Thursday 18 February 2010

மின்னஞ்சல் கட்டுரைகளின் பின்னுள்ள மனவியல்



பென்சில்வேனிய ஆய்வாளர்கள் ஒரு சுவாரஸ்யமான ஆய்வை மேற்கொண்டனர். அதன் முடிவுகள் இணைய வாசகர் குறித்த பார்வையை மாற்றி அமைப்பதாக உள்ளன. ஆய்வாளர்கள் 2008 ஆகஸ்டு முதல் 2009 பெப்ரவரி முதல் நியுயார்க் டைம்ஸ் இணையதளத்தில் இருந்து மின்னஞ்சல் செய்யப்படும் கட்டுரைகளை அலசினர். மொத்தம் 7500 கட்டுரைகள். குறிப்பாக எந்த தலைப்பு மற்றும் வகைமையிலான கட்டுரைகள் எத்தனை மின்னஞ்சல் செய்யப்படுகிறது என்பதை அறிவதே நோக்கம். ஆய்வாளர்கள் செக்ஸ் மற்றும் உணவு குறித்த பத்திகளே அதிகம் விரும்பி மின்னஞ்சல் ஆகும் என்ற முன்முடிவு கொண்டிருந்தனர். நம்மூர் என்றால் சினிமா மற்றும் சர்ச்சை. ஆனால் ஆய்வுமுள் சுட்டியது அறிவியல் மற்றும் தொடர்பான அறிவார்ந்த கட்டுரைகளை. மேலும் ஆய்ந்தால் வாசகர்கள் நேர்மறை நோக்குள்ள கட்டுரைகளை விரும்பியுள்ளார்கள். குறிப்பாக வியப்புணர்வை ஏற்படுத்தும் எழுத்து. அதுவும் வானவியல், paleontology போன்ற அதிக வெளிச்சமற்ற துறை சார்ந்த எழுத்துக்களை மின்னஞ்சல் செய்வதில் மிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். மான்களின் பார்வைப்புலன் குறித்த கட்டுரைகளின் பரிமாற்றம் எகிறியுள்ளது. இதை விட ஆச்சரியம் நீளமான கட்டுரைகளுக்கு கிடைத்துள்ள மவுசு. பொதுவாக குறுங்கட்டுரைகளே இணையத்துக்கு ஏற்றது என்ற நம்பிக்கை உள்ளது. பீதி மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் கட்டுரைகளும் மின்னஞ்சல் வரிசையில் முன்னணி பெறுகின்றன. ஆய்வாளர்களே வழக்கம் போது இதற்கான காரணங்களையும் யூகித்துள்ளனர். அவை இரண்டு.

1. வாசகர்கள் அறிவார்ந்த கட்டுரைகளை மின்னஞ்சல் செய்வது மூலம் தங்கள் புத்திஜீவித்தனத்தை விளம்பும் முயற்சியாக இருக்கலாம்.

2. தங்களுக்கு மனக்கிளர்ச்சி அடைய வைப்பவற்றை பகிர்வது ஒரு மனிதப்பண்பு.

ஆனால் இவை போக, வாசகர்களின் பொதுவான அறிவு விழைவு கவனிக்கத்தக்கது என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்த ஆய்வு ஒரு இணையதளத்தின் கட்டுரைகளை மட்டுமே கருத்திற்கொண்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் அறிவியலை என்றும் போற்றி வந்துள்ள மேற்கத்திய மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. நம்மூர் வாசகர்கள் எப்படி?

இணையத்தில் இலக்கியத்துக்கு உலகத்தமிழரிடம் கிடைத்த அபார ஆதரவால் ஒரு போலியான தோற்றம் உருவானது. தீவிர இலக்கியத்துக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என்று கருதி குமுதம் தீராநதியை ஆரம்பித்து ஏமாந்ததாக தளவாய் சுந்தரம் ஒருமுறை குறிப்பிட்டார். “கால்களை விரித்து வைத்து” போன்ற கடவுச்சொற்களுடன் கூகுளில் இருந்து தன் இணையதளத்துக்கு மேலதிக வாசகர்கள் வருவதாய் சமீபத்தில் ஒரு சுயஆய்வு செய்து கண்டுபிடித்தார் ஜெயமோகன். (இத்தோடு உயிரோசைக்குள்ளும் இந்த சொற்றொடருடன் தேடும் வாசகர்கள் திமிறுவார்கள்) தமிழ்மகன் உயிரோசையில் எழுதிய சினிமா பத்திகள் வலைப்பதிவர்களிடம் பெரும் கவனம் பெற்றதை கவனித்திருக்கிறேன். அதற்கு அடுத்து ஜெ.மோ-மனுஷ் சர்ச்சை பற்றிய பத்திகள் பரபரப்பாக படிக்கப்பட்டுள்ளன. தமிழ் இணைய வாசக தளம் மீது இத்தகைய ஒரு ஆய்வு அவசியம் தேவை.
Share This

1 comment :

  1. புத்திஜீவி தனத்தைக் காட்டுவது எனக் காட்டிலும் புதிய செய்திகளை பரவலாக பகிர்ந்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. அச்செய்திகள் தெடர்பான தேடல்களே பகிர்வுக்கும் வழி செய்துள்ளன எனக் கொள்ள முடியும்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates