Friday 14 August 2009

வால்



I

நாள்: 28/02/08
பெயர்: அபிட்டோ
மூலம்: செல்வி
கதாபாத்திரம் 1: நான் (செல்வி)
கதாபாத்திரம் 2: பாஷோ (இறைவனடி அடைந்த சாதாரண பூனைக்குட்டி)
கனவு நேரம்: 1 மணி நேரத்திற்கு மேல் (ஒரு வேளை)

"பாஷோ செத்துப் போலேப்பா, நெஜம்மா! நம்பலியா, இப்போ எழுப்பறேன் பார்." சமையலறையில் தூசு படிந்து கிடக்கும் பாத்திரத்தை அலம்பி வெந்நீர் கொதிக்க விடுகிறேன்.
சமையலறை விளக்கு இயங்கவில்லை. அரை இருள். என் தலைக்கு மேல் தொங்கும் சிலந்தி வலை இழை ஒளிக்கீற்று பட்டு துலங்குகிறது. கொதிக்கும் வெந்நீருடன் பாஷோவை நெருங்குகிறேன். தன் பெட்டியில் வாய் திறந்து அசைவற்ற தூக்கம். வழக்கமாய் நம் வீட்டுத்தரையில் ஓடித்திரியுமே பல்லி அது வளர்ந்து இப்போது நம் படுக்கை மேல் நின்று பார்க்கிறது. அதை விரட்டுகிறேன். பாஷோ மேல் வெந்நீர் தெளிக்கிறேன். ஆச்சரியம். என் கைவிரல்கள் சுட்டுவிடவில்லை. ஆனால் பாஷோ, சின்ன அதிர்வுடன், புரண்டு எழ முயல்கிறான். தள்ளாடி எழுந்தபின் மீயாவ் என்று கத்தி, திடீர் ஆவேசத்துடன் ஓடுகிறான். நம் வீட்டு கழிப்பறை நீரை நக்க ஓடுவானே அதே வேகத்தில். துரத்துகிறேன்.

மதில் மேல் பெரிசாய் கறுப்புப் பூனை. முறைக்கிறது. வளர்ந்தால் பாஷோ இதே போல் தான் தோன்றுவானோ? அதற்கு பிளாஸ்டிக் பைபோல் தொங்கும் மடி. பாஷோ மதில் மேல் அசாத்திய லாவகத்துடன் ஏறுகிறான். அவனை வாத்சல்யத்துடன் ஏற்றுக்கொண்டு நக்கிக் கொடுக்கிறது. பாஷோ பால் குடிக்கிறான். அருகில் செல்கிறேன். படுத்த வாக்கிலே சீறுகிறது பெண் பூனை. அப்போதுதான் சூடுபட்டது போல் எரிச்சல் விரல்களில். உதறுகிறேன்.

வீட்டுக்குத் திரும்பினால் மீண்டும் அதே பல்லி படுக்கையில். போர்வைக்கு வெளியே அதன் வால் மட்டும். அருவருப்பாய், பழுப்பில். ஓடிப்போய் அதை பற்றி இழுக்கிறேன். அபரிதமாய் வளர்ந்து விட்டது போல் பல்லியின் வால் அத்தனை நீளம், என் கையளவு. பாஷோவின் வால் அளவு திண்மை. கொஞ்ச நேரம், இழுக்க இழுக்க வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் பல்லி உடலைக் காணவில்லை. என் கையில் மிருதுவான வால் மட்டும். படுக்கையை உதற முயல, கையில் வால் மெலிதாய் அதிர்கிறது. விசிறி எறிகிறேன்.

படுத்த பிறகும் வாந்தி உணர்வு விடவில்லை. முடிவாய் கட்டுப்படுத்த முடியாமல் படுத்தபடியே திரும்பி வாந்தி எடுக்கிறேன். வாயைத் துடைக்காமலே ஆசுவாசமாய் தூங்குகிறேன். காலை எழுந்து பார்த்தால் நான் வாந்தி எடுத்திருக்கவில்லை, அழுதிருக்கிறேன்.

II

கதாபாத்திரம் 1: நான் (அபிட்டோ)
கதாபாத்திரம் 2: நடிகை மேகலா
கதாபாத்திரம் 3: ஆண்குறி (யாருடையதென உறுதியாகவில்லை)
நாள்: 20/02/08
மூலம்: அபிட்டோ
கனவு நேரம்: அரை மணி (நிச்சயமாய்)
பொழுது: மாலை மற்றும் இரவு

ம்... நான் சொல்லப் போறத வச்சுட்டு என் உள்ளார்ந்த ஆசைகள், எண்ணங்கள் பத்தியெல்லாம் தப்புக்கணக்கு போடக்கூடாது. தயவு செஞ்சு! ஏன்னா கனவுங்கறது... ஓ.கே நேரே கனவுக்கே வறேன். நான் வெத்துடம்பா பாறை மேல் உட்கார்ந்து பராக்குப் பாக்குறேன். ஜட்டியாவது போட்டிருந்தேனாண்ணு நினைவில்லை. சுத்திலும் பச்சைப் பசேலுண்ணு மரமும் புதருமா. சன்னமான வெளிச்சம். ரொம்ப நேரமா அடிவானத்தில் வட்டமடிக்கும் ஒரு பருந்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சதா அருவியில் தண்ணீர் விழுந்து சிதறும் சத்தம். அதுவரை அருவியை கவனிக்காதது ஆச்சரியம் தான். எதிரே ஒரு பெண் திறந்த மார்புடன்...நடிகை மேகலா...குளிக்கிறாள். குறுக்கே அடிக்கும் அந்தி வெயிலில் அவள் மார்புகள் பளபளவென துலங்குகின்றன. மிகுந்த உற்சாகம். கனவு மனிதன் மிக இளவயதிலிருந்தே விரும்பிய நடிகை அவள் என்பதைக் குறிப்பிட வேண்டும். ரகசியமாய் கண்காணிக்கும் குறுகுறுப்பு.




அந்த மார்புகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். தோலோடு தோலாக ஒட்டியோ, வீங்கித் தொளதொளவென தொங்கும்படியோ அல்லாமல், அளவாய் ம்... கொட்டங்கச்சி அளவுக்கென்று வைத்துக் கொள்ளேன். சற்றும் தொய்வின்றி, நேர்கொண்ட பார்வையுடைய மார்புகள்.

யோனி தேடி பார்வை கீழே செல்கிறது. மஞ்சள் மயிரடர்ந்த அடிவயிற்றின் ஆரம்பம். அதிமென் சருமம். தொப்புளுக்குக் கீழ் ஒற்றை மயிர் ரேகை. சிவந்த அப்பகுதி, ஓடும் நுண் ரத்தகுழாய்கள் பதைக்க. அதில் ஆயுட்பலனே அடங்கியிருப்பது போல், பயணிக்கும் என் இடக்கண் விடாமல் துடிக்கிறது. அங்கு கோடாய் கிழிவதற்கு பதில் ...விரைத்த ஆண்குறி.

கொட்டும் நீருக்கு வெளியே அவளது ஆண்குறி நீட்டி நிற்கிறது.




ரொம்ப நேரத்திற்குப் பிறகென்று நினைக்கிறேன். படுக்கையில் இடம் வலமாய் புரள்கிறேன். ஒவ்வொரு திசைமாறிக் கிடக்கும்போதும் மனம் நிலைப்பட்டுத் தூங்கும் என்ற நம்பிக்கை. சட்டென இடக்கையில் வழுவழுவென எதுவோ தட்டுப்படுகிறது. புரண்டு திரும்பிப் பார்க்கிறேன். என் விரைத்த ஆண்குறி தனியே. ஆனால் என்னுடையதை விட சரி நீளம். தள்ளி விட்டு திரும்பிப் படுக்கிறேன். மீண்டும் தட்டுப்படுகிறது என் பின்னந்தொடையில் வெதுவெதுப்பற்று குளிர்ந்து போய். அதன் நுண்ணிய அதிர்வு எனக்குள் பரவுகிறது. ஆழமான தூக்கத்திற்குத் திரும்புகிறேன்.

III

கனவுகளை பேசி முடித்தபின்...
கதாபாத்திரம்: செல்வி
நாள்: இன்று
பொழுது: எங்கள் அறையில் எப்போதும் ஒரே வெளிச்சம்தான். கடிகாரம் வேறு நின்று விட்டது.

"அம்மாதான், கூப்பிட்டிருந்தாங்க. அவங்க கூட வேலை பாக்குற டீச்சர்ஸ் எல்லாம் எப்ப பாட்டியாகப் போறீங்கன்னு கேட்குறாங்களாம். இவங்க என்னை நோண்டுறாங்க... நான் என்ன செய்ய? எனக்கா ஆசை வரணும்ல."
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates