, சுவாரிசியமாக எழுதுகிறார். இணையம் இவரது ஏரியா. ஏழு வருடங்களுக்கு மேல் எழுதி வருவதாக தனது அறிமுகத்தில் சொல்வது அவரது அவரது மொழியின் ஒழுக்கில் தெரிகிறது. குறிப்பாக, அடுத்து எதைப் பேச வேண்டும் என்கிற குழப்பம் இல்லை. அப்புறம் உணர்ச்சிவயபடாமல் ஒரு வியப்பை தக்க வைக்கிறார். எழுத்தாளக் குறுக்கீடுகள், நெடுமூசெறிதல்கள் இல்லை.இது மாமன் மச்சான் பரிந்துரை அல்ல. தைரியமாக இவரை படியுங்கள்.

ஆதிஷா ஒரு பெண் அல்ல. அவரது அறிமுகம் படிக்காமல் நடை வைத்தே ஓரளவு இதை ஊகிக்கலாம். ஆதிஷா நிஜப்பெயரான வினோத்தின் பக்கத்து வீட்டு பெண்ணுருவமோ, பள்ளிக் காதலியோ, மாமன் மகளோ அல்ல. ஒரு பௌத்த துறவியின் பெயராம். ஹும். சரளமும், அலப்பறையும், நகைச்சுவையும் தான் இந்த ஆதிஷா. இத்தனை வீராப்பாக, ஊக்கமாக பகடி செய்பவர்களை தமிழில் அதிகம் படித்ததில்லை. இவரது ஜென் பகடி கதைகளை கட்டாயம் படியுங்கள். பொதுவாக ஞானக்கதைகளின் சொல்லலில் ஒரு போலியான பாவனை இருக்கும். அந்த இடுப்புக் குடத்தை கல்லடிப்படிப்பதில் தான் வினோத்தின் ஆர்வம். முக்கியமான முயற்சி. ஒரு கதையில் ஞானம் கேட்கும் சிஷ்யனிடம் குரு தின்ற பாத்திரத்தை அலம்பி வர சொல்கிறார். அவனுக்கு ஞானம் வருகிறது. இதன் மொழியை வட்டார வழக்கில் வசை சொற்களுடன் சரேலென்று சொல்லி முடிப்பதில் தான் அவரது நகைச்சுவை ஏற்படுகிறது. மற்றொரு கதையில் ஞானம் கிடைத்த சிஷ்யனுக்கு அது படு பேஜாராக உள்ளது.

பகடிக்கு இலக்கிய எழுத்தின் அந்தஸ்து உண்டு. ஆதிஷாவின் தேடல் தீவிரமடையும் போது அவரது இயல்பான எழுத்துத் திறன் மற்றொரு இடத்துக்கு அவரை எடுத்துச் செல்லும். அதுவரையில் ”பிட்டுப்படம் பார்ப்பது எப்படி?”, ”கொலைகாரன் காதல்” போன்ற கவனத்தை ஈர்க்கும் பதிவுகள் வீண் முயற்சிகள் என்று சொல்ல மாட்டேன்.
Share This

1 comment :

  1. hai Abilash,
    I WAS THE ONE WHO CALLED UR FRIEND TO ENQUIRE ABOUT YOU.I DIDNT CALL UR FRIEND WIH AN INTENTION TO PUT U IN TROUBLE.I FEEL BAD ABOUT THE WAY U TWISTED THIS SIMPLE THING.IT WAS NOT FOR'POTTU KODUKURURHUKU',JUST TO KNOW MORE ABOUT U AND APPRECIATE UR WRITINGS.ANYWAY,THANKS FOR MENTIONING ME AS A 'NABAR' IN UR BLOG

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates