Friday 26 November 2010

தென்னாப்பிரிக்க தொடர்: சாத்தியங்கள் மற்றும் ஊகங்கள்

சமகாலம் கிரிக்கெட்டில் பந்துவீச்சின் இலையுதிர் பருவம் எனலாம். தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்டு எந்த அணியுமே ஒரு ஆட்டத்துக்கு முன்னால் தன் மட்டையாட்ட வலிமையைத் தான் பெரிதும் நம்புகிறது; எந்த அணியும் டாஸ் வென்று மிக அரிதாகவே பந்து வீச விரும்புகிறது. பயணப்படும் அணிகள் எதிர்பார்ப்பது தம் மட்டையாளர்கள் ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்பதே. 500க்கு மேற்பட்ட ஓட்டங்கள் ஏற்படுத்தும் நெருக்கடி பந்து வீச்சுக்கு இல்லாத ரெண்டு கோரப் பற்களை தந்து விடுகிறது. உலகமெங்கும் ஆடுகளங்கள் சோர்வுற்று மெதுவாகி வருவதும் மேற்சொன்ன பந்து வீச்சின் அந்திம பருவமும் இந்த போக்குக்கு காரணங்கள். இந்த பின்னணியில் தென்னாப்பிரிக்காவுக்கு பயணப்படப் போகும் இந்திய அணி நிச்சயம் பந்து வீச்சை பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாது எனலாம். நமது எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும்?

தோனி தெ.ஆப்பிரிக்க பயணம் முழுக்க சஹீர்கான் வலுவான உடல்தகுதியுடன் இருக்க எதிர்பார்ப்பார். துணை வீச்சாளர்களான ஸ்ரீசாந்தும் இஷாந்தும் கட்டுப்பாடோடு வீச வேண்டும். இந்த மூவரணி தொடர் முழுக்க கவனச்சிதறல்களோ சேதங்களோ இன்றி நிலைத்தாலே தோனி ஒரு பெருமூச்சு விடுவார். தென்னாப்பிரிக்காவின் அனைத்து ஆடுகளங்களும் எகிறாது. சோதனையான களங்களிலும் நமது மட்டையாட்ட வரிசையால் சுதாரிக்க முடியும். திறமையும் அனுபவமும் ஆட்டநிலையில் இருந்து வேறுபட்டவை. ஆட்டநிலை அன்பைப் போல் சீக்கிரம் காணாமல் போய் எதிர்பாராமல் பின் வந்து அணைப்பது. ஏழு பேரில் நால்வர் நல்ல ஆட்டநிலையில் ஆடினாலே இந்தியாவால் தெ.ஆப்பிரிக்க தொடரில் நிலைக்க முடியும். திறன்நிலையைப் பொறுத்து அணி முழு ஆரோக்கியத்தோடு இருந்தால் ஒழிய தோனிக்கு இத்தொடரை வெல்வதை விட டிரா செய்வதே ஆதார நோக்கமாக இருக்கும். 96இல் இருந்து இதுவரை தென்னாப்ப்ரிக்காவுடன் இந்தியா ஆடிய டெஸ்டு ஆட்டங்களை நினைவுபடுத்தி பாருங்கள். பந்து வீச்சு ஒருசில செஷன்களில் மட்டுமே நம்மை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து நமக்கு நெருக்கடி அளித்து வந்துள்ளது என்ன?
இரண்டு விசயங்கள். ஒன்று தென்னாப்பிரிக்காவின் மட்டையாட்டம். அது பொறுமை மற்றும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது. நீண்ட நேரம் ஆடி பெரும் ஸ்கோர்களைக் குவிக்கக் கூடியது. தென்னாப்பிரிக்கா கட்டாயம் இலவச விக்கெட்டுகளை தராது. தென்னாப்ப்ரிக்க மட்டையாளர்களை நெருக்கடியில் தொடர்ந்து வைக்க அபாரமான பொறுமை, கட்டுப்பாடு மற்றும் திறமை வேண்டும். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தென்னாப்பிரிக்க மட்டையாட்ட தேருக்கு எப்படி கட்டை போட்டு நிறுத்துவது என்பதே முக்கிய பிரச்சனையாக நமக்கு இருந்துள்ளது. வரப்போகும் பயணத்தில் தென்னாப்பிரிக்காவின் மட்டையாட்டம் சீர்குலைந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். அது வேறுவிதங்களில் இந்தியாவை தாக்கி சரிக்க முயலும். ஆட்டத்தில் எதிர்பாரா தன்மை, நாடகீய தருணங்கள் உருவாகும். இல்லாத பட்சத்தில் இத்தொடரின் டெஸ்டுகள் ஒரு புல்வெட்டும் எந்திரத்தை தொடர்ந்து பார்க்கும் அனுபவத்தை மட்டுமே தரும். சிறந்த கிரிக்கெட் மலைகளின் எழுச்சியையும், பள்ளத்தாக்குகளின் வீழ்ச்சிகளாலும் அடையாளப்படுவது.
அடுத்து ஒரு அணியுடன் சமமாக போராட வைப்பது எது? திறன்களா? இல்லை. இந்தியா எப்போது ஆஸ்திரேலியாவால் மன எழுச்சியுற்று தனது ஆட்டத்தரத்தை பலமடங்கு உயர்த்துவதும் ஆனால் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை மண்ணில் திணறுவதும் ஏன்? கிரிக்கெட்டில் மட்டும் இரு முரணான தன்மை கொண்ட இருப்புகள் மோதினால் தசாவதார தரிசனங்கள் கிடைப்பதில்லை. கிரிக்கெட் சமபலம் கொண்ட அசுரர்கள் மோத வேண்டிய ஆட்டம். ஆவேசமாக தாக்கி ஆடக் கூடிய அணியுடன் எதிரணி அதே பாணியிலே ஆட வேண்டும். தென்னாப்பிரிக்காவுடன் வெல்ல இந்தியா கல்லும் முள்ளுமற்ற ஒரு பாதையை தேர்ந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்க பாணியில் தூங்கும் எதிரியை மட்டுமே நெரித்து கொல்ல வேண்டும்.
Share This

4 comments :

  1. //தூங்கும் எதிரியை மட்டுமே நெரித்து கொல்ல வேண்டும். //
    நல்ல சொல்லாடல்.

    ReplyDelete
  2. என்ன ஒரு நேர்த்தியான மொழி!

    ReplyDelete
  3. நன்றி இளமுருகன், பொன்கார்த்திக் மற்றும் செல்வேந்திரன்!

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates