Friday 7 May 2010

இசை விபத்துக்கள்



திருவனந்தபுரத்தில் வேலை பார்த்து பெங்களூருக்கு நண்பர்களுடன் ரெண்டு நாட்கள் பீரடிக்க வந்துள்ள நண்பன் சபரிநாத் இன்று காலையில் அழைத்து “உன் இசைப்பயிற்சி எல்லாம் எப்படி போகிறது” என்று கேட்க விக்கித்து விட்டேன். காரணம் கேள்வியின் அக்கறையற்ற இலக்கணப் பிழையும் அதனுள்ளோடும் கவித்துவமும்.

நான் ஆறுவருட இடைவேளைகளில் இரண்டு தடவை இசை கற்க முயன்றேன். முதலில், பதினாறாவது வயதில் எங்களூரில் பிரபலமாக இருந்த பாட்டுவாத்தியார் பட்டம்மாளிடம் சென்றேன். பட்டம்மாள் உருண்டையாய் சிவப்பாய் தோற்றம் கொண்டவர். பட்டம்மாளுக்கு இரண்டு அழகான பெண்கள். ஒரு முஞ்சூறு மகன். மகன் என் வகுப்புத் தோழன். முக்கியமாய் பட்டம்மாளின் கணவன் என் கணக்கு டியூசன் வாத்தியார். கணக்கு வகுப்புகளுக்கு அடிக்கடி மட்டம் போடுவேன். குறிப்பாய் அவர் பரிட்சை வைக்கும் போதெல்லாம். ஆனால் பட்டம்மாளின் இசைவகுப்புக்கு சரியாக சென்று விடுவேன். நான் பாடும் போது வேதாளம் அடிக்கடி முருங்கைமரம் ஏறும் என்றாலும் பட்டம்மாளுக்கு என் இசைஆர்வம் பிடித்திருந்தது. எனக்கு உதவி செய்வதற்கு என்பது போல் கூடப் பாடும் பட்டம்மாளின் மகள் மேலும் மோசமாய் கொசு அடித்தபடியே பாடுவான். ஆனால் ஒருநாள் எதிர்பாராமல் பட்டம்மாளின் கணவன் என் வீட்டில் போட்டுக் கொடுத்துவிட்டார். என் மட்டம் போடும் குட்டு வெளிப்பட்டது. ஆனால் அதனால் கவலை இல்லை. பாட்டுவாத்தியாருக்கு இது குடும்பப் பிரச்சனையாக ஆரோகணிக்கும் பட்டதால் இசைவகுப்பை நிறுத்திக் கொண்டேன். அடுத்து எம்.சி.சியில் முதுகலையின் போது ஜெபசீலன் என்றொரு நண்பன் கீபோர்டில் ”அஞ்சலி அஞ்சலி” (டூயட்) பாடல் இசைக்க கற்றுத் தந்தான். ஒரு இரவு முழுக்க அதை பயின்றபடி இருந்தேன். ஜெபசீலன் பற்றி மேலும்: குள்ளமாய் மாநிறமான தோற்றம். ரொம்ப பணிவாய் எல்லோரிடமும் குழைவான். ஆனால் யாரையும் மதிக்க மாட்டான். மிக அரிதாக்வே ஊருக்கு உதவுவது. ஆனாலும் மிகச்சரியான நேரத்தில் உதவி செய்து அனைவரிடமும் நற்பெயர் பெறத் தெரிந்தவன். விடுதியில் அவனை எல்லோருக்கும் பிடிக்கும். இத்தனைக்கும் பெரும்பாலும் விடுதியில் தங்க மாட்டான். பிரமாதமாய் கீபோர்டு இசைப்பான். என்னை விட மூன்று வயது சின்னவன் என்றாலும் என்னை டேய் என்று விளிக்க ஆரம்பித்ததால் அவனிடம் கற்பதை நிறுத்திக் கொண்டேன். எப்போது என்ன செய்வான் என்று எதிர்பார்க்க முடியாது. சும்மா ஊர்சுற்றுவதற்கு என்று வளைத்த 12ஆம் வகுப்பு பெண்ணை ஒருநாள் நிஜமாகவே இழுத்துக் கொண்டு ஓடி விட்டான். இளங்கலை இரண்டாம் வருடம் படிக்கும் போதே திருமணம்.(காஞ்சீபுரக்காரர்களுக்கு: இந்த ஜெபசீலனை எதாவது கச்சேரிகளில் சந்திக்க நேர்ந்தால் எனக்கு தகவல் தரவும்.)

ஒரு முழுஆயுசில் ஒரு கலை மட்டுமே பயில வேண்டும் என்பது கப்சா. உலகில் பல துறைகளில் கலக்கும் எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மேற்குலகில் எழுத்தாளர்களில் இருந்து விஞ்ஞானிகள் வரை குறைந்த பட்ச இசைப்பயிற்சியுடனே இருக்கிறார்கள். இது ஒரு கலாச்சாரம் சம்மந்தப்பட்ட சமாச்சாரம். நமது கலாச்சாரத்தில் கிறித்துவர்கள் சிறுவயதில் இருந்தே தேவாலய இசையுடன் பரிச்சயம் பண்ணி கிட்டார் அல்லது கீபோர்டு வாசிப்பவர்களாக இருக்கிறார்கள். எம்.சி.சியில் சிங்கி என்றறிப்படும் மிசோரம், மணிப்பூர் மாநிலப் பையன்களின் அறைகளில் நிச்சயம் ஒரு கிட்டார் சாத்தி வைக்கப்படிருக்கும். இந்துக்களில் பிராமணர்களுடன் இசை முடங்கி விட்டது ஒரு துர்பாக்கியமே. இளம் வயதில் இருந்தே கலாச்சார ரீதியாக அறிமுகமாகும் எந்த கலையையும் பயில்வது எளிதாகி விடுகிறது.

சின்ன வயதில் பயின்ற திறமைகளை வளர்ந்த பின் கைவிடும் எத்தனையோ பேரை பார்க்கிறோம். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனக்கு பிடித்தது நாவலாசிரியர் ஸ்டீபன் கிங்கின் கூற்று. அவரது மகனுக்கு திடீரென்று டிரம்ஸ் வாசிக்க ஆர்வம் வருகிறது. கருவி வாங்கிக் கொடுத்து ஆசிரியரும் நியமிக்கிறார். சில மாதங்கள் வீடே முழங்குகிறது. பிறகு மெல்ல மெல்ல இசைக்கருவி தூங்குகிறது; பையன் டிரம்ஸ் பக்கம் செல்வதை தவிர்க்கிறான். ஸ்டீபன் மகனை கண்டிக்கவோ வற்புறுத்தவோ இல்லை. அவன் டிரம்ஸுக்காக பிறக்கவில்லை. அது ஒரு தற்காலிக ஆர்வம் மட்டுமே. அவன் தனது திறமையை தேடிக் கொண்டிருக்கிறான். அதுவாக ஒருநாள அவனை தேடி வரும் என்று சமாதானம் கொள்கிறார். இப்படியான முயற்சிகள் காலவிரயமா? வெறும் ஆர்வக்கோளாறா?அசட்டுத்தனமான ஆற்றல் விரயமா?

இந்த கேள்விகள் அன்றாட-வாழ்க்கை மேம்பாட்டுக்கான பயிற்சிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு கலைக்காக கடுகு தாளிக்க்கும் போது நம் ஆன்மா கண் விழிக்கிறது என்று பொருள். சிலருக்குள் அது முழுக்க திறந்து பார்க்கிறது. பலருக்கு கண் சிமிட்டி மீண்டும் தூங்கி விடுகிறது. ஸ்டீபன் கிங் இந்த கலை விழிப்பை எழுத்தாற்றலோடு ஒப்பிடுகிறார். அவரை பொறுத்தவரையில் உலகில் கல்வியறிவு உள்ள அனைவருக்கும் எழுத முடியும். பலர் ஆண்டுக்கணக்காய் முயல்கிறார்கள். ஆனால் மிகச்சிலரே எழுத்தாளர்கள் ஆகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளில் நாம் பெறும் சின்னச் சின்ன அகவயமான திறப்புகள் வாழ்வின் ஒளி மிகுந்த தருணங்கள். மொத்தமாய் அறுபது எழுபது வருடங்களில் கிடைக்காத மனஎழுச்சி இந்த சின்ன அனுபவங்களில் தாம் கிடைக்கின்றன.

கைவரும் திறன் என்னவென்று முன்கூட்டியே தெரியாத போது கிடைக்கின்ற கற்களையெல்லாம் உரசிப்பார்த்தால் என்ன? கிடைத்தால் ஒளி, போனால் ...
Share This

1 comment :

  1. ஆம்.
    கிடைப்பது
    வைரமோ
    கூழாங்கல்லோ
    தேடுதல் தான்
    முக்கியம்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates