Thursday 18 November 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 26



இது என் மனதை இளக்கியது; ஏனெனில் எங்களை மதிய தூக்கத்தில் இருந்து எழுப்பிய கற்களின் வசைமாரி போன்ற அந்த ஒற்றை இடிமுழக்கம் இப்போதும் நினைவில் உள்ளது; ஆனால் அது மூன்று மணிக்கு மட்டுமே நிகழ்ந்தது என்பதை நான் ஒரு போதும் அறிந்திருக்க இல்லை.
பொதுவறை வழிப்பாதைக்குப் பிறகு முக்கிய தருவாய்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட வரவெற்பறை இருந்தது; சாதாரண வருகையாளர்கள் அவர்கள் ஆண்களாயிருக்கும் பட்சத்தில் அலுவலகத்திலும், பெண்கள் என்றால் பெகோன்னியேக்கள் கொண்ட பொதுவறை வழிப்பாதையிலும் குளிர்பீருடன் வரவேற்கப்படுவர். பிறகு படுக்கை அறைகளின் புராணிக உலகம் ஆரம்பமாகியது. முதலில் என் தாத்தா பாட்டியின் அறை, தோட்டத்தை எதிர்நோக்கிய ஒரு பெருங்கதவு மற்றும் கட்டுமானத் தேதி (1925) கொண்ட மரச்செதுக்கு ஓவியமுடையது. அங்கு என்னை தூக்குவாரிப் போடும்படியான அதிர்ச்சியை அம்மா வெற்றிகரமான அழுத்தத்துடன் அளித்தாள்: “இங்கே தான் நீ பிறந்தது!”. இது எனக்கு முன்பு தெரிந்திருக்க இல்லை; அல்லது நான் மறந்திருக்கக் கூடும்; ஆனால் அடுத்த அறையில் நான் நான்கு வயது வரை தூங்கின, என் பாட்டி எப்போதும் வைத்திருந்த, மரத்தொட்டிலை கண்டெடுத்தோம். நானதை மறந்து விட்டிருந்தேன்; ஆனால் அதைப் பார்த்த உடனே முதன்முதலாய் அணிந்த சிறு நீலப்பூக்கள் அச்சிட்ட தளராடையில் யாரேனும் வந்து பீயால் ரொம்பின என் டயப்பரை கழற்றி விடும்படி நான் கதறி அழுதது நினைவு வந்தது. மோசசின் கூடையை போன்று சிறிதாயும் பலவீனமாகவும் இருந்த அந்த மரத்தொட்டிலின் கம்பிகளை பற்றிக் கொண்டு தடுமாறியபடியே என்னால் நிற்க முடிந்தது. இது என் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே ஒரு வழக்கமான விவாத மற்றும் வேடிக்கை நிமித்தமாக விளங்கியது. இவர்களுக்கு எனது அந்நாளைய வெப்புறாளம் வயதுக்கு மீறின தர்க்க சிந்தனையாக படுகிறது; இதற்கெல்லாம் மேலாய், எனது துயரத்துக்கு காரணம் எனது மலம் மீதான அருவருப்பு அல்ல, எனது தளர் மேலாடையை எங்கே அழுக்காக்கி விடுவேனோ என்ற அச்சமே என்று நான் வற்புறுத்தி சொன்ன பின்னரும் கூட. அதாவது அது ஒரு சுகாதார முன்முடிவு பற்றிய கேள்வியல்ல, மாறாய் அழகியல் அக்கறையே; மேலும் அது என் ஞாபகத்தில் நீடித்துள்ள முறையைக் கொண்டு அதுவே எனது முதல் எழுத்தாள அனுபவம் என்று நம்புகிறேன். அந்த படுக்கை அறையில் நிஜவாழ்க்கை அளவிலான, தேவாலயங்களில் உள்ளவற்றை விட அதிக எதார்த்தமாகவும், துயர வாட்டத்துடனும் தோன்றிய புனிதர்களின் சிலைகள் கொண்ட வழிபாட்டுத்தலம் ஒன்று இருந்தது; அத்தை பிரான்ஸிஸ்கா சிமோபோசியா மெழியா எப்போதும் அங்குதான் தூங்கினாள்; நாங்கள் ஆன்ட் மாமா என்றழைத்த இவர் தாத்தாவின் முதல் அத்தை மகள்; அந்த வீட்டின் தலைமகளாகவும், சீமாட்டியாகவும் தன் பெற்றோரின் மரணத்துக்கு பின் வாழ்ந்திருந்தாள். அனைவரது மரணம் வரையில், அணைக்கப்படாத சாஸ்வத விளக்கின் ஒளியில் கண்சிமிட்டும் புனிதர்களிடத்து கிலி கொண்டு ஒருபக்கம் நான் தொங்கு படுக்கையில் தூங்கினேன்; என் அம்மா கூட திருமணத்துக்கு முன், புனிதர்கள் மீதான பெரும்பீதியால் வதைக்கப்பட்டு, அங்குதான் தூங்கினாள்.
எனக்கு விலக்கப்பட்டிருந்த இரு அறைகள் பொதுவறை வழிப்பாதையின் முடிவில் இருந்தன. முதல் அறையில் என் அத்தைப் பெண் சாரா எமிலியா மார்க்வெஸ் வாழ்ந்தாள்; என் மாமாவுக்கு திருமணத்துக்கு முன் பிறந்த இவள் என் தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டாள். சிறுவயதில் இருந்தே அவளிடம் இருந்த இயல்பான வேறுபாட்டு பண்போடு, ஒரு அற்புதமான கதைகளின் தொகுப்பு என்னிடம் இருந்து உருவாக காரணமாய் என் முதல் இலக்கிய பசியை தூண்டிய ஒரு வலிமையான ஆளுமையையும் அவள் கொண்டிருந்தாள்; சல்லேஜாவால் முழுவண்ண ஓவியங்களுடன் பிரசுரிக்கப்பட்ட அவற்றை நான் அலங்கோலப்படுத்தி விடுவேன் என்று பயந்து அவள் எனக்கு தரவில்லை. இதுவே எழுத்தாளனாய் என் முதல் ஏமாற்ற எரிச்சல். பழைய மரசாமான்கள் மற்றும் காலங்காலமாய் என் குறுகுறுப்பை தூண்டிய ஆனால் என்றுமே எனக்கு திறந்து பார்க்க அனுமதி கிடைக்காத பெரிய பயணப்பெட்டிகளுக்குமான சேமிப்பறையே கடைசி அறையாக இருந்தது. என் அம்மா தன் வகுப்புத் தோழிகளை தன்னுடன் விடுமுறை நாட்களை கழிக்க வீட்டுக்கு அழைத்தபோது, என் தாத்தா பாட்டி வாங்கின எழுபது சிறு நீர்க் கலங்களும் அங்கே பாதுகாக்கப்பட்டிருந்தன என்று நான் பின்னர் அறிந்து கொண்டேன்.
எதிர்நோக்கியபடி அதே பொதுவறை பாதையில் பழங்கால, நகர்த்த ஏதுவான, சுட்ட கல்லாலான மூடு-உலை அடுப்புகள் கொண்ட ஒரு பெரிய அடுக்களை இருந்தது; என் பாட்டியின் பணிக்கான பெரிய மூடு-உலை அடுப்பும் அங்கிருந்தது; அவள் அப்பம் சுடுவதை வாழ்வுப் பணியாய் கொண்ட தலைமை சமையற்காரர்; அவளது சிறு மிட்டாய் மிருகங்களின் சாறு நிரம்பின வாசத்தில் அந்திப் பொழுது தோயும். வீட்டில் வாழ்ந்த அல்லது பணி செய்த பெண்களின் ஆட்சிப் பகுதி அது; என் பாட்டிக்கு பல பணிகளில் உதவி செய்யும் போது அவர்கள் ஒரே குரலில் பாடுவர். மற்றொரு குரல் எங்கள் பாட்டாபாட்டியிடம் இருந்து சொத்தாய் வந்த நூறுவயது கிளி லோரன்சோ மேக்னிபிக்கோவின் உடையது; அது ஸ்பானிய எதிர்ப்பு கோஷங்களை கத்தும், சுதந்திரத்திற்கான போரின் போதான பாடல்களை பாடும். அதற்கு எந்த அளவுக்கு கிட்டப்பார்வை என்றால் ஒரு நாள் ஸ்டியூ தயாராகும் பானையில் விழுந்து, பிறகு நீர் அப்போதுதான் சூடாக ஆரம்பித்திருந்ததால் அற்புதம் எனக்கருதும் படியாக காப்பாற்றப்பட்டது. ஜூலை 20-அன்று மதியம் மூன்று மணிக்கு தனது பீதியிலான கீச்சிடல்கள் கொண்டு வீட்டில் இருப்போரை தூக்கத்தில் இருந்து எழுப்பியது: “காளை, காளை, காளை வருது!” தேசிய விடுமுறையான அன்று ஆண்கள் உள்ளூர் காளைச்சண்டை காண போயிருந்ததால், வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர்; கிளியின் கத்தல்களை முதுமை தளர்ச்சி காரணமான நினைவிழப்பின் வெறிப்பிதற்றல்களாகவே அவர்கள் கருதினர். சதுக்கத்தில் உள்ள கொட்டகையை உடைத்துக் கொண்டு தப்பித்த ஒரு வெறி பிடித்த காளை அடுக்களைக்குள் படுவேகத்தில் நுழைந்த போது தான் கிளியிடம் பேசத் தெரிந்த வீட்டில் உள்ள பெண்கள் அது எதைப் பற்றி கத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டனர்; காளை ஒரு நீராவிக் கப்பல் போல் உக்காரமிட்டு தன்னிலை இழந்த கோபவெறியில் அப்பஞ்சுடும் அறையின் சாமான்களை, அடுப்புகள் மேலிருந்த பானைகளை நோக்கி பாய்ந்தது. எதிர்திசையில் போய்க் கொண்டிருந்த நான் அச்சமுற்ற பெண்களின் புயலால் காற்றில் எறியப்பட்டு சேமிப்பறையை அடைந்தேன். ஓடி வந்த காளையின் சமையலறை முழக்கம் மற்றும் சிமிண்டு தரையில் அதன் குளம்புகள் தாவி ஓடின ஒலியும் வீட்டை அதிர வைத்தது. முன்னறிவிப்பு ஏதும் இன்றி காற்று வசதிக்கான கூரை ஜன்னலில் அது தோன்றியது; அதன் அனல் தெறிக்கும் குறுமூச்சுகள் மற்றும் பெரும் சிவப்பேறிய கண்கள் என் ரத்தத்தை உறைய வைத்தன.

அதைக் கையாள்பவர்கள் அதனை காளைப் பட்டிக்குள் திரும்பக் கொண்டு சென்ற போது அந்த அதிரடி நிகழ்வுகளின் வெறியாட்டம் வீட்டில் ஆரம்பித்து விட்டிருந்தது; எண்ணற்ற காப்பிக் கலயங்கள் மற்றும் ஸ்பாஞ்சு கேக்குகளின் துணையுடன் கலவரப்பட்டு பிழைத்தவர்களால் பல்லாயிரம் தடவை திரும்பத் திரும்ப, ஒவ்வொரு தடவையும் முன்னதை விட அதிக சாகசமிக்கதாய், அது கதைக்கப்படும்.

சுற்றுக்கட்டு அத்தனைப் பெரிதாக தெரியவில்லை; ஆனால் பல்வெறுபட்ட மரங்கள், மழை நீர் சேகரிக்கும் சிமிண்டு தொட்டியுடன் கூடிய மூடப்படாத குளியல் தொட்டி மற்றும் மூன்று மீட்டர் உயரத்தை ஒரு பலவீனமான ஏணியில் ஏறி அடைய வேண்டிய உயர்த்தப்பட்ட தளமேடையும் இருந்தன. கைப்பம்பால் என் தாத்தா விடிகாலையில் நிரப்பக் கூடிய இரண்டு பெரும் பீப்பாய்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அதற்கு அப்பால் கரடுமுரடான பலகைகளினால் எழுப்பப்பட்ட தொழுவம் மற்றும் வேலையாட்கள் குடியிருப்பு இருந்தன; வெகு முடிவில் பழமரங்கள் கொண்ட பிரம்மாண்ட புழக்கடை மற்றும் இரவுபகலாய் செவ்விந்திய வேலைக்காரிகள் வீட்டின் கழிவறைக் கலன்களை காலி செய்யும் ஒரே கழிவறை இருந்தன.

Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates