Saturday 1 February 2014

திமுகவுக்கும் பெரியாருக்கும் சம்மந்தம் உள்ளதா?




தமிழ் ஹிந்துவில் சமஸ் எழுதிய ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் கட்டுரையை ஒட்டி ஒரு கொந்தளிப்பான விவாதம் நடந்து வருகிறது. விமர்சகர் ஜமாலன் அக்கட்டுரைக்குப் பின் பெரியாரியம் அழிய வேண்டும் என்கிற பிராமண வலதுசாரி சக்திகளின் விருப்பம் உள்ளதாக கூறுகிறார். இதைக் கேட்கும் போது பெரியாருக்கும் தி.மு.கவுக்கும் எந்தளவுக்கு சம்மந்தம் உண்டு என்கிற வியப்பு நமக்கு ஏற்படுகிறது.

தி.மு.க என்பதே பெரியாரின் தீவிரமான கருத்துக்களை மட்டுப்படுத்தி அண்ணா உருவாக்கிய ஒரு சமரச இயக்கம் தான். ஆட்சிக்கு வந்த பின் தி.மு.கவினர் நாத்திகத்தை பரப்பவோ, சுயமரியாதை திருமணங்களுக்கு முன்னுரிமை அளிக்கவோ, சாதி அமைப்பை பலவீனப்படுத்தவோ காத்திரமாய் ஏதும் செய்த்தில்லை. சுயமரியாதை தம்பதியினருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அரசு வேலை என்று ஒரு சட்டம் கொண்டு வந்திருந்தால் இங்கு காதல் மறுப்பு திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு பெரும் ஊக்கமாகவும் ஆதரவாகவும் அது இங்கு இருந்திருக்கும். ஆனால் தி.மு.க அதை செய்யவில்லை. ஏன்? அப்படி செய்தால் அது இங்குள்ள சாதிய கட்டுமானத்தை சிறிய அளவிலாவது குலைத்திருக்கும். திமுகவின் கோயிலில் தமிழில் பூஜை செய்வதற்கும், வேறு சாதியினர் பூசாரி அவதற்கான பயிற்சிகளும் கூட வெறும் பாசாங்காகவே முடிந்தது. பயிற்சி முடிந்த வேற்றுசாதி பூசாரிகளுக்கு அறநிலையம் வழி வேலை வழங்க திமுக ஒன்றும் செய்யவில்லை. ராமர் பால விசயத்தில் கலைஞர் பகுத்தறிவை போதித்த்தும் இது போல ஒரு மேலோட்டமான பிரச்சாரம் தான். இது போன்ற பேச்சுகளின் மூலம் தான் ஒரு பெரியார் சீடர் எனும் பிம்பத்தை தக்க வைக்க முயல்வார். ஆனால் காத்திரமான பெரியாரிய வேலைகளை என்றும் செய்ய மாட்டார். பழைய படங்களில் எம்.ஜி,ஆர் மாறுவேட்த்துக்காக ஒரு மருவை கன்னத்தில் ஒட்ட வைப்பார். கலைஞர் பெரியாரை அது போல் ஒட்டிக் கொள்கிறார். ஓட்டு வங்கி பிரிந்து போகும் என்கிற அச்சத்தினால் தி.மு.க சாதிய கட்டுமானத்தை முடிந்தளவு அசைக்காமலே விட்டு வைத்த்து.
கலைஞரின் மஞ்சள் துண்டின் பின்னுள்ள மூடநம்பிக்கை, அவரது குடும்பத்தினரின் கோயில் தரிசனங்கள் போன்ற உதிரி பிரச்சனைகளாக மறந்து விடலாம். ஆனால் தி.மு.க பொறுப்பில் உள்ள பலர் மஞ்சள் நீராட்டு போன்ற நிகழ்ச்சிகள் நட்த்துவதும் அதற்கு போஸ்டர்கள் அடித்து ஒட்டுவதும், ஸ்டாலினே அதற்கு தலைமை தாங்குவதும் என கீழ்மட்ட அளவு வரை தி.மு.க ஒரு பகுத்தறிவை வலியுறுத்தாத அமைப்பாகவே அதன் தொண்டர்களாலே பார்க்கப்படுவது வெட்டவெளிச்சம்.
இது உண்மையில் அண்ணாவின் காலகட்ட்த்தில் எடுக்கப்பட்ட முடிவு. பகுத்தறிவின் பெயரில் சாதியையோ மத்த்தையோ சடங்குகளையோ எதிர்க்க வேண்டாம் என்ற ஒரு சமரச மனப்பான்மையில் தான் தி.மு.க அரைநூற்றாண்டாக இயங்கி வருகிறது. தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கு உள்ள வித்தியாசம் பா.ஜ.க போல் அது நேரடியாக மதவாதத்தை, சாதியத்தை ஆதரிக்காது என்பதே. நாங்கள் மதத்தை எதிர்க்க மாட்டோர், ஆதரிக்கவும் மாட்டோம் என்பது கண்ணை மூடிக் கொண்டு போவோம் என்பதற்கு சமம். நீண்ட காலமாக தி.மு.க பெரியாரை ஒரு சின்னமாக, பதாகையாக பயன்படுத்தி வந்திருக்கிறது. அ.தி.மு.கவுக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வெளிப்படையாக மதத்தை ஆதரித்தார்கள் என்பது தான். ஆனால் ஒரு விசயத்தை நீங்கள் இருட்டில் செய்தால் என்ன, வெளிச்சத்தில் செய்தால் என்ன? ரெண்டும் ஒன்று தானே!
சோ தி.மு.கவை எதிர்ப்பதே அதிமுகவை ஆதரிக்கத்தான். அதிமுகவை ஆதரிப்பதும் அய்யங்கார் சமூகத்திற்காகத் தான். ஜெயாவுக்கு பின் வேறு சமூக ஆள் கட்சித்தலைமைக்கு வந்து சோ அப்போதும் இருந்தால் நிச்சயம் ஆதரிக்க மாட்டார். மற்றபடி கொள்கையளவில் தி.மு.க சோவை எந்தளவிலும் எரிச்சலூட்டக் கூடிய கட்சி அல்ல. தி.மு.கவின் பிராமண எதிர்ப்பு நிலைப்பாடு என்பது (அப்படி ஒன்று உண்டென்றால்) இன்றைய தலைமுறையினரை சற்றும் தீண்டாத ஒன்று. அறுபதுகளில் பிறந்த வாழ்ந்த பிராமண சமூகத்தினருக்கு திமுக மேல் கோபம் இருக்கலாம். ஆனால் இன்றைய தலைமுறை பிராமணர்களுக்கு திமுக தம்மை எதிர்க்கிற கட்சியே அல்ல. பிராமணியம், இந்துத்துவாவுக்கு எதிராக சிறுபத்திரிகைகளும், இட்துசாரி ஆதரவாளர்களும் கடந்த முப்பது வருடங்களில் எழுதியதற்கும் பேசியதற்கும் ஒரு சிறு அளவு கூட திமுக செய்யவில்லை. மோடி தமிழகம் வந்தால் திமுக கறுப்புக் கொடி காட்டுமா? செய்யாது. பேஸ்புக்கில் கூட மோடியை அதிகம் எதிர்ப்பது இட்துசாரி, சிறுபத்திரிகை, இஸ்லாமிய தரப்பை சேர்ந்தவர்கள் தாம்.
தி.மு.க எதிர்ப்பு என்பது ஒரு கட்சிரீதியான போட்டி சார்ந்த எதிர்ப்பு தான். சாதி பாசம் காரணமாய் அதிமுகவை ஆதரிக்கிற பிராமணர்கள் அந்த நோக்கில் ஒருவேளை திமுக விழுவதை எதிர்பார்க்கலாம். ஆனால் அது ஒரு போதும் திமுக வலதுசாரித்தனத்தை எதிர்க்கிறது என்றோ, பெரியாரை முன்னெடுக்கிறது என்றோ அல்ல.
பெரியார் குறித்த மிக காத்திரமான விவாதங்கள் தலித்திய எழுச்சியை ஒட்டி தொண்ணூறுகளின் இறுதியிலும் ரெண்டாயிரத்தின் துவக்கத்திலும் சிறுபத்திரிகை வட்ட்த்தில் நடந்தன. அப்போது ஆவேசமாக பெரியாரை மறுகட்டமைப்பு செய்து மீட்ட்தும், ஆதரித்ததும் திமுகவினர் அல்ல. சிறுபத்திரிகை அறிவுஜீவிகளும் ஆதரவாளர்களும் தான். இந்த விவாதங்கள் திமுகவையோ வெகுஜன கட்சிகளையோ தொடவில்லை. திமுக என்றுமே தன் கொள்கைகளை விவாதித்து விரிவுபடுத்தும் பணிகளை செய்ய ஆட்களை உருவாக்கியதில்லை. நம் பள்ளிக்கூட பாட்த்திட்ட்த்தில் பெரியாரின் கருத்துக்கள் கற்பிக்கப்படுவதில்லை. ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா? அங்கு கடவுள் எதிர்ப்பை விட கடவுள் வாழ்த்தை தான் மாணவர்கள் மீண்டும் மீண்டும் கற்கிறார்கள். எழுபதுகளுக்குப் பிறகு சினிமா, மீடியா, பத்திரிகை, கருத்தரங்கு என எந்த வழியிலும் பெரியாரியத்தை விவாதித்து முன்னெடுக்க திமுக முயலவில்லை. சொல்லப் போனால் கொள்கைகளை விவாதித்து வளர்க்கும் அறிவுஜீவிகளை திமுக கவனமாக வளர்க்காமல் தவிர்த்திருக்கிறது என்கிறார் தமிழவன். கட்சியை முழுக்க தன்னை நோக்கி குவியும் படியாய் கலைஞர் செய்தார். எந்த ஒரு கோட்பாடும் மாறும் காலத்துக்கு ஏற்ப விவாதிக்கப்பட்டு தான் வளர முடியும். அப்போது தான் புதிய தலைமுறைகளை அது சென்று அடையும். திமுக இந்த பணியை கைவிட்டதன் விளைவு தான் சாதிக்கட்சிகள் தமிழகத்தில் செழித்து வளர்ந்தது. இவை சாதி வேறுபாடுகளுக்கு ஒரு எதிர்மறையான தீர்வை தேட முயன்றன.
வீரமணி கலைஞருடன் இருக்கிறார் என்கிற காரணத்துக்காக் பெரியாரும் திமுகவுடன் இருப்பதாக கருதுவது பெரும் அபத்தம். பெரியார் தன் சவப்பெட்டியில் அடிப்பதற்காக ஒரு ஆணியை தேர்ந்தெடுத்தார். அது தான் வீரமணி.
Share This

1 comment :

  1. சிறந்த சிந்தனை
    //நம் பள்ளிக்கூட பாட்த்திட்ட்த்தில் பெரியாரின் கருத்துக்கள் கற்பிக்கப்படுவதில்லை//
    இக்கட்டுரையின் கருத்து இந்த வாக்கியத்தில் அடங்கிவிடுவதாக நான் எண்ணுகிறேன்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates