Friday 18 December 2009

ஏமி லவல் கவிதை மற்றும் வாழ்க்கை குறிப்பு

ஒரு புயலுக்குப் பின்



நீ பனிக்கட்டி மரங்களுக்கு கீழ் நடக்கிறாய்.
நீ செல்வதை அலங்கரிக்க
அவை தள்ளாடி, விரிசலிட்டு
தங்களை அபாரமாய் வளைக்கின்றன.
உனக்கு முன்
அவற்றை வண்ணத்துக்குள் சுண்டுகிறான் வெண்சூரியன்.
அவை நீலம்,
மேலும் மங்கலான ஊதா
மேலும் மரகதப் பச்சை.
அவை மஞ்சள்-பழுப்பு,
ஒளிர்பச்சை,
மேலும் கோமேதகம்.
அவை வெள்ளியால் பின்னப்பட்டு சுடரும்.
திடுக்கிட்டதால் நிச்சலனமாகி,
கொத்தாகி, சிம்புகளாகி, பன்னிறம் பெறும்.
நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
பளீர்பனி நீ நடக்க கிறீச்சிடும்.
என் நாய்கள் உன் மேல் தாவி குதிக்கும்,
அவற்றின் குரைப்பு காற்றைத் தாக்கும்
உலோகம் மேல் கூரிய சுத்தியல் அறைதல்களாய்.
நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
ஆனால் நீ பனிக்கட்டி பூக்களை விட அதிகம் ஜொலிக்கிறாய்
எனக்கு நாய்களின் குரைப்பு உன் அமைதியை விட
ஒன்றும் சத்தமாயில்லை.

நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
காலை பத்து மணிக்கு.


ஏமி லவல் (1874-1925) சிறுகுறிப்பு



ஏமி லவல் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அமெரிக்க படிமக் கவிஞர். எஸ்ரா பவுண்டுடன் இணைந்து ஒரு புரவலராகவும் எழுத்தாளராகவும் படிம இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். லவல் ஓரினச்சேர்க்கையாளர். ஆடா டிவைர் ரசல் எனும் நடிகையுடனான உறவு இவரது “Pictures of the Floating World” தொகுப்பில் உள்ள பிரபலமான காமக் கவிதைகளுக்கு தூண்டுதலாக அமைந்தது. லவல் குள்ளமானவர். சுரப்பிக் கோளாறால் வாழ் நாளெல்லாம் மிகப்பருமனாக தோற்றமளித்தார். கவிஞர் விட்டர் பைனர் மற்றும் எஸ்ரா பவுண்ட் இவரை காண்டாமிருகக் கவிஞர் என்று அழைத்தது இலக்கிய வரலாற்றின் மிக குரூரமான கேலி என்று கருதப்படுகிறது. லவல் தனிப்பட்ட உரையாடல்களில் பெண்ணியவாதத்தை மறுத்தவர். இறந்த ஒரு வருடத்தில் இவருக்கு புலிட்சர் விருது “What’s O’Clock” என்ற தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டது.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates