Tuesday 26 June 2012

மனுஷ்யபுத்திரனை எங்கு கொண்டு போய் வைப்பது?


மனுஷ்யபுத்திரன் ஒரு விசயத்தில் விநோதமான கவிஞர். கவிதையின் வடிவம் மற்றும் இயங்குமுறையை பொறுத்த மட்டில் அவரது தலைமுறையிலோ அதற்கு முன்னரோ அவரைப் போன்று மற்றொருவர் இல்லை. அவரது வேர் நவீனத் தமிழ் மண்ணில் இல்லை. அவரை வரையறுப்பதில் நமக்கெல்லாம் சிக்கல் உள்ளது. அவரது மொழி ஒரே சமயம் பாராட்டுக்களையும் கண்டனங்களையும் வரவேற்கும் ஒன்று.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து தற்போதாக சுமார் பதினைந்து வருடங்களில் அவரது கவிதை வடிவம் பல இளம் கவிஞர்களால் கையாளப்பட்டிருக்கிறது படித்த மட்டில் மனுஷ்யபுத்திரனை போல் எழுதுகிறார் என்று அடையாளம் காணும் மட்டம் ஒரு தனி கலாச்சார மொழியாக அது மாறியுள்ளது. சுவாரஸ்யமாக இன்று விகடன், குமுதத்தில் வரும் கவிதைகளில் கூட மனுஷ்யபுத்திரனின் சாயல் எளிதில் காண முடிகிறது. உக்கிரமான தனிமனித உரையாடல்கள், அன்பின் பாசாங்கு, தனிமையின் மீட்பின்மை, தீமை குறித்த விவாதங்கள், இருளில் வெளிச்சம் இவையெல்லாம் மனுஷ்யபுத்திரனிசத்தின் கூறுகள்; அவருக்கே உரித்தான சொற்றொடர்கள் மற்றும் தனிவாசனை கொண்ட சொற்கள் உள்ளன. தேவதைக்கதைகளின் பிய்த்துப் போட்ட ரொட்டித் துணுக்குகளின் தடத்தை போல் அவற்றைப் பின்பற்றி நீங்கள் அவருக்கே உரித்தேயான கருக்களை, கருத்துநிலைகளை, விவாதப்புள்ளிகளை தொட முடியும்.

மனுஷ்யபுத்திரனை மறுப்பவர்கள் அவரது வழிவரும் இளங்கவிஞர்களையும் சேர்த்து தான் மறுக்கிறார்கள். அவரது கவிதை முறையை தவறென்று நம்புபவர்கள் அவர் ஒரு வியாதியை போல் பிறரை பாதிப்பதாக கருதுகிறார்கள். மனுஷ்யபுத்திரனை பின்பற்றும் கவிஞர்களின் உத்தேசத்தை மட்டுமல்ல மறுப்பவர்களின் காரணங்களையும் நாம் அலச வேண்டும். அவரை முழுக்க புரிந்து கொள்ள இது அவசியம்.

மனுஷ்யபுத்திரனின் மொழியில் எழுதப்படும் கவிதைகள் பிரதிகள் அல்ல. இளங்கவிஞர்கள் அவரை போல செய்வதும் இல்லை. தனது மொழி மூலம் அவர் கண்டடைந்த வெளிச்சங்களை நாடும் முயற்சிகள் என்றே அவற்றை நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் தமிழ்க் கவிதையை ஒரு இறுக்கமான மனநிலையில் இருந்து, குறுகலான பார்வையில் இருந்து, ஆச்சாரமான விதிகளில் இருந்து அவர் விடுவித்துள்ளார். அது என்ன? நவீன கவிதை இங்கு தோன்றும் முன் ஒரு பாடல் மரபு இங்கு இருந்தது. பாரதியும் பாரதிதாசனும் இம்மரபில் வந்த நம் காலத்து பிரதிநதிகள். பின்னர் வெகுஜன தளத்தில் பிரபலமான இடதுசாரி/மக்கள் கவிஞர்கள் வந்தார்கள். கற்பனாவாத/இடதுசாரி கவிஞர்கள் (வானம்பாடிகள்) எண்பதுகள் வரை ஆதிக்கம் செலுத்துனார்கள். மூன்றாவதாக எதனோடும் உறவுகொள்ளாமல் தனதேயான விழுமியங்களுடன் நவீனத்துவ கவிதை ஐம்பதுகளில் இருந்து தொண்ணூறு வரை இயங்கியது. தமிழ்க்கவிதைகளில் பின்நவீனத்துவ கவிதை இயக்கம் ஒன்று உருவாகி வளரவே இல்லை. பின்நவீனத்துவம் நம் புனைவுகளை பாதித்துள்ளதை ஒப்பிடுகையில் இது மிக ஆச்சரியமானது. நமது கவிதை மரபு எவ்வளவு செறிவானது, ஆழ்ந்த பிடிமானம் கொண்டது என்பதற்கு இந்த பின்நவீனத்துவ சாயலின்மை ஒரு நல்ல உதாரணம். இங்கு இரண்டு விசயங்களை சொல்ல வேண்டும்.
  1. மனுஷ்யபுத்திரன் இந்த மூன்று போக்குகளுடன் எந்த தொடர்பும் அற்றவர்.
  2. அவரது தலைமுறைக் கவிஞர்கள் இன்றும் நவீனத்துவ கவிதை கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவர்கள்.

நவீன கவிதையின் கொள்கைகள் என்ன?
கவிதை பொதுவான விசயங்களை முழங்கக் கூடாது. தனிப்பட்ட அனுபவங்களை அதன் நுணுக்கங்களுடன் மறைமுகமான மொழியில் எழுத வேண்டும்.

ஒப்பீடுகள், உருவகங்களுக்கு பதில் குறியீடுகளும், படிமங்களும் பிரதானமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

நவீன கவிதை பொதுவாக வாழ்வின் இருண்மையை அவநம்பிக்கையின் குரலில் பேசியது. சமூகத்தின் சீரழிவு அல்ல தனிமனித சஞ்சலங்களும் அவஸ்தைகளும் போதாமைகளும் கருப்பொருளாயின. நவீன கவிதை நுண்பெருக்கிக்குள் உயிரி போல உள்ளொடுங்கிக் கொண்டே போனது. தமிழில் குறிப்பாக கடந்த முப்பது வருடங்களாக எழுதப்படும் கவிதைகளில் நீங்கள் இந்த பண்புகளை பொதுவாக பார்க்கலாம். அவை இறுக்கமான மொழியில் அவநம்பிக்கையான தொனியில் ஒரு மனநிலையை அல்லது மனப்பதிவை சித்தரிக்கும். ஒரு பக்கம் பாவலர்களும் கற்பனாவாதிகளும் இடதுசாரிகளும் விரிவுபடுத்தி நெகிழ்த்தி கவிதையை நீர்த்துப் போக வைத்த போது நவீனத்துவ கவிதை தந்த இறுக்கமும் இருண்மையும் தன்னிலையும் நமக்கு தேவையாக இருந்தது அது நமது தமிழை நவீனப்படுத்தவும் சமனப்படுத்தவும் உதவியது. ஆனால் இந்த நவீனத்துவ மொழி ஒரு கட்டத்துக்கு பின் நமக்கு பெரும் சுமையாக மாறத் துவங்கியது. இறுக்கமான வடிவத்தில் வாழ்வின் கசப்பை, தனித்த இருப்பை பதிவு செய்யும் எண்ணற்ற போலி கவிதைகள் எழுதப்பட்டன. இன்று இத்தகைய மொழி நாம் பொதுவில், தனிப்பட்ட உரையாடல்களில், மீடியாவில் பயன்படுத்தும் மிகவும் நெகிழ்ந்த பலதரப்பட்ட சிக்கலான மொழியில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு போயுள்ளது. தமிழில் கவிதை மொழியை புதுப்பிக்கும் முயற்சிகள் பெண்ணிய தலித்திய தளங்களில் தான் நிகழ்ந்தன. குறிப்பாக அதிகாரம் குறித்த விவாதம் நம் சமகால கவிதை மொழிக்கு ஒரு உக்கிரத்தை அளித்துள்ளது. இன்னொரு புறம் நாட்டார் வழக்கில் அமைந்த கவிதைகளும் முக்கியமானவை. ஆனால் தொண்ணூறுகளில் நவீனத்துவ கவிதை குறித்த பிரச்சாரங்கள், விவாதங்கள், படைப்புகள் வழி பரிச்சயம் கொண்டவர்கள் இன்றும் கவிதை குறித்து ஒரு ஆச்சாரமான மனநிலை கொண்டவர்கள். கவிதை என்றால் இவர்களுக்கு ஒரு குறியீடு, படிமம், தனிமனித அரற்றல் இவ்வளவு தான்.

மேற்சொன்ன மொழி மற்றும் பேசுபொருள் சார்ந்த நவீனத்துவ பண்புகளை நாம் ஆரம்பத்தில் இருந்தே மனுஷ்யபுத்திரனிடம் காண முடியாது. முதலில் அவரது கவிதைகள் இறுக்கமாக அல்லாமல் ஒரு நெகிழ்வான மனநிலையில் பேசுகின்றன. தமிழ்க்கவிதைகள் உணர்ச்சிகரமான சொற்களில் பேசுபவை. இவரது கவிதைகள் உணர்ச்சியற்ற அறிவார்ந்த தர்க்க மொழியில் பேசுகின்றன. ஆனால் அதே வேளை நெகிழ்ச்சியான உருக்கமான விசயங்களை (பிரிவு, இழப்பு, கைவிடப்படல், நிராகரிப்பு ... போல) சித்தரிக்கின்றன. அன்பு, கனிவு, நேசம், பிரியம், அணைப்பு, ஏக்கம், காத்திருப்பு, மனங்கசிதல் போன்ற மிக உணர்சிகரமான மனநிலைகளை “விவாதிக்கிறார். இவரது கவிதையின் மைய ஓட்டமாக ஒரு தர்க்க சிந்தனை இருக்கும். தர்க்க விவாதத்தின் முடிவில் ஒரு கவித்துவமான மன-எழுச்சி. இந்த மன-எழுச்சி ஒரு தர்க்கமற்ற விரிவான சிக்கலான பார்வையை கொண்ட முடிவை தரும்.

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் ஒரு கராறான தர்க்கவாதியும் இதயம் கசிந்து உருகும் ஒரு பலவீனமான தனிமனிதனும் இணைகிறார்கள். வலிமையும் பலவீனமும் இணையும் இந்த புள்ளி, அருவமும் பொருண்மையுமான உலகங்களின் சந்திப்பு அவரது கவிதைகளின் தனித்துவம். சவரக்கத்தி மூளையின் கூர்மையும் மெழுகின் இளகின தன்மையும் கலந்தது அவரது மொழி. முக்கியமாக அவர் தீவிரமான கொந்தளிப்பான விசயங்களை உரையாடும் போது எடுத்துக் கொள்ளும் மொழியை சொல்ல வேண்டும். அப்போது அவரது மொழியில் ஒரு அக்கறையின்மை, விலகல்தன்மை, கொலையாளியின் குரூரம் வந்து விடுகிறது. அவரது கவிதைகள் நம்மை ஆழமாக தொந்தரவு செய்வதற்கு இந்த குரூரமான அன்பின் மொழி, அக்கறையற்ற அக்கறை காரணம். கடுங்குளிரில் மரத்த கைகள் கொண்டு கனல் துண்டுகளை எடுத்துப் போடுவதைப் போன்றது இது. இதை டி.எஸ் எலியட் unification of sensibility என்கிறார். குறிப்பாக இங்கிலாந்தில் பதினேழாம் நூற்றாண்டில் அநாமதேயமாக வாழ்ந்து மறைந்த ஜான் டன், ஹெர்பர்ட், மார்வெல், வான் உள்ளிட்ட மீபொருண்மை கவிஞர்களை (metaphysical poets) விவரிக்கும் போது unification of sensibilityபண்பை சுட்டுகிறார்.
டி.எஸ் எலியட்


மனுஷ்யபுத்திரன் கவிதைகளுக்கான மாதிரிகளை நாம் தேடினால் அவற்றை ஐரோப்பிய நவீன கவிதைகளிலோ சமகால பின்நவீனத்துவ கவிதைகளிலோ காண முடியாது. நவீனத்துவ பின்நவீனத்துவ கவிதைகள் மாறுபட்ட கூறுமுறையும் கொள்கைகளும் கொண்டிருந்தாலும் இரண்டும் வாழ்வின் முழுமையின்மையை அடிப்படையாக கொண்டு பேசுபவை. நவீனத்துவ கவிதையில் நாம் கேட்பது ஒற்றைக் குரல் என்றால் பின்நவீனத்துவக் கவிதையில் அது பல்தரப்பட்ட குரல்கள். நவீனத்துவ கவிதைகள் வாழ்வின் பொருளின்மையை ஆழமான நம்பிக்கையுடன் சீரியசாக பேசும் போது பின்நவீனத்துவ கவிதைகள் அதையே விளையாட்டு பரீட்சார்த்தங்களுடன் அசட்டையான தொனியுடன் பேசுகின்றன. மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் இதற்கு முழுக்க மாறான நிலைப்பாட்டை எடுக்கின்றன அன்றாட வாழ்வு எந்த சிலாகிப்பும் கொள்கைப் பிடிப்பும் இல்லாமலே உவப்பானது என்பது அது. இந்த விதத்தில் தான் அவருடைய கவிதைகளுக்கான அசல் மாதிரிகளை தேடி நாம் பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிதைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக மீபொருண்மைக் கவிதைகளுக்கு. இக்கவிதைகளில் மனுஷ்யபுத்திரனிடம் காணும் அதே கவித்துவமான தர்க்க உரையாடலை நாம் பார்க்க முடியும். ஒரு சிக்கலை துவக்கி மெல்ல மெல்ல விவாதித்து முடிவை நோக்கி கொண்டு செல்லும் பாணியை காணலாம். அதே ஏக்கத்தை, இறைஞ்சலை, கனிவை, அத்தனை கசப்புகள், அச்சங்கள் மத்தியிலும் அன்பு ஒன்றை நம்பி வாழ்வை எதிர்கொள்ளும் பலவீனமான துணிச்சலை பார்க்க முடியும். இறைவனையும் காதலியையும் தொடர்ந்து உரையாடலுக்கு அழைத்து அதன் வழி கவிதைக்குள் பாய்ச்சலை நிகழ்த்துவதும் மீபொருண்மை கவிதைகளின் பாணி தான் மனுஷ்யபுத்திரனிடமும் உள்ளது. எப்படி மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் “நீ என்பது காதலியை, இறைவனை, பிரம்மாண்டமும் சிக்கலுமான வாழ்வை ஒரே சமயம் குறிக்கிறதே அவ்வாறே ஜான் டன் போன்ற மீபொருண்மைக் கவிஞர்களின் படைப்புகளிலும் நாம் காண்கிறோம். விடிகாலையில் ஆடையின்றி படுக்கையில் காதலியுடன் கிடக்கும் ஓருவனின் எளிய உணர்வுகளின் வழியில் தான் அவர் இறைநிலை நோக்கிய உன்னதத்தையும் சட்டென்று சென்றடைகிறார். எப்படி மனுஷ்யபுத்திரனின் பல கவிதைகள் தவறுதலாக காதல் கவிதைகளாக அடையாளம் காணப்படுகின்றனவே அவ்வாறே பல்கலைக்கழகங்களில் கூட ஜான் டன்னும் தவறுதலாக அறியப்பட்டார்.

மீபொருண்மை கவிஞர்கள் பலர் தாம் வாழ்ந்த காலத்தில் எதையும் பிரசுரித்திருக்கவில்லை. அவர்களின் காலம் நாடகத்தின் (ஷேக்ஸ்பியரின்) பொற்காலம். இக்கவிஞர்கள் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு விமர்சகர்கள் இவர்களை “தத்துவார்த்தமாக பாவனை செய்கிறார்கள் என்று கண்டித்து ஒரு புறம் வைத்தார்கள். பின்னர் வந்த மூன்று கவிதைப்பள்ளிகளிலும் இவர்களின் பாதிப்பை நாம் சற்றும் பார்க்க முடியாது. ஆனால் ஆச்சரியமாக இருபதாம் நூற்றாண்டில் சட்டென்று ஒரு மறுகண்டுபிடிப்புக்கு உள்ளாகி பிரபலமானார்கள். முக்கியமாக டி.எஸ் எலியட் இவர்களைப் பற்றி ஆழமாக விமர்சித்து எழுதி ஒரு தனி கவனத்தை ஏற்படுத்தினார். படிமம், குறியீடுகளுக்கான முக்கியத்துவம், எதையும் கொஞ்சம் புதிராக சொல்லுதல், தனிமனித அனுபவங்களின் அடிப்படையில் எழுதுதல் ஆகிய நவீன கவிதைப் பண்புகள் இந்த பதினேழாம் நூற்றாண்டு கவிஞர்களிடம் இருந்து நவீனத்துவ கவிதை பெற்றவை. இவர்களிடம் உள்ள தனிச்சிறப்பாக எலியட் கண்டது இவர்கள் அறிவார்த்தத்துக்கும் உணர்ச்சிகரத்துக்கும் இடையிலான ஒரு நுண்ணிய மனநிலையில் எழுதுகிறார்கள் என்பது. மீபொருண்மைக் கவிஞர்களிடம் தத்துவத்தின் செறிவும் உள்ளது, உணர்ச்சி வேகம் கொண்ட மொழி தரும் தர்க்கம் கடந்த தரிசனமும் உள்ளது. இதையே அவர் ஒருங்கிணைக்கும் நுண்ணுணர்வு (unification of sensibility) என்றார்.

தன்னிலை × எதிர்நிலை ஆகிய புள்ளிகளுக்கு இடையிலான உரையாடலாக மனுஷ்யபுத்தரனின் அநேகமான கவிதைகள் உள்ளதை அறிவோம். ஆனால் இந்த இருநிலைகளையும் அவர் தனிமனித × சமூக உறவாடலாக நவீனத்துவ முறையில் அமைக்கவில்லை. அவை எப்படி அமைகின்றன என்பது மிக சுவாரஸ்யமானது. நவீன தமிழ்க் கவிஞர்களில் மிக அதிகமாக காதல் கவிதைகள் எழுதியவர் அவராகத் தான் இருப்பார். ஆனால் அவை நிச்சயம் காதல் கவிதைகள் அல்ல. அவரது பிரிவைப் பேசும் ஒவ்வொரு காதல் கவிதையும் தன்னை அழிந்து போகும் ஒரு எளிய பலவீன இருப்பாக அறிகிற தனிமனிதனுக்கும் பிரபஞ்சத்துக்குமான உரையாடல். காதலை கொண்டாடுகிற கவிதைகள் இயற்கை இருப்பின் ஒரு பகுதியாக தன்னை உணர்கிற மனதின் முழுமையை பேசுவன. ஆனால் அவரது காதல் கவிதைகளை “பக்திக் கவிதைகள் என்று ஜெயமோகன் அடையாளம் கண்டது போல் நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் பக்தி என்பது சரணடைதலை உள்ளடக்கியது. அது ஒரு இந்திய ஆன்மீக மார்க்கம். நாம் மனுஷ்யபுத்திரனிடம் காண்பது பிரக்ஞையற்று இருத்தலே மிகப்பெரிய அறிதல் எனும் ஒரு ஜென் மனம். நாடிச் சென்று தரிசனம் அனுபவிப்பது இந்து மத்த்தின் பாதை. இந்த பக்தி மார்க்கத்தின் மனத்திளைப்பை, மாபெரும் ஆற்றலின் முன்பான ஒப்படைப்பை, அல்லேயுயா கண்ணீப் பெருக்கை நாம் மனுஷ்யபுத்திரனின் கவிதைக் கண்ணோட்டத்தில் காண முடியாது. ஜென்னில் மாபெரும் ஆற்றலோ மண்டியிடுதலோ இல்லை. அப்படி செய்வது செயற்கையானது என்கிறது ஜென். கண்ணீரையும் சிரிப்பையும் கடந்தது ஜென். ஒரு ஒழுக்கோடு ஒழுகிச் செல்வதையே அது போதிக்கிறது. அதனால் தான் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின் அக்கறையைப் பற்றி பேச பக்தி எனும் சொல்லை பயன்படுத்துவது சிக்கலாக உள்ளது. அவர் “கடவுளற்றவனின் பக்திக் கவிஞர் அல்ல; மாறாக மனமற்று போக முடியாமையின் சோகங்களை, பாசாங்குகளை பேசிய, அப்படி உறைதலின் அவசியத்தை வலியுறுத்திய ஆன்மீகக் கவிஞன்.

ஜான் டன்

காதலின் உக்கிர மொழியில் ஆன்மீக விரிவை பேசியதில் மனுஷ்யபுத்திரனுக்கு முன்னோடிகளை தமிழில் அல்ல, பதினேழாவது நூற்றாண்டின் மீபொருண்மை கவிஞர்களில் தான் காண வேண்டும். ஜான் டன்னின் கவிதைகளில் இதே நெகிழ்ச்சியான தர்க்க மொழியை, சாமான்ய உறவுநிலைகளை உன்னதங்களுக்கு உயர்த்தும் பாங்கை நாம் காண முடிகிறது. தொடர்ச்சியான நான்×நீ எனும் இருநிலைகளுக்கு இடையேயான உறவாடல்கள் விசயத்திலும் இவர்கள் தாம் மனுஷ்யபுத்திரனுக்கு முன்னோடிகள். மீபொருண்மை கவிஞர்களுடன் மனுஷ்யபுத்திரனை ஒப்பிட்டு வாசிக்கையில் நமக்கு எத்தனையோ ஆச்சரியங்கள் ஏற்படுகின்றன. தனது உடலை ஒரு வரைபடத்துடன் ஒப்பிடும் ஜான் டன்னின் ஒரு கவிதை (Hymn to my God, my God, my sickness) மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய பிணியாளனின் குறிப்புகள் கவிதையுடன் மிகவும் ஒத்துப் போகிறது. முக்கியமாக மருத்துவர் நம் உடல்வழி வாழ்வின் புதிரை தேடி கண்டறிவதைப் பற்றிய அவதானிப்புகள். நோயுற்ற மனித உடல் என்பது ஒரு புத்தகம் போல் ஆகிறது. மருத்துவன் அதை ஒரு பிரதியாக்கி தன் வழி வாசிக்க, அர்த்தப்படுத்த முடியும். அவனுடன் நாம் போராடிக் கொண்டே இருக்கிறோம் என்கிறது அக்கவிதை. டன்னின் கவிதை நோய்மை நமது வாழ்வின் திசைகளை கலைக்கிறது என்கிறது. நோயுற்ற தேகம் வரைபடத்தின் திசைகாட்டலை மறுக்கிறது. மருத்துவர் நமது மரணத்தின் திசையை அறிந்து மிரளும் போது நாம் மரணத்துக்கு மட்டுமல்ல வாழ்தலுக்கு கூட திசையே இல்லை என்று உணர்கிறோம். உடலை அர்த்தப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியும் அதை மேலும் மேலும் புதிர்களால் மூடுகிறது. உடல் கடலில் மரத்துண்டை போல் பயணிக்க வேண்டியது என்கிறார் டன். அப்போது அது சேர வேண்டிய இடத்துக்கு சரியாக போய் சேர்ந்து விடும். மனுஷ்யபுத்திரனின் கவிதையில் போலவே டன்னிடமும் ஒரு மருத்துவ மனதின் பிரக்ஞை மீது கடுமையான பகடி உள்ளது.

இரண்டு விசயங்களை சொல்லி நிறைவு செய்யலாம். நவீனத்துவ கருதுகோள்கள் மீதான மூர்க்கமான பற்றுதல் நமக்கு மனுஷ்யபுத்திரனை அறிவதற்கு தடையாக உள்ளது. அவரது பங்களிப்பு நமது கவிதை மொழியை தளர்த்தியது மட்டுமல்ல ஒரு அறிவார்ந்த ஆன்மீகக் குரலும் கவிதைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்ததும் தான்.

ஞானக்கூத்தனிடமும் சச்சிதானந்தனிடமும் உள்ள அரசியல் பகடியை மேலும் ஆழமான உளவியல் பார்வையுடன் கூர்மையான பண்பாட்டு தத்துவ நோக்கில் முன்னெடுத்தார் மனுஷ்யபுத்திரன். கல்யாண்ஜியின் சாமான்ய தருணங்கள் மற்றும் இயற்கை மீதான சிலாகிப்பை ஆன்மீக உறைதலாக மற்றொரு தளத்துக்கு கொண்டு சென்றார். தமிழ் நேரடிக் கவிதைகளில் முக்கியமானவராக நினைக்கப்படுகிற சுகுமாரனுக்கு மனுஷ்யபுத்திரனுக்குமான படைப்புரீதியான பந்தம் தோற்ற அளவிலானது மட்டுமே. சுகுமாரன் முழுக்க முழுக்க ஒரு நவீனத்துவ கவிஞர். இருத்தலியல் தனிமை, அபத்த நிலைகள் பற்றி எழுதியிருந்தாலும் கடந்த பத்து வருடங்களில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் நவீனத்துவ இருண்மைகள் மற்றும் அவநம்பிக்கைகளை கடந்து வெகுதூரம் வந்து விட்டுள்ளன. அவற்றின் பயணம் என்பது இருளில் இருந்து கட்டற்ற வெளிச்சம் நோக்கி எனலாம். வாழ்வின் குரூரத்தையும் வலியையும் அன்பைப் போலவே தயக்கமில்லாமல் இருகைகளாலும் எதிர்கொள்ள நம்மிடம் வேண்டும் கவிதைக் குரல் மனுஷ்யபுத்திரனுடையது. இந்த குழந்தைமையான கொண்டாட்ட மனநிலையை நாம் சுகுமாரனிடம் காண முடியாது. சுகுமாரன் போன்ற நவீனத் தமிழ்க் கவிஞர்கள் விடாப்பிடியாக இருண்ட குகைக்குள் சுவர்களில் மூலிகைச் சாறு கொண்டு சித்திரம் தீட்டியவர்கள். மனுஷ்யபுத்திரன் வெளியே வந்து ஒரு பெரும் பாறை மீது வந்து அமைதியாக அமர்ந்திருப்பவர். இதனாலே அவரை தயக்கமின்றி நவீன தமிழ்க் கவிதையின் முதிர்ச்சியான காலகட்டத்தின் முதல்தலைமுறை கவிஞர் எனலாம்.

மனுஷ்யபுத்திரனின் மற்றொரு முன்னோடியாக காண வாய்ப்புள்ளவராக ஆத்மாநாம் இருந்தாலும் ஆத்மாநாமை விட உள்ளொளி மிக்கவராக மனுஷ்யபுத்திரனே தெரிகிறார். தமிழ் நவீன கவிதை வரலாற்றில் மனுஷ்யபுத்திரனின் வரிசையில் வருபவர்கள் தேவதேவனும் தேவதச்சனுமே. இருவரும் வடிவரீதியாக மனுஷ்யபுத்திரனுக்கு அதிகம் நெருக்கமானவர்கள் அல்ல. ஆனால் தத்துவத்துக்கும் ஆன்மீகத்துக்கும் இடையிலான கவித்துவ நிலையை பல கவிதைகளில் கண்டடைந்தவர்கள் இவர்கள். கவிதை என்பது வெறும் மனப்பதிவோ அகத்தூண்டுதலின் நீடிக்காத கணங்களோ அல்ல; வாழ்வை முற்றிலும் புதிய வெளிச்சத்தில் பெரும் விரிவுடன் காட்டுவது என்கிற புரிதலுடன் இயங்கியவர்கள் இவர்கள்.  

நம்மோடு இந்த தலைமுறையில் இருந்திருக்க வேண்டிய ஒரு முக்கிய நபர் நகுலன். அவர் எப்படி எழுபது எண்பதுகளில் இயங்கினார் என்பதே வியப்பானது. தமிழின் முதல் பின்நவீனத்துவ பிளவுண்ட மனம் நகுலனுடையது. மனம் என்பது தன்னில் இருந்து வேறானது என்று கண்டறிந்த முதல் தமிழ்க் கவிஞனும் அவர் தான். மனுஷ்யபுத்திரன் தனது சமீப கவிதைகளில் மனதை மனமற்ற நிலையில் இருந்து பார்க்கும் ஜென் மனநிலையில் நகுலனை பல இடங்களில் தொடுகிறார். ஆனால் நகுலனின் நிணமும் தடுமாற்றமும் பித்தும் கூடிய மனநிலை மனுஷ்யபுத்திரனிடம் இல்லை. மாறாக தெளிவுடன் நிதானத்தத்துடன் தன் பிறழும் மனதை அவர் பின் தொடர்கிறார். எங்கு சென்றாலும் மனுஷ்யபுத்திரனை அவரது கூர்மையான கவனமான மனம் பின் தொடர்கிறது; அது தான் அவரது ஆயுதமாகவும் கவசமாகவும் உள்ளது. அவரது ஆளுமை, மனமுதிர்ச்சி, மொழி எல்லாம் அது தான். அதுவே நகுலனின் கவிதைகளை எதார்த்தமான பித்தாகவும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை ஆன்மீகமான பித்தாகவும் தனித்து காட்டுகிறது.

இவை போக மனுஷ்யபுத்திரனை எந்த ஒரு தீர்க்கமான மரபின் தொடர்ச்சியாகவும் நாம் பார்க்க முடியாது. மீபொருண்மை கவிஞர்களுடனான தொடர்பு ஒன்றை உணர்த்துகிறது..கவிதை மரபு என்பது ஒரு மொழியின் வரம்புக்கு உட்பட்டது அல்ல. அது உலகப் பொதுவானது. மொழியின் வரம்புகளைக் கடந்து உலகக் கவிதைக்கென்றே ஒரு மரபு உள்ளது. இது எப்படி செயல்படுகிறது, தன்னை தக்க வைக்கிறது என்பது புதிரானது. இந்த விசித்திரத்துக்கு ஒரு நல்ல உதாரணம் மனுஷ்யபுத்திரன்.

மனுஷ்யபுத்திரன் சிறுகதை, கட்டுரை வடிவங்களின் உத்திகளை தன் கவிதைகளில் பயன்படுத்தி உள்ளார். சின்ன பெரிய கவிதைகளை எழுதியிருக்கிறார். இருந்தும் ஒரே மாதிரி எழுதுகிறார் என்கிற குற்றச்சாட்டு ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. இதே தன்மையை நாம் டன் உள்ளிட்ட மீபொருண்மைக் கவிஞர்களிடமும் காண முடியும். எமிலி டிக்கென்சனிடம் பார்க்க முடியும். காரணம் இவர்கள் உரையாடல் அல்லது விவாத வடிவில் கவிதையை கண்டவர்கள் என்பது. மேலும் இவர்களின் வலுவான ஆளுமை கவிதையில் வடிகட்டி வருவதால் அதற்கு ஒரு ஆதாரமான நிறம் கிடைத்து விடுகிறது. திரும்பத் திரும்ப பூத்தாலும் ரோஜாவுக்கு அதே நிறம் உள்ளது போல் இவர்களின் சொற்களுக்கு ஒரு நீங்காத அடையாளம் கிடைத்து விடுகிறது. சித்தரிப்பதும் பதிவுசெய்வதுமே இயங்குமுறையாக இருக்கும் போது ஒரு அடையாளமற்ற தன்மை கவிதைக்கு வந்து விடுகிறது. கவிதை தனக்கேற்றபடி தொனி மற்றும் சொல்முறையை மாற்றிக் கொண்டே செல்லலாம். நவீனத்துவ மறைமுக கவிதைகளுக்கான அனுகூலம் இது. ஆனால் இதை நாம் மாறுபட்ட கவிஞர்களிடம் எதிர்பார்க்கலாகாது. ஜான் டன், எமிலி டிக்கின்சன்னில் இருந்து மனுஷ்யபுத்திரன் வரை இந்த வித்தியாசத்தை ஒரு குறையாக அல்ல குணாதசியமாகவே நாம் பார்க்க வேண்டும்.
Share This

5 comments :

  1. //கடுங்குளிரில் மரத்த கைகள் கொண்டு கனல் துண்டுகளை எடுத்துப் போடுவதைப் போன்றது இது.//

    வாவ் :)

    ReplyDelete
  2. //கடுங்குளிரில் மரத்த கைகள் கொண்டு கனல் துண்டுகளை எடுத்துப் போடுவதைப் போன்றது இது.//

    வாவ் :)

    //நாடிச் சென்று தரிசனம் அனுபவிப்பது இந்து மத்த்தின் பாதை.//

    //பக்தி என்பது சரணடைதலை உள்ளடக்கியது. அது ஒரு இந்திய ஆன்மீக மார்க்கம்.//

    வாசிக்கும் போது கொஞ்சம் நெருடியது..பொங்கலில் கல் பொல :)

    எனக்கு பிடித்த ஸென் கவிதையொன்று..

    /காட்டு வாத்துகளுக்குத்
    தம் பிம்பத்தைப்
    பதியவைக்கும் உத்தேசமில்லை.
    நீரும்
    அவற்றின் பிம்பத்தைப்
    பெற
    மனம் கொள்ளவில்லை./

    ReplyDelete
  3. உடல் கடலில் மரத்துண்டை போல் பயணிக்க வேண்டியது என்கிறார் டன் என்ற வரி நீர்வழிப் படூஉம் புனை போல் என்கிற வரியை ஞாபகப்படுத்துகிறது.உங்கள் கட்டுரை நன்றாக இருக்கிறது.ஒரு வகையில் ஜெயமோகனின் கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள் கட்டுரையை நெருங்கிச் செல்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
  4. நன்றி சர்வோத்தமன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates