Thursday 18 June 2009

செக்ஸ் யாருக்கு சொந்தம்? - ஊனம் -- வன்முறை -- அடையாளப் பட்டிகள்

நீ ஒரு ஆணா?" அம்மா திட்டி முடித்த பின் கடைசியாய்க் கேட்டாள்.
குழந்தை பெற, தாலி அணிய மறுக்கும் மனைவியை அடித்து உதைத்து வன்கொடுமை செய்யாதது, சமையலில் ஆர்வம் காட்டுவது போன்றவை என் குற்றங்கள். வன்முறை செய்யாத நான் அம்மாவின் கண்ணோட்டப்படி பெண்ணன்.
மன்னிக்க வேண்டும். இப்படியே பழகிவிட்டது. ஒருமுறை எல்டாம்ஸ் சாலையில் ஒரு வசதிபடைத்த நல்லவர் என்னைக் கட்டி வைத்து நையப்புடைக்க ஆசைப்பட்டார். அதற்கு காரணம் நேர்மாறானது. என் வண்டியில் அவரது கார் மோதிவிட எனக்குள் கிடக்கும் ஆண்சிங்கத்தைச் சற்று தட்டி எழுப்பி "ஏய் கண் தெரியாதா" என்று கத்திவிட்டேன். ஒரு அரை உடம்புக்காரன் கத்தினது அந்த 'முழுமனிதரின்' அகங்காரத்தைச் சீண்டிவிட்டது. உடனே என் குரல்வளையைப் பிடித்துவிட்டார். நற நறவெனப் பல்லைக் கடித்து "என்ன சொன்னே தேவடியா மவனே" என்றார். பரபரப்பான சாலை. அருகே ஆட்டோ நிறுத்தம். சுற்றிலும் வேடிக்கை பார்க்கும் கூட்டம். பைக்கின் பின்னால் குத்திட்டிருந்து பார்த்த ஒரு மெக்கானிக் கடை சிறுவனை ஏவினார்: "டே ஒரு கம்பி எடுத்து வா. இவனே கட்டி வைத்து குத்தப் போறேன்". ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தாடியைச் சொறிந்து என்னைப் பார்த்துச் சொன்னார், "தம்பீ நீ ஓடிப்போயிரு". குரல்வளையை விட்டால் தானே. எப்படியோ அவரிடமிருந்து திமிறி தப்பி வண்டியைக் கிளப்புகையில் கூட்டத்திலிருந்து ஒருவர் வெளிப்பட்டு குறுக்கிட்டார்: "என்னாப்பா எங்க போறே, பிரச்சினையைப் பேசி முடிச்சிட்டு அப்பால போலாம்!"
இதை நினைத்து அடுத்த பல நாட்கள் எனக்குள் ஆண்சிங்கம் குமுறியது தான்! தில்லியில் செரிபிரல் பால்சி எனும் நரம்பு நோயால் உடல் செயலிழந்த நபர் ஒருவருக்கு நேர்ந்ததைக் கேள்விப்படும் வரை. சாலை நடுவே அவரது நான்கு சக்கர வண்டி மக்கர் செய்து நின்றுவிட, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இளகின மனம் படைத்த பொதுமக்கள் இவரைச் சூழ்ந்து அடித்துப் பின்னிவிட்டார்கள். எனக்குள் ஞானம் கனிந்தது. அதாவது, road rage எனப்படும் சாலை வன்முறை முழு உடல் மனிதர்களுக்கான தனிச் சலுகை! என் நாலுகால் வண்டியை தினசரி யாராவது மோதாமல் செல்வதில்லை. அந்த வண்டிக்காரர்களிடம் எனக்குள் உறுமும் புலி ஒரு பூனையாக சிறுத்துக் கேட்கும் "அண்ணா, தயவு செஞ்சு என் வண்டியை மோதாதீங்க!"
என் நண்பன் சொல்வது போல், ஒற்றைக்காலுக்கு போனஸ் போல் எனக்கு இரண்டு காதலிகள் இருந்தனர். இரண்டாவது பெண்ணின் அம்மாவுக்கு அவளது தேர்வு பெரும்புதிராய்த் தோன்றியது.
"ஏன் இவனைப் போய் ... ரொம்ப அழகாய் இருப்பானோ"
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ரொம்ப சுமார்"
"பிறகு ஏன் .. ?"
சாதி, மொழி, பொருளாதார விசயங்களில் சமரசம் செய்யத் தயாராயிருந்தவருக்கு ஊனத்தைப் பொறுத்தமட்டில் மட்டும் மனத்தடை இருந்தது. அவர் மறைமுகமாய்க் கேட்க நினைத்தது என் அம்மா கேட்டதைத் தான்:
"அவனெல்லாம் ஒரு ஆணா?"
திருமணத்திற்குப் பிறகு நானும் மனைவியும் திருவல்லிக்கேணியில் ஒரு புறாக்கூண்டு ஒண்டுக்குடித்தனத்தில் நான்காவது மாடியில் வசித்தோம். மாமியாருக்கு ஒரு நாள் என் ஆண்மையை சோதிக்கும் உத்தேசம் எழுந்தது. குளிர்பதனப்பெட்டி, பீரோ, இன்ன பிற பரிசுப்பொருட்களை லாரியில் கொண்டு வந்தவர் என்னைக் கீழே அழைத்தார். ஓரமாய் அரும்பிய புன்னகை. "வா வந்து சாமானை எல்லாம் கொண்டு போய் மாடியில் வை". கொஞ்ச நேரத்தில் சுதாரித்து, கூலியாட்கள் கொண்டு சமாளித்தேன்.
ஊனம் -- பாலியல் உரிமை -- குழந்தைமை
பலதரப்பட்ட பெற்றோர் மற்றும் உடல் ஊனமுற்ற; மனவளர்ச்சி குன்றின குழந்தைகளிடம் மேற்கொண்ட தீவிர ஆய்வின் முடிவில் நாசெக்கும் பிறரும் (1994) கண்டறிந்த உண்மை இது:
நம் சமூகத்தில் முதியவர்களைப் போன்று ஊனமுற்றவர்கள், மூளைக்குறைபாடு உடையவர்களும் பாலியல் தன்மை இல்லாதவர்களாய், குழந்தைத்தனமானவர்களாய்க் கருதப்படுகின்றனர். அவர்கள் பெற்றோர்களால் வளர்ந்த பின்னும் குழந்தைத்தனமான ஆடைகள் அணிய ஊக்குவிக்கப்பட்டு, பாலுறவுக் கல்வி மறுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனர். இந்த போன்சாய் மனிதர்கள் பாலியல் விழிப்புணர்வற்று, எதிர்பாலினத்தை நேர்கொள்ளும் தன்னம்பிக்கை இல்லாமல் பெற்றோர்கள் கையில் தோற்பாவைகளாய் வாழ்ந்து வீணாகின்றனர். இது பெற்றோர்களும், சமூகமும் இவர்களுக்கு ஏற்படுத்தும் இரண்டாம் ஊனம். கொலே (1988) எனும் ஆய்வாளர் இந்தக் கொடுமையை 'மதலையாக்கல்' என்கிறார். திருமணத்தில் விருப்பமற்ற பெண்கள் சமுகத்துக்காகத் துறவு வேடம் பூண்டு தங்கள் பாலியலை மறைப்பது போல், பெற்றோர்கள், உடலுறவுக்குத் தோதானவர்கள் அல்லர் எனத் தாம் கருதும் மூளை, உடல் குறைபாடுடைய குழந்தைகளின் பாலியலை மழுங்கடித்து அவர்களை மழலைப்படுத்துகின்றனர். இது குழந்தைகளை உடலுறவு நடவடிக்கைகளிலிருந்து விலக்கும், அதன் மூலம் பாலியல் சிக்கல்களைத் தவிர்க்கும், நீட்டித்த பால்யம் கொண்டு உடலுறவு இழப்பை ஈடுசெய்ய, நியாயப்படுத்த எடுக்கும் முயற்சியே.
இவ்வாறு சமூக ஊனம் கொண்ட, செரிபிரல் பால்சி நோயாளியான ஒரு 40 வயதுக்காரர் பற்றி நைட் எனும் ஆய்வாளர் சொல்கிறார்:
'செரிபிரல் பால்சி நோயாளியான ஒரு 40 வயது நபர் என்னிடம் பாலியல் ஆலோசனைக்காக வந்தார். ஏன் ஆலோசனைக்காக வரத் தோன்றியது என்று கேட்டதற்கு, "செக்ஸ் பற்றித் தெரிந்து கொள்வதற்கு எனக்குத் தகுந்த வயது வந்துவிட்டது" என்றார். கல்லூரிப் படிப்பு முடித்து, முழு நேர வேலையில் இருக்கும் அவர் தன் பெற்றோரிடமிருந்து விலகி கடந்த 3 வருடங்களாகத் தனியே வசித்து வந்தார். அவரது பாலியல் அறிவு தனக்கொரு ஆண்குறி உள்ளது என்ற அளவிலே இருந்தது. பெண் உடலமைப்பு பற்றி அவருக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. குறியிலிருந்து "பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் வெளியாவதுண்டா" என்ற கேள்விக்கு "ஆமாம், அது எனது செரிபிரல் பால்சி தொடர்பானது தானே?" என்று பதிலுரைத்தார்.'
மைய நரம்பு மண்டல சேதத்தால் கை, கால்கள் செயலிழந்தவர்கள், மூளையில் சில பகுதிகள் விபத்தில், அல்லது பிறப்பில் சேதமடைந்த மனிதர்களை மலடாக்குவது பெற்றோர் அல்லது காப்பாளர்களின் மற்றொரு பாதுகாப்பு உத்தி. ஆனால் உண்மையில் இவர்கள் உடலுறவில் ஈடுபட்டு, இன்புறும் திறன் பெற்றவர்கள். பிறப்புறுப்புகளில் கிளர்ச்சி உணர்வற்றவர்களின் உதடுகள், முகச்சருமம், கேசம், மார்புகள் ஆகிய பகுதிகள் கூடுதல் பாலுணர்வுத் தூண்டுதல் பெறுகின்றன. இவ்வாறு உடல் செயலிழந்த பெண்களில் 60% பேர் கர்ப்பம் தரிக்கின்றனர். முதுகுத்தட சேதத்தால் ஆண்குறி பாதிக்கப்பட்டவர்கள் விரைப்பைப் பெற, சில உத்திகள், கருவிகள் உள்ளன. பிறப்பிலிருந்தே பார்வையற்றவர்கள், காது கேளாத, வாய் பேசாதாருக்கு அறிவியல் முறைப்படி கலவிக்கல்வி அறிவித்து செயல்படச் செய்ய முடியும். டவுன் சிண்டுரோம் போன்ற மூளைசேத\ வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குக் குழந்தைகளை வளர்த்தும், ஆளாக்கும் திறன் இல்லாததால் அவர்களை மலடாக்குவது உசிதம் என்பது சற்று சிக்கலான சர்ச்சை தான். சில பெற்றோர் இதற்கு குழந்தைகளின் மாதவிடாய் சமாளிக்க முடியாத நிலையை காரணம் சொல்கிறார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தையின் உடல் நலம் பற்றிய கேள்வியும் உள்ளது. ஆனால் இப்பிரச்சினை மேலும் ஆழமானது.
மன, உடல் நலம் குன்றியவர்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் உண்டு என்பதை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். நம் நாட்டில் வயதுக்கு வராத பன்னிரண்டு வயதுக்காரர்களிலிருந்து முதிர்ந்த மனிதர்கள் வரை ஊனர்கள்; கருக்குழாய்கள் துண்டித்தல், கருப்பைகள் அகற்றுவது எனப் பலவிதங்களில் தங்கள் பாலியல் உரிமைகள் பறிக்கப்பட்டு மலடாகி வருகின்றனர். கொலைகாரர்கள், கற்பழிப்பாளர்கள், கொள்ளையர்கள், மது, போதை மருந்துப் பழக்க நோயாளிகள் ஆகியோருக்குக் கூட வழங்கப்பட்டுள்ள குழந்தைப்பேறு உரிமை மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது? மூளை வளர்ச்சி குன்றிய சந்ததியினரின் பரம்பரை உருவாவதைத் தடுப்பது உத்தேசம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டால் நாளை இனத்தேர்வு சிகிச்சைக்கு அது வித்திடும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் இதன் அடுத்த கட்டமாக ஆதிக்க சக்திகள் தலித்துகளை, அல்லது பிற விளிம்பு நிலை மக்களை இல்லாமலாக்கும் பொருட்டு அவர்களை மலடாக்குவது நிகழலாம் இல்லையா?
கனடாவில் 1928 முதல் 1972 வரை மலடாக்கல் சட்டம் அமலில் இருந்தது. மூவாயிரம் ஊனர்கள் (ஆண்களும் பெண்களும்) இதன் மூலம் உறுப்புகள் அகற்றப்பட்டு மலடாகினர். குடிகார அம்மாவால் கைவிடப்பட்ட லெய்லானி மியூயர் எனும் பெண் தனது 11 வது வயதில் மூளை வளர்ச்சி அற்ற குழந்தை எனத் தவறுதலாய் முத்திரை குத்தப்பட்டு மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளுக்கான பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். அங்கு வழக்கம் போல் பொய்யான பெயரில் நடந்த அறுவை சிகிச்சையில் அவளது கருக்குழாய்கள் அகற்றப்பட்டன. பத்து வருடங்களுக்குப் பின் வெளியேறி, மணமுடித்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பின மியூயருக்கு தான் ஏன் கருத்தரிக்கவில்லை என்பது, பாவம் புரியவில்லை. அவரை ஒரு மருத்துவர் சோதித்து, அவரது "உடலின் உட்புறம் கசாப்புக் கடையில் மாட்டியது போலுள்ளது" என உண்மையை வெளிப்படுத்தும் வரை. வழக்குத் தொடுத்து ஆறு வருடங்கள் போராடிய பின் 7,50,000 டாலர்கள் நஷ்ட ஈடாகப் பெற்றார். இவரைத் தொடர்ந்து இதே போல் அனுமதியின்றி மலடாக்கப்பட்ட மேலும் 700 பேர் வழக்குத் தொடர கனடா அரசு திக்குமுக்காடி விட்டது. எம்மா பக், மட்டில்டா போன்ற பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில், மந்த புத்திக்காரர்கள் எனப் போலியாக அறிவிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் கருக்குழாய்கள் அகற்றப்பட்டனர். தீர்ப்பு வழங்கின நீதிபதி இப்பெண்களின் பாலியல் ஒழுக்கமின்மையை மலடாக்கல் அறுவை சிகிச்சைக்கான முக்கிய காரணமாகவும் குறிப்பிட்டதை நாம் கவனிக்க வேண்டும். உலக நாடுகளில் குறிப்பாய் அமெரிக்காவில் பல பாலியல் தொழிலாளிகள், கறுப்பின மக்கள் இவ்வாறு மலடாக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. அமெரிக்காவில் 1907--1963 காலகட்டத்தில் மட்டும் 60,000 (பெரும்பாலும் பெண்கள்) பேர் மலடாக்கப்பட்டனர். ஹிட்லர் ஜெர்மனியில் தன் இனச் சுத்திகரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாய் செவிடர்களைப் பிடித்து மலடாக்கினான். மலடாக்கல் போக்கின் சமூகக் காரணம் இனத் தேர்வு.
இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் கெ.இ.ஜெ எனும் பெண் ஒரு கார் விபத்தில் மூளை பாதிக்கப்பட்டு அடுப்பை இயக்குவது போன்ற அடிப்படை வீட்டு வேலைகள் செய்வதற்கான திறனை இழந்தார். இவரால் கருத்தடை மருந்துகளை, உபகரணங்களைப் பயன்படுத்தவும் முடியாது. இந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, இவரைக் கவனிக்கும் அத்தை ஒருவர் கெ.இ.ஜெ வுக்கு அறுவை சிகிச்சை செய்து மலடாக்க முடிவு செய்தார். ஆனால் கெ.இ.ஜெவுக்குக் குழந்தை பெறக் கொள்ளை ஆசை. தனக்கு நடக்க இருக்கும் மலடாக்கல் அறுவை சிகிசையைத் தடுக்கக் கோரி சிகாகோ நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். கெ.இ.ஜெவால் பிறர் உதவி, கண்காணிப்பு இன்றிக் குழந்தை வளர்க்க முடியாது. ஆனாலும் நீதிமன்றம் மலடாக்கலை நிராகரித்து அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்துள்ளது. இவரது பாலியல் உரிமையைக் காப்பாற்றியுள்ளது. இந்த மனித நேயத் தீர்ப்பை மனித உரிமை ஆர்வலர்கள் ஒருசேர வரவேற்றனர்.
ஆனாலும் இந்தியாவில் மூளை வளர்ச்சி குன்றினோருக்கு இப்போதும் கால்நடைகள் நிலைதான். என் பக்கத்து வீட்டில் டவுன் சிண்டுரோமால் பாதிக்கப்பட்ட சுந்தரி என்னும் 12 வயதுக் குழந்தை இருக்கிறாள். துறுதுறுப்பான, எப்போதும் இசை தேவைப்படுகிற, கூர்மையாய் பிறரை அவதானிக்கக் கூடிய ஆனால் பேச்சுக் குறைபாடுடைய குழந்தை. அவள் விரைவில் மலடாக்கப்பட உள்ளாள். அவளுக்கு மாதவிடாயின் போது பேட் மாற்றத் தெரியாதாம்! இதனால் அவள் கர்ப்பப் பையை அகற்றினால் உசிதம் என்பது அவள் அம்மாவின் வாதம். எனக்கென்னவோ குழந்தை எதிர்காலத்தில் கருவுறும் பயம் தான் உண்மையான காரணம் எனப் படுகிறது. தொடர்ச்சியாய் சமூகத்தால் கண்காணிக்கப்பட வேண்டிய வன்முறைக் குற்றவாளிகளும், நாள் தோறும் குடும்பத்தால் போஷிக்கப்பட்டு, காப்பாற்றப்படும் உதவாக்கரை ஊர்சுற்றிப் பிள்ளைகளும் (என் குடும்பத்திலே மூன்று பேர் இருக்கிறார்கள்) வாழையடி வாழையாய் வாழும் நம்மூரில் மூளை சேதமான, உடல் குறைபாடுடைய எளிய மனிதர்கள் வாழ்ந்தால் என்ன கேடு? முழுமையான மனிதர்களின் கண்காணிப்பும், ஆதரவும் தேவைப்படும் இந்த முழுமை அற்ற மனிதர்களை அடியோடு சுவடின்றி அழிக்க வேண்டிய அவசியம் என்ன? பன்னிரண்டு வயதுக்காரரை மலடாக்க அமெரிக்காவில் நீதிமன்ற அனுமதி வேண்டும். மனித உரிமை மீறல் அன்றாட வழக்கமாகிவிட்ட நமக்கு அதெல்லாம் எதற்கு?
எங்கள் பூனைக்கு இன்றோடு 5 மாதங்கள் வயதாகிறது. அடுத்த வாரம் அதன் கர்ப்பப் பையை அகற்றப் போகிறோம். ஏற்கனவே கருத்தரித்திருந்தாலும் (போன வாரம்தான் பெரிய ஆண்பூனையுடன் ஆர்ப்பாட்டமாய்க் கூடியது), 20% வளர்ச்சிதான் இருக்கும், பையோடு எடுத்து விடலாம், கவலைப்பட வேண்டாம் என்று கால் நடை மருத்துவர் என்னை ஆசுவாசப்படுத்தியுள்ளார். இனப்பெருக்க வாய்ப்பளித்தால் எங்கள் பூனை ஒரே வருடத்தில் 80 குட்டிகளுக்கு மேல் இட்டு, ஏற்கனவே உணவின்றித் திரியும் அனாதைப் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். நகரத்தில் மனிதனுக்கே இடமில்லை. பிறகு பூனைகள் எங்கே போவது சொல்லுங்கள்! மேலும் மலடாக்கப்பட்ட பெண் பூனைக்கு மார்பகப் புற்று நோய் வாய்ப்பு 80% குறைவு. அது மட்டுமல்ல மலட்டுப் பூனை வீட்டோடு அடங்கிக் கிடக்கும். அடிக்கடி காமச்சூடேறி ஆண் பூனைக்காகக் கத்தி ஓலமிட வேண்டியிருக்காது. பாலியல் அழுத்தங்கள் இல்லாமல் பூனை அமைதி சொரூபிணியாக ஏறத்தாழ ஒரு ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தாவாக எப்போதும் வீற்றிருக்கும். ஒரு குழந்தை போல் பழகும். இப்படி எத்தனையோ வசதிகள். எங்கள் பூனை கொடுத்து வைத்த பூனை!
Share This

2 comments :

  1. அருமையாக எழுதுகிறீர்கள்; நீங்கள் அறிந்ததே:‍)

    உங்கள் பதிவைக் கண்டெடுத்த ஒரே நாளில் உங்களின் பல பதிவுகளைப் படித்து விட்டேன். இந்த பதிவுக்குப் பின்னூட்டம் போடாமல் போக முடியவில்லை.

    பதிவின் தொடக்கமும், முடிக்கும் தொனியும், தேர்ந்த உங்கள் நடையைக் காட்டுகிறது.

    ஒரே ஒரு எதிர்வினை கருத்து தெரிவிக்க விரும்புகிறேன்: //அவளுக்கு மாதவிடாயின் போது பேட் மாற்றத் தெரியாதாம்! இதனால் அவள் கர்ப்பப் பையை அகற்றினால் உசிதம் என்பது அவள் அம்மாவின் வாதம். எனக்கென்னவோ குழந்தை எதிர்காலத்தில் கருவுறும் பயம் தான் உண்மையான காரணம் எனப் படுகிறது. // இந்த பிரச்னையில் அந்த சிறுமியின் எதிர்கால குழந்தை பெறும் விருப்பம் மட்டுமில்லை, சமூக மூடர்களின் பாலியல் கொடுமைகளுக்கான வாய்ப்பும் அகற்றப்படுகிறது. மாதவிடாய்க் கஷ்டங்கள் பெருங் கஷ்டங்கள் தாம்.... ஆனால், நீங்களே சுட்டுவது போல் பூனையும் ஊனமும் ஒன்றாகி விடுகிறது இல்லையா?

    இங்கே அமெரிக்காவிலும் பூனையை மலடாக்க பூனையின் விருப்பம் தேவையில்லை.

    என் ரீடரில் தொடர்ந்து படிப்பேன். நல்ல பதிவுகளுக்கு நன்றி. சக மனிதராக, நீங்கள் வாழ்க்கையை நேர்கொள்ளும் விதத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  2. U ve brought forth lot of issues here.... may be that its n tamil that google search has kept these articles away from my notice...

    There s a practice now of doing chromosomal test in the foetus to identify the down syndrome.. if positive abortion is adviced by all docs....

    How is this justifiable??? Mentally retarted is an offensive term b cos certain D S babies ve more i.q than the so called 'normal' kids....

    There r lot of issues to be addressed in India.... lets hope things ll change for the best...

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates