Friday 10 February 2012

புசிக்கப்படுவதன் அவலம்



ஒரு கசப்பான கனியை
எனக்குத் தருகிறாய்
மனமும்
உடலும்
சின்ன சின்ன
எண்ணங்களும் உணர்வுகளும்
கசக்கின்றன

கசப்பாய்
ஊறித் ததும்புகிறேன்

பிறகு
கருணையே இன்றி
ஒரு புது மிட்டாயை அறிந்த
குழந்தையை போல
சுவைக்கிறாய் என்னை
அவ்வளவு இனிப்பாய்

நான் உண்டதற்கும்
நீ உண்டதற்கும்
இடைப்பட்ட காலத்தில்
நிகழ்ந்தது தான்
அன்பு
என்கிறாய்

உமிழ்நீரோ
உடலின் நீர்களோ
குருதியோ
அல்ல
ஆனாலும்
கசிந்து பெருகுகிறேன் நான்
கசப்போ இனிப்போ
அற்ற ஒன்றாக
மாறியிருக்கிறேன்

அது
எப்போதென்றோ
எவ்வளவு காலத்துக்கென்றோ
அறிய மாட்டாய்

ஆனால்
மனித வரலாற்றில் என்றுமே
புசிக்கப்பட்டதன் அவலம்
அது மட்டுமே
என சொல்லிக் கொள்கிறாய்

அதாவது
புசிக்கப்படும் எதுவும்
சுவைப்பதும் இல்லை
அழிவதும் இல்லை

அந்த துர்பாக்கியத்தை கடந்து
மீண்டும்
ஒரு கசப்பான கனியாக
அது
காத்திருக்கிறது
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates