Tuesday 9 November 2010

தமிழில் ஏன் இத்தனை கவிதைகள் எழுதப்படுகின்றன?


 விசிட்டிங் கார்டுகளுக்கு அடுத்தபடியாய் தமிழில் அவசரமாய் பிரசுரம் ஆவது கவிதைத் தொகுப்புகள் என்று நமக்குத் தெரியும். தமிழ்க்கவிதையின் நோய்மை இது என்று தீர்ப்பளித்து பேனாமுனை உடைப்பதும் எளிது. கவிதைக்கான் ஆதார நுட்பமோ சொல்வதற்கு ஏதாவது சங்கதியோ இல்லாதவர்கள் இப்படி மானாவரியாய் எழுதி அழகான அட்டை வடிவமைப்புடன் வழவழ தாள்களில் முன்னணி பதிப்பக முத்திரையுடன் புத்தகமாக்குவதன் உத்தேசம் என்னவாக இருக்கும்? இன்று ஒரு பதிப்பகம் சென்று 2010இல் அவர்கள் வெளியிட்ட எட்டு தொகுப்புகளை புரட்டி படித்தபின் ஒரு குமட்டல் போல் இந்த கேள்வி மீளமீள தோன்றிக் கொண்டிருந்தது. ஏன் கட்டுரைகள் அல்லது கதைத் தொகுப்புகளை விட கவிதைகள் அதிகம் தொகுப்புகளாகின்றன?
வெளிப்படையான காரணங்கள்: தமிழனுக்கு கவிதை எழுதுவது அவன் ரெண்டாயிரமாண்டு மரபின் தொடர்ச்சியாக இருக்கலாம். சில ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் மந்தையை ஒழுங்கி படுத்தின முன்னோடி நினைவில் மனிதர்களின் உள்ளங்காலைக் கடித்து வழிப்படுத்துவது போல். அல்லது வீட்டுப் பூனை பல்லி பிடிப்பது போல். குருதியில் ரெண்டறக் கலந்த ஒன்றாக கவிதை நமக்கு இருக்கிறது. அதைப் போன்றே வாசகர் மற்றும் பொதுமக்கள் இடத்து இன்றும் எழுத்தாளன் என்றால் கவிஞன் தான். கவிதைக்கு அடுத்தபடியாய் இங்கு மதிப்புள்ளது மேடைப் பேச்சுக்கு. உரை அறிவுஜீவுகளின் பரப்பாகவே இன்றும் உள்ளது.
கவிதை எழுதி பழகித் தான் பலரும் உரைக்கு வருகிறோம். இது உலகம் முற்றும் காணப்படுகிற பழக்கம் தான். நீட்சேவும் மார்க்வெஸும் சுராவும் ஜெயகாந்தனும் இந்த நீண்ட பட்டியலில் வருகிறவர்கள் தாம். மொழி விளையாட்டின், அதன் சங்கீதத்தின் மயக்கத்தில் இருந்து தான் வாசிப்பின் பின்னர் எழுத்தின் ஆரம்பம். ஓசையின் கிளர்ச்சி தான் மொழியின் முதல் படி. இப்படி கவிதை எழுதி தனக்கான அசல் திறமையை கண்டறிந்து கிளைபிரிந்து செல்பவர்கள் சமர்த்துகள். சிலர் கவிதைதான் தனது காண்டிப வில் என்று நம்பி ஊக்கத்துடன் நாணைப் பூட்டுகின்றனர். மிகப்பலர் ஹ்ட்லைட் வெளிச்சத்தில் உறைந்து நின்ற முயலைப் போல் ஒரு குழப்பத்தில் கவிதையிலேயே தங்கி விடுகின்றனர். அவர்களுக்கு மொழியுடனும் பண்பாட்டுடனுன் தங்கி நிற்பதற்கு கவிதையை எழுத வேண்டும். ஒருவித காலைக்கடன்.


அடுத்து வளவளவெனும் உணர்ச்சிகர கவிதை எழுதுவது ஆற்றல் சிக்கனமுள்ள செயல். ஒரு உந்துதலில் கொட்டித் தள்ளி இறுதியாய் புள்ளிகளை இணைத்து சீராக்கினால் கவிதை வடிவில் ஒன்று உருவாகி விடும். ஒரு கட்டுரைக்கு அல்லது நாவலுக்கு போல் மணிக்கணக்காய் உழைக்க வேண்டாம். அதிகமான பத்திரிகையில் பரவலாய் பிரசுரிக்கவும் கவிதைகள் எழுதுவது தான் உசிதம்.
கவிதை எழுதுவது நீத்தார் சடங்கு போல் ஒரு புனிதச் செயலாகவும் உள்ளது. மோசமான கட்டுரைகள் மற்றும் அசட்டுத்தனமான கதைகளுக்கு நிச்சயம் எதிர்மறை விமர்சனங்கள் வரும். கவிதையின் வடிவத்துக்குள் அபத்தமாக என்ன உளறி பிரசுரித்தாலும் அது அதிக கண்டனத்துக்கு உள்ளாகாது. தமிழ் சமூகம் கவிஞனை மரித்தவர்கள், முதியோர்கள், குழந்தைகள் என்ற வரிசையில் கடைசியாய் வைத்திருக்கிறது. மிகுந்த அனுசரணை மற்றும் காருண்யத்துடன் கவிஞர்கள் நடத்தப்படுகிறார்கள்.
கடைசியாகவும் முக்கியமாகவும் ஒன்று சொல்லலாம். கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது காதலை சொல்வது போல், பட்டாசு கொளுத்துவது போல், தற்கொலை முயற்சி போல் தள்ளிப் போடக் கூடாதது. என் முதல் கவிதைத் தொகுப்பை பிரசுரிக்க நான் தயங்கிய போது நண்பரும் இதழாசிரியருமான ஹமீம் முஸ்தபா
இப்படி சொன்னார்: “நீ இப்போது இக்கவிதைகளை வெளியிடுவது போல் பின்னெப்போதுமே சாத்தியப்படாது. தொகுப்பின் தரம், எதிர்வினை என்பதை விட வாழ்வின் இந்த ஒரு பருவத்தில் நீ விட்டு போகிற ஒரு அடையாளமாக இது இருக்கும். நாம் வேடிக்கையாய் அசட்டுத்தனமாய் எத்தனையோ செய்கிறோம் இல்லையா அது போல். ஆக கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது ஒரு கொண்டாட்டம். பிறந்த நாள், பூப்படைதல், சாந்திமுகூர்த்தம் போல். எண்ணற்று வெளியாகும் கவிதைத் தொகுப்புகளுக்கு பதில் சொல்லாமல் நாம் வாசகர்களும் விமர்சகர்களும் மௌனம் காப்பதன் கண்ணியம் புரிகிறதில்லையா?
Share This

6 comments :

  1. தமிழ்க்காதலன் அவர்களே, தமிழ்சமூகம் பொதுவாக எழுத்தாளனை ஒரு ஆபத்தான குப்பைப் பொருளாகத் தான் கருதுகிறது. அது மக்களின் தவறல்ல. அப்படியான ஒரு பண்பாட்டில் தான் வளர்க்கப்பட்டுள்ளோம். இதில் கவிஞன் நிலைமை சற்று விசேசம். அவன் எழுத்தாளனை விட சற்று மேலாகத் தான் கருதப்படுகிறான். எந்த அளவுக்கு மேல் என்றால் பேசும் படத்தில் கமல் கழிவை ஜிகினா பேப்பரில் சுற்றி மதில் மேல் வைப்பாரே, அந்த அளவு உயரத்தில். அது கூட ஒரு மதிப்பு தான். இல்லையென்று சொல்ல வரவில்லை. நான் கேரளாவில் கண்ணூர் போயிருந்த போது பேப்பூரை கடந்து கொண்டிருந்தேன். அப்போது இலக்கியத்துடன் தொடர்பே இல்லாத ஒரு மத்தியதர குடும்பத் தலைவரிடம் இது பஷீர் ஊர்தானே என்றதற்கு மகிழ்ச்சியாக தலையாட்டினார். நம்மூர் திருவல்லிக்கேணிக்காரர்களில் எத்தனை பேருக்கு பாரதி வீடு தெரியும்.

    ReplyDelete
  2. திருவல்லிக்கேணியில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு கட்டாயம் பாரதி வீடு தெரிந்து இருக்கும். நானும் ஒரு காலத்தில் அங்கே வசித்ததால் சொல்கிறேன். இந்த கட்டுரை ஜே ஜே எழுதிய குறிப்புகள் மாதிரியே இருக்கு. படிப்பறிவு குறைவு; படித்தவர்களில் பெரும்பாலானோருக்கு குமுதம், விகடன் மாதிரியான இதழ்கள் படிக்க கூட பிடிப்பதில்லை; இச்சூழலில் காலைக்கடனாகவோ ஃபிளாஷ் லைட் வெளிச்சத்தில் திணறி நிற்கும் முயலாகவோ (!) கவிதை எழுதுபவர்களை கேலி செய்து என்ன நடந்து விட போகிறது. இந்த கேலி தொனி வந்து விடக்கூடாது என நீங்கள் பிரயத்தனப்பட்டிருந்தாலும் இந்த கட்டுரையில் ஜேஜேத்தனம் வந்து விட்டது. உங்கள் வலைப்பதிவை ஆர்வத்தோடு வாசிக்கும் வாசகனாக ஓர் ஆரோக்கியமான விமர்சனமாக இதை சொல்கிறேன்.

    ReplyDelete
  3. சாய் நான் கேலிக்காக சொல்லவில்லை. இங்கு தொகுப்புகள் வெளியிடப்படுவதன் அவசரத்தை நீங்க கவனித்திருக்கக் கூடும். அது ஏன் என்ற கேள்வியே என்னை இதை எழுத வைத்தது. கவிஞர்களின் தரம் என் பிரச்சனையே அல்ல. பாதிக்கு மேல் இங்கே பிரசுரம் செய்பவர்களை அவர்களின் தேடல் செலுத்தவில்லை. இடைநிலை மற்றும் அறிமுகக் கவிஞர்களை கேலி பண்ணுவது என் நோக்கமல்ல. நானும் ஒரு குட்டிக் கவிஞன் தானே! அப்புறம், ஒரு நல்ல கவிதை எழுத முயன்று தோற்பது உயர்வான விஷயம். ஆனால் கவிதைகளை பாசாங்கான உணர்ச்சிகளுடன் போலியாக உற்பத்தி செய்வது, அதை மறைக்க வேண்டுமென்றே மொழியை சிக்கலாக்குவது, அதற்கு டோப்பா அணிந்து விடுவது எல்லாம் கரியமில வாயுவை நம் பரப்பில் அதிகமாக்குகின்றன. ஜெ.ஜெ குறிப்புகளில் உள்ள அறிவார்ந்த கேலி எனது அல்ல அன்பரே; நான் அறிவுஜீவியோ பண்டிதனோ அல்ல. ஒரு கவனிப்பாளனாகவே இத்தனையையும் எழுதினேன். மற்றபடி தமிழக மக்கள் படிக்கிறார்களா என்பது ஒரு பிரச்சனையா என்ன? நமது ஜனம் வெறும் புறநிலை பார்வையாளர்கள் தானே.

    ReplyDelete
  4. இம்முறை காலச்சுவடு வெளியிட்டுள்ள தொகுப்புகளில் ஒருவர் விவிலிய மொழியை பிரதியெடுத்து பொத்தலான கவிதைகளை எழுதியுள்ளார். அப்பக்கங்களை புரட்டிப் பார்க்க ஆரம்பிக்கையில் நிச்சயம் சற்று வியந்து வீடுவோம். ஆனால் ஊன்றிப் படிக்கையில் அத்தனையும் பாசாங்கு என்று புரிகிறது. மற்றொரு தொகுப்பில் ஒருவர் பிரமிள் பாணியில் ஒருவர் உருட்டி பிரட்டி எழுதியிருந்தார். இந்த செப்படி வித்தை தான் நிஜமாகவே என்னை இக்கட்டுரையை எழுதிய அன்று எரிச்சலைடைய வைத்தது. காலச்சுவடை மட்டும் சுட்டுகிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அனைத்துப் பதிப்பகங்களிலும் வைரஸ் உள்ளது.

    ReplyDelete
  5. இதில் கேலி இருந்தாலும் தவறில்லை...சாய்! இன்றைய சூழ்நிலையில் நோகாமல் நோன்பு கும்பிடுவது போல்தான் கவிதை எழுதுவதும். கவிதைக்கான உழைப்பும் ரசனையும் எத்தனை பேரிடம் இருக்கிறது? குமுதத்திலும் விகடனிலும் வெளிவரும் கவிதைகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்? கவிதைகள் என்பது பரவசம் தரக்கூடியது. பல லட்சம் கவிதைகள் எழுதப்பட்டாலும் இன்னும் ஏன் ஆத்மாநாமும் விக்ரமாதித்யனும் நம்மை வசீகரிக்க வேண்டும்? காதல், நிலா, வன்புணர்ச்சி ஆகியனவற்றைக் கழித்துப் பார்த்தால் சிலது தேறும். அதை வாசித்து திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான் !

    ReplyDelete
  6. அபிலாஷ், எல்லா காலங்களிலும் எல்லா துறைகளிலும் இப்படியான உறுத்தல்கள் இருக்க தானே செய்கிறது?

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates