Wednesday 9 March 2011

வேடிக்கையான அற்புதங்களும் உலகக் கோப்பையும்




ஆடுதளங்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு ஒற்றுமை அங்கு சவுரவ் கங்குலி போன்றவர்கள் கூட அபாயகரமாய் பந்து வீச முடியும்; இங்கு ஐயர்லாந்தின் கெவின் ஓபிரெயின் போன்ற யாரும் பொருட்படுத்தாத ஒரு மட்டையாளர் கூட ஐம்பது சொச்சம் பந்துகளில் சதம் அடித்து ஆட்டம் வென்று தர முடியும். தமிழ் சினிமா பார்வையாளனை போல் நாம் மிகுந்த விருப்பத்துடன் இந்த அசாத்தியங்களை நம்ப தலைப்படுகிறோம். சுற்றுலா பயணிகளுக்கு சொல்லப்படுவது போல் இந்தியா கிரிக்கெட்டில் கூட விநோதமான அதிசயங்களின் நாடு தான்.
கடந்த பத்து வருடங்களில் உலகின் மூலைகளில் இருந்து இந்தியாவுக்கு எத்தனையோ இளம் மட்டையாளர்கள் பயணம் வந்து தங்களது ஒளிந்திருந்த அபார ஆற்றலை கண்டறிந்திருக்கிறார்கள். இந்திய தட்டை ஆடுதளங்களில் முடிவற்ற சதங்களின் ருசியை கண்டவர்களில் ஹெய்டன் மட்டுமே தொடர் நட்சத்திரமாக திகழ்ந்தார். மிச்ச பேர் இந்திய மண்ணில் மட்டுமே ஜொலித்து விட்டு விமானம் ஏறியதும் பகலுக்கு மின்மினிகள் திரும்பியது போல் ஆனார்கள். இதனாலேயே இந்திய மண்ணில் சாதித்த மட்டையாளர்களை உலகம் மூன்று தலை மனிதன் போல் நம்ப இயலாமல் படிநிலையில் எங்கு பொருத்துவது என்று புரியாமல் தவிக்கிறது. ஆஸ்திரேலியாவில் அல்லது தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக மட்டையாடுவதற்கு கிடைக்கும் கவனம் வேறு வகை. அங்கு சதம் அடிக்கும் ஒரு மட்டையாளன் தன்னை தரமான வீரனாக உறுதியாக நிறுவிக் கொள்கிறான். அத்தனை சவால்களை அங்கு அவன் கடந்து மேலோங்கின பின்னரே சதம் அடிக்க முடியும். ஆனால் இந்தியாவில் சற்று இறுக்கமான தொழில்நுட்பமும் நிறைய பொறுமையும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் டெஸ்டு போட்டி ஒன்றின் முதல் இரு நாட்களில் சதமடிப்பது எளிது. கடைசி நாளில் ஆடுதளம் தாறுமாறாக சுழலும் போது முதல் நாள் சதமடித்தவர் கோமாளியாக தோன்றுவார். ஒரே போட்டியில் ஒருவர் இருவேறாக தெரிவர்.
இந்தியாவின் சில லட்சிய ஆடுதளங்களில் பத்து நாட்கள் கூட ஆடி பத்து சதங்கள் அடிக்க முடியும். ஆடுதளங்கள் இவ்வளவு தட்டையாக மாறினதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த சோதனை முயற்சிகள் காரணமாக சொல்லப்படுகின்றன. கடந்த பத்து வருடங்களில் இந்தியா முழுக்க உள்ள முக்கியமான மைதானங்களின் ஆடுதளங்கள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. நோக்கம் நமது ஆடுதளத்தை வேகவீச்சுக்கு தோதாக மாற்றி உள்ளூர் வேகவீச்சாளர்களை ஊக்குவிப்பதாக இருந்தாலும் விளைவு நேர்மாறானது. கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவின் கவனத்திற்குரிய இளம் வேக வீச்சாளர்கள் தொடர்ந்து காயங்களுக்கு வீழ்ந்ததும் நமக்கு மாற்று வீரர்கள் தேடினாலும் கிடைக்காத படிக்கு வேக பந்து வீச்சின் தரம் உள்ளூர் அளவில் வீழ்ந்தது. சஹீரும் நெராவும் காயமடையக் கூடாது என்ற வேண்டுகோளுடன் இந்திய கிரிக்கெட் கடந்த மூன்று வருடங்களாக நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆடுதள மாற்றம் உள்ளூர் சுழல் பந்து வீச்சையும் சிறகொடித்து விட்டது. ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் நீடித்து மட்டையாடி லீட் பெறுவதன் மூலம் மட்டுமே ஒரு அணி வெல்லும் படியான விதிமுறை உள்ளது. அதனால் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் பந்து வீச்சும் களத்தடுப்பும் மிகச் சின்ன ஆயுதங்கள் மட்டுமே. ராஜஸ்தான் போன்ற வலுவற்ற அணிகள் பக்கத்து மாநில மட்டையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தம் அணிக்கு ஆட அழைத்தனர். பெரும்பாலும் வலுவான அணிகளின் ஓய்வு பெறும் நிலையிலுள்ள மட்டையாளர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டனர். தமிழ்நாட்டில் உபரியான ஸ்ரீராம், மகாராஷ்டிராவில் இருந்து கனிட்கர், தில்லியில் இருந்து சோப்ரா ஆகியோர் இவ்வாறு பந்தி மாறினார்கள். இந்த அளவுக்கு வேறப்போதுமே மட்டையாளர்களுக்கு மவுசு இருந்திருக்காது. யாருமே பந்து வீச்சாளர்களை இறக்குமதி செய்ய மெனக்கெட இல்லை. இந்த விசித்திர மனநிலையில் உச்சகட்டமாக கனிட்கர் ராஜஸ்தான அணியின் தலைவராகி இவ்வருட ரஞ்சி தொடரையே வென்றார். ஆனால் இந்த ஆரோக்கியமற்ற மாற்றம் உலகளவில் சிறிது சிறிதாக பரவி வந்தது. குறிப்பாக வார்னெ, மெக்ராத், முரளி போன்ற அதிதிறமையாளர்கள் அஸ்தமித்த பின்னர் உலகம் ஒரே அடியாக தட்டையாகி போனது. கிரிக்கெட்டை பந்து வீச்சாளர்களின் நிழல்களை அநாயசமாக கொய்தபடி மட்டையாளர்கள் செழித்தார்கள். சமீபமாக கிரிக்கெட் ஒரு மாபெரும் பொழுதுபோக்கு வணிகமாக வளர்ந்ததும் அதன் சமநிலையின்மை ஒரு பொருட்டாக யாருக்கும் தோன்றவில்லை. தோனியின் கீழ் ஏகப்பட்ட வெற்றிகளை அடைந்த அணி மிக பலவீனமான பந்து வீச்சை கொண்டதாகவே இருந்திருக்கிறது. இந்திய அணி சமநிலையின்மையை ஒரு வலிமையாகவே மாற்றி எடுத்தது.  இந்திய அணியின் சமகால வெற்றி வரலாறு ஐரோப்பிய அணிகளையே தம் மரபை மீற வைத்தது. ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களமிளங்க விரும்பும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகளே இன்று XI இல் ஏழு மட்டையாளர்களை தேர்கிறது. இந்திய ஆடுதள மற்றும் மட்டையாட்ட வைரஸ் இன்று உலகம் முழுக்க பரவி இருக்கிறது. இதில் ஐ.பி.எல்லின் பங்கு நாம் அறிந்ததே. வணிகமயமாக்கம் ஏற்படுத்தும் அழுத்தமும் நெருக்கடியும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடங்கி ஆடுதள அமைப்பாளர்கள் வரை கீச்சு குரலில் டப்பிங் செய்ய வைத்துள்ளது. நாட்கணக்கில் பொழுதை போக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆட்டத்தை நவீன வணிகமும் மீடியாவும் கிளர்ச்சியான சில நிமிட காட்சிகளாக சுருக்கி விட்டன. சமகால கிரிக்கெட்டின் சீக்கை மறைத்து அலங்கரித்து மேளதாளத்தோடு விமரிசையாக ஊர்வலமாக கொண்டு செல்லவே இவை விரும்புகின்றன. துரதிஷ்டவசமாக சுடுகாட்டுக்கான பூக்கள் தூவப்பட்ட பாதை இந்தியாவில் இருந்தே ஆரம்பிக்கிறது.
2011 உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் தானோ ஏனோ சர்ரியலான ஆரம்ப காட்சிகள் அரங்கேற தொடங்கி விட்டன. மார்ச் ரெண்டாம் தேதி நடந்த இங்கிலாந்து ஐயர்லாந்து ஆட்டம் மேற்சொன்ன நோய்மையின் பல்வேறு அறிகுறிகளில் ஒன்று. இந்த ஆட்டம் மீடியாவில் ஒரு அற்புதமாக மிகைப்படுத்தப்பட்டது. ஒரு செவ்வியல் ஆட்டமாக வகைபடுத்தப்பட்டது. 327 ஓட்டங்களை ஐயர்லாந்து மட்டையாடி அடைந்தது ஒரு அற்புதம் அல்ல. இங்கிலாந்தும் ஐயர்லாந்தும் ஒரே போன்று தான் சிறப்பாக மட்டையாடியது. மிகச் சின்ன வித்தியாசம் ஐந்து பந்துகள குறைவாக ஐயர்லாந்து எடுத்துக் கொண்டது. பந்து வீச்சு, களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் ஒரு அணி மேலோங்கும் போதே எதிரணியை அது முழுமையாக தோற்கடிக்கிறது. இதையே தென்னாப்பிரிக்காவோ ஆஸ்திரேலியாவோ செய்தாலும் கூட அது வெற்றி ஆகாது. இந்திய சமூக வாழ்க்கையில் ரேஷன் கடை வரிசை, வேலை வாய்ப்பு, அரசியல் வெற்றி என எத்தனையோ போட்டிகளில் எதிர்பாராமல் ஒருவர் நொடிப் பொழுதில் முன்னே வருவது போல, நடந்து வரும் இந்தியத் தனமான உலகக் கோப்பையில் அணிகள் ஆட்டமரபை வளைத்து ஆட அவசியமில்லை. வளையங்களுக்குள் தம்மை வளைத்து ஆட கற்று வருகின்றன.
ஆனாலும் நமது நாட்டின் பிரத்யேக பண்பான குழப்பம் அணிகளை பீடித்து உள்ளன. ஆஸ்திரேலியா மிக துணிச்சலாக வேக வீச்சாளர்களை நம்பி உள்ளது. தென்னாப்பிரிக்கா தங்களது வரலாற்றில் என்றும் அல்லாது மே.இ தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று சுழலர்களுடன் வெற்றிகரமாக ஆடியது. இந்தியாவும் இலங்கையும் மூன்று சுழலர்களை களமிறக்க தயங்குகின்றன. எந்த அணியுமே முதல் பதினைந்து ஓவர்களில் தாக்கவா பதுங்கவா என்பதில் தீர்மானமற்றே உள்ளது. வலிமையான பந்து வீச்சை கொண்ட தென்னாப்பிரிக்காவும், இலங்கையும் பாகிஸ்தானும் கூட. இடைநிலை ஓவர்களின் போது மட்டுமே சில ஆட்டங்களில் விக்கெட்டுகள் கொத்தாய் எடுக்கின்றன. அது கூட நிகழாத போது அணித் தலைவர்கள் வறட்டுத் தனமாய் புன்னகைத்து விதியை எள்ளி நோகின்றனர். தொண்ணூறுகளின் போது இந்திய ஆடுதளங்களில் ஆடுவதற்கு ஒரு வெற்றி சூத்திரம் இருந்தது. முதலில் மட்டையாடி 280க்கு மே; எடுக்க வேண்டியது. பின்னர் மூன்று சுழலர்களை கொண்டு தாக்கி வென்று விடலாம். ஆனால் சமீபமாக இங்கு வந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியுசிலாந்து போன்ற அணிகள் சந்தித்த உண்மை வேறு. ஒவ்வொரு ஆட்டத்திலும் அணிகள் ஒன்றை விட மற்றொன்று மேலும் சிறப்பாக மட்டையாடிக் கொண்டே போகலாம். இதில் மாற்றமில்லை. கடைசியாக யார் மிக நன்றாக மட்டையாடினார்களோ அவர்களுக்கே கோப்பை. மார்ச் ஆறு அன்று தெ.ஆ மற்றும் இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்த ஆட்டத்தில் போல அரிதாக மோசமான மெத்தன ஆடுதளங்களிலும் ஆட நேரலாம். அப்போது ஒரு மோசமான சாப்பாட்டை உண்ட உணர்வே இரு அணிகளுக்கும் ஏற்படுகிறது. தாம் ஏன் ஜெயித்தோம் அல்லது தோற்றோம் என்பதை இரு அணிகளும் அப்போது பரிசீலித்தால் ஒரே விடையே கிடைக்கிறது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு பூனை போல் அமர்ந்திருக்கும் துரதிர்ஷ்டம் அணிகளுக்கு நேர்கிறது.

இதுவரையிலான ஆட்டங்களில் முயலும் ஆமையும் ஓடிக் கொண்டே இருந்தால் எப்படியும் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று புரிந்து கொண்டன. மற்றபடி மரபான ஓட்டபந்தய படிப்பினைகள் மண்மூடி போயின. அடுத்து வரும் ஆட்டங்களிலும் அற்புதங்கள் ஒன்றை ஒன்று முழுங்கக் கூடும். உலகக் கோப்பை இந்திய மண்ணை விட்டு விடை பெறும் போது கிரிக்கெட் மீண்டும் சாதாரணமானதாக மாறி விடும்!
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates