Tuesday 22 March 2011

தலைகீழ் பிரயாணம்



அவர்
என்றும் போல்
விடிகாலையில்
மொட்டைமாடியை சுற்றி சுற்றி
தளர் ஓட்டம் செல்லும் போது

மல்லாந்து விழுந்து ஓடியது
ஒரு கரப்பான்பூச்சி
வாசல் கூரையில்
தலைகீழாக பிரயாணித்தது
பல்லி
மிகுந்த விழிப்புடன்
மல்லாக்க தூங்கியது பூனை
படிக்கட்டில் நீண்ட கிறுக்கல்களாய்
கலைந்தன எறும்பு சாரைகள்
ஒவ்வொரு காற்றிலும் சுழித்து அலையடித்தது
உயிரற்ற ஈசல்களின் சிவப்பு குவியல்

பிறகொரு நாள்
அதே மாடியில்
அவர் ஒரு பெண்ணை
சன்னமாய் முத்தமிட்ட போது
தான் வேலைக்கு போகும் பாதையை
பார்வையிட்ட போது
காயும் ஆடைகளை
அந்நியமாய் பார்த்து மனைவியை நினைத்த போது
விளிம்பில் நின்று எட்டி நோக்கியபடி
தனது
தற்கொலை புரிந்த மகளை நினைத்த போது
சின்ன வயதில் சொல்லப்பட்ட
குட்டிக்கதைகளில் ஒன்றையாவது
நினைவு கொள்ள முயன்ற போது
நேசிக்க முடியாத போது வெறுப்பும்
வெறுக்க முடியாத போது அன்பும்
போலியாக உள்ளது ஏன்
என்று கேட்டுக் கொண்ட போது
தன்னை போல் மொட்டை மாடியில் நிற்கும்
வேறுபட்ட மனிதர்களை
விநோதமாய் பார்த்த போது
சந்தித்த ஒவ்வொரு மனிதனின்
பைத்தியக்காரத்தனத்தையும்
வகைப்படுத்தி நினைத்த போது
தன்னை சுற்றி உறவுகளும் நட்புகளும்
மறைய மறைய
பெருகிக் கொண்டே இருப்பதை
விளங்க முயன்ற போது
ஒரு கவிதை தோன்ற
அதை நினைவில் வைக்க முயன்று
அது மாறிக் கொண்டே இருந்த போது
தூக்கம் வராமல்
கோபமாய் உலாத்திய போது

உலகம் அதையே செய்தது
கொஞ்சம் தலைகீழாய்
Share This

2 comments :

  1. தலைகீழ் பார்வைகள், நல்ல பகிர்வு.

    எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

    ReplyDelete
  2. nesika mudiyatha pothu veruppum
    veruka mudiyatha pothu
    anbum
    poliyanathu.

    Arumai sir

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates