Wednesday 14 April 2010

புட்டு + குமரி மாவட்ட மசாலா கறி + டைமண்ட் கட்

இன்றிரவு சமைத்த புட்டு, மசாலா கறி மற்றும் இனிப்பான டைமண்ட் கட் ஆகியவற்றுக்கான சுருக்கமான செய்குறிப்புகளை இங்கே தருகிறேன்.

அதற்கு முன் சில பகிர்தல்கள். எனக்கு அம்மா சமையல் கற்றுத் தந்ததில்லை. சென்னையில் உள்ள பெரும்பாலான ஆண்களைப் போன்று நாவின் சுவைக் குறிப்புகள் மற்றும் இளமை நினைவுகளின் வழிகாட்டலுடனே சமைக்க ஆரம்பித்தேன். இவை மிக எளிதானவை. இம்மூன்றையும் முடிக்க எனக்கு ஒன்றரை மணி நேரம் பிடித்தது. பரிச்சயமுள்ளவர்கள் மேலும் சீக்கிரமாகவே இவற்றை தயாரித்து விடலாம். சமையலில் வேகத்தையும், சுவையின் தரத்தையும் தக்க வைப்பதே நிஜமான சாமர்த்தியம்.


முதலில் புட்டு.



சிலர் குக்கரிலே புட்டு செய்வதாக அறிகிறேன். நான் பூட்டுக் குழலில் தான் இதுவரை முயன்று வந்துள்ளது. கடையில் கிடைக்கும் உடனடி புட்டு மாவைத்தான் பயன்படுத்துகிறேன். இதில் நிறுவனத்தை பொறுத்து சுவை, குறிப்பாய் பதார்த்தத்தின் மென்மை, மாறுபடுகிறது. சம்பா மற்றும் வெள்ளை மாவுகள் கிடைக்கின்றன. தேர்வு உங்களது.

தேவையுள்ள் பொருட்கள்

புட்டு மாவு
தேங்காய் துருவல்
உப்பு
லேசான வெந்நீர்

ஒரு பாக்கெட் மாவு மூன்று பேருக்கு போதுமானதாக இருக்கும். தேவையான அளவில் எடுத்துக் கொள்ளவும்

ஒருவருக்கு கால் ஸ்பூன் உப்பு என்பதே என் கணக்கு. உங்கள் தேவைப்படி உப்பு எடுத்து மாவில் சேர்க்கவும்

வெந்நீர் விட்டு மாவை பிசையவும். புட்டில் ஈர அளவு நிர்ணயம் மிகவும் முக்கியம். பிசைந்து வரும் போது சிறுசிறு உருளைகளாய் உருவாகும். அப்போது பிடித்து உருட்டினால் உருக்கொண்டு ஆனால் எளிதில் உடைந்து விடும் பதம் வந்து விட்டதென்றால் ஈரம் சரியாக உள்ளதென்று பொருள்

புட்டுக் குழலை எடுத்து அரிப்பு போன்ற அதன் சில்லை அதற்குள் வைக்கவும். கூழாய் உள்ளே கீழே போய் அதன் மூடி நிற்க வேண்டும்

எடுத்து மாவை ரொப்பவும். ஒரு பிடி மாவு இட்டதும் தேங்காய் துருவல் சிறிது தூவவும். இப்படியே நிரம்பியதும் மேலே சிறிது துருவலை வைக்கலாம்

அடுத்து புட்டுப் பாத்திரத்தில் அடிப்பகுதியில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். மேலே மாவு நிரப்பின புட்டுக் குழலை பொருத்திம் மூடவும்

ஆவி வந்த பத்து நிமிடங்களில் அடிக்கடி திறந்து வெந்துள்ளதா என்று சோதித்து பார்ப்பது என் பழக்கம். வெந்த விட்டதாய் பட்டால் இறக்கி விடுவேன்

இறக்கின புட்டுக்குழலின் மூடியை திறந்து குழலை ஒரு தட்டின் மீதான சாய்த்து நிறுத்தி ஒரு கம்பி அல்லது நீண்ட கரண்டியின் அடிப்பாகம் கொண்டு சில்லை உந்தவும். புட்டு சீராக அழகிய வடிவத்தில் ஆவி பறக்க விழுவது ரம்மியமான காட்சி. சாப்பிடுவதை ஒத்த சுவையான அனுபவம் இது

திரும்ப மாவை தேங்காய் துருவலுடன் நிரப்பி முன் சொன்னது போல் அடிப்பாத்திரத்தில் பொருத்தி அடுப்பில் வைக்கவும். இப்போது கவனிக்க வேண்டிய இரு விசயங்கள்:
சில் பொருந்தியுள்ளதா?
அடிப்பாத்திரத்தில் தேவையான அளவு நீர் உள்ளதா?

இப்படியே மாவு காலியாகும் வரை புட்டு தயாரிக்கலாம்

அடுத்து குமரி மாவட்ட மசாலா கறி



இந்த வகை கறியில் மசாலா வாசம் மற்றும் தேங்காய் சுவை தூக்கலாக இருக்கும்.

தேவையுள்ள பொருட்கள்
வெங்காயம் (2-3)
தக்காளி (2)
எண்ணெய் (மூன்று ஸ்பூன்)
பச்சை மிளகாய்
கடுகு
மஞ்சள் பொடி
மசாலா பொடி
கொத்தமல்லி பொடி
காரப் பொடி
தேங்காய் பால் (முக்கால் கப்)
கருவேப்பிலை
வேகவைத்த உருளைக் கிழங்கு [2] (அல்லது) முட்டை [2](அல்லது) கொண்டைக் கடலை [அரை கப்]

முதலில் சட்டியில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்

அடுத்து நறுக்கின வெங்காயத்தை வதக்கவும்

வெங்காயம் பழுப்பு நிறம் வந்தது பச்சை மிளகாயை நடுவில் கீறி இடவும்.

மிளகாய் வதங்கியதும் நறுக்கின அல்லது அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்

நன்றாக வெந்து இவை ஒன்று சேர சுமார் பதினைந்து நிமிடம் ஆகலாம். அடுத்து மஞ்சல் மிகச் சிறிதளவு சேர்க்கவும். மஞ்சள் மணத்திற்காக வெறும் மட்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

அடுத்து மசாலா பொடி இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்கள் சேர்க்கவும். நான் தேக்கரண்டியே பயன்படுத்துவது

சில நொடிகள் வதக்கின பின்னர் கால் ஸ்பூன் காரப் பொடி சேர்க்கவும். மீண்டும் வதக்கவும்

மேலும் சில நொடிகள் பொறுத்து கொத்தமல்லிப் பொடி ஒரு ஸ்பூன் சேர்க்கவும்

ரெண்டு நிமிடமாவது இது வதங்கி வர வேண்டும். அடியில் பிடிக்கிறாற் போல் தெரிந்தால் ஒரு ஸ்பூன் எண்ணேய் அல்லது சிறிது தண்ணீர் சேர்க்கலாம்

வேகவைத்த உருளைக் கிழங்கு அல்லது முட்டை அல்லது கொண்டைக் கடலை சேர்க்கவும். சில் நொடிகள் வதக்கவும்

அடுத்து தேங்காய் பாலை சிறிது சிறிதாக சேர்க்கவும். போதுமென்று பட்டால் அரை கப் தேங்காய்ப் பாலுடன் நிறுத்திக் கொள்ளலாம். தேங்காய்ப் பால் மற்றும் மசாலாவின் சமநிலை சரியாக அமைவதே இந்த கறியின் சுவை ரகசியம்

உங்கள் தேவைக்கேற்ப தண்ணீர் விடவும்

கொதிக்கும் வரை பொறுக்கவும்

விருப்பமிருந்தால் இறக்குமுன் கறிவேப்பிலைகள் தூவவும்

இதை புட்டுடன் சேர்த்து உண்பது எங்கள் ஊர் வழமை

இறுதியாக டைமண்ட் கட்

உணவுக்கு பின் இனிப்பு தின்பது சின்ன வயது பழக்கம். டைமண்ட் கட் மிக எளிதான ஒரு இனிப்பு.

சுமார் நான்கு சப்பாத்திகள் இடவும்

அவற்றை விரும்பின சிறு வடிவங்களில் கத்தியால் வெட்டி வைத்துக் கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் சூடு செய்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

சர்க்கரை பாகு தயாரிக்கவும். தண்ணீரோடு சர்க்கரையை தேவையுள்ள விகிதத்தில் கலந்து கொதிக்க வைத்து தயாரிக்கலாம்
நலவிரும்பிகள் அல்லது சர்க்கரை உபாதை உள்ளவர்கள் sugarfree போன்ற செயற்கை இனிப்பூட்டிகளை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். Desire நிறுவனம் சர்க்கரை உபாதை உள்ளவர்களுக்காக சிறப்பு இனிப்புகள் வெளியிடுகிறது. இவற்றில் குலாப் ஜாமூனுடன் தேவைக்கு அதிகமாக செயற்கை இனிப்பு ஜீரா கிடைக்கிறது. இதில் மூதம் வரும் ஜீராவை இங்கு பயன்படுத்தலாம். நல்ல வாசனையுடன் நிஜமான பாகைப் போன்ற சுவையுடனுன் உள்ளது.

பொரித்த துண்டுகளை பாகில் புரட்டி சிறிது நேரம் வைத்து சாப்பிடவும்

ஆர்வமுள்ளவர்கள் இவற்றை முயன்று பார்த்து எனக்கு தெரிவிக்கவும். உங்களது குறிப்புகளையும் என்னோடு பகிரலாம்.
Share This

2 comments :

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates